மொழிபெயர்ப்புக் கவிதை – நா.வே.அருள்
The Oppressionists
**********************
Art
what do the art
suppressors
care about art
they jump on bandwagons
wallow in press clips
& stink up the planet
with their
pornographic oppression
Art
what do they care about art
they go from being
contemporary baby kissers to
old time corrupt politicians
to self-appointed censorship clerks
who won’t support art
but will support war
poverty
lung cancer
racism
colonialism
and toxic sludge
that’s their morality
that’s their religious conviction
that’s their protection of the public
& contribution to family entertainment
what do they care about art
–Jayne Cortez
கலை
கலையை ஒடுக்குபவர்கள்
கலையைப் பற்றி ஏன்
கவலைப் படப் போகிறார்கள்?
அவர்கள் அணிவகுப்பில் குதிக்கின்றனர்
பத்திரிகைச் செய்திகளில் உருள்கிறார்கள்
அவர்களின் ஆபாசமான ஒடுக்குமுறைமூலம்
பூமியையே
துர்நாற்றம் வீச வைக்கிறார்கள்.
கலையை ஒடுக்குபவர்கள்
கலையைப் பற்றி ஏன்
கவலைப் படப் போகிறார்கள்?
குழந்தைக்கு முத்தங்களிடும்
தற்காலத்தவர்களிலிருந்து
பழங்கால ஊழல் அரசியல்வாதிகள்
சுயமாக நியமித்துக் கொண்ட தணிக்கை எழுத்தர்கள் வரையிலும்
அவர்கள் இருக்கிறார்கள்
கலையை ஆதரிக்காதவர்கள்
ஆனால் போர்
வறுமை
நுரையீரல் புற்றுநோய்
இனவெறி
காலனித்துவம்
நச்சு கசடு
ஆகியவற்றை ஆதரிப்பவர்கள்.
அது அவர்களின் ஒழுக்கம்
அது அவர்களின் மத நம்பிக்கை
அது அவர்களின் பொதுஜனப் பாதுகாப்பு
மற்றும் குடும்பப் பொழுதுபோக்கிற்கான
அவர்களின் பங்களிப்பு
கலை மீது அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது?
–ஜேனி கோர்ட்டஸ்
தமிழில் நா.வே.அருள்
உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்
நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ₹100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com
உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த
முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்
நூல் வெளியீட்டு விழாவில் என். குணசேகரன் பேச்சு
சென்னை, மே 19 –
உக்ரைன் போரை பயன்படுத்தி உலக அரசியலை கட்டுப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோவை பலப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார்.
இ.பா.சிந்தன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘உக்ரைனில் என்ன நடக்கிறது?’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதனன்று (மே 18) சென்னையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட கட்சி கல்விக்குழு நடத்தி இந்நிகழ்வில் நூலை வெளியிட்டு என்.குணசேகரன் வெளியிட, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் என்.குணசேகரன் பேசியதன் சுருக்கம் வருமாறு:
இரண்டாம் உலகப்போருக்கு பின் போராற்ற உலகம் முழக்கம் எழுந்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவை வீழ்த்தவும், ஜெர்மனை வளரவிடாமல் தடுக்கவும் நேட்டோ அமெரிக்கா உருவாக்கியது. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகும் நேட்டோ தொடர்கிறது. இந்த நேட்டோ காரணமாகவே ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்பட்டுள்ளது.
இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர மனிதநேய மிக்கவர்கள் வலியுறுத்துகின்றனர். உக்ரைன் ஆளும் கூட்டம் போரை நீட்டிக்க விரும்புகிறது. உலகம் முழுவதும் ஆயுதம் விற்பனை செய்யும் கூட்டத்தின் பிரதிநிதிகள் ஐரோப்பா, அமெரிக்காவின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இந்தக் கூட்டம், போரை தங்களது லாப வேட்டைக்கும், மூலதன குவியலுக்கும் வாய்ப்பாக கருதுகிறது.
மேற்கத்திய, ஐரோக்கிய நாடுகள் ஆயுதங்களை ஒருங்கிணைந்த முறையில் தடையின்றி வழங்க வேண்டுமென்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே, போர் தற்போதைக்கு முடிவுக்கு வராது.
இந்தப்போரை பயன்படுத்தி ஐரோப்பிய, ஆசிய அரசியலை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோ பலப்படுத்துகிறது. நேட்டோவிற்குள் புதிய நாடுகளை சேர்க்கிறது. அதன்வாயிலாக ஏகாதிபத்திற்குள் உள்ள முரண்பாடுகளை கட்டுப்படுத்தி, உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை செய்கிறது.
மேலும், ரஷ்யாவை பலவீனப்படுத்தி, சீனாவின் பொருளாதார, அரசியல் வல்லமையை கட்டுப்படுத்த இந்தியாவுடன் உறவு கொண்டாடுகிறது. இதன்வாயிலாக உலக அரசியலை தனது ஆதிக்கதிற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏமன், சிரியாவை உருக்குலைப்பதிலும், இலங்கை பொருளாதார நெருக்கடியிலும், இந்தியாவில் எல்ஐசியை விற்பதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு உள்ளது.
500 கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக உலகம் வேட்டையாடப்படுகிறது; உலகின் இயற்கைவளம் அழிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிக்கும். பேச்சுவார்த்தை மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். இதற்கு வெகுமக்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்.
அடையாள அணிதிரட்டல், இனவெறி போன்றவை வர்க்க ஒற்றுமையை சிதைப்பதோடு, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே உள்ளன. இதுவே உக்ரைன் போர் படிப்பினையாக உள்ளது. உக்ரைனில் இரண்டுமுறை ஆட்சிக்கவிழ்ப்பு நடந்துள்ளது. அவற்றை ஆரெஞ்ச் புரட்சி, மைதான புரட்சி என்றனர். ஆளும் வர்க்கத்தை முற்றாக வீழ்த்தி, கோடான கோடி உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமைவதுதான் புரட்சி. புரட்சி என்ற வார்த்தையை மலினப்படுத்த ஆட்சி கவிழ்ப்பை புரட்சி என்றார்கள்.
ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. மின்தேவைக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதாலும், அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் அமெரிக்காவின் துதிபாடியான பிரதமர் இந்த நிலையை எடுத்துள்ளார்.
சிஎன்என் போன்ற சேனல்கள் முதலாளித்துவாதிகளால் நடத்தப்படுகின்றன. அவை கார்ப்பரேட்டுகளின் குரல்களையே பிரதிபலிக்கின்றன. அவற்றை பின்பற்றியே பிற ஊடகங்களும் இயங்குகின்றன. ஊடகங்கள ஒருசார்பான செய்திகளையே வெளியிடுகின்றன.
