நூல் அறிமுகம்: ச.மாடசாமியின் ’என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா’ – தி.தாஜ்தீன்
நூல் : என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா
ஆசிரியர் : ச.மாடசாமி
விலை : ரூ.₹90/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
ஆசிரியர் மாடசாமி அவர்களின் கல்வி,ஆசிரியர்,மாணவர் குறித்த பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்த “என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா” புத்தகம். பள்ளிக்கூடம் என்பது படிப்பு, ஒழுக்கம் மட்டுமே கற்றுத் தரும் இடம் மட்டுமல்ல, பள்ளியோடு இணைந்தது கற்றல் மட்டுமல்ல,குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பும் தான்.இன்றும் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிச்சை எடுக்கவும், முன்பின் தெரியாத நகரங்களில் வீட்டு வேலை பார்க்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படவும் கடத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெண் குழந்தைகள். அந்தக் குழந்தைகளில் பெரும்பாலோனர் பள்ளிக்குச் செல்லாதவர்கள், பள்ளியில் இருந்து இடை விலகியவர்கள். பள்ளிகள் உள்ளவரை பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். காரணம் ஆசிரியர்கள் மாணவர்களை தன் குழந்தைகள் போல எண்ணுவதால்.
முதலாவது கட்டுரையே புத்தகத்தின் தலைப்பாகவும் உள்ளது. மாணவர்களின் விடைத்தாள்களில் சிவப்பு பேனா நிகழ்த்தும் வன்முறையினை வலிமையாக உணர்த்துகிறது. குறிப்பாக வரிக்கு வரி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மாணவர்களால் பக்குவபடுவார்கள் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். பின்பு ஆசிரியரின் பெயரை துண்டு சீட்டுகளில் எழுதி கேவலப்படுத்தும் நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்.ஆம் இப்போது வரை தனக்கு பிடிக்காத,கண்டிப்பாக உள்ள ஆசிரியர் பெயரை கண்ட இடங்களில் எழுதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்.
இரண்டாவது கட்டுரை ‘ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்” மே மாதம் என்றாலே ஆசிரியருக்கும் மாணவருக்கும் பயத்தை உண்டாக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் மாதம். சில மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்வது அங்கங்கே நடப்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் மரணத்தை விட மோசமானது நாம் அனுபவிக்கும் வலி குறிப்பாக சில பள்ளிகளில் சில ஆசிரியர்கள் மாணவர்களை அவமதிக்கும் விதமாக சில எடுத்துக்காட்டுகளை குறிப்பிட்டுள்ளார். சரியாகக் காது கேட்காத சிறுமியை ஏ செவிடு காதுல உணகு விழுகலையா?, இரட்டை சடை போட்டுட்டு வர தெரியும் உனக்கு ஹோம் ஒர்க் போட முடியலையா? இது போன்று மாணவர்களின் குறைகள் சுட்டிக்காட்டி அவர்களை தனிமைப்படுத்துவது தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மூன்றாவது கட்டுரையாக “பங்கஜம் சொன்ன கதை” ஆசிரியர் கூட்டங்களில் பயிற்சியளிக்கும் போது நடந்த விவாதங்களின் தொகுப்புக் கட்டுரையான “பங்கஜம் சொன்ன கதைகள்” நிறைய செய்திகளை நமக்குக் கூறுகிறது. மேலும் வகுப்பறைகளில் ஆசிரியரல்லாத திறன் வாய்ந்த மனிதர்களின் அறிவைப் பயன்படுத்திக் கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
அரசுப்பள்ளி மாணவர் போல திறம்பட பேசக்கூடிய, விவாதிக்கக் கூடிய மாணவர்களை வேறு பள்ளிகளில் காண்பதரிது. பாட்டு, நாடகம் என்றாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று அரசுப்பள்ளி மாணவர்களை பாராட்டுகிறார். இப்போது சமீப காலத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடத்திய கலைத் திருவிழா இதுக்கு சான்றாகும்.
