தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

" சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள் "என்றார் மாசேதுங். கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி. பைபிளுக்கு பிறகு உலக மொழிகளில் அதிகமாக பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் அவர் எழுதிய 'தாய்' நாவல். இந்நாவலுக்கு…
அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      சோஷலிச சமுதாயக் கனவு ‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக் கொண்ட அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பால், பெண்கள் முடிவே இல்லாத உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். நேர விரயம், உடல்நலம் மற்றும் மனநல பாதிப்புக்கு…
katturai: ulagai ulukkum thaniyar raanuva koolippadaikal - a.bakkiyam கட்டுரை: உலகை உலுக்கும் தனியார் ராணுவ கூலிப்படைகள்- அ.பாக்கியம்

கட்டுரை: உலகை உலுக்கும் தனியார் ராணுவ கூலிப்படைகள்- அ.பாக்கியம்

ரஷ்யாவின் வாக்னரும் அமெரிக்காவின் பிளாக் வாட்டரும் ரஷ்யாவில் இயங்கி வரும் தனியார் ராணுவப் கூலிப்படையான வாக்னர் குழுவும், அதன் தளபதி ஜெனியே பெர்கோஷினும்தான் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய யுத்தத்தின் விவாத பொருளாக இருக்கின்றனர். குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க ஊடகங்கள்…
Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

நூலகாலஜி – 2 நூலகமே வெல்லும்… – ஆயிஷா. இரா. நடராசன்



Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்
விளாதிமிர் வெர்னாட்ஸ்கி

ரஷ்ய – உக்ரேனிய  யுத்தத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் விளாதிமிர் வெர்னாட்ஸ்கியை  நினைக்கிறேன். சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இணையாக நான் மதிக்கும் பெயர். பலரையும் போல வெர்னாட்ஸ்கியை  எனக்கு தேடி எடுத்து அறிமுகம் செய்தவர் தோழர் சிங்காரவேலர்தான். பூகோள-விஞ்ஞானி என்று வெர்னாட்ஸ்கியை  பற்றி நான்கு பாரா அறிவியல் கட்டுரையை நம் சிங்காரவேலர் தொகுப்பில் பார்க்கலாம். தந்தை பெரியாரின் குடியரசு இதழில் அது வெளிவந்திருந்தது. பிஜி தீவுகளில்  தோழர்கள் எஸ். ஏ. டாங்கே, சவுகத் உஸ்மானி, சுபானிமுகர்ஜி  ஆகியோரோடு வெர்னாட்ஸ்கியை  சந்தித்த சிங்காரவேலர்…. டார்வினுக்கு இணையான அறிவியல் மகாஅறிஞர் என்று அவரை ஏற்றதோடு இந்தியா வருமாறு அந்த மாமனிதருக்கு அழைப்பு விடுத்தார் என்று தோழர் எம். பி. டி. வேலாயுதம் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். 

Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

டார்வினின் உயிரிகள் தொடர்பான பரிணாவியல் தத்துவத்தை யாருமே இன்று மறுக்கமுடியாது. ஆனால் ஒரு காலத்தில் அவரது ‘உயிரிகளின் தோற்றம்’  நூல் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகமாக இருந்தது. அதைப்போலவே வெர்னாட்ஸ்கியின் ‘பயோஸ்பியர்’ நூலும்   தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் அந்த இரண்டு புத்தகங்களுமே சிங்காரவேலரிடம் இருந்தது மட்டுமல்ல… மேலும் இரண்டு பிரதிகளை ‘எப்படியோ’ வரவழைத்து அவர் பெரியாருக்கு ஒரு செட் மற்றும் நம்மால் நம்ப முடியாதபடி வீரத்துறவி விவேகானந்தருக்கு ஒரு செட் (இருவரின் நூலையும்) வழங்கி வாசிப்பு ஒரு அரசியல் செயல்பாடு என்பதை செயலில் காட்டியதை வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது. அதுசரி யார் இந்த வெர்னாட்ஸ்கி?.

பரிணாமவியல் வளர்ச்சியை முழுதும் புரிந்து கொள்ளாமல் வெர்னாட்ஸ்கியை நாம் நெருங்கக்கூட முடியாது. பரிணாமவியல்  எனும் அறிவியல் சித்தாந்தத்தை  டார்வின் புவியியல்  உயிரிகளின் தோற்றம்- இன்றுள்ள பல்லுயிர் பெருக்கமாக எப்படி மாறுபாடு அடைந்தது என்பதன்  புதிரை விடுவித்த ஒற்றை சரடாக கண்டடைந்ததை பார்க்கிறோம். பலபல ஆயிரம் ஆண்டுகளாக தங்களது மூதாதை உயிரினங்களில் இருந்து  பலவகை கிளைப்பாதைகள் வழியே இன்றுள்ள தங்களது நிலையை உருவத்தை வாழ்க்கை சுழற்சியை புவியின்  உயிரினங்கள் அடைந்துள்ளன என்று அவரது கோட்பாடு விவரிக்கிறது. பிற்காலத்தில் மரபணுவியல் டார்வின் விட்டுச்சென்ற இடைவெளிகளை மிகக் கச்சிதமாக தனது டி.என்.ஏ வரையறைகள் கோட்பாடுகள் மூலம் நிறைவடைய வைத்து அதை நிரந்தர வளர்ச்சி அறிவியல் துறையாக மாற்றியது. ஆனால் வெர்னாட்ஸ்கி செய்தது என்ன?

வெறும் புவிசார்ந்து மலர்ந்த இந்த கோட்பாட்டை அவர் இந்த முழு பிரபஞ்சம் சார்ந்தும் பொருத்துகிறார். டார்வின் கோட்பாட்டை உள்வாங்கிய பிறகு அதனை அவர் பிற்பாடு விரிவாக்கினார் என பல வரலாற்றாலர்கள் தவறாக பதிவு செய்கிறார்கள். மரபியல்-வேதியியல், வேதிப்பொருட்களின் பரிணாமவியல் வளர்ச்சி, உயிர்ப்பு வேதியியல், வானிலை-நிலவியல் என பல புதிய துறைகளுக்கே வித்திட்ட சோவியத் அறிஞர் வெர்னாட்ஸ்கியின் கண்டுபிடிப்புகள் முழுக்க முழுக்க தன்னிச்சையானவை. அவர் நிலப்பண்பியல் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்தபோது புவி வளர்இயல்  எனும் துறையே பிறந்தது. அவரது கோட்பாடு எதுவும் டார்வின் வழி வந்தது அல்ல. ஆனால் டார்வின் தத்துவத்திற்கு அது உறுதுணையாக நிற்கிறது.

பரிணாம வளர்ச்சி என்பது உயிரிகளோடு மட்டுமே வைத்து பார்க்கப்பட முடியாது என்பதை டார்வினும் ஒப்புக்கொள்கிறார். கார்லைலின் புவிசார்ந்த உருவாக்க நூலை தனது கப்பல் பிரயாணத்தில் வாசித்த அனுபவம்தான் டார்வினையே டார்வினியவாதி ஆக்கியது. ஆனால் அந்த விஷயத்தில் கார்லைல் விட்ட இடத்தில் இருந்து புரிதலை பல படிநிலை மேலே உயர்த்திச் சென்றவர் வெர்னாட்ஸ்கி. புவியின்  பரிணாமம் அவரது நூஸ்பியர் (Noosphre) கோட்பாட்டின் படி மனிதகுரங்கு மனிதனாக மாறிய படிநிலையில் முடிந்துவிடவில்லை. மனிதனால் மனிதனின் தலையீடுகளால் புவியியல் ஏற்படும் விபரீத மாற்றங்களை அவர் 1930-களிலேயே புவி பரிணாமத்தின் அடுத்த படிநிலையாக அறிவித்து சுற்றுச்சூழலியல் புவிவெப்பமடைதல், பருவநிலை மாறுபாடு என     நம் 21-ஆம் நூற்றாண்டு சிக்கல்களை முன் அறிவித்தவர். அதுவும் புவி சார்ந்த பரிணாம படிநிலைகளின் ஒருபகுதி என்று அதிர்ச்சி அளித்தவர் அவர்.

அவரது பயோஸ்பியர் மட்டுமல்ல- நூஸ்பியர், உயிரிகள் குறித்த கல்வியும் புதிய இயற்பியலும் போன்ற நூல்களை நான் வாசித்திருக்கிறேன். மேஹன் ரவுலியார்டு மொழிபெயர்ப்பில் அவை ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. அந்த நூல்கள் எல்லாம் பலரும் நினைப்பதுபோல ரஷ்ய மொழியில் எழுதப்படவில்லை. அவை உக்ரேனிய மொழியில் எழுதப்பட்டவை. புவியின் வாழியல் சூழல் மனிதனின் தோற்றத்தை பரிணாமம் அடைய வைத்த நிலை மாறி மனித தலையீடுகளால் அடுத்த பரிணாமம் தொடங்குவதையும் இவை இரண்டுமாக ஒன்றன் மீது ஒன்று ஏற்படுத்தப்போகும் தாக்குதலையும் வெர்னாட்ஸ்கி முன்மொழிந்த அத்தனை அறிவியல் ஆய்வு கட்டுரைகளும் உக்ரேனிய மொழியில் தான் எழுதப்பட்டன.

 இத்தனைக்கும் வெர்னாட்ஸ்கிக்கு ரஷ்ய மொழி கசாக்கிய மொழி, பிரெஞ்சு ஆங்கிலம், ஜெர்மன் உட்பட எட்டு மொழிகள் தெரியும். தன் அறிவியலை தன் தாய்மொழியில் மட்டுமே எழுதியது அவரது அரசியல் போராட்டம் என்று அறிந்தபோது அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீள பலநாட்கள் ஆனது.

