இந்தியாவில் 1960களிலே பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால் சீர்திருத்தங்கள் முழு வீச்சில் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்திரா காந்தி பிரதமரானதும் தொழில் தொடங்க உரிமம் பெறும் கட்டுப்பாடுகளையும், தொழில் முற்றுரிமை கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். அடுத்து பிரதமராகப் பதவி வகித்த ராஜீவ் காந்தி தொழில் துறையின் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது, செலாவணி மாற்றில் இணக்கத் தன்மை, இறக்குமதி மீதான பகுதி அளவில் கட்டுப்பாடுகளை நீக்கியது எனப் பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. போபர்ஸ் உழல் பிரச்சனை எழுந்ததன் காரணமாக ராஜீவ் காந்தியின் சீர்திருத்தங்ளுக்குப் போதுமான சாதகமான சூழல் காணப்படவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் நிலையற்ற அரசியல் மற்றும் குழப்ப நிலையினால் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இவருடைய காலகட்டங்களில் முன்பு எப்போதும் கண்டிராத அளவிற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் வற்றிய நிலையிலிருந்தது. இதனை எதிர்கொள்ள அடுத்துப் பிரதமராகப் பதவி ஏற்ற நரசிம்ம ராவ் பல்வேறு பொருளாதார சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டார். சீனா, 33 ஆண்டுகளுக்கு முன்பு (1978ல்) பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. சோவியத் யூனியன் 1980களின் மத்தியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. ஆனால் இந்தியா இச்சீர்திருத்தங்களை மேற்கொள்ள காலதாமதமானது. மேற்கண்ட நாடுகள் போன்ற அரசியல் முறையை இந்தியா பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேருவின் சோசியலிச சித்தாந்த முறையை இந்தியா நீண்டகாலமாகப் பின்பற்றி வந்தது. ஒரு நிலையில் உலக நாடுகள் பலவும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை பின்பற்றத் தொடங்கியது. எனவே இந்தியா இந்த முறைக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகியது. இந்தியா சுதந்திரம் அடைந்து 44 ஆண்டுகள் கடந்த நிலையில் சந்தைச் சீர்திருத்தங்கள் 1991ல் நடைமுறை படுத்தப்பட்டது.
மே 1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இத் தேர்தலில் காங்கிரஸ் 232 இடங்களில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நரசிம்ம ராவ் ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரையில் பிரதம மந்திரியாக பதவியிலிருந்தார். நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றபோது இந்தியாவின் வெளிநாட்டு கடன் அரசுக்கு பெரும் சுமையாக இருந்தது. இந்தியாவின் கடன் 1991ல் 70 பில்லியன் டாலராக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு அடுத்து வந்த இருவாரங்களுக்கே போதுமானதாக இருந்தது. இதைத் தவிற்று வளைகுடா போரினால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்ததால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு உயர்ந்தது. பணவீக்கம் மிகவும் அதிக அளவிலிருந்தது. இந்தியாவில் நிலையற்ற அரசு நடைபெற்றதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வைப்புக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள தொடங்கினர். இது மேலும் சிக்கலை உருவாக்கியது. எனவே இந்த நிலையினை எதிர்கொள்ள அனுபவம் மிக்கப் பொருளியல் அறிஞரான மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்த இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது (அரசியல் ரீதியான சவால்களை நரசிம்ம ராவ் எதிர்கொண்டார்). இதன் அடிப்படையில் அதிக வெளிப்படைத்தன்மையும், குறைவான பொருளாதாரக் கட்டுப்பாடும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை மன்மோகன் சிங் முன்னெடுத்தார். முதல் முயற்சியாக இரு முறை பண மதிப்பு குறைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி முக்கிய வெளிநாட்டுச் செலாவணியுடன் இந்தியப் பணத்தின் மதிப்பை 9 விழுக்காடு குறைப்பினை ஜூலை 1, 1991அன்றும், மேலும் 11 விழுக்காடு மதிப்புக்கு குறைப்பினை ஜூலை 3, 1991அன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக இந்தியாவின் ஏற்றுமதியினை அதிகரிப்பதாக இருந்தது. ஜூலை 4-18, 1991ல் நான்கு கட்டங்களாக இந்தியா, இங்கிலாந்து வங்கியில் தங்கத்தை அடைமானம் வைத்து 400 மில்லியன் டாலர் கடன் பெற்றது. இதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய வர்த்தக கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி உரிமம் பெறும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. தேவையற்ற பொருட்கள் இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்க பணமதிப்பினைக் குறைத்தது மட்டுமல்லாமல் மானியமும் வழங்கப்பட்டது. இறக்குமதிக்கான ஒதுக்கீட்டு அளவு (quotas) விலக்கிக்கொள்ளப்பட்டது, சுங்க வரி குறைக்கப்பட்டு ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டது, அந்நிய நேரடி முதலீடு வரவேற்கப்பட்டது. இதன்படி 51 விழுக்காடுவரை தங்குதடையற்ற முதலீட்டிற்கான ஒப்புதலுக்கு வழி வகுத்தது. இதுபோன்று உள்நாட்டில் உரிமம் பெறும் நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுத்துறை விரிவாக்கம் ஊக்குவிக்கப்படவில்லை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விழுக்காடு அளவிற்கு நிதிப் பற்றாக்குறையாக இருந்தது இதனைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிறுவன வரியை 45 விழுக்காடு அதிகரித்தது. சமையல் எரிவாயு உருளை, உரம், பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது, சர்க்கரைக்கு அளிக்கப்பட்ட மானியம் விலக்கிக் கொள்ளப்பட்டது (Ramya Nair 2021).
1991 ஜூலை புதிய தொழிற் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி தொழில் உரிமம் பெறும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் சில குறிப்பிட்ட தொழில்களுக்கு விதிவிலக்கு இருந்தது. முற்றுரிமை வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறை சட்டத்தில் தளர்வு அளிக்கப்பட்டது. பொதுத்துறை முற்றுரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது போல் தனியார்த் துறை முற்றுரிமைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது (Ramya Nair 2021). 1991வது தொழிற் கொள்கையானது இந்தியாவில் எளிமையாக வாணிபம் செய்ய வழிவகை செய்தது. பணித்துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. காப்பீட்டுத் துறை, வங்கி, தகவல் தொடர்பு, வான்வழிப் போக்குவரத்து, போன்றவை மீது தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டது. அதே சமயம் தொழிலாளர்ச் சட்டங்கள் வளைந்து கொடுக்கும் நிலை உருவானது. அரசியல் ரீதியாகப் புதியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குக்கா கட்சிக்கு உள்ளேயும், வெளியிலும் கடுமையான எதிர்ப்பு உருவானது. ஆனால் இவற்றைத் திறமையாக நரசிம்ம ராவ் எதிர்கொண்டார். சுருக்கமாகக் குறிப்பிட்டால் இந்து வளர்ச்சி வீதம் (3.5 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள பொருளாதார வளர்ச்சி) என்ற நிலையினை 1950களிலிருந்து – 1970கள் வரை காணப்பட்டது. இதனை மீட்டெடுக்க 1980களில் வர்த்தக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டது. 1990களில் சந்தைச் சார்பான சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் 2000ஆம் ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது (Ramachandra Guha 2017).
அட்டவணை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு)
ஆண்டு
மொத்த உள்நாட்டு உற்பத்தி
தாலாவருமனாம்
1972-1982
3.5
1.2
1982-1992
5.2
3.0
1992-2002
6.0
3.9
Source: Ramachandra Guha (2017): “India After Gandhi,” Macmillan, New Delhi.
1991ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது நிதி அமைச்சரான மன்மோகன் சிங் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். இதற்கான முக்கியக் காரணம் சோவியத் ஒன்றியதில் மிக்கைல் கோர்பச்சோவ் கொண்டுவந்த பெரெஸ்த்ரோயிக்கா என்ற மறுசீரமைப்பு கொள்கையினைப் பின்பற்றி இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தில் 1991ன் படி 80 விழுக்காடு தேசிய உற்பத்தியில் தனியாரிடமிருந்து பெறப்படுகிறது ஆனால் இது சோவியத் ரஷ்யாவில் காணப்படவில்லை. எனவே இந்தியா தனி அடையாளக் கொள்கையினை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நிய முதலீடுகள் தேவைப்பட்டது எனவே இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இந்தியாவில் பெரும் தொழில் நிறுவனங்களை ஒழுங்கு படுத்த MRTP சட்டம் 1969ல் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான அனுமதி பெறுவது நீக்கப்பட்டது. இந்தியா உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் நுழைவதற்காக சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்பட்டது, நடப்பு கணக்கு பரிமாற்றம், வர்த்தக நிலையினைத் தீர்மானிக்க சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. அந்நிய நேரடி முதலீடு, போர்ட்ஃபோலியோ முதலீடுகள் வருவதற்கு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன. சந்தை அடிப்படையில் செலாவணி மாற்று செயல்படுத்தப்பட்டது, வர்த்தகம் தாராளமயமாக்கப்பட்டது, தொழிற்சாலைகளுக்கு தேவையானதைத் தடையற்ற முறையில் இறக்குமதி செய்துகொள்ளுதல், தொழில் உரிமம் ரத்து செய்தல், பொதுத் துறையில் சீர்திருத்தம், மூலதனச் சந்தை மற்றும் நிதித் துறையில் சீர்திருத்தம், பன்னாட்டு நிறுவனம் மற்றும் அந்நிய முதலீடு பெறுவதிலிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் ஒட்டுமொத்த நோக்கம் இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுப்பதாகும்.
பொருளாதாரம் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் விதிவிலக்காக ரயில்வே, துறைமுகம், பாதுகாப்பு மற்றும் அணு ஆற்றல் இருந்தது. நுகர்வோர்களுக்குச் சாத்தியப்படக்கூடிய நன்மைகள் கிடைக்கச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டு சீர்திருத்தமானது உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க முற்றிலுமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பகுதியாக அந்நியச் செலாவணி பொதுச் சந்தையில் மாற்றிக்கொள்ள வழிவகுத்தது. லாபம் தரும் மூலதன வரவு கட்டுப்படுத்தப்பட்டது. அதேசமயம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை. உலக வர்த்தக அமைப்பின் கீழ் வந்த நடைமுறையில் வர்த்தக அளவு கட்டுப்பாட்டு முறை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்தியா உலக அளவிலான தாராளப் பொருளாதார மயமாக்கலின் கொள்கையின் ஒரு பகுதியாகச் செயல்பட்டது. இதன் விளைவு இந்தியா மிகவும் திறனுடன் வேகமான வளர்ச்சியினை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு, இந்திய பொருளாதாரம் விரைவாக மீண்டெழுந்தது. 1991-92ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.8 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது 1992-93ல் 5.5 விழுக்காடு வளர்ச்சியினை எட்டியது, 1993-94ல் 6.2 விழுக்காடு என மேலும் அதிகரித்தது. எட்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியினை கண்டது. முதலீடு, தொழில் துறை, வேளாண்மை, பணித்துறை போன்றவை வளர்ச்சிப் பாதையில் சென்றது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97களுக்கிடையே ஆண்டுக்குச் சராசரியாக 3 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது. ஆனால் இது தொழில் மற்றும் பணித் துறையினை ஒப்பிடும் போது குறைவான அளவிற்கே பதிவாகியிருந்தது. 1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே நேரடி அந்நியச் செலாவணி முதலீடானது 100 விழுக்காடு அதிகரித்திருந்தது. 1992-93க்கு முன்பு இந்தியாவின் சில பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாகக் கிராமப்புறங்களில் வறுமை அதிகரித்திருந்தது. ஆனால் அடுத்த ஆண்டே வறுமையின் அளவு 6 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்திருந்தது. 1993-1998ஆம் ஆண்டுகளுக்கிடையே சமூகச் செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதனால் வேளாண் கூலியானது 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதே ஆண்டுகளில் இந்தியாவின் வேலைவாய்ப்பானது ஆண்டுக்கு 6.3 மில்லியன் அதிகரித்தது. நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றபோது பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது ஆனால் பணக் கொள்கைகள் மற்றும் நிதி சீர்திருத்தங்களினால் 1996ல் 5 விழுக்காடாக்க குறைக்கப்பட்டது. உணவுப் பொருட்களுக்கான மானியம் 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.14 மில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35 பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் பயிர்செய்யும் நிலங்கள் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது. இதில் 5 மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயனடைந்தனர்.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் 2003-04 முதல் 2008-09 முடிய இந்தியா இதுவரைக் கண்டிராத வளர்ச்சியினை எட்டியது (10 விழுக்காடு). சேவைத்துறையானது மற்றத் துறைகளைக் காட்டிலும் அபரீதமான வளர்ச்சியினைக் கண்டது. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிற் கொள்கையானது சேவைத்துறையினை வேகமான வளர்ச்சியினை எட்டுவதற்கு உதவியது. 2008க்கு பின்பு உற்பத்தித் துறையின் வளர்ச்சி மிகவும் குறைவான அளவிலிருந்தது. வேளாண்மைத் துறையினை பொருத்தமட்டில் ஏற்றத்தாழ்வுடனான வளர்ச்சி பதிவாகியிருந்தது. உணவு உறுதியானது மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உணவு கையிருப்பு குறைந்திருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையானது சேவை மற்றும் தொழிற் துறைகளுக்குச் சாதகமாகவும் வேளாண்மைத் துறைக்கு எதிராகவும் இருந்தது. அதே சமயம் வர்த்தக, தொழிற்கொள்கைகளின் சீர்திருத்தத்தினால் வர்த்தக நிலை மேம்படுத்துவதாகவும், இது வேளாண்மையினை நோக்கியதாக இருந்தது. இதனால் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையினை இந்தியா தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நிலைகளில் பெருமளவிற்கு நன்மைகளை உண்டாக்கியிருந்தது. இதன் விளைவு வேளாண் வளர்ச்சியானது 1991லிருந்து சீரற்ற போக்கு காணப்படுகிறது. சராசரி உற்பத்தியானது மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இல்லை. உலகளவில் தலா உணவு நுகர்ச்சி அளவினைவிடக் குறைவாக உள்ளது. குடும்பங்களின் சராசரியாக உணவிற்குச் செலவிடுவது உலக அளவில் உள்ள பணக்கார நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகரித்து பணவீக்கத்திற்கான காரணமாக உருவெடுத்தது. இது ஏழை மக்கள் அதிகமாக பாதிப்பிற்கு உண்டாக்கியது. தற்போது வருமையினைக் கணக்கிடுவதில் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உணவு மட்டுமல்லாமல் சமூகக் காரணிகளும் (கல்வி, சுகாதாரம்) கணக்கில் கொண்டு வறுமையினை அன்மைக் காலமாக அளவிடப்படுகிறது. இதனைக்கொண்டு பார்க்கும்போது, வறுமையில் வாழ்ந்தவர்கள் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பெரும் ஏற்றத் தாழ்வுடன் உள்ளது என்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்துகிறன. பொருளாதாரச் சீர்திருத்தங்களினால் சமுதாயத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே பயன் பெற்றுள்ளனர். அதேசமயம், மக்களிடையே பெரும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகிறது (Thomas Piketty). சில பொருளியல் அறிஞர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு 1991லிருந்து வறுமையானது அதிக அளவில் குறையத் தொடங்கியது என்று குறிப்பிடுகின்றனர்.
‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ – பிரதமரின் பிரச்சாரம் நமக்கு விடும் எச்சரிக்கை பிருந்தா காரத்
இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவின் போது, நமது சுதந்திரத்தை சாத்தியமாக்கித் தந்துள்ள பெண்கள், ஆண்கள் என்று ஏராளமான தியாகிகளுக்கு எண்ணற்ற குடும்பங்கள் மூவர்ணக் கொடியைத் தங்களுடைய வீடுகளில் பறக்க விட்டு மரியாதை செலுத்தப் போகின்றன. ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற அந்த அறிவிப்பு வெற்றுமுழக்கம் அல்லது சடங்கு என்பதற்கு அப்பாற்பட்டுச் செல்வதற்கு நம்முடைய வரலாறு, நமக்கான சுதந்திரத்தை வென்றெடுப்பதில் எவையெல்லாம் முக்கியமானவையாக இருந்தன என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நமது மூவர்ணக் கொடி இந்திய அரசியலமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையது. அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை இறுதி செய்வதற்காக ராஜேந்திரபிரசாத் தலைமையில் பன்னிரண்டு பேர் கொண்ட தற்காலிகக் குழு ஒன்றை 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைத்தது. ‘தேசியக்கொடி குழு’ என்று அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், மௌலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரி, கே.எம்.முன்ஷி, கே.எம்.பணிக்கர், ஃபிராங்க் அந்தோணி, பட்டாபி சீதாராமையா, ஹீராலால் சாஸ்திரி, பல்தேவ் சிங், சத்யநாராயண் சின்ஹா, எஸ்.என்.குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். ஏற்கனவே இருந்த மூவர்ணக் கொடியை சர்க்காவிற்குப் பதிலாக அசோக சக்கரம் என்ற முக்கியமான மாற்றத்துடன் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்வது என்று அந்தக் குழுவின் உறுப்பினர்கள் முன்மொழிவார்கள் என்பது நன்கு அறிந்த ஒன்றாகவே இருந்தது.
காங்கிரஸ் கட்சி மூவர்ணக் கொடியை முதன்முதலாக 1931ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழியாக ஏற்றுக் கொண்டிருந்தது. நடைமுறையில் அந்தக் கொடி காங்கிரஸ் கட்சியையும் தாண்டி இந்திய சுதந்திரப் போரில் அனைவருக்குமான முக்கியப் பதாகையாக மாறியது. அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் அந்தக் கொடியை சுதந்திர இந்தியாவிற்கான தியாகத்தின் சின்னம் என்று குறிப்பிட்டே பேசினர். அந்த விவாதத்தில் கலந்து கொண்ட எச்.கே.காண்டேகர் ‘அடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகளை இழந்த எத்தனையோ பேர் சுதந்திரத்திற்காக தங்களுடைய உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். ஆங்கிலேயப் பேரரசு அந்தக் கொடியை அழிப்பதற்கென்று தன்னுடைய ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தியது. ஆயினும் நாம் தொடர்ந்து அதனைப் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறோம்’ என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
இந்திய சுதந்திரப் போரட்டத்தில் மூவர்ணக் கொடி தவிர்த்து பிற கொடிகளும் குறிப்பிடத்தக்க வகையில் இடம் பெற்றிருந்தன. எடுத்துக்காட்டாக ஆங்கிலேயப் பேரரசிற்கு எதிராக நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்டங்களில் போராட்டம், தியாகம் ஆகியவற்றின் அடையாளம் என்று தாங்கள் கருதிய செங்கொடியை கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளும், அவர்களுக்கான ஆதரவை வழங்கி வந்தவர்களும் தங்களுடைய கரங்களில் ஏந்திச் சென்றனர். அந்தச் செங்கொடி சென்னையில் 1923ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர் பேரணியில் முதன்முதலாக ஏற்றப்பட்டது. பின்னர் அது நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் சென்று சேர்ந்தது.
ஆதிவாசிகள் பலரும் தங்கள் சொந்தக் கொடிகளை ஏந்தியே ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து கிளர்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டிருந்தனர். ஆதிவாசிகளின் குரல்களில் ஒன்றாக அரசியல் நிர்ணய சபையில் இருந்த ஜெய்பால் சிங் முண்டா ‘ஒவ்வொரு (ஆதிவாசி) கிராமத்திற்கும் அதற்கென்று சொந்தக் கொடி உள்ளது. வேறு எந்த பழங்குடியினராலும் மற்றவரின் கொடியை நகலெடுத்து வைத்துக் கொள்ள முடியாது. ஒருவரின் கொடியை யாராவது எதிர்க்கத் துணிவார்கள் என்றால் தங்களுடைய கொடியின் மாண்பைக் காப்பதற்காக குறிப்பிட்ட பழங்குடியினர் தங்களுடைய கடைசி சொட்டு ரத்தம் வரை சிந்திப் போராடுவார்கள் என்பதை உங்களிடம் உறுதியளித்துக் கூறுகிறேன். இனிமேல் அந்தக் கிராமங்கள் அனைத்திலும் இரண்டு கொடிகள் இருக்கப் போகின்றன. எங்களிடம் கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாக ஒரு கொடி இருந்து வருகிறது. இனிமேல் இந்த தேசியக் கொடி மற்றொரு கொடியாக, நமது சுதந்திரத்தின் குறியீடாக எங்களிடம் இருக்கும்…’ என்று உரையாற்றினார். மூவர்ணக் கொடி தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு இன்றளவிலும் தேசிய இயக்கத்தின் போது காணப்பட்ட வேறு பல கொடிகளும் உயிர்ப்புடனே இருந்து வருகின்றன. அநீதிக்கு எதிரான போராட்டங்களில் பெருமைக்குரிய அடையாளமாக செங்கொடி தொடர்ந்து இருந்து வருகின்றது.