போருக்கு எதிரான முழக்கம் அழுத்தமாக உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். இடதுசாரிகளின் பின்னால் உலகம் அணிதிரண்டால்தான் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்திய முறைமை அழிந்தால்தான் போர், வேலையின்மை, வறுமைக்கு முடிவு கட்ட முடியும்.
இவ்வாறு அவர் பேசினர்.
இந்த நிகழ்விற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், க.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, எஸ்எப்ஐ மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, பாரதி புத்தகாலம் மேலாளர் எம்.சிராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
2022 மே 19
நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் – தேனி சுந்தர்
உலகப் போரின் போதும், கடுமையான வேலைகள் செய்யும் போதும் கருப்பு, வெள்ளை பேதமில்லை.. ஒரு நல்ல வேலை தேடி அலைகிறார். வேலை இருக்கிறது. ஆனால் கிடைக்கவில்லை. காரணம் கருப்பு வெள்ளை..!
தகவல் சொல்லும் போதே நம்பிக்கை இழக்க வைக்கும் வார்த்தைகள். கிட்டத்தட்ட நம்ம ஊர்ல சொல்றது அடிக்கடி அரசு துறைகளில் சொல்லப் படுவது போல சொன்னால் தண்ணி இல்லாக் காடு.. பனிஸ்மெண்ட் ஏரியா.. அந்த மாதிரி..!
வெள்ளை மக்கள் தான் அங்கும். ஆனால் அவர்களும் கூட வறுமையின் பிள்ளைகள் தான். குடிக்க கஞ்சி இல்லைன்னாலும் வீராப்புக்கு பஞ்சமில்லை என்று சொல்வது போல நிற வெறிக்கு கொஞ்சமும் குறைவில்லை..!
அந்த பள்ளி குறித்து நல்ல அபிப்பிராயங்கள் எங்கும் இல்லை. ஊரிலும் இல்லை. பள்ளிக்கு உள்ளேயும் இல்லை.. பணியில் சேர்வதற்கு முன்பு பள்ளி முழுவதையும் ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு வாங்க.. அவசரம் எதுவுமில்லை.. நிதானமாக முடிவெடுங்க என்கிறார் புளோரியன். பள்ளியின் முதல்வர்.
அமைதி இல்லை. ஒழுங்கு இல்லை. மதிப்பு இல்லை. மரியாதை இல்லை. வளாகத்திற்கு உள்ளே வருவோர்க்கு கெட்ட வார்த்தைகள் இலவசம். பார்க்க கூசும் காட்சிகள்.. கோபமூட்டும் பார்வைகள்.. வேறு வழியில்லை, பிழைப்புக்காக வாத்தியார் ஆவது என முடிவெடுக்கிறார் பிரைத்வெயிட்.!
நாம் அறிந்த எல்லா பள்ளிகளிலும் இருக்கிற அத்தனை கேரக்டர்களிலும் ஆசிரியர்கள் அங்கு இருக்கிறார்கள். பெண்கள் தான் பெரும்பான்மை..! புதுசா வந்தவர் இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிப்பார்ன்னு தெரியல.. கிண்டல் கேலிகள்..!
உலகப் போரில் சண்டையிட போனவர் பிரைத்வேயிட். கிட்டத்தட்ட அதே தயாரிப்புடன் வகுப்புறைக்கு செல்கிறார்.. போரில் வெற்றி ஒன்றே இலக்கு என்று சென்றவர் வகுப்பறையில் தோற்றுப் போகிறார். ஆம், வேண்டுமென்றே தோற்றுப் போகிறார். உள்ளங்களை வெல்வதற்கு தோல்வி தான் முதல் படி..!
இங்கு மதிக்கத் தகாத பெண்கள் என்று யார் இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வியில் சரிபாதி பேரை வெல்கிறார். அடித்து வீழ்த்த வலை விரிக்கிறான் டென்ஹாம். அடித்தும் வீழ்த்தி, அன்பால் அதை விட பெரும் வெற்றியை ஈட்டுகிறார். வகுப்பில் மீதி பாதியையும் வென்று விட்டார். ஆசிரியர் பெல் பிரச்சினையை சிறப்பாக அணுகி மொத்த வகுப்பையும் வென்று விட்டார்..!
பமீலா எடுக்கும் துணிச்சல் மிக்க முடிவால் ஒட்டு மொத்த மாணவர்களின் மனதையும் வென்று எதிரணி, தனது அணி என்று எதுவும் இல்லாமல் ஓரணியில் திரள வைக்கிறார். தெருவிலும் வெற்றி..!
சேரும் சகதியும் குழப்பமும் குற்றமும் என எல்லா கேடுகளும் பாகுபாடுகளும் நிறைந்த சமூகத்தில் வாழும் குழந்தைகள் கொஞ்ச நேரம் நம் பள்ளிக்கு வந்து போகிறார்கள். அவர்களின் நடத்தைகளை அவர்களின் வாழிட சூழலையும் சேர்த்து பாருங்கள் என்கிறார். தெருவைப் புரிந்து கொள்ளாமல் வகுப்பறையை, குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது..! எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தைகளை விட்டுக் கொடுக்காமல் பேசும் பள்ளியின் முதல்வர் புளொரியன்..சிறந்த முன்னுதாரணம்!
சுதந்திர பள்ளி.. விவாத வகுப்பறை சிந்தனைகளையும் சின்ன சின்ன இடங்களில் தோற்று தோற்று மாணவர்கள் மனதையும் மக்கள் மனதையும் வெல்லும் பிரைத்வெயிட் என்னும் ஹீரோவையும் அறிமுகப் படுத்துகிறது எங்கள் பேரா. ச.மாடசாமி அவர்களின் நிறத்தை தாண்டிய நேசம் என்கிற புதிய நூல். வாசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது..
நிறத்தை தாண்டிய நேசம்.. மாற்றத்திற்கான வாசல்..!