உக்ரேனிய கசாக்கிய முன்னோடி குடும்பத்தில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் பற்றி பிறந்து தாதுஇயல் என்னும் புத்தம் புதிய துறையில் தனது ஆசிரியர் அலெக்ஸி பாவ்லோவால் பட்டப்படிப்பில் இணைய ஊக்குவிக்கப்பட்டவர் அவர். உலகெங்கும் பயணம் செய்த அற்புத விஞ்ஞானி. அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போதும் அறிய பல புகைப்படங்களை காணும்போதும் ஏற்படும் பிரமிப்பு இந்த பூகோளமே என் ஆய்வுக்கூடம் என்று அறிவித்த அவரது துணிச்சலை பறை சாற்றுகிறது. சுவிட்சர்லாந்து, பாரிஸ், லண்டன், முனிக், ஆஸ்திரியா உட்பட ஒரு தனது ஆய்வு நாட்களில் 2 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவை சர்வ சாதாரணமாக நிலவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தியவர் படிகங்களின் ஒளியியல், வெப்பவியல், இழுவை மற்றும் காந்த புலப்பண்புகள்  குறித்து முனிச் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வுகூடத்தில் தனது முதல் கோட்பாட்டை அவர் நிறுவிய ஆண்டில் ரஷ்ய ஜார் மன்னன் உக்ரேனிய  மொழியில் புத்தகங்கள் அச்சிட தடை விதித்ததையும் பெட்ரோ லாவ்ரோ நடத்திய முன்னோக்கி எனும் உக்ரேனிய நாளிதழையும் முடக்கியதையும் அறிந்து கொதிக்கிறார். ரஷ்யமொழியே ஆட்சி மொழி என அறிவித்து ஜார் மன்னன்  இரண்டாம் நிக்கோலஸ் அதை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து அலுவல்களுக்குமான மொழியாக திணித்து அரசாணை வெளியிடுகிறான். உடனடியாக தன் தோழர் உக்ரேனிய எழுத்தாளர் ஷெவ்ஷென் கோவோடு  இணைந்து உக்ரேனிய புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து திரட்டி பாதுகாக்கும் பணிக்காக அவர் நாடு திரும்பினார்.

ஜார் மன்னன் அந்த உக்ரேனிய நூல்களை கைப்பற்றி அழிப்பதற்குமுன் ஆயிரக்கணக்கான நூல்களை தன் அயல் நட்பு வட்டாரத்தின் மூலம் நாட்டுக்கு வெளியே எடுத்துச் சென்றுவிட்டார்.  வெர்னாட்ஸ்கி. உக்ரேனிய மொழிக்கு சம அந்தஸ்து பெறுகிற பிரம்மாண்ட போராட்டத்தில் ஒருபுறம் பங்கேற்றாலும் மறுபுறம் தன் தாய் மொழியான அதனை செம்மைப்படுத்திட உலக கவனத்தைப் பெற பல்வேறு இலக்கிய அறிவியல் முயற்சிகளை மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார் அவர். தோழர் லெனினை சந்தித்து சோவியத் புரட்சிக்கு பிறகு அனைத்து மொழிகளுக்கும் சமஉரிமை பெற்றதோடு அவரது கல்வி மற்றும் பொது எழுத்தறிவு அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அரசின் ஆலோசகர் ஆகிறார். மாஸ்கோவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்  பல்கலைக்கழகம் உக்ரேனிய மொழியில் பேராசிரியர் இன்மையால் பாடத்தை நடத்தமுடியாது என நீக்கிட நிர்வாகம் முடிவுவெடுத்தபோது ஒரு குறிப்பிட்ட மொழியில் பயின்றிட  ஒருவர் இருவரால் கூட முடியாத நிலை இருந்தாலும் அந்த பல்கலைக்கழகத்தையே மூடிவிடுங்கள் என்று லெனின் அறிவித்தது என்ன ஒரு அற்புதம்!. சோவியத் மொழிக்கொள்கையை வகுத்துக் கொடுத்தவர் வெர்னாட்ஸ்கி. அவரவர் மொழியில் கல்வி என்பது முதல் பிரகடனம். போல்ஷிவிக்குகளின்  அக்டோபர் (1917) புரட்சிக்குப் பிந்தைய அரசு சோவியத் மாகாணங்கள்  தேசிய இனங்களின் 130 மொழிகளுக்கும் சமஉரிமை வழங்கும் இரண்டாம் பிரகடனம் சற்றே வித்தியாசமானது. சோவியத் அரசியல் சாசனத்தின்படி மொழி அடிப்படையில் யாரும் யார் மீதும் பாகுபாடு காட்டுவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டது.

 உக்ரேனின் கீவ் நகரில் தினெய்பபர் நதிக்கரையில் டெமிவ்கா எனும் பகுதியில் வெர்னாட்ஸ்கி தனது பிரம்மாண்ட கனவை விதைத்தார். 1918 ஆகஸ்ட் 2 அன்று மிக சிறிய அளவில் தொடங்கிய நூலகம் அது. ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸின் பேரழிவு தடை சட்டத்திடமிருந்து தான்  காப்பாற்றி நாடு கடத்தியும் ரகசியமாக பத்திரப்படுத்தியும்  வைத்திருந்த உக்ரேனிய  புத்தகங்களை அங்கே அவர் அடுக்கத்தொடங்கினார் நாலண்டுகளில் மூன்று லட்சம் புத்தகங்களாக பிரம்மாண்ட கட்டிடமாய் அது வளர்ந்தது. தனது ஆய்வு கட்டுரைகள் நூல்களை ஆண்டுதோறும் கீவ்-தேசிய நூலகத்திலிருந்தே அவர்  வெளியிட தொடங்கினார். பாவ்லோ ஸ்கோரோ பாட்ஸ்கி எனும் ஒப்பற்ற உக்ரேனியா அறிஞரை நூலகராக அவர் கட்டாயப்படுத்தி ஏற்கவைத்தார் 1940ல் கீவ் தேசியநூலகம் உலகப்பிரசித்தி பெற்றது. காரணம் மக்கள் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் மற்றும் மீர் பதிப்பகம் தனது வெளியீடுகளின்  முதல் பிரதிகளை அந்த நூலகத்தில் காட்சிக்கு வைத்தன. ஒரு புத்தகம் அச்சிடப்பட்டால் அது தமிழ் உட்பட 171 மொழிகளில் வந்த அதிசயம் வேறு எப்போதாவது நடந்திருக்கிறதா?

 ஆனால் 1941 நாஜி வெறியரான ஹிட்லர் ஆபரேஷன் பார்பரோஸா எனும் ராணுவ நடவடிக்கை மூலம் சோவியத் மீது ஆக்ரோஷமாக படையெடுத்தார்.  கீவ்-வின்  சில மைல்கள் வரை உள்நுழைந்த ஜெர்மனிய நாஜிப்படை வெர்னாட்ஸ்கியின் உலக பிரசித்திபெற்ற நூலகத்தை தரைமட்டமாக்குவதை தனி நோக்கமாக அறிவித்தது. நான்கு இரவுகள்- வெர்னாட்ஸ்கியும் அவரது தோழர்களுமாக  செய்த வேலையை வரலாறு மறக்காது. சோவியத் ராணுவத்தால் கைவிடப்பட்ட ஒரு வெறும் 32 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் புத்தகங்கள் அனைத்தையும் ஏற்றி ஆறுமுறை வான்வழி குண்டு தாக்குதல்களின் ஊடாக  ஆயிரம்மைல்களுக்கு  அப்பால்  பாஷ்கோடோஸ்தான் எனும் பிராந்தியத்தின்  தலைநகரமான உஃபா (Ufa)வுக்கு ஒரு பள்ளி வளாகத்தில் நூல்களை ரகசியமாக கடத்தினார்கள். இப்பெரும்பயணத்தில் தனது 27 தோழர்களை தீவிர வாசகர்களை மாணவர்களை வெர்னாட்ஸ்கி இழந்தார். நூலகக் கொலைகள் என்றே அவைகளை மக்கள் அழைத்தார்கள்.

ஹிட்லர் படைகளுக்கு எதிராக தனது காலியான கீவ் நூலக வளாகத்தில் இருந்தபடியே பிரம்மாண்ட மக்கள் யுத்தத்தை அவர் தோழர் ஜோசப் ஸ்டாலினோடு தோளோடு தோள் நின்று துவக்கினார். வெறும் சோவியத் படைகள் தனக்கு எதிராக நிற்கும் என்று நினைத்த ஹிட்லரும் அவனது தளபதிகளும் மக்கள் யுத்தம் என்னும் புதிய வகை எதிராளியின் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. 890 நாட்கள் சுற்றிவளைத்து உணவின்றி மக்கள் செத்து மடியட்டும் என்று ஆணையிட்டான். ‘பசித்தே இறத்தல்’ என்பது அந்த ராணுவ நடவடிக்கைக்கு பெயர். ஆனால் மக்கள் நடத்திய முற்றுகைப்போர் (War of Attrition) தாய்மார்கள், குழந்தைகள், கூலி தொழிலாளர்கள், விவசாயிகள், ஓட்டுநர்கள், ஆசிரியர்கள் இன்னும் பிளம்பர், தொழிற்சாலை பொறியாளர், மருத்துவர் என்று யாவரும் நாஜிப் படைகளுக்கு எதிராக கிடைத்ததை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கி துப்பாக்கி குண்டுகளால் துளைத்தாலும் கிளர்ந்தெழுந்து  யுத்தத்தை தேசபக்த போராக (Patriotic War) மாற்றி வென்றது வரலாறு. மூன்றாண்டுகள் தொடர்ந்த கொடிய ரத்தவெறி பிடித்த மகா யுத்தத்தில் மண்ணைக் காத்திட கீவ் நூலக வளாகம் ஒரு போர்படை பாசறையாக அறிவியல் அறிஞர் வெர்னாட்ஸ்கியால் திறம்பட செயல்படப்பட்டது. அப்போது அங்குதான் ரஷ்ய அணு சோதனைகள் செய்வதற்கான வெர்னாட்ஸ்கியின் மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டன.

