Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் – எஸ். வி. வேணுகோபாலன்



கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம்
எஸ் வி வேணுகோபாலன்

“எங்கே, உங்கள் குரல் நாண்களைக் கொஞ்சம் நான் தொட்டுத் தடவிப் பார்க்கவேண்டும், எப்பேற்பட்ட குரல்…என்ன இசை அது!” என்று ஒரு பாடகி, தன்னின் மூத்த பாடகி ஒருவரின் அசாத்திய குரலினிமை, இசை ஞானம் கண்டு உளப்பூர்வமாக உருகிப் பாராட்டுவது எத்தனை அருமையான விஷயம்.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

அண்மையில் மறைந்த தேனிசைக் குரலரசி லதா மங்கேஷ்கர் தான் அப்படிக் கரைந்துருகி நின்றது. அவரை அசத்திய மூத்த இசைக்கலைஞர் கே பி சுந்தராம்பாள். சென்னை வந்தபோது ஜெமினி நிறுவனத்தின் புகழ் பெற்ற அவ்வை திரைப்படம் பார்த்திருக்கிறார் லதா. அதில் கேபிஎஸ் அபாரமாக வழங்கி இருந்த நடிப்பும், அற்புதமான பாடல்களும் அவரை ஓடோடிப் போய் நேரில் சந்தித்துத் தமது மரியாதையைத் தெரிவிக்க வைத்திருக்கிறது. அந்த சந்திப்பு ஓர் அரிய புகைப்படமாக வரலாற்றில் நிலைத்து விட்டதற்கு மவுண்ட் ரோடு – பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் ஸ்டூடியோ வைத்திருந்த வைத்தி என்பவர் காரணம்.

https://www.thehindu.com/entertainment/music/lata-mangeshkars-connect-with-the-carnatic-world/article38407828.ece

“என்னவோர் அழகான குரல்…நான் மட்டும் கணேசக் கடவுளாக இருந்தால், என் மீது இத்தனை பக்தி கீதங்கள் பொழியும் குரலுக்குரிய பக்தை மீது நான் காலமெல்லாம் துதி பாடிக்கொண்டிருப்பேன்” என்று காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அவர் நெகிழ்ந்ததை எழுத்தாளர் சோழநாடன் கொடுமுடி கோகிலம் கேபி சுந்தராம்பாள் வரலாறு (ரிஷபம் பதிப்பகம்) எனும் புத்தகத்தில் பதிவு செய்திருப்பதை இசை விமர்சகர், ஆய்வாளர் வி ஸ்ரீராம் தி இந்து ஆங்கில நாளிதழில் வெள்ளிக்கிழமை சிறப்பு இணைப்பில் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கான புகழஞ்சலி கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

லதா அவர்களுக்கும் தென்னக இசைக்கலைஞர்களுக்குமான நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. எம் எஸ் சுப்புலட்சுமி, லால்குடி ஜெயராமன் என கர்நாடக இசையுலக முக்கிய கலைஞர்களை நேரில் வந்து சிறப்பித்திருக்கிறார் லதா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது அன்னை இல்லம், லதாவுக்கு ஓர் அண்ணன் இல்லம், அத்தனை அன்பு கொண்டாடி இருக்கும் நேயமிக்க இதயங்கள்.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

அவரது இந்தி, மராத்தி மொழி திரைப் பாடல்கள், பக்தி கீதங்களுக்கு இங்கே தமிழகத்திலும் எண்ணற்ற ரசிகர்கள் எப்போதும் உண்டு. அவரது மறைவு பழைய நினைவுகளை அசைபோட வைக்கிறது பலரையும்! நாதஸ்வர கலைஞர்கள் உள்பட, ஸ்வரங்களை, பாவங்களை எத்தனை நுட்பமாக இசைக்கவேண்டும் என்பதற்கு லதாவை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்கச் சொல்வார்கள் என்பதெல்லாம் வாசிக்கையில் அத்தனை பெருமையாக உணர முடிகிறது.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

இசையும் ஓவியமும் பின்னிப் பிணைந்திருப்பதை, மும்பை கோகுல் ஆர்ட் ஸ்கூல் மாணவர்கள், மறைந்த இசைக் கலைஞருக்கு ஓவிய அஞ்சலி செலுத்தியதில் காணமுடிந்தது.
1950களிலேயே இந்தியிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்கள் சிலவற்றில் தமிழ்ப் பாடல்கள் பாடி இருந்த லதாவை, எண்பதுகளில் இளையராஜா மீண்டும் இங்கே பாடவைத்திருக்கிறார். நவுஷத் கம்பதாசன் எழுதி இசையமைத்த பாடல்கள் முதலில் பாடியவர், இரண்டாம் வருகையில், கங்கை அமரன் எழுதிய பாடலை இளையராஜா இசையில் பாடிய ஆராரோ ஆராரோ ஒரு மென் காதல் தாலாட்டு. சத்யா படத்திற்காக வாலி எழுதிய வளையோசை கலகல கலகல ..ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு.

ஹம்மிங் எப்போதும் லதாவின் சிறப்பம்சம் என்பதை ராஜா அம்சமாகக் கொணர்ந்திருப்பார். லதா அவர்கள் மறைவு அடுத்து யூ டியூபில் அவரது பாடல்களை ஏராளமான ரசிகர்கள் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்பதைக் காண முடிகிறது. ஆராரோ ஆராரோ பாடலை, அதன் சரணத்தின் நிறைவுச் சொல்லில் அவர் அசாத்தியமாக வழங்கும் சுவாரசியமான திருப்பத்திற்காக, இரண்டு சரணங்களிலும் வரிகளின் ஊடே வரும் ஹம்மிங் இசைக்காக, தத்தகாரத்தின் துள்ளல் சொற்களை ஒரு குழந்தைமைக் கொஞ்சலோடு பாடும் குரலுக்காக, பாடல் நிறைவுபெறும்போது பல்லவியில் எதிரொலிக்கும் மேல் ஸ்தாயி – கீழ் ஸ்தாயி ஆராரரோ எதிரொலிக்காக, பாடலின் அருமையான தபேலா தாளக்கட்டில் பயணம் செய்யும் அந்தக் குரலினிமைக்காக, வயலின்களும் குழலும் இழைக்கும் சுகத்திற்காக விரும்பிக் கேட்பதுண்டு.

ஆராரோ ஆராரோ பாடலை லதாவின் குரலில் பல்லவியின் முதல் வரி கொண்டு திறக்கிறார் ராஜா. பிறகு குரலை விடுவித்துப் புல்லாங்குழலை ஒலிக்கவைக்கும் அந்தச் சிறிய இடைவெளியில் லதா பின்னர் குரலில் கொண்டுவரவிருக்கும் முத்திரை இடங்களை, அதற்கான தமது கற்பனையை அந்த இசையால் நிரப்பி இருப்பார் இசை ஞானி.

ஆராரோ ஆராரோ என்று லதா இசைக்கும் ஒவ்வொரு முறையும் அவரது குரலோடு இயைந்து, குரலைத் தொடர்ந்து அதே கதியில் ஒலிக்கும் ஒரு சிற்றிசையை எப்படி வருணிக்க! அந்த ஆராரோ, நான் வேறோ …அந்த ரோ ரோ ரோ வைத் தொடரும் ஓ ஓ ஓ ..வை எப்படி விவரிக்க!

முதல் சரணத்தை நோக்கிய இசை விரிப்பில் வயலின்களும், குழலும் பாடலின் திசைக்கான இசையின் வரைபடம். இரண்டாம் சரணத்தை நோக்கிய நடையில் மெல்லிய காதல் உணர்வுகளை மேலும் மென்மையாக்கி இழைக்கும் இசைக்கருவிகள்.

இப்போது கேட்கும்போதும், ஆராரோ பாடலின் ஒவ்வொரு சரணத்தின் நிறைவிலும், கங்கை அமரனின் சந்த நயத்தில் உருண்டோடும் சொற்களை ‘அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன் தான்…அன்னத்தை எண்ணம் போல் வாழ வைத்தான்’ என்று முதல் சரணத்திலும், ‘எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க மெத்தைக்குள் தத்தை தான் விருந்து வைக்க’ என்று இரண்டாம் சரணத்திலும் என்னமாக இசைத்திருக்கிறார் லதா என்று தோன்றும். முழு பாடலும், அந்த இதமான தாளக்கட்டும், வயலின்களும் உள்ளே யாரோ அமர்ந்து இழைத்துக்கொண்டே இருப்பது போல் கேட்டுக் கொண்டே இருக்கும்.

வேறொரு பாடல் பதிவுக்காக லதா மங்கேஷ்கர் சென்னை வந்திருக்கிறார் என்பதறிந்து, அப்போது சத்யா படத் தயாரிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தப் படத்திலும் அவரைப் பாடவைக்கலாம் என்று இளையராஜா கேட்க, இயக்குநர் கிருஷ்ணா, கமல் இருவரும் ஆர்வத்தோடு அணுக, நமக்கு கிடைக்கப்பெற்ற அருமையான காதல் கீதம் தான் வளையோசை.

புல்லாங்குழல் திறந்து கொடுக்கிறது அந்தக் காதல் சிறகடிப்பை! குழலில் மலரும் இசையில் மென் பாதங்களின் ஜதியைப் போலும் தாளக்கட்டில் சட்டென்று ஒத்தி ஒத்தி எடுக்கும் பஞ்சுக் குரலில் ‘வளையோசை கலகல….’ என்று பல்லவியை எஸ் பி பாலசுப்பிரமணியன் எடுக்கும் இடம் அபாரம்.

படத்தில், கமல் பேருந்தில் எப்படி ஓடோடிப் போய்ப் படிகளில் தொற்றிக் கொள்வாரோ அப்படியான மெட்டு எப்படி ராஜா உருவாக்கினார் என்று அடிக்கடி தோன்றுவதுண்டு. முரட்டு வாலிபனின் மென்மையான காதல் இதயத்தின் இதமான அரவணைப்பில் சிறகடிக்கும் ஒரு பட்டாம்பூச்சி நாயகி என்ற ஒற்றை வரியில் எடுத்திருப்பாரா இந்த இசைக்கோவையை!

பல்லவி தொடங்கவும் இரண்டாம் வரியில் ‘சில நேரம் சிலு சிலு என..’ என்று லதா இணைகிறார். இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் எல்லாம் கலந்து பறக்கும் வேக சந்தங்களில் புகுந்து கலந்து எழுந்து வருமாறு வாலி படைத்த பாடலை அத்தனை அழகோடு பாடி இருப்பார். பல்லவியின் கடைசி வரியில் ‘காதல் தேரோட்டம்’ என்ற சொற்களை ஒவ்வொருமுறையும் அப்படி ஒரு போதை முகவரியோடு வழங்கி இருப்பார் லதா.

முதல் சரணத்தில் ‘ஒரு காதல் கடிதம் விழி போடும்’ என்று அப்பாவி போல் தொடங்கும் பாலு, ‘உன்னைக் காணும் சபலம் வரக்கூடும்’ என்பதில் சிந்தும் காதல் சிரிப்பு.. ஆஹா..அதைத் தொடரும் ‘நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்’ என்ற வாலியின் அபாரக் காதல் முரண்பாட்டு நயவரிகளை லதா இசைக்கும் பாங்கில் ஒரு பாசாங்கு புகார் குரலின்வழி பதிவேறும்.

அதற்கடுத்த வரிகளில் காதலன் பரிந்துரைக்கும் காதல் நிவாரணமும், அதை வேண்டாததுபோல் காட்டிக்கொண்டு ஏற்றுக் கொள்ளும் காதலியின் தோரணையுமாக நகர்கிறது பாடல். ‘கண்ணே என் கண் பட்ட காயம்’ என்றதும் இழைக்கும் வயலின் இசைக்கீற்று, ‘கை வைக்க தானாக ஆறும்’ என்ற இடத்திலும் ஒரு மின்னல் கீற்றாக வந்து போகிறது.

இரண்டாம் சரணத்தை நோக்கிய திசை ஓர் இசைச் சோலை.! காதல் அவஸ்தையின் பரஸ்பர தாபங்களும், மோகங்களும் பொங்கித் ததும்பும் குரல்களின் இடையே, வாலியின் சொற்கள் கொண்டு, ‘ராகங்கள் தாளங்கள் நூறு, ராஜாவின் பேர் சொல்லும் பாரு’ என்று லதாவே வாழ்த்திச் சென்றிருக்கிறார் இசை ஞானியை! காதல் மிதவையின் ஒவ்வொரு வரியும் கொட்டட்டும் மேளம் தான் என்ற காதல் தேரோட்டம் தான்!

பாலுவின் துள்ளாட்டக் குரலும், இடையே சிரிப்பு ஸ்வரங்களும், சங்கதிகளும், சாகசமுமாக வளர்கிற பாடலின் இரண்டாம் சரணத்தில் இசைவழி ஒரு தியானம் போல நீள் ஹம்மிங் எடுப்பார் லதா. அதில் சன்னமான எதிரொலியாக எஸ் பி பி யின் ஹம்மிங். . வயலின்களும், புல்லாங்குழலும், இடையே கிடாரின் இசை மீட்டலுமாக உள்ளத்தினுள் தந்திகளை மீட்டிக் கொண்டே இருக்கும் பாடலாக நிலைத்து விட்டது வளையோசை.

தமிழ் உச்சரிப்பு ஒழுங்காக வரவேண்டும் என்ற அக்கறையோடு, லதா மங்கேஷ்கர், வளையோசை பாடல் வரிகளை யாரேனும் பாடிய ஆடியோ பதிவை அனுப்புமாறு முதலிலேயே சொல்லி இருக்கிறார், ராஜாவே பாடி அந்த ஆடியோ பதிவை அவருக்குச் சேர்த்திருக்கிறார். அதன் பிறகு பாடல் வரிகளை இந்தியில் எழுதிப் பாடிப் பார்த்து, ஏற்கெனவே ஏக் துஜே கேலியே படத்தின் ‘தேரே மேரே பீச் மெய்ன்’ பாடலில் வரும் தமிழ் சொற்களை அவருக்கு எடுத்துச் சொல்லித் தந்த எஸ் பி பி இந்தப் பாடல் முழுவதுக்கும் அவர் கேட்ட உதவியைச் செய்தார், பாடல் முழுவதும் பாடி முடித்ததும் அங்கிருந்த அத்தனை கலைஞர்களும் மற்றவர்களும் ஒன்றுபோல் கரவொலி எழுப்பி அவரைக் கொண்டாடினார்களாம், இருந்தாலும், லதா விடாமல், உங்களுக்கு முழு நிறைவு ஏற்பட்டதா, திரும்ப ஒரு முறை நான் பாட வேண்டி இருக்குமா என்று ராஜாவை அத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடு கேட்டார் என்று இயக்குநர் கிருஷ்ணா நாற்பதாண்டுக்கு முந்தைய நினைவுகளோடு அஞ்சலி செலுத்தி உள்ளார் லதாவுக்கு.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

தமது காலத்தின் இசையை லதா மேலும் பரிமளிக்கச் செய்தார், சம காலத்தின் பாடகர்களில் அவர் இன்றும் பேசப்படுவதன் காரணம், இசையில் ஒன்றிய இதயமும், இசைக்காகத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட உணர்வுகளும் தான் என்று எழுதுகின்றனர் இசையறிஞர்கள். இந்திப் பாடல்களில் பரிச்சயம் அற்றுப் போனோமே என்று ஒவ்வொரு முறை எஸ் பி பி அவர்களின் பதிவுகளில் முகமது ரபி பற்றி கேட்கும் போதும், இசை ஆர்வலர்கள் சில முக்கியமான பாடல்கள் குறித்துப் பேசும் போதும் தோன்றிக்கொண்டே இருக்கும். லதாவின் அபாரமான பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போதும் அப்படியான உணர்வு மேலிடவே செய்கிறது.