நான்காவது கட்டுரையில் “தப்பித்த குரங்குகள் முக்கியமானவை” இதற்கான அர்த்தத்தை ஆசிரியர் கூறியிருப்பது. யார் கைகளிலும் படாமல், யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்த அனைத்தும் ஒரிஜினல். வடிவமைக்கப்பட்டது எல்லாம் ஜெராக்ஸ். ஒரு பேப்பரை மதிப்பிடுவதும் அதிகாரம் தான். விடைத்தாளில் எப்போதும் சில தவறுகளை தேடுவது அதிகாரம் தான். மாவட்ட பேச்சுப் போட்டிக்கு மாணவன் ஒருவரை தயார் செய்யும் போது இயல்பாக பேசுபவனை நீ அதற்கு ஏற்றவாறு இல்லை என்று அவனே விலக்குவதும் அதிகாரம் தான். மாணவர்களுக்குள் இருக்கும் திறனை மேம்படுத்த வேண்டும், அதற்கான வாய்ப்பை வழங்கிட வேண்டும் எனவும், பள்ளியில் நடத்தும் போட்டியில் ஒரு மாணவன் ஆர்வத்தோடு கலந்து கொள்ள வந்தால் அவனிடம் உள்ள குறைகளை உற்று நோக்கி எதற்கு நீ சரிப்பட்டு வர மாட்டாய் என்று கூறி அனுமதிக்க மறுக்கக்கூடாது என வலியுறுத்துகிறார். அப்போ எப்போது அவனுடைய தனித் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு வரும் அதற்கான சூழல் வரும் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்க வேண்டும்.
ஐந்தாவது கட்டுரை “பரிசோதனைக்கால தனிமையும் வாசிப்பின் தோழமையும்” வாசிப்பு தரும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். வாசிப்போடு உள்ள உறவும் ஆளுக்கு ஆள் மாறும். ஆசிரியர்கள் சிலர் வருத்தப்பட்டு சொல்லும் கருத்து வகுப்பறையில் புதுப்புது பரிசோதனைகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம். மாணவர்களோடு நெருக்கமாகவும் இருக்கிறேன் ஆனால் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு எனக்கு இல்லை. தனித்து விடப்பட்டது போல் உணர்கிறேன் என்கிறார்கள்.வகுப்பறையில் புதுப்புது செயல்பாடுகளை நிகழ்த்திப் பார்கக அருமையான இரண்டு யோசனைகளை முன்வைக்கிறார். ஒன்று தனது எண்ணங்களை அக்கறையுடன், பரிவுடன் உள்வாங்கக் கூடிய மனிதர்களிடம் பகிர்வது. இது போன்றவர்கள் பெரும்பாலும் வேலை பார்க்கும் இடங்களில் கிடைப்பதில்லை, இரண்டாவது நல்ல நூல்களை வாசிப்பது. இந்த வாசிப்புக்கான முக்கிய புத்தகங்களாக ஒரு முழுமையான பள்ளி அனுபவமான *“டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமி” நூலையும், ஒரு வகுப்பறை அனுபவமான ஜுஜூபாய் பதேக்காவின் “பகல் கனவு” நூலையும்* பரிந்துரைக்கிறார். நாம் உண்மைதான் ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களை நல்ல முறையில் வடிவம் மிக்க தங்கள் முயற்சிகளை தாங்கள் மட்டுமே கடைசிவரை செய்து கொண்டிருப்பார்கள்.
