nool arimugam: kaapurimai kothavaal - jananesan நூல் அறிமுகம்: காப்புரிமை கொத்தவால் - ஜனநேசன்

நூல் அறிமுகம்: காப்புரிமை கொத்தவால் – ஜனநேசன்

“இது எனது கதை . எனக்கு தெரியாமல் கதையில் சிலபகுதிகளை மட்டும் மாற்றி படமெடுத்து விட்டார்கள் . இப்படத்தினை தடை செய்யவேண்டும் “ என்று நீதிமன்றங்களின் முன்னும் , சமூக, மின்னூடகங்களிலும் அடிக்கடி குரல்கள் ஒலித்து பல பிரபலங்களின் பெயர்கள், உருளுவதை…
Prof. Raju has a lot more work to do article by pralayan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

பேரா.ராஜூ அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது – பிரளயன்



பேராசிரியர்.ராஜூ அவர்கள் எனக்குப் பரிச்சயமானது என்பது அவரது நெறியாள்கையில் தயாரிக்கப்பட்டு தஞ்சை அரங்கம் குழுவினர் மேடையேற்றிய இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ நாடகம் மூலமாகத்தான். நான் இந்நாடகத்தை 1980களின் இடைப்பகுதியில் பார்த்தேன். அதற்கு முன்பாக தமிழில் நடந்த பல நவீன நாடக முயற்சிகளை நான் பார்த்திருந்த போதிலும் பேரா ராஜுவின் ‘நந்தன் கதை’ எனக்கு மிக நெருக்கமாகவும் அண்மையானதாகவும் இருந்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. எதார்த்தவாத பாணியில் எழுதப்பட்டிருந்த ‘நந்தன் கதை’ நாடகம், இசை, நடனம், குழுவினரின் ஒழுங்கமைக்கப்பட்ட அசைவுகளென ஒரு ‘காவிய அரங்கிற்கான’ நாடக மொழியில் தயாரிக்கப்பட்டிருந்தது. விரிந்த பார்வையாளர் வட்டத்தினிடையே உரையாடுவதற்கான பல கூறுகளை அது கொண்டிருந்தது. ‘காவிய அரங்கென’ இங்கு நான் கூறுவது எதார்த்தவாத பாணியில் இருந்து விலகி நின்று பெர்டோல்ட் பிரக்ட் உருவாக்கிக்கொண்ட ‘காவிய அரங்கு ‘ எனும் நாடக பாணியைத்தான். உண்மையில் ‘காவிய அரங்கு’ என்பது தனக்கான ஓர் நாடக அணுகுமுறையை எழுத்து முறையைக் கொண்டது. ஆனால் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதி, அத்தகைய ஓர் அணுகு முறையில் ‘நந்தன் கதையினை’ எழுதியிருக்கவில்லை.

எனினும் பேராசிரியர். ராஜூ அவர்கள் தனக்கான ஓர் ஒயிலாக்கம் செய்யப்பட்ட ஒரு மேடை மொழியில் ’நந்தன் கதையினை’ உருவாக்கம் செய்திருந்தார். இவரது ‘நந்தன் கதை’ தயாரிப்பு பற்றி இன்னொரு சமயத்தில் விரிவாக எழுத வேண்டும். பின்னர் 1991 இல் இந்திரா பார்த்தசாரதியின் ‘ஔரங்கசீப்’ நாடகத்தை புதுவை மத்திய பல்கலைக்கழக நிகழ் கலைத்துறை மாணவர்களைக் கொண்டு தயாரித்து மேடையேற்றினார். இந்நாடகத்தை சென்னை, தி.நகரிலுள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்திலிருந்த சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கில் மேடையேற்றியபோது நான் பார்த்திருக்கிறேன்.

பெத்தவன் நாடகத்தில் ஒரு காட்சி

இந்திரா பார்த்தசாரதியின் முக்கியமான நாடகங்களில் ஒன்று ‘ஔரங்க சீப்’. இந்தியாவின் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல மொழிகளில் நிகழ்த்தப்பட்ட நாடகம் இது . எனது வீதிநாடகங்களில் சில, பிற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றம் கண்டிருக்கின்றன. எனினும் பல மொழிகளிலும் மேடையேற்றப்பட்ட ஒரு முழு நீள மேடை நாடகம் ‘தமிழில்’ உண்டென்று சொன்னால் அது ஔரங்கசீப் தான்.

ஓர் எதார்த்தவாத படைப்பான இந்நாடகம், பல வித சவால்களை நடிகனுக்கும், நெறியாளுநருக்கும் அளிக்கக்கூடியதாக இருந்தது. தனது அரண்மனையிலேயே சிறைவைக்கப்பட்டிருக்கும் ஷாஜகான், ஷாஜகானின் மூத்த மகள் ஜெகன்னோரா, இளைய மகள் ரோஷனோரா, ஔரங்கசீப்பின் தமையன் தாரா, பாதுஷா ஔரங்கசீப் என இப்பாத்திரங்களுக்கிடையே உள்ள மன இறுக்கங்களின் மூலம் வளர்ச்சியுறுகிற நாடகம் இது. ராஜா ரவிவர்மா ஷாஜகானாகவும், குமரவேல் ஔரங்கசீப்பாகவும் ஜெகன்னோராவாக ஜீவாவும் திறம்பட நடித்திருந்தனர். தமிழில் மேடையேற்றப்பட்ட முக்கியமான எதார்த்தவாத நாடகம் என இதைச்சொல்லமுடியும்.

பேரா.ராஜூ அவர்கள், புனே திரைப்படக்கல்லூரியில் படித்துவிட்டு பிறகு புதுடில்லியில் தேசிய நாடகப்பள்ளியில் பயின்று கேரளாவின் திருச்சசூர் நாடகப்பள்ளி, தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை என்று பணியாற்றிய பிறகு புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத்துறையில் பணியாற்றத் தொடங்கியவர். பேராசிரியர்,துறைத்தலைவர், புல முதன்மையர் எனப் பல பொறுப்புகளில் செயல்பட்டவர் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
அவரது நீண்ட நெடிய பயணத்தில், தமிழ் நாடகச்செயல்பாடுகளுக்கு அவரது அளித்த பங்களிப்புகள் ஏராளம். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நவீன நாடகச்செயல்பாடுகளை தொடங்கி வைத்ததில் அவரும் ஒருவர். சரியாகச்சொல்லவேண்டுமெனில் பேரா.ராமானுஜத்தினுடைய தொடக்க காலச்செயல்பாடுகளில் அவரது வலது கரமாயிருந்தவர்.

தேசிய நாடகப்பள்ளியில் பயின்றபோது அங்கு மேடை அமைப்பை [stage design] சிறப்புப்பாடமாக பயின்றவர். அவரது அனைத்து தயாரிப்புகளிலும் மேடை அமைப்பின் நேர்த்தியை நம்மால் காணமுடியும்.

அன்றைய தமிழ் நாடகச்செயல்பாடுகளில் பேரா.ராஜூவினது தயாரிப்புகளை தனித்து அடையாளம் காணவியலுமெனில் அதற்குக்காரணமாயிருந்தது எதார்த்த பாணியையும், ஒயிலாக்க அணுகுமுறைகளையும் ஒன்றிணைத்து பெறப்பட்ட அவரது தனிப்பட்ட பாணியிலான நாடகங்கள்தாம்.

பெத்தவன் நாடகத்தில் ஒரு காட்சி

ஒளிப்பதிவாளர் செழியனின் ‘கதை’ என்னும் சிறுகதையினை பேரா.ராஜூ நாடகமாக மேடையேற்றியது அவரது அண்மைக்கால படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இந்நாடகம் அதிகமான முறைகள் மேடையேற்றப்படவில்லையெனினும் எதார்த்த வாத நடிப்புக்கும், ஒரு நடிகர், பாத்திரங்களை மேடையில் உயிர்பெறச்செய்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதற்கும் மிகப்பெரும் கதவுகளை திறந்து விட்ட அனுபவமாக அமைந்த நாடகம் அது.
எழுத்தாளர் இமயத்தின் ‘பெத்தவன்’ , ‘கக்கன்ஜீ ’ போன்றவற்றை மேடையேற்றிய பேரா. ராஜூ, இந்நாடகங்கள் மூலம் ஒரு புதிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்.
மிகவும் குறைவான எளிய மேடைப்பொருட்கள், நேரடியான எளிமையான மேடை உத்திகள், நடிகனது இயற்பண்பு சார்ந்த எதார்த்தவாத நடிப்பை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய ஒரு நாடகமொழி, கற்பனைவளத்தோடு பயன்படுத்தப்பட்ட இசை, இவற்றையெல்லாம் ராஜூ, வலுவாகக் கையாண்டிருந்தார். இந்நாடகங்கள், பார்வையாளர்களிடத்தில் மிகவும் நெருக்கத்தை உருவாக்கிக்கொண்ட நிகழ்வுகளாகவும் உருவெடுத்தன.

2008ஆம் ஆண்டு, புதுவை மத்திய பல்கலைக் கழக நிகழ்கலைத்துறைத் தலைவராக பேரா.ராஜூ அவர்கள் பொறுப்பு வகித்தபோது நிகழ்கலைத்துறை மாணவர்களுக்காக ஒரு நாடகத்தை தயாரித்து இயக்குமாறு என்னை அழைத்தார். வெளியிலிருந்து ஒருவரை அழைத்து நாடகத்தை தயாரிக்கச்சொல்வது என்பது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறையில் இல்லாது போன ஒரு சூழலில் என்னை அவர் அழைத்திருந்தார் என்பதுதான் இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒரு விஷயம். அந்த ஓர் அரிய வாய்ப்பில்தான், நான் எழுதி நெறியாள்கை செய்த ‘பாரி படுகளம்’ நாடகம் உருவானது.

அப்படி உருவாக்கப்பட்ட அந்நாடகம், நிகழ்கலைத்துறை மாணவர்கள் சார்பில் தமிழகம்,புதுவை ஆகிய இடங்களில் எட்டுமுறையும், பின்னர் கேரளா திருச்சூரில் நடைபெற்ற சர்வதேச நாடகவிழாவிலும் [ITFOK], புது டில்லி தேசிய நாடகப்பள்ளி நடத்து கிற அனைத்திந்திய நாடகவிழாவிலும் [BRM-Bharath Rang Mahotsav] பங்கேற்றது. தமிழ்நாட்டு நவீன நாடகச்செயற்பாடுகளில் ஒரு செயற்பாட்டாளர் இன்னொரு செயற்பாட்டாளரை ஏற்பதில்லை; உறவு பேணுவதில்லை. அப்படியொரு சூழலில் பேரா.ராஜூ அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பை தமிழ் நாடகச்சூழலில் செய்யப்பட்ட ஒரு மிகப்பெரும் ‘சமிக்ஞை’ யாகவே நான் கருதினேன்; உணர்ந்தேன். அதன் பொறுப்பை உணர்ந்தவனாகவே ‘பாரி படுகளம்’ நாடகத்தயாரிப்பிலும் நான் செயல்பட்டேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்ததற்காக புதுவை மத்திய பல்கலைக்கழக நிகழ்கலைத்துறைக்கும் அதன் தலைவராயிருந்த பேரா.ராஜு அவர்களுக்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

தேசீய நாடகப்பள்ளியின் மண்டல வள மையம் செயல்பட்டபோது அதன் ஆலோசனைக்குழுவில் நான், பேரா.ராஜூ அவர்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அத்தருணங்களில்தாம் பல நாடகப்பயிலரங்குகளை தமிழகத்திலும் நடத்துவதற்கு நமக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அப்படியொரு வாய்ப்பில்தான் 2012ஆம் ஆண்டு தென்னகப் பண்பாட்டு மையமும், தேசிய நாடகப்பள்ளி பெங்களூரு மண்டல வளமையமும் இணைந்து நடத்திய ஒரு மாத கால உண்டு-உறைவிட நாடகப்பயிலரங்கு. இப்பயிலரங்கிற்கு நான் ஒருங்கிணைப்பாளன்; பேரா.ராஜூ அவர்கள் இயக்குநர். இப்பயிலரங்கில்தாம் நான் எழுதிய ‘வஞ்சியர் காண்டம்’ நாடகத்தை பேரா.ராஜூ நெறியாள்கை செய்தார். இந்நாடகம் தமிழ்நாடு, புதுவை, கேரளா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் 27 முறை மேடையேற்றம் கண்டது; பெருவாரியான வரவேற்பையும் பெற்றது.

எஸ்.பி. ஸ்ரீனிவாசனுடன் பேரா. ராஜு

இந்நாடகத்தயாரிப்பில் அவரோடு பணியாற்றியது உண்மையில் எனக்கு ஒரு பேரனுபவம். ‘வஞ்சியர் காண்டம்’ நாடகம் குறித்து ஆங்கிலம் தமிழ் உட்பட பல பத்திரிகைகளில் இதழ்களில் திறனாய்வும் மதிப்பீடுகளும் வெளியாகியுள்ளன. எனவே அது குறித்து இங்கு நான் அதிகம் கூறவேண்டியதில்லை.

1980களில் இந்திய ஒன்றிய அரசின் சங்கீத நாடக அகாதெமி ‘இளம் இயக்குநர்களுக்கான’ நிதி நல்கை ஒன்றை அறிவித்தது. இதன் படி ‘நிதி நல்கை’ பெறுவோர் இந்திய நாடக மரபுகளை பிரதி பலிக்கும் வகையில் ஒரு நாடகம் ஒன்றினை தயாரித்திடல் வேண்டும் .அப்படித்தயாரிக்கப்படும் நாடகங்கள் மண்டல அளவில் நடைபெறும் நாடகவிழாவிலும் பின்னர் அனைந்திந்திய அளவில் நடைபெறும் நாடகவிழாவிலும் மேடையேற்றப்படும். இப்படி நிதி நல்கை பெற்றுதான் பேரா.ராஜூ, இந்திரா பார்த்த சாரதியின்’நந்தன் கதை’ நாடகத்தை நெறியாள்கை செய்து தயாரித்தார்.

இப்படி சங்கீத நாடக அக்காதெமியினது நிதி நல்கை பெற்று 1980களின் தொடக்கத்திலிருந்து 1990 களின் இடைப்பகுதியில் இத்திட்டம் நிறுத்தப்படும் வரை இந்திய நாடு முழுதும் 200க்கும் மேற்பட்ட நாடகங்கள் தயாரிக்கப்பட்டன. பின்னர் ஒரு சமயம் இப்படித்தயாரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் சிறந்த பத்து நாடகங்களை பட்டியலிடச்சொல்லி ஒரு வல்லுனர் குழுவிற்கு பொறுப்பளிக்கப்பட்டது. அவ்வல்லுனர் குழு தேர்ந்தெடுத்த பத்து நாடகங்களில் மூன்று நாடகங்கள் தமிழ் நாடகங்கள். ராஜூ நெறியாள்கை செய்த இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ , மு.ராமசாமியின் ‘துர்க்கிர அவலம்’, வ. ஆறுமுகத்தின் ‘கருஞ்சுழி’ ஆகிய இவையே அம்மூன்று நாடகங்கள். தொடக்க கால தமிழ் நவீன நாடகச்செயல்பாடுகளின் திறனை உணர்ந்துகொள்ள இந்த ஓர் உதாரணமே நமக்கு போதுமானது.
மற்றொன்று , இன்றைக்கு ஒரு நடிகனின் உடலைப் பழக்குவதில் வசக்குவதில் இந்தியாவிலுள்ள சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் பேரா.ராஜூ என்பதை தேசிய நாடகப்பள்ளியின் மூத்த நாடக ஆளுமைகள் சிலர் சொல்ல நானே என் காதுபட கேட்டிருக்கிறேன். இன்றைக்கு நவீன நாடகச்செயல்பாடுகளில் ஈடுபடும் அனைவரும் இவ்வுண்மைகளை தெரிந்து கொள்வது நல்லது.

அண்மையில் திருப்பத்தூர் தூயநெஞ்சுக்கல்லூரியில் நடந்த பயிலரங்கு ஒன்றில் நானும் பேராசிரியர் ராஜூவும் கலந்துகொண்டோம். பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களது திறனை வெளிக்காட்ட ஒரு சிறு நாடக நிகழ்வொன்றையும் இறுதியில் தயாரிக்க வேண்டியிருந்தது. நான் இப்சனின் ‘ பொம்மை வீடு’ நாடகத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்துக்கொண்டு தயார் செய்தேன். பேரா.ராஜு, இமையத்தின் ‘காதில் விழுந்த கதைகள்’ தொகுப்பிலிருந்து ஒரு கதையை எடுத்துக்கொண்டு நிகழ்வாக்கி இருந்தார். நடித்தவர்கள் பெரும்பாலோர் மாணவிகள். பெண்களின் பாலியல் விழைவுகளை சங்கோஜங்களின்றி முகத்திலடித்தாற்போல் பேசுகிற கதையாடல் அது. பெரும்பாலும் மாணவிகளைக் கொண்டே ஒரு வலுவான நிகழ்வாக அதை உருமாற்றியிருந்தார் ராஜூ.
எழுதப்பட்ட நாடகப்பிரதிகளுக்காக பேரா.ராஜூ காத்திருப்பதில்லை. படிக்கிற செய்திகளில் புனைவுகளில் உள்ள நாடகார்த்தமான தருணங்களை முரண்களை உள்வாங்கிக்கொண்டு அவற்றை நாடகமாக்கிவிடுகிறார். அண்மைக்காலமாக அவர் வளர்த்தெடுத்து வருகிற அணுகுமுறை இது.

பேரா. ராஜூ எழுதிய ‘நெறியாளுகை நோக்கில் தெருக்கூத்து’ எனும் நூல் தமிழ் நாடக உலகிற்கு அவரளித்த மதிப்புமிக்க பங்களிப்பு எனலாம். நாடகக்கலையில் நெறியாளுநர் என்கிற ஆளுமை உள்ளே நுழைந்தது, ஒரு 120 ஆண்டுகட்கு முன்புதான். அதற்கு முன்பு நாடகாசிரியர் இருந்தார்; அண்ணாவியார் இருந்தார்; சூத்திரதாரர் இருந்தார்; கட்டியங்காரர் இருந்தார். நெறியாளுநர் செய்கிற பணிகளை இவர்களே செய்துவந்தனர். இவரது முனைவர் பட்ட ஆய்வினடிப்படையில் எழுதப்பட்ட இந்நூல், நெறியாளுகையின் வரலாறு, நெறியாளுமையின் முறைமைகள், மேற்குலகில் தோன்றிய பல்வேறுவிதமான நாடகக்கோட்பாடுகள், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தொன்று தொட்டு இருந்துவந்த நாடக அணுகுமுறைகள் இவற்றையெல்லாம் சுருக்கமாகவும் ஆழமாகவும் தெளிவாகவும் இந்நூல் அறிமுகம் செய்து வைக்கிறது. ‘அபிநய வர்ஷினி கலைக்கூடம்’ சார்பில் அவரே வெளியிட்ட நூல் இது. இந்நூல் மறுபதிப்பு காணவேண்டியது தமிழ்நாடகக்சூழலுக்கு மிகவும் தேவையான ஒன்று.

பேராசிரியர் ராஜு அவர்களின் துணைவியார் ஹேமமாலினி அவர்கள் கடந்த ஆண்டு, எதிர்பாராத விதமாக காலமானார். ஹேமமாலினி அவர்கள் சிறந்த நடனக்கலைஞர். தனது வீட்டிலே நடனப்பள்ளி ஒன்றையும் நடத்திவந்தார். பேராசிரியர் ராஜூவுக்கு எல்லாமாக இருந்தவர் அவர். உண்மையில் அவரது மறைவு ராஜூவுக்கு ஒரு பேரிழப்புதான். தனது துணைவியாரின் நடன வாழ்வு குறித்த ஓர் ஆவணப்படம் தயாரிக்கிற முயற்சியில் தற்போது ராஜூ ஈடுபட்டுள்ளார். தனது துணைவியார் குறித்த நினைவுகளை ஒரு காத்திரமான கலை அனுபவமாகப் பதிவு செய்ய இம்முயற்சி அவருக்கு உதவக்கூடும்.

இன்றைக்கு தமிழின் நவீன நாடகச்செயல்பாடுகள் முன்பு போல் இல்லை. நீளத்திலும் அகலத்திலும் விரிந்தும் பரந்தும் உள்ளது. 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தஞ்சையில் எனது ஒருங்கிணைப்பில் தமுஎகச சார்பில் நடத்தப்பட்ட ‘தென்னிந்திய மக்கள் நாடக விழாவில்’ 29 குழுக்கள் அழைக்கப்பட்டன. அவற்றில் நான்கு குழுக்களைத்தவிர 25 குழுக்களும் தமிழ்நாடு,புதுவை போன்ற தமிழ் பேசும் மக்கள் பகுதிகளில் செயல் படுபவைதான். அது போல 2019 இல் சென்னையில் 5 நாட்கள் நடைபெற்ற தென்னிந்திய நாடக விழாவில் 32 குழுக்கள் பங்கெடுத்தன. இச்செயல்பாடுகள் எதிர்காலத்தில் மென்மேலும் விரிவடைய சாத்தியங்களுள்ளது.

தனது இணையர் ஹேமாலினியுடன் ராஜூ

தொடக்க காலத்தில் அதாவது 1970களின் இறுதியில் எண்பதுகளில் தொடக்கத்தில் நாடகத்தை ஒரு பயில்நெறியாக கல்விப்புலத்தில் பயின்று நாடகம் செய்தவர்கள் என பார்த்தால் பேரா.எஸ்.பி.சீனிவாசன், பேரா.ராமானுஜம், பேரா.ராஜூ ஆகிய மூவரும்தான். கோபாலி, ராஜாமணி போன்றோர் நாடகப்பள்ளியில் பயின்றவர்களெனினும் நாடகச்செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடாது போய்விட்டார்கள். பின்னர் கே.எஸ்.ராஜேந்திரன் தேசிய நாடகப்பள்ளிக்கு சென்றார். பணி நிமித்தமாக டில்லியிலேயே இருந்துவிட்டார். அவ்வப்போது வந்து ஒரு சில தயாரிப்புகளை தமிழ்நாட்டில் செய்தபோதிலும் பெரும்பாலான அவரது நாடகப்பணிகள் டில்லியில்தான். கடந்த இருபதாண்டுகளில் தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர்கள் என்று பார்த்தால் 18 பேருக்கு மேல் தற்போது தமிழகத்திலுள்ளனர்.

தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர்கள் வந்து விட்டால் நமதுநாடகச்செயல்பாடுகளில் மிகப்பெரும் ‘மாயம்’ நிகழ்ந்துவிடும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை; அப்படிச் சொல்ல வரவுமில்லை. தேசிய நாடகப்பள்ளியில் போய் ச்சேர்ந்து படிப்பதற்கான சூழலையும் உந்துதலையும் கடந்த கால நமது நாடக செயல்பாடுகள் அளித்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக மட்டுமே இதைச்சொன்னேன்.

எனினும் அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகாவில் நவீன நாடகச்செயல்பாடுகளுக்கு இருப்பது போன்ற ஒரு சமூக ஆதரவு, அரசு நிறுவனங்களின் ஆதரவு நமது தமிழ்நாட்டில் நவீன நாடகங்களுக்கு இல்லை. இன்றைய நாடகச்செயற்பாட்டாளர்கள் முன் உள்ள சவால் அது. அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்றும் யோசிக்கவேண்டும். பணி ஓய்வு பெற்ற பேரா.ராஜூ அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

எனவே பேரா.ராஜூ அவர்கள் பணி ஓய்வுக்காலத்தினை நமது நாடகச்செயற்பாட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும், ஏனெனில் பேரா.ராஜூவிடமிருந்து தமிழ் நாடக உலகம் பெறவேண்டியது இன்னும் நிறைய உள்ளது.

கட்டுரையாளர்: [email protected]

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam

அண்ணாமலை புராணம் (திருவண்ணாமலை தமுஎகச வரலாறு) 2 – பிரளயன்



அது 1978ன் இடைப்பகுதி என நினைக்கிறேன். தமுஎச திருவண்ணாமலை கிளையின் முதல் நிகழ்ச்சி, தேரடி வீதியிலுள்ள அன்னசத்திரத்தினது முதல் மாடியில் நடந்தது. அப்போது தமுஎச நடத்துகிற பொது நிகழ்ச்சிகளில் கவியரங்கத்திற்குத்தான் ‘மவுஸ்’ அதிகம். எனவே அந்த முதல் நிகழ்வு என்பது ஒரு கவியரங்கமாகத் தான் நடந்தேறியது.

வெண்மணி கவியரங்கத் தலைமையேற்க கவிஞர்கள், அருணை செயவேங்கடன், வெ.மன்னார், ஏ.டி.எம். பன்னீர் செல்வம், முகில்வண்ணன், கலை தாசன், மற்றும் ஒருசிலர் அவர்களின் பெயர்கள் எனக்கு நினைவிலில்லை இவர்களோடு நானும் ஒரு கவிதை வாசித்தேன். இறுதியில் கவிஞர்.தணிகைச்செல்வன் சிறப்புக்கவிதை வாசித்தார். தணிகைச்செல்வனது கவியரங்கக் கவிதைகள் கேட்போரை வசீகரிப்பவை; பிரபலமானவை.

அவர் ஒவ்வொரு கவியரங்கத்தின் போதும் அப்போதுள்ள சூழலையொட்டிய சில கவிதைகளை வாசிப்பார். இறுதியில் முத்தாய்ப்பாக தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தனது ‘செஞ்சேனை மறவனே வா! “ எனும் கவிதையினை வாசிப்பார்.

சங்கரர் பிறந்த பூமி
சைதன்யர் வளர்ந்த பூமி
வங்கத்துப் பரமஹம்சர்
வடலூர் விவேகானந்தரோடு
எத்தனை மகான்களின்
ஜென்ம பூமி-இன்னும்
தரித்திரம் ஏனோ சாமி
பூசையில் குறை வைத்தோமா-சபரிமலை
செல்லும் ஆசையில்
குறை வைத்தோமா
திருப்பதி
உண்டியலில் போடும்
காசினில் குறை வைத்தோமா- இல்லை
வாரியாருக்குத் தரும் ஃபீஸினில்
குறை வைத்தோமா
இருந்தும் ஏன் பற்றாக்குறை?
போன்ற பல கூர்மையான சமகால சமூக விமர்சனக் கேள்விகளால் தொடங்கும் தணிகைச்செல்வனது கவிதை , ஒரு காத்திரமான அரசியலை முன்வைத்து மக்களை இவ்வாறு அறைகூவி அழைக்கும்.

நிலமன்னர், தொழில் மன்னர், டாலர் நாட்டின்
நிதிமன்னர் என்கின்ற மூன்று மன்னர்
விழும் முன்னர்,நம் நாட்டுக்குடிமன்னர்கள்
வெறும் மன்னர் தாம்! நாமும் விதியை நோக்கி
அழும் முன்னர் சிந்திக்கவேண்டும்; …………….
கணவனை இழந்ததாலே
கண்ணகி சீற்றம் நியாயம்
துணியினை இழந்ததாலே
துரோபதை சபதம் நியாயம்
மனைவியை இழந்ததாலே
ராமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த
நமது ஆவேசம் நியாயம் நியாயம்
உழுநிலம் பறிக்கப்பட்டால்
உழுபவன் கிளர்ச்சி நியாயம்
உழைப்பவன் மறுக்கப்பட்டால்
உரிமைப்போர் முழுதும் நியாயம்!
அறுபது கோடி மக்கள்
அனைத்துமே பறிக்கப்பட்டு
அழுகையில் சிரிக்கிறாயே
ஆத்தா ! இது என்ன நியாயம்?
அமைதியின் பேரால்
இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம்
இமை மூடிக்கிடக்கவேண்டும்?
எண்ணினேன்; எண்ணும்போதே
குமுறினேன்; கொந்தளித்தேன்;
கொடுங்கோலை முறிக்காவிட்டால்
தமிழுமேன்? இலக்கியமேன்?
சரித்திரப்பெருமைகள் ஏன்?
நொடிக்கொரு சட்டமிட்டு
நொறுக்கிடும் ஆதிக்கத்தின்
குடிக்கு இங்கே நாட்டையாளும்
கொற்றம் ஏன்? கோட்டங்கள் ஏன்?

அடித்திடச்சீறுகின்ற
ஆற்றலின் வர்க்கமே ,நீ
வெடித்திடும் முழக்கம் எங்கே?

வெறி எங்கே? தூங்கும் போதும்
துடித்திடும் தோள்கள் எங்கே?
துரோகத்தை தூள்படுத்தி
பொடித்திடும் தடக்கை எங்கே?
போர் எங்கே? எங்கே என்று
நடந்திடும் தாள்களெங்கே?
நரம்பெங்கே ? நாளங்களெங்கே?
அறுத்தெறி தளையை; இந்த
அடிமைச்சங்கிலியைத் தூளாய்
உடைத்திட வா,வா! என்று
உதிரமே கொப்பளிக்க
அழைக்கிறேன் தோழா! உன்னை
அணைக்கிறேன் வாராய்! வாராய்!!
என்று அவர் கவியரங்கை முடித்தார். கவியரங்கு முழுக்க அவர் வாசிக்கும் போது கைதட்டி ஆரவாரித்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் இப்படி அவர் கவியரங்கை முடித்ததும் அதிர்ந்து போய் அமைதியாகிவிட்டனர். அவர்களுக்கு என்ன செய்வதெனத்தெரியவில்லை. சில நொடிகள் ஆழ்ந்த மௌனம். பிறகு ஏக காலத்தில் கைதட்டி எழுந்து நின்று பாராட்டினர்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
முற்றம் நிகழ்வில் பவா

தணிகைச்செல்வனது கவிதைகள் ‘ விமர்சன யதார்த்தவாதத்தினடிப்படையில்’ சமூகத்தை நோக்குபவை. அவரது கவியரங்க பாணி குறித்தும் கவிதை குறித்த அவரது அணுகுமுறை குறித்தும் விமர்சனங்கள், மாற்றுக்கருத்துகளெல்லாம் தமுஎச-விற்குள் அப்போதே நிலவிவந்ததுண்டு. அவை தனித்து பேசவேண்டிய விஷயம். அவர் அன்று ஒரு மணி நேரம் வாசித்த கவிதையில் ஒரு சில வரிகளையே இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் தமுஎச-வினது நிகழ்வுகளில் , நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்கள் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தும் விதமாக பார்வையாளர்கள் விமர்சனம் என்கிற ஏற்பாடுகள் உண்டு. அன்று அது போலவே பார்வையாளர் விமர்சனமும் இறுதியில் வைத்திருந்தோம்.

நிகழ்வின் நிறைவில், அப்படி தனது கருத்தைச் சொல்லவந்த நகரப்பிரமுகரும் டாக்டருமான ஒருவர், கவிதை வாசித்த தணிகைச்செல்வனை கடுமையான தரக்குறைவான வார்த்தைகளால் வசைமாரி பொழிய ஆரம்பித்துவிட்டார். கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை கள் குறித்து விமர்சனங்கள் சொல்லவும் மாற்றுக் கருத்துகளை ப்பகிரவும் நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் வந்தவர் இப்படி எதுவும் சொல்லாமல் தரக்குறைவான தனிநபர் வசையில் இறங்கிவிட்டார்.

பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பலர் எழுந்து பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறுமாறும் அவரை, மன்னிப்பு கோருமாறும் கூச்சலிட்டனர். இருப்பினும் அவர் தாறுமாறாய் ப் பேசிக்கொண்டே போனார். எங்கள் சீனியர் மாணவர்களான மோகனசுந்தரமும் பாரியும் மைக்முன்னால் நின்றிருந்த அவரது சட்டையைப்பிடித்திழுத்து அவரைப் பேச விடாமல் தடுத்தனர். ஆத்திரமுற்ற பார்வையாளர்களிலொருவர் தனது கால் செருப்பை கழட்டிக்கொண்டு அந்த டாக்டரை அடிக்க ஓடிவந்தார். அதற்குள் மேடையிலிருந்தவர்கள் தடுத்து அவரை க் காப்பாற்றினார்கள்.

மாற்றுக்கருத்துககளுக்கு இடமளிக்கிற அவற்றை காதுகொடுத்து கேட்கிற ஏற்பாடான ‘பார்வையாளர்கள் விமர்சனம்’ என்கிற இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தாது வசைபாடுதலிலும் அவதூறிலும் இறங்கியதால் கடைசியில் அந்த டாக்டரை பாதுகாப்பாக அனுப்பிவைப்பதே பெரும்பாடாய் ப்போயிற்று.
இந்த அசம்பாவிதத்தால் என்னவாயிற்றென்றால் தமுஎ ச வின் அம்முதல் நிகழ்வு ஊர் முழுதும் பரபரப்பாகப்பேசப்பட்டது. ‘ஓவர்நைட்டில் ஃபேமஸ் ஆகிவிடுவது’ என்பார்களே அது போல அந்நிகழ்வால் த மு எ ச நகர் முழுதும் பிரபலம் ஆனது.

அதற்குப் பிறகு த மு எ ச எந்தவொரு அரங்கக்கூட்டம் நடத்தினாலும் இருநூறு முதல் முன்னூறு பேர் வரை சர்வ சாதாரணமாய்த் திரண்டு விடுவார்கள்.
அப்போதுதான் விழுப்புரத்தில் , பட்டியல் சமூகத்தினரின் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அவர்களது குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு சாதிவெறியர்கள் மிகப்பெரிய கோரதாண்டவத்தினை அரங்கேற்றியிருந்தனர். சமூக முன்னேற்றத்தை ,நல்லிணக்கத்தை நாடுவோரின் கடும் கண்டனத்திற்கு உள்ளான கொடூரம் இது.

அந்த முதல் நிகழ்வில் நடைபெற்ற கவியரங்கில் மேடையேறிய நான், பிரளயன் எனும் புனை பெயரையெல்லாம் அப்போது கொண்டிருக்கவில்லை; எனது இயற்பெயரான சந்திரசேகரன் எனும் பெயரிலேயே அறிமுகமானேன்.

அங்கே அன்று படித்த எனது நீண்ட கவிதையின் ஓரிடத்தில் இவ்வுணர்வை இவ்வாறுவெளிப்படுத்தியிருந்தேன்!

“வெண்மணிச்சாம்பலை
சுகமாய்ப் புசித்தாய்
விழுப்புரச்சாம்பலை
மறுபடியும் கேட்கிறாய்
இந்தியத்தாயே
உனக்கென்ன மசக்கையா?”
எனது கவிதையும் பார்வையாளர்களின் பெருத்த வரவேற்புக்குள்ளானது. நான் அதற்கு ப்பிறகு மாவட்டம் முழுதும் நடைபெறுகிற கவியரங்குகளுக்கு அடிக்கடி அழைக்கப்படலானேன். இந்நிகழ்வினைத்தொடர்ந்து த மு எ ச வலுவான அமைப்பாக திருவண்ணாமலையில் செயல்பட ஆரம்பித்தது. கிளையின் சார்பில் ‘வார்ப்பு’ எனும் கையெழுத்துப் பிரதியைக் கொண்டுவந்தோம்.

கவிஞர்.வெண்மணி, வீ.பா.கணேசன் இருவரது கையெழுத்தும் சித்திரம் போல் மிக வடிவாக இருக்கும். இவர்கள் கைவண்ணத்தால் பலரது படைப்புகளையும் அதில் கொண்டுவருவோம். அரசு ஊழியர் சங்கச் செயற்பாட்டாளரான சந்துரு, ‘பெடரல்’ எனும் பெயரில் சிறுகதைகளையெல்லாம் எழுத ஆரம்பித்தார்.பல புதிய எழுத்தாளர்கள் உருவாயினர். நானும் பல பெயர்களில் அதில் எழுத ஆரம்பித்தேன். எங்கள் கல்லூரி நண்பர்களாக இருந்த சேஷாத்திரி,சீனுவாசன் போன்றோரும் வார்ப்பில் எழுதுவதன் மூலம் எழுத்தாளராயினர்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு பேனரோடு பல்லவன்

வார்ப்பு இதழ் தயாரானதும் டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரில் இருந்த திருவண்ணாமலை கிளை நூலகத்தில் கொண்டு போய் வைப்போம். வைத்த ஒருவாரத்தில் 40,50 பின்னூட்டங்கள் வந்துவிடும். அந்த அளவிற்கு நூலக வாசகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது எங்கள் கையெழுத்து இதழ். இதனைத்தொடர்ந்து சற்று அகலக்கால் வைத்து ஒரு பெரிய எட்டு எடுத்துவைப்பது போல் திருவண்ணாமலை நகரில் ஒரு ஃபிலிம் சொஸைட்டியைத் தொடங்கினோம்.

மாற்று சினிமாவை, இணை சினிமாவை மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிற ஃபிலிம் சொஸைட்டிகள் இந்தியாவில் பரவலாகிக்கொண்டிருந்த தருணம் அது.
ஃபிலிம் சொஸைட்டி என்பது , திரைப்பட ஆர்வம் உள்ளவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து அவர்களிடம் சந்தா வசூலித்து, சர்வதேசத்தரம் வாய்ந்த படங்களை அவ்வுறுப்பினர்களுக்கு திரையிட்டு அது குறித்து விவாதித்து அவர்களிடத்தே திரைப்பட ரசனையை மேம்படுத்துகிற ஓர் அமைப்பாகும்.

சென்னையில் மெட்ராஸ் ஃபிலிம் சொஸைட்டி, ஐ சி ஏ ஃபாரம், வேலூரில் வேலூர் ஃபிலிம் சொஸைட்டி, மதுரையில் எதார்த்தா ஃபிலிம் சொஸைட்டி என தமிழ் நாட்டில் நான்கு ஃபிலிம் சொஸைட்டிகள் மட்டுமே அப்போது செயல்பட்டுவந்தன.

இன்று திரைப்படங்களைத்திரையிடுவது என்பது மிகவும் சுலபம் . டிவிடிக்கள், போன்ற மின்னணுச் சாதனங்கள் வாயிலாகவே நமக்கு திரைப்படங்கள் [மென்பொருட்கள்] கிடைத்து விடுகின்றன. அம்மென்பொருட்களை எந்தவொரு [USB] யுஎஸ்பி சாதனங்கள் வாயிலாகவும் சிறிய புரொஜெக்டர்கள் மூலம் எங்கு வேண்டுமானாலும் எந்த ஒரு ஹாலிலும் திரையிட்டு விடமுடியும். ஆனால் அன்று நிலைமை அவ்வாறில்லை. திரைப்படங்கள் 35 எம்.எம். ஃபிலிம் சுருள்களில் தான் கிடைக்கும். அவற்றைத் திரையிட 35 எம்.எம் புரொஜெக்டர்கள் தேவை. அதற்கு திரையரங்குகளைத்தான் நாம் நாடிச்செல்லவேண்டும்.

இத்தகைய ஒரு சூழலில்தான் திருவண்ணாமலையில் ‘வானவில் ஃபிலிம் சொஸைட்டி’ என்கிற ஒரு திரைப்படக்கழகம் தொடங்கப்பட்டது. திரைப்படங்களை 35 எம்.எம் சுருள்களில் பெற்று திரையரங்குகளில் திரையிட்டால் அவற்றிற்கு கேளிக்கை வரி செலுத்தவேண்டி வரும். எனவே வணிக நோக்கற்ற திரையிடல் என்று சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து வரி விலக்கு பெறவேண்டும்.

மத்திய தகவல் துறை அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற ஃபிலிம் சொஸைட்டிகளின் கூட்டமைப்பு [Federation of Film societies of India] ஒன்று இருக்கிறது. இவ்வமைப்பில் இணைப்பு [affliation] பெற்றால் நீங்கள் கேளிக்கை வரி செலுத்தத்தேவையில்லை. ஆனால் ஓராண்டுகளோ ஈராண்டுகளோ தொய்வின்றி ஒரு ஃபிலிம் சொஸைட்டியை நீங்கள் நடத்தினால் மட்டுமே உங்களுக்கு இக்கூட்டமைப்போடு இணைப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சவால்கள் இருப்பதை அறிந்தேதான் ஃபிலிம் சொஸைட்டி தொடங்கப்பட்டது.

எங்களில் வீ.பா.கணேசன் சென்னை ஐசி ஏ ஃபாரத்திலும் , எல் ஐ சியில் பணியாற்றுகிற சத்யநாராயணன் வேலூர் ஃபிலிம் சொசைட்டியிலும் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தவர்கள். இவர்களுக்கே ஃபிலிம் சொஸைட்டிகள் குறித்த பரிச்சயம் உண்டு. இயல்பாக இவர்களே ஃபிலிம் சொஸைட்டியினை வழி நடத்துபவர்களாக இருந்தனர்.

மேலும் எல் ஐ சி யில் பணியாற்றிய ஜோஷி, கிருஷ்ணமுர்த்தி, சண்முகம், அரசு ஊழியர் சந்துரு, நான் மற்றும் வெண்மணி ஆகியோர் இச்செயல்பாட்டில் அவர்களோடு இணைந்துகொண்டோம். மாதச்சம்பளம் பெறுகிற நடுத்தர வர்க்க ஊழியர்களோடு நகரின் பல வணிகர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு பேனரோடு பல்லவன்

எங்கள் கல்லூரித்தோழர்கள் திக, திமுக மாணவர் அமைப்பைச்சேர்ந்தவர்கள் உட்பட இதில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். அப்போதைய எங்கள் கல்லூரித்தோழர்களான முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கு.பிச்சாண்டி, ஜோதி.ராஜேந்திரன் போன்றோர் ஃபிலிம் சொஸைட்டியின் நிர்வாகக்குழு வில் இருந்து செயல்பட்டனர். ஏற்கனவே ரம்யா ஆர்ட்ஸ் அக்காடெமி நடத்தி பெற்ற அனுபவங்கள் இதற்கு பேருதவியாய் இருந்தன.
ஃபிலிம் சொஸைட்டியின் தொடக்கவிழா கிருஷ்ணா தியேட்டரில் நடந்தது.

‘சம்ஸ்காரா” எனும் கன்னடப்படத்தைத்தான் முதல் படமாக திரையிட்டோம். தென்னிந்திய நியோ ரியலிச சினிமாவின் மைல் கல்களில் ஒன்றென வர்ணிக்கப்பட்ட சம்ஸ்காரா, 70 களில் தொடக்கத்தில் வெளியாகி பல விருதுகளை அள்ளிக்குவித்த திரைப்படம். சம்ஸ்காரா எனில் [funeral rite] ‘இறுதிச்சடங்கு’ எனப்பொருள்.
ஆனால் இதனை நாங்கள் ‘கருமாதி’ என மொழிபெயர்த்து, இறப்பு வீட்டில் 16 ஆம் நாள் நடக்கும் ‘நீத்தார் சடங்கினை’ அறிவிப்பதற்கு அஞ்சலட்டை போல ஒரு காரியப்பத்திரிகை அச்சிடுவார்கள் அல்லவா, அதுபோலவே அட்டையின் ஓர் ஓரத்தில் மூலையில் கருப்பு வண்ணமெல்லாம் இட்டு முதல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தயாரித்து எல்லோருக்கும் அனுப்பினோம்.

அழைப்பிதழைப் பார்த்த உறுப்பினர்கள் பலர் நொந்து விட்டார்கள். என்னங்க இது முதல் நிகழ்ச்சியே இப்படி அபசகுனம் மாதிரி கருமாதின்னு அடிச்சிருக்கீங்க என்றெல்லாம் கேட்டார்கள். எனினும் அந்நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. திரைப்படக்கழகத்தை தொடங்கிவைக்க திரைப்படக்கழகங்களினது கூட்டமைப்பின் [FFSI] செயலாளர்.சுப்பிரமணியம் அழைக்கப்பட்டிருந்தார். ரிசர்வ் வங்கியில் அலுவலராக பணியாற்றிக்கொண்டிருந்தவர் அவர். வந்திருந்த பார்வையாளர்கள் கூட்டத்தைப்பார்த்ததும் அவருக்கு ஏக ஆச்சர்யம்!. இவர்கள் எல்லோரும் உறுப்பினர்களா ? மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்று கேட்டார். நாங்கள் நானூறுக்கு மேல் என்று சொன்னதும் அசந்துவிட்டார்.

பெரும்பாலான சொஸைட்டிகள் 100 அல்லது 150 உறுப்பினர்களைக் கூட த் தாண்டுவதில்லை. நீங்கள் 400க்கும் மெற்பட்டவர்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே இது பெரிய விஷயம். தென்னிந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஃபிலிம் சொஸைட்டி எதுவென்றால் அது உங்கள் வானவில் ஃபிலிம் சொஸைட்டி தான் என்று பாராட்டினார். இப்படி ஒவ்வொரு மாதமும் தவறாது திரைப்படங்களை திரையிட்டு ஓராண்டு கழித்து ஃபிலிம் சொஸைட்டிகளின் கூட்டமைப்பில் இணைப்பையும் பெற்றுவிட்டோம்.

இதனை முழுநேரமாகக் கவனித்துக்கொண்ட வீ.பா. கணேசன் சென்னையிலே ஒரு பணியில் சேர்ந்தார். அதன் பிறகு நான் தொடர்ந்து அப்பொறுப்பினை மேற்கொண்டேன். 1981 இல் நான் சென்னைக்கு வந்த பிறகும் கூட , சிலகாலம் அதாவது 1982 முடிய சென்னையிலிருந்த படி திரையிடல் பணிகளை ஒருங்கிணைத்தேன். இப்படி ஒரு நான்காண்டு காலம் அத்திரைப்படக்கழகம் செயல்பட்டது.

திருவண்ணாமலை அப்போது தனி மாவட்டமாகப் பிரிக்கப்படவில்லை. மாவட்டத்தலைநகராகக் கூட இல்லாத ஒரு சிறிய நகரத்தில் ‘திரைப்படக்கழகம்’ நடத்தியது என்பது உண்மையிலேயே சவால் மிக்க ஒரு விஷயம்தான். கவிஞர். வெண்மணி தங்கியிருந்த 105,சன்னதிதெரு, செட்டியார் மேன்ஷன் என்கிற முகவரிதான் வார்ப்பு கையெழுத்திதழ், வானவில் திரைப்படக்கழகம், தமுஎச கிளைபோன்ற அனைத்து செயல்பாடுகளின் மையமாக இருந்தது. அடிக்கடி அனைவரும் கூடுவது ,விவாதிப்பது, என எல்லா நடவடிக்கைகளும் அங்குதான் நடந்தன.

அந்த மேன்ஷனில் தங்கியிருக்கும் பெரும்பாலோர் இந்த செயல்பாடுகளோடு தங்களை இணைத்துக்கொண்டனர் அல்லது தார்மீக ஆதரவளிப்போராய் பரிணமித்தனர். அப்போது மாவட்ட கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த ‘ஜிடி ஐயா’ என எல்லோராலும் அன்போடும் மதிப்போடும் அழைக்கப்பட்ட ஜார்ஜ் டேனியல் என்பவரும் அந்த மேன்ஷனில் தங்கியிருந்தார். அவர் கன்னியாகுமரிக்காரர்; மாணவப்பருவத்திலிருந்து முற்போக்கு இயக்கங்களில் செயல்பட்டவர். உயர் பொறுப்பில் இருந்ததால் அவரால் நேரடியாக எங்கள் பணிகளில் கலந்து கொள்ளமுடியாதெனினும் மதிப்புமிக்க ஆலோசனைகளை அளிப்பவராக எங்களது செயல்பாடுகளுக்கு ஊக்கமளிப்பவராக எங்களது தார்மீகப் பின்புலமாக இருந்துவந்தார்.

1981ஆம் ஆண்டுக்குப் பிறகு கவிஞர் வெண்மணி யின் வழிகாட்டுதலில் அழகேசன் என்பவர் தமுஎகச கிளைச் செயலாளராக பொறுப்பெடுக்கிறார்.. அப்போது ராமலிங்கம் என்பவர் திருவண்ணாமலையிலிருந்து ‘மாத நாவல்கள்’ வெளியிடுகிற பத்திரிகையொன்றை நடத்திவந்தார். அவரெல்லாம் அப்போது தமு எ சவில் இணைந்து தீவிரமாகச் செயல் பட்டிருக்கிறார்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
1992 கலை இரவில் கருணா

இந்த ராமலிங்கம்தான் பின்னர் சென்னைக்கு வந்து தராசு பத்திரிகையில் பணியாற்றி , பின்னர் ‘ கழுகு’ எனும் பத்திரிகையை தனியாக நடத்தி கழுகு ராமலிங்கம் என அறியப்பெற்றவர். தற்போது சென்னையில் நிவேதிதா பதிப்பகம் எனும் பெயரில் ஒரு பதிப்பகத்தை நடத்திவருகிறார். 1983 என நினைக்கிறேன். தேரடி வீதியிலுள்ள ‘வன்னிய மடத்தில்’ தமு எ ச வின் மாவட்ட மாநாடு நடந்தது. அம் மாநாட்டின் கவியரங்க நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது இவர்களையெல்லாம் நான் சந்தித்திருக்கிறேன். இம்மாநாட்டின் போதுதான் கே.ஏ. குணசேகரனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிகப்பெரிய அளவில் மக்களது பாராட்டுதல்களை ப் பெற்ற நிகழ்ச்சி அது.

அதன் பிறகு ஓவியர் பல்லவன் தமுஎகசவுக்கு வருகிறார். அவரது பெயிண்டிங் ஸ்டூடியோ தமுஎ சவினர் கூடும் இடமாக உருப்பெறுகிறது. அந்த சமயத்தில் கவிஞர்.வெண்மணி யை ஆசிரியராய்க்கொண்டு திருமணத்திற்குப்பிறகு அவர் வசித்த வடமாத்தாதி தெரு முகவரியிலிருந்து ‘அதிர்வுகள்’ எனும் முற்றிலும் கவிதைகளுக்கான ஒரு இதழ் கொண்டுவரப்பட்டது.

மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் என்னோடு தங்கியிருந்த கவிஞர் வெண்மணியின் தம்பி ஓவியர் ராஜாதான் அச்சிடுவதற்கான பொறுப்பு. எனவே அவ்விதழின் பிழைதிருத்தம் அச்சாக்கம் தயாரிப்பு விநியோகம் என எல்லாப்பணிகளும் எங்களது மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெரு அறையிலிருந்தே நடந்தேறின.
அப்போது காளிதாஸின் தலைமையில் ‘நிதர்சனா’ எனும் நாடகக்குழு திருவண்ணாமலை தமுஎகச கிளையின் சார்பில் செயல்பட்டுவந்தது.

தமுஎச-வில் இணைந்து செயல்படுவதற்கு முன் காளிதாஸ் ‘கலைவாணர் நாடகக் குழு’ எனும் பெயரில் மாசி மகத்தின் போது நகர எல்லையின் விளிம்பிலிருக்கிற பள்ளிகொண்டாபட்டில் நாடகங்களை நிகழ்த்துவார். மாசிமகத்திற்கு வருகிற மக்கள் மத்தியில் இது பிரபலமாகி சுற்றுமுள்ள கிராமங்களுக்கெல்லாம் சென்று நாடகம் நடத்துகிற குழுவாக பின்னர் இது உருப்பெற்றது. அதே போன்று அளகேஷ் கன்னா என்பவர் நடத்திய ‘முத்தமிழ் மன்றம்’ என்கிற நாடகக்குழுவும் திருவண்ணாமலை சுற்றியுள்ள கிராமங்களில் பரவலாக நாடகம் நடத்திவந்தது.

1985-86 என நினைவு, இது போன்ற அமெச்சூர் நாடகப் பின்னணியில் இருந்து வந்த காளிதாஸின் எழுத்தாக்கம் மற்றும் இயக்கத்தில் ‘வெவரமில்லாதவர்கள்’ என்கிற நாடகத்தை ‘நிதர்சனா’ குழு மேடையேற்றியதை நான் பார்த்திருக்கிறேன். காளிதாஸ் மற்றும் பவா செல்லத்துரை, கருணா, ஜீவன் பிரபாகரன், ரவிச்சந்திரன், போன்றவர்கள் அந்நாடகக்குழுவில் செயல்பட்டார்கள்.

பின்னர் 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து திமுக அதன் தோழமைக்கட்சிகளுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தீட்சண்யா என்ற பெயரில் இயங்கிய நாடகக்குழு தாக்குதலுக்குள்ளானது. நாடகக் குழுவில் அப்போது செயல்பட்ட கோமதியின் [தற்போது இவர் மானிடவியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்.கோமதி] இல்லத்தை வன்முறையாளர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கருணா தலைமையில் இயங்கிய இந்த தீட்சண்யா நாடகக்குழு 90களின் இறுதிவரை செயல்பட்டது.

‘வார்ப்பு’ க்குப்பிறகு அழகேசன்,பவா.செல்லதுரை, கருணா ஆகியோரின் முன்முயற்சியில் ‘பாதைகள்’ எனும் கையெழுத்திதழ் சிலகாலம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அரசம்பட்டு அழகேசன், தமுஎசவின் கிளைச்செயலாளராக இருந்த காலத்தில் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஒரு கவியரங்கு நடத்தப்படுவதுண்டு. அதாவது டிசம்பர் 31 அன்று இரவு எட்டு மணிக்கு கவியரங்கு தொடங்கும். எல்லோரும் கவிதை வாசிப்பார்கள். சரியாக இரவு 11.55க்கு விளக்குகள் அணைக்கப்படும். 12.00 மணிக்கு மீண்டும் விளக்குகள் ஏற்றப்படும். புத்தாண்டை வரவேற்றபடி ஒருவர் சிறப்புக்கவிதை வாசிப்பார்.

வடமாநிலங்களில் தற்போதும் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு புழக்கத்திலிருக்கும் ‘முஷைரா’ [கவிராத்திரி] எனும் வடிவத்திலிருந்து உந்துதல் பெற்றதுதான் இந்நிகழ்வு. நூற்றுக்கு மேற்பட்டோர் திரளும் இக் கவியிரவுக்கு ஆண்டுக்கு ஆண்டு எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே போனது; கூட்டமும் அதிகரித்தது.
நிகழ்ச்சிகள் 6 மணிக்கே தொடங்கப்பட்டன. கவிதை வாசிப்பு என்பதோடு நில்லாமல் ,பாடல்கள், நாடகங்கள், இலக்கிய உரைகள் என நிகழ்வுகள் விரிவடைந்தன.
இப்படி நிகழ்வுகள் விரிவடைந்ததும் கூட்டமும் அதிகரித்தது. முதலில் டேனிஷ் மிஷன் கிண்டர் கார்டன் பள்ளி மேடை யில் நடந்த இந்நிகழ்வு அடுத்த ஆண்டு பெண்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது . இருநூறு முன்னூறு பேரைக் கொள்கிற ‘பள்ளியின் அரங்கம் ’ கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. கூட்டம் அதிகமானதால் அடுத்த ஆண்டு நிகழ்ச்சியை காந்தி சிலைக்கு அருகே திறந்தவெளியில் மேடை போட்டு நிகழ்த்தத்தொடங்கினர். திறந்த வெளியென்பதால் பாடல்கள் நாடகங்கள் என நிகழ்கலைகள் அதிகமான அளவில் மேடையேற்றப்பட்டன. மாலை 7 மணிக்கு இருநூறு முன்னூறு பேராக இருந்த கூட்டம் இரவு 10 மணிக்கு ஆயிரம் ரெண்டாயிரமென அதிகரித்தது.