மொழி கடந்து பேசிக்கொண்டே இருக்கிறது இசை. மொழி கடந்தும் மௌனத்தில் ஆழ்த்துகிறது இசை. மொழிக்கு அப்பால் உயரே பறக்கிறது இசையின் கொடி. பேச்சற்ற வேளைகளிலும் கூடப் பார்வைகளால் பரிமாறப்படும் மொழியைப் போலவே, எத்தனையோ உணர்வுகளை இசையும் கடத்தி விடுகிறது. இசைக் குயில் மறைந்தாலும், இசை அவரது உயிலாக வந்தடைந்து விட்டது இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் ! இசை வாழ்க்கை என்றால் வேறென்ன!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடர்களை வாசிக்க:

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை – எஸ். வி. வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Sinthai Mayakkum Vinthai Isai) Webseries 64 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை – எஸ். வி. வேணுகோபாலன்



சிந்தை மயக்கும் விந்தை இசை
எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 14ம் கட்டுரையில், ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ (தவப்புதல்வன் ) பற்றிய பத்தி ஒன்று இடம் பெற்றிருந்தது. அதன் முதல் சரணத்தில் இரண்டாம் அடியில், ‘என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்’ என்பது கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான கவிதைத் துளி. அண்மையில் தி இந்து ஆங்கில நாளேட்டில், ‘புற்று நோய் அறுவை சிகிச்சை நேரத்தில், கேளடி கண்மணி படத்தின் பாடலால் இதம் பெற்ற நோயாளி’ என்ற செய்தி வந்திருந்தது.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/music-helps-woman-remain-calm-during-mastectomy/article38341547.ece

திருமதி சீதாலட்சுமி, கர்நாடக இசை முறையாகப் பயின்று, இசை வகுப்புகள் நடத்தி வருபவரும் கூட. மார்பகப் புற்று நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தவருக்கு, ஒரு கட்டத்தில், தவிர்க்க முடியாமல், அறுவை சிகிச்சை தேவைப்பட்டிருக்கிறது.

உண்மையில் உளவியல் போராட்டம் அது, இருப்பினும் அதையும் எதிர்கொண்டு தியேட்டருக்குள் செல்கையில், நுரையீரல் நிலைமை, வழக்கமாக நோயாளியைத் தூங்காமல் தூங்கி, வலி உணராதிருக்கச் செய்யும் பொது மயக்க நிலைக்கு உட்படுத்த அனுமதிக்கவில்லை. இலேசான மயக்கத்தில் இருத்தி, சிகிச்சையைத் தொடங்கி , உள்ளே அவருக்கு மிகவும் விருப்பமான ‘கற்பூர பொம்மை ஒன்று’ பாடலை மென்மையாகச் சுழலவிட்டிருந்தனர்.

இலேசான மயக்க நிலையிலிருந்தும் விடுபட்டுவிட்ட இந்தப் பெண்மணி, விழி திறந்து பார்த்து பேச்சு கொடுத்திருக்கிறார் மருத்துவரிடம். பின்னர் அவர்கள் ஊக்கப்படுத்த, பி சுசீலா குரலோடு இணைந்தும் இயைந்தும் அறுவை சிகிச்சைப் படுக்கையில் இருந்தபடியே பல்லவி முழுக்க அவரால் பாட முடிந்திருக்கிறது. அத்தனை நம்பிக்கையாய் உணர்ந்திருக்கிறார் அந்த நேரத்திலும் – அதற்குப் பிறகும். அனஸ்தீசியா கொடுக்காமல் முக்கிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட நிகழ்வில், சீதாலட்சுமி விளக்கிய இசை குறித்த நுட்பமான செய்தி உடலியல் தொடர்புடையது.

பல்லவியில், ‘கலந்தாடக் கை கோர்க்கும் நேரம்’ என்ற வரியை, ஒரே மூச்சில் பாட முடிந்திருக்கிறது அவரால். இதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு செயலி வைத்து அவ்வப்பொழுது பாடிப் பாடிப் பதிவு செய்து பின்னர் கேட்டு ஒப்பிட்டுத் தமது நுரையீரல் வலுப்பெற்று வருகிறதா என்று பார்த்திருக்கிறார்.

அப்போதெல்லாம், ‘கலந்தாட’ பாடி, கொஞ்சம் மூச்சு எடுத்துக் கொண்டு, ‘கை கோர்க்கும்’ பாடி விட்டு மூச்செடுத்து ‘நேரம்’ என்று தான் பாட முடிந்திருக்கிறதாம். அறுவை சிகிச்சை நடக்கும் தருணத்தில் தன்னால் முழு வரியை தாள லயத்தில் ஒரே மூச்சில் பாட முடிந்தது உளவியல் நிறைவையும் அவருக்கு வழங்கி இருக்கிறது. அந்த நிகழ்வில் பல்லவி முழுவதும் சீதாலட்சுமி பாடவும் செய்திருக்கிறார், பார்க்கையில் வியப்பாகவும் உவப்பாகவும் இருந்தது.

இளையராஜா இசையில் மலர்ந்த மு மேத்தா அவர்களது அருமையான பாடல் அது. ஒரு மென்மையான ஹம்மிங்கில் தொடங்குகிறார் சுசீலா (சீதாலட்சுமியும் அந்த ஹம்மிங் அருமையாக இசைத்தே பாட்டைத் தொடங்குகிறார்).

‘கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று’ என்று தொடங்கும் பல்லவியில், ‘கலந்தாடக் கைகோர்க்கும் நேரம்’ என்ற அடிக்குப் பின், சிதார் இசை ஒரு கொஞ்சு கொஞ்சுகிறது. ‘கண்ணோரம் ஆனந்த ஈரம்’ என்ற அடுத்த அடியின் பிறகும் சிதாரின் அதே செல்லச் சிணுங்கல்.

அங்கிருந்து, பி சுசீலா தொடுக்கும் ‘முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல், நீ பாடம்மா’என்கிற இடம், இதயத்தை வருடுவது. காற்றில் பரவும் வாசனைப் புகை போன்ற சுழற்சியில் அமைந்திருக்கும் பகுதி அது. பாடலுக்கான மெட்டில், பல்லவியின் நிறைவுப் பகுதி போலவே அமைந்துவிடும் சரணங்களின் நிறைவுப் பகுதியிலும் இதே வரிகளைப் பயன்படுத்தி இருப்பார் ராஜா.

சிதார் உருக்கமும், புல்லாங்குழல் மயக்கமும், வயலின்களின் கலக்கமும் கொண்டு சேர்க்கும் இடத்தில் தொடங்கும் முதல் சரணத்தின் வரிகளில் தாயன்பு சிந்துகிறது சுசீலாவின் குரல். சரணத்தினூடே, ‘மானே உன் வார்த்தை ரீங்காரம்’ என்பதில் ‘மானே’ என்பதையும் ‘ரீங்காரம்’ என்பதையும் அத்தனை கற்பனையோடு இழைத்திருப்பார் சுசீலா. அதற்கு இயைபான அடுத்த அடியில், ‘மலரே என் நெஞ்சில் நின்றாடும்’ வந்து தெறிக்கும். நின்றாடும் என்ற சொல் முடியவும் தபலா தாளக்கட்டு சுவாரசியமான ஒரு முடிச்சு போட்டு, ‘முத்தே என் முத்தாரமே’ வரியை ஏந்திச் செல்லும் அழகில் மனம் கரைந்துபோகும்.

இரண்டாம் சரணத்தை, கதைக்களத்தில் குழந்தை தனது தாயோடு செலவிட்ட இன்பத் தருணங்கள் நினைவில் கொண்டுவர ஏற்றதான வேக கதியில் வயலின் இசையை அபார முறையில் சொற்களும், இழைய விட்டிருப்பார் ராஜா. குதூகலத்தைக் குழல் பின்னர் பற்றிக் கொண்டு ஓட, இரண்டாம் சரணத்தில், தன்னைக் குழந்தை இழக்கப்போவதை சூசகமாக உணர்த்தும் வரிகள், உள்ளம் தொட்டுக் கண்ணீர் பெருக்கும். மீண்டும் தபலா தாளக்கட்டின் சுவாரசியமான முடிச்சு, ‘முத்தே என் முத்தாரமே’. ‘கற்பூர பொம்மை ஒன்று’ எனும் அந்தப் பல்லவி பாடல் முழுக்க ரீங்காரமிடுவது, பாடல் முடிந்தபின் ரசிகருக்குள் இடம் பெயர்ந்துவிடுகிறது.

நோயுற்ற பிறகு, எங்கே தனது பாடல்களை, இசையை இழந்து விட்டோமோ என்ற உள்ளத்தின் பரிதவிப்பு விடைபெற்றுத் தனது இசைக்குரலை மீட்டெடுத்துக் கொண்ட உணர்வை சீதாலட்சுமி வெளிப்படுத்தும் போதே, பழைய நிலைக்கு இன்னும் தூரம் போகவேண்டி இருக்கும், ஆனால், ஒரு தெம்போடு அதையும் கடப்பேன் என்று குறிப்பிட்டார்.

தான்சேன் பற்றிய குறிப்பில் தொடங்கியது ஒரு தற்செயல் ஒற்றுமைதான். தி இந்து ஆங்கில ஏட்டின் கடந்த வெள்ளிக்கிழமை இணைப்பிதழில், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக, மத்திய பிரதேசத்தில் குவாலியர் அருகே பெஹத் எனும் சிற்றூரில், தான்சேன் சமாதி அருகே, ஆண்டு தோறும் டிசம்பரில் நடைபெறும் இசையோற்சவம் ஒன்றைப் பற்றிய சிறப்புக் கட்டுரை பல சுவாரசியமான தகவல்களை ஏந்தி வந்துள்ளது.

https://www.thehindu.com/entertainment/music/singing-at-tansens-tomb/article38334604.ece

97வது ஆண்டு சிறப்பு இசை சங்கமத்தில் தமிழகத்தில் இருந்து பிரபல கட வித்வான் விக்கு விநாயகம் அவர்கள் இந்த முதுமையிலும் அங்கே சென்று அற்புதமான நிகழ்ச்சி நடத்தி வந்திருக்கிறார். ராம்தனு என்பது தான் இயற்பெயர், இசையில் அவர் வேகமாக எட்டிய புலமையைப் பாராட்டி, அவரது குருவான சுவாமி ஹரிதாஸ் வைத்த பெயர் தான் தான்சேன் (தான் என்பது சங்கீதத்தில் தானம் என்பதைக் குறிக்கும், சிறப்பான முறையில் தானங்கள் இசைத்து, இனிமையாகப் பாடுபவர் என்பதால் கிடைத்த பெருமையது).

Music Life Series Of Cinema Music (Sinthai Mayakkum Vinthai Isai) Webseries 64 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை - எஸ் வி வேணுகோபாலன் 

புகழ் பெற்ற தீபக் ராகம் (இசையால் விளக்குகளை ஒளிரவைத்தது என்று சொல்லப்படும் அந்த ராகம், இப்போது அதன் மூல வடிவில் முழுமையாக இல்லையாம்), மேக மல்ஹார் (மழை பொழியச் செய்வது) இவற்றுக்கெல்லாம் பெயர் போன தான்சேன் புகழை, குவாலியர் மகாராஜா 1924ல் இப்படியான பல்லிசை சங்கம நிகழ்வாக நடத்தத் தொடங்கிச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு, பல்வேறு இசை வித்தகர்களோடு, ஓவியக் கலைஞர்களும் வந்துபோயிருக்கின்றனர். எதற்காக….. விதவிதமான ராகங்களைக் குறிக்கும் விதவிதமான வண்ணக் கலவைகளில் புகழ்பெற்ற மதுபானி ஓவியங்கள் வைத்திருந்தனர் என்றும் பேசுகிறது கட்டுரை.

திறமையான ஓவியர்கள் இசையைக் கேட்டபடி மேடைகளில் சிறப்பான ஓவியங்கள் தீட்டுவதை – பாடலின் ஏற்ற இறக்கங்கள், ராக பாவங்கள் இவற்றுக்கேற்ப வண்ணங்களைக் குழைப்பதை வியந்து பார்த்திருப்போர் இருப்பீர்கள்.

சில ஆண்டுகளுக்குமுன், லயோலா கல்லூரி பண்பாட்டுத் துறையோடு இணைந்து ஓவியர் சந்த்ரு தலைமையில் ஏராளமான ஓவியக் கலைஞர்கள் இளையராஜாவுக்கு ஓவியங்களினூடே தங்களது சிறப்பு மரியாதை செய்த நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைக்க பா ரஞ்சித், பொன் வண்ணன்போன்ற பலரும் பங்கேற்ற அந்த நிகழ்வின் காணொளிப் பதிவு யூ டியூபில் உள்ளது.

மற்றுமொன்று, தென்றல் வந்து தீண்டும்போது பாடலுக்கான ஓவியத்தையே தீட்டி இசை ஞானிக்கு மரியாதை செய்திருக்கும் அற்புதமான ஓவியர்.

அந்தக் காணொளியும் நெகிழ வைத்தது.

இரண்டுமே கண்ணில் நீரை வரவழைப்பது. முதலாவதில், அற்புதமான இயக்குநர் எஸ் பி ஜனநாதன் அவர்களது உற்சாக முகமும் குரலும். இரண்டாவதில், ‘வண்ணங்கள் அறியா எண்ணங்கள்’ என்று எழுதிக் கையெழுத்து போட்டிருக்கும் அபார ஓவியர் இளையராஜா, கண்ணெதிரே பார்க்கும் உருவை அப்படியே கலையாக்கி நிறைவு செய்யும் இடத்தில் உறைந்து போகிறது மனம்! அர்ப்பணிப்பு மிக்க இருவரையும் இந்தக் கொடுந்தொற்று காலத்தில் பறிகொடுத்தோம்.

அர்ப்பணிப்பு எனும் சொல், பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்கிறது. இசையும் ஓவியமும் எனில், அருமையான இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா இசையில் டி எம் சவுந்திரராஜன் அவர்களது அசாத்திய காதல் தேனிசைக் குரலில் ஒலிக்கும் புகழ் பெற்ற பாடலாசிரியர் கு மா பாலசுப்பிரமணியன் அவர்களது பாடல் தான் சட்டென்று நினைவுக்கு வரும், சித்திரம் பேசுதடி….ஆஹா என்ன எழிலானதொரு பல்லவி.

காதல் பாடல்களுக்கான பூக்களை எந்த நந்தவனத்தில் இருந்து பறித்துச் சொற்களாக வடிப்பார் கு.மா.பா என்பது எப்போதும் வியக்க வைப்பது! இதயத்திற்குள் இசைக்கும் பாடலை அத்தனை மென்மையாக அமைத்திருப்பார் லிங்கப்பா.

அடுத்தவர் அறியாத வண்ணம் காதலன் தனது உள்ளத்தைத் திறந்து தீட்டும் ஓவியமும், அதன் மீதான காதல் காவியமும் சபாஷ் மீனா படத்தில் அற்புதமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். இல்லாதப்பட்டவர்களுக்கு இடையே காதல் இல்லாமல் எப்படி போய்விடும்! காதலில் ஏழ்மை இல்லை, வள்ளன்மை தான்!

தந்திக் கருவிகளும், காதல் பூங்குழலும் ஓர் ஓடையைப் போல் இதம் பதமாக ஓடி இதயம் நனைக்கும் இடத்தில், பளிச் என்று எடுக்கிறார் பல்லவியை சவுந்திரராஜன். ‘சித்திரம் பேசுதடி’ என்று தொடங்கி, ஒரு சிறு நிறுத்தம் கொடுத்து, ‘உன் சித்திரம் பேசுதடி’ என்று வளர்த்து ‘எந்தன் சிந்தை மயங்குதடி’ என்று கொண்டு நிறுத்திக் காதலை வரைவார் டி எம் எஸ், சங்கதிகள் இழைத்து!

பல்லவியை முடிக்கவும், ஒரு மயில் பீலி, பாடகரையும் ரசிகரையும் ஒரு சேர வருடிக் கொடுப்பது போன்ற இசையை (வயலின்?) மென் அலைகளாகப் பரவ விடுகிறார் லிங்கப்பா. இதே இசையை, சரணங்கள் ஒவ்வொன்றிலும் மேல் தளங்களுக்குக் குரலெடுக்கையில் விசைப்பலகையாய் வழங்கி இருப்பார்.

