Book Day | இராஜிவ் காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட் | Book Review

இராஜிவ் காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்

உலகையே உலுக்கிய இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நெடிய சட்டப் போராட்டத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு ஏறத்தாழ 27 வருடங்களை சிறையில் கழித்து விட்டு தற்போது விடுதலையாகி இருக்கும் இரவிச்சந்திரன் அவர்களால் சொல்லப்பட்டு,…
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 9 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 1 பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 9 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 1 பேரா.பு.அன்பழகன்




இந்தியாவில் 1960களிலே பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால் சீர்திருத்தங்கள் முழு வீச்சில் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்திரா காந்தி பிரதமரானதும் தொழில் தொடங்க உரிமம் பெறும் கட்டுப்பாடுகளையும், தொழில் முற்றுரிமை கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். அடுத்து பிரதமராகப் பதவி வகித்த ராஜீவ் காந்தி தொழில் துறையின் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது, செலாவணி மாற்றில் இணக்கத் தன்மை, இறக்குமதி மீதான பகுதி அளவில் கட்டுப்பாடுகளை நீக்கியது எனப் பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. போபர்ஸ் உழல் பிரச்சனை எழுந்ததன் காரணமாக ராஜீவ் காந்தியின் சீர்திருத்தங்ளுக்குப் போதுமான சாதகமான சூழல் காணப்படவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் நிலையற்ற அரசியல் மற்றும் குழப்ப நிலையினால் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இவருடைய காலகட்டங்களில் முன்பு எப்போதும் கண்டிராத அளவிற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் வற்றிய நிலையிலிருந்தது. இதனை எதிர்கொள்ள அடுத்துப் பிரதமராகப் பதவி ஏற்ற நரசிம்ம ராவ் பல்வேறு பொருளாதார சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டார். சீனா, 33 ஆண்டுகளுக்கு முன்பு (1978ல்) பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. சோவியத் யூனியன் 1980களின் மத்தியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. ஆனால் இந்தியா இச்சீர்திருத்தங்களை மேற்கொள்ள காலதாமதமானது. மேற்கண்ட நாடுகள் போன்ற அரசியல் முறையை இந்தியா பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேருவின் சோசியலிச சித்தாந்த முறையை இந்தியா நீண்டகாலமாகப் பின்பற்றி வந்தது. ஒரு நிலையில் உலக நாடுகள் பலவும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை பின்பற்றத் தொடங்கியது. எனவே இந்தியா இந்த முறைக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகியது. இந்தியா சுதந்திரம் அடைந்து 44 ஆண்டுகள் கடந்த நிலையில் சந்தைச் சீர்திருத்தங்கள் 1991ல் நடைமுறை படுத்தப்பட்டது.

மே 1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இத் தேர்தலில் காங்கிரஸ் 232 இடங்களில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நரசிம்ம ராவ் ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரையில் பிரதம மந்திரியாக பதவியிலிருந்தார். நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றபோது இந்தியாவின் வெளிநாட்டு கடன் அரசுக்கு பெரும் சுமையாக இருந்தது. இந்தியாவின் கடன் 1991ல் 70 பில்லியன் டாலராக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு அடுத்து வந்த இருவாரங்களுக்கே போதுமானதாக இருந்தது. இதைத் தவிற்று வளைகுடா போரினால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்ததால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு உயர்ந்தது. பணவீக்கம் மிகவும் அதிக அளவிலிருந்தது. இந்தியாவில் நிலையற்ற அரசு நடைபெற்றதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வைப்புக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள தொடங்கினர். இது மேலும் சிக்கலை உருவாக்கியது. எனவே இந்த நிலையினை எதிர்கொள்ள அனுபவம் மிக்கப் பொருளியல் அறிஞரான மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்த இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது (அரசியல் ரீதியான சவால்களை நரசிம்ம ராவ் எதிர்கொண்டார்). இதன் அடிப்படையில் அதிக வெளிப்படைத்தன்மையும், குறைவான பொருளாதாரக் கட்டுப்பாடும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை மன்மோகன் சிங் முன்னெடுத்தார். முதல் முயற்சியாக இரு முறை பண மதிப்பு குறைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி முக்கிய வெளிநாட்டுச் செலாவணியுடன் இந்தியப் பணத்தின் மதிப்பை 9 விழுக்காடு குறைப்பினை ஜூலை 1, 1991அன்றும், மேலும் 11 விழுக்காடு மதிப்புக்கு குறைப்பினை ஜூலை 3, 1991அன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக இந்தியாவின் ஏற்றுமதியினை அதிகரிப்பதாக இருந்தது. ஜூலை 4-18, 1991ல் நான்கு கட்டங்களாக இந்தியா, இங்கிலாந்து வங்கியில் தங்கத்தை அடைமானம் வைத்து 400 மில்லியன் டாலர் கடன் பெற்றது. இதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய வர்த்தக கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி உரிமம் பெறும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. தேவையற்ற பொருட்கள் இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்க பணமதிப்பினைக் குறைத்தது மட்டுமல்லாமல் மானியமும் வழங்கப்பட்டது. இறக்குமதிக்கான ஒதுக்கீட்டு அளவு (quotas) விலக்கிக்கொள்ளப்பட்டது, சுங்க வரி குறைக்கப்பட்டு ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டது, அந்நிய நேரடி முதலீடு வரவேற்கப்பட்டது. இதன்படி 51 விழுக்காடுவரை தங்குதடையற்ற முதலீட்டிற்கான ஒப்புதலுக்கு வழி வகுத்தது. இதுபோன்று உள்நாட்டில் உரிமம் பெறும் நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுத்துறை விரிவாக்கம் ஊக்குவிக்கப்படவில்லை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விழுக்காடு அளவிற்கு நிதிப் பற்றாக்குறையாக இருந்தது இதனைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிறுவன வரியை 45 விழுக்காடு அதிகரித்தது. சமையல் எரிவாயு உருளை, உரம், பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது, சர்க்கரைக்கு அளிக்கப்பட்ட மானியம் விலக்கிக் கொள்ளப்பட்டது (Ramya Nair 2021).

