சங்கச்சுரங்கம் இரண்டாம் பத்து – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: அப்பணசாமியின் வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும் – ஆர். பாலகிருஷ்ணன்
வரலாற்றிலிருந்து நாம் தப்பிச்செல்ல முடியாது. கடந்த காலம் தான் நம்மை கடந்து செல்கிறது. எனவே வரலாறு என்ன வாழ்வாதாரமா என்று கேட்டுவிட்டுக் கடந்து செல்லமுடியாது. வரலாறு பற்றிய புரிதல் சரியான எதிர்காலத்தை நோக்கி நிகழ்காலத்தில் வழிநடத்தும்.
இந்திய வரலாற்றியலாளர்களில் மிக முக்கியமான ஓர் ஆளுமை டி.டி. கோசாம்பி.
ஆட்சியாளர்களின் பரம்பரைப் பட்டியலையும்; அரசர்கள் நிகழ்த்திய போர்ப் பயணங்களையும்; மேட்டுக் குடிகளின் ஆடம்பர வாழ்க்கையையும்; அரண்மனைகள், கோவில்கள் குறித்த வருணனைகளையும்; அந்தப்புர மனைவியரின் எண்ணிக்கையையும் வரலாறு என்ற பெயரில் படித்து வந்தோம். ஆனால் அடித்தட்டு மக்கள் வரலாறு இவற்றில் இடம் பெறுவதில்லை. இதில் மடைமாற்றம் செய்து இந்தியாவின் அடித்தட்டு மக்கள் வரலாறு எழுதுவதைத் தொடங்கி வைத்தவர் டி. டி. கோசம்பி என்று அறியப்படும் தாமோதரன் தர்மானந்தர் கோசம்பி ஆவார்.
ஆனால் அவரது எழுத்துகளும் சிந்தனைகளும் இன்றளவும்கூட தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தப்படவில்லை. அத்தகைய சிக்கலான பணியினை மூ. அப்பணசாமி எழுதியுள்ள வரலாறு – பண்பாடு – அறிவியல் : டி. டி. கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும் எனும் இந்த புத்தகம் மேற்கொள்கிறது.
வரலாறு என்பது கல்வெட்டுகள், சாசனங்களில் மட்டுமல்லாமல் தொலைதூரக் கிராமங்களில் காணப்படும் சிதைந்து போன வழிப்பாட்டு உருக்கள், மரக்குகைகள் மலைக்குகைள் ஆகியனவற்றில் மட்டுமல்லாமல் அருகில் வாழும் மக்கள் உணவுமுறை அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள். சொல்லாடல்களில் மறைந்துள்ளதைக் கட்டவிழ்த்துள்ளதன் மூலம் கோசம்பி வெளிக்கொணர்ந்தார். மட்டுமல்லாமல் சமஸ்கிருத வேதங்கள், பிரமாணங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றையும் கட்டுடைத்து இந்திய தொல் குடிமக்கள் மீது நான்காயிரம் ஆண்டுகளாகத் தொடுக்கப்பட்டு வரும் பண்பாட்டுத் தாக்குதல்களை வெளிக்கொணர்ந்தார்.
இதன் மூலமாக இந்தியாவில் வர்க்கச் சுரண்டல் என்பது சாதிப் படிநிலை அமைப்பின் மூலமாக நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் இந்த சாதி அமைப்பு மதத்தால் கட்டுப்படுத்தப்படுவதையும் அம்பலப்படுத்தினார்…
இந்தக் கதையினை டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக தமது புத்தகத்தில் கூறுகிறார்
மூ. அப்பணசாமி….
இந்த நூல் வருகிற 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இது ஒரு நல்ல முயற்சி.
வாழ்த்துகள் தோழர் அப்பணசாமி.
– ஆர். பாலகிருஷ்ணன்
முகநூல் பக்கத்திலிருந்து
நூல் : வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும்
ஆசிரியர் : மூ. அப்பணசாமி
விலை : ரூ.₹400
வெளியீடு : ஆறாம் திணை பதிப்பகம்
நூல் அறிமுகம்: ஆர். பாலகிருஷ்ணனின் JOURNEY of A CIVILISATION – இரா.இயேசுதாஸ்
JOURNEY OF A CIVILISATION
Indus to Vaigai…..
என்ற 503+பக்கங்கள்
கொண்ட ரூபாய் 2400/- விலையுள்ள
ஆங்கில நூலை “ரோஜா முத்தையா
ஆராய்ச்சி நூலகம்”பதிப்பிக்க..
பாரதி புத்தகாலயம் அதை மக்களிடம்
கொண்டு சேர்க்கும் பணியை மேற்
கொண்டு 2021ல் இரண்டாம் பதிப்பு
வெளிவந்துள்ளது.
கீழடி அகழாய்வு முடிவுகள் ..மற்றும் ஆதிச்சநல்லூரில் நூறாண்டுகள் கடந்து மீண்டும் அகழாய்வு….அங்கிருந்து தாழியிலிருந்து ஒரு முழு மனித எலும்புக்கூடு
பெங்களூருவுக்கு மதுரை உயர்நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் கொண்டு செல்லப்பட்டுஅங்கே எந்தவித பின்தொடர்வும் (followup) இன்றி இருக்கும் நிலையில் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள இந்த
ஆராய்ச்சி நூல் உயர்ந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நூலை பார்க்கும் போது படிக்க முடியுமா என் மலைப்பாகத்தோன்றிடினும்.. இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்நூலை நமது குடியரசுத்தலைவர்..
பிரதமர்..துபாய்…அபுதாபி ஆட்சியாளர்களுக்கு சிறப்புப் பரிசாக வழங்குவதை பார்த்த பின்பு ஆறு மாதத்திற்கு முன்பு வாங்கிய நூலை எப்பாடு பட்டாவது படித்தே தீர்வது என முடிவுசெய்து ஒன்பது நாட்களில் படித்து பின் ஓரிரு நாட்கள் மீள்வாசிப்பும் குறிப்புகளும் எடுத்தேன்.
ஒரு நூலைப் படித்து தான் புதிய தகவல்கள் பெறுவது…அதனினும் அதை பிறருடன் பகிர்ந்துகொள்வது இன்பமானது.. ஏராளமான பிரமிப்பூட்டும்….திகைக்க
வைக்கும்…சிந்திக்கத்தூண்டும்….ஏன்… நம்மையே ஆராய்ச்சிக் களத்தில் இயல்பாகவே இறக்கிவிட்டு விடும் அற்புத சாகசத்தை இந்நூல் நிகழ்த்துகிறது. ஒரு ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பது போன்ற நிலை..பொன்னியின் செல்வன் ஐந்துபாகமும் ஒன்றாக உள்ள நூலை படிப்பதுபோல….வேள்பாரி இரு பாகத்தை ஒன்றாக்கி
படிப்பது போன்றது இந்த வாசிப்பு.. ஆசிரியர் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று….பின் தமிழ்வழி ஐ.ஏ.எஸ்.எழுதி முதல் முயற்சியிலேயே தமிழகத்தில்
முதலிடம் பெற்று..இந்திய குடிமைப்பணியில் ஒரிசா மாநிலத்தில் பழங்குடிகள் பெருமளவு வசிக்கும் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுகிறார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பில் இவர் திரு.ஐராவதம்மகாதேவன் அவர்கள் எடுத்த “சிந்துச்சமவெளி நாகரிகம்”பற்றி எடுத்த வகுப்பும்..பின் களப்பணிக்கு சென்றபோது இவர் கண்ணில்பட்ட”தமிழி”(TAMILI) என்ற மைல்கல்லும் பெரும் திருப்பமாக அமைந்தன. தமிழிலக்கிய மாணவரான இவர் சங்க இலக்கியத்திலும்..அதில் விவரிக்கப்படும் தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கை முறையிலும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இருந்தார். இந்தப்பண்பாட்டிற்கான ஆதாரங்களை பொருள் வடிவில் தேடிக்கொண்டிருந்த இவருக்கு ஐராவதம் அவர்களின் சிந்துநாகரிகம்-திராவிட நாகரிகத் தொடர்பு பற்றிய உரையும் நூல்களும் இயற்கையாகவே ஆர்வத்தை ஈர்த்தன. இதனால் காலப்போக்கில் ஐராவதம் அவர்களுக்குப் பின் இவர் சிந்து நாகரிக ஆராய்ச்சிப் பணியில் ரோஜா முத்தையா
நூலகத்தில் பொறுப்பேற்றார்.
