பெரு: ஆட்சிக் கவிழ்ப்பும் படிப்பினைகளும் கட்டுரை -அ.பாக்கியம்

பெரு: ஆட்சிக் கவிழ்ப்பும் படிப்பினைகளும் கட்டுரை -அ.பாக்கியம்




தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி சிந்தனையாளரும், விவசாயிகளுடைய தலைவரும், ஆசிரியருமான பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, ஜூன் மாதம் பதவியேற்றுக்கொண்டார்

தென் அமெரிக்க நாட்டில் இடதுசாரி மற்றும் முற்போக்காளர்களின் எழுச்சியின் தொடர்ச்சியாக பெருநாட்டிலும் இந்த மாற்றம் ஏற்பட்டது. மக்கள் தலைவராக, போராட்ட களத்திலி ருந்து காஸ்டிலோ வெற்றி பெற்றார். ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட அனைத்து முயற்சி களையும் செய்தார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினுடைய எதிர்ப் பினை எதிர்கொண்டுதான் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை செய்தார். அவரது முயற்சிகளுக்கு பெரும்பான்மை பலத்துடன் இருந்த வலதுசாரி பாராளுமன்றம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தது.

காஸ்டிலோ எடுத்த முயற்சிகள்

  • கல்வியறிவின்மையை போக்குவதற்கு உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை கல்விக்கான முதலீட்டை அதிகப்படுத்தினார். இதற்கான சமூகத் திட்டங்களை அமல்படுத்தினார் 
  • 2.2 மில்லியன் சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
  • விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிக்கான திட்டங் களை உருவாக்கி அமல்படுத்தினார் 
  • 300 க்கும் மேற்பட்ட விவசாய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி கிராமப்புற கூட்டுறவு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார். 
  • பெரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 350 இடங்களில் 13 மில்லியன் மக்கள் பயனடையும் முறையில் 84 கோடி டாலர் ஒதுக்கி நிதி உதவி செய்தார். 
  • சமையல் எரிவாயு விலையை 2.8 டாலராக குறைத்து வழங்கினார். 
  • அரசியல் அமைப்பை திருத்தி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 
  • ஜனாதிபதியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அடிப்படை விதியாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த தார்மீக இயலாமை என்ற வார்த்தையை நீக்குதல்,
  • மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஜனாதிபதியை வலது சாரிகள் பெருபான்மை என்ற பெயரால் பதவி நீக்கம் செய்யும் முறையை மாற்றிட திருத்தங்களை கொண்டுவந்தார்.

இவற்றையெல்லாம் சொத்துடைமை வர்கத்தால் சகித்துக் கொள்ள முடியுமா?

தார்மீகமற்ற தாக்குதல்

காஸ்டிலோவிற்கு பெரும்பான்மை இல்லாத சூழலை பயன்படுத்தி அடிக்கடி கவிழ்க்க முயன்றனர். அமெரிக்கா தலைமையிலான சுரங்க முதலாளிகளும், ஆலை முதலாளிகளும், ராணுவமும், ஆயுதப்படைகளும், கத்தோலிக்க தேவாலயங்களும், இடதுசாரி ஜனாதிபதி காடிலோவை நீக்குவதற்கான இம்பீச்மென்ட் அதாவது “தார்மீக இயலாமை” முறையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தனர்.

பல நேரங்களில் இந்த பெரும்பான்மையை எதிர்கொள்வதற்காக தனது மந்திரிகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக நிரந்தர தார்மீக இயலாமை என்ற தீர்மானத்தை கொண்டு வந்து தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

அதிகார துஷ்பிரயோகம் செய்வது, சட்டம் இயற்றுபவர்களை பதவிநீக்கம் செய்வது, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது, ஊழல், கருத்து திருட்டு, கிளர்ச்சியை தூண்டி விட்டது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது (7.12.22) செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஸ்டிலோவை ஆதரித்த முன்னால் பிரதமர் அணிபால் டோரஸ் (Anibal Torres) இந்த குற்றச்சாட்டுக்காகவே இவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்று அவர்களின் சட்டம் கூறுகிறது.