1991 ஜூலை புதிய தொழிற் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி தொழில் உரிமம் பெறும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் சில குறிப்பிட்ட தொழில்களுக்கு விதிவிலக்கு இருந்தது. முற்றுரிமை வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறை சட்டத்தில் தளர்வு அளிக்கப்பட்டது. பொதுத்துறை முற்றுரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது போல் தனியார்த் துறை முற்றுரிமைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது (Ramya Nair 2021). 1991வது தொழிற் கொள்கையானது இந்தியாவில் எளிமையாக வாணிபம் செய்ய வழிவகை செய்தது. பணித்துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. காப்பீட்டுத் துறை, வங்கி, தகவல் தொடர்பு, வான்வழிப் போக்குவரத்து, போன்றவை மீது தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டது. அதே சமயம் தொழிலாளர்ச் சட்டங்கள் வளைந்து கொடுக்கும் நிலை உருவானது. அரசியல் ரீதியாகப் புதியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குக்கா கட்சிக்கு உள்ளேயும், வெளியிலும் கடுமையான எதிர்ப்பு உருவானது. ஆனால் இவற்றைத் திறமையாக நரசிம்ம ராவ் எதிர்கொண்டார். சுருக்கமாகக் குறிப்பிட்டால் இந்து வளர்ச்சி வீதம் (3.5 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள பொருளாதார வளர்ச்சி) என்ற நிலையினை 1950களிலிருந்து – 1970கள் வரை காணப்பட்டது. இதனை மீட்டெடுக்க 1980களில் வர்த்தக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டது. 1990களில் சந்தைச் சார்பான சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் 2000ஆம் ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது (Ramachandra Guha 2017).

அட்டவணை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு)

ஆண்டுமொத்த உள்நாட்டு உற்பத்திதாலாவருமனாம்
1972-19823.51.2
1982-19925.23.0
1992-20026.03.9

Source: Ramachandra Guha (2017): “India After Gandhi,” Macmillan, New Delhi.

1991ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது நிதி அமைச்சரான மன்மோகன் சிங் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். இதற்கான முக்கியக் காரணம் சோவியத் ஒன்றியதில் மிக்கைல் கோர்பச்சோவ் கொண்டுவந்த பெரெஸ்த்ரோயிக்கா என்ற மறுசீரமைப்பு கொள்கையினைப் பின்பற்றி இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தில் 1991ன் படி 80 விழுக்காடு தேசிய உற்பத்தியில் தனியாரிடமிருந்து பெறப்படுகிறது ஆனால் இது சோவியத் ரஷ்யாவில் காணப்படவில்லை. எனவே இந்தியா தனி அடையாளக் கொள்கையினை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நிய முதலீடுகள் தேவைப்பட்டது எனவே இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இந்தியாவில் பெரும் தொழில் நிறுவனங்களை ஒழுங்கு படுத்த MRTP சட்டம் 1969ல் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான அனுமதி பெறுவது நீக்கப்பட்டது. இந்தியா உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் நுழைவதற்காக சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்பட்டது, நடப்பு கணக்கு பரிமாற்றம், வர்த்தக நிலையினைத் தீர்மானிக்க சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. அந்நிய நேரடி முதலீடு, போர்ட்ஃபோலியோ முதலீடுகள் வருவதற்கு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன. சந்தை அடிப்படையில் செலாவணி மாற்று செயல்படுத்தப்பட்டது, வர்த்தகம் தாராளமயமாக்கப்பட்டது, தொழிற்சாலைகளுக்கு தேவையானதைத் தடையற்ற முறையில் இறக்குமதி செய்துகொள்ளுதல், தொழில் உரிமம் ரத்து செய்தல், பொதுத் துறையில் சீர்திருத்தம், மூலதனச் சந்தை மற்றும் நிதித் துறையில் சீர்திருத்தம், பன்னாட்டு நிறுவனம் மற்றும் அந்நிய முதலீடு பெறுவதிலிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் ஒட்டுமொத்த நோக்கம் இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுப்பதாகும்.

பொருளாதாரம் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் விதிவிலக்காக ரயில்வே, துறைமுகம், பாதுகாப்பு மற்றும் அணு ஆற்றல் இருந்தது. நுகர்வோர்களுக்குச் சாத்தியப்படக்கூடிய நன்மைகள் கிடைக்கச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டு சீர்திருத்தமானது உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க முற்றிலுமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பகுதியாக அந்நியச் செலாவணி பொதுச் சந்தையில் மாற்றிக்கொள்ள வழிவகுத்தது. லாபம் தரும் மூலதன வரவு கட்டுப்படுத்தப்பட்டது. அதேசமயம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை. உலக வர்த்தக அமைப்பின் கீழ் வந்த நடைமுறையில் வர்த்தக அளவு கட்டுப்பாட்டு முறை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்தியா உலக அளவிலான தாராளப் பொருளாதார மயமாக்கலின் கொள்கையின் ஒரு பகுதியாகச் செயல்பட்டது. இதன் விளைவு இந்தியா மிகவும் திறனுடன் வேகமான வளர்ச்சியினை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு, இந்திய பொருளாதாரம் விரைவாக மீண்டெழுந்தது. 1991-92ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.8 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது 1992-93ல் 5.5 விழுக்காடு வளர்ச்சியினை எட்டியது, 1993-94ல் 6.2 விழுக்காடு என மேலும் அதிகரித்தது. எட்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியினை கண்டது. முதலீடு, தொழில் துறை, வேளாண்மை, பணித்துறை போன்றவை வளர்ச்சிப் பாதையில் சென்றது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97களுக்கிடையே ஆண்டுக்குச் சராசரியாக 3 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது. ஆனால் இது தொழில் மற்றும் பணித் துறையினை ஒப்பிடும் போது குறைவான அளவிற்கே பதிவாகியிருந்தது. 1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே நேரடி அந்நியச் செலாவணி முதலீடானது 100 விழுக்காடு அதிகரித்திருந்தது. 1992-93க்கு முன்பு இந்தியாவின் சில பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாகக் கிராமப்புறங்களில் வறுமை அதிகரித்திருந்தது. ஆனால் அடுத்த ஆண்டே வறுமையின் அளவு 6 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்திருந்தது. 1993-1998ஆம் ஆண்டுகளுக்கிடையே சமூகச் செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதனால் வேளாண் கூலியானது 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதே ஆண்டுகளில் இந்தியாவின் வேலைவாய்ப்பானது ஆண்டுக்கு 6.3 மில்லியன் அதிகரித்தது. நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றபோது பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது ஆனால் பணக் கொள்கைகள் மற்றும் நிதி சீர்திருத்தங்களினால் 1996ல் 5 விழுக்காடாக்க குறைக்கப்பட்டது. உணவுப் பொருட்களுக்கான மானியம் 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.14 மில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35 பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் பயிர்செய்யும் நிலங்கள் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது. இதில் 5 மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயனடைந்தனர்.