2010 கோவை செம்மொழி மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்து…அங்கே ரோஜா முத்தையா நூலகம் மூலம் கண்காட்சியும் ஏற்படுத்தி..சிந்து சமவெளி நாகரிகத்தின்
அடித்தளம் திராவிடம்…என்பதை ஏதோ மொழிவெறியோ…மாநிலப்பற்றோ..என்று இல்லாமல் நவீன அறிவியல் உலகின் எல்லா ஆராய்ச்சி வசதிகளையும் மிக நுணுக்கமாக…மிக மிக நேர்த்தியாக பயன்படுத்தி நிரூபணம் செய்கிறார்.. இதன் முழு வெளிப்பாடே இந்த அற்புதமான மகத்தான நூல்..
ஹரப்பாவிலும்….மொகஞ்சோதாராவிலும்… ஆதிச்சநல்லூரிலும்..கீழடியிலும்.. நாம் நேராகக்களத்தில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு தத்ரூபமாக புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே! ஏனெனில் ஏரியல் வ்யூ எனும்பருந்துப் பார்வையில் க்ரேன் கேமரா மூலம் பல புகைப்படங்கள் உள்ளன. அட்டவணைகள்(Tables),வரைபடங்கள் (Maps),அகழ்வாய்வில் கிடைத்த பொக்கிஷங்களின் நேர்த்தியான புகைப்படங்கள்(Colour Photos) வரை ஓவியங்கள்
(Line drawings) என் அனைத்துமே நம் வாசிப்பை சுவாரசியம் மிக்கதாக மாற்றுகின்றன.
முப்பது ஆண்டுகள் தொடர் கடின உழைப்பு.. ஒரிசா முதல்வரின் சிறப்பு ஆலோசகர்.. தலைமைச்செயலர்….ஒரிசாவில் பேரிடர் மேலாண்மையில் முன்னுதாரணமான சாதனை..இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்..என வித்யாசமாக பணி ஆற்றும் சூழலிலும் பணி நிமித்தம் மேற்கொள்ளும் பயணங்களையே தனது ஆராய்ச்சிக்கான களங்களாகவும் மாற்றிக்கொண்டது அதனினும் சிறப்பு.. முடியாத கட்டத்தில் ஓராண்டு ஓய்வு விடுப்பு எடுத்து ஆராயச்சியில் ஈடுபட்டதும்…பின் இந்நூலை எழுத முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதும்….சாதாரண டாக்டர் பட்டத்துக்கு என்ற ஆராய்ச்சிப்
படிப்பு(Project )என்ற நிலையை மறுத்து உண்மையான ஈடுபாட்டுடன்….மன உறுதியுடன் மிகச்சிறந்த யாராலும் மறுதலிக்க முடியாத அளவிற்கு சான்று மேல் சான்று….சாட்சிக்கு மேல் சாட்சி என எல்லா கல்வித்துறை ஆராய்ச்சி அறிவையும் இதிலே பயன்படுத்தியுள்ளதே இநாநூலின் தலையாய சிறப்பம்சம்!.
நான் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வேன்….ஒவ்வொரு வாசிக்கத்தெரிந்த மனிதனும் ஒரு வாரம் படிப்புக்கென விடுப்பு எடுத்துக்கொண்டு வாசிக்க வேண்டிய நூல்…இது கொஞ்சம் ஓவராக உங்களுக்குத் தோன்றினாலும்..இதில் கொஞ்சமும் மிகையில்லை. அவ்வளவு உழைப்பு…காலம்…பொருள்….பொறுமை..
இந்நூலுக்குச்செலுத்தப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் காணப்படும் செய்திகளுக்குச் சான்றுகளாக சிந்து சமவெளி நாகரிக அகழ்விடத்தின் காட்சிகளும் பொருட்களும் இன்று மறைக்க முடியாத சாட்சிகளாக உள்ளதை இந்நூல் பட்டியலிடுகிறது. ஊரின் பெயர்கள்…இங்கும்…அங்கும்….இன்றும் அப்படியே ஒன்றாக இருப்பதை யாராலும் இனி மாற்றமுடியாது!
சேவற்கோழிச்சண்டை….. சிபு காளையும்….காங்கேயம் காளையும்…. வன்னிமர வழிபாடு….. குயவருக்கு முக்யத்துவம்.. விவசாய விளைச்சலுக்கு பலி கொடுத்தல்..
சிவப்பு…பின் கறுப்பு-சிவப்பு…நிறத்திற்கு முக்கியத்துவம்…தாமிரம் -செம்பு பயன்பாடு.. பானை…தாழி….மணி(Beads), சங்கு வளையல்கள்…சிலம்பு..பெண்தெய்வ வழிபாடு….சாதாரண மக்களையே நாயகர்களாக(Hero/Heroin)போற்றும் அக பாடல்கள்..வீரம்…காதல்…இறந்த பின்பும் ஒருவருக்கு புகழ் நீடிக்க விரும்புதல்… மதக்குறியீடின்மை.. உன்னதமான மேம்பட்ட நாகரிகம்(யாதும் ஊரே…யாதும் கேளீர்),விட்டுக்கொடுக்கும் காதலர்(குட்டையில் உள்ள சில சொட்டுநீரை குடிப்பது போல் பாவனை காட்டும் மான்ஜோடி) செங்கல் தயாரிப்பில் நிபுணத்துவம்… இன்றைய நவ நாகரிகத்தையும் மிஞ்சும் நகரமைப்பு(பொது நீச்சல் குளம்…பெரும் கோட்டைச் சுவர்,சாக்ககடை-கழிவுநீர் வசதி, ஆக்ரமிப்பு இல்லாத சீரிய நேர்க்கோட்டு சாலைகள்…மேற்கிலிருந்து கிழக்கு சரிவான நகர் வடிவமைப்பு(Slope).. ஏழு(seven) எண்ணிற்கு முக்கியத்துவம்.. அரசர்களை/தளபதிகளைவிட புலவர்களுக்கு மரியாதை(தமிழ்ச்சங்கங்கள்..கடை எழு வள்ளல்கள்)..பழைய வரலாறை நினைவு கூர்ந்து பதிவுசெய்தல்(செய்யுள்/கல்வெட்டுகள்/நடுகற்கள்), தாயக்கட்டை விளையாட்டு…சிறு குழந்தைகளுக்கு பொம்மைகள்…ஆடற்கலை.(dancing girl)
கண்ணகி மார்பை அறுத்துவீசி சாபமிட்டது போல பல பதிவுகள்…மலைகளில் முருகன்.. கடலோரமாகவே நாகரிகம் ஆற்றங்கரை நகர் அழிவுகளை தொடர்ந்து புலம்பெயர்தல்.. கடல்வணிக வழிகளை் வாஸ்கோடாகாமா வழிகாண்பதற்கு முன்பே திராவிட நாகரிகத்தவர் கண்டுபிடித்தது..அன்னிய நாணயங்கள்..மீன்..படகு… ஓவிய அச்சுக்க்கள் கண்டுபிடிப்பு….இவை சங்கப்பாடல்களிலும்
இடம் பெற்றுள்ளது..