“நிரந்தர தார்மீக இயலாமை” என்பது 180 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டு அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு விதி. இந்த விதிக்கு புறநிலை வரையறை எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். 19-ம் நூற்றாண்டில் இதை பைத்தியக்காரத்தனம் என்று கருதினார்கள். இப்போது இடதுசாரி ஜனாதிபதி இதை நீக்குவதற்கு எடுத்த முயற்சிகளை தடுத்து ஊழல் குற்றச்சாட்டை இதன் மூலம் சுமத்தி ஏகாதிபத்திய முதலாளிகள் ஆட்சியை கவிழ்த்து இருக்கிறார்கள்.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் 18 மாத காலம் போட்ட சதி திட்டத்தை இப்பொழுது நிறைவேற்றி இருக்கிறார்கள். கார்டிலோ ஓ.ஏ.எஸ் (OAS-ORGANISATION OF AMERICAN STATES) என்ற அமைப்பிலும் முறையிட்டார்.

பயனில்லை.

வாஷிங்டனுக்கு ஒரு நிலையற்ற உலகம் இருந்தால் தான் தனது மேலாதிக்கத்தை செலுத்த முடியும். பெருநாட்டில் 2016 ம் ஆண்டுகளிலிருந்து அடுத்தடுத்து 5 ஜனாதிபதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தநிலை அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. காஸ்டிலோ பதவிக்கு வந்த பிறகு எங்கே ஒரு நிலைத்தன்மை உருவாகி விடுமோ என்ற அச்சத்தில் பெரு நாட்டை நிலையற்ற தன்மைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற சுயநலத்தால் அமெரிக்க தூதரகம் அனைத்து உதவிகளும் செய்து ஆட்சியை கவிழ்த்தது.

துணை அதிபராக இருந்த திருமதி டினா போலுவார்டெ (Dina Boluarte) உடனடியாக அதிபராக பதவிஏற்க சொல்லி அவரை அங்கீகரித்து காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஆதரித்தது.

டினா போலுவார்ட்டின் நியமனத்தை பெரு அரசாங்கம் கொண்டாடுகிறது என்று அமெரிக்க வெளியூர் துறை செய்தி தொடர்பாளர் கூறுகிறார். ஜனநாயக ஸ்திர தன்மையை உறுதி செய்ததற்காக பெரு நாட்டின் சிவில் நிறுவனங்களையும், அதிகாரிகளையும், வெள்ளை மாளிகை பாராட்டியது என்றால் அவர்களை தவிர இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு வேறு யாரு அடித்தளமாக இருந்திருக்க முடியும்.?

உலகம் எதுவும் சொல்லாது அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்காவால் தூண்டப்பட்ட மற்றொரு சதி. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு லத்தீன் அமெரிக்காவின், இடது சக்திகளின் முன்னேற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தாக்குதல். இந்த தாக்குதல், தந்திரங்கள், பொய்கள் நிறைந்த, ஒரு உண்மையான போரின் துவக்கமாகும் என்று வெனிசுலாவின் தேசிய அரசியல் அமைப்பு சபையின் தலைவர் டியோஸ்டாடா கப்பல்லோ கூறினார்.

மெக்சிக்கோ நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஓப்ராடோர் பொருளாதார மற்றும் அரசியல் உயர் அடுக்கு பிரிவினர் திட்டமிட்டு காஸ்டிலோவை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், காஸ்டிலோவுக்கு மெக்சிகோ அரசியல் புகலிடம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.

பொலிவியா நாட்டு ஜனாதிபதி லூயிஸ் ஆர்சின், காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஏற்கவில்லை என்றும், இது போன்று பொலியாவில் இரண்டு முறை முயற்சித்ததையும் ஓ. ஏ.எஸ் அமைப்பு மீண்டும் தவறான மதிப்பீடு செய்து, பெரு நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணை போயிருக்கிறது என்று கண்டித்தார்.

