சசிகலா திருமால் கவிதை

சசிகலா திருமால் கவிதை




காயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்…

ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த
நம் உறவின் நடுவே
அர்த்தமற்ற புரிதல்களால்
மனதில் உண்டான விரிசலினூடே…
புதிதாய் முளைத்தெழுகிறது
பிரிவின் கோடொன்று…

மௌனம் எனும் கோடரி கொண்டு
மனதினைப் பிளக்கின்றாய்
நிராகரிப்பு எனும் ஆயுதமேந்தி
நிற்கும் உன்னிடம்
என் இதயத்தின் வலியுணர்த்த இயலாமல்
வெற்றுச் சடலமென
வீழ்ந்து கிடக்கிறேன் நான்…

உயிர் கொண்ட உறவுகள் ஓர்நாள்
நம்மை உயிரோடு கொல்லும் என்பதை
உணர்த்திச் செல்கிறாய்..
நீ கொடுத்த காதலை ஏற்றுக் கொண்டவள்
நீ கொடுக்கும் காயங்களையும்
ஏற்கத் துணிகின்றேன் இன்று…

என்றேனும் என்நிலை உணர்வாய்
என்ற நம்பிக்கையில்…
காத்திருக்கிறேன் நான்..
உன் மனகசப்புகள் தீரும் வரை
கண்ணீரோடும் கனத்த மனதோடும்…

சசிகலா திருமால்
கும்பகோணம்.

பண்டிகை சிறுகதை – நிரஞ்சனன்

பண்டிகை சிறுகதை – நிரஞ்சனன்




எக்கோ, அண்ணே இருக்காகளா?

என்ன ருக்கு…. என்கிட்ட சொல்லு…..

சொல்ல என்ன, கைமாத்து வேணும்…

என்னடி….. ?

அவிக தங்கச்சி, என் கொழுந்தியா ஊர்ல திருவிழா, .., சொல்லிட்டு அழைச்சிட்டு போச்சு…. சும்மா போக முடியுமா சொல்லு….. அதான்…..

ஏண்டி…. கடன் வாங்கி செலவு பண்ணனும் என்ன இருக்கு, போகாம இருக்க வேண்டியது தான…..

ஏக்கோ…. இஷ்டம் ன கொடு….. உன்கிட்ட அறிவுரை கேட்கல……

பாருடி கோவத்தை…. என்னங்க…..? ருக்கு வந்து இருக்கா……

பணம் வாங்கிக் கொண்டு, இல்லம் வந்தவள், அவனவளிடம் இந்தாங்க, மருமக பிள்ளைக்கும் கொழுந்தியாளுக்கும் தம்பிக்கும் புது துணி வாங்கிட்டு வாங்க, தின்பண்டம் வாங்கிட்டு வாங்க… ஒரு எட்டு போய்ட்டு வந்துடுவோம்….

ஏதுடி பணம்….. கை மாத்து வாங்கினியா…. இது தேவையா?

இங்க பாருங்க, ஒன்னும் ஒன்னும் இது தேவையா என பார்த்தோம், எல்லாத்தையும் தட்டிவிடத் தான் பார்ப்போம்….. ரெண்டு ஞாயிறு வேலைக்கு போன போச்சு ….

எங்க அம்மா அடுத்து, அவள நீ தான் கண்ணும் கருத்துமா பார்க்க…..

அவ என்னைய எப்படி பார்க்க தெரியல, அவ என் பொண்ணுங்க….

எப்படி ருக்குக்கு சொந்தம் விட்டு போக மனது இல்லையோ, அதே போல அங்க இவளுக்கு இருந்த வரவேற்பு கண்டு…. வாங்கிய கடன்….. என்ன…. இதுக்கு மேல என்ன இருக்கு என்பது போல இருந்தது……

இவர் கூட ஒரு சுத்து சுத்திட்டு வா ணே…. சாப்பாடு தயார் பண்ணுறேன்….. நானும் வரேண்டி உன்கூட…அவுக போகட்டும்….

மாப்பிளை மச்சான், தெருள போக, இது என் மச்சான் பொங்கலுக்கு வந்து இருக்காக என உரிமையோடு ஊரார்க்கு அறிமுக படுத்த, அவர் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி….