 இந்த கட்டுரையின் ஆரம்ப வரிக்கு திரும்புவோம். உக்ரேன் ரஷ்ய யுத்தம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த கேள்வி சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாய் நடந்த நம் இந்திய மாணவர் சங்க கல்விக் கருத்தரங்கில்  உரையாற்றி விட்டு வெளியே வந்தபோது மாணவர் சங்க தோழமைகளில் ஒருவரான ஒரு லயோலா கல்லூரி மாணவரால் சாதாரண உரையாடலில் என்னிடம் கேட்கப்பட்டது. வரலாறு முழுவதும் தோளோடு தோள் நின்று களத்தில் வென்ற இரு சகோதரர்கள் அல்லவா உக்ரேனும்-ரஷ்யாவும். ரஷ்யாவுக்கு எதிரான தனது வெறுப்பு ராஜதந்திரத்தின் மூலம் தனது அடிமையான நேட்டோ படையில் பழைய சோவியத் பிராந்தியங்களை ஒவ்வொன்றாய் இணைத்து பணியவைத்த அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் இறுதியாக உக்ரேனையும் இழக்கிறார்கள். தனக்கு எதிரான நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் தன்னை பிராந்திய நில ரீதியில் மூன்று பக்கமும் சூழ்ந்த உக்ரேனும் இணைந்தால் அது தனது பாதுகாப்பு என்ன ஆகும் என பரிதவித்தபடி களம் இறங்கிய ரஷ்யாவை ஆதரிப்பதா அல்லது ரத்தவெள்ளத்தில் இறந்த உக்ரேனிய போர் வீரர்களுக்காக அழுவதா….. ஆனால் இந்த சகோதர-யுத்தத்தின் வழியே ரத்தம் குடிப்பதும் தனது ஆயுத-சந்தையை திறந்து விட்டு முதலை கண்ணீர் வடித்து உலக ஊடக நாடகத்தை நடத்துவதும் யார் என்று எல்லோருக்கும் தெரியும். 

Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

1945 இல் உஃபா விலிருந்து பிரபலமான ’நூலக பெரும் பயணம்’ மூலம் மூன்று கப்பல்களில் கீவ் நூலக நூல்கள் -திரும்பியதும் தனது மாபெரும் கனவான தனது பிரம்மாண்ட நூலகத்தில் ஹிட்லரின் குண்டுகளால் சிதலமடைந்த பகுதிகளை சீர் செய்ய மறுபடியும் கட்டிட வேலைகள் தொடங்கி பீடு நடைபோட்ட நாளில் மக்கள் வெற்றியின் சின்னமான தனது நூலகத்தை கடைசியாக வலம்வந்த பின் ஜனவரி ஆறாம்  நாள் அறிஞர் வெர்னாட்ஸ்கி காலமானார். இன்று உலகின் பிரம்மாண்ட நூலகங்களில் ஒன்றாக போற்றப்படும் கீவ் நகரின் வெர்னாட்ஸ்கி தேசிய நூலகம் உக்ரேனிய ரஷ்ய தோழமையின் அடையாளமாக  விரைவில் இருவரும் இணைந்து  ஏகாதிபத்தியத்திற்கு பதில் கொடுக்கும் நாள் வரும் என பறைசாற்றியபடி உயர்ந்து நிற்கிறது., வரலாறு சொல்லும்,, நூலகமே வெல்லும்.,,

முந்தைய கட்டுரையை வாசிக்க:

நூலகாலஜி – 1 தற்கொலைக்கு உகந்த இடம் நூலகமல்ல… – ஆயிஷா. இரா. நடராசன்

நவம்பர் புரட்சியும் அதில் பெண்களின் பங்கும் – ஜெயதி கோஷ் (தமிழில்:ச.வீரமணி)

நவம்பர் புரட்சியும் அதில் பெண்களின் பங்கும் – ஜெயதி கோஷ் (தமிழில்:ச.வீரமணி)




ஜெயதி கோஷ்
(தமிழில்:ச.வீரமணி)

ரஷ்யப் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் இல்லாமல் ரஷ்யப் புரட்சி கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. பிப்ரவரி புரட்சி (உண்மையில் அது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெகுஎழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் “ரொட்டி வேண்டும், அமைதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் மேற்கொண்ட பிரம்மாண்டமான பேரணியுடன்தான் துவங்கியது. இயக்கத்திற்குள் பல்வேறு சமூகத்திலிருந்தும் பெண்களை அணிதிரட்டிக் கொண்டுவருவதற்கு இப்பேரணி ஓர் உந்துசக்தியாகத் திகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக 1917இன் முந்தைய மாதங்களில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி வீழ்வதற்கும், பின்னர் அமைந்த ஒழுங்கற்ற மற்றும் தாறுமாறான கெரன்சி அரசாங்கமும் அதற்குப் பின்னர் போல்ஷ்விக் புரட்சி நவம்பரிலும் ஏற்படுவதற்கும் இட்டுச் சென்றது.

பெண்கள் அரசியலில் தலையிடுவது என்பது புதிது. எனவே எதிர்பாராததும் கூட. புரட்சிக்கு முந்தைய ரஷ்யா என்பது ஓர் ஆணாதிக்க, ஒரு வகையான நிலப்பிரபுத்துவ சமுதாயமேயாகும். புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் பெண்களின் நிலைமை என்பது இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்ததைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. உரிமைகள் ஏதுமற்று, சமூகக் கட்டுப்பாடுகள் மிகுந்தவர்களாகவே அவர்கள் இருந்துவந்தார்கள். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகம் எதிலும் அவர்கள் இருக்க முடியாது. உண்மையில் சமூகத்தின் முன் எந்தக் கருத்தையும் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையும் கிடையாது. பொதுவாக வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமே அவர்கள் இருத்தி வைக்கப்பட்டார்கள். மிகவும் கீழான நிலையிலும் இழிந்த நிலையிலும் அவர்கள் வாழ்க்கை இருந்து வந்தது. அவர்களுக்கு சொத்துரிமை கிடையாது. பொதுவாக அவர்களால் சுயமாகச் சம்பாதித்திட முடியாது. 19வது நூற்றாண்டின் முடிவில் ரஷ்யப் பெண்களில் 13 சதவீதத்தினர் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

எனினும், 19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில், நகரப் பகுதிகளில் தொழிற்சாலைகள் விரிவுபடுத்தப்பட்ட சமயத்தில், ஏழைப் பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் கிராமப்புறங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இப்பணிகளை மேற்கொண்ட இளம்பெண்களாக இருந்தார்கள். அவர்களின் வேலை தன்மை என்பது மிகவும் கடினமானதாகும். அவர்களுக்கு அளித்த ஊதியம் என்பதும் மிகவும் சொற்பம். ஆயினும், தங்களாலும் வீட்டிற்கு வெளியே வந்து, வேலைகளைச் செய்ய முடியும் என்பதையும், வீடுகளில் எவ்வித வருமானமும் இல்லாது எவரையாவது “சார்ந்திருப்பவர்களாக” இருந்ததைவிட, ஓரளவுக்கு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பதையும் அவர்களுக்கு அது அளித்தது.

முதல் பெண் புரட்சியாளர்கள்

அதே சமயத்தில், 1860இன் பிந்தைய ஆண்டுகளிலிருந்து, 1870 வரை, உயர் மற்றும் நடுத்தர வர்க்கப்பெண்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அன்றைக்கிருந்த சமூக அரசியல் ஆண்களுக்கு மட்டுமே இருந்த நிலைமைகளிலிருந்து தங்களுக்கும் நிவாரணம் கோரி உயர்குடி குடும்பங்களிலிருந்த படித்த பெண்கள் அப்போது துளிர்விட்ட சமூக ஜனநாயக இயக்கங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். பெண்களின் கல்வி மற்றும் பெண்களுக்கான வாக்குரிமைக்கான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டதுடன் சமூக மாற்றத்திற்கான கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. இவை, “பெண்களின் பிரச்சனைகள்” குறித்து அதிகக் கவனம் செலுத்தவும் இட்டுச் சென்றது.

வெரா ஜாசுலிச் (Vera Zasulich), மரியா ஸ்பிரிடோனோவா (Maria Spiridonova) மற்றும் வெரா ஃபிக்னர் (Vera Figner) ஆகியோர் ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர அனுமதிக்காததால், வெளிநாடுகளில் உயர்கல்வியைக் கற்றவர்கள். இவர்கள் பின்னர் புரட்சியாளர்களாக மாறினார்கள். வெரா பிக்னர், ஒரு புரட்சியாளரின் நினைவுக்குறிப்புகள் (Memoirs of a Revolutionist) என்ற பெயரில் ஒரு சுயசரிதையை எழுதியிருக்கிறார். நரோட்னயா வோல்யா (Narodnaya Volya) என்னும் பயங்கரவாதக் குழுவில் உறுப்பினராக இருந்த இவர், 1881இல் ஜார் மன்னனான அலெக்சாண்டர் 2 கொல்லப்பட்டதை ஆரவாரத்துடன் வரவேற்றிருக்கிறார்.

காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா போன்ற இதரர்களும் அராஜகவாதி (anarchist) பீட்டர் குரோபோட்கின் என்பவரின் செல்வாக்கினால் நரோத்னிக்குகளாக மாறினார்கள். காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா அரசியல் மாற்றம் அமைதி வழியிலேயே வர வேண்டும் என்று கூறிவந்தபோதிலும், ஜாரிஸ்ட் ரஷ்யாவில் சைபீரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். இவர் பின்னர் போல்ஷ்விக் ஆட்சிக்காலத்தின்போது போல்ஷ்விக் ஆட்சியைக் கடுமையாக எதிர்த்ததால், பிரேக் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். எனினும் மிகவும் கொந்தளிப்பாக இருந்த அன்றைய ரஷ்யாவில் காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா மற்றும் இதர நரோத்னிக் பெண்கள், பெண்களின் மனோபாவம் மற்றும் அபிலாசைகளை மாற்றியமைத்ததில் முக்கிய பங்களித்தவர்கள் ஆவார்கள்.