பெருவின் தலைநகரில் மிகப்பெரும் போராட்டங்கள் காஸ்டிலோவிற்கு ஆதரவாக நடைபெற்று வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் அதிகாரத்திற்கு வருவதும், அவற்றை அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான பெரும் முதலாளிகள் ஆட்சியை கவிழ்ப்பதும் 1971-ம் ஆண்டு சிலி நாட்டில் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏகாதிபத்திய முதலாளித்த சுரண்டலுக்கு எதிராக மீண்டும் மீண்டும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.

பெரு நாட்டிலும் காஸ்டிலோ சில நேரங்களில் சமரசம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர் சார்ந்திருந்த கட்சி பெரு லிப்ரே(Free Peru) பல நே

ரங்களில் அவருடன் இணைந்து இருக்கவில்லை. 130 பாராளுமன்ற பிரதிநிதிகளில் 101 பேர் காஸ்டிலோ எதிராக வாக்களித்தனர். பெரு லிப்ரா கட்சியின் உறுப்பினர்கள் 37 பேர்களும், ராஜினாமா செய்த அமைச்சர்களும் இவருக்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.

இவற்றை காஸ்டிலோ அறிந்த போதிலும் வலதுசாரிகளின் கையில் அகப்பட்டு இருக்கக்கூடிய பாராளுமன்றத்தை கலைத்தால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பிக்கையில் முன் முயற்சி எடுத்தார்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கலாம், ஆனால் நாட்டை ஆள்பவர்கள் பொருளாதார பலம் கொண்டவர்கள், ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தை கட்டுப்படுத்துபவர்கள். அரசாங்கத்தை மாற்றினால் மட்டும் போதாது, அமைப்பின் அடிப்படை மாற்றத்திற்காக நாம் போராட வேண்டும். ஆனால் அங்கு செல்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்பும், அணி திரட்டலும், நாம் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு புரட்சிகர தலைமையும் தேவை என்பதை இன்றைய சூழல் கோருகிறது.

பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று தெரிந்தும் காஸ்டிலோ மக்களை தெருக்களில் இறக்குவதற்கான முயற்சிகளை ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது.

பல நேரங்களில் பெரும்பான்மை இல்லை என்ற நிலைமையில் சமரசப் போக்கில் நடத்துவதற்கு முயற்சி செய்தாலும், முதலாளித்துவ வர்க்கம், தங்கள் வகுப்பைச் சேராத ஒருவரை, சாதாரண மக்களிடமிருந்து வந்த ஒருவரை, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு அனுமதிக்காது என்ற வரலாற்று அனுபவம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

பெருவின் அரசியல் நிலை நெருக்கடியாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் உள்ள இடதுசாரிகளை முற்போக்காளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டத்தோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறது. அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அனுபவம், காலம் மாறிவருவதைக் காட்டுகிறது.

அமெரிக்கசதியால் கவிழ்க்கப்பட்ட பிரபலமான அரசியல்வாதிகளை மீண்டும ஆட்சிக்கு திருப்பி அனுப்புகிறார்கள். புதிய தாராளமயப் பொருளாதாரத்தில் ஏமாற்றம் அதிகரித்து வருகிறது, அமெரிக்காவால் இதில் எதுவும் செய்ய முடியாது. வாஷிங்டன் பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளில் அதன் கைப்பாவை தலைவர்களை கொண்டு எடுபுடி அரசை நிறுவும் வாய்ப்பை கூடிய விரைவில் இழக்கும்.

அரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டமாக தொழிலாளர்களும் விவசாயிகளும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமல்ல, உண்மையான சக்தி தொழிலாள வர்க்கம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட, புரட்சிகர ஏழை விவசாயிகளின் அணி திரட்டலை நிரூபிக்கும் வகையில் அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

தென் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி தலைவர்கள் மக்கள் போராட்டத் தலைவர்களாக இருக்கிறார்கள். மக்களிடமிருந்து அன்னியபட்டவர்களாக இல்லை. களப்போராட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் போராட்டம் வெல்லட்டும்.