கொற்கை-வஞ்சி-தொண்டி(Korkai-Vanchi-Thondi Complex)என்பதை விளக்கி ஆதாரத்தை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.கீழ்…மேல்……என்ற பொருள்(Concept)கவனம் பெறுகின்றது. கவரிமான் முடியில்லாமல் உயிர்வாழாது என நாம் பொதுவாக பேசிகாகொள்கிறோம்.. ஆனால் அது மான் அல்ல…கவரி என்ற இன்றும் இமயமலை உச்சியில் வாழும் ஒரு வகை மாடு என்பதையும்…. பாலைவனத்து ஒட்டகம் கடும் வறட்சியின் பசியில் எலும்பைத்தின்னும் என்பதும்.. குஜராத் கடற்கரையில் பொதிசுமந்து செல்லும் கோவேறுகழுதையின் கால்களை சுறாமீன் குட்டிகள் கடிக்கும்…..போன்ற பல வட நாட்டுச்செய்திகள் தமிழ்ச்சங்க பாடல்களில் இடம்பெற்றுள்ளது சிந்துச்சம வெளி நாகரிகத்தின் திராவிட அடித்தளத்தை ஐயமற நிறுவுகின்றன.
வைகைக்கும் சிந்துவுவிற்குமான தூரம் 1400கி.மீ…சிந்து நாகரிகம் முடிந்து திராவிட நாகரிகமாக தொடரும் கால இடைவெளி 1900ஆண்டுகள்.இந்த கால…..தூர… இடைவெளியை ஆதாரப் புள்ளிகள் மூலம் இணைக்கும் பணியை இந்நூல் செய்கிறது…வைகை….தாமிரபரணி ஆற்றங்கரை அகழாய்வுப்பணிகளின் கண்டுபிடிப்புகள் நடுநிலையோடு ஒன்றிய அரசால் நிறுவப்பட வேண்டும் என்ற பதைப்பும்…எதிர்பார்ப்பும் இந்நூலின் வாசகர் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்..
சுதந்திரத்திற்கு முன்பு அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆங்கிலேயனுக்கு இருந்த நேர்மை நம்மவர்(?)களுக்கு இல்லாமல் போனது போலிபண்பாட்டுப் பெருமை! இங்கே ஆரியர்-திராவிடர் என்ற பார்வை..
கேள்வி எழவில்லை…மஹாராஷ்ட்ராவிலும்.. குஜராத்திலும்….இன்றைய பாகிஸ்தான்.. பலுசிஸ்தான்..ஆப்கானிஸ்தான்…என நாகரிகத்தின் பயணப்பாதையின் மைல்கற்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளது.. வடக்கு..தெற்கு என்ற எல்லை விரிவடைந்து கொண்டே சென்று இன்றைய நவீன மனிதனின் ஆதிநிலமாக ஆப்பிரிக்க கண்டம் உள்ளது என்ற டோனி ஜோசப்பின் கருத்தும் இந்தநூலுக்கு வலு சேர்க்கிறது.
ஆழிப்பேரலைகள்…காட்டாற்று வெள்ளம்.. புயல் சூறாவளி பருவகால பேரிடர்கள். எரிமலை…மேம்பட்ட மிருகம்…வாகனம்.. ஆயுதங்களுடன் வரும் புது மனிதக்குழுவின் தாக்குதல்…கடல் ஆட்கொண்டது….என் பல காரணங்களால் மனிதனின் புலம் பெயர்வு தொடர்ந்து கொண்டே உள்ளது. அப்படிப் புலம்பெயரும் போது அவனோடு சேர்ந்து அவனது வளர்ப்பு மிருகம்..பறவை.. மரம்…விளையாட்டு..வழிபாடு..ஊர் பெயர்கள்..தானியம்..இலக்கியம்..பண்பாடு என் அனைத்தும் பயணிக்கின்றன.. இப்படித்தான் அழிவினிறுதியில் சிந்துசம வெளிநாகரிகம் குஜராத்…மஹாராஷ்ட்ரா.. என திராவிட நாகரிக அம்சங்களோடு தெற்கு முனையை அடைந்தது என இந்நூல் ஏராளமான ஆதாரங்களுடன் நிறுவுகிறது..
இன்று தமிழகத்தை DNA ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் 65000ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட நவீன மனிதனின் கலப்பில்லாத வாரிசு என்று யாரும் இருக்க மாட்டார்கள் என இந்நூல் கூறுகிறது..
ஆமாம்…5 சதவீதத்திற்கும் குறைவான அளவிலே இன்றும் அந்தமான் நிக்கோபார் அடர்காடுகளிலும்..இந்தியாவின் சில மலைப்பகுதிகளிலும் ஆதிப் பழங்குடியினர் மரபணு கலப்பின்றி வாழ்கின்றனர்.(இவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது) சிந்துச்சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.. குமரிக்கோடு கடல் கொள்ளப்பட்ட பின் தமிழ்ச்சங்கம் மதுரை நோக்கி புலம்பெயர்ந்தது என்பதும்.. தொல்காப்பியத்தில் ஏராளமான பழைய நூல்கள் முன்பு இருந்தது குறிப்பிடப்படுவதும்.,.அப்போது என்ன மொழி இருந்தது என்பதற்கும் இனி மேல்தான் ஆதாரங்கள் கிடைத்தாக வேண்டும். ஹரப்பாவிில் துணியின் மீது எழுதப்படும்ம் முறை இருந்ததாக ஊகிக்கப்படுகிறது. அவை அழிந்திருக்க்கூடும். திராவிடப் பண்பாடு தான் நம்நாட்டின் அடிப்படை என்பதையே சிந்து-வைகை அகழ்வாராய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த ஆய்வுகள் அண்மைக்காலமாகத்தான் தீவிர கவனம் பெற்றுள்ளன. கீழடியிலும்…ஆதிச்சநல்லூரிலும் இரும்பையும்..குதிரையையும் தேடியவர்கள் அவை இல்லாத காரணத்தால் கிடப்பில் போட்டிருந்தனர்..ஆனால் இன்று நாமே எதிர்பாராதவை சாட்சியங்களாய் வெளிப்பட்டு சவால் விடுகின்றன. மரபியல் ஆய்வுமுறை(DNA Test..Carbondating) சென்ஸஸ்்…வாக்காளர் பட்டியல், விலங்கியல்..தாவரவியல்…இலக்கியம்… வரலாறு…மனிதகுல வரலாறு…புவியியல்.. ஜியோ ஆர்பிட்டரி சிஸ்டம்..நேரடி கள ஆய்வு..நாட்டார் கதைகள்..சொலவடைகள்.. வழிபாடாடுமுறைகள்…திசை அடிப்படையில் வீடு கட்டுதல்…சில எண்களுக்கான
முக்யத்துவம்..குல தெய்வம்..கோயிலுக்கென ஸ்தல மரங்கள்…அணிகலன் அணியும் முறை..சொந்த பந்த உறவு முறை.உணவுப் பழக்கம்..விவசாய முறை.. வைத்திய முறை.. எழுத்து முறை..ஆடை.. உலோகம்..கணித முறை.திருமணமுறை…என பல்வேறு அம்சங்களை ஒப்பிட்டு சிந்து வெளி நாகரிகத்தின்..வைகை/பொருநை நதிக்கரை நாகரிகத்தின் அடிப்படை எது என விருப்பு வெறுப்பின்றி நிறுவும் முயற்சியை இந்நூல்!!
ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள இடம்பெற்றிருக்கும் சொற்கள் தமிழில் இடம் பெற்றிருந்தால் இன்னும் தமிழர் வாசிக்க எளிதாக இருந்திருக்கும். இரண்டு பாகங்களாக பிரித்து அச்சடித்திருந்தால் நூலை எளிதாக மலைப்பின்றி கையாள முடியும்.. விரைவில் தமிழ் வடிவத்தை எதிர்பார்க்கிறோம்!. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வந்தால் இந்திய அளவில் புரிதல் ஏற்படும். அனைத்துத்தரப்பு மாணவர்களும் படித்து அறிவை விரிவு செய்து கொள்ள அற்புதமான வாய்ப்பை நூல் தருகிறது!.
இரா.இயேசுதாஸ்
அறிவொளி வாசிப்பு இயக்கம்(WhatsApp 7010303347)
மன்னார்குடி 8903105814
rajueasudoss@gmail.com
நூல் அறிமுகம்: ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச் சுரங்கம் முதலாம் பத்து கடவுள் ஆயினும் ஆக – சு.பொ.அகத்தியலிங்கம்.
சங்க இலக்கியத்தின் வழி
தமிழர் பண்பாட்டு வேரைக்கொண்டாடி…..
“ சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக “ எனும் நூலை வாசிக்கத் துவங்கிய நொடியிலிருந்து ஏற்பட்ட வியப்பும் மகிழ்ச்சியும் அளவில்லை. ஆர் .பாலகிருஷ்ணனின் ஆழ்ந்த தேடலும் புலமையும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புன்னகைக்கிறது.
எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் அலுவலகத்தில் ஓர் மாலையில் சமுத்திரம், சிகரம் செந்தில்நாதன், தயானந்தன் பிரான்ஸிஸ், நான், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்த முதல் நாள் நினைவுக்கு வருகிறது; அப்போது சிந்துவெளி நாகரிகத்தில் திராவிட வேர் குறித்து ஊர் பெயர்களூடே அவர் விவரித்த காட்சி மனத்திரையில் ஆழப்பதிந்துள்ளது.
இந்நூல் வழக்கமான சங்க இலக்கிய விவரிப்போ, நயந்துரையோ அல்ல அதற்கும் மேல் மானுட பண்பாட்டில் தமிழரின் உயரிய பங்களிப்பை இன்றைய காலத் தேவையூடே நுணுகி அலசி காட்சிப் படுத்தியுள்ள களஞ்சியம். பத்து தொடர் உரையின் தொகுப்பு இந்நூல் .
“…… …… …… ….. …. ….. …. …. …. ….. …..
….. ……. …… …… ……. ….. ….. ….. ….. ….. ….
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்
இயற்கை அல்லன் செயற்கையில் தோன்றினும்
காவலர் பழிக்கும்இக் கண்கள் ஞாலம்
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபறம் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின்நின்
அடிபுறம் தாங்குவர் அடங்காதோரே”
இந்தப் பாடலை முதல் உரையில் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு கொண்டு வரும் போது நூலாசிரியர் சொல்கிறார், “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சாதாரணப் புலவர் மன்னனைப் பார்த்து ஓர் அறிவுரை சொல்லியிருக்கிறார். அதனை ஆவணப்படுத்தியுள்ளனர். இப்போதைய சூழலுக்கு கற்பனை செய்து பாருங்கள். ஓர் இலக்கியவாதியோ அல்லது ஊடகவியலாளரோ இடித்துச் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளதா ?”
முழுப்பாடலையும் சுட்டிவிட்டு பொருளைச் சொல்லுகிறார்,” …. …இவ்வாறு நீ வெற்றி பெறுவதற்கு நீ கொண்டு செல்லும் படை மட்டும் காரணமல்ல, உன் நாட்டில் உழுகின்ற விவசாயிகளின் நெல்லினால் விளைந்த பயனும்தான் காரணம். விவசாயிகளின் கலப்பை பயிரை மட்டுமல்ல, உனது வெற்றியையும் கொடுக்கிறது. இவ்வாண்டில் மழை வரவில்லை என்றாலும் வளம் குன்றினாலும் இயற்கை பிரச்சனைகள் அல்லாது செயற்கைப் பிரச்சனைகள் வந்தாலும் மக்கள் காவலரைத்தான் குறை சொல்லுவார்கள். அதாவது மன்னன் மீதுதான் பழிபோடுவார்கள். அதனால் நீ விவசாயிகள்தான் உனது அரசு, நாடு என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டு அவர்களைக் காத்து, அவர்களுக்கு ஆதரவாய் இருந்தாலே போதும் மற்றவை எல்லாம் இதில் அடங்கிவிடும்.”
முதல் உரையில் இடம் பெறும் இந்த சித்தரிப்பே நூலின் செல்திசையை நமக்கு சுட்டிவிடுகிறது. ஒவ்வொரு உரைக்கும் எடுத்தாண்டுள்ள தலைப்பை கூர்ந்து நோக்கினாலே நூலின் ஆழமும் அகலமும் விளங்கும்.
1.சங்கச் சுரங்கம் அறிமுகவுரை, 2.பசிப்பிணி மருத்துவன், 3. பிறர்கென முயலுநர், 4.பருத்திப் பெண்டிர், 5.கடவுள் ஆயினும் ஆக, 6.கல்லா இளைஞர், 7.முதுவோர்க்கு முகிழ்த்த கை, 8.இமிழ் பனிக்கடல், 9.சேண் நடும் புரிசை, 10 .இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! என்கிற பத்து உரையும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த விவசாயம், பொதுநலம், நெசவு, உழைக்கும் பெண்கள், தோளில் கை போடும் நம் சாமி, கல்வி, கல்வி அறிவின்மை, முதியோர் குறித்த பார்வை, சுற்றுச் சூழல், செங்கல், வீட, மரணம் என நிறையப் பேசுகின்றன.
ஒவ்வொன்றையும் படித்து முடித்த பின் தமிழ் சமூகம் குறித்த பெருமிதத்தோடு ஒவ்வொருவரும் தாம் தமிழனாகப் பிறந்த பேறை எண்ணி இறும்பூதெய்தாமல் இருக்க முடியுமா ?
ஒவ்வோர் உரை குறித்தும் தனித்தனியே நிறைய எழுதலாம். நூலறிமுகத்தின் எல்லை கருதி பத்து உரை குறித்து பத்து செய்திகளும் கேள்விகளுமாய் மட்டுமே எழுதப் போகிறேன்
1] “மண்ணில் விளைந்து வாய்வழி வளர்ந்த மரபுகளின் ஆவணம்,” சங்க இலக்கியம் எனக்கூறும் நூலாசிரியர் ; சங்க இலக்கியத்தில் “மீள் நினைவுகள் இருக்கின்றன,” என்கிறார். மிகச் சரிதான். நீண்ட இலக்கிய பரப்பினூடே நம் பண்பாட்டு அரசியலை நிறுவும் நுட்பமான முயற்சி பாராட்டுக் குரியது, தோராயமான கால எல்லையும், மருதத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த படிநிலையும் சேர்க்கப்பட்டிருக்கலாமோ ?
2] பசிப்பிணி குறித்த தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான பார்வையும் கனவும் எண்ணும் தோறும் ஆச்சரியம் கூடுகிறது. அதனை வலுவாகவே உரையில் நூலாசிரியர் பதிவும் செய்திருக்கிறார். ‘இரந்தும் உயிர் வாழும்’ சூழலும் இருந்திருக்கிறது, ‘கைமாறு கருதா ஈதல்’ குணமும் இருந்திருக்கிறது என இருபுறத்தையும் காட்சிப் படுத்திய நூலாசிரியர் மத்திய அரசின் தானியக் கிடங்கின் பூட்டை உடைத்து அழிபசி போக்க தான் தன் அதிகாரத்தை பயன்படுத்தியது சங்க இலக்கியம் தந்த ஊக்கம் என்கிறார். இப்பகுதியில் மணிமேகலையின் அட்சயபாத்திரம் குறித்து வலுவாகச் சொல்லியிருக்கலாமோ ? பாரதிவரை பயணிக்கும்போது மணிமேகலையும் பேசலாம்தானே ? தமிழ் மண்ணிலும் கற்பனா சோஷலிச வேர் இருந்ததை போகிற போக்கில் சொல்லி இருக்கலாமோ ? [ 49 ம் பக்கம் பாரதியார் பாடல் வரியை வள்ளலார் வரியாகச் சுட்டிய பிழையை அடுத்த பதிப்பில் நேர் செய்க ]
3] அமிழ்தமே கிடைப்பினும் பகுத்துண்ணும் பண்பாட்டு பெருமை உரக்கப் பேசப்பட வேண்டிய செய்தியே. “தமக்கென முயலா நோன்தாள் பிறர்கென முயலுநர் உண்மையானே,” என்கிற மானுடம் போற்றும் வாழ்நெறிக்கு ஈடில்லை. இது நமக்கு வழித்துணை என நூலாசிரியர் முடிவுக்கு வருவது முற்றிலும் நியாயந்தான்.
4] நெசவு, துணி வணிகம், உழைக்கும் பெண்கள் என விரிந்த பரப்பில் ஆற்றிய குறுகிய உரையாயினும் ஆழந்த ஆய்வுக்கு களம் காட்டும் முன்னெடுப்பாகும். யாரேனும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது; தொடர்ந்து செய்வதும் தேவையே.
5] “பெருங்கோயில்களில் இத்தகைய சாமி ஆடுதல் நிகழ்வு ஏன் நடைபெறுவதில்லை என்ற கேள்வியினைக் கேட்டால், அதற்கு பதில், ஏனெனில் பெருங்கோயில்களில் உள்ள சாமியை உங்களுக்குத் தெரியாது; உங்களைச் சாமிக்கும் தெரியாது. அதன் ஸ்தல புராணங்களில் யார்யாரோ இருக்கிறார்கள். அதில் சாதாரண மக்கள் இல்லை.” எனக் கூறும் நூலாசிரியர், “நாட்டார் தெய்வங்களை மக்கள் தங்களில் ஒருவரைப்போல் விளித்து கேள்வி கேட்கும் நடை முறைக் காணப்படுகிறது” என்கிறார். முருகன் வழிபாடு வெறியாட்டு குறித்து வலுவாகச் சொல்கிறார். பரிபாடல் காலத்தில்தான் சுப்பிரமணியனும் தெய்வயானையும் முருகனோடு வலிந்து திணிக்கப்பட்டு நம் மூத்தகுடி வள்ளிக் குறத்தி சக்காளத்தி ஆக்கப்படும் கொடுமை நடக்கிறது. இந்த சமஸ்கிருதமயமாக்கல் அல்லது பார்ப்பணிய மயமாக்கல் குறித்து உரையில் சொல்லப்படிருப்பினும் நா.வானமாமலை சுட்டிக் காட்டியதுபோல் இன்னும் கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ ? குறிஞ்சி நிலம் போல் ஐவகை நிலத்திலும் நம் மண்ணோடும் மனதோடும் நிறைந்த சாமிகள் வேறு; அதுபோல் நம் தாய் தெய்வங்கள் வேறு. இது குறித்து தனிநூலே ஆசிரியர் எழுதலாமே ? செய்வீர்களா ?
6] “தொல்தமிழர் கல்விக் கொள்கை: அரசன் வெளியிட்ட அறிக்கை” என புறநானூற்றின் 183 வது பாடலை, “ உற்றுழி உதவியும்…. அவன் கண் படுமே,” எனும் பாடல் வரியைச் சுட்டுகிறார். கல்வி, கல்லாமை பற்றி நிறைய செய்திகளை இவ்வுரையில் அடுக்குகிறார். படித்தவனே போற்றப்படுவான் என வரைந்து காட்டுகிறார். கீழடியில் கிடைத்த எழுத்து பொறித்த பானையை சுட்டி கல்வியில் ஓங்கிய பழந்தமிழர் என பெருமிதம் கொள்கிறார். அதே நேரம் கல்லாமை இருந்ததையும் சொல்கிறார். இக்கட்டுரை தமிழரை சுயபெருமிதம் கொள்ளத் தூண்டும். அது தப்பில்லை. ஆயின், கல்வியிலிருந்து சமூகத்தின் பெரும் பகுதியினரை விலக்கி வைக்கும் அநீதி எப்படி அரங்கேறியது என்பதையும் இவ்வுரைப் பரப்புக்குள் கொண்டுவந்திருக்க வேண்டாமா ?
7] முதியோருக்கான கொள்கை அறிக்கை பற்றி இன்றைக்குப் பேசுகிறோம். அன்றைக்கே முதியோரை வணங்கி துணைநின்ற முதுவோர்க்கு முகிழ்த்த கை இருந்ததையும் முதியோர் குறித்த தமிழ் சமூகத்தின் நுண்ணிய பார்வையையும் விரிவாகச் சுட்டுகிறது. பயனில் மூப்பையும் சொல்லத் தவறவில்லை. இன்றைக்கு முதியோர் குறித்த பார்வையும் முதியோர் இல்லம் குறித்த ஒருங்கிணைந்த பார்வையும் தேவை அல்லவா ? விவாதிக்க களம் அமைக்கும் உரை.
8] “கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமம்” என்கிற சொற்றொடரை வைத்து மீன் தூங்குமா என கேள்வி எழுப்பி, தூங்கும் என விடையும் தந்துள்ளார் நூலாசிரியர். கடல் என்பது பெரிதும் நெய்தல் நிலத்தோடு தொடர்புடையதுதான் எனினும் பிற நில மக்களுக்கும் கடல் தொடர்புடையதாய் இருப்பதை, பரதவர் வாழ்வை, கடலும் சுற்றுச் சூழலும், கடலும் இயற்கைப் பேரிடரும் என கடலுக்குள் மூழ்கி பல செய்திகளை சங்க இலக்கியத் துணையோடு நூலாசிரியர் தருகிறார். நெய்தல் நிலம் சார்ந்த ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்,’ குறித்து பரக்கப் பேசுகிறது. புவிவெப்பமாதல் குறித்து பேசும் காலகட்டத்தில் இம்மீள் பார்வை மிகத் தேவையான ஒன்று.
9] “சிந்துவெளிச் செங்கல், சங்க இலக்கியச் சுடுமண், கீழடியின் செங்கல் சுவர் என்ற தொடர் நிகழவினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இவ்வுரையினுடைய முக்கிய விசயமாகும்.” என நூலாசிரியர் சொல்வது மட்டுமல்ல அத்திக்கில் நம்மையும் நகர்த்தியுள்ளார். நாம் உரக்கப் பேச வேண்டிய விசயமல்லவா இது ? அதற்கு விசைதருகிறது இவ்வுரை.
10] “ …. பொருள் நிலையாமை ,யாக்கை நிலையாமை, வாழ்க்கையினுடைய நிலையாமை இதெல்லாவற்றையும் பேசி அதனுடைய உள்ளீடாக இருக்கும் வாழ்க்கையினை வாழச் சொல்லி வற்புறுத்துவதுதான் சங்க இலக்கியத்தின் குறிக்கோள் “இவ்வாறு மரணம் குறித்த சங்க இலக்கிய பார்வையை விவரிக்கிறார் நூலாசிரியர். ‘செய்ப எல்லாம் செய்தனன்’ அதாவது ஒருவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதையே வாழ்க்கை எனக் கொண்டாடும் பண்பாட்டு சித்தாந்தம் தமிழருடையது. ஆம்.சாக்குருவி வேதாந்தம் அல்ல, அனுபவித்து வாழும் நெறியே தமிழர் பெருமை.