பல்லவியை அடுத்துப் பிறக்கும் அனுபல்லவி, பாடலின் மொத்த ருசிக்கும் ஒரு முன்னோட்டமாக அருள்கிறது. ‘முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி’ என்பது அந்த வரி, ஆனால், அதைச் சரம் சரமாகத் தொடுத்துக், கையில் எடுத்துக் கொஞ்சி முத்தமிட்டு மேற்கொண்டு தொடுத்து முடித்துப் பின்னி இருப்பார் டி எம் எஸ். அதிலும், அந்த ‘போல்’ என்ற சொல்லையடுத்து எடுக்கும் ஆலாபனை, மோகனப் புன்னகையை விதம் விதமாகச் சிதற விடும் காதல் ஆராதனை எல்லாம் சொல்லி மாளாது.

‘தாவும் கொடி மேலே’ என்ற முதல் சரணத்தின் முதலடியில் முதல் எழுத்துக்கே மந்திரம் போட்டிசைத்துப் பின்னர் முதலடியின் நிறைவை நீட்டித்து, ‘ஒளிர் தங்கக் குடம் போலே’ என்று தரையிறக்கிக் கொண்டுவந்து கொஞ்சுமிடமும், பின்னர் குழந்தையை மெல்ல மெல்ல உயர்த்தித் தோளில் நிறுத்திப் பின்னர் கழுத்தில் அமர்த்திக் கூத்தாடுவது போல் காதலைக் கிறுகிறுக்க வைத்து விடும் அடுத்த வரிகளும்…. ஆஹா! ‘பேரெழிலே’ என்ற சொல்லுக்கு அதற்கு மேலும் அழகூட்டி விடும் அவரது குரல்.

இரண்டாம் சரணம், மித கதியில் தொடங்கினாலும், உள்ளூரப் பொங்கும் காதலை மென் சீண்டலாக, ஊடலாகக் கோப்பையில் ஊற்றி வேகமாக ஆற்றி ஆற்றித் தானே நம்பிக்கையோடு சமாதானப் படுத்திக் கொண்டு நிறைவு பெறுகிறது. அதிலும், ‘இன்னமும் ஊமையைப் போல் மௌனம்’ என்ற எடுப்பு, ஒரு பாசாங்கு கோபமாக வரைகிறார் டி எம் எஸ். ‘ஏனடி தேன்மொழியே’ என்று நியாயம் கேட்குமிடத்தில் பதில் ஏற்கெனவே தெரிந்த இன்பம் மிதக்கிறது குரலில்!

சித்திரம் பேசுதடி என்ற பல்லவியின் முதலடியில் பாடல் நம்மை நிலை நிறுத்தி விடை பெறுகிறது. தொடக்கத்திலிருந்து அந்த நிறைவுப் பகுதி வரை, குரலை மிகாது வயலின் இழைப்பு நிழல் போல் தொடர்தலின் சுகம், இரவுகளில் கேட்கும்போது நெஞ்சம் நிறைக்கிறது.

பாடல் காட்சியில், காதலி (மாலினி) உள்ளே நுழைதல் அறியாது, காதலன் பாடிக் கொண்டிருக்க, அந்தக் காதலை அவள் ரசித்து வெளிப்படுத்தும் பாவங்களும் சிறப்பாக அமைந்திருக்கும். டி எம் எஸ் குரலின்பம் அப்படியே வாங்கி, அள்ளியள்ளி உடலில் இறக்கித் ததும்பி ஒரு குதூகல புன்னகையைப் பரவவிட்டபடி நடித்திருப்பார் சிவாஜி கணேசன் !

ஏக்கம், துயரம், இன்பம், தேடல், இலட்சியம் என மிகப் பரந்துவிரிந்த வாழ்க்கை அனுபவங்களை இசை தனது மொழியில் கடத்துகிறது. தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் தடுப்பூசி போலவே, துயர நேரத்தில் ஒலிக்கும் சோக கீதம், தாங்கும் சக்தியை வலுப்படுத்தி இதப்படுத்தி உள்ளத்தை நிம்மதி பெறச் செய்துவிடுகிறது. இசையின் மருத்துவம், இசையின் மகத்துவம்.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடர்களை வாசிக்க:

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Isai kelathu nam illaiye) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்



இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே
எஸ் வி வேணுகோபாலன்

பாடலாசிரியர் காமகோடியன் அவர்களுக்கான இரங்கல் குறிப்புகளோடு வெளியான கடந்த வாரக் கட்டுரை அதிகமானான வாசகர்களைச் சென்றடைந்தது. கட்டுரைகளைச் சேர்த்து வைத்துத் தான் வாசிக்கிறேன் என்று சொல்லும் சில அன்பர்கள் கூட அந்தக் கட்டுரையை உடனே வாசித்து விட்டு மறுமொழி அனுப்பி இருந்தனர். கவிஞருக்கான உளமார்ந்த இரங்கல் அது.

கட்டுரையை காமகோடியன் அவர்களது வாட்ஸ் அப் எண்ணுக்கும் அன்றே அனுப்பி இருந்தேன், குடும்பத்தில் யாரேனும் பார்க்கக் கூடும் என்ற நம்பிக்கையோடு! அண்மையில் அந்த எண்ணில் இருந்து ஒரு செய்தி வந்தது – மறைந்த கவிஞரது பதினாறாம் நாள் நினைவு நிகழ்வு விவரம். அவருக்கு நெருக்கமானவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் வரிசையில் அனுப்பி இருந்தனர் என்கிற விதத்தில் ஆறுதல் அடைய முடிந்தது.

நினைவுகளால் நகர்கிறது வாழ்க்கை என்பதுபோல் சில நேரம் தோன்றுவதுண்டு. படைப்பாளியின் வாழ்நாள் கடந்து அவரது நினைவைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் எழுத்து, இசை, கலை மூலம் அவர்கள் நிலை பெற்று விடுகின்றனர்.

Music Life Series Of Cinema Music (Isai kelathu nam illaiye) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே - எஸ் வி வேணுகோபாலன் 

அண்மையில் கதக் நாட்டியக் கலையின் மகத்தான ஆசான், கலைஞர் பிர்ஜு மகராஜ் மறைந்தார். அவரது வயது 83. அவரைப் பற்றிய கட்டுரை ஒன்று இப்படி தொடங்குகிறது:

சில ஆண்டுகளுக்குமுன், ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சென்றிருக்க, அவரை வரவேற்றுப் பூங்கொத்து கொடுக்க பள்ளிக்கூடச் சிறுவர்களை விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அவர் உள்ளே நுழைகையில் அவர்கள் ஆர்வத்தோடு அதை அவர் கைகளில் அளிக்கின்றனர்.

அந்தக் குழந்தைகளை ஆசையோடு பார்த்த மகராஜ், ‘கதக் என்றால் என்ன என்று அறிவாயா?’ என்று கேட்டிருக்கிறார், அதற்கு அவரை இன்னார் என்றே அறியாத ஒரு சிறுமி,”பண்டிட் பிர்ஜு மகராஜ் ஆடும் நாட்டியம் அது’ என்று விடையிறுத்திருக்கிறாள். சிரித்துக் கொண்டே பிர்ஜு சொன்னாராம்,’அவன் நாட்டியத்தை ஆடுவது இல்லை, நாட்டியத்தை வாழ்ந்து கொண்டிருக்கிறான்’ என்று!

நாட்டியம் வாழ்கிற வரை வாழ்கிறவரை நாம் எப்படி மறைந்தார் என்று எழுதி வைக்க!
https://www.thehindu.com/entertainment/dance/birju-maharaj-ruled-the-realm-of-kathak/article38298321.ece/amp/

விஸ்வரூபம் படத்தில் சங்கர மகாதேவன் – கமல் குரல்களில் உள்ளத்தைத் தொடும் ‘உன்னைக் காணாது நான்’ பாடலுக்கான நாட்டிய அடவுகள் பிர்ஜு மகராஜ் அவர்களிடம் கற்றார் கமல். அதன் படமாக்கக் காணொளிப் பதிவில் மகராஜ் கண்ணசைவு, உடல் மொழியின் நேர்த்தி இவற்றைப் பார்க்க முடியும்.

பிர்ஜு மகராஜ், ஓர் அருமையான இசைப் பாடகரும் கூட, சத்யஜித் ரே அவர்களது திரைப்படத்தில் இரண்டு நாட்டியக் காட்சிகளுக்கு இசையமைத்து, அவரே பாடி இருக்கிறார், அது மட்டுமல்ல, மிகச் சிறந்த தபலா இசைக்கலைஞர் அவர் என்பன போன்ற அரிய செய்திகளும் அண்மையில் வாசிக்கக் கிடைத்தன. தமது 13ம் வயதில் அவர், நாட்டியம் கற்பிக்கத் தொடங்கி விட்டாராம், பதின்மூன்று வயதில் ஆசிரியர், அதாவது எழுபதாண்டுகள் குருவாக வாழ்ந்தவர், நாட்டியத்தை வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்!

ஒரு சிற்பியின் உறக்கத்திலும் உளி சத்தம் ஒலித்துக் கொண்டிருக்கலாம், ஓர் ஓவியரின் மனத்திரையில் ஈரம் காயாத சித்திரம் ஒன்று எப்போதும் மின்னியபடி இருக்கக் கூடும். கவிஞர் தமக்குள் எங்கோ அமிழ்ந்து இருக்கும் சொற்களை உரிய இடத்தில் கைபட்டு எடுக்கும் போது கவிதை ஒளிர்வது நிகழலாம். இசையும் நாட்டியமும் உயிர்ப்பாக உள்ளத்தில், உடலில் கலந்து அதுவேயாக இந்தக் கலைஞர்கள் தங்களை உணரும் ஒரு கட்டத்தில் உன்னதமான இன்பம் மேலும் விளையத் தொடங்குகிறது. மகத்தான அஞ்சலி செலுத்துகிறோம் எளிமையாகவே வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கதக் ஆசானுக்கு!

இசை வாழ்க்கை 47வது கட்டுரையில், பின்னர் விரிவாகப் பேச வேண்டும் என்று ஒத்தி வைத்திருந்த பாடல் இப்போது கண் முன் வந்து நிற்கிறது. நாட்டிய இசை, இசையின் நாட்டத்தில் கவிதை, பாடலுக்கான ஆட்டத்தில் கதை என்று விரியும் ஓர் அற்புதமான திரை இசைப்பாடல் அது. வாணி ஜெயராம் அவர்களது தனித்துவமிக்க குரலினிமையும், உருக்கமான பாவங்களும், பன்முகத் திறனும் அசாத்திய முறையில் வெளிப்பட்ட ஓர் அரிய வகைப்பாடல்.

புன்னகை மன்னன் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வித ரசனையில் திளைக்க வைப்பவை. ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலை இரவு நேரங்களில் கேட்கும் போது அதன் உணர்வலைகள் ரசிகரை வேறெங்கோ கொண்டு சேர்க்கும். ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ இன்னொரு முத்து. பாடல்கள் எல்லாமே கவிஞர் வைரமுத்து.

‘கவிதை கேளுங்கள்’ பாடல் முற்றிலும் வேறு ஒரு தளத்தில் இயங்குவது. தாளக் கருவிகளும், தந்திக் கருவிகளும் அசுர கதியில் இயங்கவும், கேட்போர் உள்ளங்களையும் அதே வேகத்தில் செலுத்தவுமாக நிகழும் பரவசமிக்க ரீங்காரம் பாடல் நிறைவு பெற்று வெகு நேரம் எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கும் உணர்வுகளை விட்டுச் செல்கிறது.

பல்லவி தொடங்கும் கணத்திலேயே ஒரு தீக்குச்சி கிழிப்பது போல் பற்றவைக்கும் நெருப்பின் சுடரை மெல்ல மெல்ல வளர்த்து, அலை மோதவிட்டு, மேலும் கொழுந்துவிட்டு எரியவைத்துப் பெருஞ்சுவாலை போல் விண்ணோக்கி உயரச் செய்து நிறைவு செய்கிறார் வாணி ஜெயராம். அந்த நெருப்பை ஊதிவிடவும், அடுத்தடுத்த படிநிலைக்கு அதன் வெளிச்சம் பரவ வைக்கவுமாக பி ஜெயசந்திரன் உரிய இடங்களில் ஹம்மிங் செய்யவும், நடனத்திற்கான பதங்கள் சொல்லவுமாக இணைவது இருவேறு தன்மையுடைய குரல்களின் சங்கமமாகப் பாடலை மேலும் ஒளிரச் செய்கிறது.

நவீன நாட்டிய ஸ்டெப்களின் தாளத்தைத் தொடர்ந்து வயலின்கள், மிருதங்கத்தின் சிற்றுரை, வேகமான தாளக்கட்டு, இசைக்கருவிகள் வாசிப்பைத் தொடர்ந்து பல்லவியை எடுத்துக் கொள்ளும் வாணி ஜெயராம், மிக வேகமாகக் கடந்து செல்லும் அதே வேளையில் சொற்கள் அத்தனை தெளிவாகத் தெறிப்பது முக்கியமானது.

பல்லவி முடியும் இடத்தில் அழகான ஹம்மிங்கோடு இணைகிறார் ஜெயசந்திரன். பின்னர், கதக் நாட்டியத்திற்கான திசையில் பாடலை அவர் நகர்த்த, அந்த ரம்மியமான தாள கதியில், ‘நேற்று என் பாட்டில் …’ என்று சரணத்தை அபாரமாக எடுக்கிறார் வாணி. அதன் அசாத்திய சுழற்சிக்கு ஏற்ப உருள்கின்றன சொற்கள்.

அதன் முடிவில் பல்லவிக்கு சமாதானமான மனம் போலும் இறங்கும் குரலை, மீண்டும் ஜெயசந்திரனின் நுழைவு, பரத நாட்டிய முத்திரைகளுக்கான பதங்களை எடுத்துவைக்க, அந்த ஆட்டத்திற்கான அடுக்குகளில் பறக்கின்றன சொற்கள். அதன் வெளிச்சத்திலிருந்து மேலும் ஒரு ஒளிப்பிழம்பாக ‘பாறை மீது பவழ மல்லியைப் பதியன் போட்டதாரு’ என்று நாட்டுப்புற மெட்டிற்கு அபாரமாக நழுவிச் சென்று மின்னுகிறது வாணியின் குரல்.

இதில் நடன அடவுகளுக்கான சொல் வீச்சுகளை ஏந்திச் செல்லும் தாளக்கட்டுகள் பாடல் நெடுக அசர வைக்கும். கடைசி சரணத்தின் ஒவ்வொரு வரி நிறைவிலும் அதிர வைக்கும். கதைக் களத்தின் உளவியல் பாடுகளை, போராட்டங்களை, தாபங்களை, ஏக்கங்களை எல்லாம் உருக்கி வார்க்கும் வயலின் இழைப்போடு இரண்டறக் கலந்து விடும் இடத்தில் மேலும் மிளிர்கிறது வாணி ஜெயராம் அவர்களது குரல் வளம்.

வலைப்பூக்கள் சிலவற்றில் (ரமேஷ் என்பவரது தளத்தில், எடுத்துக்காட்டிற்கு), பல்லவியில் இருந்து முதல் சரணத்திற்குச் செல்கையில் சுருதி மாற்றத்திற்கேற்ப, ‘நேற்று என் பாட்டில் சுதியும் விலகியதே’ என்ற வரியை வியந்து குறிப்பிட்டு, இதன் பெருமை ராஜாவுக்கா, கவிஞருக்கா….இருவரின் அருமையான பங்களிப்பு இது என்று குறிப்பிட்டிருப்பதை வாசிக்க முடிந்தது. அந்த சரணத்தில், தேர்ந்த டென்னிஸ் ஆட்டக்காரர் போல், பந்துகளை வாங்கி வாங்கிப் பதிலுக்கு அதே வேகத்தில் திருப்பி அடிக்கும் லாவகத்தில் சுழலும் வாணியின் குரல்.

