நூல் : அவமானம் ஆசிரியர் : சாதத் ஹசன் மண்ட்டோ தமிழில் : ராமாநுஜம் வெளியீடு : பாரதி புத்தகாலயம் விலை : ரூ. 90/- பக்கம் : 96 முதற் பதிப்பு : 2013 ஏழாவது பதிப்பு: 2021
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க :www.thamizhbooks.com [email protected]
வணக்கம் நண்பர்களே,
*என்னுடைய கதைகள் அசிங்கமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் வாழும் சமூகம் அசிங்கமாக இருக்கிறது என்று பொருள், அந்த உண்மையை நான் எனது கதைகள் மூலம் அம்பலப்படுத்த மட்டுமே செய்கிறேன்*
என்கிறார் படைப்பாளி *சாதத் ஹசன் மண்ட்டோ * அவர்கள். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த (1912-1955) *மண்ட்டோ * பிற்பகுதியில், அவரது மூதாதையர்கள் விருப்பப்படி *பாகிஸ்தானின் லாகூரில்*தனது குடும்பத்துடன் வாழ்ந்து, தனது 42 வது வயதில் காலமானார்.
அவர் தனது வாழ்க்கையில், *சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகத் தொகுப்புகள் * ஆகியவற்றை, பாமர மக்களும் வாசிக்கக்கூடிய வகையில் வடித்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. *மண்ட்டோ * என்றாலே பலராலும், இவர் *பாலியல் சார்பாகவும், பிரிவினையின் நீட்சிகளையுமே * எழுதக்கூடியவர் என்ற குற்றச்சாட்டு அக் காலகட்டத்தில் ஓங்கி ஒலித்தது என்பது ஏதோ உண்மைதான், இருப்பினும் அவர் தனது யதார்த்த வாழ்க்கையிலும், தான் கண்டவற்றையுமே துணிந்து படைத்தார் என்பதில் சந்தேகம் இல்லை.
*மண்ட்டோ * தான் எழுதிய கருத்துக்களில் எந்த ஒரு மாற்றத்தையும் விரும்பாது, அது ஏகாதிபத்தியமாகட்டும் அல்லது மக்களுக்கெதிரான குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி அவர் அதிலிருந்து விலகவே இல்லை என்று கூறலாம். இதனை *அங்கிள் சாமுக்குக் கடிதங்கள் * என்னும் அவரது உரையில் காணலாம்.
ஒருவரது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் எழுதிய *கதைகள், கட்டுரைகள்* அப்பப்போ பல எதிர்ப்புகளைச் சந்தித்தது மட்டுமல்லாது, பல தடவைகள் *நீதிமன்ற வழக்குகளையும் * சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு *மண்ட்டோ * தரும் பதில் இப்படியாக அமைந்துள்ளது.
*படைப்பாளியின் உணர்வுகள் புண்படுகிறபோது அவன் பேனாவைத் திறக்கிறார் *
போலீஸின் பிடியிலிருந்து தப்புவதற்காக தனது உண்மைப் பெயரைப் பயன்படுத்தாமல் *தமாஷா* என்ற தனது முதல் கதைமூலம் அறிமுகமாகும் *மண்ட்டோ *, முற்போக்குச் சிந்தனை கொண்ட பல படைப்புகளை தந்துள்ளது பாரட்டத்தக்கது. அத்துடன் *பாலியல் ** தொழிலாளர்களின் வாழ்க்கை, அவர்களது மன உளைச்சல் போன்றவற்றைப் படம்பிடித்துக் காட்டியது மிகச் சிறப்பு.
இச் சிறு கதைத் (அவமானம்) தொகுப்பை மிகச் சிறந்த முறையில் தமிழில் *ராமானுஜம் * அவர்கள் மொழி மாற்றம் செய்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். வாசிப்போருக்குச் சோர்வு தராத வகையில், உண்மையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையே அவர் படைத்திருப்பதை, *ராமானுஜம் * அவர்கள், வாசிப்பாளர்களாகிய எங்களையும் திக்குமுக்காட வைக்காத வகையில் தந்திருப்பது மிக அழகு.பாரதி புத்தகாலயம் புத்தகத்தினை சிறந்த முறையில் மிகச் சுருக்கமாக அழகாக வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
ஆகிய சிறு கதைகளுடன், ஒரு சில *ஒரு பக்க * கதைகளையும் தந்திருப்பதுடன், *மண்ட்டோ * தனது வாழ்க்கையை மூன்றாமவர் கூறுவது போல் சொல்லப்படும் சம்பவத்தின் மூலம் அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியை உள்வாங்கலாம் நண்பர்களே. மேற் சொன்ன கதைகளின் உள்ளார்ந்த கருத்துக்களை அரிய நண்பர்களே வாசியுங்கள்.
ஒரு *வாடிக்கையாளனுக்கு * ஒருமுறை அவனது பசியைத் தீர்ப்பதற்காக *வெறும் 10 ரூயாய் * க்கு (பத்து ரூபாயில் 2 ரூபாய் 50 காசு மாமாவுக்குப் போக மிகுதி ஏழு ரூபாய் 50 காசு மட்டுமே அவளுக்கு க்குக் கையில் கிடைக்கின்றது, அன்றைய காலகட்டத்தில்) விலைபோகும் *சுகந்தி* அன்றாட வாழ்க்கையை, அவள் ஏமாற்றப்படுவது, *மாது * என்பவன் தனது வியாபாரத்தில் ஏற்படுத்தும் உத்திகள், அவர்களுக்கிடையேயான பேரம், பரஸ்பரம், மற்றும் மறக்கமுடியாத பல இடஞ்சல்கள், இது போன்ற துயரச் சம்பவங்கள *மண்ட்டோ * அற்புதமாகப் படைத்துள்ளார்.
