Music Life Series Of Cinema Music (Isai kelathu nam illaiye) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்



இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே
எஸ் வி வேணுகோபாலன்

பாடலாசிரியர் காமகோடியன் அவர்களுக்கான இரங்கல் குறிப்புகளோடு வெளியான கடந்த வாரக் கட்டுரை அதிகமானான வாசகர்களைச் சென்றடைந்தது. கட்டுரைகளைச் சேர்த்து வைத்துத் தான் வாசிக்கிறேன் என்று சொல்லும் சில அன்பர்கள் கூட அந்தக் கட்டுரையை உடனே வாசித்து விட்டு மறுமொழி அனுப்பி இருந்தனர். கவிஞருக்கான உளமார்ந்த இரங்கல் அது.

கட்டுரையை காமகோடியன் அவர்களது வாட்ஸ் அப் எண்ணுக்கும் அன்றே அனுப்பி இருந்தேன், குடும்பத்தில் யாரேனும் பார்க்கக் கூடும் என்ற நம்பிக்கையோடு! அண்மையில் அந்த எண்ணில் இருந்து ஒரு செய்தி வந்தது – மறைந்த கவிஞரது பதினாறாம் நாள் நினைவு நிகழ்வு விவரம். அவருக்கு நெருக்கமானவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் வரிசையில் அனுப்பி இருந்தனர் என்கிற விதத்தில் ஆறுதல் அடைய முடிந்தது.

நினைவுகளால் நகர்கிறது வாழ்க்கை என்பதுபோல் சில நேரம் தோன்றுவதுண்டு. படைப்பாளியின் வாழ்நாள் கடந்து அவரது நினைவைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் எழுத்து, இசை, கலை மூலம் அவர்கள் நிலை பெற்று விடுகின்றனர்.

Music Life Series Of Cinema Music (Isai kelathu nam illaiye) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே - எஸ் வி வேணுகோபாலன் 

அண்மையில் கதக் நாட்டியக் கலையின் மகத்தான ஆசான், கலைஞர் பிர்ஜு மகராஜ் மறைந்தார். அவரது வயது 83. அவரைப் பற்றிய கட்டுரை ஒன்று இப்படி தொடங்குகிறது:

சில ஆண்டுகளுக்குமுன், ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சென்றிருக்க, அவரை வரவேற்றுப் பூங்கொத்து கொடுக்க பள்ளிக்கூடச் சிறுவர்களை விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அவர் உள்ளே நுழைகையில் அவர்கள் ஆர்வத்தோடு அதை அவர் கைகளில் அளிக்கின்றனர்.

அந்தக் குழந்தைகளை ஆசையோடு பார்த்த மகராஜ், ‘கதக் என்றால் என்ன என்று அறிவாயா?’ என்று கேட்டிருக்கிறார், அதற்கு அவரை இன்னார் என்றே அறியாத ஒரு சிறுமி,”பண்டிட் பிர்ஜு மகராஜ் ஆடும் நாட்டியம் அது’ என்று விடையிறுத்திருக்கிறாள். சிரித்துக் கொண்டே பிர்ஜு சொன்னாராம்,’அவன் நாட்டியத்தை ஆடுவது இல்லை, நாட்டியத்தை வாழ்ந்து கொண்டிருக்கிறான்’ என்று!

நாட்டியம் வாழ்கிற வரை வாழ்கிறவரை நாம் எப்படி மறைந்தார் என்று எழுதி வைக்க!
https://www.thehindu.com/entertainment/dance/birju-maharaj-ruled-the-realm-of-kathak/article38298321.ece/amp/

விஸ்வரூபம் படத்தில் சங்கர மகாதேவன் – கமல் குரல்களில் உள்ளத்தைத் தொடும் ‘உன்னைக் காணாது நான்’ பாடலுக்கான நாட்டிய அடவுகள் பிர்ஜு மகராஜ் அவர்களிடம் கற்றார் கமல். அதன் படமாக்கக் காணொளிப் பதிவில் மகராஜ் கண்ணசைவு, உடல் மொழியின் நேர்த்தி இவற்றைப் பார்க்க முடியும்.

பிர்ஜு மகராஜ், ஓர் அருமையான இசைப் பாடகரும் கூட, சத்யஜித் ரே அவர்களது திரைப்படத்தில் இரண்டு நாட்டியக் காட்சிகளுக்கு இசையமைத்து, அவரே பாடி இருக்கிறார், அது மட்டுமல்ல, மிகச் சிறந்த தபலா இசைக்கலைஞர் அவர் என்பன போன்ற அரிய செய்திகளும் அண்மையில் வாசிக்கக் கிடைத்தன. தமது 13ம் வயதில் அவர், நாட்டியம் கற்பிக்கத் தொடங்கி விட்டாராம், பதின்மூன்று வயதில் ஆசிரியர், அதாவது எழுபதாண்டுகள் குருவாக வாழ்ந்தவர், நாட்டியத்தை வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்!

ஒரு சிற்பியின் உறக்கத்திலும் உளி சத்தம் ஒலித்துக் கொண்டிருக்கலாம், ஓர் ஓவியரின் மனத்திரையில் ஈரம் காயாத சித்திரம் ஒன்று எப்போதும் மின்னியபடி இருக்கக் கூடும். கவிஞர் தமக்குள் எங்கோ அமிழ்ந்து இருக்கும் சொற்களை உரிய இடத்தில் கைபட்டு எடுக்கும் போது கவிதை ஒளிர்வது நிகழலாம். இசையும் நாட்டியமும் உயிர்ப்பாக உள்ளத்தில், உடலில் கலந்து அதுவேயாக இந்தக் கலைஞர்கள் தங்களை உணரும் ஒரு கட்டத்தில் உன்னதமான இன்பம் மேலும் விளையத் தொடங்குகிறது. மகத்தான அஞ்சலி செலுத்துகிறோம் எளிமையாகவே வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கதக் ஆசானுக்கு!

இசை வாழ்க்கை 47வது கட்டுரையில், பின்னர் விரிவாகப் பேச வேண்டும் என்று ஒத்தி வைத்திருந்த பாடல் இப்போது கண் முன் வந்து நிற்கிறது. நாட்டிய இசை, இசையின் நாட்டத்தில் கவிதை, பாடலுக்கான ஆட்டத்தில் கதை என்று விரியும் ஓர் அற்புதமான திரை இசைப்பாடல் அது. வாணி ஜெயராம் அவர்களது தனித்துவமிக்க குரலினிமையும், உருக்கமான பாவங்களும், பன்முகத் திறனும் அசாத்திய முறையில் வெளிப்பட்ட ஓர் அரிய வகைப்பாடல்.

புன்னகை மன்னன் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வித ரசனையில் திளைக்க வைப்பவை. ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலை இரவு நேரங்களில் கேட்கும் போது அதன் உணர்வலைகள் ரசிகரை வேறெங்கோ கொண்டு சேர்க்கும். ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ இன்னொரு முத்து. பாடல்கள் எல்லாமே கவிஞர் வைரமுத்து.

‘கவிதை கேளுங்கள்’ பாடல் முற்றிலும் வேறு ஒரு தளத்தில் இயங்குவது. தாளக் கருவிகளும், தந்திக் கருவிகளும் அசுர கதியில் இயங்கவும், கேட்போர் உள்ளங்களையும் அதே வேகத்தில் செலுத்தவுமாக நிகழும் பரவசமிக்க ரீங்காரம் பாடல் நிறைவு பெற்று வெகு நேரம் எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கும் உணர்வுகளை விட்டுச் செல்கிறது.

பல்லவி தொடங்கும் கணத்திலேயே ஒரு தீக்குச்சி கிழிப்பது போல் பற்றவைக்கும் நெருப்பின் சுடரை மெல்ல மெல்ல வளர்த்து, அலை மோதவிட்டு, மேலும் கொழுந்துவிட்டு எரியவைத்துப் பெருஞ்சுவாலை போல் விண்ணோக்கி உயரச் செய்து நிறைவு செய்கிறார் வாணி ஜெயராம். அந்த நெருப்பை ஊதிவிடவும், அடுத்தடுத்த படிநிலைக்கு அதன் வெளிச்சம் பரவ வைக்கவுமாக பி ஜெயசந்திரன் உரிய இடங்களில் ஹம்மிங் செய்யவும், நடனத்திற்கான பதங்கள் சொல்லவுமாக இணைவது இருவேறு தன்மையுடைய குரல்களின் சங்கமமாகப் பாடலை மேலும் ஒளிரச் செய்கிறது.

நவீன நாட்டிய ஸ்டெப்களின் தாளத்தைத் தொடர்ந்து வயலின்கள், மிருதங்கத்தின் சிற்றுரை, வேகமான தாளக்கட்டு, இசைக்கருவிகள் வாசிப்பைத் தொடர்ந்து பல்லவியை எடுத்துக் கொள்ளும் வாணி ஜெயராம், மிக வேகமாகக் கடந்து செல்லும் அதே வேளையில் சொற்கள் அத்தனை தெளிவாகத் தெறிப்பது முக்கியமானது.

பல்லவி முடியும் இடத்தில் அழகான ஹம்மிங்கோடு இணைகிறார் ஜெயசந்திரன். பின்னர், கதக் நாட்டியத்திற்கான திசையில் பாடலை அவர் நகர்த்த, அந்த ரம்மியமான தாள கதியில், ‘நேற்று என் பாட்டில் …’ என்று சரணத்தை அபாரமாக எடுக்கிறார் வாணி. அதன் அசாத்திய சுழற்சிக்கு ஏற்ப உருள்கின்றன சொற்கள்.

அதன் முடிவில் பல்லவிக்கு சமாதானமான மனம் போலும் இறங்கும் குரலை, மீண்டும் ஜெயசந்திரனின் நுழைவு, பரத நாட்டிய முத்திரைகளுக்கான பதங்களை எடுத்துவைக்க, அந்த ஆட்டத்திற்கான அடுக்குகளில் பறக்கின்றன சொற்கள். அதன் வெளிச்சத்திலிருந்து மேலும் ஒரு ஒளிப்பிழம்பாக ‘பாறை மீது பவழ மல்லியைப் பதியன் போட்டதாரு’ என்று நாட்டுப்புற மெட்டிற்கு அபாரமாக நழுவிச் சென்று மின்னுகிறது வாணியின் குரல்.

இதில் நடன அடவுகளுக்கான சொல் வீச்சுகளை ஏந்திச் செல்லும் தாளக்கட்டுகள் பாடல் நெடுக அசர வைக்கும். கடைசி சரணத்தின் ஒவ்வொரு வரி நிறைவிலும் அதிர வைக்கும். கதைக் களத்தின் உளவியல் பாடுகளை, போராட்டங்களை, தாபங்களை, ஏக்கங்களை எல்லாம் உருக்கி வார்க்கும் வயலின் இழைப்போடு இரண்டறக் கலந்து விடும் இடத்தில் மேலும் மிளிர்கிறது வாணி ஜெயராம் அவர்களது குரல் வளம்.

வலைப்பூக்கள் சிலவற்றில் (ரமேஷ் என்பவரது தளத்தில், எடுத்துக்காட்டிற்கு), பல்லவியில் இருந்து முதல் சரணத்திற்குச் செல்கையில் சுருதி மாற்றத்திற்கேற்ப, ‘நேற்று என் பாட்டில் சுதியும் விலகியதே’ என்ற வரியை வியந்து குறிப்பிட்டு, இதன் பெருமை ராஜாவுக்கா, கவிஞருக்கா….இருவரின் அருமையான பங்களிப்பு இது என்று குறிப்பிட்டிருப்பதை வாசிக்க முடிந்தது. அந்த சரணத்தில், தேர்ந்த டென்னிஸ் ஆட்டக்காரர் போல், பந்துகளை வாங்கி வாங்கிப் பதிலுக்கு அதே வேகத்தில் திருப்பி அடிக்கும் லாவகத்தில் சுழலும் வாணியின் குரல்.

நாம் மிகவும் விரும்பிக் கேட்கும் ஓர் உரையாளர் பேசும்போது ஏற்படும் மனவெழுச்சி, அவர் பேசப் பேச நமக்குள்ளும் உணர்வுகள் பொங்கவும், அவர் நிறைவு செய்கையில் கொஞ்சம் ஆசுவாசம் தேவை போன்ற உணர்வு நமக்கும் ஏற்படுவது போலவும், வாணி ஜெயராம் பாடி முடிக்கவும், இந்த மொத்தப் பாடலின் இசையோற்சவம் அமைதிக்கு வரவும், ரசிகரும் தம்மையறியாமல் ஒரு பெருமூச்சு விட்டு ஓர் ஆழ்ந்த துயர வெளியின் பயணம் முடித்த உளவியல் அனுபவத்தில் ஆழக் கூடும்.

ஒரு புத்தக வாசிப்பு போல் இசை, இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு! மென்மையான வாசிப்பு, ஆவேசம் கொள்ளவைக்கும் வாசிப்பு, பரவசம், சோகம், பரிதவிப்பு, தம்மையே தொலைத்துவிடுவது போன்ற அனுபவங்கள் இரண்டுக்கும் பொதுவானவை. சிந்தனைகளைத் தூண்டுகிறது இசை, புத்தகம் போலவே!

புத்தகக் காதலர்கள் பெரும்பாலும் இசை கொண்டாடிகளாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தங்கள் வாசிப்பைத் தன்னடக்கமாக வைத்துக் கொள்வோரைப் போலவே இசை ரசிகர்களில் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்போர் உண்டு. மறுபதிப்பில் எப்போதும் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களைச் சென்றடையும் புத்தகங்கள் போலவே, அற்புதமான பாடல்கள் காலம் கடந்து நிலைத்து விடுகின்றன. நாட்டியத்தை வாழ்தல் போலவே தான் இசை வாழ்க்கையும்!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடர்களை வாசிக்க:

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Ullam Isaithathu Mella) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்



உள்ளம் இசைத்தது மெல்ல …..

கடந்த வாரக் கட்டுரை, உண்மையில் ஜுர வேகத்தில் எழுதியதுதான். இசையெனும் காய்ச்சல் மட்டுமல்ல, வேகமாக என்னுள் பரவிக் கொண்டிருந்த காய்ச்சல் அது. டிசம்பர் கடைசியில் எழுதி முடித்து, கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்ட அன்று எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நிபுணர் ஒருவரை சந்தித்து, பரிசோதனைகளுக்குப் பிறகு, வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அவர் சான்றிதழ் வழங்கியதும், மருத்துவமனை வாசத்திற்குத் தயாராகக் கட்டி எடுத்துச் சென்ற மூட்டைகளோடு வீடு திரும்பினேன். அப்புறம் செய்த உடனடி பணிகளில் ஒன்று தான், இசை வாழ்க்கை கட்டுரையை எல்லோருக்கும் பகிர்ந்து கொண்டது.

எந்தக் களைப்பும் இல்லாதிருக்கச் செய்துவிட்டது 5 நாள் தனியறைத் தனிமை. வாசிப்பும், இசையும், அலைபேசியிலேயே எழுதிக் கொண்டிருந்த கவிதைகள் சிலவும், பகிர்வுகளும் நிற்கவில்லை. மடிக்கணினி மட்டும் தான் அறைக்குள் குடியேறவில்லை.

கவிஞர் காமகோடியன் மறைவுச் செய்தி, தனிமைப்பட்டிருந்த அப்படியான நாள் ஒன்றில் வந்தது. எங்கள் தெருவிலேயே குடியிருந்த அருமையான மனிதர், சிறந்த பாடலாசிரியர், மெல்லிசை மன்னரோடு நெருக்கமாக உடனிருந்தவர், ஏராளமான பக்திப் பாடல்கள் அவருக்கு இயற்றி அளித்தவர். இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் எழுதிக் கொடுத்திருப்பவர். மிக எளிமையான மனிதர். இந்தக் கொடுந்தொற்றுச் சூழலில் நேரில் சென்று மரியாதை செலுத்த இயலாமல் போனது. அவரது நூல் வெளியீட்டு நிகழ்வில் பார்த்த இடத்தில் வாய்த்த அரிய அறிமுகத்தில் கோவில்பட்டி அன்பர் முத்துராமலிங்கம் என்பவரோடு கிடைத்த நட்புக்காகவும் காமகோடியன் அவர்களுக்கு அன்புக்கடன் பட்டிருக்கிறேன்.