நடேஷ்தா குரூப்ஸ்காயா (Nadezhda Krupskaya) (லெனின் மனைவி), அலெக்சாண்ட்ரா கொலண்டாய் (Alexandra Kollontai), யெலினா ஸ்டாசோவா(Yelena Stassova), இனெஸ்ஸா ஆர்மந்த்(Inessa Armand) மற்றும் கொங்கோரிடியா சமியோலோவா (Konkordia Samiolova) போன்ற பலர் பெண் சமத்துவத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு, போல்ஷ்விக் தலைமையின் மிக முக்கியமான தலைவர்களாக உருவானார்கள். 1917 புரட்சிக்கு முந்தைய பத்தாண்டுகள் என்பது இத்தகைய போர்க்குணம் மிக்க பெண்களுக்கும் பெண்ணியவாதிகளான “பூர்ஷ்வா பெண்களுக்கும்” இடையேயான பதட்டத்துடனே காணப்பட்டது. ஏனெனில் “பூர்ஷ்வா பெண்கள்”, போல்ஷ்விக்குகளைக் கண்டு அஞ்சினார்கள். போல்ஷ்விக் பெண்களோ, பெண் விடுதலைக்கான போராட்டம் என்பது வர்க்கப் போராட்டத்தைவிட தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்திடுமோ என்று அஞ்சினார்கள். போல்ஷ்விக் பெண்கள் மத்தியில், “பெண்கள் பிரச்சனை” என்பது, ஜாரிஸ்ட் ரஷ்யாவைத் தூக்கி எறிவது என்கிற தொழிலாளர் வர்க்கத்திற்கான லட்சியங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதிலும், சோசலிசத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இதன்மூலம் மட்டுமே பாலின சமத்துவத்தைக் கொண்டுவர முடியும் என அவர்கள் நம்பினார்கள். உண்மையில், 1914இல் போல்ஷ்விக் பெண்கள் உழைக்கும் பெண்கள் என்று பொருள்படும் ரபோட்னிட்சா (Rabotnitsa) என்னும் ஏட்டைக் கொண்டு வந்தார்கள். இதில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக “பெண்ணியப் பிரச்சனைகளைத்“ தவிர்த்தார்கள். ஆயினும் இந்த ஏடு ஏழு இதழ்கள்தான் வெளிவந்தது. பின்னர் புரட்சிக்குப்பின்னர்தான் இது மீண்டும் வெளிவந்தது.

ஆயினும் இந்தத் தலைவர்கள் எல்லாரும் புரட்சிக்கு இட்டுச்சென்ற மாபெரும் மக்கள் எழுச்சியில் பங்கேற்ற வீரப்பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவேயாகும். அலெக்சாண்ட்ரா கொலண்டாய் இவ்வீராங்கனைகளைப் பற்றி தன் நினைவுக்குறிப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

“ஒருவர் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தோமானால், அக்டோபர் புரட்சியில் பங்கேற்ற பெண்களை உன்னிப்பாகப்பார்த்தார்களென்றால், அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் வறிய நிலையில் வாழ்பவர்களாக, பட்டினி கிடந்து வருபவர்களாக இருப்பதைப் பார்க்க முடியும். …அவர்கள் தலையில் குளிருக்காக அணிந்திருக்கும் குல்லாய்கள் கிழிந்து காணப்படுவதைக் காண முடியும். (பலருக்கு அதற்குக்கூட வழியில்லாமல் சிவப்புக் கைக்குட்டையை அணிந்திருப்பார்கள்.) கிழிந்த ஆடைகள், ஒட்டுப்போட்ட குளிர்கால ஜாக்கெட், …இளம் பெண்கள் மற்றும் வயதான பெண்கள், பெண் தொழிலாளர்கள் மற்றும் வீரர்களின் மனைவிமார்கள், விவசாயப் பெண்கள், நகர்ப்புறங்களிலிருந்து வந்துள்ள குடும்பத் தலைவிகள் எனப் பார்க்க முடியும். அந்தக் காலத்தில், மிகவும் அபூர்வமாகத்தான், அலுவலக ஊழியர்களும், வேலை பார்க்கும் பெண்களும், படித்த பெண்களும், நாரீமணிகளும் பங்கேற்றார்கள். ஆனால் பின்னர், அக்டோபர் புரட்சியின்போது செங்கொடியை ஏந்தி வந்த அறிவுஜீவிகளில் – ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக் கழக இளம் மாணவிகள், பெண் மருத்துவர்கள் — மிகவும் உற்சாகத்துடன், சுயநலமின்றி, அதே சமயத்தில் லட்சிய வேட்கையோடு கலந்துகொண்டார்கள். அவர்கள் எங்கே அனுப்பப்பட்டார்களோ, அங்கே சென்றார்கள். போர்முனைக்குச் செல்ல வேண்டும் என்கிறீர்களா? வீரர்களின் தொப்பியை அணிந்துகொண்டு, செஞ்சேனை வீரர்களாக மாறினார்கள். அவர்கள் கைகளில் சிவப்புப் பட்டையை அணிவிப்பீர்களேயானால், பின்னர் அவர்கள் போர்முனையில் காயம்பட்டுக் கிடக்கும் செஞ்சேனை வீரர்களுக்கு முதலதவி செய்திட விரைந்து சென்றார்கள். படைகளின் தகவல் தொடர்பு மையங்களில் பணியாற்றினார்கள். இவ்வளவையும் மிகவும் உற்சாகத்துடனும், விரைவில் பெருஞ்சிறப்புவாய்ந்தவை நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் செய்தார்கள். நாங்கள் அனைவருமே புரட்சியை மேற்கொண்டுள்ள வர்க்க சக்கரத்தின் ஒரு சிறிய பல் என்ற உணர்வுடன் இருந்தோம்.”

இத்தகைய குறிப்பிடத்தக்க பெண்களின் படைதான் 1917இல் நடைபெற்ற மக்கள் எழுச்சியின்போது மாபெரும் தாக்கத்தை அளித்தது. ஜூலையில் பெண்களுக்கு வாக்குரிமையும், பொது நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் நவம்பரில் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, வாக்களித்தவர்களில் பல பகுதிகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாகும். போல்ஷ்விக்குகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், புரட்சியின் சமத்துவ சிந்தனைகள், தவிர்க்கமுடியாத விதத்தில், புதிதாகத் துளிர்விட்ட சோவியத் அரசின் மனோபாவம் மற்றும் கொள்கைகளில் பெண்களுக்கான முக்கியத்துவத்துடன், அவர்களுக்கு சமூகத்தில் இருந்துவந்த ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையிலிருந்து விடுதலை அளிக்கக்கூடியதாக வளர்ந்தது.

பூர்ஷ்வா தலைமையானது, சோசலிசத்தின் கீழ் பெண்களின் விடுதலைக்கான அவசியத் தேவையை தெள்ளத்தெளிவாக அங்கீகரித்தது. மாமேதை லெனின் இதுகுறித்துக் கூறியதாவது: “மனிதகுலத்தின் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்கள், முதலாளித்துவத்தின் கீழ் இரட்டிப்பு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். உழைக்கும் பெண்களும், விவசாயப் பெண்களும் மூலதனத்தால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கும் மேலாக, பல முன்னேறிய பூர்ஷ்வா குடியரசு நாடுகளில்கூட, பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான உரிமைகள் மறுக்கப்பட்டே இருந்துவருகிறார்கள். அங்கேயுள்ள சட்டங்கள் பெண்களுக்கு ஆண்களுக்கிணையாக உரிமைகளை வழங்கிடவில்லை. இரண்டாவதாக, (இதுதான் மிகவும் முக்கியமானது) அவர்கள் வீட்டுவேலைகளுடன் பிணைக்கப்பட்டு (“household bondage”) இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து வீட்டு அடிமைகளாக (“household slaves”) இருந்து வருகிறார்கள். மிகவும் அழுக்கடைந்த சமையலறைகளில் திரும்பத்திரும்ப அரைத்தமாவையே அரைத்திடும் விதத்தில் உற்சாகமற்ற வேலைகளை, கடினமான வேலைகளை அதீதமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.”

பெண்களின் உரிமைகளை அரசு அங்கீகரித்தது

பெண்கள் பெரும் எண்ணிக்கையில் ஊதியத்துடன் வேலை பார்க்க வந்ததானது இத்தகைய அடிமைத்தளையிலிருந்து பெண்களை விடுவித்திட உதவியதைப் பார்க்க முடிந்தது. பெண்களின் பொருளாதார சுயாட்சியை வலுப்படுத்தும் விதத்தில் எண்ணற்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சொத்து உறவுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திருமணத்திற்குப்பின்னர் பெண்கள் இயங்குவதிலிருந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. நிலம் வைத்துக் கொள்வதற்கும், ஆண் – பெண் இருவருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. குடும்பப் பொறுப்புகளிலும் பாலின சமத்துவத்துடன் செயல்பட்டனர். புதிய சட்டங்களின் மூலமாக சமூக மாற்றங்களும் கட்டாயப்படுத்தப்பட்டன. மதச்சார்பற்ற முறையிலேயே திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. விவாகரத்து எளிதாக்கப்பட்டது. பெண்கள் கருத்தடை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மணமான பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும், மணமாகாத பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் இடையே சட்டபூர்வமாக எந்தப் பாகுபாடும் கிடையாது. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மருத்துவ விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவமனைகளில் அதிக அளவில் மகப்பேறு வார்டுகள் அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் பெண்களின் வாழ்க்கையில் மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தன. அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் வேறெந்த நாட்டிலும் இந்த அளவிற்குப் பெண்களுக்கு உரிமைகளோ அங்கீகாரமோ அளிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது.