அத்துடன் அவளது மனப் போராட்டங்கள், ஆவேசம், பெட்டிக்குள்ளேயே அடைந்து கிடக்கும் வாழ்க்கை, தான் ஏமாற்றப்பட்டு *அவமானப் * பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தும், எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்து கிடக்கும் அவளது *இரக்க குணம் * எப்படிதான் உதைபட்டாலும், தான் பலராலும் கைவிடப்பட்ட நிலையிலும் கூட இறுதியில், தனது *சொறிநாயை* அன்போடு முத்தமிடுவதையும் *மண்ட்டோ படம்பிடித்துக் காட்டுகிறார்.
*தண்டா கோஷ் * சிறுகதை மூலம் ஏற்பட்ட சிக்கலினால், கதை எழுதுவதை சிறிது நிறுத்தி, பின்னர் *திரையுலக * பக்கம் இருந்ததை நினைவு கூறுகிறார்.
நண்பர்களே, *மண்ட்டோ* வின் ஆக்கங்களைச் சொல்வதானால், பாவப்பட்ட பெண்ணியம், மனிதனின் மன மாற்றங்கள், அன்றாட வாழ்க்கை போன்றவற்றைக் குறித்தே பேசப்படுவதைக் காணலாம். நண்பர்களே வாசியுங்கள்….
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று முக்கிய அம்சங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. முதலாவது, உத்தரப்பிரதேசத்தில் பாஜக இரண்டாவது முறையாகவும் ஆட்சி அமைத்திட தீர்மானகரமான முறையில் வெற்றி பெற்றிருப்பதும், அதேபோன்று உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் அது தன் அரசாங்கங்களைத் தக்க வைத்துக்கொள்வதிலும் வெற்றி பெற்றிருப்பதுமாகும். பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குறைந்த பெரும்பான்மையே பெற்றிருந்தபோதிலும், அவற்றின் வாக்கு சதவீதம் 3.65 சதவீதம் அளவிற்கு உயர்ந்து, 45 சதவீதமாகி இருக்கிறது. சாதிக் குழுக்களையும், கூட்டணிகளையும் மிகவும் திறமையாகக் கையாண்டது, பணத்தை வாரி இறைத்தது, சமூக ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது போன்ற பல்வேறு காரணிகள் இவ்வெற்றிக்குத் துணை புரிந்திருக்கின்றன. ஆனாலும், மக்கள் மத்தியில் ‘இந்து உணர்வை’ மேலோங்கச் செய்திருக்கும் பிரதான அம்சத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது
இந்துத்துவா – மனுவாத சவால் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் கடந்த சில ஆண்டுகளில் உயர் சாதியினர் மட்டுமல்லாமல், மக்கள் தொகையில் கணிசமான பிரிவினர் மத்தியில் ‘நாம் இந்துக்கள்’ என்கிற உணர்வு விதைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களை முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராகவும் திருப்பிவிடக்கூடிய விதத்தில் இவர்கள் மத்தியில் இந்துத்துவா கருத்துக்களையும் ஏற்க வைத்திருக்கிறார்கள். பாஜக, உயர் சாதியினர், மற்றும் (முஸ்லீம்கள், யாதவர்கள் மற்றும் ஜாட் இனத்தவர்களைத் தவிர)இதர அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரையும், தலித்துகளையும் வென்றெடுத்திருக்கிறது என்று வளர்சமூகங்களின் ஆய்வு மையத்தின்-லோக்நிதி அமைப்பு நடத்திய (Centre for the study of Developing Socidtids-Lokniti) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்துக்கள் மத்தியிலேயே தங்களுடைய குறிப்பிட்ட சாதி அடையாளத்தை உயர்த்திப்பிடிப்பது என்பது பாஜக-வினருக்குப் பலன் அளிக்கக்கூடிய ஒன்றாக மாறி இருக்கிறது.
இவ்வாறு உணர்வுக்குத் தள்ளப்பட்ட மக்களிடமிருந்து இத்தகைய உணர்வை முறியடிக்க வேண்டிய நிலைக்கு சமாஜ்வாதிக் கட்சி-ராஷ்ட்ரிய லோக்தளம் தள்ளப்பட்டது. உத்தரப்பிரதேசம், இந்தி பேசும் மக்கள் மத்தியில் இதயம் போன்ற பகுதியாகும். இம்மாநிலம் முழுவதும் இதேபோன்ற ‘நாம் இந்துக்கள்’ என்னும் உணர்வு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில், ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும், வேலையின்மை மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிரமங்களும் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தபோதிலும், அவை மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கிற ‘இந்துக்கள் ஆதரவு’ உணர்வை மாற்றக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இல்லை. இத்தகைய சமூக எதார்த்தமானது, இந்துத்துவா சித்தாந்தத்தினை எதிர்த்து முறியடித்திடவும், இதற்கு மாற்று சமூக-கலாச்சார-தத்துவார்த்தக் கட்டமைப்பைக் கட்டி எழுப்புவதற்குத் தேவையான அளவிற்கு அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பணியினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதற்கு இடதுசாரிகளின் கேந்திரமான பங்களிப்பு தேவைப்படுகிறது. இந்துத்வா-மனுவாத சவாலை எதிர்த்து முறியடித்திடக்கூடிய அதே சமயத்தில் அதனுடன் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும், ஒரு மாற்று ஜனநாயக-மதச்சார்பற்ற சமூக-கலாச்சார விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கக்கூடிய போராட்டத்தையும் இணைத்து எடுத்துச் செல்ல வேண்டியதும் அவசியமாகும். இவை, இதர ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படையாகவும் இருந்திட வேண்டும்.
இரண்டாவது அம்சம் இத்தேர்தல் முடிவுகள் வெளிக்கொண்டுவந்திருக்கும் இரண்டாவது அம்சம், தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகும். குறிப்பாக பஞ்சாப்பின் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ், அங்கும் படுதோல்வி அடைந்திருக்கிறது. இதர மாநிலங்களைப் பொறுத்த வரையிலும் கூட, உத்தரகண்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசின் செயல்பாடு, முந்தைய தேர்தல்களில் இருந்த நிலைமைகளைவிட, வாக்கு சதவீதத்திலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையிலும் மோசமான இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில், பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெறும் 2.3 சதவீத வாக்குகளையே பெற்று, இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. முன்பு அதற்கு இங்கே ஏழு இடங்கள் இருந்தன.
இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த இடங்களில் எல்லாம் பாஜக மிகப்பெரிய அளவில் ஆதாயம் அடைந்திருக்கிறது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி முன்பிருந்த பலத்துடன் ஒப்பிடுகையில் அது வெறும் எலும்புக்கூடாக மாறியுள்ளபோதிலும், அது இப்போதும் தான் ஒரு வலுவான பிரதான கட்சி என்கிற நினைப்புடன் நடந்துகொள்ளும் போக்கைக் கடைப்பிடிப்பது தொடர்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக-விற்கு சரியான முறையில் எதிர்ப்பை அளிக்கக்கூடிய விதத்தில் சமாஜ்வாதி-ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி உருவாகியிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துள்ள அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சி மட்டும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது குறித்து வேறெந்தவிதத்தில் விளக்கிட முடியும்? காங்கிரஸ் கட்சி, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் எதிராகவும், மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்யும் வேறு சில மாநிலங்களிலும் அவற்றுக்கு எதிரான நிலை எடுத்திருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துத்துவா சித்தாந்தத்துடன் சமரசம் செய்துகொள்ளும் போக்கைக் கடைப்பிடிப்பதையும் பார்க்க முடிகிறது. காந்தி குடும்பத்தை முழுமையாக சார்ந்திருப்பதிலிருந்து ஒரு முறிவை ஏற்படுத்திக்கொண்டு, புதியதொரு வலுவான தலைமையை உருவாக்குவது எப்படி என்பதில் காங்கிரஸ் கட்சி தீராத குழப்பத்தில் சிக்கியுள்ளதுபோன்றே தெரிகிறது. பாஜக-விற்கு ஒரு வலுவான எதிர்ப்பை அளித்திட, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்துவரும் பாஜக-விற்கு எதிரான சக்திகளை அணிதிரட்டுவது அவசியம். இதில் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மூன்றாவது அம்சம் மூன்றாவது அம்சம், இந்தத் தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருப்பதாகும். அது, தில்லியில் எப்படி இதர கட்சிகளைத் துடைத்தெறிந்துவிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றதோ அதே போன்று இங்கேயும் பிரதிபலித்திருக்கிறது. இங்கே ஆம் ஆத்மி கட்சி, சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மற்றும் அவர்களுக்கிடையே காணப்படும் பல்வேறு இனத்தினர் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றிருப்பதைக் காட்டுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை பஞ்சாப்பில் அமைந்திடும் ஆம் ஆத்மி அரசாங்கம், முதல் அடியை எடுத்து வைத்துக் காட்டியிருக்கிறது.
மோடியின் அரசியல், குறிப்பாக அவரது தேர்தல், சூழ்ச்சித் திறன்கள் குறித்த நுண்ணோக்கை அகமதாபாத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் கூட்டாளியுமான யதின் நரேந்திரபாய் ஓசா தனிப்பட்ட மற்றும் அமைப்புரீதியான மட்டங்களில் அடிக்கடி வெளிப்படுத்தி வந்திருக்கிறார். 2001ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் கேசுபாய் படேலிடம் இருந்து குஜராத்தின் இடைக்கால முதலமைச்சராக மோடி பதவியேற்றுக் கொண்ட போது, அது குறித்த ஓசாவின் அவதானிப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது. கேசுபாய் பட்டேல் தலைமையில் இருந்த பாரதிய ஜனதா கட்சி அரசிற்கு எதிராகப் பரவலாக இருந்து வந்த ஆட்சியெதிர்ப்பு மனநிலை, ஊழல் மற்றும் குறிப்பாக பூஜ் பகுதியில் நிலநடுக்கங்களுக்குப் பின் ஏற்பட்ட விளைவுகளை நிவர்த்தி செய்வதில் இருந்த நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றிற்கு மத்தியில் அந்த மாற்றம் அவசியமாகி இருந்தது.