அறிஞனாயிரு, கவிஞனாயிரு…..ஆயிரம் கோடிக்கு அதிபனாயிரு, வீரனாயிரு, சூரனாயிரு…..என்னவாக இருந்தாலும், மனிதனாயிரு என்று அமையும் அவரது இசைப்பாடலை, எம் எஸ் வி இசையமைத்து வாய்ப்புள்ள மேடைகளில், நிகழ்ச்சிகளில் எல்லாம் பாடிக் கொண்டே இருந்தார் என்பதை அடிக்கடி சொல்வார் காமகோடியன்.

அவரோடு பாபுஜி அவர்கள் தொலைபேசியில் நடத்தியுள்ள அருமையான உரையாடல், யூ டியூபில் தற்செயலாகக் கிடைத்தது, அவரது நூல் வெளியீடு நிகழ்ந்ததற்குப் பிறகான நேர்காணல் அது. தன்னைக் கொஞ்சமும் முன்னிறுத்தாமல், எம் எஸ் வி அவர்கள் பால் அத்தனை அன்பும், மரியாதையும் பொங்க வார்த்தைக்கு வார்த்தை கவிஞர் கொண்டாடிப் பேசுவதைக் கண்ணீர் மல்கித் தான் கேட்க முடிந்தது.

இந்த உரையாடலில், இசை மேதை நௌஷத் மீது எம் எஸ் வி கொண்டிருந்த பக்தியை, அவர் விஸ்வநாதன் பால் காட்டிய மதிப்பை எல்லாம் பதிவு செய்திருக்கிறார் காமகோடியன். திறமைகளுக்கு அப்பால் எளிய மனிதராக இருந்த மெல்லிசை மன்னரின் பேரன்பில் கால் நூற்றாண்டுக் காலம் திளைத்த அனுபவங்களைக் கிஞ்சிற்றும் செருக்கின்றி ஒரு குழந்தை போல் அவர் பேசுகிறார்.

குழந்தை என்றதும், மலையாள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் பெரிய பாடகருக்கு சமமாக எந்த அச்சமும் இன்றி ஒரு சிறுமி மழலைக் குரலில் துணிச்சலாக இணைந்து பாடும் பதிவை அவசியம் குறிப்பிட வேண்டும்.

சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற யுக பாரதி அவர்களது ‘கொஞ்ச நேரம் கொஞ்சம் நேரம்’ பாடல் வித்யாசாகர் இசையமைப்பில் விளைந்த மிகவும் இனிமையான மெல்லிசைப் பாடல். மது பாலகிருஷ்ணன், ஆஷா பான்ஸ்லே அத்தனை சிறப்பாகப் பாடி இருப்பார்கள். ஆஷாவின் குரலே குழந்தைமைப் பண்போடு இழைந்தோடும். மேக்னா (எத்தனை வயது, ஏழு?) என்கிற அந்த அழகு குட்டிச் செல்லம், ஏட்டிக்குப் போட்டி சரிக்கு சரி பேச்சும் கொடுத்து, மது பாலகிருஷ்ணன் அவர்களோடு இணைந்து இந்தப் பாடலை அருமையாகப் பாடுவதைக் கேட்கையில் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=TS-8pvbGnus

சரணத்தின் இடையே வரும் ஹம்மிங் உள்பட, தாளக்கட்டு பிசகாமல், எங்கே எப்போது குரல் எடுக்கவேண்டுமோ, எங்கே மூச்சு எடுத்துக் கொண்டு அடுத்த சொல்லை அழகாகப் பாட வேண்டுமோ, எங்கே ஆண் பாடகருக்கு வழிவிட்டு அடுத்து எங்கே தான் இணைந்து தொடர வேண்டுமோ அத்தனையும் சுத்தம்…அழகு !

இதெல்லாம் வெறும் பயிற்சியில் வந்து விடுவதில்லை. இசை, ஒரு கணித வரையறைக்குள் வலம்வந்தால் மட்டும் நிறைவு பெற்று விடுவதில்லை. பாடலின் பாவமும், அதில் தோய்ந்த உள்ளமும் தான் இசையாகிறது.

பாடல் மட்டுமின்றி, அசராமல் யாரோடும் பேச்சு தொடுத்துப் பின்னி எடுக்கும் மேக்னா நிகழ்ச்சிகள், யூ டியூபில் கொட்டிக் குவிந்திருக்கின்றன. மிகப் பெரிய பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், மோகன் லால் போன்ற மூத்த கலைஞர்கள் யார் வந்து அமர்ந்தாலும் சரிக்கு சரி பேசும் இந்தச் சிறுமி பாடிய தமிழ்ப் பாடல் வேறொன்று சிக்காதா என்று பார்க்கையில், எதிர்பாராத முத்து கிடைத்தது.

சந்திரபாபு, ஜமுனா ராணி இருவரும் மரகதம் படத்திற்காக அபாரமாக இசைத்த பாடல் அது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத சிறுவன் ரிச்சு, சிறுமி மேக்னா இந்தப் பாடலை அத்தனை கனஜோராகப் பாடியது, எத்தனை சாகா வரம் பெற்றது அந்தப் பாடல் என்று உணர்த்துகிறது. உலகில் வேறெதையும் விட இசைப்பாடல் தான் இந்தக் குழந்தைகளுக்கு அத்தனை உயிரானதாகத் தோன்றும் போல் தெரிந்தது. இந்த ஆனந்தம் அவர்களுக்கு நீடிக்க வேண்டும், போட்டிகள், இலக்குகள், பெற்றோர் எதிர்பார்ப்புகள் எல்லாம் குழந்தைகளிடமிருந்து அவர்களது நிகழ் காலத்தையும் பறித்து, எதிர்காலத்தையும் சிக்கலாக்கி விடக் கூடாது என்று அடிக்கடி தோன்றும்.

இசையோடு இன்னுமின்னும் கலந்து கரைந்து கொள்பவர்களுக்கு நிறைய கேள்விகளும் எழுகின்றன. ‘ஒரே மாதிரி கதைக்காட்சி தான் வெவ்வேறு படங்களிலும் இயக்குநர்கள் சொல்லிப் பாடலுக்கு உங்களிடம் கேட்பார்கள், எப்படி வெவ்வேறு ட்யூன் உங்களால் கொடுக்க முடிகிறது?’ என்ற கேள்வியை இளையராஜா அவர்களிடம் திரும்பத் திரும்பப் பலரும் கேட்கின்றனர்.

எல்லாப் படைப்பாளிகளுக்குமான கேள்வி தான் அது. அந்தப் புள்ளியை அறிவியலாளர் ஹைசன்பர்க், நிச்சயமற்ற கோட்பாட்டில் தொட்டார். அதைத் தான் பின்னர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் இன்னும் விவரித்தார். புத்தர் அதைத் தான் க்ஷணிக தத்துவம் என்று உலகுக்கு விளக்கினார். ஓடிக்கொண்டிருக்கும் ஓடை நீரில் ஒரு கையள்ளிப் பருகிய நீரை மீண்டும் அங்கிருந்து எடுக்க முடியாது என்றார் கௌதமர். அந்த இடத்தில் இப்போது ஓடி வருவது வேறு நீர், முன்பு எடுத்த நீர் இப்போது கடந்து கொண்டிருப்பது வேறு இடம் என்றும் விளக்கினார்.

அப்படியான நிகழ்வில் பிறந்து விடுகிறது அந்த கணத்திற்குரிய இசை. வேறொரு கணத்தில் அது வேறாகவே பிறக்கிறது, அந்தப் பிறிதொரு கணத்திற்கான இசை அது. இந்த அதிசயம் தான் பாடல்களை நெருக்கமாக அணுகும்போது அத்தனை பூரிப்பு அடைய வைக்கிறது.

அற்புதமான இசை அமைப்பாளர் வி குமார் அவர்களுக்கு, ‘ஒரு நாள் யாரோ…..’ என்ற பாடலுக்கான இசை எப்போது எந்த கணத்தில் உருவாகி இருந்திருக்கும் ! பி சுசீலாவுக்கும், கவிஞர் வாலிக்கும், படத்தில் தோன்றிய ஜெயலலிதாவுக்கும் மிகப் பெரிய புகழைத் தேடித் தந்த அமர்க்களமான பாடல். (ஆனால், மேஜர் சந்திரகாந்த படத்தில் தனக்கான பாத்திரம் பெரிய அளவில் அமையாது போனதில் வெறுத்துப் போன ஜெயலலிதா பின்னர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது).

தன்னை நம்பி ஓர் ஆணிடம் ஒப்புக் கொடுத்து அவன் காதலை நம்பி குதூகலத்தில் இருக்கும் ஒரு பெண், சகோதரன் முன்னிலையில் பாடும் பாடல் காட்சி அது. அவள் உணர்த்த விரும்பும் நுட்பமான செய்திகளை அத்தனை அநாயாசமாக அந்தப் பாடலில் கொணர்ந்திருப்பார் வாலி.

ஒரு முன்னோட்டம் கொடுத்துத் தான் பல்லவியைத் தொடங்க வைக்கிறார் குமார், அந்த இசைத் துளிகளில் சேகரமாகும் உணர்வின் விளிம்பில் புல்லாங்குழலின் சிலிர்ப்பில், சுசீலா அபாரமாக முன்னெடுக்கிறார், ‘ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ…’ என்று. ‘கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி’ என்ற வரியை வசீகர அடுக்குகளில் இசைக்கிறார். இதில் நெஞ்சுக்குள் தாளம் என்பது, ஒரு பருவப் பெண்ணின் துள்ளாட்டத்தையும், பதட்டத்தையும் இடத்திற்கேற்ப உருவகப்படுத்தும் இடத்திலேயே வாலி மின்னுகிறார்.

‘உள்ளம் விழித்தது மெல்ல…அந்தப் பாடலின் பாதையில் செல்ல’ என்கிற முதல் சரணத்தை அசாத்திய குரலில் பாடுகிறார் சுசீலா. பாடலின் பாதை என்று வாலி சுட்டுவது, அந்தப் பெண் நம்பி நடந்து போயிருக்கும் வழியையும் தான். ‘மெல்லத் திறந்தது கதவு….என்னை வாவெனச் சொன்னது உறவு’ என்பது விவரிப்புக்கு அப்பாற்பட்ட கவித்துவத்தில் எழுதப் பட்டிருக்கும் அடுத்த கட்டம். ‘நில்லடி என்றது நாணம், விட்டுச் செல்லடி என்றது ஆசை’ என்ற வரி, அவள், தனது தாபத்திற்கு ஆட்பட்டுப் போன கதையைக் கூறி விடுகிறது. ஆனால், அதை அவளது அந்த நேரத்துக் கொண்டாட்ட மனநிலையில் தான் இசைத்திருப்பார் சுசீலா.

இரண்டாம் சரணம், உடலியல் மாற்றங்களைக் காதலின் நிமித்தம் போல வெளிப்படுத்தினாலும், படக்கதையைத் தொடர்வோருக்கு உரிய பொருளில் கொண்டு சேர்த்து விடுகிறது. ‘செக்கச் சிவந்தன விழிகள்…கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்…’ என்ற அடிகளை அபாரமான பாவத்தில் கொண்டு வந்திருப்பார் சுசீலா. அடுத்து, ‘இமை பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்’ என்பதில் உறக்கம் என்பதில் வலுவாக அழுத்தமும், மயக்கம் என்பதில் ஒயிலான கிறக்கமும் ஒலிக்கும் அவரது குரலில். . ‘உன்னிடம் சொல்லிட நினைக்கும் மனம் உண்மையை மூடி மறைக்கும்’ என்ற வரி, படத்தின் மீதிக் கதைக்கான களத்தை அமைந்துவிடுகிறது.

பல்லவியை நிறைவு செய்கையில் இன்னும் கூடுதல் ஒயிலாகக் கொண்டு வந்து முடிப்பார் சுசீலா.

வானொலியில் பாடுகிறார் என்ற உணர்வை ஏற்படுத்த நாகேஷ் தனது சீடனோடு சேர்ந்து உருவாக்கும் இசையமைப்பின் கற்பனை காட்சியில் கூடுதல் சுவாரசியம் ஏற்படுத்தும். ஆனாலும், பாடலின் சோக இழை நெஞ்சில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கும்.

காலங்களைக் கடந்து வாழும் இசை என்பது, இந்தப் பாடலை, சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா மேடையில் இசைத்திருக்கும் காணொளிப் பதிவை, பல லட்சம் பேர் பார்த்திருப்பதில் வெளிப்படுகிறது.

எழுத்தில், குரலில், மெட்டில் இணைந்து பொழிகிறது இசை. இங்கிருந்தே அது எடுக்கப்படுகிறது. வேறெங்கிருந்தோ பொழிவதில்லை இசை, மழையைப் போலவே! அதன் இன்பம் அடுத்தடுத்து எடுத்துச் செல்லப்படுவதில் மேலும் கூடிக் கொண்டே செல்கிறது. நவில் தொறும் நூல் நயம் என்றார் வள்ளுவர். நுகர் தொறும் இசை நயம் தான்!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்

Pidipadatha Noigalodu Poem By S V Venugopalan எஸ் வி வேணுகோபாலனின் பிடிபடாத நோய்களோடு கவிதை

பிடிபடாத நோய்களோடு கவிதை – எஸ் வி வேணுகோபாலன்




பொட்டலம் போல்
மடித்துக் கொண்டு
கிடக்கிறேன்
காய்ச்சலில்

மருத்துவப் பரிசோதனை ஆய்வுக்கு
என வந்தவர்
ஏதோ கொஞ்சம்
துருவிச் சுரண்டி
எடுத்துப் போனார்
முடிவுகள்
கைப்பேசியில் வரும் என…

உறக்கம் போனது
வெளிப்பட்டு விடுமோ
அடையாளப் படுத்திக்
கொள்ளாமல்
பத்திரமாக
ஒளித்து வைத்திருக்கும்

பாலின மேலாதிக்கம்
அரைகுறை படிப்பின் அதீத செருக்கு
சுய தம்பட்டம்
சாதீய மிச்ச சொச்சம்
சமனற்ற நோக்கு
சாதுரியமான பேச்சு
அப்பாவி முனைப்பு

தூக்கம் தொலைந்த
இரவின் விடியலில்
மெல்ல சோம்பல் முறித்து தாமதமாக வந்த செய்தி

அப்பாடா என்று இருந்தது
பயந்தது ஏதும் நடக்கவில்லை
அவர்கள் கருவிகளுக்குக்
கண்டு பிடிக்க
முடிந்தது
அல்ப கொரோனா தொற்று மட்டுமே
நிம்மதியாகப் புறப்பட்டேன்
மருத்துவ மனைக்கு

அப்புறம் திரும்பினேன்
வீட்டுத் தனிமைக்கு!

Music Life Series Of Cinema Music (isaiyum Azhutha Oru Mazhai Iravu) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்




டிசம்பர் 7 அன்று வெளியான அறுபதாம் அத்தியாயத்திற்குப் பிறகு மாதமே முடிந்த நிலையில், அடுத்த கட்டுரை, மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன். டிசம்பர், சொல்லப்போனால் இசை மாதம். இசைக்கு இசைவான காலம். என் பாட்டனாரையும், பாட்டியையும், தகப்பனாரையும் மேலதிகம் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் மாதமும் கூட.

