யாதுமாகினாய் கவிதை – பிரியா ஜெயகாந்த்
தீபச்சுடராய் ஒளிர்விட்ட உனை கண்டு பிரகாசித்த வேளையில் எரிமலையாய் தகித்து வெதும்பினாய்
நெருப்பென்று நினைத்தேன் !
விதைத்ததை முளைக்கவைத்த உனை விளைநிலமாய் பார்த்த வேளையில்
பாலைவனமாய் வரண்டு போனாய்
நிலமென்று நினைத்தேன் !
தென்றலென படர்ந்த உனை இன்பமென ரசித்த வேளையில்
புயலாய் மாறி நிலைகுலைய வைத்தாய்
காற்றென நினைத்தேன் !
ஒடையாய் நடனித்த உனை ஒவியமாய் உருவகித்த வேளையில் காட்டாற்று வெள்ளமாய் தறிகெட்டுத் தலும்பினாய்
நீரென்று நினைத்தேன் !
நீலக் குடையென உனை தொட்டுவிடத் துடித்த வேளையில்
முடிவற்ற வெற்றிடமாய் ஊடுருவினாய்
ஆகாயமென்று நினைத்தேன் !
நீ யாரென்று கூறாது
ஒரு நிலையில்லா உருகொண்டு எனை
பல நேரம் அழ வைத்தாய்
சில நேரம் மகிழ வைத்தாய்
துயர் வரும் தருணம் துணிவை அளித்தாய்
அச்சத்தை அகற்றி அடியெடுக்க வைத்தாய்
சினம் கொண்ட சூழலில் நிதானிக்க செய்தாய்
உனை எதிர்கொள்ள போராடி
தோற்று துவண்டு
கட்டி இழுக்காமலும் வெட்டித் தள்ளாமலும் அமர்ந்த போது,
நான் நெருப்பல்ல நிலமல்ல காற்றல்ல நீரல்ல ஆகாயமல்ல
உன் மனம் என உணர்த்தி அமைதியை அளித்தாய் !!!.
கடவுளைத் தேடி கவிதை – பிரியா ஜெயகாந்த்
ஏழையின் தேடல் செல்வம் எனும் கடவுள்
செல்வந்தனின் தேடல் பாதுகாப்பு எனும் கடவுள்
மருத்துவனின் தேடல் நோயாளி எனும் கடவுள்
நோயுற்றவனின் தேடல் ஆரோக்கியம் எனும் கடவுள்
குழந்தையின் தேடல் தாய் எனும் கடவுள்
தாயின் தேடல் பாசம் எனும் கடவுள்
அனாதையின் தேடல் உறவு எனும் கடவுள்
துணையிழந்தவனின் தேடல் அன்பு எனும் கடவுள்
கண் இழந்தவனின் தேடல் பார்வை எனும் கடவுள்
ஊனமுற்றவனின் தேடல் ஊன்றுகோல் எனும் கடவுள்
பசித்தவனின் தேடல் உணவு எனும் கடவுள்
புசித்தவனின் தேடல் உறக்கம் எனும் கடவுள்
ஆசிரியரின் தேடல் சிறந்தமாணவன் எனும் கடவுள்
மாணவனின் தேடல் கற்றல் எனும் கடவுள்
அரசியல்வாதியின் தேடல் பதவி எனும் கடவுள்
தொண்டனின் தேடல் அங்கீகாரம் எனும் கடவுள்
போட்டியாளனின் தேடல் வெற்றி எனும் கடவுள்
வெற்றியாளனின் தேடல் பரிசு எனும் கடவுள்
படித்தவனின் தேடல் உத்தியோகம் எனும் கடவுள்
வியாபாரியின் தேடல் லாபம் எனும் கடவுள்
உழைத்தவனின் தேடல் கூலி எனும் கடவுள்
விதைத்தவனின் தேடல் மகசூல் எனும் கடவுள்
விவசாயியின் தேடல் மழை எனும் கடவுள்
மழையின் தேடல் மேகம் எனும் கடவுள்
நானும் தேடுகிறேன் என் கடவுளை !