மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டை நோக்கி – தமிழில்: ச.வீரமணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டை நோக்கி – தமிழில்: ச.வீரமணி




[இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 6-10 தேதிகளில் கேரளா மாநிலம், கண்ணூரில் நடைபெறுகிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சி அடுத்த மூன்றாண்டு காலத்திற்கு மேற்கொள்ளவேண்டிய அரசியல் திசைவழியை வகுத்திடும்.

மத்தியக் குழுவால், இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட வரைவு அரசியல் தீர்மானம் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இது கட்சியின் அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதிகளால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் இறுதிப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கேயுரிய நிகரற்ற வழிமுறைக்கிணங்க, கட்சிக்குள் உள்கட்சி ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு, கட்சி உறுப்பினர்களால் அரசியல் நடைமுறை உத்திகள் கோட்பாடு தீர்மானிக்கப்படுகிறது.

கட்சியின் அகில இந்திய மாநாடு சென்ற முறை 2018இல் நடந்ததற்குப் பின், 2019 மே மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையுடன் மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்குப் திரும்பியபின்னர், நாட்டில் வலதுசாரிகளின் நிலை ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தோம். அதன் விளைவாக, ஆட்சியாளர்கள் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வெறித்தனமாக அமல்படுத்தத் தொடங்கியதையும் பார்த்தோம். இத்துடன் பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கியதையும் பார்த்தோம். இவற்றின் விளைவாக ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசும் விரல் விட்டு எண்ணுகிற ஒரு சில பெரும் கார்ப்பரேட்டுகள் லாபமும், சொத்துக்களும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடிந்தது. அதே சமயத்தில் வேலையின்மை, வருமானங்கள் இழப்பு, விலைவாசி உயர்வு மற்றும் விவசாய நெருக்கடியின் விளைவுகள் முதலியவற்றால் மக்களின் வாழ்நிலைமைகள் குறிப்பாக கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், மிகவும் மோசமாக மாறின.

இந்தக் காலகட்டத்தில் மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், அவற்றால் மக்கள் மீது ஏற்றப்பட்ட சுமைகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினர் பெரிய அளவில் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, அரசாங்கம் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய இயக்கம் ஓராண்டுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி, அவற்றை ரத்து செய்ய வைத்திட்ட வரலாறு படைத்திட்ட போராட்டமாகும். தொழிலாளர் வர்க்கமும் தொழிலாளர் விரோத ‘லேபர் கோடுகளுக்கு’ (Labour Codes) எதிராகவும், தனியார்மயத்திற்கு எதிராகவும், போதுமான அளவு குறைந்தபட்ச ஊதியம் கோரியும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. 2018க்கும் 2022க்கும் இடையே நான்கு பொது வேலை நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் மார்ச் 28-29 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தங்களில் அனைத்துத்துறைகளில் பணிபுரியும் கோடானுகோடி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாத்திடவும் பல்வேறு இயக்கங்களும் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. இவற்றில் பிரதானமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இயக்கமாகும். இப்போராட்த்தில் நாடு முழுதும் மிக விரிவான அளவில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்தன.

இப்போராட்டங்களையும், இயக்கங்களையும் வளர்த்தெடுப்பதிலும், தீவிரப்படுத்துவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகள் முக்கிய பங்களித்திருக்கின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிரான போராட்டத்துடன் நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான அரசியல்-சித்தாந்தப் போராட்டத்தையும் ஒருங்கிணைத்திட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சொல்லி வந்திருக்கிறது. தேசியவாதம் தொடர்பாக  இந்துத்துவா வெறியர்கள் மேற்கொண்டுவரும் முஸ்லீம்கள் எதிர்ப்புப் பிரச்சாரம் மக்கள் மத்தியில், குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அங்கீகரித்தாக வேண்டும். இவ்வாறு இந்துத்துவாவாதிகள் மேற்கொண்டுவரும் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு வலுவான அரசியல்-சித்தாந்தப் போராட்டத்தை நடத்தாவிட்டால், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியை வலுவாக எதிர்த்திட முடியாது. இந்துத்துவாவிற்கு எதிராக இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியும் மற்றும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை களும் தவறியுள்ளபோது, இதனை முன்னெடுத்துச் செல்லவேண்டிய  பொறுப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதர இடதுசாரிக் கட்சிகளுக்கும் மாறியிருக்கிறது. எனவே அதற்காக அவை, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளையும் தங்களைச்சுற்றி அணிதிரட்டி ஒரு மேடையை அமைத்திட வேண்டியிருக்கிறது.

கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சியை அரசியல் ரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் சுயேச்சையான முறையில் வளர்த்தெடுப்பது எப்படி என்பது குறித்து கூர்மையாகக் கவனம் செலுத்திடும். கட்சி, வலுவாக இருந்த இரண்டு தலங்களில் பின்னடைவினையும், வீழ்ச்சியையும் அடைந்திருக்கிறது என்கிற உண்மையிலிருந்து இவ்வாறு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் திரிபுராவில் பாஜக ஆகிய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகளால் கடுமையாகத் தாக்குதலுக்கும், வீழ்ச்சிக்கும் ஆளாகி இருக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் எண்ணற்ற கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறுவிதமான வடிவங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனினும், இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் கட்சியின் ஊழியர்கள் துணிவுடன் எதிர்கொண்டும், மீளவும் அணிதிரண்டும், உழைக்கும் மக்களைத் திரட்டி, போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்சியின் அகில இந்திய மாநாடு, கடந்த மாநாட்டிற்குப்பின் நடைபெற்றுள்ள ஸ்தாபனப் பணிகள் மற்றும் அளிக்கப்பட்ட கடமைகள் எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்திடும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிட் பெருந்தொற்றும், சமூக முடக்கங்களும் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கின்றன. ஏழை மக்கள் மீது அவை சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இத்தகு சிரமமிகு காலகட்டத்தில் கட்சி மக்கள் மத்தியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கும் உதவும் விதத்தில் கணிசமான அளவிற்கு நிவாரணம் அளித்தது. இத்தகு வேலைகள், கோவிட் தனிமை மையங்கள் அமைத்தல், ரேஷன் உணவுப் பொருட்கள் வழங்குதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அளித்தல், முகக் கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்குதல் போன்ற விதத்தில் அமைந்திருந்தன. கட்சி ஸ்தாபனம் தொடர்பான அம்சத்தைப் பொறுத்தவரையில், கட்சிக்குள் இளம் தோழர்கள் மற்றும் பெண்களைக் கொண்டுவருவதற்கும், கட்சிக்குப் புத்துயிர் அளிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தகைய பின்னணியில் கேரளாவில் நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு சிறப்புக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கண்ணூர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கோட்டையாகும். கட்சி இங்கே மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இம்மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 600க்கும் அதிகமாகும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு மத்தியில் அதிகபட்ச அளவு கட்சி உறுப்பினர் எண்ணிக்கை உள்ள மாவட்டம் இதுவேயாகும்.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், 2021 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, இரண்டாவது முறையாக பெரிய அளவு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளும், செயல்பாடுகளும் மக்களின் அபரிமித ஆதரவையும் ஏற்பளிப்பையும் பெற்றன. இடது ஜனநாயக முன்னணி பின்பற்றி வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொள்கைகள், ஒன்றிய பாஜக அரசாங்கம் பின்பற்றிவரும் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானவைகளாகும், மாற்றானவைகளாகும்.

எனவே, கேரளாவில் நடைபெறும் கட்சியின் அகில இந்திய மாநாடு, தேசிய அளவில் இடது ஜனநாயக சக்திகளின் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திடும் அதே சமயத்தில் அது கேரள இடது  இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்ப்பது இயற்கையேயாகும்.

கண்ணூர் அகில இந்திய மாநாடு, வலதுசாரி, நவீன தாராளமய இந்துத்வா சக்திகளுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரி சக்திகளும் உறுதியாகப் போராடி வருபவர்கள் என்பதை உறுதிப்படுத்திடும். அகில இந்திய மாநாடு, நாட்டிலுள்ள அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் இடது ஜனநாயக மாற்றுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான திசைவழியைக் காட்டிடும்.

(மார்ச் 30,2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

Government of Gujarat abandons secularism Article in tamil translated By S. Veeramani மதச்சார்பின்மையைக் கைவிடும் குஜராத் அரசு - தமிழில்: ச.வீரமணி

மதச்சார்பின்மையைக் கைவிடும் குஜராத் அரசு – தமிழில்: ச.வீரமணி




வரும் 2022-23 கல்வியாண்டு முதல் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதை கற்பிக்கப்படும் என்று குஜராத் மாநில அரசின் கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது, அரசு மதச்சார்பின்மைக் கொள்கையை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகள் எதுவும் எவ்விதமான மத போதனைகளையும் அளிக்கக்கூடாது என்பது அனைத்து மதச்சார்பற்ற அரசுகளின் அடிப்படைக் கொள்கையாகும்.

இந்தக் கொள்கையை அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் முதலான பல நாடுகள் பின்பற்றுகின்றன. தனியார் பள்ளிகள் எவ்விதமான மத போதனைகளையும் அளித்திட சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசுப் பள்ளிகளுக்குக் கிடையாது. பகவத் கீதை என்பது ஒரு மதஞ்சார்ந்த நூலாகும். இது, இந்து மதத்தின் பாரம்பர்யங்கள் மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் வாழ்க்கை முறை மற்றும் நடத்தையை மேற்கொள்ளவேண்டும் என்று கோருகிறது. அதன் மதப் பின்னணியை ஓரங்கட்டிவிட்டு, மாணவர்களுக்கு அறநெறி மற்றும் நெறிமுறைகளைக் கூறும் ஒரு நூலாக அதனைச் சித்தரித்திட முடியாது. கடவுளால் உண்டாக்கப்பட்ட இந்துக்களில் நால் வர்ணப் பிரிவை எவராலும் மாற்ற முடியாது என்கிற கீதையின் சில அம்சங்கள் குறித்து இந்துக்களிலேயே விமர்சிப்பவர்கள் உண்டு. கீதை படுபிற்போக்குத்தனமான ஒன்று என்பது குறித்தோ அல்லது அது சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறது என்பது குறித்தோ உண்மையில் பிரச்சனை கிடையாது. அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த அறிவுரைகளை எப்படி அளித்திட முடியும் என்பதே முன்னுக்கு வந்திருக்கும் பிரச்சனையாகும்.

அரசமைப்புச்சட்டத்தின் கீழ், அடிப்படை உரிமைகள் குறித்து விவரித்திடும் 28(1)ஆவது அத்தியாயம் கூறுவதாவது: “அரசின் நிதி உதவியின்கீழ் இயங்கிடும் எந்தவொரு கல்வி நிறுவனமும் மதஞ்சார்ந்த எந்தவிதமான அறிவுரையையும் அளித்திடாது.” அரசாங்கத்தால் நடத்தப்படாத கல்வி நிலையங்களில் அல்லது அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனங்களில், ஏதேனும் மதஞ்சார்ந்த அறிவுரைகள் அளிக்கப்படுமானால், அதனைச் செவிமடுக்கும் மாணவர் வயதுக்கு வராதவராக (மைனராக) இருந்தால், அவருடைய பாதுகாவலரின் அனுமதியைப் பெறாமல், அத்தகைய அறிவுரைகளைச் செவிமடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அது மேலும் கூறுகிறது. எனவேதான், பகவத் கீதை தொடர்பான குஜராத் அரசு மேற்கொண்டுள்ள முடிவு, அரசின் நிதியின்கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் எவ்விதமான மதஞ்சார்ந்த அறிவுரைகளும் அளிக்கப்படக்கூடாது என்கிற நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரான ஒன்றாக மாறுகிறது.

குஜராத் பாணியை இப்போது இதர பாஜக ஆளும் மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. கர்நாடகப் பள்ளிக் கல்விக்கான அமைச்சர், கல்வியாளர்களுடன் கலந்தாலோசனை செய்து, பள்ளிகளில் பகவத்கீதை அறிமுகப்படுத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். “பகவத் கீதை, இந்துக்களுக்கானது மட்டுமல்ல, அது எல்லோருக்குமானது” என்றும் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். இதே கர்நாடக அரசாங்கம்தான் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதைச் சட்டவிரோதமாக்கி இருக்கிறது. ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், “பகவத் கீதை நமக்கு அறநெறிகளையும், நெறிமுறைகளையும் போதிக்கிறது. ஒவ்வொரு மாநில அரசாங்கமும் இதுபற்றிச் சிந்தித்திட வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.

இந்திய அரசமைப்பின் ஆணிவேராக விளங்கும் மதச்சார்பின்மையை வேரறுத்திட வேண்டும் என்பதற்கான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியே இவ்வாறு அரசுப்பள்ளிகளில் இந்து மதம் சம்பந்தமான புத்தகங்களையும், புராணங்களையும் புகுத்துவதற்கான முயற்சிகளாகும். பள்ளிப் பாடப்புத்தகங்களில் கீதையைப் புகுத்துவதனை நியாயப்படுத்திட “இந்தியக் கலாச்சாரம் மற்றும் அறிவு முறைகள்” பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை குஜராத் கல்வி அமைச்சர் மேற்கோள் காட்டியிருக்கிறார். இதேபோன்றே அரசின் பல துறைகளிலும் அரசின் நிதி உதவியுடன் இந்து மத அடையாளங்களைப் புகுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதும், இந்து மதக் கோவில்களைப் புதுப்பித்திட நடவடிக்கைகள் மேற்கொள்வதும் வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு பிரதமர் காசி விஸ்வநாத் கோவிலுக்கான பாதையைத் துவக்கி வைத்திருப்பது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அரசு, நாட்டு மக்களில் பெரும்பான்மையாகவுள்ளவர்களின் மதத்திற்கு ஆதரவும் அரவணைப்பும் அளிப்பதும், அதற்கு அரசின் நிறுவனங்களிலும் அமைப்புமுறைகளிலும் சலுகைகள் அளிப்பதும் நாட்டில் ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மை தொடர்பாக பெயரளவில் செயல்படுவதென்பதற்கும் முடிவுகட்டிவிட்டது. ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’), மதமாற்றம் மற்றும் கால்நடைகள் வெட்டப்படுவதற்குத் தடை முதலானவற்றிற்கு எதிரான சட்டங்கள் சிறுபான்மை மக்களைக் குறிவைத்தே பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்றே ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள, குடியுரிமைத் திருத்தச் சட்டமானது ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு அவருடைய மதத்தையும் பரிசீலித்திட வேண்டும் என்று விதி ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்தில், பகவத் கீதையைப் பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் சேர்த்திருப்பதை, அங்கே பிரதான எதிர்க்கட்சியாக இருந்துவரும் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், “பள்ளிப் பாடப் புத்தகங்களில் பகவத்கீதையை அறிமுகப்படுத்தியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால், அரசாங்கம்தான் கீதையிலிருந்து முதலில் பாடம் படிக்க வேண்டியது அவசியமாகும்,” என்று கூறியிருக்கிறார். இதேபோன்றே ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளரும், “நாங்கள் குஜராத் அரசின் முடிவை வரவேற்கிறோம். இது மாணவர்களுக்குப் பயனளிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

குஜராத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு அளித்திருக்கும் பிரதிபலிப்பு ஒரு புதிய எதார்த்த நிலையைக் காட்டுகிறது. அதாவது, அங்கே இந்துத்துவா மிகவும் உறுதியாக ஒரு மேலாதிக்க நிலைக்கு உயர்ந்திருப்பதை இது காட்டுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டும் என்று விரும்புகிற இடது மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும், இந்த எதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் தங்கள் போராட்ட உத்திகளை வகுத்திட வேண்டும்.