மார்கழி என்பது என் பாட்டனாரின் மார்பில் கழிந்த இளமைக்காலத்தை நினைவூட்டுவது. அவரது கதகதப்பான சால்வைக்குள் இருந்தவாறு அவரது கரகரப்பான திருப்பாவை ஒலிக்கக் கேட்டுக்கொண்டே இருந்த காலம் அது.

கிறிஸ்துமஸ் நாளுக்குமுன் நான் பிறந்ததால், எப்போதும் அந்த விடுமுறை நாளில் கோயிலில் சிறப்பு வழிபாடு, சர்க்கரை பொங்கல் தளிகைக்கு என் தந்தையார் கடந்த ஆண்டுவரை ஏற்பாடு செய்து வந்தவர்.

கூடாரை வெல்லும் (ஆனால், கூடார வல்லி என்று சொல்வார்கள்) என்ற 27ம் பாசுரத்தன்று வீட்டிலேயே சர்க்கரை பொங்கல் கிடைக்கும், என் சிற்றன்னை அத்தனை அற்புதமாகச் செய்வார். ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்ற பாசுர வரியைச் சொல்லி, எங்கள் தந்தை கேட்பார், ‘கையில் எடுத்தால் முழங்கை வரை வழியுமளவு நெய் இருக்கணும், இருக்கா, அப்படி சாப்பிட்டால் என்னத்துக்கு ஆகிறது’ என்று!

கடைசி பாசுரத்திற்கு வரும்போது, ‘பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை’ என்று இழுத்து, ‘முப்பதும் தப்பாமே’ என்று நிறுத்துவார்கள் திருப்பாவை சொல்பவர்கள். அதற்குப் பொருள், திருப்பாவை முப்பதும் தப்பு என்றல்ல, தப்பாமல் சொல்லவேண்டும் என்று அடுத்த வரியில் வருகிறது, இங்கே இப்படி நிறுத்தினால் இலக்கிய பரிச்சயம் அற்றவர்கள் தவறாகத் தானே புரிந்து கொள்வார்கள் என்று சொல்லிக் காட்டி எங்கள் தகப்பனார் விளக்கம் கூறி நகைப்பது உண்டு.

காஞ்சிபுர வாசத்தில், வரதராஜ பெருமாள் கோயில் வாசலில் இளவயதில் ஒலிக்கக் கேட்ட திருப்பாவை பாசுரங்கள், எம் எல் வசந்தகுமாரி அவர்கள் பாடியது என்று நினைவு.

எதிர்பாராத விஷயம், ஏ எம் ஜெயின் கல்லூரியில் படிக்கையில் நடந்தது. தமிழாசிரியர் வேணுகோபாலன் அவர்கள், ஒரு நாள் கரும்பலகையில் திருப்பாவையை எழுதிப் போட்டு, கடைசி வரியில் வரும் ஏலோர் எம்பாவாய் என்பதை எடுத்துவிட்டுப் பார்த்தால், எட்டு அடிகளில் இயற்சீர் வெண்சீர் செப்பலோசை அமையப்பெற்ற வெண்பா தான் திருப்பாவை என்று அலகிட்டு வாய்பாடு எழுதி நிறுவிக் காட்டினார்.

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று திரைப்பாடல் வரியில் கொணர்ந்தார் கண்ணதாசன். வழிபாடுகளைக் கடந்தும் பாசுரங்களில் லயிக்க முடிவதற்கு அதன் தமிழ் தான் காரணம். இசையில் விடிகிறது மார்கழிப் பொழுது.

கிறிஸ்துமஸ் நாளும் நள்ளிரவின் இசையில் பிறக்கிறது. தபலா இசைக்கலைஞர் சியோன் அல்மைதா என்பவர், ‘ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் ஜிங்கிள் ஆல் த வே’ கீதத்தைத் தமது தபலா கருவிகளை இசைத்தே வாசிக்கும் காட்சியை அண்மையில் காணொளிப் பதிவில் பார்க்க நேர்ந்தது.

வெவ்வேறு தபலா வாத்தியங்களை வரிசையாக அடுக்கிவைத்து, ஜலதரங்கம் இசைப்பது போல் அநாயாசமாக இங்கே ஒரு தட்டு, அங்கே ஒரு இழைப்பு, அருகே ஒரு தொடுகை, அடுத்ததில் வேக விசை என்று கணித வாய்ப்பாடு பிசகாது ஒப்புவிக்கும் குழந்தையைப் போல் பாடலைப் பொழிய முடிகிறது. அவர் இதயத்தைத் தொட்டுத் தான் வாசிக்கிறார், விரல்கள் தபாலாவை இதயமாக எடுத்துக் கொண்டு விடுகின்றன, அப்புறம் எப்படி பிசகும்?

மழையோ, குளிரோ பாதுகாப்பாக இருந்து அனுபவிக்க அருமையானது தான்…. நனைந்தும் நடுங்கியும் ஒடுங்கியும் வாழ நேர்பவர்கள் பாடு மிகவும் மோசமானது.

அப்படி சாலையோரத்தில் குளிரில் பதுங்கித் தூங்கும் சிறுவர்களைப் பார்த்த வேதனைக் காட்சியை ஓர் இசைப்பாடலாக எழுதி இருந்தார் கவிஞர் நவகவி. அதன் உணர்வில் கலந்து, உணர்ச்சியில் கரைந்து அசாத்திய பாவங்களோடு அந்தப் பாடலைக் கலை இரவு மேடைகளில் பாடுவார் கரிசல் குயில் கிருஷ்ணசாமி.

“….அம்மனிதர்களின் ஒரு மழை இரவைத் தன் கண்ணீர்த் துளிகளால் கவிஞர் நவகவி எழுத, நம் கரிசல்குயில் கிருஷ்ணசாமி அதைப் பாடியிருந்தார். பாடகனின் அடிவயிற்றிலிருந்து எழும்பும் அழைப்பை எளிதில் கடந்துவிட முடியாது. கேட்கும் போதெல்லாம் தொண்டை அடைத்து, விம்மி அழ வைக்கிறது”

என்று எழுத்தாளர் ஜா மாதவராஜ், தமது தீராத பக்கங்கள் வலைப்பூவில் எழுதி இருந்தார்.

இலைகள் அழுத ஒரு மழை இரவு
எலும்பும் உறைந்துவிடும் குளிர்ப்பொழுது

என்று தொடங்கும் பல்லவியே கேட்போரை பாதிக்கும். இலக்கிய வருணனைகள் வேறு உலகம். ஏழை பாழைகளின் அன்றாடப் பாடுகள் மற்றொரு தளம். நவகவியோ, இரண்டையும் தேர்ச்சியாகப் பின்னிப்பிணைந்தே எழுதிச்செல்கிறார் இந்தப் பாடலை.

‘நிலவை மூடக் கரு முகிலைப் போர்வை என வானம் வழங்குகிற நேரம்’ என்ற வரியின் கற்பனை எங்கே, அடுத்த வரியில், ‘ஒருவர் உடலை எடுத்தொருவர் போர்த்தி இரு சிறுவர் அதோ தெரு ஓரம்’ என்ற வரியில் கொதிக்கும் உள்ளம் எங்கே! இந்த வரிகளைப் பாடுகிறாரா, இதயத்தில் இழையெடுத்துத் தைத்துவிடுகிறாரா என்று பிடிபடாத வசத்தில் இசைப்பார் கிருஷ்ணசாமி.

இரண்டாவது சரணத்தில், கூட்டுக் குருவிகளின் கதகதப்பில் குஞ்சுப்பறவைகள் தூங்குவதைச் சொல்லி, ‘நாட்டுப் பாதைகளில் வாட்டும் வாடைகளில் அனாதைக் குழந்தைகள் ஏங்கும்’ என்ற வரியில் உணர்ச்சிகளின் ஓட்டத்திற்கேற்ப கரிசல் குயில் அபாரமான சங்கதிகளைப் போட்டுப் பாடி இருப்பார்.

அதன் நீட்சியில், ‘சாலையில் மைல்கல் சாயம் மங்கியதும் வர்ணம் தீட்டுவார் இங்கே, இந்த ஏழைப் பூக்களை மையிட்டுப் பொட்டிட்டுச் சிங்காரம் செய்பவர் தான் எங்கே’ என்று கொண்டு நிறுத்தும் இடத்தில் உள்ளத்தைக் கரைப்பார் கிருஷ்ணசாமி. ‘சாயம் மங்கியதும் வர்ணம் தீட்டுவார் இங்கே’ என்று ஓங்கி அந்த வரியை அசாத்திய மூச்சுப் பயிற்சியோடு குழைப்பார் அவர். ‘மையிட்டுப் பொட்டிட்டு’ என்ற சொற்களை அவர் இசைக்கும் விதம், ‘எங்கே’ என்ற சொல்லில் உருட்டும் சங்கதிகள் யாவும் கேட்போர்ப் பிணிக்கும் தகையவாய் அமைந்திருக்கும்.

மூன்றாம் சரணத்தில், ‘கொடியில் அரும்பு பனியில் வாடாமல் இலைகள் மூடும்’ என்ற இலக்கிய வருணிப்பில் இருந்து, ‘ஏழை அரும்புகளை வஞ்சித்து விட்டு ஆயிரம் கொடித்துணி ஆடும்’ என்று பம்மாத்து அரசியலையும் சாடி இருப்பார் நவகவி.

அதன் தொடர்ச்சியில், ‘உடலில் ஊறி வரும் உதிரம் முழுவதும் என் விழியினில் ஊறி வரும் தோழா’ என்ற வரியில், ‘தோழா’ என்ற இடத்தில் கரிசல் குயில் எட்டும் உணர்வுகளின் உயரம் சிலிர்க்க வைத்துவிடும். அந்த இரவினில் கண்ட காட்சியில் என் இதயம் நோகுது வெகு நாளா’ என்ற வரியில் பாடலாசிரியரும், பாடுபவரும் ஒன்றாகிக் கரைந்துவிடுவதை, கரிசல் குயில் குரலில் உணர முடியும். அந்த வெகு நாளா என்பது நாள்பட ஒலித்துக் கொண்டே இருக்கும் காதுகளில்.

இந்த சமூகப் பிடிமானம், காலை பூமியில் ஊன்றி நின்று பார்த்து எழுதுபவர்களுக்கு ஏற்படவே செய்யும். அதையும் பேசுகிறது இசை.

புத்தாண்டு விடிகிறது. பழைய ஆண்டு விடை பெற்றுச் செல்கிறது. எத்தனையோ சோகங்களையும், தவிப்புகளையும், சவால்களையும் எடுத்து வைத்த 365 நாட்கள் நிறைவு பெற்று, அடுத்த 365 தொடங்குகிறது. இருந்தாலும், மனிதர்கள் புத்தாண்டின் மலர்ச்சியில் நம்பிக்கை வருவித்துக் கொள்கின்றனர். பரஸ்பரம் வாழ்த்து பரிமாறிக் கொள்கின்றனர்.

சமூகவயப்பட்டுத் தான் இருக்கிறது வாழ்க்கை. ஆனாலும், ஏதோ ஒன்று நம்மை ஒற்றை ஒற்றையாக நிற்க வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. அதன் குரலுக்கு செவி மடுக்காது ஒன்றுபட்டு எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே நம் சிந்தனையாக இருக்கட்டும்.

இசை புத்தாண்டின் நாதத்தை எழுப்புகிறது. உள்ளத்தைத் தொடும் இசை. உணர்வுகளோடு பேசும் இசை. உண்மையின் பக்கம் நிற்க வைக்கட்டும் ! உண்மை, உள்ளத்தின் உன்னதமான இசை அல்லவா….

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

Music Life Series Of Cinema Music (Pattu Nammai Adimai Endru Vilagavillaiye) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 



டிசம்பர் 2019, மாதம் பிறந்தவுடனே அப்பாவை எப்போது போய்ப் பார்த்து ஆசி பெற்று வருவது என்று யோசிக்கத் தொடங்கி இருந்தேன், அறுபது வயது நிறைவு செய்யும் நாள் அந்த மாதம் 24ம் தேதி. விமரிசையாக அதைக் கொண்டாட ஒரு தந்தையின் மனத்திற்குள் எத்தனை ஆசைகள் இருப்பினும், அதற்கெல்லாம் உடன்பட மாட்டாதவனை நேசிக்கும் அளவு அந்த மனம் விசாலமாக இருந்தது. இப்போது இசை வாழ்க்கை என்னும் இந்தத் தொடர் அறுபது அத்தியாயங்கள் நிறைவு செய்கிறது. அதில் ஒரு தற்செயல் ஒற்றுமை உண்டு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிறைவு நேரத்தை நூல் வெளியீடு மூலம் கொண்டாடுவோம் என்ற முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, டிசம்பர் 25: கீழ வெண்மணி தினத்தன்று, தேவநேய பாவாணர் மத்திய நூலக அரங்கில் முதல் பிரதி பெற்றுக்கொள்ள எங்கள் அன்புத் தந்தை வந்திருந்தார். அந்த இரண்டு நூல்களில் ஒன்று, உதிர்ந்தும் உதிராத எனும் புகழஞ்சலி கட்டுரைகளின் தொகுப்பு. படைப்புக் குழுமம் அமைப்பின் சிறப்புப் பரிசுக்கு அந்த நூல் தேர்வாகி இருக்கும் செய்தி அண்மையில் வந்ததுதந்தையின் நினைவுகளுக்குப் படைக்கப்படுகிறது, மகாகவி பாரதி பிறந்த நாள் அன்று நடைபெறும் விழாவில் கிடைக்கப்பெற இருக்கும் அன்பு

இசைப் பித்து, ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று தான் தோன்றுகிறது. இசைப்பாடல் புனையும் ஆர்வமும்! எண்பதுகளில், சென்னை கலைக்குழு நாடகங்கள் பார்க்க வாய்த்த போது, இசைப்பாடல்கள் மீது மீண்டும் கூடுதல் கவனம் குவிந்தது. வறுமை, வேலையின்மை, ஆலை மூடல், வரதட்சணைக் கொடுமை இன்ன பிற சாதாரண மக்கள் வாழ்வை அதிகம் கவ்விப்பிடித்து வந்த காலமது. அலுவலகம் போய்க் கொண்டிருந்தபோது, புறநகர் ரயில் பயணத்தினூடே மனத்தில் தோன்றிய இந்தப் பாடலை மனத்திற்குள் ஓயாமல் இசைத்துக் கொண்டிருந்த நாட்கள் இப்போது நினைவில் வந்து நிற்கிறது.

ஏனோ தெரியல, கடிதம் எழுதலஎன்பது தான் பல்லவியின் தொடக்கம். காதலிக்கு ஒருவன் வரையும் கடிதம் போல் எழுதப்பட்டது. அதிலேயே அவனது குடும்ப கஷ்ட நஷ்டங்களை அவன் அவளுக்குக் கடத்துகிறான்.

ஏனோ தெரியல
கடிதம் எழுதல
எழுதத் தெரியாமல் அல்ல
ஏதும் விசயம் இல்ல..
                         – ஏனோ தெரியல

ஆலயத் தொறக்கல
அப்பா வேலக்கிப் போகல
அன்னாடம் இருமி இருமி
அம்மா இன்னும் சாகல
                    – ஏனோ தெரியல

சீரு கொறஞ்சதாலே
சின்னவ திரும்பிப் போகல..
சீமெண்ண ஸ்டவ்வுல அக்கா
செத்தத யாரும் மறக்கல

                – ஏனோ தெரியல

மூன்றாவது சரணம் இருந்திருக்க வேண்டும், இந்தச் சூழலை விவரிக்கும் அவன், அவளுக்குச் சொல்ல விரும்பும் சேதியை அது ஏந்தி வரும். அதை யோசித்து அப்படியே விட்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது. இப்போது அதை இப்படி முடிக்கலாம் என்று படுகிறது

பாடுகள் கொறையல
பட்ட துன்பம் மனசுல
ஓடுது வாழ்க்கையின்னும்
ஒன் நெனப்பு உசுருல 

 நிறைவில் பல்லவி கொஞ்சம் மாற வேண்டி இருக்கும், இப்படி:

ஏனோ தெரியல
இனிமே  வருந்தல
எதற்கும் போராட வேண்டும்
என்று நீ தான் சொன்ன!