அதற்கடுத்த ஆண்டு இதைவிடப் பெரிய மேடையில் பற்பல நிகழ்ச்சிகளோடு இரவு 7 மணி தொடங்கி விடியற்காலை 5 மணி வரை ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் நடைபெறுகிற கலை-இலக்கிய இரவாக வடிவம் கொண்டது. இப்படி புத்தாண்டை வரவேற்க, ஒரு சிறிய உள்ளரங்கில் கவியிரவாகத் தொடங்கிய இந்நிகழ்வு , பாடல்கள், நாடகம் என நிகழ்கலைகளோடு கலக்கிறபோது உள்ளரங்கினை விட்டு வெளியே வீதிக்கு வந்து ஆயிரக்கணக்கான வெகு மக்களை ஈர்க்கிற கலை-இலக்கிய இரவாக பரிணமித்தது.

இப்படி திருவண்ணாமலை தமுஎகச பரிணாமம் பெறுகிற காலத்தில், கவிஞர் வெண்மணி மாற்றலாகி தேனிக்குச் சென்றுவிடுகிறார். கிளைச்செயலாளரான அரசம்பட்டு அழகேசனோடு களமாடுகிறவர்களாக புதிய செயற்பாட்டாளர்களாக, காளிதாஸ், பவா செல்லதுரை, கருணா, பல்லவன், ரேணுகோபால், சாமிநாதன், வைகறை சுகந்தன், வைகறை கோவிந்தன், உத்தமன், கவிஞர் ஃபீனிக்ஸ், சோமு, பாலாஜி, பாஸ்கரன், குழந்தைவேல், ஜெயஶ்ரீ, ஷைலஜா, உத்திரகுமாரன், அன்பரசன் ஆகியோர் உருவெடுக்கின்றனர்.

 

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
த மு எ ச மாநில மாநாடு, 2005. திருவண்ணாமலை

அரசு ஊழியர் சங்கத்தலைவர்களில் ஒருவரான சந்துரு மட்டும்தான் 1978 இல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை திருவண்ணாமலை தமு எச வில் தொடர்ந்து செயற்பட்டுவருபவர் எனச்சொல்லலாம். திருவண்ணாமலை தமுஎச கிளையின் செயல்பாடுகளில் கிளைத்த கலை யால் பொழுதளந்த இவ்விரவுகளுக்கு , கலைஇரவு என்கிற இவ்வடிவத்திற்கு மிகப்பெரும் பண்பாட்டு முக்கியத்துவமுண்டு.

சாதி சமய பேதமின்றி, ஒரே குடையின் கீழ் எல்லாத்தரப்பினரையும் பார்வையாளர்களாய் திரட்டிய ஆகப்பெரும் பண்பாட்டு செயல்பாடு இது. அரசு மற்றும் பெரும் வணிக நிறுவனங்கள், நிதி முகமைகள் இவர்களின் உதவிகளின்றி மக்களது நன்கொடைகள் மற்றும் சமூக ஆதரவை மட்டுமே கொண்டு பெரிய அளவில் மக்களைப் பார்வையாளர்களாகத் திரட்டுகிற ஒரு சுயாதீனமான ஏற்பாடு தான் கலை இரவு என்பது.

பிரபலமானவர்களை அழைத்து அவர்களது பிரபலம் தருகிற ஈர்ப்பால் மக்களைத்திரட்டி புகழ்வெளிச்சத்துக்கு வந்த நிகழ்வல்ல இது. மாற்றுச்சிந்தனையில் , மாற்று வெளிகளில், மாற்றுக் கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவோரை செயல்படுவோரை அழைத்து அவர்களுக்கு ‘மேடை போட்டுத்தருவதன் மூலம்’ பிரபலமடைந்த நிகழ்வு இது.

கரிசல் குயில்கள் கிருஷ்ணசாமி, சந்திரசேகரன், வைகறை சுகந்தன், கோவிந்தன், உத்தமன் ஆகியோரது பாடல்கள் சென்னைகலைக்குழுவின் நாடகங்கள், பாரதி கிருஷ்ணகுமாரின் உரைவீச்சு இவையே அன்று அக்கலை இலக்கிய இரவின் மையமான நிகழ்வுகளாயிருந்தன. நாடகக்கலைஞர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் போன்றோருக்கு மிகப்பெரிய பார்வையாளர் திரளைத் திரட்டித்தருவதன் மூலம் அவர்களது கலைத்திறன்களுக்கு புதிய சவால்களைத் தந்து அவர்களை வளர்த்தெடுத்த நிகழ்வு இது.

உண்மையைச்சொல்லப்போனால் இக்கலை இரவின் மூலம் பலர் பிரபலமானார்கள். இப்படி இக்கலை இரவில் மேடையேற்றப்பட்ட பாப்பம்பாடி ஜமா ,பின்னர் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று நிகழ்வை நடத்துகிற குழுவாக பலரது கவனத்திற்குள்ளானது. பல எழுத்தாளர்கள் கலை இரவு மேடைகளில் ஏறுவதை விரும்பினார்கள். அவர்களது படைப்புகள் அம்மேடைகளில் பேசப்படுவது குறித்து பெருமிதம் கொண்டார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘திசைகளின் நடுவே’ இப்படி இந்நகரில் நடந்த ஒரு கலை இரவில்தான் வெளியிடப்பட்டது. அதனை பதிப்பித்து வெளியிட்டதும் திருவண்ணாமலை தமுஎச தான்.

பவா செல்லதுரை,கருணா,பல்லவன், போன்ற தோழர்களின் கற்பனை,திட்டமிடல்,ஒருங்கிணைப்பு இக்கலை இலக்கிய இரவினை ஒரு காத்திரமான இடத்திற்கு இட்டுச்சென்றது எனலாம். ஓவியர் பல்லவனின் கைவண்ணத்தில் உருவான ஹோர்டிங்குகள், விளம்பர தட்டிகள், முற்போக்கு இயக்கச் செயல்பாடுகளின் மக்கள் தொடர்பு உத்தியினை, அதன் பரப்புரையினை , ஒரு புதிய எல்லைக்கு விரிவு படுத்தியது. உண்மையில் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற அக்கலை இரவுகளுக்கு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் எழுத்தாளர்கள்,கலைஞர்கள் செயற்பாட்டாளர்களெல்லாம் அழைக்காமலே வந்துவிடுவர்.

அப்படி வந்து பார்த்து பெற்ற உந்துதலில்தாம் அவரவர்களும் தத்தமது ஊர்களில் இது போன்ற கலை இரவுகளுக்குத் திட்டமிடுகின்றனர். இப்படித்தான் தமிழ்நாடு முழுதும் கலை இரவுகள் பரவலானது. திருவண்ணாமலையின் பௌர்ணமி இரவுகள் ‘கிரிவலத்துக்கு’ மட்டும் பெயர் போனவை அல்ல. தமுஎசவினர் நடத்துகிற ‘முற்றம்’ நிகழ்வும் இப்படியோர் பௌர்ணமி இரவில்தான் நடக்கும்.

திருவண்ணாமலையில் தமுஎசவினர் ஒழுங்கு செய்த மற்றொரு முக்கியமான நடவடிக்கை இந்த “முற்றம்” எனும் படைப்பாளரை சந்திக்கிற நிகழ்வாகும். ஒவ்வோர் மாதமும் ஓர் எழுத்தாளர், அவரது நீண்ட உரை பின்னர் அவரது படைப்புகள் குறித்து அடர்வும் ஆழமுமிக்க கலந்துரையாடல் எனச் செறிவாக நடந்தேறும் இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் கலை இலக்கிய வாதிகள் பெரும்பாலோர் பங்கேற்றனர்.

சுந்தர ராமசாமி , கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், அசோகமித்திரன்,மேலாண்மை பொன்னுச்சாமி, கோணங்கி,எஸ்.ராமகிருஷ்ணன் என தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் மட்டுமல்ல சச்சிதானந்தன்,பால் சக்கரியா போன்ற ஆங்கிலத்தில் எழுதுகிற எழுத்தாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். இச்செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட பி.லெனின், பாலுமகேந்திரா, நடிகர்.மம்மூட்டி போன்ற திரைப்பிரபலங்கள், தமுஎகச திருவண்ணாமலை கிளைக்கு நெருக்கமான நண்பர்களாயினர்.

2005 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற தமுஎகச-வின் மாநில மாநாடு இக்கிளைச்செயல்பாட்டின் சிகரங்களில் ஒன்று. டேனிஷ் மிஷன் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அம்மாநாட்டினையும் இறுதி நாள் இரவில் நடைபெற்ற எங்களது சென்னை கலைக்குழுவின் ‘உபகதை’ நாடகத்தையும் திருவண்ணாமலை நகரம் இன்னும் நினைவில் கொண்டுள்ளது

2008 இல் சென்னையில் நடந்த மாநில மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்கம் [தமுஎச] தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் [தமுஎகச] எனப்பெயர் மாற்றம் கண்டது. கலைஞர்கள் என சேர்க்கப்பட்டு பெயர் மாற்றம் பின்னர் நடந்திருந்தாலும் சாராம்சத்தில், அடிப்படையில், நடைமுறையில் ஏற்கனவே திருவண்ணாமலை கிளை என்பது, எழுத்தாளர்கள் கலைஞர்களின் கூட்டுச் செயல்பாட்டில்தான் தொழிற்பட்டுவந்தது. அண்மையில் திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்படவிழாவொன்றை வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் 5 நாட்கள் தங்கியிருந்து படங்களை கண்டனர். 30க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பலரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படவிழா இது.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு 1993- போப்பு பரிசளிக்கிறார் பக்கத்தில் கருணா, பின்னால் சந்துரு, பல்லவன்

தொடக்ககாலத்தில் மின்வாரிய ஊழியர்கள் தமுஎகசவை தொடங்க பின்னணியில் இருந்தார்கள் என்று சொன்னோமல்லவா! இன்று என்ன நிலைமை தெரியுமா? அடுத்தடுத்த தலைமுறையினைச் சேர்ந்த மின்வாரியத் தோழர்கள்தாம் முன்கையெடுத்துச் செயல்பட்டு அமைப்பின் முன்னணித் தலைவர்களாக பரிணமித்துள்ளனர். தற்போதுள்ள மாவட்டச் செயலாளர் பாலாஜி, துடிப்புமிக்க செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான நகர்க் கிளைச்செயலாளர் செந்தில்குமார் இருவருமே மின்வாரிய ஊழியர்கள்தாம். அது மட்டுமல்ல நாடறிந்த எழுத்தாளர் பவா செல்லதுரையும் மின்வாரியத்தில் கணக்கு அலுவலராகப் பணியாற்றுபவர்தாம்.

ஓவியர் பல்லவனின் வழியில் தற்போது வசந்த் வந்திருக்கிறார். முன்னவர் பெரிய பேனர்களில் தூரிகை கொண்டு வரைபவர். வசந்த், கணிணி திரையில் தன் கைவண்ணத்தைக் காட்டும் ஒரு கிராஃபிக் டிஸைனர். அண்மைக்காலமாக தமுஎகச-வினது அனைத்து நிகழ்வுகளுக்கும் தோழர் கருப்பு கருணாவின் மேற்பார்வையில் போஸ்டர் மற்றும் அழைப்பிதழ்களை வடிவமைப்பு செய்வது வசந்த் தான். தமுஎகச மட்டுமல்லாது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற பல்வேறு இலக்கிய அமைப்புகள் தற்போது திருவண்ணாமலையில் செயல்படுகின்றன; பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

எழுத்தாளர் பவா செல்லதுரை தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உருவாக்கியுள்ள ‘பத்தாயம்’ எனும் அரங்கில் அடிக்கடி பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நாடக அளிக்கைகளை நடத்திக்கொண்டிருக்கிறார். இப்படி அவர் பத்தாயத்தில் தொடங்கிய ‘பெருங்கதையாடல்’ எனும் சமகால எழுத்தாளர்களின் கதை சொல்கிற நிகழ்வு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று இன்றைக்கு தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு மட்டுமல்ல பலநாடுகளுக்கும் அழைக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிற ஒரு நிகழ்வாக வெளிச்சம் பெற்றிருக்கிறது.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான 2020 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற கே.வி.ஜெயஶ்ரீ , த மு எ க ச திருவண்ணாமலை கிளைச் செயல்பாடுகளிலிருந்து முகிழ்த்தெழுந்தவர்தாம். கிட்டத்தட்ட 42 ஆண்டு கால தமுஎகச திருவண்ணாமலை கிளையின் செயல்பாட்டுக்குத் தரப்பட்ட ஓர் எளிய சிறு அங்கீகாரமாகக் கூட இவ்விருதினை நாம் கருதலாம்.

இப்படி பல முன்மாதிரிச் செயல்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள திருவண்ணாமலை நகரம், இன்னும் பல முன்மாதிரிகளை துருவியறிந்து செயலாக்கவேண்டும் என்பதுதான் பலரது விருப்பமும். அதற்கான வளனும் திறனும் திருவண்ணாமலைக்கு நிச்சயம் உண்டு. இவ்வரலாற்றின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியான கவிஞர்.வெண்மணி , கருப்பு.கருணா ,வைகறை சுகந்தன், வைகறை.கோவிந்தன்,பாஸ்கர், கவிஞர்.பீனிக்ஸ் ஆகியோர் இன்று இல்லை. எனினும் அவர்கள் நினைவுகள் தரும் உந்துதலில் இவ்வரலாற்றை முன்னெடுத்துச் செல்கிற வலு திருவண்ணாமலை த மு எ க ச வினருக்கு என்றென்றும் உண்டு.
வெளிவரவுள்ள ‘வரலாற்றில் திருவண்ணாமலை’ எனும் நூலுக்காக எழுதிய ஒரு கட்டுரை

கட்டுரையாளர் தொடர்புக்கு:
[email protected]

முந்தைய தொடரை வாசிக்க: 

அண்ணாமலை புராணம் (திருவண்ணாமலை தமுஎகச வரலாறு) – பிரளயன்

What is fascism? Explains With Indian revolutionary M. N. Roy Fascism Book Based By Pralayan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பாசிசம் என்றால் என்ன? | எம்.என்.ராய் எழுதிய ‘பாசிசம்’ நூலை முன்வைத்து – பிரளயன்



அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பிஜேபி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன?

What is fascism? Explains With Indian revolutionary M. N. Roy Fascism Book Based By Pralayan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பாசிசம்என்பதன் மூலச்சொல் லத்தீனிலிருந்து பெறப்பட்டது. கீரை வாங்கும்போது ஒரு கத்தை கீரை என்று கேட்டு வாங்குவோமில்லையா, அந்த ‘கத்தை’ என்ற சொல்லின் பொருள்தான் பாசிசம் என்பதற்கும்.   ‘கட்டு’ , ‘கற்றை’ , ‘கத்தை’ அல்லது ‘மூட்டை’  [Bundle] என  ‘பாசிசம்’ எனும் இச்சொல்லுக்குப் பொருள்கொள்ள லாமென விக்கிபீடியா சொல்கிறது. தனித்துள்ள ஒரு குச்சியை எளிதாக உடைத்துவிடலாம். அதே நேரத்தில் அவை ஒரு கட்டாக கட்டப்பட்டிருந்தால் குச்சிகளை  எளிதில் உடைத்துவிடமுடியாதல்லவா அந்தப் புரிதலிலே இப்பெயர் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது. பலதும் சேர்ந்த ஓர் கூட்டமைப்பு என்ற பெயரிலும் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த ஒரு புரிதலில்தான் இத்தாலியில் தான் ஆரம்பித்த அரசியல் அமைப்புகளுக்கு புரட்சிகர நடவடிக்கைகளுக்கான கற்றை [Fasces of Revolutionary Action] போருக்கான இத்தாலியக் கற்றை [Italian Fasces of Combat] என்று தொடக்கத்தில் பெயர்வைத்த பெனிட்டோ முசோலினி  சிலவருடங்களுக்குப்பிறகு  தேசிய கற்றைக் கட்சி [ National Fascist Party] என்று ஆரம்பித்து 1922 இல் இத்தாலியின் பிரதமராகவே ஆகிவிடுகிறார். முதல் உலகப்போருக்கு பின் இத்தாலியில் தேசிய கற்றைக் கட்சி [ National Fascist Party] யினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக அரசியல் ‘சிந்தனைப்போக்கினையே’ வரலாற்றாளர்கள் பாசிசம் என இனம் காண்கிறார்கள்.

அளவற்ற எதேச்சதிகாரம், வன்முறை, ஆயுத பலம் இவற்றால் சமூகத்தைக் கட்டுப்படுத்துவது, இழந்து விட்ட புகழ்மிக்க ரோம சாம்ராஜ்யத்தை மீண்டும் கொண்டுவருவது என்கிற பெயரில் ரோமானிய இத்தாலியப் பெருமிதத்தை மக்களுக்குப் போதைச்சரக்கு போல ஊட்டிவளர்ப்பது, சிறுபான்மையினர் நலன், மாறுபட்ட கருத்துகள், வேறுபட்ட பண்பாடுகள் இவற்றை சுத்தமாக அழித்தொழித்து ஒற்றைப் பண்பாட்டை மிருகபலத்தோடு நிறுவுவது இவையே முசோலினியின் அரசியல் நடவடிக்கைகள்.

What is fascism? Explains With Indian revolutionary M. N. Roy Fascism Book Based By Pralayan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

 கம்யூனிஸ்டுகளின் சர்வதேச அமைப்பான  மூன்றாம் அகிலத்தின்  7 வது உலக காங்கிரசுக்கு பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜார்ஜ் டிமிட்ரோவ், உழைக்கும் பெண்கள் இயக்கத்தின் மாபெரும் ஆளுமை கிளாரா ஜெட்கினுடன் இணைந்து  1935, ஆகஸ்ட்டில் அளித்த  அதிகாரபூர்வ அறிக்கையில் பாசிசத்தை இவ்வாறு வரையறுக்கிறார். 

