Ram periyasami's Poems ராம் பெரியசாமி கவிதைகள்

ராம் பெரியசாமி கவிதைகள்



தீராச் சொற்கள்
——————–
ஒரு மெழுகுவர்த்தியைக்
கையிலேற்றி எழுதிக்
கொண்டிருக்கிறேன்

மழைக்காடுகளின் குறீயீட்டுப்
பறவையொன்றின்
உதிர்ந்தச் சிறகிலிருந்து
புறப்படுகிறது ஒரு புல்லாங்குழலின் நீண்ட ஓசை ..

எல்லாக் கூழாங்கற்களிலும்
வரையப்பட்டிருக்கும் வானத்தில்
உனதன்பின் கீற்றொளியை
நேசமாய் தடவிக்கொண்டிருக்கிறது
வெண்ணிற நதி …

மேகங்கள் வகிடெடுத்த பூமி
என் வெள்ளைத்தாள்களின்
வெற்றிட நிலங்களை
உன் சொற்கள் உழுதுக்கொண்டிருக்கின்றன
எனக்காக நின் விழிவலசை கவிதையாய் …

கடவுள் மனிதநாத்திகம்
பேசிக்கொண்டிருக்கையில்
உன் கன்னத்தில் முத்தமிடுகிறது
சோமாலியத்தின் கடைசிக் குழந்தை …

சரிபாதியாய் நீ கடித்து வைத்த
ஆப்பிளிலிருந்து பிரபஞ்சத்தின்
கோள வடிவத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறான்
அட்லஸ் …

யார் யாரோ எழுதிக்கொண்டிருக்கும்
செங்காட்டில் தீராச்சொற்களோடு
மனதின் குரலாய் எழுதிவைத்த
சொற்கள் யாவும் தானியங்களாய்
தீராப் பிரியங்களோடு
ஒரு தேசாந்திரியின் தோள்களில்
சாய்ந்துக் கொள்கின்றன

மூன்றாம் பிறையோடு முடிந்துவிடுவதல்ல
அத்தியாயம் …
ஆழிக்கரையில் இருகால்
தடங்களை ஐந்தாம் திணைகளாக வரைந்துவிட்டுச்செல்கிறது
வான்நீலம் பாடிய செங்காட்டுக்குருவி …

உறங்கிப்போயிருந்த கண்ணம்மாவை அவன் எழுப்புகிறான்
இரவில் ஒரு அதிகாலை
புலர்ந்து இசைக்கிறது
யானும் நீயும் எவ்வழியறிதும்
அன்புடையாய் மொழிகிறது
பேரன்பின் நம் தீராச் சொற்கள்

கவிதை – 2
பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்
ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கிறது …

காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…

மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …

ஒரு கைப்பிடிக்கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …

 

கவிதை – 3
மௌனத்திரி பற்ற
வைக்கப்பட்ட இருள்
எழுதப்படாத தாளொன்று
காற்றில் அசைந்தெழுந்து
இன்மையை கவ்வுகிறது

ஒரு மெழுகுவர்த்தியின் உயரம்
உன் கோபம்

மெல்லுருகி கரையும் வரை
நான் நிரயமாய் காத்து
தீர்த்திருத்தல் வேண்டும்

ஆகலின் நின் மொழிவல்
நின் நெஞ்சினில் ஈரமாய்
என் பெருங்காட்டுக்காதல்
ஓம்புமதிவாய் ஏந்தல் இனிதாகுக

Ram periyasami's Poems ராம் பெரியசாமி கவிதைகள்

ராம் பெரியசாமி கவிதைகள்



கவிதை – 1
கழைக் கூத்தாடி
——————————-
இரவு நதிமுழுவதும் விண்மீன்கள்
நீந்தியிருக்கும் நேரம்
வானம் ரத்தவாடையின்நிறத்தில் ஔிர்ந்திருக்கிறது
கடவுளின் சைகைக்காக பட்சிகள்
காத்திருப்பது ஒரு விழா

கலிலிவாசிகள் கைக்காடிகாரங்களை
முடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நேரங்களை மதிப்பவர்கள்

மதியவெயிலில் தூங்கிக்கொண்டவனின் கிழக்கு
ஆடைகள் களவாடப்பட்டிருக்கிறது
போர் மூள்வதற்கான ஆயத்தம்