அ.பாக்கியம்.

அறியப்பட வேண்டிய ஆளுமை கட்டுரை – அ.பாக்கியம்

அறியப்பட வேண்டிய ஆளுமை கட்டுரை – அ.பாக்கியம்




சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதியாக பணியாற்றிய ஜியாங் ஜெமின் அவர்கள், தனது 96 வது வயதில் 30ஆம் தேதி ஷாங்காய் நகரத்தில் மரணமடைந்தார். அவரைப் பற்றிய சிறு குறிப்பு நேற்றைய தினம் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன்.

Jiang Zemin, former Chinese President who led Communist Party after 1989 crackdown, dies aged 96 | சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் காலமானார்

சீனாவைப் பற்றி சீன பொருட்களை பற்றி அந்நாட்டின் பழைய தலைவர்களை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. நன்கு பிரபலமான புரட்சி நடத்திய தலைவர்களை பரவலாக அறிந்திருப்பார்கள்.

1978 ஆம் ஆண்டு டெங் சியோ பிங் தலைமையில் திறந்த வெளி கொள்கை அறிவிக்கப்பட்டு உலகம் தழுவிய முறையில் சீனாவின் முன்னேற்றம் மிகப்பெரும் மாற்றத்தை சீனத்திலும் உலக அளவிலும் ஏற்படுத்தியது.

இந்த மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தவர் டெங்சியோ பிங்க் ஆவார். அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற ஜியாங் ஜெமின் அந்தக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் சென்றார்.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பங்கு முக்கியமானதாக இருந்தாலும் வரலாற்றில் தனிநபர் பாத்திரம் தவிர்க்க முடியாத பங்கினை செலுத்தி இருக்கிறது.

இந்த வகையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த பெரும் வளர்ச்சிக்கு, சீன நாட்டின் பெரு மாற்றத்திற்கும், அனுபவம் வாய்ந்த தலைவர்கள், கல்வி கற்றவர்கள், திறமையானவர்கள், களத்தில் நின்று போராட்டத்தின் மூலம் கற்றுக்கொண்டவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

தலைமை என்பது அறிவு ஜீவித்தனத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. கள அனுபவம், மக்களுடன் இரண்டற கலந்து செயல்படுதல், அமைப்பின் அடிமட்டம் வரை தலைமையில் செயற்களம் அமைத்துக் கொள்ளுதல், இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு கட்சியின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும்.

தோழர் ஜியாங் ஜெமின் வாழ்க்கை இந்த வகையிலே தான் அமைந்திருக்கிறது. அதனால் தான் சீனாவின் மாற்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பங்கை அவரால் திறம்பட நடத்திச் செல்ல முடிந்தது.

சீனாவின் தலைமை அமைப்புகள் கீழ்கண்ட முறையில் சீன மக்களுக்கு அழைப்புகளை விடுத்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய குழு, சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் (பிஆர்சி), பிஆர்சியின் மாநில கவுன்சில், சீன மக்களின் தேசியக் குழுவின் நிலைக்குழு அரசியல் ஆலோசனை மாநாடு(cppcc) இந்த அறிவிப்பை வெளியிட்டது.

எங்கள் அன்புக்குரிய தோழர் ஜியாங் ஜெமின் இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்புகள் செயலிழப்பால் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் பலனளிக்காமல் இறந்தார் என்பதை முழுக் கட்சிக்கும், முழு இராணுவத்திற்கும் மற்றும் அனைத்து இன மக்களைச் சேர்ந்த சீன மக்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.

தோழர் ஜியாங் ஜெமின் ஒரு சிறந்த தலைவர், முழுக் கட்சி, முழு இராணுவம் மற்றும் அனைத்து இன மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட உயர் மதிப்பை பெற்றவர்.