அப்படியே கோவில் போக, பூசாரி கிட்ட சொல்லி ஊர்ல இருந்து வந்து இருக்காக, மரியாதை கொடுங்க சொல்ல, சாமி மேல இருந்த அங்கவஸ்த்ரம் எடுத்த இவரு தலைல கட்ட, மாப்பிளைக்கும் கட்டுங்க என சொல்லி இருவரும், தலைப்பகையோடு வீடு வந்தனர்…..

பண்டிகை நாள், ஊர் திருவிழா….. கோழி அடிச்சி குழம்பு தயாரா இருக்க…. வந்தவுடன் சாப்பிட சொல்லி பரிமாற அங்கே அன்பு வெள்ளம் சொல்லுறது விட அன்பு ஆழிபேரலை தான் சொல்லணும்…. திக்குமுக்காடி போய் விட்டார் ருக்கு புருசன்…..

இரவு இருந்து, ஆட்டம் பாட்டம் பாத்து, சப்புரம் பார்த்து தூங்க வெகு நேரம்….
காலைல எழுந்த மச்சான் மாப்பிளை முன்னாடி இருவர் மனைவிகள், சேலயை ஏத்தி சொருகி, கையை பின்னாடி கட்டி வளைந்து நின்றனர்….

என்னடி என்பதற்குள், பளிச்…..
மஞ்ச தண்ணி உற்றி விட்டு அவர்கள் ஓட…. இவர்கள் தொறத்த, பெற்ற பிள்ளைகள் அம்மாவுக்கு சில நேரம் அப்பாக்கு சில நேரம் வழி காட்ட…. ஒரே சிரிப்பலை மட்டுமே…. மஞ்சத் தண்ணி திருவிழா முடிச்சி….. ஊர் கிளம்ப, அண்ணி நாளை போங்க கொடி இரங்கிடும் சொல்ல…..

அங்க அங்காளம்மன் கோவில் திருவிழா கொடி ஏத்துறாக, நீயும் தம்பியும் மருமகளும் வந்துடுங்க சொல்லிட்டு நகர ஆரம்பித்தாள், ருக்கு.

பண்டிகைகள் சொந்தங்கள் சேரவே தவிற வீண் செலவுகள் இல்லை என உணர்த்தினாள், ருக்கு.

– நிரஞ்சனன்

வெ.நரேஷ் கவிதைகள்

வெ.நரேஷ் கவிதைகள்




1) முந்தான முடிச்சி ஒன்னு
மும்முரமா போகுது
முட்டாக்கு போட்டுக்கிட்டு
முன்னும் பின்னும் பாக்குது
நட்டநடு ராத்திரியில்
நாலாபுரம் தேடுது

அங்கம் ருசி கேட்டுத்தான
அங்கும் இங்கும் அலையுது
கற்பை மட்டும் களவாடி
கணாமப் போனது
பாவி புள்ள பாவி புள்ள
நீ
பொறந்ததுதான் சாபமா?
கற்பை மட்டும் களவாடி
அவன்
போனதுதான் நியாயமா?
**********

2) என்னை மிகவும் பிடிக்கும் என்றாய்
நான் வரும் பொழுது ரசிப்போம் என்றாய்
என் சத்தம் கேட்டு மகிழ்வேன் என்றாய்
என்னைப் பற்றிக் கவிதையாய் வர்ணித்தாய்
ஆனால் ஏனோ நான் உன்னைத் தேடி வந்தவுடன்
எதிரியாகவே பார்க்கிறாய்
இப்படிக்கு அடை மழை
*********

3) நெருங்கிய உறவாக இருந்தாலும்
தூரத்து உறவாக இருந்தாலும்
வாழ்த்து மடல் போல்
முடிகிறது
ஆழ்ந்த இரங்கலும் கூட !