தேசியக் கொடியின் நிறங்கள் எந்தவொரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாமல் மூவர்ணக் கொடி மதச்சார்பற்ற கொடியாகவே இருந்தது. தேசியக் கொடிக்கான தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய ஜவஹர்லால் நேரு ‘கொடியின் முக்கியத்துவத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ள சிலர் அது வகுப்புவாத அடிப்படையில் இருக்கிறது என்று கருதி வருகின்றனர். அவர்கள் கொடியின் இந்தப் பகுதி இந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அந்தப் பகுதி அந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றே நம்புகிறார்கள். ஆனால் முதன்முதலாக கொடி வடிவமைக்கப்பட்ட போதே நிறங்களுக்கென்று எந்தவொரு வகுப்புவாத முக்கியத்துவமும் தரப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்றார். மற்றொரு உறுப்பினரான ஷிபன் லால் சக்சேனா ‘அந்த மூன்று நிறங்களுக்கென்று வகுப்புவாதம் சார்ந்த தனித்த முக்கியத்துவம் எதுவுமில்லை என்பதை தெளிவான வார்த்தைகளில் நாங்கள் அறிவித்திருக்கிறோம். அந்தக் கொடியை வகுப்புவாதக் கொடி என்று இன்றைக்கு வகுப்புவாத வெறி பிடித்து அலைபவர்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை’ என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் கொடியில் உள்ள காவி நிறம் தியாகம், துறத்தல் போன்றவற்றை குறிப்பிடுகிறது என்றும் இயற்கையுடனான நெருக்கத்தை பச்சை நிறமும், அமைதி, வன்முறையற்ற செயல்களை வெள்ளை நிறமும் குறிப்பிடுகிறது என்றும் கொடியின் நிறங்களுக்கான பொருள் குறித்து ஆக்கப்பூர்வமான விளக்கங்கள் தரப்பட்டன. உறுப்பினர்கள் அனைவருமே அந்தக் கொடி வகுப்புவாதம் கொண்டதாக இல்லை என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ‘எப்போதும் விழித்திருந்து, இயங்கி, முன்னேறுங்கள். கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், முஸ்லீம்கள், ஹிந்துக்கள், பௌத்தர்கள் என்று அனைவரும் தங்களுக்கான பாதுகாப்பான இடத்தைப் பெறும் வகையிலான சுதந்திரமான, நெகிழ்வான இரக்கமுள்ள, கண்ணியமான, ஜனநாயக சமுதாயத்திற்காக உழையுங்கள் என்றே நம்மிடம் இந்தக் கொடி கூறுகிறது’ என்று தன்னுடைய விளக்கத்தில் கூறினார்.
அந்த விவாதத்தின் மூன்றாவது அம்சம் சமூக நீதி மற்றும் ஒடுக்குமுறை, பசியிலிருந்து விடுதலை தொடர்பாக அமைந்திருந்தது. சுதந்திரத்தின் அடையாளம் என்று கொடியை விவரித்த நேரு ‘நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பட்டினி, பசியுடன் உடுக்க ஆடையின்றி இருப்பது உள்ளிட்ட வாழ்க்கைத் தேவைகள், வளர்ச்சிக்கான வாய்ப்பின்மை போன்றவற்றுடன் இருக்கும் வரையிலும் முழுமையான சுதந்திரம் என்ற ஒன்று இருக்கப் போவதில்லை’ என்றார். அந்தக் கருத்தே மற்ற பலரின் உரைகளிலும் எதிரொலித்தது. உணர்ச்சிவசப்படாத மிகவும் நிதானமான சிந்தனையில் – எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகின்ற ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற பிரச்சாரம் வீடற்றவர்கள், நிலமற்றவர்கள், சொற்ப வருமானம் உடையவர்கள் என்ற காரணத்திற்காக கோடிக்கணக்கான குடும்பங்களை ஒதுக்கி வைக்கும் என்றே தோன்றுகிறது. அரசியல் நிர்ணயசபை வெளிப்படுத்திய உணர்வுகளைப் பொய்யாக்குகின்ற வகையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ள தீவிரமான முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தேவைப்படுவதாக உள்ளது.
அரசியல் நிர்ணயசபை 1947 ஜூலை 22 அன்று மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொண்ட போது நடைபெற்ற விவாதங்களில் நாட்டின் சுதந்திரத்திற்கான தியாகம், அதை அடைவதற்கான ஒற்றுமை, சமூக மற்றும் பொருளாதார நீதி போன்ற அம்சங்களே இடம் பெற்றிருந்தன. மூவர்ணக்கொடியை ஏற்றுக் கொண்டிராத ஆர்எஸ்எஸ் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் அமைப்பும் அந்த சமயத்தில் இருந்தது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகை ‘விதியின் வசத்தால் ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் நம்முடைய கைகளில் இந்த மூவர்ணக் கொடியைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்துக்கள் ஒருபோதும் அந்தக் கொடியை மதிக்க மாட்டார்கள், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘மூன்று’ என்ற வார்த்தை தீமையைக் குறிப்பதாகவே உள்ளது. மூன்று நிறங்களுடன் உள்ள இந்தக் கொடி நிச்சயமாக மிகவும் மோசமான உளவியல் விளைவுகளை உருவாக்கி, நாட்டிற்குத் தீங்கையே விளைவிக்கும்’ என்று 1947ஆம் ஆண்டில் எழுதியிருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனக் கொடியாக இருந்த காவிக் கொடியே இந்திய தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்சிடம் இருந்த விருப்பம், மனுஸ்மிருதியின் அடிப்படையிலேயே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பிடம் இருந்த விருப்பத்தைப் போலவே இருந்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட இரண்டே நாட்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பிறகு அந்தத் தடையை நீக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட பல நிபந்தனைகளுக்குள் தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கும் இடமிருந்தது. அப்போது உள்துறைச்செயலராக இருந்த எச்.வி.ஆர்.ஐயங்கார் அது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கருக்கு 1949 மே மாதத்தில் கடிதம் ஒன்றை எழுதினார். ‘அரசின் மீதான விசுவாசத்தில் எந்தவொரு பாகுபாடும் காட்டவில்லை என்று நாட்டைத் திருப்திப்படுத்துவதற்கு தேசியக் கொடியை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வது மிகவும் அவசியம்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய நிலைமையில் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை.
இப்போது அந்த வரலாற்றை தேசத்திற்கு நினைவூட்டுபவர்களைப் பார்த்து ‘பிரச்சனையை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்’ என்று ஆர்எஸ்எஸ் கூறி வருகிறது. அதுபோன்று கூறப்படுகின்ற கருத்து முற்றிலும் தவறானது என்று கூறுவதற்குக்கூட ஆர்எஸ்எஸ் தயாராக இல்லை. ஆர்எஸ்எஸ் தலைவரான கல்லாட்கா பிரபாகர் பட் ‘ஹிந்து சமாஜம் ஒன்றுபட்டால், பகவ த்வஜம் (காவிக் கொடி) தேசியக் கொடியாக மாறும்’ என்று சமீபத்தில் கூறியிருக்கிறார்.
ஒரு தேசமாக இந்தியாவின் அடிப்படையாக இருக்கின்ற சில விழுமியங்களைப் பிரதிபலிக்கின்ற தேசியக்கொடியானது ஆர்.எஸ்.எஸ்சைப் பொறுத்தவரை வெறுக்கப்படுகின்ற ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரப் போராட்டம் குறித்த அந்த விழுமியங்கள் மதச்சார்புகளுக்கு அப்பாற்பட்டு மதச்சார்பற்ற குடியுரிமையுடன் இணைக்கப்பட்டுள்ள தேசபக்திக்குள் வேரூன்றி இருக்கின்றன. அத்தகைய விழுமியங்கள் மீது இன்றைக்கு அதிகாரத்தில் வீற்றிருப்பவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் தங்களுக்கான பங்கை ஆங்கிலேயர்களின் பிரித்தாளுகின்ற கொள்கையை வலுப்படுத்துகின்ற வகையிலே வைத்துக் கொண்டிருந்தவர்கள் நடத்தி வருகின்ற தாக்குதல்களிலிருந்து அவற்றைப் பாதுகாத்து, நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற இயக்கம் இருந்திட வேண்டும். அரசியலமைப்பின் முகப்புரையில், இந்த மதத்தை அல்லது அந்த மதத்தைச் சார்ந்த மக்களாகிய நாங்கள் என்று இடம் பெறாமல் ‘இந்திய மக்களாகிய நாங்கள் (“ஹம் பாரத் கே லோக்) என்பதாக இடம் பெற்றிருக்கின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வார்த்தைகளுக்கு இணையானதாகவே கொடி ஏற்றும் செயல் இருக்க வேண்டும்.
முகமது நபிக்கு எதிரான பேச்சிற்காக நுபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் சற்றே தாமதமாக வந்திருந்தாலும் அவை வரவேற்க வேண்டியதாகவே இருக்கின்றன. நீதிமன்றம் ‘நாடு முழுவதும் உணர்வுகளைத் தூண்டிய விதத்தில்… நாட்டில் நடந்துள்ளவற்றிற்கு இந்தப் பெண்மணி மட்டுமே பொறுப்பு’ என்று வெளிப்படையாக முன்வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் மூலம் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் கருத்துகள் நுபுர் சர்மாவைக் கைது செய்வதற்கான தர்க்கரீதியான நடவடிக்கைகளுக்குக் குறைந்தபட்சம் இப்போதாவது வழிவகுத்துக் கொடுத்திடுமா?
பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கக் கோரி நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவின் மீதுதான் உச்சநீதிமன்றம் அத்தகைய கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. அதன் விளைவாக தன்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. தேசியத் தொலைக்காட்சியில் பேசிய பேச்சுகளுக்குப் பிறகு பல முதல் தகவல் அறிக்கைகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும் அமித்ஷாவின் காவல்துறை முகமது ஜுபைரைக் கைது செய்து துன்புறுத்தியதே தவிர நுபுர் சர்மா மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் துணியவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பாதுகாப்பை நீட்டிப்பதில் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உள்ள துணிச்சலுக்கு எல்லையில்லை என்பதையே அது தெளிவாகக் காட்டியது.
தொலைக்காட்சியில் திருமதி.சர்மா பகிர்ந்து கொண்ட கருத்துகளின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற தில்லி காவல்துறையின் துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆளானது அனைவரும் அறிந்ததே. நுபுர் சர்மா வெளியிட்ட தகவலில் உள்ள உண்மை, வெறுப்புணர்வைத் தூண்டும் தன்மையைச் சரிபார்த்து அம்பலப்படுத்துகின்ற செயலில் ஈடுபட்ட ஜுபைரின் செயல்பாடு உண்மையில் சட்டரீதியான, தர்க்கரீதியான நடவடிக்கையே.
ஹிரிஷிகேஷ் முகர்ஜி தயாரித்த திரைப்படத்தை மேற்கோள் காட்டி ஜுபைர் 2018ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த ட்வீட்டைச் சுட்டிக்காட்டி வழக்குப் பதிவு செய்த காவல்துறை இப்போது அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பழிவாங்கல் நடவடிக்கையை மறைக்க முயன்றிருக்கிறது. ஜுபைரின் ட்வீட்டிற்குப் பிறகு இந்த நான்கு ஆண்டுகளில் யாருடைய ‘மத உணர்வுகளும்’ புண்படுத்தப்பட்டிருக்கவில்லை, எந்தத் தரப்பிலிருந்தும் எந்தவொரு குறையும் அந்த ட்வீட் குறித்து இதுவரையிலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்ற நிலையில், இப்போது அந்தப் பழைய ட்வீட் குறித்து அண்மையில் உருவாக்கப்பட்டிருக்கும் சமூக ஊடக கணக்குகள் புகார் அளித்ததன் பேரிலேயே தில்லி காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கமது ஜுபைர் என்ற பெயரில் கொலை மிரட்டல்கள் உட்பட ட்ரோலிங் தனக்கு செய்யப்பட்டது என்று நுபுர் சர்மா OpIndia என்ற வலதுசாரி செய்தி இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் குற்றம் சாட்டியிருந்தார். சைபர் கிரைம் பிரிவுதான் அவருக்கு வந்ததாகக் கூறப்படுகின்ற கொலை மிரட்டல்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எவரொருவராலும் வன்முறை அச்சுறுத்தல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அத்தகிஅய அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய தொலைக்காட்சியில் தான் பேசிய பேச்சிற்காக பின்னர் மன்னிப்பு கோரிய நுபுர் சர்மாவின் பேச்சையே முகமது ஜுபைர் பகிர்ந்து கொண்டிருந்தார் எனும் போது ஜுபைர் மீது எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? நுபுர் சர்மாவின் அந்த மன்னிப்பு அரை மனதுடன் இருப்பதாகவும், அவர் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இப்போது உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நுபுர் சர்மாவின் பேச்சு அடங்கிய வீடியோ முழுவதையும் பார்த்ததாகக் கூறிய உச்சநீதிமன்றம், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொனியே மிகவும் மோசமாக இருந்தது என்று கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது. அப்படியென்றால் இப்போது நீதிபதிகள் மீதும் கொலை மிரட்டல்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டப்படுமா? நீதிமன்ற அமர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுமா?
ஜுபைர் பெயரைக் குறிப்பிட்டு குற்றம் சாட்டுவதற்கான தளத்தை நுபுர் சர்மாவுக்கு வழங்கிய அதே இணையதளம் வெளிப்படையாக நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு எதிரான மிகவும் ஆபத்தான, வேண்டுமென்றே திசை திருப்பும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளது. அத்தகைய கருத்துக்களை வெளியிட்டிருக்கும் அந்த இணையதளத்தின் தலையங்கத்தில் ‘உச்சநீதிமன்றம் இஸ்லாத்தின் பெயரால் மதவெறியர்கள் செய்த வன்முறை, கொலைகளுக்கு ஒரு பெண்ணைக் குறை கூறுவதுடன் மட்டும் நின்று விடவில்லை’ (உண்மையில் வன்முறை, கொலை, மதவெறியர்கள் அல்லது இஸ்லாம் என்று எந்தவொரு இடத்திலும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கவில்லை). இஸ்லாமியர்களைத் தூண்டுகின்ற வகையில் பேசியது சர்மாவின் தவறு என்று தெளிவுபடுத்தியுள்ள நீதிபதி சூர்யகாந்தின் கருத்தை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறையைப் பழித்து அவதூறாகப் பேசுவதாக தாங்கள் கருதுகின்றவர்களின் தலைகளை வெட்டப் போவதாக வெளிப்படையாக அறிவித்த இஸ்லாமியர்களின் தவறு அல்ல (நீதிமன்றத்தில் பேசப்படாத வார்த்தைகள்) என்பதாகவே உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தலையங்கத்தில் இறுதியாக ‘நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்து கொண்டதற்காக உதய்ப்பூரில் ஹிந்து ஒருவர் கொல்லப்பட்டதைச் சர்மாவின் தவறு என்று அறிவித்திருக்கும் உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்கள் அறிவித்துள்ள வன்முறைக்கு நுபுர் சர்மா பலியாகிவிட்டால், உண்மையில் அவர் அதற்குத் தகுதியானவர் என்றும் சொல்லக்கூடும்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற கருத்துகள் மக்களை வகுப்புவாத அடிப்படையில் தூண்டி விடுவதற்காக முன்வைக்கப்படுகின்ற பொய்களாகும். நீதிமன்றத்தின் கருத்துகளை வேண்டுமென்றே வகுப்புவாதப்படுத்துகின்ற இத்தகைய ‘செய்தி’ இணையதளங்கள் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். வகுப்புவாத எதிர்வினையை நேரடியாகத் தூண்டி விடுவதாக இருக்கிற இதுபோன்ற கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பிற்கும் மேலான குற்றமாகும். ஒரு தவறான கதை எவ்வாறு கட்டமைக்கப்பட்டு, ஊதிப் பெருக்கப்படுகிறது என்பதை விளக்குவதற்காகவே OpIndia வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு இங்கே இந்த அளவிற்கு இடம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய அமைப்புகள் பாஜக ஆளுகின்ற அரசாங்கங்கள் தருகின்ற மிகத் தாராளமான விளம்பரங்கள் மூலமாகவே அரசியல் ஆதரவையும், நிதியையும் பெற்று அனுபவித்து வருகின்றன.
தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள நுபுர் சர்மாவை அனுமதித்து நீதிமன்றம் வழங்கிய இறுதி உத்தரவில், வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் தெரிவித்த அந்தக் கருத்துகளுக்கான இடம் கிடைக்கவில்லை. ஆயினும் வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறித்த கருத்துகள் நுபுர் சர்மா வழக்கிற்கு அப்பால் மற்றொரு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தக் கட்டுரையின் எழுத்தாளர் பாஜக அரசு, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டதாக அந்த வழக்கு இருந்தது. வழக்கைத் தொடர்வதற்குத் தேவையான அனுமதியை அரசு வழங்க மறுத்ததன் காரணமாக அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் அடிப்படையில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகளுக்கும், அதனைத் தொடர்ந்து நிகழ்கின்ற வன்முறைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ‘புறக்கணிப்பு, ஒதுக்கி வைத்தல், நாடு கடத்தல், இனப்படுகொலை என்று இருந்து வருகின்ற பாகுபாடுகள் வழியாக இலக்கு வைக்கப்பட்ட சமூகத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களின் தொடக்கப் புள்ளியாக இவ்வாறான வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகள் இருக்கின்றன’ என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் பேச்சுகளே அதன் தொடர்ச்சியாக உருவாகின்ற விளைவுகளின் தொடக்கப் புள்ளியாக இருக்கின்றன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது இங்கே நன்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
இன்றைய நிலைமையில் ஆட்சியில் இருப்பவர்களின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாக வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் பேச்சுகள் ஊடக நிறுவனங்களின் ஆதரவுடன் ‘இயல்பாக்கப்பட்டு’ சமூகங்களுக்கிடையிலான சமூக உறவுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. இந்த ‘இயல்பாக்கல்’ வெறுப்பு அடிப்படையிலான ஆத்திரமூட்டும் கருத்துகளைக் கண்டிப்பதற்கு அல்லது அமைதி, நல்லிணக்கத்திற்கான முறையீடுகளை மேற்கொள்வதற்கு மறுத்து வருகின்ற உயர்மட்டத் தலைவர்களால் வேண்டுமென்றே கடைப்பிடிக்கப்படுகின்ற பொறுப்பற்ற மௌனத்தை உள்ளடக்கி இருக்கிறது.
சர்வதேசப் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்ற முஸ்லீம் தீவிரவாதிகளின் பயங்கரவாதச் செயலால் விளைந்த கன்னையாலாலின் காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான கொலை, அதனைத் தொடர்ந்து வெளியான மனிதாபிமானமற்ற வீடியோ போன்றவை அரசியல் தளத்தில் பரவலாகக் கண்டனத்திற்குள்ளாகின. ராஜஸ்தான் மாநில அரசு கொலையாளிகளை அதிரடியாகக் கைது செய்தது. நுபுர் சர்மாவின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டு அவருக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவாறு உதய்ப்பூரின் தெருக்களில் அணிவகுத்துச் சென்ற குழுக்கள் அந்தச் சமயத்தில் எழுந்த பரவலான சீற்றத்தைத் தங்களுக்கென்று பயன்படுத்திக் கொள்ள முயன்றன. இவ்வாறான செயல்களுக்கு பாஜக தலைவர்கள் எவராவது கண்டனம் தெரிவித்தனரா? அத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையில் பிரதமர் அமைதி, நல்லிணக்கத்திற்கான வேண்டுகோளை விடுக்க வேண்டுமென்று ராஜஸ்தான் முதல்வர் பகிரங்கமான வேண்டுகோளை முன்வைத்தார். ஆனாலும் அவரது கோரிக்கைக்கு பலத்த மௌனமே எதிர்வினையாகி நின்றது. பிரதமர் ஒரு வார்த்தை கூட பேச முன்வரவில்லை.