ஒரு சிறந்த மார்க்சிஸ்ட், சிறந்த பாட்டாளி வர்க்க புரட்சியாளர், அரசியல்வாதி, இராணுவ மூலோபாயவாதி மற்றும் இராஜதந்திரி, பண்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் போராளி, மற்றும் சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசத்தை கட்டியமைத்த சிறந்த தலைவர். அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின மூன்றாம் தலைமுறை மத்திய கூட்டுத் தலைமையின் மையமாகவும், மூன்று பிரதிநிதித்துவக் கோட்பாட்டின் முதன்மை நிறுவனராகவும் இருந்தார்.

தமது இளமைப் பருவத்திலேயே ஜியாங் ஜெமின் தேச பக்தி மிக்கவராகவும், ஜனநாயக புரட்சியின் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்டார். விடாமுயற்சியுடன் ஜனநாயக புரட்சி பற்றி தெரிந்து கொள்வதற்கான தேர்தலில் இறங்கினார்.

தனது கல்லூரி பருவத்தில் ஜப்பானிய எதிர்ப்பு போராட்டங்களில் பங்கு பெற்று தீவிர தேசபக்தியை வளர்த்துக் கொண்டதுடன் மார்க்சிய உலக கண்ணோட்டத்தையும் பெறுவதற்கான களமாகவும் அவருக்கு இந்த போராட்டம் அமைந்தது.

தனது வாழ்க்கையை தேசத்திற்காகவும் தேசிய விடுதலைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சபதம் எடுத்து செயலாற்று தொடங்கினார்.

1926-ல் ஆகஸ்ட் 17 அன்று யாங் ஷோவின் கிழக்கு நகரத்தில் பிறந்தார். அவரது மாமாவும் வளர்ப்பு தந்தையுமான ஜியாங் ஷாங்கிங் ஒரு புரட்சியாளர். 1939இல் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார்.

1947 இல் ஷாங்காய் ஜியோ வா டோங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு ஜியாங் ஜெமின் உள்ளூர் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார். இளைஞர் அமைப்புகளில் இணைந்து இரவு பள்ளிகளில் நடத்தி தொழிலாளர்களை அணி திரட்டினார்.

இளம் தொழிலாளர்கள் தொழில் வல்லுனர்களிடையே புரட்சிகரமான பிரச்சாரங்களைச் செய்வதற்கான பொறுப்பு ஏற்றுக்கொண்டு செயல்பட்டார்.

1949-ல் விடுதலைப் போராட்டம் நடந்த பொழுது ஷாங்காய் பகுதி விடுதலை அடைவதற்கான போராட்டத்திற்கு தொழிலாளர்கள் அணி திரட்டியுடன் அங்கு இருக்கும் தொழிற்சாலைகளை பாதுகாக்கும் பணியிலும் தலைமை ஏற்று ஈடுபட்டார்.

சீனாவில் புரட்சி வெற்றி பெற்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட காலத்தில் ஷாங்காய் மாநிலத்தில் உணவு தொழிற்சாலையின் துணை இயக்குனராகவும், ஷாங்காய் சோப்பு தொழிற்சாலையில் முதல் துணை இயக்குனராகவும் செயல்பட்டார்.

இயந்திரத்தின் தேவைகள் கருதி உருவாக்கப்பட்ட இயந்திர அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இயந்திர வடிவமைப்பு இயந்திரப் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

1954 ஆம் ஆண்டு சீனாவிற்கு தொழில் நுட்ப வல்லுநர்களும், நிர்வாக திறமை வாய்ந்த ஊழியர்களும் ,கட்டுமான பணிகளுக்காகவும், இயந்திரத் தயாரிப்பு பணிகளுக்காகவும் தேவைப்பட்டனர். தோழர் ஜியாங் ஜெமின் அந்த பொறுப்பை ஏற்று செயல்படுத்த ஆரம்பித்தார்.

1955 ஆம் ஆண்டு மாஸ்கோவில் உள்ள ஸ்டாலின் ஆட்டோமொபைல் ஒர்க்ஸ் தொழிற்சாலையில் பயிற்சியாளராக ஓர் ஆண்டு பணி புரிந்தார்.