– வெ. நரேஷ்

அம்மாவின் பாசம் கவிதை – பேசும் பிரபாகரன்

அம்மாவின் பாசம் கவிதை – பேசும் பிரபாகரன்




இருக்கும் போது புரியாதது
இல்லாத போது புரிய வருவது
அம்மாவின் பாசம்

உன்னை அடகு வைத்து என்னைப் பெற்றாய்
ஆனால் நான்
உன்னை அடகு வைத்து ஒரு பெண்ணை உற்றேன்
அடகு போனது உன் பாசம் மட்டுமல்ல
என் சுவாசமும் தான்

பேசிக்கொள்ளாத இந்தப் பெண்களால்
ஊசிபோயின உறவும்
என் வாழ்க்கையும்

Mother's Affection Poem - Pesum Prabakaran அம்மாவின் பாசம் கவிதை - பேசும் பிரபாகரன்

நீர் அடித்து நீர் விலகியிருக்கிறது
பெண்மை பெண்மையையே
விலகியிருக்கிறது
ஒத்த துருவங்கள்
ஒன்றை ஒன்று விலக்கும் என்பது
காந்தத்தில் மட்டுமல்ல
என் கதையிலும் தான்

போட்டதைத் தின்பதும்
போட்டுத் தின்பதும்
என் போதாத காலமா?
இல்லை இனிப் போராடும் நேரமா ?
கார்பன்டை ஆக்ஸைடு சுவாசித்து வாழவேண்டுமென்று
சில ஆண்களுக்கு விதியிருக்கிறது
இது எல்லா வீதியிலும் இருக்கிறது

ஒருவரின் வெற்றிடம் மற்றொருவருக்குக் கொள்ளிடம்
ஒருவரின் அழுகை மற்றொருவரின் சிரிப்பு
எதிரி வெளியே இருந்தால் போராடலாம்
உள்ளே இருப்பதால் நான் வாதாடுகின்றேன்

என்னைச் சாப்பிட வைத்து அழகு பார்த்தாய்
இப்போது நான் சாப்பிடும் போது அழுது பார்க்கிறாய்
என்னைக் கூப்பிட வைத்துப் அழகு கேட்பாய்
இப்போது கூப்பாடு போட்டு அழுது கேட்கிறாய்
தனித் தனி உணவு
தன்மை இல்லாத உணர்வு
நாசமானது என் மனம்
இப்போது நான் நடமாடும் பிணம்

மரங்கள் தழைப்பதற்கு
அதன் கிளைகள் வேண்டுமானால் வெட்டப்படலாம்
ஆனால் வேர்கள் வெட்டப்பட வேண்டும்
என்ற தீர்ப்பு வேதனைக் கூறியது
அன்பைப் புரிந்து கொள்ளாத பெண்ணால்
அழியுமொரு குடும்பம்
ஒழிக்க முடியாதது
உண்மையில்
அம்மா என்னும் அற்புத உறவு.

– பேசும் பிரபாகரன்

சக்திராணியின் கவிதைகள்

சக்திராணியின் கவிதைகள்




‘மனிதம்
***********
எனக்கான உறவொன்றும்
என் நலன் விரும்பவில்லை…
நரைத்த முடியில்…நரைக்காத தெம்பில் நானும் இங்கு வாழுறேன்…

ஆசையா பேச…மனசெல்லாம்
வார்த்தைகள் அடங்கிக் கிடந்தாலும்…
என் மனம் கேட்க ஒருத்தருக்கும்…
மனசில்லை…

போற வழியெல்லாம்…போக்கிடமில்லாம
சுத்துறேன்…போற போக்கில்
என் கதையெல்லாம் உங்கிட்ட நானும்
பொலம்புறேன்…

மடி மீது தூக்கியணைக்க…
உறவு இங்க இல்ல…உறவில்லா
உறவா…உன் அன்பை நானும் நாடுறேன்…

என் மொழி புரிய…உனக்கிங்கே…
உணர்விருப்பதாலே…உன் விரல் இங்கே
என் கன்னம் உரசி கிடக்குதே…

உணர்வால் உறவான நாம்…இனி
உயிராய் ஓர் உறவாய் கொஞ்சம்
அன்பைச் சொல்லி வாழ்ந்து தான் பார்ப்போமே…
மனுசனுக்கும்…விலங்குக்கும்
அன்பு ஒன்று தானு உணர்த்துவோமே…