நாம் மிகவும் விரும்பிக் கேட்கும் ஓர் உரையாளர் பேசும்போது ஏற்படும் மனவெழுச்சி, அவர் பேசப் பேச நமக்குள்ளும் உணர்வுகள் பொங்கவும், அவர் நிறைவு செய்கையில் கொஞ்சம் ஆசுவாசம் தேவை போன்ற உணர்வு நமக்கும் ஏற்படுவது போலவும், வாணி ஜெயராம் பாடி முடிக்கவும், இந்த மொத்தப் பாடலின் இசையோற்சவம் அமைதிக்கு வரவும், ரசிகரும் தம்மையறியாமல் ஒரு பெருமூச்சு விட்டு ஓர் ஆழ்ந்த துயர வெளியின் பயணம் முடித்த உளவியல் அனுபவத்தில் ஆழக் கூடும்.

ஒரு புத்தக வாசிப்பு போல் இசை, இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு! மென்மையான வாசிப்பு, ஆவேசம் கொள்ளவைக்கும் வாசிப்பு, பரவசம், சோகம், பரிதவிப்பு, தம்மையே தொலைத்துவிடுவது போன்ற அனுபவங்கள் இரண்டுக்கும் பொதுவானவை. சிந்தனைகளைத் தூண்டுகிறது இசை, புத்தகம் போலவே!

புத்தகக் காதலர்கள் பெரும்பாலும் இசை கொண்டாடிகளாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தங்கள் வாசிப்பைத் தன்னடக்கமாக வைத்துக் கொள்வோரைப் போலவே இசை ரசிகர்களில் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்போர் உண்டு. மறுபதிப்பில் எப்போதும் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களைச் சென்றடையும் புத்தகங்கள் போலவே, அற்புதமான பாடல்கள் காலம் கடந்து நிலைத்து விடுகின்றன. நாட்டியத்தை வாழ்தல் போலவே தான் இசை வாழ்க்கையும்!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடர்களை வாசிக்க:

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Ullam Isaithathu Mella) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்



உள்ளம் இசைத்தது மெல்ல …..

கடந்த வாரக் கட்டுரை, உண்மையில் ஜுர வேகத்தில் எழுதியதுதான். இசையெனும் காய்ச்சல் மட்டுமல்ல, வேகமாக என்னுள் பரவிக் கொண்டிருந்த காய்ச்சல் அது. டிசம்பர் கடைசியில் எழுதி முடித்து, கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்ட அன்று எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நிபுணர் ஒருவரை சந்தித்து, பரிசோதனைகளுக்குப் பிறகு, வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அவர் சான்றிதழ் வழங்கியதும், மருத்துவமனை வாசத்திற்குத் தயாராகக் கட்டி எடுத்துச் சென்ற மூட்டைகளோடு வீடு திரும்பினேன். அப்புறம் செய்த உடனடி பணிகளில் ஒன்று தான், இசை வாழ்க்கை கட்டுரையை எல்லோருக்கும் பகிர்ந்து கொண்டது.

எந்தக் களைப்பும் இல்லாதிருக்கச் செய்துவிட்டது 5 நாள் தனியறைத் தனிமை. வாசிப்பும், இசையும், அலைபேசியிலேயே எழுதிக் கொண்டிருந்த கவிதைகள் சிலவும், பகிர்வுகளும் நிற்கவில்லை. மடிக்கணினி மட்டும் தான் அறைக்குள் குடியேறவில்லை.

கவிஞர் காமகோடியன் மறைவுச் செய்தி, தனிமைப்பட்டிருந்த அப்படியான நாள் ஒன்றில் வந்தது. எங்கள் தெருவிலேயே குடியிருந்த அருமையான மனிதர், சிறந்த பாடலாசிரியர், மெல்லிசை மன்னரோடு நெருக்கமாக உடனிருந்தவர், ஏராளமான பக்திப் பாடல்கள் அவருக்கு இயற்றி அளித்தவர். இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் எழுதிக் கொடுத்திருப்பவர். மிக எளிமையான மனிதர். இந்தக் கொடுந்தொற்றுச் சூழலில் நேரில் சென்று மரியாதை செலுத்த இயலாமல் போனது. அவரது நூல் வெளியீட்டு நிகழ்வில் பார்த்த இடத்தில் வாய்த்த அரிய அறிமுகத்தில் கோவில்பட்டி அன்பர் முத்துராமலிங்கம் என்பவரோடு கிடைத்த நட்புக்காகவும் காமகோடியன் அவர்களுக்கு அன்புக்கடன் பட்டிருக்கிறேன்.

அறிஞனாயிரு, கவிஞனாயிரு…..ஆயிரம் கோடிக்கு அதிபனாயிரு, வீரனாயிரு, சூரனாயிரு…..என்னவாக இருந்தாலும், மனிதனாயிரு என்று அமையும் அவரது இசைப்பாடலை, எம் எஸ் வி இசையமைத்து வாய்ப்புள்ள மேடைகளில், நிகழ்ச்சிகளில் எல்லாம் பாடிக் கொண்டே இருந்தார் என்பதை அடிக்கடி சொல்வார் காமகோடியன்.

அவரோடு பாபுஜி அவர்கள் தொலைபேசியில் நடத்தியுள்ள அருமையான உரையாடல், யூ டியூபில் தற்செயலாகக் கிடைத்தது, அவரது நூல் வெளியீடு நிகழ்ந்ததற்குப் பிறகான நேர்காணல் அது. தன்னைக் கொஞ்சமும் முன்னிறுத்தாமல், எம் எஸ் வி அவர்கள் பால் அத்தனை அன்பும், மரியாதையும் பொங்க வார்த்தைக்கு வார்த்தை கவிஞர் கொண்டாடிப் பேசுவதைக் கண்ணீர் மல்கித் தான் கேட்க முடிந்தது.

இந்த உரையாடலில், இசை மேதை நௌஷத் மீது எம் எஸ் வி கொண்டிருந்த பக்தியை, அவர் விஸ்வநாதன் பால் காட்டிய மதிப்பை எல்லாம் பதிவு செய்திருக்கிறார் காமகோடியன். திறமைகளுக்கு அப்பால் எளிய மனிதராக இருந்த மெல்லிசை மன்னரின் பேரன்பில் கால் நூற்றாண்டுக் காலம் திளைத்த அனுபவங்களைக் கிஞ்சிற்றும் செருக்கின்றி ஒரு குழந்தை போல் அவர் பேசுகிறார்.

குழந்தை என்றதும், மலையாள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் பெரிய பாடகருக்கு சமமாக எந்த அச்சமும் இன்றி ஒரு சிறுமி மழலைக் குரலில் துணிச்சலாக இணைந்து பாடும் பதிவை அவசியம் குறிப்பிட வேண்டும்.

சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற யுக பாரதி அவர்களது ‘கொஞ்ச நேரம் கொஞ்சம் நேரம்’ பாடல் வித்யாசாகர் இசையமைப்பில் விளைந்த மிகவும் இனிமையான மெல்லிசைப் பாடல். மது பாலகிருஷ்ணன், ஆஷா பான்ஸ்லே அத்தனை சிறப்பாகப் பாடி இருப்பார்கள். ஆஷாவின் குரலே குழந்தைமைப் பண்போடு இழைந்தோடும். மேக்னா (எத்தனை வயது, ஏழு?) என்கிற அந்த அழகு குட்டிச் செல்லம், ஏட்டிக்குப் போட்டி சரிக்கு சரி பேச்சும் கொடுத்து, மது பாலகிருஷ்ணன் அவர்களோடு இணைந்து இந்தப் பாடலை அருமையாகப் பாடுவதைக் கேட்கையில் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=TS-8pvbGnus

சரணத்தின் இடையே வரும் ஹம்மிங் உள்பட, தாளக்கட்டு பிசகாமல், எங்கே எப்போது குரல் எடுக்கவேண்டுமோ, எங்கே மூச்சு எடுத்துக் கொண்டு அடுத்த சொல்லை அழகாகப் பாட வேண்டுமோ, எங்கே ஆண் பாடகருக்கு வழிவிட்டு அடுத்து எங்கே தான் இணைந்து தொடர வேண்டுமோ அத்தனையும் சுத்தம்…அழகு !

இதெல்லாம் வெறும் பயிற்சியில் வந்து விடுவதில்லை. இசை, ஒரு கணித வரையறைக்குள் வலம்வந்தால் மட்டும் நிறைவு பெற்று விடுவதில்லை. பாடலின் பாவமும், அதில் தோய்ந்த உள்ளமும் தான் இசையாகிறது.

பாடல் மட்டுமின்றி, அசராமல் யாரோடும் பேச்சு தொடுத்துப் பின்னி எடுக்கும் மேக்னா நிகழ்ச்சிகள், யூ டியூபில் கொட்டிக் குவிந்திருக்கின்றன. மிகப் பெரிய பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், மோகன் லால் போன்ற மூத்த கலைஞர்கள் யார் வந்து அமர்ந்தாலும் சரிக்கு சரி பேசும் இந்தச் சிறுமி பாடிய தமிழ்ப் பாடல் வேறொன்று சிக்காதா என்று பார்க்கையில், எதிர்பாராத முத்து கிடைத்தது.

சந்திரபாபு, ஜமுனா ராணி இருவரும் மரகதம் படத்திற்காக அபாரமாக இசைத்த பாடல் அது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத சிறுவன் ரிச்சு, சிறுமி மேக்னா இந்தப் பாடலை அத்தனை கனஜோராகப் பாடியது, எத்தனை சாகா வரம் பெற்றது அந்தப் பாடல் என்று உணர்த்துகிறது. உலகில் வேறெதையும் விட இசைப்பாடல் தான் இந்தக் குழந்தைகளுக்கு அத்தனை உயிரானதாகத் தோன்றும் போல் தெரிந்தது. இந்த ஆனந்தம் அவர்களுக்கு நீடிக்க வேண்டும், போட்டிகள், இலக்குகள், பெற்றோர் எதிர்பார்ப்புகள் எல்லாம் குழந்தைகளிடமிருந்து அவர்களது நிகழ் காலத்தையும் பறித்து, எதிர்காலத்தையும் சிக்கலாக்கி விடக் கூடாது என்று அடிக்கடி தோன்றும்.

இசையோடு இன்னுமின்னும் கலந்து கரைந்து கொள்பவர்களுக்கு நிறைய கேள்விகளும் எழுகின்றன. ‘ஒரே மாதிரி கதைக்காட்சி தான் வெவ்வேறு படங்களிலும் இயக்குநர்கள் சொல்லிப் பாடலுக்கு உங்களிடம் கேட்பார்கள், எப்படி வெவ்வேறு ட்யூன் உங்களால் கொடுக்க முடிகிறது?’ என்ற கேள்வியை இளையராஜா அவர்களிடம் திரும்பத் திரும்பப் பலரும் கேட்கின்றனர்.

எல்லாப் படைப்பாளிகளுக்குமான கேள்வி தான் அது. அந்தப் புள்ளியை அறிவியலாளர் ஹைசன்பர்க், நிச்சயமற்ற கோட்பாட்டில் தொட்டார். அதைத் தான் பின்னர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் இன்னும் விவரித்தார். புத்தர் அதைத் தான் க்ஷணிக தத்துவம் என்று உலகுக்கு விளக்கினார். ஓடிக்கொண்டிருக்கும் ஓடை நீரில் ஒரு கையள்ளிப் பருகிய நீரை மீண்டும் அங்கிருந்து எடுக்க முடியாது என்றார் கௌதமர். அந்த இடத்தில் இப்போது ஓடி வருவது வேறு நீர், முன்பு எடுத்த நீர் இப்போது கடந்து கொண்டிருப்பது வேறு இடம் என்றும் விளக்கினார்.

அப்படியான நிகழ்வில் பிறந்து விடுகிறது அந்த கணத்திற்குரிய இசை. வேறொரு கணத்தில் அது வேறாகவே பிறக்கிறது, அந்தப் பிறிதொரு கணத்திற்கான இசை அது. இந்த அதிசயம் தான் பாடல்களை நெருக்கமாக அணுகும்போது அத்தனை பூரிப்பு அடைய வைக்கிறது.

அற்புதமான இசை அமைப்பாளர் வி குமார் அவர்களுக்கு, ‘ஒரு நாள் யாரோ…..’ என்ற பாடலுக்கான இசை எப்போது எந்த கணத்தில் உருவாகி இருந்திருக்கும் ! பி சுசீலாவுக்கும், கவிஞர் வாலிக்கும், படத்தில் தோன்றிய ஜெயலலிதாவுக்கும் மிகப் பெரிய புகழைத் தேடித் தந்த அமர்க்களமான பாடல். (ஆனால், மேஜர் சந்திரகாந்த படத்தில் தனக்கான பாத்திரம் பெரிய அளவில் அமையாது போனதில் வெறுத்துப் போன ஜெயலலிதா பின்னர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது).

தன்னை நம்பி ஓர் ஆணிடம் ஒப்புக் கொடுத்து அவன் காதலை நம்பி குதூகலத்தில் இருக்கும் ஒரு பெண், சகோதரன் முன்னிலையில் பாடும் பாடல் காட்சி அது. அவள் உணர்த்த விரும்பும் நுட்பமான செய்திகளை அத்தனை அநாயாசமாக அந்தப் பாடலில் கொணர்ந்திருப்பார் வாலி.

ஒரு முன்னோட்டம் கொடுத்துத் தான் பல்லவியைத் தொடங்க வைக்கிறார் குமார், அந்த இசைத் துளிகளில் சேகரமாகும் உணர்வின் விளிம்பில் புல்லாங்குழலின் சிலிர்ப்பில், சுசீலா அபாரமாக முன்னெடுக்கிறார், ‘ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ…’ என்று. ‘கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி’ என்ற வரியை வசீகர அடுக்குகளில் இசைக்கிறார். இதில் நெஞ்சுக்குள் தாளம் என்பது, ஒரு பருவப் பெண்ணின் துள்ளாட்டத்தையும், பதட்டத்தையும் இடத்திற்கேற்ப உருவகப்படுத்தும் இடத்திலேயே வாலி மின்னுகிறார்.

‘உள்ளம் விழித்தது மெல்ல…அந்தப் பாடலின் பாதையில் செல்ல’ என்கிற முதல் சரணத்தை அசாத்திய குரலில் பாடுகிறார் சுசீலா. பாடலின் பாதை என்று வாலி சுட்டுவது, அந்தப் பெண் நம்பி நடந்து போயிருக்கும் வழியையும் தான். ‘மெல்லத் திறந்தது கதவு….என்னை வாவெனச் சொன்னது உறவு’ என்பது விவரிப்புக்கு அப்பாற்பட்ட கவித்துவத்தில் எழுதப் பட்டிருக்கும் அடுத்த கட்டம். ‘நில்லடி என்றது நாணம், விட்டுச் செல்லடி என்றது ஆசை’ என்ற வரி, அவள், தனது தாபத்திற்கு ஆட்பட்டுப் போன கதையைக் கூறி விடுகிறது. ஆனால், அதை அவளது அந்த நேரத்துக் கொண்டாட்ட மனநிலையில் தான் இசைத்திருப்பார் சுசீலா.

இரண்டாம் சரணம், உடலியல் மாற்றங்களைக் காதலின் நிமித்தம் போல வெளிப்படுத்தினாலும், படக்கதையைத் தொடர்வோருக்கு உரிய பொருளில் கொண்டு சேர்த்து விடுகிறது. ‘செக்கச் சிவந்தன விழிகள்…கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்…’ என்ற அடிகளை அபாரமான பாவத்தில் கொண்டு வந்திருப்பார் சுசீலா. அடுத்து, ‘இமை பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்’ என்பதில் உறக்கம் என்பதில் வலுவாக அழுத்தமும், மயக்கம் என்பதில் ஒயிலான கிறக்கமும் ஒலிக்கும் அவரது குரலில். . ‘உன்னிடம் சொல்லிட நினைக்கும் மனம் உண்மையை மூடி மறைக்கும்’ என்ற வரி, படத்தின் மீதிக் கதைக்கான களத்தை அமைந்துவிடுகிறது.

பல்லவியை நிறைவு செய்கையில் இன்னும் கூடுதல் ஒயிலாகக் கொண்டு வந்து முடிப்பார் சுசீலா.