புரட்சிக்குப் பிந்தைய பத்தாண்டுகளில் பெண்கள் பலமுனைகளிலும் முன்னேறினார்கள். புதிதாக விடுதலை பெற்ற பெண்கள் மத்தியிலிருந்து படைப்பிலக்கியவாதிகள் உருவானார்கள். தங்களுக்குக் கிடைத்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் பல துறைகளிலும் தங்கள் சொந்த முயற்சிகள் மற்றும் அரசியல் ஈடுபாட்டுடன் முன்னேறினார்கள்.

சோவியத் யூனியன் சிதைந்தபிறது, சோசலிச அமைப்பில் கிடைத்த பயன்கள் பல பெண்களிடமிருந்து பறிபோயின. அவர்கள் பெற்று வந்த ஊதியமும் சந்தைப் பொருளாதார சமூகத்தில் மிகமோசமான அளவிற்குக் குறைந்தது.

கடந்த நூறாண்டு கால அனுபவம் காட்டுவது என்னவெனில், பாலின சமத்துவத்தை நோக்கி முன்னேறுவது என்பது, அதன்மூலம் பெண்கள் விடுதலை பெற்று, அதிகாரம் படைத்தவர்களாக மாறுவது என்பது, ஒரு நீண்ட நெடிய சிக்கலான மற்றும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பாதையாகும் என்பதேயாகும். முன்னேறிய சமூகத்திலேயே கூட இத்தகைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். ஆனாலும், ரஷ்யப் புரட்சிக்குப்பின்னர் பெண்கள் அடைந்த முன்னேற்றங்கள் என்பதும் அவர்கள் படைத்த சாதனைகள் என்பதும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதுடன் நம் போராட்டப் பாதையில் நமக்கு என்றென்றும் ஒளிவிளக்காக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை.

(நன்றி: ப்ரண்ட்லைன்)

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்



நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ₹100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த

முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்
நூல் வெளியீட்டு விழாவில் என். குணசேகரன் பேச்சு
சென்னை, மே 19 –

உக்ரைன் போரை பயன்படுத்தி உலக அரசியலை கட்டுப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோவை பலப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார்.

இ.பா.சிந்தன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘உக்ரைனில் என்ன நடக்கிறது?’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதனன்று (மே 18) சென்னையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட கட்சி கல்விக்குழு நடத்தி இந்நிகழ்வில் நூலை வெளியிட்டு என்.குணசேகரன் வெளியிட, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் என்.குணசேகரன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

இரண்டாம் உலகப்போருக்கு பின் போராற்ற உலகம் முழக்கம் எழுந்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவை வீழ்த்தவும், ஜெர்மனை வளரவிடாமல் தடுக்கவும் நேட்டோ அமெரிக்கா உருவாக்கியது. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகும் நேட்டோ தொடர்கிறது. இந்த நேட்டோ காரணமாகவே ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்பட்டுள்ளது.

இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர மனிதநேய மிக்கவர்கள் வலியுறுத்துகின்றனர். உக்ரைன் ஆளும் கூட்டம் போரை நீட்டிக்க விரும்புகிறது. உலகம் முழுவதும் ஆயுதம் விற்பனை செய்யும் கூட்டத்தின் பிரதிநிதிகள் ஐரோப்பா, அமெரிக்காவின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இந்தக் கூட்டம், போரை தங்களது லாப வேட்டைக்கும், மூலதன குவியலுக்கும் வாய்ப்பாக கருதுகிறது.

மேற்கத்திய, ஐரோக்கிய நாடுகள் ஆயுதங்களை ஒருங்கிணைந்த முறையில் தடையின்றி வழங்க வேண்டுமென்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே, போர் தற்போதைக்கு முடிவுக்கு வராது.

இந்தப்போரை பயன்படுத்தி ஐரோப்பிய, ஆசிய அரசியலை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோ பலப்படுத்துகிறது. நேட்டோவிற்குள் புதிய நாடுகளை சேர்க்கிறது. அதன்வாயிலாக ஏகாதிபத்திற்குள் உள்ள முரண்பாடுகளை கட்டுப்படுத்தி, உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை செய்கிறது.

மேலும், ரஷ்யாவை பலவீனப்படுத்தி, சீனாவின் பொருளாதார, அரசியல் வல்லமையை கட்டுப்படுத்த இந்தியாவுடன் உறவு கொண்டாடுகிறது. இதன்வாயிலாக உலக அரசியலை தனது ஆதிக்கதிற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏமன், சிரியாவை உருக்குலைப்பதிலும், இலங்கை பொருளாதார நெருக்கடியிலும், இந்தியாவில் எல்ஐசியை விற்பதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு உள்ளது.

500 கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக உலகம் வேட்டையாடப்படுகிறது; உலகின் இயற்கைவளம் அழிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிக்கும். பேச்சுவார்த்தை மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். இதற்கு வெகுமக்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்.

அடையாள அணிதிரட்டல், இனவெறி போன்றவை வர்க்க ஒற்றுமையை சிதைப்பதோடு, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே உள்ளன. இதுவே உக்ரைன் போர் படிப்பினையாக உள்ளது. உக்ரைனில் இரண்டுமுறை ஆட்சிக்கவிழ்ப்பு நடந்துள்ளது. அவற்றை ஆரெஞ்ச் புரட்சி, மைதான புரட்சி என்றனர். ஆளும் வர்க்கத்தை முற்றாக வீழ்த்தி, கோடான கோடி உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமைவதுதான் புரட்சி. புரட்சி என்ற வார்த்தையை மலினப்படுத்த ஆட்சி கவிழ்ப்பை புரட்சி என்றார்கள்.

ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. மின்தேவைக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதாலும், அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் அமெரிக்காவின் துதிபாடியான பிரதமர் இந்த நிலையை எடுத்துள்ளார்.

சிஎன்என் போன்ற சேனல்கள் முதலாளித்துவாதிகளால் நடத்தப்படுகின்றன. அவை கார்ப்பரேட்டுகளின் குரல்களையே பிரதிபலிக்கின்றன. அவற்றை பின்பற்றியே பிற ஊடகங்களும் இயங்குகின்றன. ஊடகங்கள ஒருசார்பான செய்திகளையே வெளியிடுகின்றன.

போருக்கு எதிரான முழக்கம் அழுத்தமாக உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். இடதுசாரிகளின் பின்னால் உலகம் அணிதிரண்டால்தான் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்திய முறைமை அழிந்தால்தான் போர், வேலையின்மை, வறுமைக்கு முடிவு கட்ட முடியும்.
இவ்வாறு அவர் பேசினர்.

இந்த நிகழ்விற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், க.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, எஸ்எப்ஐ மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, பாரதி புத்தகாலம் மேலாளர் எம்.சிராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

2022 மே 19

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இன்றைய நூதன இராணவக் கருவிகள்? நாளைய நிதர்சனம்? நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் செய்திகள், கல்வி 4.0க்கான நம்முடைய இந்த ஆய்வின் பயனாளிகளை அடையாளம் காண உதவுகின்றது மெலோட்டமாக . நம்முடைய ஆய்வின் பயனாளிகளாக , கணினி, மனிதர்கள் என்று இருபிரிவு…
Ukraine War: Conflict between capitalist countries Article in tamil translated by S. Veeramani உக்ரேன் போர்: முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான மோதல் - தமிழில் : ச.வீரமணி

உக்ரேன் போர்: முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான மோதல் – தமிழில் : ச.வீரமணி

“கொடூரமான எதேச்சதிகாரி புடின்” மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ மேற்கொண்ட முயற்சிகள் பாசாங்குத் தனத்தையும் இரட்டை வேடத்தையும் வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ஜான்சன் ஆகியோர் ரஷ்யாவுக்கு எதிராக வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்குப் பின்னர், ஐரோப்பாவில், இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப் போர் முடிவடைந்தபின், முதன்முறையாக அமைதி நிலைமை ஆட்டம் கண்டிருக்கிறது. 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் யுத்தம் என்பது நேட்டோ படையினர் செர்பியா மற்றும் யூகோஸ்லேவியாவில் 1999இல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தம்தான் என்கிற உண்மையை அவர்கள் முழுமையாக மூடி மறைக்கிறார்கள். யூகோஸ்லேவியாவைத் துண்டாடுவதற்காக பெல்கிரேடிலும் மற்றும் பல இடங்களிலும் 78 நாட்கள் வான்வழித் தாக்குதல்களை நேட்டோ படையினர் மேற்கொண்டிருந்தார்கள்.