டிமிட்ரோவின் கூற்றுப்படி: “பாசிசம் என்பது முதலாளிவர்க்கம் – தொழிலாளி வர்க்கம் என்ற இருவர்க்கங்களுக்கும்  மேலே நின்று  இயங்குகிற ஓர் அரசு அதிகாரம் அல்ல. மேலும் அரசு இயந்திரத்தைக் கைப்பற்ற குட்டி முதலாளிகள் இயற்றிய ஒரு கலகக் கோட்பாடாகவும்  இதனை வரையறுத்துவிடவியலாது. வர்க்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட  அல்லது  வர்க்கங்களுக்குப் பொதுவான வர்க்கங்களுக்கு மேலான ஓர் அரசு அதிகாரமாகவோ குட்டி முதலாளிகளின் அரசாகவோ  உதிரித் தொழிலாளர்கள் நிதி மூலதனத்தின் மீது மேலாண்மை செலுத்த முயல்கிற ஒன்றாகவோ இவற்றைப் புரிந்துகொள்ளக் கூடாது. பாசிசம் என்பது முற்றும் முதலுமாக நிதி மூலதனத்தின் அதிகாரமாகும். இது தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகள் மற்றும் அறிவுத்துறையினரது புரட்சிகர பிரிவினருக்கும் எதிரான பயங்கரவாத பழிவாங்கலின் வன்மமிக்க ஓர் அமைப்பாகும். வெளியுறவுக் கொள்கையில், பாசிசம், அதன் மிக மிருகத்தனமான வடிவத்தில் தேசிய வீறாப்பு பேசி, பிற நாடுகளின் மீது  பகைமையை வெறுப்பைத் தூண்டுகிறது.பாசிசத்தினது வளர்ச்சியும், பாசிச சர்வாதிகாரமும், வெவ்வேறு நாடுகளில் அதனதன் வரலாறு, சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின்படி  வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கின்றன.    அத்தேசத்தின் தனித்தன்மை மற்றும் சர்வதேச அளவில் அந்நாட்டிற்கு அளிக்கப்படும் அந்தஸ்து, மதிப்பு இவற்றிற்கேற்ப அது வடிவம் கொள்கிறது.”

https://www.marxists.org/reference/archive/dimitrov/works/1935/08_02.htm#s2

What is fascism? Explains With Indian revolutionary M. N. Roy Fascism Book Based By Pralayan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும்தான் பாசிசம் குறித்த கவலைகள் இருந்ததாக வரலாறு நமக்குச் சொல்லவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய எல்லா தரப்பினரும் ‘பாசிச அபாயம்’ குறித்த எச்சரிக்கையுணர்வோடு இருந்துள்ளனர்.  பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுமுள்ளனர்.  ஏனெனில் பாசிசம் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிடுகிறது.  கம்யூனிஸ்டுகள் அல்லாத, ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய சிந்தனையாளர்கள் பாசிசத்தை எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்று நாம் வலைதளத்தில் தேடினால், பலராலும் அதிகம் தேடப்பட்டு கண்டறியப்பட்டதாக நமது பார்வைக்கு வருவது, 2003 ஆம் ஆண்டில் லாரன்ஸ் ப்ரிட் (Laurence W. Britt) என்பவர் தனது “Fascism, Anyone?” (FI, Spring 2003), எனும் நூலில் அளிக்கிற விளக்கங்களாகும். பாசிசத்தை இனங்காண உதவும் 14 பண்புகளை அவர் அந்நூலில் வரிசைப்படுத்துகிறார்.

  1. தேசீய வாதம் : தனது நாடுதான் பிறநாடுகளை விட உயர்ந்தது என குடிமக்களை நம்பவைத்து  தேசபக்தி  உடுக்கடித்து மருள்கொள்ளச் செய்வது.
  2. உரிமை மறுப்பு: மனித உரிமைகள் மீது வெறுப்பினை உமிழ்வது
  3. பலிக்கடாக்கள் தேடல்: நாட்டினது பிரச்சினைகளுக்கு சம்பந்தமில்லாமல் எவரையாவது காரணம் காட்டி அவரைப் பலிகடாவாக்குவது. 
  4. ராணுவ வாதம்: அனைத்திற்கும் மேலாக ராணுவத்தை முன்னிறுத்துவது.
  5. பெண்களை விட ஆண்களே முக்கியமானவர்களென நாசூக்காக பரப்புரை செய்வது; சில நேரங்களில் பகிரங்கமாகவும் செய்வது.
  6. ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது. ஊடகங்கள் மற்றும் அனைத்து விதமான செய்தி தொடர்பு சாதனங்களெல்லாம் மக்களிடம் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்பதை வரையறுக்கத் தொடங்குவது.
  7. தேசப் பாதுகாப்பின் மீது அதீத கவனத்தைக் குவிப்பது; தேசம் அச்சுறுத்தலுக்கு உள்ளாயிருப்பதாக வதந்திகளைப் பரப்பி பதற்றத்தை உருவாக்குவது
  8. மதத்தோடு  அரசாங்கத்தினை நெருக்கமான உறவுகளால் பின்னிப்பிணைப்பது.
  9. வர்த்தகம்  மற்றும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களை கண்ணில் வைத்து பாதுகாப்பது.
  10. தொழிலாளர்களை அடக்கியொடுக்குவது; தொழிற்சங்கங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கியெறிந்து அவர்களை எழுந்து நிற்கக்கூட சக்தியற்றவர்களாக மாற்றுவது.
  11. கலைஞர்கள் அறிவுஜீவிகள் மீது வெறுப்பைக் கக்குவது; அறிவியலாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் இவர்களது சொற்களை மதிக்காதீரென மக்களுக்கு அறிவுறுத்துவது.
  12. நடைபெறும் குற்றச்செயல்களையும்  அக்குற்றச்செயல்கள் மீது எடுக்கப்படும் போலீஸ் நடவடிக்கைகளையும் பூதக்கண்ணாடி வைத்து பெரிதுபடுத்திக்காட்டுவது.
  1. ஊழலை அன்றாடமாக்குவது….அதிகாரவர்க்க மேல்தட்டினரும் [Power elite], பொருளாதார மேல்தட்டினரும் [Economic elite]  கூட்டு வைத்துக்கொண்டு, ஊழல் செய்து கொள்ளையடிப்பதை பரவலான நிகழ்வாக்குவது. இவ்வூழல் இருவிதத்தில் செயல்படும் . அதிகார மேல்தட்டினர், பெருமளவு பணத்தையும் சொத்துக்களையும் பரிசாகப்பெறுவர். பதிலுக்கு, ஈவிரக்கமின்றி கொள்ளையடிக்க பொருளாதார மேல்தட்டினருக்கு, தேச வளங்கள் திறந்துவிடப்படும். எல்லா விதிகளும் வளைக்கப்பட்டு, திருத்தப்பட்டு, ஆறுகளை, மலைகளை காடுகளை, கடற்கரையை இன்ன பிற வளங்களை குத்தகைக்கு விடுவது போன்றவை நடக்கும். தனது அதிகார பலத்தாலும் ஊடகங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவதன் மூலமும் இவ்வூழல்கள் பெருமளவுக்கு விவாதத்திற்கும் வெளிச்சத்திற்கும் வராமல் தடுக்கப்படும். அதனால் இவை பொதுமக்களால் சரியாக புரிந்துகொள்ளப்படாமலும் உணரப்படாமலும் போய்விடும்.
  2. தேர்தல் முறைகேடுகளை திட்டமிட்டுச் செய்வது. மக்கள் பெருமளவு பங்கேற்று வாக்களித்தாலும்  அவ்வாக்கு எண்ணிக்கையை நடத்தவிடாது இழுத்தடிப்பது அல்லது அந்நடைமுறையினை சீர்குலைப்பது. சில பாசிச அரசுகள்  தங்களை தேர்தலில் எதிர்த்து நிற்கும் எதிர்க்கட்சித்தலைவர்களை ஆள்வைத்து  தீர்த்துக்கட்டியுமுள்ளன.

உண்மையில் ஒரு ‘பாசிச அரசினை’ பட்டியலிடப்பட்ட இப்பண்புகளைக் கொண்டு மட்டும்  கண்டு பிடித்துவிட இயலாதுதான். எனினும் லாரன்ஸ் ப்ரிட், இதற்கு முன்னால் பாசிச அபாயம் குறித்து சிந்தித்த பலரது சிந்தனையாளர்களின் கருத்துக்களிலிருந்தே இப்பட்டியலை உருவாக்கினார் எனலாம்.

What is fascism? Explains With Indian revolutionary M. N. Roy Fascism Book Based By Pralayan. Book Day is Branch of Bharathi Puthakalayam.
Umberto Eco – உம்பர்ட்டோ ஈகோ

லாரன்ஸ் பிரிட்டுக்கு முன்பே,1995 ஆம் ஆண்டில், குறியீட்டியலாளரும் ஊடகங்கள், பண்பாடு இவை தொழிற்படும் விதம் குறித்து உரத்து சிந்தித்தவருமான உம்பர்ட்டோ-ஈகோ, தனது நிஜ-பாசிசம் [Ur-Fascism]  எனும் நூலில் பாசிசத்தின் 14 பண்புகளை வரிசைப்படுத்துகிறார்.

  1. மரபு குறித்த கண்மூடித்தனமான வழிபாடு.
  2. நவீனத்துவத்தை நிராகரிப்பது.
  3. மேலோட்ட மான செயல்பாடுகளை நடைமுறையாக்குவது. அதாவது ஒப்புக்காவது எதையாவது செய்வது.[இந்திய அரசின் எந்தச் செயல்பாட்டை இதனோடு ஒப்பிடலாமென்பதை நீங்கள் யூகியுங்கள்]
  4. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதை அல்லது மறுப்பு தெரிவிப்பதை தேசத்துரோகமாகக் கருதுவது.
  5. மாறுபட்ட பண்பாடுகளை, வித்தியாசமான வாழ்முறைகளைக் கண்டு அஞ்சுவது.
  6. விரக்தியடைந்துள்ள நடுத்தர வர்க்கத்தினை தாஜா செய்து அவர்களை அடித்தட்டு மக்களுக்கெதிராக உசுப்பிவிடுவது.
  7. தமக்கு எதிராக பெரிய சதிகள் நடப்பதாக தமது பின்னால் திரண்டவர்களை, தமது ஆதரவாளர்களைஆவேசம் கொள்ளச்செய்வது; சதிகளால் தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக அவர்களை நம்பச்செய்வது.
  8. எதிராளிகளின் பகட்டுமிக்க செல்வத்தினாலும்  அவர்களது பலத்த செல்வாக்கினாலும் தான் அவமானப்படுத்தப்பட்டதாக தனது தொண்டரடிப் பொடிகளை நம்பச்செய்வது; வேப்பிலை அடிப்பது. எதிராளி பலமானவராகவும் இருக்கலாம்; பலவீனராகவுமிருக்கலாம். அவர்களது பலம்,பலவீனம் மீதான கவனக்குவிப்பை தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டேயிருப்பது.
  9. வாழ்க்கையென்பதே ஒரு நிரந்தரமான யுத்தம்தான். இதில் சமாதானம் அமைதி என்று பேசுவதெல்லாம் முற்றிலுமாக எதிரியிடம் நம் தலையைக் கொடுப்பதற்கு ஒப்பாகும் என்று பரப்புரை செய்வது. அதாவது வாழ்க்கையென்பது ஒரு போராட்டம்தான் என்று சொல்வதற்குப்பதிலாக நீ போராடுவதற்குத்தான் ஜென்மம் எடுத்தாய் என மந்திரித்துவிடுவது.
  10. ஏழைகளை, பலவீனமானவர்களை அவமதிப்பது; அவர்களுக்கு இடமில்லாமலாக்குவது. 
  11. எல்லோரும் ஒரு வீரராக [ஹீரோவாக] இருக்க வேண்டுமென பயிற்றுவிப்பது; வீர வழிபாட்டை ஊக்குவிப்பது. வீர வழிபாடு – வீர மரணத்தோடு தொடர்புடையது. அதாவது அவர்களை வீர மரணத்திற்கு தயார்செய்வது. 
  12. ஆணெனும் பெருமிதத்தை ஊட்டிவளர்ப்பது. இங்கே ஆண் பெருமிதமென்பது பெண்களை இழிவாகப்பார்த்தல், கற்புக்கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தல், பாலியல் உறவுகளில் உயர்வு-தாழ்வு என தர நிர்ணயம் செய்தல், குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது, மாற்றுப்பாலியல் விழைவுகளின்  மீது, சகிப்பின்மையினை வெளிப்படுத்துதல், வெறுப்பை உமிழ்தல், வன்மம் கொள்ளுதல் இவற்றோடு  தொடர்புடையது.
  13. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனரஞ்சகவாதம். இப்போது டிவி மற்றும் இணைய வழி பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஒரு குறிப்பிட்ட மக்கள் பகுதியினர் ஆற்றும் எதிர்வினைகளை அவர்களது ரசனையை ஒட்டுமொத்த மக்களது ரசனை உணர்வாக முன்னிறுத்தும் போக்கு இருக்கிறதல்லவா, அது போல அரசியல் தளத்திலும் குறிப்பிட்ட பகுதியினரின் எதிர்வினைகளை ஒட்டுமொத்த மக்களுடைய குரலாக முன்னிறுத்துவது.  
  14. புதுப்பேச்சு [Newspeak] சாரமற்ற சொற்களைப் பேசுவது; வார்த்தை விளையாட்டு. 

பாசிச அரசுகள் உருவாக்கிய பாடநூல்கள் இதற்கு நல்ல உதாரணம். சாரமிழந்த மலினமான தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த சொற்களிலேயே எல்லாவற்றையும் விளக்க முற்பட்டு அர்த்தத்தைக் குறுக்குவது. சிக்கல் மிக்க எதார்த்த சூழலை குறிக்கிற, விமர்சன விழிப்புணர்வை தூண்டக்கூடிய சொற்களை சொற்றொடர்களை திட்டமிட்டு தவிர்ப்பார்கள். இன்றைக்கு இந்தியச்சூழலில் ஆள்வோர் பிதற்றிக்கொண்டிருக்கிற பல சொற்களை உதாரணமாகச்சொல்லலாம். [இந்த ‘நியூ ஸ்பீக்’ எனபது குறித்து மேலும் நாம் ஆழமாக விவாதித்திடவேண்டும்.]

https://www.openculture.com/2016/11/umberto-eco-makes-a-list-of-the-14-common-features-of-fascism.html

மேலே குறிப்பிட்ட ஜனநாயக விரோத மக்கள் விரோத அடாவடித்தனங்கள் பல,  இன்றைக்கு பல நாடுகளின் அரசுகளது செயல்பாடுகளாக இருந்து வருவதைப் பார்க்கலாம். எனினும் இவற்றை இரண்டாம் உலகப்போருக்கு முன்பிருந்த  இத்தாலி ,ஜெர்மனி போன்ற பாசிச அரசுகளோடு ஒப்பிடமுடியுமா என்கிற கேள்வியும் நமக்கு எழலாம். உண்மையில் பாசிச அரசு என்பது அரசு இயந்திரம் முழுக்க பாசிச மயமாகிவிட்ட  ஓர் அரசினையே குறிக்கும். அப்படியெனில் இந்திய அரசு முழுதுமாய் பாசிச மயமாகிவிட்டதா அப்படி இல்லாதபோது பிஜேபி  அரசினை பாசிச அரசு எனச்சொல்லவியலுமா என சில சிந்தனையாளர்கள் கேள்வியெழுப்பினர். உண்மையில் இந்திய அரசு முற்றிலுமாக பாசிச  மயமாகிவிடவில்லை. இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் அதனை அவ்வாறு மாற்றிவிடுவதற்கு இன்னும் பெருந்தடையாகவே உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்தியா, பாசிச அரசாக மாறிவிடவில்லை. பாசிச சக்திகளால் ஆளப்பட்டு வருகிறது. பாசிச சக்திகள் ஆட்சியதிகாரத்திலிருந்து கொண்டு அரசினையும் நாட்டின் அரசியல் சமூக சூழலையும் ‘பாசிசத்தை நோக்கி’ அழைத்துச்செல்ல  அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கின்றனர் எனச் சொல்லவியலும்.

பொருளாதார அறிஞரும், இடதுசாரி சிந்தனையாளருமான பிரபாத் பட்நாயக்,  அயோத்தியாவிலிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதே பிஜேபியினை ஒரு ‘பாசிச சக்தி’ என்றே வர்ணித்தார். எல்லோரும் பிஜேபியினை ‘வகுப்புவாதிகள்’  ‘வகுப்பு வெறியர்கள்’ என அழைத்துக்கொண்டிருக்கும் போது அவர் இவ்வாறு வரையறுத்தார். 1993 ஆம் ஆண்டில் சோசியல் சயின்டிஸ்ட் இதழுக்கு அவர் எழுதிய ‘நமது காலத்தின் பாசிசம்’ எனும் கட்டுரையில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

 “அயோத்தியாவில் நடைபெற்ற அட்டூழியங்கள், அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல கொடூரங்கள் பற்றி விவரிப்பவர்கள் பலரும் நம் நாட்டில்  பாசிசம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது எனச் சொல்வதற்குப் பதிலாக ‘வகுப்புவாதம்’ என்கிற வார்த்தைப் பிரயோகத்தோடே நின்றுவிடுகின்றனர்.  

 என் பார்வையில், பம்பாய் மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடந்த இனவாத படுகொலைகள் மற்றும்  திட்டமிட்டு நடத்தப்பட்ட அழித்தொழிப்புகள் என்பவை மிகவும் ஆழமாகப் புரையோடிப் போயுள்ள ஒரு வஞ்சகப்போக்கின் வெளிப்பாடாகும்; பாசிசம் தலையெடுக்கிறது என்பதை நமக்குத் தெளிவாக உரைக்கிற நிகழ்வுகளாகும். சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த  எப்போதோ நடக்கும் ஒரு  நிகழ்வாகவோ, தவறுதலாக நிகழ்ந்துவிட்ட  சம்பவங்களாக மட்டுமோ இவற்றை நாம் கருதவியலாது. வன்முறையின் வகுப்புவாத இயல்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் நம் நாட்டில் பாசிசம் எடுக்கும் வடிவம் வகுப்புவாதம் என்று நான் வாதிடுகிறேன்.”

