நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்

நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்




நூல் : பணமும் அர்ப்பணமும்
மொழி : மலையாளம்

ஆசிரியர் : சபாஷ் சந்திரன்
விலை : ரூ. 110
வெளியீடு : மாத்ருபூமி புக்ஸ், கோழிக்கோடு
விற்பனை : 2765381. 0495 2765388.
www.mathrubhumiboos.com

மலையாள மொழிப் பத்திரிகை மாத்ருபூமியின் சிறுவர் வெளியீடான பால பூமியில் ஆசிரியராக இருந்த சபாஷ் சந்திரனின் அவர்கள் அந்த இதழில் எழுதி வெளிவந்த, சிறுகதைகளின் தொகுப்பே இந்த பணமும் அர்ப்பணமும் என்ற சிறுவர் புத்தகம்.

இதில் இடம் பெற்றுள்ள முப்பத்தைந்து கதைகளும் உண்மை, நேர்மை, இலட்சியம், தியாகம், நம்பிக்கை, அறிவு, திறமை, ஒழுக்கம் போன்ற நேர்மறை சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக சில கதைகளின் சாராம்சங்களையும் அதன் நீதி போதனைகளையும் சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாமென்று எண்ணுகிறேன்.

பிரார்த்தனையும் ஆணவமும் என்ற முதற்கதையில் பிரார்த்தனையால் ஏற்பட்ட ஆணவத்தின் பலனை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆணவம் அழிவை நோக்கியே நம்மை அழைத்துச் செல்லும் என்ற சிறு உண்மையை விளக்குகிறார்.

கல்வி, செல்வம் இதில் எது நிலைத்து நிற்கும் என்ற விவாதத்திற்கு வித்யாதரனும் தனாகரனும் என்ற கதை ஓர் எடுத்துக்காட்டு. ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி மற்றொன்றாய் வருகிறது என்பதை திராட்சை ரசமும் செங்கலும் என்ற கதை வெளிப்படுத்துகிறது. செங்கல் என்பதன் உருவாக்கத்தையும், மது என்பதின் தயாரிப்பையும் ஒப்பிட்டு பகவான் ராமகிருஷ்ணரின் கருத்து மூலம் வெளிப்படுத்தி இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மதுவின் ஆபத்தைப் பற்றிய அவரின் அறிவுரை பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணியாய் பதியும்.

கத்தியும் பேனாவும் என்ற கதையில் கத்தியினால் ஏற்பட்ட தோல்வியும், பேனாவினால் ஏற்பட்ட பெரும் பலனும் விளங்குகிறது. கத்தியை தீட்டாதே, புத்தியை தீட்டு என்று புத்திமதி சொல்கிறது.

ஆசிரியர் சுபாஷ்சந்திரன் மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர், சிறுவர்களுக்கான நிறைய தொகுப்புகள் வெளியிட்டிருந்தாலும், அவரின் மனுஷ்யனு ஒரு …. முகம் என்ற மலையாள நாவல் கேந்திரிய சாகித்ய அகாடமிவிருது, கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது, ஓடக்குழல் விருது என பன்னிரெண்டு பரிசுகளைப் பெற்றிருக்கின்றது. இந்த புத்தகம் A preface to Man என்று ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது.

இனி சில கதைகளுக்கு வருவோம். பணிவும் விவேகமும் என்ற கதை மூலம் விவேகத்தோடு கூடிய பணிவே வெற்றியை பெற்றுத் தரும் என்று விளக்குகிறார். ஒரு யானை தன் இனத்தில் யாரோடும் நண்பனாகாமல் மற்ற மிருகங்களிடம் நெருக்கமாக இருக்கும்போது, ஆபத்துக் காலத்தில் மற்ற மிருகங்களைவிட தன் இனத்து யானையே உதவிக்கு வருமென்று விளக்குகிறார். புது வருடத்தின் தேவதை என்ற கதை சோம்பலையும் அதை துரத்துவதையும் நாசூக்காகவும் நையாண்டியாகவும் ஒரு குழந்தையின் மூலம் விளக்குகிறார். வாசிப்பும் பேச்சும் என்ற கதை மூலம் பேச்சை விட செயலே சிறந்தது என்று இயம்புகிறார்.