அழகிய வெண்கல நீருற்றில்
நீர்ச்சக்கரங்களை சுழற்றியப் பெண்களுக்கு மேலாடையிருந்தது

நகரங்களை வெறுத்துப்போனவர்கள்
தேவாலயங்களை கற்களினால்
எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்
சிலுவைப்போர்களுக்காக உட்படுத்தப்பட்டவர்கள்

கோதுமை ஆலிவ் ரொட்டித்துண்டுகள் தீர்ந்துவிட்டன
அங்கியணிந்த துறவிகளின்
புனிதப்பயணத்தில் பசி தலைமை
தாங்க ஆரம்பித்தது

மடாதிபதிகளின் மடங்களில்
வசூல் வேட்டைகள் கொழுத்திருக்கின்றன

அரசனும் மனிதனைப்போலவே
குடித்து தின்று பாதியில் உறங்கிவிட்டான்

அவனுக்கு அணியப்பட்டப் பாத்திரத்தின்
அத்தனை ஒத்திகைகளோடும்
முடிவுப்பெற்றது நாடகம்

ஊர் ரெண்டு பட்டபிறகும்
நடுநிசியில் முன்னிரவு உணவிற்காக கையேந்திக்கொண்டிருக்கிறான்
கழைக் கூத்தாடியொருவன்

கவிதை – 2
ஒரு குற்றவாளியின் கடிதம்
————————————————–
என் பெயர் பிழை
நான் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு
இரவுகளின் அணுக்களிலும் விழித்திருப்பவன்
நட்சத்திரங்களை பூமத்தியரேகையிலிருந்து பார்ப்பவன்
நான் மானவெட்கங்களை
எப்போது தொலைத்தேனென்பதை
இருளில் தேடியலைகிற
நிறமியில்லா தந்திரதஸ்யூ

அண்டத்தின் காக்கைகளாய்
உணவுப்பருக்கைகளைத் தேடியலைந்த வீதிகளில்
அதிகமாய் பிரேதங்கலைந்தும்
திரிந்துக்கொண்டிருப்பவை
அவர்கள் பிறந்தும் இறந்தும்
உடைந்தும் கொண்டிருப்பவர்கள்
சந்தர்பவாதங்களின் தூண்டில்களில்
தன்னுடல்களை கொக்கியிட்டு
மீன்களைத்தின்பதற்காக காத்திருப்பவர்கள்
கடவுளின் மந்திரக்கோலைக் களவாடிப் பொழுதுகளை செய்பவர்கள்

உடையாதப்பொருள்களாய்
திருடுபவன் நான்
ஆடைகளைத்திருடியதில்லை
அதுவொரு மனிதமலயீரம்
புத்தனைத்திருடி அவனுக்கு
துறவறமளித்தேன்
அவனெனக்கு ஞானமளித்தான்
நான் போதிமரத்தை பரிசளித்தேன்

நீங்கள் பூமியின் ஆழ்துளையில் தேனையெடுப்பதற்கு துளையிட்டதுப்போல
காற்றைத்திருகி நீள் உருளையில்
அடைத்ததுப்போல
மரங்களைத்திருகி ஆவணங்கள்
செய்ததுப்போலத்தான்
நான் ஆபரணங்களைத்திருடி
சிலைகளுக்கு அணிவித்தேன்

போன்சாய் மரங்களின் சட்டத்தில்
நிறைய ஓட்டைகள்
கருப்பங்கியணிந்த கோமான்கள்
விலைப்போகும் சிவப்புநிறப்பகுதி
பச்சை மற்றும் நீல விளக்குகள்
எரிவதில்லை
எல்லா நாட்டின் விதைகளையும்
பறித்துச்சென்றுவிட்டார்கள்
சமாதிப்பழங்களையே
உணவாக எனக்குத்தருகிறார்கள்

நான் மருந்துகளைத்தேடியே
பழக்கப்பட்ட உடலானவன்
முற்றிலும் தீநுண்மிகளின் வாசனைகளால் நிறைந்தவன்
ஓசோன் இதயங்களில்
சூழ்ந்த ஓட்டைகளின்
செம்மழைத்திரவங்களை
பருகி உயிர்த்திருப்பவன்