சங்பரிவாரத்தை முன்னிறுத்துபவர்கள் வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும், அரசில் உள்ள தலைவர்களும் மௌனம் மட்டுமே காத்து வருகின்றனர். மக்களின் மனதையும். இதயத்தையும் துருவமயமாக்குகின்ற கொடூரமான முயற்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் வார்த்தைகள் மட்டுமல்லாது, செயல்களும் இணைந்து சமூகங்களுக்கிடையில் வெறுப்பு, சந்தேகம் கலந்த சூழலை உருவாக்கியிருக்கின்றன. நுபுர் சர்மா உள்ளிட்டு தொடர்புடைய செய்தி சேனல்கள், தில்லி காவல்துறை ஆகியவற்றின் மீது கடுமையான விமர்சனங்களை மிகச் சரியாகவே உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கின்ற போதிலும், அதுபோன்ற வெறுப்புணர்வுக் கருத்துகளை வெளியிடக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு உதவுகின்ற அதிகாரத்தில் இருப்பவர்களே அதற்கான பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓர் அடிப்படைவாதம் மற்றொரு அடிப்படைவாதத்தைப் பலப்படுத்துகிறது என்பது மிகவும் சரியான உண்மையாகும். நம்மால் அதன் மோசமான விளைவுகளை இந்தியா முழுவதிலும் காண முடிகிறது. அரசியலமைப்பு அளித்திருக்கும் உத்தரவாதங்களை நச்சுத்தன்மை மிக்க பெரும்பான்மை வகுப்புவாதத்தின் புல்டோசர் வீழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில் தடுமாறிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள் இஸ்லாமியவாதிகளும், அவர்களது வெறித்தனமான குழுக்களும் நுழைகின்றன. இந்த இருளை விரட்டியடிப்பதன் மூலம் தான் எதிர்கொண்டுள்ள இத்தகைய கொடுங்கனவிலிருந்து இந்தியா விழித்தெழ வேண்டும். நீதிமன்றங்களுக்கு இதில் மிகவும் முக்கியமான பங்கு இருக்கின்றது. நீதிமன்றங்களின் கூர்மையான கருத்துகள் – அவை மிக அரிதானவையாக இருந்தாலும் – நுபுர் சர்மாவின் வழக்கில் கூறப்பட்டதைப் போன்ற வழிகளைத் தெளிவுபடுத்துவதற்கு சில சமயங்களில் உதவுகின்றன. நுபுர் சர்மாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளனர். ஒருவேளை அது நடக்கும் என்றால் இந்தியாவிற்கு மிகவும் சோகமான நாளாகவே அந்த நாள் அமையும். உண்மையை ஒருபோதும் யாராலும் அகற்றி விட முடியாது.
வேளாண்மைத்துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பினைச் செய்கிறது. வேளாண் பயிர் செய்யும் பணிகள் தொடங்குவதிலிருந்து அவற்றை சந்தை படுத்தும்வரை செலவிடப் பணம் தேவைப்படுகிறது. இந்திய விவசாயிகளில் பெருமளவிற்குச் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் ஆவார்கள். இவர்கள் பயிர் தொழிலுக்குத் தேவையான குறுகிய, நடுத்தர, நீண்டகாலக் கடனைப் பல்வேறு ஆதாரங்கள் வாயிலாகப் பெறுகின்றனர். இந்திய விவசாயிகள் தங்களின் பணத்தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள நிறுவன (Institutional) மற்றும் நிறுவனமல்லா (Non-Instituional) நிதி அமைப்புகளிடமிருந்து கடன் பெறுகின்றனர். நிறுவனமல்லாக் கடன்களை முறைசாராக் கடன் எனவும் அழைக்கலாம். முறைசாராக் கடன்களை நிலச் சுவான்தாரர்கள், நிதி வணிகர்கள், தரகு முகவர்கள் போன்றவர்களிடமிருந்து பெறுகின்றனர். முறைசாராக் கடனின் வட்டி வீதம் 36 விழுக்காடு வரை உள்ளது. இதனால் விவசாயிகள் கடன் பொறியில் (Debt trap) வீழ்ந்துவிடுகின்றனர் (கடன் பொறி என்பது பழைய கடனைத் திருப்பி செலுத்துவதற்காகப் புதிய கடனை வாங்கத் துண்டும் நிலையாகும்). இந்த விவசாயிகளின் துயரினைப் புரிந்துகொண்ட அரசு பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் தொடர்ந்து திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. முறைசார் கடனை (நிறுவனக் கடனை முறைசார் கடன் எனவும் அழைக்கப்படுகிறது) அளிக்கக் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கிகள் என விவசாயிகளுக்குக் குறுகியகால, நடுத்தர, நீண்ட காலக் கடன்களை வழங்க வழிவகைகளை உருவாக்கித் தந்துள்ளது. 1951ஆம் ஆண்டு விவசாயிகளின் முறைசார் கடன் 10.2 விழுக்காடாகவும், 89.1 விழுக்காடு முறைசாராக் கடனாகவும் இருந்தது. 1966ல் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது நவீன முறை விவசாயம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் விவசாய இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவை வாங்கவும், இயந்திரங்களைப் பயன்படுத்தவும் அதிக அளவிற்குப் பணம் தேவைப்பட்டது. 1969ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கான ஒரு முக்கிய நோக்கம் வேளாண் வளர்ச்சிக்குத் தங்குதடையின்றி கடன் வழங்குவதாகும். 1970ல் வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகள் துவக்கப்பட்டது. இதனால் முறைசார்க் கடன் 1971ல் 32 விழுக்காடாக அதிகரித்தது. 1980ல் மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதனால் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1991ல் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1991ல் முதல் நரசிம்மம் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வங்கி நடவடிக்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. எனவே விவசாயக் கடன் அதிகரித்தது. 1991ல் மொத்த விவசாயக் கடனில் 65 விழுக்காடு முறைசார்க் கடனாக இருந்தது. மீண்டும் 1998ல் இரண்டாவது நரசிம்மம் குழுவின் பரிந்துரையின்படி வங்கித் துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்படி வங்கிகளுக்கான அதிகாரங்கள் நீக்குப்போக்குடன் செயல்பட அனுமதித்தது. வங்கிகள் துவங்க உரிமம் தேவை என்பது நீக்கப்பட்டது, இழப்பில் செயல்பட்டுவந்த வங்கிக் கிளைகள் மூடப்பட்டது, வட்டி வீத கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது, கடன் இலக்கு குறைக்கப்பட்டது. 1975ல் 5598ஆக இருந்த வங்கிக் கிளைகள் 1991ல் 11344ஆக அதிகரித்தது. இதனால் வேளாண்மைக்கான கடன் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் 1991-2001ஆண்டுகளுக்கிடையே 28.67 விழுக்காடு மட்டுமே வங்கிகளின் கிளைகள் அதிகரித்தது. பெருமளவிற்கு வங்கிக் கிளைகள் கிராமப்புறங்களில் குறைந்தது. கடந்த 10ஆண்டுகளில் தனியார் வங்கிகள் அனுமதிக்கப்பட்டதால் தற்போது (மார்ச் 2021ல்) 1.22 லட்சம் (பொது, தனியார் வங்கிகள்) வங்கிக் கிளைகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது (www.rbi.org.in). வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கும் நடைமுறை உள்ளது.
1969ல் 14 விழுக்காடாக இருந்த முன்னுரிமைத் துறைக்கான கடன் பங்கானது 2002ல் 34.8 விழுக்காடாக அதிகரித்தது. இதனால் வேளாண் துறை பெருமளவிற்குப் பயனடைந்தது. அதேசமயம் வேளாண் துறையின் முறைசாராக் கடனின் பங்கு 4 விழுக்காட்டுப் புள்ளிகள் 1991 – 2002ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிகரித்தது. இம் முறைசாராக் கடனில் பெருமளவிற்கு நிதி வணிகர்களிடமிருந்து பெறப்பட்டதாகும். வங்கி விரிவாக்கம் குறைந்தது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் அளவு குறைந்தது போன்றவை இதற்கான காரணங்களாகச் சுட்டப்படுகிறது. 2001க்கு பின்பு கிராமப்புறங்களில் வங்கி கிளைகள் விரிவாக்கம். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் மீண்டும் முறைசார் வேளாண் கடன்கள் 2002ல் 61.1 விழுக்காடாக இருந்தது 2013ல் 64 விழுக்காடாக அதிகரித்தது, 2015ல் இது 72 விழுக்காடாக மேலும் உயர்ந்தது ஆனாலும் நான்கில் ஒரு பங்கிற்குமேல் முறைசாராக் கடன் பெறப்பட்டிருந்தது (Ahubhm Sehal 2021). வங்கித்துறையில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய விவசாயிகள் சரியான வட்டி வீதத்தில் முறைசார்க் கடன்களைப் பெற்றுள்ளனர். அதே சமயம் பெரும்பகுதியான சிறு குறு விவசாயிகள் முறைசார் கடனை அணுகமுடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
Mjhuk;: Ashok Gulati and Ritika Juneja (2019): “Agricultural Credit System in India: Evaluation, Effectiveness and Innovations.” ZEF, Working Paper series 184, Centre for Development Research University of Bonn.
இந்தியாவின் அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகள் வேளாண் கடனாக மொத்தக் கடன் அளவில் 1970ல் 9 விழுக்காடு அளித்திருந்தது. இது தொடர்ச்சியாக அதிகரித்து 1990ல் 15.9 விழுக்காடாக உயர்ந்தது, ஆனால் 2000ல் 9.9 விழுக்காடாகக் குறைந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் இக்கடன் உயரத் தொடங்கியது, 2016ல் இக்கடன் 13.2 விழுக்காடாக உயர்ந்தது. மொத்தக் கடனில் தொழில்துறைக்கு அதிக அளவில் (1970ல் 61.2 விழுக்காடு, 2016ல் 39.4 விழுக்காடு) அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது (Shromona Gangulylk et al 2021). தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியான NABARD (2018) கணக்கீட்டின்படி 2015-16ல் 61 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் முறைசார்க் கடனைப் பெற்றுள்ளதாகவும். 30 விழுக்காடு முறைசாராக் கடனையும் 9 விழுக்காடு முறைசார் மற்றும் முறைசாராக் கடனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறது. நிஹாரிகா பாண்டே et al (2021) நடத்திய ஆய்வில் கோவிட் பெருந்தொற்று காலங்களில் வேளாண் கடன் 2020ல் சம்பா சாகுபடி காலத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி மொத்த விவசாயிகளில் 63 விழுக்காட்டினர் கடன் பெற்றவர்களாக இருந்தனர். இதில் 35 விழுக்காட்டினர் முறைசார்க் கடனும், 22 விழுக்காட்டினர் முறைசாராக் கடனும், இவ்விரண்டையும் 9 விழுக்காட்டினர் பெற்றிருந்தனர் என கணிக்கப்பட்டது. இம் முறைசாராக் கடன் அதிக அளவில் நிதி வணிகர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயக் கடனின் அதிகரிப்பு பருவகாலத்தை சார்ந்துள்ளது. பருவமழை தொடங்கியவுடன் விவசாய நடைமுறைகள் உடனடியாக தொடங்கப்படவேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது. பருவம் தவறி பயிர்செய்வது எதிர்பார்க்கிற விளைச்சலைத் தராது. எனவே இதற்கானச் செலவுகளை எதிர்கொள்ள முறைசார் கடனைப் பெறுவதற்கு அதிக நடைமுறைகளும், காலவிரயமும் உள்ளதால் முறைசாராக் கடனைப் பெற விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உடனடியாகப் பயிர் வேலைகளைத் துவக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் அதிகப்படியான வட்டியையும் கருத்தில் கொள்ளாமல் முறைசாராக் கடனைப் பெறுகின்றனர். பல்வேறு காரணங்களினால் விவசாய உற்பத்தியில் இழப்பு அல்லது விளைபொருள்களுக்கான விலையின் வீழ்ச்சி போன்றவையினால் விவசாய வருமானம் குறைய நேரிட்டால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாமல் போகிறது. இது விவசாயிகளின் தற்கொலைக்கான முதன்மைக் காரணமாக உருவெடுக்கிறது. 1990களில் தொடங்கிய விவசாயிகளின் தற்கொலை இன்றுவரை தொடர்ந்துகொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அன்மையில் ஒன்றிய அரசினால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் (PM-Kisan Samman Nidhi)
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் 1 டிசம்பர் 2018ல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி அளிப்பதற்காகத் துவக்கப்பட்டது. ஒன்றிய அரசு இதற்கான நிதி உதவியினை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறது. விவசாயிகளுக்கு நிதியுதவியினை நேரடியாகவே வழங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் விவசாயிகள் வேளாண் பயிர் வேலைகளைப் பருவ காலங்களில் தொடங்கப்படும்போது எதிர்கொள்ளும் நிதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு உதவுகிறது. ஓவ்வெரு ஆண்டும் சம்பா, குறுவை, கோடை பயிர்களைப் பயிரிடத் தொடங்கும்போது பருவத்திற்கு ரூ.2000 வீதம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் கூலி போன்ற அடிப்படைச் செலவுகள் செய்ய இந்த நிதி உதவி பயன்படும். இந்த திட்டத்தினால் மார்ச் 2022 முடிய 11.78 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர், ரூ.1.82 லட்சம் கோடி இதுவரை (பிப்ரவரி 2022) நிதி உதவியாக அளிக்கப்பட்டுள்ளது (GoI 2022). உத்திரப் பிரதேச மாநிலத்தில் உச்ச அளவாக 22.9 விழுக்காடு இந்திய அளவில் இத் திட்டத்தில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தினால் இரண்டுவிதமான நன்மைகளை விவசாயிகள் பெறமுடியும், 1. வருமான உதவியினைப் பெறுதல் 2. வங்கிகளில் குறுகிய, நீண்டகாலக் கடன்களைப் பெறமுடியும். இத்திட்டத்தில் விவசாயிகளின் பங்கேற்பு மிகவும் குறைந்த அளவில் உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், ஆதர் அட்டை, வங்கிக்கணக்கு, நிலத்தின் உரிமையாளர் பெயர் போன்றவை ஒத்துப்போவதில்லை. அதிக அளவிற்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் பெறப்படுகிறது ஆனால் அவற்றைப் பரிசீலனைச் செய்ய போதுமானப் பணியாளர்கள் இல்லை. இந்த திட்டம் நில உரிமையாளர்களை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் குத்தகைதாரர்களுக்கு, கிராமப்புற கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு, கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இது பொருந்தாது. இந்தியாவில் நாடு முழுவதும் குத்தகைக்குப் பயிரிடும் முறை பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இவர்கள் உண்மையான உழுபவர்களாக இருந்தும் இவர்கள் இந்த திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் நிதி தொகை பயனாளர்களுக்குச் சென்றடையக் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் சரியாக பதிவுசெய்யப்படாதது, பெயர்கள் ஒத்துப்போவதது போன்றவை ஆகும். ரூ.6000 ஆண்டுக்கு நிதி உதவி அளிப்பது விவசாயக் குடும்ப வருவாயில் 6.43 விழுக்காடாக உள்ளது. சிறு குறு விவசாயிகள் அதிகமாக இந்த திட்டத்தினால் பயனடைகின்றனர். இது போன்ற திட்டங்கள் பல மாநில அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது (தெலுங்கானாவில் ரித்துபந்து என்ற திட்டம் 10 மே 2018லிருந்து ரூ.10000 ஒவ்வொரு விவசாயக் குடும்பங்களுக்கும் நிதி உதவியாகச் செயல்படுத்தப்படுகிறது, ஆந்திரப் பிரதேசத்தில் ரிதுபரோசா 15 அக்டோபர் 2019லிருந்து ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ.13500 நிதி உதவி அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, ஒடிசாவில் காலியா என்ற திட்டம் டிசம்பர் 2018லிருந்து ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ.10000 நிதி உதவி அளிக்கப்படுகிறது, மேற்கு வங்காளத்தில் விவசாயிகளின் நண்பன் என்ற திட்டம் வழியாக 1 ஜனவரி 2019ல் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ரூ.5000 நிதி உதவி வழங்கப்படுகிறது, சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜிவ் காந்தி கிஷன் நியாய என்ற திட்டம் 3 மார்ச் 2020ல் ரூ.1000 – ரூ.13000வரை ஒவ்வொரு விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது) (Kavitha et al 2021).
விவசாயக் கடன் வாங்கும் குடும்பங்களின் மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு முறைசார்க் கடனாகப் பெறப்படுகிறது (2018-19ல்). குறிப்பாகப் பெரிய நில உடைமையாளர்கள் 80 விழுக்காடுவரை முறைசார்க் கடனாகப் பெறுகின்றனர் ஆனால் சிறிய நில உடைமையாளர்கள் 28 விழுக்காடுவரை முறைசார்க் கடனைப் பெறுகின்றனர். பெறுகின்ற மொத்தக் கடனில் மூன்றில் ஒரு பங்கு பயிர் தொழிலைச் செய்யவும், ஐந்தில் ஒரு பங்கு நுகர்வுச் செலவிற்கும், 5 விழுக்காடு திருமணம், சடங்குகள், கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளை மேற்கொள்கின்றனர் (Kavitha et al 2021). விவசாயக் கடனுக்கும், வேளாண் உற்பத்திக்கும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் நெருங்கியத் தொடர்புள்ளது. விவசாயிகளின் தற்கொலையினால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரமும் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
விவசாயிகள் தற்கொலை இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் கடந்த 25 ஆண்டுகளாகக் காணப்படுகிறது. விவசாயத் தற்கொலை என்பது விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் இரண்டையும் சேர்த்தது என்கிறது தேசியக் குற்றப் பதிவு பணியாக்கம் (National Crime Records Bureau – NCRB). விவசாயிகள் தற்கொலைக்கு அடிப்படைக் காரணம் கடன் திரட்சியாகும் (Debt Accumulation). பசுமைப் புரட்சிக்குப்பின் வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அன்மைக் காலங்களாகப் பல்வேறு காரணங்களை முன்னிருத்தி வேளாண் தொழிலிருந்து அதிக அளவிற்கு விவசாயிகள் வெளியேறி மாற்று வேலைகளுக்கு (வேளாண் சாரா) செல்வதால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருவதால் உழவு உள்ளிட்டப் பணிகளுக்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இயந்திரம் பயன்படுத்துவதால் (குறிப்பாக நெல் கோதுமை போன்ற பயிர்களுக்கு) மொத்த உற்பத்திச் செலவில் 5 விழுக்காடு அளவிற்குக் குறைகிறது என்பது ஆய்வில் தெரிகிறது. வேளாண் இயந்திரங்கள் அனைத்து விவசாயிகளும் வைத்திருப்பதில்லை. குறு சிறு விவசாயிகள் வாடகைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் இயந்திரங்களைச் சொந்தமாகக் கடனில் வாங்குகின்றனர். இக்காரணங்களினால் விவசாயக் கடனளவு அதிகரிக்கிறது (Avinash Kishore et al 2022).
2013ல் தெலுங்கானாவில் 89 விழுக்காடு விவசாயிகள் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொண்டனர். கர்நாடகாவில் இதே காரணத்திற்காக 77 விழுக்காடு விவசாயிகளும், மகாராஷ்டிராவில் 56 விழுக்காடும், மத்தியப் பிரதேசத்தில் 46 விழுக்காட்டினரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் மொத்த விவசாயத் தற்கொலையில் கடனின் காரணமாக 52 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தொடர்ந்து பயிர்த் தொழிலில் வருமான இழப்பு, நுகர்ச்சிக்காக் கடன் வாங்குவதால் போன்றவற்றால் கடனில் விழ நேரிடுகிறது. இதனால் அதிக கடன் திரட்சியினால் தற்கொலை முடிவிற்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். சுக்பூல் சிங், மஞ்சீத் கவுர் மற்றும் கிங்ரா (2021) ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி ஆய்வு செய்தனர். இவ் ஆய்வின்படி 2000-2018ஆம் ஆண்டுகளுக்கிடையே 79 விழுக்காடு விவசாயிகள் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொண்டனர் என்றும், 21 விழுக்காடு விவசாயிகள் பிற சமூக பொருளாதாரக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்டனர் எனவும் கண்டறிந்தனர். மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 82.6 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்டோர் என்றும், 65.85 விழுக்காட்டினர் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், மொத்த தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 92.63 விழுக்காடு முறைசாராக் கடன்களை நிதி வணிகர்கள், நிலச்சுவான்தாரர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் கடன் பெற்றவர்கள் ஆவார்கள். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 63.84 விழுக்காட்டினர் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர், 85 விழுக்காட்டினர் 18லிருந்து 50 வயதுக்குள் இருந்தனர். இவ்வாய்வின் ஒரு முக்கிய வெளிப்பாடு பாதி அளவிற்கான (49.66 விழுக்காடு) தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களில் விவசாயி தற்கொலை செய்துகொண்டபின் வருமானம் ஈட்டும் நபர்கள் யாரும் இல்லை என்பதாகும். பஞ்சாப் அரசின் நேரடி நிதி உதவி மூலம் 95 விழுக்காடு விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது (Avinash Kishore et al 2022).