               – ஏனோ தெரியல

துயரங்கள், சோகங்கள், ஆற்றாமைகள் எப்படி உண்மையோ, மாற்றங்களுக்கான நம்பிக்கையும், போராட்டங்களும் கூட உண்மை தான். குழந்தைப் பருவத்திலிருந்தே எதிர்ப்புணர்ச்சி இயல்பான குணம். குழந்தை நிறைய கேள்விகளோடு உலவுகிறது. வளர்ந்தவர்கள் அந்தத் தீயை ஊதி மேலும் எரியச் செய்ய வேண்டும். பதில் சொல்லும் சாமர்த்தியத்தில் இறங்குகிறோம், பதில் தெரியாதபோது அடக்கி விடுகிறோம். அணைந்து பொசுங்கிவிடுகிறது குழந்தை மனம்.கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் சங்கிலித் தொடரான அடுத்தடுத்த கேள்விகள் தான்அடுக்கடுக்காகக் குழந்தைகள் பெரியவர்களைக் கேள்விகளால் வளைப்பதை, குழந்தைகள் மாநாடு என்ற கட்டுரையில் கொண்டு வந்திருப்பார் எழுத்தாளர் கல்கி.

கேள்விகள், சமூகத்தை நம்பிக்கை நெம்புகோலாக முன்னோக்கி நகர்த்துகின்றனஆயிரத்தில் ஒருவன் (1965) திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே சிறப்பானவை என்றாலும், இரண்டு பாடல்கள் காலத்தில் எப்போதும் நிலைத்து நிற்கும் தன்மை பெற்றவை. ஒன்று, விடுதலை கீதம், ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்‘. இன்னொன்று, அதை நோக்கிய தயாரிப்பு, ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை‘.

ஒன்று கண்ணதாசன், மற்றது வாலி. விஸ்வநாதன்ராமமூர்த்தி பிரிவதற்குமுன் இசையமைத்த படம் அது

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லைஎன்பது, ‘கஞ்சி குடிப்பதற்கு இலார், அதன் காரணங்கள் இவை எனும் அறிவும் இலார்என்று நெஞ்சு பொறுக்க முடியாமல் குமுறிய மகாகவியின் ஏக்கத்தைப் போக்கும் உழைப்பாளிகளின் குரல். மிக எளிய மனிதர்கள், தங்களை ஆதிக்கம் செய்வோரைத் தட்டிக் கேட்கும் உணர்வை அவர்களுக்குள் எழுப்ப வேண்டும் என்பதே முக்கியம். அதை ஓர் இசைப்பாடல், அந்தக் கதையோட்டத்திற்காக வழங்கினாலும், அதன் முக்கியத்துவம் அதைக் காலம் கடந்து பேச வைக்கிறது

https://www.youtube.com/watch?v=OKLvOxfBJ1Q

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலேஎன்பதும், ‘உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலேஎன்பதும் பல்லவியின் தொடர்ச்சியில் முக்கியமான அடிகள். ‘ ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமேஎன்ற வரி, எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொள்வதைக் குறிப்பிடுவதில்லை, நீடித்த போராட்டங்களிடையே சோர்வு கவ்வ, இடம் தந்துவிடக் கூடாது என்று கூறுவதாகத் தான் படுகிறது. அதுவும், ஓராண்டு விடாப்பிடியான போராட்டத்தில் இன்று முதல் கட்ட வெற்றி பெற்றுள்ள விவசாயிகள் நடத்திய சமர் அதைத் தான் விளக்குகிறது. இடையே இந்தப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளத் திணறியவர்கள், இதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்காது என்று கடந்து போனவர்கள், ஏன் வீணாக அங்கே போய் உட்கார்ந்து என்ன நடக்கும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏளனமாகக் கூட விமர்சித்தவர்கள் எல்லோரையும் இப்போது வாயடைத்து அமர வைத்துவிட்டது அல்லவா, இந்த எழுச்சி!

வருங்காலத்திலே நம் தலைமுறைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமேஎன்கிற வரி, அபாரமானது. சமூக மாற்றத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட உன்னதத் தலைவர்களது நூற்றாண்டுகள் நம்மைக் கடந்து செல்லும் இந்த நேரத்தில், அவர்களுக்கு ஆதர்சமாக விளங்கிய அவர்களது முன்னோடிகளது வாழ்க்கை குறித்த சித்திரத்தையும் கண் முன் கொண்டு நிறுத்துகிறது இந்த வரி!

இரண்டாவது சரணம், ‘நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும் மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்என்பது பருவச் சுழற்சியை வைத்து, காலச் சுழற்சியைச் சுழல வைக்கும் கவிஞரின் திறமையை அனுபவிக்கக் கொடுக்கிறது. ‘நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம்என்கிற அடுத்த வரியின் அழுத்தம் இதை பளிச்சென்று எடுத்துக் காட்டுகிறது

முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலேஎன்பது, செல்வத்தை உருவாக்குவோர் கார்பொரேட்கள் என்ற இப்போதைய ஆட்சியாளர்களது அபார அபத்த அராஜக தத்துவத்திற்கு நேர் எதிரான உண்மையை இன்னும் காலங்களுக்குப் பேசிக் கொண்டிருக்கும். அதற்கும் அடுத்த வரி இன்னும் அழகானது: ‘கடமையைப் புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலேஎன்பது. தொழிலாளிகள் உழைப்பின் கூலியில், அதையொட்டிய அற்ப மகிழ்ச்சியில் நிறைவு அடையவேண்டும் அல்லது அதன் காரணங்கள் புரியாமல் தவறான தத்துவங்களுக்கு ஆட்பட்டு விதியை நொந்து சாக வேண்டும் என்பதைக் கடந்து, விடுதலைக்கான குரலை எழுப்புவது பாட்டாளிகளின் புரட்சி தத்துவ தரிசனம் என்பதை, ஒரு திரைப்பட வரையறைக்குள் நின்று புனையப்பட்டு இருந்தாலும், இந்தப் பாடல் நின்று பேசுகிறது என்பது சுவாரசியமானது.

டி எம் சவுந்திரராஜன் மொத்தத் கருத்தோட்டத்தையும் உள்வாங்கி இந்தப் பாடலின் வலிமையான தத்துவத்திற்கேற்ற குரலை, முழக்கத்தை, அழுத்தங்களை அத்தனை அசாத்தியமாகக் கொண்டு வந்திருப்பதும், இசையமைப்பாளர்களின் சிறப்பான இசைக்கோவையும் கொண்டாட வேண்டியது.

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்என்பது ஓர் அதிரடி பல்லவி தொடக்கம். அதற்கு ஏற்ற நிரல் நிரை போல, ஒரே வானிலே ஒரே மண்ணிலே என்று வருகிறது அடுத்த அடி. பறவைக்கு வான் போல, கடல் அலை புரண்டோட மண் போல.

அடிமை என்கிற உணர்வை மனதளவில் உதறித்தள்ளி, சங்கிலிகளை மானசீகமாக நொறுக்கித் தகர்த்துக் குதித்துக் கொண்டாட்டப் பேரெழுச்சியோடு குரலெடுக்கும் உணர்வுகளை மெல்லிசை மன்னர்கள் அப்படியே இசையில் எப்படி பிரதியெடுத்தனரே என்பது தான் அவர்களது இசை வாழ்க்கையின் மகத்துவம்

பீறிடும் உற்சாகக் கும்மாளக் கூக்குரலாக அந்த டிரம்பெட் முழக்கம், கடலின் அலைகளை விடவும் வேகமாக இழையும் வயலின் வில்லிசைப்பு, அடிமைகளையும், அவர்களது கனவுகளையும், காதலையும் தாங்கிப் பயணம் செய்யும் அந்த மிதவை போலவே பாடலின் தொடக்கத்திலிருந்து நிறைவு பெறுவதுவரை பிடிமானம் கொடுக்கும் தாளக்கட்டு. பாடலின் சந்தத்திற்கேற்ப ஒலிக்கும் மெலிதான மணியோசையும், உரத்த கோரஸ் குழுவினரின் அபாரமான ஹம்மிங்கும், சுழன்று சுழன்று கூத்தாட வைக்கும் பாடல் அது

https://www.youtube.com/watch?v=vVGLniSY8Qk

பல்லவி என்ன, சரணங்கள் என்ன, பாடல் வரிகளின் பொருளுக்கேற்ற பாவங்கள் என்ன, இசையமைப்பாளர் பாடத்திற்கேற்ற சங்கதிகள் என்ன, சுவாரசியமான குரலினிமை என்ன, டி எம் சவுந்திரராஜனின் முத்தான பாடல்கள் வரிசையில் முக்கியமான ஒன்றாக அமைந்தது இது

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே, கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையேஎன்ற முதல் சரணத்தின் தெறிப்பு அடுத்த வரிகளில் மேலும் சிறக்கிறது. ‘காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையேஎன்ற இடத்தை வசீகரமாக வளைக்கும் டி எம் எஸ், ‘காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதிலையேஎன்ற அடுத்த வரியை இன்னும் உருக்குவார். ‘தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையேஎன்ற இரண்டாவது சரணத்திலும் கண்ணதாசன் அடிமை ஒருவன் சமூகத்தை நோக்கி எழுப்பும் தப்பமுடியாத கேள்விகளை அடுக்குகிறார். பிறப்பு, பசி, காதல், இன்பம், துன்பம், மரணம் எல்லாம் எல்லா உயிர்க்கும் பொது தானே, என்ன நீ உயர்ந்துவிட்டாய் என்னை ஒடுக்குவதற்கு, என்ன நான் தாழ்ந்துவிட்டேன் உன்னிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு என்று வெடித்தெழும் கேள்விகளை அத்தனை கவித்துவமாகக் கவிஞர் புனைந்திருந்தார்.

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலைஎன்பது உழைப்பாளி ஒருவரின் இதயத்துடிப்பு. அந்த சரணம் முழுக்கவே எளிமையான வரிகளில் உன்னதமான இலட்சியத்தைப் பேசி இருப்பார் கண்ணதாசன். தனக்காக மட்டுமல்ல, ‘அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலைஎன்பது எப்பேற்பட்ட பிரகடனம்.

டிசம்பர் 6 அன்று அமர்ந்து இந்த வார இசை வாழ்க்கையை எழுதி முடிக்கையில், மாமேதை அம்பேத்கர் நினைவு நாளோடு இந்த இரு பாடல்களும் அத்தனை அருமையாகப் பொருந்துவதை கவனிக்க முடிகிறது

அய்ரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்து மக்கள், தங்கள் குடியிருப்புக்கு ஜெய் பீம் பெயரிட்டு இருப்பதை, சில ஆண்டுகளுக்குமுன் பர்தீப் சிங் ஆட்ரி எனும் எழுத்தாளர் நேரில் சென்று பார்த்துவந்து எழுதி இருந்தார். 2009ல் வாசிக்கக்  கிடைத்தஹங்கேரியில் அம்பேத்கர்எனும் அந்தக் கட்டுரை புதிய செய்திகளை வழங்கியது. பாரீஸ் நகர புத்தகக் கடை ஒன்றில் பார்த்த பீம்ராவ் அம்பேத்கர் புத்தகம் ஒன்றை வாங்கி வாசித்த எழுச்சியில் அவர் தான் எங்களுக்கும் நாயகர் என்று கண்டடைந்தோம் என்று சொல்லி இருக்கின்றனர் அந்தக் குழுவினரின் தலைவர்கள்

https://www.thehindu.com/features/magazine/Ambedkar-in-Hungary/article16893578.ece

எல்லா வித ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலைக்கான குரல் தான் பாபாசாகேப் எழுப்பியது. இசைத்தது என்றும் சொல்ல முடியும். கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர் என்பது ஓர் இசைப்பாடல் உருவாக்கத்திற்கான வழிமுறை என்றும் கொள்ள முடியும். விடுதலைக்கான இசையைச் சேர்ந்திசைப்போம்!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Ithu Vasantha Kalamo En Isaiyin Kolamo) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்




மழை வாழ்க்கை இன்னும் தொடர்கிறது. வாழ்க்கை மழையைப் பார்த்து மலைத்து நிற்கிறது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’ என்று பாடியது போல், தேங்கும் மழை நீரை வாங்கும் வழியின்றித் தவிக்கிறது மாநகரத்தின் மக்கள் கூட்டம்.

இசைப்பாடல் ஒன்றோடு போதுமா, எங்கே அடுத்த பாடல் என்று மாணவி கேட்டார். இதென்னடா வம்பாய்ப் போச்சு என்று உடனே அடுத்த பாடல் ஒன்று புனைந்து அவருக்கு அனுப்பி வைத்தேன்.

மழையோ என்று எட்டிப் பார்த்தேன்
மழை தான் மழை தான் மழையே தான்
பொழியாதென்று எண்ணி இருந்தேன்
மழை தான் மழை தான் மழையே தான்

உறக்கம் கலைந்து காலடி கேட்டு
உள்ளம் சிலிர்க்கக் கதவு திறந்தேன்
அவள் தான் அவள் தான் அவளே தான்
மழையோ என்று எட்டிப் பார்த்தேன்…….

இது தான் பல்லவி….
இப்போது எட்டிப் பார்த்தாலும், குட்டிக் கரணம் அடித்தாலும், வீடு திரும்ப முடியாத படி அடித்துக் கொண்டிருக்கிறது விட்டு விட்டு மழை. பள்ளிக்கூட நாட்களில் ஆசிரியர் அல்லது ஆசிரியர்களில் சிலர் அடியடி என்று அடித்துவிட்டுத் தனது இருக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பார்கள் (என்று நினைத்துக் கொண்டிருக்கையில், திடீர் என்று திரும்பி) அதே மாணவரைப் போய் இன்னும் கடுமையாக அடிப்பதுபோல் அடித்து நிமிர்த்துகிறது மழை.

வேடிக்கை என்னவென்றால், மழைக்காகப் புதிய நாள்காட்டி தயார் செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மிதமான, நடுத்தரமான, கனமான, அதி கனமான நாட்களாகவே இருக்கும் போலிருக்கிறது வருகிற நாட்கள்.

முதல் மழைக்கும் இரண்டாம் மழைக்கும் இடைப்பட்ட மழை நாள் ஒன்றில், புதிய ஆசிரியன் வாசகர்கள் குழுவில், சகாயராஜா அவர்கள் பகிர்ந்திருந்த காணொளிப் பதிவு, ஆஹா…ஆஹா…. உள்ளபடியே, அக்டோபர் 2020ல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இயக்கத் தோழர் ரமணி, முக நூல் இணைப்போடு அனுப்பிய, இதே காணொளிப் பதிவை அப்போது பார்க்கத் தவறி இருக்கிறேன், இந்தப் பாவங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை!.

