ராம் பெரியசாமி கவிதைகள்
1
ஒரு குற்றவாளியின் கடிதம்
————————————————–
என் பெயர் பிழை
நான் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு
இரவுகளின் அணுக்களிலும் விழித்திருப்பவன்
நட்சத்திரங்களை பூமத்தியரேகையிலிருந்து பார்ப்பவன்
நான் மானவெட்கங்களை
எப்போது தொலைத்தேனென்பதை
இருளில் தேடியலைகிற
நிறமியில்லா தந்திரதஸ்யூ
அண்டத்தின் காக்கைகளாய்
உணவுப்பருக்கைகளைத் தேடியலைந்த வீதிகளில்
அதிகமாய் பிரேதங்களலைந்தும்
திரிந்துக்கொண்டிருப்பவை
அவர்கள் பிறந்தும் இறந்தும்
உடைந்தும் கொண்டிருப்பவர்கள்
சந்தர்பவாதங்களின் தூண்டில்களில்
தன்னுடல்களை கொக்கியிட்டு
மீன்களைத்தின்பதற்காக காத்திருப்பவர்கள்
கடவுளின் மந்திரக்கோலைக் களவாடிப் பொழுதுகளை செய்பவர்கள்
உடையாதப்பொருள்களாய்
திருடுபவன் நான்
ஆடைகளைத்திருடியதில்லை
அதுவொரு மனிதமலயீரம்
புத்தனைத்திருடி அவனுக்கு
துறவறமளித்தேன்
அவனெனக்கு ஞானமளித்தான்
நான் போதிமரத்தை பரிசளித்தேன்
நீங்கள் பூமியின் ஆழ்துளையில் தேனையெடுப்பதற்கு துளையிட்டதுப்போல
காற்றைத்திருகி நீள் உருளையில்
அடைத்ததுப்போல
மரங்களைத்திருகி ஆவணங்கள்
செய்ததுப்போலத்தான்
நான் ஆபரணங்களைத்திருடி
சிலைகளுக்கு அணிவித்தேன்
போன்சாய் மரங்களின் சட்டத்தில்
நிறைய ஓட்டைகள்
கருப்பங்கியணிந்த கோமான்கள்
விலைப்போகும் சிவப்புநிறப்பகுதி
பச்சை மற்றும் நீல விளக்குகள்
எரிவதில்லை
எல்லா நாட்டின் விதைகளையும்
பறித்துச்சென்றுவிட்டார்கள்
சமாதிப்பழங்களையே
உணவாக எனக்குத்தருகிறார்கள்
நான் மருந்துகளைத்தேடியே
பழக்கப்பட்ட உடலானவன்
முற்றிலும் தீநுண்மிகளின் வாசனைகளால் நிறைந்தவன்
ஓசோன் இதயங்களில்
சூழ்ந்த ஓட்டைகளின்
செம்மழைத்திரவங்களை
பருகி உயிர்த்திருப்பவன்
மனிதங்காடிகள் திறக்கப்பட்டது
மூளையின் எடையில் நீரேற்றி
கனமாக்கி விற்பனை நடைப்பெற
துவங்கியது
அயல்நாட்டின் ரசங்களில்
முருகன் ஜான் ஆக்கப்பட்ட இரவுக்கணினியில் அக்பருக்கு
வேலையில்லை
அணுகுண்டுகளைப்பற்ற வைப்பதற்கு முன்
வரலாற்று பக்கங்களை வெடிக்க வைப்பதற்கு நான் தயாராகயிருக்கிறேன்
எனக்கான தண்டனையை உங்களிடம் குறைப்பதற்காக
மனுக்கள் எழுதப்போவதில்லை
நிர்ணயிக்கப்பட்ட நியாயங்களை
விற்பதற்கு முன் யாரேனும்
திருத்தப்பட்டக் கடவுளை உயிர்த்தெழச்செய்யுங்கள்
இறுதியாக அவரை தூக்கிலிட்டு
புதியதாய் ஓர் பூமி செய்து
நான் பழகவேண்டும்
2
புத்தகத்தோடு
உறங்கிப்போவதும்
எழுவதும் புதிதல்ல
நேற்று வாங்கிய புத்தகம்
என்றோ எழுதிய சொற்கள்
இன்றுதான் திறக்க முடிகிறது
புத்தகம் மரணிப்பதில்லை
முத்தமிடத்தெரியாதவனைப்போல
நடுப்பக்கத்தை திறக்கிறேன்
யாரோ சிவப்புநிற மையினால்
சில வாக்கியங்களை
கோடிட்டுக் காட்டிருக்கிறார்கள்
எனக்கு பொருந்தாது
எங்கள் வீட்டில் தோட்டங்களில்லை
மின்மினிப்பூச்சிகள் வருவதில்லை
தேவதைகள் வரம் தருவதில்லை
நத்தைக்கூட்டிற்குள்
நாங்கள் பயணித்ததில்லை
கூழாங்கற்களை தின்றதில்லை
வெண்ணிற நதிகளில் நீந்தியதில்லை
புத்தகத்தை இழுத்து சாத்திவிட்டேன்
நாடாக்களால் சங்கிலியிட்டேன்
இப்போது என்ன செய்வது
முதல் பக்கத்தை
நானெப்போது திறப்பது
வனாந்திரமென்றப் பக்கத்தில்
அம்முக்குட்டி மயிலிறகை வைத்துவிட்டாள்
இருவரும் காத்துக்கொண்டிருக்கிறோம்
ஒரு குட்டி மயிலிறகுக்காக
3
கழைக் கூத்தாடி
——————————-
இரவு நதிமுழுவதும் விண்மீன்கள்
நீந்தியிருக்கும் நேரம்
வானம் ரத்தவாடையின்நிறத்தில் ஔிர்ந்திருக்கிறது
கடவுளின் சைகைக்காக பட்சிகள்
காத்திருப்பது ஒரு விழா
கலிலிவாசிகள் கைக்காடிகாரங்களை
முடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நேரங்களை மதிப்பவர்கள்
மதியவெயிலில் தூங்கிக்கொண்டவனின் கிழக்கு
ஆடைகள் களவாடப்பட்டிருக்கிறது
போர் மூள்வதற்கான ஆயத்தம்
அழகிய வெண்கல நீருற்றில்
நீர்ச்சக்கரங்களை சுழற்றியப் பெண்களுக்கு மேலாடையிருந்தது
நகரங்களை வெறுத்துப்போனவர்கள்
தேவாலயங்களை கற்களினால்
எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்
சிலுவைப்போர்களுக்காக உட்படுத்தப்பட்டவர்கள்
கோதுமை ஆலிவ் ரொட்டித்துண்டுகள் தீர்ந்துவிட்டன
அங்கியணிந்த துறவிகளின்
புனிதப்பயணத்தில் பசி தலைமை
தாங்க ஆரம்பித்தது
மடாதிபதிகளின் மடங்களில்
வசூல் வேட்டைகள் கொழுத்திருக்கின்றன
அரசனும் மனிதனைப்போலவே
குடித்து தின்று பாதியில் உறங்கிவிட்டான்
அவனுக்கு அணியப்பட்டப்பாத்திரத்தின்
அத்தனை ஒத்திகைகளோடும்
முடிவுப்பெற்றது நாடகம்
ஊர் ரெண்டு பட்டபிறகும்
நடுநிசியில் முன்னிரவு உணவிற்காக கையேந்திக்கொண்டிருக்கிறான்
கழைக் கூத்தாடியொருவன்