1956 ஆம் ஆண்டு சீனாவுக்கு திரும்பியவுடன் டைனமிக் மெக்கானிக் பிரிவின் துணைத் தலைவராகவும், டைனமிக் மெக்கானிக் பிரிவின் துணை தலைமை பொறியாளராகவும், முதன் முதலாக கட்டமைக்கப்பட்ட ஆட்டோமொட்டிவ் ஒர்க்ஸ் மின் தொழிற்சாலையில் இயக்குனராகவும் பொறுப்பேற்று சீனாவின் தொழிற்சாலை வளர்ச்சியில், தொழில் நுட்ப வளர்ச்சியின் அடித்தளமாக செயல்பட்டார்.

1962 ஆம் ஆண்டில் ஷாங்காய் எலக்ட்ரிக்கல் எப்பேர்ட்டஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ன் துணை இயக்குனராக பணியாற்றினார். இயந்திர கட்டுமான தொழில் துறையின் அமைச்சகத்தின் கீழ் இயந்திர கட்டுமான ஆராய்ச்சி பணிகளுக்கு பொறுப்பேற்று புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி காட்டினார்.

1966 ஆம் ஆண்டு அவர் வுவன் இட் பவர் மெஷினரி இன்ஸ்டியூட்டின் இயக்குனராகவும், அந்த பகுதி கட்சியின் செயலாளராகவும் பணி புரிந்தார். அணு மின் உற்பத்தி சாதனங்களை வடிவமைப்பதற்கான ஏற்பாடுகளை திறம்பட செய்து முடித்தார் ஜியாங் ஜெமின்.

1966 ஆம் ஆண்டு கலாச்சார புரட்சியை சீனாவின் துவக்கப்பட்ட பொழுது அவரும் பாதிப்புக்கு உள்ளானார். பல தொழில்நுட்ப அதிகாரிகளை போல் ஜியாங் ஜெமின் 1966 ஆம் ஆண்டு கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு விவசாய தொழிலாளியாக பல ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அவரது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டது

1970 ஆம் ஆண்டு இயந்திர கட்டுமான தொழில்துறையின் அமைச்சகத்தின் கீழ் பணியாற்றினார். 1971 இல் இந்த அமைச்சகத்தால் ருமானியாவுக்கு அனுப்பப்பட்ட நிபுணர் குழுவின் தலைவராக பொறுப்பேற்று பெரும் பங்கு வகித்தார்.
1973-ல் சீனாவுக்கு திரும்பிய பிறகு பல அமைப்புகளில் துணை இயக்குனராகவும், இயக்குனராகவும் இருந்து தொழில் முன்னேற்றத்தில் பெரும்பாக்காற்றினார்.

1980 ஆம் ஆண்டில் அவர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விவகாரங்களுக்கான மாநில நிர்வாக ஆணையம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கான மாநில நிர்வாக ஆணையத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று வணிக மேம்பாட்டில் முக்கிய பங்காற்றினார். சீனத் தலைமையின் வெளிநாட்டு முகமாக செயல்பட்டார்.

இதே காலங்களில் குவாங் டேங்க், புஜியன் மாகாணங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி அவற்றை வெற்றிகரமாக இயக்கியதும், புதிய பல முன்னோடி திட்டங்களை பொறுப்பேற்று அமுலாக்குவதற்கு காரணமாக இருந்தார்.

1982 ஆம் ஆண்டில் மின்னணு தொழில்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சராகவும் 1983ல் அமைச்சராகவும் பணியாற்றினார். சீனாவின் மின் அணுவியல் துறையில் ஜியாங் ஜெமின் குறிப்பிடத்தக்க பங்காற்றினார் என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டும்.

