To Sir With Love Braithwhaite BookReview By M kathiresan. நூல் அறிமுகம்: To Sir With Love - பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் - பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் - ம.கதிரேசன்

நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் – ம.கதிரேசன்




கல்வியாளர் பேரா. ச. மாடசாமி அவர்களின் TO SIR WITH LOVE என்ற ஆங்கில புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் தான் “நிறத்தைத் தாண்டிய நேசம்”. இது அவரது வாசிப்பனுபவ புத்தக வரிசையில் மூன்றாவதாகும். TO SIR WITH LOVE புத்தக ஆசிரியர் ரிக்கி பிரைத்வைட். கறுப்பர்.அவரின் சுயசரிதை. சந்தர்ப்பவசத்தால் ஆசிரியரான கறுப்பர் வெள்ளை மாணவர்களின் மனங்களை வென்ற கதை.

பிரைத்வைட் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்டிருந்த பிரிட்டிஷ் கயானாவில் பிறந்தவர். இன்ஜினியர்.இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் விமானப் படையில் சேர்ந்து போரிடுகிறார்.
உலகப் போர் முடிந்ததும் படைகள் கலைக்கப்படுகின்றன. வேலையிழப்பு. பண்பாட்டிலும், நாகரிகத்திலும் தான் பெரிதும் மதிக்கும் இங்கிலாந்தில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் என்று நம்புகிறார். இங்கிலாந்தின் நிறத்தின் அடிப்படையிலான பாரபட்சத்தால் செல்லுமிடமெல்லாம் நிராகரிக்கப் படுகிறார். இறுதியாக லண்டனின் சேரிப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்கிறார்.

கிரீன்ஸ்லேடு உயர்நிலைப் பள்ளி- பணிபுரிய யாரும் தயங்கும் பள்ளி. ஆசிரியர் பணியே அவர் நேசிக்கும் பணியல்ல. அதிலும் சேரிப் பகுதியில், சமாளிப்பதற்கு கடினமான பள்ளியில் வாழ்க்கை பாட்டுக்காக பணியில் சேர்கிறார். அங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பெண் ஆசிரியர்கள்தான். மாணவர்களை சமாளிப்பது பெரும்பாடு. பொதுவாக ஆண் ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் நீடிக்க முடிவதில்லை. அவரது நல்வாய்ப்பு ஊக்கமும் ஆலோசனைகளும் வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் புளோரியனும் சக பெண் ஆசிரியர்களும்தான்.

புளோரியன் எளிமையானவர். வழக்கமான பள்ளியாக இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட்ட சுதந்திரத்துடன் புதிய முயற்சிகளுடன் பள்ளியை நடத்துபவர். பசியுடன் வரும் மாணவர்களைப் புரிந்தவர். பல்வேறு இன, மத மாணவர்கள் படிப்பதால் அசெம்பிளியில் கூட குறிப்பிட்ட கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் மதிய உணவை உண்கின்றனர். பாடம், ஆசிரியர், விளையாட்டு பற்றிய மாணவர்களின் வெளிப்படையான வாராந்திர அறிக்கை- மதியம் இசை-நடனம்-ஆண்டுப் பேரவை- அதில் கற்றுக்கொண்டவைகளை மாணவர்களே வெளிப்படுத்துதல், ஆசிரியர்களுடன் மாணவர்களின் கேள்விகள் என்று புதுமையான முயற்சிகளை பின்பற்றுகிறார் புளோரியன்.

பிரைத்வைட் உயர் வகுப்பு ஆசிரியர். அவர் கனவு கண்ட வகுப்பறையல்ல இது. அசுத்தமான வகுப்பறை. அழுக்கான உடைகள். அவரது முதல் வகுப்பு இறுக்கத்துடன் முடிகிறது. தொடர்ச்சியான வகுப்புகளிலும் கசப்பும் பகைமையும் மிஞ்சுகிறது. பேருந்து, பொதுவெளி எங்கும் நிலவும் நிறபேதம் சமூகத்தின் தாக்கத்தால் ஏழைமாணவர்களிடமும் ஒரு ஆண் ஆசிரியரிடம் கூட வெளிப்படுகிறது. பிரைத்வைட் பொங்கி எழுவதில்லை. கறுப்புத் தோலுடன் மரியாதையாக வாழ்வது எப்படி என்று அவமதிப்புகளை நிதானமாக கடக்கிறார். மாணவர்களின் ஒத்துழைக்காத மௌனம், வகுப்பறை சத்தம், கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் மெல்ல மெல்ல மாற்றுகிறார். மாணவர்களின் மனங்களை அன்பால் வெல்கிறார்.