ஆறாவது கட்டுரை “வகுப்பறை உறவு_ நெருக்கமும் இடைவெளிகளும்” ஒரு வினோதமான விளையாட்டை நமக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். அந்த விளையாட்டின் பெயர் “பேய் பிடிச்சிருக்கு”இந்த விளையாட்டு ஆசிரியரை கற்பிப்பவரகா மட்டும் பார்க்காமல் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ளத்தான். சில மாணவர்கள் ஆசிரியர்களை வெத்தல பெட்டி, மீசகார, நெடுமரம், மாடசாமி என்பதற்கு பதிலாக மடசாமி என்றெல்லாம் பெயர் வைத்தால் நமக்கு எவ்வளவு கோபம் வரும் அதுபோலதான் சில ஆசிரியர்கள் மாணவர்களின் அடையாளத்தை, அவன் உயரத்தை, அவன் நிறத்தை வைத்து அழைப்பார்கள். இதற்கான வேறுபாட்டை, பக்குவத்தை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏழாவது கட்டுரையாக “பள்ளியும் பண்பாட்டுப் புரட்சியும்” என்னும் கட்டுரை. அனைவருக்குமான உடல் உழைப்போடு கூடிய கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டது என்பதையும், அதனால் சீனாவில் கல்வி விழுக்காடு எண்ணிக்கை எவ்வாறு உயர்ந்தது என்பதையும் பற்றிப் பேசுகிறது. இக்கட்டுரை. நம் தமிழகத்தில் இப்போது முன்னெடுத்துள்ள “இல்லம் தேடிக் கல்வி”, “முதியவர் கல்வி” போன்றவைகளால் நம் நாட்டின் கல்வி விழுக்காடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எட்டாவது கட்டுரை “பொய்களுக்கும் ஒரு இடம்” மாணவர்களின் பொய்யை சிறிது கூட ஏற்றுக்கொள்ளாத ஆசிரிய மனம், As I am suffering from…. என லீவ் லெட்டரை முதல்நாளே கொடுத்துவிட்டு சொந்த வேலையில் ஈடுபடுவதை நகைச்சுவையுடன் “பொய்களுக்கும் ஓர் இடம்” கட்டுரையில் விவரிக்கிறார். மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை, ஆசிரியர் வந்தால் எழுந்து நிற்பதில்லை போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். மருத்துவ விடுப்பு எடுத்து சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள். மாணவர்கள் மட்டும் வகுப்புக்கு புத்தகம் கொண்டுவராமல், தாமதமாக வருவது, வகுப்புக்கு விடுப்பு எடுப்பது போன்ற செயல்களுக்கு பொய் சொல்வதை நாம் அனுமதிக்காமல் ரசித்தால் என்ன என்பதை குறிப்பிட்டுள்ளார். மறைமுகமாக நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக விடுப்பு எடுக்கிறோம் அதை காண்பிக்கவும் மாணவர்கள் விடுப்பு எடுத்தால் ஏன் கோபம் வருகிறது என நம்மை ஆசிரியர்.மாடசாமி கேட்கிறார்.
ஒன்பதாவது கட்டுரை “ஜென் வகுப்பறை” ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள். அவர்களும் சில நேரங்களில் கோபத்தில் சறுக்கி விடுகிறார்கள். கண்மண் தெரியாமல் அடித்துவிட்டு ‘அந்த நேரத்தில் என்னை எந்தப் பேய் பிடிச்சுச்சோ, அவன் அழுக அழுக அடிச்சுப் புட்டேன்’ என்று கண்கலங்குகிறார்கள்” என்பதைப் பதிவு செய்துவிட்டு வகுப்பறைகளில் நடக்கும் சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிரியர், மாணவனை பார்த்து மண்டையில் மூளை இருக்கா? களிமண் இருக்கா?திங்க மட்டும் தெரியுது, படிக்க தெரியல இவ்வகைக் கேள்விகள் குறித்து சில ஜென் கதைகளையும், தத்துவங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
கடைசி கட்டுரை “வீதியில் விதைத்த நம்பிக்கை” என்னும் அறிவொளி இயக்க அனுபவங்கள் பற்றிய கட்டுரை இது. கட்டிடங்களுக்குள் கிடந்த கல்வியை வீதிக்கு அழைத்து வந்தது அறிவொளி இயக்கம். வீதிகளில் ஒரு சுதந்திரம் இருந்தது,புத்தகங்களுக்குள் கட்டுப்படாத பாடத்திட்டம் இருந்தது. பாட்டும் சிரிப்புமான வகுப்பறை இருந்தது, கல்வி வியாபாரிகள் கவனம் விழாத தூரம் இருந்தது. மாற்றத்திற்கான நம்பிக்கை இருந்தது.*பட்டா,படி* இரண்டு வார்த்தை தான் அறிவொளி கற்பித்த முதல் வார்த்தைகள் தமிழில் எழுத சுலபமான எழுத்து “ட, பா” என்பதை குறிப்பிட்டுள்ளார். கடைசி கட்டுரை வகுப்பறை மொழி எனும் புத்தகத்தில் இன்னும் விளக்கமாக உள்ளது.
