புளி மடித்த காகிதத்தில் ஒட்டியிருந்த கவிதைகள் – மீரா
அம்மா…
அவள் அவ்வளவு ஒன்றும் பெரிதாய் படிக்கவில்லை…
அவளை படிக்கத் தூண்டியது
பலசரக்குகளோடு ஒட்டி வந்த துண்டு காகிதங்கள் தான்…
மளிகை கடைக்காரருக்கு நன்றி…
நெகிழிகளில் நிரப்பாமல் காகிதப் பொட்டலங்களில் அனுப்பியதற்கு…
பருப்பு டப்பாக்களிலும்…
அஞ்சறைப் பெட்டிகளும் அடைப்பட்டிருந்த அவள் ஒரு கவிதைக்காரி…
அழகிய கதைகளுக்கும் சொந்தக்காரி…
துணுக்குகள் படித்துக்கொண்டே
ஆழ்ந்து போனதில்
பொங்கிய பாலின்
கருகிய வாசத்தில் வெளி வந்தது
அம்மாவின் எழுத்து நேசம்…
அப்பாவின் காதலால்
அவள் படித்தது எல்லாமே குமுதம், இராணி, குங்குமம்,
சில வார இதழ்களும்…
கடைகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் புத்தகங்களில் அழகாய் அம்பாரி செய்து கொண்டிருந்தது அம்மா அப்பாவிற்குமிடையேயான காதல்…
கதைகள் படித்துக்கொண்டே உறங்குவதும்…
பணிக்கு சென்ற அப்பா
வரும் வரை அவளுக்கு ஆறுதலாய் இருந்த புத்தகங்களை
அவளீன்ற கன்றுகளுக்காய் மறந்தே போனாள் போலும்…
இருந்தாலும் அவ்வப்போது வீசும் அவள் தமிழ் நேசக்காற்று… எங்களைத் தீண்டிச் சென்றது ஞாபகம் இருக்கிறது
பள்ளிப் போட்டிகளிலும்… கல்லூரி விழாக்களிலும்…
கட்டுரைப்போட்டிகளிலும் கவிதைப்போட்டிகளும் நாங்கள் பரிசாய் வாங்கிய சில்வர் டப்பாக்காளில் பதிந்திருக்கும்
கவிதைப்போட்டி முதல் பரிசு
இரண்டாம் பரிசு…
என்ற வாசகத்தில் இன்னும் சற்றுபெருமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்…
அவள் ஆசை நிறைவேறிய மகிழ்வில்…
அதே அடுப்பங்கரைகளில்
அதே துண்டு காகிதங்களோடு…
மூக்கு கண்ணாடி அணிந்துக் கொண்டு பாத்திரங்களை தேய்த்தபடியே
கரை படியவிடாமல் அடிக்கடி மிளிர வைத்துக்கொண்டே இருக்கிறாள்…
நான் அறிய நல்ல எழுத்துக்களை என் கைகளில் திணித்தித்துக் கொண்டே இருக்கும் அம்மா எனும் அரிய நூலகம் அவள்..