வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்




காற்றின் சிறகில் அமர்ந்தவன்
***********************************
கனவுகள் இடையறாது தின்கின்றன
அவன் மெளனமாய் இருக்கிறான்
தீராத மெளனம் அமைதியில்லை
பாவமன்னிப்புக் கேட்கப் போகாதீர்கள்
சாத்தான்கள்
உங்கள் உடலைத் தின்னும்
கையாலாகாத கர்த்தர்
வேடிக்கை பார்ப்பார்
கடும் விஷமாய் வலி ஏறுகிறது
கண்ணீர் திரளுகிறது
வெடிபடும் வழி தான் புலப்படவில்லை.
மெளனத்துள் கரைய விரும்பினான்
கொந்தளிப்பு சூழலுள் பீறிட்டது
ஏகாந்தம் உடைபட
எதிர் வீட்டு நாயின் குரைப்பொலி
தூர ஒலிபெருக்கியின்
மந்திர உச்சரிப்பொலி
மழை வராமல்
ஒரே காற்றின் இரைச்சல்
மன வேதனை
உடல் நீயின்றி வேக
உயிரின் கொதியாட்டம்
விழிகளில் நீராய் வழிகிறது
நாடோடியாய்த் திரிவது
பறவையாய்ப் பாவனை கொள்வது
விடுபடுவது கனவுகளிலிருந்து எக்காலம்?

எரி நட்சத்திரத்தின் கதை
******************************
இறந்த பிறகு வாழ்க்கை தேவையில்லை
இறப்பிற்கு முன் தான் வாழ வேண்டும்
மரணத்திற்குப் பின் நடப்பதை அறிந்தவரில்லை
எல்லா நட்சத்திரங்களையும் பார்க்கிறேன்
எதுவும் என்னைப் பார்க்கவில்லை
இப்படித் தான் போகுது என் வாழ்க்கை
சொற்களெல்லாம்
இசையை நோக்கிப் போகின்றன
இசை கனவுகளாக குமிழியிடுகின்றன
கனவுக் குமிழிகளில்
நான் படகோட்டுகிறேன்
தலைவர்களைக் கண்டோம்
தொண்டர்களாய்ச் சீரழிந்தோம்
நிம்மதியான வாழ்வைப் பெறவில்லை
நிம்மதியில்லாமல் பிறந்தேன்
நிம்மதியில்லாமல் வாழ்கிறேன்
நிம்மதியில்லாமல் இறப்பேன்
கடந்தவை கனக்கின்றன
நடப்பவை உறுத்துகின்றன
வருபவை புகைகின்றன
காக்கா சத்தம் கேட்கலை
குருவி சத்தம் கேட்கலை
எந்திரங்களின் சத்தம் தான் கேட்கிறது.

– வசந்ததீபன்