சிந்துஜா சுந்தராஜின் கவிதைகள்
ஜனநாயக நாட்டில்
**************************
புலம்பெயர் தொழிலாளர்களின்
புலம்பல்கள்
நெடுஞ்சாலை முழுதும்
கேட்கிறது
உயரற்ற உடல்களாய்
ஊர் திரும்புகையில்
உடல் மட்டுமே ஊரையடைந்தது
உறவுகளைத் தேடி
உயிர் பிரிந்தது
இந்த ஜனநாயக நாட்டில்………
உரிமைக்குரல்
*******************
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்றோம்
எட்டு மணி நேர வேலை என்றோம்
குழந்தைகள் கூலித்தொழிலாளியில்லை என்றோம்
ஆண் பெண் சமம் என்றோம்
சுரண்டலே கூடாது என்றோம்
இவையனைத்தும் உழைப்பாளர் உரிமை என்றோம்
அமைப்பாய் திரண்டோம் சிகாகோவின்
ஹேமார்க்ககெட் சிவந்தது
“உழைப்பாளர் தினம் “ உரிமை பிறந்தது
“உலகமயமாக்கல் சூழ்நிலையில்
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”
நோயும்,பேயும் (முதலாளித்துவம்) ,
பசியும்,பட்டினியும்
நம்மை துரத்துகிறது
நாம் நெடும்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது
முழங்குவோம்
வாழ்க மே தினம்! வளர்க்க தொழிலாளர் ஒற்றுமை
ஓங்குக மே தின தியாகிகள் புகழ்………
பசி எனும் பிணி
*********************
வருவதும் போவதுமாய் இருந்த
வாழ்கையில்
அழையா விருந்தாளியாய் வந்தது
இந்த நோய்
அரசாங்கம் அழைத்து கொடுத்தது
கையில் தட்டை
முன்பு சாப்பிட்ட மீச்சமிதியை
தேடிகொண்டிருந்ததோம்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
ஆனால்
வயிறு மட்டும்
வாய் திறக்கிறது
பசி பசி பசி
என்று சொல்லிக்கொண்டே………
வேண்டாம் சா(தீ) மனிதநேயம்
************************************
சா(தீ) என்னும் தீயெடுத்து
செங்கழலில் அவளையிட்டு
அவளின் அழுகுரலில்
ஒய்யாரமாய் குளிர்காயும்
உங்ககளை தீயும் கூட
தீண்டமறுக்கும்
காரி உமிழும்
உங்களின் சாதீ
என்னும் சாக்கடையில்
தீயும் தற்கொலை செய்யும்
இந்த மனிநேயமற்ற காட்டுமிரண்டிகளிடமிருந்து……
ஒட்டு அரசியல்
******************
காலம் கடந்து காத்திருந்தோம்
கையில் மையிட்டு
எதிர்காலம் எதுவென்று நினைத்து
காலம் காட்டியது
காலணி இல்லாமல்
கால்நடை பயணம்
நிகழ்காலம் எதுவென்று சொல்லி
பசி ,பரிவு
வறுமை, வலி
துயர், தூக்கம்
அழுகை, ஆற்றுமை
இவையனைத்தும் பாலைவனமானது
எங்கள் பாதங்களில்
வாழ்க பாரதம்…..
விசாரணை
***************
உதிரம் கொட்ட இருவரின்
உடல் உதிரகண்டேன்
அதிகாரம் ஆட்கொண்டு
ஆளக்கண்டடேன்
ஆயிரம் ஆயிரம்
வலிகள் வலியகண்டேன்
வாய்திற என்று உள்ளம்
சொன்னது
வீதிக்கு சென்று உண்மையை
சொல் என்றுது
கணவன் கரம்பிடித்து
மகளின் விருப்பமறிந்து
எழுந்தேன் ரேவதி என்ற
ஒன்றை ஆடையாளமாய்
நின்றேன் ரேவதீயாய்……..
விவசாயின் குரல்
**********************
சட்டமென்று இயற்றி
கையில் கொடுத்து
பரிசு என்றாய்
அது பரிசு அல்ல
பாதகம் என்று
எழுந்து நின்ற கால்களை
உதைத்து சென்றாய்
தடுப்பனைகள் போட்டு
தடுக்க நினைத்து
தடுப்புகள் அடுப்புகளானது
நெடுஞ்சாலைகள் உழுது
எங்களை பதுங்கு குழியில்
அடைக்க சொன்னாய்
மண்ணிற்கு பிரசவம் பார்த்த
மண்ணின் மைந்தர்கள்
நாங்கள்
இதோ
உன் பதங்கு குழிகளின் மேல்
பாலமைத்து
புறப்படுகிறோம்
பார்லிமென்ட் நோக்கி……….
நாற்றில் கை வைக்க மட்டுமே பழகிய
கைகள்
இன்றைக்கு உங்களின் லத்தியை
கையாள்கிறது
வானம் பார்த்தே விவசாயம் செய்து பழகிய
கண்கள்
இன்றைக்க் கண்ணீர்புகைக்குண்டுகளை
பார்க்கிறது
குயில்களும் மயில்களின் சத்தம் கேட்டே
பழகிய காதுகள்
இன்றைக்கு தண்ணீர் பீரங்கியால்
காதுகளை துலைக்கிறது
வயிற்றுக்கு உணவு அளித்தே பழகிய
கருணை
இன்றைக்கு வீதியிலிறங்கி கையேந்துகிறது
சட்டம் நீதியை மட்டுமே தரும் என்று
நம்பிருந்த எங்களுக்கு
கார்ப்ரேட்க்கு மட்டுமே
சேவகம் செய்யும் என்பதை உணர்த்துகிறது
போராட்டம் எங்கள் விதை எங்களுக்கு
கற்றுத் தந்த பாடம்
கட்டாயம் மீண்டு எழுவோம் விதையிலிருந்து செடிகளாக……
ஏன் என்று கேள்வி
எல்லோருகம் எங்களிடத்தில்
வயக்காட்டில் கோதுமை
விளையவில்லை என்று
வீதிக்கு வரவில்லை
கையில் கலப்பை தவிர
உழவேறு எந்த ஆயுதமில்லை
வயலருகே கருவேலம்
வளர தொடங்கியது அது
வேளாண் பாதுகாப்பல்ல
வேலிப்போல தோன்றும் விஷம்
உறைப்பனி, கடுங்குளிர்
கொட்டிய மழை
திட்டிய அரசு
இனி
சுட்டெரிக்கும் வெயிலென
போரடிக்கொண்டியிருக்கிறோம்
போர்களத்தில் நின்றல்ல
எம் நாடு
எம் மக்களிடம்
செவிமடுத்து கேளுங்கள்
பகத்சிங் பிடித்த
செங்கொடி பிடித்து
செங்கொடி ஊன்றி
வருகிறோம்
புரட்சி பாதையில்
சுதந்திர இந்தியாவின்
மிக நீண்டப்போரட்டம்
நடத்தி
கருவேலம்(வேளாண் சட்டம்) எங்கள்
காவலுக்கு தேவையில்லை
என்ற உரிமைக்குரலோடு……
100வதுநாள்
விவசாயின்குரல்
நல்ல இதயம் புன்னகைகட்டும்
************************************
நல்ல இதயம் பூங்காவாகட்டும்
நல்ல இதயம் வேராகட்டும்
நல்ல வார்த்தை பூக்களாகட்டும்
நல்ல செயல்கள் பழங்களாகட்டும்
பட்டாம்பூச்சியாய் சிறக்க
வானம் கேட்கவில்லை
பயந்து நின்றே
பள்ளங்கள் புதைக்குழியானது
இனி புதைகுழி மீது பூக்கும்
புன்னகைக்கட்டும் சிறார்களின்
சிரிப்புகளில்……
பெண் கல்வி
****************
தோட்டாக்கள் என்னை
துளைத்தபோதும்
என் பேனாவின் முனை
உங்களின் மூளைக்குள்
சென்று
கேட்டுகொண்டேயிருக்கும்
பெண் கல்வி என்னும்
முழக்கத்தோடு……
நிறவெறி
*************
எங்கள் நிறம் கொண்டு
உங்கள் அதிகாரம்
எங்கள் மீது பாய்கிறது
நிற வெறியால்
“கான்ட் பரீத்” என்று
நான் சொல்லியது
உங்கள் காதுகளில்
விழவில்லை
ஆனால் இன்றோ
எல்லோர் காதிலும்
விழுகிறது
என் மூச்சுத் துடிப்பின்
“லப் டப்”
நமது உரிமையக்காக
எழுந்து நின்று
போராடுங்கள் என்கிறது…..