ஏழை மாணவர்களான அவர்கள் பள்ளி உயர் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லக் கூடியவர்கள் அல்ல. உடனடியாக ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை தாங்கும் நிலையில் உள்ளவர்கள். இதையே பிரைத்வைட் கற்பித்தல் ஆயுதமாக பிரயோகிக்கிறார். நீங்கள் குழந்தைகளல்ல;சீனியர்; வேலைக்கு போகும் இடங்களில் இதெல்லாம் வேண்டியதிருக்கும் என்று சொல்லியே மாணவர்களை வழிக்குக் கொண்டு வருகிறார். சமமாக நடத்துகிறார்.

உரையாடல் தொடங்குகிறது. பிரைத்வைட் பெரிதும் மெனக்கெடுகிறார். மாணவர்கள் எதைக் கேட்டாலும் அவரிடம் பதில் இருக்கிறது. மியூசியத்திற்கு அழைத்துச் செல்வது போன்று பொது வெளியிலும் கற்றலுக்கு வாய்ப்பு ஏற்படுத்துகிறார். இப்போது அவரது டேபிளைச் சுற்றி எந்நேரமும் மாணவர்கள்! வீடுகளிலிருந்து ஆசிரியருக்கு பூங்கொத்தும் ,கேக்கும் கொண்டு வருகிறார்கள். எங்க சார் எங்க சார் என்று கொண்டாடுகிறார்கள்.

மாணவர்களின் குடும்ப பின்னணி நெகிழ வைக்கும்!அம்மாவின் பிரசவத்தின்போது தலைமாட்டில் உடனாளாக இருந்த ஒரு மாணவி. மருத்துவமனையில் அம்மா சிகிச்சையில் பெற்றபோது குடும்பத்தையே தாயாக பார்த்துக்கொண்ட மாணவி .மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற குடும்ப பின்னணியை கொண்டவர்கள்தான்! விளையாட்டுச் சண்டையில் பள்ளிக்கு வெளியே ஒரு மாணவனுக்கு கத்திக் காயம்பட, கத்தியை வைத்திருந்த மாணவன் சிறார் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்போது தண்டனையின்றி அந்த மாணவன் வெளிவருவதற்கு பிரைத்வைட் உதவுகிறார். இளம் விதவையான அம்மா, அவரது மகள் மனக்கசப்பை போக்க தலையிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

வீதியோடு நெருங்கும்போது பள்ளியும் அவரோடு மிகவும் நெருக்கமாகிறது. தள்ளுவண்டியில் சாமான்கள் வாங்கும்போது அவருக்கு தனி முன்வரிசை. இவர் என் மகளின் /மகனின் ஆசிரியர் என்ற பெருமை! கறுப்பர் என்பதால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த பெண்மணி மகளின் கோபத்தால் மனம் வருந்தி வீடு வாடகைக்கு விட முன்வருகிறார். அன்பு மட்டுமல்ல; மாணவர்களின் அத்துமீறல்களின் போதும் உரியவாறு தலையிடுகிறார் பிரைத்வைட்.

ஆண்டுப் பேரவை! பிரைத்வைட்டின் மாணவர்கள் உலகெங்கும் நாடு இழந்து வாடும் மக்கள் பற்றி- நாடு இனம் கடந்து மனிதர்கள் அனைவரும் ஒன்று- நிற பேதமற்ற இங்கிலாந்து என்றெல்லாம் பேசுகின்றனர். பிரைத்வைட்டின் முயற்சிகள் வீண் போகவில்லை! முடிவில் மாணவர்கள் அன்புக்குரிய ஆசிரியரிடம் சொல்வது முக்கியமானது. ” உங்களால் வளர்ந்தோம். பொறுப்புள்ள இளைஞர்களாக நடத்தினீர்கள். உங்களுக்கு எங்களின் இந்த சிறு பரிசு” என்று எழுதி மாணவர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர்.

இவ்வளவும் ஓராண்டுக்குள் சாதித்துள்ளார் என்பதுதான் பிரைத்வைட்டின் பெருமை! மாணவர்களிடம் நிறத்தை தாண்டிய நேசம் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு சோகம்! அவரது சக பெண் ஆசிரியர் கில்லியன். வெள்ளை நிறத்தவர். ஒத்த ரசனையும், மனப்போக்கும் காதலுக்கு வழி வகுக்கிறது. காதல் கைகூடவில்லை.வெளியில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்திற்குப் பிறகு சின்ன தயக்கத்திற்குப் பின்னர் கில்லியன் தெளிவடைகிறார். எனினும் அவரது தந்தை கலப்புத் திருமணத்தை ஆதரிக்கவில்லை. கில்லியன் பள்ளியைவிட்டு சென்று விடுகிறார். பிரிவால் சோர்வடைந்து விடவில்லை. உறுதியான மனிதர்! 104 வயது வரை வாழ்ந்தார்.

