Ram Periyasami Poems 3 ராம் பெரியசாமி கவிதைகள் 3

ராம் பெரியசாமி கவிதைகள்




1
ஒரு குற்றவாளியின் கடிதம்
————————————————–
என் பெயர் பிழை
நான் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு
இரவுகளின் அணுக்களிலும் விழித்திருப்பவன்
நட்சத்திரங்களை பூமத்தியரேகையிலிருந்து பார்ப்பவன்
நான் மானவெட்கங்களை
எப்போது தொலைத்தேனென்பதை
இருளில் தேடியலைகிற
நிறமியில்லா தந்திரதஸ்யூ

அண்டத்தின் காக்கைகளாய்
உணவுப்பருக்கைகளைத் தேடியலைந்த வீதிகளில்
அதிகமாய் பிரேதங்களலைந்தும்
திரிந்துக்கொண்டிருப்பவை
அவர்கள் பிறந்தும் இறந்தும்
உடைந்தும் கொண்டிருப்பவர்கள்
சந்தர்பவாதங்களின் தூண்டில்களில்
தன்னுடல்களை கொக்கியிட்டு
மீன்களைத்தின்பதற்காக காத்திருப்பவர்கள்
கடவுளின் மந்திரக்கோலைக் களவாடிப் பொழுதுகளை செய்பவர்கள்

உடையாதப்பொருள்களாய்
திருடுபவன் நான்
ஆடைகளைத்திருடியதில்லை
அதுவொரு மனிதமலயீரம்
புத்தனைத்திருடி அவனுக்கு
துறவறமளித்தேன்
அவனெனக்கு ஞானமளித்தான்
நான் போதிமரத்தை பரிசளித்தேன்

நீங்கள் பூமியின் ஆழ்துளையில் தேனையெடுப்பதற்கு துளையிட்டதுப்போல
காற்றைத்திருகி நீள் உருளையில்
அடைத்ததுப்போல
மரங்களைத்திருகி ஆவணங்கள்
செய்ததுப்போலத்தான்
நான் ஆபரணங்களைத்திருடி
சிலைகளுக்கு அணிவித்தேன்

போன்சாய் மரங்களின் சட்டத்தில்
நிறைய ஓட்டைகள்
கருப்பங்கியணிந்த கோமான்கள்
விலைப்போகும் சிவப்புநிறப்பகுதி
பச்சை மற்றும் நீல விளக்குகள்
எரிவதில்லை
எல்லா நாட்டின் விதைகளையும்
பறித்துச்சென்றுவிட்டார்கள்
சமாதிப்பழங்களையே
உணவாக எனக்குத்தருகிறார்கள்

நான் மருந்துகளைத்தேடியே
பழக்கப்பட்ட உடலானவன்
முற்றிலும் தீநுண்மிகளின் வாசனைகளால் நிறைந்தவன்
ஓசோன் இதயங்களில்
சூழ்ந்த ஓட்டைகளின்
செம்மழைத்திரவங்களை
பருகி உயிர்த்திருப்பவன்

மனிதங்காடிகள் திறக்கப்பட்டது
மூளையின் எடையில் நீரேற்றி
கனமாக்கி விற்பனை நடைப்பெற
துவங்கியது
அயல்நாட்டின் ரசங்களில்
முருகன் ஜான் ஆக்கப்பட்ட இரவுக்கணினியில் அக்பருக்கு
வேலையில்லை
அணுகுண்டுகளைப்பற்ற வைப்பதற்கு முன்
வரலாற்று பக்கங்களை வெடிக்க வைப்பதற்கு நான் தயாராகயிருக்கிறேன்

எனக்கான தண்டனையை உங்களிடம் குறைப்பதற்காக
மனுக்கள் எழுதப்போவதில்லை
நிர்ணயிக்கப்பட்ட நியாயங்களை
விற்பதற்கு முன் யாரேனும்
திருத்தப்பட்டக் கடவுளை உயிர்த்தெழச்செய்யுங்கள்
இறுதியாக அவரை தூக்கிலிட்டு
புதியதாய் ஓர் பூமி செய்து
நான் பழகவேண்டும்

2
புத்தகத்தோடு
உறங்கிப்போவதும்
எழுவதும் புதிதல்ல

நேற்று வாங்கிய புத்தகம்
என்றோ எழுதிய சொற்கள்
இன்றுதான் திறக்க முடிகிறது
புத்தகம் மரணிப்பதில்லை

முத்தமிடத்தெரியாதவனைப்போல
நடுப்பக்கத்தை திறக்கிறேன்
யாரோ சிவப்புநிற மையினால்
சில வாக்கியங்களை
கோடிட்டுக் காட்டிருக்கிறார்கள்
எனக்கு பொருந்தாது