அதிகாரம்
*************
உழைப்பாளியின் வலியறியாத
நீங்கள் எங்கள் வாசல் வந்து
கேட்ட பிச்சை
நீங்கள் வைத்திருக்கும்
இந்த அரசாங்கம்
காலம் வரும்
உங்கள் அதிகாரம்
வீழும்……
ஜிகாத்
*********
கொடுமைமிகு நாட்டுகளிலும்
கண்ணியம் காப்பது ஜிகாத்
கடமையொன்றே கண்ணாக களம்
காண்பது ஜிகாத்
பொறுப்போடு பெற்றோருக்கு
பெருமை சேர்ப்பது ஜிகாத்
பொருத்தாலும் மனிதம் போற்றி
மறத்தலும் ஜிகாத்
கால்கடுக்க காதங்கள் பல கடந்து
நீதிக்கு போர் ஜிகாத்
மதமறியாது ,குலமறியாது
மொழியறியாது, இனமறியாது
மனதை பிணைத்தவாறு
அணைத்து கொள்வது ஜிகாத்
அன்பை அள்ளி தெளிப்பது
லவ் ஜிகாத்……..
கருத்து சுதந்திரம்
***********************
கருத்து சுதந்திரம் பேசும்
மக்களின் மொழியாய்
பாமரனின் எழுத்தாய்
கருத்து சுதந்திரம் பேசும்
கேள்விகள் அனலாய்
மதியின் முகமாய்
கருத்து சுதந்திரம் பேசும்
அதிகாரத்தை எதிர்த்து
எங்கள் குரல்கள் நசுக்கப்படுமாயின்
ஆயிரம் ஆயிரம் குரல்கள்
கூக்குரலிடும்
உண்மையை
உடைப்பதற்கு
கருத்து சுதந்திரம் பேசும்
ஊடகத்தின் வழியாய்
மக்களின் முகமாய்
ஊடகவியலாளர்களாய்
உண்மை
எழுதுகோலில் மையாகட்டும்………
எங்கள் குடியுரிமை
************************
கறைப்பட்ட கைகள்
கரம் நீட்டிக்கேட்கிறது
குடிமக்கள் யாருயென்று?
புண்பட்ட நெஞ்சம்
புலம்பலோடு சொல்கிறது
ரத்தம் சிந்தி
யுத்தம் புரிந்தோம்
பிரிவினை இல்லையென்று
மதம் என்னும் கொடாளி கொண்டு
வெட்டப்பட்டது
தொப்புள் கொடி உறவு
எங்கள் குடியுரிமையும்
எங்கள் அடையாளமும்…….
புத்தாண்டு பிறக்கட்டும்
*****************************
ஆஸ்திரிய காடுகள்
அழிந்தன
விலங்குகள் கலங்கின
எரிமலை வெடித்தது
என்குமியிர்கள் மாய்ந்தன
கிருமிகள் கால் பதித்தன
காலமின்றி காலம் பதில் சொல்கிறது
புலம்பெயர் தொழிலார்களின் புலம்பல்கள்
நெடுஞ்சாலை முழுதும் செப்ப்பனிகின்றது
கறுப்பின கொலை நிகழ்ந்தது
உலகம் கொதித்து எழுந்தது
கால்பந்து நாயகன்
களம் காணாது மண்ணில் போனது
விவசாயிகள் வீதியிலிறங்கி
போரட்டங்கள் நிகழ்கின்றன
என் உலகம் முழுதும்
துயர்கள் சுழ்ந்தன
பூமி புன்னைகக்க
புத்தாண்டு பிறக்கட்டும்
இப்படிக்கு காலம்
சட்டமும் சுற்றுச்சுழலும்
****************************
தென்றல் தடுப்பனையால் நிற்பதுயில்லை
அலைகள் ஒருபோதும் பேசுவதை நிறுத்தாது
பெய்யும் மழை நதியின் ஓட்டத்திற்கு காத்திருக்காது
விடியும் கதிரவன் வெப்பத்தை காணாது
கானகம் விலங்குகளின் குடாரம்
கிளையமைப்புரு கலைந்தனவே பேராசைப் பெருந்தீனியர்
கணமும் காத்திருக்காது
கடைசி மரம் காணமல் போகும் வரை
கடைசி நீர்த்துளி விஷமாகும் வரை
கடைசி மூச்சுக்காற்று நச்சுயாகும் வரை
கடலில் கடைசி மீன் பிடிக்கும் வரை
கணப்பொழுது தாமதிக்காமல்
இயற்கை அன்னையின்
ஆற்றல் அறிந்தவர்கள் நாம்
விழித்தெழு சவக்கிடங்கில் சொர்க்கம் ஒருபோதும் மலரது……….
நிறம் மாறும் மனிதிர்கள்
அலைகள் இல்லா கடற்கரைகள்
எதிரொலிக்காத மலை முகடுகள்
ஈரமில்ல்லாத பாறைகள்
அழகாய் தோன்றும் புதைக்குழிகள்
இயன்றவரை உதவாத உள்ளங்கள்
பசுமையை பிரசிவிக்கும் –கார்புகனிகள்
நறுமணம் வீசும் நச்சுமலர்கள்
விண்ணிலிருந்து விழும் குண்டுமழைகள்
இப்படி நிறம் மாறும் மனிதர்கள்
பச்சோந்தியின் விசுவரூபங்கள்…..
ஆம் போர் நடக்கிறது
**************************
துயருள்ளம் துடித்திடர் தூக்கிலிடும்
போர் நடக்கிறது
காயமுற்ற கால்கள் கானகத்திலிடும்
வன்மம் நடக்கிறது
பட்டினிக்கு மக்கள் பலியிடும்
கொலைதொழியில் நடக்கிறது
கண்கள் பார்த்துகொண்டு
தான் இருக்கும்
காதுகள் கேட்டுக்கொண்டு தான்
வாய் மட்டும் பேசாது எதிர்வினையாற்ற
ஊமையாய் ஊடகம்
ஊமையாய் ஊமையாய்
எம் மக்கள்…….