Social Scientist Volume 31, Nos 3-4, March-April 1993, Page no .69

பிஜேபியினர் தேர்தல் களத்தில் வென்று ஆட்சியைப்பிடிப்பார்களென தெளிவாக அறுதியிட்டுச் சொல்ல முடியாத 28 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட கருத்துகள் இவை. ஆனால், வகுப்புவாத ஹோமம் வளர்த்து இன்றைக்கு பாசிச சக்திகள் ஆட்சியதிகாரத்திலே வந்து அமர்ந்துவிட்டனர். மேலும் இன்றைய ஆளும் சக்திகளை இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதாவது ஜெர்மன், இத்தாலியின் வீழ்ச்சிக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில்  உருவான ‘நவ-பாசிசம்’ எனும் போக்கோடு ஒப்பிடுகிறார் பிரபாத் பட்நாயக். நவ பாசிசத்தின் ஓர் அடிப்படையான கூறு அதன் செவ்வியல் முன்னோடிகளைப் போலவே ‘மற்றமையைப்’ பூதமாக்குதலாகும்; அதாவது இந்தியாவில் முஸ்லீம்கள், அமெரிக்கா, பிரேஸில் போன்ற நாடுகளில் இனச் சிறுபான்மையினர் [எ-கா : ஆப்ரிக்க-அமெரிக்கர்கள்] மற்றும் பாலியல் சிறுபான்மையினர்களை [ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கையர் திருநம்பியர் போன்ற மாற்றுப் பாலினத்தவர்]  பூதமாக்குவதாகும்.  நிச்சயமாக இது ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறுவிதமாக வெளிப்படும்; கிளைக்கும். இப்படி ‘மற்றவரை’ வில்லனாக்குவது பூதமாக்குவது என்பது பலவித ரூபங்களை எடுக்கும். 

What is fascism? Explains With Indian revolutionary M. N. Roy Fascism Book Based By Pralayan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

அது எப்போதும் அச்சமூகத்தில் நிலவுகிற பொருளாதார இக்கட்டுகளை, சீரழிவுகளை கவனத்தில் கொள்ளாது.  மாறாக, கடந்த காலத்தில், சிறுபான்மை சமூகத்தினரால், பெரும்பான்மை சமூகத்தினரின்  பெருமைகள் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக சோடனைகள் செய்து அப்படி ‘இழந்துவிட்ட பெருமைகளை’ மீட்டெடுக்கிற தேவைகளை பெரும்பான்மை சமூகத்தின் கடமைகளாக முன்னிறுத்தும். இந்த சிறுபான்மையினர்களுக்காக மிகவும் அலட்டிக்கொள்பவர்களாகவும் அவர்களைத் தாஜா செய்கிற  அரசியல் செய்கிறவர்களாகவும் பாசிசத்தைப் பின்பற்றாத அரசுகள், அரசியல் சக்திகள் குற்றம் சாட்டப்படும்.’’

https://kafila.online/2021/01/24/from-neo-liberalism-to-neo-fascism-prof-prabhat-patnaik/

பாசிச அரசு வந்தால் பிறகு தேர்தலே இருக்காது. இப்போது தேர்தல்கள் நடக்கிறதே என்பார்கள் சிலர். கடந்த காலத்தவறுகளிலிருந்து யார் கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ ,ஆளும் வர்க்கங்களும், பாசிச சக்திகளும் நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இச்சூழலை பிரபாத் பட்நாயக் மேலும் விளக்குகிறார். “மைக்கேல் கலேக்கி [1943/71] எனும் அறிஞர் உதிர்த்த மிகவும் பிரபலமான   “பாசிசத்தின் கீழ் அடுத்த அரசு என்பதொன்றில்லை” என்கிற கூற்றுக்களெல்லாம்  தற்போது செல்லுபடியாகுமா எனத்தெரியவில்லை . இருப்பினும் சமகால பாசிசம் இன்னும் சில நாள் இருந்துகொண்டிருக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.

பாசிசம், அரசு இயந்திரம் முழுவதையுமே பாசிசத்தினை நோக்கி முடுக்கினால் அதனால் ஏற்படும் பேராபத்து என்பது மிகவும் தெள்ளத் தெளிவானது; வெளிப்படையானது. இருப்பினும் அது ‘தேர்தல் விளையாட்டை’  விளையாடி, மக்களளித்த வாக்குகளால் அதிகாரத்தை விட்டு வெளியேற்றப்பட்டாலும், எதிர்கட்சியாக இருந்து கொண்டு அது இன்னும் ஒரு மாற்றாகத் தொடரவும்,  சிறிது காலம் கழித்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவும், அரசியல் தளத்தை, சமூகத்தை நிச்சயமாக படிப்படியாக பாசிச மயமாக்கவும், மனிதாபிமான அணுகு முறைகளை, ஜனநாயக  உணர்வுகளை, முற்போக்கு என்பது கூட அல்ல குறைந்த பட்ச தாராளவாத சிந்தனைகளைக்கூட  முழுதுமாக மூச்சுத் திணற வைத்து சாகடிக்கவும் செய்துவிடும்.”

 https://journals.sagepub.com/doi/10.1177/2277976019901029

எனவே பாசிச அபாயம் என்பது பற்றிய பிரக்ஞை நமக்குள் தணல் விட்டு எரிந்து கொண்டேயிருத்தல் வேண்டும். எல்லா நவீன சமூகங்களின் விளிம்புகளிலும் நவ-பாசிச சக்திகள் இருந்துகொண்டுதானிருக்கின்றன. தேவைப்படும்போது கார்ப்பரேட் மற்றும்  நிதி மூலதனங்களின் ஆதரவோடு அவை மையத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. எனவே பாசிசத்தை, அதன் வரலாற்றை, உரு மாற்றங்களைப் புரிந்து கொண்டு அதன் ஒவ்வொரு அசைவினையும் மக்கள் முன் வெளிச்சமிட்டுக்காட்டி  அம்பலமாக்க வேண்டிய ஓர் அரசியல் கடமை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களது, முற்போக்காளர்களது  தோள்களின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

இந்த நெடிய போராட்டத்திற்கான கருத்தாயுதங்களில் ஒன்றாக எம்.என்.ராய் எழுதிய ‘பாசிசம்’ எனும் இந்நூல் நமக்கு உதவக்கூடும். இந்நூலை எழுதிய எம்.என்.ராய் இந்தியாவின் முன்னோடி கம்யூனிஸ்டுகளில் ஒருவர். லெனின்,ஸ்டாலின் ஆகியோரோடு நேரடியான பரிச்சயம் உள்ளவர்; அவர்களோடு இணைந்து பணியாற்றியவர். கம்யூனிஸ்டுகளின் சர்வதேச அமைப்பான மூன்றாவது அகிலத்தில் பணியாற்றியவர். மிகவும் அதிகமாக எழுதியவரும் கூட.

7 அத்தியாயங்களைக்கொண்ட  ‘பாசிசம்’ எனும் இந்நூலுக்கு சிறப்பானதொரு முன்னுரையினை அ. மார்க்ஸ் எழுதியுள்ளார். அம்முன்னுரையில் இந்நூலைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். “பாசிசம் குறித்தும் ஹிட்லர் முசோலினி மற்றும் அன்றைய பாசிச த்தத்துவவியலாளர்கள் குறித்தும் இன்று நூற்றுக்கணக்கான ஆழமான ஆய்வுகள் உலகளவில் வெளி வந்துள்ளன. 1936இல் எழுதப்பட்டு 1938 இல் வெளிவந்த இந்நூல் அவை எல்லாவற்றிலுமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. இதை நாம் புரிந்து கொள்வது அவசியம். ஐரோப்பிய பாசிசத்தின் தத்துவ மூல கர்த்தாக்களான ஆர்தர் ஷோபன் ஹேயர்,  ஃப்ரெட்ரிக் நீட்ஷே , ஹென்றி பெர்க்சன் ஆகிய மூவரின் கருத்தாக்கங்கள் இந்தியச் சிந்தனை மரபுகளிலிருந்து ஊக்கம் கொண்டு  உருவாயின என்பதை விளக்குவதாகத்தான் 184 பக்கங்கள் உள்ள இந்நூலின் முதல் 90 பக்கங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.” [முன்னுரையில் அ.மார்க்ஸ்,பக்கம்-17]

“மேன்மையான உபநிடதத் தத்துவத்திலிருந்து ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்கான ஒரு கருத்தியலும் அதைத்தொடர்ந்து பாசிசத்திற்கான ஒரு கருத்தியலும் கட்டமைக்கப்பட்டது இப்படித்தான். இவ்வாறு சொல்வது கொச்சைப் படுத்துவதாகவோ அல்லது அவதூறு பொழிவதாகவோ ஆகிவிடாது. எந்த ஒரு சட்டத்திற்கும் கட்டுப்படாமல் இவ்வுலகு சாராத ஒரு பரம்பொருள் இருக்கிறது என்ற ஊகத்தின் தர்க்க ரீதியான விளைவே பூமியில் நடைபெறும் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை நியாயப்படுத்துவதில் முடிவடைகிறது.. இந்த ஊகம் தான் இந்தியத் தத்துவத்தின் அடிப்படையாகும்.” [பக்கம் 68] “நீட்சேயின் ‘ சுதந்திர- ஆன்மாக்கள்’ கடவுளின் வாரிசுகளான ‘பூதேவர்கள்’ [பார்ப்பனர்கள்] வசம் ஒப்படைக்கப்பட் இருந்தது. அதனாலேதான் அவர்கள் இயல்பிலேயே ஆட்சியாளர்களாகவும் அடக்குமுறையாளர்களாகவும் இருந்தனர். ஏதுமற்ற நிலையில் வைக்கப்பட்டதும் அநியாயமான முறையில் கையாளப்பட்டதுமான “மனித மந்தைகளை ஆட்சி செலுத்தவும், அடிமைப்படுத்தவும்” இவர்கள் இயல்பாகவே உரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மனித உறவுகள் குறித்த இந்தக் கொதிப்பூட்டும் கருத்தானது, மனிதனின் தவிர்க்க முடியாத இழிநிலையையும் ,கேடு கெட்ட நிலையையும் பற்றிய ஷோபன் ஹேயர் கோட்பாட்டின்  தர்க்க  ரீதியான விளைவாகும். இந்தக் கருத்துதான் நீட்சேயை ஒரு வெறி பிடித்த சோசலிச-விரோதியாக மாற்றிவிட்டது. மார்க்சியத்திற்கு எதிராக பாசிசம் தொடுத்த போரில் அதன் உடனடிக் கருத்தியல் தூதராக நீட்சே வரலாற்றில் இவ்வாறுதான் இடம் பெற்றார்.”[பக்கம் 69] உபநிடதங்கள் போதிக்கிற இந்திய ஆன்மீகத் தத்துவத்திலிருந்து  உந்துதல் பெற்றுதான் நீட்ஷேவும் , ஆர்தர் ஷோபன் ஹேயரும் தனது ‘அதி மனிதன்’ குறித்த கருத்தாக்கங்களை முன்வைக்கின்றனர்’ . இக் கருத்தாக்கங்கள் தான் உயர் இனம் [Super race]  குறித்த அவர்களது வரைவுகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது.

What is fascism? Explains With Indian revolutionary M. N. Roy Fascism Book Based By Pralayan. Book Day is Branch of Bharathi Puthakalayam.
பாசிசம் – எம்.என்.ராய்

எம்.என்.ராயின் ‘பாசிசம்’ நூல் இதைத்தான், தெள்ளத்தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தோழர். இல கோவிந்தசாமி, நூலாசிரியர் முன்வைக்கும் கருத்துக்களை  அதன் தர்க்க கட்டமைப்பு சிதையாமல் மொழியாக்கம் செய்துள்ளார். நல்ல பல நூல்களை நமக்குத் தந்துள்ள சிவ.செந்தில்நாதனின் ‘பரிசல்’ பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. பாசிச எதிர்ப்புப் போரில் ஈடுபடும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது.

நான்  ஒன்றைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாமென்று நினைக்கிறேன். நான் அண்மையில் ஒரு காணொளிப் பதிவினைப் பார்த்தேன். ஓர் ஆர்.எஸ் எஸ். காரர் அக்காணொளியில் பேசுகிறார். “ஓர் இந்துங்கிறவன் பிறக்கிறபோதே ஒரு அப்பாயிண்மெண்ட் ஆர்டரோடத்தான் பிறக்கிறான். பிறக்கிற போதே அவன் என்னவேலைக்குப் போறதுன்னு தீர்மானம் ஆகிவிடுகிறது. வேறெந்தவொரு மதத்திலும் இப்படியொரு விசேஷம் கிடையாது!”  அரியதோர் உண்மையைக் கண்டறிந்து சொல்வது போல ஒரு பெருமிதமும் உற்சாகமும் பொங்குகிற முகபாவத்தில் ஓர் உடல்மொழியில் அவர் இதனைச் சொல்லிக் கொண்டிருந்தார். சலவைத்தொழிலாளர் வீட்டில் பிறந்த குழந்தை சலவைத்தொழிலாளர் வேலைக்கு அப்பாயிண்மெண்ட் ஆர்டரோடு பிறக்கிறது. பனை ஏறுகிறவர் வீட்டில் பிறந்த குழந்தை, பனை ஏறும் வேலைக்கு, அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு பிறக்கிறது. இப்படி விளக்கமாக அவர் சொல்லாததுதான் ஒரு குறை.

அதனை ‘ஆஹா’ என தலையாட்டியும் சிலாகித்தும் அங்கே கேட்டுக்கொண்டிருந்த எவரும் படிப்பறிவில்லாத பாமரர்கள் அல்ல; நன்கு படித்த நடுத்தரவர்க்கத்தினர்தாம். உண்மையில் இப்படியெல்லாம் பேசுவதற்கு அவர்களுக்கு நெஞ்சுரம் எங்கிருந்து வருகிறது? பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கிற  ‘வர்ண-சாதி’ முறை இந்திய சமூகத்தின் இழிவு என்கிறது நமது பகுத்தறிவு. இப்படி எந்த ஒரு கருத்தாக்கத்தை நவீன உலகும் நாகரீக சமூகமும் இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டிருக்கிறதோ அது குறித்துப் பெருமிதம் பேசுகிற ஒரு மரபு இங்கே இருந்துகொண்டிருக்கிறது. அம்மரபிலிருந்துதான் பாசிசம் உந்துதல் பெறுகிறது. எம்.என்.ராயின் ‘பாசிசம்’ நூல் சொல்வது அதைத்தான். எனவே நண்பர்களே, நாம் உறங்கச் செல்வதற்கு முன் இன்னும் பல காதங்களைக் கடக்கவேண்டியுள்ளது.

[email protected]

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam

அண்ணாமலை புராணம் (திருவண்ணாமலை தமுஎகச வரலாறு) – பிரளயன்



ஒருவர், தனது முகநூல் பதிவினில் திருவண்ணாமலையை ‘தமிழ்நாட்டின் டப்ளின்’ என்று குறிப்பிட்டிருந்ததைக் காண நேர்ந்தது.

கலை இலக்கிய செயல்பாடுகளுக்கு பெயர்பெற்றதாக ச் சொல்லப்படும் டப்ளின், அயர்லாந்தின் தலை நகர். டப்ளின் நகரினது நடுத்தரவர்க்க வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசும் 15 கதைகள் கொண்ட தனது சிறுகதை தொகுப்பிற்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் , ‘டப்ளினர்ஸ்” என்றே பெயர் சூட்டினார். இந்தப்பின்னணியில் தான் அவ்வாசகர் இப்பெயரை திருவண்ணாமலைக்கு சூட்டியிருக்கக்கூடும்

இப்படியெல்லாம் சில இலக்கிய வாசகர்கள் தங்கள் ஊருக்கு பெயர் வைத்துள்ளார்கள் என்பதை திருவண்ணாமலை மக்கள் அறிய மாட்டார்கள்.

பல்வேறு காரணங்களால் பரவலாய் அறியப்பெற்ற ‘திருவண்ணாமலை’ யின் உண்மை நிலை வேறானது. தனி நபர் வருமானத்தில் , பிற சமூக வளர்ச்சிக் குறியீடுகளில், ஒப்பீட்டளவில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இது.

எந்த வித நவீனத்தொழில்களும் இம்மாவட்டத்தில் இல்லை. அண்மையில்தான் செய்யாறில் ஒரு தொழிற் வளாகம் தொடங்கப்பட்டுள்ளது எனினும் இம்மாவட்டத்தின் பெரும்பான்மையான பொருளாதாரமென்பது விவசாயமும் அதை சார்ந்த வணிகமும்தான். வணிகமென்று சொன்னால் விவசாய விளை பொருட்களை வாங்கி விற்கிற தரகு வணிகம்தான்.
கடந்த 25,30 ஆண்டுகளில் வளர்ச்சி பெற்ற தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் இவற்றால் திருவண்ணாமலை நகருக்கு மற்றொரு முகம் கிடைத்திருக்கிறது எனச்சொல்லலாம். மேலும் சுற்றுலாத்தலம் , யாத்திரீகர்களின் புனிதத்தலம் என்கிற வகையில் இந்நகருக்கு வேறொரு முக்கியத்துவம் உண்டே தவிர உண்மையில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ் நாட்டில் 27 ஆவது இடத்தில்தான் உள்ளது.

https://eprawisdom.com/jpanel/upload/articles/1234am15.Dr.I.Sundar.pdf

ஆனால் இத்திருவண்ணாமலை நகரம் தான் மக்கள் பண்பாட்டுச் செயல்பாடுகளின் நவீன கால அடையாளமான “கலை இரவு” என்கிற வடிவத்தை தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகம் செய்துவைத்தது.

அதுமட்டுமல்ல பல்விதமான கலை இலக்கியச்செயல்பாடுகளுக்கு திருவண்ணாமலை தொடர்ந்து இடமளித்து வந்துள்ளது. அவற்றில் எனது நினைவில் பதிந்தவற்றை இங்கே பதிவு செய்ய முயல்கிறேன்

திருவண்ணாமலை மக்களுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதியென்பது சுதந்திர தின கொண்டாட்டம் மட்டுமல்ல; அந்நாளினை , அருணகிரிநாதர் விழாவெனவும் வெகு சிறப்பாகக் கொண்டாடுவர். இவ்வழக்கம் அவர்களுக்கு வெகுகாலமாகவே உண்டு.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
1990 கலை இரவில் சென்னை கலைக்குழுவின் ‘சதி நாடகம்

திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற பக்தி ப் பாடல்களை இயற்றிய அருணகிரிநாதர், திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர். 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரை பிரபுட தேவ மகாராஜன் என்கிற மன்னர் ஆதரித்ததாக திருப்புகழ் பாடல்களில் தெரிகிற குறிப்புகள் சொல்கின்றன.

கி.பி 1431 முதல் 1456 வரை ஆண்ட இரண்டாம் தேவராயனே [Devarayan-II] பிரபுட தேவ மகாராஜன் என இங்கே அழைக்கப்படுகிறார். இவர் கிருஷ்ணதேவராயருக்கு 60 ஆண்டுகள் முற்பட்டவர்.
அருணகிரிநாதர் இறந்த தும் திருவண்ணாமலையில்தான். அவரது சமாதி அண்ணாமலையார் கோவிலின் மேற்கு பிரகாரத்தில் அமைந்துள்ளது.

