Saguavarathan Poems. சகுவரதன் கவிதைகள்

சகுவரதன் கவிதைகள்




பின் புத்தி
=========
தலைப்பைப் பற்றி
தலையை
சொரிந்துகொண்டிருக்கையில்
கவிதை வரிகளில்
அலைந்துகொண்டிருந்த
எறும்பு
சுருக்கென கடித்துவிட்டது.
நசுக்கிய பிறகுதான்
யோசித்தேன்.
என்ன சொல்ல வந்திருக்கும் ?

கார்ப்பரேட்
=========
விலை அதிகமென்று
வேண்டாமென
உதறி நடந்தேன்.
வாங்கச் சொல்லி
நச்சரித்தபடியே
வருகிறது
மல்லி வாசனை.

ஆறுவது சினம்
=============
உரோமங்கள் சிலிர்ப்பதை
நன்கு உணர்கிறேன்.
உதடுகள் துடிக்க
குத்தீட்டியாய்
நிற்கிறது மீசை.
சிவந்த கண்களுடன்
நறநறவென
பற்களைக் கடிக்கிறேன்.
ஆயினுமென்ன…
நிரப்பிய பெட்ரோலுக்கான
விலையை
புன்முறுவலுடன்தான்
கொடுக்கிறேன்.

கௌரவம்
=========
பசிக்கிறதா என்றேன்.
இல்லை.
இப்போதுதான்
தின்று முடித்தேன்
பசியை
என்றான்.

மெய் பிம்பம்
=============
மிஸ்ஸைப்போலவே
அபிநயம் பிடிக்கிறாள்
சிறுமி.
பார்க்கப் பயந்து
கண்ணை
மூடிக் கொண்டது
கண்ணாடி.