எங்கள் வீட்டில் தோட்டங்களில்லை
மின்மினிப்பூச்சிகள் வருவதில்லை
தேவதைகள் வரம் தருவதில்லை
நத்தைக்கூட்டிற்குள்
நாங்கள் பயணித்ததில்லை
கூழாங்கற்களை தின்றதில்லை
வெண்ணிற நதிகளில் நீந்தியதில்லை

புத்தகத்தை இழுத்து சாத்திவிட்டேன்
நாடாக்களால் சங்கிலியிட்டேன்
இப்போது என்ன செய்வது
முதல் பக்கத்தை
நானெப்போது திறப்பது

வனாந்திரமென்றப் பக்கத்தில்
அம்முக்குட்டி மயிலிறகை வைத்துவிட்டாள்
இருவரும் காத்துக்கொண்டிருக்கிறோம்
ஒரு குட்டி மயிலிறகுக்காக

3
கழைக் கூத்தாடி
——————————-
இரவு நதிமுழுவதும் விண்மீன்கள்
நீந்தியிருக்கும் நேரம்
வானம் ரத்தவாடையின்நிறத்தில் ஔிர்ந்திருக்கிறது
கடவுளின் சைகைக்காக பட்சிகள்
காத்திருப்பது ஒரு விழா

கலிலிவாசிகள் கைக்காடிகாரங்களை
முடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நேரங்களை மதிப்பவர்கள்

மதியவெயிலில் தூங்கிக்கொண்டவனின் கிழக்கு
ஆடைகள் களவாடப்பட்டிருக்கிறது
போர் மூள்வதற்கான ஆயத்தம்

அழகிய வெண்கல நீருற்றில்
நீர்ச்சக்கரங்களை சுழற்றியப் பெண்களுக்கு மேலாடையிருந்தது

நகரங்களை வெறுத்துப்போனவர்கள்
தேவாலயங்களை கற்களினால்
எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்
சிலுவைப்போர்களுக்காக உட்படுத்தப்பட்டவர்கள்

கோதுமை ஆலிவ் ரொட்டித்துண்டுகள் தீர்ந்துவிட்டன
அங்கியணிந்த துறவிகளின்
புனிதப்பயணத்தில் பசி தலைமை
தாங்க ஆரம்பித்தது

மடாதிபதிகளின் மடங்களில்
வசூல் வேட்டைகள் கொழுத்திருக்கின்றன
அரசனும் மனிதனைப்போலவே
குடித்து தின்று பாதியில் உறங்கிவிட்டான்

அவனுக்கு அணியப்பட்டப்பாத்திரத்தின்
அத்தனை ஒத்திகைகளோடும்
முடிவுப்பெற்றது நாடகம்
ஊர் ரெண்டு பட்டபிறகும்
நடுநிசியில் முன்னிரவு உணவிற்காக கையேந்திக்கொண்டிருக்கிறான்
கழைக் கூத்தாடியொருவன்

Ram Periyasami's Pidivathangkalil tholainthu vidugirai Poetry Sannatham Kavithai Thodar (Series 24) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam

கவிதைச் சந்நதம் 24 – நா.வே.அருள்



கவிதை உலகத்திற்கு நல்ல காலம். காதலீ….. என்று விளித்துத் தொடங்கிய பழைய காலம் ஒரு பழைய பேப்பர் கடையில் தேய்ந்த பொருளைப்போலப் போடப்பட்டுவிட்டது. இளைஞர்களின் டிஜிட்டல் பேனாக்கள் இன்ஸ்டாக்ராம் காலத்திற்கு ஏற்றபடி புதிய புதிய பூக்களைப் பூக்கத் தொடங்கிவிட்டன.

கவிதை உதிரத்தின் பூ. அவ்வளவு புதுமையாக – ஃபிரஷ்ஷாக – இருக்க வேண்டும் அது. கவிதையின் மணம் நாசிக்கு இதுவரை முகர்ந்திராத மணத்தைத் தந்தாக வேண்டும்.

“ஒரு நிகழ்ச்சியை விவரிக்க எண்ணும்போது அதற்கு இதுவரை இல்லாத ஒரு சொல்லைப் பயன்படுத்த நாம் விரும்புகிறோம். ஏனெனில், நாம் அனுபவித்த அந்த நிகழ்ச்சி அதுவரை அனுபவித்த ஒன்றாக இருப்பது இல்லை. அனுபவத்தைச் சொற்களுக்குக் கொண்டு வருகையில் அந்தச் சொற்களுக்கும், அனுபவித்த நிகழ்ச்சிக்கும் இடையே ஓர் உறவு தோன்றும். இந்த உறவுதான் “பொருளின் பொருள்”. (மா.அரங்கநாதனின் “பொருளின் பொருள் கவிதை”).