நேட்டோ அரங்கேற்றிய பயங்கரங்கள்..
உலக அளவிலான தனது மேலாதிக்கத்திற்கான ஒரு கருவியாக, நேட்டோவை அமெரிக்கா பயன்படுத்தி வருவது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. அமெ ரிக்காவும், பிரிட்டன் உட்பட அதன் கூட்டணி நாடுகளும், இராக்கில் ஆட்சி செய்த சதாம் உசேன் மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை வைத்திருக்கிறார் எனப் பொய்யாகக் குற்றம்சாட்டி, இராக்கிற்குள் புகுந்து, அதனை அழித்து, பல லட்சக்கணக்கான இராக்கியர்களைக் கொன்று குவித்தது. அதன் பின்னர், நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானத்திற்குள் புகுந்து, சுமார் 20 ஆண்டு காலம் அதனை ஆக்கிரமித்திருந்தனர். நேட்டோ கூட்டாளிகள் இறையாண்மை மிக்க நாடுகளாக இருந்த லிபியா மற்றும் சிரியாவையும் தாக்கினர். அவற்றின் நாசகர விளைவுகளிலிருந்து அந்த நாடுகள் இன்னமும் மீள முடியவில்லை. எனவே, உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்வதாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூப்பாடு போடுவதை உலகில் உள்ள நாடுகளில் பல, குறிப்பாக ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் அநேக மாக ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து பல்வேறுபட்ட குழப்பமான செய்திகள் வெளிந்திருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிச அமைப்பு முறை ஒழிக்கப்பட்ட பின்னர் அங்கே ஏற்பட்ட நிலைமைகளைப் பார்க்காமல் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கே இரண்டு விதமான முரண்பாடுகள் முட்டி மோதின. ஒரு பக்கத்தில் அங்கே இருந்துவந்த பல்வேறு தேசிய இனங்களின் பிற்போக்கு சக்திகளது கூக்குரல்களும், மறுபக்கத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணி நாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவையே விழுங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் அங்கே முட்டி மோதின; மோதிக்கொண்டிருக்கின்றன.

ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நோக்கி…
1991இல் பனிப்போர் முடிந்த ஒருசில மாதங்களிலேயே, அமெரிக்காவின் ஆளும் வட்டாரங்கள், அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உலகின் ஒரே துருவமாக நிறுவிட வேண்டும் என்று தீர்மானித்தன. அமெரிக்க ராணுவக் கொள்கை வழிகாட்டு தல்கள், “நம் கொள்கையானது எதிர்காலத்தில் சாத்தியமான எந்தவொரு உலகளாவியப் போட்டியும் தோன்று வதைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று கூறின. உலகை ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏகாதிபத்தியத்தின் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைக ளின் புவி அரசியல் கோட்பாடு இந்தத் திசைவழியில் தான் அமைந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இதற்கான முதல் தேவை என்பது ரஷ்யாவைப் பலவீனப் படுத்துவதே. அப்போதுதான் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ரஷ்யாவின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்திட முடியும். இதற்கு நேட்டோவை ஐரோப்பாவின் கிழக்கே விரிவாக்கம் செய்திட வேண்டும். பின்னர், தங்கள் கவனத்தை சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் திருப்பிட வேண்டும். 1990இல், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ரஷ்ய ஜனாதிபதி கோர்ப்பசேவிடம், இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றாக இணைவதன் காரணமாக, நேட்டோ விரிவாக்கம் மேலும் கிழக்கே நீட்டிக்கப்படாது என்ற உறுதி மொழியை அளித்தார். ஆனால் இந்த உறுதிமொழி வெறும் உதட்டளவில் மட்டுமேயானதாகும். அதன் பின்னர் நேட்டோ படையினர் ஐந்து முறை படை யெடுத்து வந்து, கிழக்கு ஐரோப்பா முழுவதுமே, அதாவது முன்பு சோவியத் ஒன்றியத்தின் அங்கங்களாக இருந்த பால்டிக் நாடுகள் அனைத்தையுமே தாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டன.

இதயத்திற்கு நேராக கூர்வாள்..
2008இல் நேட்டோ, ஜார்ஜியாவையும், உக்ரைனையும் தன்னுடைய உறுப்பு நாடுகளாக ஏற்றுக் கொள்ள முன்வந்தது. இது நடந்துவிட்டால், ரஷ்யா சுற்றி வளைக்கப்பட்டது போலத்தான். உக்ரைன், நேட்டோவின் ஓர் அங்கமாகிறது என்றால் அதன் பொருள் ரஷ்யாவின் இதயத்திற்கு எதிரே கூர்வாளை எப்போதும் நீட்டிக்கொண்டிருப்பது என்பதாகும். 2014இல் உக்ரைனில் ஜனாதிபதி விக்டர் யானுகோ விச் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக உக்ரைனில் ஒரு கலகம் நடத்தப்பட்டது. இவர் ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு எதிராகவே நவீன நாஜிக்களால் ‘மைதான் புரட்சி’ எனும் அந்தக் கலவரச்சதி (Maidan revolution coup) மேற்கொள்ளப்பட்டது. 2015இலிருந்து அமெரிக்கா, உக்ரைனிய துருப்புக்களுக்கு பயிற்சி அளித்து வந்தது. இதற்காக அது பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் அளித்தது. ரஷ்யாவுடன் உக்ரைன் மோதல் போக்கைக் கடைப்பிடித்திட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இதையெல்லாம் செய்தது. இவ்வாறு அமெரிக்காவினால் ஊட்டி வளர்க்கப்பட்ட வலதுசாரி ஆட்சியாளர்கள், உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்தில் மிகப் பெரிய அளவில் வாழ்ந்துவந்த ரஷ்ய இனமக்களுக்கு விரோதமான முறையில் செயல்பட்டு வந்தனர். கிழக்கு உக்ரைனில் தொடங்கிய உள்நாட்டு யுத்தத்திற்கு, மின்ஸ்க் ஒப்பந்தத்திற்குப் பின்னர் தற்காலிகமாக தீர்வு காணப்பட்டது.

உக்ரைன் புதிய ஆட்சியாளர்கள் செய்தது என்ன?
உக்ரைனின் புதிய ஆட்சியாளர்கள் நேட்டோவில் சேர்வதை அரசமைப்புச் சட்டத்தில் பதிவு செய்தனர். வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், இன ரீதியாகவும் ரஷ்யாவுடன் உறவுகளை வைத்திருந்த உக்ரைன், முற்றிலும் ரஷ்யாவுக்கு எதிராக நிலை எடுத்தது, ரஷ்யாவை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியது. இது, கிரீமியாவில் உடனடியாக வெளிப்பட்டது. உக்ரைனின் ஓர் அங்கமாக இருந்த கிரீமியாவில் ரஷ்யர்கள்தான் அதிகமான அளவில் வசித்து வந்தார்கள். இங்கே 2014இல் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் அவர்கள் ரஷ்யாவுடன் சேர்வது எனத் தீர்மானித்தார்கள். ரஷ்யாவின் கருங்கடல் கப்பற் படை (Black Sea naval fleet) கிரீமியாவின் செவஸ்டபோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறைமுகம் ரஷ்யாவுக்காக இருந்துவருகிற ஒரேயொரு மிதமான வெப்பத் துறைமுகமாகும். ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகள் நேட்டோவில் சேர்ந்தபின்பு, அமெரிக்காவும், நேட்டோவும் தங்கள் துருப்புகளையும், ஏவுகணைகளையும் அந்த நாடுக ளில் நிலைநிறுத்தியதன் காரணமாக, ரஷ்யாவில் பதற்ற நிலைமைகள் அதிகரித்தன. ரஷ்யா, உக்ரைனின் எல்லைகளில் தங்கள் துருப்புகளுடன் அணிவகுத்தது. உக்ரைன், நேட்டோவில் இணையக் கூடாது என்றும், ஆபத்தை விளைவித்திடும் ஏவுகணைகளை நிலை நிறுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்திட முன்வர வேண்டும் என்றும், ஐரோப்பாவில் புதிய பாதுகாப்பு கட்டமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் ரஷ்யா கோரியது. அமெரிக்காவும், நேட்டோவும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. உக்ரைன் இறையாண்மையுடன் கூடிய நாடு என்றும், நேட்டோவில் இணைவதா வேண்டாமா என முடிவு செய்வதற்கான உரிமை அந்த நாட்டுக்கு உண்டு என்றும் கூறின. இதனைத் தொடர்ந்து உக்ரைன்மீது ஏற்பட்டுள்ள ராணுவத் தாக்குதல் ஐரோப்பாவின் எதிர்கால அமைதி மீதும், பொருளாதார விவகாரங்கள் மீதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன.

விரிவான மோதலின் பிரதிபலிப்பு..
உக்ரைன் யுத்தம், அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே, ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளின் மத்தியில் ஏற்பட்டுள்ள விரிவான மோதலைப் பிரதிபலிக்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்தபின்பு ரஷ்யா ஒரு தனியதிகாரத் தலைவரின் கீழ் ஒரு முதலாளித்துவ நாடாக மாறியிருக்கிறது. நாட்டின் முக்கியமான பாதுகாப்பு நலன்களுக்காக நடவடிக்கைகள் எடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தன்னுடைய எல்லையைத் தாண்டிச் சென்று, ஓர் இறையாண்மை மிக்க நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் தொடுப்பது அனுமதிக்க முடியாததாகும். இதனை எவ்விதமான சந்தேகத்திற்கிடமின்றி எதிர்த்திட வேண்டும். இந்த யுத்தமானது ஏற்கனவே மிகப் பெரிய அளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புடினின் ‘தேசிய வாதம்’ ‘மகாரஷ்யா’ எனும் பேரினவாதம் ஆகும். இதனை அவர் போல்ஷ்விக்குகளைக் கண்டித்திருப்பதிலிருந்தும், ‘லெனினின் உக்ரைனை’ உருவாக்கப் போவதாகக் கூறியிருப்பதிலிருந்தும் பார்க்க முடியும். எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியது.