இப்புத்தகம் உண்மையில் அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆளுமையை வளர்க்கக்கூடிய நல்ல ஒரு புத்தகம்.
தி.தாஜ்தீன்
ஹிரோஷிமா, நாகசாகி தினம் (ஆற்ற இயலாத அவலத்தின் கண்ணீர்) – பேராசிரியர் ச.மாடசாமி
கல்வியாளர், பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் ‘வித்தியாசம்தான் அழகு’ புத்தகத்தில் அறிமுகம் செய்துள்ள HIROSHIMA NO PIKA (கொ.ம.கோ.இளங்கோ மொழியாக்கத்தில் ‘மாயி-சான்’ என்ற நூல் தமிழில் வெளியாகியுள்ளது) ஜப்பான் நூல் பற்றிய கட்டுரை.
கதைகள் மட்டும் போதுமா?
கதை கேட்டுப் பழகிய குழந்தை, ஒரு திடீர்த் திருப்பத்துக்காகக் காத்திருக்கிறது. கதை சொல்பவருக்கும் இது புரிந்திருக்கிறது. அதனால்தான், “அப்ப டுமீல்னு ஒரு சத்தம்” என்கிறார் கதை சொல்பவர். “பார்த்தா, கண்ணக் கூசுற மாதிரி வெளிச்சம்” என்கிறார். “ராஜா உக்காந்திருந்தார்ல… அந்த நாற்காலி திடீர்னு ஆட ஆரம்பிச்சுச்சு” என்கிறார். “எல்லோரும் டொம் டொம்னு விழுந்திட்டாங்க” என்கிறார்.
கதை சூடு பிடிக்கிறது. கதையில் ஒன்றிப் போய், குழந்தை உட்கார்ந்திருக்கிறது. கவனம் சிதறாமல் குழந்தையைக் கதையோடு கட்டிப் போட, ஒரு திடீர்த் திருப்பம் உதவுகிறது.
கதைகளில் மட்டும்தானா திருப்பங்கள்? வாழ்க்கையில், வரலாற்றில் திருப்பங்கள் குறைவாகவா இருக்கின்றன? இதோ வரலாற்றிலிருந்து ஒரு சம்பவம்….
‘காலை 8.15 மணி. வீட்டில் எல்லோரும் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென்று வெளிச்சம். ஆரஞ்சு நிற வெளிச்சம்! ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் வெட்டி மின்னியது போன்ற வெளிச்சம். வெளிச்சத்தைத் தொடர்ந்து வீடுகள் கிடுகிடுவென்று ஆடிச் சரிந்தன. நொறுங்கிய வீடுகளின் இடிபாடுகளுக்குள் மனிதர்கள் சிக்கிக் கிடந்தார்கள் எங்கு பார்த்தாலும் தீ… புகை!
இது கற்பனைக் கதையா? இல்லை . 1945 ஆகஸ்ட் 6 காலை 8.15 மணிக ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் நிகழ்ந்த கொடுமை. திருப்பம் துயரமும் நிறைந்த இந்தச் சம்பவத்தைச் சிறார்களுக்குச் சொல்லலாமா?
குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும் என்பது சரி; கதை மட்டுமே சொல்லவேண்டும் என்பது எப்படிச் சரி? இப்படி யோசித்தவர் ஜப்பான் எழுத்தாளரும் ஓவியருமான மாருகி தோசி. ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அமெரிக்கா வீசிய அணு குண்டுகள் பல்லாயிரக்கணக்கானோர் உயிரைப் பறித்தன ; லட்சக்கணக்கானோரை நடைபிணங்களாக்கின.

இந்தக் கொடூரம் நிகழ்ந்து எட்டாண்டுகளுக்குப் பின் 1953-ல் ஓர் ஓவியக் கண்காட்சி ஜப்பானின் சிறிய நகரமொன்றில் நடந்தது. அணுகுண்டு விளைவித்த துயரங்களே கண்காட்சியின் கருப்பொருள். தோசியும் அவர் கணவரும் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கண்காட்சியில் தோசி, ஒரு பெண்ணைச் சந்தித்தார். அழுகையும் குமுறலுமாய் அந்தப் பெண் தன் வரலாற்றைச் சொன்னாள். நெஞ்சை உருக்கும் வரலாறு அது. அந்த வரலாற்றை வளரும் சிறார்களுக்குச் சொல்ல நினைத்தார் தோசி. பெரியவர்கள்தான் எல்லா அழிவுகளையும் அவல வரலாறுகளையும் சலனமின்றிக் கடந்து விடுகிறார்களே போரின் கொடுமையைக் குழந்தைகள் புரிந்து கொள்வதுதான் இந்தப் பூவுலகின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு கருதினார் தோசி.
Hiroshima No Pika என்ற புத்தகத்தைச் சிறுவன் எழுதினார். Pika என்பது தீப்பிழம்பு வெளிச்சத்தைக் குறிக்கும் சொல்.
தோசி சொன்னார்: “எனக்கு 70 வயதாகிறது. எனக்குக் குழந்தைகளும் களும் கிடையாது; பேரக்குழந்தைகளும் கிடையாது. உலகெங்கும் உள்ள குழந்தைகளை என் பேரக் குழந்தைகளாக எண்ணி அவர்களுக்காக புத்தகத்தை எழுதி இருக்கிறேன். சிறிய பக்ககம் அனால் எழுதி முடிக்க நம் நாட்கள் ஆகிவிட்டன.”
குழந்தைகளுக்கான புத்தகங்களில் மிக அரிய புத்தகம் ‘Hiroshima No Pika’. மாயி-சான் என்ற பெயரில், கொ.மா.கோ.இளங்கோவின் அற்புதமான மொழிபெயர்ப்பில் இப்புத்தகத்தைத் தமிழில் தந்துள்ளது பாரதி புத்தகாலயம் புத்தகத்தின் சுருக்கம் இது:
ஜப்பானின் ஹிரோஷிமா, ஏழு நதிகள் பாயும் நகரம். இரண்டாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து, ஏதோ ஒரு அசம்பாவிதத்தை ஹிரோஷிமா மக்கள் எதிர்பார்த்தபடியே இருந்தார்கள். பழைய கட்டடங்களைத் தகர்த்து தெருக்களை அகலமாக்கினார்கள். வீடுகளில் போதுமான தண்ணீர் நிரப்பி வைத்தார்கள். எப்போதும் சிறு பையில் மருந்துப் பொருள்களை எடுத்துச் சென்றார்கள். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் தாண்டி அவர்கள் தலையில் விழுந்தது அந்த அணுகுண்டு. அந்த அணுகுண்டின் பெயர் ‘குட்டிப் பையன்’ என்பது கொடூர முரண்!