விவசாயத் தற்கொலை இந்தியாவில் முதன்முதலில் 1960களிலும் 1970களிலும் தமிழ்நாட்டில் காணப்பட்டது. 1990களில் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நிகழ்வுகள் ஏற்படத்துவங்கியது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை உச்ச அளவாக அறியப்படுகிறது. இம் மாநிலங்களின் விவசாயிகளின் தற்கொலை இந்தியாவின் மொத்த விவசாயிகளின் தற்கொலையில்; 90 விழுக்காடாக உள்ளது. இதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் தற்கொலைகள் அதிக அளவில் காணப்பட்டது. 2014ல் சராசரியாக ஒரு நாளைக்கு 15 விவசாயிகள் தற்கொலை நிகழ்ந்தது இது 2015ல் 21 தற்கொலைகளாக அதிகரித்தது (Sukhpal Singh et al 2021). 2020ல் மொத்தம் 10677 விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளது இது 2019விட அதிகமாக (10281) உள்ளது. தேசியக் குற்றப் பதிவு பணியாக்கம் புள்ளி விவரத்தின்படி 1995-2019 ஆண்டுகளுக்கிடையே மொத்தம் 3,58,164 விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளது. இவ்விரு ஆண்டுகளில் நடந்த நாட்டின் மொத்த தற்கொலைகளில் விவசாயத் தற்கொலைகள் 12.53 விழுக்காடாக உள்ளது. 1995ல் நாட்டின் மொத்த தற்கொலையில் விவசாயத் தற்கொலைகள் 13.43 விழுக்காடாக இருந்தது 2004ல் 16.3 விழுக்காடாக அதிகரித்தது இது 2019ல் 7.61 விழுக்காடாகக் குறைந்துள்ளது. விவசாயத் தற்கொலை வீதம் (1 லட்சம் மக்கள் தொகைக்கு) 1995ல் 5.3ஆக இருந்தது 2001ல் 7.1ஆக அதிகரித்தது இது 2011ல் 5.3ஆக மீண்டும் குறைந்தது, 2018ல் இது மேலும் குறைந்து 3.6ஆக இருந்தது (Sthanu R Nair 2022)
1990களில் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் நிகழந்தது. 2010-2016ஆம் ஆண்டுகளுகிடையே நடந்த தற்கொலைகள் 2000-2010ஆம் ஆண்டுகளுக்கிடையே நடைபெற்ற தற்கொலைகளைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. 1990களின் கடைசியில் விவசாயிகளின் தற்கொலையினைத் தடுக்க நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.Mjhuk;: GoI (2021): “Accidental Death and Suicides in India 2020,” National Crime Record Board, Government of India.
ஆனால் இது சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே விவசாயிகளின் தற்கொலைகளை இது தடுக்கத் தவறிவிட்டது. அதே சமயம் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களும், வேளாண் பொருள்களுக்குத் தகுந்த விலை கிடைக்காததாலும், விவசாய இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து நடைபெறக் காரணமாக அமைந்தது. 2006ல் விவசாயிகளுக்கான புனர்வாழ்வு தொகுப்பு அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை நடந்த மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008ல் வேளாண் கடன் துடைப்பு மற்றும் கடன் நிவாரண திட்டம் (ADWDRS) துவக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டது. ஆனால் இதுவும் தேவைப்படுபவர்களுக்குக் கடன் அளிக்கவில்லை. பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா 2016ல் துவக்கப்பட்டு விவசாயிகளுக்குக் காப்பீட்டு மூலம் பயிர் இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் 2016 நவம்பரில் பணமதிப்பீட்டு இழப்பு கொண்டுவரப்பட்டதால் உயர் மதிப்புடைய பணமான ரூ.500, ரூ.1000 செல்லாமல் போனது. இந்த காலகட்டம் விவசாயிகளின் குறுவை பருவப் பயிர்செய்யும் நேரம் என்பதால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு 2017ல் நடைமுறைப்படுத்தப்பட்டது இதன் விளைவு விவசாய இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. 2019ல் உருவான கோவிட் பெருந்தொற்றினால் பல மாநிலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது, விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டதால் வேளாண் பொருட்கள் சந்தை படுத்த இயலாமல் போனது இதனால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளானார்கள். 2020ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் மத்தியில் பெரிய எதிர்ப்பினை உருவாக்கியது. குறைந்தபட்ச ஆதார விலையினை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் சுமார் ஓர் ஆண்டிற்கு நடத்தப்பட்டதால் 2021ல் இந்த சட்டங்கள் ஒன்றிய அரசினால் திரும்பப் பெறப்பட்டது. தற்போது (2022ல்) உக்ரைன்-ரஷ்ய போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டினால் உணவு பணவீக்கம் அதி அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனைக் காரணம் காட்டி கோதுமை ஏற்றுமதியினை ஒன்றிய அரசு தடைசெய்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு அரசு கொள்கைகள், இயற்கைச் சீற்றம் போன்ற காரணங்களினால் விவசாயிகள் பெருமளவிற்குப் பாதிக்கப்படுகின்றனர் இதன் விளைவு தற்போதும் விவசாயத் தற்கொலைகள் ஆண்டிற்குச் சராசரியாக 10000க்கு மேல் தொடர்ந்துகொண்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும்போது வேளாண் உற்பத்திச் செலவான C2+10% உடன் எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரையான 50% செலவினைக் கணக்கில் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளுக்கான கடன் அளித்தாலும் தற்போதும் மூன்றில்-ஒரு பங்கு விவசாயிகள் முறைசாராக் கடனைப் பெறுகின்றனர் எனவே தனியார் கடனையும், வட்டியையும் முறைப்படுத்தவேண்டும். விவசாயக் கடன்களைத் தக்க நேரத்தில் நீக்குப்போக்குடன் எளிய வழிமுறைகளைக் கையாண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதுபோன்று விவசாயிகள் பயிர் தொழிலில் அதிக இழப்பினைச் சந்திக்கின்றனர் இதனைத் தடுக்க வேளாண் ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் (தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 விழுக்காட்டிற்குக் கீழ் ஒதுக்கப்படுகிறது).
References :
Avinash Kishore, Suriti Saini and Muzna Alvi (2022): “Assessing Direct Benefit Transfer of Agricultural Subsidies in Bihar and Odisha,” Economic and Political Weekly, Vol 57 (16), pp 36-42.
Dayandev C Talule (2021): “Sucide by Maharashtra Farmers: The Signs of Persistent Agrarian Distress,” Economic and Political Weakly, Vol 56 (51), pp 46-55.
Dipanjana Roj (2021): “Farmer Suicides in India, 1997-2013 Taking Stock of Data, Arguments and Evidence,” Economic and Political Weekly, Vol 56 (5), pp 50-60.
Economic and Political Weekly, Editorial (2021): “Government Policies Drive Farmars to Penury,” Economic and Political Weekly, Vol 56 (38), p 7.
GoI (2022): “Three Years of Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) – Press Information Burea,” Ministry of Infromation and Broadcasting, March 11, 2022, Government of India.
Kavitha H N, Pramod Kumar, P Anbukkani, R R Burman and P Prakesh (2021): “Income Support Schemes: Evaluation of PM Kishan vis-à-vis State Government Scheme,” Economic and Political Weekly, Vol 56 (34), pp 13-17.
NABARD (2018): “All India Rural Finanical Inclusion Survey 2016-17,” National Bank for Agriclture and Rural Development, Mumbai.
Niharika Pandya, Divya Veluguri, Aditi Roy, Poornima Prabhakaran and Linasay M Jaacks (2021): “Economic Impact of the 2020 COVID – 19 Lockdown on Indian Farmers,” Economic and Political Weekly, Vol 56 (50), pp 31-34.
Pradynt Guha and Tiken Das (2022): “Farmer’s Suicides in India,” Economic and Political Weekly, Vol 57 (5), pp 13-16.
Shromona Ganguly Mohua Roy (2021): “Development Banks and the changing Contour of Industrial Credit in India,” Economic and Political Weekly, Vol 56 (49), pp 50-57.
Shubham Sehal (2021): “Banking Sector Reforms of 1991 and Agricultural Credit,” Economic and Political Weekly, Vol 56 (50), p 5.
Sthanu R Nair (2022): “Rethinking Agrarin Susides in India,” The Indian Express 8.4.2022.
Sukhpal Singh, Manjeet Kaur and H S Kingra (2021): “Agrarian Crisis and Agricultural Labourer Suicids in Punjab,” Economic and Political Weekly, Vol 56 (13), pp 49-56.
“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின் சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”
சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே இவ்வாறு சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாகக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.
சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை. வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், 1990வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார். 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதீய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டபின்புதான், இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட, “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ்ட் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.”
சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.
சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும் இணைந்தகொண்டிருப்பத துரதிர்ஷ்டவசமாகும். இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்எஸ்எஸ்-உடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக்கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதீய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும் உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர் இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்” என்று வீர சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் உறுப்பினர் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார். மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.
இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார். விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு தேசியவாதி என நம்புகிறேன், மகாத்மா காந்தியும் நாட்டிற்காக ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்,” என்று கூறியிருக்கிறார்.
சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள் வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர் என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள், அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட எழுதிய எழுத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாலே, அவர் குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர், இந்து மகா சபா, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாக சார்ந்திருக்கிறார்.
சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை மக்கள் எதிர்கொண்டிருந்த சமயத்தில், சாவர்க்கர் பிரிட்டிஷாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவினை அளித்தார்.
இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார். சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு அறியலாம்.
“இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட, இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும், அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும், கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி மற்றும் போர்த்தந்திர கருவிகள் உற்பத்தி என அனைத்திலும் பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். .. ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.
இதன் விளைவாக, நாம் விரும்பினாலும் சரி, அல்லது விரும்பாவிட்டாலும் சரி, யுத்தத்தின் அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே, இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது, தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு கூறியதுடன் மட்டும் நில்லாது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ப்பதற்கும், அதன்மூலம் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கும் துணை போனார்.
சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார். அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம் காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும், ஏன், காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள் இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை பெற்று சுமார் நூறாண்டுகளானபின்னரும், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும் சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடும் என்று நம்புகிறோம். இந்தப் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின் 1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவற்றின் ஆபத்துக்களையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.
சாவர்க்கர் குறித்து கூறப்படும் ஏழு சரடுகளைக் கூறி அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் தக்க ஆவணச்சான்றுகளுடன் இந்தப் புத்தகத்தில் கட்டுரையாளர் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.
சாவர்க்கரை வீரரா அல்லது ஐந்து கருணை மனுக்கள் எழுதிக்கொடுத்து பிரிட்டிஷாரின் அடிமையாகச் சேவகம் செய்தவரா என்பதையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரா என்பதையும் இந்தப்புத்தகத்தைப் படித்திடும் ஒருவர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும்.
பாரதி புத்தகலாயத்தின் சார்பில் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் (Savarkar Unmasked) என்னும் இந்நூல் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவர விருக்கிறது.
இந்துத்துவாவை உருவாக்கிய சாவர்க்கரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டும்.
ஒவ்வொரு நாளும்
குழந்தைகளை அணைத்து முத்தமிடுகையில்
குற்ற உணர்வில் கரைந்து போகிறேன்
கை ரேகைகளுக்கு இடையில்
தேங்கி நிற்கும் அந்த நாற்றம்
விரல்களின் இடையில் தங்கிடும் சிறுநீர் உப்பு
குழந்தைகளின் கன்னங்களில்
புழுக்களாய் ஊர்ந்து கொண்டிருக்கும் அருவறுப்பில்
உடல் சிலிர்த்து சிறுத்துப் போகிறேன்
அவ்வேளைகளில்
அன்பை மட்டும் நான் பகிரவில்லை
எனும் உண்மையின் சூடு
என்னைச் சூனியமாக்கி
என் உடலெங்கும் படர்ந்து எரிக்கின்றது
சுருக்குப் பையில்
காசு தேடும் குழந்தைகளின் கைகளில்
நீலகிரி தைலக் குப்பி அகப்பட்டு
“வாரத்தில் ஏழு நாளும் உனக்கு சளி காய்ச்சல் தானா?”
என அவர்கள் கேட்கையில்
வெளியில் சொல்ல முடியா உண்மை
உள்ளிருந்து என்னை அரிக்கின்றது
சூரிய உதயங்களில்
அஸ்தமனமாகும் எங்கள் வாழ்வு
கருவறையின் இருட்டு என்று விடியுமோ
எங்கள் தீண்டாச் சேரியின் குழந்தைகளுக்கு?
துருப்பிடித்த வாளியும்
தேய்ந்துபோன துடைப்பமும்
பல நூறு ஆண்டுகளாய்
அவற்றில் மறைந்துள்ள சோகத்துடன்
இரக்கமற்ற தந்திரமும் வஞ்சகமும்
இன்று வரை
பீறிடும் எங்கள் பெருமூச்சில் எரியவில்லை
பொங்கிவரும் கண்ணீரில் கரையவில்லை
இத்தலைமுறையில் முடிந்துவிடும் இவ்வலவும்
என எண்ணுகையில்
அடுத்த தலைமுறை
துடைப்பமும் வாளியுமாய்
எங்கள் முன்னே வந்து நிற்கும்
தூரத்தில் இணைவது போல் தோன்றி
ஏமாற்றும் தண்டவாளங்கள் போல்
அடை மழைக் காலம்
வறண்ட கோடைக் காலம்
சுழன்றடித்து வீசும் காற்றுக் காலம்
இயற்கை கூட
என்றுமே எங்கள் பக்கம் நின்றதில்லை
அன்றொரு நாள்
நடைமேடை உணவுக் கடை ஒன்றில்
தலை முடியை மறைத்து
கைகளில் உறை அணிந்த ஒருவர்
எனக்கு உணவு பரிமாறிய அவ்வேளையில்
என் சிரிப்பை அடக்க முடியாது திணறினேன்
இன்னொரு நாள்
புல்லட் ரயில் பற்றிய
பாரதப் பிரதமரின் அறிவிப்பை
தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டே
இந்த தண்டவாளங்களுக்கு இடையில்
வழுக்கி விழுந்தபோது
என் அழுகையை அடக்க முடியாது திணறினேன்
இத்தொழிலை
ஆன்மிக அனுபவம் எனச் சொல்வோரில்
ஒரு சிலரை இங்கு அனுப்பி வையுங்கள்
அவர்களும் உய்த்துணரட்டும்
அதை எங்களோடு சேர்ந்து
இன்னொரு ஜென்மம் இல்லை என நன்கு தெரிந்து
எங்கள் சேரியில் பிறக்க விரும்புவோரில்
ஒரு சிலரை இங்கு அழைத்து வாருங்கள்
இந்த ஜென்மத்திலேயே
எங்கள் துன்பத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ளட்டும்
முகர்தல் புலனை அடக்கிட
தரையில் காலூன்றாது நடந்திட
பயிற்சி தருவோர் யாரேனும் உள்ளனரா என
அறிந்து சொல்லுங்கள்
எங்களை மறைத்திட
முகத்திற்கு மூடி
கைகளுக்கு உறை
முழங்கால் வரை காலணி
இவற்றில் எதுவும் வேண்டாம்
நாங்கள் எங்களை மறந்திட
எங்கள் உடலுடன் மனமும் சேர்ந்து மரத்திட
எதையாவது தாருங்கள்
அதுவரை
காலையில் தேநீருக்குப் பதிலாய்
நாங்கள் பருகுவது
அற்புத தேவமருந்து எங்களுக்கு
இந்த கடவுளின் குழந்தைகளிடம்
இனி அரிக்கவும் எரிக்கவும்
ஏதுமில்லை
மோடியின் அரசியல், குறிப்பாக அவரது தேர்தல், சூழ்ச்சித் திறன்கள் குறித்த நுண்ணோக்கை அகமதாபாத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் கூட்டாளியுமான யதின் நரேந்திரபாய் ஓசா தனிப்பட்ட மற்றும் அமைப்புரீதியான மட்டங்களில் அடிக்கடி வெளிப்படுத்தி வந்திருக்கிறார். 2001ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் கேசுபாய் படேலிடம் இருந்து குஜராத்தின் இடைக்கால முதலமைச்சராக மோடி பதவியேற்றுக் கொண்ட போது, அது குறித்த ஓசாவின் அவதானிப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது. கேசுபாய் பட்டேல் தலைமையில் இருந்த பாரதிய ஜனதா கட்சி அரசிற்கு எதிராகப் பரவலாக இருந்து வந்த ஆட்சியெதிர்ப்பு மனநிலை, ஊழல் மற்றும் குறிப்பாக பூஜ் பகுதியில் நிலநடுக்கங்களுக்குப் பின் ஏற்பட்ட விளைவுகளை நிவர்த்தி செய்வதில் இருந்த நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றிற்கு மத்தியில் அந்த மாற்றம் அவசியமாகி இருந்தது.
அதுவரை நடந்த பல இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 2002ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவைத் தோற்கடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ‘அனைத்து வகைகளிலும் இயங்கக் கூடிய, எந்தத் தடையும் மீறுகின்ற, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, தக்கவைத்துக் கொள்வதற்காக திட்டமிட்டு எந்தவொரு இரக்கமற்ற வழியையும் மேற்கொள்ளக் கூடிய முற்றிலும் மாறுபட்ட அரசியல்வாதியை எதிர்கொண்டிருப்பதால் கேசுபாய் பட்டேல் அல்லது வேறு எந்த பாஜக தலைவருக்காகவும் காங்கிரஸ் பயன்படுத்தி வந்திருக்கின்ற அதே அளவுகோல்களை மோடியை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்திட வேண்டாம்’ என்று சோனியா காந்தியை அப்போது ஓசா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை ஓசாவின் எச்சரிக்கையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பின்னர் முஸ்லீம்-விரோதப் படுகொலை மாநிலத்தில் நடந்தேறியது. ஆட்சிக்கு எதிரான காரணியால் தூண்டப்பட்ட அரசியலிலிருந்து முற்றிலும் வகுப்புவாத துருவமுனைப்பைச் சார்ந்ததாக மாநில அரசியலை அந்தப் படுகொலை மாற்றியமைத்தது. மீதி நடந்தவை அனைத்தும் இப்போது வரலாறாகி நிற்கின்றன.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் பின்னணியில் ஃப்ரண்ட்லைனிடம் பேசிய ஓசா மீண்டுமொரு முறை இப்போது அரசியல் சூழ்ச்சிகளில் குறிப்பாக தேர்தல் தந்திரங்களில் செயல்படுத்தப்படுகின்ற ‘தனித்த மோடி பிராண்ட் நடவடிக்கைத் தொகுப்புகள்’ பற்றி குறிப்பிட்டார். ‘அமைதியான ஆலோசனை என்று தொடங்கி, பொருள்கள் மீதான தூண்டுதல்கள், தண்டனைகள் என்று நகர்ந்து இறுதியாக முரண்பாட்டை உருவாக்கும் வகையில் இலக்கு வைக்கப்பட்ட குறிப்பிட்ட பிரிவினரின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சி செய்வதற்கான நான்கு முனை கொண்ட பண்டைய இந்திய உத்தியான சாம, தான, பேத, தண்டம் பற்றி அரசியல் வியூகவாதிகள் பேசி வந்திருக்கிறார்கள். ஆனால் அது பலருக்கும் பலனளிப்பதாக இருந்திருக்கவில்லை. உண்மையில் அது மற்றபிற அரசியல் சக்திகளைக் காட்டிலும் அந்தக் கட்டளையை செயல்படுத்துவதற்கான வழிகளில் ஹிந்துத்துவாவின் பல்வேறு அரசியல் தந்திரங்களைக் கொண்டு தேர்தல் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்ற சங்பரிவார் அமைப்புகளுக்கே பலனளிப்பதாக இருக்கிறது. சங்பரிவாருக்குள்ளும்கூட, மோடி பிராண்ட் நடவடிக்கைத் தொகுப்புகளுக்கான திட்டம் கூடுதல் திட்டங்களைக் கொண்டு அமைந்துள்ளது. அந்த கூடுதல் திட்டங்கள் யாவும் வெவ்வேறு வகையில் மாறுபட்ட நுணுக்கங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பல 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் வழக்கம் போல சங்பரிவாரங்களிலும், ஆட்சியிலும் உள்ள பல குரல்கள் தங்கள் பங்கையாற்றி வருகின்றன.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மைச் சமூகங்களின் ரத்தத்திற்காகப் போராடுகின்ற தர்ம சன்சத் போன்ற கலவரத்தைத் தூண்டுகின்ற ஹிந்துத்துவா வகுப்புவாத மாநாடுகளை ஏற்பாடு செய்தல், மதச்சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூக நிர்வாகங்களால் நடத்தப்படுகின்ற தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கக் கட்டுப்பாடுகளை விதித்தல், அத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வகுப்புவாதப் பிரச்சரங்களைக் கட்டியெழுப்புவதுடன் மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்களின் வகுப்புவாத பாகுபாடு கொண்ட வளர்ச்சித் திட்டங்களை முன்னுறுத்தி பிரச்சாரம் செய்தல் போன்ற செயல்பாடுகள் அத்தகைய நகர்வுகளுக்குத் துணைபுரிகின்ற நடவடிக்கைகளுக்குள் அடங்குகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் கார் 2022 ஜனவரி 5 அன்று ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ஹுசைனிவாலா அருகே உள்ள மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டது
இவையனைத்தையும் தவிர, ஜனவரி மாதம் ஆறாம் நாள் பஞ்சாப் ஃபெரோஸ்பூரில் தனது கார் தொடர்பிலான பாதுகாப்பு மீறலின் அடிப்படையில் அங்கிருந்த மேம்பாலம் ஒன்றில் 15-20 நிமிடங்கள் சிக்கித் தவித்த மோடி அந்த நடவடிக்கைத் தொகுப்புகளின் கூறுகளில் ஒன்றின் மையத்தில் தன்னைத் தனியாக நிறுத்திக் கொண்டிருந்தார். அந்தக் கூடுதல் நடவடிக்கையை அனுதாபத்தைத் தூண்டுகின்ற நடவடிக்கை என்றே நான் கூறுவேன். ஆக குஜராத்தில் இருபதாண்டுகளுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தைத் தூண்டுவதாக வெறுப்புணர்ச்சி இருந்தது என்றால் 2022இல் நடைபெறுகின்ற தற்போதைய பிரச்சாரங்களில் அனுதாப உணர்வு முக்கிய அங்கமாக தூண்டப்படுகிறது.