புத்தகத்தின் தலைப்பைப் பெற்றிருக்கும் பணமும் அர்ப்பணமும் என்ற கதை ராஜராஜசோழன் காலத்தை ஒட்டியதாக வருகிறது. வறுமையிலும் ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பும் மன்னரின் மனமாற்றமும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயது முதல் பதினாலு வயது வரை உள்ள சிறுவர், சிறுமியரின் வாசிப்பு ரசனையை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்நூலின் கதைகள். எல்லா சிறுவர் கதைகளிலும் உள்ளது போலவே இக்கதைகளிலும் காடுகள் வருகிறது, மலை வருகிறது, கடல் வருகிறது. மற்றும் யானைகள், பூனைகள், சிங்கம் புலிகள், வண்டுகள், குருவிகள், கிளிகள் போன்றவைகள் கதாபாத்திரங்களாக உலா வந்து சிறுவர்களின் மனதில் சந்தோச சலனத்தை உண்டு பண்ணுகின்றன. கற்பனை மனோபாவத்தை வளர்க்கின்றன. மேலும் மன்னர்கள், ராஜரிஷிகள் துறவிகள், திருடர்கள் இராஜகுமாரன்கள் கதை மாந்தர்களாக வருகிறார்கள். எல்லா கதைகளும் சொற் சிக்கனமும் வாசிப்பு லாகவமும், நீதி போதனைகளும் கொண்டவைகளாகவே உள்ளன.

அரேபியா, ஜப்பான் போன்ற வெளி நாடுகளும், கெளசாம்பிகா, மித்ரபுர், குருசேத்திரம், மகதம், காந்தாரம் போன்ற இந்திய நாடுகளும் கதைகளில் கதைச் சூழலாக அமைகிறது. அது வாசிக்கும் சிறுவர்களுக்கு ஒரு மண் சார்ந்த உணர்வை ஏற்படுத்தும்.

இன்றும் நாளையும் என்ற கதை பாண்டவர்கள் மூலம் நன்றே செய்க அன்றே செய்க, அதை இன்றே செய்க என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். வண்டுகள் கற்றுத் தந்த பாடம் ஒரு சுற்றுச் சூழல் பேருண்மையை குழந்தைகள் மனதில் விதைக்கிறது. புலியும் பூனையும் என்ற கதை முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தத்துவத்தை விவரிக்கிறது.

மன்னரும் திருடனும் என்ற கதை ஒரு திருடன் திருந்தினால் வீடு திருந்தும், வீடு திருந்தினால் நாடு திருந்தும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேல் என்ற தத்துவத்தை பேசிச் செல்கிறது பிரச்சினையும் தீர்வும் என்ற கதை.

கரிக்கட்டையும் வாழ்க்கையும் என்ற ஜப்பானியக் கதை உழைப்பின் உயர்வை உணர்த்திச் செல்கிறது. இறக்கையின் சக்தி ஆணவத்தின் ஆபத்தை உணர்த்துகிறது. கடைசி வாய்ப்பு என்ற கதையில் மகாபலி, வாமனன் மூலம் ஓணப் பண்டிகையின் தத்துவார்த்தங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. முத்தாய்ப்பாக கப்பலும் தடியும் மூலம் முயற்சியின் உயர்வு விளக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் முப்பத்தைந்து கதைகளும் பிஞ்சு உள்ளங்களில் நாட்டுப்பற்று, சுற்றுச்சூழல், நேர்மை, நீதி, தியாகம், செம்மை, அறிவின் தேடல் போன்ற உயர்ந்த சிந்தனைகளை விதைத்துச் செல்கிறது என்பது திண்ணம்.

– சுந்தரராமன்

இன்றிலிருந்து கவிதை – சே.கார்கவி

இன்றிலிருந்து கவிதை – சே.கார்கவி




ஒரு சொடுக்கிடும்
நேரத்தில்தான்
காலம்
கண்கள் விரிய விரியக்
காரணங்களைக் காட்சிகளாக
உருவகப்படுத்தி நமக்குக்
கன்னங்களில்
கண்ணீராகவும்
கன்னம் வீங்கும் நிலைக்குப்
புன்னகையாகவும்
மின்னச் செய்துவிடுகிறது…

ஒன்றுக்குப் பின் ஒன்றாக
வரும் அனைத்தும்
சில
வேண்டியவைகளாகவும்
பல
வேதனைகளாகவும் உருமாறியபொழுது
மீண்டும் விரிகிறது
வேண்டுதலின் கண்கள்….

சரி போகட்டும்
கையைப்பிடித்த படியே
நகரும் நிழலின்
குணமும்
இருளோடும்
தலைமேல் குவியும் சூரியக்கதிரோடும் நம்மை
சிரமமிழ்த்திச் சற்று நகர்த்துகிறது…

இன்றாவது முடியட்டும்
இல்லையில்லை
இன்றிலிருந்தாவது
குறையட்டும்
குறியீட்டில் காட்டி விளக்கிடும்
அய்யகோ எனும் விரக்தி…….