துடிப்பான ஏழு வயதுச் சிறுமி ‘மீ. அவள் முழுப் பெயர் மீசான். ‘மீ’ என்பது ஜப்பானில் அழகுக்கு அடைமொழி. 1945 ஆகஸ்ட் 6 அன்று காலை 8.15 மணிக்கு அம்மா அப்பாவோடு அமர்ந்து இனிப்பு உருளைக்கிழங்கை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மீ. அப்போதுதான் முன்னர் விவரித்த அந்தச் சம்பவம் நடந்தது. ஆரஞ்சு நிற தீப்பிழம்பு வெளிச்சம்! தொடர்ந்து வீடுகள் குலுங்கி நொறுங்கின. என்ன நடக்கிறது என்பதறியாமல் மயங்கி விழுந்தாள் மீ. அவள் மயக்கம் தெளிந்து மெல்லக் கண் விழித்தபோது, ஒரே இருட்டு. இருளைத் துளைத்து அம்மாவின் சத்தம், “மீ… மீ… மீ..!”

தன்மேல் விழுந்து கிடந்த பலகைகளைத் தள்ளிவிட்டு எழுவது சிறுமிக்கு சிரமமாக இருந்தது. அம்மாவின் குரல் மீண்டும். “மீ! எழுந்திரு. இங்கிருந்து வேகமாகப் போகவேண்டும். அப்பா நெருப்புக்குள் சிக்கிக் கிடக்கிறார்.
சொல்லிவிட்டு அம்மா சும்மா நிற்கவில்லை. நெருப்புக்குள் பாய்ந்தார். கணவரை மீட்டெடுத்து வந்தார். தன் மேலாடையான கிமோனாவைக் கிழித்து அவர் காயங்களை மறைத்துக் கட்டினார். அப்புறம் அவர் செய்ததுதான் அற்புதம்!
காயம்பட்டு நினைவிழந்து கிடந்த கணவரைத் தம் முதுகில் தூக்கிக்கொண்டார். ஒரு கையில் மகள் மீயைப் பிடித்துக் கொண்டார். “வா! நான் ஆற்றை அடையவேண்டும்.”
மூவரும் ஆற்றங்கரையில் கரையில் போய் விழுந்தார்கள். தண்ணீரில் நனைந்தார்கள். ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் கூட்டம். உடை எரிந்து, கண்ணிமைகளும் கோரமான தோற்றத்தில் குழந்தைகள்; பலர் மூச்சற்றுக் கீழே பார்கள். அவர்கள் மீது மற்றவர்கள் தடுமாறி விழுந்தார்கள். எங்கு பார்த்தாலும் மனிதக் குவியல்! பிணக்குவியல்
அசைவற்றுக் கிடந்த மீயின் காலுக்குக் கீழே ஏதோ ஓர் அசைவு. மீ கவனித்தாள். இறகுகள் எரிந்து பறக்கமுடியாமல் தத்தி நடந்து கொண்டிருந்தது ஒரு சிறு பறவை. மீ ஆற்றைப் பார்த்தாள். ஆற்றில் ஒரு மனிதனின் பிணம்: தொடர்ந்து ஒரு பூனையின் பிணம்; தொடர்ந்து பிணங்கள்!
ஆகாயம் இருண்டு கிடந்தது. இடி இடித்தது. இது கோடைக் காலம்தான். அனால், இதுவரை அனுபவித்திராத கடுங்குளிர் நிலவியது. பெரும் மமை பெய்தது. இதுவரை பார்த்திராத கறுப்பு மழை!
கணவரை முதுகில் சுமந்தபடி, மகளைக் கையில் பிடித்தபடி, ஒவ்வோர் மாக ஏறி இறங்கினார் அந்தத் தாய். ஒரு ஆற்றங்கரையில் சோர்ந்து விழந்தார்கள். அசதியில் தூங்கினார்கள். ஆகஸ்ட் 6-ம் தேதி விழுந்தவர்கள், 9-ம் தேதி அன்றுதான் விழித்தார்கள். அவர்கள் விழித்துப் பார்த்த அந்த 9-ம் தேதியில்தான் நாகசாகியில் அணுகுண்டு விழுந்து ஏராளமானவர்கள் மடிந்தனர். ஆனால், எதையும் அறிந்துகொள்ள முடியாத சோர்விலும் களைப்பிலும் அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் விழித்தபோது அருகில் ஒரு பாட்டி இருந்தாள். அந்தப் பாட்டி மீயைப் பிரியத்தோடு பார்த்தாள். தன் கையிலிருந்த அரிசி உருண்டையை சிறுமி மீக்குக் கொடுத்தாள் பாட்டி. அடுத்த கணம் பாட்டி சரிந்து விழுந்து இறந்தாள்.