1970களின் பிற்பகுதியில் மிகவும் கொண்டாடப்பட்ட இந்திப் பாடல்களில், மகத்தான இசைப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களது அசாத்திய குரலினிமையில் உரக்க ஒலித்துக் கொண்டே இருந்த திரைப்பாடல் அது. லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் கோரஸ் முழங்க, சத்யம் சிவம் சுந்தரம் படத்தின் அந்தப் பாடல், அடுத்தடுத்த தலைமுறை இளம் பாடகர்களும் முயற்சி செய்து கொண்டே இருக்கும் பாடல்களில் ஒன்று.

https://www.youtube.com/watch?v=FLzhXNayLJo

ஆர்யானந்தா, கேரளத்துச் சிறுமி. இந்தி அத்தனை சுத்தமாகப் பேச வராதாம், ஆனால், மிகப் பெரிய சபையில், எண்பது வயதான பியாரிலால் முன்னிலையில் (லட்சுமிகாந்த் இப்போது இல்லை), லதாவின் நுட்பமான சங்கதிகள், நுணுக்கமான இழைத்தலும், குழைத்தலும் பொதிந்த பதங்கள் அப்படியே அபார ஆற்றலோடு, தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் மிளிர இந்தச் சிறுமி பாடப்பாட (குமார் சாணு, உதித் நாராயணன், என்னால் முகங்கள் வைத்து அறிய மாட்டாத வேறு பிரபலங்கள்) பாடலை இசையமைத்த பெரியவரின் மின்னல் தெறிக்கும் கண்களால் கொண்டாட்ட வரவேற்பு கிடைக்கும் காட்சி சிலிர்க்க வைத்தது.

ஏற்கெனவே பலமுறை கேட்டு ரசித்த பாடலை அதே பாவங்களோடு (க்யா ஃ பீல் ஹை என்று இடையே இடையே ஒலிக்கும் குரல்கள் கேளுங்கள்) உணர்ச்சிகரமாக ஓர் இளம் பாடகர் இசைக்கும்போது, ரசிகர்கள் உள்ளம் ஆரவாரிக்கிறது. ஓர் இசைப்பொழிவை அதன் தரத்திற்கேற்ற பாராட்டு எதிர்கொள்வதும் மழைப்பொழிவு அன்றி வேறென்ன… கனமழை பார்த்தாயிற்று அல்லவா, மென் தென்றல் பாட்டு ஒன்று காத்திருக்கிறது அடுத்தது. அது வந்து சேர்ந்த கதை சுவாரசியமானது.

புலவர் கீரன் பேசப் பேச அப்படியே மலைத்துப் போய்ப் பார்த்த நாட்கள் மறக்காது. கல்லூரித் தொடக்க காலம் அது. ஒரு கூட்டத்தில் சொன்னார், ‘எனக்கு கந்த புராணம் தலைகீழ்ப் பாடம். கம்பராமாயணம் அத்தனை முறை படித்திருக்கிறேன். இதை கர்வமாகச் சொல்லவில்லை, ஒரு நிகழ்ச்சியில் பள்ளி மாணவி ஒரு செய்யுள் இசைக்கிறாள், அதன் சொற்களைக் கேட்டு, கம்பன் எழுதியது தான், இந்த காண்டத்தில் இந்த இடத்தில் ஒருவேளை அது வந்திருக்கும் என்று உத்தேசமாகத் தான் நினைக்க முடிந்ததே தவிர பளிச்சென்று நினைவுக்கு வரவில்லை. அப்போதெல்லாம் செருக்கு கொஞ்சம் அடங்கும்’.

எனக்கு கர்வம் வருகிற அளவுக்கு இசைப்பாடல்கள் தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனாலும், தெரிந்த பாடல்கள் யாராவது குறிப்பிடும் போது, ஒரு மிதப்பு தோன்றி மறையும். அந்த மிதப்பு உணர்வு அவ்வப்பொழுது அடி வாங்கும், ஆனால், அது சுவாரசியமான அனுபவமாகவே இருக்கும். அந்த மிதப்பு அப்படியோர் அடி வாங்கியது, இந்த வாரம்!

பண்பலை கேட்க கார்ட்ஸ் இல்லை என்று அலைபேசியில் யூ டியூப் தொட்டெடுத்து, காலைப் பொழுதுக்கான பாடல்கள் என்ற வரிசையில் பாடல்கள் ஒலிக்கக் கேட்டபடி இருந்த என் வாழ்க்கை இணையர் தோழர் ராஜி, சமையலறை வேலையில் இணைந்த என்னிடம், ப்பா…இந்தப் பாட்டு தெரியுமா, உங்களுக்கு…அய்யோ கேளுங்களேன்” என்றார்.

அடடா….எஸ் ஜானகியின் அபாரமான பாடல்களில் ஒன்றான அதைக் கேட்ட நினைவே இல்லை. சங்கர் கணேஷ் இசையில், புலவர் புலமைப்பித்தன் அவர்களது அருமையான இசைப்பாடல் அது. எப்படி நழுவ விட்டேன்!

காலையில் மட்டுமல்ல எப்போது கேட்டாலும், அதிகாலைப் பொழுதில் கேட்போரைக் கொண்டு குடிவைக்கும் குரலில் அப்படி பாடி இருக்கிறார் ஜானகி. பறவைகளின் உறக்க முறிவில் பிறக்கும் நேயமிக்க கீச் கீச், குக்கூ நம்மைப் போர்வையை உதறிப் போட்டுப் பார்க்க தேவைப்படுகின்றன. ஊடே குழலிசை கண்ணைத் திறந்து தேட வைக்கின்றது. அப்போது யாரோ நம்மைப் படுக்கையிலிருந்து எழுப்ப, காதருகே வந்து சிலிர்க்கவைக்கும் இரகசிய குரலில் சொல்கிறார்கள்: காலைப் பொழுது….என்று. என்னவாம் காலைப் பொழுதுக்கு என்று நாம் கேட்கிறோம் என்றால், விடிந்தது என்று பதில் வருகிறது, அதற்கு என்ன, இன்று மட்டும் எப்படி விடிந்ததாம் என்று கேட்போம் என்றால், என் நெஞ்சத்தைப் போலே என்று பளீர் என்று பதில் வருகிறது. பார்ரா ….

‘காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே …..’ என்ன ஒரு பல்லவியின் தொடக்க வரி. அப்புறம்? ‘சோலை மலரும் மலர்ந்தது…’.அது எப்படியாம்? என் கண்களைப் போலே’ ! அப்படி என்றால் இது என்ன காலம், ‘அது வசந்த காலமோ, என் இளமைக் கோலமோ’ என்கிறாள் அந்த இளம் பெண்.

புலமைப் பித்தன் காதல் பாடல்களை இயற்கையோடு இயைந்து எழுதுவதில் எத்தனை தேர்ச்சி பெற்றவர் என்பதன் சாட்சியமாக அமைந்த பாடலின் பல்லவியில் இருந்து காலைப் பூக்களில் வந்து அமரும் தேனீ போல் சுறுசுறுப்பாகவும், வண்ணத்துப் பூச்சி போல் நிறங்களின் கலவையாகவும், வண்டாக ரீங்கரிக்கவும் செய்கிறது ஜானகியின் குரல்.

அந்த ‘காலைப் பொழுதை’ அவர் இஷ்டம் போல் விரிவாக்கவும், மடித்து வைத்துக் கொள்ளவும், சட்டென்று சிமிட்டிப் பார்க்கவுமாக பாடல் நெடுக விதவிதமாக இசைப்பதைக் கேட்கமுடியும். அதே போலவே,என் நெஞ்சத்தைப் போலே வரும், போலே அவருக்கு ஒரு ஸ்கிப்பிங் கயிறு போல வாகாக வளைத்துக் குதிக்க வைப்பதைத் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டே இருக்க வைக்கும்.

பாடல் முழுவதும் தாளக்கட்டு அந்தக் காலைப்பொழுதைக் களைகட்ட வைக்கிறது. தபேலா மட்டுமல்ல, சரணங்கள் இடையே மிருதங்க இசை கூட ஒலிப்பது போல் தெரிந்தது. வயலின்களும், புல்லாங்குழலும், இன்ன பிற இசைக்கருவிகளும் எஸ் ஜானகியின் குரலில் மயங்கிக் குரலோடு இயங்கி வழங்கி வரும் இசை, கேட்பவர் கால்களும் தம்மையறியாமல் தாளத்தில் இணையவைக்கும்.

‘இளைய தென்றல் மென்காற்று எனக்குச் சொல்லும் நல்வாழ்த்து’ என்ற முதல் சரணத்தின் அடுத்த அடி, ‘அருவி கூட தாளக்கோட்டில் அசைந்து செல்லாதோ’ என்று இழைக்கிறது. அத்தனை துள்ளோட்டமாக இந்த முதல் வரிகளை மெட்டமைக்கும் சங்கர் கணேஷ், அடுத்து, ‘முகத்தில் சிந்தூரம், மனசில் சந்தோஷம், சகல சௌபாக்கியம் நிலைக்கும் எந்நாளும் ‘ என்று இரட்டை இரட்டை பதங்களாக நான்கு அடிகளில் இளம்பெண்ணின் குதூகலமான உள்மனத்து உரையாடலை மேலும் மென்குரல்களில் பாடவைக்கிறார் ஜானகியை.

சரணத்திலிருந்து பல்லவிக்கு மீளும் இடத்தில் ஜானகியின் ஊஞ்சலாட்டம் தொடர்கிறது. அதில் சோலையின் சோவில் ஒரு புது சுகம் வைக்கிறார், அந்த மலரும் மலர்ந்தது என்பதில் சங்கதி சேர்த்து ஒய்யாரமாக மேலும் மலரவைக்கிறார். வசந்த காலமோ, என் இளமைக் கோலமோ என்ற வரிகளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நகாசு வேலையோடு மின்ன வைக்கிறார்.

இரண்டாம் சரணத்தில், ‘மதுரை அன்னை மீனாட்சி மனது வைக்கும் நாளாச்சு அமிர்தயோகம் நாளை என்று எழுதி வச்சாச்சு’ என்ற வரிகளில் அப்படியோர் ஆர்ப்பரிக்கும் மனத்தை எடுத்து வைக்கிறார் ஜானகி. இதற்கு அடுத்த கட்டம் முகமும் அகமும் மேற்கொள்ள வேண்டிய அலங்காரத்தை, ‘விழியில் மையோடு வளையல் கையோடு ஒருவன் நெஞ்சோடு உறவு கொண்டாடு’ என்று படைத்திருக்கிறார் புலமைப்பித்தன். மூன்றாம் சரணம் உணர்வுகளின் அடுத்த கட்ட பொங்குதல். நினைப்பது நடப்பதும் அது இன்பமாக நிலைப்பதும்!

பாடலின் சொற்களுக்கு ஜானகி வழங்கும் உயிரோட்டமும் உணர்வூட்டமும் உணர்ச்சியாற்றலும் அபாரம். காலைப் பொழுதில் உற்சாகம் ததும்பும் உளவியலை வீச்சாகக் கொண்டு போகிறது அவரது குரலும், உடன் ஒட்டிய நிழலாகவே தொடரும் இசையும். நிறைவாகப் பல்லவியை வந்தடையும் போது, அதே ரகசியக் குரலில், ‘காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே’ என ஒயிலாக வடிப்பது அத்தனை அம்சமாக இருக்கும்.

படத்தில் இடம்பெறும் காட்சியை விடவும், ஆடியோ மட்டும் கேட்கும் யூ டியூப் பதிவே சிறப்பாக ஒலிக்கிறது, எனவே அந்த இணைப்பை இங்கே தந்திருக்கிறேன்.

ராஜராஜேஸ்வரி படத்தில் சுஜாதா இந்தப் பாடலுக்கு வடிக்கும் பாவங்கள், ஒரு சிறப்பான திறன் படைத்திருந்தும் முழுமையாகத் திரையில் அதை வெளிப்படுத்த வாய்ப்பு வாய்க்காத திரைக் கலைஞரில் ஒருவர் அவர் என்று மீண்டும் ஒரு முறை மனத்தில் தோன்றியது.

https://www.youtube.com/watch?v=tlOueWXb1KA

பாடல் காட்சியைப் பார்க்க விரும்புவோருக்கு இந்தக் காணொளிப் பதிவு பயன்படும்.

காலைப் பொழுது விடிந்தது எப்படி இருந்தாலும், இந்த நவம்பர் 19 அன்று ஒன்பது மணிக்குப் பிறகு காதில் விழுந்த செய்தி அன்றைய பொழுதை மேலும் இன்பமயமாக்கியது! ‘நினைத்த தெல்லாம் நன்றாகும், நிலைத்த இன்பம் உண்டாகும், மனசு போல வாழ்க்கை என்று உலகம் சொல்லாதோ’ என்று மூன்றாம் சரணத்தில் சொற்களை புலவர் அடுக்கி இருந்தது எத்தனை பொருத்தமானது!

எல்லா இடர்ப்பாடுகளையும், தாக்குதல்களையும், அவதூறுகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளையும், கண்ணீர்ப் புகை வீச்சு, தடியடி அராஜக நடவடிக்கைகள் எல்லாம் எதிர்கொண்டு இந்திய விவசாயிகள் தங்கள் அமைதியான, உறுதியான, விடாப்பிடியான போராட்டத்தின் வாயிலாக ஏற்படுத்திய தாக்கம், மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து என்று பிரதமரை அறிவிக்க வைத்தது.

‘இனிய சங்கீதம், இதயப் பண்பாடு, தினமும் நன்னாளே, எதிரில் கண்டேனே…..காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போ….லே…..’ என்று மாற்றத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை மலர ஒவ்வொரு நாளும் அந்தப் போராளிகள் பாடிக்கொண்டிருக்கின்றனர் என்றே தெரிந்தது. இந்த வார இசை வாழ்க்கை, அவர்கள் வெற்றிக்குப் படைக்கப்படுகிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Dhegam thazuvum isaikatru) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன் 




உள்ளபடியே இந்த நாட்கள் மழை வாழ்க்கை தான். சென்னை பெருநகரம், மழைக்குத் தன்னை இன்னும் தகவமைத்துக் கொள்ளாத நகரம். மாறாக, ஒவ்வொரு விரிவாக்கமும், நவம்பர் – டிசம்பர் மாதங்களின் வருகை ஒட்டிய நடுக்கத்தையும் சேர்த்தே விரிவாக்கிச் செல்கிறது. வெள்ள நீர் வீட்டின் நிலைக்கதவைத் தட்ட எத்தனிக்கும் நேரத்திற்கும் சற்று முன்னாள் குடும்பத்தோடு குடி பெயர்ந்து எங்கள் மகள் இல்லத்தைச் சென்றடைந்தோம். சொந்தக் கூட்டுக்கு இன்னும் திரும்பாத பறவையின் குரல் தான் இந்த வாரம் உங்களை வந்தடைந்து கொண்டிருப்பது.

இசை மழை போலவே, மழையும் ஓர் இசை தான். ஓரளவு பெய்கையில் அது பெரிதாக கவன ஈர்ப்பாக அமைவதில்லை. தன்னைச் சுற்றியே எல்லோரையும் பேசவைக்கும் பெருமழை, வட்டியும் முதலுமாக வாங்கிக் கொண்டுவிடுகிறது. இசையும், சாதாரண நாளில் ஏற்படுத்தும் சலனத்தை விட, கச்சேரிகள், திருவிழாக்கள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கூடுதல் கொண்டாட்டத்தை உருவாக்கிக் கொள்கிறது.

குடி பெயர்ச்சி இந்த மழையால் ஏற்பட்டது, வாய்ப்பு அற்ற மனிதர்கள், குறிப்பாக முதியோர் பட்ட பாடுகள் வேதனைக்குரியது. வேறெங்கும் போக முடியாமலும், நாள் கணக்கில் வெளியே இருந்து யாரும் உதவிக்கு வர முடியாது, வீட்டில் மின்வசதி துண்டிப்பு, தனிமைப்படுத்தி வாட்டி எடுக்கும் தருணங்கள் அவை. கொஞ்சம் இசையாவது கேட்க முடியுமா என்று ஏங்க வைத்த பொழுதுகளும் கூட.