– கவிஞர் சே கார்கவி

அ.பாலாஜியின் கவிதைகள்

அ.பாலாஜியின் கவிதைகள்




பன்மைத்துவம் நமது வலிமை
***********************************
சேரிகளுக்கு அருகில்தான்,
வானுயரக் கட்டிடங்களும் எழுகின்றன;

அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணினத்திற்குத்தான்
“சில நேரச்” சிறகுகளும் தரப்படுகின்றன;

கோவில்களுக்கு அருகில்தான்
தேவாலயங்களும் மசூதிகளும் தோளுரசி‌ நிற்கின்றன;

முரண்பாடில்லை என நம்ப வைத்துவிட்டேன் என்னை நானே!
கார்ல் மார்க்ஸையும்
பெரியாரையும்
அம்பேத்கரையும்
படிக்கச் சொல்லிய மனதுக்கு
ஒரு கடிவாளம் போட்டேனேயானால்
நம்ப வைத்து விடுவேன்
வேற்றுமையில் ஒற்றுமை என
இற்றுப்போன இந்த மனத்தையும்…!

மும்மேதைகளிடம்
முரண்பட்டுக் கிடப்போரின்
குறுக்கே ஒரு மன நூல் ஓடும்,

இதயங்களுக்கு இடையில் இடைவெளியா?

பன்றியைக் கடவுளின் அவதாரம் என்றபடியே

வயற்காட்டில் உழுதோடி உழைத்த நம் மக்களை
பன்றிகள் என்று பழித்துரைப்பர்…!

மனிதர்கள் நினைக்காமல்
மன நூல் பொசுங்காது !

நூல் பிடித்தாற்போல
தோழர்கள் நாம் தோள்களுரசி தொடர்ந்து பாடுவோம்!
நூலறுத்து பட்டமெனப் பறப்போம்
அகன்ற வானம் நம் அறிவின் விசாலம்!

பற
*****
தாய்க்குருவி தன் குஞ்சுக்குப்
பறக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது;

முன்பொரு நாள்
இதே கூட்டுக்குள்
தன் தாய் தனக்கு
எவ்வாறு கற்றுக்கொடுத்ததோ அவ்வாறு…!

புத்தகச்சிறை
*****************
புத்தகத்தைச் சிலநொடி நேரம் சிறை பிடித்திருந்த
பட்டாம்பூச்சியைப் படித்தேன்,
புத்தகத்தை மறந்து…!

அதன் பங்கிற்கு
எந்தக் காட்டிலோ
எந்த பூவோ தந்த தேனை எடுத்து வந்த
கதையை எழுதிச் சென்றது..‌.!

கதை
*******
இறகுகள் சொல்லும் கதைகளை
மொழிபெயர்க்க யாருமில்லை இந்தக் கூண்டில் ;
முன்பிருந்த பறவைகளைக் கேட்டால் ஒருவேளை சொல்லலாம்,
சொன்னால் என்ன சொல்லும்?!
பறந்து போகச் சொல்லும்…!

கதவு
*******
பள்ளிக்கூடக் கதவுகளில்
காம்பஸ் வைத்துச் செதுக்கிய
என் பெயரையும் அவள் பெயரையும்
இந்நேரம் பெயிண்ட் அடித்து அழித்திருப்பார்களோ?!

வீட்டுக் கதவில்
குழந்தை தற்செயலாய்
என் பெயரை க்ரேயான்ஸ் கொண்டு
எழுதி அழித்துக் கொண்டிருந்த கணம் தோன்றி மறைந்தது
அவள் பெயருடன் முகமும்…!

பிரார்த்தனை
*****************
“கைகால் நல்லாத்தானே இருக்கு,
உழச்சுத் திங்க வேண்டியதுதான” என்று
யாசகம் கேட்ட கிழவரின் காதுபடச் சொல்லிவிட்டு,
நந்தியின் காதில் சொன்னான்
“எல்லாருக்கும் கைகால் சொகத்த குடு,
எல்லாரும் நல்லாருக்கணும்”…!

கைதி
********
பார்வைச் சிறையில் என்னைக் கைதியாக்கினார்
கண்களில் பசி ஏந்தி நின்ற அந்தத் தாத்தா;

பார்சல் சாப்பாடு வாங்கிச் செல்வது என் முதலாளிக்கு என்று
எப்படிச் சொல்ல அவரிடம்…!

அ.பாலாஜி