அதுவரை நடந்த பல இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 2002ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவைத் தோற்கடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ‘அனைத்து வகைகளிலும் இயங்கக் கூடிய, எந்தத் தடையும் மீறுகின்ற, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, தக்கவைத்துக் கொள்வதற்காக திட்டமிட்டு எந்தவொரு இரக்கமற்ற வழியையும் மேற்கொள்ளக் கூடிய முற்றிலும் மாறுபட்ட அரசியல்வாதியை எதிர்கொண்டிருப்பதால் கேசுபாய் பட்டேல் அல்லது வேறு எந்த பாஜக தலைவருக்காகவும் காங்கிரஸ் பயன்படுத்தி வந்திருக்கின்ற அதே அளவுகோல்களை மோடியை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்திட வேண்டாம்’ என்று சோனியா காந்தியை அப்போது ஓசா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை ஓசாவின் எச்சரிக்கையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பின்னர் முஸ்லீம்-விரோதப் படுகொலை மாநிலத்தில் நடந்தேறியது. ஆட்சிக்கு எதிரான காரணியால் தூண்டப்பட்ட அரசியலிலிருந்து முற்றிலும் வகுப்புவாத துருவமுனைப்பைச் சார்ந்ததாக மாநில அரசியலை அந்தப் படுகொலை மாற்றியமைத்தது. மீதி நடந்தவை அனைத்தும் இப்போது வரலாறாகி நிற்கின்றன.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் பின்னணியில் ஃப்ரண்ட்லைனிடம் பேசிய ஓசா மீண்டுமொரு முறை இப்போது அரசியல் சூழ்ச்சிகளில் குறிப்பாக தேர்தல் தந்திரங்களில் செயல்படுத்தப்படுகின்ற ‘தனித்த மோடி பிராண்ட் நடவடிக்கைத் தொகுப்புகள்’ பற்றி குறிப்பிட்டார். ‘அமைதியான ஆலோசனை என்று தொடங்கி, பொருள்கள் மீதான தூண்டுதல்கள், தண்டனைகள் என்று நகர்ந்து இறுதியாக முரண்பாட்டை உருவாக்கும் வகையில் இலக்கு வைக்கப்பட்ட குறிப்பிட்ட பிரிவினரின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சி செய்வதற்கான நான்கு முனை கொண்ட பண்டைய இந்திய உத்தியான சாம, தான, பேத, தண்டம் பற்றி அரசியல் வியூகவாதிகள் பேசி வந்திருக்கிறார்கள். ஆனால் அது பலருக்கும் பலனளிப்பதாக இருந்திருக்கவில்லை. உண்மையில் அது மற்றபிற அரசியல் சக்திகளைக் காட்டிலும் அந்தக் கட்டளையை செயல்படுத்துவதற்கான வழிகளில் ஹிந்துத்துவாவின் பல்வேறு அரசியல் தந்திரங்களைக் கொண்டு தேர்தல் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்ற சங்பரிவார் அமைப்புகளுக்கே பலனளிப்பதாக இருக்கிறது. சங்பரிவாருக்குள்ளும்கூட, மோடி பிராண்ட் நடவடிக்கைத் தொகுப்புகளுக்கான திட்டம் கூடுதல் திட்டங்களைக் கொண்டு அமைந்துள்ளது. அந்த கூடுதல் திட்டங்கள் யாவும் வெவ்வேறு வகையில் மாறுபட்ட நுணுக்கங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பல 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் வழக்கம் போல சங்பரிவாரங்களிலும், ஆட்சியிலும் உள்ள பல குரல்கள் தங்கள் பங்கையாற்றி வருகின்றன.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மைச் சமூகங்களின் ரத்தத்திற்காகப் போராடுகின்ற தர்ம சன்சத் போன்ற கலவரத்தைத் தூண்டுகின்ற ஹிந்துத்துவா வகுப்புவாத மாநாடுகளை ஏற்பாடு செய்தல், மதச்சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூக நிர்வாகங்களால் நடத்தப்படுகின்ற தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கக் கட்டுப்பாடுகளை விதித்தல், அத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வகுப்புவாதப் பிரச்சரங்களைக் கட்டியெழுப்புவதுடன் மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்களின் வகுப்புவாத பாகுபாடு கொண்ட வளர்ச்சித் திட்டங்களை முன்னுறுத்தி பிரச்சாரம் செய்தல் போன்ற செயல்பாடுகள் அத்தகைய நகர்வுகளுக்குத் துணைபுரிகின்ற நடவடிக்கைகளுக்குள் அடங்குகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் கார் 2022 ஜனவரி 5 அன்று ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ஹுசைனிவாலா அருகே உள்ள மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டது
இவையனைத்தையும் தவிர, ஜனவரி மாதம் ஆறாம் நாள் பஞ்சாப் ஃபெரோஸ்பூரில் தனது கார் தொடர்பிலான பாதுகாப்பு மீறலின் அடிப்படையில் அங்கிருந்த மேம்பாலம் ஒன்றில் 15-20 நிமிடங்கள் சிக்கித் தவித்த மோடி அந்த நடவடிக்கைத் தொகுப்புகளின் கூறுகளில் ஒன்றின் மையத்தில் தன்னைத் தனியாக நிறுத்திக் கொண்டிருந்தார். அந்தக் கூடுதல் நடவடிக்கையை அனுதாபத்தைத் தூண்டுகின்ற நடவடிக்கை என்றே நான் கூறுவேன். ஆக குஜராத்தில் இருபதாண்டுகளுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தைத் தூண்டுவதாக வெறுப்புணர்ச்சி இருந்தது என்றால் 2022இல் நடைபெறுகின்ற தற்போதைய பிரச்சாரங்களில் அனுதாப உணர்வு முக்கிய அங்கமாக தூண்டப்படுகிறது.
ஆயினும் 2002இல் நடந்த வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரத்தைப் போல இப்போது அனுதாபத்தை தூண்டும் பிரச்சாரத்துடனான தற்போதைய தொகுப்பு பயனுள்ளதாக இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு ‘உறுதியாகத் தெரியவில்லை’ என்று ஓசா பதிலளித்தார், ‘இதுபோன்று அனுதாபத்தின் அடிப்படையிலான காரணி முன்வைக்கப்பட்டிருக்கும் விதமே அவர்களிடமுள்ள விரக்தியுணர்வை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது. பாதுகாப்பு மீறல் குறித்து பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசு என்று இரண்டு மாறுபட்ட விசாரணைகள் உருவான நிலையில் பாதுகாப்பு மீறல் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்த அந்த பெரோஸ்பூர் மேம்பாலத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது பெருமளவிலான பொதுமக்களுக்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. ஆனாலும் பாதுகாப்பு மீறல் குறித்த உரையாடல்கள் எழுந்திருக்கும் அரசியல் சூழல்கள் குறிப்பிடத்தக்கவையாகவே இருக்கின்றன.
மோடி தேர்தல் தொடர்பான தனது முதல் பயணங்களில் ஒன்றாக பஞ்சாபிற்குச் சென்றிருந்தார். மோடி கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் பேரணி மிகப்பெரிய தோல்வியாக இருந்தது என்பதையே அனைத்து தகவல்களும் சுட்டிக் காட்டுகின்றன. அந்த இடத்தில் கூடுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் பேர்கூட அங்கே திரண்டிருக்கவில்லை. மோடியால் 2021 நவம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் மிகவும் சங்கடமான முறையில் திரும்பப் பெறப்பட்ட விதம் அரசு மற்றும் சங்பரிவார் அணிகளிடம் உத்தரப்பிரதேசம், ஹரியானாவில் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறாக அவர்கள் உருவாக்குகின்ற அனுதாபம் பாஜகவை முன்னோக்கி எடுத்துச் செல்லாது என்றே நான் கருதுகிறேன்.