இந்தப் புத்தக அனுபவம் பற்றி எஸ். எம். கூறும்போது பிரைத்வைட்டின் மீதான அன்பால் புத்தகத்தை கையில் எடுத்ததாகவும், அனுபவத்தை எழுதி முடித்த போது பிரைத்வைட்டுடன் கூடவே தலைமையாசிரியர் புளோரியனும் மாணவி பமீலாவும்தனது மனதில் நிறைந்ததாக கூறுகிறார். மாணவர்களை நேசித்து தன்னுடன் பயணித்த சக ஆசிரியர்களும் உடன் நின்ற உயிருக்குயிரான மாணவர்களும் இந்த புத்தக வாசிப்பின் போது மீண்டும் மீண்டும் நினைவில் வந்தார்கள் என்கிறார்.

அனேகமாக நிறத்தை தாண்டிய நேசம் புத்தகத்தைப் படிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அவரைப் போன்றே ஞாபகம் வருவது நிச்சயம். சில புத்தகங்கள் லயித்து படித்து அப்படியே விழுங்க வேண்டியவைகள் என்று பிரான்சிஸ் பேகன் கூறுவது இந்தப் புத்தகத்திற்கு அப்படியே பொருந்தும். பிரைத்வைட்டின் குழந்தைகளின் மீதான அன்பு எஸ்.எம். சாரின் வார்த்தைகளுடன் அன்பு வெள்ளமாக பிரவாகமெடுக்கிறது. அவரது “வித்தியாசம் தான் அழகு “புத்தக மதிப்புரையில் வேணுகோபாலன் “அன்புதான் பேராசிரியர் ச. மாடசாமியின் மைக்கூடு.அவரின் எந்த எழுத்தும் அன்பின் மை தொட்டே எழுதப்படுவது” என்று குறிப்பிட்டது மிகச் சரி. இந்தப் புத்தகத்தை வாசல் பதிப்பகம் அழகுணர்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.

கரோனோ பெருந் தொற்றுக்கு பின்னர் கற்றல் திறன் குறைபாடு அதிகரிப்பு- இடைநிற்றல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள காலத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் செய்துள்ளது. இந்நிலையில், போதிய ஆசிரியர்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்புகள் அதிகரித்துள்ளது. எனினும் இந்த சிரமங்களைத் தாண்டியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்விப் பணியாற்றவேண்டியுள்ளது.

போற்றத்தக்க முன்னெடுப்புகளை பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தனிப்பட்ட முயற்சிகள் ஒரு இயக்கமாக மாற வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் சங்கங்களின் கடமைகளில் சரி பாதி கற்பித்தல் தொடர்பான மெனக்கிடல்களும் இருக்க வேண்டும். அதற்கு பிரைத்வைட்டின் அனுபவம் கைகொடுக்கும்.

அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு நீண்டகாலமாகவே பெரிய ஆதங்கம் ஒன்று உண்டு. அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தமது ஊதியத்தில் ஒன்றிரண்டு சதவீத தொகையையாவது புத்தகம் வாங்குவதில் செலவழிக்க வேண்டும் என்பதே அந்த ஆதங்கம். தமிழறிஞர் வீ.அரசு அவர்களின் தலைமையில் “சீர் வாசகர் வட்டம்” 700 பக்கங்கள் கொண்ட புதுமைப்பித்தனின் படைப்புகள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக ஒரு ரூ. 100 க்கு விற்பனை செய்யும் மகத்தான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஆசிரியர்கள் ஆசிரியர் சங்கங்கள் கல்வி தொடர்பான புத்தகங்களை லட்சக்கணக்கில் ஆசிரியரிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியம் அல்ல.

புத்தகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம்
புத்தக வெளியீடு- வாசல் பதிப்பகம்
விலை- ரூ.120
98421 02133-
மின்னஞ்சல்- [email protected]

Kuzhanthaigalin Nooru Mozhigal Book By Sa Madasami Bookreview By Saguvarathan நூல் அறிமுகம்: ச.மாடசாமியின் குழந்தைகளின் நூறு மொழிகள் – சகுவரதன்

நூல் அறிமுகம்: ச.மாடசாமியின் குழந்தைகளின் நூறு மொழிகள் – சகுவரதன்




நூலின் பெயர் ; குழந்தைகளின் நூறு மொழிகள்.
ஆசிரியர் ச.மாடசாமி
பதிப்பகம் ; பாரதி புத்தகாலயம்.
விலை ; ரூ.90/
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச. மாடசாமி. பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா. மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யேகமான மெல்லிய நகைச் சுவையோடும், ஆழத்தை எளிதில் வெளிக்காட்டாத எளிய சொல்லாடலோடும் விளக்குகின்றார்.

மாணவர்களைச் சமூகத்திற்குப் பங்காற்றுபவர்களாக உருவாக்குவதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. மாணவர்களிடம் சமூக உணர்வை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையயேயான உரையாடல் இன்றியமையாததாக இருக்கிறது. இதனை வலியுறுத்தும் விதமாக தான் பேராசிரியர் மாடசாமி அவர்கள் குழந்தைகளின் நூறு மொழிகள் என்கிற இந்த இனிய புத்தகத்தின் மூலம் மொழி பண்பாடு கல்வி குறித்தும் அறிவொளி இயக்க பொற்காலங்கள் குறித்தும் சுமார் 14 கட்டுரைகளில் கூறியிருக்கிறார்.