ஆயினும் 2002இல் நடந்த வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரத்தைப் போல இப்போது அனுதாபத்தை தூண்டும் பிரச்சாரத்துடனான தற்போதைய தொகுப்பு பயனுள்ளதாக இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு ‘உறுதியாகத் தெரியவில்லை’ என்று ஓசா பதிலளித்தார், ‘இதுபோன்று அனுதாபத்தின் அடிப்படையிலான காரணி முன்வைக்கப்பட்டிருக்கும் விதமே அவர்களிடமுள்ள விரக்தியுணர்வை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது. பாதுகாப்பு மீறல் குறித்து பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசு என்று இரண்டு மாறுபட்ட விசாரணைகள் உருவான நிலையில் பாதுகாப்பு மீறல் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்த அந்த பெரோஸ்பூர் மேம்பாலத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது பெருமளவிலான பொதுமக்களுக்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. ஆனாலும் பாதுகாப்பு மீறல் குறித்த உரையாடல்கள் எழுந்திருக்கும் அரசியல் சூழல்கள் குறிப்பிடத்தக்கவையாகவே இருக்கின்றன.
மோடி தேர்தல் தொடர்பான தனது முதல் பயணங்களில் ஒன்றாக பஞ்சாபிற்குச் சென்றிருந்தார். மோடி கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் பேரணி மிகப்பெரிய தோல்வியாக இருந்தது என்பதையே அனைத்து தகவல்களும் சுட்டிக் காட்டுகின்றன. அந்த இடத்தில் கூடுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் பேர்கூட அங்கே திரண்டிருக்கவில்லை. மோடியால் 2021 நவம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் மிகவும் சங்கடமான முறையில் திரும்பப் பெறப்பட்ட விதம் அரசு மற்றும் சங்பரிவார் அணிகளிடம் உத்தரப்பிரதேசம், ஹரியானாவில் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறாக அவர்கள் உருவாக்குகின்ற அனுதாபம் பாஜகவை முன்னோக்கி எடுத்துச் செல்லாது என்றே நான் கருதுகிறேன்.
உத்தரப்பிரதேசத்திற்கான போர்
தேசிய தலைநகர் மற்றும் தேர்தலுக்கு உட்பட்ட உத்தரப்பிரதேசம், பஞ்சாபில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இந்த கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், உத்தரப்பிரதேசத்தில் நடக்கப் போகின்ற போர் பாஜகவிற்கும், சங்பரிவாரில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகவே இருக்கிறது. குஜராத்தில் 2000களின் முற்பகுதியில் மோடி உருவாக்கிய மாடலை நெருக்கமாகப் பின்பற்றியே முதல்வர் ஆதித்யநாத் தலைமையின் கீழ் இறுதி ஹிந்துத்துவா ஆய்வகமாக உத்தரப்பிரதேச மாநிலம் முன்னிறுத்தப்பட்டது. வகுப்புவாத துருவமுனைப்பு தந்திரத்திற்கான தொடக்கமாக குஜராத் மாநிலம் இருந்த போதிலும், ஹிந்தி மையப்பகுதியில் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் புவியியல் நிலை, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் என்று பல காரணிகளால் அந்த மாநிலத்தில் அந்த திட்டத்திற்கான முன்னேற்றம் இன்னும் முக்கியமானதாக இருப்பதாக சங்பரிவார் உள்வட்டாரத்தினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பிரதிபலித்த சாதி, வகுப்புவாத சமன்பாடுகள் ஹிந்துத்துவா சமூக-அரசியல் அடையாளம் மாநிலத்தில் வலுப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டின. பாஜக, சங்பரிவாரத்தின் பிற அமைப்புகளின் தலைவர்கள் அந்தப் போக்கு 2022ஆம் ஆண்டில் மேலும் வலுப்படும் என்று மிகுந்த உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் இருந்து வந்தனர். 2020-21ஆம் ஆண்டில் தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் கோவிட்-19இன் பேரழிவுகரமான தாக்கம், அதை முறையாகக் கையாள்வதில் ஆதித்யநாத் அரசாங்கம் கண்ட தோல்வி, அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆண்டு முழுவதும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் போன்றவை ஹிந்துத்துவா சக்திகளின் ஆற்றலும், வீச்சும் குறைந்து வருவதை சங்பரிவார் தலைமைக்கும், பாஜகவிற்கும் தெளிவுபடுத்திக் காட்டி இருக்கின்றன.
தொற்றுநோயால் ஏற்பட்ட வீழ்ச்சி ‘ஒருபுறம் கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட சமூக, பொருளாதார நெருக்கடிகள், மறுபுறத்தில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களின் பாதகமான தாக்கம் போன்றவை மதம் மற்றும் வகுப்புவாத அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற ஹிந்துத்துவா பார்வைக்கு முற்றிலும் மாறாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சமூகத்தின் பெரும் பகுதியினரை வாழ்வாதாரம் குறித்த கவலைகள் தொடர்பான அளவுருக்களாக தங்களுடைய வாழ்க்கையைப் பார்க்கத் தூண்டி விட்டன. தொற்றுநோயின் முதல் அலையின் போதே அத்தகைய சமூகப் போக்கு காணப்பட்டது என்றாலும், தொற்று நோயின் இரண்டாவது அலை, 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அது மென்மேலும் தெளிவாகத் தெரிந்தது’ என்று இப்போதுள்ள நிலைமை குறித்து அரசியல் பார்வையாளர் ஷீத்தல் பி.சிங் கூறுகிறார். அந்தச் சூழல் நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் சமூக, சாதி சமன்பாடுகளை மோசமாக்குவதற்கான புதிய முயற்சிகள் தேவைப்படுகின்றன என்ற உணர்தலை பாஜக, சங்பரிவார் அமைப்புகளிடம் அதிகரித்து வைத்திருப்பதாக ஷீத்தல் சிங் சுட்டிக் காட்டுகிறார்.
‘ஆனாலும் 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 2013ஆம் ஆண்டு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அமித் ஷா திறம்படச் செய்ததைப் போல வகுப்புவாதக் கலவரங்களை வெளிப்படையாக உருவாக்குவதற்கான சூழல் இப்போது மாநிலத்தில் இல்லை. மாநிலத்தில் நடைபெற்றுள்ள விவசாயிகள் இயக்கத்தின் – அவர்களுடைய போராட்டத்தின் – மையப்பகுதிகளில் ஒன்றாக குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசம் இருந்தது. பாஜக, சங்பரிவாரங்களின் மதவெறி மற்றும் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த இயக்கம் மக்களை மீண்டும் மீண்டும் எச்சரித்து வந்தது. மீண்டும் மீண்டும் 2013-14 சூழலை அது தேசத்திற்கு நினைவூட்டிக் காட்டியது. மேலும் சிறுபான்மை முஸ்லீம் சமூகம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் மக்கள் மட்டத்தில் சங்பரிவார் அமைப்பினரின் ஆத்திரமூட்டல்களுக்குள் தாங்கள் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனத்துடன் இருந்தது. இத்தகைய சூழலில் உத்தரப்பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளைக் கொண்டுள்ள உத்தரகாண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வகுப்புவாதச் சூழலை மோசமாக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த புதிய நுணுக்கமான விளையாட்டிற்குத் தெளிவான எடுத்துக்காட்டாகவே இப்போது நடத்தப்பட்ட தர்ம சன்சத்கள் இருந்தன’ என்று ஷீத்தல் சிங் கூறுகிறார்.
முஸ்லீம் சிறுபான்மையினரை மாஃபியாக்கள், குண்டர்கள் என்று சொல்லி அவர்களை ஒடுக்க வேண்டும் என்ற அழைப்பை தர்ம சன்சத்கள் மற்றும் ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விடுத்த பிறகும் அவர்களுடைய இலக்கிற்கு ஏற்ற அளவிலான வகுப்புவாத துருவமுனைப்பு எட்டப்படவில்லை என்பதை சங்பரிவார் உள்வட்டாரத்தினர் ஒப்புக் கொள்கிறார்கள். மாநிலத்தில் 2014 மக்களவைத் தேர்தல் மற்றும் 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு மிகவும் சாதகமான சூழல் இருந்ததாகக் கருதுகின்ற அவர்கள் தற்போதுள்ள சூழல் அதைப் போன்று இருக்கவில்லை என்கின்றனர். அத்தகைய சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் தொடரப்பட்டு வருகின்றன என்றே அந்த உள்வட்டாரத்தினர் கூறி வருகின்றனர். அத்தகைய முயற்சியின் ஒரு பகுதியாகவே பிரதமரின் காருக்கான பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது என்பது குறித்த பிரச்சாரம், மோடியின் உடல்நலம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை மையமாகக் கொண்ட பிரச்சாரங்களை முன்னெடுக்கும் வகையில் கூடுதல் ஹிந்துத்துவா அடையாளத்துடன் அவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு மீறல் நடந்த மறுநாளில் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக மந்திரங்களை ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் முப்பது நிமிட சந்திப்பை மோடி நடத்தினார். சரியாக அங்கே என்ன நடந்தது என்பதை தான் அறிய விரும்புவதாகவும், அது வெறுமனே பாதுகாப்பு குறைபாடு அல்லது மீறலாக இருக்கவில்லை என்றும் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் அந்த சம்பவம் குறித்து தனது கவலையை வெளியிட்டார்.
அதே நேரத்தில் பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக போபாலின் குஃபா (குகை) கோவிலில் பிரார்த்தனை செய்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதினார். பிரதமரின் பாதுகாப்பிற்காக மஹாகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர் கோவில்களிலும், மாநிலத்தில் உள்ள மற்ற முக்கிய கோவில்களிலும் மந்திரங்கள் ஓதப்பட்டன. பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்த திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் ‘இன்று மெஹர் காளிபாரி கோவிலுக்குச் சென்று, அன்னை காளிக்கு பிரார்த்தனை செய்து, சிவலிங்க அபிஷேகம் செய்தேன். பாரத மாதாவின் தவப்புதல்வனான நமது அன்புக்குரிய பிரதமர் திரு நரேந்திரமோடிஜிக்கு நீண்ட ஆயுளை வழங்கி அன்னை காளியும் போலேநாத்தும் ஆசீர்வதிக்கட்டும்’ என்று ட்வீட் செய்திருந்தார். அவ்வாறு மந்திரத்தை ஓதியவர்களில், தங்களுடைய பிரார்த்தனைகள் குறித்து ட்வீட் செய்தவர்களில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றோரும் அடங்கியிருந்தனர்.
போபாலில் உள்ள கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட ஆயுளுக்காக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ஜனவரி 6 அன்று மதச் சடங்குகளை நடத்தினார்
மத்திய உள்துறை அமைச்சகமும், பஞ்சாப் அரசும் பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணை நடத்த தனித்தனி குழுக்களை அமைத்துள்ள நிலையிலும் பாதுகாப்பு மீறல் குறித்த விவாதம் வேகமாகத் தொடர்கிறது. உள்துறை அமைச்சகம் அமைச்சரவை செயலகத்தில் பாதுகாப்புச் செயலராக உள்ள சுதிர் குமார் சக்சேனா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் இந்திய உளவுத்துறையின் (ஐபி) இணை இயக்குநர் பல்பீர் சிங், சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவர் எஸ்.சுரேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்று பலமுறை கூறியிருக்கிறார். அந்த சம்பவம் குறித்து மாநில அரசு விசாரித்து வருவதாகவும், அதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மாநில அரசின் இரு உறுப்பினர் கொண்ட விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி மெஹ்தாப் சிங் கில், உள்துறைச் செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறுகின்ற தேர்தல் பிரசாரத்தின் மூலம் இந்த விவகாரம் குறித்து பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே அரசியல் காழ்ப்புணர்வு தொடரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் இருந்த அந்த இருபது நிமிடங்கள் இந்தியாவின் பிரதமரின் அலுவலகத்தைச் சென்றடைந்துள்ள ஆகப் பெரிய தெருப் போராளியின் அடிவயிற்றைக் கலக்கியுள்ளன. சத்யபால் மாலிக்கிடம் அமித் ஷா கூறியவாறு அவர் தனது சுயநினைவை இழந்து விட்டதாகவே தெரிகிறது. அது ஏற்கனவே அதிக சூடுபிடித்திருக்கும் நமது அரசியலுக்கு நல்லதல்ல.
நரேந்திர மோடி ஒன்றும் நாகரிக ஜனநாயகத்தின் பண்பாடுகள், நடத்தைகளைக் கடைப்பிடித்து நாட்டின் பிரதமராகி விடவில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். கூட்டத்தை உற்சாகப்படுத்துவது, கும்பலைத் தூண்டுவது என்று தனக்கிருந்த திறமையைக் கொண்டே அவர் தனது சொந்தக் கட்சியின் தலைமை இடத்தைச் சென்றடைந்தார். அத்தகைய போக்கே அவரை ஹிந்து வலதுசாரி தளத்தில் ‘மறைமுகப் பெரும்பான்மை’ கொண்டவராக முடிவுக்குக் கொண்டு வந்தது. சந்தேகத்திற்கு இடமில்லாது திட்டமிடப்பட்டதாக அவரிடமிருந்த அந்த முரட்டுத்தனமே எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி போன்ற ‘பாரம்பரிய’ மூத்த பாஜக தலைவர்களைத் தடுமாறச் செய்தது. பாஜகவில் இருந்த முக்கியமானவர்களுக்கு அப்பால் மன்மோகன் சிங் அல்லது அடல் பிஹாரி வாஜ்பாயி போன்றவர்களின் கண்ணியமான பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக மோடியிடமிருந்த கரடுமுரடான தன்மை வரவேற்கத்தக்க வகையிலே உடல்ரீதியான பலமாகக் காட்டப்பட்டது.
ஆனாலும் நிச்சயமற்றவராக, பயத்தில் உறைந்து போன மனிதராக புதியதொரு நரேந்திர மோடியை ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் அவர் இருந்த அந்த இருபது நிமிடங்கள் நமக்கு இப்போது வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.
மோடி இன்னும் பத்து வயது இளையவராக இருந்திருப்பாரேயானால், அவர் தைரியமான இரண்டு எதிர்வினைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்றே நம்பலாம். முதலில் தனது காரை விட்டு வெளியே வந்து, சாலை மறியல் செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் நடந்து சென்று, அவர்களுடன் எவ்விதச் சிரமமுமின்றி அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பார். அனைவரின் மனதில் அவரைப் பதியச் செய்யும் வகையிலே தொலைக்காட்சிக் காட்சிகளை அது உருவாக்கிக் கொடுத்திருக்கும். அவர் அடிக்கடி பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி, தன்னை வணங்கி நிற்கின்ற வெகுஜன மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவராகவே இருந்திருக்கிறார். எனவே போராட்டக்காரர்கள் எந்த வகையிலும் அச்சுறுத்துவதாகவோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதாகவோ இருந்திராத நிலையில் அதுபோன்று அவர் நடந்து கொண்டிருந்தால் பாதகமான சூழ்நிலையிலும் தயங்காத துணிச்சலான தலைவர் என்று அவர் அடையாளம் காணப்பட்டிருப்பார்.
அவ்வாறாக இல்லையெனில் அதற்கு மாறாக தனது அலுவலகத்தின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சரை அழைத்து, மத்தியப் படைகளை (சில கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த) விரைந்து வந்து தன்னுடைய வழியிலிருந்து போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை அகற்றுவதற்கான உத்தரவை பிரதமர் கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அதிகாரம் மிக்க அரசின் ஆற்றல் மிக்க பிரதமர் ஓரிடத்தைக் கடந்து செல்லும் உரிமையை யாரும் அவருக்கு மறுத்து விட முடியாது என்ற எளிய செய்தியை அவர் அனைவருக்கும் உறுதிப்படுத்திக் காட்டியிருப்பார். பயமில்லாத துணிச்சலான அந்தப் பிரதமர் அமைதியாகப் போராடுகின்ற விவசாயிகளிடம் மாட்டிக் கொண்டவராக தான் காணப்படுவதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் செய்து விடாமல் கேமரா, நாடகம் மீது எப்போதும் கண் வைத்திருக்கும் அந்த மனிதர் தன்னுடைய காருக்குள்ளேயே உறைந்து போய் அசையாமல் அமர்ந்திருந்தார்.
ஃபெரோஸ்பூர் பேரணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தளத்தில் -பல்லாயிரக்கணக்கான காலி நாற்காலிகளுடன் 3,032 பேருக்கு மேல் அங்கே கூடியிருக்கவில்லை என்று உள்ளூர் உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது – மிகப் பரிதாபகரமான எண்ணிக்கையில் மிகக் குறைவான எண்ணிக்கையில் கூடியிருந்த கூட்டத்தைப் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்பதை அனுமானிப்பது தர்க்கரீதியான சாத்தியம் கொண்டதாகவே இருக்கிறது. பஞ்சாபை திரும்பப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் அஸ்வமேத யாகத்தின் நவீன அமலாக்கமாகவே பாஜகவால் அந்தப் பேரணி திட்டமிடப்பட்டிருந்தது. பேரணி ஏற்பாட்டாளர்களின் வசம் நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார அரசியல் கட்சியின் அனைத்து வளங்களும் இருந்தன. மிக மோசமான மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கப்பட்டாலும், யாராலும் வெல்ல முடியாத நரேந்திர மோடி இன்னும் யாருக்கும் தலைவணங்காதவராக இருக்கிறார்; பஞ்சாபிற்கு நேரில் வந்து, கூட்டத்தைத் தன்வசப்படுத்துகின்றவராக தான் இன்னும் இருப்பதைக் காட்டுவார் என்பதை பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற மக்களுக்குச் சொல்கின்ற வகையிலே அவர்களுடைய நோக்கம் மிகவும் வெளிப்படையாக தெளிவாகவே இருந்தது. ஆனால் அந்த திட்டம் மிகவும் தவறுதலாகச் சென்று, நம்பிக்கையிழக்கச் செய்யும் பதற்றமான தருணத்தையே அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது. என்றும் தனக்கான வழியில் சென்ற அந்த மனிதர் தன்னுடைய தோல்வியால் எழுந்த பயத்தை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார்.
அந்த ஃபெரோஸ்பூர் நாடகம் மிகப் பெரிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. கட்டற்ற அரசு அதிகாரத்தின் உச்சத்தில் ஏழு ஆண்டுகள் எதிர்ப்புகள் எதுவுமின்றி செலுத்தி வந்த மேலாதிக்கம் பிரதமரிடம் தெய்வீக உரிமைக்கான உணர்வை வளர்த்தெடுத்துள்ளது. அது பாதுகாப்பு, உளவுத்துறை மூத்த அதிகாரிகளிடையிலும் பொறுப்பற்ற மெத்தனத்தை உருவாக்கியுள்ளது. பெரும்பாலும் அமைச்சர்கள், பிரதமர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுபவர்களே அரசியல்வாதிகளின் பாதுகாப்புக் கவசத்தில் ஏற்பட்டிருக்கும் ஓட்டைகளை முதலில் கண்டறிபவர்களாக இருப்பார்கள் எனும் போது, மோடியின் விஷயத்தில் விளக்குவதற்குத் தேவையான மர்மம் அதிகம் இருக்கவில்லை.
தன்னம்பிக்கை, சுயதிருப்தி கொண்ட அந்த மனிதர் எந்தவொரு குறையையும், குறைபாட்டையும், தோல்வியையும் ஒப்புக் கொள்ளாதவராகவே இருந்திருக்கிறார். தாங்கள் செய்வது எந்த அளவிற்கு முட்டாள்தனமாக இருந்தாலும், தங்களுடைய தலைவர் எப்போதும் தங்களை (குறைந்தபட்சம் பொதுவெளியில்) பாதுகாப்பார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். ஜனநாயக அரங்கில் தன்னை ஒன்றுமறியாதவர் என்று ஊகிக்க அவர் எவரையும் அனுமதிக்க மாட்டார். தவறிழைக்காதவர் என்ற இத்தகைய உணர்வே அதிகாரிகள், ராணுவத் தளபதிகள், உளவுத்துறைத் தலைவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.
ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் அவர் இருந்த அந்த இருபது நிமிடங்களுக்குப் பிறகு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள்ளாகவே, ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று – அவர்களில் பலரும் தமக்கு வேலையற்ற வேலைகள் அளிக்கப்படும் என்று நம்புகிறவர்கள் – அந்த சம்பவத்தின் பின்னணியில் சதி இருக்கிறது என்று முடிவு செய்திருந்தனர். தங்களது அறிக்கையில் ‘பிரதமரைச் சங்கடப்படுத்துவதற்காக, அவருக்கு தீங்கு விளைவிப்பதற்காக போராட்டக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களுடன் மாநில அரசு இயந்திரம் செய்து கொண்டிருந்த கூட்டின் வெட்கக்கேடான வெளிப்படையான காட்சியாகவே அது இருந்தது’ என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பொறுப்பான பதவிகளில் இருந்திருந்த அந்த அதிகாரிகள் இவ்வாறான பொதுப்படையான தீர்ப்பை வழங்குவதை விடுத்து நடந்தவற்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய பெருமூச்சு தவறாக வழிநடத்தப்பட்ட பாரபட்சம் மற்றும் விசுவாசத்தால் உருவானது என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. வயது முதிர்ந்து கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ஒருவரின் பாதுகாப்பின்மை உணர்வை, சித்தப்பிரமையைத் தூண்டுகின்ற வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு வகையான குடிசைத் தொழில் நாட்டில் இப்போது தோன்றியிருப்பதாகவே தெரிகிறது.
மிகவும் கவர்ச்சியான தலைவர்கள் கூட தங்கள் தோற்றங்களை பொதுவெளிக்காக வடிவமைத்துக் கொள்வதற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வடிவமைக்கப்படாத நெருக்கடியான தருணங்களில் மட்டுமே ஒரு தலைவனின் குணமும், திறமையும் உண்மையில் சோதித்து அறியப்படுவதாக இருக்கும்.
தான் தங்கியிருந்த பிரைட்டன் கிராண்ட் ஹோட்டல் மீது 1984ஆம் ஆண்டு ஐரிஷ் குடியரசு ராணுவம் நடத்திய குண்டுவெடிப்பை மார்கரெட் தாட்சர் ‘டவுனிங் ஸ்ட்ரீட் நினைவுக் குறிப்புகள்’ என்ற தன்னுடைய நூலில் நினைவு கூர்ந்திருந்தார். அப்போது ஆண்டுதோறும் நடைபெறுகின்ற கன்சர்வேடிவ் கட்சி கூட்டத்தில் தன்னுடைய திட்டமிடப்பட்ட உரையை ஆற்றி முடித்தார் ‘இது தொழிலாளர்களைத் தாக்கும் நேரம் அல்ல, மாறாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒற்றுமைக்கான நேரம்’ என்பதால் வரைவில் இருந்த அனைத்து பாரபட்சமான பகுதிகளைத் தான் நீக்கியதாகவும் அவர் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
தாட்சரிடமிருந்த பெருந்தன்மை, நிதானத்தை பஞ்சாப் முதலமைச்சரை நோக்கி பிரதமர் வைத்த தகுதியற்ற குற்றச்சாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்வாறு பேசிய அந்த ஒரே நொடியில், பொறுப்பான தேசியத் தலைவராக பிரதமர் முதிர்ச்சியடைந்து விட்டார் என்று இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையே மோடி உருவாக்கியுள்ளார். விரும்பத்தகாத அந்த பாரபட்சம் ஒருவரிடமிருந்து வருகிறது. பாரபட்சம் கொண்ட அந்த நபரை உலக அளவில் உயர்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியாக நாம் நம்ப வேண்டும் என்று அவரது கூட்டாளிகள் விரும்புவது உண்மையில் ஆச்சரியம் தருவதாகவே இருக்கிறது.
இத்தகைய தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதமருக்கு எதிராக நிறுத்துவதற்கான தந்திரமும் அவர்களிடம் இருந்து வருகிறது. ஹிந்து நலன்களுக்கு விரோதமான வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் கீழ், சீக்கிய கூறுபாடுகளைக் கொண்டு தீட்டப்பட்ட சதியைக் கண்டறிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டில் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற ஹிந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க வேண்டிய மோடியின் தேவையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சீக்கியர்களை இவ்வாறு மற்றவர்களாக வேறுபடுத்திக் காண்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி நிச்சயம் தேசியப் பேரிடரை உருவாக்குகின்ற செயலாகவே இருக்கும்.
https://thewire.in/politics/narendra-modi-nervous-punjab-flyover நன்றி: வயர் இணைய இதழ் தமிழில்: தா.சந்திரகுரு
சிறுபான்மையினரைத் தொடர்ந்து துன்புறுத்துவதைத் தவிர இந்தியச் சமூகம் குறித்த வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடி அல்லது பாஜகவிடம் காணப்படவில்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல்
எழுத்தாளரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநருமான ஆகார் பட்டேலின் நேர்காணலை தி வயர் இணைய இதழ் டிசம்பர் 11 அன்று வெளியிட்டது. பணமதிப்பு நீக்கம், நான்கு மணி நேரத்துக்குள்ளாக நாடு தழுவிய பொதுமுடக்கம் குறித்த அறிவிப்பு வெளியிட்டது போன்ற அதிரடி முடிவுகள் ஏற்படுத்திய விளைவுகள் உள்ளிட்டு மோடி ஆளுமையின் கீழ் உள்ள இந்தியா குறித்த ஆகார் பட்டேலின் பகுப்பாய்வு, வகுப்புவாத துருவமுனைப்பை ஏற்படுத்துவதற்கு அப்பாற்பட்டு பாஜக, ஆர்எஸ்எஸ்சிடம் வேறு எந்தவொரு திட்டமோ அல்லது சித்தாந்தமோ இல்லாதது போன்றவற்றை உள்ளடக்கியதாக அந்த நேர்காணல் அமைந்திருந்தது. மோடி நிர்வாகத்தின் சாதனைகள் அல்லது தோல்விகளை மதிப்பிடுவதற்கு 1950களுக்கு முந்தைய அரசாங்கத் தரவுகள் மற்றும் உலகளாவிய குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ள பட்டேலின் சமீபத்திய புத்தகமான ‘மோடி காலத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள விலை’ (பிரைஸ் ஆஃப் மோடி இயர்ஸ்) குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
நேர்காணலின் முழு எழுத்தாக்கம் கீழே உள்ளது. அந்த நேர்காணலை இங்கே காணலாம்.
கரண் தாப்பர்: வணக்கம். க்ளென்லிவெட் புக்ஸ் உதவியுடன் நடத்தப்படும் தி வயர் இணைய இதழுக்கான சிறப்பு நேர்காணலுக்கு உங்களை வரவேற்கிறோம். நரேந்திர மோடியின் ஆதிக்கத்தில் ஏழு ஆண்டுகள் முடிந்த பிறகும், மோடியின் குணாதிசயம், அவரது தலைமைப் பாணியை எவ்வாறு புரிந்து கொள்வது என்ற முக்கியமான கேள்விகள் உரிய பதிலுக்காக இன்னும் காத்து நிற்கின்றன. சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘மோடி காலத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள விலை’ (பிரைஸ் ஆஃப் மோடி இயர்ஸ்) என்ற தலைப்பிலான புத்தகம் மிகத் துல்லியமாக அந்தச் சிக்கல் குறித்து பேசியிருக்கிறது. அனைவராலும் நன்கு அறியப்பட்டிருக்கும் பத்திரிகையாளர், கட்டுரையாளரான ஆகார் பட்டேல் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.
ஆகார் பட்டேல்! மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நரேந்திர மோடி எனும் தலைவரிடம் உள்ள குணாதிசயக் குறைபாடுகளின் மூலம் அவரது தலைமையில் உள்ள இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த தரவுகளையும், உண்மைகளையும் விளக்குவதே நோக்கம் என்று உங்களுடைய புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறீர்கள். இன்றைக்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவருடைய குணாதிசயங்கள், தலைமைத்துவ பாணி மீதே நான் குறிப்பாக கவனம் செலுத்த விரும்புகிறேன். அவரைப் பற்றி ‘அவர் தீர்க்கமானவர், முழுமையான உறுதிப்பாடு கொண்டவர், வெளிப்படையானவர், கற்றுக் கொள்ளாதவர், ஆற்றல் மிக்கவர், கவர்ச்சியானவர். உண்மைகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்கின்ற சில சமயங்களில் அவரிடம் துணிச்சலும் இருக்கிறது’ என்று எழுதியுள்ளீர்கள். பிரதமராக இருப்பவர் ஒருவரின் குணாதிசயங்கள் ‘தீர்க்கமானவர்’, ‘ஆற்றல் மிக்கவர்’, ‘துணிச்சல் நிறைந்தவர்’ என்றிருப்பதுடன் ‘கற்றுக் கொள்ளாதவர்’ என்ற கலவையாக இருப்பது கவலைக்குரியது என்பதாகவே நான் பார்க்கிறேன். அப்படி நான் கூறுவது தவறாக இருக்குமா?
ஆகார் பட்டேல்: இல்லை. நீங்கள் எதுவும் தவறாகச் சொல்லி விடவில்லை. குறைபாடுகள் நம் அனைவரிடமும் இருப்பதாகவே நினைக்கிறேன்; அந்தக் குறைபாடுகள் நமது சூழ்நிலைகளால், நம்முடன் சேர்ந்து வேலை செய்பவர்களால் எந்த அளவிற்கு குறைவாகக் காணப்படுகின்றன என்பதுதான் இங்கே முக்கியம். மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையுடன், தன்னுடைய கட்சிக்குள் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல், அதிக உறுதிப்பாடு கொண்டவராக மோடியைப் போன்ற ஆற்றல் மிக்க ஒருவரின் குணாதிசயங்கள் அவரிடமுள்ள விவரங்களுக்குள் சென்று விடக்கூடாது என்ற குறைபாட்டை மீறிச் செல்பவையாகவே இருக்கின்றன. கடந்த காலத்திலிருந்து விலகி வேறு முடிவெடுக்க விரும்பும் ‘தீர்க்கமான’ ஒருவருக்கு, அது கவலை அளிப்பதாகவே இருக்கும். உண்மையில் அது ஆபத்தானதுமாகும்.
கரண் தாப்பர்: உண்மையில் நீங்கள் அந்த வாக்கியத்தில் பயன்படுத்தியுள்ள ‘தீர்க்கமான’ மற்றும் ‘கற்றுக் கொள்ளாத’ என்ற இரண்டு உரிச்சொற்கள் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தான் என்ன செய்கிறோம் என்பதில் ‘உறுதியாக’, ‘நிச்சயமாக’ இல்லாமலேயே இன்னும் முன்னேறிச் சென்று அதைச் செய்வதில் அவர் உறுதியுடன் இருக்கிறார்.
ஆகார் பட்டேல்: மோடி அதை ஏற்கனவே நம்மிடம் சொல்லியிருக்கிறார். பத்திரிகையாளர் மது கீஷ்வருடனான அற்புதமான வீடியோ நேர்காணல் உள்ளது. அதில் தன்னுடைய செயல்பாடுகளைப் பற்றி மோடி விரிவாகப் பேசியிருக்கிறார். அது ஏற்கனவே அவர் பதினோரு ஆண்டுகள் முதல்வராக (குஜராத் மாநிலத்தின்) இருந்த பிறகு 2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்ட நேர்காணல். தன்னைப் பொறுத்தவரை கோப்புகளை வாசிப்பது கற்றலுக்காக புத்தகங்களைப் படிப்பதைப் போன்று இருப்பதால், தான் கோப்புகளைப் படித்துப் பார்ப்பதில்லை என்றும் அதற்கு மாறாக அந்தக் கோப்புகளைப் பற்றி இரண்டு நிமிடம் சுருக்கமாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டு, அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பதாகவும் மோடி அந்த நேர்காணலில் கூறியிருந்தார். மிகவும் தீர்க்கமானவர், அரசியல் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் என்று தான் நம்புகின்ற விஷயங்களைச் செய்ய விரும்புகிறவர் அவர் என்பது போன்றவை உண்மையில்லை என்றால் அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அவையிரண்டும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதாலேயே இந்தியா பல்வேறு விஷயங்களில் இன்றைய நிலைமைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
கரண் தாப்பர்: நீங்கள் கூறிய அந்த இரண்டு விஷயங்களைப் பிரித்து ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம். பிரதமராக இருக்கும் ஒருவர் அடிக்கடி எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை தன்னிடமுள்ள விடாமுயற்சி, செறிவு, விவரம் மற்றும் கோப்புகளைப் படிப்பதன் மூலம் சிக்கல்களைப் புரிந்து கொள்வதன் அடிப்படையில் எடுப்பதில்லை; அதிகாரி ஒருவர் அளிக்கின்ற இரண்டு நிமிடச் சுருக்கத்தின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கிறார் என்ற மது கீஷ்வரின் கதையை உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? அது கேவலமான, மிகவும் சாதாரணமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமராக இருக்கும் ஒருவர் உண்மையிலேயே இப்படித்தான் நடந்து கொள்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆகார் பட்டேல்: அது மது கீஷ்வர் சொன்ன கதை அல்ல; அவையனைத்தும் மோடியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். அவை வீடியோவில் இருக்கின்றன. அதே பாணியில்தான் அவர் ஏறத்தாழ பன்னிரண்டு வருடங்களை மாநில முதல்வராகக் கழித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அதுபோன்று இருப்பது மிகவும் வசதியாகவே இருந்திருக்கிறது என்பதால் அவர் உண்மையைச் சொல்லியிருக்கிறார் என்றே நம்பலாம்.
கரண் தாப்பர்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது நேரடியாக குதிரையின் வாயிலிருந்தே கிடைத்திருக்கிறது. தானே அவ்வாறு கூறியிருப்பதன் மூலம், தனது வார்த்தைகள் மூலமே அவர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.
ஆகார் பட்டேல்: அவ்வாறு இருப்பதை ஒரு மோசமான விஷயம் என்று அவர் பார்த்தார் என்று நான் நினைக்கவில்லை. அவரை ஆதரிப்பவர்கள், கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் சரியானதையே செய்திருக்கிறார் என்று நினைப்பவர்கள் – இப்போது அவருடைய எட்டாம் ஆண்டில் இருக்கிறோம் – அதை மோசமான விஷயம் என்று நினைக்கவில்லை. அவர் கடந்த காலத்தை தீவிரமாக உடைத்தெறிந்தவர், நல்ல காரியங்களை மட்டுமே செய்தவர், செய்து கொண்டிருப்பவர் என்றே அவர்கள் அனைவரும் நினைத்து வருகிறார்கள். அவருடைய மோசமான முடிவுகள் பற்றி எனக்கு வேறுவிதமான கருத்துகள் இருந்தாலும், எந்த விவரங்களுக்குள்ளும் சென்று விடக் கூடாது என்று தொடர்ந்து இருந்து வருகின்ற அவரைப் பற்றி அவருடைய ஆதரவாளர்கள் மோசமாக நினைக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். 2014ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற அவருடைய அவசர முடிவுகளே நம்மைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
கரண் தாப்பர்: ‘மோசமாக எடுக்கப்பட்ட முடிவுகள்’ என்று நீங்கள் சொன்ன அந்த விஷயத்திற்கு சிறிது நேரம் கழித்து வருகிறேன். ஒரு கணம் முன்பாக தன்னை மோடி பார்த்துக் கொள்ளும் விதம் குறித்து நீங்கள் சொன்ன அந்த மிக முக்கியமான வாக்கியத்தின் இரண்டாம் பகுதியைப் பற்றி முதலில் பேசலாம் என்று நினைக்கிறேன். ‘தன்னை ஒரு வீரதீரர் என்றே மோடி பார்த்துக் கொள்கிறார். ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர ஆசை அவரிடம் உள்ளது. எதையாவது செய்திட வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் இருக்கிறது. ஆனால் அது என்னவென்று தெரியாமல் இருப்பதும், மிகவும் ஆழமாக அல்லது விவரமாக இருப்பதற்கான ஆர்வம் அவரிடம் இல்லாமல் இருப்பதுதான் இந்தியாவை வழிநடத்துகின்ற அவரது பாணியின் மூலம் விளைந்துள்ளது’ என்று எழுதியிருக்கிறீர்கள். இவையெல்லாவற்றையும் விட, பேச்சுவழக்கில் நாம் ‘பெருவெடிப்பு’ என்று சொல்கின்ற மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அவர் விரும்புகிறார் என்று நீங்கள் கூற வருகிறீர்களா?
ஆகார் பட்டேல்: அப்படித்தான் நினைக்கிறேன். எப்பொழுதும் – அல்லது பெரும்பாலான நேரங்களில் – தன்னை மூன்றாம் நபராகக் குறிப்பிட்டுக் கொள்பவர், அமெரிக்க அதிபரைச் சந்திக்கச் சென்ற போது தான் அணிந்திருந்த உடையில் தனது பெயரைப் பொறித்துக் கொண்டு சென்றவர், தனக்கு ஐம்பத்தியாறு அங்குல மார்பு இருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒருவர் தன்னைப் பற்றி தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சுயபிம்பத்தை நம்மிடம் வெளிப்படுத்துபவராகவே இருப்பார் என்றே நினைக்கிறேன். அவரது அந்தக் குணம் நீடித்து இருப்பதாகவே உள்ளது. முதலமைச்சராக, பிரதமராக தான் இருந்திருக்கும் ஆண்டுகளில் தன்னை அவர் இப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதை உண்மையில் நம்மிடம் காட்டிக் கொண்டே இருப்பவராகவே அவர் இருந்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடனான சந்திப்பின் போது நரேந்திர மோடி அணிந்திருந்த உடையில் பொறிக்கப்பட்டிருந்த அவரது பெயர்
கரண் தாப்பர்: இந்த இடத்தில் சற்றே நிறுத்தி விட்டு, அதனால் உருவாகியுள்ள பிம்பத்தைப் பார்ப்போம். தன்னை ஒரு ஹீரோவாகப் பார்த்து பெரிய அளவில் தீர்க்கமான முறையில் நடிக்க விரும்புகின்ற மனிதர் அவர். அடுத்ததாக ‘கற்றுக் கொள்ளாதவர்’ என்று நீங்கள் குறிப்பிடுகின்ற மனிதர் அவர். கோப்புகளைப் படிப்பதில்லை; முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ஆழமாக, விவரமாக இருக்கவில்லை என்ற போதிலும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்படுகிறார் என்று சொல்வது அவர் சிந்திக்காது செயலாற்றுகின்றவராக, பொறுப்பற்றவராக இருக்கிறார் என்று நமக்கு உணர்த்துவதாகவே இருக்கிறது இல்லையா?
ஆகார் பட்டேல்: அந்த இரண்டு வார்த்தைகள் அவரை மிகத் துல்லியமாக விவரிக்கின்றன என்றே நான் கூறுவேன். இருப்பினும் புத்தகத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று நான் குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்துக் கொண்ட உணர்வுயுடனேயே அவை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அவருடைய பதவிக் காலம் குறித்து ஆய்வு செய்த எவரொருவரும் – அவருடைய செயல்திறன் என்னவென்பதை தரவுகள் காட்டுகின்றன – நீங்கள் இப்போது பயன்படுத்திய அந்த வார்த்தைகளைத் தவறானவை என்று நினைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
கரண் தாப்பர்: எனவே நீங்கள் சித்தரித்திருக்கும் பிம்பம் – பின்விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத பொறுப்பற்றவர், சிந்திக்காது செயலாற்றுகின்றவர் என்ற பிம்பம் அவருக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். தீர்க்கமானவர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில் அவர் நடிக்கவே விரும்புகிறார்.
ஆகார் பட்டேல்: அது முற்றிலும் சரியானது. மிகச் சரியாக அதைச் சொல்லியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். உண்மையில் அவர் தன்னுடைய செயல்களின் விளைவுகள் என்னவென்று கவலைப்படுபவரே இல்லை. அவரைப் பொறுத்தவரை மற்றவர்கள் தன்னை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதே மிகவும் முக்கியமானது.