உத்தரப்பிரதேசத்திற்கான போர்
தேசிய தலைநகர் மற்றும் தேர்தலுக்கு உட்பட்ட உத்தரப்பிரதேசம், பஞ்சாபில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இந்த கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், உத்தரப்பிரதேசத்தில் நடக்கப் போகின்ற போர் பாஜகவிற்கும், சங்பரிவாரில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகவே இருக்கிறது. குஜராத்தில் 2000களின் முற்பகுதியில் மோடி உருவாக்கிய மாடலை நெருக்கமாகப் பின்பற்றியே முதல்வர் ஆதித்யநாத் தலைமையின் கீழ் இறுதி ஹிந்துத்துவா ஆய்வகமாக உத்தரப்பிரதேச மாநிலம் முன்னிறுத்தப்பட்டது. வகுப்புவாத துருவமுனைப்பு தந்திரத்திற்கான தொடக்கமாக குஜராத் மாநிலம் இருந்த போதிலும், ஹிந்தி மையப்பகுதியில் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் புவியியல் நிலை, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் என்று பல காரணிகளால் அந்த மாநிலத்தில் அந்த திட்டத்திற்கான முன்னேற்றம் இன்னும் முக்கியமானதாக இருப்பதாக சங்பரிவார் உள்வட்டாரத்தினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பிரதிபலித்த சாதி, வகுப்புவாத சமன்பாடுகள் ஹிந்துத்துவா சமூக-அரசியல் அடையாளம் மாநிலத்தில் வலுப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டின. பாஜக, சங்பரிவாரத்தின் பிற அமைப்புகளின் தலைவர்கள் அந்தப் போக்கு 2022ஆம் ஆண்டில் மேலும் வலுப்படும் என்று மிகுந்த உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் இருந்து வந்தனர். 2020-21ஆம் ஆண்டில் தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் கோவிட்-19இன் பேரழிவுகரமான தாக்கம், அதை முறையாகக் கையாள்வதில் ஆதித்யநாத் அரசாங்கம் கண்ட தோல்வி, அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆண்டு முழுவதும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் போன்றவை ஹிந்துத்துவா சக்திகளின் ஆற்றலும், வீச்சும் குறைந்து வருவதை சங்பரிவார் தலைமைக்கும், பாஜகவிற்கும் தெளிவுபடுத்திக் காட்டி இருக்கின்றன.
தொற்றுநோயால் ஏற்பட்ட வீழ்ச்சி ‘ஒருபுறம் கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட சமூக, பொருளாதார நெருக்கடிகள், மறுபுறத்தில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களின் பாதகமான தாக்கம் போன்றவை மதம் மற்றும் வகுப்புவாத அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற ஹிந்துத்துவா பார்வைக்கு முற்றிலும் மாறாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சமூகத்தின் பெரும் பகுதியினரை வாழ்வாதாரம் குறித்த கவலைகள் தொடர்பான அளவுருக்களாக தங்களுடைய வாழ்க்கையைப் பார்க்கத் தூண்டி விட்டன. தொற்றுநோயின் முதல் அலையின் போதே அத்தகைய சமூகப் போக்கு காணப்பட்டது என்றாலும், தொற்று நோயின் இரண்டாவது அலை, 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அது மென்மேலும் தெளிவாகத் தெரிந்தது’ என்று இப்போதுள்ள நிலைமை குறித்து அரசியல் பார்வையாளர் ஷீத்தல் பி.சிங் கூறுகிறார். அந்தச் சூழல் நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் சமூக, சாதி சமன்பாடுகளை மோசமாக்குவதற்கான புதிய முயற்சிகள் தேவைப்படுகின்றன என்ற உணர்தலை பாஜக, சங்பரிவார் அமைப்புகளிடம் அதிகரித்து வைத்திருப்பதாக ஷீத்தல் சிங் சுட்டிக் காட்டுகிறார்.
‘ஆனாலும் 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 2013ஆம் ஆண்டு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அமித் ஷா திறம்படச் செய்ததைப் போல வகுப்புவாதக் கலவரங்களை வெளிப்படையாக உருவாக்குவதற்கான சூழல் இப்போது மாநிலத்தில் இல்லை. மாநிலத்தில் நடைபெற்றுள்ள விவசாயிகள் இயக்கத்தின் – அவர்களுடைய போராட்டத்தின் – மையப்பகுதிகளில் ஒன்றாக குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசம் இருந்தது. பாஜக, சங்பரிவாரங்களின் மதவெறி மற்றும் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த இயக்கம் மக்களை மீண்டும் மீண்டும் எச்சரித்து வந்தது. மீண்டும் மீண்டும் 2013-14 சூழலை அது தேசத்திற்கு நினைவூட்டிக் காட்டியது. மேலும் சிறுபான்மை முஸ்லீம் சமூகம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் மக்கள் மட்டத்தில் சங்பரிவார் அமைப்பினரின் ஆத்திரமூட்டல்களுக்குள் தாங்கள் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனத்துடன் இருந்தது. இத்தகைய சூழலில் உத்தரப்பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளைக் கொண்டுள்ள உத்தரகாண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வகுப்புவாதச் சூழலை மோசமாக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த புதிய நுணுக்கமான விளையாட்டிற்குத் தெளிவான எடுத்துக்காட்டாகவே இப்போது நடத்தப்பட்ட தர்ம சன்சத்கள் இருந்தன’ என்று ஷீத்தல் சிங் கூறுகிறார்.