ஒரு சமூகம் தன்னைத்தானே புதுபித்துக்கொள்ள வித்தினை உருவாக்கும் இடமே பள்ளி தான். பள்ளியில் பயிற்றுவித்தலின் நோக்கம், மாணவர்கள் சீரான வளர்ச்சி அடைதலை மட்டுமல்ல ஒரு சிறந்த அறிவார்ந்த சமூகத்தையும் உருவாக்குவதும்தான்.

குழந்தைகளின் நூறு மொழிகள் என்னும் முதல் கட்டுரையில் குழந்தைகளிடத்து ஆசிரியர்,பெற்றோர் எப்படி நடந்து கொள்கின்றனர்,எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆழமானப் புரிதலை இக்கட்டுரை பேசியுள்ளது.

ரெக்கியோ எமிலியா. வாய்க்குள் நுழையாத பெயர் ;ஆனால் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பெயர் ;அது வெறும் பெயர் அல்ல. அது ஒரு இயக்கம். குழந்தை கல்விக்கான சிந்தனையின் வடிவம் என்கிறார் மாடசாமி அவர்கள்.

ஐரோப்பிய வகுப்பறைகள் வற்புறுத்திய சுதந்திரம்; சோசலிச நாட்டு வகுப்பறைகள் முன்னுரிமை தந்த சமூக சிந்தனை – இரண்டின் இணைப்பு என ரெக்கியோ எமிலியாவை சொல்லலாம் என்கிறார். ரெக்கியோ எமிலியோ குழந்தைக் கல்விக்கான சிந்தனை,வடிவம், செயல்பாடு என்று விரிவாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

குழந்தைகளே கூட்டாகச் செய்யும் ஆய்வுத்திட்டம் ,ஆவணப்படுத்தும் அழகு ,ஆய்வுத்திட்டத்திற்கான கருக்களை குழந்தைகளே தேர்ந்தெடுத்து செய்கின்ற பாங்கு, ஆசிரியர் ஒத்துழைப்பு என அனுபவம் சார்ந்த கல்வி செயல்பாடுகள் என அனைத்தையும் இக்கட்டுரை பேசுகிறது.

இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் ஒரு கவிதை நீங்களும் படித்துப் பாருங்களேன்

குழந்தையிடம்
நூறு மொழிகள்.
நூறு சிந்தனைகள்.!!!
குழந்தைகள்
விளையாடுவதும்
கற்றுக் கொள்வதும்
நூறு வழிகளில்
அவர்களின் ஆச்சரியம்!!!
நூறு விதம்
மகிழ்ச்சி நூறு விதம்
புரிந்து கொள்ள
கண்டுபிடிக்க
கனவு காண
அவர்களுக்கு
நூறு உலகங்கள்!!!
கண்கள் உங்களைத்தான் கவனிக்கின்றன என்கிற இரண்டாம் கட்டுரை. முழுக்க முழுக்க ஆசிரியர்களைப் பற்றிய கட்டுரை இது.

ஆசிரியரை பல கண்கள் கவனிக்கின்றன. அசட்டையாக சில கண்கள். ஆதங்கத்துடன் சில கண்கள். எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள். ஆனால் எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க இவரால் முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியரின் பெருமை இந்த கண்களும் கண்களில் எதிர்பார்ப்புகளும் தானே!!!

தேர்வு என்ற ஒன்றை நோக்கி பிள்ளைகளை துரத்துவதும் குழந்தைகளுக்குள் இருக்கும் கலைஞர்களையும் விஞ்ஞானிகளையும் வீராங்கனைகளையும் பிரித்து வெளியேற்றுவதும் உக்கிரமாய் தொடர்கிறது என்றும் ,இதே பாணியில் ஆற்றல்களை பறிகொடுத்த ஆசிரியர்களும் உள்ளனர் என்றும் பேராசிரியர் வெகு கவலையோடு பதிவு செய்திருக்கிறார். ஆளுக்கொரு கிணறு என்னும் மூன்றாம் கட்டுரை ஆசிரியர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதைக் கூறுகிறது.

ஆசிரியை பச்சையம்மாள் அவர்களின் முற்போக்கான செயல்பாடுகள் குறித்தும் அதிகம் பேசியிருக்கிறார். மாணவர் மாணவியர் பழகும் தன்மை , அவர்களுக்குள் இருக்கும் கேலி கிண்டல், அவர்களோடு சமமாகப் பழகும் ஆசிரியை பச்சையம்மாள் என விறுவிறு நடையில் ஓடி பச்சையம்மாள் தாண்டாத கிணற்றில் முட்டிமோதி நிற்கிறது.நமக்கான கிணறு எது.? நம்மால் கண்டறிய முடியுமா? போன்ற வினாக்கள் ரொம்ப அதிகமாகவே யோசிக்கவைக்கின்றன.