‘இருக்கை’
************
உனக்காகக் காத்திருக்கும்…
ஒவ்வொரு நொடியும்…
அழகாக இருக்கின்றன…

தூர வருகிறாய் நீ…
துவண்டு நிற்கும் என்னை…
தூக்கி விடுவதற்காய்…

விழி தேடிய காட்சிகள்…
கண் முன்னே…பிம்பங்களாகத்
தெரிகின்றன…என்னை நானே…
சோதித்துக் கொள்கிறேன்…
நடப்பது நிஜமா…என்றே…

மூச்சின் வேகம்…புதுப் புயலாய்
என்னுள் அடிக்க…குளிர்ந்த
பனியில் என் கைவிரல்…நடுங்குகின்றன…

பேசுவதற்காகவே சேர்த்து வைத்த
சொற்கள்…தொண்டைக் குழிக்குள்…
விழுங்கப்படுகின்றன…என்னையும்
அறியாமல்…

தயங்கிய…நடையும்…
தயங்காமல் காட்டிய அன்பும்…
பேருந்தில் இருக்கை தந்தே…
எழுந்த போது முடிவடைந்தது…

– சக்திராணி

சரவிபி ரோசிசந்திராவின் கவிதைகள்

சரவிபி ரோசிசந்திராவின் கவிதைகள்




இன்னும் தேடுகிறேன்
**************************
லட்சம் முறை எடுத்துப் பார்த்திருப்பேன்
நீயும் நானும் சேர்ந்து எடுத்த
சில புகைப்படங்களை…
பசுமைமாறா நினைவலைகள்
ரம்மியமாய் சூழ்ந்தது
ராத்திரி வேளையில்….
நீ கொடுத்த எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருந்த
மனவறையை திறந்து பார்க்க சாவியைத் தேடினேன் இதயப்பெட்டியில்
வெகுநேரம் தேடிய பின் தான்
கிடைத்தது அந்த மாயச்சாவி…
காலம் கடந்து திறப்பதால்
சீக்கிரம் திறக்க இயலவில்லை
என்ன செய்ய மனம் தான் அடிக்கடி மாயமாகிப் போகிறது
கால இடைவெளியில்…
ஒவ்வொன்றாய்த் தேடிப்பிடித்துப் படித்தேன்
தேன் சொட்டச் சொட்ட எழுதிய காதல் கடிதங்கள்
ஒருநூறு கிலோ இருக்கும்…
அப்படியே கொஞ்சம் தூரம் துழாவிப் பார்த்தேன்
சாப்பிட்ட சாக்லேட் எச்சத்தை மிச்சம் வைத்திருக்கும் உறைகள் ஒருகிலோ இருக்கும்….
விசித்திரமாக இருக்கிறது தூக்கி எறிய வேண்டிய குப்பைகளைச் சேர்த்து வைத்திருக்கிறது
பேதை மனமென்று நகைத்தப்படியே நகர்ந்தது நனவிலி மனம்…
நான் தான் உன் கண்ணன் என்று
நாலாயிரம் முறை சொல்லி இருக்கிறாய் அலைபேசியில் ஒரு வருடமாய்…
தேடிக் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை என்று சோர்ந்து அமர்ந்து கொண்டது சோம்பேறி மனம்
இன்னும் கொஞ்சம் நேரத்தில் விடியல் பிறக்கப் போகிறது
அவனோ! தயாராக இருக்கிறான்
தயக்கமின்றி தாரமாக்க தங்கமங்கையை
நான் ஏனோ! இன்னும் தேடுகிறேன் அவன் கொடுத்த
நினைவுகளை
நிறுத்தமால் என் மனவறையில்….

மரணித்து விட்டேன்
***********************
உன் புகைப்படத்தை
ஓராயிரம் முறை
பார்த்து இருப்பேன்
ஏனோ! நீ இன்னும்
பார்க்கவில்லை
என் குறுஞ்செய்தியை…
காத்திருந்தால் காதல் அதிகரிக்கும் என்று
நானும் கூட,
சிலாய்த்துப் பேசியது உண்டு
என் தோழியின் காதலுக்கு
தூது போன நாட்களில்…
தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியுமென அப்போது தெரியாமல் போனது…
ஏனோ! நீ இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய்
இம்மியளவும் மாறாமல்
உன்னை நினைத்து உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் கோட்டானாய் நள்ளிரவில்…
நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா?
என நினைத்தால் நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது…
என்ன செய்ய நீயும்
கொள்கையின் வாரிசு தானே!
உன் கொள்கையை காதல்
களவாடுமென நினைத்தேன்
மாறாக, கொள்கை களவாடியது காதலை…
எல்லாவற்றிலும் நீ முழுமை காண விரும்புகிறாய்….
நான் உன்னை மட்டுமே காண விரும்பிறேன்
உணர்வுகள் சேர்த்து வைக்கும் உறவை என்று நானும் நம்பினேன்…
என் நம்பிக்கைக்கு பரிசளித்தது உறவல்ல பிரிவு
என் நினைவுகள் ஒருநொடி பேசியிருந்தாலும்
நீ அழைத்திருப்பாய்
உரிமையுடன்
இன்று என் பிறந்தநாள் நீ மறந்து விட்டாய்
நான் மரணித்து விட்டேன்…

உனக்குள் தேடு உன்னை
*****************************

காதல் உன்னைக் கட்டிக்கொள்ள
காமம் என்னை விட்டுச்செல்ல
அடங்க வைத்தது வயது
அடக்கம் செய்தது மனது
வெள்ளத்தில் ஓடும் உள்ளம்
பள்ளத்தில் நாடத் துள்ளும்
சிற்றின்ப மாயையில் நெஞ்சம்
சிலகாலம் மகிழ்வாய்த் துஞ்சும்
ஆசையின் வழியோ சிறிது
ஆக்கிரமிக்கும் அளவோ பெரிது
அறுசுவை உணவு ருசிக்கும்
அடிமையானால் அதுவுன்னைப் புசிக்கும்
மோனம் உள்ளே செல்ல
மோகம் வெளியே செல்லும்
இருக்கும் நாட்கள் குறையும்
இகவாழ்வு நாளும் கரையும்
தேடி அலையாதே என்னை
தேடு உனக்குள் உன்னை
பார்ப்பவை எல்லாம் அழகு
பார்வையை மாற்றிடப் பழகு
அறிவின் வடிவே உலகு
அன்பே இறையின் அலகு

– சரவிபி ரோசிசந்திரா

Maranam Vendi Kavithai By Sudha மரணம் வேண்டி கவிதை - சுதா

மரணம் வேண்டி கவிதை – சுதா

எழுதா வார்த்தை
ஒவ்வொன்றிலும் பிழைகள்..
சொல்லாத சொல்
ஒவ்வொன்றிலும் அர்த்தங்கள்…

சிந்தாத கண்ணீர்
துளிகள் ஒவ்வொன்றிலும்
மரணவலி…
இல்லாத உறவுகளில்
இருந்து கொல்லும்
அவமானங்கள்…

கேட்காத சொற்களில்
உணராத அன்பு…
படராத கொடியில்
படர்ந்து திரியும்
சிலந்திவலை…

புரியாத புதிராய்
ஏற்றுக்கொள்ளமுடியா
கடமைகள்…
வாழ்ந்த வாழ்வில்
வாழா நிமிடங்கள்…
சிரித்த பொழுதுகளில்
மகிழா நொடிகள்…

மழை வேண்டி பலர்
மழை வேண்டாம் என சிலர்…
என்னைப்போல் சிலர்
மரணம் வேண்டியும்…

Pothum endru solvathu Unavil Mattumalla Article By Karkavi போதும் என்று சொல்வது உணவில் மட்டுமல்ல - கார்கவி

போதும் என்று சொல்வது உணவில் மட்டுமல்ல – கார்கவி

வாழ்வில் எத்துணையோ இடங்களில் மனிதன் போதும், மனம் நிறைவாகி விட்டது என்றது ஒரு போதும் சொன்னதில்லை…

அப்படி ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் மனம் விரும்பி, வயிறு நிரம்பி அதற்கு மேல் உண்டால் வெடித்துவிட கூடுமோ என்ற சிறு அச்சத்திலும், பெரும் நிறைவிலும் கூறும் இடம் உணவாகத்தான் இருக்க கூடும் என்பது அனைவரும் அறிந்த விடயமே…

ஆனால் அது மட்டும் முடிவல்ல….

தம்பி தங்கைக்காக போதும் எனலாம்… அம்மாப்பா வின் அன்பை போதும் எனலாம்…

ஏதோ ஒரு கையேந்திபவனில் உனக்கு வரவிருக்கும் இட்டலியின் பெயரில் ஊர்ந்துவரும் பிச்சைகாரன் பெயர் உள்ளதென்றால் அங்கு போதும் எனலாம்…..

மற்றவனின் பணம் உன்னிடம் வந்தால் உனக்கானது இல்லை என்று போதும் எனலாம்…

அடுத்த குடம் ஊற்றினால் நிறைந்துவிடும் தொட்டியில் அளவாக ஊற்றிட போதும் எனலாம்….

அடுத்தநாள் வேண்டி அளவாக இரை தூவி விட்டு அடுத்த கோழிகளுக்கு வேண்டுமென அந்த இடத்தில் போதும் எனலாம்…..

அதீத கஸ்டத்தில் ரணத்தை மறைத்து சிரித்துகொண்டே போதுமென சொல்லிவிடலாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கடவுளிடம்…..

ஆயாவின் வெத்தலையில் வெந்துவிடாது இருக்க சுண்ணாம்பு போதும் எனலாம்….

சுற்றாத்தார் வத்தி வைப்பில் சுருக்கென கண்படுமே கண்டதெலாம் போதும் எனக்கும் காலம் உண்டு என போதும் எனலாம்…

இருபது வயதினில் வரும் கோவத்தினை போதும் எனலாம்….

கொஞ்சிடும் சேவலை கோழி முட்டையிடும் வரை போதும் எனலாம்…

எட்டாவது பிரசவத்திலும் பெண் என்றால் இதற்குமேல் வேண்டாம் என பெண்ணே போதும் எனலாம்….

போதும் என்பதற்கு உணவு மட்டும் அல்ல… உறவுகளையும் பல நேரங்களில் போதும் எனலாம்…

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து…

Ore Sontham Short Story By Hemalatha ஒரே சொந்தம் சிறுகதை - ஹேமலதா

ஒரே சொந்தம் சிறுகதை – ஹேமலதா




இரண்டு நாளாக வீட்டை சுத்தமா பெருக்கி துடைச்சு ஒருவழி ஆச்சு. அஞ்சாறு வருஷமாச்சி. பூட்டியே கிடந்துச்சு. அப்பப்ப இவக தூரத்து சொந்தங்க கோவில் திருவிழாவுக்கு அக்கம் பக்கம் ஊர்களுலேந்து வந்தா போனா தங்கிப்பாக.

நாட்டமேகார ஐயாகிட்டே தான் சாவி கிடக்கும். பெரிய்ய சொத்து பத்து எதுவும் பூட்டி கிடைக்கலே. பெரியவங்க வாழ்ந்து வந்த வீடு பூர்வீகம்.

எங்களுக்கு ஒண்ணே ஒண்ணு பையன். அவனே இதோ இந்த வீட்டுலே தான் கண்ணு போலே பொத்தி பொத்தி வளர்த்தோம்.

அவனும் நல்ல படிச்சி பட்டணத்துக்கு வேலக்கி போய்ட்டான். இவரு உத்யோகத்துலே இருந்து ஓய்வுபெற்ற பிறகு நாங்களும் அவன் கூட போயிட்டோம்.

அவன் ஆசப்பட்டான்னு அங்கேயே வீடு வாங்க இவர் காசு எல்லாம் குடுத்தார். அவன் ஆசைப்படியே அவனோட வேலே பாக்கற பொண்ணே கட்டிக்கிட்டான்.

அவனுக்கு சமமா படிச்ச பொண்ணு. அதுவும் அவ்வளவு அவனைப் போலவே சம்பாதிக்குது. வீட்டிலேயும் அவனைப் போலவே கால் நீட்டி வக்காந்த எடத்துலேயே எல்லாம் கேக்குது.

நானும்தான் நமக்கு பொண்ணு இல்லேயேன்னு அதை பொண்ணு மாதிரி தான் நெனச்சேன். ஆனாலும் அதுக்கு நாங்க அங்கே இருக்கறது பிடிக்கலே. ஏதோ சொல்லிட்டே இருக்கும்.

நான் எதையும் பெருசு படுத்தலை. என்ன சொல்லுமோ எப்படி சொல்லுமோ அவனும் நாங்க செய்யறது தான் தப்பு மாதிரி நெனச்சான். என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லே.

இவர அவனோ அவளோ மரியாதை குறைவா பேசறது எனக்கு தாங்கலே. ஒருநாள் அவங்களை நேரில் கேட்டுப்புட்டேன். அது அவன் எதிர் பார்க்கவில்லை.

அம்மாவும் அப்பாவும் நம்பளே நம்பி இருக்காங்க. என்ன செஞ்சாலும் சகிச்சுத்தான் ஆகணும்னு நினச்சிட்டான் போல.

இவருக்கு நான் இங்கே வந்தா கிராம வாழ்க்கை வசதிக் குறைவு கஷ்ட்டம்னு நினைச்சிட்டார். எங்கே இருந்தாலும் புருஷனோட மான மரியாதையா வாழரதுதான் சுகம் என சொல்லி திடீர்ன்னு பொட்டியே தூக்கிட்டோம்.

என்ன அங்கேயே நின்னுட்டீங்க. கிணத்துக்கு வாளி மாட்டுங்க இல்லே இங்கே தானே நீ ராஜாவை குளிப்பாட்டுவே ?

ஆமா நீங்க தான் அத பாத்து மாஞ்சு மாஞ்சு போவீங்க. உங்க புள்ளைக்கு நான் சூடா தண்ணி ஊத்திடுவேனோன்னு தொட்டு தொட்டு பாப்பீங்க.. சீயக்கா கண்ணுலே போகுதுன்னு என்னேய எசுவீங்க. இப்போ என்ன

நாம எதையும் மறக்கலே. அவன் எப்படி நம்பளே வேணான்னு நெனக்கிறான் ?

அதுதாங்க இயர்க்கை. நம்ப வீட்டுலே மாத்திரம் இல்லே இது. வீட்டுக்கு வீடு இதுதான். தண்ணி மேட்டிலேருந்து தான் பள்ளத்துக்கு பாயும். பாசமும் அப்படித்தான்.

நம்ம பிள்ளே. அதுக்கு எப்பப்ப என்ன வேணுமோ பெத்தவங்க தான் செய்யணும். சின்ன வயசுலே குளிப்பாட்டினோம். அப்புறம் படிக்க வச்சோம். இப்போ குடும்பம் அமைச்சு குடுத்திட்டோம். அவன் நல்லா இருந்தா சரி.

நீ சுலபமா சொல்லிட்டே. எனக்கு முடியலே

நாங்க பொம்பளேங்க. கல்யாணம் ஆகர வரே ஒரு வீடு. அப்புறம் கட்டை வேகர வரை புருஷன் வீடுன்னு எல்லாம் மாத்திப்போம். கடைசி வரை எங்களுக்கு இது தான் ஒரே சொந்தம்.

நல்ல வேளை. நான் வச்ச தென்னம் பிள்ளைகள் நல்லா வளர்ந்து காச்சிக்கிட்டிருக்கு.

அது மட்டுமில்லீங்க. நம்ப சூர்யா குட்டி. எப்படி பெருசா வளர்ந்திருக்கு பாருங்க. நம்மை நல்ல நினைவு வச்சிருக்குங்க. எங்கேயோ இருந்தது. நாம வந்ததுலே இருந்து இங்கே அங்கே நகரலேயே.

இவ்வளுவுக்கு நாம அத பாத்து பாத்தா வளர்த்தோம். ஏதோ மிச்ச மீதியே போட்டோம். அது நம்பளே சொந்த அம்மா அப்பாவா நினைக்குது போல.

இனி அதை விடக்கூடாது. இனிமே நமக்கு அது துணையா இருக்கும். நாம் போர வழிக்கு புண்ணியம் கிடைக்கட்டும்