கரண் தாப்பர்: சிந்திக்காது செயலாற்றுதல், பொறுப்பற்ற தன்மை, விளைவுகளைப் பற்றி கவலைப்படாதது போன்றவற்றின் விளைவாக நடந்துள்ளவை குறித்து எடுத்துக்காட்டுகளுடன் பார்வையாளர்களுக்குச் சொல்ல முடியுமா? அவற்றில் ஒன்றாக பணமதிப்பு நீக்கம் இருக்குமா? நான்கு மணிநேர கால அவகாசத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்தது அதற்குள் அடங்குமா?
ஆகார் பட்டேல்: அந்த முடிவுகளெல்லாம் அப்படித்தான் எடுக்கப்பட்டிருந்தன. அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அந்த முடிவின் கீழ் உள்ளவற்றைப் பார்க்க வேண்டும். தேசிய அளவிலான பொதுமுடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படுவதற்கு முன்னதாக அரசாங்கத்தில் யாரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது அல்லது யாரைத் தயார்படுத்தினார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இருநூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பிபிசி தாக்கல் செய்திருந்தது. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு யாரும் பதில் அளிக்கவில்லை. பொதுமுடக்கம் வரப் போகிறது என்பது பேரிடர் மேலாண்மை அல்லது நிதி அமைச்சகம் என்று அரசாங்கத்தில் இருந்த யாருக்கும் தெரியாது. அதனால் ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகவும் குழப்பமான, வலிமிகுந்த காலகட்டமாக இருந்திருக்கக்கூடிய (இருந்த) நிலைமையை எதிர்கொள்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான அவகாசம் அரசாங்கத்திற்குக் கிடைக்கவில்லை. அப்போது ஏற்பட்ட அந்த வலியை ஏதாவதொரு வகையில் குறைப்பதை உறுதி செய்வதற்கான அக்கறையும் அரசாங்கத்திடம் இருக்கவில்லை.
இரண்டாவது எடுத்துக்காட்டு, பணமதிப்பு நீக்க முடிவின் கீழ் இருந்த நடவடிக்கைகள். பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான அதே நாளில் – நவம்பர் 8 அன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தங்களுடைய செல்போன்களை வெளியே விட்டுவிட்டு வருமாறு அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அந்த நாளின் பிற்பகுதியில் அது நடக்கப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அமைச்சர்களுக்குத் தெரியாது, அவர்களின் துறைகளுக்கும் தெரியாது. அரசாங்கம் அவர்கள் யாரையுமே தயார் செய்திருக்கவில்லை. வரவிருப்பதை எதிர்கொள்ள தயாரிப்பு வேலைகள் தேவைப்படும் என்று அரசாங்கம் கருதவில்லை. அந்த செயலின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை மோடி புரிந்து கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. நாட்டில் என்ன நடந்திருக்கிறது என்பதை டிசம்பர் மாத இறுதியில் புரிந்து கொண்டபோது அவர் மிகவும் குழப்பமடைந்தார் என்றே நினைக்கிறேன். ஆனால் நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்ட போது அதன் விளைவுகள் குறித்து எதையுமே அவர் சிந்தித்திருக்கவில்லை. அரசாங்கமே அதற்குத் தயாராக இல்லாத நிலையில் ஏதாவது செய்யுமாறு தேசத்தை அவர் கேட்டுக் கொண்டார். அந்த இரண்டு நிகழ்வுகளிலும் அந்த முடிவுகள் குறித்து அரசாங்கத்திற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது, முதலில் சுடுவதைத் தேர்வு செய்து கொண்டு விட்டு பின்னர் அவர் குறிவைத்துப் பார்த்திருக்கிறார் என்பதையே உறுதியாகச் சொல்கின்றது.
கரண் தாப்பர்: நூற்றி முப்பத்தெட்டு கோடி மக்களைக் கொண்ட நாட்டின் பிரதமராக இருப்பவர் – தனக்கு நல்லது என்று தோன்றுபவற்றை ஆலோசனைகள் எதையும் பெறாமல், தன்னுடைய அமைச்சரவை உறுப்பினர்களைக்கூட கலந்தாலோசிக்காமல், தயாரிப்பு வேலைகள் எதையும் செய்யாமல், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிந்திக்காமல் உள்ளவராக இருக்கிறார் என்பதாக நீங்கள் ஏறக்குறைய சொல்ல வருகிறீர்கள். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உங்கள் முன்வைக்கிறேன்.
ஆகார் பட்டேல்: ஆம். அவரது கவர்ச்சியும், அதிகாரமும் அதிக அதிகாரம் இல்லாதவர்களுடன் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் இணைந்தே இருந்திருக்கின்றன. அது அவரைப் பொறுத்தவரை மேலும் தீங்கு விளைவிப்பதாகவே இருந்திருக்கிறது. (அருண்) ஜெட்லி, (நிர்மலா) சீதாராமன், (எஸ்) ஜெய்சங்கர், (பியூஷ்) கோயல் என்று இவர்களில் யாருமே தங்கள் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில்லை என்பதைப் பார்த்தாலே அந்த உண்மை உங்களுக்குத் தெரிய வரும். அவர்கள் அனைவருமே எல்லோராலும் பிரபலமானவராக அறியப்பட்ட ஒருவரை வேண்டாம் என்று சொல்லக் கூடியவர்கள் அல்ல. அவர்களால் அவரை மறுக்க முடியாது; அவருக்கு ஆதரவாக இருந்து எதையும் ‘வேண்டாம்’ என்று சொல்லக் கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பதே நம்மை இந்த நிலைமைக்கு இட்டு வந்திருக்கிறது.
கரண் தாப்பர்: இப்போது நாம் அவரைப் பற்றி நீங்கள் சொல்கின்ற மற்றொரு விஷயத்திற்கு – நீங்கள் கூறுவதைப் போல தொலைநோக்குப் பார்வை அவரிடம் இல்லாததே அவருடைய குணாதிசயங்கள், தலைமைப்பண்பு ஆகியவற்றை மேலும் மோசமாக்கி இருக்கிறது என்று மோடியைப் பற்றி நீங்கள் உருவாக்கியுள்ள பிம்பம் குறித்து பேசலாம். நான் இங்கே ‘சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு தொடர்ந்து சட்டங்களை உருவாக்குவது, அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வதை நிராகரிப்பதைத் தவிர இந்தியச் சமூகத்தைப் பற்றிய வேறு பார்வை எதுவும் மோடியிடம் இல்லை’ என்று நீங்கள் எழுதியுள்ளதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இரண்டு தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று ஏழாண்டுகள் ஆட்சி செய்தவருக்கு அதுபோன்ற தொலைநோக்குப் பார்வை எதுவுமில்லை என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?
ஆகார் பட்டேல்: 1951ஆம் ஆண்டிலிருந்து ஜனசங்கம், பாஜக கட்சிகளின் கொள்கைகள், தேர்தல் அறிக்கைகளைக் கவனித்துப் பார்த்தால் உண்மையான நிலைத்தன்மையோ அல்லது சித்தாந்தமோ எதுவும் அவர்களிடம் இல்லை என்பதை உணர முடியும். இயந்திரமயமாக்கலுக்கு ஆதரவாக அவர்கள் இருந்தார்கள் என்றாலும் டிராக்டர்களைப் பயன்படுத்துவது காளைகளைக் அறுத்துக் கொல்வதற்கு ஒப்பானது என்பதால் அதை விவசாயத்தில் அவர்கள் விரும்பவில்லை. பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையைத் தவிர வேறு எந்தத் துறையிலும் இயந்திரமயமாக்கலை அவர்கள் விரும்பவில்லை. இந்தியர்களின் மாத வருமான வரம்பு இரண்டாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அதுதான் வாஜ்பாய் வரையிலும் இருபதாண்டுகளாக அவர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கையாக இருந்தது.
சுட்டிக்காட்டக் கூடிய அளவிற்கு குறிப்பிட்ட சித்தாந்தம் எதுவும் இந்தியாவின் அரசியல் சக்தியாகத் திகழ்கின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இருந்ததில்லை. அந்த அமைப்பு சிறுபான்மையினருக்கு எதிரான – குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான – நிலைப்பாட்டையே தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அந்த நிலைப்பாட்டை 2015க்குப் பிறகு, 2018க்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களில் நம்மால் காண முடியும்.
கரண் தாப்பர்: அப்படியானால் மோடி உருவான கட்சி, அரசியல் பாரம்பரியம் – ஜனசங்கம், பாஜக – அணுகுமுறைகளை, நிலைப்பாட்டை மட்டுமே எடுத்து வந்துள்ளன; அவர்களுக்குப் பின்னால் எந்தவொரு கருத்தியல் ஒத்திசைவும் இருக்கவில்லை; உண்மையில் தங்களிடமே முரண்பட்டு – மாதத்திற்கு ரூ.2,000 என்ற வருமான வரம்பு போன்ற தங்களுடைய நிலைப்பாடுகள் நியாயமற்றவை என்று கருதி தங்கள் நிலைப்பாடுகளை அடிக்கடி அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று நீங்கள் கூற வருகிறீர்கள். மோடியின் தொலைநோக்கின்மை அதன் பின்னணியில்தான் வெளிப்படுகிறதா?
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் இளைஞர் நரேந்திர மோடி
ஆகார் பட்டேல்: ஆம். அவர்கள் உள்ளீடற்றவர்களகவே இருந்தனர். எந்தவிதமான வருமானமும் இரண்டாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னது வெறும் சம்பளம் குறித்ததாக மட்டுமே இருக்கவில்லை. அவ்வாறு சொல்லி வந்த அதே கட்சிதான் இப்போது மிகவும் சாதாரணமாக தனியார்மயமாக்கலில் இறங்கி, மோடியின் தலைமையின்கீழ் அரசின் தலையீடுகளற்ற வணிகப் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக ஆத்மநிர்பார் பாதையில் அந்தக் கட்சிதான் சென்றது. அந்த அறிவிப்பு குழப்பம் நிறைந்தது என்று கட்சியின் ஆலோசகர்களான (அரவிந்த்) பனகாரியா உள்ளிட்டோர் கூறினர். அவர்களுடைய சிந்தனையில் உண்மையான தெளிவு என்பது இருந்ததில்லை. அவர்களிடம் ஒரேயொரு கொள்கை மாறாத்தன்மை மட்டுமே இருந்து வருகிறது. இந்திய முஸ்லீம்களைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவோம், அரசியல் ரீதியாக அவர்களை ஒதுக்கி வைப்போம் என்பதை மட்டுமே அவர்கள் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள். முஸ்லீம்களைத் துன்புறுத்துவது, சட்டத்தின் மூலம் தொடர்ந்து அவர்களைச் சித்திரவதை செய்வது என்பதை மிகவும் வெற்றிகரமாகச் செய்து கொண்டுமிருக்கிறார்கள்.
கரண் தாப்பர்: மோடி உருவான கட்சிகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட கருத்திலிருந்து நான் அவற்றை சித்தாந்த ரீதியாக சிந்திக்காமல் வெறுமனே அணுகுமுறை மட்டுமே கொண்ட கட்சிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் என்றே எடுத்துக் கொள்கிறேன். அப்படியென்றால் கடந்த ஏழு ஆண்டுகளில் மோடியின் நடத்தை மற்றும் செயல்திறன் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? அதுவும் அவருடைய தொலைநோக்குப் பார்வையின்மையையே சுட்டிக்காட்டுகிறதா? ஏனென்றால் ஜன்தன் யோஜனா, ஸ்வாச் பாரத் அபியான், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் சமூகத்தில் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கான தெளிவான பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும், அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த உறவுகளை வியத்தகு முறையில் மாற்றியிருப்பதைப் பார்க்கும் போது வெளியுறவுக் கொள்கை குறித்தும் அவருக்கு ஒரு பார்வை இருக்கிறது என்றும் மக்கள் கூறலாம். அவர்களின் வாதங்களை எவ்வாறு எதிர்கொள்வது?
ஆகார் பட்டேல்: அந்த திட்டங்களைப் பொறுத்தவரை அவர் பல முனைகளில் நியாயமான முறையில் சிறப்பாகச் செய்துள்ளார் – அல்லது அதற்கான முயற்சிகளைச் செய்துள்ளார் – என்றாலும் நேரடிப் பலன்கள் பரிமாற்றத்திற்கான ஜன்தன் திட்டம் உட்பட நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த திட்டங்கள் அனைத்துமே அவருக்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்களிடமிருந்து அவர் பெற்றுக் கொண்ட திட்டங்களே ஆகும். ஸ்வாச் பாரத் அபியான் என்பது நிர்மல் பாரத் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாகும். நிர்மல் என்பதற்கு ஸ்வாச் என்று பொருள். ஏற்கனவே இருந்த திட்டத்திற்கு ஏன் பெயர் மாற்றப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஆக இந்தப் பக்கத்தில் அரசு ஏதோ செய்து கொண்டிருக்கிறது என்று முன்வைக்கப்படுகின்ற திட்டங்கள் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியின் சில கூறுகளைக் கொண்டவையாகவே உள்ளன. அதுமட்டுமல்லாது அந்த திட்டங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டதைக் காட்டிலும் இப்போது மிகக்குறைவான திறனுடனே செய்யப்பட்டு வருகின்றன; எட்ட வேண்டிய இலக்கை அந்த திட்டங்கள் இன்னும் எட்டியிருக்கவில்லை என்ற வாதங்களுக்கும் இடமிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் தரவுகளின் மூலம் ஆவணப்படுத்தியும் இருக்கிறேன்.
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை அவர் செய்திருப்பவை, உலகத்துடன் இந்தியா தொடர்பு கொண்டிருந்த விதத்தின் போக்கையே மாற்றியிருக்கின்றன. அந்த மாற்றங்கள் மிகவும் எதிர்மறையாக இருக்கின்றன என்றே நான் கூறுவேன்; உலக நாடுகளிடம் இந்தியா குறித்து பெரும்பாலும் ‘குழப்பமான ஆனால் தீங்கற்ற நாடு’ என்ற எண்ணமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதில் தலையிட வேண்டியதன் அவசியத்தை உலக நாடுகள் பலமுறை உணர்ந்துள்ள வகையிலேயே இந்தியா தற்போது தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது.
மனித உரிமை பாதுகாவலர்கள் மீது இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து ஆம்ஸ்டர்டாமில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்
எச்சரிக்கைப் பட்டியலில் சேர்ப்பது; பொருளாதாரத் தடை விதிப்பதாக அச்சுறுத்துவது; நாம் இயற்றியுள்ள சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களை முன்வைப்பது என்று அமெரிக்கா முதல் ஐரோப்பா வரையிலும் உள்ள பல சுதந்திரமான அரசாங்க அமைப்புகள் அண்மைக்காலங்களில் இந்தியாவை எச்சரித்து வருகின்றன. இவையெல்லாம் நமக்கு முற்றிலும் புதியவையாகவே இருக்கின்றன. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக உலகத்துடனான – குறிப்பாக மேற்கத்திய உலகத்துடனான – நமது உறவில் இதுபோன்று நடந்து நான் ஒருபோதும் பார்த்ததில்லை. ஒன்றிய அரசின் சட்டங்கள் மூலமாக அல்லது பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் மூலமாக சிறுபான்மையினரைக் குறிவைத்து மோடி செய்திருக்கின்ற காரியங்கள், இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்த எச்சரிக்கை உணர்வை உலக நாடுகளிடம் கொண்டு போய் சேர்த்திருக்கின்றன. அதுபோன்று எழுந்துள்ள உணர்வு இதுவரை நடந்துள்ள மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளால் மறைந்து விடும் என்று நான் கருதவில்லை.
கரண் தாப்பர்: சுருக்கமாகச் சொன்னால் பொருளாதாரம் குறித்த வேறொருவரின் தொலைநோக்குப் பார்வையே மோடியின் தொலைநோக்குப் பார்வையாக இருக்கிறது. அவருக்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பார்வையாக மட்டுமே அது இருக்கிறது. முன்பிருந்ததைத் தொடர்வதைத் தவிர தனக்கென்று ஒரு பார்வையை உருவாக்கிக் கொள்வதாக மோடியின் பங்களிப்பு இருக்கவில்லை. வெளிநாட்டு விவகாரங்களில், உலக நாடுகளுடனான உறவுகளில் அதிக நெருக்கத்தை அவர் கொண்டு வந்திருக்கலாம் என்று கூறினாலும், அதே நேரத்தில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்த எச்சரிக்கை உணர்வை உலக நாடுகளிடம் உருவாக்கி, இந்திய ஜனநாயகத்திற்கு கேடுகளையே விளைவித்திருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்களை அவர் அதிகரித்திருக்கிறார் என்றே கூறுகிறீர்கள். உங்களுடைய பார்வையில் நேர்மறையைக் காட்டிலும் எதிர்மறையே அதிகம் இருக்கிறது.
ஆகார் பட்டேல்: ‘பொருளாதாரம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றே நினைக்கிறேன். அரசால் செய்து முடிக்கப்பட்டிருக்கும் கூறுகள், விஷயங்கள் யாவை என்று கேட்க விரும்புகின்றேன். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, கடந்த காலத்திலிருந்து அவர் தவறி விலகிச் சென்றிருக்கிறார். 2013, 2020 என்று நடத்தப்பட்டுள்ள இரண்டு அரசாங்க கணக்கெடுப்புகளில் உள்ள தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தைப் பார்த்தால், 2013இல் இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு ஐந்து கோடிக்கும் குறைவானவர்கள் வேலை செய்து வருவது தெரிய வரும். மிகவும் அழிவுகரமான விளைவை நாம் கண்டிருக்கிறோம். ஸ்வாச் பாரத் அபியான் போன்ற மற்ற விஷயங்கள் முந்தைய அரசின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன.
கரண் தாப்பர்: நரேந்திர மோடியின் ஏழாண்டு கால ஆட்சிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைப் பற்றி உங்களுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறீர்கள். ‘நமது அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்கின்ற மதச்சார்பின்மை, பன்மைத்துவம் குறித்து அரசியல் கட்சிகள் பேசிடாத ஓரிடத்திற்கு இந்தியாவை மோடி கொண்டு சென்றிருக்கிறார். ஒரு காலத்தில் வகுப்புவாதம் என்று கருதப்பட்டது இன்றைக்கு சட்டப்பூர்வமாகி இருக்கிறது; மதச்சார்பற்ற தன்மையானது போலி என்றாகி இருக்கிறது. ‘மோடி விளைவு’ என்றே அதை நாம் சட்டப்பூர்வமாக அழைக்கலாம். மோடி பிரதமராகப் பொறுப்பேற்று ஏழாண்டுகளுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட நாடாக இந்தியா இருக்கிறது என்ற கருத்துக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள், இல்லையா?
ஆகார் பட்டேல்: ஆம். அதற்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன். இந்த நிலைமையிலிருந்து பின்வாங்குவது சுலபமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பாஜக ஆட்சியிலிருந்து சென்று விட்டாலும், தானாக இப்போதைய நிலைமை மாறி விடும் என்றும் நான் நினைக்கவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அந்த நோய் சமூகத்திடம் தொற்றிக் கொண்டு விட்டது.
மோடி செய்த காரியங்களில் ஒன்று – குஜராத்திலும் அவர் அதைச் செய்திருந்தார் – சட்டப்பூர்வமாக அரசிடம் இருக்கின்ற அதிகாரத்தை தான் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, ஒரு சமூகத்திடம் அந்த அதிகாரத்தை பகிர்ந்தளிக்கின்ற காரியத்தைச் செய்திருக்கிறார். அதன் மூலம் கும்பல் ஒன்றை வைத்துக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதை முடக்கி விடலாம். அதை எதிர்த்து அரசால் எதுவும் செய்ய முடியாது. முட்டை விற்பனைக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை என்று குஜராத் மாநில பாஜக கூறுகின்ற போது, குஜராத் தெருக்களில் முட்டை வியாபாரிகளைத் தாக்கும் கும்பலை அவர்களால் வைத்துக் கொள்ள முடிகிறது. பாஜக எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற முடிவுகளை அந்தக் கும்பல் தன்வசம் எடுத்துக் கொள்கிறது. அதுபோன்ற விஷயங்களைச் செய்வதற்கு இனிமேல் அரசு தேவைப்படாது. எனவே 2014ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த இடத்திற்கு நாம் திரும்பிச் செல்வது மிகவும் கடினமாகவே இருக்கும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம் என்றே நினைக்கிறேன்.
கரண் தாப்பர்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் கும்பல்களை அவர் இப்போது சட்டப்பூர்வமாக்கியுள்ளார். சில வகையான கும்பல் ஆட்சியை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறார். காவல்துறையானது இனிமேல் ஒழுங்குபடுத்துவதற்கு சமூகத்திற்குத் தேவைப்படாது; பெரும்பான்மையினர் தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்வார்கள்.
