என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி

என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி




எரித்தாயா புதைத்தாயா
என்ன செய்து என்னைத் தொலைத்தாய்?
எரிக்கும்போது
தீயின் நாக்குகளில்
பட்டுத்தெறித்த முத்தங்களை
என்ன செய்தாய்?
புதைத்த மண்ணில்
பூத்த பூக்களை விட்டுவிடு.
அந்த வாசனையில்
வாழட்டும்
தீண்டாமையின் காமம்.
என்ன செய்தாய் என்னை?
நீச்சல் பழகிய ஆற்றுவெள்ளத்தில்
மூச்சுத்திணறிய விடுதலை.
இறுகப்பற்றிய விரல்களின்
தீராத பசி.
பார்த்துக்கொண்டிருந்த
ஆற்றங்கரைப் படிக்கட்டுகளில்
இப்போதும்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
பச்சை மஞ்சளின் நிறம்.
ஹே சென்னிமல்லிகார்ஜூனா..
என்ன செய்தாய் ?
என்ன செய்து
என்னைத் தொலைத்தாய்!

– புதியமாதவி

ருது சம்ஹாரம் கவிதை – புதியமாதவி

ருது சம்ஹாரம் கவிதை – புதியமாதவி




நீலகண்ட பறவையைத் தேடிவந்த
காளிதாசன்
தாகத்துடன் அலைகிறான்.
சாதகப்பறவையை விரட்டி அடித்த
சாபமிது.

பட்சி சாஸ்திரம் பொய்த்துவிட்டதால்
புலஸ்தியன் நீராடிய பொய்கை
வற்றிவிட்டது.

காக்கையின் சிறகைத்தொட்டு
வண்ணம் பூசிக்கொண்ட பறவை
நிலவைத் தின்று பசியாறுகிறது.

விசும்பின் துளியாய்
மிச்சமிருக்கும் நினைவுகளில்
காக்கைப்பாடினி பாடுகிறாள்.

விருந்து வருமோ மருந்தாய் ? !

காளிதாசன் கிளையில் தொங்கிக்கொண்டு
அடிமரத்தை அறுக்கிறான்.

தேவியின் தாம்பூல எச்சில் முத்தம்
தாமதமாகிக் கொண்டே இருக்கும்
காத்திருப்புகள்..

தொடரமுடியாமல் “ருது சம்ஹாரம் “

– புதியமாதவி மும்பை

Vellai Pookkal Kavithai By PuthiyaMaadhavi வெள்ளைப்பூக்கள் கவிதை - புதியமாதவி

வெள்ளைப்பூக்கள் கவிதை – புதியமாதவி

பறந்து வரும் உன் வானத்தை
தரையில் இருக்கும் கூடுகள்
அச்சத்தோடு எட்டிப்பார்க்கின்றன.
சந்திப்புகளின் காயங்கள் ஆறவில்லை.

கைக் குலுக்க மறுத்த காரணங்கள்
தேச வரைபடங்களில்
கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
உறவின் அர்த்தங்களை அவமானத்தில்

புதைத்த அவன் தேசம்
சமவெளி எங்கும் எந்திர மனிதர்கள்
மத்தாப்பு கொளுத்தி நடனமாடுகிறார்கள்
காயப்பட்டு கண்மூடிக்கிடக்கும் அந்த இரவு

உயிர்ப்பறவையின் படபடப்பு
பிரபஞ்சத்தின் பால்வீதிகள் இருண்டுபோய்
நட்சத்திரங்கள் தடுமாறுகின்றன.
தோழி
அவனை எட்டிப்பார்த்து

காற்றில் முத்தமிட்டு
கரைந்துவிட முடியாமல்
அடங்கிப்போகிறது பரணி.
கண்மூடிய கனவுகளை
அவன் சுடுகாடுகள்

எரிக்குமோ புதைக்குமோ?
யுத்தகளத்தில் மூடாமல் விழித்திருக்கும்
பிணத்தின் கண்களிருந்து
அழுகி நாற்றமெடுக்கிறது
அவன் எப்போதோ கொடுத்த
வெள்ளைப்பூக்களின் வாசம்.

Parinirvanam Poem by Puthiyamaadhavi புதிய மாதவியின் கவிதை பரிநிர்வாணம்

பரிநிர்வாணம் கவிதை – புதியமாதவி



தலையில் விழுந்த
காக்கையின் எச்சம்
மயிர் பிளந்து துளிர்விடும்
போதி மரத்தின் விதை.
நரம்பு மண்டலத்தை
துளைத்துக்கொண்டு
குருதி குடித்து
நீள்கின்றன வேர்கள்.
கபாலம் வெடித்துச் சிதறியதில்
புத்தனுக்கும் காயம்.
தலைகீழ் யோகாசனம்
மூச்சுப்பயிற்சி
முக்தி நிலை.
இரவுக்கு என்ன அவசரம்?
வெளிச்சம் தேடி
வனவாசம்.
இலைகள் போர்த்திய காடுகள்
பச்சையங்கள் தின்று
பசியாறும் நிழல்கள்
திரும்பிப் பார்க்காத நதியின்
வெள்ளம்
விழித்துக்கொள்கிறது
அவள் விடியல்.
வாசல் தெளித்துக்
கோலமிடுகிறாள்.
மரக்கிளைகள் அசைகின்றன.
சிறகு முளைக்காத
குஞ்சுகளின் பசி
பறவைகளின் படபடப்பு
வானத்தின் சிறகசைப்பு
நதியின் பயணத்தில்
துடுப்புகள் தடுமாறுகின்றன.
கழிமுகம் காத்திருக்கிறது
வந்து சேராத
பரிநிர்வாண புத்தனுக்காக.

Nylon ropes poem by Puthiyamaathavi புதியமாதவியின் நைலான் கயிறுகள் கவிதை

நைலான் கயிறுகள் கவிதை – புதியமாதவி



தினம் தினம் தற்கோலை
செய்து கொள்கிறேன்.
விடியலில் எப்போதும் போல
சன்னலைத் திறந்து வைக்கிறேன்.
அழைப்பு மணியோசையில்
மனம் தடுமாறுகிறது.
நைலான் கயிறுகள் பல வண்ணத்தில்
பரிசாக வந்திருக்கின்றன.
கனவுகளின் பாரத்தைச் சுமக்கும்
உறுதியானவை.
அறிவுஜீவிகளின் சிபாரிசுகள்
பொறிக்கப்பட்ட முத்திரை
கவனமாகப் பொதியப்பட்டு
அதில் பளிச்சென என் பெயருடன்
வந்திருக்கும் பெட்டியை
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்.
பகல் வெளிச்சத்தில்
சுருண்டுக்கிடக்கும் கயிறுகள் தற்கொலைக்குத் தூண்டுகின்றன
இரவு வரும்போது
மீண்டும் தூக்குமாட்டிக்கொள்கிறேன்.
கவிதைகள் நாக்கை நீட்டிக்கொண்டு பரிதாபமாக வெளியில் தள்ளப்படுகின்றன.
எழுதி முடிக்காத நாவலின் கடைசி
அத்தியாயத்தில்
அவனைச் செரிக்க முடியாமல்
வயிறு உப்பி குடல் வெளியில்
தள்ளியதில்
நாற்றமெடுக்கிறது பிணம்.
————————————