பைடனின் திட்டம்..
பைடன் நிர்வாகத்தைப் பொறுத்தவரையிலும், அதற்கு ஐரோப்பிய யூனியன் சுயாட்சி மிக்க ஒன்றாக உருவாவதற்கான வாய்ப்பு வாசல்களை அடைப்பதற்கும், நேட்டோ கூட்டணியை அங்கே மிக நெருக்கமாகக் கொண்டுசெல்வதற்கும், ஒரு பொன்னான வாய்ப்பாகும். ஐரோப்பாவிற்குள்ளேயே கூட ஜெர்மனி, நேட்டோவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முகம் சுழித்துக்கொண்டுதான் ஆதரவு அளித்து வந்தது. இதுவரையிலும் ராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்வதைத் தவிர்த்தே வந்தது. ஆனாலும் இப்போது, ஜெர்மனி அதிபர் உல்ப் சோல்ஸ் 100 பில்லியன் யூரோ (112 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 2022 பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கி இருக்கிறார். மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சத வீதத்தை, ராணுவத்திற்கு ஒதுக்குவதாகவும் உறுதி மொழி அளித்திருக்கிறார். இவ்வாறு ஜெர்மனி ராணு வத்திற்கு நிதி ஒதுக்கிட வேண்டும் என்று அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இதுவரையிலும் கோரி வந்தன. அதற்கு இதுவரையிலும் ஒப்புதல் அளிக்காமல் இருந்துவந்த ஜெர்மனி இப்போது ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் பால்டிக் நாடுகளுக்கு ஏராளமான துருப்புகளையும், ஆயுதங்களையும் அனுப்பி இருக்கின்றன. உக்ரைனுக்கும் நேட்டோ நாடுகள் உயிர்க்கொல்லி ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இப்போது ஜெர்மனியும் முதன் முறையாக ஆயுதங்களை அனுப்பி இருக்கிறது.

போரின் நிலை என்ன?
உக்ரைனின் போர் எப்படிப் போகும் என்பதைப் பரிசீலிக்கும்போது, இந்தப் பின்னணி அனைத்தையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ரஷ்ய ராணுவம் தாக்குதல் தொடுத்து இரண்டு வாரங்களாகிவிட்டன. அவை மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. கேர்சன் (Kherfson) நகரத்தைக் கைப்பற்றி இருக்கிறது. தலைநகர் கீவ் (Kiev), கார்கிவ் (Kharkiv) மற்றும் மரியபோல் (Mariupol) ஆகியவற்றைச் சுற்றி வளைத்திருக்கிறது. டான்பாஸ் (Don bas) பிரதேச உள்ளூர்ப் படையுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் உக்ரைன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தபோதிலும், ரஷ்யத் துருப்புக்கள் தரை வழியாகவும், நீர் வழியாகவும், வான் வழியாகவும் ஆதிக்க நிலையில் இருந்துவருகின்றன. பெலாரஸில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. மார்ச் 7 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, போர் நிறுத்தம் தொடர்பாக சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. முதலாவதாக, மனிதாபிமான அடிப்படையில் நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வழி திறந்துவிட வேண்டும். சுமி நகரில் தங்கியுள்ள சுமார் 700 இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்.

உக்ரைன் தரப்பில், தாங்கள் நேட்டோவுடன் இணையமாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் நடைபெற்ற நேர்காணலின் போதும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு குடியரசுகள் குறித்தும், கிரீமியா, ரஷ்யாவின் ஒரு பகுதி என அறிவித் திருப்பது குறித்தும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. நாம் இதனை (மார்ச் 9அன்று), எழுதிக்கொண்டி ருக்கும் சமயத்தில் மார்ச் 10 அன்று ரஷ்ய அயல்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் உக்ரைன் அயல்துறை அமைச்சர் குலேபா ஆகிய இருவரும் துருக்கியின் அண்டால்யாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். அயல்துறை அமைச்சர்கள் இடையே பேச்சு வார்த்தை என்பது ஒரு முன்னேற்றமான நடவடிக்கையே. யுத்தத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். மின்ஸ்க் ஒப்பந்தங்கள் அடிப்படையில் உக்ரைனுக்கு நடுநிலை அந்தஸ்து அளிப்பதும், டான்பாஸ் குடியரசுகளுக்கு தீர்வு காண்பதும் மிகவும் நடைமுறைத் தீர்வாக இருக்கக்கூடும்.

(மார்ச் 9, 2022),
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Adhith Sakthivelin Kavithaigal ஆதித் சக்திவேலின் கவிதைகள்

ஆதித் சக்திவேலின் கவிதைகள்

டிப்பெட்ஸ் மட்டுமா சின்னப் பையன் ?
********************************************
(ஜப்பானின் ஹிரோஷிமாவில் முதல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்த அதை அமெரிக்கா சார்பாக விமானத்தில் எடுத்துச் சென்ற விமானி பால் டிப்பெட்ஸ் பற்றிய இந்தக் கவிதை, இன்று ரஷ்யா – உக்ரேன் இடையே நடைபெற்று வரும் போர்ச் சூழலில்,உலகமே அணு ஆயுத பயன்பாடு குறித்து அச்சப்படும் இவ்வேளையில் பொறுத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன் .)

ஹிரோஷிமா தழும்பினைத்
தடவிப் பார்க்கிறேன்
முக்கால் நூற்றாண்டு கழிந்த பின்னும்
பிசுபிசுப்பு இன்னும்
ஒட்டுகிறது விரல்களில்
சுக்காய்க் காய்ந்திட
எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ?

பால் டிப்பெட்ஸ்
உலோக உருண்டையில்
உறங்கிக் கொண்டிருந்த
யுரேனியம் அணுக்களில்
சூரியனின் சிறு துண்டினை
செந்தணல் மூட்டையாய் ஒளித்து
“சின்னப் பையன்” எனச்
செல்லப் பெயரிட்டு
மனித நேயத்தின் மீது வீச
எடுத்துச் சென்ற சின்னப் பையன்

பால் டிப்பெட்ஸ்
ஒரு சில நொடிகளில்
பல்லாயிரம் உயிர்களுக்கு
பால் ஊற்றியவன்
நள்ளிரவில் நடுவானில்
அவனது “சின்னப் பையனை”
அவிழ்த்துவிட்டு

கருவில் சுமந்து
பெற்றெடுத்து பெயர் சூட்டிய
தாயின் பெயரை
பேரழிவைச் சுமந்து சென்ற
விமானத்திற்குச் சூட்டி
தாய்மையைக் கொச்சைப் படுத்தியவன்

யாரைக் கொல்வது யாரை விடுவது
எனக் குழம்பி நின்ற சாவை
காற்றென ஒரு கணத்தில் ஏவியவன்

எரிந்து கொண்டிருந்த வீதிகளில்
சாம்பலாய்ச் சரிந்த சடலங்கள்
தோலுடன் தொங்கிய சதைத் துண்டங்கள்
உருகி ஓடிய இரும்புத் தூண்கள்
கருகிச் சாம்பலான மரங்கள்
பருகும் நீரிலும்
மரண தாகத்தில் கதிர் வீச்சுகள்
திரும்பிய திசை எல்லாம் மரண ஓலம்
மனித சதையின் ரத்தத்தின் நெடி – இப்படி அவலங்களின்
காட்சிகளை ஓரிரவில் அரங்கேற்றி அகம் மகிழ்ந்தவன்

இதுவரை
கேட்டிரா ஒலி
கண்டிரா ஒளி
பார்த்திரா அமைதி
இவற்றை வரலாற்றின் பக்கங்களில்
அந்த ஒரே இரவில் எழுதி முடித்தவன்

நூறு ஆண்டுகளுக்கு
ஆறு ஆண்டுகள் குறைவாய் வாழ்ந்து
தனக்குக் கல்லறை வேண்டாம்
எனச் சொல்லிச் செத்தவன்

கட்டியிருந்தால் – மக்கள்
மரியாதை செலுத்தவா கூடியிருப்பர்
அவனது கல்லறையில் ?
அங்கே தினம் தினம்
அவனுக்கு மட்டுமா அம்மரியாதை நடக்கும்?
சின்னப்பையனின் முதுகுக்குப்
பின்னால் ஒளிந்து கொண்ட
அத்தனை பெரிய மனிதருக்கும் தான்

அப்பேரழிவு குறித்து
ஒரு நாளும் வருந்தியதில்லையாம்
வாழ்ந்த காலத்தில்
நாட்டுப் பற்றைத்
தன் நாசச் செயலுக்கு
முட்டுக் கொடுத்துப்
பேட்டி அளித்திருக்கிறான் அவன்
ஒவ்வொரு முறையும்

தேடுங்கள்
இன்னும் நன்கு தேடுங்கள்
ஹிரோஷிமா வீதிகளில்
அவனது மனசாட்சி
அங்கு தான் எங்காவது கிடக்கும் பாருங்கள்
அதைத் தூக்கி எறிந்த கையோடு தானே
சின்னப்பையனை வீசி இருப்பான் அவன்

தம் காதுகளிலும் கழுத்துகளிலும்
“சின்னப்பையன்”களை மாட்டிக்கொண்டு
வாய் கிழிய அமைதி அறிவுரை தரும்
உலக சட்டாம்பிள்ளைகளின் மனசாட்சி கூட
உங்கள் கைகளில் அகப்படலாம் அங்கே
நீங்கள் தேடுகையில்

முகமற்ற முப்பது குழந்தைகளில்
தன் குழந்தையை
இன்றும் தேடிக் கொண்டிருக்கிறாள்
தாய் ஒருத்தி என்பது
அவர்களுக்குத் தெரியுமா ?