பெருந்தொற்று
*******************
பெருந்தொற்றுக்கு
ஏது சாதி, மதம்
விலகி
இருப்பதில்லை
மனிதனிடம்
வீதியெங்கும்
பிணக்குவியல்
சுவாசிக்கும்
காற்றும்
சுவாச மற்றுப்போகிறது
வான் உயர்ந்த
சிலைகளுக்கு
இடமிருக்குமிடத்தில்
உயிருடனிருக்க
ஒரு படுக்கையில்லை
மாத்திரை மருந்து
மந்திரிகளுக்கு மட்டும்
மரணபடுக்கையில்
எண்ணற்ற உயிர்கள்
ஏன் என்று
கேட்க
நாத்தியற்றவர்களை
நடுத்தெருவில்
புலம்பல்
இன்னொரு
பொது முடக்கம்
பட்டினியை
காட்டவிருகிறது
ஆனால்
அங்கோ காட்டமாய்
கூட்டமாய்
தேர்தல் பரப்புரை
கும்பமேளாவில்
குளியல்
ஏதுமற்றவர்களாய்
நாளும்
இந் நாட்டில்….
சிவப்பு சிந்தனையில்
*************************
சிவப்பு சிந்தனையில்
உதித்தது
சுதந்திரம் சுய உரிமையென
பதிந்தது
இயக்கங்கள் இயக்கியது
நேர்மைக்கு மட்டுமே
தலைவாங்குயென்று
போராட்டங்கள் , புரட்சிகள்
வீதியெங்கும் வழிந்தோடும்
உழைப்பவனின் உரிமையென்று
முதுமை ஒருபோதும்
முடக்கியது இல்லை
போராடி பெற்ற
சுதந்திரத்தை பாதுகாக்கவும்
போராட்டம் தேவைப்படுகிறது
இன்றைய சுழலில்……..
மாதவிடாய்
***************
மாதம் மாதம்
மாதவிடாய்
மங்கை இவள்
தீட்டுனால்
மானுட பிறப்பும்
தீட்டே…
மாதத்தில் வரும்
மூன்று நாட்டுகளுக்கு
முற்றத்தை
முடுடுபவனும்
முடனே…
மாதம் மாதம்
முதுகுதண்டு
முச்சுயிரைக்கிறது
உதிர்ந்த உதிரம்
உடுத்ததுணி
கந்தலும் கிழிச்சலுமே
மங்கையின் உடல்
மாற்றம்
எப்படி
மனிநேயமற்றோக்கு
தீட்டாகிறது தெரியவில்லை?
நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் – ம.கதிரேசன்
கல்வியாளர் பேரா. ச. மாடசாமி அவர்களின் TO SIR WITH LOVE என்ற ஆங்கில புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் தான் “நிறத்தைத் தாண்டிய நேசம்”. இது அவரது வாசிப்பனுபவ புத்தக வரிசையில் மூன்றாவதாகும். TO SIR WITH LOVE புத்தக ஆசிரியர் ரிக்கி பிரைத்வைட். கறுப்பர்.அவரின் சுயசரிதை. சந்தர்ப்பவசத்தால் ஆசிரியரான கறுப்பர் வெள்ளை மாணவர்களின் மனங்களை வென்ற கதை.
பிரைத்வைட் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்டிருந்த பிரிட்டிஷ் கயானாவில் பிறந்தவர். இன்ஜினியர்.இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் விமானப் படையில் சேர்ந்து போரிடுகிறார்.
உலகப் போர் முடிந்ததும் படைகள் கலைக்கப்படுகின்றன. வேலையிழப்பு. பண்பாட்டிலும், நாகரிகத்திலும் தான் பெரிதும் மதிக்கும் இங்கிலாந்தில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் என்று நம்புகிறார். இங்கிலாந்தின் நிறத்தின் அடிப்படையிலான பாரபட்சத்தால் செல்லுமிடமெல்லாம் நிராகரிக்கப் படுகிறார். இறுதியாக லண்டனின் சேரிப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்கிறார்.
கிரீன்ஸ்லேடு உயர்நிலைப் பள்ளி- பணிபுரிய யாரும் தயங்கும் பள்ளி. ஆசிரியர் பணியே அவர் நேசிக்கும் பணியல்ல. அதிலும் சேரிப் பகுதியில், சமாளிப்பதற்கு கடினமான பள்ளியில் வாழ்க்கை பாட்டுக்காக பணியில் சேர்கிறார். அங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பெண் ஆசிரியர்கள்தான். மாணவர்களை சமாளிப்பது பெரும்பாடு. பொதுவாக ஆண் ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் நீடிக்க முடிவதில்லை. அவரது நல்வாய்ப்பு ஊக்கமும் ஆலோசனைகளும் வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் புளோரியனும் சக பெண் ஆசிரியர்களும்தான்.
புளோரியன் எளிமையானவர். வழக்கமான பள்ளியாக இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட்ட சுதந்திரத்துடன் புதிய முயற்சிகளுடன் பள்ளியை நடத்துபவர். பசியுடன் வரும் மாணவர்களைப் புரிந்தவர். பல்வேறு இன, மத மாணவர்கள் படிப்பதால் அசெம்பிளியில் கூட குறிப்பிட்ட கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் மதிய உணவை உண்கின்றனர். பாடம், ஆசிரியர், விளையாட்டு பற்றிய மாணவர்களின் வெளிப்படையான வாராந்திர அறிக்கை- மதியம் இசை-நடனம்-ஆண்டுப் பேரவை- அதில் கற்றுக்கொண்டவைகளை மாணவர்களே வெளிப்படுத்துதல், ஆசிரியர்களுடன் மாணவர்களின் கேள்விகள் என்று புதுமையான முயற்சிகளை பின்பற்றுகிறார் புளோரியன்.
பிரைத்வைட் உயர் வகுப்பு ஆசிரியர். அவர் கனவு கண்ட வகுப்பறையல்ல இது. அசுத்தமான வகுப்பறை. அழுக்கான உடைகள். அவரது முதல் வகுப்பு இறுக்கத்துடன் முடிகிறது. தொடர்ச்சியான வகுப்புகளிலும் கசப்பும் பகைமையும் மிஞ்சுகிறது. பேருந்து, பொதுவெளி எங்கும் நிலவும் நிறபேதம் சமூகத்தின் தாக்கத்தால் ஏழைமாணவர்களிடமும் ஒரு ஆண் ஆசிரியரிடம் கூட வெளிப்படுகிறது. பிரைத்வைட் பொங்கி எழுவதில்லை. கறுப்புத் தோலுடன் மரியாதையாக வாழ்வது எப்படி என்று அவமதிப்புகளை நிதானமாக கடக்கிறார். மாணவர்களின் ஒத்துழைக்காத மௌனம், வகுப்பறை சத்தம், கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் மெல்ல மெல்ல மாற்றுகிறார். மாணவர்களின் மனங்களை அன்பால் வெல்கிறார்.
