வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 5) – தமிழில் – தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 5) – தமிழில் – தங்கேஸ்




களம் 1 காட்சி 5

இடம் வெரானோ கேபுலட் அரண்மனை

பாத்திரங்கள் ரோமியோ ஜுலியட் ரோமியோ நண்பர்கள் முதிய கேபுலட் தம்பதியர் வீட்டு வேலைக்காரர்கள்

(ரோமியோவும் ஜுலியட்டும் முதன் முதலாக சந்தித்து இதயங்களை இடம் மாற்றிக் கொள்ளும் காட்சி இது . இதை ஒரு காவியமாகவே படைத்திருக்கிறார்க ஷேக்ஸ்பியர் என்னும் மகா கலைஞன். )

கதை சுருக்கம்

கேபுலட் தனது வீட்டில் ஒரு விருந்துக்கு அன்றைய இரவு ஏற்பாடு செய்திருக்கிறார். நகரின் முக்கிய பிரமுகர்கள் உறவினர்கள் அனைவரும் விருந்துக்கு வருகிறார்கள்.

விருந்து அமைதியாகவும் சிறப்பாகவும் நடக்க வேண்டும் என்பதும் தனது மகள் ஜுலியட் தனது உறவினரான பாரிஸ் உடன் நட்பாக பழகி திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்பதும் முதிய கேபுலட்டின் விருப்பம் அதனால் தானே முன்னின்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார். விருந்தினர்களை உபசரிக்கிறார்.

இந்த விருந்தில் கலந்து கொண்டு நடனமாடுவதற்காக ரோமியோவின் நண்பர்களும் , தன்னை விரும்பாத தனது காதலி ரோசலினை காண வேண்டும் என்ற ஆவலில் ரோமியோவும் முகத்திற்கு கருப்பு முகமூடி அணிந்து அந்த விருந்துக்கு வருகிறார்கள்.

விருந்தில் ஜுலியட்டின் அழகில் திளைத்துப் போன ரோமியோ வாய் விட்டு அவளது அழகைப் போற்றுகிறான். கேபுலட்டின் உறவினன் டைபால்ட் ரோமியோவின் குரலை வைத்து அவனை ரோமியோ என்று அடையாளம் கண்டு கொள்கிறான்.. அவனை அங்கேயே கொன்று விட துடிக்கிறான். ஆனால் முதிய கேபுலட் விருந்தில் எந்த அசம்பாவிதமும் நிகழக்கூடாது என்றும் ரோமியோவை கொன்று விடக்கூடாது என்றும் டைபால்டிற்கு உத்தரவிடுகிறார்.

ரோமியோ ஜுலியட்டை முதன் முதலாக நேரில் சந்திக்கிறான். அவளின் கரங்களிலும் இதழ்களிலும் முத்தமிடுகிறான். தங்களின் எதிரி என்று தெரியாமலே இருவரின் இதயங்களும் இடம்மாறுகின்றன.

ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியன் போல இந்த காட்சியை அற்புதமாக அமைத்திருக்கும் ஷேக்ஸ்பியர் தான் ஒரு மகா கலைஞன் என்பதை ஒவ்வொரு பாத்திரத்தின் உரையாடல் வாயிலாகவும் நிருபித்துக்கொண்டேசெல்கிறார்

இனி உரையாடல் மொழிபெயர்ப்பு

( கேபுலட்டின் அரண்மனையில் பீட்டரும் மற்ற வேலைக்காரர்களும் பரிமாறும் பாத்திரங்களையும் பரிமாறும் போது மேலே போர்த்திக் கொள்ளும் ஏப்ரான் துணிளையும் எடுத்துக் கொண்டு விருந்து கூடத்திற்கு வருகிறார்கள் . பீட்டர் தலைமை வேலைக்காரன் மிகவும் பரபரப்பாக மற்ற பணியாளர்களை விரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறான் )

பீட்டர்” :
அந்த உதவாக்கரை சோம்பேறிப் பய பாட்பான் எங்கே போயிட்டான் ? ஒரு பயலும் இந்த சாப்பாட்டு மேசையை இன்னும் சுத்தம் பண்ணல
யாரும் ஒரு பாத்திரத்தை கூட எடுத்து ஓரமா வைக்கலை
முதல் பணியாள் : ( தன்னையே புகழ்ந்து )
என்ன செய்யறது இருக்குற கொஞ்சம் நஞ்சம் நல்ல பழக்க வழக்கமும் ஒருத்தன் ரெண்டு பேர் கைல தான் இருக்கு
அவங்களும் கூட எப்பவும் அழுக்காவே இருக்குறாங்க .
யாரை குறை சொல்றது ?

பீட்டர்” :
இந்த குட்டை நாற்காலிகளையெல்லாம் அப்புறப்படுத்துங்க.
பசி பசி தாங்க முடியலை எனக்கு
முதலில் என்னை காப்பாற்றுங்க
கொஞ்சம் இனிப்பு உணவை எடுத்து வா
முதல்ல நான் கொஞ்சம் கொட்டிக்கிறனும்
உணவை எடுத்து வருபவர்கள் எங்கே ?
சூசன் கிராண்ட் ஸ்டோன் , நெல் ஆண்டனி அந்த பாட் பான் எல்லாரையும் உடனே அழைத்து வா ஓடு ஓடு…
நான் ரெடி

முதல் பணியாள் :
நானும் ரெடி தான்

பீட்டர்” :
நல்லா கவனிங்க, விருந்து நடக்குற இடத்துல உங்களை
ஒரு பக்கம் தேடிகிட்டே இருப்பாங்க
இன்னொரு பக்கம் உங்களை கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க

முதல் பணியாள் :
நாங்க எப்படி ஒரே நேரத்துல இரண்டு இடத்துல இருக்க முடியும் ?

பீட்டர்” :
சரி சரி நண்பர்களே
ஒரு நொடியில தயராகுங்க பார்க்கலாம் .
தாமதமாக தயராகுறவனை சாபம் பிடிச்சு ஆட்டும்
அவன் எப்பவுமே பாத்திரங்களை சுரண்டிகிட்டே கிடப்பான் பார்த்துக்கோ

( பீட்டரும் மற்ற வேலைக்காரர்களும் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருக்கிறார்கள். மேசை நாற்காலிகளை ஒழுங்கு படுத்துகிறாகள். அந்த இடமே ஒரே களேபரமாக இருக்கிறது. )

( விருந்தினர்களைப் பார்த்து கேபுலட் வேடிக்கையாக பேசுகிறார்)

கேபுலட்:
சீமான்களே ! சீமாட்டிகள ! கவனிங்க !
எந்த எந்த இளம் பெண்களுக்கெல்லாம் பாதங்கள்ஆரோக்கியமா இருக்குதோ
அவங்க எல்லாமே உங்களோட இப்ப நடனமாடுவாங்க
சரி தானே அழகு பெண்களே !
இங்க கவனிங்க உங்கள்ள யாராவது இன்னிக்கு நடனமாட
மறுப்பீங்களா ?
அப்படி மறுத்தா உங்க குதிங்கால்கள்ள எல்லாம்
கொப்புளங்கள் இருக்குதுன்னு அர்த்தம்
சரியாச் சொன்னேனா ,
வாங்க சீமான்களே சீமாட்டிகளே !
நானும் ஒரு காலத்துல முகத்துல முகமூடியை மாட்டிக்கிட்டு
ஒரு அழகான இளம் பெண்ணோட காதுக்குள்ள போய்
இரகசியமா கதை சொன்னவன் தான்
( எங்கும் சிரிப்பலைகள் )
ம்ம் அந்தக்காலம் இனி திரும்பி வராது
இளைஞர்களே இளைஞிகளே !
வாங்க ஆரம்பிக்கலாம்
இசைக்க ஆரம்பியுங்கள் இசைக்கலைஞர்களே !

( இசை கேட்கிறது )
நடனம் ஆரம்பமாகட்டும் !

( நடனம் ஆரம்பிக்கிறது )

இந்தக் கூடத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய இடம் கொடுங்கள்
இளம் பெண்களே வாருங்கள்

( பணியாட்களைப் பார்த்து )

வெளிச்சம் இன்னும் தேவை
சரி சரி நடனத்திற்கு இடையூறாக இல்லாமல்
மேசை நாற்கலிகளை அப்புறப்படுத்து.
அப்படியே கணப்பு அடுப்பில் தீயை கொஞ்சம் குறைங்க
ரொம்ப சூடா இருக்குது

( தனது உறவினர் இளைய கேபுலட்டிடம் திரும்பி )
எதிர்பாராத விருந்தினர்களெல்லாம் வந்திருக்காங்கல்ல ?
வரவேற்பு நல்லா இருக்குதா ?

சொல்லு சகோதரா !
நாம இரண்டு பேரும் முகத்துல மூகமூடிய மாட்டிகிட்டு
நடனமாடி கடைசியா எத்தனை காலம் ஆயிருக்கும் ?

கேபுலட்டின் உறவினர் :
( வேடிக்கையாகப் பேசுகிறார் ).

கன்னிமேரி மீது ஆணையாக சொல்றேன்
முப்பது வருடங்கள் முடிஞ்சிருக்கும்

( அப்போது கேபுலட்டின் மிக முக்கிய உறவினர்கள் அனைவரும் உள்ளே நுழைகிறார்கள் அவர்களோடு சேர்ந்து டைபால்ட் கேபுலட்டின் மனைவி திருமதி கேபுலட் மகள் ஜுலியட்: ஆகியோரும் உள்ளே நுழைகிறார்கள்
கேபுலட் தனது உறவினரைப் பார்த்து மறுபடியும் உரையாடலைத் தொடர்கிறார் )

கேபுலட்
இதோ பாரு நண்பா !
முப்பது வருடமெல்லாம் கடந்திருக்காது
ஒரு இருபது வருடம் அல்லது இருபத்தைந்து வருடங்கள்
கடந்திருக்கலாம் அவ்வளவு தான்
சரியாச் சொன்னா கடைசியா நாம முகமூடி மாட்டுனது
லுசெண்டியா திருமணத்துக்குத்தானே ?

என்ன சொல்ற என்ன சொல்ற ?
லூசெண்டியா திருமணத்திற்கு தான ?

அடகாலம் எவ்வளவு வேகமா வேணாலும் பறக்கட்டுமே
அதெல்லாம் முப்பது வருசம் கடந்திருக்காது
என்ன ஒரு இருபத்தஞ்சு வருசம் ஆயிருக்கலாம்

கேபுலட்டின் உறவினர் :
அதெல்லாம் இல்லை ரொம்ப காலம் ஆயிடுச்சு
ரொம்ப காலம்
அதாவது லூசெண்டியாவோட பையனுக்கே
இப்ப முப்பது வயசு முடிஞ்சிருச்சு

கேபுலட்
அதென்ன அப்படி சொல்ற ,?
ரெண்டு வருசத்துக்கு முன்னால கூட அந்தப் பையன்
ரொம்ப சிறுவனாத்தான ( மைனராக ) இருந்தான்

ரோமியோ : ( ஜுலியட்டைப் பார்த்துவிட்டு மலைத்துப்போய் பரிமாறுபவனிடம் விசாரிக்கிறான் )

அதோ அங்க நிக்கிற தோள்மீது
சாய்ஞ்சுகிட்டிருக்குதே அந்த அழகுப் பொண்ணு
அது யாருன்னு தெரியுமா ?

பரிமாறுபவன்.
எனக்குத் தெரியாது சார்

ரோமியோ :
அவளை உனக்குத் தெரியாதா ?
ஓ அவளிடம் தான் எத்தனை வசீகரம் ?
விளக்குகளுக்கு வெளிச்சம் தருவது எப்படி என்று
அங்கே அவள் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறாள்.
இந்த இரவின் கருமைக்கன்னத்தில் ஓளிவீசும்
ஒரு உயர்ந்த ஆபரணமாக அவள் திகழந்து கொண்டிருக்கிறாள்.