எனவே தமது ஊர்க்காரரான அருணகிரி நாதரைப் போற்றுகிற விழாவை திருவண்ணாமலை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவதில் ஆச்சர்யங்களேதுமில்லை.

ஆகஸ்டு 14 மாலை தொடங்குகிற இந்த அருணகிரி நாதர் விழா ஆகஸ்டு 16 இரவு வரை நடக்கும்.
இம்முன்று நாள் நிகழ்வுகளுக்கும் பெருங்கூட்டம் சேரும். அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரத்தினருகேயுள்ள கம்பத்திளையனார் சன்னதியிலிருந்து வல்லாள மகாராஜ கோபுரம் கோபுரத்திளையனார் சன்னதி வரை யிலுள்ள பெரும்பரப்பில் கொட்டகை போட்டிருப்பார்கள். கொட்டகையென்றால் நிழற்பந்தல்தான். நிழல் தரும் ; மழைபெய்தால் ஒழுகும். அத்தகையதான ஒற்றைக்கீற்றினை வேய்ந்த பந்தல் . ஆயிரங்கால் மண்டப நுழைவாயில் படிக்கட்டிற்கும் பாதாள லிங்க நுழைவாயிலுக்கும் இடையில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாயிரம் பேருக்கு மேல் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிலான பிரம்மாண்டமான ஏற்பாடு இது.

14 மாலை, அமைச்சர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் தொடங்கிவைக்க அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பிரதானமான இசைக்கலைஞர்களது இசைக்கச்சேரியோ அல்லது நடன நிகழ்வோ நடக்கும். மதுரை சோமு, பாலமுரளி கிருஷ்ணா,டி.கே.பட்டம்மாள் , சூலமங்கலம் சகோதரிகள் போன்றவர்களுடைய கச்சேரியினை எனது சிறிய வயதில் நான் இவ்விழாவினில் கண்டும் கேட்டுமிருக்கிறேன்.

மறுநாள் 15 ஆம் தேதியன்று நாடுமுழுவதுமிருந்து வந்த சங்கீத கோஷ்டிகளின் இன்னிசைக்கச்சேரிகள் , நாமாவளி கோஷ்டிகளின் பஜனை என காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நிகழ்வுகள் நடக்கும். இடையிடையே உரைகள், சங்கீத உபன்யாசங்கள் நிகழும். இந்நிகழ்ச்சியினையெல்லாம் மேடையிலிருந்து கொண்டு பித்துக்குளி முருகதாஸ்தான் ஒருங்கிணைப்பார். இடையிடையே அவரும் தனது கம்பீரக்குரல் கொண்டு பாடவும் செய்வார்.
ஒவ்வோராண்டும் அன்று பிற்பகல் சரியாக 12.30 முதல் 1.30 வரை கிருபானந்தவாரியாரின் அருளுரை நடக்கும். அப்போது மிகப்பெரும் கூட்டம் சேர்ந்துவிடும். வாரியாரின் உரைக்குப்பிறகு எல்லோரும் மதிய உணவிற்கு கலைந்து செல்வார்கள். அதன்பிறகு தொடர்ந்து இன்னிசை நிகழ்வுகள் மாலையில் மறுபடியும் பெங்களூர் ரமணியம்மாள் இசை நிகழ்வு ,புலவர்.கீரன் போன்றவர்களின் சொற்பொழிவு, எம்பார் விஜயராகவாச்சாரியார் போன்றோரின் கதாகாலட்சேபம் என 15ஆம் தேதி நிகழ்வு முடிவுக்கு வரும்.

அவ்விழாவில் பங்கேற்ற எல்லா இசைக்குழுக்களும் 15ஆம் தேதி இரவு நகரினது மாடவீதிகளில் பாடியபடியே உலாவும் வருவர்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன், எனக்கு இசை கற்பித்த ஆசிரியர் மற்றும் என்னோடு இசைபயிலும் சக மாணவர்கள் இவர்களோடு மாடவீதியில் பாடிக்கொண்டே உலாவந்த அனுபவம் எனக்குமுண்டு.

மறுநாள் 16 ஆம் தேதி முழுக்க முழுக்க இலக்கிய உரைகள் தாம். காலையில் தனித்த உரைகள். மதியத்திற்குப்பிறகு வழக்காடுமன்றம், பட்டிமன்றம் என நிகழ்ச்சிகள் தொடரும்.
இவ்வுரைகள் எல்லாம் பக்தி இலக்கியத்தை மையமாகக்கொண்டே நிகழும்.

பெரிய புராணம்,கம்ப ராமாயணம், வில்லி பாரதம் எனச்சுழலும் அவ்வுரைகள் சிற்சில சமயங்களில் சிலப்பதிகாரம் ,திருக்குறள் என நீளவும் செய்யும்.

கம்பன் அடிப்பொடி சா.கணேசன், தமிழ்க்கடல் ராய .சொ, வாகீச கலாநிதி.கி.வா.ஜகன்னாதன், சிலம்புச்செல்வர்.ம.பொ.சி, பேராசிரியர்.ராதாகிருஷ்ணன், பேரா. சொ.சத்ய சீலன், ஜெயகுமாரி பாஸ்கரன், பேரா.ராமநாதன், பேரா.சரஸ்வதி ராமநாதன் போன்ற அன்றைக்கிருந்த பிரபலமான பக்தி இலக்கியப் பேச்சாளர்கள்தாம் அந்நிகழ்வுகளின் நாயகர்கள். அவர்கள் அன்று எவ்வாறு அடைமொழிகளோடு அழைக்கப்பட்டனரோ அவ்வாறே அவர்களை இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன் . இன்னும் கூட பல பிரபலங்கள் அவ்விழாவில் பங்கேற்றதுண்டு. என் நினைவில் இருப்போரை மட்டுமே இங்கே என்னால் குறிப்பிட முடிந்துள்ளது.

இவ்விழாவின் போது விழாப்பந்தலின் ஒரு புறமாக அதாவது கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலின் நுழைவாயிலருகே தண்ணீர் பந்தல் அமைத்து எங்கள் குடும்பத்தின் சார்பாக விழாவிற்கு வரும் அனைவருக்கும் நீர் மோர், தண்ணீர் வழங்குவது வழக்கம். அதனால் எனது தந்தையார் தமையனாரோடு நானும் அத்தண்ணீர்ப்பந்தலில் சேவையிலிருப்பேன். எனவே மிகச்சிறு வயது முதற்கொண்டே அருணகிரிநாதர் விழாவில் பங்கேற்பது என்பது என்னுடைய வருடாந்தர வாடிக்கையாகிவிட்டது.

80களிலோ அல்லது 90களிலோ அவ்விழாக்குழுவினரில் ஒரு பகுதியாக இருந்த டெல்லி மற்றும் சென்னை வாசிகளெல்லாம் தனியாக பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு அருணகிரிநாதர் விழாவானது முன்பு போல அவ்வளவு பிரம்மாண்டமாகவெல்லாம் நடத்தப்படுவதில்லை. அண்ணாமலையார் கோவிலின் கல்யாணசுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குப் புறமாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் உள்ளரங்க நிகழ்ச்சியாக தற்போது நடத்தி வருகின்றனர்.

இது மட்டுமல்ல கந்தர் சஷ்டி சமயத்தில் திருவண்ணாமலை குமரகோவில் தெருவிலுள்ள குமரகோவிலில் இன்னிசைக்கச்சேரிகள் நடக்கும். எம்.எம்.தண்டபாணி தேசிகர், கே.பி சுந்தராம்பாள் போன்றோரின் கச்சேரிகள் நடந்ததை நான் சிறுவயதில் கண்டிருக்கிறேன். புரிசை. முருகேச முதலியாரின் கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவுகள், பெரிய புராண , கந்தபுராண சொற்பொழிவுகள் அங்கே நடக்கும்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
1990 கலை இரவில் சென்னை கலைக்குழுவின் ‘சதி நாடகம்

பின்னர் கோடை காலத்தில் ஆனி,ஆடி மாதங்களில் கோவிலுக்கு மேற்புறமுள்ள பே கோபுரத்தெருவில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோவிலில் பாரதச் சொற்பொழிவு நடக்கும். ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் பாரதச் சொற்பொழிவு மதியம் 2மணிக்கு தொடங்கி மாலை நாலரை மணி வரை நடைபெறும். நாலரை மணிக்கு மேல் அன்றைய பாரதக்கதை நிகழ்வுகளை நாடகமாக நடித்துக்காட்டுவர்.

பகாசூரன் வதம், அர்ஜூனன் மச்ச யந்திரத்தை வீழ்த்துவது, இதையெல்லாம் நடித்துக்காட்டுவர்.
உதாரணத்திற்கு, பார்ப்பன வேடத்திலிருக்கும் பீமசேனன் மாட்டுவண்டியில் ஏறி நின்று கொண்டு பகா சூரனுக்காக கொண்டு செல்லப்படும் பெரிய அண்டாவில் இருக்கும் உணவை அள்ளி அள்ளித் தின்று கொண்டவாறே வருவான். அண்டாவை நிரப்ப வழியெங்கும் மக்கள் அவரவர்கள் வீட்டில் தயாரித்த கொழுக்கட்டை, அப்பம்,பணியாரம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நிற்பார்கள். அந்த அண்டாவுள்ள வண்டிக்கு முன்னாலே பகாசூரன் வேடமிட்ட ஒருவர் பெரிய கதாயுதத்தை ஏந்தி ஆ ஹூ வென கத்தி ஆர்ப்பாட்டமிட்ட படி வந்து கொண்டிருப்பார். இப்படி மாடவீதியில் ஊர்வலமாக வருகின்ற இவர்கள் திரௌபதியம்மன் கோவிலருகில் வந்ததும் கீழே இறங்கி சண்டையிடுவார்கள். சண்டை முடிவில் பகாசூரன் கொல்லப்படுவார். இவற்றை அப்படியே நிகழ்த்திக்காட்டுவார்கள்.

அது போல பாரதப்போருக்கு முன் வருகிற விராட பருவத்தில் சொல்லப்படும் மாடுகளைக் கவரும்
(ஆநிரை கவர்தல்) நிகழ்வு ‘மாடு மடக்குதல்’ என்ற பெயரில் நிகழும். இதற்காக நூற்றுக்கணக்கான மாடுகளை மாடவீதிகளில் ஓட்டிவருவார்கள்.

இவையெல்லாம் கூத்துக்கலைஞர்களாலும் ஊர் மக்களாலும் நிகழ்த்தப்பெறும். அர்ச்சுனன் மச்ச யந்திரத்தை வீழ்த்துதல் போன்ற சில நிகழ்வுகளை பள்ளி மாணவர்களைக்கொண்டும் நிகழ்த்திக்காட்டுவர்.

பாரதக்கதை சொல்லல் நிறைவு பெறுகிற கடைசி வாரங்களில் இரவு நேரத்தில் கூத்து நடக்கும்; இறுதி நாளன்று பகல் நேரத்தில் துரியோதனன் படுகளத்தோடு கூத்தும் பாரதச் சொற்பொழிவும் முடிவுக்கு வரும்.

இது மட்டுமல்லாது செங்கம் ரோட்டில் தாமரைக்குளமருகில் அமைந்துள்ள தர்காவினருகே ஒவ்வோராண்டும் நடைபெறும் கந்தூரி திருவிழாவினையொட்டி ஒருவார காலம் இரவு முழுக்க  ‘கவ்வாலி இன்னிசைக் கச்சேரிகள்’ நடக்கும். நாகூர் ஹனிபா தொடங்கி வட இந்தியாவின் புகழ் பெற்ற கவ்வாலி கலைஞர்கள் வரை பலர் இந்நிகழ்வுகளில் பங்கேற்பர். 

நான் கல்லூரி படிக்கிற காலத்தில் மிகவும் புகழ்பெற்ற கவ்வாலிக்கலைஞரான அஜீஸ் நாஸனது [‘ஜூம் பராபரி ஜூம் ஷரபி’ பாடலைப் பாடியவர்]  கச்சேரியினை இவ்விழாவில் கேட்டிருக்கிறேன்.

இவை எல்லாவற்றிற்கும்  சமய பேதமின்றி எல்லாதரப்பினரும் கூடுவார்கள்.

அது மட்டுமல்லாது அப்போதெல்லாம் நடக்கிற அரசியல் கட்சிக்கூட்டங்களுக்கு , அது திமுக, அதிமுக, காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் என எந்தக்கட்சிக்கூட்டமாக இருந்தாலும் சரி , அக்கட்சியினது தொண்டர்கள் மட்டுமல்லாது  ஆர்வத்தோடு பொது மக்களும் கூடுவர்.  

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
தொடக்க கால இலக்கிய இரவு- படத்தில் காளிதாஸ், அரசம்பட்டு முருகேசன், பவா செல்லதுரை, கந்தர்வன், தோழர் வெங்கடேசன்

ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் சார்பில் அடிக்கடி நடக்கும்  டேப் ராவணனின் கலை நிகழ்ச்சி, திமுக வினரின் இரா. வெற்றிகொண்டான், அதிமுகவினரின் ஆலங்குடி சோமு,  ஆகியோரின் மேடைப்பேச்சுக்கள் மார்க்சிஸ்ட் கட்சியினரின் ‘மதுரை மாரி –மணவாளன்’ கலைக்குழுவினர் நடத்துகிற கலை நிகழ்ச்சி இவற்றுக்கெல்லாம் பெருங்கூட்டம் சேரும். 

மாற்றுக்கட்சியினராக இருப்பினும் கட்சி பேதம் தாண்டி மேடைப்பேச்சுக்களை ரசிக்கிற பழக்கம் நகரவாசிகளுக்கு உண்டு. 

இப்படி எல்லாவற்றையும் போற்றுகிற ஒரு பண்பு திருவண்ணாமலை மக்களுக்கு இருந்தது.

அதுமட்டுமல்ல வணிகர்கள், சேவைத்துறையினர்  என ஓய்வை அனுபவிக்கிற வர்க்கத்தினர் [Leisured class] திருவண்ணாமலை நகரில் ஒரு கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.  இவர்கள்தாம் இத்தகைய ஒரு பண்பை ப் போற்றுபவர்களாகவும் ஆதரவளிப்பவர்களாகவும் இருந்தனர். வணிக  நிறுவனங்களில் ,கடைகளில் வேலை செய்யும் அறிவுழைப்பினர், உடலுழைப்பினர், உதிரித்தொழிலாளர்கள் என அனைத்துத்தரப்பினருமே இப்பண்பினது ஆதிக்கத்திற்கு ஆட்பட்டனர் என்றே சொல்லலாம்.

ஓய்வை அனுபவிக்கிறவர்கள் அதிகமாயிருப்பதற்கு  வேறொரு காரணமும் சொல்வர்.

 “ஆண்டிக்கு பெருத்தது அண்ணாமலை” என்றொரு சொல்வழக்கு உண்டு. அதாவது துறவறம் மேற்கொண்ட ஆண்டிகள்,துறவிகள்  அதிகமாயிருப்பது திருவண்ணாமலை என்றிதற்குப்பொருள். காவி கட்டிக்கொண்டு  வந்தாலே போதும் , ஒருவருக்கு , உறங்க இடமும் மூன்று வேளை உணவும் திருவண்ணாமலையில் கிடைத்துவிடும். அதற்கான ஏற்பாடுகள் இன்று மட்டுமல்ல நீண்ட  நெடுங்காலமாகவே இந்நகரில்  உண்டு. 

மாடவீதிகள் நெடுக   உணவளிக்கும் சத்திரங்கள்,மடங்கள்; இப்படி ஓயாமல் உணவளிப்பதால் ஒரு மடத்திற்கு ஓயாமடம் என்றே பெயர். தற்போது இவையெல்லாம் பழங்கதைகளாகிவிட்டனவென்றாலும், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், ரமணாசிரமம், யோகி ராம்சரத்குமார் ஆசிரமம் என  எல்லோருக்கும் உணவளிக்கிற புதிய ஏற்பாடுகள் தற்போது பெருகிவிட்டன.

அதுமட்டுமல்ல இவ்வூரினது அமைப்பு, அதன் எளிமை, இதன் மையமாயிருக்கிற மலை ,அதன் இயற்கைச் சூழல், பெரிய விசாலமான கோவில் என இந்நகரின் பல அம்சங்கள்  ஆன்மீகத்தேடலில் உள்ளோரை ஈர்த்து விடுகிறது. 

கிபி 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குரு நமச்சிவாயர் எனும் துறவி எழுதிய அண்ணாமலை வெண்பாவில் இப்படிப்  பாடல்கள்  உண்டு.

சீலமுனிவோர்கள் செறியுமலை/ சிந்திப்பார் முன் நின்று முக்திவழங்கு மலை/

ஞான நெறி காட்டுமலை /ஞான முனிவோர்கள் நித்தம் நாடும் மலை/

அஞ்ஞானக்கங்குல் அகற்றும் மலை /அன்பருக்கு மெய்ஞானச்சோதி விளக்கு மலை /ஞானத்தபோதனரை வாவென்றழைக்கும் மலை அண்ணாமலை.

ஆதிநடமாடும் மலை/ அன்றிருவர் தேடும் மலை /

சோதிமதி ஆடரவம் சூடும் மலை-நீதி 

தழைக்கும் மலை/ ஞானத் தபோதனரை –
வாவென்றழைக்கும் மலை !அண்ணாமலை !!

“ஞானத்தபோதனரை வாவென்றழைக்கும் மலை அண்ணாமலை”, இங்கே தபோதனர் என்று சொல்வது ‘தபஸ்’ செய்வோரை.  

தபஸ் எனும் வடமொழிச்சொல்லுக்கு இணையானதுதான் ‘தவம்’ எனும் சொல். 

தவம் , வேள்வி எனும் இரு சொற்கள் பண்டைய இந்தியாவின் சமய வரலாறுகளை வாசிக்கிறபோது நாம் எதிர்கொள்கிற மிக முக்கியமான சொற்களாகும்.

தவம் வேறு; வேள்வி வேறு .  

தேவதைகளை அல்லது தெய்வங்களை திருப்தி செய்ய  அதாவது தீ வளர்த்து அதில் பலிகளை ஆகுதிகளை இட்டு செய்யப்படுவதே வேள்வியெனப்படும்.  ஒரு காலத்தில் மிருகங்களை கால்நடைகளை இவ்வேள்வியில் பலியிடுவது வழக்கம்; தற்போது அவை கைவிடப்பட்டு தானியங்கள் பிறபொருட்கள் போன்றவை இடப்படுகின்றன.