இசையும் அதீத ரசனை கொண்டிருக்கும் மனிதர்களை இப்படி திக்குமுக்காடச் செய்வதைப் பார்க்கிறோம். எப்போதும் இசையால் சூழப்பட்டிருக்கும் அவர்கள் உள்ளம். ஓர் இசையிலிருந்து மற்றொன்றுக்கு, ஒன்றோடு மற்றொன்று, ஒன்றிற்கு மாற்றாகவும், ஒன்றினில் இருந்து வேறாகவும் இசை பொழிந்தபடி இருக்கும் சூழல் அது.

ஒரு சில பகுதிகளில் மட்டும் பெய்யும் மழை போல, காதுகளுக்குள் தனித்துவமாகப் பெய்து கொண்டிருக்கும் இசை. ஓவென்று எல்லோருக்குமாக சாலையோர மேடையில் முழங்கும் இசை. மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் போலவே அன்றாட இசைப்பொழிவு அளக்கும் மானிகளும், நிலையங்களும் இன்னும் உருவாகவில்லை.

திரை இசையோடு நாம் வாட்ஸ் அப் குழு ஒன்றில் அண்மையில் ஒரு பெருமழைப் பொழிவு போல், ஒரு கானத்தைக் கேட்க முடிந்தது. அபார மழைப்பொழிவு அந்த இசை.

விவேக் குமார் பிரஜாபதி என்ற அந்த 33 வயது இளைஞர், புகழ் பெற்ற உஸ்தாத் இக்பால் அகமத் கான் அவர்களது முக்கியமான மாணவர்களில் ஒருவர். சரிகம இசை நிகழ்வில் அவர் நடுவர்களை அதிர வைத்தார். சங்கர் மகாதேவன் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்க சிலிர்க்கக் கொண்டாடி மகிழ்ந்தார். விவேக், பரிசு பெற்றுக் கொண்டதும், சங்கர் மகாதேவனோடு சேர்ந்து பாட விரும்ப, அதில் அந்த இசை மழை இன்னும் அதிரடி வேகத்தில் ரசிகர்களைக் கூத்தாட வைத்துவிட்டது. அந்த ஸ்வர வரிசைகளில் சங்கர் மேற்கொண்ட பயணத்தின் இன்பியல் காட்சி, மயிர்க்கூச்செரியும் ரேஸ் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் அமைந்தது.

மிதமான மழைப் பொழிவு போல இதமாக மனத்தில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் இசை உண்டு. திரையிசையில் நிறைய சொல்லிக் கொண்டு போகமுடியும். இந்தியன் வங்கியில் உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றவர், இந்த மழை வெள்ள நீர்ப் பெருக்கின் என் சக தெருவாசி திரு கிருஷ்ணன், ஒரு சுவாரசியமான குறும்பதிவு ஒன்றைச் சூடாக அனுப்பி இருந்தார்.

தி இந்து நாளிதழில் திரை விமர்சனங்கள் எழுதியவரான பரத்வாஜ் ரங்கன் அவர்கள் தமது வலைப்பூவில் இந்த நவம்பர் பத்தாம் நாள் எழுதியுள்ள குறுங்கட்டுரை, எம் எஸ் வி அவர்களது இதயத்தை வருடும் பாடல்கள் பற்றிப் பேசுகிறது.

Music Notes #1: The unending pleasures of MSV-era melody lines

அதில், ஞான ஒளி படத்தின் தேனிசைப் பாடல் ஒன்றை மிகுந்த ரசனையோடு குறிப்பிடுகிறார் பரத்வாஜ் ரங்கன். ‘ஊர்வசி’ சாரதா – ஸ்ரீகாந்த் காதல் உறவு பற்றிய காட்சிப் படுத்தலான அந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் அத்தனை நேர்த்தியாகப் புனைந்திருப்பார்.

தேவன் மீது அசையாத விசுவாசமும் உள்ள ஒரு பெண், தன்னை அத்தனை நம்பிக்கையோடு ஓர் ஆண் மகனிடம் ஒப்படைக்கும் பரவசமும், கதையோட்டத்தின் அடுத்த கட்டங்களை உணர்த்தும் பாங்கும் பாடல் வரிகளில், மெல்லிசை மன்னர் இசையில், பி சுசீலா குரலில், மாதவன் இயக்கத்தில் உணர்ந்துவிட முடியும்.

இரவின் அமைதியில் எங்கோ தொலைவில் இருந்து மெல்ல மெல்ல நம்மருகே வந்தடைகிறது ஓர் அருமையான ஹம்மிங். பல்லவியை சுசீலா ஹம்மிங் கொடுப்பது ரசிகரை அங்கேயே கட்டிப்போட்டு வைத்து விடுகிறது. பிறகு மணியோசை தொடங்கி பாடல் நெடுக உரிய இடங்களில் ஒலித்துக் கொண்டே இருக்க, இப்போது தேவாலய வளாகத்தில் அல்லது பெத்லகேம் குடிலில் அமர்ந்திருக்கும் உணர்வை எம் எஸ் வி அவர்களது இசைக்கோவை ஏற்படுத்தி விடுகிறது.

தாளக்கட்டு, டிரம்ஸ் வாசிப்பு, வயலின்கள் இழைப்பு, புல்லாங்குழல் வாசிப்பு எல்லாம் ஒரு மழை இரவில் மெல்லொளி பரவும் இடத்தில், இசை சாரல் ஒன்றில் நனைந்தபடியே இதயத்தை மிதக்க வைத்து விடுகிறது.

பரத்வாஜ் ரங்கன் ஆராதிக்கிறார் எம் எஸ் வி அவர்களை! ம – ண – மே – டை என்பது நான்கு பதங்கள், அடுத்த அடியோ, ம – லர் – க – ளு – டன் – தீ – பம் என்று ஏழு பதங்கள், தலைவர் தலைவர் தான் என்கிறார்!

சுசீலா இந்தப் பாடலில் விதவிதமான உணர்வுகளை, உணர்ச்சிகளை எல்லாம் கொண்டுவருவதைக் கேட்கமுடியும். குதூகல தொடக்கம். உறவின் நெருக்கம். வாழ்க்கையின் கிறக்கம். தேவன் அருளில் உருக்கம். தன்னிலை மறக்கும் பெண் மனத்தை, அதைப் பார்ப்பவர் அடையும் பதட்டத்தைக் கவிஞர் எப்படி அசாத்தியமாகக் கொணர்கிறார் என்பது, திரைப்பாடல்களில் ஆழ்ந்து பார்த்து ரசித்துக் கொண்டாட வேண்டிய வரிசையில் முக்கியமானது.

எம் எஸ் வி ரசிகர்களது இணையதளத்தில் மீனாட்சி என்பவர் இந்தப் பாடலில் லயித்து எழுதியிருக்கும் விவரிப்புகள் உள்ளம் தொடுபவை.

http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=2244&sid=d0b00121b45704dc723ed9566fc3381c

பல்லவியின் ஒவ்வோர் அடியும் அழகு என்றாலும், ‘மங்கையர் கூட்டம் மணக்கோலம்’ என்ற வரியை அசாத்திய லயத்தில் இசைப்பார் சுசீலா, அதுவும் அந்தக் ‘கூட்டம்’ என்ற பதத்தில் எத்தனை கிறக்கத்தை நிரப்பி இருப்பார் மெல்லிசை மன்னர்.ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு டியூனில் அமைப்பது அவரது சுவாரசியமான உழைப்பு என்று பரத்வாஜ் ரங்கன் கொண்டாடுவதற்கு ஏற்ற பாடல் இது.

இந்தப் பாடலின் சரணங்கள் அமைக்கப்பட்ட விதமே காதல் போதையின் பிரதிபலிப்பாக அமைந்திருப்பதை, பி சுசீலா பாடுகையில் உணர முடியும். மோன நிலை தூவும் ஹம்மிங் கொடுத்து, ‘நான் இரவில் எரியும் விளக்கு’ என்கிற முதல் சரணத்தின் முதல் அடியின் ஒவ்வொரு சொல்லையும் சுசீலா ஒரு மயக்க நிலையில் இழுத்திழுத்து உதிர்ப்பார், பின்னர் அடுத்த அடியை, நீ என் காதல் மணி மாளிகை என்பது உற்சாக வேகத்தில் தெறிக்கும் !

‘நீ பகலில் தெரியும் நிலவ என்பதில் வட்ட வடிவிலான சுழற்சியில் விழும் சொற்கள். ‘நான் உன் கோயில் பூந்தோரணம்’ என்பது உரிமை கொண்டாடுவதாக மலரும். அங்கே நிறுத்தி, ‘மணியோசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்’ என்று சரணத்தை நிறைவு செய்வார் சுசீலா. அந்த எங்கும் என்ற சொல்லின் ‘ம்’ இருக்கிறதே, அதிலேயே இழைப்பார் அந்தப் பெண்ணின் குதூகலத்தை !

‘என் மடியில் விடியும் இரவு’ என்ற சரணத்தை முன்வைத்து மட்டுமே கண்ணதாசன் திரைப்பாடல் புனைவு குறித்து விரிவாக எழுத முடியும்.இரவுப் பொழுது இங்கே கழியும் என்று சொல்வதைவிடவும், விடியும் இரவு என்ற சொற்பதங்கள் எத்தனை ஆழ்ந்த பொருளும், கவித்துவமும், காதலும் அடர்த்தியாக உரைப்பவை. ‘நம் இடையில் வளரும் உறவு’ என்கிறது அடுத்த அடி. ‘மேகம் தழுவும் குளிர்க் காற்று மோகம் பரவும் பெருமூச்சு’ என்பது சந்தங்களில் அந்த பந்தத்தை விளக்கிவிடுகிறது. கண்ணதாசனின் அந்தக் கற்பனைப் பெருமூச்சை மெல்லிசை மன்னர் பி சுசீலாவைக் கொண்டு விடுவிப்பதை, மீனாட்சி அவர்கள் எத்தனை நுட்பமாகக் கவனித்து எழுதி இருக்கிறார்! ‘நான் பெறுவேன் சுகமே சுகமே…’ என்னமாக இசைப்பார் சுசீலா.

மூன்றாவது சரணம், தாயற்ற ஒரு பெண், உற்ற துணை கிடைத்ததான நம்பிக்கையில் எழுப்பும் விடுதலை கீதம். ‘உன் துணை போல சுகமும் இல்லை’ என்ற வரியை கவிஞர் எப்படி வந்தடைகிறார்! இந்தக் கற்பனை அப்படியே இசையிலும், சுசீலா குரலிலும் மிதக்கும்.

பாடல் முழுவதிலும், சரணங்களை நோக்கிய வழிப்பயணத்திலும் குழலிசையும், வயலினும், தேவாலய மணியோசையும், இதமான டிரம் செட் இசையும் ஆஹா…ஆஹா.. குறிப்பாக, தாளக்கட்டு!

ஒவ்வொரு சரணம் தொடங்கும்போதும், தவழும் பருவத்துக் குழந்தையானது நெருங்கிய உறவைப் பார்க்கவும், வேக வேகமாகத் தரையில் நீந்தி வந்து காலுக்கருகே வந்தடைந்து ஏக்கத்தோடு பார்த்துத் தன்னைத் தூக்கிக் கொள்ள ஓங்கிக் கைகளால் அடித்துக் கொள்ளும் ஓசை போல் பிறந்து பற்றிக் கொள்கிற அந்தத் தாளக்கட்டில், குழந்தையை வாகாகத் தூக்கி வைத்துக்கொண்டு மேலும் கீழுமாக உயர்த்தித் தோளிலும் மார்பிலும் அணைத்து முத்தமாரி செய்து பூஞ்சிரிப்பு பூக்கவைத்துக் குழந்தையை மெல்லப் பிறகு இறக்கி வேடிக்கை காட்டும் தந்தை போல், தாயைப் போல் சரணங்களைப் பாடி முடிக்கிறார் சுசீலா. தேவாலய மணியோசையின் கூர்மையான ஒலிக்கு நிகராகப் பொழியும் சுசீலா அவர்களது அற்புதமான பாடல்களில் ஒன்று தான் ‘மணமேடை மலர்களுடன் தீபம்…’

மூன்றாம் சரணத்தில் மழை பெய்யவே செய்கிறது. எனக்கு, ஜெயகாந்தனின் ‘பருவ மழையாலே வாழ்க்கை பாலை வனமாகியதே’ வரிகள் ஏனோ நினைவில் வந்துபோனது. கதை தெரிந்தவர்களால் கண்ணீர் சிந்தாமல் இந்தப் பாடலைக் கடந்து போக முடியாது. காதல் தாபத்தை, நம்பிக்கையை, இறை விசுவாசத்தை, அன்பை, மகிழ்ச்சியை என பல்வேறு உணர்ச்சிகளை இந்தப் பாடல் வரிகளுக்கேற்ப ‘ஊர்வசி’ சாரதா அபாரமாக வெளிப்படுத்தி இருப்பார், ஸ்ரீகாந்த் மென்மையான உடனிருப்பு.

மழை வெள்ளம் மாநகர மனிதர்களைக் கொஞ்சம் பரந்த சமூக எண்ணங்கள், அரசியல், நாட்டு நடப்பு பற்றி எல்லாம் பேச நிர்பந்திக்கிறது. வெள்ள நீர் வடிந்தாலும், வெளியேற மறுத்துத் தேங்கி நிற்கும் கழிவு நீர் போல், மாற்றங்களுக்கான நம்பிக்கையற்று சபித்துவிட்டுத் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கே நடுத்தர வர்க்கத்தை மீள வைக்கிறது தாராளமய காலம்.

தங்களுக்கான கிருமித் தொற்று குறித்துக் கவலையற்றுக் கழிவுகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர் ஏராளமான எளிய தொழிலாளிகள். மழையால் பாதிப்புறும் தங்கள் வாழ்க்கையை மழையை அடுத்தே மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இசை எந்த பேதமுமின்றி எல்லா உயிர்களையும் இரட்சிக்கிறது. தனது அருள் மழையால் ஆசீர்வதிக்கிறது. நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருக்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன் 

Music Life Series Of Cinema Music (Mettukkalo kangal) Webseries by Writer S.V. Venugopalan.

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன் 




எந்த வயதிலிருந்து இசையில் விழுந்தோம் என்று கேட்டால், எல்லோராலும் துல்லியமாக அந்த முதல் தருணத்தைச் சொல்ல முடியுமா தெரியவில்லை. அன்னை வயிற்றில் இருக்கும்போதே இசை தான் தாலாட்டுகிறது. பிறந்த குழந்தைக்கு இசை தான் பாலூட்டுகிறது. சீராட்டுகிறது. அந்தப் பாடலை எல்லாம் குழந்தையும் பாடத் தொடங்கும்போது இல்லம் கூடுதல் வெளிச்சத்தில் மின்னுகிறது. குழந்தையைப் புற உலகம், பாடாதே என்று எதோ ஒரு புள்ளியில் அதட்டி நிறுத்தி விடுகிறது. அதற்கும் அசராத பிள்ளைகள் பாடியபடியே வளர்கின்றனர்.

‘ரமேஷா, எனக்காகக் கொஞ்சம் பாட்டு பாடுறா கண்ணா’ என்று (வீட்டில் பெயர் ரமேஷ்) என் இசையைக் கொண்டாடிப் பாடவைத்து ரசித்தவள் எங்கள் லலிதா சித்தி. கயிற்றுக் கட்டில், திண்ணை அல்லது மர பெஞ்சு ஏதோ ஒன்றில் அமர்ந்தபடி, சினிமாப் பாடல்கள், நிறுத்தாமல் ஒரு மணி நேரம் கூட அடுத்தடுத்துப் பாடப் பாட அப்படி சுவைத்துக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஒருபோதும்,
பாட்டைக் கழற்றி வைத்ததில்லை உடலிலிருந்து.