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் 2003-04 முதல் 2008-09 முடிய இந்தியா இதுவரைக் கண்டிராத வளர்ச்சியினை எட்டியது (10 விழுக்காடு). சேவைத்துறையானது மற்றத் துறைகளைக் காட்டிலும் அபரீதமான வளர்ச்சியினைக் கண்டது. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிற் கொள்கையானது சேவைத்துறையினை வேகமான வளர்ச்சியினை எட்டுவதற்கு உதவியது. 2008க்கு பின்பு உற்பத்தித் துறையின் வளர்ச்சி மிகவும் குறைவான அளவிலிருந்தது. வேளாண்மைத் துறையினை பொருத்தமட்டில் ஏற்றத்தாழ்வுடனான வளர்ச்சி பதிவாகியிருந்தது. உணவு உறுதியானது மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உணவு கையிருப்பு குறைந்திருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையானது சேவை மற்றும் தொழிற் துறைகளுக்குச் சாதகமாகவும் வேளாண்மைத் துறைக்கு எதிராகவும் இருந்தது. அதே சமயம் வர்த்தக, தொழிற்கொள்கைகளின் சீர்திருத்தத்தினால் வர்த்தக நிலை மேம்படுத்துவதாகவும், இது வேளாண்மையினை நோக்கியதாக இருந்தது. இதனால் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையினை இந்தியா தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நிலைகளில் பெருமளவிற்கு நன்மைகளை உண்டாக்கியிருந்தது. இதன் விளைவு வேளாண் வளர்ச்சியானது 1991லிருந்து சீரற்ற போக்கு காணப்படுகிறது. சராசரி உற்பத்தியானது மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இல்லை. உலகளவில் தலா உணவு நுகர்ச்சி அளவினைவிடக் குறைவாக உள்ளது. குடும்பங்களின் சராசரியாக உணவிற்குச் செலவிடுவது உலக அளவில் உள்ள பணக்கார நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகரித்து பணவீக்கத்திற்கான காரணமாக உருவெடுத்தது. இது ஏழை மக்கள் அதிகமாக பாதிப்பிற்கு உண்டாக்கியது. தற்போது வருமையினைக் கணக்கிடுவதில் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உணவு மட்டுமல்லாமல் சமூகக் காரணிகளும் (கல்வி, சுகாதாரம்) கணக்கில் கொண்டு வறுமையினை அன்மைக் காலமாக அளவிடப்படுகிறது. இதனைக்கொண்டு பார்க்கும்போது, வறுமையில் வாழ்ந்தவர்கள் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பெரும் ஏற்றத் தாழ்வுடன் உள்ளது என்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்துகிறன. பொருளாதாரச் சீர்திருத்தங்களினால் சமுதாயத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே பயன் பெற்றுள்ளனர். அதேசமயம், மக்களிடையே பெரும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகிறது (Thomas Piketty). சில பொருளியல் அறிஞர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு 1991லிருந்து வறுமையானது அதிக அளவில் குறையத் தொடங்கியது என்று குறிப்பிடுகின்றனர்.

(தொடரும் ……)

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 8 வி.பி.சிங் – குழப்பமான அரசியல் நிலையும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 8 வி.பி.சிங் – குழப்பமான அரசியல் நிலையும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்




ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் முன்பு எப்போதும் கண்டிராதப் பொருளாதார வளர்ச்சி (ஆண்டுக்கு 5.5 விழுக்காடு), வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக அளவில் செலவிட்டது. 1987ல் ஏற்பட்ட பஞ்சத்தை எவ்வித தோய்வின்றி கையாண்டது, சட்டப்பூர்வமற்ற அயல் நாட்டு பணப் பரிவர்த்தனையினை தடுத்தது என அனைத்து அம்சங்களிலும் சாதகமான நிலை நிலவினாலும் ஊழல் வெளிப்பாடு இருந்தது. இதனை எதிர்த்து வி.பி.சிங், தொழிற் சங்கங்கள், விவசாயிகள், சர்வோதைய மற்றும் காங்கிரஸில் மாற்று நிலைகொண்டவர்களின் ஒத்துழைப்புடன் போராடினார். அதிகார வர்க்கத்தினரின் ஊழல் கீழ்மட்டத்தில் பரவி இருந்தது. அன்றாடம் அனைத்துத் தரப்பினரையும் இது பாதித்திருந்தது. ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான ஆரிப் முகமது கான், உறவினர் அருண் நேரு, வி.சி.சுக்லா, சத்யபால் மாலிக் ஆகியோருடன் ஒன்றிணைந்து வி.பி.சிங் ஜனமோர்ச்சா என்ற இயக்கத்தை 2 அக்டோபர் 1987ல் துவக்கினார். 1988ல் நடந்த அலகாபாத் பாராளுமன்ற இடைத் தேர்தலில் வலதுசாரி இயக்கங்கள், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆதரவுடன் வி.பி.சிங் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி தலைவர்களுடன் ஒன்றிணைந்து 11 அக்டோபர் 1988ல் ஜனதா தளம் துவக்கப்பட்டது அதில் வி.பி. சிங்கின் ஜனமோர்ச்சா இயக்கத்தை இணைத்துக்கொண்டார். 7 கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய முன்னணி என்ற அமைப்பினை 6 ஆகஸ்ட் 1988ல் ஏற்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் அதிக இடங்களில் தனிக் கட்சியாக வெற்றிபெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கப் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. தேசிய முன்னணி 146 இடங்களிலும், பாஜக 86 இடங்களிலும், வலதுசாரிகள் 52 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. இக்கட்சிகள் ஒன்றிணைந்து வி.பி.சிங் தலைமையில் 2.12.1989ல் ஆட்சி அமைக்கப்பட்டது. வி.பி.சிங் இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பிரதம மந்திரியாவார்.

7.8.1990ல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பினை அளிக்க 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இதனால் பாஜக, வலதுசாரிகள், சில அமைச்சரவை சாகக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். பாஜகவானது வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக மிரட்டல் விடுத்தது. வட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராட்டம் கடுமையாக இருந்தது. இப்போராட்டங்கள் மேல் ஜாதி வர்க்கத்தினரால் தூண்டிவிடப்பட்டது என அறியப்படுகிறது. பெரும்பாலான இப் பிற்பட்டமக்கள் நிலச் சீர்திருத்தம் மற்றும் பசுமைப் புரட்சியின் நன்மைகளைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து 1.10.1990ல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்துவதை உச்ச நீதி மன்றம் நிறுத்திவைத்தது. இதனிடையே பாஜகவின் தலைவரான எல்.கே.அத்வானி 25.9.1990ல் சோமநாத்திலிருந்து ரதயாத்திரையைத் தொடங்கினார். இது பீகார் மாநிலம் சமஸ்திபூர் சென்றடைந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார் இதனைத் தொடர்ந்து பாஜகவானது வி.பி.சிங்கிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் ஜனதா தளத்தின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகருக்கு ஆதரவாக மாறியதால் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது. சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் ஆதரவுடன் 7.11.1990ல் ஆட்சி அமைக்கப்பட்டது. மிகக் குறுகிய காலமே நீடித்த சந்திரசேகர் அரசு 5.3.1991ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது.