வானொலியில் பாடுகிறார் என்ற உணர்வை ஏற்படுத்த நாகேஷ் தனது சீடனோடு சேர்ந்து உருவாக்கும் இசையமைப்பின் கற்பனை காட்சியில் கூடுதல் சுவாரசியம் ஏற்படுத்தும். ஆனாலும், பாடலின் சோக இழை நெஞ்சில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கும்.

காலங்களைக் கடந்து வாழும் இசை என்பது, இந்தப் பாடலை, சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா மேடையில் இசைத்திருக்கும் காணொளிப் பதிவை, பல லட்சம் பேர் பார்த்திருப்பதில் வெளிப்படுகிறது.

எழுத்தில், குரலில், மெட்டில் இணைந்து பொழிகிறது இசை. இங்கிருந்தே அது எடுக்கப்படுகிறது. வேறெங்கிருந்தோ பொழிவதில்லை இசை, மழையைப் போலவே! அதன் இன்பம் அடுத்தடுத்து எடுத்துச் செல்லப்படுவதில் மேலும் கூடிக் கொண்டே செல்கிறது. நவில் தொறும் நூல் நயம் என்றார் வள்ளுவர். நுகர் தொறும் இசை நயம் தான்!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்

Pidipadatha Noigalodu Poem By S V Venugopalan எஸ் வி வேணுகோபாலனின் பிடிபடாத நோய்களோடு கவிதை

பிடிபடாத நோய்களோடு கவிதை – எஸ் வி வேணுகோபாலன்




பொட்டலம் போல்
மடித்துக் கொண்டு
கிடக்கிறேன்
காய்ச்சலில்

மருத்துவப் பரிசோதனை ஆய்வுக்கு
என வந்தவர்
ஏதோ கொஞ்சம்
துருவிச் சுரண்டி
எடுத்துப் போனார்
முடிவுகள்
கைப்பேசியில் வரும் என…

உறக்கம் போனது
வெளிப்பட்டு விடுமோ
அடையாளப் படுத்திக்
கொள்ளாமல்
பத்திரமாக
ஒளித்து வைத்திருக்கும்

பாலின மேலாதிக்கம்
அரைகுறை படிப்பின் அதீத செருக்கு
சுய தம்பட்டம்
சாதீய மிச்ச சொச்சம்
சமனற்ற நோக்கு
சாதுரியமான பேச்சு
அப்பாவி முனைப்பு

தூக்கம் தொலைந்த
இரவின் விடியலில்
மெல்ல சோம்பல் முறித்து தாமதமாக வந்த செய்தி

அப்பாடா என்று இருந்தது
பயந்தது ஏதும் நடக்கவில்லை
அவர்கள் கருவிகளுக்குக்
கண்டு பிடிக்க
முடிந்தது
அல்ப கொரோனா தொற்று மட்டுமே
நிம்மதியாகப் புறப்பட்டேன்
மருத்துவ மனைக்கு

அப்புறம் திரும்பினேன்
வீட்டுத் தனிமைக்கு!

Music Life Series Of Cinema Music (isaiyum Azhutha Oru Mazhai Iravu) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்




டிசம்பர் 7 அன்று வெளியான அறுபதாம் அத்தியாயத்திற்குப் பிறகு மாதமே முடிந்த நிலையில், அடுத்த கட்டுரை, மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன். டிசம்பர், சொல்லப்போனால் இசை மாதம். இசைக்கு இசைவான காலம். என் பாட்டனாரையும், பாட்டியையும், தகப்பனாரையும் மேலதிகம் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் மாதமும் கூட.

மார்கழி என்பது என் பாட்டனாரின் மார்பில் கழிந்த இளமைக்காலத்தை நினைவூட்டுவது. அவரது கதகதப்பான சால்வைக்குள் இருந்தவாறு அவரது கரகரப்பான திருப்பாவை ஒலிக்கக் கேட்டுக்கொண்டே இருந்த காலம் அது.

கிறிஸ்துமஸ் நாளுக்குமுன் நான் பிறந்ததால், எப்போதும் அந்த விடுமுறை நாளில் கோயிலில் சிறப்பு வழிபாடு, சர்க்கரை பொங்கல் தளிகைக்கு என் தந்தையார் கடந்த ஆண்டுவரை ஏற்பாடு செய்து வந்தவர்.

கூடாரை வெல்லும் (ஆனால், கூடார வல்லி என்று சொல்வார்கள்) என்ற 27ம் பாசுரத்தன்று வீட்டிலேயே சர்க்கரை பொங்கல் கிடைக்கும், என் சிற்றன்னை அத்தனை அற்புதமாகச் செய்வார். ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்ற பாசுர வரியைச் சொல்லி, எங்கள் தந்தை கேட்பார், ‘கையில் எடுத்தால் முழங்கை வரை வழியுமளவு நெய் இருக்கணும், இருக்கா, அப்படி சாப்பிட்டால் என்னத்துக்கு ஆகிறது’ என்று!

கடைசி பாசுரத்திற்கு வரும்போது, ‘பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை’ என்று இழுத்து, ‘முப்பதும் தப்பாமே’ என்று நிறுத்துவார்கள் திருப்பாவை சொல்பவர்கள். அதற்குப் பொருள், திருப்பாவை முப்பதும் தப்பு என்றல்ல, தப்பாமல் சொல்லவேண்டும் என்று அடுத்த வரியில் வருகிறது, இங்கே இப்படி நிறுத்தினால் இலக்கிய பரிச்சயம் அற்றவர்கள் தவறாகத் தானே புரிந்து கொள்வார்கள் என்று சொல்லிக் காட்டி எங்கள் தகப்பனார் விளக்கம் கூறி நகைப்பது உண்டு.

காஞ்சிபுர வாசத்தில், வரதராஜ பெருமாள் கோயில் வாசலில் இளவயதில் ஒலிக்கக் கேட்ட திருப்பாவை பாசுரங்கள், எம் எல் வசந்தகுமாரி அவர்கள் பாடியது என்று நினைவு.

எதிர்பாராத விஷயம், ஏ எம் ஜெயின் கல்லூரியில் படிக்கையில் நடந்தது. தமிழாசிரியர் வேணுகோபாலன் அவர்கள், ஒரு நாள் கரும்பலகையில் திருப்பாவையை எழுதிப் போட்டு, கடைசி வரியில் வரும் ஏலோர் எம்பாவாய் என்பதை எடுத்துவிட்டுப் பார்த்தால், எட்டு அடிகளில் இயற்சீர் வெண்சீர் செப்பலோசை அமையப்பெற்ற வெண்பா தான் திருப்பாவை என்று அலகிட்டு வாய்பாடு எழுதி நிறுவிக் காட்டினார்.

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று திரைப்பாடல் வரியில் கொணர்ந்தார் கண்ணதாசன். வழிபாடுகளைக் கடந்தும் பாசுரங்களில் லயிக்க முடிவதற்கு அதன் தமிழ் தான் காரணம். இசையில் விடிகிறது மார்கழிப் பொழுது.

கிறிஸ்துமஸ் நாளும் நள்ளிரவின் இசையில் பிறக்கிறது. தபலா இசைக்கலைஞர் சியோன் அல்மைதா என்பவர், ‘ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் ஜிங்கிள் ஆல் த வே’ கீதத்தைத் தமது தபலா கருவிகளை இசைத்தே வாசிக்கும் காட்சியை அண்மையில் காணொளிப் பதிவில் பார்க்க நேர்ந்தது.

வெவ்வேறு தபலா வாத்தியங்களை வரிசையாக அடுக்கிவைத்து, ஜலதரங்கம் இசைப்பது போல் அநாயாசமாக இங்கே ஒரு தட்டு, அங்கே ஒரு இழைப்பு, அருகே ஒரு தொடுகை, அடுத்ததில் வேக விசை என்று கணித வாய்ப்பாடு பிசகாது ஒப்புவிக்கும் குழந்தையைப் போல் பாடலைப் பொழிய முடிகிறது. அவர் இதயத்தைத் தொட்டுத் தான் வாசிக்கிறார், விரல்கள் தபாலாவை இதயமாக எடுத்துக் கொண்டு விடுகின்றன, அப்புறம் எப்படி பிசகும்?

மழையோ, குளிரோ பாதுகாப்பாக இருந்து அனுபவிக்க அருமையானது தான்…. நனைந்தும் நடுங்கியும் ஒடுங்கியும் வாழ நேர்பவர்கள் பாடு மிகவும் மோசமானது.

அப்படி சாலையோரத்தில் குளிரில் பதுங்கித் தூங்கும் சிறுவர்களைப் பார்த்த வேதனைக் காட்சியை ஓர் இசைப்பாடலாக எழுதி இருந்தார் கவிஞர் நவகவி. அதன் உணர்வில் கலந்து, உணர்ச்சியில் கரைந்து அசாத்திய பாவங்களோடு அந்தப் பாடலைக் கலை இரவு மேடைகளில் பாடுவார் கரிசல் குயில் கிருஷ்ணசாமி.

“….அம்மனிதர்களின் ஒரு மழை இரவைத் தன் கண்ணீர்த் துளிகளால் கவிஞர் நவகவி எழுத, நம் கரிசல்குயில் கிருஷ்ணசாமி அதைப் பாடியிருந்தார். பாடகனின் அடிவயிற்றிலிருந்து எழும்பும் அழைப்பை எளிதில் கடந்துவிட முடியாது. கேட்கும் போதெல்லாம் தொண்டை அடைத்து, விம்மி அழ வைக்கிறது”

என்று எழுத்தாளர் ஜா மாதவராஜ், தமது தீராத பக்கங்கள் வலைப்பூவில் எழுதி இருந்தார்.

இலைகள் அழுத ஒரு மழை இரவு
எலும்பும் உறைந்துவிடும் குளிர்ப்பொழுது

என்று தொடங்கும் பல்லவியே கேட்போரை பாதிக்கும். இலக்கிய வருணனைகள் வேறு உலகம். ஏழை பாழைகளின் அன்றாடப் பாடுகள் மற்றொரு தளம். நவகவியோ, இரண்டையும் தேர்ச்சியாகப் பின்னிப்பிணைந்தே எழுதிச்செல்கிறார் இந்தப் பாடலை.

‘நிலவை மூடக் கரு முகிலைப் போர்வை என வானம் வழங்குகிற நேரம்’ என்ற வரியின் கற்பனை எங்கே, அடுத்த வரியில், ‘ஒருவர் உடலை எடுத்தொருவர் போர்த்தி இரு சிறுவர் அதோ தெரு ஓரம்’ என்ற வரியில் கொதிக்கும் உள்ளம் எங்கே! இந்த வரிகளைப் பாடுகிறாரா, இதயத்தில் இழையெடுத்துத் தைத்துவிடுகிறாரா என்று பிடிபடாத வசத்தில் இசைப்பார் கிருஷ்ணசாமி.

இரண்டாவது சரணத்தில், கூட்டுக் குருவிகளின் கதகதப்பில் குஞ்சுப்பறவைகள் தூங்குவதைச் சொல்லி, ‘நாட்டுப் பாதைகளில் வாட்டும் வாடைகளில் அனாதைக் குழந்தைகள் ஏங்கும்’ என்ற வரியில் உணர்ச்சிகளின் ஓட்டத்திற்கேற்ப கரிசல் குயில் அபாரமான சங்கதிகளைப் போட்டுப் பாடி இருப்பார்.

அதன் நீட்சியில், ‘சாலையில் மைல்கல் சாயம் மங்கியதும் வர்ணம் தீட்டுவார் இங்கே, இந்த ஏழைப் பூக்களை மையிட்டுப் பொட்டிட்டுச் சிங்காரம் செய்பவர் தான் எங்கே’ என்று கொண்டு நிறுத்தும் இடத்தில் உள்ளத்தைக் கரைப்பார் கிருஷ்ணசாமி. ‘சாயம் மங்கியதும் வர்ணம் தீட்டுவார் இங்கே’ என்று ஓங்கி அந்த வரியை அசாத்திய மூச்சுப் பயிற்சியோடு குழைப்பார் அவர். ‘மையிட்டுப் பொட்டிட்டு’ என்ற சொற்களை அவர் இசைக்கும் விதம், ‘எங்கே’ என்ற சொல்லில் உருட்டும் சங்கதிகள் யாவும் கேட்போர்ப் பிணிக்கும் தகையவாய் அமைந்திருக்கும்.

மூன்றாம் சரணத்தில், ‘கொடியில் அரும்பு பனியில் வாடாமல் இலைகள் மூடும்’ என்ற இலக்கிய வருணிப்பில் இருந்து, ‘ஏழை அரும்புகளை வஞ்சித்து விட்டு ஆயிரம் கொடித்துணி ஆடும்’ என்று பம்மாத்து அரசியலையும் சாடி இருப்பார் நவகவி.

அதன் தொடர்ச்சியில், ‘உடலில் ஊறி வரும் உதிரம் முழுவதும் என் விழியினில் ஊறி வரும் தோழா’ என்ற வரியில், ‘தோழா’ என்ற இடத்தில் கரிசல் குயில் எட்டும் உணர்வுகளின் உயரம் சிலிர்க்க வைத்துவிடும். அந்த இரவினில் கண்ட காட்சியில் என் இதயம் நோகுது வெகு நாளா’ என்ற வரியில் பாடலாசிரியரும், பாடுபவரும் ஒன்றாகிக் கரைந்துவிடுவதை, கரிசல் குயில் குரலில் உணர முடியும். அந்த வெகு நாளா என்பது நாள்பட ஒலித்துக் கொண்டே இருக்கும் காதுகளில்.

இந்த சமூகப் பிடிமானம், காலை பூமியில் ஊன்றி நின்று பார்த்து எழுதுபவர்களுக்கு ஏற்படவே செய்யும். அதையும் பேசுகிறது இசை.

புத்தாண்டு விடிகிறது. பழைய ஆண்டு விடை பெற்றுச் செல்கிறது. எத்தனையோ சோகங்களையும், தவிப்புகளையும், சவால்களையும் எடுத்து வைத்த 365 நாட்கள் நிறைவு பெற்று, அடுத்த 365 தொடங்குகிறது. இருந்தாலும், மனிதர்கள் புத்தாண்டின் மலர்ச்சியில் நம்பிக்கை வருவித்துக் கொள்கின்றனர். பரஸ்பரம் வாழ்த்து பரிமாறிக் கொள்கின்றனர்.

சமூகவயப்பட்டுத் தான் இருக்கிறது வாழ்க்கை. ஆனாலும், ஏதோ ஒன்று நம்மை ஒற்றை ஒற்றையாக நிற்க வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. அதன் குரலுக்கு செவி மடுக்காது ஒன்றுபட்டு எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே நம் சிந்தனையாக இருக்கட்டும்.

இசை புத்தாண்டின் நாதத்தை எழுப்புகிறது. உள்ளத்தைத் தொடும் இசை. உணர்வுகளோடு பேசும் இசை. உண்மையின் பக்கம் நிற்க வைக்கட்டும் ! உண்மை, உள்ளத்தின் உன்னதமான இசை அல்லவா….

