Sivappu Verum Niramalla Poem by Rakkachi ராக்கச்சியின் சிவப்பு வெறும் நிறம் அல்ல கவிதை

சிவப்பு வெறும் நிறம் அல்ல கவிதை – ராக்கச்சி




நான் வெளியே செல்லும் போதெல்லாம்
ஒருவித பயத்துடனே செல்கிறேன்
பேருந்தில் பயணித்தால்
நெருக்கமாக நிற்பவரைப் பார்த்து பயம் வருகிறது

பயம் இல்லாமல்
ஆட்டோவில் பயணிக்கமுடியவில்லை
விடுதி அறைகளில் தங்கும்போதெல்லாம்
பயம் பக்கத்தில் வந்து படுத்துக் கொள்கிறது

சாலையில் தனியாக நடந்தால்
பயம் கூடவே வருகிறது
எதிரே ஒருவர் மனிதர்
என்றாலும் பயம் அதிகரிக்கிறது

காவல் நிலையம் எதிர்ப்பட்டால்
விரைவாகக் கடந்துவிடுகிறேன்
என் நிழலே என்னைப்
பயமுறுத்திய தருணங்கள் உண்டு

எனக்கே என்னை நினைத்து
வெட்கமாக இருக்கிறது
நான் ஏன் இவ்வளவு பயப்படவேண்டும்?
பிரதமராலேயே பயமின்றி
வெளியே வரமுடியவில்லையாம்

பயம்
உயரமான மலையின் விளிம்பில்
உலகத்தை நிறுத்தி வைத்து வியாபாரம் பேசுகிறது
எல்லோரும் மற்றவர்
தனக்குப் பயப்படவே விரும்புகிறார்கள்

பெற்றோர் குழந்தைகளை
ஒருவித பயத்திலேயே வளர்க்கிறார்கள்
பள்ளிகள் குழந்தைகளைப்
பயப்படப் பழக்குகிறார்கள்

கணவனோ மனைவியோ
மற்றவர் தனக்குப் பயப்பட விழைகிறார்கள்
காவல்நிலையங்கள்
மக்களைப் பயமுறுத்தியதுதான் அதிகம்

ஒரு சாதி
இன்னொரு சாதியை
பயமுறுத்துவதில்தான் வாழ்ந்துகொண்டிகிறது

ஒரு மதம்
இன்னொரு மதத்தை
பயமுறுத்தத்தான் இவ்வளவும்

மன்னர்கள் மக்களைப்
பயமுறுத்தித்தான்
வரி வசூலித்திருக்கிறார்கள்

யாருமற்ற கோயிலுக்குள்
பக்தன் பயமில்லாமல் போய்வரமுடியாது
அரசியலில் திருடர்கள்
நல்லவர்களைப் பயப்படச் செய்கிறார்கள்

ஒரு ரவுடி
ரவுண்ட் கட்டுவதற்கும்
ஒரு நாடு
போர்ப் பயிற்சி செய்வதற்கும்
என்ன வித்தியாசம்

மேலே இருப்பவர்கள்
கீழே இருப்பவர்களை
எப்போதும் பயத்தில் வைத்திருக்கவே
முயற்சிக்கிறார்கள்

எப்போதும் உலகத்தை பயத்தில் வைத்திருக்க
ஏதாவதொரு நாடு
முயன்றே வந்திருக்கிறது

பயம்
வேட்டையை எளிதாக்குகிறது
ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு
உலகைப் பயமுறுத்தவே

ஈராக்கில் உண்டாக்கிய பயம்
அரபு உலகில் வேட்டையை எளிதாக்கியது
பசியைப் போக்குவதை விட
பயத்தை உருவாக்க
உலகம் அதிகம் செலவிடுகிறது

மனிதனைத் தவிர
எல்லா விலங்கினமும்
உணவுக்கு மட்டுந்தான்
ஒன்று மற்றொன்றைக் கொல்கிறது

மனிதனைத் தவிர
எந்த உயிரினமும்
இருட்டுக்குப் பயப்படுவதில்லை
என்பது என் கருத்து

இருட்டாவது இருக்கிறது
இல்லாதவொன்றுக்கும் பயப்படுகிறான்
இயற்கை
வேட்டையாடுவதற்கு ஒரு ஆயுதம் கொடுத்தால்
தற்காப்புக்கு பல தந்திருக்கிறது

முள்ளெலிக்கு
பற்களைவிட
முற்களே அதிகம்

புற்களைத் திண்ணும் மாட்டுக்கு
கொம்பு எதற்கு ?
ஆனால்
தாக்குண்டபிறகுதான் எல்லா உயிரினமும்
தற்காப்பைப் பற்றியே யோசிக்கிறது

ஒரு மேதினத்தில் பங்கேற்றுவிட்டு
படுக்கையில் சாய்ந்தேன்
என் பயம் எல்லாம்
கோபமாய்க் மாறிக்கொண்டிருந்தது

இதுவரை உறைந்து பொயிருந்த இரத்தம்
கொதிப்பதை என் உடல் முழுவதும்
உணரமுடிந்தது
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன்
என் மனைவி கேட்டாள்
கண்கள் ஏன் சிவப்பாக இருக்கிறது என்று

காலையில்
என் மகள்களும்
அதையே கேட்டார்கள்
இன்றுவரை எல்லோரும் கேட்கிறார்கள்

அடக்குமுறையை எதிர்த்து
பயப்படாமல் எதிர்க்க முயற்சியுங்கள்
உங்கள் கண்கள் சிவப்பதை
உங்களாலும் தவிர்க்க முடியாது