1982ல் 12 வது சீன கட்சி காங்கிரஸில் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1985 இல் ஷாங்காய் மேயராகவும், நகராட்சி குழுவின் துணைச் செயலாளராகவும் பணியாற்றினார். 1987 ஆம் ஆண்டில் 13 வது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸில் மத்திய தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷாங்காய் மாநிலத்தின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஷாங்காய் நகரின் மேயராக மற்றும் கட்சியில் செயலாளராக பணியாற்றிய போது பல நடவடிக்கை இறங்கி தொழிலாளர்களையும் பொது மக்களையும் வெகு ஜனங்களையும் அணி திரட்டி மன உறுதி ஏற்படுத்தி முன்னேற்றத்தை உருவாக்கினார். நகர்மயம் முறைகளை ஒழுங்குபடுத்தி நகரங்களை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு சிறந்த பங்கினை ஜியாங் ஜெமின் செலுத்தினார்.

ஷாங்காய் பெருநகரத்தின் சீர்திருத்தம், திறந்தவெளி கொள்கை, சோசலிசத்தின் நவீனமய கட்டமைப்பு ஆகியவற்றை குறிப்பிடத்தக்க முறையில் நிறைவேற்றிகாட்டினார். கட்சியை கட்டமைப்பதிலும், கலாச்சார நெறிமுறைகளை முன்னேற்றம் ஏற்படுத்துவதிலும், சமூக மேம்பாடுகளை உருவாக்குவதிலும், முக்கியமான தீவிர பங்காற்றினார் தோழர் ஜியாங் ஜெமின் செய்து முடித்தார்.

1989 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் பிற்பகுதியிலும், கோடையின் தொடக்கத்திலும் சீனாவில் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டது. கொந்தளிப்புக்கு எதிரான தெளிவான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்து சீனாவின் சோசலிச அரசு அதிகாரத்தை பாதுகாப்பது என்ற நிலையை ஷாங்காயில் திறம்பட அமல்படுத்தினார். மக்களையும் பணியாளர்களையும் இணைத்து ஸ்ரத்தன்மையை நிலைநாட்டினார்.

1989 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருக்கக்கூடிய மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1990 ஆம் ஆண்டு மக்கள் சீன குடியரசின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980 களின் பிற்பகுதியிலும் 1990 இல் முற்பகுதிகளும் சர்வதேச அரங்கிலும் சீனாவிலும் அரசியல் குழப்பங்கள் பெருமளவில் வெடித்தது. உலக சோசலிசம் கடுமையான நெருக்கடிகளை மோசமான முறையில் சந்தித்தது. சீனாவின் சோசலிச நோக்கத்தின் வளர்ச்சி முன்னெப்பொழுதும் இல்லாத சிரமங்களையும், அழுத்தங்களையும் எதிர்கொண்டது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜியாங் ஜெமின் அவர்களின் உறுதித் தன்மை பெரும் பங்காற்றியது.

ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி சீனாவை பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் கொண்டு வரும் பணியை வெற்றிகரமாக முடித்தார்.

2008 ஆம் ஆண்டு சீனாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து அந்த போட்டி இதுவரை உலகில் நடைபெறாத அளவிற்கு பிரமாண்டமான முறையில் நடத்திக் காட்டுவதற்கான உந்து சக்தியாகவும் ஜியாங் ஜெமின் இருந்தார்.

கட்சியின் தலைவிதியையும் அரசின் எதிர்காலம் பற்றிய தலைவிதியையும் தீர்மானிக்கக்கூடிய இந்த முக்கியமான வரலாற்று தருணத்தில் ஜியாங் ஜெமின் கட்சியின் மத்திய கூட்டுதலைமைக்கு பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டு செயலாற்றி நெருக்கடிகளை எதிர் கொண்டார்.

அவர் கட்சி, ராணுவம் மற்றும் சீன மக்களை முழுமையாக நம்பி களத்தில் இறங்கினார். சீன குணாதிசயங்களுடன் சோசலிசத்தின் தன்மையை பாதுகாத்து, சீர்திருத்தம் மற்றும் திறந்தவெளி கொள்கை,சோசலிச நவீன மயமாக்கல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதற்காக அடித்தளத்தை நெருக்கடியான நேரத்திலும் செயல்படுத்தி வெற்றிகண்டார்.