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

Music Life Series Of Cinema Music (Pattu Nammai Adimai Endru Vilagavillaiye) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 



டிசம்பர் 2019, மாதம் பிறந்தவுடனே அப்பாவை எப்போது போய்ப் பார்த்து ஆசி பெற்று வருவது என்று யோசிக்கத் தொடங்கி இருந்தேன், அறுபது வயது நிறைவு செய்யும் நாள் அந்த மாதம் 24ம் தேதி. விமரிசையாக அதைக் கொண்டாட ஒரு தந்தையின் மனத்திற்குள் எத்தனை ஆசைகள் இருப்பினும், அதற்கெல்லாம் உடன்பட மாட்டாதவனை நேசிக்கும் அளவு அந்த மனம் விசாலமாக இருந்தது. இப்போது இசை வாழ்க்கை என்னும் இந்தத் தொடர் அறுபது அத்தியாயங்கள் நிறைவு செய்கிறது. அதில் ஒரு தற்செயல் ஒற்றுமை உண்டு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிறைவு நேரத்தை நூல் வெளியீடு மூலம் கொண்டாடுவோம் என்ற முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, டிசம்பர் 25: கீழ வெண்மணி தினத்தன்று, தேவநேய பாவாணர் மத்திய நூலக அரங்கில் முதல் பிரதி பெற்றுக்கொள்ள எங்கள் அன்புத் தந்தை வந்திருந்தார். அந்த இரண்டு நூல்களில் ஒன்று, உதிர்ந்தும் உதிராத எனும் புகழஞ்சலி கட்டுரைகளின் தொகுப்பு. படைப்புக் குழுமம் அமைப்பின் சிறப்புப் பரிசுக்கு அந்த நூல் தேர்வாகி இருக்கும் செய்தி அண்மையில் வந்ததுதந்தையின் நினைவுகளுக்குப் படைக்கப்படுகிறது, மகாகவி பாரதி பிறந்த நாள் அன்று நடைபெறும் விழாவில் கிடைக்கப்பெற இருக்கும் அன்பு

இசைப் பித்து, ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று தான் தோன்றுகிறது. இசைப்பாடல் புனையும் ஆர்வமும்! எண்பதுகளில், சென்னை கலைக்குழு நாடகங்கள் பார்க்க வாய்த்த போது, இசைப்பாடல்கள் மீது மீண்டும் கூடுதல் கவனம் குவிந்தது. வறுமை, வேலையின்மை, ஆலை மூடல், வரதட்சணைக் கொடுமை இன்ன பிற சாதாரண மக்கள் வாழ்வை அதிகம் கவ்விப்பிடித்து வந்த காலமது. அலுவலகம் போய்க் கொண்டிருந்தபோது, புறநகர் ரயில் பயணத்தினூடே மனத்தில் தோன்றிய இந்தப் பாடலை மனத்திற்குள் ஓயாமல் இசைத்துக் கொண்டிருந்த நாட்கள் இப்போது நினைவில் வந்து நிற்கிறது.

ஏனோ தெரியல, கடிதம் எழுதலஎன்பது தான் பல்லவியின் தொடக்கம். காதலிக்கு ஒருவன் வரையும் கடிதம் போல் எழுதப்பட்டது. அதிலேயே அவனது குடும்ப கஷ்ட நஷ்டங்களை அவன் அவளுக்குக் கடத்துகிறான்.

ஏனோ தெரியல
கடிதம் எழுதல
எழுதத் தெரியாமல் அல்ல
ஏதும் விசயம் இல்ல..
                         – ஏனோ தெரியல

ஆலயத் தொறக்கல
அப்பா வேலக்கிப் போகல
அன்னாடம் இருமி இருமி
அம்மா இன்னும் சாகல
                    – ஏனோ தெரியல

சீரு கொறஞ்சதாலே
சின்னவ திரும்பிப் போகல..
சீமெண்ண ஸ்டவ்வுல அக்கா
செத்தத யாரும் மறக்கல

                – ஏனோ தெரியல

மூன்றாவது சரணம் இருந்திருக்க வேண்டும், இந்தச் சூழலை விவரிக்கும் அவன், அவளுக்குச் சொல்ல விரும்பும் சேதியை அது ஏந்தி வரும். அதை யோசித்து அப்படியே விட்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது. இப்போது அதை இப்படி முடிக்கலாம் என்று படுகிறது

பாடுகள் கொறையல
பட்ட துன்பம் மனசுல
ஓடுது வாழ்க்கையின்னும்
ஒன் நெனப்பு உசுருல 

 நிறைவில் பல்லவி கொஞ்சம் மாற வேண்டி இருக்கும், இப்படி:

ஏனோ தெரியல
இனிமே  வருந்தல
எதற்கும் போராட வேண்டும்
என்று நீ தான் சொன்ன!

               – ஏனோ தெரியல

துயரங்கள், சோகங்கள், ஆற்றாமைகள் எப்படி உண்மையோ, மாற்றங்களுக்கான நம்பிக்கையும், போராட்டங்களும் கூட உண்மை தான். குழந்தைப் பருவத்திலிருந்தே எதிர்ப்புணர்ச்சி இயல்பான குணம். குழந்தை நிறைய கேள்விகளோடு உலவுகிறது. வளர்ந்தவர்கள் அந்தத் தீயை ஊதி மேலும் எரியச் செய்ய வேண்டும். பதில் சொல்லும் சாமர்த்தியத்தில் இறங்குகிறோம், பதில் தெரியாதபோது அடக்கி விடுகிறோம். அணைந்து பொசுங்கிவிடுகிறது குழந்தை மனம்.கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் சங்கிலித் தொடரான அடுத்தடுத்த கேள்விகள் தான்அடுக்கடுக்காகக் குழந்தைகள் பெரியவர்களைக் கேள்விகளால் வளைப்பதை, குழந்தைகள் மாநாடு என்ற கட்டுரையில் கொண்டு வந்திருப்பார் எழுத்தாளர் கல்கி.

கேள்விகள், சமூகத்தை நம்பிக்கை நெம்புகோலாக முன்னோக்கி நகர்த்துகின்றனஆயிரத்தில் ஒருவன் (1965) திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே சிறப்பானவை என்றாலும், இரண்டு பாடல்கள் காலத்தில் எப்போதும் நிலைத்து நிற்கும் தன்மை பெற்றவை. ஒன்று, விடுதலை கீதம், ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்‘. இன்னொன்று, அதை நோக்கிய தயாரிப்பு, ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை‘.

ஒன்று கண்ணதாசன், மற்றது வாலி. விஸ்வநாதன்ராமமூர்த்தி பிரிவதற்குமுன் இசையமைத்த படம் அது

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லைஎன்பது, ‘கஞ்சி குடிப்பதற்கு இலார், அதன் காரணங்கள் இவை எனும் அறிவும் இலார்என்று நெஞ்சு பொறுக்க முடியாமல் குமுறிய மகாகவியின் ஏக்கத்தைப் போக்கும் உழைப்பாளிகளின் குரல். மிக எளிய மனிதர்கள், தங்களை ஆதிக்கம் செய்வோரைத் தட்டிக் கேட்கும் உணர்வை அவர்களுக்குள் எழுப்ப வேண்டும் என்பதே முக்கியம். அதை ஓர் இசைப்பாடல், அந்தக் கதையோட்டத்திற்காக வழங்கினாலும், அதன் முக்கியத்துவம் அதைக் காலம் கடந்து பேச வைக்கிறது

https://www.youtube.com/watch?v=OKLvOxfBJ1Q

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலேஎன்பதும், ‘உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலேஎன்பதும் பல்லவியின் தொடர்ச்சியில் முக்கியமான அடிகள். ‘ ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமேஎன்ற வரி, எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொள்வதைக் குறிப்பிடுவதில்லை, நீடித்த போராட்டங்களிடையே சோர்வு கவ்வ, இடம் தந்துவிடக் கூடாது என்று கூறுவதாகத் தான் படுகிறது. அதுவும், ஓராண்டு விடாப்பிடியான போராட்டத்தில் இன்று முதல் கட்ட வெற்றி பெற்றுள்ள விவசாயிகள் நடத்திய சமர் அதைத் தான் விளக்குகிறது. இடையே இந்தப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளத் திணறியவர்கள், இதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்காது என்று கடந்து போனவர்கள், ஏன் வீணாக அங்கே போய் உட்கார்ந்து என்ன நடக்கும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏளனமாகக் கூட விமர்சித்தவர்கள் எல்லோரையும் இப்போது வாயடைத்து அமர வைத்துவிட்டது அல்லவா, இந்த எழுச்சி!

வருங்காலத்திலே நம் தலைமுறைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமேஎன்கிற வரி, அபாரமானது. சமூக மாற்றத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட உன்னதத் தலைவர்களது நூற்றாண்டுகள் நம்மைக் கடந்து செல்லும் இந்த நேரத்தில், அவர்களுக்கு ஆதர்சமாக விளங்கிய அவர்களது முன்னோடிகளது வாழ்க்கை குறித்த சித்திரத்தையும் கண் முன் கொண்டு நிறுத்துகிறது இந்த வரி!

இரண்டாவது சரணம், ‘நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும் மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்என்பது பருவச் சுழற்சியை வைத்து, காலச் சுழற்சியைச் சுழல வைக்கும் கவிஞரின் திறமையை அனுபவிக்கக் கொடுக்கிறது. ‘நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம்என்கிற அடுத்த வரியின் அழுத்தம் இதை பளிச்சென்று எடுத்துக் காட்டுகிறது

முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலேஎன்பது, செல்வத்தை உருவாக்குவோர் கார்பொரேட்கள் என்ற இப்போதைய ஆட்சியாளர்களது அபார அபத்த அராஜக தத்துவத்திற்கு நேர் எதிரான உண்மையை இன்னும் காலங்களுக்குப் பேசிக் கொண்டிருக்கும். அதற்கும் அடுத்த வரி இன்னும் அழகானது: ‘கடமையைப் புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலேஎன்பது. தொழிலாளிகள் உழைப்பின் கூலியில், அதையொட்டிய அற்ப மகிழ்ச்சியில் நிறைவு அடையவேண்டும் அல்லது அதன் காரணங்கள் புரியாமல் தவறான தத்துவங்களுக்கு ஆட்பட்டு விதியை நொந்து சாக வேண்டும் என்பதைக் கடந்து, விடுதலைக்கான குரலை எழுப்புவது பாட்டாளிகளின் புரட்சி தத்துவ தரிசனம் என்பதை, ஒரு திரைப்பட வரையறைக்குள் நின்று புனையப்பட்டு இருந்தாலும், இந்தப் பாடல் நின்று பேசுகிறது என்பது சுவாரசியமானது.

டி எம் சவுந்திரராஜன் மொத்தத் கருத்தோட்டத்தையும் உள்வாங்கி இந்தப் பாடலின் வலிமையான தத்துவத்திற்கேற்ற குரலை, முழக்கத்தை, அழுத்தங்களை அத்தனை அசாத்தியமாகக் கொண்டு வந்திருப்பதும், இசையமைப்பாளர்களின் சிறப்பான இசைக்கோவையும் கொண்டாட வேண்டியது.

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்என்பது ஓர் அதிரடி பல்லவி தொடக்கம். அதற்கு ஏற்ற நிரல் நிரை போல, ஒரே வானிலே ஒரே மண்ணிலே என்று வருகிறது அடுத்த அடி. பறவைக்கு வான் போல, கடல் அலை புரண்டோட மண் போல.

அடிமை என்கிற உணர்வை மனதளவில் உதறித்தள்ளி, சங்கிலிகளை மானசீகமாக நொறுக்கித் தகர்த்துக் குதித்துக் கொண்டாட்டப் பேரெழுச்சியோடு குரலெடுக்கும் உணர்வுகளை மெல்லிசை மன்னர்கள் அப்படியே இசையில் எப்படி பிரதியெடுத்தனரே என்பது தான் அவர்களது இசை வாழ்க்கையின் மகத்துவம்

பீறிடும் உற்சாகக் கும்மாளக் கூக்குரலாக அந்த டிரம்பெட் முழக்கம், கடலின் அலைகளை விடவும் வேகமாக இழையும் வயலின் வில்லிசைப்பு, அடிமைகளையும், அவர்களது கனவுகளையும், காதலையும் தாங்கிப் பயணம் செய்யும் அந்த மிதவை போலவே பாடலின் தொடக்கத்திலிருந்து நிறைவு பெறுவதுவரை பிடிமானம் கொடுக்கும் தாளக்கட்டு. பாடலின் சந்தத்திற்கேற்ப ஒலிக்கும் மெலிதான மணியோசையும், உரத்த கோரஸ் குழுவினரின் அபாரமான ஹம்மிங்கும், சுழன்று சுழன்று கூத்தாட வைக்கும் பாடல் அது

https://www.youtube.com/watch?v=vVGLniSY8Qk

பல்லவி என்ன, சரணங்கள் என்ன, பாடல் வரிகளின் பொருளுக்கேற்ற பாவங்கள் என்ன, இசையமைப்பாளர் பாடத்திற்கேற்ற சங்கதிகள் என்ன, சுவாரசியமான குரலினிமை என்ன, டி எம் சவுந்திரராஜனின் முத்தான பாடல்கள் வரிசையில் முக்கியமான ஒன்றாக அமைந்தது இது

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே, கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையேஎன்ற முதல் சரணத்தின் தெறிப்பு அடுத்த வரிகளில் மேலும் சிறக்கிறது. ‘காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையேஎன்ற இடத்தை வசீகரமாக வளைக்கும் டி எம் எஸ், ‘காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதிலையேஎன்ற அடுத்த வரியை இன்னும் உருக்குவார். ‘தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையேஎன்ற இரண்டாவது சரணத்திலும் கண்ணதாசன் அடிமை ஒருவன் சமூகத்தை நோக்கி எழுப்பும் தப்பமுடியாத கேள்விகளை அடுக்குகிறார். பிறப்பு, பசி, காதல், இன்பம், துன்பம், மரணம் எல்லாம் எல்லா உயிர்க்கும் பொது தானே, என்ன நீ உயர்ந்துவிட்டாய் என்னை ஒடுக்குவதற்கு, என்ன நான் தாழ்ந்துவிட்டேன் உன்னிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு என்று வெடித்தெழும் கேள்விகளை அத்தனை கவித்துவமாகக் கவிஞர் புனைந்திருந்தார்.

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலைஎன்பது உழைப்பாளி ஒருவரின் இதயத்துடிப்பு. அந்த சரணம் முழுக்கவே எளிமையான வரிகளில் உன்னதமான இலட்சியத்தைப் பேசி இருப்பார் கண்ணதாசன். தனக்காக மட்டுமல்ல, ‘அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலைஎன்பது எப்பேற்பட்ட பிரகடனம்.

டிசம்பர் 6 அன்று அமர்ந்து இந்த வார இசை வாழ்க்கையை எழுதி முடிக்கையில், மாமேதை அம்பேத்கர் நினைவு நாளோடு இந்த இரு பாடல்களும் அத்தனை அருமையாகப் பொருந்துவதை கவனிக்க முடிகிறது

அய்ரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்து மக்கள், தங்கள் குடியிருப்புக்கு ஜெய் பீம் பெயரிட்டு இருப்பதை, சில ஆண்டுகளுக்குமுன் பர்தீப் சிங் ஆட்ரி எனும் எழுத்தாளர் நேரில் சென்று பார்த்துவந்து எழுதி இருந்தார். 2009ல் வாசிக்கக்  கிடைத்தஹங்கேரியில் அம்பேத்கர்எனும் அந்தக் கட்டுரை புதிய செய்திகளை வழங்கியது. பாரீஸ் நகர புத்தகக் கடை ஒன்றில் பார்த்த பீம்ராவ் அம்பேத்கர் புத்தகம் ஒன்றை வாங்கி வாசித்த எழுச்சியில் அவர் தான் எங்களுக்கும் நாயகர் என்று கண்டடைந்தோம் என்று சொல்லி இருக்கின்றனர் அந்தக் குழுவினரின் தலைவர்கள்

https://www.thehindu.com/features/magazine/Ambedkar-in-Hungary/article16893578.ece

எல்லா வித ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலைக்கான குரல் தான் பாபாசாகேப் எழுப்பியது. இசைத்தது என்றும் சொல்ல முடியும். கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர் என்பது ஓர் இசைப்பாடல் உருவாக்கத்திற்கான வழிமுறை என்றும் கொள்ள முடியும். விடுதலைக்கான இசையைச் சேர்ந்திசைப்போம்!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Ithu Vasantha Kalamo En Isaiyin Kolamo) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்




மழை வாழ்க்கை இன்னும் தொடர்கிறது. வாழ்க்கை மழையைப் பார்த்து மலைத்து நிற்கிறது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’ என்று பாடியது போல், தேங்கும் மழை நீரை வாங்கும் வழியின்றித் தவிக்கிறது மாநகரத்தின் மக்கள் கூட்டம்.

இசைப்பாடல் ஒன்றோடு போதுமா, எங்கே அடுத்த பாடல் என்று மாணவி கேட்டார். இதென்னடா வம்பாய்ப் போச்சு என்று உடனே அடுத்த பாடல் ஒன்று புனைந்து அவருக்கு அனுப்பி வைத்தேன்.