முஸ்லீம் சிறுபான்மையினரை மாஃபியாக்கள், குண்டர்கள் என்று சொல்லி அவர்களை ஒடுக்க வேண்டும் என்ற அழைப்பை தர்ம சன்சத்கள் மற்றும் ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விடுத்த பிறகும் அவர்களுடைய இலக்கிற்கு ஏற்ற அளவிலான வகுப்புவாத துருவமுனைப்பு எட்டப்படவில்லை என்பதை சங்பரிவார் உள்வட்டாரத்தினர் ஒப்புக் கொள்கிறார்கள். மாநிலத்தில் 2014 மக்களவைத் தேர்தல் மற்றும் 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு மிகவும் சாதகமான சூழல் இருந்ததாகக் கருதுகின்ற அவர்கள் தற்போதுள்ள சூழல் அதைப் போன்று இருக்கவில்லை என்கின்றனர். அத்தகைய சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் தொடரப்பட்டு வருகின்றன என்றே அந்த உள்வட்டாரத்தினர் கூறி வருகின்றனர். அத்தகைய முயற்சியின் ஒரு பகுதியாகவே பிரதமரின் காருக்கான பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது என்பது குறித்த பிரச்சாரம், மோடியின் உடல்நலம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை மையமாகக் கொண்ட பிரச்சாரங்களை முன்னெடுக்கும் வகையில் கூடுதல் ஹிந்துத்துவா அடையாளத்துடன் அவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு மீறல் நடந்த மறுநாளில் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக மந்திரங்களை ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் முப்பது நிமிட சந்திப்பை மோடி நடத்தினார். சரியாக அங்கே என்ன நடந்தது என்பதை தான் அறிய விரும்புவதாகவும், அது வெறுமனே பாதுகாப்பு குறைபாடு அல்லது மீறலாக இருக்கவில்லை என்றும் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் அந்த சம்பவம் குறித்து தனது கவலையை வெளியிட்டார்.
அதே நேரத்தில் பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக போபாலின் குஃபா (குகை) கோவிலில் பிரார்த்தனை செய்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதினார். பிரதமரின் பாதுகாப்பிற்காக மஹாகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர் கோவில்களிலும், மாநிலத்தில் உள்ள மற்ற முக்கிய கோவில்களிலும் மந்திரங்கள் ஓதப்பட்டன. பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்த திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் ‘இன்று மெஹர் காளிபாரி கோவிலுக்குச் சென்று, அன்னை காளிக்கு பிரார்த்தனை செய்து, சிவலிங்க அபிஷேகம் செய்தேன். பாரத மாதாவின் தவப்புதல்வனான நமது அன்புக்குரிய பிரதமர் திரு நரேந்திரமோடிஜிக்கு நீண்ட ஆயுளை வழங்கி அன்னை காளியும் போலேநாத்தும் ஆசீர்வதிக்கட்டும்’ என்று ட்வீட் செய்திருந்தார். அவ்வாறு மந்திரத்தை ஓதியவர்களில், தங்களுடைய பிரார்த்தனைகள் குறித்து ட்வீட் செய்தவர்களில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றோரும் அடங்கியிருந்தனர்.
போபாலில் உள்ள கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட ஆயுளுக்காக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ஜனவரி 6 அன்று மதச் சடங்குகளை நடத்தினார்
மத்திய உள்துறை அமைச்சகமும், பஞ்சாப் அரசும் பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணை நடத்த தனித்தனி குழுக்களை அமைத்துள்ள நிலையிலும் பாதுகாப்பு மீறல் குறித்த விவாதம் வேகமாகத் தொடர்கிறது. உள்துறை அமைச்சகம் அமைச்சரவை செயலகத்தில் பாதுகாப்புச் செயலராக உள்ள சுதிர் குமார் சக்சேனா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் இந்திய உளவுத்துறையின் (ஐபி) இணை இயக்குநர் பல்பீர் சிங், சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவர் எஸ்.சுரேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்று பலமுறை கூறியிருக்கிறார். அந்த சம்பவம் குறித்து மாநில அரசு விசாரித்து வருவதாகவும், அதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மாநில அரசின் இரு உறுப்பினர் கொண்ட விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி மெஹ்தாப் சிங் கில், உள்துறைச் செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறுகின்ற தேர்தல் பிரசாரத்தின் மூலம் இந்த விவகாரம் குறித்து பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே அரசியல் காழ்ப்புணர்வு தொடரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் இருந்த அந்த இருபது நிமிடங்கள் இந்தியாவின் பிரதமரின் அலுவலகத்தைச் சென்றடைந்துள்ள ஆகப் பெரிய தெருப் போராளியின் அடிவயிற்றைக் கலக்கியுள்ளன. சத்யபால் மாலிக்கிடம் அமித் ஷா கூறியவாறு அவர் தனது சுயநினைவை இழந்து விட்டதாகவே தெரிகிறது. அது ஏற்கனவே அதிக சூடுபிடித்திருக்கும் நமது அரசியலுக்கு நல்லதல்ல.
நரேந்திர மோடி ஒன்றும் நாகரிக ஜனநாயகத்தின் பண்பாடுகள், நடத்தைகளைக் கடைப்பிடித்து நாட்டின் பிரதமராகி விடவில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். கூட்டத்தை உற்சாகப்படுத்துவது, கும்பலைத் தூண்டுவது என்று தனக்கிருந்த திறமையைக் கொண்டே அவர் தனது சொந்தக் கட்சியின் தலைமை இடத்தைச் சென்றடைந்தார். அத்தகைய போக்கே அவரை ஹிந்து வலதுசாரி தளத்தில் ‘மறைமுகப் பெரும்பான்மை’ கொண்டவராக முடிவுக்குக் கொண்டு வந்தது. சந்தேகத்திற்கு இடமில்லாது திட்டமிடப்பட்டதாக அவரிடமிருந்த அந்த முரட்டுத்தனமே எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி போன்ற ‘பாரம்பரிய’ மூத்த பாஜக தலைவர்களைத் தடுமாறச் செய்தது. பாஜகவில் இருந்த முக்கியமானவர்களுக்கு அப்பால் மன்மோகன் சிங் அல்லது அடல் பிஹாரி வாஜ்பாயி போன்றவர்களின் கண்ணியமான பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக மோடியிடமிருந்த கரடுமுரடான தன்மை வரவேற்கத்தக்க வகையிலே உடல்ரீதியான பலமாகக் காட்டப்பட்டது.