இக்கால கட்டத்தில் அரசின் செலவுகள் பல மடங்கு அதிகரித்தது ஆனால் அரசு மற்றும் பொதுத்துறை சேமிப்பானது தொடர்ந்து குறைந்துவந்தது. இதன் விளைவு அரசின் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது (1979-80ல் நிதிப் பற்றாக் குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.7 விழுக்காடாக இருந்தது 1991ல் 10.4 விழுக்காடாக அதிகரித்தது). இதனை எதிர்கொள்ள அரசு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கியது. இதனால் அரசின் முதலீட்டிற்கும் பொது சேமிப்பிற்குமான இடைவெளி அதிகமானது (1980-81ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடாக இருந்தது 1989-90ல் 9 விழுக்காடாக அதிகரித்தது). நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பினால் செலுத்துநிலை இருப்பில் எதிர்மறை விளைவுகள் உண்டாகியது. செலுத்து நிலை இருப்பின் பற்றாக்குறையானது 3.5 பில்லியன் டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 1.8 விழுக்காடு) 1987-88ல் இருந்தது 1990-91ல் 9.9 பில்லியன் டாலராக அதிகரித்தது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 3.5 விழுக்காட்டு). 1985-1990ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த பொருளாதாரத்தில் முதலீட்டுக்கும் சேமிப்பிற்கும் உள்ள இடைவெளியானது ஆண்டுக்கு சராசரியாக 2.5 விழுக்காடு அதிகரித்தது. 1985-1990ஆம் ஆண்டுகளுக்கிடையே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டுக்கு 5.5 விழுக்காடு வளர்ச்சியினைக் கண்டது. குறிப்பாக தொழில் துறையானது 7 விழுக்காடாக இருந்தது. ஆனால் சேமிப்பானது முதலீட்டை மேம்படுத்த உதவவில்லை இதனால் அதிகக் கடன் வாங்கி செலவிட செய்தனர். இதனால் நிதிநிலை மேலும் மோசமடைந்தது. செலுத்து நிலை இருப்பில் பாதக போக்கு காணப்பட்டது. 1980களின் இறுதியில் கடன் அளவு அதிகமாக்க காணப்பட்டது. உள்நாட்டுக் கடன் 1974-75ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.8 விழுக்காடாக இருந்தது 1984-85ல் 45.7 விழுக்காடாகவும், 1989-90ல் 54.6 விழுக்காடாகவும் அதிகரித்திருந்தது. வெளிநாட்டுக் கடன் 1980-81ல் 23.5 பில்லின் டாலராக இருந்தது 1985-86ல் 37.3 பில்லியன் டாலராகவும், 1990-91ல் 83.8 பில்லின் டாலராகவும் அதிகரித்தது. இதன் விளைவு இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 1980-81ல் 5.85 பில்லியன் டாலராக இருந்தது 1989-90ல் 4.1 பில்லியன் டாலராகக் குறைந்தது. இது மேலும் 1990-91ல் 2.24 பில்லியன் டாலராகக் குறைந்தது. இந்தக் கையிருப்பானது அடுத்து வந்த ஒருமாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதற்கிடையே 1990ல் ஈராக்-குவைத் போரினால் பெட்ரோல் விலை அதிகரித்தது. இதனால் மேலும் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை அதிகரித்திருந்தது. பன்னாட்டுக் கடன் தர மதிப்பீடு இந்தியாவின் மீதிருந்தது வேகமாகக் குறைந்தது இதனால் வெளிநாட்டுக் கடன் பெறுவதில் பெரும் சவால்கள் காணப்பட்டது. இதற்கிடையே அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வைப்புகளைத் திரும்பப் பெறத்தொடங்கினர். இந்த நிலையினை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா 20 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்து யூனியன் வங்கியிடம் ஜூலை 1991ல் அடகு வைத்து அந்நியச் செலாவணியினை பெற்று நடப்பு நிலையினை சரிசெய்தது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டுப் பண நிதியத்திடம் இந்தியக் கடன் பெற்றது. இவ்வாறு இந்தியாவின் வெளிநாட்டு, உள்நாட்டு கடன்கள் அதிகரித்தது.

இந்தியாவின் பெரும் சவாலாக செலுத்துநிலை இருப்பில் ஏற்பட்ட பாதகமான நிலையினால் வெளிநாட்டுக் கடன் தொடர்ந்து அதிகரித்தால் (1980-81ல் 20.6 பில்லியன் டாலராக இருந்தது 1989-90ல் 64.4 பில்லியன் டாலராக அதிகரித்தது) இதற்குச் செலுத்தவேண்டிய வட்டி அதிகமானது. அரசின் வருவாய் இதற்காகத் திருப்பிவிடப்பட்டது எனவே நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டு வந்தது. இதனைக் கட்டுப்படுத்த 1 ஏப்ரல் 1990ல் புதிய இறக்குமதி-ஏற்றுமதிக் கொள்கையினை அறிவித்தது. இதன்படி இந்திய ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் எண்ணெய் (எரிபொருள்) நுகர்ச்சியானது 8 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதனால் பெட்ரோல் இறக்குமதி அதிகரித்தது, அந்நியச் செலாவணி செலவு அதிகரித்தது.

வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றபோது விலைவாசி அதிக அளவில் காணப்பட்டது. எனவே இதனைக் கட்டுப்படுத்த முக்கிய நுகர்வுப் பொருட்களின் அளிப்பினை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உணவு தானிய விலையினை கட்டுப்படுத்த அரசு உணவு தானியக் கையிருப்பினைப் போதுமான அளவில் அதிகரிக்க உணவு கொள்முதலை மேற்கொள்ள முன்னுரிமை அளித்தது. இதனால் உணவு தானியக் கையிருப்பு (ஒன்றிய தொகுப்பு) 11.67 மில்லியன் டன்னாக அதிகரித்தது (கடந்த ஆண்டில் இது 8.34 மில்லியன் டன்னாக இருந்தது). அரசு, ஏழை மக்கள் விலை உயர்வினால் பாதிக்கப்படுவதை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்க பொது விநியோக முறை மூலமாக அடிப்படையாகத் தேவைப்படும் உணவுப் பொருட்களை வழங்கியது. இதுபோல் வெளிச்சந்தை நடவடிக்கையில் தலையிட்டு முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியது.