அந்த அரிசி உருண்டையை மீயால் உண்ண முடியவில்லை. விரல்கள் எரிந்து ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருந்தன. குண்டு விழுந்த நேரத்தில், இனிப்பு உருளைக்கிழங்கை உண்பதற்காக அவள் தன் கையில் வைத்திருந்த குச்சிகளும் (Chopsticks) இன்னும் விரல்களுக்குள் சிக்கிக் கிடந்தன. மீ அழ அழ, அவள் விரல்களைப் பிரித்து, அக்குச்சிகளை அம்மா எடுத்தார்.
தீயணைப்பு வீரர்கள் வந்து காயம்பட்டவர்களை ஒரு பள்ளி வளாகத்தில் சாத்தனர். இடையில் ஒருநாள் மீயும் அம்மாவும் தங்கள் வீட்டைப் பார்க்க வந்தனர். அது அடையாளம் தெரியாமல் நொறுங்கிப் போயிருந்தது.
நாட்கள் நகர்ந்தன. மீயின் தந்தை உடலில் பல காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆறுவது போலிருக்கும். அடுத்த நாளே மீண்டும் புண்ணாகி, தாங்கமுடியாத வலி தரும். அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. அடிக்கடி ரத்த வாந்தி எடுத்தார்! உடம்பெல்லாம் கருஞ்சிவப்புப் புள்ளிகள். அவர் அதிக நாள் வாழவில்லை .
சிறுமி மீக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை. அவள் ஏழு வயதில் இருக்கும்போது இந்தத் துயரம் நிகழ்ந்தது. அதன்பிறகு பல ஆண்டுகள் மீ வாழ்ந்தாள். ஆனால்,
அவள் வளரவே இல்லை . ஏழு வயதுச் சிறுமியின் உயரத்திலேயே மிச்சமிருந்த ஆண்டுகளையும் அவள் வாழ்ந்து முடித்தாள். இது என்ன நோய்? அணுகுண்டு கொண்டு வந்த பல நோய்களுக்குப் பெயரில்லை. திடீர் திடீரென மீயின் மண்டையோட்டில் சிறு சிறு கண்ணாடிச் சில்லுகள் கிளம்பி வரும். கண்ணீரோடு அவற்றை எடுப்பார் அம்மா.
அணுகுண்டுக்குத் தப்பித்த ஜீவன்களும் ஒரு நாளும் நிம்மதியாக வாழவில்லை. உலகெங்கும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வகுப்பறையும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.
வளரும் சிறார்களுக்கு (7 வயது முதல் 12 வயது வரை) கதைகள் மட்டும் சொல்வது போதாது. இத்தகைய துயர வரலாறுகளையும் சொல்ல வேண்டும். (ஜாலியன்வாலா பாக், காந்தி கொலை என நமக்கும் சொல்லப் பல வரலாறுகள் உண்டு.) குழந்தைகள் இந்த வரலாறுகளை வறட்டுத்தனமான பாடப் புத்தக மொழியில் படித்து என்ன பயன்? ‘ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டின் பெயர் என்ன’ என்ற கேள்விக்கு விடையை மனப்பாடம் செய்வதோடு முடிந்து போகும் தொடர்பு அது!
பாடப் புத்தக மொழியில் அல்ல, சிறுவர் மொழியில் வரலாறுகள் வேண்டும். அதற்கு முன்னுதாரணம் Hiroshima No Pika.
மாயி-சான்
தோசி மாருகி (Toshi Maruki)
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ
வெளீயிடு: புக்ஸ் பார் சில்ரன், பாரதி புத்தகாலயம்.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/