ஆனாலும் நிச்சயமற்றவராக, பயத்தில் உறைந்து போன மனிதராக புதியதொரு நரேந்திர மோடியை ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் அவர் இருந்த அந்த இருபது நிமிடங்கள் நமக்கு இப்போது வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.
மோடி இன்னும் பத்து வயது இளையவராக இருந்திருப்பாரேயானால், அவர் தைரியமான இரண்டு எதிர்வினைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்றே நம்பலாம். முதலில் தனது காரை விட்டு வெளியே வந்து, சாலை மறியல் செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் நடந்து சென்று, அவர்களுடன் எவ்விதச் சிரமமுமின்றி அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பார். அனைவரின் மனதில் அவரைப் பதியச் செய்யும் வகையிலே தொலைக்காட்சிக் காட்சிகளை அது உருவாக்கிக் கொடுத்திருக்கும். அவர் அடிக்கடி பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி, தன்னை வணங்கி நிற்கின்ற வெகுஜன மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவராகவே இருந்திருக்கிறார். எனவே போராட்டக்காரர்கள் எந்த வகையிலும் அச்சுறுத்துவதாகவோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதாகவோ இருந்திராத நிலையில் அதுபோன்று அவர் நடந்து கொண்டிருந்தால் பாதகமான சூழ்நிலையிலும் தயங்காத துணிச்சலான தலைவர் என்று அவர் அடையாளம் காணப்பட்டிருப்பார்.
அவ்வாறாக இல்லையெனில் அதற்கு மாறாக தனது அலுவலகத்தின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சரை அழைத்து, மத்தியப் படைகளை (சில கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த) விரைந்து வந்து தன்னுடைய வழியிலிருந்து போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை அகற்றுவதற்கான உத்தரவை பிரதமர் கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அதிகாரம் மிக்க அரசின் ஆற்றல் மிக்க பிரதமர் ஓரிடத்தைக் கடந்து செல்லும் உரிமையை யாரும் அவருக்கு மறுத்து விட முடியாது என்ற எளிய செய்தியை அவர் அனைவருக்கும் உறுதிப்படுத்திக் காட்டியிருப்பார். பயமில்லாத துணிச்சலான அந்தப் பிரதமர் அமைதியாகப் போராடுகின்ற விவசாயிகளிடம் மாட்டிக் கொண்டவராக தான் காணப்படுவதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் செய்து விடாமல் கேமரா, நாடகம் மீது எப்போதும் கண் வைத்திருக்கும் அந்த மனிதர் தன்னுடைய காருக்குள்ளேயே உறைந்து போய் அசையாமல் அமர்ந்திருந்தார்.
ஃபெரோஸ்பூர் பேரணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தளத்தில் -பல்லாயிரக்கணக்கான காலி நாற்காலிகளுடன் 3,032 பேருக்கு மேல் அங்கே கூடியிருக்கவில்லை என்று உள்ளூர் உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது – மிகப் பரிதாபகரமான எண்ணிக்கையில் மிகக் குறைவான எண்ணிக்கையில் கூடியிருந்த கூட்டத்தைப் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்பதை அனுமானிப்பது தர்க்கரீதியான சாத்தியம் கொண்டதாகவே இருக்கிறது. பஞ்சாபை திரும்பப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் அஸ்வமேத யாகத்தின் நவீன அமலாக்கமாகவே பாஜகவால் அந்தப் பேரணி திட்டமிடப்பட்டிருந்தது. பேரணி ஏற்பாட்டாளர்களின் வசம் நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார அரசியல் கட்சியின் அனைத்து வளங்களும் இருந்தன. மிக மோசமான மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கப்பட்டாலும், யாராலும் வெல்ல முடியாத நரேந்திர மோடி இன்னும் யாருக்கும் தலைவணங்காதவராக இருக்கிறார்; பஞ்சாபிற்கு நேரில் வந்து, கூட்டத்தைத் தன்வசப்படுத்துகின்றவராக தான் இன்னும் இருப்பதைக் காட்டுவார் என்பதை பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற மக்களுக்குச் சொல்கின்ற வகையிலே அவர்களுடைய நோக்கம் மிகவும் வெளிப்படையாக தெளிவாகவே இருந்தது. ஆனால் அந்த திட்டம் மிகவும் தவறுதலாகச் சென்று, நம்பிக்கையிழக்கச் செய்யும் பதற்றமான தருணத்தையே அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது. என்றும் தனக்கான வழியில் சென்ற அந்த மனிதர் தன்னுடைய தோல்வியால் எழுந்த பயத்தை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார்.
அந்த ஃபெரோஸ்பூர் நாடகம் மிகப் பெரிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. கட்டற்ற அரசு அதிகாரத்தின் உச்சத்தில் ஏழு ஆண்டுகள் எதிர்ப்புகள் எதுவுமின்றி செலுத்தி வந்த மேலாதிக்கம் பிரதமரிடம் தெய்வீக உரிமைக்கான உணர்வை வளர்த்தெடுத்துள்ளது. அது பாதுகாப்பு, உளவுத்துறை மூத்த அதிகாரிகளிடையிலும் பொறுப்பற்ற மெத்தனத்தை உருவாக்கியுள்ளது. பெரும்பாலும் அமைச்சர்கள், பிரதமர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுபவர்களே அரசியல்வாதிகளின் பாதுகாப்புக் கவசத்தில் ஏற்பட்டிருக்கும் ஓட்டைகளை முதலில் கண்டறிபவர்களாக இருப்பார்கள் எனும் போது, மோடியின் விஷயத்தில் விளக்குவதற்குத் தேவையான மர்மம் அதிகம் இருக்கவில்லை.