1980களின் கடைசியில் ஏற்பட்ட பஞ்சத்தை இந்தியா எந்த நாடுகளின் உதவியுமின்றி எளிதாக எதிர்கொண்டது. காரணம் 1980களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்தது மட்டுமல்லாமல் அரசின் உணவு தானிய இருப்பை அதிகரித்து கொண்டது. 1990களில் உணவு உற்பத்தி வளர்ச்சியானது (3 விழுக்காடு) மக்கள் தொகை வளர்சியினைவிட (2.1 விழுக்காடு) அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பசுமைப் புரட்சியின் விளைவாக 1967-68 மற்றும் 1989-90ஆம் ஆண்டுகளுக்கிடையே வேளாண் உற்பத்தியானது 80 விழுக்காடு அதிகரித்திருந்தது, உற்பத்தி திறனானது ஆண்டுக்கு 2.5 விழுக்காடு அதிகரித்தது. இதன் விளைவு உபரியான உணவு உற்பத்தியினைச் சந்தைப் படுத்துதல் அதிகரித்துக் காணப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைவினால் பெருமளவிற்கு உணவு உற்பத்தி அதிகரித்திருந்தாலும் (உணவு தானிய சாகுடி பரப்பானது 1980-81க்கும் 1989-90க்கு மிடையே கடந்த பத்தாண்டுகளில் ஒப்பிடும்போது குறைந்திருந்தாலும் உணவு உற்பத்தியானது 2.81 விழுக்காடு அதிகரித்திருந்து), இது அனைத்து பகுதியிலும் சீரான நிலையில் இல்லை. சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் கூலிகள், அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பசுமைப் புரட்சியானது சிவப்பு புரட்சியாக பல இடங்களில் உருவெடுத்தது. இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்ததன் விளைவு நிலம் துண்டாடப்பட்டு சராசரி நிலக் கைப்பற்று அளவானது குறைந்து வந்தது (1970-71ல் 2.28 ஹேக்டேராக இருந்தது 1990-91ல் 1.57 ஹேக்டேராகக் குறைந்தது). மேலும் மொத்த விவசாயிகளில் சிறு, குறு விவசாயிகளின் (இரண்டு ஹேக்டேருக்கு கீழ்) பங்கு அதிகரித்தது. இதன் அடிப்படையில் ஏழை விவசாயிகள் பயன்பெறத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த அடிப்படையில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், சிறு விவசாயிகள் வளர்ச்சி முகமை திட்டம், குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதன் விளைவு 1960களில் 20 மில்லியன் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்ட நிலையில் 1988-89ல் 850 மனித வேலை நாட்கள் உருவாகியிருந்தது. தமிழ்நாடு – கர்நாடகா இடையே நீண்டகாலமாகக் காவிரி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் சச்சரவு தொடர்ந்து வந்தது. 1990-91ல் இப் பிரச்சனை இரு மாநிலங்களுக்கிடையே பெரிய அளவில் சர்ச்சை உருவாகியது. இதனைத் தீர்க்க வி.பி.சிங் அரசானது காவிரி சர்ச்சை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

வி.பி.சிங்கின் அரசு வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளித்தது. இந்தியப் பொருளாதாரம் 1980களில் சராசரியாக 5 விழுக்காடு வளர்த்திருந்தாலும் நீடித்த வேலையின்மை 1983ல் 8 மில்லியான இருந்தது 1987-88ல் 12 மில்லியனாக அதிகரித்தது. இத்துடன் குறை வேலையின்மை (under employment) அதிக அளவில் காணப்பட்டது. எனவே வி.பி.சிங் அரசானது மதிப்புடைய வேலைவாய்ப்பினை உருவாக்க ‘வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ நடைமுறைப்படுத்தியது. இத்திட்டத்தை நாடு முழுக்க அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த போதுமான நிதி இல்லாததால், வேலையின்மை அதிகமாக இருந்த கிராமப்புற வறட்சியினை எதிர்கொண்ட பகுதிகளில் முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தியது.

அட்டவணை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் 

துறைகள்  1967-68 முதல் 1980-81வரை1981-82 முதல் 1990-91வரை
வேளாண்மைத் துறை3.33.5
தொழில் துறை4.17.1
பணித் துறை4.36.8
மொத்த உள்நாட்டு உற்பத்தி 

(காரணிகளின் விலையில்)

3.85.6
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம்1.53.4

Source: Illa Patnaik (2006): “India: Ecnomic Growth, 1950-2000,” Indian Council for Research on International Relations, New Delhi. 

வேளாண்மையில் வேகமான வளர்ச்சியினை அடைய பல்வேறு உத்திகள் கையாளப்பட்டது. இந்தியாவில் நீர்ப்பாசன வசதியினைப் பெற்ற பகுதிகளில் ஈர்க்கத்தக்க அளவில் உற்பத்தித் திறன் அதிகரித்திருந்தது. ஆனால் மழைப்பொழிவினைச் சார்ந்தும், பகுதியான அளவில் வறண்ட விளைநில பரப்பில் குறைவான உற்பத்தித் திறன் காணப்பட்டது. எனவே இப்பகுதிகளில், உற்பத்தித் திறனை அதிகரிக்க நீர்ப்பாசன, நிலமேம்பாட்டு, மண் மற்றும் ஈரப்பதத்தை மாற்றியமைக்க அதிக அளவிற்கு முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் வேளாண் தொழிலாளர்களை அதிக அளவில் ஈடுபடுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்துடன் வேளாண்மையில் பன்முகத் தன்மையினை உருவாக்கவும், வேளாண் சார் தொழில்களை உருவாக்கவும் முனைந்தது. கிராமப்புற பொருளாதாரத்தை நகர்ப்புறங்களுடன் இணைத்துச் சிறப்பான சந்தைப் படுத்துதலை உறுதி செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது.

இந்தியத் தொழில் கொள்கை 1956 போல் வேளாண்மைக்கான சிறப்பான கொள்கையினை வகுக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வி.பி.சிங் அரசு வெளியிட்டது. வேளாண்மையினை மேம்படுத்த ‘வேளாண்மை கொள்கை நிருணயம்’ கொண்டுவரப்பட்டது. வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு அரசின் நிதி ஆதாரங்களிலிருந்து 50 விழுக்காடு செலவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 1989-90வது திட்ட கால ஒதுக்கீடானது 44 விழுக்காடாக இருந்தது 1990-91வது திட்ட காலத்தில் 49 விழுக்காடாக அதிகரித்தது. ஏழை விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் தொடர்ந்து கடனால் பாதிக்கப்பட்டும், அதனைத் திரும்பச் செலுத்த இயலாமலும், குறைவான வருவாயினை ஈட்டிக்கொண்டு இருந்ததாலும் காலம் காலமாக வறுமையின் பிடியில் சிக்கித் தவிர்ப்பதை உணர்ந்து 2, அக்டோபர் 1989ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கிகளில் கடன் பெற்றவர்களின் கடனை ரூ.1000 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்தது. ஒன்றிய அரசு போலவே மாநில அரசுகளும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்குக் கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரூ.4000 கோடி உர மானியம் அளிக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