கொலையும் கொண்டாட்டமும் என்னும் நான்காம் பகுதியில் பெண்தெய்வமாக மாறிய பெண்களைப் பற்றியது. அறிவொளி இயக்க காலங்களில் மக்களோடு பழகிய தருணங்களில் கிடைத்த பல அரிய தகவல்களில் ஒன்றாக பெண்தெய்வ வரலாறுகளை சேகரித்த விவரங்களை கூறுகிறது.

பெண் தெய்வமான பெண்கள் யாரும் மகிழ்ச்சியாய் இருந்ததில்லை. குறும்பு செய்யும் குறும்புக்காரி களாகவும் இல்லை. எல்லோருமே அழுது கண்ணீர் சிந்திய பெண்கள் . அடியும் மிதியும் பட்டவர்கள். கொலையானவர்கள். தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் .
வினோதமாய் மாண்டவர்கள். இக் கட்டுரையின் இறுதி இரண்டு வரி என் மனதை என்னவோ செய்துவிட்டது.

“தெய்வங்களப் பின்னால் தேடலாம் .அவமானப்படுத்தப் படாத பெண்களை முதலில் தேடுங்கள்”

நாற்றம் அடிக்கும் வகுப்பறை என்னும் கட்டுரையில் ஆசிரியர்கள் பிரயோகிக்கும் அதிகாரங்களைப் பற்றி பேசுகிறது.

“லேட்டா வந்தா வெளியே நிறுத்தி ஏற இறங்க பாக்குற அதிகாரம்.

‘கெட் அவுட்’ சொல்லற அதிகாரம் லேப்ல பிரக்டிகல் நோட்டை விட்டெறியிற அதிகாரம்.

பிரின்சிபால் கிட்ட சொல்லவா அப்படின்னு பயமுறுத்துற அதிகாரம்”

அப்பப்பா…. விதவிதமான அதிகாரங்கள்.

ஆசிரியர்கள் அதிகாரம் செலுத்த வேண்டுவது தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பக்குவப்பட்ட ஆசிரியர் இனமே வகுப்பறையின் நறுமணத்திற்கு உத்தியாகும் என வலியுறுத்துகிறார். காந்திஜியின் வகுப்பறை என்னும் கட்டுரை டால்ஸ்டாய் கூறிய கல்விக்கொள்கை ,பண்ணைக்கல்வி ,டால்ஸ்டாய் பண்ணையில் பாடம் நடத்திய அனுபவம் உள்ளவராக காந்திஜி இருந்த சூழல் சொல்லப்பட்டுள்ளது. அங்கு தமிழ் மொழி சொல்லித்தந்ததே தமிழ் மொழி மீது காந்திக்கு மதிப்பு ஏற்பட காரணமாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

ஆசிரியர் மாணவர் என மொத்த வகுப்பறையும் பாடப் புத்தகத்துக்கு அடிமையாக இருப்பதையும் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பே காந்தி விமர்சனம் செய்திருக்கிறார்.

” குறைவான புத்தகம்: சிறந்த கல்வி” என்பது காந்தியின் கோட்பாடாக இருந்து வந்துள்ளது.

அடுத்ததாக டால்ஸ்டாய் பண்ணை. ஆசிரியர்கள் செய்யாத எந்த வேலையையும் பிள்ளைகளுக்கு செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என்பது பண்ணையின் விதி. ஆசிரியர்கள் செருப்பு தைத்தார்கள் ;கக்கூஸ் அலசினார்கள்; சமையல் செய்தார்கள்;விறகு வெட்டினார்கள்; பிள்ளைகளும் அவருடன் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் தற்போது பள்ளிகளில் கம்ப்யூட்டரே முதன்மை இடத்தை பிடித்துள்ளது. கம்ப்யூட்டரை விட வேறு எது பெரிசு;? என்று வினாவோடு இக்கட்டுரையை முடித்திருக்கிறார் மாடசாமி அவர்கள்.

அகங்காரத்தமிழ் என்னும் பகுதியில் தமிழின் பன்முகத்தன்மை, பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கான பாடநூல்,ஆசிரியர் குழுவின் செயல்பாடு, குறுக்கீடு, ஆசிரியர் மத்தியில் ஆசிரியர் கலந்துரையாடி பெறப்பட்ட அனுபவங்கள் போன்றவை கூறப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் மாவோரி ஆதிவாசிக் குழந்தைகளுக்குக தொடக்கக்கல்வி தந்த ஸில்வியா என்ற ஆசிரியர் செயல்பாடு,சமச்சீர் பாடநூல் குறித்து கருத்துரை போன்றன இதனுள் எடுத்துக்கூறப்பட்டுள்ளன.