(மார்ச் 23, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Communalisms Article By Aijaz Ahmad In tamil translated By S. Veeramani வகுப்புவாதங்கள் - அய்ஜாஸ் அகமது | தமிழில்:ச.வீரமணி

வகுப்புவாதங்கள் – அய்ஜாஸ் அகமது | தமிழில்:ச.வீரமணி




வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடது சாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் குறித்தும், வகுப்புவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் வரலாறுகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் பின்பற்றிய வகுப்புவாதக் கொள்கைகள் குறித்தும் மிகவும் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொருள் குறித்து நானும் மிகவும் விரிவாகவே எழுதியிருக்கிறேன். அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக இங்கே அடுக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் சில உண்மைகள் அவ்வப்போது நம் நெஞ்சில் வந்து மோதத்தான் செய்கின்றன.

வகுப்புவாதம், மதச்சார்பின்மை, தேசியம் அல்லது தேசியவாதம் போன்றவை குறித்து நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இது தொடர்பாக என் அடிப்படை நிலைப்பாட்டை மிகவும் கடுமையான வார்த்தைகளுடனேயே தொடங்கிட விரும்புகிறேன்.

அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் ஓர் ஆரோக்கியமான அரசியலில் தீர்க்கப்பட முடி யாத நோயல்ல. ஆர்எஸ்எஸ், சிவசேனை வகையறாக்கள் பரப்பிடும் வகுப்புவாத வெறி உணர்வுகளுக்கு எதிராக அதைவிட அதிகமான அளவில் மதச்சார்பின்மை, நாட்டுப்பற்று உணர்ச்சிகளைக் கொடுப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்திட முடியும். வகுப்புவாத நடவடிக்கைகள் என்று நாம் அழைத்திடும் – தற்போது மக்கள் பின்பற்றி வரும் – சில நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மிகவும் சிக்கலான வரலாற்று வேர்களைக் கொண்டிருக்கின்றன. இந்திய சமூகத்தின் கட்டமைப்பிலும், நாள்தோறும் நாம் பின்பற்றும் நடைமுறை அரசியலிலும் நன்கு ஆழமாக வேரூன்றி இருக்கின்றன.

நாம் பின்பற்றிவரும் தத்துவங்களை விமர்சனத்திற்குள்ளாக்குவது சந்தேகமற மிகவும் முக்கியமானதுதான். ஆனால், எண்ணற்றோர் உயிர்கள் சூறையாடப்படுவதற்குக் காரணமாக விளங்கும் வகுப்புவாத வன்முறை சம்பந்தமான உண்மைகளையும், விவரங்களையும் திரட்டுவது அதைவிட மிகவும் முக்கியமானதாகும்.

அதுமட்டுமல்ல, வகுப்புவாத சிந்தனைகளும் நடைமுறைகளும் மிகவும் போற்றுதலுக்குரியவை என்றும், இவை நியாயமானவை மட்டுமல்ல, அவசியமானவையும், பயனளிக்கக் கூடியதும் என்றும் நாட்டில் உள்ள மக்களில் மிகப் பெரும் பாலானோர் நம்பிக்கொண்டும் இருக்கிறார்களே, இவர்களின் நம்பிக்கைகளை இவர்கள் மனம் கோணாதவாறு எவ்வாறு விமர்சிக்கப் போகிறோம் என்பது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட நரேந்திர மோடி பாஜக சார்பில் இந்தியாவின் பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதவெறி உணர்ச்சியை மக்கள் மத்தியில் கிளப்பி விசிறிவிடுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதற்குச் சரியான அடையாளம் நரேந்திர மோடி என்று நான் துணிந்து கூறுவேன்.

அவர் பிரதமராகிவிட்டால், வகுப்புவாதத் திற்கு எதிராக நாம் மேற்கொள்ளும் பயணம் மேலும் சிறிது காலத்திற்கு நீடித்திடும். இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தோழர் ரோசா லுக்சம்பர்க் ஒருமுறை கூறுகையில், முதலாளித்துவம், சோசலிசத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் மாறாக காட்டுமிராண்டித் தனத்திற்கும் கூட இட்டுச் செல்லலாம் என்றும் சொன்னார். இந்தியாவில் மக்களின் நலன்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைமையில் அமைந்துள்ள முதலாளித்துவத்திற்கு லுக்சம்பர்க்கின் கூற்று மிகவும் சரியாகவே பொருந்துகிறது. ஏனெனில், நம்நாட்டில் செயல்பட்டுவரும் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்கு வளர்வதுடன், ஒருபக்கம் இத்தகைய முதலாளித்துவக் கொள்ளைக் கும்பலை உருவாக்கிடவும், மிகப்பெரிய அளவில் மக்களை பலிகிடா ஆக்கிடவும் இட்டுச் செல்கின்றன.

இவ்வாறு ஓர் இனவெறியால் கொடுமைகளுக்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்கள், தங்கள் சொத்து சுகங்களை மட்டுமல்ல, தங்கள் அறநெறிப் பண்புகளையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் இருக்கக்கூடிய நிலையில் பாசிஸ்ட்டுகள் அவர்களை மிக எளிதாகத் தூண்டிவிட்டு, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

“பாசிசம்” தலைதூக்குவது என்பது புரட்சியை நம்மால் கொண்டுவர முடியாமல் நாம் தோல்வி கண்டதற்கான தண்டனை என்று கிளாரா ஜெட்கின் கூறினார். அது மிகவும் சரி யான கூற்று என்பதை வரலாறு மெய்ப்பித்திருக்கிறது.

முதலாவதாக, உலக அளவில் இடதுசாரி சக்திகள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, உலகின் பல பகுதிகளில் வலதுசாரி சக்திகள் வலுவடைவதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதன் காரணமாக, (1) 1989க்கு முன் வலுவாக இருந்த சோசலிச முகாம் உலகின் பல பகுதிகளிலும் வலுவிழந்தது. இன்றைய தினம் உலகில் மிகச் சிறிய பூப்பந்தில் தான் (global space) மார்க்சிசமும், கம்யூனிசமும் கோலோச்சுகிறது. (2) அதிதீவிர முதலாளித்துவம் (extreme capitalism) என நான் அழைத்திடும் நவீன தாராளமயம் உலகில் பல நாடுகளில் மிகவும் விரிவான முறையில் நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் பெரிய அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பு என்பது ஏற்படவில்லை. (3) ஆசிய மற்றும் ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள பல நாடுகள் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நாடுகளில் மேலோங்கியிருந்த தேசிய உணர்வு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு தற்போது முற்றிலுமாக இல்லாது ஒழிந்துவிட்டன. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு நரேந்திர மோடி. மதவெறியைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர் – நம்மால் இந்து மதவெறியன் என்றும் அவரது சகாக்களால் இந்து தேசியவாதி என்றும் அழைக்கப்படும் ஒருவர் – பிரதமராக முன்னிறுத்தப்படுவது சரியான எடுத்துக் காட்டாகும்.

இன்றைய தினம் நாட்டில் உள்ள அம்பானிகளும், டாட்டாக்களும், உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான இந்தியக் கோடீஸ்வரர்களும் நரேந்திர மோடியைச் சூழ்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இதற்குமுன் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் இப்போது அவரிடம் மன்னிப்பு கோரி அவரை வரவேற்று, அவருடன் கூடிக் கூலாவிக் கொண்டிருக்கின்றனர். எகிப்து நாட்டில் உள்ள முஸ்லீம் பிரதர்ஹூட் கட்சியின் தலைவரும் எகிப்தின் அதிபருமான மோர்சியைப் போன்று மோடி சிறப்பான முறையில் சித்தரிக்கப்படுகிறார்.

கிளாரா ஜெட்கின் கூற்றின் அடிப்படையில் ஆராய்கையில் இந்தியாவில் இவ்வாறு பல்வேறு வகுப்புவாதங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இடதுசாரிகளின் தோல்வியேயாகும். வகுப்புவாதத்திற்கு உண்மையான மாற்று என்பது கம்யூனிசம் அல்லது சோசலிசமேயாகும். (The real alternative to communalism is communism or socialism). நிச்சயமாக மதச்சார்பின்மையோ (secularism) அல்லது தேசியவாதமோ (nationalism) கிடையாது. கடந்த கால் நூற்றாண்டில் இடதுசாரிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளராததன் காரணமாகத்தான் இத்தகைய மதவெறி, இனவெறி மற்றும் பிராந்திய வெறி சக்திகள் நாட்டின் பல பகுதிகளிலும் வளர்ந்துள்ளன. நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்த அளவில் இத்தகைய சக்திகள் அவற்றுடன் முழுமையாகக் கருத்தொற்றுமை கொண்டு ஒத்துப்போகின்றன.

நாட்டில் இவ்வாறு பத்து விழுக்காட்டு அளவிற்கு கட்சிகள் இருக்கின்றன என்பதே என் கருத்து. அவை ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, அல்லது தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, இவை மக்கள் தொகையில் உயர் பத்து விழுக்காட்டினர் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இத்தகைய சக்திகள் வளர்ந்துள்ள இடங்களில் இடதுசாரிகள் தேர்தல் களத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரிய அளவிற்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வகுப்புவாத அரசியலைப் பொறுத்தவரை, இடதுசாரி அல்லாத அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியும் பாஜகவுடன் தீவிரமாக ஒத்துப்போகாதவை அல்ல. ஒருசில கட்சிகள் காங்கிரசுடன் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் காங்கிரசும் பாஜகவும் ஆள்வதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதுதான். பாஜக, வகுப்பு வாதத் துருப்புச் சீட்டைத் திட்டமிட்டு பயன்படுத்தும் அளவிற்கு காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்ற போதிலும், காங்கிரஸ் கட்சியும் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தத் தயங்குவதில்லை.

முன்னுரை
இவை அனைத்து குறித்தும் மீளவும் நாம் விவாதிப்போம். முதற்கண் வகுப்புவாதம், மதச் சார்பின்மை மற்றும் தேசியவாதம் என்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் மூன்று முக்கிய சொற் றொடர்கள் குறித்து வழக்கத்துக்கு மாறான வழிகளில் ஆய்வு செய்திடுவோம்.

வகுப்புவாதம் (Communalism), மதச்சார்பின்மை (Secularism) மற்றும் தேசியவாதம் (Nationalism) ஆகிய சொற்றொடர்களுக்கு ஆங்கில அகராதியில் இருக்கும் அர்த்தத்தில் நம் நாட்டில் அவை உபயோகப்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக வகுப்புவாதம் என்ற சொல் நம் நாட்டில் ஓர் இனம் அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்ற இனத்தினர் மீது அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடிய சித்தாந்தத்தைப் பிரயோகிப்பதற்கும், வன்முறையை ஏவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒருவகையிலான பாசிச வடிவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. வகுப்புக் கலவரம் என்ற நிகழ்வே உலகில் இந்தியாவில்தான் நடைபெறுகிறது.

உதாரணமாக, எகிப்தில் கிறித்துவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நேரடியாகவே இஸ்லாமிஸ்ட் (Islamist), ஜிஹாதி (Jihadi), சலாஃபிஸ்ட் (Salafist) அல்லது வேறெந்த சொற்றொடர் மூலமோதான் அழைக்கிறார்கள். அவர்கள் அதனைத் வகுப்புவாரி (“communal”) தாக்குதல் என்று கூறுவதில்லை.

உண்மையிலேயே மிகவும் சரியாகச் சொல்வதென்றால், வரலாற்று ரீதியாக வகுப்புவாரி என்ற சொல் கம்யூனிஸ்ட் என்ற சொல்லிற்கு மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது. இவ்விரு வார்த்தைகளுமே பொது, (‘common’), நெருங்கிய தொடர்பு (‘commune’), சமூகஇனம் (‘community’) என்ற பொருள்களுடன் தொடர்பு கொண்டிருந்தவைதான்.

உதாரணமாக, சமூகத்தினருக்கான சொத்து (‘communal’ property) என்பது தனிச் சொத் துரிமைக்கு (private property) எதிரான சொற்றொடராக இருந்தது.

நம் நாட்டில் மேலும் இரு சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, பெரும்பான்மையினர் சமூகம், சிறு பான்மையினர் சமூகம் என்று பேசுவதில் எதுவும் சிரமம் இருப்பதில்லை. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், இந்து சமூகத்தினர், முஸ்லீம் சமூகத்தினர், சீக்கிய சமூகத்தினர் போன்று பேசுவதில் சிரமம் இல்லை. ஆனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்ற சமூகத்தினர் மீது வகுப்புவாத உணர்வுடன் நடந்து கொள்ளாது, இந்தியாவின் பிரஜைகள் என்ற முறையில் மட்டுமே, அதாவது மதச்சார்பற்ற தேசிய இனத்தினர் (secular nationalists) என்ற உணர்வோடு மட்டும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையில் நம்முடைய விருப்பமாகும். நாடும் அரசாங்கமும் மதச்சார்பற்ற அறநெறியை (secular moralism) உயர்த்திப் பிடித்திருப்பதால், மத ரீதியான வகுப்புவாத அடையாளம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தனிநபர் பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

நாட்டில் உள்ள மக்களில் அறுதிப் பெரும்பான்மையினர், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பதைத் தவிர வேறெந்த பிரஜா உரிமையையும் அனுபவிக்காத சூழ்நிலையில், இம்மக்கள் மத்தியில் தேசிய உணர்வு குறித்த பிரச்சாரங்கள் (nationalist discourses) போய்ச் சேருவதை விட, அவர்களின் சொந்த மத நம்பிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் மிக எளிதாக அவர்களை சென்று அடைந்துவிடுகின்றன. அவை பிற மதத்தினருடனான உறவுகள் மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு மக்கள் தங்கள் சொந்த மதத்தின் அடிப்படையில் தங்கள் சமூக மற்றும் பொருளி யல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், அத்தகைய மத அடையாளங்களுடைய மோசமான பக்கத்தை எப்போது அவர்கள் மீறி வெளிவருவார்கள் என்பது குறித்து என்னால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை.

முஸ்லீமாக இருக்கும் ஒருவரால் தன்னுடைய மத அடையாளத்தைத் துறந்து, சிந்தனை செய்வது சாத்தியமா? வீரஞ்செறிந்த அளப்பரிய துணிவுள்ள ஒருசிலருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை முஸ்லீம்களுக்கு அது சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.

அடுத்து, “இந்து சமூகத்தினர்” என்றும் “முஸ்லீம் சமூகத்தினர்” என்றும் கூறுவதுகூட கற்பனையான ஒன்று என்றே நான் கருதுகிறேன். ஒருசில மதம்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களும் கேரளாவில் உள்ள முஸ்லீம்களும் தங்களுக்கு இடையே உறவுகளைப் பகிர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமே.

அதேபோன்றுதான் நாகாலாந்தில் உள்ள கிறித்துவர்களுக்கும், கேரளாவில் உள்ள கிறித்துவர்களுக்கும் இடையே உள்ள உறவுமாகும். அதேபோன்றதுதான் இந்தியா முழுதும் உள்ள இந்துக்களும் தங்கள் பிராந்தியங்கள், சாதிகள், தொழில்களைக் கடந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பதும் மிகவும் அபத்தமான ஒன்றேயாகும்.

ஆயினும், நம்முடைய அரசியல் பிரச்சாரங்கள் அனைத்திலும், நாடு முழுவதுமுள்ள மதச் சமூகத்தினர் அனைவரும் ஒரேமாதிரிதான் என்கிற முறையிலேயே நம்முடைய அரசியல் பிரச்சாரங்களும், கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கற்பனையான அடையாளம், உண்மையான சமூகத்தினர் மீது அனைத்து மதங்களைச் சார்ந்த சுயநல அரசியல் வாதிகளாலும் மேலிருந்து திணிக்கப்படுகின்றன. அரசுகளும், முந்தைய காலனிய அரசு விரும்பியதைப்போலவே, வர்க்க அரசியலுக்குப் பதிலாக இத்தகைய இனம் சார்ந்த பிரதிநிதிகளையே விரும்புகின்றன.

இரண்டாவதாக, அனைத்து மத நம்பிக்கைகளும், அவை நம்பிக்கையாக இருந்தாலும் சரி அல்லது செயலாக இருந்தாலும் சரி, வகுப்பு வாதத்தை நோக்கி இட்டுச் செல்வதில்லை. ஆனால் இந்தியாவில் அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் மத அடையாள உணர்வு டன், வேண்டுமென்றே தங்கள் அரசியல் ஆதா யங்களுக்காக அரசியலாக்கப்படுகின்றன. இதற்கு மதங்களையே குறை சொல்லக்கூடாது. ஆயினும், சில வகையான மத உணர்வுகள் மறுக்கமுடியாத விதத்தில் பிற மதத்தினர் மீது மதவெறித் தீயை உசுப்பிவிடும் விதத்தில் தூண்டப்படுகின்றன. உதிரிப்பாட்டாளியாக (lumpen proletariat) இருக்கிற ஒரு கரசேவகரை, மூளைச் சலவை செய்து, ராமபிரானின் ஜன்மபூமியை விடுவித்திட ஆயுதம் ஏந்து, ராமரின் படையில் அனுமானைப் போல பாபர் மசூதியின் குவிமாடத்தின் (dome) மீது தாவி ஏறி அதனைத் தகர்த்திடு, இந்துவாக இருந்து உன் வீரத்தைக் காண்பி என்று சொல்லும்போது அது அந்த கரசேவகருக்கு நியாயமாகவே தோன்றுகிறது. இதற்கு மதம் பொறுப்பாகாது, அதேபோன்று இத்தகைய செயல் அப்பாவித்தனமான ஒன்றும் கிடையாது.

மதம், அரசியல் வாழ்க்கையின் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டால், மதத்தால் வன்முறை நிகழ்வுகள் நடைபெறுவது என்பது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்திடும். மதவெறியைத் தூண்டிவிடுவது என்பதும் அநேகமாக இருக்காது.

அடுத்து, நாம் விவாதத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள மதச்சார்பின்மை (“secularism”) என்ற சொல்லிற்கு வருகிறேன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களுக்கும் சம அளவில் மரியாதை செய்தல் என்பது மிகவும் விசித்திரமான இந்தியக் கண்டுபிடிப்பாகும், காலங்காலமாக இருந்து வந்த மத சகிப்புத்தன்மை என்பதைப் படிப்படியாக ஒழித்துக் கட்டுவதற்கான வேலையே இது. உண்மையிலேயே மத நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த மதம்தான் உயர்வானது. எனவே அவன் மற்ற மதங்களுக்கும் சமமாக மரியாதை கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. மத நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லீமுக்கு, இந்து மதம் என்பது இயல்பாகவே மட்டமானது தான்.

அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறுவது, அரசின் விவகாரங்களை அமல்படுத்துவதில், லஞ்ச ஊழல் மிகுந்த தாராளமய ஜனநாயக அரசியலில், பெரும்பான்மையினர் மதத்தினரைப் பெரிய அளவிற்கு மரியாதை செலுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஏனெனில் எண்ணிக்கையில் அவர்கள் வாக்குகள்தான் அதிகம். பெரும்பான்மையினரின் பண பலமும், அதிகார பலமும்தான் ஆதிக்கம் செலுத்தும், பெரும்பான்மை மதத்தினரில் உள்ள மத்திய வர்க்கத்தினரின் மத்தியிலும் மூர்க்கத்தனமான முறையில் புதிய வகையிலான மதச் சிந்தனைகள் உருவாகி ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தியாவில், எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மதச்சார்பின்மையைக் கடைப் பிடிப்பதாக அவை சொல்லிக்கொண்டாலும், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக் களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. பாஜக விற்கும் காங்கிரசுக்கும் சற்றே வித்தியாசம் இருக் கும் எனில் அது அவர்கள் பின்பற்றும் தத்துவங்க ளால் அல்ல, மாறாக அவர்கள் சார்ந்திருக்கிற நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.

இது தொடர்பாக, பெர்ரி ஆண்டர்சன் குறிப்பிடுகையில், இந்திய அரசு ஒரு இந்து வகுப்புவாத அரசுதான் என்கிறார். அது மதச்சார்பின்மை என்கிற சொல்லை தன் தத்துவத்தை நியாயப்படுத்துவதற்கானதாக உபயோகித்துக் கொண்டிருக்கிறது என்கிறார். ஆயினும், இதனை நான் வேறு விதமாகக் கூற விரும்புகிறேன். இந்து மதம் குறித்து காந்தி, நேரு மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வெவ்வேறான அளவுகோல்களை வைத்திருந்தன. அவற்றை ஒரேமாதிரி பார்ப்பதென்பது சரியல்ல. மேலும் இந்தியா என்பது பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. இங்கே முஸ்லீம்கள் உட்பட அனைத்து வகையான மதத்தினரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை இந்து நாடு என்று இந்து மதவெறியர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்து மதத்தினர்தான் நாட்டில் பெரும்பான்மையினர் மற்றும் வல்லமைபடைத்தவர்கள். மற்ற அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்தால் கூட அவர்களை விடப் பெரும்பான்மையினராவார்கள்.

அல்லது, இதனை வேறுவிதமாகவும் கூறலாம். இந்தியாவில் மதவெறி வன்முறை நிகழ்வுகள் இல்லாதவரை அல்லது மிகமிகக் குறைவாக நிகழும் வரை அது பல்வேறு மதங்களுடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அவ்வாறு மிகவும் சிறிய அளவில் மத வன்முறை நிகழ்வுகள் நடைபெறுகையில், மற்ற வன்முறை நிகழ்வுகள் போன்றே அதுவும் ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச் சனைதான். மதச்சார்பின்மையை ஒரு நியாயமான தத்துவமாகக் கருதுவது எந்தவிதத்திலும் சரிதான்.

மதச்சார்பின்மை என்பது நவீனகால ஒழுக்கப் பண்பாகும். பண்டைக் காலங்களில் இது கிடையாது. அதாவது, அரசின் அதிகார வரம்புக்குள்ளிருந்து மதத்தை வெளியேற்றுதல் என்பதாகும். இது ஒரு ஐரோப்பிய ஒழுக்கப் பண்பாகும். இது தொடர்பாக மிக அதிக நாட்டுப்பற்றுடன் இதனை அணுகுவதற்கு முன்பு, மார்க்சிசமும் ஓர் ஐரோப்பிய ஒழுக்கப் பண்புதான் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய ஒழுக்கப் பண்புகள் அந்நாட்டின் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் அங்கே உருவாயின என்பதையும், பின்னர் வரலாற்று நிலைகளின் காரணமாக படிப்படியாக அவை உலகம் முழுவதும் பரவின என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் நவீனத்துவத்தைக் கிரகித்துக் கொள்ளாமல் தன்னுடைய சமூகக் கண்ணோட்டத்தில் மிகவும் பிற்போக்குத் தனமாக இருந்ததால், நவீன மதச்சார்பின்மை ஒழுக்கப் பண்பினை சிதைத்து சின்னாபின்னமாக்கி, மதம் சார்ந்த சொற்றொடர்களுடன் மாற்றி வடிவமைத்துக் கொண்டது.

ஐரோப்பாவிலேயே பல நாடுகள் தற்போது கலாச்சாரக் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டுள்ளன. ஏனெனில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த, பல்வேறு நிறத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் குடியேறி வந்துள்ள நிலையில் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் அது திணறுகிறது.

மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதில் இந்தியா அளவிற்குக் கூட அமெரிக்கா இருக்கிறதா என்பது சந்தேகமே. இரு முதலாளித்துவ அரசுகள்தான் உண்மையில் முறையான மதச்சார் பின்மையை – அங்குள்ள முதலாளிகள் இளைஞர்களாக இருந்த காலத்தில் – பெற்றிருந்தன. அவை புரட்சிகர பிரான்சும் கேமாலிஸ்ட் துருக்கியும் மட்டுமேயாகும். அவைகூட இன்று அவ்வாறு உரிமை கொண்டாட முடியாது. ஆட்சி அதிகாரத்திலிருந்து மதச்சார்பின்மை அடிப்படையில் தேவாலயங்களைப் பிரித்த நாடுகள் என்று சொல்வது என்றால், மதம் ஒருவரின் தனிப்பட்டவரின் உரிமை, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன நாடுகள் என்றால் அவை கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமேயாகும்.

சோவியத் யூனியன் தகர்ந்த பின்பு, தேச அளவிலும் சர்வதேச அளவிலும் இயங்கும் மதவாத அமைப்புகள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டதை நம்மால் பார்க்க முடிந்தது. இறுதியாக, இம்மூன்று சொற்களிலும் மிகவும் கடினமான வார்த்தை தேசியவாதம் என்னும் சொல்தான்.

ரஷ்யப் புரட்சியைத் தவிர, சீனா, கியூபா உட்பட மற்ற அனைத்து நாடுகளிலும் ஏற்பட்ட சமூகப் புரட்சிகளும் காலனிய மற்றும் அரைக் காலனிய நாடுகளில் நடைபெற்றவைகள்தான். எனவே, சோசலிசத்திற்கான இயக்கங்கள் தேச விடுதலைக்கான யுத்தங்களுடன் இணைக்கப்பட்டன. மேலும், மூன்றாம் உலக நாடுகளில் இருந்த மிகவும் முற்போக்கான முதலாளித்துவ அரசுகள் தேசப்பற்றுடன் கூடிய பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின. பாண்டுங் திட்டக் காலத்தில் நேருவின் இந்தியா, நாசரின் எகிப்து மற்றும் பாதிஸ்ட் அரபு நாடுகளை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இப்போது வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வேடார் நாடுகளை இவ்வாறு கூற முடியும். இவ்வரலாறுகள் நம்மை இன்றைய தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று உணர்வை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் பொருத்திப் பார்க்கும் போக்கிற்கும் இட்டுச் சென்றுள்ளது.

காலனிய நாடுகளில் உருவான தேசியவாத அல்லது நாட்டுப்பற்று சித்தாந்தம் காலனியத்திற்கு எதிரான ஒன்றுதான். ஆனால் இது பல சமயங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சித்தாந்தமாக தவறான முறையில் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு காலனியத்திற்கு எதிராக உருவான பல இயக்கங்கள் சோசலிஸ்ட் உள்ளடக்கங்களைக் கொண்டவை என்று சொல்ல முடியாது. இத்தகைய இயக்கங்களில் பல ஏகாதிபத்திய மூலதனத்தின் நவீன காலனிய வடிவங்களுடன் மிக வேகமாகத் தங்களை இணைத்துக் கொண்டு, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றன.

ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள் பல இத்தகைய வரலாற்றால் நிரப்பப்பட்டுள்ளன. ஏன், நம் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் குறித்து கூறத் தேவையே இல்லை. இதில் மிகவும் சிக்கல் நிறைந்த வழக்குகள் எவை எனில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக மூர்க்கமான முறையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாலிபான்களாகும். ஆயினும் இவர்கள் மக்களுக்கான சோசலிச முற்போக்கு சக்தியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாசிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் நடைமுறையில் ஒரு விஷயத்தில் ஒத்துப்போயின. முழுமையான தேசியவாதம் என்று தங்களை அழைத்துக் கொண்ட அவைகள் வலதுசாரி தேசியவாதங்களின் அனைத்து விதமான நச்சுத்தன்மை வாய்ந்த வடிவங்களையும் தம்முள் கொண்டிருந்தன. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது என்பது மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் தேசம் என்கிற வடிவம் உருவானது. இவ்வாறு கடுஞ்சிக்கல்கள் நிறைந்த நிலையில் தேசியவாதம் என்ற சொல்லை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் சமமாய்ப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது.

தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று என்ற சொல்லின் பின்னணியில் எந்தவித வர்க்க உள்ளடக்கமும் இல்லை என்பதே என் சொந்தக்கருத்தாகும். எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தங்கள் வர்க்க உள்ளடக்கத்தை அவற்றின் மீது ஏற்றுகின்றன என்பதே என் கருத்தாகும்.

லெனின், தொழிலாளி வர்க்கத்தின் கட்சியின் தலைவர் என்ற முறையில் காலனிய நாடுகளில் இருந்த நிலைமைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படயில் தேசிய இனப்பிரச்சனைக்கு அதிக அழுத்தம் கொடுத்தார். காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கம் தமதாக்கிக் கொள்வதற்கு முன்பு தேசிய இனப்பிரச்சனை மீது மேலாதிக்கத்தை நிறுவிட விவசாய வர்க்கத்தின் கூட்டணியுடன் தொழிலாளி வர்க்கத்தால் சாத்தியமாகலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே லெனின் அவ்வாறு கூறினார்.

காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய முதலாளிகளில் நாட்டுப்பற்று கொண்ட பிரிவினர் தலைமைப் பாத்திரம் வகிப்பதை ஏற்றுக் கொள்வது என்பது விரும்பத்தக்க ஒன்று அல்ல. இது கம்யூனிய இயக்கத்தின் ஒரு பலவீனமேயாகும்.

தேசியவாத சித்தாந்தம் என்பது அடிப்படையில் தேசிய-அரசு (Nation-State) வடிவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இணைக்கப்பட்டதாகும். தேசிய-அரசு என்ற வடிவம் இருக்கும் வரை, ஏதாவது ஒரு வகையிலான தேசியவாதம் ஒரு மெய்யான அவசியமாகும். நாஜி ஜெர்மனியின் பாசிஸ்ட் தேசியவாதம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய தேசியவாதம், வியட்நாம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர தேசியவாதம், மதச்சார்பற்ற அரசு தேசியவாதம், ஈரான் நாட்டின் சமயகுரு மார்களின் தேசியவாதம் என்று எண்ணற்ற தேசியவாதங்கள்.

எங்கெல்லாம் தேசியவாதங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தேசியவாதம் குறித்த பொருள் குறித்தும் எண்ணற்ற சண்டை சச்சரவுகளும் உண்டு. தேசியவாதத்தின் ஒரு வகை, மற்றோர் வகையால் தோற்கடிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுவதும் ஒரே நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போதெல்லாம், உலகில் பலநாடுகளில், நாட்டின் குணாம்சத்தை வடிவமைப்பதில் அந்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள மதத்தையும் இணைத்துக் கொள்வது என்பதும் புதுப்பாணியாக மாறி இருக்கிறது. யூத சமயத்தை ஒரு நாட்டினர் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், சில நாடுகளில் இஸ்லாமை தூக்கிப் பிடிக்கிறார்கள், இங்கே இந்துயிசத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். வேறொரு நாட்டில் கத்தோலிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

ஒரு காரணத்திற்காகவே இவை அனைத்தையும் நான் கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமே இந்திய தேசியவாதத்திற்கான உண்மையான உள்ளடக்கமாக இருக்க முடியும் என்று நம்பக் கூடிய அளவிற்கு இடதுசாரிகளாகிய நீங்கள் ஏற்கனவே முடிவுக்கு வந்திருப்பீர்கள். நான் அவ்வாறுதான் நம்புகிறேன். ஏனெனில் நான் ஒரு மார்க்சிஸ்ட். துரதிர்ஷ்டவசமாக, மார்க்சிசம் நம் நாட்டில் மிகவும் சிறுபான்மையினர் மத்தியிலேயே இருந்து வருகிறது.

அதேசமயத்தில் இந்துத்துவா கொள்கையையும் புறத்தூண்டுதல் எதுவுமின்றி நகர்ப்புற, உயர்சாதி, மத்தியதர, சமூகத்தில் பத்தாம் பசலியாகவுள்ள இந்துக்கள் எவரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியாவில் இந்துக்கள்தான் அதிகம். எனவே இந்துக் கலாச்சாரத்தை தேசியக் கலாச்சாரமாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் நடை முறையில் அவ்வாறில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925 இல் துவக்கப்பட் டது. ஒவ்வோராண்டும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் 1948க்கும் 1962க்கும் இடையே மட்டும் விதிவிலக்காக அதன் உறுப்பினர் எண்ணிக்கை தேக்க நிலையில் இருந்தது. இவ்வாறு தேக்கநிலை ஏற்பட்டது என்பது காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும், நேரு இறந்ததற்கும் இடையிலான காலகட்டம் என்பதை நீங்கள் நினைவுகூர முடியும். 1962 இல் இந்திய – சீன யுத்தம் துவங்கியபின் இதனை, இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளை அவமானப்படுத்திட, அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திட, மிகவும் விரிவான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்பட் டது. அதன் பின்னர் வலதுசாரிகளும் தங்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டிக் கொள்ள முடிந்தது.

ஆயினும், 1948க்கும் 1962க்கும் இடையே ஆர்எஸ்எஸ் வளராமல் தேக்க நிலையில் இருந்ததற்கு மகாத்மா காந்தியின் படுகொலை ஒரு காரணியாக இருந்த போதிலும், அந்த சமயத்தில் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் வழிவந்த ஜவஹர்லால் நேருவால் தலைமை தாங்கப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சார மூலதனம்தான் அதற்கு மிகவும் முக்கியமான காரணி என்பது என் கருத்தாகும். மேலும் அந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் நேருவுக்கு எதிர்ப்பைப் பிரதானமாக வழங்கியது கம்யூனிஸ்ட்டுகளும், சோசலிஸ்ட்டுகளும்தான் என்பதையும் நாம் நினைவு கூர்தல் வேண்டும். இவ்வாறு அந்த சமயத்தில் ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே வகுப்புவாதத்தை எதிர்த்த அரசியல் சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஆளும் கட்சி மட்டுமல்ல, ஹாப்ஸ்வாம் ஒருமுறை சொன்னது போல அறிவிற் சிறந்த இடதுசாரிகளும் (“The Enlightenment Left”) பிரதான எதிர்க்கட்சி சக்திகளாக இருந்து மண்ணின் மாண்புகளை உயர்த்திப் பிடித்தார்கள். ஜவஹர்லால் நேரு முதலமைச்சர்களுடன் கொண்டிருந்த எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகளிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வகுப்புவாதம் புரையோடிப் போயிருந்ததை அவர் கூர்மையாகக் கண்டறிந்திருந்தார் என்பதைக் காண முடியும்.

ஆயினும், அந்த சமயத்தில் இடதுசாரிகளின் மேலாதிக்கம் இருந்தது பற்றி நான்கு அம்சங்களைக் கூற வேண்டியது அவசியம். முதலாவது, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கிரசிலிருந்த வலதுசாரிகள் சூழ்ச்சி செய்தபோதிலும் கூட அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியிலிருந்தாலும் சரி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இடதுசாரிகள் வகுப்புவாதத்திற்கு எதிராக முன்னின்று போராடினார்கள்.

இரண்டாவதாக, முதலாளிகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் அளிக்கப்பட்ட போதிலும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் துறைக்கு சேவகம் செய்யக் கூடிய விதத்தில் செயல்பட்ட அதே சமயத்தில், அவர்களின் அளவுக்கு மீறிய பேராசையை ஒரு சமயத்தில் தடுத்து நிறுத்தவும் முடிந்தது. இந்தியப் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டு நெருக்கடிக்கு உள்ளான போது இந்திராகாந்தியுடைய வங்கிகள் தேசியமய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மூன்றாவதாக, அந்த சமயத்தில்தான் இந்திய அரசு மிகவும் உறுதியுடன் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மிகவும் குளறுபடியாக இருந்த சமூக ஒழுங்கில் நவீன, மதச்சார்பற்ற, முற்போக்கு மாண்புகளை சமூகத்தில் ஆழப் பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தையும் அப்போது வெளியான புதிய பாடப் புத்தகங்களில் காண முடியும். மேலும் ஆட்சியிலிருந்தவர்களால் மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியினராலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அரசியல் பேச்சுக்கள் அமைந்திருந்தன. ஏற்கனவே காலனிய எதிர்ப்பு இயக்கத்தில் அரசியலாக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் இவை மேலும் பெரிய அளவில் பக்குவத்தை உருவாக்கின.

இறுதியாக, மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட ஒன்றாக பார்க்கப்படவில்லை. மாறாக அது அனைத்து மாண்புகளின் தொகுப்பாகவும், கூட்டுச் செயல்பாடாகவும் கருதப்பட்டது.

நாட்டில் வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளான ஒரு சமூகத்தை நாம் கொண்டிருந்தோம். நாடு சுதந்திரம் பெற்றபின் அயல்துறைக் கொள்கையில் அணிசேராக் கொள்கையை உறுதிபட பற்றி நின்றோம். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தைப் பாதுகாத்தோம். பொருளாதார விவகாரங்களில் சோசலிச வளர்ச்சிப் (“socialistic development”) பாதை முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு பல முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆட்சியாளர்கள் நடைமுறையில் செய்தார்களோ இல்லையோ வாக்குறுதிகள் தாராளமாகவே அளிக்கப்பட்டன. அத்தகைய வாக்குறுதிகளும் கூட மக்களின் அரசியல் செயல்பாட்டுக்கு சேவை செய்தன.

நேருவினுடைய ஆட்சிக்கு பிரதானமான எதிர்ப்பு என்பது வலதுசாரிகளிடமிருந்து கிடையாது, மாறாக இடதுசாரிகள்தான் பிரதானமான எதிர்ப்பினை மேற்கொண்டிருந்தார்கள். அவை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும், மதச்சார்பின்மை மாண்புடன் பின்னிப்பிணைந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் விதத்தில் அது அமைந்திருந்தது. இப்போது அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டுவிட்டன. இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.

நவீன தாராளமய மற்றும் வலதுசாரிகளின் கொள்கைகளில் மதச்சார்பின்மையின் மாண்பு எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்திருக்கிறது என்று கூறுவது மிகவும் கடினம். உலகின் பல பகுதிகளிலும் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி மற்றும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளாக இருந்தாலும் சரி, நவீன தாராளமயக் கொள்கைகள் எந்த நாடுகளில் அமல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் வலதுசாரிகள் வெற்றிக் களிப்பில் மிதப்பதைப் பார்க்கலாம். இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா, என்ன?

வகுப்புவாதம் தொடர்பாக நான் இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். 1993 இல் அயோத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிகள் குறித்து (“On the Ruins of Ayodhya) ஒரு நூலும், அதன் பின்னர் பத்தாண்டுகள் கழித்து 2003 இல், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், இரு கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். ஆயினும் மதவெறியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

இப்போது கார்ப்பரேட்டு மூலதனம் ஒன்றாக இணைந்து, மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தின் ஆட்சிப் பரப்பிற்குள் மூலதனத்தின் நவீன தாராளமய எதேச்சாதிகாரம், தத்துவார்த்த ரீதியாக வகுப்புவாத எதேச்சாதிகாரமும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கைகோர்த்துக் கொண்டுள்ளன.

கார்ப்பரேட்டுகளும் அரசாங்கமும் ஒன்றாக இருந்த முசோலினியின் இத்தாலியப் பாசிசத்தின் வடிவம் குறித்து இங்கே நினைவுகூர்தல் நலம் பயக்கும். சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தியப் பின் நவீனத்துவம் குறித்த பிரச்சனையில், சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்டின் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம் என்று கூறியிருந்தேன். 1947இலிருந்து 1975 வரை முதல் கட்டம். நேருவின் ஆட்சி தொடங்கி, இறுதியில் நெருக்கடிக்க ஆளாகி, அவசரநிலைக் காலத்தில் சிதைந்தது. அடுத்த இருபது ஆண்டுகள் இரண்டாவது கட்டமாகும். இக்கால கட்டம் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களை இணைத்த ஜேபி இயக்கத்தால் துவங்கப்பட்டு, அவசரநிலைக் காலத்திற்குப் பின் ஆட்சி செய்த ஜனதா அரசாங்கத்தின் காலம்.

இக்கால கட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய அரசியலில் ஒரு மரியாதைக்குரிய மதித்துப் போற்றக்கூடிய ஓர் இயக்கமாகவும் சட்ட ரீதியாக இயங்கக் கூடிய ஓர் இயக்கமாகவும் மாற்றப்பட்டது. இதன் அரசியல் அங்கமான ஜனசங்கம் கட்சிக்கும் அதன் தலைவர்கள் வாஜ்பாபி மற்றும் அத்வானிக்கும் ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்திய அரசியலில் இது அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசின் அரசியல் நெருக்கடி காரணமாக மேலும் தொடர்ந்து ஆட்சி செலுத்தும் வல்லமையை இழந்தது. ஆயினும் அதற்கு மாற்றாக வேறொருவரும் தோன்றவில்லை.

இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்து, இரண்டாவது வாஜ்பாயி அரசாங்கம் 1998 இல் ஆட்சிக்கு வந்தது. இது புதியதொரு கட்டத்தைத் தொடங்கி வைத்தது. இடதுசாரிகள் அல்லாத அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி ஓர் அரசியல் கட்சிகளின் கூட்டணி உருவானது. இது முதலாளித்துவ ஆட்சிக்கு புதியதொரு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தது. எந்தக் கூட்டணியில் நின்று தேர்தலில் போட்டியிட்டாலும், வெற்றி பெற்ற பின் கூட்டணியை மாற்றிக் கொள்வது என்பதும் இக்காலகட்டத்தில் நடந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1989இலிருந்து 1992 வரை மூன்றாண்டுகளில் சர்வதேச அளவிலும், தேச அளவிலும் முக்கிய சம்பவங்கள் பல நிகழ்ந்தன. சர்வதேச அளவில் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பு முறை முடிவுக்கு வந்தது. அமெரிக்கா உலக மேலாதிக்கப் போலிஸ்காரனாக (Hegemon) உருவெடுத்தது. இதனுடன் போட்டிபோடக் கூடிய அளவிற்கு எவரும் இல்லை. இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசும் இப்போது வெளிப்படையாகவே புதிய ஏகாதிபத்திய வல்லரசுக்குப் பின்னால் எவ்விதமான கருத்து வேறுபாடுமின்றி அணிதிரண்டன.

நம் நாட்டிற்குள்ளும் நவீனதாராளமயக் கொள்கைகள் நரசிம்மராவ்-மன்மோகன்சிங் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் களமிறங்கின. வகுப்புவாதத்தின் அமைப்புகளுக்கும், காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையே அதிகார பூர்வமாக அறிவிக்காமல் குறிப்பறிந்து ஒன்றாய் செயல்படும் விதத்தில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இதனை 1989 இல் சிலாநியாஸிலும், மிகவும் மோசமான முறையில் 1998 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் பார்க்க முடிந்தது. இக்கால கட்டம் 1998 இல் முடிவுக்கு வந்தது.

அதன்பின் புதிதாக பாஜக தலைமையிலான வலதுசாரிகளின் அரசாங்கம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் எண்ணப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அது நாட்டிற்கு வெளியே ஏகாதிபத்தியத்துடன் மிகவும் நெருக்கமாகக் கூட்டணி வைத்துக் கொண்டது, நாட்டிற்கு உள்ளே நவீன தாராளமயக் கொள்கையை (இதனை நான் அதிதீவிர முதலாளித்துவம் என்று அழைப்பேன்) பின்பற்றியது.

ஆளும் வர்க்கத்துக்கு மதச்சார்பின்மை முகத்துடன் காங்கிரஸ் சேவகம் செய்தது, பாஜகவோ வகுப்புவாத முகத்துடன் சேவகம் செய்தது. பாஜக தன்னுடைய ஆட்சிக்கு வேறு பல கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டியிருந்ததால் அது தன்னுடைய சொந்தத் திட்டத்தின் ஆத்திரமூட்டல் அம்சங்களைச் சற்றே நிறுத்தி வைத்திருந்தது.

இப்போது மோடி, தன்னுடைய பிரதமர் பதவிக்கான கனவிற்கு இந்துத்துவாக் கொள்கையை இலக்காக முன்வைக்கவில்லை, மாறாக மன்மோகன்சிங்கிற்கு சேவை செய்த அதே வளர்ச்சிக் கொள்கையைத்தான் முன்வைத்திருக்கிறார்.

வகுப்புவாதப் பிரச்சனையைப் பொறுத்த வரை, அரசியல் அரங்கில் மிக முக்கியமான அம்சம், 1998க்குப் பின், பாஜகவுடன் இடதுசாரிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு சமயத்தில் அல்லது பிறிதொரு சமயத்தில் உறவு கொண்டுள்ளன என்பதாகும்.

மக்கள் மத்தியில் மதவெறி சிந்தனைகளை வளர்த்தெடுப்பதென்பது இரு விதங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும் மக்கள் மத்தியில் இவ்வேலையை மிகவும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த 80 ஆண்டுகளில் தங்கள் பக்கம் ஆதரவர்களை அதிக அளவில் இவர்கள் பெற்றுள்ளனர். கிராம்சி கூறியதைப்போல சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள் மத்தியில் நாள்தோறும் சிறுசிறு இயக்கங்கள் மூலம் இவர்கள் தங்கள் வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இப்போது இத்தகைய வேலைகளை தாங்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் ஆட்சியாளர்கள் மூலமாகவும், அதன் அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்கள், அடக்குமுறை கருவிகள் மற்றும் பல சமயங்களில் நீதித்துறை மூலமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

வகுப்புவாதம் குறித்த நம்முடைய ஆய்வுகள், சங்பரிவாரக் கூட்டத்தின் வேலைகள் குறித்தே அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கின்றன. ஏனெனில் நாட்டில் மிகவும் பெரிய அளவில் ஸ்தாபன ரீதியாக செயல்படும் வகுப்புவாத சக்தி இதுதான். ஆயினும் இது ஒன்று மட்டும் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டுக்காக நான் மேலும் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை முறையே முஸ்லீம் வகுப்புவாதம் மற்றும் சிவசேனை ஆகியவைகளாகும்.

பொதுவாக இந்திய முஸ்லீம்களைப் பொறுத்த வரை, ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், நாடு சுதந்திரம் அடைந்த பின் முஸ்லீம்களுக்கு என்று அகில இந்திய அளவில் ஒரு கட்சி உருவாகவில்லை. வட்டார அளவிலும் மாநில அளவிலும் ஏராளமாக இருந்தாலும், அகில இந்திய அளவில் அப்படி ஒரு கட்சி இல்லை.

தேசிய அரசியலிலும், ஏன் மாநில அளவிலான அரசியலிலும் கூட, முஸ்லீம்களில் பெரும்பாலோர் ஒரு மதச்சார்பற்ற தேர்தல் மாற்றைத்தான் (secular electoral alternative) கோருகின்றனர். இதற்கு அவர்கள் மதச்சார்பின்மை கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக மதச்சார்பற்ற அரசு மூலம்தான் தாங்கள் பெரும் அளவில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு மதச்சார்பின்மை என்பது இவ்வாறு சமூக நவீனமயத்தை (social modernization) அல்லது ஓர் அரசியல் கண்ணோட்டத்தை அல்லது ஒரு தத்துவார்த்த வாழ்நிலையை வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமல்ல, தங்கள் இனத்தின் நலனுக்கு மிகவும் உகந்த ஒன்றாகவும் இது இருப்பதால்தான் அவ்வாறு அவர்கள் கோருகிறார்கள்.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில், முஸ்லீம் வகுப்புவாதத் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகரீதியாக பத்தாம் பசலித்தனமான சக்திகள் முஸ்லீம்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய விதத்தில்தான் பொதுவாக இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, வருமானம், கல்வியின் நிலைகள், காவல்துறை மற்றும் ராணுவம் போன்ற அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுத்தல் என அனைத்திலும் முஸ்லீம்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையேயான இடைவெளி விரிவடைந்திருப்பதாகத்தான் அனைத்துப் புள்ளி விவரங்களும் கூறுகின்றன. அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் வகுப்புவாதமயப்படுத்தப்பட்டிருப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நன்கு ஸ்தாபனப்படுத்தப்பட்ட வன்முறை அவர்களுக்கு எதிராக ஏவப்படுதலும், முஸ்லீம்கள் மத்தியில், எந்த நிமிடத்திலும் தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுத் தாக்கப்படலாம் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.

காஷ்மீரில் அரசுப் பயங்கரவாதத்தை, ஜிகாத் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, சாமானிய மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளுக்கு எதிராகவும் பயன்படுத்துவது மக்களை ஆட்சியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தியுள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள அந்த மாநிலத்தில் அவர்கள் சுயாட்சி கோருவது என்பதையே மதச்சார்பற்ற குடியரசு என்று சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்களால் ஏற்க முடியவில்லை. முஸ்லீம்களில் உயர்ந்தோர் குழாமைத் தவிர மற்ற சாமானிய முஸ்லீம்கள் அனைவரும் ஆட்சியாளர்களைத் தங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காது ஒதுக்கி வைத்திருப்பதாகவும், ஆடுமாடுகளைப் போலவே சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக, குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படுவதாகவும் கருதுகிறார்கள்.

இத்தகைய நிலைமைகள் அவர்களை பிற்போக்கான முஸ்லீம் மதத் தலைவர்களிடமும், படுபிற்போக்கு முஸ்லீம் சிந்தனையாளர்களிடமும் மிக எளிதாகத் தள்ளிவிட்டுள்ளது. இவற்றின் விளைவுகளில் ஒன்று, இவர்களை மிகவும் பயபக்தி உடைய கடவுள் நம்பிக்கையாளர்களாக மாற்றி இருப்பதாகும். சாதி இந்துக்களில் உள்ள வளர்ச்சியைவிட இது அதிகம் என்றே கூறலாம். வகுப்புவாத சக்திகள் இவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பயபக்தியுடன் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் படிப்படியாக அரசியலின் வகுப்புவாத வடிவங்களைப் போதிப்பதுடன் வன்முறையை ஏவிடும் வகுப்புவாதக் கட்டமைப்புகளுக்குள்ளும் அவர்களைத் தள்ளிவிடுகின்றன.

பாபர் மசூதி இடிப்பு, அதனைத் தொடர்ந்து குறிப்பாக குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீது நடந்த இனப்படுகொலைகள், நகர்ப்புற முஸ்லீம்களில் ஒரு சிலர் மத்தியில் இந்து வகுப்புவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லீம் ஜிகாதி பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு காணத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு கனவு காண்பவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு‍களில் உருவாகியுள்ள பற்பல ஜிகாதி குழுக்கள் உத்வேகம் அளிக்கின்றன.

இந்திய முஸ்லீம் சமூகத்தில் மதச்சார்பற்ற நீரோட்டத்துடன் எண்ணற்ற முஸ்லீம்கள் இருந்தபோதிலும், அவர்களது சுதந்திரமான எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஓர் அரசியல் ஸ்தாபனம் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் இடையே முற்போக்கான முஸ்லீம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் ஓர் அமைப்பு இல்லாததன் காரணமாக, இவர்களை இங்கே இருக்கின்ற பல்வேறான பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

விளைவு, முஸ்லீம்கள், முற்போக்கு மேடைகளில் அணிதிரட்டப்படுவதென்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலோருக்கு, பாலஸ்தீனப் பிரச்சனை என்பது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான மோதலாகத்தான் தெரிகிறதேயொழிய, அது காலனியாதிக்கத்தின் மிகக் கொடூரமான காட்டு மிராண்டித்தனமாகப்படவில்லை. ஆப்கானிஸ்தானத்திற்குள்ளோ அல்லது ஈராக்கிற்குள்ளோ ஊடுருவுதல் நடைபெறுவதை அவர்களால் மேற்கத்திய கிறித்தவர்கள் கிழக்கத்திய முஸ்லீம்கள் மீது தொடுத்திடும் இனப்படுகொலைகளாகத்தான் பார்க்கப்படுகிறதேயொழிய, நவீன ஏகாதிபத்தியத்தின் வரலாற்றின் அத்தியாயங்களாக அவர்களுக்குத் தெரியவில்லை.

சமீபத்தில் கூட, இந்திய முஸ்லீம்களில் பலதரப்பினர் வங்கதேச முஸ்லீம் லீகிற்கு ஆதரவாக சக்திமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதைப் பார்த்தோம். ஆனால் அவர்கள் ஷா பாக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இப்போது கடவுள் பற்றுள்ளவர்களால் கடவுள் பற்றற்றவர்கள் கொல்லப்படுவது என்பதும் சன்னி குழுவினரால் ஷியா குழுவினரும், முற்போக்கான பெண்கள் பிற்போக்கான ஜிஹாதிகளால் கொல்லப்படுவது என்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிற்போக்காளர்களால் கொல்லப்படுபவர்களுக்கு ஆதரவாக இந்திய முஸ்லீம்கள் மத்தியில் அர்த்தமுள்ள ஆதரவு இயக்கம் எதுவும் நடைபெறவில்லை.

நாட்டில் உள்ள முஸ்லீம்களில் உயர் அடுக்கில் உள்ளவர்கள் ஆட்சியாளர்களின் கொள்கைகள் சிலவற்றைக் குறித்து அவ்வப்போது எதிர்ப்பினையோ அல்லது விமர்சனங்களையோ காட்டுவார்கள். இது எதற்கு என்றால் அவர்கள் தங்களின் பேரம்பேசும் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காகத்தானேயொழிய, வேறெதற்காகவும் அல்ல. ஆனால், முஸ்லீம்களில் கீழடுக்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உதிரிப் பாட்டாளிகளாகவே (Lumpen-Proletariat), சிவசேனை மற்றும் சங்பரிவாரக் கூட்டத்தில் உள்ளவர்களைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எங்கு வன்முறை வெடித்தாலும், அந்த சமயங்களில் காவல்துறையினராலும் இதர பாதுகாப்புப் படையினராலும் கைது செய்யப்படும்போது, இந்துக்களுக்கு உள்ளதுபோன்ற அமைப்புகள் எதுவும் இவர்களைக் காப்பாற்றுவதற்கு முன்வருவதில்லை.

பம்பாயில் சிவசேனை அமைப்பு இவ்வாறு உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டுதான் உருவானது. இவர்கள் உத்திகளை, தங்கள் எதிரிகளை மற்றும் வன்முறைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள்? தங்களின் கீழ் திரண்ட உதிரிப் பாட்டாளிகளை வைத்து ஒரு பக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளையும், தொழிற்சங்கவாதிகளையும் வேட்டையாடினார்கள், மறுபக்கத்தில் தமிழர்களுக்கு எதிராகவும் வன்முறையை ஏவினார்கள். இவற்றிற்கு இந்துத்துவா வெறியர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

பின்னர் பீகாரிகளுக்கு எதிரான இயக்கத்தை நடத்தியபோது இவர்கள் இந்து பீகாரி மற்றும் முஸ்லீம் பீகாரிகளுக்கு இடையே வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. இங்கே நான் சிவசேனையைப் பற்றி ஆய்வு செய்திடவில்லை. எனினும் ஒருசில விஷயங்களைக் குறிப்பிட வேண்டியிருந்தது.

தாக்கரேயின் சித்தாந்தத்தின் முக்கிய கூறு என்னவெனில் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது என்பதுதான்.

1966 இல் உருவான சிவசேனை 1980களில்தான் இந்துத்துவாவின் சித்தாந்தத்தை முழுமையாகத் தழுவிக் கொண்டது. ஒரு சமயத்தில், தாக்கரே அவசரநிலைப் பிரகடனத்தைக் கூட ஆதரித்தார், வடஇந்தியர்களுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரங்களின் போது அது இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. அனைவருமே வெளியாட்கள் போன்று தான் சித்தரிக்கப்பட்டார்கள். இவர்கள் பம்பாயில் இருப்பதால்தான் மராத்தியர்களின் துன்பதுயரங்களுக்குக் காரணமாம். நாட்டின் நிதி மையமாக விளங்கும் பம்பாயில் சூறையாடும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட துன்ப துயரங்களுக்கெல்லாம் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்த, மிக அற்பக் கூலி பெற்ற வட இந்தியர்கள்தான் காரணமாம்.

சிவசேனை தன் கீழ் இருந்த உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டு, வன்முறை வெறியாட்டங்களை தமிழர்கள், முஸ்லீம்கள், பீகாரிகள் என்று நடத்தியது. பின்னர் வங்காளிகள் மீது இவர்கள் எல்லாம் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அவர்களின் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள், அவர்களின் சிறிய வியாபார நிறுவனங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டார்கள்.

தாக்கரே ஆரம்பத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாகத்தான் தன் வேலையைத் தொடங்கினார். பின்னர் சிவசேனையின் தலைவராக உயர்ந்தபின் அவர் இறக்கும் தருவாயில் அவரது சொத்தின் மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.

இவ்வாறு வகுப்புவாத வன்முறை என்பது ஸ்தாபன ரீதியாகக் குற்றங்கள் புரிவதற்கான வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு கிரிமினலாகக் குற்றம் புரியும் அமைப்புகளோடு இவை சிண்டிகேட்டுகள் அமைத்துக் கொள்கின்றன. வகுப்புவாதத்தில் சரியான அம்சம் என்பது பொதுவாக இதுதான். சிவசேனையின் ஆட்கள் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திலிருந்தே பொறுக்கி எடுக்கப்பட்டார்கள்.

மரபு ரீதியான முடிவுரை கூறி இந்த உரையை நான் முடிக்க முயற்சிக்கப் போவதில்லை. ஆயினும், ஒருசில முக்கிய அம்சங்களை மட்டும் கூறி முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, இந்தியாவில் வகுப்புவாதக் கட்டமைப்பிற்கு உதிரிப்பாட்டாளிகள்தான் (lumpen proletariat and the lumpenised petty bourgeoisie) குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது சங்பரிவாரக் கூட்டமாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லீம்களாக இருந்தாலும் சரி அல்லது சிவசேனை போன்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி. ஏனெனில், நவீன தாராளமய கட்டத்தில் இந்திய முதலாளித்துவத்தின் கட்டமைப்பு அம்சம் அதுதான். நாட்டில் தொழிலாளர் வர்க்கச் சேனையை விட வேலையில்லாத இளைஞர்களின் சேனை மிகவும் பெரிதாக இருக்கிறது. இத்தகு நிலையில் சமூகத்தில் ஒரு முறையான தொழிலாளர் வர்க்கக் கலாச்சாரத்தை நிறுவுவது என்பது மிகவும் சிரமம். தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே கூட உதிரிப் பாட்டாளிகளை உருவாக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. முறையான ஊதியம் கிடையாது, எந்த நிமிடமும் வேலையைவிட்டு விரட்டி அடிக்கப்படலாம் என்ற நிலை. எல்லாவற்றையும் விட மோசம், வேலையில்லாதோர் பட்டாளம் மிகவும் பெரிது, நிரந்தரமானது.

ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபட்டிருப்பவரின் நிலையான வாழ்க்கை ஒருவருக்கு மதிப்பையும் மரியாதையையும் அளிக்கிறது அல்லது குறைந்தபட்சம் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரத்தை அளிக்கிறது. அவ்வாறு ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபடாதவர்களின் நிலை? காலப்போக்கில் மற்றவர்களைத் துன்புறுத்துவதைப் பற்றிக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய நபர்களை வகுப்புவாதம் தன்னுடைய வன்முறைச் செயல்களுக்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.

ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது அவரைப் போலவே ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களோடும் இணைந்து ஓர் இனமாக, ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உதிரிப்பாட்டாளிகள் என்று சொல்லப்படுகிற ரவுடிகள், கிரிமினல்கள், திருடர்கள், பொறுக்கிகள் மற்றும் இதுபோன்று சமுதாயத்திற்குக் கேடு பயக்கும் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது இயற்கையாகவே குறிப்பிட்ட குணாம்சங்களுடன் கூடிய எவ்விதமான இனத்தையும் (The life of the lumpenproletariat is by its nature one that creates no community out of any shared conditions of labour) உருவாக்குவதில்லை, தற்காலிகமாக சேர்ந்து கொள்வார்கள், வேலை முடிந்தபின் கலைந்து சென்று விடுவார்கள். தொழிலாளர் வர்க்கக் குணம் பறிக்கப்பட்ட இவர்கள், சாதி, மதம் அல்லது வேறு எந்த விதத்திலாவது வெறியூட்டப்பட்டால் அதற்கு மிக எளிதாக மயங்கிவிடுவார்கள். வகுப்புவாத அரசியல் இத்தகைய உதிரிப் பாட்டாளிகளுக்கு வெகுவாகவே தீனி போடுகிறது.

இத்தகைய உதிரிப் பாட்டாளிகளை வகுப்பு வாத/பாசிஸ்ட் வகையிலான வன்முறை இயக்கங்கள் மிகவும் எளிதாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மிகவும் பொதுவாகக் கூறுவதென்றால், வகுப்புவாதத்தின் அனைத்து வடிவங்களும் நவீன தாராளமயம் அல்லது அதிதீவிர முதலாளித்துவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். அதாவது, முதலாளித்துவத்தின் பணப் பேராசை பிடித்தலைகிற, கொள்ளையிடும் வடிவமாகும். அனைத்து முதலாளித்துவமும் கொள்ளையடிக்கும் குணம் கொண்டவைதான். ஒவ்வொன்றுக்கும் இடையே கொஞ்சம் கூட குறைச்சல் இருக்கலாம், அவ்வளவுதான்.

இத்தகைய முதலாளித்துவ மனப்பாங்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆயினும் நவீனதாராளமய தீவிரவாதம் தலை தூக்குவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இப்போது அத்தகைய கட்டுப்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டன. அரசின் தலையீடு என்பதும் அநேகமாக இல்லை. எப்போதாவது மதவன்முறை வெறியாட்டங்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையாக மாறும்போதுதான் அரசு தலையிடுகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் கட்டத்தின் போது, அரசு ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசாக இருந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு எல்லாம் இடம் தராது அதனை எதிர்த்து நின்று இந்தியப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய முதலாளித்துவம் வலுவானதாகவும், அதிகம் கொள்ளையடிக்கக் கூடியதாகவும் மாறியதால், ஏகாதிபத்தியக் கொள்ளையர்களோடு கூடிக்குலாவுவது என்பதும் அதிகமாகியது. பொதுச் சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கவும் முன்வந்தது. இந்தியப் பொருளாதாரத்தையும் மேலும்மேலும் அந்நியர்களுக்குத் திறந்துவிட வழிவகுத்தது. இவற்றின் மூலமாக ஒரு சிலரை மட்டும் நிரந்தர வேலையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வேலையில்லாதோர் பட்டாளத்தில் தள்ளியது.

இவற்றின் மூலமாக அரசின் குணாம்சமும் அரசின் பங்கும் மிகவும் மோசமாக மாறியது. நாட்டிற்குள்ளே, இது ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், அநேகமாக முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை மட்டுமே, அதிலும் குறிப்பாக கார்ப்பரேட்டுகள் நலன்களை மட்டுமே காக்கும் ஒன்றாக மாறியது. உலகப் பொருளாதாரத்துடனான உறவுகளைப் பொறுத்தவரை, அரசு, உலகத்தின் முன்னே இந்திய மக்கள் மற்றும் அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் இந்த அரசின் முக்கியமான வேலை என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களையும் கட்டளைகளையும் இந்திய மக்களுக்கு கைமாற்றிக் கொடுப்பதாகும். இத்தகைய சூழ்நிலையில் அரசு மதச்சார்பற்ற தேசியம் (secular nationalism) என்னும் கொள்கையை – நம்முடைய காலனிய எதிர்ப்பு இயக்கங்களின்போது நமக்கு அடிப்படையாக அமைந்திருந்த கொள்கையை – நடைமுறையில் கைவிட்டாக வேண்டும்.

இந்த இடத்தில் வலுவாக உள்ள வலதுசாரிகள் இந்திய தேசியத்தை (Indian nationalism) மதரீதியான, அறிவு பெருகுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற (obscurantist), உயர் பிராமணத்துவத்திற்கு வக்காலத்து வாங்குகிற மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத விதத்தில் மாற்றியமைக்கும் பணியை வேகம் வேகமாகச் செய்து வருகின்றன. நாட்டு மக்கள் இன ரீதியாக, பிராந்திய ரீதியாக, மத ரீதியாக மோதவிடப்பட்டு இந்திய மக்களின் ஒற்றுமை கூட கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கின்றன.

நவீனதாராளமயக் கொள்கை கொடூரமான சுரண்டலுக்கு மட்டுமல்ல தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை மழுங்கடிக்கக் கூடிய விதத்தில் மிக அற்பக் கூலி தரும் ஒன்றாகவும் அமைந்துள்ளது. மக்களில் பெரும்பான்மையினருக்கு வேலை அளிப்பதற்கோ அல்லது பாதுகாப்பான வேலையை அளிப்பதற்கோ அது மறுக்கிறது.

இவ்வாறு இந்த அமைப்பு முறையானது சுரண்டல் தன்மை கொண்டது மட்டுமல்ல, சமூகத்தையே வேருடன் பிடுங்கி எறியக் கூடியதாகும். மக்களின் சமூக அமைப்பு முறையையும் குழி தோண்டிப் புதைக்கக் கூடியதாகும். இவ்வாறு அதிதீவிர முதலாளித்துவம் சமூகத்தையே அழுகச் செய்துவிட்டது. மக்களில் பெரும்பாலானவர்கள் மத்தியில் நஞ்சை விதைத்திருக்கிறது. ஏன், தொழிலாளர் வர்க்கத்தில் ஒருசில பிரிவினரிடம் கூட இதனை அது செய்திருக்கிறது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அனைத்து வடிவங்களும் மிகவும் அவசியமானவைகளாகும். ஆயினும் அதே சமயத்தில், எவ்வளவு காலத்திற்கு மற்றும் எவ்வளவு கடுமையாக இப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது குறித்து எவ்விதமான மாயையும் நமக்கு இருக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மதச்சார்பின்மைக்கு ஆதரவான தத்துவார்த்த போராட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியுமாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், வகுப்புவாதத்திற்கு (Communalism) மாற்று, கம்யூனிசம் (Communism) அல்லது சோசலிசம்தான். இன்றைய தினம் நாட்டில் வகுப்புவாத சிந்தனைகள் மிகப்பெரிய அளவில் ஊட்டி வளர்க்கப்படுவதை முறியடிக்கக் கூடிய விதத்தில் மதச்சார்பின்மையையும் கம்யூனிஸ்ட்டுகளின் குணங்களில் ஒன்றாக முன்னெடுத்துச் சென்றிட வேண்டும்.

Bhagat Singh's feelings are getting closer to us Article By Sitaram Yechury in tamil trnaslated By S. Veeramani பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன - சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன – சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

2021 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 114ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.

பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.

தில்லி வெடிகுண்டு வழக்கு
இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

“இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.”

இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

“சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.”

புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மன அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.”

பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர், இவர்களைப் பார்த்து, “இந்த முழக்கத்தின் பொருள் என்ன?” என்று கேட்டார். “புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

“ ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்போதைய சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான்.

உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமான முறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச் செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது. ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.”

“இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.”

“‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.”

“இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.

எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.”

சமூக அமைப்புக்கு எதிராகவே, எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல
தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …” “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.”

“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.

வகுப்புவாதத்திற்கு (எதிராக) மதச்சார்பின்மை
1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.

விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.

“இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.”

இதற்கு மாற்றுமருந்து என்ன?
‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.

“தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.”

“மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”

எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:

“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர். கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”

ஊடகங்கள்
மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:

“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”

“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில் வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.

“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”

இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.

சமூக நீதி
பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:

““… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டாமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது. அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”

பகத்சிங், ‘நான் ஏன் நாத்திகன்’ கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!

இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.

பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com

மதமும், மதச்சார்பின்மையும் : நேருவை முரண்படும் நேருவியர்கள் – ராஜீவ் பார்கவா | தமிழில்: தா.சந்திரகுரு

மதமும், மதச்சார்பின்மையும் : நேருவை முரண்படும் நேருவியர்கள் – ராஜீவ் பார்கவா | தமிழில்: தா.சந்திரகுரு



Religion and secularism: Nehruvians opposed to Nehru Article in tamil translated by T.Chandraguru மதமும், மதச்சார்பின்மையும் : நேருவை முரண்படும் நேருவியர்கள் தமிழில் தா. சந்திரகுருபொய்மை, மூடநம்பிக்கை ஆகியவற்றிற்கான கருவூலமாக மதங்கள் இருக்கின்றன என்ற அறிவொளிக்காலத்து பிரதான பார்வைகளின் தாக்கம் கொண்ட மேற்கத்திய அறிவுஜீவியாக பிரிட்டிஷ் காலனியத்திற்கு எதிரான இயக்கத்தில் முன்னின்ற முக்கிய நபர்களில் ஒருவரும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு பரவலாக கருதப்படுகிறார். நாத்திகவாதியான அவர் மனிதனின் இருப்பு குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகின்ற மதம் அதற்கான பதில்களைத் தவறாகவும், பிடிவாதத்துடனும் அளிப்பதாகக் கருதினார்1. பழைமைவாதம் கொண்ட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களை ஆதரிப்பதன் மூலமாக சமூகச் சீர்திருத்தம், புரட்சி ஆகியவற்றிற்கு எதிரானதொரு அணுகுமுறையை மதங்கள் ஊக்குவிக்கின்றன. ஆனால் அறிவியல், தத்துவம் போன்றவையோ அந்த நிலைக்கு மாறாக அறிவுசார் விஷயங்களில் தற்சார்பு, பகுத்தறிவு போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் பிரச்சனைகளை ஒருவர் தனித்து தூரத்தே நின்று பார்ப்பதற்கு உதவுகின்றன. அறிவியலும், தத்துவமும் ஒருவரின் மனதை முற்போக்கான மாற்றத்தை நோக்கிச் செல்லும் வகையில் திறந்து வைக்கின்றன. அதனாலேயே நேரு மதரீதியான நம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் சார்ந்த பகுத்தறிவை முன்னிறுத்தி வந்தார். மதத்திலிருந்து தன்னைப் பிரித்து வைத்துக் கொண்ட அவர் மதத்தை அலட்சியப்படுத்துகின்ற ஆனாலும் மதத்திடம் பகைமை பாராட்டாத மதச்சார்பற்ற அரசின் பக்கம் நிற்பவராக இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அவருக்கும் ஆட்டாதுர்குக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக சிலர் காண்கின்ற போதிலும், ஜனநாயகம், பன்முகத்தன்மை போன்றவற்றின் மீதிருந்த கட்டுப்பாடுகளால் ஆட்டாதுர்க் வெற்றியடைந்த நிலையில் (குறைந்தபட்சம் ஆட்சியிலிருந்த காலத்தில்) நேருவால் தோல்வியையே காண முடிந்தது.

Religion and secularism: Nehruvians opposed to Nehru Article in tamil translated by T.Chandraguru மதமும், மதச்சார்பின்மையும் : நேருவை முரண்படும் நேருவியர்கள் தமிழில் தா. சந்திரகுருஇந்த எளிமையான சித்தரிப்பிற்கு மேலாக மதம் மற்றும் மதச்சார்பின்மை மீது நேரு கொண்டிருந்த கருத்துகள் மிகவும் நுட்பமானவையாக, சிக்கலானவையாக இருந்தன எனும் வாதத்தை இந்தக் கட்டுரை மூலமாக முன்வைக்கின்றேன். இன்றளவிலும் நேருவின் கருத்துகள் இந்தியாவிற்கு மிகப் பொருத்தமானவையாகவே நீடித்து வருகின்றன. நேரு குறித்த இவ்வாறான சித்திரத்தை 1960களின் இறுதி மற்றும் 1970களில் கட்டமைப்பதில் நேருவின் கருத்துகளால் ஊக்கம் பெற்றிருந்த நேருவியர்கள் சிலர் பெரும் பங்காற்றியிருந்தது உண்மையே. அவரது இறப்பிற்குப் பின்னர் அவருடைய மகள் இந்திராகாந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சில அறிவுஜீவிகளின் கைவண்ணத்தால் உருவான ’நேருவியன் மதச்சார்பின்மை’யிலிருந்து மதம் மற்றும் மதச்சார்பின்மை குறித்ததாக நேருவிடமிருந்த கருத்துகளும், அவருடைய அரசியல் செயல்பாடுகளும் முற்றிலும் வேறாகவே இருந்தன. நேருவியர்களின் அதுபோன்ற மாறுபட்ட கருத்துகள் நேருவின் சொந்தக் கருத்துகளுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே மிகமுக்கியமாக இந்தக் கட்டுரையில் வலியுறுத்தப்படுகின்றது.

மதம் மற்றும் பன்முகத்தன்மை மீது
நேரு அடிப்படையிலேயே ‘மதம்’ அல்லது ‘மதச்சார்பற்ற’ என்ற சொற்களின் மீது நம்பிக்கையில்லாதவராகவே இருந்து வந்தார். தன்னுடைய சுயசரிதையில் ‘மதம் என்ற சொல் அதன் முக்கியத்துவத்தை – அவ்வாறான முக்கியத்துவம் உண்மையிலேயே இருக்கும் என்றால் – இழந்து விட்டது. மதமானது குழப்பத்தை உருவாக்கி முடிவில்லாத விவாதங்களுக்கு மட்டுமே வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மதம் என்ற சொல்லை நமது பயன்பாட்டிலிருந்து விலக்கி வைப்பதே நன்றாக இருக்கும்’ என்று நேரு கூறியிருக்கிறார் (கோபால் மற்றும் ஐயங்கார்,2003).

நேரு ஏன் அவ்வாறு நினைத்தார் என்பதைப் புரிந்து கொள்கின்ற வகையில் இப்போது உங்களுக்கு மனிதர்களின் வரலாறு குறித்து கற்பனையான, எட்டு படிநிலை கொண்ட சிந்தனை வழியிலான ஆய்வை விளக்கப் போகிறேன்.

முதலாவதாக நீங்கள் கடந்த காலத்தின் ஒரு புள்ளியில் நாம் இருப்பதாகவும், அப்போது நம்மை மிஞ்சிய ஆற்றல் நமக்கு இருந்ததாகவும் கற்பனை செய்து கொள்ள வேண்டும். அதாவது காலத்தில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று கடந்த காலத்து வாழ்வு, உலகு குறித்து நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் அந்தக் காலத்தில் எத்தகைய வாழ்வை நாம் மேற்கொண்டிருந்தோம், அந்த வாழ்வு முறையில் நமக்கிருந்த குறைபாடுகள் யாவை என்பவற்றை நன்கு அறிந்து கொள்வதுடன், அவற்றிலிருந்து மீள்வதற்கான வழியும் நம்மிடம் இருந்தது என்றும் இப்போது கற்பனை செய்து கொள்ளலாம் (படிநிலை1). உண்மையிலேயே அவ்வாறான ஆற்றல் நமக்கு இருக்கும் என்றால் அன்றைய நிலையில் இருந்து இன்றைக்கு எவ்வாறெல்லாம் நம்மால் மாறியிருக்க முடியும் என்பதற்கும், ஆனால் உண்மையில் தற்போது எந்த அளவிற்கு நாம் மாறியிருக்கிறோம் என்பதற்கும் இடையே ஓர் இடைவெளி இருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

மரணம் நம்மை அச்சுறுத்துகின்ற போது தனிப்பட்ட/கூட்டு தொலைநோக்குப் பாதையைத் தேடுவதன் மூலமாக அந்த மரணத்திலிருந்து எவ்வாறு விமோசனம் அடைவது என்ற கேள்விக்கான விடையைத் தேட முயற்சிப்பதைப் போலவே இந்த இடைவெளியைக் கடப்பதற்கும் நாம் திட்டமிடுவோம். அதோடு சுயநிறைவு, சுயகற்றல், சுயவளர்ச்சி, சுயமுழுமையாக்கம் கொண்ட பயணத்திற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். சுருக்கமாகச் சொல்வதானால் அதுபோன்ற கேள்விகளைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும், நம்மைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் எவ்வாறான கருத்தியல்கள் நமக்குத் தேவைப்படும், அத்தகைய கருத்தியல்களின் அடிப்படையில் சுயஉருவாக்க நடைமுறைகளின் வழியாக நமது வாழ்வை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்விகளுக்கான பதில்களைத் தரக்கூடிய தொலைநோக்குப் பாதையைத் தேடி நாம் செல்வோம்.

அந்தப் பாதையைக் கண்டறியும் வகையில் நம்மை வழிநடத்துவதற்கான திறமை, நுண்ணறிவு, ஞானம் கொண்ட ஆசிரியரின் அறிவுரைகள் அப்போது நமக்குத் தேவைப்படலாம். ஆசிரியர் என்பவர் – உயிருடன் இருப்பவராக அல்லது இறந்து போனவராக இருக்கலாம் – நம்முடைய குணநலன்கள், நடைமுறைகள், வாழ்வு, இந்த உலகின் மீது நாம் கொண்டிருக்கும் பார்வை ஆகியவற்றை வடிவமைப்பதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இப்போது மக்கள் அனைவரும் தங்கள் ஆசிரியர்களின் போதனைகளைப் பின்பற்றத் துவங்குவதாகக் கற்பனை செய்து கொண்டு (படிநிலை2) சிந்தனை வழியிலான ஆய்வை மேலும் தொடரலாம்.

அந்த நிலையில் மக்கள் தன்னறிதலை நோக்கிய பாதையைப் பின்பற்றுபவர்களாக மாறுகிறார்கள் (மார்கா,தாவ்). மற்றவர்களிடமிருந்து பரஸ்பரமாகக் கற்றுக் கொள்வது காலப்போக்கில் சுயகற்றலுக்குத் தேவைப்படுவதாகிறது. அதன் விளைவாக சகமனிதர்கள் என்ற உணர்வு மக்களிடையே தோன்றுகிறது. மிகவும் தளர்வானதொரு சமூக உணர்வு அவர்களுக்கிடையே தோன்றத் துவங்குகிறது (படிநிலை3). இப்போது சுயவளர்ச்சி என்பது மற்றவரின் வழிகாட்டுதலுடன் கூடிய சமூகச் செயல்பாடாக மாறுகிறது. அதன் விளைவாக ஆசிரியர்கள், உடனிருக்கும் பிற மாணவர்கள் மிகவும் முக்கியமாக ஒருவருக்குத் தேவைப்படுபவர்களாகி விடுகிறார்கள்.

இவ்வாறான எளிய மனித முயற்சிகள், நடைமுறைகள், மனநிலை, பண்புகள் அனைத்தும் சேர்ந்த முக்கியமான பொருளில் மதம் என்பதை ஏற்றுக் கொள்வதற்கு நேரு தயாராகவே இருந்திருக்கிறார். அவ்வாறான மதத்தை நாம் மதம் A என்று அழைக்கலாம். ‘மதம் என்பது ஒருவரின் உள்ளார்ந்த வளர்ச்சி, குறிப்பிட்ட இலக்கை நோக்கிய அவரது உணர்வு நிலையின் பரிணாமம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது’ என்று கூறிய நேரு ‘அந்த குறிப்பிட்ட இலக்கு எது என்பது நீண்ட விவாதத்திற்குரிய பொருளாகவே இருக்கும். நான் புரிந்து கொண்ட வரையிலும் மதம் என்பது அத்தகைய உள்ளார்ந்த வளர்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அவ்வாறு ஏற்படுகின்ற உள்ளார்ந்த வளர்ச்சியின் விளைவாகவே வெளிப்புற மாற்றங்கள் நிகழ்கின்றன’ என்றும் குறிப்பிடுகிறார் (கோபால் மற்றும் ஐயங்கார் 2003).

