நூல் அறிமுகம்: சா.ரஷீனாவின் ’குழந்தைகள் வாழும் ஆலயம்’ – பெரணமல்லூர் சேகரன்
“குழந்தைகள் என்றால் தூய்மையான மழைநீர் போல இந்த உலகத்து மாசும் அழுக்கும் படாத தூய்மையான நீர் அது” -மு.வ.
அத்தகைய குழந்தைகள் வாழும் ஆலயம் கல்வி நிறுவனங்கள் எனின் மிகையன்று. எனவேதான்,
“ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி நிறுவனங்களிலிருந்துதான் உருவாக்கப்படுகிறது” என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
ஆக, ஒரு நாட்டை உருவாக்கும் புனிதமான ஆசிரியர் பணியிலிருந்து கொண்டு தமது கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேசிப்புடனும் செய்தால் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதை அனுபவ வாயிவாக உணர்த்தும் உன்னதமான எளிமையான நூலே “குழந்தைகள் வாழும் ஆலயம்.”
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளிலும் ஆரம்பப் பள்ளிகளிலும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுள் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக அதிலும் ஆரம்பப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பெண்களே. இது ஒருவகையில் குழந்தைகளுடன் பழகும் தாய் போன்ற அனுபவத்தை அவர்களுக்குத் தருகிறது. இதன்மூலம் அக்குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் ஈர்ப்பும் ஏற்படுகிறது. பொதுவாகவே கல்வி பயிலும் சூழல் நல்ல முறையில் அமைவதைப் பொறுத்துத்தான் குழந்தைகளைக் கல்வி இயல்பாய்- எளிதாய்ச் சென்று சேர்கிறது.
அத்தகைய சூழலை சில ஆசிரியர்கள்தான் உருவாக்குகிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவராகக் குன்றின் மேலிட்ட விளக்காகத் திகழ்கிறார் சா. ரஷீனா. தான் கல்வி பெற்ற அனுபவங்களையும், பெற்ற கல்வியை அர்த்த அடர்த்தியுடன் கற்பித்து குழந்தைகளைத் தாயுள்ளத்தோடு அணுகி அவர்களைப் பன்முகத் தன்மை கொண்ட மாணவர்களாகப் பரிணமிக்கச் செய்யும் பணிகளை எவ்வாறு மேற்கொண்டார் என்பதைச் சுவைபட தன்னனுபவங்களோடே படம் பிடித்துக் காட்டியுள்ள நூலே “குழந்தைகள் வாழும் ஆலயம்”.
தான் குழந்தையாய் இருக்கும்போது ஏனைய இஸ்லாமியக் குழந்தைகளைப் போல மதரஸா பள்ளியில் சேர்ந்து அரபுப்பாடங்களில் உள்ள அடிப்படைப் பாடங்களை மட்டும் படித்துவிட்டு வீட்டோடு வளர விரும்பிய அன்னையிடம் அப்பாவின் துணையுடன் போராடி கல்வி கற்று, கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர் கல்வி கற்கிறார் ரஷீனா. அத்தகைய முயற்சியும், போராட்ட குணமும் தந்தையின் திராவிட இயக்கப் பின்னணியால் வலுவாகிறது.
பின்னர் ஆசிரியர் பணியேற்று தனியார் ஆங்கிலப் பள்ளியில் சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவங்களோடு அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக சேர்ந்த பிறகுதான் ரஷீனாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.
ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிபவர்தான் அனைத்துக்கும் பொறுப்பு என்றாலும் பிற பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் போல ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று காலம் கழிக்கவில்லை ரஷீனா. தான் சேர்ந்த பள்ளியில் பயிலும் மாணவர்களைத் தன் குழந்தைகளாக எண்ணி அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரவணைத்து அவர்களுக்குப் பாசத்தையும் கல்வியையும் ஊட்டிய பாங்கு மகத்தானது.
குழந்தைகள் தன்னை “லாங் ஹேர் மிஸ்”, என்றதும், “டீச்சர் நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க” என்றதும், “டீச்சர், உங்க புடவை நல்லாயிருக்கு” என்றதும் ரஷீனா இன்னும் குழந்தைகளை நெருங்க வைத்தது.
“வகுப்பறை என்பது என்னைப் பொறுத்தவரை தவம் மேற்கொள்ளும் இடம். அந்த தவத்தினால் கிடைக்கும் வரங்களைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் ஒரு மகிழ்ச்சி. வகுப்பைக் கலகலப்போடு நடத்தவேண்டுமென்று முயற்சிப்பவள் நான்.” எனக்கூறும் ரஷீனா அப்படியே செய்து காட்டியுள்ளார். மேலும் “வகுப்பறை என்பது குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் இடமாகவே தோன்றியது” என்பதைத் தமது சொந்த அனுபவமாகவே கூறியுள்ளது சிறப்பு.