அறிவொளியும் இடதுசாரிகளும் என்னும் கட்டுரையில் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது; Dr.சுந்தர ராமன் ஆலோசனை; நடைப்பயணம்; மக்கள் வாசிப்பு இயக்கம்; எட்டாம் வகுப்பு மாணவி வாசித்த நல்லதங்காள் கதையை 300 பேரும் அமைதியாக கேட்ட விதம்;வாசிப்புக்கான மொழிநடையை உருவாக்குவதற்கு பெரும் பங்காற்றிய தமிழ்ச்செல்வன், கமலாலயன், வேல.ராமமூர்த்தி போன்றோரை நினைவுபடுத்தியது; கல்வி தருவதென்பது எழுதப்படிக்கக் கற்றுத்தருவதே என கூறியும், இறுதியில் இப்பணியில் இன்னும் ஆக்கம் செலுத்தியிருக்கலாமே என்கிற ஏக்கம்; என எல்லாமே என் நாடி நரம்புகளில் உணர்ச்சியேற்றிவிட்டது. காரணம் வேலூர் மாவட்ட அறிவொளி இயக்க பணிகளில் நானும் இருந்திருக்கிறேன்.

“கல்வியும் கலாச்சாரமும்”
“வகுப்பறையில் இடஒதுக்கீடு ” –
“இணைக்கவா விலக்கவா?” “எதற்காக ஆசிரியர்கள்”
“நியாய வகுப்பறை”போன்ற கட்டுரைகள் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு கருத்து தரவுகளுடன் அமைந்திருக்கின்றன.

வருத்தம் இருந்தாலும் பிணக்கு இருந்தாலும் நம்பிக்கை வைத்து அவரிடம் நாம் பேச்சை நிறுத்துவதில்லை; தொடர்ந்து பேசுகிறோம்; நாம் பேசுவதும் அப்படித்தான். இங்கேதான் நியாயம் தோன்றி சமூகம் எங்கும் பரவக்கூடும். யார் மறுக்க முடியும்? சகிப்புத்தன்மை பொறுமை என விளை நிலமும் வகுப்பறை தான். பாரபட்சமற்ற அன்பின் ஊற்றுக்கண் இதுதான். தொடர்ந்து பேசுவோம் என முடித்திருக்கிறார் மாடசாமி அவர்கள்.

அழகுற வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கு வாழ்த்துகள்.

To Sir With Love Braithwhaite BookReview By Sa Madasami. நூல் அறிமுகம்: To Sir With Love - பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் - பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம்

நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம்




பேராசிரியர் . மாடசாமி  அவர்களின் எழுத்துகள் தமிழக வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. எளிய சிறு சிறு வாக்கியங்களில் பெரும் உண்மை களை மிருதுவாகக் கூறும் மொழி அவருடையது. தான் பெற்ற பட்டறிவையும், படிப்பறிவையும் தமிழ் மக்கள் சமூகத்தின் மேன்மைக்குப் பயன்படுத்தி வரும் எழுத்தாளர்; சிந்தனையாளர். கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூட்டா தொழிற்சங்கப் போராட்டங்களில் முன் நின்றவர். தேசிய எழுத்தறிவு முனைப்பு இயக்கத்தின் தூதுவராகப் பங்களித்தவர். தமிழகத்தின் எழுத்தறிவு இயக்க வரலாற்றில், விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாள ராகப் பணியாற்றி வயது வந்தவர்களுக்குக் கல்வி கொடுக்கும் முயற்சிகளில் மிக முன்னோடியான புதிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர். பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர். மதுரையில் பிஜிவிஎஸ் கருத்துக்கூடம் என்ற ஓர் அமைப்பை நிறுவி அதன் மூலம் பல தொகுப்புப் பணிகளையும், ஏராளமான சிறு நூல்கள் உருவாக்கத்தையும் புதிய கற்போருக்காக மேற் கொண்டவர். இப்படிப் பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரர் இவர். 