இந்த பொருளில், ராம் பெரியசாமியின் இந்தக் கவிதை ஒரு புதிய கவிதைப் பூ!
“பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்”.

சட்டென்று கவிதை நம் மனதில் தீப்பற்ற வைக்கிறது. கவிஞனின் காகிதத்தில் ஏற்கெனவே தீவைத்திருப்பவள் அவளது காதலி. கவிஞனோ கவிதையில் தீவைக்கத் தொடங்கிவிட்டான்.

“ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன ..”

ஒரு பழைய கண்ணாடியில் முகம் பார்ப்பது எவ்வளவு சுவாரசியம்! ஒரு பழைய கண்ணாடியில்தான் கண்ணாடியின் முகமும் தெரிந்துவிடும். ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள் ரேகைகளாகிவிடுகின்றனவாம். ரசம் போன காதலனின் வரைபடத்தை ஒரு பழைய கண்ணாடி காட்டிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் கவிஞனோ தனது காதல் ரேகைகளைக் கண்டுபிடித்துவிடுகிறான். அதுவும் காதலின் புதிய கவிதை ரேகை! காணாமல் போன காதல் நதியும் கண்ணாடியில் தெரிந்துவிடுமல்லவா?

“காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…”

கால எந்திரம் என்கிற ஒரு கவிதையை எழுதியிருக்கும் என்னை இந்தச் சொற்சேர்க்கை சொக்க வைத்துவிடுகிறது. இந்தக் கவிஞனோ லாவகமாகக் காலத்தையே எந்திரமாக்கிவிடுகிறான். எதுவொன்று எந்திரமானாலும் இதயத்தனம் இல்லாமல் போய்விடும். எந்திரத்தனமான காலத்தை காதல் நினைவுகளுடன் எப்படிக் கடந்து செல்வது? அதனால் கவிஞன் என்ன செய்கிறான்? சுவற்றில் கிறுக்கியோ, எழுதித் தீர்த்தோ ஆசுவாசம் கொள்கிறான். எதையெல்லாம் எழுதித் தீர்க்கிறான்? பழுதடைகிற அன்புகளை!….பழுதடைகிற அன்புகளைப் பார்க்க வேண்டும் என்றால் இதய மெக்கானிக் ஷாப்புகளுக்குத்தான் போக வேண்டும். இதய பழுதுபார்க்கும் கடை சில நேரங்களில் சுவராக இருக்கிறது. சில நேரங்களில் தாளாக இருக்கிறது. ரிப்பேர் அதாவது பழுதுபார்க்கிற வேலை கவிதையாக இருக்கிறது. பழுதடைகிற அன்புகளை. கழிப்பறைச் சுவர்களில் எழுதிவைக்கிற நபர்களில் எத்தனைபேர் காதலர்களோ? யார் கண்டார்கள்?

“மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …”

ஓரிரை எறும்பு! கொல்கிறான் கவிஞன். வார்த்தைதான் அவனுக்குக் கிடைத்த வாள். இரை சுமந்த எறும்பு மரத்திற்குப் பாரமா? என்று கேட்கிற கவிஞன் சொல்லாமல் சொல்கிறான்…. உன் நினைவென்னும் இரை சுமந்த நானும் உனக்குப் பாரமில்லைதானே? அதனால்… “உன் தோளில் சாய்கிறேன். ” அதுவும் எப்படியாம்?….உலகைச் சுருக்கிக் கிளையில் அமரும் ஒரு பறவையைப்போல… எனவேதான் இவனால் தான் எழுதிய நாட்குறிப்புகள் அனைத்தையும் காதலியின் ஒற்றைப் பெயராகச் சுருக்கிவிட முடிகிறது. இப்படிப்பட்ட காதலனைத் தோள் சாய வேண்டாம் என்று எந்தக் காதலியால் சொல்ல முடியும்?

“ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …”

“காதலியே உன் கடைசி முத்தத்தை என் கல்லறைக்குக் கொண்டுவா” என்று மேத்தா எழுதிய போது புத்தம் புதுசாக இருந்த அந்த எழுதுமுறை இன்றைக்குப் பழசாகிவிட்டது. அதே விஷயம்தான்…. பழைய தோடுதனைப் போட்டு புதிய கம்மல் செய்வதுபோல செய்கிறான் கவிஞன். மரணம் என்பது நீ பிரிவதாலும் நிகழும். காதலியைக் கைப்பிடிக் கனாக்களிடம் ஒப்படைத்துவிடுகிறான். இனி, நான் ராம் பெரியசாமியை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்.

இனி முழுக் கவிதை…..
பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்
ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன …
காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…
மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …
ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …