தொடர் 27: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
தொடர் -20 : சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்
ஹைக்கூ கவிதைகள் – வெ.நரேஷ்
கடலில் விளையாடச் சென்றேன்
விரட்டுகிறது கடல் அலை.
********
இரவு நேரம் என்றும் பார்க்காமல்
கண்ணடிக்கும் தெரு விளக்கு.
********
குலத்தையும் ஆற்றையும் குதுகலப்படுத்தும்
மழைத் துளிகள்.
********
ஜோசியரால் கணிக்க முடியவில்லை
செய்திதாளில் வரும் செய்தியை.
********
வெ.நரேஷ்
கடனி (லி )ல் மிதக்கும் தேசம் கவிதை – ஆதித் சக்திவேல்
ஜென் சினிமா கவிதை – க. புனிதன்
நாம் அடைய வேண்டிய
ஊரின் பெயர்
தேநீர் பானம்
இடையில் வரும் சிற்றூர்கள்
குக்கூ
நிலவு
மூதூர்
தென்றல்
சிற்றெறும்புகள்
கோப்பையில்
தேநீர் தயாரிக்க
ஒரு கருப்பு நகைச்சுவை
பாலில் கலந்து
சர்க்கரை தூவும்போது
வெட்டுக் கிளியின் சப்தம்
ஏற்ற இறக்கமான
கோப்பை
அதில் வண்ணத்து பூச்சி போல்
பிடிக்கும் கை பிடி
இரண்டு கரைகள்
பருகும் கடல்
தவறி சிந்திய
தேநீர்த் துளிகள்
கோள்கள்
கோப்பையில்
தன் பிம்பம் தெரியும்
நுரைகள்
ஜென் சினிமா
நூல் விமர்சனம்: சொ. நே. அறிவுமதியின் ஆழினி நாவல் – முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி
மக்களுக்குப் பல்லாற்றானும் நலம் பயப்பது நகைச்சுவை உணர்வு. இதனை வெளிப்படுத்தும் செல்நெறிக்கு வளமும் சிறப்பும் கொண்ட தமிழ் இலக்கியமரபு உண்டு. நாட்டுப்புறக் கலைவடிவங்களாக, மக்களிடையே அன்றாட வாழ்வில் ஊடாடிப் பல்வேறு வழிகளில் வெளிப்பட்டுவந்த நகைச்சுவையுணர்வு ஏட்டில் எழுதா இலக்கியமாக வளர்ந்துவந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இச்செல்நெறி வழக்கில் இருந்திருக்கவேண்டும். எனவே உலகவழக்கு, புலனெறிவழக்கு என இருவகையாலும் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எண்சுவைகளையும் அவை பிறக்கும் களங்களையும் வகைப்படுத்தி உள்ளார். நகைச்சுவை உணர்வின் களங்களாக,
“எள்ளல் இளமை பேதைமை மடனென
உள்ளப்பட்ட நகை நான்கென்ப” எனக் குறிப்பிடுகிறார்.
படைப்பில் முழுமையும் நகைச்சுவை உணர்வினை வெளிப்படுத்துவது, ஊடும் பாவுமாகப் பிணைந்து இடையிடையே வெளிப்படுத்துவது, ஆங்காங்கே நகைச்சுவை உணர்வினைத் தெளித்துச்செல்வது போன்ற வழிகளில் இலக்கியங்களில் நகைச்சுவை இடம்பெற்று வந்துள்ளது. தமிழ்க்கவிதை மரபில் இதற்கு எண்ணற்ற சான்றுகளைக் கூறமுடியும். காலத்திற்கேற்பச் செழித்து வளரும் உரைநடை இலக்கியத்திலும், நாடக இலக்கியத்திலும் செல்வாக்குப் பெற்ற நகைச்சுவை இன்று பல்லூடகம் வாயிலாகவும் பரவியுள்ளது.
சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே மட்டுமே சொந்தமானது நகைச்சுவை. இதனை வெளிப்படுத்தும் ஆற்றல் எல்லோரிடமும் எளிதில் அமைந்துவிடாது. வெகுசிலரே இத்திறன் கைவரப்பெற்றவராய் இருப்பர். நகைச்சுவையை வெளிப்படுத்தும் உத்தி முறைகள் பற்பல. காட்சி ஊடகங்களில் உடல்மொழியால் மட்டுமின்றிப் பேச்சுமொழியாலும் செய்கைகளாலும் நகைச்சுவையை வெளிப்படுத்திவிட முடியும். ஆனால் எழுத்துவழியான படைப்புகளில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த மிகுந்ததிறமையும் கற்பனைஉணர்வும் தேவைப்படுகின்றன. முதலில் அந்த எழுத்தாளன் நகைச்சுவை உணர்வு உள்ளவனாக இருக்கவேண்டும். கழைக்கூத்தாடி போன்று கவனமாகச் செயல்படவும் வேண்டும். நகைச்சுவைப் படைப்புகள் மற்றப்படைப்புகள்போல அதிக எண்ணிக்கையில் வெளிவராததற்கு இந்த அருமைப்பாடும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
ஆனந்தவிகடன் தேவன் (ஆர். மகாதேவன்), பாக்கியம் ராமசாமி (ஜலகண்டாபுரம் ராமசாமி சுந்தரேசன்) போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் பிறகு நீண்டநாள் கழித்து நான் வாசிக்கும் முழு நகைச்சுவை நாவல் ‘ஆழினி’ என்பதில் அளவற்ற மகிழ்ச்சி. வீட்டில் தனியே இருந்து படித்தபோது என்னை வாய்விட்டுச் சிரிக்கவைத்த நாவல் என்பதோடு நகைச்சுவையின் ஆற்றலை எனக்குள் பாய்ச்சிய நாவல் இது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, அதன் விளைவான பரபரப்பான வாழ்க்கை முறை ஆகியவை காரணமாக நகைச்சுவையை மறந்துவரும் இன்றைய இளம்தலைமுறையிலிருந்து நகைச்சுவையையே அடிப்படையாய்க் கொண்ட ‘ஆழினி’ என்னும் புதினத்தை எழுதியுள்ளார் செல்வி சொ.நே.அறிவுமதி. முனைவர்பட்ட ஆய்வுக்காகச் “சங்க இலக்கியத்தில் உணர்ச்சி மேலாண்மை” என்பதை ஆய்வுப்பொருளாகத் தெரிவுசெய்துள்ள இவருடைய கன்னி முயற்சி இந்த நாவல்.
தமிழ்மொழி பிறந்து செழித்து வளர்ந்த தமிழ்நாட்டில் இன்று தமிழைப் பேசவும் படிக்கவும் எழுதவும் தயங்கும் இளம்தலைமுறையினரை எள்ளி நகையாடுவது இந்த நாவலின் நோக்கமாகவும் தொனிப்பொருளாகவும் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. கடற்கன்னி (மெர்மெயிட் என்னும் மீன்பெண்) செந்தமிழில் – சங்கத்தமிழில் பேச புவனன், பரதன், நந்தினி ஆகிய இளைஞர்களும், நந்தினி, பரதன் ஆகியோரின் தந்தை மாதவன் போன்ற மூத்த தலைமுறையினரும் அதனைப் புரிந்துகொள்ளாததால் இந்த முடிவுக்கு வரவேண்டி உள்ளது. காலமாற்றத்தில் தமிழர்களின் அக்கறையின்மையால் எத்தனை சொற்கள் வழக்கிழந்துபோய்விட்டன என்பதை எண்ணும்போது ஆழ்ந்த வருத்தமே மேலிடுகிறது. இத்தகு வருத்தம் செல்வி அறிவுமதிக்கும் தோன்றியிருக்கவேண்டும்.ஆகவேதான் கடற்கன்னி செந்தமிழ் பேசுவதாக அவரால் கற்பனை செய்யமுடிகிறது.
கடற்கன்னியின் செந்தமிழ் கேட்கையில், நாஞ்சில்நாடன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் பயின்றுவரும் அரிய சொற்களைக்குறித்து ஆய்வுநோக்குடன் தொடர்கட்டுரைகளாக வடித்துவருவதும் அவற்றைப் புலனத்தின்வழி என்னுடன் பகிர்ந்துகொள்வதுமே என் நினைவுக்கு வந்தன. அக்கட்டுரைகள் வாசகர்களாகிய நாம் பழம்பெருமை பேசுவதில் மகிமை ஒன்றுமில்லை; பழந்தமிழ்ச்சொற்களைப் புழக்கத்தில் கொண்டுவரவேண்டும் என்னும் சிந்தனையை நமக்குள் விதைப்பன. இச்சிந்தனையின் நீட்சியாகவும் எதிரொலியாகவும் ஆழினி என்னும் நகைச்சுவைப் புதினத்தை நான் காண்கிறேன்.
கடற்கன்னியின் செந்தமிழைப் புரிந்துகொள்ள இவர் பேச்சுத்தமிழில் எளிமைப்படுத்தி அடைப்புக்குறிக்குள் கொடுக்கிறார். கதையில் வரும் பாத்திரங்களான புவனனைத் தொடக்கத்தில் மொழிபெயர்க்க வைக்கிறார் நாவலாசிரியர். பின்னர் அவனே செந்தமிழிலும் பேசுகிறான். பரதன் பிற்பகுதியில் செந்தமிழைப்பேசவும் மொழிபெயர்க்கவும் செய்கிறான். இதன் மூலம் நாவலாசிரியர் “சித்திரமும் கைப்பழக்கம் ;செந்தமிழும் நாப்பழக்கம்” என்று இளையர்களுக்குக் கூறுவதாகத் தோன்றுகிறது. தமிழில் பேசுவதையே தமிழனுக்கு மொழிபெயர்த்துச் சொன்னால்தான் புரியும் என்றால் இந்த நிலை எவ்வளவு கொடுமையானது என எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. எங்கே போகிறது நம் சமூகம்? அதேவேளையில் மணிமேகலை கூறும் சாதுவன் என்னும் வணிகனின் மொழிப்புலமை அவனை எவ்வாறு நாகர்களிடமிருந்து காத்தது என்பதையும் எண்ணிப்பார்க்கவைக்கிறது ஆழினி நாவல்.
ஆழினி, ஆழியன் என்னும் தமிழ்ப்பெயர்கள் இனிமைகொண்ட காரணப்பெயர்களாக அமையுமாறு படைத்திருப்பது பாத்திரப்பண்புக்கு மட்டுமின்றி அறிவுமதியின் தமிழ் உணர்வுக்கும் சான்றாகின்றன. மனிதப்பிறவி அல்லாத கடற்கன்னியும் அவள் காதலனும் அழகிய செந்தமிழ்ப்பெயர்களைக் கொண்டிருப்பதும் அவர்கள் செந்தமிழ் பேசுவதுமாகப் படைத்திருப்பது நாவலாசிரியரின் மொழியுணர்வை- மொழிப்பற்றைமட்டும் காட்டுவதாக எனக்குத் தோன்றவில்லை. தாய்மொழி அறியாதவனை மனிதனாக எப்படி மதிக்க முடியும்? என்று அவர் கேட்பதாகவே தோன்றுகிறது. நம் தமிழர்கள் இக்காலத்தில் எவ்வாறு பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுகிறார்கள் என்பதையும் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல்.
பரதனும் புவனனும் நண்பர்கள். புவனன் பரதனின் உடன்பிறப்பான நந்தினியின் காதலன். பரதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கப் புவனன் மீன் வாங்கிவந்து அதனைக் குழம்புவைக்கத் தொடங்குவதில் கதை தொடங்குகிறது. மீனை வெட்டும்போது ஒரு மீன் கடற்கன்னியாக இருப்பதை அறிகிறான்.அவள் பெயர் ஆழினி. தன்னைப் புவனன் வெட்டவிடாமல் தன் வால் மூலம் அவனிடம் வலிமையைக் காட்டுகிறாள் ஆழினி. புவனனின் வலிமை அவளிடம் தோற்றுவிடுகிறது. அவள் செந்தமிழில் பேசுகிறாள். அதனை அவன் யவனத்தமிழ் என்று கூறிப் புரிந்துகொள்ளச் சிரமப்படுகிறான். ஆழினி மாயவித்தைகள் செய்வதிலும் வல்லவளாக இருக்கிறாள். ஆழினி தன் காதலன் ஆழியனைப் பிரிந்துவந்ததைக் கூறிப் புவனனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவன் மூலம் ஆழியனைத் தேடுகிறாள்.
பரதன், நந்தினி, மாதவன் என ஒவ்வொருவராக ஆழியனைத் தேடும் முயற்சியில் கோர்த்துவிடப்படுகிறார்கள். ஆழினியின் கட்டுப்பாட்டினாலும் அவள் இயக்குவதாலும் புவனனும் பரதனும் பல சாகசங்கள் செய்கிறார்கள். மனிதர்கள் எப்படி இந்த நிலத்தில் வாழ்கிறார்கள் என்பதைத் தன் தேடலின் மூலம் அறிகிறாள் ஆழினி. பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதியில் ஆழினியும் ஆழியனும் இணைவதாகக் கதை முடிகிறது. நகைச்சுவை தருவது மகிழ்ச்சி தானே. ஆகவே இந்த நாவலின் சுபமான முடிவை நம்மால் சுகமாகவே ஏற்றுக்கொள்ள முடிகிறது.
ஆழினி நாவல் கற்பனையும் நகைச்சுவையும் கலவாமல் எழுதப்பட்டிருருந்தால் மொழியைப் பற்றிய பிரச்சாரமாகவே அமைந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. ஆழினி நாவல் கற்பனையும் சாகசமும் மாயாஜாலமும் நகைச்சுவையும் கேலிச்சித்திர பாணியும் யதார்த்தமும் கலந்த கலவை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நகைச்சுவையைப் பல அணுகுமுறைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதுபோலப் பல நிகழ்ச்சிகள் இருப்பினும் சான்றுக்கு ஒன்றிரண்டை எடுத்துக்காட்ட முடியும்.
பரதன், நந்தினி, புவனன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கேலி செய்தவதையும் பரதனும் புவனனும் மாதவனைக் கேலிசெய்வதையும் எள்ளலின் மூலம் வெளிப்படும் நகைச்சுவைக்கு உதாரணமாகக் கூறலாம். இப்பாத்திரங்கள் ஆழினியையும் ஆழியனையும் அவ்வப்போது கேலிசெய்கின்றன. அறியாமை காரணமாகப் பிறக்கும் நகைச்சுவைக்கு ஒருவர் பேசும் மொழி புரியாததால் மற்றவர் வேறுவிதமாக அர்த்தப்படுத்திக்கொள்வது,காவலர்கள் தவறாக இட்லிச்சட்டியை (மிஷின்) அறிவியல் கருவி என மயங்குவது போன்றவற்றைக் கூறலாம். அறிந்தும் அறியாததுபோல் தோன்றும் மடமையின் மூலம் நகைச்சுவையை வரவழைப்பது பரதனின் பாத்திரம். மேலும் இப்பாத்திரம் தானே வலியப்போய்ச் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் நமக்குச் சிரிப்பை வரவைக்கிறது. இப்பாத்திரம் கடல்பிசாசு, கடல்பூதம் என முறையே ஆழினி,ஆழியனுக்குப் பெயர் சூட்டுகிறது. பரதனின் பாத்திரம் விகடம் நிறைந்த பாத்திரமாக இருப்பது சிறப்பு.
தமிழ், ஆங்கிலம், மலையாளம் எனக் கலந்து பேசும் கலவை மொழியும் கருவியாகி நகைச்சுவை பிறக்கச்செய்கிறது. கூகிள் மொழிபெயர்ப்பும் நகைப்பிற்கு இடமாகிறது. மனிதரை விலங்கு எனக் கருதிக் குரங்கு, பக்கி எனத் திட்டுவது, பாத்திரங்கள் இடம் பொருள் ஏவல் அறியாமல் பேசுவது, கேட்கப்படும் கேள்விகளுக்கு இடக்காகப் பதில் சொல்வது, ஒலி ஒப்புமை உடைய சொற்களைப் பயன்படுத்தி நகைப்பை ஏற்படுத்துவது, இட்லிச்சட்டி,வடைச்சட்டி என்பனவற்றை மாயாஜாலக்கருவிகளாக்குவது, உவமைகளின் மூலம் சிரிப்பை ஏற்படுத்துவது, சிறுவர் பாத்திரங்களை அறிமுகம் செய்து அவர்களின் மூலம் நகைப்பை உண்டாக்குவது, ஒருவர் மற்றவரை முட்டாளாக்குவது, வீணான சந்தேகத்தின் மூலம் நகைப்பை ஏற்படுத்துவது, நம்பமுடியாத நிகழ்ச்சிகளைப் படைத்துக்காட்டுவது, கதையில் சிக்கல்கள் தோன்றும்போது அவற்றை விடுவிக்கத் தண்ணீர் தெளிப்பது, கடற்கன்னியும் திறம்பெறுவதற்காகச் சுற்றுவது போன்ற கற்பனை நிகழ்வுகள் போன்று பற்பல வழிகளில் நகைச்சுவையைத் திறம்படக் கையாள்கிறார். வஞ்சப்புகழ்ச்சி, மிகைப்படுத்துதல், இரட்டுறமொழிதல் என்னும் சிலேடைப்பேச்சு, அனுபவ நகைச்சுவை , கோமாளித்தனம், நையாண்டி என இன்னோரன்ன வழிகளிலும் நகைச்சுவையை இந்த நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.
முன்னர்க்குறிப்பிட்டதுபோன்று எள்ளி நகையாடுவது அறிவுமதியின் நோக்கமாக இருப்பதால் போகிறபோக்கில் சமூக நிகழ்வுகளை அங்கதச்சுவையுடன் வருணித்துச் செல்கிறார். “பஞ்ச் டயலாக்” பாணியில் உள்ளத்தில் தைப்பது போல ‘நச்’ என்று சில அங்கதங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. “புறங்காட்டு வழக்கமெல்லாம் மானிடரிடம்தான் “ என ஆழினி உரைப்பது; காக்கை பிடித்தல் என்னும் பழக்கத்தை புவனன் மூலம் அங்கதமாக்குவது; இளையர்களிடம் மிதமிஞ்சிக் காணப்படும் மொழிக்கலப்பை மாதவன் மூலம் இடித்துரைப்பது, மாறிமாறிப் பேசுவது மனிதப்பண்பன்று என மாதவன் மூலம் கூறுவது , உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா என்னும் உவமை மூலம் விளம்பரங்களைக் கேலிப்பொருளாக்குவது எனச் சமூகஅங்கதமாக இந்த நாவல் படைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
சங்க இலக்கிய மாண்பையும் பல அரிய சங்கத்தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டையும் இந்த நாவல் மூலம் இளைய உள்ளங்களில் விதைக்க முயன்றுள்ளார் அறிவுமதி. பெருந்தொற்றினால் உலகமே பெரும் அவதிக்குள்ளான 2020 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கிய செல்வி அறிவுமதி இந்த நாவலின் மூலம் மன உளைச்சலைப்போக்கும் அற்புத மருந்தை அளித்துள்ளார். துன்பம் வரும் வேளையில் மனவுறுதியுடன் அதனை எதிர்கொள்ள நகைச்சுவை கைகொடுக்கும் என்பதை இந்த நாவல் மூலம் நாம் அறிகிறோம். மொத்தத்தில் முதல் முயற்சியிலேயே அபாரமான திறமையோடு ஆழினியைப் படைத்துள்ள செல்வி அறிவுமதி இனிவரும் காலங்களிலும் நிறையவும், மனம்நிறையவும் எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.தமிழ் வாசகர் உலகம் இளையர் முயற்சிக்கு என்றென்றும் ஆதரவு நல்கவேண்டும். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று முன்னோர்கள் சொன்னதை மெய்ப்பிக்க நம்முடன் துணை வருகிறாள் ஆழினி.
முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி
மேனாள் விரிவுரையாளர் ( பணி நிறைவு )
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் .
நூலின் பெயர் :ஆழினி
ஆசிரியர்: சொ. நே. அறிவுமதி
பக்கங்கள்: 390
விலை : ரூபாய் 400 /-
உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) – தமிழில்: ஆழிக்ஸ்
கோடைகால இரவில் மின்மினிப் பூச்சிகளின் பிரகாசத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மின்மினிப் பூச்சிகள் அவற்றின் ஒளிரும் அடிவயிற்றில் ஒரு வேதி வினையின் மூலம் ஒளியை உற்பத்தி செய்யும் செயலானது “உயிரி ஒளிர்வு” என அழைக்கப்படுகிறது. ஆனால் பல கடல் வாழ் உயிரினங்களின் ஒளி உற்பத்தி செய்யும் திறன்களால் சில கடற்பரப்புகளே ஒளிரும் மற்றும் மினுமினுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சில மீன்கள் தங்களது இரையை ஈர்ப்பதற்காக தங்கள் வாயின் முன் கவர்ச்சியான ஒளியை உண்டாக்குகின்றன. சில ஸ்க்விட்கள் (Squid) (செபலோபாட்ஸ் (Cephalopods) குடும்பத்தைச் சார்ந்தது) தங்கள் வேட்டையாடுபவர்களைக் குழப்புவதற்காக மை க்கு பதிலாக உயிரி ஒளிர் திரவத்தை வெளியேற்றுகின்றன. புழுக்கள் மற்றும் சிறிய ஓட்டுமீன்கள் தங்கள் இணையை ஈர்ப்பதற்காக உயிரி ஒளிர்வை பயன்படுத்துகின்றன.
மனிதர்கள் பெரும்பாலும் கடல் அலைகள் அல்லது நகரும் படகு போன்ற பொருளியல் ரீதியான இடையூறுகளால் உயிரி ஒளிர்வு தூண்டப்படுவதைப் பார்க்கிறார்கள். இது கடல் வாழ் விலங்குகளைத் தங்களது ஒளியை வெளிக்காட்ட வைக்கிறது. ஆனால் பெரும்பாலும் அவ்விலங்குகள் அத்தகைய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் அல்லது ஒரு துணையை ஈர்க்கும் வகையில் ஒளிரும். உயிரி ஒளிர் உயிரினங்கள் நீர் நிரல் முழுவதும் அதாவது மேற்பரப்பில் இருந்து கடற்பரப்பு வரை, கடற்கரைக்கு அருகிலிருந்து திறந்த கடல் வரை வாழ்கின்றன. ஆழ்கடலில் உயிரி ஒளிர்வு மிகவும் பொதுவானது. மேலும் ஆழ்கடல் மிகவும் பரந்ததாக இருப்பதால், இந்தக் கடலுலகில் உயிரி ஒளிர்வு மிகவும் பொதுவான தகவல்தொடர்பு வடிவமாகவும் இருக்க முடியும்.
ஆழ்கடல் ஒளி: எப்படி உருவாகிறது?
ஒரு உயிரினத்தின் உடலுக்குள் ஒளி ஆற்றலை உருவாக்கும் வேதிவினை மூலம் உயிரி ஒளிர்வு ஏற்படுகிறது. இந்த வேதிவினை உருவாக, ஒரு உயிரினத்தில் லூசிஃபெரின் (Luciferin) என்ற வேதி மூலக்கூறு இருக்க வேண்டும். அது ஆக்ஸிஜனுடன் வினைபுரியும் போது ஒளியை உருவாக்குகிறது. லூசிஃபெரினில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை வேதிவினையை உருவாக்கும் விலங்குகளைப் பொறுத்து மாறுபடும். பல உயிரினங்கள் வினையூக்கி லூசிஃபெரேஸை (Luciferase) உற்பத்தி செய்கின்றன. இது உயிரி ஒளிர்வு செயற்பாடுக்கான வேதிவினையை விரைவுபடுத்த உதவுகிறது.
உணவு அல்லது இணைத் தேடலின் உடனடித் தேவைகளைப் பொறுத்து விலங்குகளின் வேதியியல் மற்றும் மூளைச் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவை ஒளிரும் போது அவற்றின் ஒளிரும் தன்மையைக் கட்டுப்படுத்த முடியும். சில உயிரினங்கள், முன் தொகுக்கப்பட்ட “உயிரி ஒளிர்வு குண்டு” போல, அதாவது ஆக்சிஜனுடன் லூசிஃபெரினைத் தொகுக்கின்றன. அவை ஃபோட்டோபுரோட்டீன் (Photoprotein) என அழைக்கப்படுகின்றன. இவை அத்தகைய உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட தனிமத்தைக் (பொதுவாக கால்சியம்) கொண்டிருக்கும் தருணத்தில் ஒளிரத் தயாராக இருக்கும். அவைகளால் ஒளியின் தீவிரம் மற்றும் நிறத்தைக் கூட தேர்வு செய்ய முடியும்.
உயிரி ஒளிர்வை எது உருவாக்குகிறது?
உயிரி ஒளிர்வு பல கடல் உயிரினங்களில் காணப்படுகிறது. பாக்டீரியா, பாசிகள், ஜெல்லிமீன்கள், புழுக்கள், ஓட்டுமீன்கள், கடல் நட்சத்திரங்கள், மீன் மற்றும் சுறாக்கள் போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். மீன்களில் மட்டும் சுமார் 1,500 அறியப்பட்ட இனங்கள் ஒளிர்கின்றன. சில சமயங்களில், விலங்குகள் ஒளிரும் திறனைப் பெற பாக்டீரியா அல்லது பிற உயிரி ஒளிர் உயிரினங்களை தன்வசப்படுத்திக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஹவாய் பாப்டெயில் ஸ்க்விட் ஒரு சிறப்பு ஒளி உறுப்பைக் கொண்டுள்ளது. அது பிறந்த சில மணிநேரங்களில் உயிரி ஒளிர் பாக்டீரியாவால் காலனித்துவப்படுத்தப்படுகிறது. ஆனால் பொதுவாக, உயிரி ஒளிர்வை உருவாக்கும் வேதிவினைக்குத் தேவையான இரசாயனங்கள் அந்த உயிரிலையே உள்ளன. உயிரி ஒளிர்வு செய்யும் உயிரினங்களின் எண்ணிக்கையும் ஒளியை உருவாக்கும் வேதிவினைகளின் மாறுபாடுகளும் உயிரி ஒளிர்வு திறனானது பல்வேறு காலங்களில், குறைந்தது, 40 வெவ்வேறு காலங்களில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதற்கு சான்றாகும். ஆராய்ச்சிகள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போது இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் ரே-ஃபின்ட் (Ray-Finned) மீன்கள் 27 வெவ்வேறு காலங்களில் அதன் உயிரி ஒளிர்வு திறனானது பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதாக கண்டறிந்தனர். இது முன்னர் அறியப்பட்டதை விட மிகவும் அதிகமாகும்.
பெரும்பாலான ஆழ்கடல் விலங்குகள் சில உயிரி ஒளிர் ஒளியை உருவாக்குகின்றன. ஆனால் இந்த நிகழ்வு மிகவும் ஆழ்கடலுக்குள் நடைபெறாமல் பொதுவான காட்சிக்குப் புலப்படும் கடலின் மேற்பரப்பிலே நிகழ்கிறது. பல சிறிய பிளாங்க்டோனிக் (Planktonic) வகையைச் சார்ந்த மேற்பரப்பில் வசிக்கக்கூடிய உயிரினங்கள் உதாரணத்திற்கு, ஒற்றை செல் டைனோஃப்ளாஜெல்லட்டுகள் (Dinoflagellates) போன்றவை உயிரி ஒளிர் செய்யும் திறனுள்ளவை. சூழ்நிலைகள் சரியாக இருக்கும் போது, டைனோஃப்ளாஜெல்லேட்டுகள் தண்ணீரின் மேற்பரப்பில் அடர்த்தியான அடுக்குகளில் பூக்கின்றன. இதனால் கடல் பகலில் சிவப்பு-பழுப்பு நிறத்தைப் பெறுகிறது மற்றும் இரவில் அவை அலைகளின் மூலம் நகரும் போது பிரகாசமாக பளபளக்கிறது. டைனோஃப்ளாஜெல்லட்டுகள் மற்ற விலங்குகளுக்கு விஷமாக மாறும்போது, இவை தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்கள் என்று அழைக்கப்படுகின்றன. பெரிய மீன்கள் நச்சுத்தன்மையுள்ள டைனோஃப்ளாஜெல்லட்டுகளை உண்ணும் போது, அந்த மீனின் வயிற்றில் அதிக செறிவுகளில் குவிந்து, அவை மீன்களுக்கு உணவாகின்றன. பின்னர் கடல் பாலூட்டிகள் அல்லது மக்கள் இந்த உயிரினங்களை சாப்பிடும் போது, அது நோய் அல்லது மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.
உயிரி ஒளிர்வின் நிறம்
ஒளி பல்வேறு வடிவங்களாக அலைக்கற்றைகளில் பயணிக்கிறது – அவை அலைநீளம் என அறியப்படுகிறது – இதுதான் ஒளியின் நிறத்தைத் தீர்மானிக்கிறது. அலைகள் நம் கண்களை வந்தடையும் போது, அவை அவற்றின் அலைநீளத்தைப் பொறுத்து மூளையால் வண்ணங்களாக மாற்றப்படுகின்றன. நம் கண்களால் காணக்கூடிய அலைநீளங்கள் “புலப்படும் ஒளிக்கற்றைகள்” என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த நிறமாலையில் உள்ள அனைத்து வண்ணங்களையும் அவை நிலத்திற்கு மேலே உள்ள காற்றில் பயணிக்கும்போது நாம் அவற்றைக் காணலாம். ஆனால் ஒளி நீருக்கடியில் வித்தியாசமாக பயணிக்கிறது. ஏனெனில் நீண்ட அலைநீளங்கள் கொண்ட ஒளியானது அதிக தூரம் பயணிக்க முடியாது. கடலில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான உயிரி ஒளிர்வு நீல-பச்சை நிறத்திலே உள்ளன. ஏனென்றால், இந்த நிறங்கள் ஒளியின் குறுகிய அலைநீளங்கள் உடையவை. அதனால் அவைகளால் இரண்டு விதமான கடல் பரப்பிலும் – ஆழமற்ற மற்றும் ஆழமான – கடலில் பயணிக்க முடியும் (இதனால் அவை கண்களுக்குப் புலப்படுகின்றன). சிவப்பு ஒளி போன்ற நீண்ட அலைநீளங்களைக் கொண்ட சூரியனிலிருந்து பயணிக்கும் ஒளியானது ஆழ்கடலை அடைவதில்லை. அதனால்தான் பல ஆழ்கடல் விலங்குகள் சிவப்பு நிறத்தில் உள்ளன. எனவே அவை கண்களுக்குப் புலப்படாமல் உள்ளன. மேலும், அவை கண்களுக்குப் புலப்படாததால், பல ஆழமான நீர் விலங்குகள் அவற்றை முழுவதுமாக பார்க்கும் திறனை இழந்துவிடுகின்றன. இருப்பினும், டிராகன் மீன் (மலாகோஸ்டியஸ் (Malacosteus)) உட்பட சில விலங்குகள் சிவப்பு ஒளியை வெளியிடவும் பார்க்கவும் அத்தகைய திறனுடன் பரிணமித்துள்ளன. ஆழ்கடலில் தங்களுடைய சொந்த சிவப்பு ஒளியை உருவாக்குவதன் மூலம், அவைகளால் சிவப்பு நிற இரையைப் பார்க்க முடியும். அதே போல் மற்ற டிராகன் மீன்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் அவற்றிற்கு அவைகளின் இரையைக் காட்டவும் முடியும். அதே நேரத்தில் மற்ற சந்தேகத்திற்கு இடமில்லாத விலங்குகள் தங்கள் தப்பி ஓடுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பான சிவப்பு ஒளியைப் பார்க்க முடியாது.
விலங்குகள் ஏன் ஒளிர்கின்றன?
உணவளித்தல்
விலங்குகள் தங்கள் ஒளியைப் பயன்படுத்தி அவற்றிற்கான இரையைத் தங்கள் வாயை நோக்கி இழுக்க முடியும் அல்லது அருகிலுள்ள பகுதியை ஒளிரச் செய்ய முடியும். இதனால் அவை தங்களின் அடுத்த வேளை உணவை சற்று நன்றாகப் பார்க்கும் திறன் பெறுகின்றன. சில சமயங்களில் கவரப்படும் இரையானது ஸ்டாரோட்யூதிஸ் ஆக்டோபஸின் (Stauroteuthis Octopus) பெரிய மூக்கைச் சுற்றியுள்ள உயிரி ஒளிர்வால் ஈர்க்கப்படுவது போன்ற சிறிய பிளாங்க்டனாக இருக்கலாம். ஆனால் அந்த ஒளி பெரிய விலங்குகளை ஏமாற்றும். திமிங்கலங்கள் மற்றும் ஸ்க்விட் ஆகியவை குக்கீ-கட்டர் (Cookie-Cutter) சுறாவின் ஒளிரும் அடிப்பகுதியால் ஈர்க்கப்படுகின்றன. அவை விலங்குகளை நெருங்கியவுடன் அவற்றால் கடிபடுகின்றன. ஆழ்கடல் ஆங்லர் மீன்கள் (Angler Fish) ஒளிரும் பாக்டீரியாவால் ஒளிரும் உயிரி ஒளிர் பார்பெல் (Barbel) மூலம் அதன் வாய்க்கு நேராக இரையை ஈர்க்கிறது.
இணையைக் கவர்தல்
கடல் வாழ் விலங்குகளுக்கு உணவைத் தேடுவது மற்றும் அவற்றை அடைவது மட்டுமே வாழ்வாதாரம் இல்லை. தன் இணையை ஈர்ப்பதும் முக்கியமானது. அதற்கும் உயிரி ஒளிர்வு ஒரு சிறப்பான பங்களிப்பைச் செய்ய முடியும். ஆண் கரீபியன் ஆஸ்ட்ராகோட் (Male Caribbean Ostracod) – ஒரு சிறிய ஓட்டுமீன் – தன்னுடைய பெண் இணையை ஈர்க்க அதன் மேல் உதடுகளில் உயிரி ஒளிர் சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன. சில்லிட் நெருப்புப் புழுக்கள் கடற்பரப்பில் வாழ்கின்றன. ஆனால் பௌர்ணமி நாட்களில் முழு நிலா தொடங்கியவுடன் அவை திறந்த நீருக்குச் செல்கின்றன. அங்கு ஒடோன்டோசிலிஸ் எனோப்லா (Odontosyllis Enopla) போன்ற சில இனங்களின் பெண்கள், ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் நகரும் போது ஆண்களை ஈர்க்க அவை இந்த உயிரி ஒளிர்வைப் பயன்படுத்துகின்றன. இந்த ஒளிரும் புழுக்கள் கிறிஸ்டோபர் கொலம்பஸை (Christopher Columbus) புதிய உலகிற்கு வரவேற்கக் கூட உதவியிருக்கலாம். ஆங்லர் மீன், ஃப்ளாஷ்லைட் மீன் (Flashlight Fish) மற்றும் குதிரைமீன் போன்ற அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறுவதற்காக ஒளிர்வதாக கருதப்படுகிறது. அல்லது மற்றபடி இனச்சேர்க்கைக்காக தொடர்பு கொள்ள பயன்படுகிறது.
பாதுகாப்பு
வரவிருக்கும் வேட்டைக்காரர்களைப் பயமுறுத்துவதற்கு பெரும்பாலும் விலங்குகள் உயிரி ஒளிர்வின் வலுவான ஒளியை பயன்படுத்துகின்றன. பிரகாசமான சமிக்ஞை வேட்டையாட வரும் பெரிய விலங்குகளைத் திடுக்கிடச் செய்து திசைதிருப்பும் மற்றும் அதன் இலக்கு இருக்கும் இடத்தைப் பற்றிய குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். சிறிய கோபேபாட்கள் (Copepods) முதல் பெரிய காட்டேரி ஸ்க்விட் வரை, இந்த தந்திரோபாயம் ஆழ்கடலில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். “கிரீன் பாம்பர் (Green Bomber)” புழு (ஸ்விமா பாம்பிவிரிடிஸ் (Swima Bombiviridis)) மற்றும் பாலிசீட் (Polychaete) குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இதேபோன்ற புழு இனங்கள் தங்களுக்குத் தீங்கு நேரும் போது அவற்றின் உடலில் இருந்து ஒரு உயிரி ஒளிர் “குண்டை” வெளியிடுகின்றன. இந்த ஆழ்கடல் புழுக்கள் கடலடியில் மிக அருகிலே வாழ்கின்றன. மேலும் அவை 2009 இல் தான் கண்டறியப்பட்டன. ஆக்டோபோட்யூதிஸ் டெலெட்ரான் (Octopoteuthis Deletron) போன்ற ஆழ்கடல் ஸ்க்விட் போன்ற சில விலங்குகள் அவற்றின் உயிரி ஒளிரும் கைகளைப் பயன்படுத்தி அவற்றை வேட்டையாடுபவைகளின் மேல் பசை போல ஒட்டிக்கொள்ளும். இச்செயல் அத்தகைய வேட்டையர்களை திசைதிருப்பக்கூடும். இந்த சலசலப்புகள் அனைத்தும் அபாய எச்சரிக்கையாகவும் செயல்பட்டு பெரிய வேட்டையர்களையும் ஈர்க்கும். சில சமயங்களில் ஒரு வேட்டைக்காரர் தன் இரையை மட்டுமே கடிக்கக்கூடும். மேலும், அருகில் சாட்சியாக இருக்கும் உயிரினம் அதன் வயிற்றில் இருந்து தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
எதிர் வெளிச்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உருமறைப்புக்கு உதவ உயிரி ஒளிர்வு பயன்படுத்தப்படும். ஒரு விலங்கின் அடிப்பகுதியில் உள்ள ஃபோட்டோஃபோர்ஸ் (Photophores) என்ற சுரப்பி உறுப்பானது ஒளியை வெளியிட்டு மேற்பரப்பில் இருந்து வரும் மங்கலான ஒளியுடன் பொருந்திப்போகும். இதனால் கீழே இருந்து தன் இரையைத் தேடும் வேட்டையாடுபவைகளுக்கு அவை தங்களுக்குத் தேவையானது எது என்பதைப் பார்ப்பது கடினமாகிறது.
மனிதத் தொடர்புகள்
கலை
கடல் வாழ் உயிரினங்களைப் பொறுத்தவரை உயிரி ஒளிர்வு செயல்பாடானது அவை தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கும் உணவை அடைவதற்கும் அல்லது காயமடையாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுவதாகும். ஆனால் மனிதர்களுக்கு, உயிரி ஒளிர்வு மூலம் உற்பத்தி செய்யப்படும் அழகான வண்ணங்களும் ஒளியும் கலைப் படைப்புகளாக இருக்கும்.
2012 இல் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு தற்காலிக கண்காட்சியானது கலைக்கும் அறிவியலுக்கும் இடையிலான இந்தத் தொடர்புகளை ஆராய்ந்தது. கலைஞர் ஷிஹ் சீ ஹுவாங் (Shih Chieh Huang) அருங்காட்சியகத்தின் இருண்ட இடத்தில் தொங்கும் நிறுவல்களை உருவாக்கினார். அவை ஆழ்கடலில் மிதப்பது போல் ஒளிரும் தன்மை கொண்டதாக இருந்தது. சில கலைஞர்கள் உயிரோட்டமான வரைபடங்களை உருவாக்க பாக்டீரியாவை பயன்படுத்துகின்றனர் அல்லது ஒளிரும் ஒற்றை செல் உயிரினங்கள் நிறைந்த கண்ணாடி தட்டுகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.
அறிவியல்
கடல் மற்றும் அதன் மர்மங்களைப் பற்றி மேலும் அறிய ஆராய்ச்சியாளர்களால் உயிரி ஒளிர்வை ஒரு கருவியாகவும் பயன்படுத்த முடியும். உயிரி ஒளிர்வில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானி எடி வைடர் (Edie Widder), முதல் முறையாக ராட்சத ஸ்க்விட்டைப் படமெடுக்க முயற்சிக்கும் ஒரு குழுவுடன் இருந்தார். ராட்சத ஸ்க்விட் ஒரு போலி ஸ்க்விட்டுடன் இணைக்கப்பட்ட உயிரி ஒளிர்வு ஒளியால் ஈர்க்கப்படும் என்று அவர் சந்தேகித்தார்-அது சிறிய போலி ஸ்க்விட்டை சாப்பிட விரும்பியதால் அல்ல, ஆனால் அதன் ஒளிரும் ஒளியானது “அபாய எச்சரிக்கையாக” செயல்பட்டு அருகில் பெரிய இரை இருப்பதைக் குறிக்கும் என்பதற்காக. அவருடைய கோட்பாடு சரியானது என்று நிரூபிக்கப்பட்டது. 2012 இல் ஒரு உயிருள்ள ராட்சத ஸ்க்விட் அதன் வாழ்விடத்திலே முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டது.
இக்கட்டுரையானது https://ocean.si.edu/ocean-life/fish/bioluminescence என்ற இணைய முகப்பிலிருந்து எடுத்து இங்கு தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலம்: The Ocean Portal Team
தமிழில்: ஆழிக்ஸ்
இரா. கலையரசியின் கவிதைகள்
மீன் கூடை
**************
கடல் கை விட்ட பிறகு
கண்ணீரில் மூழ்கிய மீன்கள்…
வலைகளின் வஞ்சனைகளில் சிக்கி
உயிரை இழந்து கரையைத் தொட்டன
கதம்ப மீன்கள்.
உப்புக் காற்றில் ஊர் கூடி
செத்த உடம்பை ஏலமிட
ரத்தம் ஊறிய செதிள்கள்
துடிதுடித்து இறந்து
நெய்தலில் காத்து கிடக்கின்றன.
ரகம் வாரியாகப் பிரிக்கப்பட்டவை
பெருமுதலாளிகள் பிடித்துச் செல்ல
மிச்சம் மீதி வந்து சேர்ந்தன
மிச்சம் இல்லாத வாழ்க்கைப் பாட்டில்
மீதியைக் கழித்துக் கொண்டிருக்கும்
கிழவி கஞ்சம்மாளிடம்.
முந்திக்கு பத்தாத சேலை
முகத்தின் சுருக்கங்களை மூடிட
கால்கள் களைத்துப் பின்ன
கூனாகி சாய்ந்த முதுகு
கழுத்தை நிமிர விடாமல் பிடித்தது.
கழித்து விடப்பட்ட மீன்கள்
கிழவியிள் கூடைக்கு மாறுதல்
கேட்காமலே மாறி இருந்தன.
இறந்த பிறகு நாறும் மனிதனே
மூக்கைப் பிடித்துக் கொள்கிறான்.
தட்டுத் தாடுமாறி வண்டியில்
தவழாத குறையாய் ஏற
மூக்கை அடைத்து கொண்டோர்
வாயையும் விட்டு வைக்கவில்லை.
கிழவியைத் தடுத்த தடித்த வார்த்தை
இரக்கமின்றி இறங்கச் சொன்னது.
வாயைப் பிளந்து கண்கள் திறந்து
வியந்து பார்த்தன
இறந்த மீன்கள்
கஞ்சம்மாளின் தேய்ந்த செருப்பு
சாலையில் காதல் பரப்பி
வர மறுத்து வம்பு செய்கிறது.
தலையில் அமர்ந்தபடி கண்களை
மூடி இறந்திருந்த மீன்கள்
வழியில் கண்ணில் பட்ட
மச்ச அவதாரத்தில் இருந்த
கடவுளைப் பார்த்து எதையோ
கேட்க நினைத்தது போலும்.?
சாவு
******
கண்கள் வழிந்த கண்ணீரின்
ஈரம் கிடைமட்டமாக சரிய
வானத்தை பார்த்த கண்கள்
மெல்ல தானே மூடிக் கொண்டது.
அழுகுரல்கள் அங்குமிங்கும் சிதறி
அசைவற்ற உடலை பயமுறுத்த
நீண்ட கால்களின் விரல்களை
தொட்டு பார்த்தது பட்டாம்பூச்சி.
தட்டுமுட்டு சாமான்களை ஒதுக்கி
குளியலைத் தொடங்கி விட்டனர்.
அழுத்து சலித்து வாழ்ந்த உடல்
துவண்டு விழுகவே விரும்பியது.
சாவுக்கு காத்திருந்த மனிதர்கள்
அழகாக அலங்கரித்தனர்.
பட்டு சேலை ஒன்று படர
பார்த்து பார்த்து கட்டினர்.
சவப்பெட்டிக்குள் கிடத்தபட்ட உடல்
சத்தமின்றி அமைதியாய் இருக்க
மாலைகளின் இடுக்குகளில்
முகத்தை எட்டி பார்த்தனர் சிலர்.
தாரை தப்பட்டைகள் வரிசைகட்ட
ஆளுக்கொரு மாலை அணிவித்து
பெருமை சேர்த்தனர் உடலுக்கு.
வீடு,வாசல் எல்லாம் பிரிச்சு
உயிலும் எழுதி முடிச்சாச்சு
சண்டை சச்சரவு இல்லாமல்
வராத கண்ணீர வழிச்சு
வழிச்சு போட்டாங்க புள்ளைங்க!
பூக்கார முனியம்மா நெஞ்சுல
அடித்து அழுது மாஞ்சிட்டா!
வடக்குதெரு வண்ணமயிலு
வழக்கமான சேலையில வந்திருந்தா!
பக்கத்து அக்கத்து வீட்டுக்காரங்க
வாயில துணிய வச்சு
அழுவோமா? வேண்டாமா?னு
யோசிச்சுகிட்டே இருக்காங்க.
பூக்கள் மட்டும் வாசமா இருக்க
மணத்த முகர தான் முடியல.
அழுத கண்ண தொடச்சுகிட்டு
அலாக்கா தூக்கிட்டாங்க என்னைய!
வீடு, வாசல் ஊரக் கடந்து
சுடுகாட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.
நல்லா தோண்டுன குழி காத்திருக்க
மண்ணக் கட்டிக்கிட இறங்கினேன்
பிடி மண்ண பூத்தூவலா தூவ
முகத்த தொட்டு பார்த்த ஆசையில
அப்படியே மேல தங்கிருச்சு.
முழுசா மூடின குழிமேட்டுல
மனுச பொழப்பு அவ்வளனுதான்னு
சொல்லிகிட்டே போன சத்தம்
கொஞ்சம் கொஞ்சமா
என்னை விட்டு போய்கிட்டே இருக்கு.