வேலைவாய்ப்பு மறு கட்டமைப்பு செய்தது, வருமான பகுதி சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது, சோசலிசத்தின் முதற்கட்டத்திற்கான அடிப்படை பொருளாதார அமைப்பை நிறுவியது, பொது சொத்துக்களை அதிகப்படுத்த திட்டமிட்டது போன்ற பெரும் பணிகளுக்கு காரணமாக திகழ்ந்தார்.

சட்ட அடிப்படையிலான நிர்வாகத்தின் முறைகளை நடைமுறைப்படுத்தினார். டெங் சியோ பிங்க் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு இரண்டு அமைப்புகள் என்ற கொள்கையை
ஜியாங் ஜெமின் அமுல்படுத்தும் பணியை நடத்திக் காட்டினார். ஹாங்காங் , மக்காவு பகுதிகளை சுமூகமான முறையில் சீனாவுடன் இணைத்து மீள் வாழ்வை உருவாக்கினார். சுதந்திரமான அமைதி கொள்கையை உருவாக்கி சீனாவின் ராஜதந்திரத்தில் புதிய தளத்தை அமைத்தார்.

ராணுவத்தை நவீன மயமாக்குவதும், அமைதி காலத்திலும், போர்க்காலத்திலும் ராணுவ செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று உத்திகளை வலியுறுத்தி செயல்பட்டார். ராணுவத்தை குடிமக்கள் ஆதரவுடன் தேசிய பாதுகாப்பில் அணி திரட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கு உறவு, ராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உயிரோட்டமான, மிகவும் ஆழமான முறையில் ஒத்துழைப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று முன்னிலைப்படுத்தி செயல்பட்டார்.

மார்க்சிய சிந்தனை கொள்கையை கடைசி வரை உறுதியாக பின்பற்றி வந்தார். கட்சியின் அடிப்படை கோட்பாடுகளை அவர் நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். முழு கட்சியின் ஞானத்தையும் ஒருங்கிணைத்தார்.

16வது கட்சி காங்கிரஸில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்த பொழுது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மட்டும் விலகினார். சிக்கலான நிலையில் சர்வதேச நிலமை இருந்த பொழுது, தேசிய வளர்ச்சி மற்றும் ராணுவ வளர்ச்சியை எதிர்கொள்ளும் கடுமையான பணிகளை கணக்கெடுத்துக்கொண்டு அவரை மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொண்ட அடிப்படையில் நீடித்தார்.

2004 ஆம் ஆண்டு ராணுவ தலைமை ஆணையராக இருந்தும் விலகினார்.

பொறுப்பிலிருந்து விலகிய பிறகும் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுகளை அமலாக்குவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். உடல்நிலை ஒத்துழைக்கிற வரை அவரது களப்பணிகள் நீடித்தது. கம்யூனிஸ்டுகளின் தலைமை பணி மேஸ்திரித்தனமான பணிகள் அல்ல கடும் எதிர்ப்புகளை களத்தில் எதிர்கொண்டு மக்களை அழைத்துச் செல்வதற்கான பணி என்பதற்கு தோழர். ஜியாங் ஜெமின் உலகின் சிறந்த உதாரணமாக நம்முன் காட்சியளிக்கிறார்.

– அ.பாக்கியம்.

குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியுமான ராம்நாத் கோவிந்துக்கு எழுதப்பட்ட வெளிப்படையான கடிதம் – தமிழில்: தா.சந்திரகுரு

குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியுமான ராம்நாத் கோவிந்துக்கு எழுதப்பட்ட வெளிப்படையான கடிதம் – தமிழில்: தா.சந்திரகுரு

  2021 ஜனவரி 29 ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் இந்திய குடியரசுத் தலைவர், ராணுவ தலைமைத் தளபதி ராஷ்டிரபதி பவன் புது தில்லி 110001. அன்புள்ள குடியரசுத் தலைவரும், தலைமைத் தளபதியுமான ஸ்ரீ கோவிந்த் ஜி, மூன்று நாட்களுக்கு முன்னர் குடியரசு…