ஏழை மாணவர்களான அவர்கள் பள்ளி உயர் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லக் கூடியவர்கள் அல்ல. உடனடியாக ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை தாங்கும் நிலையில் உள்ளவர்கள். இதையே பிரைத்வைட் கற்பித்தல் ஆயுதமாக பிரயோகிக்கிறார். நீங்கள் குழந்தைகளல்ல;சீனியர்; வேலைக்கு போகும் இடங்களில் இதெல்லாம் வேண்டியதிருக்கும் என்று சொல்லியே மாணவர்களை வழிக்குக் கொண்டு வருகிறார். சமமாக நடத்துகிறார்.
உரையாடல் தொடங்குகிறது. பிரைத்வைட் பெரிதும் மெனக்கெடுகிறார். மாணவர்கள் எதைக் கேட்டாலும் அவரிடம் பதில் இருக்கிறது. மியூசியத்திற்கு அழைத்துச் செல்வது போன்று பொது வெளியிலும் கற்றலுக்கு வாய்ப்பு ஏற்படுத்துகிறார். இப்போது அவரது டேபிளைச் சுற்றி எந்நேரமும் மாணவர்கள்! வீடுகளிலிருந்து ஆசிரியருக்கு பூங்கொத்தும் ,கேக்கும் கொண்டு வருகிறார்கள். எங்க சார் எங்க சார் என்று கொண்டாடுகிறார்கள்.
மாணவர்களின் குடும்ப பின்னணி நெகிழ வைக்கும்!அம்மாவின் பிரசவத்தின்போது தலைமாட்டில் உடனாளாக இருந்த ஒரு மாணவி. மருத்துவமனையில் அம்மா சிகிச்சையில் பெற்றபோது குடும்பத்தையே தாயாக பார்த்துக்கொண்ட மாணவி .மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற குடும்ப பின்னணியை கொண்டவர்கள்தான்! விளையாட்டுச் சண்டையில் பள்ளிக்கு வெளியே ஒரு மாணவனுக்கு கத்திக் காயம்பட, கத்தியை வைத்திருந்த மாணவன் சிறார் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்போது தண்டனையின்றி அந்த மாணவன் வெளிவருவதற்கு பிரைத்வைட் உதவுகிறார். இளம் விதவையான அம்மா, அவரது மகள் மனக்கசப்பை போக்க தலையிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
வீதியோடு நெருங்கும்போது பள்ளியும் அவரோடு மிகவும் நெருக்கமாகிறது. தள்ளுவண்டியில் சாமான்கள் வாங்கும்போது அவருக்கு தனி முன்வரிசை. இவர் என் மகளின் /மகனின் ஆசிரியர் என்ற பெருமை! கறுப்பர் என்பதால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த பெண்மணி மகளின் கோபத்தால் மனம் வருந்தி வீடு வாடகைக்கு விட முன்வருகிறார். அன்பு மட்டுமல்ல; மாணவர்களின் அத்துமீறல்களின் போதும் உரியவாறு தலையிடுகிறார் பிரைத்வைட்.
ஆண்டுப் பேரவை! பிரைத்வைட்டின் மாணவர்கள் உலகெங்கும் நாடு இழந்து வாடும் மக்கள் பற்றி- நாடு இனம் கடந்து மனிதர்கள் அனைவரும் ஒன்று- நிற பேதமற்ற இங்கிலாந்து என்றெல்லாம் பேசுகின்றனர். பிரைத்வைட்டின் முயற்சிகள் வீண் போகவில்லை! முடிவில் மாணவர்கள் அன்புக்குரிய ஆசிரியரிடம் சொல்வது முக்கியமானது. ” உங்களால் வளர்ந்தோம். பொறுப்புள்ள இளைஞர்களாக நடத்தினீர்கள். உங்களுக்கு எங்களின் இந்த சிறு பரிசு” என்று எழுதி மாணவர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர்.
இவ்வளவும் ஓராண்டுக்குள் சாதித்துள்ளார் என்பதுதான் பிரைத்வைட்டின் பெருமை! மாணவர்களிடம் நிறத்தை தாண்டிய நேசம் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு சோகம்! அவரது சக பெண் ஆசிரியர் கில்லியன். வெள்ளை நிறத்தவர். ஒத்த ரசனையும், மனப்போக்கும் காதலுக்கு வழி வகுக்கிறது. காதல் கைகூடவில்லை.வெளியில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்திற்குப் பிறகு சின்ன தயக்கத்திற்குப் பின்னர் கில்லியன் தெளிவடைகிறார். எனினும் அவரது தந்தை கலப்புத் திருமணத்தை ஆதரிக்கவில்லை. கில்லியன் பள்ளியைவிட்டு சென்று விடுகிறார். பிரிவால் சோர்வடைந்து விடவில்லை. உறுதியான மனிதர்! 104 வயது வரை வாழ்ந்தார்.
இந்தப் புத்தக அனுபவம் பற்றி எஸ். எம். கூறும்போது பிரைத்வைட்டின் மீதான அன்பால் புத்தகத்தை கையில் எடுத்ததாகவும், அனுபவத்தை எழுதி முடித்த போது பிரைத்வைட்டுடன் கூடவே தலைமையாசிரியர் புளோரியனும் மாணவி பமீலாவும்தனது மனதில் நிறைந்ததாக கூறுகிறார். மாணவர்களை நேசித்து தன்னுடன் பயணித்த சக ஆசிரியர்களும் உடன் நின்ற உயிருக்குயிரான மாணவர்களும் இந்த புத்தக வாசிப்பின் போது மீண்டும் மீண்டும் நினைவில் வந்தார்கள் என்கிறார்.
அனேகமாக நிறத்தை தாண்டிய நேசம் புத்தகத்தைப் படிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அவரைப் போன்றே ஞாபகம் வருவது நிச்சயம். சில புத்தகங்கள் லயித்து படித்து அப்படியே விழுங்க வேண்டியவைகள் என்று பிரான்சிஸ் பேகன் கூறுவது இந்தப் புத்தகத்திற்கு அப்படியே பொருந்தும். பிரைத்வைட்டின் குழந்தைகளின் மீதான அன்பு எஸ்.எம். சாரின் வார்த்தைகளுடன் அன்பு வெள்ளமாக பிரவாகமெடுக்கிறது. அவரது “வித்தியாசம் தான் அழகு “புத்தக மதிப்புரையில் வேணுகோபாலன் “அன்புதான் பேராசிரியர் ச. மாடசாமியின் மைக்கூடு.அவரின் எந்த எழுத்தும் அன்பின் மை தொட்டே எழுதப்படுவது” என்று குறிப்பிட்டது மிகச் சரி. இந்தப் புத்தகத்தை வாசல் பதிப்பகம் அழகுணர்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.