நேர்மையான பார்வை
மதம் என்ற சொல்லை நெறிமுறை, தார்மீக உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பயன்படுத்திய காந்தியிடம் இருந்த ‘மதம் A இல்லாமல் எவரொருவராலும் வாழ முடியாது’ என்ற கருத்துடன் ஒத்துப் போகிறவராகவே நேரு இருக்கிறார் (கோபால் மற்றும் ஐயங்கார் 2003). அமெரிக்கத் தத்துவவியலாளரான ஜான்டூவி ‘வாழ்வு குறித்த முழுமையான பார்வையைத் துண்டுதுண்டாக அறிமுகப்படுத்தி, அதன் அத்தியாயங்களை மாற்றியமைக்கின்ற எதுவொன்றும் மதம் என்று அறியப்படும். நிலைத்திருக்கும் பொதுவான மனப்பான்மை காரணமாக பல்வேறு தடைகளையும் மீறி தனிப்பட்ட இழப்புகள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு ஏதாவதொரு கருத்தியலைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மதத்தின் குணங்களுடன் இருக்கும்’ என்று சொன்னதை நேரு மேற்கோள் காட்டுகிறார். மதம் என்றால் இதுபோன்றுதான் இருக்கும் என்றால் எவரொருவரும் மதம் குறித்து சிறிதளவு எதிர்ப்பைக்கூட காட்ட மாட்டார்கள் (கோபால் மற்றும் ஐயங்கார் 2003) என்றும் நேரு சுட்டிக் காட்டியுள்ளார்.

சுயஉணர்தலை நோக்கிய பாதையில் இந்தியா, கிரீஸ், ரோம் போன்ற பண்டைய சமூகங்களில் இருந்ததைப் போன்று ஆண் அல்லது பெண் கடவுள்கள் சார்ந்ததாக அல்லது ‘ஒரு கடவுள் கோட்பாடு’ கொண்ட யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களில் இருப்பதைப் போல் ஒரேயொரு கடவுள் சார்ந்ததாக அல்லது சுதந்திரமான நாத்திக/மதச்சார்பற்ற சமுதாயத்தில் இருப்பதைப் போல கடவுளையே சாராமல் மனித நடவடிக்கைகள், பகுத்தறிவு ஆகியவற்றின் நேர்மை மீது மட்டும் நம்பிக்கை கொண்டதாக என்று பல்வேறு கருத்தாக்கங்கள் இருக்கலாம். பண்டைய கிரேக்கம் (பிளாட்டோ), இந்தியா (புத்தர், ஜைனர், மீமாம்சா) போன்ற இடங்களில் கடவுளைச் சார்ந்திராத கருத்துகளே முதன்முதலாக உருவாகின. மதம் என்பதைக் குறிப்பதற்கான வார்த்தையே இல்லாத, மதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்திராத இந்திய நாடு பழங்காலத்திலிருந்தே பல மதங்களுக்குத் (மதம் A) தாயகமாக இருந்திருக்கிறது. பல ஆண், பெண் கடவுளர்களைச் சிலரும், ஒரேயொரு கடவுளை வேறு சிலரும் முன்னெடுத்த போது கடவுள் இருப்பதையே அறிந்திராதவர்களும் வாழ்ந்து வந்துள்ளனர். பல கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்த சமூகங்களோடு தொடர்புடைய ஆசிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்ட, ஆழ்ந்த மதப் பன்முகத்தன்மையைப் புரிந்து கொண்ட அனுபவம் பெற்றவராகவே நேரு இருந்தார்2.

மரபுவழியிலான பண்டைய வரலாற்றில் இருந்த கலாச்சாரங்கள் அனைத்திலும் உள்ள கடவுள்கள் அனைத்தும் தங்களுடைய தெய்வீகத்திறனின் அடிப்படையிலான செயல்பாடுகளை மேற்கொள்பவையாகவே இருந்து வந்திருக்கின்றன. காதல், போர், அறிவு, கைவினை என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக என்று மொத்தத்தில் பல கடவுள்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு தெய்வமும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு செயலைச் செய்கின்ற கருத்துருவமாகவே இருந்திருக்கின்றன. நெருப்பு, மழை, பூமி, காலம், சூரியன், சந்திரன், கடல் என்றும், உருவாக்குவதற்கு, அழிப்பதற்கு, பாதுகாப்பதற்கு என்றும் பல கடவுள்கள் இருந்துள்ளன. தங்கள் கலாச்சாரத்திற்கான காதல் கடவுளின் பெயரை பிறிதொரு கலாச்சாரத்தில் இருக்கும் காதல் கடவுளிடமிருந்து மக்களால் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. வேறுபாடுகள் குறுக்க முடியாதவையாக இருந்த போதிலும் இதுபோன்றதொரு வழியில் இடைமாற்றம் செய்யக் கூடியவையாகவே இருந்துள்ளன. இவ்வாறு இடைமாற்றம் செய்து கொள்ளக்கூடிய தன்மையை இறையியல் அங்கீகாரம் என்றுகூட ஒருவரால் கூறிக் கொள்ள இயலும். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருந்த கடவுள்கள் மக்களால் பொதுவான பிரபஞ்சத்தின் பின்னணியில் அங்கீகரிக்கப்பட்டன.

பல கடவுள்கள் மீது கொண்ட நம்பிக்கை சார்ந்த உள்ளார்ந்த இறையியலும், அனைவரையும் உள்ளடக்கிக் கொள்ளும் ஒரே கடவுள் மீதான நம்பிக்கையும் மதங்களுக்கிடையில் மிக எளிதான பரிமாற்றங்களை அனுமதிக்கின்றன. வெவ்வேறு பெயர்களால் ஒரே கடவுள் குறிக்கப்படுவதாலும் அல்லது ஒரே கடவுள் பல கலாச்சாரப் பின்னணியுடன் இருப்பதாலும், ஒன்றிலிருந்து விலகி பிறிதொன்றைத் தழுவுவதில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கவில்லை என்பதால் இரண்டையுமே நாம் ஏன் தழுவிக் கொள்ளக் கூடாது?3 இறுதியில் இத்தகைய இறையியல் வழியிலான பன்முகத்தன்மையுடன் கடவுளையே சார்ந்திராத பார்வைகளையும், நெறிகளையும் இணைத்துக் கொண்டு நம்மால் அதை இன்னும் விரிவாக்கிக் கொள்ள முடியும்.

மனிதர்களுடன் மட்டுமல்லாது மனிதர்கள் அல்லாத உயிரினங்களிடமும் தொடர்புடைய ஒரே கடவுளைச் சார்ந்த/பல கடவுள்களைச் சார்ந்த/கடவுளைச் சாராத நெறிமுறைகளை உள்ளடக்கிக் கொள்ள ‘தன்னறிதலுக்கான நெறிமுறை’ என்ற பொதுவான வார்த்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய நெறிமுறைகள் ஒவ்வொன்றும் இறுதியில் அடையப் போவது என்று விவரிக்கப்பட்டுள்ள அல்லது புரிந்து கொள்ளப்பட்டுள்ளவற்றுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வழியாகவே கருதப்படும்.

இந்த ஆழ்ந்த பன்முகத்தன்மையே இந்திய மதங்களில் முக்கிய அம்சமாக இருக்கிறது என்று தன்னுடைய சொந்த அனுபவங்களின் மூலமாகவும், காந்தி தன்னிடம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் மூலமாகவும் நேரு கற்றுக் கொண்டிருந்தார். அவர் நவீன மனிதத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்ட மதம் Aவைத் தழுவியவராகவே இருந்தார். அந்த மதத்தையும், அது வழங்கிய விழுமியங்களையும் உயர்நெறி சார்ந்த கொள்கைகளாக ஏற்றுக் கொண்டு மற்றவற்றைப் போலவே மதம் A இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். அவையனைத்தும் போதுமான அளவிலே இருந்த போதிலும், தன்னறிதலுக்காக அவற்றில் ஒன்றுகூட தனக்குத் தேவைப்படவில்லை என்பதை நேரு ஏற்றுக் கொண்டிருந்தார். தன்னுடைய அந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில், ரோமென் ரோலாண்ட் முன்வைத்த கருத்துக்களை நேரு பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார்: ‘எண்ணங்களின் தரம் மட்டுமே அதன் ஆதாரங்களைத் தீர்மானித்து அது மதத்திலிருந்து வெளிப்படுவதாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறதே தவிர அவற்றின் நோக்கம் அவ்வாறாக இருப்பதில்லை. ஒரே மனதுடன் எந்தவொரு தியாகத்தையும் செய்து எப்பாடுபட்டாவது உண்மையைக் கண்டறிவதற்கான தேடுதலை நோக்கிய பயணத்தை அச்சமின்றி மேற்கொள்வதற்கு உதவுகின்ற எதுவும் மதத்தன்மையுடன் இருப்பதாகவே நான் கூறுவேன். ஏனெனில் ஒட்டுமொத்தத்தில் மனித இனத்தின் வாழ்வைக் காட்டிலும் (இதைத்தான் நான் மீறும் திறன் என்று கூறினேன்) மேலானதாக இப்போதிருக்கின்ற சமூக வாழ்வு இருப்பதற்கான மனித முயற்சிகள் மீது அது நம்பிக்கை கொண்டிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் உறுதிப்பாடின்மைகூட மத ஈடுபாடு கொண்ட ஆன்மாக்களின் பெரும்படையில் சேர்ந்து கொள்ள முடியும்’ (கோபால் மற்றும் ஐயங்கார் 2003). அது அவ்வாறிருக்குமென்றால் அந்தப் பெரும்படையின் முன் தலைவணங்கி அதனைப் பின்பற்றுவதற்குத் தான் தயாராக இருப்பதான முடிவிற்கு நேரு வருகிறார்4.

நேருவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாது பொதுவாக மனித வாழ்வில் மதம் Aயின் முக்கியத்துவத்தை மெய்ப்பித்து, அதன் தவிர்க்கவியலாத ஆழ்ந்த பன்முகத்தன்மையைக் காட்டிய பிறகு என்னுடைய சிந்தனை வழியிலான ஆய்வைத் தொடரும் வகையில் அடுத்த படிநிலைக்கு நாம் செல்லலாம்.

இப்போது நாம் காலப்போக்கில் மதம் A சார்ந்த சமூகம் அதிகாரம், சமூகநிலைப் படிநிலைகளைக் கொண்டதொரு நிறுவன அமைப்பை உருவாக்கிக் கொண்டதாகக் கற்பனை செய்து கொள்ளலாம் (படிநிலை 4). போதனைகளை ஒழுங்குபடுத்துகின்ற பொறுப்பை தாங்களாக ஏற்றுக் கொண்ட சிலர் அவற்றிற்கான இசைவைப் பெறுகின்ற வகையிலே செயல்பட்டதன் விளைவாக அந்தப் போதனைகள் வளர்ச்சியடைந்தன. சுருக்கமாகச் சொல்வதென்றால் அந்தப் போதனைகள் அப்போது அறிவுசார் கோட்பாடுகளாக மாறின (படிநிலை 5). விளைவாக முன்னர் மிகவும் தளர்வான நிலையில் இருந்த சமூகமானது கோட்பாடு சார்ந்த, அதிகாரத்துவ அமைப்பாக மாறியது. தன்னை மிக இறுக்கமான நிறுவனமயப்படுத்தப்பட்ட சமூகத்துடன் அடையாளப்படுத்திக் கொள்வதைச் சார்ந்திருப்பதாக மதம் Aயின் நோக்கமும் மாறியது. மனிதனிடம் உள்ள குணம் என்ற கருத்துருவாக்கத்தைப் பெற்றிருந்த மதத்தன்மை (நேரு வரையறுத்தவாறு) இப்போது மனிதர்களை விட்டு விலகி, மனிதர்களுக்கு அயலானதொரு கருத்தாக மாறிப் போனது5.

ஏற்கனவே நாம் மதம் A பன்முகத்தன்மை கொண்டது என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதுபோன்ற பெரும்பான்மையான மதங்கள் படிநிலை 4, 5 ஆகியவற்றைக் கடந்து வரும் போது அங்கே பல அறிவார்ந்த சமூகங்கள் உருவாகியிருக்கும். கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் போது, அந்த அதிகாரத்துவ அமைப்பிற்குள் இருக்கின்ற சிலர் மதத்திற்குள் நுழைவது, வெளியேறுவது போன்ற செயல்களுக்கான கண்டிப்பான விதிகளைக் கடைப்பிடிக்கின்ற கடுமையான காவலர்களாக மாறியிருப்பார்கள் (படிநிலை 6). மதமாற்றம் செய்பவர்களாக இருக்கும் அவர்களில் ஒரு சிலர் பிறரைப் போட்டியாளர்களாகக் காண்பதோடு, தங்களிடமுள்ள தனிப்பட்ட பற்றுறுதிக்காகப் போராடுபவர்களாகிறார்கள். மற்றவர்களுக்கு எதிரானவர்களாக தங்களை அவர்கள் மெதுவாக வரையறுத்துக் கொள்ளத் துவங்குகின்றனர் (படிநிலை 7). கோட்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கின்ற வேறுபாடுகளை முன்னிறுத்திக் கொள்ளும் அவர்கள் தங்களுக்கிடையே நேரடி மோதலையும் உருவாக்கிக் கொள்கின்றனர். இவ்வாறாக படிநிலை 4இல் இருந்து படிநிலை 8 வரை கடந்து வந்த மதம் A, இப்போது பல மதங்களாக உருமாறி வேறு வகையில் சொல்வதானால் B என்ற புதிய மதத்தை உருவாக்கியிருக்கியிருக்கும்.

இப்போது சுயவளர்ச்சி குறித்த போதனைகளை முன்னிறுத்துகின்ற மதம் A, நிறுவனமயமாக்கப்பட்ட, அதிகாரம் மிக்க, தராதரம் கொண்ட, கொள்கை சார்ந்து இருக்கின்ற மதம் B என்று இருவேறு வகையான மதங்களைக் குறிப்பதாக மதம் என்ற சொல் மாறி விடுகிறது. இதுகுறித்து மிகப்பெரிய குழப்பம் நேருவிடம் உருவானது. அவர் மதம் Aவை மதிப்பு மிக்க ஒன்றாகவும், மதம் B தனக்குப் பொருந்தாதது என்றும் கண்டார். அவையிரண்டிற்கும் இடையில் உருவான குழப்பத்திலிருந்து விடுபட விரும்பிய அவர் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவாறு அவையிரண்டும் இருந்ததைக் கண்ட போது, மதம் என்ற வார்த்தையையே கைவிட்டுவிட விரும்பினார். ஆனாலும் மதம் என்ற அந்த வார்த்தை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்ததால், அவரால் அவ்வாறு செய்ய இயலவில்லை. ஒரு வார்த்தை பல அர்த்தங்களுடன் பயன்படுத்தப்படுகின்ற போது அந்த வார்த்தையைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாகி விடுகின்றது என்ற முடிவிற்கு அவர் வந்து சேர்ந்தார்.