பள்ளிக்கூடப் பருவத்திலேயே இட்டுக்கட்டிப் பாடும் வழக்கம் தொடங்கி இருந்தது. அது வயது ஏறிக்கொண்டே போனாலும் நிற்கவில்லை. மகன் நந்தாவை உறங்க வைக்கையில், அவனுக்காக அப்போதைக்கப்போது உருவாக்கிய பாடலில் ஒன்று,

செல்ல நந்தா தூங்கு – என்
வெல்ல நந்தா தூங்கு
நாள் முழுதும் நீ செய்யும்
குறும்புக்கெல்லாம் ஓய்வு (செல்ல நந்தா )

கையுடைஞ்ச பொம்மைக்கு ஒரு
காலு கூடக் குறையும் – உன்
கை பட்டால் கால் பட்டால்
எந்தப் பொருள் தேறும்?

பிஞ்சு விரல் தூக்கி என்னை
அடிக்கும் போது வலிக்கும் – நான்
கெஞ்சிடாமல் சிரித்து விட்டால்
கூடக் கொஞ்சம் கிடைக்கும் – அடி
கூடக் கொஞ்சம் கிடைக்கும் (செல்ல நந்தா)

மயிலிறகால் வருடியதாய்
ரகசியமாய் முத்தம் -நீ
தருகையிலே பெறுகையிலே
இருக்குமிடம் சொர்க்கம்

விஷமங்கள் செய்கையிலே
தூங்க வைக்கத் தோன்றும் – நீ
தூங்கிவிட்டால் விழிக்கும்வரை
காத்திருப்பேன் நித்தம்
காத்திருப்பேன் நித்தம்! (செல்ல நந்தா)

நகைச்சுவைப் பாடல் ஒன்று கூட புனைந்ததுண்டு. அது நந்தாவின் நேயர் விருப்பம், ஏதாவது காமெடி பாட்டுப் பாடுப்பா என்றான், மூன்று வயது இருக்கையில். யாரைப் பற்றி காமெடி என்று கேட்கவும், என்னைப் பற்றியே பாடு என்றான்.

அவன் பேரு நந்தா, அவன் பண்ணுவான் பந்தா, அத்தைக் கொண்டா இத்தைக் கொண்டா, கேட்கும் அனகொண்டா…இது தான் பல்லவி. சரணம் இப்படி வரும்:

‘இட்டிலி கொடுத்தால் சப்பாத்தி கேட்பான்,
சப்பாத்தி கொடுத்தால் பரோட்டா கேட்பான்
பரோட்டா கொடுத்தால் சென்னா கேட்பான்
சென்னாவைக் கொடுத்தால் தின்னாமல் சிரிப்பான் (அவன் பேரு)

அப்படி ரசித்து ரசித்து சிரித்துக் கேட்டபடி தூங்குவான்.

சேர்ந்திசைக் குழு ஆசிரியை ராஜராஜேஸ்வரி அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் பற்றி ஒரு பாட்டு கேட்டார் என்று, மயிலாப்பூர் அது ஒயிலாப்பூர் என்று ஒன்று எழுதிக் கொடுக்க, அவர் அத்தனை அன்பு பாராட்டி, மறுத்தாலும் விடாது சன்மானமும் வழங்கி சிறப்பித்தார். இதெல்லாம் பழைய புராணங்கள். இசைப்பாடல்கள் என்று ஒருபோதும் உட்கார்ந்து எழுதியதில்லை.

அண்மையில், கல்லூரி மாணவி சிந்துஜா என்பவர், தமது கல்வியின் பகுதியாக ஒரு படைப்பாளி என்ற முறையில் என்னோடு நெடிய உரையாடல்கள் நடத்தி, விவாதங்கள், கேள்விகள் எழுப்பித் தனது படிப்பை நிறைவு செய்ய இருப்பவர். என்னைப் பற்றிய விவரங்கள் தொகுத்துக் கொண்டே வந்தவர், கதை, கவிதை, குறுநாவல் எல்லாம் எழுதுகிறீர்கள், இசைப்பாடல்கள் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டார். அதெல்லாம் ஞானமில்லை, வாய்ப்பு இல்லை என்று சிரித்தபடி மறுத்துக் கொண்டே இருப்பேன். இசை வாழ்க்கை என்று ஒரு தொடர் எழுத வரும், இசைப்பாடல் எழுத வராதோ, ஏமாத்தாதீங்க அய்யா’ என்று திரும்பத் திரும்ப சண்டை பிடிப்பார். அண்மையில் ஒரு நாள் தீர்த்துச் சொல்லி விட்டார், பாடல் எழுதிக் கொடுத்தால் தான் ஆயிற்று என.

இசைப்பாடல் ஒன்று கேட்கின்ற நெஞ்சம்
இசைப்பேன் நானும் கொஞ்சம் ஓ ஓ
இதற்கா வார்த்தைப் பஞ்சம்?

என்று தொடங்கிய ஒரு பாடலை, உடனே அமர்ந்து எழுதி அவருக்கு அனுப்பி விட்டு, எழுத்தாளர் அழகிய சிங்கர் அவர்களது சொல் புதிது எனும் வாட்ஸ் அப் குழுவிலும் பகிர்ந்து கொண்டேன். ராகவன் மதுவந்தி எனும் நண்பர் (நேரில் பார்த்தறியாதவர்) அதை அவருடைய நண்பர், பாரதி அன்பர் திரு ராம் குமார் அவர்களுக்குப் பகிர்ந்து பேச, அவர் உடனே ராகேஷ் எனும் நண்பருக்கு அனுப்பிக் கேட்க, உடனே ராகேஷ் அவர்கள் இசையமைத்துத் தானே அந்தப் பாடலைப் பாடி, ஆடியோ பதிவை அனுப்ப, அப்படியே எனக்கும் வந்து சேர்ந்துவிட்டது.

கேட்டு அசந்து போனேன். எழுத்து இசையாக உருமாறும்போது ஏற்படும் ரசாயன வித்தைகள், தனக்காக நிகழ்கையில் அதன் ஈர்ப்பு பன்மடங்கு இருப்பதை உணர முடிந்தது. பாடலின் உணர்வுகளுக்குள் பயணம் செய்கிறது ராகேஷ் அவரது குரல். அத்தனை உயிர்ப்போடு முன்பின் அறியாத ஒருவரது வரிகளைத் தமது இசை ஆற்றில் அவர் மிதக்க விடும் கற்பனைத் திறன் வியக்க வைக்கிறது.

பாடலை, இன்னும் சிந்துஜா பார்க்கவில்லை என்பதுதான் இதில் சுவாரசியம். ஆடியோவையும் பின்னர் அனுப்பியாயிற்று. பாடலுக்கான பெருமை அவரைச் சாரும்.

கவிஞர் ஓர் ஓவியர் என்றால், ஓவியத்தை உயிரோடு உலவச் செய்யும் மந்திரவாதியாகிறார் இசையமைப்பாளர். மெட்டுக்குப் பாட்டும், பாட்டுக்கு மெட்டும் என்று எத்தனை ஓவியங்களை உயிர்த்துடிப்பு மிக்க இசைப்பாடல்களாக இசை மேதைகள் வழங்கி வந்துள்ளனர் திரையிசையில்!

அண்மையில் வந்த ‘லேடீஸ் ஸ்பெஷல்’ இதழின் தீபாவளி மலரில், ‘சந்தம் கொஞ்சும் சினிமா’ பாடல்கள் எனும் தலைப்பில் நண்பர் ஆர் கே ராமநாதன் (ஆர்க்கே), ரசனை பொங்கிப் பொங்கி அருமையான பாடல்கள் சிலவற்றை ரசித்து ரசித்து எழுதி இருக்கிறார். அழைத்து வாழ்த்தும்போது, கட்டுரையில் இடம் பெறாத வேறொரு பாடலைச் சொன்னால், ‘கடகட’ என்று பள்ளி மாணவர்கள் பத்தாம் வாய்ப்பாடு சொல்வது மாதிரி இலகுவாகப் பாடல் வரிகளை வேகமாகச் சொல்லிக் கொண்டே செல்கிறார் மனிதர்.

பாடல்களே வாழ்க்கையாக மாறி விட்ட காலம் எல்லோருக்கும் வாய்க்கிறது. சிலர் அதை இழக்காது தக்கவைத்துக் கொள்ளும் வரம் பெற்றிருக்கையில், வாழ்க்கையே இசையாக ஒலிக்கத் தொடங்குகிறது.

ஆர்க்கே கட்டுரையில் அவர் லயித்து எழுதியதில் மெல்லிசை மன்னரின் அமர்க்களமான ‘முத்துக்களோ கண்கள்’ பாடலும் ஒன்று. அதை வெறும் பாடல் என்று எப்படி குறிப்பிடுவது? ‘நெஞ்சிருக்கும் வரை’ மறக்க முடியாத கனவுத் தூரிகையின் காதல் ஓவியம் அல்லவா அது!

காதல் ததும்பும் ஓர் இதயத்தின் துள்ளல் துடிப்பையே தாளக்கட்டு ஆக்கி இருப்பாரோ என்னவோ எம் எஸ் வி! இதயத்தைத் தொட வேண்டுமானால், வீணையும், வயலினும், புல்லாங்குழலும் வருகை தந்து விடுவார்கள், சொல்லவே வேண்டாம்.

பாடல் முழுக்க முத்துக்களின் துளிகள் விழுந்து கொண்டே இருக்கும் ஒரு மெல்லோசை கேட்டுக் கொண்டே இருக்கும், சிறிய மணிகளின் ஓசை அது. க்ளோக்கென்ஸ்பீல் என்று அழைக்கப்படும் இசைக்கருவியை , இலேசாக ஒரு குச்சியால் இசைக்க, அளவான மணிகளின் இசை உள்ளத்தில் துளித்துளியாகக் காதல் ரசம் சேர்த்து நிரம்ப வைக்கிறது. (சைலோஃபோன் என்று போட்டு வரைந்திருப்பதை ஆங்கில அரிச்சுவடி புத்தகத்தில் பார்த்திருப்போம் அப்படியாக இருக்கிறது அது)

மணிகள் ஒலிக்க, பின்னணியில் இலேசாக வயலின் இழைக்க, கிடார் தொடங்கி வைக்க, வீணையின் சுகமான மீட்டலில் இருந்து பிறப்பதுபோல் ஒலிக்கத் தொடங்குகிறது டி எம் சவுந்திரராஜன் அவர்களது குரல். ‘முத்துக்களோ கண்கள்’ என்பது அவரது முதல் கேள்வி. ‘தித்திப்பதோ கன்னம்’, அடுத்தது. பதில் வேண்டாம், நாயகனுக்கு, ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை’ என்பதில் காதல் பரிமாறப்பட்டு விடுகிறது. அந்த வரியில் சந்த ஓசைக்கு ஏற்ற சொல்லடுக்குகள் அருமையாக அமைத்திருப்பார் கவிஞர் கண்ணதாசன்.

அங்கே நுழைகிறார் பி சுசீலா, ‘படித்த பாடம் என்ன’ என்ற வேகமான கணையைத் தொடுத்து, அதே மூச்சில் சட்டென்று குரலைத் தாழ்த்தி, ‘உன் கண்கள்’ என்று எடுத்து, ‘பார்க்கும் பார்வை என்ன’ என்று வளர்த்து, ‘பாலில் ஊறிய ஜாதிப் பூவைச் சூடத் துடிப்பதென்ன’ என்று கொண்டு நிறுத்துவார். பின், பல்லவியை நாயகியின் மொழியில், பதிலாக, ‘முத்துக்களே பெண்கள், தித்திப்பதே கன்னம்’ என்று நிறுவி, ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை’ என்று அதே சந்தங்களில் பல்லவியை நிறைவு செய்வார்.

அதில் அந்த ஜாதிப் பூவில் என்ற இடத்தில் எத்தனை சங்கதிகள் வைக்கிறார் மெல்லிசை மன்னர், ஆஹா! அதே போல், பார்வை என்ன என்ற இடத்தில் ஒரு சின்னஞ்சிறு வளைவு அக்கார்டியன் இசைத் துளியை சிந்த வைக்கிறார், அந்தத் துளி, பாடல் முழுவதும், சரணங்களிலும், அம்மாதிரியான என்ன வரும் இடங்களில் எல்லாம் அழகாக ஒலிக்கவைத்திருப்பார்.

‘கன்னிப் பெண்ணை’ என்ற முதல் சரணத்தில், ‘தென்றல் தாலாட்ட’ என்ற வருடலைத் தென்றல் போலவே வீசவைத்திருப்பார் டி எம் எஸ். ‘கடலில் அலைகள்’ என்று எடுக்கும் பி சுசீலா, அந்த ‘ஓடி வந்து’ என்பதில் அந்த ‘ஓடி’ எனும் சொல்லை, கடல் அலைகள் நம் பாதங்களில் ஓடிவந்து சிலீர் என்று தொட்டுவிட்டு மீள்கிற உணர்வைக் கொணர்வார்.

‘எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன’ என்கிற அடியில், காதல் ஏக்கத்தை என்னமாகப் பரிமாறி விடுவார் டி எம் எஸ். ‘விருந்து கேட்பதென்ன’ என்கிற பதிலடியை சுசீலா சந்தங்களின் விந்தைகளை ஒரு பந்தலிட்டுக் காட்டிவிடுவார்.

‘ஆசை கொஞ்சம்’ என்று பி சுசீலா காதல் சிணுங்கலோடு தொடங்கும் இரண்டாம் சரணத்தில், ‘பின்னிப் பார்ப்பதென்ன’ என்று இழைக்குமிடத்தில், ‘அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன’ என்ற வரியில் காதல் தாபத்தை மேலும் கூட்டுகிறது டி எம் எஸ் குரல்.

‘மலர்ந்த காதல் என்ன, உன் கைகள், மாலை ஆவதென்ன’ என்று காதல் விசாரணை நடத்தும் சுசீலாவின் கேள்விக்கு, ஒயிலான பதிலை, ‘வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன; என்று முடிக்கிறார் டி எம் எஸ்; தொடக்கத்தில் ஒலித்த அதே இசைத் துணுக்குகளோடு பல்லவியிலிருந்து சுசீலாவின் இதமான ஹம்மிங் ஒழித்து நிறைவு பெறுகிறது பாடல்.

பாடல் முடிந்தபிறகும், அந்த முத்துக்கள் சிந்தும் ஓசையும், காதல் இதயத்திற்கான துடிப்பின் லயத்தில் மிதக்கவைக்கும் தாளக்கட்டும் உள்ளே ஒலித்துக்கொண்டே இருக்க வைத்துவிடுகிறார் எம் எஸ் வி.

இந்தப் பாடலை அத்தனை ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், தற்செயலாக, இப்போதைய பின்னணி பாடகி பத்மலதா அவர்கள், இந்தப் பாடலின் அழகை, இந்துஸ்தானி ராகத்தின் எழிலில் எப்படி அசாத்தியமாக இசை அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் என்று ரசித்து விளக்கும் ஒரு பதிவைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. ராகங்கள், ஸ்வரங்கள் இவை எதுவும் அறியாதவன், ரசிக்கக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டாடுபவன் தான் என்றாலும், இந்த இசைக்கலைஞர் அத்தனை அழகாக அந்தப் பாடலின் வரிகளை அதன் அழகியல் நுட்பங்களோடு இசைத்து விளக்குவதில் ஆழ்ந்து போகத்தான் செய்தேன்.

சொற்களில் இருந்து இசையை உணர்ந்து கொள்கிறேன் என்று அடிக்கடி சொல்வார் எம் எஸ் வி. இசையிலிருந்து சொர்க்கத்தை உணர்ந்து கொள்கிறார்கள் ரசிகர்கள். மிக எளிய மனிதர்களை அவர்களது அன்றாடப்பாடுகளின் கனத்த ஓசையை வாங்கிக்கொண்டு மெல்லிய காற்றை அவர்கள் உழைப்பின் களைப்பின் மீது பரவவிடுகிறது இசை. அவர்களைக் கனவில் ஆழ்த்தி விட அல்ல, உயிர்ப்போடு அடுத்த நாள் தங்கள் விடியலைத் தேடி விழிப்பு கொள்ளவும் வைக்கிறது இசை.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

Music Life Series Of Cinema Music (Isaiye isaiyin oliye) Article by Writer S.V. Venugopalan.