மழையோ என்று எட்டிப் பார்த்தேன்
மழை தான் மழை தான் மழையே தான்
பொழியாதென்று எண்ணி இருந்தேன்
மழை தான் மழை தான் மழையே தான்

உறக்கம் கலைந்து காலடி கேட்டு
உள்ளம் சிலிர்க்கக் கதவு திறந்தேன்
அவள் தான் அவள் தான் அவளே தான்
மழையோ என்று எட்டிப் பார்த்தேன்…….

இது தான் பல்லவி….
இப்போது எட்டிப் பார்த்தாலும், குட்டிக் கரணம் அடித்தாலும், வீடு திரும்ப முடியாத படி அடித்துக் கொண்டிருக்கிறது விட்டு விட்டு மழை. பள்ளிக்கூட நாட்களில் ஆசிரியர் அல்லது ஆசிரியர்களில் சிலர் அடியடி என்று அடித்துவிட்டுத் தனது இருக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பார்கள் (என்று நினைத்துக் கொண்டிருக்கையில், திடீர் என்று திரும்பி) அதே மாணவரைப் போய் இன்னும் கடுமையாக அடிப்பதுபோல் அடித்து நிமிர்த்துகிறது மழை.

வேடிக்கை என்னவென்றால், மழைக்காகப் புதிய நாள்காட்டி தயார் செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மிதமான, நடுத்தரமான, கனமான, அதி கனமான நாட்களாகவே இருக்கும் போலிருக்கிறது வருகிற நாட்கள்.

முதல் மழைக்கும் இரண்டாம் மழைக்கும் இடைப்பட்ட மழை நாள் ஒன்றில், புதிய ஆசிரியன் வாசகர்கள் குழுவில், சகாயராஜா அவர்கள் பகிர்ந்திருந்த காணொளிப் பதிவு, ஆஹா…ஆஹா…. உள்ளபடியே, அக்டோபர் 2020ல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இயக்கத் தோழர் ரமணி, முக நூல் இணைப்போடு அனுப்பிய, இதே காணொளிப் பதிவை அப்போது பார்க்கத் தவறி இருக்கிறேன், இந்தப் பாவங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை!.

1970களின் பிற்பகுதியில் மிகவும் கொண்டாடப்பட்ட இந்திப் பாடல்களில், மகத்தான இசைப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களது அசாத்திய குரலினிமையில் உரக்க ஒலித்துக் கொண்டே இருந்த திரைப்பாடல் அது. லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் கோரஸ் முழங்க, சத்யம் சிவம் சுந்தரம் படத்தின் அந்தப் பாடல், அடுத்தடுத்த தலைமுறை இளம் பாடகர்களும் முயற்சி செய்து கொண்டே இருக்கும் பாடல்களில் ஒன்று.

https://www.youtube.com/watch?v=FLzhXNayLJo

ஆர்யானந்தா, கேரளத்துச் சிறுமி. இந்தி அத்தனை சுத்தமாகப் பேச வராதாம், ஆனால், மிகப் பெரிய சபையில், எண்பது வயதான பியாரிலால் முன்னிலையில் (லட்சுமிகாந்த் இப்போது இல்லை), லதாவின் நுட்பமான சங்கதிகள், நுணுக்கமான இழைத்தலும், குழைத்தலும் பொதிந்த பதங்கள் அப்படியே அபார ஆற்றலோடு, தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் மிளிர இந்தச் சிறுமி பாடப்பாட (குமார் சாணு, உதித் நாராயணன், என்னால் முகங்கள் வைத்து அறிய மாட்டாத வேறு பிரபலங்கள்) பாடலை இசையமைத்த பெரியவரின் மின்னல் தெறிக்கும் கண்களால் கொண்டாட்ட வரவேற்பு கிடைக்கும் காட்சி சிலிர்க்க வைத்தது.

ஏற்கெனவே பலமுறை கேட்டு ரசித்த பாடலை அதே பாவங்களோடு (க்யா ஃ பீல் ஹை என்று இடையே இடையே ஒலிக்கும் குரல்கள் கேளுங்கள்) உணர்ச்சிகரமாக ஓர் இளம் பாடகர் இசைக்கும்போது, ரசிகர்கள் உள்ளம் ஆரவாரிக்கிறது. ஓர் இசைப்பொழிவை அதன் தரத்திற்கேற்ற பாராட்டு எதிர்கொள்வதும் மழைப்பொழிவு அன்றி வேறென்ன… கனமழை பார்த்தாயிற்று அல்லவா, மென் தென்றல் பாட்டு ஒன்று காத்திருக்கிறது அடுத்தது. அது வந்து சேர்ந்த கதை சுவாரசியமானது.

புலவர் கீரன் பேசப் பேச அப்படியே மலைத்துப் போய்ப் பார்த்த நாட்கள் மறக்காது. கல்லூரித் தொடக்க காலம் அது. ஒரு கூட்டத்தில் சொன்னார், ‘எனக்கு கந்த புராணம் தலைகீழ்ப் பாடம். கம்பராமாயணம் அத்தனை முறை படித்திருக்கிறேன். இதை கர்வமாகச் சொல்லவில்லை, ஒரு நிகழ்ச்சியில் பள்ளி மாணவி ஒரு செய்யுள் இசைக்கிறாள், அதன் சொற்களைக் கேட்டு, கம்பன் எழுதியது தான், இந்த காண்டத்தில் இந்த இடத்தில் ஒருவேளை அது வந்திருக்கும் என்று உத்தேசமாகத் தான் நினைக்க முடிந்ததே தவிர பளிச்சென்று நினைவுக்கு வரவில்லை. அப்போதெல்லாம் செருக்கு கொஞ்சம் அடங்கும்’.

எனக்கு கர்வம் வருகிற அளவுக்கு இசைப்பாடல்கள் தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனாலும், தெரிந்த பாடல்கள் யாராவது குறிப்பிடும் போது, ஒரு மிதப்பு தோன்றி மறையும். அந்த மிதப்பு உணர்வு அவ்வப்பொழுது அடி வாங்கும், ஆனால், அது சுவாரசியமான அனுபவமாகவே இருக்கும். அந்த மிதப்பு அப்படியோர் அடி வாங்கியது, இந்த வாரம்!

பண்பலை கேட்க கார்ட்ஸ் இல்லை என்று அலைபேசியில் யூ டியூப் தொட்டெடுத்து, காலைப் பொழுதுக்கான பாடல்கள் என்ற வரிசையில் பாடல்கள் ஒலிக்கக் கேட்டபடி இருந்த என் வாழ்க்கை இணையர் தோழர் ராஜி, சமையலறை வேலையில் இணைந்த என்னிடம், ப்பா…இந்தப் பாட்டு தெரியுமா, உங்களுக்கு…அய்யோ கேளுங்களேன்” என்றார்.

அடடா….எஸ் ஜானகியின் அபாரமான பாடல்களில் ஒன்றான அதைக் கேட்ட நினைவே இல்லை. சங்கர் கணேஷ் இசையில், புலவர் புலமைப்பித்தன் அவர்களது அருமையான இசைப்பாடல் அது. எப்படி நழுவ விட்டேன்!

காலையில் மட்டுமல்ல எப்போது கேட்டாலும், அதிகாலைப் பொழுதில் கேட்போரைக் கொண்டு குடிவைக்கும் குரலில் அப்படி பாடி இருக்கிறார் ஜானகி. பறவைகளின் உறக்க முறிவில் பிறக்கும் நேயமிக்க கீச் கீச், குக்கூ நம்மைப் போர்வையை உதறிப் போட்டுப் பார்க்க தேவைப்படுகின்றன. ஊடே குழலிசை கண்ணைத் திறந்து தேட வைக்கின்றது. அப்போது யாரோ நம்மைப் படுக்கையிலிருந்து எழுப்ப, காதருகே வந்து சிலிர்க்கவைக்கும் இரகசிய குரலில் சொல்கிறார்கள்: காலைப் பொழுது….என்று. என்னவாம் காலைப் பொழுதுக்கு என்று நாம் கேட்கிறோம் என்றால், விடிந்தது என்று பதில் வருகிறது, அதற்கு என்ன, இன்று மட்டும் எப்படி விடிந்ததாம் என்று கேட்போம் என்றால், என் நெஞ்சத்தைப் போலே என்று பளீர் என்று பதில் வருகிறது. பார்ரா ….

‘காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே …..’ என்ன ஒரு பல்லவியின் தொடக்க வரி. அப்புறம்? ‘சோலை மலரும் மலர்ந்தது…’.அது எப்படியாம்? என் கண்களைப் போலே’ ! அப்படி என்றால் இது என்ன காலம், ‘அது வசந்த காலமோ, என் இளமைக் கோலமோ’ என்கிறாள் அந்த இளம் பெண்.

புலமைப் பித்தன் காதல் பாடல்களை இயற்கையோடு இயைந்து எழுதுவதில் எத்தனை தேர்ச்சி பெற்றவர் என்பதன் சாட்சியமாக அமைந்த பாடலின் பல்லவியில் இருந்து காலைப் பூக்களில் வந்து அமரும் தேனீ போல் சுறுசுறுப்பாகவும், வண்ணத்துப் பூச்சி போல் நிறங்களின் கலவையாகவும், வண்டாக ரீங்கரிக்கவும் செய்கிறது ஜானகியின் குரல்.

அந்த ‘காலைப் பொழுதை’ அவர் இஷ்டம் போல் விரிவாக்கவும், மடித்து வைத்துக் கொள்ளவும், சட்டென்று சிமிட்டிப் பார்க்கவுமாக பாடல் நெடுக விதவிதமாக இசைப்பதைக் கேட்கமுடியும். அதே போலவே,என் நெஞ்சத்தைப் போலே வரும், போலே அவருக்கு ஒரு ஸ்கிப்பிங் கயிறு போல வாகாக வளைத்துக் குதிக்க வைப்பதைத் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டே இருக்க வைக்கும்.

பாடல் முழுவதும் தாளக்கட்டு அந்தக் காலைப்பொழுதைக் களைகட்ட வைக்கிறது. தபேலா மட்டுமல்ல, சரணங்கள் இடையே மிருதங்க இசை கூட ஒலிப்பது போல் தெரிந்தது. வயலின்களும், புல்லாங்குழலும், இன்ன பிற இசைக்கருவிகளும் எஸ் ஜானகியின் குரலில் மயங்கிக் குரலோடு இயங்கி வழங்கி வரும் இசை, கேட்பவர் கால்களும் தம்மையறியாமல் தாளத்தில் இணையவைக்கும்.

‘இளைய தென்றல் மென்காற்று எனக்குச் சொல்லும் நல்வாழ்த்து’ என்ற முதல் சரணத்தின் அடுத்த அடி, ‘அருவி கூட தாளக்கோட்டில் அசைந்து செல்லாதோ’ என்று இழைக்கிறது. அத்தனை துள்ளோட்டமாக இந்த முதல் வரிகளை மெட்டமைக்கும் சங்கர் கணேஷ், அடுத்து, ‘முகத்தில் சிந்தூரம், மனசில் சந்தோஷம், சகல சௌபாக்கியம் நிலைக்கும் எந்நாளும் ‘ என்று இரட்டை இரட்டை பதங்களாக நான்கு அடிகளில் இளம்பெண்ணின் குதூகலமான உள்மனத்து உரையாடலை மேலும் மென்குரல்களில் பாடவைக்கிறார் ஜானகியை.

சரணத்திலிருந்து பல்லவிக்கு மீளும் இடத்தில் ஜானகியின் ஊஞ்சலாட்டம் தொடர்கிறது. அதில் சோலையின் சோவில் ஒரு புது சுகம் வைக்கிறார், அந்த மலரும் மலர்ந்தது என்பதில் சங்கதி சேர்த்து ஒய்யாரமாக மேலும் மலரவைக்கிறார். வசந்த காலமோ, என் இளமைக் கோலமோ என்ற வரிகளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நகாசு வேலையோடு மின்ன வைக்கிறார்.

இரண்டாம் சரணத்தில், ‘மதுரை அன்னை மீனாட்சி மனது வைக்கும் நாளாச்சு அமிர்தயோகம் நாளை என்று எழுதி வச்சாச்சு’ என்ற வரிகளில் அப்படியோர் ஆர்ப்பரிக்கும் மனத்தை எடுத்து வைக்கிறார் ஜானகி. இதற்கு அடுத்த கட்டம் முகமும் அகமும் மேற்கொள்ள வேண்டிய அலங்காரத்தை, ‘விழியில் மையோடு வளையல் கையோடு ஒருவன் நெஞ்சோடு உறவு கொண்டாடு’ என்று படைத்திருக்கிறார் புலமைப்பித்தன். மூன்றாம் சரணம் உணர்வுகளின் அடுத்த கட்ட பொங்குதல். நினைப்பது நடப்பதும் அது இன்பமாக நிலைப்பதும்!

பாடலின் சொற்களுக்கு ஜானகி வழங்கும் உயிரோட்டமும் உணர்வூட்டமும் உணர்ச்சியாற்றலும் அபாரம். காலைப் பொழுதில் உற்சாகம் ததும்பும் உளவியலை வீச்சாகக் கொண்டு போகிறது அவரது குரலும், உடன் ஒட்டிய நிழலாகவே தொடரும் இசையும். நிறைவாகப் பல்லவியை வந்தடையும் போது, அதே ரகசியக் குரலில், ‘காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே’ என ஒயிலாக வடிப்பது அத்தனை அம்சமாக இருக்கும்.

படத்தில் இடம்பெறும் காட்சியை விடவும், ஆடியோ மட்டும் கேட்கும் யூ டியூப் பதிவே சிறப்பாக ஒலிக்கிறது, எனவே அந்த இணைப்பை இங்கே தந்திருக்கிறேன்.

ராஜராஜேஸ்வரி படத்தில் சுஜாதா இந்தப் பாடலுக்கு வடிக்கும் பாவங்கள், ஒரு சிறப்பான திறன் படைத்திருந்தும் முழுமையாகத் திரையில் அதை வெளிப்படுத்த வாய்ப்பு வாய்க்காத திரைக் கலைஞரில் ஒருவர் அவர் என்று மீண்டும் ஒரு முறை மனத்தில் தோன்றியது.

https://www.youtube.com/watch?v=tlOueWXb1KA

பாடல் காட்சியைப் பார்க்க விரும்புவோருக்கு இந்தக் காணொளிப் பதிவு பயன்படும்.

காலைப் பொழுது விடிந்தது எப்படி இருந்தாலும், இந்த நவம்பர் 19 அன்று ஒன்பது மணிக்குப் பிறகு காதில் விழுந்த செய்தி அன்றைய பொழுதை மேலும் இன்பமயமாக்கியது! ‘நினைத்த தெல்லாம் நன்றாகும், நிலைத்த இன்பம் உண்டாகும், மனசு போல வாழ்க்கை என்று உலகம் சொல்லாதோ’ என்று மூன்றாம் சரணத்தில் சொற்களை புலவர் அடுக்கி இருந்தது எத்தனை பொருத்தமானது!

எல்லா இடர்ப்பாடுகளையும், தாக்குதல்களையும், அவதூறுகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளையும், கண்ணீர்ப் புகை வீச்சு, தடியடி அராஜக நடவடிக்கைகள் எல்லாம் எதிர்கொண்டு இந்திய விவசாயிகள் தங்கள் அமைதியான, உறுதியான, விடாப்பிடியான போராட்டத்தின் வாயிலாக ஏற்படுத்திய தாக்கம், மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து என்று பிரதமரை அறிவிக்க வைத்தது.