கரோனோ பெருந் தொற்றுக்கு பின்னர் கற்றல் திறன் குறைபாடு அதிகரிப்பு- இடைநிற்றல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள காலத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் செய்துள்ளது. இந்நிலையில், போதிய ஆசிரியர்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்புகள் அதிகரித்துள்ளது. எனினும் இந்த சிரமங்களைத் தாண்டியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்விப் பணியாற்றவேண்டியுள்ளது.
போற்றத்தக்க முன்னெடுப்புகளை பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தனிப்பட்ட முயற்சிகள் ஒரு இயக்கமாக மாற வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் சங்கங்களின் கடமைகளில் சரி பாதி கற்பித்தல் தொடர்பான மெனக்கிடல்களும் இருக்க வேண்டும். அதற்கு பிரைத்வைட்டின் அனுபவம் கைகொடுக்கும்.
அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு நீண்டகாலமாகவே பெரிய ஆதங்கம் ஒன்று உண்டு. அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தமது ஊதியத்தில் ஒன்றிரண்டு சதவீத தொகையையாவது புத்தகம் வாங்குவதில் செலவழிக்க வேண்டும் என்பதே அந்த ஆதங்கம். தமிழறிஞர் வீ.அரசு அவர்களின் தலைமையில் “சீர் வாசகர் வட்டம்” 700 பக்கங்கள் கொண்ட புதுமைப்பித்தனின் படைப்புகள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக ஒரு ரூ. 100 க்கு விற்பனை செய்யும் மகத்தான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஆசிரியர்கள் ஆசிரியர் சங்கங்கள் கல்வி தொடர்பான புத்தகங்களை லட்சக்கணக்கில் ஆசிரியரிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியம் அல்ல.
புத்தகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம்
புத்தக வெளியீடு- வாசல் பதிப்பகம்
விலை- ரூ.120
98421 02133-
மின்னஞ்சல்- [email protected]
நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம்
பேராசிரியர் ச. மாடசாமி அவர்களின் எழுத்துகள் தமிழக வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. எளிய சிறு சிறு வாக்கியங்களில் பெரும் உண்மை களை மிருதுவாகக் கூறும் மொழி அவருடையது. தான் பெற்ற பட்டறிவையும், படிப்பறிவையும் தமிழ் மக்கள் சமூகத்தின் மேன்மைக்குப் பயன்படுத்தி வரும் எழுத்தாளர்; சிந்தனையாளர். கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூட்டா தொழிற்சங்கப் போராட்டங்களில் முன் நின்றவர். தேசிய எழுத்தறிவு முனைப்பு இயக்கத்தின் தூதுவராகப் பங்களித்தவர். தமிழகத்தின் எழுத்தறிவு இயக்க வரலாற்றில், விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாள ராகப் பணியாற்றி வயது வந்தவர்களுக்குக் கல்வி கொடுக்கும் முயற்சிகளில் மிக முன்னோடியான புதிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர். பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர். மதுரையில் பிஜிவிஎஸ் கருத்துக்கூடம் என்ற ஓர் அமைப்பை நிறுவி அதன் மூலம் பல தொகுப்புப் பணிகளையும், ஏராளமான சிறு நூல்கள் உருவாக்கத்தையும் புதிய கற்போருக்காக மேற் கொண்டவர். இப்படிப் பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரர் இவர்.
இவருடைய சமீபத்திய நூல்- நிறத்தைத் தாண்டிய நேசம். வாசல் பதிப்ப கத்தின் வெளியீடான இந்தப்புத்தகம், சற்று வித்தியாசமானது. நாமெல்லாரும் ஒரு புத்தகத்தை வாசித்தால் என்ன செய்வோம்? தூக்கிப்போட்டு விட்டு வேறு வேளைகளில் மூழ்குவோம். அந்தப்புத்தகம் ரொம்பவும் பிடித்திருந்தால், நண்பர்களிடம் அதைப்பற்றிப் பேசுவோம். எழுதும் பழக்கம் இருந்தால் அதைப் பற்றி ஓர் அறிமுகக்கட்டுரை எழுதுவோம். அதிகபட்சம் நாம் செய்யக் கூடியது, செய்வது –இவைதாம். ஆனால், பேரா. மாடசாமியின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. தான் வாசித்த புத்தகத்தின் மையப்பொருள், அதன் கதை மாந்தர்கள், அது முன்வைக்கும் கருத்துகள், தான் அதை வாசிக்கும் போது அடைந்த உணர்வுகள் எல்லாவற்றையும் உடனே ஒரு முழுநீளப் புத்தகமாகவே எழுதிவிடுகிறார். இவர் ஏற்கெனவே எழுதிய “ போயிட்டு வாங்க , சார் ! “ புத்தகம் அப்படி ஒரு புத்தகத்தை வாசித்த அனுபவம்தான். இப்போது வந்துள்ள “ நிறத்தைத் தாண்டிய நேசம் “ புத்தகமும் அதேபோல் ஒரு புத்தக வாசிப்பு அனுபவப்பதிவுதான் !
இந்த ‘Sir With Love’ புத்தகம், 1959-இல் வெளியானது. ஆசிரியர் ரிக்கி பிரைத் வைட். நாவல் வடிவில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல் இது. ரிக்கி பிரிட்டிஷ் கயானாவில் பிறந்த கறுப்பர். அவர் ஒரு வேலை தேடி இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் அங்கு நிலவிய இனவெறி பற்றிய உண்மை எதார்த்தம் புரிகிறது. பிரிட்டனின் விமானப்படையில் பொறியாளராகப் பணி செய்கிறார். இராணுவ உடையில், உயிரைப் பணயம் வைத்து அவர் வேலை செய்யும்போது, பிரைத்வைட்டின் கறுப்பு நிறம் யார் கண்களையும் உறுத்துவதில்லை. இரண்டாம் உலகப்போர் முடிந்ததுமே அவரின் கருப்பு நிறம் முன்னுக்கு வந்து விடுகிறது. 1945-இல் அவர் பணியை விட்டு விலக்கப்படுகிறார். பல பணிகளுக்கு விண்ணப்பிக்கிறார். தேர்வானபின், நேர்முகத் தேர்வுகளுக்குப் போகும்போது, கறுப்பர் எனத் தெரிந்தவுடன் நிராகரிக்கப்படுகிறார். பள்ளிகளில் ஆசிரியர் வேலை பல இடங்களில் காலியாக இருக்கிறது என்ற தகவலை வழிப்போக்கர் ஒருவர் சொல்லுகிறபோது, அதைக்கேட்டதும் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணிக்குப் போகிறார். அது லண்டனின் கிழக்குக் கோடி யில், கிரீன்ஸ்லேடு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் வேலை. அந்தப்பகுதி, வறுமையில் உழலும் வெள்ளை மனிதர்கள் வசிக்கும் பிரிட்டனின் சேரிப்பகுதி. ஏழைகள்தாம் எனினும், வெள்ளை நிறத்திமிர் அதிகமாயிருந்தது.