போரின் வடிவங்களை
அழிவின் எல்லைகளை
மாற்றி எழுதும் அறிவியலில்
மனித நேயம் மரணிப்பின்
அவ்வறிவியலையே புறந்தள்ளுவோம்

நாட்டுப் பற்றின் இலக்கணங்களாய்
அவ்வழிவுகள் வரையறுக்கப்படும் எனில்
அணு ஆயுதங்களைப் போல்
அப்பற்றையும் கேள்விக்குள்ளாக்குவோம்

மீண்டும் மீண்டும் திரும்பும் வரலாற்றில்
இவ்வரலாறு மீண்டும் திரும்பாதிருக்க
கிழித்தெறிவோம்
வரலாற்றின் அப்பக்கங்களை

“சின்னப் பையனை”த்
தூக்கிச் சென்ற டிப்பெட்ஸோடு
அவனை ஆக்கித் தந்த
சின்னப் பையன்களையும்
வரலாற்றுக் கரை என்போம்

இதயங்களைத் திறந்து வைப்போம்
மனித நேயம்
அதனுள் நுழைந்தோடிட
நிறைந்து வழிந்தோடிட

அகமும் புறமும் சங்கமித்த அபூர்வ தருணம்
****************************************************
(ரஷ்ய – உக்ரைன் போர் நடைபெற்று வரும் இன்றைய சூழலில், இக்கவிதை உக்ரைனை ஆதரித்தோ ரஷ்யாவை எதிர்த்தோ எழுதப்பட்டதல்ல. உக்ரைன் பெண் ஒருத்தி வீரத்துடன் தன் கணவனுக்கு மாற்றாய்ப் போருக்குச் செல்வதைப் பாராட்டி உலக மகளிர் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது “அகமும் புறமும் சங்கமித்த அபூர்வ தருணம்” என்னும் இக்கவிதை. உலக மகளிர் தினத்தன்று இக்கவிதையைப் பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.)

போர்
குடி மக்கள் மீது
திணிக்கப்படும் பேரழிவு
திட்டமிட்டே பல நேரங்களில்

போர் எதுவாயினும்
அதில் முதல் பலி
மனித நேயமும் உரிமையும் தான்

மன்னர் கால மண்ணாசையின் எச்சம்
மக்களாட்சித் தலைவர்கள் மனதில்
இன்னும் மறையாது இருப்பதன் வெளிப்பாடு போர்

போர் மேகங்கள்
ஒரு நாட்டில் சூழ
போர் தொடங்கப்படுகிறது
இன்னொரு நாட்டில்

போரிடும் நாடுகளுடன்
உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒரு சமன்பாடு
அது சரிந்திடா வண்ணம் – அவற்றின்
வியூகம் செறிந்த செயல்பாடுகள்

போரில்
சிதறுண்டு போன
கட்டடங்கள் நிமிர்ந்து நிற்கும்
கால ஓட்டத்தில் என்றாவது ஒரு நாள்
கல்லறையில் அடக்கமாவோரின்
தலைமுறைகளின் வாழ்வு?

வரிசையாய் நின்று
பணியாட்கள் பரிமாறிட உண்டோரும்
உணவுக்கும் நீருக்கும்
வரிசையில் நிற்பர்
போரின் அழிவுக்கு அஞ்சி
அண்டை நாட்டு எல்லைகளில்
அகதி எனும் தகுதியுடன்

அணுவின் உட்கருவில்
அருகருகே அரவமின்றி அமர்ந்திருக்கும்
ஆக்கமும் அழிவும் போல்
கை கோர்த்துப் பயணிக்கின்றன
அமைதியும் போரும்
இணை பாதைகளாய்
இடைவெளி அதிகமின்றி- வசதிற்கேற்ப
நாடுகள் தாவிக் கொள்கின்றன
ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு

போரின் நடுவே
அமைதிப் பேச்சுவார்த்தை
ஆயுதங்கள் ஒளித்து வைக்கப்படுகின்றன
அது நடைபெறும் மேசைக்கு அடியிலேயே

அழிவுகளின் அளவால் நிர்ணயிக்கப்படும்
போரின் வெற்றியை
வெற்றி என யார் ஏற்பர்?

மலையுடன் மோதவும்
மன வலிமை வழங்குவது
மலை போல் உயர்ந்து நிற்கும்
தாய் மண்ணின் பற்று
தாய் மொழியின் தாகம்
இவ்விரண்டும்

தெற்கு உக்ரைனின் மைகோலைவ் நகரம்
சுற்றிப் பரந்த வயல் வெளிகள்
வயல்களில் ஆங்காங்கே இருந்த வீடுகள்
சிறு கிராமமாய் மாறியிருக்க
ஆண்டெல்லாம் வளம் சேர்க்கும்
டினீப்பர் நதி தூரத்தில்

கணவனின்
கைகளின் இறுக்கத்தில்
கால்களின் பின்னலில்
நெற்றியில் இட்ட
முத்தத்தின் அழுத்தத்தில்
பொங்கிய அகம் ஒரு புறம்
ஒரு தோளில் தொங்கிய
இயந்திரத் துப்பாக்கியில்
இன்னொரு தோளில் மாட்டிய பையில் நிரப்பிய கையெறி குண்டுகளில்
இடுப்பில் கட்டிய தோட்டாக்களில்
கண்களில் தெறித்த கோபத்தில்
தீப்பொறி பறந்த நடையில்
உடல் மொழியின் வன்மையில்
உள்ளத்தில் திரண்ட உறுதியில்
கொப்பளித்த புறம் இன்னொரு புறம்
அகமும் புறமும் ஆழமாய்ச் சங்கமித்த
அபூர்வ தருணம்
அவள் போருக்குப் புறப்பட்ட நேரம்

திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள்
அவர்களது வயல் வெளியை
நடுவே இருந்த வீட்டை – அதனுள்ளிருந்த
தன் மாற்றுத் திறனாளி கணவனை

எட்டு ஏக்கர் விளைநிலம்
பாதியில்
சூரியக் கதிர்களின் அணைவில்
மயங்கிக் களித்த சூரியகாந்தி
தம் முகத்தை மேற்கில் திருப்பிக்கொண்டிருந்தன
கொஞ்சம் கொஞ்சமாய்

மீதியில்
விளைச்சலின் பாரம் தாங்கா கோதுமை
அறுவடைக்குக் காத்திருந்தது
வரப்புத் தலையணையில்
தலை சாய்த்துப் படுத்தபடி

வெடித்துச் சிதறிய
கோதுமை மணிகளை
கொறித்துக் கொண்டிருந்த
அமைதியின் சின்னங்கள்
கும்பலாய் எழுந்து
எதிர் திசையில் பறந்தன
ஏவுகணைகளின் வெடிச் சத்தம் கேட்டு

தூரத்தில்
நகரின் நடுவே
அப்படியே சரிந்த
அடுக்கு மாடி கட்டடம் பற்றி எரிகிறது
ஏவுகணை ஒன்று அதனுள் நுழைந்து வெடித்து வெளியேறியதில்
கண்ணாடி ஜன்னல்கள்
தெறித்துச் சிதறும் சத்தம்
மரங்கள் கருகி எரியும் ஓசை
நெகிழிகள் உருகி ஓடும் வாசம்
மனித உடல்கள் ரத்தத்துடன் தீயும் வாடை
காற்றில் கலந்ததில் மூச்சுத் திணற
டினீப்பர் நதியின் மேலிருந்த
பாலத்தை நோக்கி நடக்கிறாள்
அங்கு நின்றிருந்த வீரர்களுடன் இணைந்துகொள்ள

கவச பீரங்கிகள் அணி அணியாய்
ஊர்ந்து செல்லும் சத்தத்தில்
எங்கே போகின்றன என
கணிக்க முடியா வண்ணம்
காற்றைக் கிழித்துப் பறந்த
ஏவுகணைகளின் பாய்ச்சலில்
போர் விமானங்களின்
வித்தியாசமான உறுமலில்
இருப்பும் இன்மையும்
கை கோர்த்துக் கொள்ளும்
நுண் புள்ளிகளின் சங்கமமாகிறது
ஒவ்வொரு கணமும்
அவள் கண் முன்னே

இலையுதிர் காலத்தில்
உதிரும் இலைகளைப் போலல்ல
மனித மரணங்கள்
தொடரும் வசந்தத்தில்
மீண்டும் முளை விட
இது அவளுக்கு நன்கு தெரியும்

வாழ்ந்து பெறுவதின்
பன் மடங்கு புகழ் சேர்க்கும்
சில மரணங்கள்
போர்க்களத்தின் வீர மரணம்
முதலாவதாய் அவற்றில்
இதுவும் அவளுக்கு நன்கு தெரியும்

இனி திரும்பிப் பார்ப்பதில்லை எனும் முடிவுடன் முன்னேறுகிறாள்
துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்த படி
வழுக்கும் நிலத்தில் கால் ஊன்றுபவனின்
நம்பிக்கை நிறைந்த கவனத்துடன்

கணவனின் கனவுகளின் திரட்சியாய்
ஆறு மாதங்களாய் – தன்
வயிற்றில் வளரும் குழந்தை
ஒவ்வொரு வெடிச் சத்தத்திற்கும் அதிர்வுடன் துள்ளி அசையும் சத்தம்
போரின் எல்லாச் சத்தங்களையும் மீறி எதிரொலித்த வண்ணம் இருந்தது
அவளது மனதில்

ரஷ்யாவின் வழி பாய்ந்து
உக்ரைனை பொன் விளையும் பூமியாக்கும்
டினீப்பர் நதி
தன்னுள் ஒன்றெனக் கலந்த
ரஷ்ய – உக்ரைன் ரத்தத்தின்
சிவப்பு நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தது
கருங்கடலில் கலக்க
தெற்கு நோக்கி
சலனம் ஏதுமின்றி
அந்தப் பாலத்துக்குக் கீழே
உலகுக்கு உரைக்கும் உண்மை

வீரம்
ஒரு பாலினம் சார்ந்ததன்று
ஒரு மண்ணுக்குச் சொந்தமுமன்று
முறத்தால் புலியைப்
புறமுதுகு இடச் செய்த – அன்றைய
பெயர் தெரியா புறநானூற்றுத் தமிழச்சி
ஆங்கிலேய அந்நியனை விரட்ட
ஆயுதம் ஏந்திய வீர மங்கை
வேலு நாச்சியார்
உருக்கு உறுதியுடன் துப்பாக்கி தூக்கிய இன்றைய உக்ரைனிய வீரத்தாய்
இவர்கள் எல்லாம் உலகுக்கு உரக்க
உரைக்கும் உண்மை அதுதானே?