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 



புலமைப்பித்தன் அவர்கள் மறைவுச் செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில், பத்திரிகை நண்பர் ஒருவர் அழைத்து புலவருக்குப் புகழஞ்சலி எழுதுவது பற்றிக் கேட்டார். திரைப் பாடலாசிரியர்கள் யாரேனும் எழுதுவது பொருத்தமாக இருக்கும் என ஒன்றிரண்டு பெயர்கள் சொன்னதில், முக்கியமாக நான் குறிப்பிட்டது, கவிஞர் பிறைசூடன் அவர்களை! அடுத்த சில நாட்களில் இவரையும் இழப்போம் என்று யார் உணர்ந்திருப்பார்?

ஒரு கவிஞர், பாடலாசிரியர், எளிய மனிதர், ஆர்ப்பாட்டங்கள் அற்றவர் என்பதைக் கடந்து அவரைப்பற்றி அதிகம் தேடி வாசித்ததில்லை. நேர்படப் பேசுபவராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. நெளிவு சுளிவுகள் என்று நாகரீகமாக வருணிக்கப்படும், அடிமைத்தன அணுகுமுறையை ஏற்காதவர் என்பதெல்லாம் அவரது நேர்காணல்கள் பார்த்தால் பிடிபடுகிறது. ‘ரயில்வே கேட்டுக்கே தலை குனிஞ்சு போகாதவன்’ என்று நையாண்டியாக ஓரிடத்தில் சொல்கிறவர், வாய்ப்புக்காகத் தன்னைக் குறுக்கி நடத்திக் கொள்ள விரும்பவில்லை. தான் நெருக்கமாக அறிந்த மனிதர்களைப் பற்றித் தனக்கு மனத்தில் பட்டதைப் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார், தனது தொடக்க காலப் பக்குவமற்ற தன்மைகள், சிறுபிள்ளைத் தனமாக ஏட்டிக்குப் போட்டிப் பேசி அடைந்த சங்கடங்கள் எல்லாம் வெளிப்படையாக அவர் சொல்வதை யூ டியூபில் நிறைய கேட்க முடிகிறது.

Music Life Series Of Cinema Music (Isaiye isaiyin oliye) Article by Writer S.V. Venugopalan.

வறுமையின் தரிசனத்தை கவிஞர் காயங்கள், தழும்புகள் தடவியவாறு கடைசிவரையில் நினைவில் தேக்கி வைத்துக் கடந்த காலத்தை மறக்க முடியாதவராகவே வெளிப்படுகிறார் எந்த உரையாடலிலும் ! ஒரு விஷயத்தை எத்தனை வெவ்வேறு மனிதர்கள் பேட்டியில் சொல்லியிருந்தாலும் ஒன்றுபோலவே அதே வரிசையில் அவர் பகிர்வது, உண்மைக்கு நெருக்கமான அவரது இதயத் துடிப்பைப் படம் பிடிக்கிறது. கிரகங்கள், விதி, ஆன்மீகம், பக்தி என்று அவர் குறிப்பிடும் நேரங்களில் கூட சோகங்களையும் நகைச்சுவையாக நினைவுகூரும் பேச்சு மொழி அவரது! சிறை படத்திற்காக எழுதியவர், முதல் பாடல் இடம் பெற்ற படம் நூறு நாட்கள் ஓடியதும், தனக்கு வாய்ப்புகள் அள்ளிக்கொட்டி வந்துவிழும் என்று நம்பி இருந்தேன் என்கிறார், பாவம்.

கண்ணதாசன் காலியிடத்தில் தனக்கு ஓர் ஆசனம் என்ற தனது திறமை மீதில் வளர்த்துக் கொண்ட கனவுகள் தகர்ந்து போய் வாழ்வாதாரத்திற்காக அலைவுற நேர்ந்த கதியைத் தமது கடைசி நேரம் வரை அவரால் மறக்க முடியவில்லை, தனக்குரிய நியாயமான அங்கீகாரம், தனது எழுத்துக்குரிய நேர்மையான அடுத்தடுத்த வாய்ப்புகள் ஏன் தப்பிப் போயிற்று என்று அறிந்திருந்தார். வெற்றி பெற்ற பாடல்களுக்குப் பிறகும் சென்டிமென்ட்களில் தலையைப் புதைத்துக் கொண்டு அவரவருக்கான டீம் என்ற வார்ப்பைச் சுமந்து கொண்டு தெரியும் திரைப்படவுலகில் எந்த டீமிலும் இல்லாதவராக எப்போதாவது நினைவுக்கு வந்து அழைக்கப்படுபவராக மட்டுமே 400 படங்களுக்குமேல் பாடல்கள் எழுதிக் கொடுத்து மறைந்திருக்கிறார் என்பது உண்மையில் வேதனைப்படவே வைக்கிறது. ‘மீனம்மா மீனம்மா’, ‘நடந்தால் இரண்டடி’, ‘சைலன்ஸ்…காதல் செய்யும் நேரம் இது’, விருது பெற்ற ‘சோலப் பசுங்கிளியே’ போன்ற பல புகழ்பெற்ற பாடல்கள் இயற்றியவரான பிறைசூடன் அவர்களது திரையுலகப் பாடல் பயணம் சுவாரசியமான இடர்ப்பாடுகளைக் கடந்து தான் நிகழ்ந்திருக்கிறது.

தான் கேளாமலே தனக்கு ஒரு நல்ல டேப் ரிகார்டர் வாங்கி அளித்து, எங்கே பார்த்தாலும் மதிப்போடு விளித்த எஸ் பி பாலசுப்பிரமணியம், தனக்கு ஃபோன் கிடைக்க உதவியதிலிருந்து சக மனிதராக நடத்திய வி குமார், தனது அறியாத சிறுபிள்ளைத்தன சேஷ்டையெல்லாம் மறந்து குழந்தையைப் போல் அன்பு கொண்டாடிய மெல்லிசை மன்னர், சங்கர் கணேஷ், தனக்கு வாய்ப்புகள் வழங்கிய இளையராஜா, இரண்டே பாடல்கள் கொடுத்தாலும் அன்பு மறவாத ஏ ஆர் ரெஹ்மான் முதற்கொண்டு தனக்கு அன்பு காட்டிய எல்லோரையும் விடாது பாராட்டும் நெஞ்சு இருந்தது அவருக்கு. பாடல் வரிகளிலிருக்கிறது சங்கீதம் எனும் எம் எஸ் வி அவர்களையும், இசை தான் ஆதாரம், பாடல் அப்புறம் எனும் வேறு வகை இசை அமைப்பாளரையும் ஒப்பிட முடிகிறது அவருக்கு. தத்தகாரத்தையும், பாடல் வரிகளையும் மளமள என்று நினைவுகூர்ந்து பேசிக் கொண்டே இருந்திருக்கிறார் மனிதர்.

எஸ் பி பி மறைவு அவரை மிகவும் பாதித்திருந்தது, அவரது நினைவேந்தல் நிகழ்வொன்றில் எஸ் பி பி சரணை எதிரே பார்த்துக் கொண்டு பேசுகையில், ‘அவரது குரலை மீட்டுருவாக்கம் செய்து உங்கள் பாடல்கள் நீங்கள் பாடவேண்டும், வேறு என்ன நினைவாலயம் எழுப்பினாலும் போதாது’ என்று அவருக்கு நேர்ப்பட அறிவுறுத்தும் திண்மை பிறைசூடனுக்கு இருந்தது மலைக்கவைக்கிறது. திரையிசையில் திறமையாளர்களை வஞ்சனையன்றிக் கொண்டாடும் அவர் பாங்கும் சிறப்பானது. அவரது நகைச்சுவை உணர்ச்சிதான் அவரைத் தக்கவைத்துப் பணியாற்ற வைத்துக் கொண்டிருந்திருக்கும் என்று கூட தோன்றுகிறது. தன்னையே விமர்சித்துக் கொள்ளும் அவரது சுய பகடி மனத்தை என்னவோ செய்கிறது.

பக்திப் பாடல்கள் பக்கம் ஒரு கட்டத்தில் நகர்ந்து சென்றுவிட்ட அவரால், சமூக அவஸ்தைகளைப் பாடு பொருளாக்கி விடுதலை நோக்கிய வெளிச்சப் பாதைகளைத் தேட இயலாமல் போய் விட்டது என்று தோன்றுகிறது. தனது பாடுகளை அவர் ஏதும் பதிவு செய்திருக்கிறாரா, என்று கேட்டறிய வேண்டும் என்று தோன்றியது.

‘என் பொம்முக்குட்டி அம்மா’வுக்கு படத்தில் இளையராஜாவின் உருக்கம் மிகுந்த இசை மெட்டில் கே ஜே யேசுதாஸ் என்ற மகத்தான பாடகர், எஸ் சித்ரா எனும் சின்னக் குயிலோடு சேர்ந்திசைத்துப் புகழ் பெற்ற ‘உயிரே உயிரின் ஒளியே’ பாடல், பிறைசூடன் அவர்கள் வழங்கியது தான்.






ஜேசுதாஸ் அவர்கள், இதயத்தைத் தொடும் ஹம்மிங் தொடர்ந்து ‘உயிரே உயிரின் ஒளியே ஒரு நாள் உறவா இதுவே’ என்று முதலடி தொட்டுப் பாடும் அழகான பல்லவியில், பின்னர் சித்ராவின் குரலுமாக விரியும் பாடல் முழுவதிலும் ரசிகர்கள் தங்களை எப்படி கரைத்துக் கொள்கிறார்கள் என்பதை, 4 லட்சம் பேர் பார்த்திருக்கும் யூ ட்யூப் பதிவில் காண முடியும். கதைக் காட்சிக்கான கருப்பொருளை அந்த பாத்திரங்களின் உள்ளத்து உணர்ச்சிப் போராட்டங்களின் மொழியாக, ஆனால் எளிமையாக வார்க்க வேண்டிய சவாலில், பிறைசூடன் அருமையாகவும், இலகுவாகவும் தத்தகாரங்களில் கலந்து மிதந்து எழுதிக் கொடுத்திருப்பது பிடிபடும்.

பல்லவியிலிருந்து சொல்லவேண்டிய கதையை எடுத்துச் சொல்லிச் செல்கிறது அவரது பாடல் மொழி. ‘நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்’ என்பது தனித்துவமாக ஒலிக்கிறது. ‘இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்’ என்பது பல்லவியின் நிறைவு வரி. பல்லவி, சரணம் இரண்டின் நிறைவிலும் உணர்ச்சிகளின் தெறிப்பை ஓர் ஹம்மிங் வைத்துக் கொண்டு வந்திருப்பார் ராஜா.

தன்னன னா தானே னன தன்னன னா என்ற சரணத்தின் மெட்டு அபாரம். முதல் சரணத்தில் யேசுதாஸ், இரண்டாம் சரணத்தில் சித்ரா அவரவர் பாணியில் சரணத்தை எடுத்துப் பாடுவது அப்படி பாய்ந்து வந்து இதயத்தைத் தொடும். இழப்பின் வலியைக் காற்றின் வெளியில் வேதனைக் கீற்றாக ஒலித்துக் கொண்டே இருக்கும் வரிகளை யேசுதாஸ் அத்தனை அனுபவித்துப் பாடி இருப்பார். சோகம் குழைத்திருப்பார் சித்ரா.

அந்நாட்களில் தெற்கே சிற்றூர்கள் வரை கல்யாணம், காதுகுத்து, திருவிழா ஏதானாலும் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள் வரிசையில் பிறைசூடன் அவர்களது பாடலும் ஒன்று என்ற குறிப்பை அண்மையில் ஆர்வத்தோடு கவனிக்க நேர்ந்தது. இளையராஜாவின் காதல் துள்ளல் மெட்டு அது. எஸ் பி பி – சொர்ணலதா குரல்களில் ‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் ஒரு தபேலா தாளக்கட்டில் நிகழ்த்தப்பட்ட காதல் பரவசம். நாயகனாகவும் நாயகியாகவும் வயலின்களும், குழலிசையும் ஒருவருக்கொருவர் சீண்டிக்கொண்டும், சிணுங்கிக்கொண்டும் தக்க தருணத்தில் ஒருவரையொருவர் ஆரத்தழுவி இன்பம் கொண்டாடியும் கிளர்த்தும் இசைச்சூழலில் தெறிக்கும் காதல் விளைச்சல் அது.

ஹம்மிங் தொட்டுத்தான் ‘என்னைத் தொட்டு’ என்று பல்லவி எடுக்கிறார் சொர்ணலதா. முதல் சரணத்தில் நுழையும் எஸ் பி பி தமது சுவாரசியமான புன்னகை சங்கதிகள் குலுங்கப் பாடலைத் தொடர்ந்து, இரண்டாம் சரணத்தில் அமர்க்களமான ஹம்மிங் தொடுக்கிறார்.

‘மன்னன் பேரும் என்னடி, எனக்குச் சொல்லடி, விஷயம் என்னடி’ என்ற பல்லவி சொற்களில் மெட்டுக்கான அழுத்தம் மேலும் கூட்டுகின்றன, வந்து விழும் சொற்கள். சொர்ணலதா அதற்குச் செய்யும் நகாசு ஒரு பக்கம் எனில், ‘மங்கை பேரும் என்னடி’ என்று எடுக்கும் எஸ் பி பி, இன்னும் அமர்க்களப்படுத்துவார். பல்லவியில் புறப்படும் கனவுப்பயணம் ஒரு துள்ளல் பல்லக்காகவே மாறிவிடுகிறது.

ராஜாவின் வேக சந்தங்களில் அடுக்குத் தொடராக சொற்களை அடுக்கியும், காதல் ஊர்தியின் கனவு சவாரியாகவே மெல்லுணர்வுகளைப் பதுக்கியும் இந்தப் பாடலைப் புனைந்திருக்கிறார் பிறைசூடன். இந்தப் பாடல் எழுதியவர் மட்டுமல்ல, பாடகர்கள் இருவரும் கூட இப்போது இல்லை. (நாயகியாக நடித்த மோனிஷா உண்ணியும் இப்போது இல்லை, மலையாளப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அவர், கார் விபத்தில் மரிக்கையில் அவருக்கு வயது 22).

ஓர் இசைப்பாடலின் உருவாக்கத்தில் எத்தனையோ நுட்பமான அனுபவங்கள் கலந்திருக்கின்றன. பலரும் சிலவற்றைப் பகிர்ந்தும் வந்திருக்கின்றனர். எழுதப்படாத, பேசப்படாத அனுபவங்கள் ஏராளமானவை இருக்கும். தாம் எழுதிய பாடல்களில் மட்டுமின்றி எழுதப் படாது போனவற்றின் குறிப்புகளிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார் பாடலாசிரியர் பிறைசூடன்.

‘இளவயதிலேயே முடிவெடுத்துக் கொண்டுவிட்டேன், வாழ்க்கை இசையோடு தான்’ என்று சொல்லி இருக்கிறார் அவர். இன்னாருக்குத் தான் என்றில்லாமல் எந்த இசை அமைப்பாளர் கேட்டாலும் எழுதிக் கொடுத்துக் கொண்டே இருந்தவர் அவர். இசை வாழ்க்கை தான் அவரது வாழ்க்கையும்.

ஓர் இசைப்பாடல் இத்தனை அனுபவங்களின் தொகுப்பாகவும் காலப் போக்கில் கனம் சேர்த்துச் சுழன்று கொண்டிருக்கிறது. அது தான் இசையின் மகத்துவம். வாழ்க்கையின் தனித்துவம். இசை வாழ்க்கையின் உன்னதம்.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்