இரா.கலையரசியின் கவிதைகள்
எட்டிப் பார்க்கிறது
***********************
வெந்து போன
உடலின் சதைகளில்
ரத்தம் வழிகிறது.
அழகிய கருவிழிகள்
குழைந்த சேறாய்
நட்டுக் கொண்டிருக்கிறது.
கருங்கூந்தல் கருகி
மொட்டைத் தலைக்கு
வழி விடுகிறது.
உருகிய ரப்பர்
வளையல்கள்
கைகளைக் கிழித்து
எலும்புகளை உரசுகிறது.
குவிந்த வயிறு
தணலாய்த் தகிக்கிறது.
குவளைக் கண்கள்
ஒளியைச் சிந்தியபடி
பட்டாம்பூச்சி வருடலுடன்
உலகை எட்டிப் பார்க்கிறது
அவள் “குழந்தை.”
வரிக்கி
**********
வறண்ட நிலத்துப் பிரதேசமாக
இறுகிப் போய்த்தான்
இருக்கிறாய்.
காலத்தின் கொடுமைகளை
மெல்ல மனதில் தேக்கி
சிறு துளைகளாக
வடுக்களை சேமித்து
வைத்து இருக்கிறாய்.
கடுகடுத்த உன் மேல்
காதல் பெருகியது.
சூடான குளம்பியை
துணைக்கு அழைக்கிறேன்.!
மெல்ல இதமான, நீ
தாங்கும் சூட்டில் உன்னை மூழ்கடிக்கிறேன்.!
கரைந்த உப்பாய்
மெதுவடைக்குப் போட்டியாய் இளகுகிறாய்.
உன்னை என்னுள்
கரைத்துக் கொள்கிறேன்.
நாவில் பதிந்து இதயத்தில்
சிம்மாசனம் போட்டுக்
கொள்கிறாய்.
இரா.கலையரசி.