தன்னம்பிக்கை, சுயதிருப்தி கொண்ட அந்த மனிதர் எந்தவொரு குறையையும், குறைபாட்டையும், தோல்வியையும் ஒப்புக் கொள்ளாதவராகவே இருந்திருக்கிறார். தாங்கள் செய்வது எந்த அளவிற்கு முட்டாள்தனமாக இருந்தாலும், தங்களுடைய தலைவர் எப்போதும் தங்களை (குறைந்தபட்சம் பொதுவெளியில்) பாதுகாப்பார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். ஜனநாயக அரங்கில் தன்னை ஒன்றுமறியாதவர் என்று ஊகிக்க அவர் எவரையும் அனுமதிக்க மாட்டார். தவறிழைக்காதவர் என்ற இத்தகைய உணர்வே அதிகாரிகள், ராணுவத் தளபதிகள், உளவுத்துறைத் தலைவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.
ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் அவர் இருந்த அந்த இருபது நிமிடங்களுக்குப் பிறகு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள்ளாகவே, ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று – அவர்களில் பலரும் தமக்கு வேலையற்ற வேலைகள் அளிக்கப்படும் என்று நம்புகிறவர்கள் – அந்த சம்பவத்தின் பின்னணியில் சதி இருக்கிறது என்று முடிவு செய்திருந்தனர். தங்களது அறிக்கையில் ‘பிரதமரைச் சங்கடப்படுத்துவதற்காக, அவருக்கு தீங்கு விளைவிப்பதற்காக போராட்டக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களுடன் மாநில அரசு இயந்திரம் செய்து கொண்டிருந்த கூட்டின் வெட்கக்கேடான வெளிப்படையான காட்சியாகவே அது இருந்தது’ என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பொறுப்பான பதவிகளில் இருந்திருந்த அந்த அதிகாரிகள் இவ்வாறான பொதுப்படையான தீர்ப்பை வழங்குவதை விடுத்து நடந்தவற்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய பெருமூச்சு தவறாக வழிநடத்தப்பட்ட பாரபட்சம் மற்றும் விசுவாசத்தால் உருவானது என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. வயது முதிர்ந்து கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ஒருவரின் பாதுகாப்பின்மை உணர்வை, சித்தப்பிரமையைத் தூண்டுகின்ற வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு வகையான குடிசைத் தொழில் நாட்டில் இப்போது தோன்றியிருப்பதாகவே தெரிகிறது.
மிகவும் கவர்ச்சியான தலைவர்கள் கூட தங்கள் தோற்றங்களை பொதுவெளிக்காக வடிவமைத்துக் கொள்வதற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வடிவமைக்கப்படாத நெருக்கடியான தருணங்களில் மட்டுமே ஒரு தலைவனின் குணமும், திறமையும் உண்மையில் சோதித்து அறியப்படுவதாக இருக்கும்.
தான் தங்கியிருந்த பிரைட்டன் கிராண்ட் ஹோட்டல் மீது 1984ஆம் ஆண்டு ஐரிஷ் குடியரசு ராணுவம் நடத்திய குண்டுவெடிப்பை மார்கரெட் தாட்சர் ‘டவுனிங் ஸ்ட்ரீட் நினைவுக் குறிப்புகள்’ என்ற தன்னுடைய நூலில் நினைவு கூர்ந்திருந்தார். அப்போது ஆண்டுதோறும் நடைபெறுகின்ற கன்சர்வேடிவ் கட்சி கூட்டத்தில் தன்னுடைய திட்டமிடப்பட்ட உரையை ஆற்றி முடித்தார் ‘இது தொழிலாளர்களைத் தாக்கும் நேரம் அல்ல, மாறாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒற்றுமைக்கான நேரம்’ என்பதால் வரைவில் இருந்த அனைத்து பாரபட்சமான பகுதிகளைத் தான் நீக்கியதாகவும் அவர் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
தாட்சரிடமிருந்த பெருந்தன்மை, நிதானத்தை பஞ்சாப் முதலமைச்சரை நோக்கி பிரதமர் வைத்த தகுதியற்ற குற்றச்சாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்வாறு பேசிய அந்த ஒரே நொடியில், பொறுப்பான தேசியத் தலைவராக பிரதமர் முதிர்ச்சியடைந்து விட்டார் என்று இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையே மோடி உருவாக்கியுள்ளார். விரும்பத்தகாத அந்த பாரபட்சம் ஒருவரிடமிருந்து வருகிறது. பாரபட்சம் கொண்ட அந்த நபரை உலக அளவில் உயர்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியாக நாம் நம்ப வேண்டும் என்று அவரது கூட்டாளிகள் விரும்புவது உண்மையில் ஆச்சரியம் தருவதாகவே இருக்கிறது.
இத்தகைய தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதமருக்கு எதிராக நிறுத்துவதற்கான தந்திரமும் அவர்களிடம் இருந்து வருகிறது. ஹிந்து நலன்களுக்கு விரோதமான வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் கீழ், சீக்கிய கூறுபாடுகளைக் கொண்டு தீட்டப்பட்ட சதியைக் கண்டறிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டில் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற ஹிந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க வேண்டிய மோடியின் தேவையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சீக்கியர்களை இவ்வாறு மற்றவர்களாக வேறுபடுத்திக் காண்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி நிச்சயம் தேசியப் பேரிடரை உருவாக்குகின்ற செயலாகவே இருக்கும்.
https://thewire.in/politics/narendra-modi-nervous-punjab-flyover நன்றி: வயர் இணைய இதழ் தமிழில்: தா.சந்திரகுரு