ஆகார் பட்டேல்: உண்மையில் அது ஒருவகையில் சட்டப்பூர்வமானதாகவே ஆகியிருக்கிறது. மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக கண்காணிப்பாளர் ஒருவர் செயல்பட்டால், அது அவருடைய ‘நன்னம்பிக்கை’யின் காரணமாக நடந்தது என்பதால் அதை ஒரு குற்றமாகக் கருதக் கூடாது என்று சொல்கின்ற சட்டங்கள் நான் வசித்து வருகின்ற மாநிலமான கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் உள்ளன.
கரண் தாப்பர்: இதையெல்லாம் வைத்து ‘மோடி மாபெரும் அதிகாரம் கொண்டவராக பாஜக மூலமாக அல்லாமல், தன்னுடைய ஆட்கள் மூலமே அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்கிறார்; ஒரு மனிதர் கிட்டத்தட்ட தனியாளாக நம் நாட்டின் தன்மையை முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டார்’ என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.
ஆகார் பட்டேல்: அப்படித்தான் நினைக்கிறேன். இன்றைக்கு அவருடைய கட்சியில் அவரது ஆளுமை, சிந்தனை போன்றவை பெரும் செல்வாக்குடன் உள்ளன. அதற்கு மாறான நிலைமை இல்லை என்றே நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் அல்லது ஆர்எஸ்எஸ் தலைவரால் மோடிக்கு ஆணையிட முடியாது. அவ்வாறு செய்தால் தொண்டர்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள். நாட்டிலேயே நம்மிடம் உள்ள மிகவும் பிரபலமான தலைவராக மோடி இப்போது இருக்கிறார். தன்னை நேசிக்கும் மக்கள்தொகையில் பெரும்பகுதியினரை அவர் கட்டுப்படுத்துகிறார். எனது ஐம்பத்திரண்டு ஆண்டுகளில் இதுவரையிலும் நான் ஒரு தலைவர் போற்றப்படுவதைப் பார்த்திராத அளவிலே அவர் போற்றப்படுகிறார் என்றே நினைக்கிறேன். இந்த அளவிற்கான கவர்ச்சி, விருப்பம், புகழ், அதிகாரத்துடன் வேறு யாரும் நம்மிடையே இருந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.
கரண் தாப்பர்: இப்போது நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் இந்தியாவின் செயல்திறன் பற்றிய உண்மைகள் குறித்த பகுதிக்கு வரலாம். நேர்மையாகச் சொல்வதானால் அதுவே உங்கள் புத்தகத்தின் முக்கியமான பகுதியாகும். இந்தியாவின் செயல்திறனை அளவிடுவதற்கு ஐம்பத்தி மூன்று குறியீடுகளை மேற்கோள் காட்டி, இந்தியா அவற்றில் நாற்பத்தி ஒன்பதில் சரிவைக் கண்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்; இந்தியாவின் செயல்திறன் நான்கில் மட்டுமே மேம்பட்டிருக்கிறது. ‘…இருக்கின்ற பதிவுகள் விவாதம் அல்லது சர்ச்சைக்கு சிறிதும் இடமளிக்கவில்லை. 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் அளவும், வேகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. உலகத்துடன் இணைந்திருக்கப் போராடிய இந்தியா பல முனைகளில் தோல்வியையே கண்டிருக்கிறது. கவனிக்கத்தக்க மற்றும் அளவிடக்கூடிய வழிகளில் மோடியின் ஆட்சியில் இந்தியா சீரழிவையே கண்டிருக்கிறது’ என்பதே உங்கள் முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். தீர்ப்பின் அளவுகோலாக செயல்திறனை எடுத்துக் கொள்ளும் போது பிரதமராக மோடி மிகப் பெரிய தோல்வியைக் கண்டிருக்கிறார் என்றே நீங்கள் சொல்வது இருக்கிறதா?
ஆகார் பட்டேல்: ஆமாம். அதில் எந்தவொரு சர்ச்சையும் இருக்காது என்றே நினைக்கிறேன். மேலும் நான் குறிப்பிட்டுள்ள அந்தக் குறியீடுகள் உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், பொருளாதார புலனாய்வுப் பிரிவு போன்ற மிகவும் பழமைவாத அமைப்புகளிலிருந்து வந்தவை. நாம் அந்த நிறுவனங்களை ‘தாராளவாத இடது வகை’ நிறுவனங்களாகப் பார்ப்பதில்லை. பல விஷயங்களில் கவனிக்கத்தக்க வகையில் சரிவைக் கண்டிருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். பல வழிகளில் ஆபத்தான வகையில் சரிந்திருக்கிறோம். ஆனாலும் நம்மால் அதை அரசியல் விவாதப் பொருளாக மாற்ற முடியவில்லை. உண்மைகள் சர்ச்சைக்குரியவையாக மாறியிருக்கவில்லை. உலகப் பட்டினிக் குறியீடு போன்ற விஷயங்கள் வெளிவரும் போது தான் என்ன செய்கிறோம் என்பதைச் சொல்ல அரசாங்கம் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இருக்கின்ற உண்மை நிலவரம் – இந்த குறியீட்டு எண்கள் காட்டுவது என்னவென்றால், நாம் மிகவும் மோசமான இடத்திலே இருக்கிறோம். அதிலிருந்து வெளியேறுவது எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
கரண் தாப்பர்: தனது சாதனைகளை, தன்னுடைய அரசாங்கத்தைப் பாராட்டி மோடி நிகழ்த்துகின்ற உரைகளை வெற்றுப் பேச்சு என்று நீங்கள் சொல்கிறீர்கள் – அதுதான் நீங்கள் பயன்படுத்தி இருக்கின்ற துல்லியமான வார்த்தை.
ஆகார் பட்டேல்: அவருடைய அரசாங்கத்திடமுள்ள தரவுகளைப் பார்க்க வேண்டும். 2018 ஜனவரியில் இருந்து பதின்மூன்று காலாண்டுகளில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர் சரிவையே சந்தித்து வருகிறது. ஏன்? அதுகுறித்து நாம் விவாதிக்காது இருப்பதால் நமக்கு அதுபற்றி தெரியாது. ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் அல்லது ஐந்து மில்லியன் டன் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் சொல்லலாம். அதைத்தான் ஷா கூறினார். ஆனால் அங்கே நாம் எப்படிச் செல்லப் போகி்றோம், எப்போது செல்லப் போகிறோம்? ஆனால் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. உண்மையில் இங்கே உள்ள வாய்ச்சவடால்கள் வெற்றுப் பேச்சுகளாகவே என்னுடைய மனதில் தோன்றுகின்றன. அதுபோன்ற பேச்சுகள் எவ்வித அடிப்படையும் கொண்டிருக்கவில்லை.
நம்மிடம் பாகிஸ்தானைக் காட்டிலும் குறைவான வேலை பங்கேற்பு விகிதமே உள்ளது. இப்போது நமது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2014இல் நம்மைக் காட்டிலும் ஐம்பது சதவிகிதம் பின்தங்கியிருந்த வங்காளதேசத்திற்கும் பின்னால் சென்று விட்டது. அவர்கள் நம்மை எட்டிப் பிடித்தது மட்டுமல்லாது நம்மைக் கடந்து மேலே சென்று விட்டார்கள். இந்த வகையான செயல்திறனை வைத்துக் கொண்டு, மார்பைத் தட்டி ‘நான் உங்களுக்கு நன்மை செய்கிறேன்’ என்று கூறுவது வார்த்தைகள் முற்றிலுமாக அத்தகைய பேச்சுகளிடமிருந்து விலகி நிற்பதையே காட்டுகின்றன.
கரண் தாப்பர்: உண்மையில் முரண்பாடு என்னவென்றால், மோடியைப் பற்றி இதுபோன்ற இருண்ட, மோசமான, பழிக்கின்ற தீர்ப்புகள் இருந்து வருகின்ற போதிலும் அவர் நம்பமுடியாத அளவிற்கு பிரபலமாக இருந்து வருகிறார். அவருக்கிருக்கும் பிரபலத்தை – 2002இல் அவர் செய்தவை அல்லது செய்யாதவை என்றென்றைக்கும் பிரபலமானவராக அவர் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்ற அடிப்படையில் நீங்கள் விளக்கியுள்ளீர்கள். ‘ஆட்சியின் தரப்பில் விவாதிக்கப்படக்கூடிய தோல்வி இருப்பதை மக்கள் ஒப்புக் கொண்டாலும், அடையாளம் மற்றும் ஆர்வத்தைப் பொறுத்தவரை அவர்கள் விரும்பியதை வழங்குபவராகவே மோடி இருக்கிறார்’ என்றும் நீங்கள் எழுதியுள்ளீர்கள். ஏழு ஆண்டு கால மோடி ஆட்சியின் ஒட்டுமொத்த வீழ்ச்சியை மன்னிக்க, மறந்துவிட, கண்டுகொள்ளாமல் இருக்க மக்கள் தயாராகவே இருக்கின்றனர். ஏனென்றால் ஹிந்து அடையாளத்தையும், அவர்கள் ஏங்கிக் கொண்டிருப்பதற்கான உறுதியையும் அவர் அளித்திருக்கிறார். அதனாலேயே அவரை மக்கள் போற்றுகின்றார்கள்.
ஆகார் பட்டேல்: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இங்கே இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். ஒன்று தெற்காசியா முழுவதும் பெரும்பான்மைவாதமே இருந்து வருகிறது; நம்மிடையே உள்ள சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்துவதிலேயே நாம் செழிக்கின்றோம். நமது பிராந்தியத்தில் ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் அது பொருந்திப் போவதாக இருக்கிறது. நேருவும் (இந்திரா) காந்தியும் பிரதமர்களாக இருந்த பல ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார செயல்திறன் மோசமான நிலையில் இருந்தாலும் அவர்கள் இருவரும் மிகவும் பிரபலமாகவே இருந்தனர். எனவே இந்தியாவில் உள்ள ஜனநாயக, ஜனரஞ்சக அரசியல் ஒருவகையில் ஜனரஞ்சகத்திடமிருந்து செயல்திறனைப் பிரித்து வைப்பது ஏன் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
கரண் தாப்பர்: ஆட்சியாளர்களுடன் தங்களை உணர்வுப்பூர்வமாக அடையாளம் கண்டு கொள்வதாலேயே, ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார செயல்திறனை மக்கள் மன்னித்து மறந்து விடுகிறார்களா?
ஆகார் பட்டேல்: தங்களுடைய வாழ்க்கையில் நடப்பதற்கும் மக்கள் அவர்களைப் பொறுப்பாக்குவதில்லை.
கரண் தாப்பர்: மோடியின் ஏழு ஆண்டுகளில் மிக மோசமாகத் தவறவிட்டிருக்கும் வாய்ப்பையே இந்தியா பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதற்கான மிகத் தெளிவான குறிப்பு உங்கள் புத்தகத்தின் இறுதியில் உள்ளது. ‘நரேந்திர மோடியிடம் தேவையான மூலதனம் இருந்தது. கோடிக்கணக்கானவர்களின் வழிபாடு இருந்தது. எதிர்ப்பு என்பதே காணப்படவில்லை. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு – ஏதாவதொரு திட்டத்தை அவர் தன்னிடம் கொண்டிருந்தால், அதைச் செயல்படுத்த வேண்டுமென்று உண்மையிலேயே அவர் விரும்பியிருந்தால் – அந்த மாற்றங்களை அவரால் செய்திருக்க முடியும். அதைச் செய்யத் தவறியதாலேயே இந்தியா தன்னுடைய வாய்பை இழந்திருக்கிறது. வேறு யாருக்கும் அதைச் செய்வதற்கான அதிகாரம் இல்லை; அவரிடமோ அதற்கான தொலைநோக்குப் பார்வை அல்லது விருப்பம் என்று எதுவும் இருக்கவில்லை’ என்று எழுதியுள்ளீர்கள்.
ஆகார் பட்டேல்: இந்த அளவிற்கு பிரபலத்துடன், பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவராக, எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் நம்மிடையே ஒருவர் இருப்பார் என்று நான் நினைத்திருக்கவில்லை. தனது பாரம்பரியத்தை மட்டுமே அவர் வீணாக்கியிருக்கவில்லை என்றே நான் கருதுகிறேன் – அது ஒரு மிகச் சிறிய விஷயமாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். – ஆனால் இந்த நாட்டிற்கும், நடுத்தர வருமானத்திற்குக்கூட வாய்ப்பில்லாது நம்மிடையே இருக்கின்ற கோடிக்கணக்கான ஏழைகளுக்கும் பாதிப்பை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். அது ஒரு மிகப்பெரும் பேரழிவாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: இவ்வாறு வாய்ப்பைத் தவறவிட்டதன் விளைவாக, இந்தியாவின் எதிர்காலம் மங்கியிருப்பதாகக் கூறுகிறீர்களா? ‘வளர்ந்த நாடுகளின் வரிசையில் சேருகின்ற வாய்ப்பை இந்தியா என்றென்றைக்குமாகத் தவற விட்டுள்ளது’ என்றும், அது ‘இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சியின் ஆண்டுகள்’ என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆண்டுகள் தோல்வியைக் கண்டுள்ள மோடி ஆண்டுகளுடன் ஒத்துப் போனதன் விளைவாகவே நிகழ்ந்திருக்கிறது என்றும் எழுதியுள்ளீர்கள். ‘நடுத்தர வருமான வலையின் கடையிறுதியில் இந்தியா இருக்கும்’ என்று இறுதியில் எழுதுகிறீர்கள். நாடு பற்றி வழங்கப்பட்டிருக்கும் கேவலமான தீர்ப்பாக அது உள்ளது.
ஆகார் பட்டேல்: மிகவும் வருத்தமளிப்பதாகவே அது இருக்கிறது. ஆனால் உண்மைகளோ இவ்வாறாக இருக்கின்றன: 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை – மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலை செய்வதற்குப் போதுமான வயதில் இருந்த போது – மிகவும் சாதகமாக இருந்த ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்தது. ஆனால் 2014க்குப் பிறகு என்ன நடந்தது? தொழிலாளர் பங்கேற்பு விகிதம் – நாட்டில் வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் – ஐந்தில் ஒரு பங்காகச் சுருங்கி விட்டது. தான் பொறுப்பேற்ற போது இருந்த தொழிலாளர்களின் அளவை ஐம்பத்தியிரண்டு சதவிகிதத்திலிருந்து – அரசாங்கத் தரவுகளின்படி – நாற்பது சதவிகிதம் என்ற அளவிற்கு மோடி குறைத்து விட்டார். அந்த அளவு உலகிலேயே மிகக் குறைவாக, பாகிஸ்தானை விடக் குறைவானதாக இருக்கிறது. உலகின் மிகக் குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை கொண்ட பதினாறு நாடுகளில் ஒன்றாக இந்தியா இப்போது இருந்து வருகிறது.
கரண் தாப்பர்: மோடியின் குணாதிசயங்கள், குறைபாடுகள் மற்றும் பிரதமராக அவரது செயல்திறன் ஆகியவை குறித்து பின்வருமான முடிவிற்கு நாம் வருகிறோம்: தன்னை ஒரு ஹீரோவாகப் பார்த்துக் கொண்ட அவர் தான் செய்வது பற்றி சற்றும் சிந்திக்கவில்லை. தீர்க்கமானவராக இருந்தாலும் அவர் கற்றுக் கொள்பவராக இருக்கவில்லை என்பதால், பொறுப்பற்றவராக, சிந்திக்காது செயலாற்றுபவராகவே அவர் இருந்துள்ளார். அதனாலேயே மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் போன்ற முடிவுகளை அவர் இந்தியாவின் மீது திணித்தார்; நான்கு மணி நேர கால அவகாசத்தில் பொதுமுடக்கத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அவரது செயல்திறனின் மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். அவருக்கிருந்த மகத்தான அதிகாரத்தைக் கொண்டு நாட்டை அவர் மாற்றியிருக்கலாம், அவ்வாறு மாற்றுவதற்கான வாய்ப்பு இந்தியாவால் தவற விடப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வதைப் போல அதன் விளைவுகளாக இனிமேல் நாம் நடுத்தர வருமான வலையில் சிக்கி இருக்கப் போகிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தன்னுடைய சொந்த ஆதாயத்திற்காக இந்தியாவின் எதிர்காலத்தையே தவற விட்டிருக்கிறார்.
ஆகார் பட்டேல்: ஆமாம். அதைத்தான் அவர் செய்திருக்கிறார். நம்மைப் பிளவுபடுத்துவதில், வெறுப்பு மற்றும் பிரிவினையை விதைப்பதில் அவர் மிகப்பெரும் வெற்றியைக் கண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்; அதிலிருந்து நாம் விலகிக் கொள்வது மிகவும் கடினமானதாகவே இருக்கும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா சேருவதை உறுதி செய்வதில், குறைந்தபட்சம் அதற்கான பாதையைத் திட்டமிடுவதில் அவர் தோல்வியே கண்டிருக்கிறார். நம்மிடம் எந்தவொரு திட்டமும் இருக்கவில்லை. நாம் இப்போது கடந்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் பொருளாதாரரீதியாக மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கிறோம். அதிலிருந்து நாம் எளிதாக வெளியேறி விட முடியும் என்று நான் நினைக்கவில்லை.
கரண் தாப்பர்: ஆகார் பட்டேல்! இறுதியாக ஒரு கேள்வி – குறைந்தபட்சம் அண்மைக்காலத்திலாவது அரசியல் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அல்லது மோடியின் மங்காப் புகழ் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் மீள முடியாத பலவீனம் மோடி சகாப்தம் இன்னும் ஆண்டுக்கணக்கில் தொடருவதை உறுதி செய்யும் என்றே நான் நினைக்கிறேன்.
ஆகார் பட்டேல்: உண்மையில் அது தொடரும் என்றே நானும் நினைக்கிறேன். நாட்டின் பல பகுதிகளில் கட்டமைப்பு ரீதியான அனுகூலம் பாஜகவிற்கு இருக்கிறது; அவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளிடம் எந்தவிதமான ஆதார வளமும் இல்லை. அதற்கு (தேர்தல்) பத்திரங்கள் குறித்து மோடி இயற்றிய சட்டமே முதன்மையான காரணமாகும். இந்தக் கட்டமைப்பு வேறுபாடுகள் காரணமாக, அவருக்கிருக்கின்ற பிரபலத்தில் சில சமயங்களில் சரிவு ஏற்பட்டாலும், அரசியல் துறையில் முதன்மையான சக்தியாக உருவெடுத்திருக்கும் பாஜகவை அகற்றுவது கடினமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன். அத்துடன் நாட்டிலுள்ள சிறுபான்மைக் குழுக்களை முதன்மை இலக்காகக் கொண்டு அவர்கள் கவனம் செலுத்துகின்ற சட்டங்களும் நம்மிடம் இருக்கும்.
கரண் தாப்பர்: ஆனால் ஒரு நாள் நிச்சயம் பிரதமர் பதவியை மோடி துறக்க வேண்டி வரும்; தவிர்க்க முடியாமல் அவரது வயது அதை உறுதி செய்யும். அந்த நேரத்தில் பாஜக தொடருமானால், மோடியின் வாரிசு என்று பலரும் நம்புகின்ற அமித்ஷாவின் தலைமையின்கீழ் நாட்டின் எதிர்காலம் எவ்வாறாக இருக்கும் என்று பார்க்கிறீர்கள்?
ஆகார் பட்டேல்: அவர்களிடம் பெரும்பான்மைவாதத்திற்கு அப்பாற்பட்டு எந்தவொரு குறிப்பிட்ட சித்தாந்தமும் இருக்கவில்லை. நான் கூறியதைப் போல, தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்து பல ஆண்டுகளாக அவர்கள் கூறி வருபவற்றில் எந்தவொரு நிலைத்தன்மையும் காணப்படவில்லை. சகஇந்தியர்களை மிருகத்தனமாக நடத்துவதைத் தவிர வேறு திசையில் செல்வதற்கான எந்தவொரு வழிகாட்டுதலும் அவர்களுக்கு இல்லை. மோடிக்குப் பின்னர் வரப் போகின்ற எந்தவொரு வாரிசின் கீழும் இந்த நிலைமையே தொடரப் போகின்றது.
கரண் தாப்பர்: அது நிச்சயம் மனச்சோர்வடைய வைப்பதாகவே இருக்கும். எங்களுடைய பார்வையை அகலத் திறந்து வைத்தமைக்கு மிக்க நன்றி. பார்வையாளர்களில் பலரும் நீங்கள் அவர்களுக்குக் காட்டியிருப்பதை பார்த்தவர்களாக ஒருபோதும் இருந்து விடக் கூடாது என்று விரும்புபவர்களாகவே இருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். எச்சரிக்கையுடன் இருங்கள். ஆகார் பட்டேல்! பத்திரமாக இருங்கள்.
ஆகார் பட்டேல்: மிக்க நன்றி தாப்பர்.
https://thewire.in/government/full-text-modi-has-no-vision-for-indian-society-other-than-to-reject-inclusion-aakar-patel நன்றி: தி வயர் இணைய இதழ் தமிழில்: தா.சந்திரகுரு