கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ருத்ர தாண்டவம் 25 – நா.வே.அருள்
கடவுளிடம் ஆயுதமாக இருந்த
கலப்பையை
ஒரு விவசாயி
அட்சயப் பா த்திரமாக்குகிறான்.
ஏரியின் மதகுகளை
ஒரு தாயின் மார்பகங்களாக்குகிறான்.
ஒவ்வொரு இலையின்
நடுமுதுகு நரம்பும்
விவசாயியின் முதுகெலும்பு.
பாம்புப் பிடாரன்கள் பயமுறுத்திய போதும்
நாகங்கள் மேல் புரள
புஜங்கள் இரண்டும் புடைத்தெழ
நடனமிடும் சுடலையாண்டிகள்
விவசாயிகள்.
கங்கைப் பிரளயம் சிரசில் பாய
காளையின் திமிலில்
கால் பதித்தாடும் கபால சிவன்க்ள்
அடிக்கும் உடுக்கையில்
அதிர்கிறது உலகம்.
புலித்தோலாடை பூமியில் புரள
மேனியில்
பகைவர்களின்
மண்டையோட்டு மாலைகள்…..
இப்படி….இப்படியாகத்தான்….
புழுதியை
உடல் முழுதும் பூசிக்கொண்ட ருத்ரமூர்த்திகளின்
சுடலைத் தாண்டவம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஆனால்
போலி கடவுளர்களோ
கைலாயத்தைக்
களவாடி வைத்திருக்கிறார்கள்!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
