*சாமி* குறுங்கதை – இரா. கலையரசி
அர்ச்சனை தட்டுடன் கோயிலுக்குள் நுழைந்தாள் மேகலை.
விசேஷ நாள் என்பதால் பயங்கர கூட்டம். ஒரே தள்ளு முள்ளாக இருந்தது.
நீண்ட வரிசை பல கதைகளை பேசியது. அதான்டி! இந்த வசந்தா வீட்டு விசயந்தான்னு ஆரம்பித்தார் ஒருவர்.
பாலன் பையன், அமெரிக்கா போயிட்டான் தெரியுமா? அவள்”கும்பிட்ட சாமி கண்ணதிறந்திருச்சு. மற்றொருவர்.
ஆளுக்கொரு கதையை சோடித்து பேசி வந்தனர்.
அப்புறம், வரிசை போக வேணாமா? நல்ல மாலையா வாங்கியாந்து இருக்கேன்.”சாமி” கையில தட்சணை வச்சா சாத்துன மாலைய குடுத்திடுவாரு!
எல்லாம் “சாமி” கையில தான் இருக்கு. இன்னைக்கு ராஜகனி வாங்கியே ஆகனும்.
நம்ம கவனிச்சா தான “சாமி” நம்மள கவனிப்பார்.
“சாமி” வீட்டம்மா எனக்கு நல்லா தெரியும். அவர் தான் எனக்கு வேண்டியத செய்ய சொல்லி இருக்கார்.
மேகலை விக்கித்து தான் போனாள்.
கருவறை மறைத்து “சாமி” நிற்க கடவுளை காண கூட முடியவில்லை.
பேசியபடியே கனி, மாலையை கொண்டு வந்து அந்த அம்மாவுக்கு கொடுத்தார் “சாமி”
கையறு நிலையில் கைதியாய் “கடவுள்”