ஆண்டுவிழாவே நடத்தாத பள்ளியாக இருந்ததை மக்கள் பங்களிப்புடன் ஆண்டுவிழா நடத்தி குழந்தைகளின் திறமைகளை வெளியுலகுக்குக் கொண்டுவந்து பெற்றோர்களின் உள்ளங்களை மகிழ்வித்து அவர்களின் உள்ளங்களில் ரஷீனா இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
பல்லாண்டுகளாக சும்மா கிடந்த பள்ளித் தோட்டத்தை மாணவர்களைக் கொண்டே பண்படுத்தி கீரைகளையும் காய்களையும் பயிர் செய்து சாதனை படைத்ததும் பள்ளித் தோட்டத்தில் குழந்தைகளின் கரங்களாலேயே மரக்கன்றுகள் நட்டதும் சிறப்பு. விதைப்பந்து விநாயகர்களை உருவாக்கி, இஸ்லாமிய ஆசிரியையாக ரஷீனா இருந்தபோதிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதும், அவ்விநாயக மண்சிலைகளைக் கரைப்பதன் மூலம் அதன் விதைகள் செடிகளானதும் ரஷீனா மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி.
நான்கு வயதே ஆனாலும் பெற்றோர் ஆசையை நிராகரிக்காமல் தர்ஷினி என்ற குழந்தையைப் பள்ளியில் அனுமதித்தார் ரஷீனா. அக்குழந்தைக்குப் பயிற்சி கொடுத்துத் தொய்வு ஏற்பட்ட போதெல்லாம் ஊக்கப்படுத்தி பிற்காலத்தில் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடத்திலும், கல்வியமைச்சர் கரங்களாலும் விருது பெற்றது சாதனைதான். மேலும் கொரோனா காலத்தில் பள்ளிக்கு விடுமுறை ஆயினும் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பித்த ரஷீனாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதன்மூலம் ‘திருக்குறள் உலக சாதனைக்காக பயிற்றுனர்’ எனும் விருதைப் பெற்றது ரஷீனாவின் இடைவிடாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
அன்பால் அரவணைத்து கல்லாங்குத்து எனும் கிராமத்தின் அரசுப்பள்ளி மாணவர்களை ஈர்த்து உயரம் கண்ட ரஷீனா “அன்பாசிரியர்” எனும் விருதைக் கல்வி அமைச்சர் மூலமாகப் பெற்றபோது “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” எனும் குறள்படி ரஷீனாவின் தாய் , தந்தை, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என மகிழ்ந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இடைநிலை ஆசிரியர் நிலையில் தலைமை ஆசிரியரைக்காட்டிலும் இடைவிடாதியங்கிய ரஷீனா தன் பள்ளியை ,”ஸ்மார்ட். கிளாஸ்” ஆக்குவதற்குப் பெரு முயற்சி எடுத்து வெற்றியும் பெற்றது சாதாரணமானதன்று. 28.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவான “ஸ்மார்ட் வகுப்பும் கட்டிடமும்” தலைமை ஆசிரியையைத் தாண்டி ரஷீனா சாதித்தது எனின் மிகையன்று. மாவட்ட ஆட்சியர் அவ்வகுப்பறையைக் காண அப்பள்ளிக்கு வந்ததும் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்ததும் குழந்தைகளுக்குப் பசுமரத்தாணி போல் பதிந்தது.
குழந்தைகளுக்குக் கதைகளைச் சொல்லி மனமகிழச் செய்த ரஷீனா ‘ஆயிஷா’ கதையைச் சொன்னபோது, “ஆயிஷா செத்திருக்கக்கூடாது, படித்துப் பெரிய ஆளாக வந்திருக்க வேண்டும்” என்று குழந்தைகள் ஆதங்கப்பட்டதைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் ரஷீனா.
பொன்னூரில் நடைபெற்ற திருக்குறள் ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர் அருணன், அந்நிகழ்வில் பங்கேற்று உலக சாதனை நிகழ்த்திய தனது மாணவி தர்ஷினியையும் பயிற்சி அளித்த தன்னையும் பாராட்டியதைக் குறிப்பிட்டு ரஷீனா மகிழ்ந்துள்ளார் இந்நூலில். தர்ஷினி தனக்குக் கிடைத்த பணத்தைக் கொரோனா நிவாரண நிதியளிக்கும் வகையில் சமூக ஆர்வலராக மாற்றிய பெருமை ரஷீனாவையே சாரும்.
மாணவர்களின் திறமைகளைத் தமது முகநூலில் பகிர்ந்தது, அதன்மூலம் முகநூல் நண்பர்களால் மாணவர்களுக்குப் பரிசுப்பொருட்கள் கிடைத்ததும் அதன்மூலம் சிறுசேமிப்புப் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியதையும் பகிர்ந்து மகிழ்கிறார் ரஷீனா.
மாணவர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றது ஒருபுறம் எனில் மறுபுறம் அவர்களை வாசிப்பாளர்களாக்கப் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றதும் இனிய அனுபவங்கள்தானே.
இத்தகையைச் சாதனையாளருக்கு மாநில அளவிலான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது குறுகிய காலத்திலேயே மாநில கல்வி அமைச்சர் மூலமாக வழங்கப்பட்டது விருதுக்குத்தானே சிறப்பு சேர்க்கும்.
இத்தகைய தன்னனுபவங்களை எளிய நடையில் நூலாக்கி வழங்கியுள்ள ரஷீனா அவரது நூலையும் சென்னை புத்தகத் திருவிழாவில் கண்டபோது புல்லரிக்கிறார். இத்தகைய சாதனையாளர் ரஷீனாவின் நூலை வாங்கிப் படிப்பது ஆசிரியப் பெருமக்களுக்கு மட்டுமல்ல வாசிப்புப் பழக்கம் உள்ள அனைவருக்குமே அவசியம் எனின் மிகையன்று.
..பெரணமல்லூர் சேகரன்