இவருடைய சமீபத்திய நூல்- நிறத்தைத் தாண்டிய நேசம். வாசல் பதிப்ப கத்தின் வெளியீடான இந்தப்புத்தகம், சற்று வித்தியாசமானது. நாமெல்லாரும் ஒரு புத்தகத்தை வாசித்தால் என்ன செய்வோம்? தூக்கிப்போட்டு விட்டு வேறு வேளைகளில் மூழ்குவோம். அந்தப்புத்தகம் ரொம்பவும் பிடித்திருந்தால், நண்பர்களிடம் அதைப்பற்றிப் பேசுவோம். எழுதும் பழக்கம் இருந்தால் அதைப் பற்றி ஓர் அறிமுகக்கட்டுரை எழுதுவோம். அதிகபட்சம் நாம் செய்யக் கூடியது, செய்வது –இவைதாம். ஆனால், பேரா. மாடசாமியின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. தான் வாசித்த புத்தகத்தின் மையப்பொருள், அதன் கதை மாந்தர்கள், அது முன்வைக்கும் கருத்துகள், தான் அதை வாசிக்கும் போது அடைந்த உணர்வுகள் எல்லாவற்றையும் உடனே ஒரு முழுநீளப் புத்தகமாகவே எழுதிவிடுகிறார். இவர் ஏற்கெனவே எழுதிய “ போயிட்டு வாங்க , சார் ! “ புத்தகம் அப்படி ஒரு புத்தகத்தை வாசித்த அனுபவம்தான். இப்போது வந்துள்ள “ நிறத்தைத் தாண்டிய நேசம் “ புத்தகமும் அதேபோல் ஒரு புத்தக வாசிப்பு அனுபவப்பதிவுதான் !

இந்த ‘Sir With Love’ புத்தகம், 1959-இல் வெளியானது. ஆசிரியர் ரிக்கி பிரைத் வைட். நாவல் வடிவில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல் இது. ரிக்கி பிரிட்டிஷ் கயானாவில் பிறந்த கறுப்பர். அவர் ஒரு வேலை தேடி இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் அங்கு நிலவிய இனவெறி பற்றிய உண்மை எதார்த்தம் புரிகிறது. பிரிட்டனின் விமானப்படையில் பொறியாளராகப் பணி செய்கிறார். இராணுவ உடையில், உயிரைப் பணயம் வைத்து அவர் வேலை செய்யும்போது, பிரைத்வைட்டின் கறுப்பு நிறம் யார் கண்களையும் உறுத்துவதில்லை. இரண்டாம் உலகப்போர் முடிந்ததுமே அவரின் கருப்பு நிறம் முன்னுக்கு வந்து விடுகிறது. 1945-இல் அவர் பணியை விட்டு விலக்கப்படுகிறார். பல பணிகளுக்கு விண்ணப்பிக்கிறார். தேர்வானபின், நேர்முகத் தேர்வுகளுக்குப் போகும்போது, கறுப்பர் எனத் தெரிந்தவுடன் நிராகரிக்கப்படுகிறார். பள்ளிகளில் ஆசிரியர் வேலை பல இடங்களில் காலியாக இருக்கிறது என்ற தகவலை வழிப்போக்கர் ஒருவர் சொல்லுகிறபோது, அதைக்கேட்டதும் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணிக்குப் போகிறார். அது லண்டனின் கிழக்குக் கோடி யில், கிரீன்ஸ்லேடு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் வேலை. அந்தப்பகுதி, வறுமையில் உழலும் வெள்ளை மனிதர்கள் வசிக்கும் பிரிட்டனின் சேரிப்பகுதி. ஏழைகள்தாம் எனினும், வெள்ளை நிறத்திமிர் அதிகமாயிருந்தது.                    

இந்த வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்த பேராசிரியர் ச. மாடசாமி, தன் மனம் கவர்ந்த அந்த நூலைப் பற்றி 104 பக்கங்கள் கொண்ட இந்தப்புத்தக்கத்தை ‘ நிறத்தைத் தாண்டிய நேசம் ‘ எனும் தலைப்பில் எழுதியுள்ளார். படிக்கும்போதே மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் அரும்பி விடுகிறது.” ஒரு மறக்க முடியாத அனுபவம் “ என்ற துணைத்தலைப்பில், நான்கு பகுதிகளாக இதை எழுதியுள்ளார். தொடக்கம், போராட்டம், பயணம், பிரியம் –என்பவை அந்த நான்கு பிரிவுகள். தொடக்கத்தின் தொடக்கம், ஆசிரியரானது எப்படி,முதல் நாள்… முதல் நாள்,முதல் வகுப்பு … முதல் வகுப்பு, புகையும் நெருப்பும், உரையாடல் தொடங்குகிறது, பயணம் தொடங்கியது, உள்ளத்துக்காதலா? உடலின் நிறமா?, அன்புடன் .. . எங்கள் சாருக்கு ! –என்பவை அத்தியாயங்களின் தலைப்புகளுள் சில. 

