Porgalin Thalaimurai Poem By Karthigaiselvan செ.கார்த்திகைசெல்வனின் போர்களின் தலைமுறை கவிதை

போர்களின் தலைமுறை கவிதை – செ.கார்த்திகைசெல்வன்




யுத்தமும் இரத்தமும்
பின்னிப் பிணையும்போது
முத்தமும் சத்தமும்
அந்தப்புரத்தில்
விலகியிருப்பதில்லை

முத்தமும் சத்தமும்
பின்னிப் பிணையும்போது
யுத்தமும் இரத்தமும்
போர்க்களத்தில்
விலகியிருப்பதில்லை

அந்தப்புரத்தின் வெற்றி
அடுத்த தலைமுறையை
ஈன்றெடுக்கலாம்;
போர்க்களத்தின் தோல்வி
தலைமுறையே இல்லாமல்
போகச்செய்யலாம்

ஊழலும் கையூட்டும்
பின்னிப் பிணையும்போது
திருடனும் கொள்ளையும்
தேர்தல்களத்தில்
விலகியிருப்பதில்லை

திருடனும் கொள்ளையும்
பின்னிப் பிணையும்போது
ஊழலும் கையூட்டும்
ஜனநாயகத்தில்
விலகியிருப்பதில்லை

அறிக்கைகளின் வெற்றி
இந்தத் தலைமுறையை
முட்டாளாக்கலாம்;
ஜனநாயகத்தின் தோல்வி
அடுத்த தலைமுறையையும்
முட்டாளாக்கலாம்

முடியாட்சியில் மன்னனின்
படைபலம் வெற்றியைத்
தீர்மானித்தால் யுத்தக்களம்
இரத்தக்கறையாகும்!

குடியாட்சியில் கட்சியின்
பணபலம் வெற்றியைத்
தீர்மானித்தால் மக்கள்களம்
மாக்களுக்கு இரையாகும்!

Ellaigal Atra Paraivai Poem by Se Karthigaiselvan. செ.கார்த்திகைசெல்வனின் எல்லைகள் அற்ற பறவை கவிதை

எல்லைகள் அற்ற பறவை கவிதை – செ.கார்த்திகைசெல்வன்




இச்சைப் பறவைகள்மட்டும்
நீராடிச்செல்லும்
நீர்க்குளம் அல்ல நான்;
கடுஞ்சாடல்களும்
காலன் கல்எறிதலும்
கலங்கச்செய்யும்போது
எனைத் தெளியவைக்கும்
வினையூக்கி நீதான்;
நான் பூக்கும் பருவத் தாமரை
நீ பறித்துச்சென்று
மேடை அலங்கரித்தபின்
வாடிப்போவதற்கானதல்ல;
சூறாவளியிலும் சூறையாடலிலும்
ஊசித்தண்டால் தாக்குப்பிடித்து
மெள்ள மெள்ள
இலக்குச் சூரியனைத்
தேடிப்போவதற்கானது;
அப்படிப் பார்க்காதே !
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!

வெறும் இச்சை தணிப்பின்

விளைச்சல் அல்ல நீயும் நானும்
விரைவில் ஆவியாகி விடுவதில்லை
வெயிலில் காயும் தேனும்;
இரைக்காகப் புலிகள் விரட்டிய
நிறைமாத மானும்
நீண்ட தூரம் ஓடிச் சென்று
அழகிய குட்டிகளை ஈனும்;
சமத்துவச் சக்கரங்களில் இன்றி
இழுக்கப்படும் மானுடத் தேரும்
அச்சாணிகள் கழன்று
துன்பக் குழியில் விழுந்து நாறும்;
ஆண்பால் பெண்பால்
பேதங்கள் சொல்லும் ஊரும்
அன்பால் ஆனதே பெண்பால்
என என்றைக்குத் தேறும்?
அப்படிப் பார்க்காதே!
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!

நான் யாசிப்பது எல்லாம்
அடிமைச் சிறையில் இருந்து
மீள்வதற்கான விடுதலை;
நாளும் அரங்கேறுகின்றன நாட்டில்
பல வன்புணர்வு படுகொலை;
நள்ளிரவில் நாய்கள் கூட
சுதந்திரமாய் நடமாடுகின்றன;
நண்பகலில் கூட நிச்சயம் இல்லை
பாதுகாப்பெல்லாம் தடம் மாறுகின்றன;
காலங்காலமாக கருணை இன்றியே
நயவஞ்சகர்களால்
சிதைக்கப்படுகின்றேன்;
நேற்றா இன்றா எப்பொழுதும்
முறையான நீதி இன்றியே
புதைக்கப்படுகின்றேன்;
அப்படிப் பார்க்காதே!
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!

எதற்கெடுத்தாலும்
எதிர்பாலினக் கவர்ச்சி
என்று சொல்லாதே!
தாயும் தங்கையும் எதிர்பாலினம்தான்
தகாததை மூளைக்குள் தள்ளாதே!
ஏடுகளில் மட்டும் பெண்மகத்துவம்
சொல்லும் மண்ணுலகம்
எதிரில் அதை நடைமுறைப்படுத்தாமல்
போனால் இனிப் புண்ணுலகம்;
எனைக் குறுகிய எல்லைக்குள்

அடைக்காதே!
என்னுலகம் பரந்து விரிந்தது;
வேலிகள் பயிரைக் காக்கத் தேவையில்லை
பக்கத்தில் வராமலிருந்தாலே சிறந்து;
அப்படிப் பார்க்காதே!
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!