இந்த வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்த பேராசிரியர் ச. மாடசாமி, தன் மனம் கவர்ந்த அந்த நூலைப் பற்றி 104 பக்கங்கள் கொண்ட இந்தப்புத்தக்கத்தை ‘ நிறத்தைத் தாண்டிய நேசம் ‘ எனும் தலைப்பில் எழுதியுள்ளார். படிக்கும்போதே மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் அரும்பி விடுகிறது.” ஒரு மறக்க முடியாத அனுபவம் “ என்ற துணைத்தலைப்பில், நான்கு பகுதிகளாக இதை எழுதியுள்ளார். தொடக்கம், போராட்டம், பயணம், பிரியம் –என்பவை அந்த நான்கு பிரிவுகள். தொடக்கத்தின் தொடக்கம், ஆசிரியரானது எப்படி,முதல் நாள்… முதல் நாள்,முதல் வகுப்பு … முதல் வகுப்பு, புகையும் நெருப்பும், உரையாடல் தொடங்குகிறது, பயணம் தொடங்கியது, உள்ளத்துக்காதலா? உடலின் நிறமா?, அன்புடன் .. . எங்கள் சாருக்கு ! –என்பவை அத்தியாயங்களின் தலைப்புகளுள் சில.
நூல் தொடங்கும் விதத்தைப் பாருங்கள்: “ஆங்காரம், வெறுப்பு, உதாசீனம் இவற்றின் அடிவேர் – நிறம். உலகெங்கும் அதிகம் அடிவாங்கிய நிறம்-கறுப்பு. வெள்ளை, சிவப்பு, மஞ்சள்,பழுப்பு என எல்லா நிறங்களின் கைகளிலும் ‘கறுப்பு’ அடி வாங்கியிருக்கிறது. இனவெறிப் பாகுபாடுகளிலும், இனவெறிப் படுகொலைகளிலும் முதன்மையான இலக்காக கறுப்பு சிக்கி சீரழிந்திருப்பது போல் தெரிகிறது. உண்மைதானா? அடிவேர் இன்னும் காய்ந்து போகவில்லை. இந்தியா ஒன்றும் வெள்ளை இந்தியா இல்லை; இருப்பினும் இங்கேயும் கறுப்பு ஒரு மதிப்பான நிறமில்லை. மனசின் இடுக்குகளில் மறைந்து கிடக்கும் காயங்களில் ஒன்றாக இங்கு கறுப்பு இருக்கிறது; ஆதங்கங்களில் ஒன்றாக சிவப்பு இருக்கிறது … “
இத்தகைய ஒரு சூழலில், இந்தக்கறுப்பு ஆசிரியர், வெள்ளை மாணவர்களின் வெறுப்பை வென்ற விதம்தான் இதன் கரு. கறுப்பைப் பார்த்துக் கறுவிக் கொண்டிருந்த வெள்ளையரை ‘சார்’ என்று அன்புடன் அழைக்க வைத்தவர் அவர். பிரைத்வைட் தலைமைஆசிரியரைப் பார்த்து, வேலை வேண்டும் என்று கேட்டதும் புளோரியன் நிதானமாகப் பேசுகிறார் : “முதலில் இந்தப் பள்ளியைப் பார்த்துவிட்டு வாருங்கள். இது வித்தியாசமான ஒரு பள்ளி. உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் பணியில் சேர்வது குறித்துப் பேசி முடிவெடுப்போம்..”
பள்ளியை, வகுப்பறைகளில் மாணவர்களை, ஆசிரியர் அறையில் ஆசிரியர்களை, சூழலை.. எல்லாரையும், எல்லாவற்றையும் அலசிப் பார்த்து விட்டு, அங்கு பணியில் சேர்வதெனத் தீர்மானிக்கிறார். சேரந்தபின் ஒவ்வோர் அடிவைப்பிலும் அவமரியாதைகளை எதிர்கொள்கிறார். கோபம் பொங்கினாலும், பொறுமையாகவும், விவேகத்துடனும், தேவைப்படும் இடங்களில் துணிவுடனும் செயல்படுகிறார். படிப்படியாக அவர் மாணவர்களின் மனங்களை வெல்லும்விதம் மனதை உருக்குகிறது. இவர் விரும்பும் பெண் ஆசிரியை இவரைத் தானும் விரும்புகிறபோதும் வெள்ளை இனப்பெற்றவரின் நிர்ப்பந்தங்களால் விலகிப்போய் விடுகிறாள். வெள்ளை மாணவி ஒருத்தி இவரை விரும்புகிறாள். ஆனால், இவர் அதை மிக நாசூக்காகத் தவிர்த்துவிடுகிறார். ஆண்டு முடியும் போது, அனைத்து மாணவர்களும் கையொப்பமிட்ட ஒரு கடிதம், To Sir with Love ’ என்ற தொடக்கவரியுடன் வழங்கப்படுகிறது.
“மனிதர்கள் உலகம் பூராவிலும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள்; இடம், நிறம், இனம், மதம்-எல்லாவற்றையும் தாண்டியதாகவே இந்த சார்புநிலை இருக்கிறது. ஆனால், இந்த மனித நேயமிக்க சார்பு குறித்துப் பாடப்புத்தகங்கள் பேசுவதில்லை “ என்று பிரைத்வைட் வகுப்பறையில் விடாமல் சொல்லித்தந்த கருத்தை, இறுதியில் படிப்பு முடித்துப் போகப் போகும் மாணவி ஒருத்தி சொல்லுகிறாள். உலகெங்கிலும் வீடிழந்து, நாடிழந்து வாடும் பரிதாபத்துக்குரிய மக்கள் பற்றி மற்றொரு மாணவி பேசுகிறாள். ஒரு செடி முளைவிட்டுத் துளிர்த்து, வளர்ந்து மரமாகிக் கனி தருவது போல, பிரைத் வைட்டின் மாணவர்களும், மாணவிகளும் அவர் கற்றுத்தந்த பாடங்களாலும், அவரின் அணுகுமுறைப் பண்புகளாலும் மன வளமும் கருத்துவளமும் பெற்று ஒளிர்கிறார்கள். நிறத்தைக்கண்டு கறுப்பரை வெறுத்த அந்த வெள்ளை மனிதர்களின் மனங்களில் அன்பும், நேயமும் நிறைந்து ததும்புவதை நூல் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது.
அட்டைப்படத்தை மூல நூலின் திரைப்படப் போஸ்டரைக்கொண்டு வடிவமைத்துள்ளனர். உள் ஓவியங்களை ஓவியர் ஸ்ரீரசா வரைந்துள்ளார். இதை மிக அழகான அமைப்புடன் மாரீஸ் வடிவமைக்க, வாசல் பதிப்பகம் மிக நேர்த்தியாக நூலை வெளியிட்டுள்ளது.