வேளாண் விளைபொருட்களின் விலையினைத் தீர்மானிக்க உற்பத்தி செலவினைக் கணக்கிடும் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன்படி வேளாண் தொழிலாளர் (குடும்ப உறுப்பினர்களின் உழைப்பு உட்பட) செலவு, குறைந்தபட்ச கூலி அல்லது பெயரளவுக் கூலி இதில் எது அதிகபட்சமோ அதனைக் கணக்கில் கொண்டது. விவசாயிகளின் வேளாண் சாகுபடி செய்தலின் மேலாண்மைக்கான மதிப்பீடு கணக்கில் கொள்ளப்பட்டது. வேளாண் விளைபொருட்கள் சந்தைக்கு வருவதற்கும் அரசு அறிவிக்கின்ற விலைக்கும் உள்ள செலவு வேறுபாட்டில் உள்ளீட்டுச் செலவின் உயர்வினைக் கொள்முதல் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலையில் சரிசெய்து கொள்ளும் என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டைப் பாதுகாக்கக் கிராமப்புற மேம்பாட்டின் அவசியத்தை உறுதி செய்தது. இது போன்று இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் சுயவேலைவாய்பினைப் பெருக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாகப் பின்தங்கிய பகுதிகளில் வேளாண் சார் தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டது. வேளாண்மையில் சரியான தொழில்நுட்ப மேம்பாட்டை ஏற்படுத்த முறைசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இந்திய வேளாண்மை வளர்ச்சி 7வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆண்டுக்கு 4.1 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டது இது 6வது ஐந்தாண்டு திட்ட காலத்தைவிட (6 விழுக்காடு) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மழைபொழிவு சிறப்பாக இருந்தால் உணவு உற்பத்தியானது 1989-90ல் 171.04 மில்லியன் டன்னாக இருந்தது 1990-91ல் 176.39 மில்லியன் டன்னாக அதிகரித்தது. நெல், கோதுமை, பயறு வகைகளின் உற்பத்தியினை அதிகரிக்க திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நெல் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது, சிறப்பு உணவு தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் தேசிய பயறு வளர்ச்சி திட்டம் 1990-91ல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசின் எண்ணெய் வித்துகள் தொழில்நுட்ப இயக்கம் (1986ல் தொடங்கப்பட்டது) தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியானது 1988-90ல் 18 மில்லியன் டன்னாக இருந்தது 1989-90ல் 16.8 மில்லியன் டன்னாகக் குறைந்தது. 1990-91ல் நல்ல மழை பொழிவு இருந்ததால் உரப் பயன்பாடு 12.7 மில்லியன் டன்னாக அதிகரித்தது (1988-90ல் 11.7 மில்லியன் டன்னாக இருந்தது) இதுபோல் வேளாண் கடன் 1990-91ல் ரூ.13240 கோடியாக இருந்தது 1989-90ல் ரூ.13022 கோடியாக அதிகரித்தது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்க ஜவஹர் ரோஜ்கர் யோஜனா 1989ல் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் வறட்சியினை எதிர்கொண்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது (Chandra Shekhar Prasad 2009).

வி.பி.சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து போர. மது தண்டவதே 1990-91ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்யும் போது வேளாண்மைக்கான பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். உர மானியத்திற்கு ரூ.950 கோடியும், உணவு மானியத்திற்கு ரூ.276 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதுபோல் வறுமையை ஒழிக்க வரவு செலவு திட்டத்தில் 30 விழுக்காடு ஒதுக்கப்பட்டது (கடந்த ஆண்டு இது 23 விழுக்காடாக இருந்தது). வேளாண்மைத் துறைக்கு ரூ.950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.3115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேளாண்மைக்கான முன்னுரிமைத் தருவதாக அறிவித்த அரசு பூச்சிக் கொள்ளி மருந்து இறக்குமதிக்கான வரியினைக் குறைத்தது.

1980களின் இடையில் இந்தியப் பொருளாதாரம் முதல் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியிருந்தது. இதன்படி புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து துறைகளிலும் புகுத்தப்பட்டது, வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. ஆனால் குழப்பமான அரசியல் நிலையினாலும், பொது விலைமட்ட உயர்வினாலும் இச்சீர்திருத்தங்கள் பெருமளவிற்குக் கைகொடுக்கவில்லை. மேலும் இச்சீர்திருத்தங்கள் தொழில் துறை சார்பானதாக இருந்ததால் வேளாண்மைக்கான முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. இக்கால கட்டத்திலிருந்து இந்திய வேளாண்மைத் துறையானது பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரண்டாம் கட்டமாகப் பொருளாதாரச் சீர்திருத்தமானது 1991ல் நடைமுறைப்படுத்தப்பட்டது இது இந்தியப் பொருளாதாரம் உயர் வளர்ச்சியில் பயணிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது. இந்தியப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி நிலையிலிருந்து சந்தை சார்ந்த தொடர் வளர்ச்சிக்கு மாற்றமடைந்தது. இதன் விளைவு மக்களின் வருமானம் அதிகரித்தது, வறுமை குறைந்தது, வட்டார ஏற்றத் தாழ்வுகள் உருவானது, கிராமப்புறங்களில் வேளாண்மை நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. கிராமப்புறங்களில் வேளாண் சாரா தொழில்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மையினைச் சார்ந்திருந்தவர்கள் குறிப்பாக சுயமாகப் பயிர் செய்பவர்கள் குறைந்தனர், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகரித்தனர். வேளாண்மை சாத்தியமற்றதாக விவசாயிகள் கருதத் தொடங்கினர். இதனை அடுத்துத் தொடர்ந்து வேளாண்மை பெருமளவிற்குச் சரியும் போக்கு உருவானது.

– பேரா.பு. அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 7 ராஜீவ் காந்தியும் மஞ்சள் புரட்சியும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 7 ராஜீவ் காந்தியும் மஞ்சள் புரட்சியும் – பேரா.பு.அன்பழகன்




இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ராஜீவ் காந்தி ஆவார். அக்டோபர் 31, 1984ல் இந்திரா காந்தி இறந்ததை அடுத்து பிரதமராகப் பொறுப்பேற்றார். ராஜீவ் காந்தி அமெரிக்கக் காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போது “நான் இளைஞன், எனக்கு ஒரு கனவு உண்டு, அது இந்தியாவை வலுவான, சுதந்திரமான தன்னம்பிக்கை அடிப்படையில் வளர்ந்து உலக நாடுகளில் முன்வரிசைக்குக் கொண்டு செல்வதற்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்” என்றார். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியினை அடைய அனைத்து துறைகளின் மேம்பாட்டின் அவசியம், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உண்டாக்கவேண்டும் என்றார். ராஜீவ் காந்திக்கு முன்பாக 35 ஆண்டுகளாக இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த பெரிய மாற்றமும் அடையவில்லை. எனவே மக்களின் அடிப்படைத் தேவைகளை அளிக்கத் தொழில்நுட்ப மாற்றங்கள் வழியாக இவற்றை அளிக்க முற்பட்டார். தகவல் தொழில்நுட்பம் இவற்றிற்கான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி, தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் மென்பொருள், அணுக்கரு வளர்ச்சி, பாதுகாப்பு, ஆயுத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பயங்கர வாதத்தை ஒழிப்பது, ஏழை-பணக்காரர் பேதத்தை அகற்றுதல், அமைதியான வாழ்வினை உறுதி செய்தல், கல்வி மேம்பாடு, சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், வேளாண் வளர்ச்சி, தொழில் மேம்பாடு, சுயச்சார்பு இந்தியாவினை உருவாக்குதல், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு, நீதி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு போன்றவற்றின் மீது கவனம் செலுத்தினார். இதற்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நாட்டின் இறையாண்மையையும் நல்லிணக்கத்தையும் காக்கக் கல்வி அவசியம் என்று உணர்ந்த ராஜீவ் காந்தி புதிய கல்வி முறையினைக் கட்டமைத்தார். இனம், ஜாதி, பிறப்பு வருணம், பாலினம், செல்வம், போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி சமூக நீதியினை நிலைநாட்ட ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, ‘நம்முடைய முதன்மைக் குறிக்கோள் வறுமையினை ஒழிப்பது, சமூக நீதி மற்றும் சுயச்சார்பினை தோற்றுவிப்பதாகும்”. என்றார். பட்டியல் இனத்தவர், பழங்குடியினரின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்து பெண்களுக்கான அதிகாரம் அளிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது (Shasi Skumar shingh 2021).