இந்த வேள்விகளைச்  [யக்ஞம்] செய்வோர் எவரும் சமூகவாழ்விலிருந்து ஒதுங்கியிருக்கமாட்டார்கள். ஆனால் தவம் அல்லது தபஸ் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிற சமூக வாழ்க்கையினை விட்டு விலகி, [Renunciation] தனித்து வாழும் ஒரு வாழ்வைத் தேர்ந்து கொள்வதாகும்..

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு 1993 : வைகறை சுகந்தன், உத்தமன், ஏழுமலை

இப்படி சமூக வாழ்விலிருந்து  ஒதுங்கி  ஒரு மெய்த்தேடலை மேற்கொள்பவரையே தபசிகள் அல்லது தவசிகள் என்றழைப்பர்.

 வேள்வி என்பது ஆண்களால் மட்டுமே செய்யப்படுவது. ஆனால் தபசிகளில் இரு பாலரும் உண்டு. 

ஆரியர்களின்  படையெடுப்பிற்குப் பிறகே இந்திய மண்ணில்  “வேள்வி” என்கிற சடங்கு அறிமுகமாகிறது. ஆனால் சமூகத்திலிருந்து ஒதுங்கி நின்று ‘தவம்’ மேற்கொள்கிற வாழ்முறை என்பது ஆரியர்களின் நுழைவிற்கு    முன்பிருந்த ‘தொல் சமூகத்திலேயே’ இருந்துள்ளதென சமூக வரலாற்றியலாளர்கள் கருதுகின்றனர்.

இத்தகைய தபோதனர்களை கவர்ந்திழுக்குமிடமாக இந் நகர் விளங்குகிறது என்றே அண்ணாமலை வெண்பா சொல்கிறது.

பெரிய வேலையில் இருந்து பெரிய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்துவிட்டு ஓய்வு பெற்ற பின் தன் சேமிப்பு, ஓய்வூதியம் எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கு தானம் தந்துவிட்டு பிச்சை ஏற்று வாழும் பல முதியவர்களை நீங்கள் சர்வ சாதாரணமாக திருவண்ணாமலை நகரில் சந்திக்கலாம். 

பணம் ,புகழ் அந்தஸ்து எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு மனநிறைவு கிட்டாததால் இவர்கள் இவ்வாழ்வைத்தேர்வு செய்கின்றனர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதுமட்டுமல்ல பஞ்சத்துக்கு ஆண்டி ஆனவர்களும் இங்கே நிறைய உண்டு.

எனவே ஒட்டுமொத்தமாக இவர்களையெல்லாம் தபோதனர்கள் எனச்சொல்லமுடியுமா எனத்தெரியவில்லை.

எப்படியோ திருவண்ணாமலை நகரில் ஓய்வை அனுபவிக்கிற இன்னொரு வகையான பகுதியினரே இத்தகையவர்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான மக்கள் தொகுதி அவர்களது பொதுவான ஒரு மனநிலை இவையே திருவண்ணாமலையின் ‘பொதுப்புத்தியினை’  வடிவமைத்தது என நாம் முடிவுக்கு வரலாம்.  

அதே நேரத்தில் , இந்நகரினது பொதுப்புத்திக்கு மாறான வேறு சில மாற்று போக்குகளுக்கும் இந்நகர் இடமளித்திருந்தது என்பதையும் நாம் உணரவேண்டும் .  

1940 கள் தொடங்கி  திராவிட இயக்கத்தினது செல்வாக்கு தளங்களில் ஒன்றாக இந்நகர் விளங்கியிருக்கிறது.  

1948 இல்பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த ப.உ.சண்முகத்தை நகரமன்றத்தலைவராக திருவண்ணாமலை  தேர்வு செய்தது.

சரியாகச்சொல்லவேண்டுமெனில் தமிழ்நாட்டிலேயே திராவிட இயக்கம் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற முதல் நபர் ப.உ.சண்முகம் அவர்கள்தான். அவருக்கு இவ்வாய்ப்பை வழங்கியது திருவண்ணாமலை நகர மக்கள்தான்.

1950களின் தொடக்கத்தில் திமுக வின் சார்பில் திருவண்ணாமலையில் ‘இந்தி எதிர்ப்புக்காக’ மிகப்பெரிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. 

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக திமுக செயல் படத்தொடங்கிய பிறகு நடந்த மாநாடு என்பதால் திமுக வரலாற்றில் இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.  பிச்சைக்காரர்கள்  மாநாடு நடத்துகிறார்கள் என பிற கட்சியினர் திமுகவை கேலி செய்ததாகவும் இதற்கு பதிலடி தரும் வகையிலே பராசக்தி திரைப்படத்தில் ‘பிச்சைக்காரர் மாநாடு’ நடத்துவது போன்ற ஒரு காட்சியை கலைஞர்.கருணாநிதி எழுதியதாகவும் சொல்லப்படுவதுண்டு.

1957 இல் திமுகவின் சார்பில் போட்டியிட்ட ப உ சண்முகத்தை  சட்டமன்ற உறுப்பினராக திருவண்ணாமலை தேர்வு செய்கிறது.

மேலும் 1957 ,1962 ஆண்டுகளில் நடைபெற்ற  மக்களவைத்தேர்தல்களில் திராவிட முன்னேற்றக்கழகமே வெற்றி பெற்றது. இந்நகரைச்சேர்ந்த இரா.தர்மலிங்கம் இரு முறை மக்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
1993 கலை இரவில் கோணங்கி

  1970 களின் பிற்பகுதிகளில் , அவசர நிலைக்குப் பிறகு, நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் திராவிட மாணவர்கழகம் ஒரு செல்வாக்கு பெற்ற மாணவர் அமைப்பாக விளங்கியது. அரசியலில் ஈடுபாட்டோடு இருந்த போதிலும் கலை இலக்கிய செயல்பாடுகளிலும் ஆர்வங்காட்டுகிறவர்களாக அவர்கள் இருந்தனர். 

எங்களது சீனியர் மாணவர்களில் ஒருவரான திமுகவைச் சேர்ந்த முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சரும், தற்போதைய கீழ்பெண்ணாத்தூர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினரும் பேரவை துணைத்தலைவருமான கு.பிச்சாண்டி  அவர்கள், அவ்வமைப்பில் தீவிரமாகச்செயல்பட்டுவந்தவர்தாம்.  அவர் ,கல்லூரியில் படிக்கிற காலத்தில் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராய் இருந்தார். அவர் ஆதரிக்கிறவர்கள்தாம் கல்லூரியின் மாணவர் பேரவைத்தலைவராக வெல்ல முடியும். அதனால் அவரை ’கிங் மேக்கர்’ என அவரது நெருங்கிய நட்பு வட்டம் அழைக்கும். 

 அவர் ‘பேங்கோஸ்’ எனும் தாள இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர். அவர் மற்றும் கல்லூரி நண்பர்களெல்லாம் சேர்ந்து  மெல்லிசை நிகழ்ச்சிகளெல்லாம் நடத்துவர். நான் முறைப்படி இசை பயின்றவன் என்ற போதிலும் மெல்லிசைக்கச்சேரிகளில் பாட நான், என்னை தயார் படுத்திக்கொண்டவனல்ல. எனினும் அம்மெல்லிசைக்குழுவில் ‘டைமிங்’ வாசிப்பது கோரஸ் பாடுவது எனச்சிறு பங்களிப்பினைச்செய்துள்ளேன்.  

இன்று நினைத்துப் பார்த்தால் ஒப்பீட்டளவில் மிகவும் வலுவான மெல்லிசைக்குழுதான் அது. முறைப்படி மேற்கத்திய சங்கீதம் பயின்ற ஜெயகுமார், பிரேம் குமார்,  எனும் சகோதரர்கள் அக்கார்டினையும் எலக்ட்ரிக் கிதாரையும்  வாசிப்பார்கள். இன்றைய கீ போர்டுக்கு முந்தைய வடிவமான ‘காம்போ ஆர்கன்’ மற்றும் ட்ரம்ஸ்  வாசிப்பதற்கு வேலூரில் இருந்து சிலர்  வருவார்கள். அஞ்சல் துறையில் பணியாற்றுகிற சிவலிங்கம் என்பவர் தபேலா, டோலக் வாசிப்பார். எனது மற்றொரு கல்லூரி சீனியரான விஜயகுமார் ட்ரிபிள் காங்கோ வாசிப்பார் மற்றும் ஜேசுதாஸ் பாடிய பாடல்களைப் பாடுவார். இப்படித் தொழிற் முறையில் திறன்மிக்க குழுதான் அது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் பிச்சாண்டி அவர்களது முன்னெடுப்பில் ‘ரம்யா ஆர்ட்ஸ் அக்காடெமி ’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. உறுப்பினர்களைச்சேர்த்து ஆண்டுச்சந்தா வசூலித்து அவர்களுக்காக மாதம் ஒரு மெல்லிசை நிகழ்ச்சியோ நாடகமோ நிகழ்த்திக்காட்டுகிற ஏற்பாடு அது. சென்னையில் ‘சபா’ க்கள் இருக்கிறதல்லவா அது போன்றதுதான் இதுவும்.

பிச்சாண்டி மட்டுமல்லாது அப்போது கல்லூரி பேரவைத்தலைவராக இருந்த என்.செல்வராஜ், ஏ.சண்முகம், ஜி. சேஷாத்திரி,ஆர்.கோபால்சாமி, சிவ.இளங்கோ,ஸ்கூட் குமார், வை.ஆனந்தகுமார், என்.சம்பத், ஆர்.கே.மனோகரன்,  ஊரிசு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த துரை.புகழேந்தி மற்றும் என்னைப் போன்ற சக மாணவர்களெல்லாம் இந்த அமைப்பினை  வழி நடத்தும் இயக்குநர்கள் குழுவில் இருந்தோம்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
காவ்யா சண்முகசுந்தரம், கந்தர்வன், தமிழ்ச்செல்வன், கே.வி.ஷைலஜா, கருப்பு கருணா, சு.வெங்கடேசன்

முற்றிலும் மாணவர்களால் நடத்தப்பட்ட இந்த ரம்யா ஆர்ட்ஸ் அகாடெமி, அப்போது மிகவும் பிரபலமாக இருந்த மெல்லிசைக்குழுவில் ஒன்றான ‘விவேக் சாரதி’ குழுவினரை அழைத்து காமட்சியம்மன் கோவில் தெருவிலுள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில்  முதல் நிகழ்ச்சியினை  நடத்தியது.

பின்னர் ரேடியோ கிரவுண்டில்  பூர்ணம்.விஸ்வநாதனின் ‘கால்கட்டு’, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘தூக்கு மேடை’  போன்ற நாடகங்களும்  ‘லலிதாஞ்சலி’ குழுவினரின் இசை நிகழ்ச்சியும்  என தொடர்ந்து நிகழ்ச்சிகள் ரம்யா ஆர்ட்ஸ் அக்கடெமி சார்பில் நடத்தப்பட்டன. இந்த லலிதாஞ்சலி குழுவினரில் பிரதானமாக ஷோபா,சுந்தர், சுரேந்தர் என மூவர் பாடுவார்கள். இந்த ஷோபா என்பவர் வேறு யாருமல்ல நடிகர் விஜய் யின் தாயார்தான் அவர் .

இப்படி நான்கு நிகழ்ச்சிகள் நடத்தியதோடு சரி.  ரம்யா ஆர்ட்ஸ் அக்காடெமி யின் கதை அற்பாயுசில் முடிந்து போனது. அதற்குப்பல காரணங்கள்.

இப்படியொரு தருணத்தில்தான்  திராவிட மாணவர் கழகத்தில் தீவிரமாகச்செயல்பட்டு வந்த   மோகனசுந்தரம், பாரி  என்கிற எங்களது சீனியர் மாணவர்கள் இருவர் தர்மபுரியில் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய ஓர் அரசியல் பயிற்சி முகாமிற்கு சென்று வந்தனர். 

10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற அம்முகாமில் பங்கேற்ற அவர்கள் திரும்பிவந்ததும் மிகப்பெரிய மாற்றம் எங்கள் மாணவர் வட்டத்தில் நிகழ்ந்தது. 

இடது சாரி சித்தாந்தம் குறித்த விவாதங்கள், அவை குறித்த நூல்கள் வாசிப்பது என ஒரு புதியபோக்கு எங்களிடையே மேலெழத்தொடங்கியது. இதன் விளைவாக இந்திய மாணவர் சங்கத்தின் கிளை ஒன்று , எங்களது கல்லூரியில் உதயமானது. குடியாத்தத்திலிருந்த இந்திய மாணவர் சங்க  தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் சம்பத்குமார் எங்களைத் தொடர்பு கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை  மின்சார வாரியத்தில் பணியாற்றுகிற மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் எங்களுக்கு பரிச்சயம் ஆகிறார்கள். அவர்கள் எங்களுக்கு அடிப்படையான மார்க்சீய சித்தாந்தம் குறித்த வகுப்புகளை எடுக்க ஏற்பாடு செய்கின்றனர்.  மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான சூர்ய நாராயணன், நடராஜன், ராமகிருஷ்ணன், பொன்னுசாமி,பாஸ்கர், இந்தியன் காஃபி ஹவுஸில் பணியாற்றிக்கொண்டிருந்த ராஜகோபால் போன்ற தோழர்கள்தாம் எங்களுக்கு மார்க்சீய சிந்தனைகளை அறிமுகம் செய்து வைத்தனர்.  மின் ஊழியர் தோழர்களில் இரண்டு நடராஜன்கள் இருந்தனர். 

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
தோழர் கே.வி. பிரபஞ்சன், சு. சமுத்திரம், ஓவியர் பல்லவன், பவா, காளிதாஸ்.

அவர்களை அடையாளம் காண்பதற்காக ஒருத்தருக்கு புகையிலை நடராஜன் என்றும் மற்றொருவருக்கு புரட்சி நடராஜன் என்றும் பெயர்.

அடிக்கடி புகையிலை போடும் வழக்கம் இருந்ததால் ‘புகையிலை நடராஜன்’ எனப்பெயர் பெற்ற அவர் கோவில்பட்டிக்காரர்; சிறந்த பேச்சாளர்; மின்வாரியத்தில் தலைமை எழுத்தராகப் பணியாற்றிவந்தார். இளநிலை பொறியாளரான புரட்சி நடராஜன் , உள்ளூர்க்காரர்.

இவர்களோடு ஏற்பட்ட ஒரு தொடர்பு அதன் நீட்சியாக இலக்கிய ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைக்கிற ஒரு முயற்சியும் உருவானது.

திருவண்ணமலையிலிருந்து சென்று சென்னை மாநிலக் கல்லூரியில் முது நிலைக்கல்வி பயின்று கொண்டிருந்த வீபா.கணேசன்தான்  இம்முயற்சியை  அப்போது முன்னெடுத்தார். வீபாகணேசனை அமைப்பாளராகக் கொண்ட ஒரு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளை  ஒன்று உருவாக்கப்பட்டது. 

கிளை தொடங்கியதும்  அடிக்கடி கூடிப்பேசுகிற விவாதிக்கிற  செயல்பாடுகள் நடந்ததேயொழிய பொது நிகழ்ச்சிகள் எதுவும் திட்டமிடப்படவில்லை.

அப்போது காஞ்சி புரத்தில் மேல் நிலைப்பள்ளி ஆசிரியராகப்பணியாற்றிக்கொண்டிருந்த கவிஞர்.வெண்மணி மாற்றலாகி திருவண்ணாமலை நகருக்கு வந்தார்.  தமுஎச-வில் பரவலாக அறியப்பட்ட  கவியரங்கக் கவிஞர்  அவர்.  

அவர் வந்தபிறகு தமுஎச நடவடிக்கைகள் சற்று சூடு பிடித்தன. ,திருவண்ணாமலை கிளையின் சார்பில் பொது நிகழ்ச்சி ஒன்று நடத்துவது எனத் தீர்மானமாயிற்று. 

வரலாறு தொடரும்..

Ganesh: An auto worker who evolved into a multifaceted artist - Pralayan Shanmugasundaram. Book Day is Branch of Bharathi Puthakalayam.

கணேஷ்: பன்முகம் கொண்ட கலைஞனாய்ப் பரிணமித்த ஓர் ஆட்டோ தொழிலாளி

சென்னை கலைக்குழுவின் தொடக்ககால உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விடைபெறுகிறார்கள். முதலில் கே.பி பாலச்சந்தர், பிறகு டி.ஏ.விஸ்வநாதன், தற்போது கணேஷ். ஓர் ஆட்டோ ஓட்டுகிற தொழிலாளியாக இருந்துகொண்டு பன்முகம் கொண்ட கலைஞனாக பரிணமித்த தோழர். கணேஷ் ,2021 மே 4ஆம் தேதி , வடசென்னை…
‘Drama Flame’ is a real drama directed by Prof. Mu. Ramasamy in KD Engira Karuppudurai Tamil Movie - Book day website is Branch of Bharathi Puthakalayam

‘நாடகச் சுடர்’ நிஜ நாடக இயக்க மு.ராமசாமி – பிரளயன்

பேராசிரியர் மு.ராமசாமி, தமிழில் நவீன நாடகச்செயல்பாடுகளை முன்னெடுத்த முன்னோடி நாடகச்செயற்பாட்டாளர்களில் ஒருவர்; தமிழின் மதிப்புமிக்க நாடக ஆளுமைகளில் ஒருவர். 1978 ல் தொடங்கப்பட்ட நிஜ நாடக (Drama) இயக்கம் எனும் தனது நாடகக்குழுவினது செயற்பாடுகள் மூலம் தமிழ் நாடகப்பரப்பில் அறியப்பட்டவர். இராமசாமியின்…
Indian Play Writer Safdar Hashmi in Halla Bol (Urakka Pesu) tamil translation book review. Book Day is Branch of Bharathi Puthakalayam.

நூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்

#BharathiPuthakalayam #BookDay #SafdarHashmi #HallaBol நூல்: உரக்கப்பேசு | சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும் ஆசிரியர்: சுதன்வா தேஷ்பாண்டே – தமிழில் அ.மங்கை வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: ரூ. 300 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/ அடர்த்தியான, வேகம் மிக்க கூற்றுச்…
அனைத்து திறமைகளும் ஒருங்கிணைந்த செயல்பாட்டாளராக மிளிர்ந்தவர் கருப்பு கருணா: பிரளயன் #அஞ்சலி

அனைத்து திறமைகளும் ஒருங்கிணைந்த செயல்பாட்டாளராக மிளிர்ந்தவர் கருப்பு கருணா: பிரளயன் #அஞ்சலி

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about tamil…