நூல் தொடங்கும் விதத்தைப் பாருங்கள்: “ஆங்காரம், வெறுப்பு, உதாசீனம் இவற்றின் அடிவேர் – நிறம். உலகெங்கும் அதிகம் அடிவாங்கிய நிறம்-கறுப்பு. வெள்ளை, சிவப்பு, மஞ்சள்,பழுப்பு என எல்லா நிறங்களின் கைகளிலும் ‘கறுப்பு’ அடி வாங்கியிருக்கிறது. இனவெறிப் பாகுபாடுகளிலும், இனவெறிப் படுகொலைகளிலும் முதன்மையான இலக்காக கறுப்பு சிக்கி சீரழிந்திருப்பது போல் தெரிகிறது. உண்மைதானா? அடிவேர் இன்னும் காய்ந்து போகவில்லை. இந்தியா ஒன்றும் வெள்ளை இந்தியா இல்லை; இருப்பினும் இங்கேயும் கறுப்பு ஒரு மதிப்பான நிறமில்லை. மனசின் இடுக்குகளில் மறைந்து கிடக்கும் காயங்களில் ஒன்றாக இங்கு கறுப்பு இருக்கிறது; ஆதங்கங்களில் ஒன்றாக சிவப்பு இருக்கிறது … “     

இத்தகைய ஒரு சூழலில், இந்தக்கறுப்பு ஆசிரியர், வெள்ளை மாணவர்களின் வெறுப்பை வென்ற விதம்தான் இதன் கரு. கறுப்பைப் பார்த்துக் கறுவிக் கொண்டிருந்த வெள்ளையரை ‘சார்’ என்று அன்புடன் அழைக்க வைத்தவர் அவர். பிரைத்வைட்  தலைமைஆசிரியரைப் பார்த்து, வேலை வேண்டும் என்று கேட்டதும் புளோரியன் நிதானமாகப் பேசுகிறார் : “முதலில் இந்தப் பள்ளியைப் பார்த்துவிட்டு வாருங்கள். இது வித்தியாசமான ஒரு பள்ளி. உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் பணியில் சேர்வது குறித்துப் பேசி முடிவெடுப்போம்..” 

பள்ளியை, வகுப்பறைகளில் மாணவர்களை, ஆசிரியர் அறையில் ஆசிரியர்களை, சூழலை.. எல்லாரையும், எல்லாவற்றையும் அலசிப் பார்த்து விட்டு, அங்கு பணியில் சேர்வதெனத் தீர்மானிக்கிறார். சேரந்தபின் ஒவ்வோர் அடிவைப்பிலும் அவமரியாதைகளை எதிர்கொள்கிறார். கோபம் பொங்கினாலும், பொறுமையாகவும், விவேகத்துடனும், தேவைப்படும் இடங்களில் துணிவுடனும் செயல்படுகிறார். படிப்படியாக அவர் மாணவர்களின் மனங்களை வெல்லும்விதம் மனதை உருக்குகிறது. இவர் விரும்பும் பெண் ஆசிரியை இவரைத் தானும் விரும்புகிறபோதும் வெள்ளை இனப்பெற்றவரின் நிர்ப்பந்தங்களால் விலகிப்போய் விடுகிறாள். வெள்ளை மாணவி ஒருத்தி இவரை விரும்புகிறாள். ஆனால், இவர் அதை மிக நாசூக்காகத் தவிர்த்துவிடுகிறார். ஆண்டு முடியும் போது, அனைத்து மாணவர்களும் கையொப்பமிட்ட ஒரு கடிதம், To Sir with Love ’ என்ற தொடக்கவரியுடன் வழங்கப்படுகிறது. 

“மனிதர்கள் உலகம் பூராவிலும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள்; இடம், நிறம், இனம், மதம்-எல்லாவற்றையும் தாண்டியதாகவே இந்த சார்புநிலை இருக்கிறது. ஆனால், இந்த மனித நேயமிக்க சார்பு குறித்துப் பாடப்புத்தகங்கள் பேசுவதில்லை “ என்று பிரைத்வைட் வகுப்பறையில் விடாமல் சொல்லித்தந்த கருத்தை, இறுதியில் படிப்பு முடித்துப் போகப் போகும் மாணவி ஒருத்தி சொல்லுகிறாள். உலகெங்கிலும் வீடிழந்து, நாடிழந்து வாடும் பரிதாபத்துக்குரிய மக்கள் பற்றி மற்றொரு மாணவி பேசுகிறாள். ஒரு செடி முளைவிட்டுத் துளிர்த்து, வளர்ந்து மரமாகிக் கனி  தருவது போல, பிரைத் வைட்டின் மாணவர்களும், மாணவிகளும் அவர் கற்றுத்தந்த பாடங்களாலும், அவரின் அணுகுமுறைப் பண்புகளாலும் மன வளமும் கருத்துவளமும் பெற்று ஒளிர்கிறார்கள். நிறத்தைக்கண்டு கறுப்பரை வெறுத்த அந்த வெள்ளை மனிதர்களின் மனங்களில் அன்பும், நேயமும் நிறைந்து ததும்புவதை நூல் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது. 

அட்டைப்படத்தை மூல  நூலின் திரைப்படப் போஸ்டரைக்கொண்டு வடிவமைத்துள்ளனர். உள் ஓவியங்களை ஓவியர் ஸ்ரீரசா வரைந்துள்ளார். இதை மிக அழகான அமைப்புடன் மாரீஸ் வடிவமைக்க, வாசல் பதிப்பகம் மிக நேர்த்தியாக நூலை வெளியிட்டுள்ளது.