ராஜீவ் காந்தி பிரதம மந்திரியானதும் வி.பி.சிங்கை நிதி அமைச்சராக்கினார். மார்சு 1985ல் தாக்கல்செய்யப்பட்ட நிதி அறிக்கையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீதிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கினார், வர்த்தகத்தில் இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டது, இயந்திரத் தளவாடங்கள் உற்பத்தி, நூற்பாலைகள், கணினி உற்பத்தி, மருந்து உற்பத்தி போன்றவற்றை பெருக்க எளிமையான உரிம முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தனிநபர் வரி, நிறுவன வரி குறைக்கப்பட்டது. இம்முயற்சியினால் நாட்டின் உற்பத்தி பெருகியது. நடுத்தர மக்களும், வணிகர்களும் இதனால் அதிகம் பயனடைந்தனர். ஆனால் இடதுசாரி இயக்கங்கள் அரசின் முயற்சிகள் பணக்காரர்களுக்குச் சாதகமானது என்று குறிப்பிட்டது. அரசின் புதிய முயற்சியினால் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் நுகர்வுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனையானது. தொழில் துறை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் ராஜீவ் காந்தி ஆட்சியில் பயனடைந்தனர். வறுமை பெருமளவிற்குக் குறைந்தது. அதேசமயம் நாட்டின் சில பகுதிகளில் மழை பொய்த்ததன் காரணமாக வேளாண்மை தோல்வியைக் கண்டு பட்டினி சாவுகள் காணப்பட்டது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாட்டின் முக்கிய விவசாயத் தொழிற்சங்கங்களான ஷேத்காரி சங்கதனா (மகாராஷ்டிரா மாநிலம்), இந்திய விவசாயச் சங்கம் (பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள்) துவக்கப்பட்டது (Ramachandra Guha 2017).

கணினி தொழில்நுட்ப வளர்ச்சியினை ஏற்படுத்த அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டு அடிப்படையில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டைச் சென்றடையச் செய்தார். 1984ல் கணினி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி, மென்பொருள் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியது. 1986ல் கணினி மென்பொருள் ஏற்றுமதி, வளர்ச்சி மற்றும் பயிற்சி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன் விளைவு இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியானது ரூ.100 கோடியாக 1988ல் அதிகரித்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மென்பொருளின் பங்களிப்பு அதிகரித்தது. 1990களில் தகவல் தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் பரந்து வளர்ந்தது. ராஜீவ் காந்தி இதனால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தந்தையாகக் கருதப்படுகிறார்.

நடுத்தர மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியா இதற்கு முன்பு மகாலநோபிசின் உத்திகளை அடிப்படையகாகக் கொண்டு மூலதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கிலே இருந்தது. நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி செய்வதற்கு எந்தவிதத்திலும் ஊக்கமளிக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்யத் தனியார் துறை சிறந்ததாக இருக்கும் என்ற அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டது. தனியார் முதலீடுகள் கொண்டுவர அதற்கான சூழலை உருவாக்கினார். இதற்காக வரிகள் குறைக்கப்பட்டது, முதல் முயற்சியாக இடுபொருட்களின் மீதான மறைமுக வரியும் குறைக்கப்பட்டது. தொழில் தொடங்க உரிமம் பெறும் முறை ரத்து செய்யப்பட்டது. 1987ல் இந்தியப் பத்திரங்கள் மற்றும் மாற்றுக் கழகம் உருவாக்கப்பட்டது. பங்குச் சந்தை முறைப்படுத்தப்பட்டது. தகவல் தொடர்பு அனைவருக்கும் குறிப்பாகக் கிராமப்புறங்களிலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதற்காகத் தனியார்த் துறை முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டது. இதனால் வேளாண்மைத் துறை பயன் அடைந்தது.

இந்தியாவை 21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய முதலீடு தேவையின் அவசியத்தை உணர்ந்தவர், இறக்குமதி மீதான காட்டுப்பாட்டை விலக்கிக்கொண்டார். இந்தியாவின் முக்கியத் துறையான வேளாண்மையினை வேகமாகவும் சீராகவும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகப் பசுமைப் புரட்சியினை மழைமறைவுப் பகுதிகளில் விரிவாக்கம் செய்தார். இதற்காக எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியினை மேம்படுத்தத் தொழில்நுட்ப இயக்கம், பருப்பு வகைகளை உற்பத்தி செய்யத் தேசிய திட்டத்தை முன்னெடுத்தார்.

ராஜீவ் காந்தி காலத்தின் முக்கியமாக வறுமை, பசியின்மை, ஆகியவற்றினை போக்க மாநிலங்களுக்கு இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட வலியுறுத்தப்பட்டது. வறுமையில் வாழ்பவர்களுக்குக் குடியிருக்க வீடு கட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூகத்தில் பொருளாதார அளவில் நலிவுற்றவர்களுக்கு வீடுகட்டித்தருதல், குடிநீர் இணைப்பு வழங்குதல், கழிவு நீர் வெளியேற்றம், குளியல் அறை, கழிப்பறை, சாலை விளக்குகள், போன்ற வசதிகள் செய்து தரப்பட்டது (Prabhaakaran 2008). இதற்கு அடித்தளமாகத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு வங்கிக் கடன், இறக்குமதித் தீர்வையை குறைத்தல், மென்பொருள் ஏற்றுமதி, தொழில் தொடங்க அனுமதி ரத்து, அயல் நாட்டு நிறுவனங்களைத் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது, கணினி ஏற்றுமதிக்குச் சிறப்பு மண்டலங்களை அமைப்பது போன்றவற்றை முன்னெடுத்தார்.

ராஜீவ் காந்தி இந்திய அரசின் அதிகாரிகள் சாமானிய மக்களுக்கு எதிராகவும் பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள் போன்றவர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் எனவே இவர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது என்ற கருத்திலிருந்தார். இந்த நிலையினைப் போக்க அதிகாரத்தைப் பரவலாக்கக் குறிப்பாகக் கிராமப்புறங்கள் மேம்பாடு அடைய உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.