அவளது அழகு ஆராதனைக்கும் அப்பாற்பட்டது
அழிவை எந்நாளும் எட்டாதது
இந்த உலகமே கூட அதற்கு ஈடாகாது தெரியுமா ?

கருங் காக்கை கூட்டத்திற்குள் நுழைந்த
பளிங்கு வெண்புறா அவள்

இப்பொழுதே எழுதி வைத்துக்கொள்
இந்த நடனம் முடியும் தருவாயில்
இந்த அழகி இங்கே இருக்கும் அத்தனை பெண்களையும்
இந்த அழகி தனது ஒப்பற்ற அழகினால் ஓரங்கட்டி விடுவாள்

அவள் அப்போது எங்கே நிற்பாளோ
அவ்விடம் நான் செல்வேன்

என் கரடு முரடான கைகளால்
அவளது மிருதுவான கரங்களை தொட்டு ரசிப்பேன்

அவைகள் உளனே ஆசீர்வதிக்ப்பட்டு விடும்
அவளின் ஒரே தீண்டலில் அவைகள் புனிதமாகி விடும்
அவ்வளவுதான்..

இதற்கு முன்பு மனதார நான் யாரையாவாது காதலித்தேனா ?
இல்லை இல்லை அப்படி இல்லவே இல்லை
அப்படி காதலித்திருந்தால்
இவளைப் பார்த்த நொடியே
அந்தக் காதல் துறவறம் பெற்றிருக்கும்
அவ்வளவு தான்

நான் சத்தியம் செய்கிறேன்
இரவின் இந்த நொடி வரை
அற்புத அழகின் ஒப்பற்ற சொரூத்தை
இதைப்போல நான் கண்களால் கண்டதேயில்லை !

டைபால்ட் ( கேபுலட்டின் உறவினன் இளைஞன், ரோமியோவின் குரலை வைத்து அவனை அடையாளம் கண்டு கொள்கிறான் )
இந்த குரலை வைத்தே இது யாருன்னு தெரியுது.
வந்திருக்கிறது ஒரு மாண்டேக்கு தான் .
அதுவும் நம்ம சென்ம விரோதி அந்த ரோமியோ
( தனது பணியாளிடம் திரும்பி கோபமாக )
உடனே என் உடைவாளை கொண்டு வா
அவன் தலையை இங்கேயே சீவி விடுகிறேன்.
( தனக்குள்ளாகவே)
என்ன தைரியம் இருந்தால் எதிரி நம் வீட்டிற்குள்ளேயே புகுந்திருப்பான். ?

அதுவும் முகத்தை மூடிக்கொண்டு மாறுவேடத்தில்.
இந்த விருந்தை எள்ளி நகையாடுவதற்கும்
ஏளனம் செய்வதற்கும் தான் அவன் இவ்விடம் வந்திருக்க வேண்டும்

என் குடும்ப கௌரவத்தை குலைக்க வந்தவனை
நான்கொல்வதால் எனக்கு ஒரு பாவமும் வந்து விடாது.
அவன் தலையை இப்போதே இங்கேயே கொய்து விடுகிறேன்.

கேபுலட் ( டைபால்டிடம் வந்து அமைதியாக )

என்ன மருமகனே
ஏன் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறாய். ?

டைபால்ட் :
மாமா அதோ சென்ம எதிரி மாண்டேக்
நம் விருந்துக்கு திருட்டுத்தனமாக வந்திருக்கிறான்.
என்ன தைரியம் இருந்தால் அவன் இங்கேயே நுழைந்திருப்பான். ?
நமது விருந்தை எள்ளி நகையாடவும் சீர்குலைக்கவும் தான்
அவன் இங்கே வந்திருக்க வேண்டும்..

கேபுலட் ( ஆச்சரியத்துடன் அந்த உருவத்தை சுட்டிக்காட்டி)
இளைய ரோமியோவா இது ?

டைபால்ட் :
அவனே தான் மாமா அவனே தான் அது
நமது எதிரி ரோமியோ
அவன் குரலை வைத்தே அவனை
அடையாளம் கண்டு கொண்டேன்.

கேபுலட் :
அமைதியாக இரு மருமகனே !
ஆத்திரப்பட வேண்டாம்.
இந்த ரோமியோ நமது விரோதியாகவே இருந்தாலும்
இப்போது வெறுக்கத் தக்கவன் அல்ல. .

இந்த வேரொனோவில் ரோமியோவுக்கு
மிக நன்னடத்தை கொண்ட இளைஞன் என்ற
ஒரு பெயர் இருக்கிறது.

இனிய இளைஞன் அவன் என ஒவ்வொருவரும்
புகழக் கேட்டிருக்கிறேன்.
அவனை என் கண்முன்னே இவ்வீட்டில்
நீ அவமதிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்.

இப்படி நீ முறைக்க வேண்டாம்
அவனைப் பாராதது போலவே நடி

நீ இப்போது அவனைத்தாக்கினால்
இந்த விருந்தின் மாண்பு
சீர்குலைந்து விடும் என்று உனக்குத் தெரியாதா?

டைபால்ட் : ( கோபமாக )
இவனைப் போன்ற ஒரு பொறுக்கி
இங்கே உள்ளே நுழைந்தால்
நான் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா ?
அது மட்டும் என்னால் முடியாது.

கேபுலட் :
பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் இளைஞனே !
பொறுமை இல்லையென்றால் நீ
இங்கேயிருந்து வெளியேறி விடு

( தனக்குள் ) கடவுள் என்னை மன்னிக்கட்டும்
வந்திருக்கும் விருந்தினர்களுக்கு மத்தியில்
நீ அவனோடு வம்பிழுத்தால்
இந்த கேபுலட்டின் மானம் போய் விடும்

மனிதர்கள் போல நாம் நடந்து கொள்ள வேண்டும்
விலங்குகளைப் போல அல்ல
புரிந்து கொள்

டைபால்ட் :
ஆனால் மாமா …. தன் வருகையினால்
அவன் நம்மை அவமதித்துக் கொண்டிருக்கிறான்

கேபுலட் :
இதோ பார் இளைஞனே !
நீ மிகவும் அவசரக்காரனாக இருக்கிறாய்,
அவசரத்தில் ஆத்திரப்படுவது முட்டாள் தனம்
ஆத்திரம் உன்னிடமே திரும்பி வந்து உனக்குத்
தீங்கு தான் விளைவிக்கும் .

என்ன என்னை எதிர்க்க வேண்டும் போல் இருக்கிறதா ?
உனக்கு நான் ஒன்று சொல்கிறேன் கேள்.
( விருந்தினர்களிடம் ) ஆட்டத்தை தொடருங்கள் நண்பர்களே

( டைபால்டிடம் ) போ போ போய் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு

நீ அமைதியாக இல்லாவிட்டால் நான் உன்னை
அமைதியாக்கி விடுவேன். தெரியுமா ?
( பணியாட்களிடம் திரும்பி ) வெளிச்சம் வேண்டும் வெளிச்சம்

( டைபால்டிடம் ) உன்னுடைய செயலுக்காக
நீ வெட்கப்பட வேண்டும்.
( விருந்தினர்களிடம் ) நடனத்தை தொடருங்கள் நண்பர்களே

இசை பரவட்டும்
நடனம் தொடரட்டும்
இசை பரவட்டும்
நடனம் தொடரட்டும்

டைபால்ட் : ( தனக்குள் )
அடக்கப்பட்ட ஆத்திரம் நெருப்பாக கொதிக்கிறது.
நெற்றிப்பொட்டு வெடிப்பது போல் சுடுகிறது.
கட்டுக்கடங்காத கோபத்தில்
என் உடலெல்லாம் நடுங்குகிறது.

இந்த அவமானத்தை
தாங்குவதை விட
உடனே நான் வெளியேறி விடுவது நல்லது தான்
ஆனால் அத்து மீறி இங்கே நுழைந்திருக்கும்
அந்த ரோமியோவுக்கு நான் யார் என்று காட்டி விட்டுப் போக வேண்டும்
அவனுக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கையாக இருக்கிறது
அய்யய்போ அதை நினைத்தாலே என் நெஞ்சு பற்றி எரிகிறது.

( ரோமியோ ஜுலியட்டின் அருகில் சென்று அவள் கரங்களை தன் கரங்களால் எடுத்துக்கொண்டு பேசுகிறான் )

ரோமியோ :
கோவிலைப்போன்ற புனிதமான
உங்களின் கரங்களை
கரடுமுரடான என் கரங்கள்
அசுத்தப்படுத்தியிருந்தால்
சொல்லி விடுங்கள்,
கடவுளை தரிசிக்க வந்த
இரண்டு பக்தர்களைப் போல பரவசத்திலிருக்கும்
என் இதழ்களால் அவைகளை மீண்டும்
புனிதமாக்கி விடுகிறேன்..

ஜுலியட் :
எப்படி ?

ரோமியோ :
முத்தங்களால் மென்மையான முத்தங்களால்

ஜுலியட் :
பரிவுள்ள பக்தனே !
உன் கரங்கள் அளவுக்கு அதிகமான
பக்தியை காட்டுகின்றன.
ஆனால் புனிதர்களைத் தேடி வரும் பக்தர்கள்
இப்படி இதழ்களால் பக்தியை காட்டுவதில்லை.
புனிதர்களின் கரங்களை தங்களின் கரங்களால் தொட்டுத்தான் தங்கள் பக்தியை தெரிவிப்பார்கள்
உள்ளங்கைகளை உள்ளங்கைகளோடு சேர்த்து
தான் உறவாட வைப்பார்களே தவிர
நீ சொல்வதைப்போல உதடுகளால் அல்ல.

ரோமியோ:
ஏன் அவர்களுக்கு புனிதர்களுக்கும் பக்தர்களுக்கும் உதடுகள் இல்லையா?

ஜுலியட் :
போலிப் பக்தனே அதை அவர்கள் பக்திக்கும்
மட்டும் தான் பயன்படுத்துவார்கள்

ரோமியோ:
புனிதரே !
அப்படி என்றால் உங்களிடம்
ஒரு வேண்டுங்கள்
எனக்கு பக்தி அதிகம்
என் கரங்கள் செய்கின்ற வேலையை
என் உதடுகள் செய்யட்டும்.
என் நம்பிக்கை பொய்த்துப்போனால்
நான் அவநம்பிக்கைக்கு ஆளாகி விடுவேன்
தெரியுமா ?

ஜுலியட் :
புனிதர்கள் இந்த போலி பக்திக்கெல்லாம் அசைவதில்லை
அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதோடு சரி

ரோமியோ:
அப்படியென்றால் என் பிரார்த்னைகள் நிறைவேறும் வரை
நீங்கள் நகராதீர்கள் புனிதரே

( ரோமியோ ஜுலியட்டை முத்தமிடுகிறான். இருவருமே அசையவில்லை )

( ஜுலியட்டிடம் ) இப்போது
என்னுடிடய உதடுகளிலிருந்த பாவத்தை
உன்னுடைய உதடுகள் எடுத்துக் கொண்டன
அதனால் என்னுடைய உதடுகள் பாவத்திலிருந்து
மீட்சிமை பெற்று விட்டன.

இப்பொழுது உன்னுடைய உதடுகளில்
என்னுடைய பாவங்கள் எல்லாம்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன
பரிகாரம் தான் என்ன ?

ஜுலியட் : ( போலியாக )
அடப் பாவி அப்படியானால் என்னுடை உதடுகளில் ஒட்டியிருக்கும்
உன்னுடைய பாவங்களை உடனே நீ எடுத்து விடு

ரோமியோ:
என்னுடை உதடுகளிலிருந்து புறப்பட்டு
உன்னுதட்டில் ஒட்டிக்கொண்டனவா பாவங்கள்
அதை என்னுதட்டிற்கே மறுபடியும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால்
மறுபடியும் முத்தமிட்டே எடுக்க வேண்டும்

புனிதரே என்னை மீண்டும் மீண்டும்
இப்படிப்பட்ட பாவங்களையே செய்யத் தூண்டினால்
நான் சளைக்காமல் பாவங்களை செய்து கொண்டேயிருப்பேன்.

( என்று சொல்லி விட்டு ஆவல் தீராமல் முத்த மழை
பொழிகிறான் )

ஜுலியட் :
புனித புத்தகத்தில் சொல்லிய படி
மேன்மையாக முத்தமிடு
அத்து மீறாதே

( மறுபடியும் இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள் )

செவிலி ( ஜுலியட்டிடம் வந்து )

ஜுலியட் உன்னுடைய தாய் உடனே உன்னுடன் பேசவேண்டுமாம்
அழைத்து வரச்சொன்னார்கள்
( அகல மனதில்லாமல் ஜுலியட் அவ்விடத்தை விட்டு அகலுகிறாள் )
ரோமியோ: ( செவிலியிடம் )
யார் அவளுடைய தாய் ?

செவிலி :
இளைஞனே ! இவளுடைய தாய் தான்
இந்த வீட்டின் சீமாட்டி
நல்ல பண்புகளும் கருணையும் புத்திசாலித்தனமும்
ஒருங்கே கொண்டவள்.
நான் தான் அவளுடைய மக;s ஜுலியட்டை
வளர்த்து வருகிறேன்.
இதையும் கே;ட்டு விட்டு ஆச்சரியப்படு
அவளை மணக்கப்போகிறவன்
இந்த நகரின் மிகப் பெரிய செல்வச் சீமான்
என்பதை மறந்து விடாதே.
ரோமியோ ( தனக்குள்ளேயே அதிர்சியாக )
அவள் கேபுலட்டா !….
என்னுடைய வாழ்க்கை
என் எதிரியின் கரங்களிலா இனி ?
என் செய்வேன் நான் !….
பென்வாலியோ 🙁 ரோமியோவிடம் வந்து )
இது வரை எல்லாம் சிறப்பாக முடிந்து விட்டது
கிளம்பலாம் வா நண்பா ..

ரோமியோ:
நண்பா
இது வரை எல்லாம் சிறப்பாக முடிந்து விட்டது.
என்கிறாய்
இனி முடியவேண்டியது அப்படி இருக்காது .

கேபுலட் : ( அவர்களை தடுத்து )

இப்பொழுது கிளம்ப வேண்டாம் இளைஞர்களே. !
ஒரு சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
அது எந்த நேரமும் வந்துவிடக்கூடும்

( அவர்கள் அவர் காதில் ஏதோ இரகசியமாக சொல்கிறார்கள் )

அப்படியா அப்படியென்றால் கிளம்புங்கள்
தங்கள் நல்வருகைக்கு மிக்க நன்றி

( பணியாளர்களைப் பார்த்து நிறைய டார்ச்சுகளை இங்கே கொண்டு வாருங்கள் . )

( குடும்பத்தினரைப்பார்த்து )
வாருங்கள் நாம் அனைவரும் தூங்கச் செல்லலாம்

(தனது உறவினரைப்பார்த்து )
கடவுள் அருளால் எல்லாம் சிறப்பாக முடிந்தது தம்பி
ஏற்கனவே தாமதாமாகிவிட்டது
நான் உறங்கச் செல்கிறேன்

ஜுலியட் : ( செவிலியிடம் )
இங்கே வா தாதியே
யார் அங்கே நின்று கொண்டிருப்பது ?

செவிலி:
அதுவா அது டைபீரியாவின் மகன்
அவருடைய வாரிசு

ஜுலியட் :
அவரில்லை இதோ இப்போது கதவை திறந்து
வெளியே சென்று கொண்டிருக்கிறாரே
அவரைப் பற்றித்தான் கேட்டேன்.

செவிலி:
அடடா அதுவா அது இளைஞன் பெட்ரூச்சியா தெரியாதா ?

ஜுலியட் :

ஓ நான் கேட்டது அவரில்லை. புரிகிறதா உனக்கு ?
இங்கே ஒரு இளைஞன் அப்படியும் இப்படியுமாக திரிந்து கொண்டிருந்தானே.
அவன் கூட கடைசிவரையிலும் நடனமாடவேயில்லையே
அவனைப் பற்றித்தான்

செவிலி:
அப்படி யாரையும் எனக்குத் தெரியாது பெண்ணே

ஜுலியட் :
போ போய் அவன் பெயரை உடனே கேட்டு வா

( செவிலி செல்கிறாள் )
( தனக்குள்ளேயே )
அவனுக்கு மட்டும் திருமணம் ஆகியிருந்தால்
கல்லறை தான் எனக்கு மணவறை )

செவிலி: ( திரும்பவும் வந்து )

அவனது பெயர் ரோமியோ,
அவன் உனக்கு உறவினன்அல்ல,
உங்களுடைய சென்ம எதிரியான மாண்டேக்கின் மகன்.

ஜுலியட் :
என்னது நான் விரும்பும் ஒருவன்
நான் வெறுக்கும் ஒருவரது மகனா ?
நான் அவனை முதலிலேயே அறிந்திருக்க வேண்டும்
அவனை நேசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே
அவனைப் பற்றி விசாரித்திருக்க வேண்டும்
ஆனால் எல்லாம் கைமீறிப் போய் விட்டது இந்தக் காதலால்
காதலே எவ்வளவு கொடியவன் நீ !
என்னுடைய எதிரியின் மகனை என்னை நேசிக்க வைத்து
எள்ளி நனகையாடி விளையாடுகிறாய் நீ
செவிலி : ( பதட்டமாக )
என்ன ? என்ன ?

ஜுலியட் :
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்னோடு நடனமாடியவரிடமிருந்து
இப்போது தான் ஒரு பாடலை கற்றுக்கொண்டேன்.

( யாரோ ஜுலியட்டை மேடைக்கு அந்தப்புறம் இருந்து அழைக்கிறார்கள். )

செவிலி :
இதோ வருகிறோம்
இதோ வருகிறோம்
வா ஜுலியட் கிளம்பலாம்
வந்தவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள்
(அனைவரும் மறைகிறார்கள்)

மூலம் : ஷேக்ஸ்பீயர்
மொழிபெயர்ப்பு : தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 4) – தமிழில் – தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 4) – தமிழில் – தங்கேஸ்




களம் 1 காட்சி 4

காட்சி பிண்ணனி
பொழுது – பகல் முடிந்து இரவின் ஆரம்பம்

( ரோமியோ மற்றும் அவனது நண்பர்கள் ஜுலியட்டின் வீட்டில் நடைபெறும் விருந்துக்கு மாறு வேடத்தில் செல்கிறார்கள் )

ரோமியோ , மெர்குஷியோ மற்றும் பென்வாலியோ ஆகிய மூவரும் விருந்துக்கு முகமூடி அணிந்தபடி செல்கின்றனர். மேலும் ஐந்து பேர்கள் முகமூடி அணிந்தபடியும் கையில் டார்ச் விளக்கைப் பிடித்தபடியும் அவர்களுடன் உடன் செல்கிறார்கள்.

ரோமியோ : ( நண்பர்களிடம் )

தாமதத்திற்கு எப்படி மன்னிப்பு கோருவது ?
அல்லது மன்னிப்பு கோராமலேயே
உள்ளே நுழைந்து விடலாமா ?

பென்வாலியோ :

ரோமியோ ! மன்னிப்பு கேட்பதெல்லாம்
பழைய பாணி
அது இப்ப பேஷன்.இல்ல

( கிண்டலாக )

பாரு ரோமியோ ! இரண்டு கண்ணையும்
கருப்பு துணில கட்டிக்கிட்டு ,
கையில ஒரு பொம்மை அம்பை வச்சுகிட்டு
பயமுறுத்திக்கிட்டு இருக்குற
சோளக்கொல்லை பொம்மை கூட்டத்துக்குள்ள போah
நாம நுழையப்போறோம் ?
நாங்க வந்துட்டோம் வந்துட்டோம்னு சொல்றதுக்கு /
இல்லை பள்ளிக்கூட பசங்க மாதிரி அட்சரம் பிசகாம
மனப்பாடம் பண்ணி வச்சத
அப்படியே போய் பேச்சுப்போட்டில ஒப்பிக்கப் போறோமா ?

நாம நடனமாடப்போறோம்பா நடனமாட ….

பார்க்குறவங்க எப்படி வேணாலும் நினைச்சுக்கட்டும்
அதப்பத்தி நமக்கு கவலை இல்லை

ரோமியோ :

சரி சரி டார்ச் விளக்கை என்னிடம் கொடு.
நான் அதை ஏந்திக் கொள்கிறேன்.
நடனமாடும் மனநிலையில் நான் இல்லை.

மெர்குஷியா :

இல்லை இல்லை என் இனிய ரோமியோ !
இன்று நீ நடனமாடியே தீரவேண்டும்

ரோமியோ :

நீங்கள் வேகமாக நடனமாடக்கூடிய
நல்ல ஷுக்களை அணிந்திருக்கிறீர்கள்
அதனால் நன்றாக நடனமிடலாம்
ஆனால் என் ஷுக்கள் மிகவும் கனமான ஈயத்தால் ஆனவை,
அவைகள் என்னைத் தரையில் நங்கூரமிட வைக்கின்றன.
அதனால் என்னால் நகரக் கூட முடியாது.

மெர்குஷியா :

( கிண்டலாக )
நீ தான் காதல் இளவரசனாயிற்றே
மன்மதனின் சிறகுகளை கொஞ்சம் கடன் வாங்கு, அதை வைத்துக் கொண்டு பறந்து பறந்து நடனமிடலாம்.

ரோமியோ :

ஓ நான் பறக்க முடியாத அளவு
அந்த மன்மதனது அம்புகளால்
துளைக்கப்பட்டு கிடக்கிறேன்.
என் காயப்பட்ட இதயம்
சோகத்திலிருந்து என்னைத் தப்பவே விடாது.
நான் காதலின் பெரும் சுமையில்
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.

மெர்குஷியா :

நீ காதலில் மூழ்கிக் கொண்டிருக்கிறாய் என்றால்
கனத்துக் கொண்டேயிருக்கிறாய்
என்று தானே அர்த்தம்.
பார்த்துக் கொள் நண்பா
அந்த மென்மையான வஸ்து உன் எடையை தாங்காது
உன்னை மூழ்கடித்து விடப் போகிறது.

ரோமியோ :
காதல் மென்மையானதென்று யார் சொன்னது.?
காதலித்துப்பார் தெரியும்
காதல் கரடு முரடானது கட்டுக்கடங்காதது.
முள்ளைப்போல குத்துவது என்று உனக்குத் தெரியும்

மெர்குஷியா :

( கிண்டலாக )
காதல் உன்னிடம் கரடு முரடாக நடந்து கொண்டால்
நீயும் அதனிடம் அவ்வாறே நடந்து கொள்.
காதல் உன்னை முள்ளைப்போல குத்தினால்
நீயும் பதிலுக்கு அதை முள்ளைப்போல் குத்து.
காதல் உன்னைத் தாக்கினால்
நீயும் அதைத் தாக்கி வீழ்த்து.
இப்போது என் முகமூடியை கொடு
அதை நான் அணிய வேண்டும்.

அதாவது ஒரு முகமூடி
இன்னொரு முகமூடியை மறைப்பதற்கு.

அந்த இன்னொரு முகமூடியைத்தான்
நாம் முகமென்று அழைக்கிறோம்.
யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலென்ன ?
என்ன குற்றம் கண்டாலென்ன ?
கருமையான புருவங்களைக் கொண்ட இந்த முகமூடி
எனக்கு பொருத்தமாக இருக்கும்.

பென்வாலியோ :

சரி சரி வாங்க கதவை தட்டிவிட்டு
உள்ளே போகலாம்.
உள்ளே போனதும் ஒரே நடனம் தான்
உற்சாகம் உற்சாகம்

ரோமியோ :

என் கைகளில் ஒரு ஒளி விளக்கை கொடு
அதை நான் ஏந்திக்கொள்கிறேன்.
இளகிய இதயம் படைத்தவர்கள்
இங்கே நடனமாடட்டும்

பாவம் இந்த ரோமியோவை விட்டு விடுங்கள்.
நான் விளக்கை ஏந்தியபடி வெளிச்சத்தில்
உங்கள் நடனத்தை ரசிப்பவனாகவே
இருந்து விட்டு போகிறேன்.
இந்த விளையாட்டு மிகவும்
ரசமானதாக இருக்கும் போல் தோன்றுகிறது.
ஆனால் அதை ஆடிப்பார்க்கும் மனநிலையில்
இந்த ரோமியோ இல்லை அவ்வளவு தான்..

மெர்குஷியா :

அடம்பிடிக்கும் அழுக்கு எலி போல
அஞ்சி அஞ்சி ஓடாதே நண்பா.
உன்னைப் பார்த்தால் இராத்திரி பாராவுக்கு போகும் காவலனைப்போல
கதைத்துக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

சேற்றில் மூழ்கியிருந்தால்
உன்னை காதைப்பிடித்துக்கூட
தூக்கி விடலாம் .
ஆனால் நீயோ காதல் புதைகுழியில்
கழுத்து வரைக்கும் மூழ்கியிருக்கிறாய்.
சரி சரி வா பகல் போய்க் கொண்டிருக்கிறது.
வெளிச்சத்தை வீணடிக்க வேண்டாம்.

ரோமியோ :
இல்லை இல்லை இது பகலில்லை இரவு

மெர்குஷியா :

ஆனால் நான் சொல்ல வருவதே வேறு .
பகலில் சூரிய வெளிச்சத்தை வீணடிப்பது போல
நாம் நமது விளக்குகளை
வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.
நீ ஐம்புலன்களை நம்புவதை விட
ஐந்து மடங்கு அதிகமாக என்னை நம்ப வேண்டும்
ஆமாம்

ரோமியோ :

முகமூடியோடு செல்வது
என்னமோ நல்லதுதான் .

ஆனால் அந்த இடத்திற்கு செல்வது தான்
அவ்வளவு நல்லதாகப் படவில்லை.

மெர்குஷியா :

ஏனென்று நான் கேட்கலாமா ?

ரோமியோ :

நான் நேற்று ஒரு கனவு கண்டேன்

மெர்குஷியா :

( உற்சாகமாக )
நானும் கூட உன்னைப்போலத்தான் ….

ரோமியோ :

சரி சரி உன்னுடைய கனவு தான் என்ன ?
உடனே சொல்

மெர்குஷியா :

கனவு காண்பவர்கள்
பொய் சொல்கிறார்கள் என்பதாக
நான் ஒரு கனவு கண்டேன்

ரோமியோ :
படுக்கையில் படுத்துக் கொண்டு நிஜங்களை கூட
அவர்கள் கனவுகளாக கண்டு கொண்டிருக்கிறார்கள்.

மெர்குஷியா :
ஓ அப்படியென்றால் சரி
கனவுகளின் ராணி மேப்
உன்னோடு உடனிருப்பதை போல
நான் ஒரு கனவு கண்டேன்.

பென்வாலியோ :
கனவுகளின் ராணி மேப்பா யாரது ?

மெர்குஷியா :

ஓ அவளா !
அவள் தேவதைகளின் அழகி
அவள் உருவமோ
ஒரு சீமானின் மோதிரத்தில் பதித்திருக்கும்
அழகு கல்லை விட சற்றே சிறியது
அவ்வளவு தான்.

மனிதர்கள் தூங்கும் போது
அவர்களின் மூக்கின் மீது
அவள் தனது தேரை ஓட்டிப் போகிறாள்.
அந்தத் தேரை இழுத்து வருவன
அதனினும் மிகச்சிறிய ஜந்துக்கள்.
அந்த ரதத்தின் ஆரங்கள்
சிலந்தியின் கால்களால் ஆனது.
அந்த ரதத்தின் திரை
வெட்டுக்கிளிகளின்
இறக்கைகளால் ஆனது.
மேலும் அதன் சேணம் கூட
சிலந்தி வலைகளால் பின்னப்பட்டது தான்..

அவள் குதிரையின் காதுகள்
நிலவின் ஒளிக்கற்றைகளால் ஆனது .
அவளது சவுக்கு
சிலந்தி வலைகளால் ஆனது.
அதில் எப்போதும்
பூச்சிகள் மாட்டிக்கொண்டேயிருக்கும்

சோம்பேறி இளம்பெண்ணின்
விரலில் இருந்து வரும்
சிறிய உருண்டைப் புழுவில்
பாதி கூட இல்லாத
சாம்பல் நிற கோட் அணிந்திருக்கும்
ஒரு குட்டி கொசு தான்
அவளுடைய ரத ஓட்டுநர்.

அவளுடைய வண்டி
ஒரு அணில் மற்றும்
ஒரு புழுவால் காலி செய்யப் பட்ட
ஒரு வெற்றுப் பழக்கூடு அளவு தான் இருக்கும்
ஆனால் இந்தப் பழ ஓடுகள் தான்
எண்ணற்ற ஆண்டுகளாக
இப்படித் தேவதைகளின்
ரதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

Top of Form
இந்த அற்புதமான ரதத்தில் தான்
அவள் ஒவ்வொரு இரவும்
காதலர்களின் மூளை வழியாக சவாரி போகிறாள்
அவர்கள் காதலைப் பற்றி
எண்ணற்ற கனவு காண்கிறார்கள்

அவள் பிரபுக்களின் முழங்கால்களில் மீது
சவாரி செய்கிறாள்,
அவர்கள் மேலிடத்திற்குள்
குனிந்து வளைந்து கும்பிடு போட்டு
போவதைப் பற்றி கனவு காண்கிறார்கள்

அவள் வழக்கறிஞர்களின் விரல்களுக்கு மேல்
சவாரி செய்கிறாள்,
அவர்கள் தங்கள் அதீதமான கட்டணத்தைப் பற்றி
கனவு காண்கிறார்கள்.

அவள் பெண்களின் உதடுகளுக்கு மேல்
சவாரி செய்கிறாள்,
அவர்கள் முத்தங்களைப் பற்றி
கனவு காண்கிறார்கள்.

ஆனால் ராணி மேப்
அடிக்கடி அவர்களின் உதடுகளில்
கொப்புளங்களை பூக்க வைப்பாள் ,
காரணம் பெண்களின் சுவாசம்
மிட்டாய் வாசனையால் நிரம்பியது.
அதுஅவளை உண்மையிலேயே கோபப்படுத்துகிறது.

சில சமயங்களில்
அவள் ஒரு நீதிமன்ற அதிகாரியின்
மூக்கின் மேல் சவாரி செய்கிறாள்,
உடனே அவர் கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்கான
வழியை மோப்பம் பிடிக்கும்
கனவை காண்கிறார்.

சில சமயங்களில்
அவள் தேவாலயத்திற்கு தசமபாகமாக கொடுக்கப்பட்ட
பன்றியின் வாலால்
பாதிரியாரின் மூக்கில் கூச்சமூட்டுகிறாள்
உடனே அவர் அதிக ஊதியம் பெறும்
தேவாலயப் பதவியைப் பெற்று விட
கனவு காண்கிறார்.

சில சமயங்களில் அவள் ஒரு சிப்பாயின்
கழுத்தில் மீது தேரை செலுத்துகிறாள்,
உடனே அவன் வெளிநாட்டினரின்
கழுத்தை வெட்டுவது,
கோட்டைகளை உடைப்பது,
உள்ளே பதுங்கியிருப்பது,
சிறந்த தரமான ஸ்பானிஷ் வாள்களை
பிடித்து சுழற்றுவது
பெரிய மதுபானக் குவளைகளை
தழும்ப தழும்ப நிரப்பி வைத்து சல்லாபமாக இருப்பது
போன்றவற்றைப் பற்றிய கனவுகளில் திளைக்கிறான்.
ஆனால் விழித்தெழுந்ததும்
அவன் காதுகளில் விழும்
போர் முரசின் சத்தத்தால்
அவன் உடல் ஒரு கணம் உதறுகிறது.
உடனே ஒன்றிரண்டு பிரார்த்தனைகளைச்
சொல்லிவிட்டு மீண்டும் தூங்கச் செல்கிறான்
ஆனால் மேப் மாயம் செய்வாள்
குதிரைகளின் மேனிகளின் ஊர்ந்து
அவைகளின் முடியை இரவில் சிக்கலாக்கி,
பின்னர் அவைகளையும்
அழுக்குகளில் சிக்க வைத்து
அதை கடினமான சிக்காக்கிவிடும்
அந்தச் சிக்கலை நீங்கள் தவிர்த்தால்,
அவள் உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை
கொண்டு வருவாள் .
கன்னிப்பெண்களுக்கு
பாலுறவுக் கனவுகளைத் தந்து,
காதலனின் எடையை எப்படித் தாங்குவது,
குழந்தையைத் எப்படித் தூக்குவது
என்று கற்றுக்கொடுப்பதே. அவள் தான்

ரோமியோ :

அமைதி அமைதி
மெர்குஷியா அமைதியாக இரு
ஏனென்றால் நீ பேசுவதில் அர்த்தம் எதுவுமேயில்லை

மெர்குஷியா :

உண்மைதான்.
நான் கனவுகளைப் பற்றி பேசுகிறேன்,
அவைகள் உபயோகமற்ற மூளைகளால் தான் உருவாக்கப்படுகின்றன.
அவைகள் காற்றைப் போல
மெல்லிய பொருளாகவும்
அதை விட சீரற்றதாகவும் இருக்கின்றன.
காற்றுக்கு ஏது நிதானம் ?
பனி உறைந்திருக்கும் வடக்கில் ஊதும்
திடீரென்று கோபமடைந்து தெற்கே வீசும்.

பென்வாலியோ :

ஆனால் அந்தக் காற்று
இப்போது நம் மேல் அல்லவா
வீசிக்கொண்டிருக்கிறது.

இரவு உணவும் முடிந்து விட்டது. ,
நாம் மிகவும் தாமதமாகத்தான்
அங்கே செல்வோம் என்று நினைக்கிறேன்.

ரோமியோ :

ஆனால் நாம் சீக்கிரமே போகப்போகிறோம்
என்று தான் நான் நினைக்கிறேன்.

இன்றைய இந்த இரவு விருந்து
என் அகால மரணத்தை எழுதும்
சமான விதியாக இருக்கப்போகிறதென்று
என் உள்ளுணர்வு சொல்கிறது.

ஆனால் என் விதியை யார் எழுதுகிறார்களோ
அவர்கள் தானே என்னை அங்கே அழைக்கிறார்கள்.
ஆகையால் வாருங்கள்
அங்கேயே செல்வோம்
என் அடங்காத நண்பர்களே !
போகலாம்

பென்வாலியோ :

சரி தான் முரசை முழக்கு

(மேடையின் மீது நகர்ந்து நகர்ந்து காணாமல் போகிறான்.
ஒவ்வொருவரும் அது போலவே நகர்ந்து நகர்ந்து
காணாமல் போகிறார்கள்.)

மூலம் : ஷேக்ஸ்பியர்
மொழியாக்கம் : தங்கேஸ்

( தொடரும் )

பறக்கும் மனது கவிதை – ராஜு ஆரோக்கியசாமி

பறக்கும் மனது கவிதை – ராஜு ஆரோக்கியசாமி




உன் நினைவுகளுடனும்
அவற்றின் கனவுகளுடனும்
பேசிக் கொண்டிருக்கிறேன்
தூக்கமில்லா இரவில்

“நம்மை அழ வைத்தவளை
அலற வைப்போனே ஆம்பளையாம் ”
எனக்கு அதெல்லாம் வேண்டாம்ப்பா
உன்னை வாழ வைப்பதே…

உன் தீண்டல்களால்
எந்தத் துலங்கல்களுமில்லை
உன் மௌனம்தான்
ஓங்கி அரைகிறதெனை

ஆயிரம் கேள்விகள்
உன்னிடம் அப்படியே
என்னிடமோ ஒன்றேயொன்றுதான்
காதல், கடைசி வரை

எந்நேரமும் காதல்
தூக்கி அலைகிறேன்
பாரம் ஏதுமின்றி
பறக்கும் மனது

எனக்கு நீ ஆச்சர்யம்
உனக்கு நான் சௌகர்யம்
காதலே அனைத்தின் அஸ்திவாரம்
ஆகவே வாழ்க்கை அபூர்வம்

உன் பரவச பாவனைகள்
என்னுள் ஏதேதோ செய்ய
இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்
இன்னொரு ரோமியோ- ஜுலியட்

– ராஜா ஆரோக்கியசாமி

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 2) – தமிழில் – தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 2) – தமிழில் – தங்கேஸ்




Act 1 Scene 2
( காட்சி 2 )

இடம் : வெரேனா வீதி

பொழுது – பகல்

பாத்திரங்கள்

கேபுலட் கேபுலட்டின் உறவினன் பாரிஸ்

மற்றும் கேபுலட்டின் வேலைக்காரன் பீட்டர்

மற்றும் ரோமியோ பென் வாலியோ

பீட்டர் : ( குழப்பமாக )

என்னது இதில் எழுதியிருக்கும் பெயர்களை எல்லாம்

நான் கண்டுபிடிக்க வேண்டுமா ?

நல்ல கதை தான்

காலணி தைப்பவனிடம் தையற்காரனின் கத்திரிக்கோலையும்

தையற் காரனிடம் காலணி தைப்பவனின் குத்தூசியையும் கொடுத்து விட்டு வேலை வாங்குவது போல் இருக்கிறது.

பெயின்டரிடம் மீன் வலையையும் மீன் பிடிப்பவனிடம் வண்ணக்கலவைகளையும் கொடுத்து விட்டு வேலை வாங்குவது போல் இருக்கிறது இப்பொழுது இந்த வேலைக்கு என்னை அனுப்பியது.

இந்த பட்டியலில் இருப்பவர்களையெல்லாம்

நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமாம்

இதில் கொடுமை என்னவென்றால் எனக்கு வாசிக்கவே தெரியாது

இப்போது பாருங்கள் யாராவது வாசிக்கத் தெரிந்தவர்களை முதலில் கண்டு பிடித்து அவர்களிடம் உதவி கேட்க வேண்டும்

( அப்போது பென்வாலியோவும் ரோமியோவும் அங்கே வருகிறார்கள் )

பென்வாலியோ :

வா ரோமியோ நெருப்பை நெருப்பால் அணைக்கும்

கலை தான் காதல்

ஒரு புதிய வலி வந்து விட்டால்

பழைய வலி தானாகவே காணாமல் போய் விடும்

உனக்கு தலை சுற்றல் ஏற்பட்டால்

நீ அதற்கு மாற்று திசையில் உன் தலையை சுற்று

தலை சுற்றல் தானாகவே சரியாகிவிடும்.

அது போலத் தான் வேதனையும்

ஒரு புதிய வேதனை வந்தால்

பழையது தானாகவே சரியாகி விடும்

நண்பா புதிய பெண்களை உற்றுப் பார் !

பழைய காதலெல்லாம் காணாமலே போய் விடும்

ரோமியோ :

உன்னுடைய இந்த வாழை இலை வைத்தியத்தை

உன்னோடு மட்டும் வைத்துக் கொள்

உபயோகமாக இருக்கும்

பென்வாலியோ :

எதற்கு ?

ரோமியோ :

ஆ..உன்னுடைய உடைந்த எலும்புகளை ஒட்டவைப்பதற்குத்தான்

பென்வாலியோ :

ஏன் ரோமியோ நீ பைத்தியமாகி விட்டாயா ?

ரோமியோ :

பைத்தியமில்லை அதை விடவும் அதிகம்

இங்கே எந்த மனநோயாளியை விடவும்

நான் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளேன்.

உணவின்றி சிறையிலடைக்கப்பட்டிருக்கிறேன்.

காரணமின்றி சாட்டையால் அடிக்கப்படுகிறேன்.

அளவின்றி சித்திரவதை செய்யப்படுகிறேன்.

( பீட்டரிடம் திரும்பி ) மாலை வணக்கம் நண்பரே !

பீட்டர் :

இனிய மாலை வணக்கம் இளைஞனே !

உனக்கு வாசிக்கத் தெரியுமா ?

ரோமியோ : ( குழப்பமாக )

ஓ என் தலைவிதியை நான் உன்னிடம் வாசித்தால்

அது துயரமாக இருக்கும்

பீட்டர் :

அட போப்பா உன் தலைவிதியை

புத்தகமில்லாமல் கூட நீ வாசித்து விட்டுப்போ

நான் கேட்டது உனக்கு எழுத்துக்களை

வாசிக்கத் தெரியுமா என்று தான் ?

ரோமியோ :

எழுத்துக்களைப் பார்த்தால் ஒரு வேளை

எனக்கு மறந்து போன மொழி ஞாபகத்திற்கு வரும் .

மொழி ஞாபகத்திற்கு வந்தால்

எப்படியும் நான் வாசித்தது விடுவேன்

பீட்டர் :

நீ நேர்மையாகத்தான் பேசுகிறாய்.

நீ பேசுவதைப் பார்த்தால்

உனக்கு உண்மையிலேயே வாசிக்கத் தெரியாது

போல் இருக்கிறது.

பரவாயில்லை நான் அடுத்த ஆளைப் பார்த்துக்கொள்கிறேன்.

ரோமியோ : ( அவரைத் தடுத்து )

கொஞ்சம் பொறு நானே வாசிக்கிறேன்

( அந்தப் பட்டியலை வாங்கி பெயர்களை வாசித்துக் காட்டுகிறான் )

“சிக்னர் மார்டினோ மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்கள்;
கவுண்ட் அன்செல்மே மற்றும் அவரது அழகான சகோதரிகள்; விட்ராவியோவின் விதவை; சிக்னர் பிளாசென்டியோ மற்றும்

அவரது அழகான மருமகள்; மெர்குடியோ மற்றும் அவரது சகோதரர்

அவரது சகோதரர் காதலர்; என் மாமா கபுலெட் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்கள்

என் அழகான மருமகள் ரோசலின் மற்றும் லிவியா சிக்னர் வாலண்டியோ மற்றும் அவரது உறவினர் டைபால்ட் லூசியோ
மற்றும் கலகலப்பான ஹெலினா

இது மிகவும் அழகான மக்கள் குழு
ஆமாம் அவர்கள் எங்கு செல்ல வேண்டும்?

 

பீட்டர் : மேலே

ரோமியோ : எங்கே மேலேயா ?

பீட்டர் : இரவு விருந்துக்கு எங்கள் வீட்டிற்கு

ரோமியோ : யாருடைய வீட்டிற்கு ?

பீட்டர் : என்னுடைய எசமானரின் வீட்டிற்கு

ரோமியோ :

சரி சரி இந்தக் கேள்வியை நான் முதலில் கேட்டிருக்க வேண்டும்

பீட்டர் :

நீ கேட்கவில்லையென்றாலும் நான் சொல்லிவிடுகிறேன்.

என் எசமானர் கேபுலட். தான்

இந்த நகரிலேயே மிகப் பெரிய செல்வந்தர்

நீ மட்டும் மாண்டேக்காக இல்லாவிட்டால்

தாராளமாக நீ அந்த விருந்துக்கு வரலாம் .

ஒரு கோப்பை ஒயினை அருந்தி விட்டு

மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

சரி சரி நான் வருகிறேன் .உன் உதவிக்கு நன்றி

( பீட்டர் மறைகிறான் )

பென்வாலியோ :

நண்பா இந்த இரவு விருந்துக்கு இன்று நாம் செல்வோம் .

நீ உருகி உருகி காதலிக்கிறாயே

அந்த ஒப்பற்ற அழகி ரோஸலின்

அவளும் அங்கே வருகிறாள் அல்லவா. ?

அங்கே நான் உனக்கு காட்டும் அழகிகளை

வைத்த கண் வாங்காமல் பார்.

அதன் பிறகு நீ எனக்கு உண்மையை சொல்

நீ அன்னம் அன்னம் என்று கதைத்துக்கொண்டிருக்கிறாயே

அந்த ரோஸலின் அவள் உன் கண்களுக்கு

அங்கே வெறும் காகமாய் தான் தெரிவாள்.

ரோமியோ :

தான் வணங்கும் தேவதையை விட

ஒரு பொய் அழகியை

என் கண்கள் எனக்கு காட்டினால்

அந்த நிமிடமே என் கண்ணீரெல்லாம்

நெருப்பு சுவாலைகளாக மாறி விடும்.

இது வரையிலும் கண்ணீரில் மூழ்காத கண்கள்

உடனே எரிந்து சாம்பலாகி விடும் .

ஒரு பொய்யழகியை எனக்கு காட்டியதற்காக.

என்னவளை விட இன்னொரு பெண் பேரழகியா ?

அதுவும் அவள் என் கண்களுக்கு தென்படுவாளா ?

புரிந்து கொள் நண்பா

இங்கே சூரியன் தோன்றிய நாளிலிருந்து

என்னவளைப் போன்ற அழகி

இந்தப்பூமியில் இன்னும் உதிக்கவேயில்லை.

பென்வாலியோ :

ஓ நண்பா உன் அழகியின் அருகில் மற்ற அழகிகள்

இல்லாத போது

அவள் தான் பேரழகி என்று நீ தீர்மானித்து விட்டாய்.

ஆனால் விருந்தில் உனக்கு நான் காட்டப்போகும்

உயர்ந்த அழகிகளோடு

நீ அவளை ஒப்பிட்டுப்பார்த்தால்

அவள் அப்படி ஒன்றும் பெரிய அழகியில்லையென்று

நீயே முடிவுக்கு வந்து விடுவாய் பார்.

ரோமியோ :

சரி சரி நான் உன்னுடன் வருகிறேன்

ஆனால் அது மற்ற கன்னிகளை காண்பதற்கு அல்ல

என்னவளின் பேரழகில் மயங்கி திளைப்பதற்கே

( இருவரும் மறைகிறார்கள் )
( தொடரும் )
மொழி பெயர்ப்பு : தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 3) – தமிழில் – தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 3) – தமிழில் – தங்கேஸ்



பாத்திரங்கள் திருமதி கேபுலட் , செவிலி மற்றும் ஜூலியட்  
மேலும் மாளிகைப் பணியாளர்கள்

திருமதி கேபுலட்

செவிலி எங்கே என் மகள் ?
அவளை உடனே அழைத்து வா என்னிடம்

செவிலி ( வாய் நீளம் )

பன்னிரெண்டு வயதில் என் கற்பின் மீது
ஆணையாக சொல்கிறேன்.
நான் அவளை அப்பொழுதே வரச் சொல்லி விட்டேன்
ஆமாம் எங்கே அந்தப் பெண் ஜுலியட் ?
ஜுலி ஜுலி ….

( ஜுலியட் உள்ளே நுழைகிறாள் )

ஜுலியட் :
இங்கே யார் என்னை அழைத்தது ?

செவிலி :
உனது தாய்

ஜுலியட் :
அம்மா நான் வந்து விட்டேன்
உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் ?

திருமதி கேபுலட் :

நான் சொல்ல வந்தது என்னவென்றால்
( செவிலியைப்பார்த்து ) செவிலி நீ வெளியே செல்
( மறுபடி சற்று யோசித்து )
சரி சரி செவிலி நீ இங்கேயே இரு
உனக்குத் தான் எங்கள்
இரகசியமெல்லாம் தெரியுமே ?
என்னுடைய மகளைப் பற்றி அவள் குழந்தையாயிருக்கும் போதிருந்தே உனக்கு எல்லாம் தெரியுமே

செவிலி :

அம்மா இந்த நிமிடம் வரையிலும்
அவளுடைய வயது
என்ன என்பதை என்னால் சொல்ல முடியும்

திருமதி கேபுலட் :

இவளுக்கு பதினான்கு வயதே
இன்னும் நிரம்பவில்லையே !

செவிலி :

பதினான்கு வயது தான் என்று என்னாலும் சொல்ல முடியும்
ஆனாலும் அதற்கு ஆகஸ்ட் ஒன்று வர வேண்டுமே
ஆமாம் அதற்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது ?

திருமதி கேபுலட் :

அதற்கு இன்னும் இரண்டு வாரங்களும்
சில ஒற்றை நாட்களும் உள்ளன

செவிலி:

ஒற்றையாக இருந்தாலும் இரட்டையாக இருந்தாலும்
ஜுலை முப்பத்தி ஒன்று வந்தால் அவளுக்கு
பதினான்கு வயது ஆகிவிடும்

ஜுலியும் என் மகள் சூசனும்

(சூசன் அவள் ஆன்மா கடவுளுக்குள் அடங்கிவிட்டது ஆனால்
அவள் இறந்து விட்டாள் அவள் எனக்குள் அடங்காத அற்புதம் )

ஆமாம் நான் ஏற்கனவே சொன்னது போல
ஜுலை வந்தால் ஜுலியட்டிற்கு வயது பதினான்கு
ஆமாம் அவளுக்கு வயது பதினான்கு தான்
அது நன்றாக எனக்கு ஞாபகம் இருக்கிறது.

அது நடந்தது
ஆமாம் புவி அதிர்ச்சி நடந்து
பதினொரு ஆண்டுகள் கழிந்த பின்னர் தான்
அந்த நிகழ்ச்சி நடந்தது.

அன்று தான் அவள் என் மார்பிலிருந்து
பால் உறிஞ்சியதை நிறுத்தய நாள்.
அதை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது.

ஆமாம் அன்று தான் நான் என் மார்பில்
கசப்பு மருந்தை தடவிட்டு
புறா வீட்டுச்சுவரில் சாய்ந்தபடி
சிறிது நேரம் வெய்யிலில் உட்கார்ந்திருந்தேன்.

நீங்களும் உங்கள் கணவரும் அப்பொழுது
மாண்டுவாவில் இருந்தீர்கள்
ஓ எனக்குத் தான் என்ன அற்புதமான ஒரு நினைவாற்றல் !

ஆமாம் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
ஜுலியட் என் மார்புக்காம்புகளில் வாய் வைத்து
பால் குடிக்க முயற்சி செய்தாள் .

அது அப்படி கசந்தது விட்டது போல அவளுக்கு
அதன் மீது அவ்வளவு கோபம் வந்து விட்டது அவளுக்கு

அப்போது தான் நில நடுக்கம் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது .
புறா வீடே கட கடவென்று ஆடத் தொடங்கியது.

நீங்கள் என்னை அந்த வீட்டுக்குப் போகாதே என்று சொல்லவேயில்லை.
அது நடந்து பதினோரு வருடம் ஆகிவிட்டது.
ஆனால் நேற்று நடந்தது போல் நினைவில் நிற்கிறது.

ஜுலியட் அப்போது தான் எழுந்து நிற்கப் பழகியிருந்தாள். உண்மையைச் சொன்னால் எப்போதும்
அந்த இடத்தை சுற்றி ஓடி ஆடிக்கொண்டு தான் இருப்பாள்.

ஏனென்றால் அதற்கு முதல் நாள் தான்
அவள் கீழே விழுந்து தன் நெற்றியை
காயப்படுத்திக் கொண்டாள்.

என்னுடைய கணவர் ரொம் ஜாலியான பேர் வழி

( ஆனால் கடவுள் அவரை எடுத்துக் கொண்டார் )

அவர் ஜுலியட்டை தூக்கி விட்டு

‘’ முகம் குப்புற விழுந்திட்டியா ஜுலியட்
ஆனா நல்லா வளர்ந்ததுக்கு அப்புறம்
நீ குப்புற விழுக மாட்ட மல்லாக்க விழுவதான ?
என்று கிண்டலாக கேட்டார் .

உடனே அழுகையை நிறுத்திட்டு
இந்த குட்டி என்ன சொல்லுச்சு தெரியுமா
‘’ ஆமா ‘’ அப்டின்னு

அய்யோ எனக்கு சிரிப்புன்னா சிரிப்பு
அப்படி ஒரு சிரிப்பு
ஆயிரம் வருசம் ஆனாலும்
அதை என்னால மறக்கவே முடியாது பாருங்க

அவர் கேட்கிறார் இல்லையா ஜுலி ? அப்டின்னு
அவள் சொல்லுறா ஆமா ஆமா
( சிரிப்பு சிரிப்பு )

திருமதி கேபுலட்
போதும் நிறுத்து இந்தக் கதையை

செவிலி

சரி மேடம் ஆனா அதை நினைக்கும் போது
என்னால சிரிப்பை அடக்கவே முடியாது.
அவர் கேட்குறார் ‘’ இல்லையா ஜுலி ?’’

இவள் உடனே அழுகையை நிறுத்திட்டு
சொல்லுறா ஆமா ஆமா “

இவள் நெற்றியை பார்த்தா
பூசனிபோல பொம்முன்னு வீங்கியிருக்கு.
என்னோட புருசன் கேட்குறார்
‘’ முகம் குப்புற விழுந்திட்டியா ஜுலியட்
நல்லா வளர்ந்ததுக்கு அப்புறம் நீ மல்லாக்க விழுவதான ?

உடனே இந்தக்குட்டிப் பிசாசு
அழுகையை நிறுத்திட்டு சொல்லுது ‘’ ஆமா ஆமா ‘’

ஜுலியட்
அம்மா தாயே இந்தக் கதையை இத்தோட நிறுத்துறியா?

செவிலி

என் சிரிப்பு தன்னால நின்னு போச்சுன்னா
நான் நிறுத்திடறேன்.
இல்லேன்னா என்னால நிறுத்த முடியாது.

ஆனால் நான் வளர்த்த குழந்தைகள்ளயே
அழகான குழந்தை நீ தான்.
நீ கல்யாணம் பண்ணிக்கிறதை மட்டும்
நான் என் கண்ணால பார்த்துட்டேன்னா
என்னோட எல்லா ஆசையும் நிறைவேறிடும்

திருமதி கேபுலட்

சரி தான் சரிதான் திருமணத்தைப் பற்றி தான்
நான் உங்களோடு உரையாட வேண்டுமென்று
நினைத்திருந்தேன்.

ஜுலியட் என் செல்ல மகளே நீயே சொல்லு
திருமணம் செய்து கொள்வதைப்பற்றி
நீ என்ன நினைக்கிறாய் ?

ஜுலியட்

உண்மையைச் சொன்னா அதைப்பற்றி
நான் ஏதும் நினைக்கவேயில்லை

செவிலி

உண்மையைச் சொல் ஜுலி
நீ புத்திசாலிப்பெண் இல்லையா ?

அதுவும் என் மார்பிலிருந்து நீ பாலை உறிஞ்சிய போதே
எங்கிட்ட இருந்த அறிவையும் சேர்ந்து
உறிஞ்சிக்கிட்டவ தான நீ
இல்லையா ?

திருமதி கேபுலட்

ஆனால் திருமணத்தைப்பற்றி
இப்பொழுது யோசிக்க வேண்டும் ஜுலியட்

வெரோனாவில் உன்னை விட இளைய வயதுடைய
உயர்குடிப் பெண்களெல்லாம்
திருமணம் செய்து கொண்டு
ஏற்கனவே தாயாகி விட்டார்கள்

ஏன் உன்னுடைய வயதில் நானும்
உனக்கு தாயாகித்தான் இருந்தேன்.

ஆனால் நீ தான் இன்னும்
கன்னியாகவே இருக்கிறாய்

சுருக்கமாகச் சொன்னால்
வீரமிக்க கோமான் பாரிஸ்
உன்னை மணந்து கொள்ள
விருப்பமுடன் இருக்கிறார்.

செவிலி

ஆஹா மிக சிறந்த மனிதர்
செதுக்கி வைத்த சிலை போன்றவர்
உலகமெல்லாம் தேடினாலும்
உனக்கு இப்படி ஒரு ஜோடி அமையாது ஜுலிப் பெண்ணே

திருமதி கேபுலட்

வசந்தத்தில் இப்படி ஒரு மலர்
வெரோனாவில் மலர்ந்ததேயில்லை.

செவிலி
மலரா ? வெறும் மலர் என்று சொல்லாதீர்கள்
அழகிய மலர் என்று சொல்லுங்கள்

திருமதி கேபுலட்

என்ன சொல்கிறாய் ஜுலியட் ?
அவரை நீ காதலிக்கிறாயா ?
இன்று நமது வீட்டில் நடக்கும் இரவு விருந்தில்
அவரும் கலந்து கலந்து கொள்கிறார்.
அங்கே அவர் முகத்தை நீ நன்றாகப் பார்.
அவரது அழகை ரசி

எப்படி அவரது ஆளுமை
அவரது அழகை மெருகூட்டுகிறது என்பதை
கண்டு கொள்.
அவரது அழகு உன் கண்களுக்கு
தெரியவில்லையென்றால்
அவரது கண்களை உற்று நோக்கு

அவரது அழகு இன்னும்
முழுமையடையாமல் இருந்தால்
அதற்கு முழுக் காரணம்
அழகிய மணப்பெண் இன்னும்
அவருக்கு அமையவில்லை
என்பது தான் அர்த்தம்

எப்படி மீனானது கடலில் இருந்து மறைந்து கொள்ள முடியாதோ
அது போலத்தான் உன்னைப்போன்ற அழகிய பெண் அவரைப்போன்ற அழகனிடம் இருந்து
ஓர் நாளும் மறைந்து கொள்ள முடியாது.

அவரை அனைவரும் அழகன் என்றே சொல்கின்றனர்.
அவருக்கு யார் மணமகளாப் போகிறார்களோ
அந்த அதிர்ஷ்ட சாலியை அவர்கள் பேரழகி என்று
கொண்டாடப் போவது உறுதி.

நீ அவரை அடைவதால்
அனைத்தையும் பெற்றுக்கொள்வாய்
இதில் இழப்பதற்கு எதுவுமில்லை

செவிலி

இழப்பதற்கு ஒன்றுமேயில்லை.
ஆனால் அடைவதற்கு நிறைய உண்டு
முதலில் நீ குண்டாகி விடுவாய்.
ஆமாம் ஆண்கள் தானே
பெண்களை குண்டாக்குகிறார்கள்.

திருமதி கேபுலட்

பதில் சொல் ஜுலி
நீ அவரை காதலிக்கிறாயா ?

ஜுலியட்

நான் அவரை நேசிக்க வேண்டும் என்ற நினைப்பில் தான் அவரைப்பார்க்கப் போகிறேன்.
ஆனால் அந்தப் பார்வை என்னை அவரிடம்
அழைத்துச் சென்றால் அவரை விரும்புவேன்.
அப்படி இயற்கையாய் நிகழாத போது
நானாக என் இதயத்தை
அவரிடம் இழந்து விட மாட்டேன்.
உன் அனுமதி இல்லாமல் ஒரு நாளும்
நான் அவரிடம் நெருங்க மாட்டேன் அம்மா

பணியாள்.

சீமாட்டியே !
விருந்தினர்கள் எல்லாம் வீட்டிற்குள் வந்து விட்டனர்.
அவர்களுக்கு அங்கே உணவு பரிமாறப்படுகிறது.
உங்கள் விருந்தினர்கள் உங்களையும் ஜுலியட்டையும்
உடனே வரச்சொல்கின்றனர்.
அங்கே பணியாட்கள் எல்லாம் செவிலியை திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

விசயங்கள் கை மீறிப்போய்க்கொண்டிருக்கின்றன.
நான் உடனே அங்கே சென்று
அவர்களுக்கு விருந்து பரிமாற வேண்டும்.
நீங்களும் உடனே அங்கே வரவேண்டும்.

( அப்போது பீட்டர் உள்ளே நுழைகிறான்.)

திருமதி கேபுலட்.

ஜூலி ! பிரபு பீட்டர் அங்கே உனக்காக காத்திருக்கிறார்

செவிலி

அங்கே செல் பெண்ணே
இனிய இரவுகள் உனக்கு
இனிய பொழுதுகளை உனக்குத் தரட்டும்

(அனைவரும் மேடையிலிருந்து மறைகிறார்கள்)

மூலம் : ஷேக்ஸ்பியர்
மொழயாக்கம் : தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம்  (இன வெறி அறியா காதல் – பாகம்1) : தமிழில் – தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (இன வெறி அறியா காதல் – பாகம்1) : தமிழில் – தங்கேஸ்




இடம் : வெரேனா வீதி
பொழுது – பகல்
பாத்திரங்கள்
கேபுலட் குடும்பத்தின் வேலைக்காரர்கள்
சாம்சன் மற்றும் கிரிகரி
கேபுலட்அவர் மனைவி திருமதி கேபுலட்
மற்றும் உறவினன் டைபால்ட்

மூத்த மாண்டேக் அவர் மனைவி திருமதி மாண்டேக்
மற்றும் அவர்களின் உறவினர் பென்வாலியோ மற்றும் ​ரோமி​யோ ,
மாண்டேக்கின் வேலைக்காரர்கள் ஆப்ரம் மற்றும் செர்விங்கம்
பொதுமக்கள் மற்றும் வெரோனாவின் அரசன் எஸ்கேலஸ் ஆகியோர்

, Shakespeare’s
Romeo and Juliet
தமிழ் மொழியாக்கம்

முன்னுரை
கதை சூழல் :

வெரோனா ஒரு அழகிய இனிய நகரம் .அங்கே இரண்டு பெரும்
குடும்பங்களுக்கு இடையே தீராப் பகை எப்போதும் கொழுந்து விட்டு
எரிந்து கொண்டிருக்கிறது.ஒன்று மாண்டேக் (ரோமியோ குடும்பம்)
மற்றொன்று கேபுலட் (ஜூலியட் ). இந்தப் பிரபுக்கள் குடும்பங்களின்
குலப்பகை அந்த நகரத்தையே ஆட்டிப்படைக்கிறது.

இன வெறி அறியா காதல் :
ரோமியோ மாண்டேக் குடும்பத்தை சேர்ந்த பதினாறு வயது இளைஞன்
அழகன் வீரன். இவன் ரோசலின் என்ற அழகி மீது காதலில் விழுகிறான்.
அவள் கேபுலட் குடும்பத்தின் உறவினள். ஆனால் ரோசலின்
ரோமியோவின் காதலை அங்கீகரிக்கவில்லை. அவளது அன்பை பெறாத
ரோமியோ ஒரு பைத்தியம் போல புலம்பிக் கொண்டு திரிகிறான். அவன்
பெற்றோர்களுக்கு அது கவலையளிக்கிறது. காரணத்தை கண்டுபிடி என்று
ரோமியோவின் நண்பர்களை வேண்டுகிறார்கள். ரோமியோவின்
நண்பர்கள் ரோசலின் என்ற அழகி தான் காரணம் என்று
கண்டுபிடிக்கிறார்கள்.

காட்சி தொடங்குகிறது

( கேபுலட் குடும்பத்தின் வேலைக்காரர்கள் சாம்சன் மற்றும் கிரிகரி
ஆகிய இருவரும் மாண்டேக்கின் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின்
குடும்பத்துப் பெண்கள் பற்றியும் மிகவும் தரக்குறைவான கொச்சையான
மொழியில் ​பேசிக்கொண்டே வீதியில் நடந்து சென்று
கொண்டிருக்கிறார்கள் )

சாம்சன் : நான் உண்மை​யை சொல்றேன் அவங்க குப்பையை
நாம சுமக்க முடியாது

கிரிகரி: ஆமா அப்படி சுமந்தா நாம குப்பைக்காரங்களா மாறிடுவோம்

சாம்சன் : நான் என்ன சொல்ல வர்றேன்னா அவங்க நம்மளை
வெறுப்பேத்துனா உடனே நாமளும் நம்மை வாளை உருவிடனும்
கிரிகரி நீ வாளை உருவறதெல்லாம் இருக்கட்டும். முதல்ல
சட்டைக்காலர்ல இருந்து உன் கழுத்தை உருவு.
அது உள்ள முங்கிப்போய் கிடக்குது.

சாம்சன் : இ​தோ பாரு எனக்கு கோபம் வந்தா உடனே அடிச்சிருவேன்.

கிரிகரி : ஆனா உனக்குத்தான் கோபமே வராதே

சாம்சன் : யாரு ​சொன்னா எனக்கு பயங்கரமா கோபம் வரும்.
மாண்டேக் வீட்டு நாயைப்பார்த்தாக் கூட போதும்
அப்படி​யே……..

கிரிகரி : பயந்துகிட்டு அப்படியே ஓடிப்போயிருவ அதுதான சொல்ல வர்ற?

சாம்சன் : இல்​லை எனக்கும் பயங்கரமா கோபம் வரும்னு சொல்ல
வர்றேன்

கிரிகரி : உனக்கு பயங்கரமா​கோபம் வருமா ? கோபம் வந்தா எப்படி
வரணும் தெரியுமா ? கர்ண கொடூரமா வரனும் கடைசி
வரைக்கும் எதிர்த்து நிக்கனும் முடியுமா உன்னால ?

சாம்சன் : அட உனக்கு இன்னும் புரியலையா ? அந்த வீட்டு
நாயைப்பார்த்தாக்கூட போதும் அடங்காத கோபத்துல அப்டியே
நின்னுடுவேன்.
நாயைப் பார்த்தாலே அப்படின்னா அப்ப மனுசங்களைப்
பார்த்தா எப்படின்னு நீ புரிஞ்சுக்கோ
எதிரியோட ஆளுங்க அது ஆணோ பொண்ணோ எதிர்ல
பார்த்துட்டேன் அவ்வளவு தான் என்ன செய்வேன்னு எனக்கே
தெரியாது.

கிரிகரி : என்ன செய்வ ?

சாம்சன் : அப்படியே சுவரோரம் மறிச்சு நின்னுகிட்டு அவங்களை
சாக்கடையில தான் நடக்க விடுவேன்

கிரிகரி : இதுலயிருந்தே நீ சோதாப்பயன்னு தெரியுதா ?
சொத்தைப் பயல்கள் தான் எப்பவும் இப்படி சுவரோரம்
ஒதுங்குவாங்க
முழிக்காத சுவரோரம் ஒதுங்குனா நாம வீக்குன்னு அர்த்தம்
தெரியும்ல

சாம்சன் : ( கிண்டலாக ) அதனால தான் அந்த வீட்டுப் பொம்பளைங்க
எல்லாம் சுவர் பக்கம் ஒதுங்குறாங்களா ?
ஆனா எனக்கு அதெல்லாம் தெரியாதுப்பா அந்த வீட்டு
ஆம்பளங்களப் சுவரோரமாப் பார்த்தா ஆக்ரோஷமா மோதி
அப்படியே தெருவுல தள்ளி விடுவேன் ஆனா அதுவே
பொம்பளங்கன்னு வச்சுக்கோ அப்படியே அந்தப் பக்கம்
தள்ளிட்டுப் போயி …..

கிரிகரி : இதோ பார் சண்டை நம்ம எசமானர்களுக்குள்ள தான்
நாமெல்லாம் அவங்களோட வேலைக்காரங்க அதப்புரிஞ்சுக்கோ

சாம்சன் : ஆனா எனக்கு எல்லாமே ஒண்ணு தான். நான்
ஆம்பளைகளோட சண்டை போட்டா அப்படியே புயல் மாதிரி
பொங்குவேன் ஆனால் சண்டையே
பொம்பளைகளோடன்னு வச்சுக்கோ பூ மாதிரி குளிருவேன்
ஆனால் ஒண்ணு பொம்பளையா இருந்தாலும் கோபம்
வந்திருச்சா அவங்க தலையை சீவாம விடமாட்டேன்

கிரிகரி : என்னது அவங்களுக்கு தலை சீவி விடுவியா ?

சாம்சன் : தலையையும் சீவுவேன் சில நேரம் தலை முடியையும்
சீவி விடுவேன் அது அப்ப அப்ப மாறும் என் மனநிலையைப்
பொறுத்தது .
நீ எடுக்க வேண்டிய அர்த்தத்துல எடுத்துக்கோ எனக்கு அதப்
பற்றி கவலை இல்லலை

கிரிகரி : ( சனங்களைப் பார்த்து ) பெண்களே உஷார் இவனை
கொஞ்சம் கவனிச்சுக்கோங்க

சாம்சன் : ( இரட்டை அர்த்தத்தில் ) அவங்க என்னை கவனிக்க
ஆரம்பிச்சிட்டாங்கன்னா அப்புறம் கவனிக்கிறதை
நிறுத்தவே மாட்டாங்க. கடைசில என்னை ஒரு கம்பீரமான
ஆண் அப்டின்னு சொல்லிட்டுத்தான் போவாங்க

கிரிகரி : நல்ல வேளை அவங்க உன்னைய நல்ல ஆண்ணு
சொன்னாங்க நல்ல மீன்னு சொல்லியிருந்தா யாராவது உப்பு
மசாலாவை உன் மேல தடவி அப்படியே பொறிச்சு
சாப்பிட்டிருப்பாங்க
( அப்போது மாண்டேக்கின் வேலைக்காரர்கள் ஆப்ரம் மற்றும் செர்விங்கம்
இருவரும் எதிரே வந்து கொண்டிருக்கிறார்கள் )

கிரிகரி : உன்னேட ஆயுதத்தை உடனே உருவு . அதோ மாண்டேக் வீட்டு
வேலைக்காரங்க எதிர்ல வர்றாங்க

சாம்சன் : ( சட்டென்று பயந்து போய் ) அடடா இப்பா பார்த்து நான்
நிராயுதபாணியா நிக்கிறேனே. பரவாயில்லை நீ அவங்களோட
போயி மோது. நான் உனக்கு உதவுறேன்.

கிரிகரி : (கிண்டலாக ) எனக்கு எப்படி உதவுவ அவங்க பக்கத்துல வந்த
உடனே அப்படியே தலைதெறிக்க ஓடிப்போயிருவ அதானே ?

சாம்சன் : நீ என்னைப் பத்தி எதுவும் கவலைப்படாத

கிரிகரி : என் கவலையே உன்னைப்ப்ற்றித்தான்

சாம்சன் : சரி சரி நாமளா முதல்ல சட்டத்தை மீற வேண்டாம் .
சண்டையை முதல்ல அவங்களே ஆரம்பிக்கட்டும்.

கிரிகரி : கேட்டுக்கோ அவங்க நம்ம பக்கத்துல வரும்போது அவங்களைப்
பார்த்து நான் என் கட்டை விரலை கடிப்பேன் .அத அவங்க
எப்படி வேணாலும் எடுத்துக்கட்டும் அதப் பற்றி எனக்கு கவலை
இல்லை.

சாம்சன் : இல்லை நான் என் கட்டை விரலை அவங்களைப் பார்த்து
கடிக்கப் போறேன்.அது அவங்களுக்கு பயங்கரமான
அவமானம்., அத மட்டும் அவங்க பொறுத்துகிட்டாங்கன்னா
அவங்க ஆம்பளங்களே கிடையாது
( சாம்சன் அவர்களைப் பார்த்து கட்டை விரலை கடிக்கிறான் )
ஆப்ரம் : (சாம்சனைப் பார்த்து ) எங்களைப் பார்த்து உன் கட்டை விரலை
கடிச்சியா ?

சாம்சன் : என் கட்டை விரலை நான் கடிச்சேன்

ஆப்ரம் : (சாம்சனைப் பார்த்து ) எங்களைப் பார்த்து உன் கட்டை விரலை
கடிச்சியா ?
சாம்சன் (கிரிகரியைப் பார்த்து ) இந்தக் கேள்விக்கு நான் ஆமான்னு பதில்
சொன்னா சட்டம் நம்ம பக்கம் இருக்குமா இல்ல அவங்க பக்கம்
இருக்குமா

கிரிகரி : அவங்க பக்கம் தான்

சாம்சன் (ஆப்ரமைப் பார்த்து ) நான் என் கட்டை விரலை கடிச்சேன்
ஆனா உன்னைப் பார்த்து கடிக்கலை

கிரிகரி : (ஆப்ரமைப் பார்த்து ) இதுக்காக நீங்க சண்டையை ஆரம்பிக்கப்
போறீங்களா ?

ஆப்ரம் : இல்லையே

சாம்சன் : ஆரம்பிச்சாலும் அதப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை.
நாங்க யார்னு அப்பத்தான் உங்களுக்குத் தெரியும்

ஆப்ரம் : எங்களுக்குப் பயமில்ல

சாம்சன் : பார்க்கலாமா ?
( அப்போது மாண்டேக்கின் உறவுக்காரன் பென்வாலியோவும் மறுபுறம்
கேபுலட்டின் உறவுக்காரம் டைபால்ட்டும் அங்கே உள்ளே நுழைகின்றனர் )

கிரிகரி : ( சாம்சனிடம் ) இதோ நம்ம முதலாளியோட உறவுக்காரர்

சாம்சன் : ( ஆப்ரமிடம் ) மோதிப் பார்க்கலாமா ?

ஆப்ரம் : பொய் சொல்லாத
சாம்சன் (ஆப்ரமைப் பார்த்து ) நீ ஆம்பளையா இருந்தா வாளை உருவு
( கிரிகரியைப் பார்த்து ) எப்படி அடிச்சு நொறுக்கப்போறேன்னு
வேடிக்கை பாரு

பென்வாலியோ : ( வாளை உருவியபடியே ) நிறுத்துங்க அப்படியே
தள்ளிப்போங்க முட்டாள்களே நீங்க என்ன செய்றீங்கன்னு
உங்களுக்கே தெரியலை

( அப்போது கேபுலட்டின் உறவுக்காரன் டைபால்ட் அங்கே வருகிறான் )
டைபால்ட் (பென்வாலியோவைப் பார்த்து ) பென்வாலியோ போயும்
போயும் இந்தப் புள்ளைப் பூச்சிகள்ட்ட மோதப் போறியே உனக்கு
வெக்கமாவே இல்ல . இங்க திரும்பு உன்னை கொல்லப்போறவன்
இங்க நிக்கிறேன்.

பென்வாலியோ : ( டைபால்ட்டைப் பார்த்து ) நான் இவங்களை
அமைதிப்படுத்திக்கிட்டுத்தான் இருக்கேன். ஒண்ணு உன் வாளை
அந்தப்பக்கம் வீசு . இல்லை இவங்களை அமைதிப்படுத்துறதுக்கு
எனக்கு உதவி செய்
டைபால்ட் (பென்வாலியோவைப் பார்த்து ) என்னது வாளை வச்சுகிட்டு
சமாதானம் பேசுறியா ?

நரகம்ங்கற வார்த்தையை நான் எப்படி வெறுக்கிறோனோ அது
போலத்தான் சமாதானம்அப்டிங்கற வார்த்தையையும் நான்
வெறுக்கிறேன்- அது போலத்தான் மாண்டேக் அனைவரையும்
நான் வெறுக்கிறேன். இன்னும் மோதாம நின்னுகிட்டே
இருக்கிற ஒரு கோழை

( அங்கே ஒரு பயங்கரமான சண்டை ஆரம்பிக்கிறது )
( பொதுமக்கள் நிறையப்போர் உள்ளே நுழைந்து சண்டையில் பங்கேற்க
ஆரம்பிக்கிறார்கள் )
பொதுமக்கள் ( களேபரமான குரலில் ) கம்புகளை எடுங்கள் . கழிகளை
எடுங்கள். வாட்களை உருவுங்கள் வேட்களை வீசுங்கள்.
கேபுலட்டுகளை வீழ்த்துங்கள் மாண்டேக்குகளை மண்ணோடு
சாயுங்கள் ..
( அப்போது மூத்த கேபுலட் கவுண் உடையிலும் அவர் மனைவி திருமதி
கேபுலட்டும் சாரட் வண்டியில் வருகிறார்கள். அங்கே நடக்கும்
நிகழ்வுகளைப் பார்தது மூத்த கேபுலட் கோபமடைகிறார்
மூத்த கேபுலட் ( தன் மனைவியிடம் ) என்ன அங்கே ஒரே கூச்சல்
உடனே என் வாளை எடு

திருமதி கேபுலட் : இப்ப உங்களுக்தேவை ஊன்று கோல் தான் வாள் அல்ல
( அப்போது அங்கே மாண்டேக்கும் மாண்டேக்கின் மனைவியும்
வருகிறார்கள் )
மாண்டேக் ( தன் மனைவியிடம் ) உடனே என் வாளை எடு அதோ
முதிய கேபுலட் தன் வாளை உருவி வீசிக் கொண்டிருக்கிறான்,

அதைப்பார்தத்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கிறது.

( கேபுலட்டைப் பார்த்து ) வாடா என் எதிரியே
( மாண்டேக்கின் மனைவி தடுக்கிறாள் அவளைப் பார்த்து ) உடனே
என்னைப் போகவிடு அந்த கூட்டத்தோடு மோத விடு

மாண்டேக்கின் மனைவி : உங்கள் எதிரியை நோக்கி இன்னும் ஒரு எட்டு
கூட நீங்கள் எடுத்து வைக்க கூடாது.
( அப்போது அந்த நாட்டின் அரசன் எஸ்கேலஸ் தன் அவையோரோடு
அங்கே வருகிறான் )

அரசன் எஸ்கேலஸ் : ( கோபத்தில் கலவரக்காரர்களை நோக்கி
கத்துகிறான் )
அமைதிக்கு எதிரிகளே முதலில் அடங்குங்கள் .
உங்கள் ஆயுதங்களை அடுத்தவன் கழுத்திலா பாய்ச்சுவது ?
மனிதர்களா அல்லது விலங்குகளா நீங்கள் ? நான் கத்துவது

உங்களுக்கு கேட்கிறதா இல்லையா ?

உங்கள் கோபத்தின் தாகத்தை தீர்த்துக்கொள்ள அடுத்தவனின் இரத்த
நாளத்தை கீறி அங்கே நீறுற்று போல பீறிடும் குருதியை அள்ளி அள்ளி
குடிப்பீர்களா ?
உங்கள் கரங்களை பாருங்கள். இரத்தக்கறை படிந்த ஆயுதங்கள்
அடுத்தவர்களுக்கு வலியை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கும்
அவைகளை உடனே விட்டெறியுங்கள்
உடனே அதை தூக்கியெறியுங்கள் அல்லது அதிகபட்ச தண்டனையை
வழங்க நேரிடும்
( அனைவரும் ஆயுதத்தை கீழே போடுகிறார்கள் )
மூன்று முறை இந்த நகரத்தில் கலவரம் வெடித்துவிட்டது. காரணம்
உங்கள் அலட்சியம் தான்.

கேபுலட் மாண்டேக் மூன்று முறை நீங்கள் இருவரும் இந்த நகரத்தின்
அமைதியை குலைத்திருக்கிறீர்கள்.
இந்த நகரத்தின் மிக மேன்மையாக குடிமக்கள் தங்கள் கண்ணியமான
ஆடைகளை களைந்து விட்டு போருக்கு புறப்படும் ஆடைகளை
பூட்டிக்கொண்டு, வாள் கேடயங்களோடு வந்து உங்கள் சண்டையை
விலக்கி விட வேண்டியதிருந்தது.
இன்னும் ஒரு முறை இந்த நகரத்தில் நீங்கள் கலவரத்தை
தோற்றுவித்தீர்களானால் உங்கள் உயிர்களை நீங்கள் இழக்க
வேண்டியதிருக்கும் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
உங்கள் வெறுப்பை விழுங்கி விழுங்கி அமைதியின் நகரமே தன்
புனிதத்தை இழந்து விட்டது.
(கேபுலட்டைப் பார்த்து ) கேபுலட் உடனே நீ என்னுடன் அவைக்கு
வரவேண்டும்
( மாண்டேக்கைப் பார்த்து ) மாண்டேக் நீ மாலை என்னுடைய பழைய
அரசவைக்கு வரவேண்டும், என்னுடைய தீர்ப்பை நான் அங்கே
உரைப்பேன். உனக்காக அங்கே உத்தரவுகள் காத்திருக்கின்றன. மறக்க
வேண்டாம்
( கேபுலட் மாண்டேக் இருவரையும் பார்த்து ) இன்னொரு முறை இங்கே
கலவரத்தை விளைவித்தால் உங்கள் உயிர்களுக்கு இங்கே
உத்தரவாதமில்லை. உயிர்களை வாதை செய்யும் இந்த இடத்திலிருந்து
உடனே எல்லோரும் கலைந்து செல்லுங்கள்
( அனைவரும் அந்த இடத்தை விடடு கலைந்து செல்கிறார்கள் )

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் தமிழில் – தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் தமிழில் – தங்கேஸ்



வில்லியம் ஷேக்ஸ்பியரின்
ரோமியோ ஜுலியட்

முன்னுரை
கோரஸ்

அழகிய வெரோனோ நகரம் , அங்கே ஆரம்பிக்கிறது இந்த காதல் கதை. ..இரண்டு உயர்ந்த குடும்பங்கள். இரண்டுமே சகலத்திலும் சரி சமமானவை..ஆனால் ஆதியிலிருந்தே அவைகளுக்குள் தீராப்பகை. பழைய பகை புதிய கலவரத்தில் கலவரத்தில் முடிகிறது- இரத்த ஆறு ஓடுகிறது. விளைவு மனிதர்கள் சக மனிதர்களின் இரத்தத்தினால் தங்கள் கரங்களை கறைபடுத்திக்கொள்கிறார்கள்

இந்த இரண்டு எதிரிகளின் குடும்பத்திலிருந்தும் இரண்டு அப்பாவி குழந்தைகள். ஆனால் அதிர்ஷ்டமற்றவர்கள்.ரோமியோ ஜுலியட் … கள்ளம் .கபடமற்ற காதலர்கள் . விதி அவர்களின் வாழ்வில் காதலாக விளையாடுகிறது. அவர்களை காதலிக்க வைத்த அதே காதலின் விதி தான் இறுதியில் அவர்களை மரணிக்கவும் வைக்கிறது. தங்கள் குழந்தைகள் தங்களின் பகைமைக்கு பலியானதை கண்ட பிறகு பெற்றோர்கள் தங்கள் தீராப் பகையை குழிதோண்டி புதைக்கிறார்கள்.

இரண்டு மணி நேரங்கள் அந்த அதிர்ஷ்டமற்ற காதலர்கள் இந்த மேடையில் தோன்றி தங்கள் காதலை அரங்கேற்றப் போகிறார்கள்..

அவர்களின் காதலை எது ஒன்றும் தடுக்கப்போவதில்லை அவர்களின் மரணத்தை தவிர.
இரண்டு மணி நேரங்கள் நீங்கள் பொறுமையாக இந்த மேடையில் அந்தக் காதலர்களை கவனித்தால் இங்கே நாங்கள் அவர்களைப் பற்றி சொன்னது எது ஒன்றையும் நீங்கள் தவறவிடப்போவதில்லை என்று உறுதியளிக்கிறேன்.

மூலம் ; வில்லியம் ஷேக்ஸ்பியரின்
மொழியாக்கம் ; தங்கேஸ்

( தொடரும் )