“அடிப்படையில் பாலா சார் எந்தத் தத்துவத்தையும் சார்ந்து பார்க்கிறவர் இல்லை. திறந்த மனதோடு எல்லாவற்றையும் பார்ப்பதுதான் அவருடைய தத்துவம். பன்மியம் என்பதுதான் அவருடைய தத்துவமாக உள்ளது. அதுதான் சங்க தத்துவம்கூட .” என தமிழ்ச்செல்வனின் வரையறை சரியானதுதான்.
இந்நூல் கொரானா கடுங்காலத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும், களம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய இணையவழி பத்து தொடர் உரைகளின் தொகுப்பு. “முதல் பத்து” என்பது “ டாப் டென் “ என்கிற பொருளிலோ, இது முதல் பத்து உரை இன்னும் தொடரும் எனும் பொருளிலோ இருக்கலாம். எதுவாயினும் வேறல்ல. சரியே !
சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்ப்பதும், தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது. இந்நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது மிக அவசியம். இந்தியாவின் பன்மைத்துவத்தை மறுக்கும் பாசிசம் கவ்வும் வேளையில் இந்நூல் புதிய சாளரத்தைத் திறக்கிறது.
இந்த நூல் சுட்டும் நியாயமான பெருமிதத்தோடு; தமிழ்ச் சமூகம் வர்ணமாக கூறு போடப்பட்டதையும் வர்க்கமாக பிளவுண்டு நிற்பதையும் இணைத்து புரிந்து பண்பாட்டை மேலும் முன்னெடுக்க இந்நூலும் ஆயுதமாகட்டும் !
சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக ,
நூலாசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன் ,
பக்கங்கள் : 264 , விலை : ரூ.270/
வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,
நூல் பெற : 044 24332424 / 24332924
நூல் அறிமுகம்: ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச்சுரங்கம்(முதலாம் பத்து) கடவுள் ஆயினும் ஆக – அபிரா
உலகமே இருண்டிருந்த காலம், காலச் சக்கரம் உருளாமலே இருந்தது போல் இருந்த காலம், எப்போது முடியுமோ? எப்போது இந்தத் துயர நீர் வடியுமோ? என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த காலம், கொரனாக் காலம். ஓயாது உழைத்தவர்களையும் வீட்டிலேயே ஓய்வெடுக்கச் சொன்ன காலம் அது. இருப்பவர்கள் நிம்மதியாய் இருக்க, இல்லாதவர்களைச் சாலைகளில் சாரை சாரையாக ஊர்ந்து செல்ல வைத்த காலம்.
ஆங்காங்கே மனிதத்தின் மிச்சப் படகுகள் அவர்களை கரை சேர்க்க, பலரும் ஆக்கப்பூர்வமாக வீட்டிலிருந்தபடியே முடிந்ததைச் செய்தார்கள். அப்படி ஒரு ஆகச்சிறந்த மனிதர், எழுத்தாளர் மதிப்பிற்குரிய ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து கொண்டே வளங்கள் நிறைந்த சங்க இலக்கியச் சுரங்கத்தைத் தோண்டியிருக்கிறார். சங்க இலக்கியத்திற்கும் தற்கால நடப்புகளுக்கும் இடையே ஓர் தங்கச்சாலையே அமைக்க முயன்றிருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது, கால காலத்திற்கும் பயணமே, வாசிப்புப் பயணமே.
பத்துத் தலைப்புகள், அழகான, நேர்த்தியான மொழிப் பிரசங்கம். அத்தனை தலைப்புகளும் சங்க இலக்கியத்தின் பாடல்களில் இருந்தே, காரணங்களோடு, உதாரணங்களோடு, விளக்கப் படங்களோடு அன்றிலிருந்து இன்றுவரை பட்டியலோடு, தொய்வில்லா நடைபோடும் உரைகள். சுரங்கம் போகப் போக ஆழமாக இருக்கிறது, அதனாலென்ன துணைக்கு ஆசிரியரின் 25 வருட உழைப்பென்னும் ஆக்ஸிஜன் இருக்கிறது, ஒளி காட்ட விளக்காய் பல பாடல்கள் இருக்கின்றன. அருமையான, அலுக்காத, மதிப்பு மிகுந்த மொழி வளங்களைத் தோண்டும் பயணம் இது. ஒவ்வொரு உரையின் முடிவிலும் ஒரு பாடல் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துத் தந்துள்ளார், “சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு” என்ற தலைப்பில்.
1. முதல் உரை: சங்கச் சுரங்கம் அறிமுகவுரை:
ஒரு நூற்றாண்டுக்கும் மேல் அச்சிடப்பட்டு நமது கைகளில் இருக்கும் சங்க இலக்கியத்தினை நாம் மீள்வாசிப்பு செய்து புரிந்து கொண்டோமா? என்ற கேள்வியில் துவங்குகிறது இந்த உரை. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இருப்பத்தி ஓராம் நூற்றாண்டு வரை, ஒரு இலக்கியம் உயிருப்புடன் இருக்கிறதெனில் அது செவ்விலக்கியமான சங்க இலக்கியமே, அதற்குக் காரணம் நம் தாய்மொழி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே என்ற அருமையான தகவலை ஆசிரியர் இப்படித் தருகிறார்.
“நிலமற்ற இலக்கியங்கள் அந்தரத்தில் தொங்கலாம், ஆகாயத்தில் மிதக்கலாம், ஆனால் அதில் ஒருபோதும் மண்வாசனை இருக்கவே இருக்காது, ஆனால் சங்க இலக்கியம் மண்ணுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் தொடர்ந்து இயங்க்கிக் கொண்டே இருக்கிறது.ஏனெனின் அது தொன்மையானது மட்டுமல்ல, உண்மையானதும் ஆகும்”.
சங்க இலக்கியம்= தொல்காப்பியம்+பத்துப்பாட்டு+எட்டுத்தொகை
தொல்காப்பியம் தொன்மையான நூலாயினும், அதிலும் அதற்கு முன்பிருந்த நூல்கள் பற்றிய குறிப்பு உள்ளதெனில் நம் சங்க இலக்கிய மரபின் ஆணிவேரின் ஆழம் நாம் உணர வேண்டியுள்ளது என்கிறார் ஆசிரியர். அதோடு, சங்க இலக்கியத்தின் வழியே சமகாலத்தைப் பற்றிப் பேசுவதே இந்த உரைகளின் நோக்கம் என்பதனைத் தெளிவாகச் சொல்கிறார்.
2. இரண்டாம் உரை: பசிப்பிணி மருத்துவன்
புறநானூற்றில் ஒரு சிறுகுடித் தலைவனைப் பற்றி ஒரு பேரரசர் பாடிய பாடலில் இருந்தே இந்தத் தலைப்பு பெறப்பட்டுள்ளது.
“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ?சேய்த்தோ? கூறுமின்.எமக்கே”
பசி பற்றி, பசியின் வகைகள் பற்றி, கொரானா காலத்தில், மனிதம் அதை எப்படித் துடைத்தது என்பது பற்றியும், அந்தப் பசி தீர்வதற்கான மருந்து பற்றியும் அழகாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர். இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றிப் பேசுகையில் ஒரு கருத்தினை முன்வைக்கிறார். அது இத்தனை வருடங்கள் கடந்தும் நம் நெஞ்சைச் சுடும் அணையா நெருப்பாகவே இருக்கிறது.
“இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டு பல இலட்சக்கணக்கான மக்கள் இறந்தபோதெல்லாம் தானியக் கிடங்குகளில் தானியங்கள் இருந்தன. துறைமுகங்களில் தானியங்கள் இருந்தன. அந்த தானியங்களை எடுத்து மக்களுக்குக் கொடுப்பதற்கான மனமோ அதற்கான முன்னெடுப்போ இருக்கவில்லை என்பதுதான் உண்மை” இந்த உரையின் இறுதியில் புலவர் பெருஞ்சித்திரனார், குமண வள்ளலிடம் பாடிய (புறநானூறு) ஒரு பாடலின் மூலம் விநியோக அறம் பற்றிப் பேசுகிறார்.
சங்க இலக்கியத்தினை அகத்தமிழ், புறத்தமிழ், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பதோடு ”பரிவுத்தமிழ்” எனவும் கூறலாமெனச் சொல்வது நம் மொழிப்பசி தீர்க்கும் மருந்தாகவே இனிக்கின்றது.
3. மூன்றாம் உரை: பிறர்க்கென முயலுநர்:
யாரால் இயங்குகிறது இந்த உலகம்? என்ற கேள்விக்கு “நல்லவர்களால் தான் இந்த உலகம் இருக்கிறது: இயங்குகிறது” என்ற பதிலோடு துவங்கும் இந்த மூன்றாம் உரையின் தலைப்பு எடுக்கப்பட்ட பாடல், புறநானூற்றின் 182-வது பாடல்.
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திர்ர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே”
இந்தப் பாடலை மனித நேயத்தின் குரலாகப் பார்ப்பதாகவும், மனிதநேயத்துடன் ஒரு காலத்தில் ஆட்சிக்கட்டில் நல்லவர்களின் கைகளில் இருந்திருக்கிறது என்பதை நினைக்கையில் வியப்பாக உள்ளதாகவும் கூறுகிறார் ஆசிரியர்.
“கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு”
என்ற நற்றிணைப் பாடலிலும் பிறர்க்கென முயலுதல் பற்றிப் பேசப்படுவதைச் சொல்லி, வாழ்வியல் சிந்தனைகள் ஒரு சமூகத்தில், அதன் பண்பாட்டில், பொதுச் சிந்தனையில் அடிமுதல் முடிவரை ஆழமாக வேரூன்றியிருந்தால்தான், சமூகப்பொறுப்பு மிக்க கருத்துகளை இவ்வாறு இயல்பாகப் பேச முடியும் என்கிறார். இந்த உரையின் இறுதியில் ஒரு பெண் புலவர் பாடிய பாடல் புறநானூற்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அதன் உட்பொருள் ஒரு தலைவனின் தகுதிகள் பற்றிப் பேசுகிறது. பிறர் வறுமையினை அடையும்போது நாணக்கூடிய தலைவர் பற்றிப் பேசும் இப்பாடலோடு, இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் பிறர் துன்பத்தை வெறுமனே கடந்து செல்லாமல், ஏதோ ஒருவகையில் பிறர்க்கென முயன்ற, முயலும் அனைவருக்கும் இந்த உரையைக் காணிக்கையாக்கி முடிக்கின்றார் ஆசிரியர்.
4. நான்காம் உரை: பருத்திப் பெண்டிர்:
சங்க இலக்கியத்தில் பெண்களின் பங்கைப் போற்றும் உரை. அகநானூறு, கலித்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை பாடல்கள் வழியே பெண்களின் தொழில்களைப் பற்றிப் பேசி சங்க இலக்கியம் கற்பனை சார்ந்த இலக்கியம் அல்ல, வாழ்வியலுடன் பிணைந்த இலக்கியம் எனச் சான்றுகளுடன் எடுத்த்ரைக்கின்றார் ஆசிரியர். பருத்தி, நூல், சாயம், பஞ்சு, நூல்-பனுவல் பொருள் ஒற்றுமைகள், மருத்துவத்தில் பஞ்சு பற்றியெல்லாம் நாம் வியக்க வியக்க உரை விரிகின்றது.
சங்க இலக்கியத்தின் வழியே சமகாலத்தில் ஈரோட்டில் “Five P” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பாரதி தேவராஜன் என்ற பெண் தொழில் முனைவோர் பற்றிப் பேசி பெருமிதம் கொள்கிறார் ஆசிரியர்.
5. ஐந்தாம் உரை: கடவுள் ஆயினும் ஆக:
தெய்வத்தினையும் கேள்வி கேட்கும் மானுட இலக்கியம் சங்க இலக்கியம் என்பதற்கு ஆசிரியர் இந்த உரைக்குக் கொடுத்த தலைப்பு வரும் பாடல் நற்றிணையில் உள்ளது. இந்த உரையின் தலைப்புதான் நூலிற்கும் தலைப்பு. இதில் வரும் ஓவியம்தான் இந்த நூலின் அட்டைப்படத்தில் உள்ளது. விரல் உயர்த்திக் கடவுளை கேள்வி கேட்கும் பெண்ணின் உருவம் ஆகச்சிறப்பு. இது விளக்குவது சங்க இலக்கியத்தில் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இருந்த உறவை. ஒரு சாதாரண பெண் கடவுளை வாழ்த்துகிறாள். சங்க இலக்கியம் மானிடவியல், பண்பாட்டியல், சமூகவியல் முதலிய பல்வேறு புலங்கள் சார்ந்தே இயங்கியிருக்கிறது.
வெறியாடல்(சாமியாடல்), கெடாவெட்டு, அறத்தோடு நின்ற அன்பு பற்றியெல்லாம் பேசிவிட்டு ஒரு இடத்தில் சிறுகோவில்களில் மட்டுமே காணப்படும் இந்த சாமியாடல் ஏன் பெருங்கோவில்களில் இல்லை? என ஒரு கேள்வியைக் கேட்கிறார். அதற்கு அவர் கூறும் பதில் உள்ளேறி உணர்த்துகிறது உண்மையை. அது, “பெருங்கோயில்களில் உள்ள சாமியை உங்களுக்குத் தெரியாது: உங்களைச் சாமிக்கும் தெரியாது. அதன் ஸ்தல புராணங்களில் யார் யாரோ இருக்கிறார்கள். அதில் சாதாரண மக்கள் இல்லை”
6. ஆறாம் உரை: கல்லா இளைஞர்:
படிப்பதின் பயனை விரிவாகச் சொல்லும் உரை. சங்க இலக்கியத்தின் வழியே இந்தியாவில் கல்வி குறித்த அண்மை வரலாறு, உயர் கல்வி பற்றிப் பேசுகிறார் ஆசிரியர். கல்விக்கான வாய்ப்பு பற்றிப் பேசுகையில், இந்திய ஆட்சிப்பணியில் இருந்த, தற்போது ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராகவும் உள்ள கற்றுத் தேர்ந்த, ஒரு மாபெரும் வரலாற்று ஆய்வாளர் போன்ற பன்முகங்கள் கொண்ட ஆசிரியர் சொல்வது ஒன்றே ஒன்றுதான்* “நீட் போன்ற தேர்வு அன்று இருந்திருந்தால் நான் நிச்சயம் தோற்றுப் போய் இருப்பேன்”…. *கல்வியின் சம உரிமை பற்றி நம்மை யோசிக்க வைக்கும் வார்த்தைகள் இவை.
அதோடு 1978-ல் இந்திய ஆட்சிப்பணித் தேர்வை அவரவர் தாய்மொழியில் எழுதலாம் என்ற உரிமையைப் பெற்றுத்தந்த கோத்தார் கமிஷனை நன்றியோடு நினைவு கூர்கிறார் ஆசிரியர். ஏனெனில் முழுக்க முழுக்க தமிழில் தேர்வெழுதி, தமிழில் நேர்காணல் செய்து, ஐஏஸ் நுழைந்த முதல் மாணவன் இவர். “வாய்ப்புதான் உரிமையின் வாசல்படி! கேட்டில் நிறுத்தி கேள்வி கேட்பது அறம் அல்ல!” *என்ற அற்புதமான கருத்தைத் தாங்கி வளர்கிறது இந்த உரை.
இந்த உரையில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய புறநானூற்றில் வரும் கீழ்க்கண்ட பாடல் அனைவரும் அறிய வேண்டியது.
“உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே,
பிறப்பு ஓரன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்.
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே”
(கல்வித்திறன்தான் அளவுகோல், மூத்தோன் இளையோன் என்பது வெறும் வயதுக் கணக்கு, அரசு படித்தவன் பேசுவதைக் கேட்கும் என்பதே இதன் உட்பொருள்)
7. ஏழாம் உரை: முதுவோர்க்கு முகிழ்த்த கை:
வயதில் முதியோரைக் கண்டால் வணங்கும் கை என்பதே இதன் பொருள். முதியோரை வணங்குவது உளவியலா, அழகியலா, தற்போதைய முதுமையின் பிரச்சனைகள் சங்க இலக்கியத்தில் இருந்தது பற்றியும் விரித்துரைக்கிறார் ஆசிரியர்.
முதுமை பற்றிப் பலதும் பேசுகையில், கும்பமேளா போன்ற இடங்களில் அந்நிகழ்விற்குப் பின் இரயில்வே நிலையங்களிலும், கும்பமேளா நடந்த இடங்களிலும் தொலைந்த போன முதியவர்கள் காணப்படுகிறார் என்ற செய்தி வரும். அவர்கள் தொலைந்தவர்கள் அல்ல, தொலைக்கப் பட்டவர்கள் என்பதே உண்மை என்று வலியோடு சொல்கிறார் ஆசிரியர். முதுமை பற்றிய இந்த உரையில் ஆசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் “கண்ணீர்த் தீவுகள்” என்ற முதுமை பற்றிய ஆழமான கவிதையினைச் சொல்கிறார்.
“மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்
முதுமக்கள் தாழிகள்!
தள்ளி வைக்கப்பட்டிருப்பது
தகனம் மட்டுமே
இங்கேதான் இருக்கிறார்கள்
வீட்டுக்கு விலக்கான ஆண்களும்”
8. எட்டாம் உரை: இமிழ் பனிக் கடல்:
பரந்து விரிந்த கடல் பற்றி, அறிவியல் ரீதியாக, உளவியல் ரீதியாக கடலோடு பிணைந்த தமிழ் பற்றியும், தமிழோடு பிணைந்த கடல் பற்றியும் கடலின் ஆழம்போல் ஆழமாகப் பேசும் உரை. வலை வளம், வேட்டம் பொய்யாது, மீன் கொள்ளை, சுறா வேட்டை, நெய்தல் நில மக்களின் உழைப்பு, விருந்தோம்பல் பற்றியெல்லாம் பேசுகையில் சங்க இலக்கியத்தினை ஒரு கவனக்குவிப்பு இலக்கியம் என்றே சொல்கிறார் ஆசிரியர். தூங்கும் மீன்கள், கடல் சூழலியல், நெகிழிக் கடல், மீன்களற்ற கடல், புவிவெப்பம் பற்றிப் பேசுகையில் பதறாமல் இருக்க முடியவில்லை.
“பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே:
எம்மனோரில் செம்மலும் உடைத்தே”
என்ற நற்றிணையில் வரும் பாடலில் தோழி தலைவனிடம் இப்படிச் சொல்கிறார். “பெரிய கடலுக்கு அருகில் உள்ள சிறு வாழ்க்கை ஆயினும் நல்வாழ்க்கை எங்களுடையது. எங்கள் குடியிலும் நல்ல ஆண்கள் இருக்கிறார்கள், அவர்கள்தான் தலைவிக்கு ஏற்றவர்கள்” பரதவர் மகளின் சுயமரியாதை பற்றிப் பேசுமிடமாக இதைப் பார்க்கிறார் ஆசிரியர்.
9. ஒன்பதாம் உரை: சேண் நெடும் புரிசை:
உயர்ந்த நெடும் மதில் சுவர் என்பதே புறநானூற்றுப் பாடலில் வரும் இந்த வரிகளின் பொருள். செங்கல்கள், சூளை, மதில்கள் அதில் மறைந்திருக்கும் வரலாறு பற்றிப் பேசும் உரையிது. நூலறிப்புலவர் என்ற சொல்லின் பொருள்..ஆஹா அருமை. நெடுநல்வாடையின் ஒரு பாடலில் சுட்டப்படும் அரண்மனையைப் பற்றி ஒரு ஓவியர், ஒரு கட்டட வடிவமைப்பாளர் கொண்டு காட்சிப்படுத்தியிருக்கும் இடம் மிகவும் அழகு. அந்தப் பாடலின் வரியிது,
“வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக”
சுவரின்றி சித்திரம் மட்டுமல்ல, சுவரின்றி சரித்திரமும் எழுத முடியாது என்ற கருத்தினை பல பாடல்கள் மூலம் விவரிக்கும் உரையிது.
10. பத்தாம் உரை: இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
வாழ்வியல் இலக்கியம் பற்றிப் பேசுகையில் வாழ்க்கையின் எதார்த்தம் கொண்டு முடிப்பதுதானே அழகு. ஆசிரியர் அதனைக் குறைவின்றிச் செய்திருக்கிறார் இந்த உரையில் நில்லா வாழ்க்கை, சீர் இல் வாழ்க்கை, பேர் எழில் வாழ்க்கை, சிறு நல் வாழ்க்கை என நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்தில் வரும் வரிகள் மூலம் வாழ்க்கையின் வகைகள் பற்றிப் பேசுகிறார்.
“செய்ப எல்லாம் செய்தனன்” என்ற பாடலின் மூலம் நம்பி நெடுஞ்செழியனின் ஆளுமைகள் பற்றிப் பேசி சமூகத்தின் சாளரங்களைத் திறந்து வைக்கிறார். கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இந்தப் பாடலில் பாராட்டப் பெற்ற நம்பி நெடுஞ்செழியன் மாபெரும் அரசன் அல்ல, அவன் ஒரு சாதாரண குறுநில மன்னன்.
சங்க இலக்கியத்தில் அனைவருக்கும், அனைத்திற்கும் பாட்டிருக்கிறது. அனைவரின் தொழில்கள், குணநலன்கள், நன்மை, தீமைகள், தவறிழைத்திருப்பின் கேள்வி கேட்டல், கேள்வி கேட்டவர்களுக்கு உரிய பதிலளித்தல் எனப் பல சான்றுகள் சங்க இலக்கியப் பாடல்களில் பரவிக் காணப்படுகின்றன. ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நானூற்றி சொச்சப் புலவர்களில் முப்பதிற்கும் மேற்பட்ட பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது சங்க இலக்கிய காலகட்டத்திலேயே நம் சமூகக் கூட்டம் பண்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
இந்த உரைகள் நீண்டதாய் இருக்கின்றன. என்னுடைய பதிவும் நீண்டதாய் இருக்கின்றது. என்ன செய்வது? சங்க இலக்கியம் நீண்ட நெடிய, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டது.
பழையன கொண்டு
புதியன பாடிய
புதியன போற்றிய*
*சங்கச்சுரங்கம்*
*கடவுள் ஆயினும் ஆக*
*தமிழ்ப்பரப்பில்*
எப்போதும் வீற்றிருக்கும்*
*தமிழ் வழங்கும் சுரங்கமாக!!!
நன்றி: ராஜேஷ் சிவம்
சங்கச்சுரங்கம்(முதலாம் பத்து)
கடவுள் ஆயினும் ஆக
ஆசிரியர்: ஆர்.பாலகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 263
விலை: ரூ.270/-