மனிதங்காடிகள் திறக்கப்பட்டது
மூளையின் எடையில் நீரேற்றி
கனமாக்கி விற்பனை நடைப்பெற
துவங்கியது
அயல்நாட்டின் ரசங்களில்
முருகன் ஜான் ஆக்கப்பட்ட இரவுக்கணினியில் அக்பருக்கு
வேலையில்லை
அணுகுண்டுகளைப்பற்ற வைப்பதற்கு முன்
வரலாற்று பக்கங்களை வெடிக்க வைப்பதற்கு நான் தயாராகயிருக்கிறேன்

எனக்கான தண்டனையை உங்களிடம் குறைப்பதற்காக
மனுக்கள் எழுதப்போவதில்லை
நிர்ணயிக்கப்பட்ட நியாயங்களை
விற்பதற்கு முன் யாரேனும்
திருத்தப்பட்டக் கடவுளை உயிர்த்தெழச்செய்யுங்கள்
இறுதியாக அவரை தூக்கிலிட்டு
புதியதாய் ஓர் பூமி செய்து
நான் பழகவேண்டும்

கவிதை – 3
பெயரிடப்படாதப் புத்தகம்
—————————————-
ஒரு மரத்தின் கிளை முழுக்க புத்தகங்களாய் பூத்திருக்கிறது
மௌனத்தின் சாம்பல்களிலிருந்து
அறியப்பட்ட ஆன்மாவொன்றின்
அகமிய ரகசியங்கள் யாவும்
புத்தகங்களுக்குள் சொற்களாய்
நிரம்பியிருந்தன ….
பறிக்கப்படாத
ஒரு புத்தகத்தின் நிழல்
கூம்புக்குடுவைக்குள் அடைக்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சியாய் முடங்கியிருக்கிறது ….
சபிக்கப்பட்டப் பாவங்களை கழுவுதற்கு முட்களையுடைத்து
மெய்யுணர்ப்பூக்களைப்
பறித்திருக்கவேண்டும்
இருளுக்கு முன்னும் பின்னும்
வெளிச்சமென்பதை
இருள் அறியும் …
பெருங்கடலுக்குள் அலைகளாய்
நிரவிக்கிடக்கிறப் பக்கங்களை
மழைத்துளிகள் எழுதித்தீர்க்கின்றன ….
பிரபஞ்சத்தின் ஆடையுரித்த
திறவுக்கோலினை கைப்பற்றுதலிருந்து
ஒரு புத்தகம் முழுதாய் திறக்கப்பட்டதாய் உணர்கிறேன்

ராம் பெரியசாமி கவிதைகள்

ராம் பெரியசாமி கவிதைகள்

கவிதை 1 எழுதுபவனின் கோடாரிகள் --------------------------------------- எவையெல்லாம் நேசிக்கத் தவறியிருந்தோமென்பதை இரவின் பெருவெளியைக்காணாத சிறைகளில் வாழ்பவனின் அமைதிக்குள் எரிகிற நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகளில் வந்தமரும் வானம் அதனின் சாயல் நம் வாழ்வு தன் வாழ்வின் இருப்புகளிலிருந்து தன் சிறகுகளை உடைத்து…
ராம் பெரியசாமி கவிதைகள்

ராம் பெரியசாமி கவிதைகள்

கவிதை 1 மறக்காமல் இறந்து விடுங்கள் எப்போதும் போலே அழுவதற்கு அவர்களிருப்பார்கள் மறக்காமல் உயிர்தெழுங்கள் எப்போதும் போலே ஆர்ப்பரிக்க அவர்களிருப்பார்கள் இது பிறவியின் கூடு ஒரு உள்ளங்கையை மூடிக்கொண்டால் போதும் திறக்கும் வரை திறவுகோலை தேடிக்கொண்டிருப்பார்கள் நேற்றைய சமாதிக்கு பெய்த மழைக்கு…
ராம் பெரியசாமி கவிதைகள்

ராம் பெரியசாமி கவிதைகள்

பூவை "ப்பூ" வென ஊதமுடிவதெல்லாம் உன்னால் தான் நிகழ்கிறது கண்ணம்மா ... பறிப்பதற்கு முன்னிருந்த அதே காதலோடு பறித்தப் பின்னும் அதேயன்போடு காதலிக்கத் தொடங்குகிறாய் .. நீ ஊதிய காற்றில் நிறைய முத்தங்கள் பூவின் மேல் விழுகிறது வெட்கித் தொலையட்டும் மண்ணையுங்…