‘இனிய சங்கீதம், இதயப் பண்பாடு, தினமும் நன்னாளே, எதிரில் கண்டேனே…..காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போ….லே…..’ என்று மாற்றத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை மலர ஒவ்வொரு நாளும் அந்தப் போராளிகள் பாடிக்கொண்டிருக்கின்றனர் என்றே தெரிந்தது. இந்த வார இசை வாழ்க்கை, அவர்கள் வெற்றிக்குப் படைக்கப்படுகிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Dhegam thazuvum isaikatru) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன் 




உள்ளபடியே இந்த நாட்கள் மழை வாழ்க்கை தான். சென்னை பெருநகரம், மழைக்குத் தன்னை இன்னும் தகவமைத்துக் கொள்ளாத நகரம். மாறாக, ஒவ்வொரு விரிவாக்கமும், நவம்பர் – டிசம்பர் மாதங்களின் வருகை ஒட்டிய நடுக்கத்தையும் சேர்த்தே விரிவாக்கிச் செல்கிறது. வெள்ள நீர் வீட்டின் நிலைக்கதவைத் தட்ட எத்தனிக்கும் நேரத்திற்கும் சற்று முன்னாள் குடும்பத்தோடு குடி பெயர்ந்து எங்கள் மகள் இல்லத்தைச் சென்றடைந்தோம். சொந்தக் கூட்டுக்கு இன்னும் திரும்பாத பறவையின் குரல் தான் இந்த வாரம் உங்களை வந்தடைந்து கொண்டிருப்பது.

இசை மழை போலவே, மழையும் ஓர் இசை தான். ஓரளவு பெய்கையில் அது பெரிதாக கவன ஈர்ப்பாக அமைவதில்லை. தன்னைச் சுற்றியே எல்லோரையும் பேசவைக்கும் பெருமழை, வட்டியும் முதலுமாக வாங்கிக் கொண்டுவிடுகிறது. இசையும், சாதாரண நாளில் ஏற்படுத்தும் சலனத்தை விட, கச்சேரிகள், திருவிழாக்கள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கூடுதல் கொண்டாட்டத்தை உருவாக்கிக் கொள்கிறது.

குடி பெயர்ச்சி இந்த மழையால் ஏற்பட்டது, வாய்ப்பு அற்ற மனிதர்கள், குறிப்பாக முதியோர் பட்ட பாடுகள் வேதனைக்குரியது. வேறெங்கும் போக முடியாமலும், நாள் கணக்கில் வெளியே இருந்து யாரும் உதவிக்கு வர முடியாது, வீட்டில் மின்வசதி துண்டிப்பு, தனிமைப்படுத்தி வாட்டி எடுக்கும் தருணங்கள் அவை. கொஞ்சம் இசையாவது கேட்க முடியுமா என்று ஏங்க வைத்த பொழுதுகளும் கூட.

இசையும் அதீத ரசனை கொண்டிருக்கும் மனிதர்களை இப்படி திக்குமுக்காடச் செய்வதைப் பார்க்கிறோம். எப்போதும் இசையால் சூழப்பட்டிருக்கும் அவர்கள் உள்ளம். ஓர் இசையிலிருந்து மற்றொன்றுக்கு, ஒன்றோடு மற்றொன்று, ஒன்றிற்கு மாற்றாகவும், ஒன்றினில் இருந்து வேறாகவும் இசை பொழிந்தபடி இருக்கும் சூழல் அது.

ஒரு சில பகுதிகளில் மட்டும் பெய்யும் மழை போல, காதுகளுக்குள் தனித்துவமாகப் பெய்து கொண்டிருக்கும் இசை. ஓவென்று எல்லோருக்குமாக சாலையோர மேடையில் முழங்கும் இசை. மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் போலவே அன்றாட இசைப்பொழிவு அளக்கும் மானிகளும், நிலையங்களும் இன்னும் உருவாகவில்லை.

திரை இசையோடு நாம் வாட்ஸ் அப் குழு ஒன்றில் அண்மையில் ஒரு பெருமழைப் பொழிவு போல், ஒரு கானத்தைக் கேட்க முடிந்தது. அபார மழைப்பொழிவு அந்த இசை.

விவேக் குமார் பிரஜாபதி என்ற அந்த 33 வயது இளைஞர், புகழ் பெற்ற உஸ்தாத் இக்பால் அகமத் கான் அவர்களது முக்கியமான மாணவர்களில் ஒருவர். சரிகம இசை நிகழ்வில் அவர் நடுவர்களை அதிர வைத்தார். சங்கர் மகாதேவன் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்க சிலிர்க்கக் கொண்டாடி மகிழ்ந்தார். விவேக், பரிசு பெற்றுக் கொண்டதும், சங்கர் மகாதேவனோடு சேர்ந்து பாட விரும்ப, அதில் அந்த இசை மழை இன்னும் அதிரடி வேகத்தில் ரசிகர்களைக் கூத்தாட வைத்துவிட்டது. அந்த ஸ்வர வரிசைகளில் சங்கர் மேற்கொண்ட பயணத்தின் இன்பியல் காட்சி, மயிர்க்கூச்செரியும் ரேஸ் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் அமைந்தது.

மிதமான மழைப் பொழிவு போல இதமாக மனத்தில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் இசை உண்டு. திரையிசையில் நிறைய சொல்லிக் கொண்டு போகமுடியும். இந்தியன் வங்கியில் உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றவர், இந்த மழை வெள்ள நீர்ப் பெருக்கின் என் சக தெருவாசி திரு கிருஷ்ணன், ஒரு சுவாரசியமான குறும்பதிவு ஒன்றைச் சூடாக அனுப்பி இருந்தார்.

தி இந்து நாளிதழில் திரை விமர்சனங்கள் எழுதியவரான பரத்வாஜ் ரங்கன் அவர்கள் தமது வலைப்பூவில் இந்த நவம்பர் பத்தாம் நாள் எழுதியுள்ள குறுங்கட்டுரை, எம் எஸ் வி அவர்களது இதயத்தை வருடும் பாடல்கள் பற்றிப் பேசுகிறது.

Music Notes #1: The unending pleasures of MSV-era melody lines

அதில், ஞான ஒளி படத்தின் தேனிசைப் பாடல் ஒன்றை மிகுந்த ரசனையோடு குறிப்பிடுகிறார் பரத்வாஜ் ரங்கன். ‘ஊர்வசி’ சாரதா – ஸ்ரீகாந்த் காதல் உறவு பற்றிய காட்சிப் படுத்தலான அந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் அத்தனை நேர்த்தியாகப் புனைந்திருப்பார்.

தேவன் மீது அசையாத விசுவாசமும் உள்ள ஒரு பெண், தன்னை அத்தனை நம்பிக்கையோடு ஓர் ஆண் மகனிடம் ஒப்படைக்கும் பரவசமும், கதையோட்டத்தின் அடுத்த கட்டங்களை உணர்த்தும் பாங்கும் பாடல் வரிகளில், மெல்லிசை மன்னர் இசையில், பி சுசீலா குரலில், மாதவன் இயக்கத்தில் உணர்ந்துவிட முடியும்.

இரவின் அமைதியில் எங்கோ தொலைவில் இருந்து மெல்ல மெல்ல நம்மருகே வந்தடைகிறது ஓர் அருமையான ஹம்மிங். பல்லவியை சுசீலா ஹம்மிங் கொடுப்பது ரசிகரை அங்கேயே கட்டிப்போட்டு வைத்து விடுகிறது. பிறகு மணியோசை தொடங்கி பாடல் நெடுக உரிய இடங்களில் ஒலித்துக் கொண்டே இருக்க, இப்போது தேவாலய வளாகத்தில் அல்லது பெத்லகேம் குடிலில் அமர்ந்திருக்கும் உணர்வை எம் எஸ் வி அவர்களது இசைக்கோவை ஏற்படுத்தி விடுகிறது.

தாளக்கட்டு, டிரம்ஸ் வாசிப்பு, வயலின்கள் இழைப்பு, புல்லாங்குழல் வாசிப்பு எல்லாம் ஒரு மழை இரவில் மெல்லொளி பரவும் இடத்தில், இசை சாரல் ஒன்றில் நனைந்தபடியே இதயத்தை மிதக்க வைத்து விடுகிறது.

பரத்வாஜ் ரங்கன் ஆராதிக்கிறார் எம் எஸ் வி அவர்களை! ம – ண – மே – டை என்பது நான்கு பதங்கள், அடுத்த அடியோ, ம – லர் – க – ளு – டன் – தீ – பம் என்று ஏழு பதங்கள், தலைவர் தலைவர் தான் என்கிறார்!

சுசீலா இந்தப் பாடலில் விதவிதமான உணர்வுகளை, உணர்ச்சிகளை எல்லாம் கொண்டுவருவதைக் கேட்கமுடியும். குதூகல தொடக்கம். உறவின் நெருக்கம். வாழ்க்கையின் கிறக்கம். தேவன் அருளில் உருக்கம். தன்னிலை மறக்கும் பெண் மனத்தை, அதைப் பார்ப்பவர் அடையும் பதட்டத்தைக் கவிஞர் எப்படி அசாத்தியமாகக் கொணர்கிறார் என்பது, திரைப்பாடல்களில் ஆழ்ந்து பார்த்து ரசித்துக் கொண்டாட வேண்டிய வரிசையில் முக்கியமானது.

எம் எஸ் வி ரசிகர்களது இணையதளத்தில் மீனாட்சி என்பவர் இந்தப் பாடலில் லயித்து எழுதியிருக்கும் விவரிப்புகள் உள்ளம் தொடுபவை.

http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=2244&sid=d0b00121b45704dc723ed9566fc3381c

பல்லவியின் ஒவ்வோர் அடியும் அழகு என்றாலும், ‘மங்கையர் கூட்டம் மணக்கோலம்’ என்ற வரியை அசாத்திய லயத்தில் இசைப்பார் சுசீலா, அதுவும் அந்தக் ‘கூட்டம்’ என்ற பதத்தில் எத்தனை கிறக்கத்தை நிரப்பி இருப்பார் மெல்லிசை மன்னர்.ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு டியூனில் அமைப்பது அவரது சுவாரசியமான உழைப்பு என்று பரத்வாஜ் ரங்கன் கொண்டாடுவதற்கு ஏற்ற பாடல் இது.

இந்தப் பாடலின் சரணங்கள் அமைக்கப்பட்ட விதமே காதல் போதையின் பிரதிபலிப்பாக அமைந்திருப்பதை, பி சுசீலா பாடுகையில் உணர முடியும். மோன நிலை தூவும் ஹம்மிங் கொடுத்து, ‘நான் இரவில் எரியும் விளக்கு’ என்கிற முதல் சரணத்தின் முதல் அடியின் ஒவ்வொரு சொல்லையும் சுசீலா ஒரு மயக்க நிலையில் இழுத்திழுத்து உதிர்ப்பார், பின்னர் அடுத்த அடியை, நீ என் காதல் மணி மாளிகை என்பது உற்சாக வேகத்தில் தெறிக்கும் !

‘நீ பகலில் தெரியும் நிலவ என்பதில் வட்ட வடிவிலான சுழற்சியில் விழும் சொற்கள். ‘நான் உன் கோயில் பூந்தோரணம்’ என்பது உரிமை கொண்டாடுவதாக மலரும். அங்கே நிறுத்தி, ‘மணியோசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்’ என்று சரணத்தை நிறைவு செய்வார் சுசீலா. அந்த எங்கும் என்ற சொல்லின் ‘ம்’ இருக்கிறதே, அதிலேயே இழைப்பார் அந்தப் பெண்ணின் குதூகலத்தை !

‘என் மடியில் விடியும் இரவு’ என்ற சரணத்தை முன்வைத்து மட்டுமே கண்ணதாசன் திரைப்பாடல் புனைவு குறித்து விரிவாக எழுத முடியும்.இரவுப் பொழுது இங்கே கழியும் என்று சொல்வதைவிடவும், விடியும் இரவு என்ற சொற்பதங்கள் எத்தனை ஆழ்ந்த பொருளும், கவித்துவமும், காதலும் அடர்த்தியாக உரைப்பவை. ‘நம் இடையில் வளரும் உறவு’ என்கிறது அடுத்த அடி. ‘மேகம் தழுவும் குளிர்க் காற்று மோகம் பரவும் பெருமூச்சு’ என்பது சந்தங்களில் அந்த பந்தத்தை விளக்கிவிடுகிறது. கண்ணதாசனின் அந்தக் கற்பனைப் பெருமூச்சை மெல்லிசை மன்னர் பி சுசீலாவைக் கொண்டு விடுவிப்பதை, மீனாட்சி அவர்கள் எத்தனை நுட்பமாகக் கவனித்து எழுதி இருக்கிறார்! ‘நான் பெறுவேன் சுகமே சுகமே…’ என்னமாக இசைப்பார் சுசீலா.

மூன்றாவது சரணம், தாயற்ற ஒரு பெண், உற்ற துணை கிடைத்ததான நம்பிக்கையில் எழுப்பும் விடுதலை கீதம். ‘உன் துணை போல சுகமும் இல்லை’ என்ற வரியை கவிஞர் எப்படி வந்தடைகிறார்! இந்தக் கற்பனை அப்படியே இசையிலும், சுசீலா குரலிலும் மிதக்கும்.

பாடல் முழுவதிலும், சரணங்களை நோக்கிய வழிப்பயணத்திலும் குழலிசையும், வயலினும், தேவாலய மணியோசையும், இதமான டிரம் செட் இசையும் ஆஹா…ஆஹா.. குறிப்பாக, தாளக்கட்டு!

ஒவ்வொரு சரணம் தொடங்கும்போதும், தவழும் பருவத்துக் குழந்தையானது நெருங்கிய உறவைப் பார்க்கவும், வேக வேகமாகத் தரையில் நீந்தி வந்து காலுக்கருகே வந்தடைந்து ஏக்கத்தோடு பார்த்துத் தன்னைத் தூக்கிக் கொள்ள ஓங்கிக் கைகளால் அடித்துக் கொள்ளும் ஓசை போல் பிறந்து பற்றிக் கொள்கிற அந்தத் தாளக்கட்டில், குழந்தையை வாகாகத் தூக்கி வைத்துக்கொண்டு மேலும் கீழுமாக உயர்த்தித் தோளிலும் மார்பிலும் அணைத்து முத்தமாரி செய்து பூஞ்சிரிப்பு பூக்கவைத்துக் குழந்தையை மெல்லப் பிறகு இறக்கி வேடிக்கை காட்டும் தந்தை போல், தாயைப் போல் சரணங்களைப் பாடி முடிக்கிறார் சுசீலா. தேவாலய மணியோசையின் கூர்மையான ஒலிக்கு நிகராகப் பொழியும் சுசீலா அவர்களது அற்புதமான பாடல்களில் ஒன்று தான் ‘மணமேடை மலர்களுடன் தீபம்…’

மூன்றாம் சரணத்தில் மழை பெய்யவே செய்கிறது. எனக்கு, ஜெயகாந்தனின் ‘பருவ மழையாலே வாழ்க்கை பாலை வனமாகியதே’ வரிகள் ஏனோ நினைவில் வந்துபோனது. கதை தெரிந்தவர்களால் கண்ணீர் சிந்தாமல் இந்தப் பாடலைக் கடந்து போக முடியாது. காதல் தாபத்தை, நம்பிக்கையை, இறை விசுவாசத்தை, அன்பை, மகிழ்ச்சியை என பல்வேறு உணர்ச்சிகளை இந்தப் பாடல் வரிகளுக்கேற்ப ‘ஊர்வசி’ சாரதா அபாரமாக வெளிப்படுத்தி இருப்பார், ஸ்ரீகாந்த் மென்மையான உடனிருப்பு.

மழை வெள்ளம் மாநகர மனிதர்களைக் கொஞ்சம் பரந்த சமூக எண்ணங்கள், அரசியல், நாட்டு நடப்பு பற்றி எல்லாம் பேச நிர்பந்திக்கிறது. வெள்ள நீர் வடிந்தாலும், வெளியேற மறுத்துத் தேங்கி நிற்கும் கழிவு நீர் போல், மாற்றங்களுக்கான நம்பிக்கையற்று சபித்துவிட்டுத் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கே நடுத்தர வர்க்கத்தை மீள வைக்கிறது தாராளமய காலம்.

தங்களுக்கான கிருமித் தொற்று குறித்துக் கவலையற்றுக் கழிவுகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர் ஏராளமான எளிய தொழிலாளிகள். மழையால் பாதிப்புறும் தங்கள் வாழ்க்கையை மழையை அடுத்தே மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இசை எந்த பேதமுமின்றி எல்லா உயிர்களையும் இரட்சிக்கிறது. தனது அருள் மழையால் ஆசீர்வதிக்கிறது. நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருக்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்