வேளாண்மையின் வளர்ச்சிக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1980களில் முதன் முதலாக இந்தியாவில் வறுமை குறையத் தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் அடைந்த உயர் வளர்ச்சியாகும். 1991க்கு பிறகு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வர்த்தகம், தொழில், நிதி துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை மூன்றும் நகர்ப்புறங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதனால் 1991க்கு பிறகு நகர்ப்புற வறுமை குறையத் தொடங்கியது. கிராமப்புறங்களில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு (வேளாண் விளைபொருட்கள் உட்பட) நர்புறங்களில் இதற்கான தேவையை அதிகரித்தது இது கிராமப்புற மக்களின் வருவாயினை உயர்த்தி வறுமையின் தீவிரத் தன்மையினைக் குறைந்ததது. 2004-05 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புற வறுமை 15 விழுக்காடு குறைந்தது இது நகர்ப்புறங்களில் 5 விழுக்காடாகக் காணப்பட்டது (Pulapare Balakrishna 2022). இதற்கான அடித்தளத்தை ராஜீவ் காந்தியால் வித்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டவணை: வேளாண் உற்பத்தி வளர்ச்சி

வேளாண் பயிர்1950-601960-701970-801980-90
நெல்4.532.121.734.08

கோதுமை

5.797.734.154.29
சோளம்7.843.900.643.20
பருப்பு3.80 -0.47 -1.182.45
மொத்த உணவு தானியங்கள்4.352.631.763.31
எண்ணெய் வித்துகள்3.052.411.346.01
கரும்பு5.622.542.274.38
பருத்தி4.542.032.693.23
சணல்5.600.322.131.28

Source:  GoI (2004): “Agricultural Statistics at a Glance,” Government of India.

1980களில் வேளாண் துறையில் அனைத்து பகுதிகளிலும் வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி சாதகமாகக் காணப்பட்டது. தென்னிந்திய மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளில் பிரதான உணவான அரிசியானது 1980களில் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இதற்கு முக்கியமாகத் தொழில்நுட்ப மேம்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தனியார் துறை நிறுவனங்கள் குறைவான விலையில் தண்ணீர் குழாய்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், ஆழ்துளைக் கிணறுகள், குழாய் நீர்ப் பாசனம் பெருமளவிற்குப் பயன் பாட்டிற்கு வந்தது, விவசாயிகள் பாரம்பரிய ரகங்களிலிருந்து நவீன ரகங்கள் பயிர்செய்யத் தொடங்கியது, ஒன்றுக்கு மேற்பட்ட சாகுபடி போகங்கள் செய்யப்பட்டது போன்றவை உணவு உற்பத்தியினை 1980களில் அதிகரிக்க முக்கியக் காரணமாக விளங்கியது. இதன் விளைவு கிராமப்புறங்களில் விவசாயக் கூலி அதிகரித்து கிராமப்புற வறுமை குறையத் தொடங்கியது. இது இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது (Koichi FUJITA ue.org/files/events/Fujita_green_rev_in_india.pdf).

பசுமைப் புரட்சியின் விளைவால் நெல், கோதுமை உற்பத்தி பெருமளவிற்கு அதிகரித்தது ஆனால், சமையல் எண்ணெய்யின் தேவை அதிகரித்த அளவிற்கு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. ஆண்டுக்குச் சராசரியாக 125 லட்சம் டன் சமையல் எண்ணெய் தேவை இருந்தது ஆனால் இந்தியாவில் 75 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் இந்தியா அர்ஜெண்டினா, மலேசியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தது. சமையல் எண்ணெய்க்காகச் சூரியகாந்தி, கடுகு, நிலக்கடலை, ஆமணக்கு, நைஜர், ஆளிவிதை போன்ற பயிர்களிலிருந்து சமையலுக்கான எண்ணெய் பெறப்பட்டது. இவ்விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் குறையும். எனவே ராஜீவ் காந்தி மஞ்சள் புரட்சிக்கான அடித்தளத்தினை அமைத்தார். இதன் முக்கிய நோக்கம் புதிய வகை எண்ணெய் வித்து ரகங்களைப் பயன்படுத்தி எண்ணெய் உற்பத்தியினை அதிகரிப்பதாகும். எண்ணெய் வித்து தொழில்நுட்ப இயக்கம் 1986ல் துவக்கப்பட்டது. இதனால் 1985-86ல் 10.8 மில்லியன் டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது 1998-99ல் 24.7 மில்லியன் டன்னாக அதிகரித்தது. 1985ல் எண்ணெய் வித்து சாகுபடி பரப்பு 19.0 மில்லியன் ஹெக்டேராக இருந்தது 1996ல் 26.0 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. இதன்படி 36 விழுக்காடு சாகுபடி பரப்பும், 125 விழுக்காடு உற்பத்தியும் இக்கால கட்டத்தில் அதிகரித்தது. அதிக விளைச்சல் தரும் உயர் ரக விதைகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பொன்ற அடிப்படையில் சாகுபடி செய்ததால் இக்கால கட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 570 கிலோவாக இருந்தது 926 கிலோவாக அதிகரித்துக் காணப்பட்டது. இத்துடன் 200 மேற்பட்ட விதை ரகங்கள் பயிரிடப்பட்டது. இதனால் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியானது 1985ல் ரூ.700 கோடி மதிப்பிற்குச் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது 1995-96ல் ரூ.300 கோடியாகக் குறைந்தது (ICAR 2022). எண்ணெய் வித்து தொழில்நுட்ப இயக்கம் துவக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் இந்தியா அதிக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது 1993-94ல் சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்த நாடாக மாற்றமடைந்தது. 1993-94ல் இந்தியா தனக்குத் தேவையான சமையில் எண்ணெய்யில் 97 விழுக்காடு இந்தியாவிலேயே உற்பத்தி செய்துகொண்டது, 3 விழுக்காடு மட்டுமே இறக்குமதி செய்தது. எண்ணெய் வித்துக்களின் வளர்ச்சியானது 1980களில் மற்ற உணவு உற்பத்தியினை விட அதிக அளவிற்குப் பதிவாகியுள்ளது.

ராஜீவ்  காந்தி ஆட்சியில் வேளாண் வளர்ச்சிக்காக 1985ல் ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது, 1988ல் SAFAL என்கிற அமைப்பு பழம் மற்றும் காய்கறிகள் சில்லறை விலையில் விற்பனை செய்யத் துவக்கப்பட்டது. 1990ல் தேசிய வேளாண்மை அறிவியல் கழகம்  தொடங்கப்பட்டது. 1989ல் .ஆர் 64 என்ற நெல் ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதுபோல் பாசுமதி நெல் ரகமான புசா பாசுமதி-1 அறிமுகப்படுத்தப்பட்டது

அட்டவணை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு – ஆண்டிற்கு)

பொருளாதாரம்1950-19641965-19791980-1990
ஓட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 2.9 5.8
தொழில துறை 7.4 3.8 6.5
வேளாண் துறை 3.1 2.3 3.9
மொத்த முதலீடுஃஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி13.018.022.8

Source: https://www.princeton.edu/~kohli/docs/PEGI_PartI.pdf

– பேரா.பு.அன்பழகன்