‘மதம் இல்லாமல் எந்தவொரு மனிதனும் வாழ முடியாது’ என்று காந்தி எழுதிய பிறகு தன்னுடைய கருத்தை வலியுறுத்துவதற்காக நேரு மீண்டும் காந்தியைப் பயன்படுத்திக் கொண்டார். ‘தங்களுடைய பகுத்தறிவு குறித்து தற்பெருமை கொள்ளும் சிலர் மதம் பற்றி சொல்வதற்கென்று தங்களிடம் எதுவும் இல்லை என்று அறிவிக்கலாம். ஆனாலும் அது மூக்கு இல்லை என்றாலும் நான் சுவாசிக்கிறேன் என்று கூறுவதைப் போன்றதுதான்’ என்று நேரு கூறினார். ‘உண்மை மீது நான் கொண்ட பக்தியே என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தது. அரசியலில் மதத்திற்கு எந்தவொரு பங்கும் இல்லை என்று கூறுபவர்கள் மதம் என்றால் என்ன என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று எந்தவொரு தயக்கமும் இன்றி என்னால் கூற முடியும்’ என்று காந்தி அதற்குப் பதிலளித்தார். ‘தங்களுடைய அரசியலில் மதத்தை விலக்கி வைக்க விரும்புகின்ற பெரும்பாலானவர்கள் மதம் என்று தங்களால் குறிப்பிடப்படுவதற்கு முற்றிலும் மாறுபாடான கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்று காந்தி சொல்லியிருந்தால் அது இன்னும் சரியாக இருந்திருக்கும்’ என்று நேரு அதற்குப் பதில் அளித்தார் (நேரு,1942). மதம் என்பதன் மூலம் மதம் Aவைப் பற்றி மட்டுமே காந்தியும் தன்னைப் போலவே குறிப்பிடுகிறார் என்று நேரு இங்கே மிகவும் தெளிவாகச் சொல்கிறார். மதம் A இல்லாமல் அரசியல் நடத்த முடியாது என்று கூறிய காந்தியைப் போன்று அரசியலை மதம் Bயுடன் கலக்காதவராகவே நேரு இருந்தார். அவர்கள் இருவருமே மதம் Aவை மதம் என்பதாக அதாவது உண்மையான மதம் என்ற பொருளிலும், மதம் Bயை வகுப்புவாதம் என்ற பொருளிலும் குறிப்பிட்டு வந்ததை நம்மால் காண முடிகிறது.

மதச்சார்பற்ற அரசுகளும் மதச்சார்பின்மையும்
‘மதச்சார்பற்ற’ என்ற சொல் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கவில்லை என்று கூறிய நேரு நமது அரசை வேறொரு சரியான வார்த்தை இல்லாததாலேயே அந்த வார்த்தையைப் பயன்படுத்தி நாம் மதச்சார்பற்ற அரசு என்று அழைத்து வருகின்றோம் (சந்திரா மற்றும் பலர் 2001) என்றார். மதச்சார்பற்ற அரசு குறித்த அவருடைய கருத்து உண்மையில் எவ்வாறாக இருந்தது?

ஒரு மதம் (A) எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அரசு என்பது அதனுடனோ அல்லது வேறொரு மதத்துடனோ தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாததாக இருக்க வேண்டும். ஒரு மதத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு அந்த மதத்தையே அரசு மதமாக அறிவிக்காமல் அந்த அரசு இருந்திட வேண்டும். மதம் என்பது அனைவராலும் பேணப்படுவதான அல்லது யாராலும் பேணப்படாத நிலைப்பாட்டுடனே அரசு இருக்க வேண்டும். நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்கள் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக – இந்தியாவில் பெரும்பான்மை ஹிந்து மதப் பண்பாடு இருப்பதைப் போன்று பொதுவான ஒருத்தன்மை எண்ணம் கொண்டதாக – இருந்த போதிலும் அரசு என்பது ஹிந்து அரசாக இருக்கக் கூடாது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தவராகவே நேரு இருந்தார். ஹிந்து ராஷ்ட்ரம் அல்லது ஹிந்து தேசிய அரசின் மீது விமர்சனம் கொண்டவராகவும் அவர் இருந்து வந்தார்.

சிலருக்கு ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்குவது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், என்னால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நாட்டில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் விரும்பிய எதுவும் செய்து முடிக்கப்படும். ஹிந்து ராஷ்ட்ரம் பற்றி பேசுகின்றவர்கள் அதுபோன்றதொரு கருத்தை நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் பேசுகிறார்கள். அவர்களைப் போன்றே நாமும் நடந்து கொள்வதை இந்த உலகிடம் சுட்டிக்காட்டி இஸ்லாமிய அரசைத் தாங்கள் உருவாக்கிக் கொண்டதை பாகிஸ்தானியர்களால் நியாயப்படுத்திக் கொள்ள முடியும்6. ஹிந்து ராஷ்ட்ரமானது ஹிந்துக்கள் அல்லாத மற்றவர்களின் நிலைமையைச் சீரழித்து விடும். முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், மற்ற மதத்தவர்கள் அனைவரையும் தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆதரவான பசப்பு வார்த்தைகளை அவர்கள் சொல்லக்கூடும். ஆனாலும் ஒருவரின் தலைக்கு மேலே ஏறி உட்கார்ந்து கொண்டு உங்களை நான் நன்கு கவனித்துப் பார்த்துக் கொள்வேன் என்று ஒருவர் கூறுவதை எந்த இனத்தவராவது அல்லது நபராவது ஏற்றுக் கொள்வார்களா?

அவ்வாறு பேசுவது மற்றவர்களின் நிலையைச் சீர்குலைப்பது மட்டுமல்லாது, அவர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளி தங்களை மிகவும் தாழ்ந்தவர்களாக உணரவும் வைக்கிறது. இந்த நவீனயுகத்தில் அனைத்து அரசுகளும் தேசிய அரசுகளாக இருப்பதால் மதம் சார்ந்தவை உள்ளிட்ட அனைத்து குறுகிய தேசியவாதங்களையும் நேரு எதிர்த்தே வந்தார். மதரீதியாக வேறுபட்டிருக்கின்ற சமூகங்களுக்குள் இருக்கின்ற அனைத்து மத தேசியவாதங்களும் மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் தன்மையுடனே இருக்கின்றன. கடந்த காலத்தின் எச்சமாக, பின்தங்கியவையாக மதங்கள் இருப்பதாகக் கூறி மத தேசியவாதங்களின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்ட நேருவின் விமர்சனம் சரியான திசையிலேயே சென்றிருந்தது. இந்தியாவில் கட்டமைக்கப்படுகின்ற தேசியவாதம் சர்வதேசியத்திற்காக தனது கதவுகள், ஜன்னல்களை முழுமையாகத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற வாதத்தை நேரு முன்வைத்தார். அதுபோன்று நடப்பதற்கு அரசானது எந்தவொரு மதத்துடனும் – மதம் Aவோடுகூட – தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. மதம் Aயின் வழியாக அடையக் கூடிய நலன்கள் – அவை எவ்வளவு மதிப்பு மிக்கவையாக இருந்தாலும் – நிச்சயம் மதச்சார்பற்ற அரசால் வழங்கப்படும் நலன்களைப் போன்று இருக்க முடியாது என்றார்.

இரண்டாவதாக நேருவின் பார்வை மதச்சார்பற்ற அரசால் மதத்திற்கு எதிரான அரசாக இருக்க முடியாது என்பதாகவும் இருந்தது. அந்தப் பார்வை மதத்தின் மீது நம்பிக்கையிழக்கச் செய்யும் வகையிலோ, அதைப் புறந்தள்ளுகின்ற வகையிலோ அரசு நடந்து கொள்ளக் கூடாது என்பதாகவும் இருந்தது. மதம் Aயின் இன்றியமையாத்தன்மையை, மதிப்பை ஏற்றுக் கொண்ட பிறகு கண்மூடித்தனமாக மதத்தை எதிர்ப்பது அல்லது மதத்தை இல்லாமல் செய்வதற்கான ஆதரவை அளிப்பது போன்ற செயல்களை அவரால் எப்படி முன்வைக்க முடியும்? தங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்பவையாக பல நம்பிக்கைகளும் இருப்பதால், பொதுவெளியில் மதம் Aவைப் போன்றே அனைத்து மதங்களையும் மதச்சார்பற்ற அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நேரு கூறினார். அனைத்து மதங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தையும் பாதுகாப்பது மட்டுமல்லாது, மக்களுடைய மதப் பழக்கவழக்கங்களுக்கான உத்தரவாதத்தையும் மதச்சார்பற்ற அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார். மதச் சுதந்திரம், மனச்சாட்சி போன்றவற்றை பாதுகாப்பது மட்டுமல்லாமல், எந்தவொரு மதத்தையும் சாராதவர்களின் (நாத்திகர்கள் உட்பட) சுதந்திரத்தையும் அந்த அரசு உறுதிப்படுத்தித் தர வேண்டும் என்று கூறிய நேரு இன்னும் ஒரு படி மேலே சென்று அனைத்து நம்பிக்கைகளையும் சரிசமமாகக் கௌரவப்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார். மதத்தால் வேறுபட்டிருக்கின்றதொரு சமூகத்தில் இதைப் போன்று நடந்து கொள்வதே மதச்சார்பற்ற அரசின் முக்கியமான கடமையாக இருக்கிறது. மதச்சார்பற்ற அரசின் இதுபோன்ற கொள்கைகளைப் பாதிக்காத வகையில் தங்களுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டிய கடமை சிறுபான்மை, பெரும்பான்மை என்று இரண்டு சமூகங்களுக்கும் இருக்கின்றது.

மதத்தின் நிலை, அதிகாரப் படிநிலைகள், கோட்பாட்டு விஷயங்கள், மதங்களுக்கு இடையிலான போட்டி, வெறுப்பு-பேச்சு, மதங்களுக்கு இடையிலான வன்முறை ஆகியவற்றின் அடிப்படையில் மதம் B தொடர்பாக மதச்சார்பற்ற அரசு எந்த வகையில் செயல்பட வேண்டும்? மதச்சார்பற்ற நாடுகள் அனைத்தும் குறைந்தபட்சம் இரண்டு தேவைகளை தாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. (அ) மதச்சார்பற்ற நாடுகள் எந்தவொரு B மதத்தின் கோட்பாடுகளாலும் குறிப்பிடப்பட்டுள்ள முனைகளில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் (ஆ) தேவாலய அதிகாரிகள் அல்லது இறையியலாளர்கள் போன்ற மத ஊழியர்கள் அரசு அதிகாரிகளாக ஒருபோதும் மாறக் கூடாது. குறைந்தபட்சம் மதத்தில் தங்களுடைய பதவி அல்லது படிநிலை காரணமாக, (இறைமையாட்சிகளிலும், அதிகாரம் மிக்க மத ஸ்தாபனங்களைக் கொண்டுள்ள அரசுகளில் இருப்பதைப் போன்று) தங்களுக்கென்று அரசின் கட்டமைப்புகளுக்குள் ஓரிடத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவாதம் அவர்களுக்குத் தரப்படக் கூடாது.

இந்தியாவில் இந்த இரண்டாவது வகைத் துண்டிப்பு மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஏனெனில் முதலாவதாக பெரும்பாலும் வரலாற்று ரீதியாக அதிகாரம், செல்வக் குவிப்பு குறித்த மதச்சார்பற்ற கருத்துகளாலேயே ஏகாதிபத்திய நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக எந்தவொரு கணிசமான அல்லது தன்னிச்சையான தொடர்பையும் மதம், அரசியல் சார்ந்த பணியாளர்களிடையே ஜனநாயகக் கருத்துகள் ஏற்படுத்தியிருக்கவில்லை. எனவே மதச்சார்பற்ற அரசு கோட்பாடுகள், நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் மட்டத்தில் மதம் Bஇலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்வதாகவே இருக்க வேண்டும். சில சமயங்களில் சட்டம் மற்றும் பொதுமக்கள் சார்ந்த கொள்கை மட்டத்திலும் அது தன்னைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்கிற மூன்றாவது நிபந்தனையையும் மதச்சார்பற்ற அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. வெவ்வேறு கட்டங்களில் பிரான்ஸ், துருக்கி மற்றும் பல்வேறு கம்யூனிச ஆட்சிகளின் கீழ் மதத்திற்கு எதிராக நடைபெற்ற அரச விரோதச் செயல்களை எதிர்த்து வந்ததால் நேரு இந்தக் கருத்தைக் கடைப்பிடிக்க விரும்பியிருக்கலாம்.

மதங்களின் மீது எதிர்மறையாகவோ அல்லது கண்மூடித்தனமாகவோ அரசுகள் தலையிடக் கூடாது என்றால், அவை மதங்களிடமிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டுமா என்ற கேள்வி இங்கே எழுகின்றது. அரசின் கொள்கைகள், சட்டத்தின் அடிப்படையில் மதங்களிடமிருந்து தங்களை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு மதங்களின் மீதான தங்களுடைய மரியாதையை அரசுகள் காட்ட வேண்டுமா? ‘தேவாலயத்திற்கும் அரசுக்கும் இடையிலே சுவர் எழுப்பப்பட்டு இருக்கிறது என்பதற்கு அவையிரண்டும் ஒன்றுக்கொன்று தலையிட்டுக் கொள்ளக் கூடாது, தங்களுக்கென்று சொந்த எல்லைக்குட்பட்ட அதிகார வரம்புகளை அவை கொண்டுள்ளன, அரசின் கொள்கை மற்றும் சட்டத்தின் நோக்கமாக மதம் என்பது இருக்க முடியாது என்பதையே குறிக்கிறது’ என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட (அமெரிக்க மதச்சார்பின்மை குறித்த) முதலாவது சட்டத் திருத்தம் விளக்கப்பட்டு வருவதை நன்கு அறிந்தவராகவே நேரு இருந்திருக்க வேண்டும். தேவாலயம் தொடர்பான எந்தவொரு விஷயம் குறித்தும் அமெரிக்க காங்கிரஸ் சட்டமியற்றக் கூடாது என்ற போதிலும் மதம் B பற்றிய கருத்துக்களைப் பொறுத்த வரை அதுபோன்றதொரு தேர்வு நேருவிடம் இருக்கவில்லை.

ஆக மதம் B குறித்து நேருவின் நிலைப்பாடு எவ்வாறாக இருந்தது? இந்தியாவின் மதம் சார்ந்த பார்வை கணிசமாக மாறிவிட்டது என்பதை அவர் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. மதம் A மிகவும் நெருக்கமாக மதம் Bஐ ஒத்திருக்க ஆரம்பித்ததன் விளைவாக இந்தியாவில் மதங்கள் இணைந்து வாழ முடியாது என்ற நிலைமை உருவானது. அந்த புதிய அவதாரத்தில் மதம் மிகவும் மோசமான ஒன்றாக உருவெடுத்து இதற்கு முன்னால் என்னால் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பெரும்பான்மை – சிறுபான்மை என்ற மோசமான நிலைமை தோன்றுவதற்குக் காரணமானது. மதம் என்பது மனநோய் தொடர்பிலான நோய்ப் பின்னலாக, முற்றிலும் விஷம் தோய்ந்ததாக மாறிப் போனது. அதீதமான எதிர்மறை உணர்ச்சிகளின் (பொறாமை, தீமை, வன்மம், வெறுப்பு) கூட்டியைவு கொண்ட கொடூரமான பழிவாங்கும் செயல்களுடன் அது இணைந்து கொண்டது. எவ்வித அக்கறையுமின்றி, மாறி மாறி சுழற்சி முறையில் உருவாக்கப்படுகின்ற ஆழ்ந்த மனவேறுபாடு கொண்ட கீழ்நோக்கிய பாதையில் குழுக்களை அனுப்பி வைத்தது. மதமானது ‘மற்றவர்’களை இருத்தலியல் அச்சுறுத்தலாகக் கருதிய பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பாவை நினைவூட்டுவதாக இருக்கிறது. அங்கிருந்த கோட்பாட்டு வேறுபாடுகள் வெறுமனே அறிவுசார் கருத்து வேறுபாடுகளாக இல்லாமல், ஒருவருக்கொருவர் இடையே இருந்து வந்த அடிப்படை நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையிலேயே இருந்தன. ‘மற்றவர்’ உடன் சேர்ந்து வாழ முடியாது என்பதால் அவர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்பதாக அந்தக் கருத்து இருந்தது.

மதச்சார்பற்ற அரசின் பணிகள்
இந்தக் குழுக்கள் அரிதாக நிறைவேற்றப்படக் கூடிய கோரிக்கைகளை ஒவ்வொன்றாக முன்வைப்பதே அந்த நோய்க்குறியின் அம்சமாக உள்ளது. கற்பனையான மனக்குறைகளை முன்வைக்கின்ற அந்தக் குழுக்கள் மற்றவரை மிகவும் பாதிக்கின்ற விஷயங்களை மிகவும் துல்லியமாக வலியுறுத்துகின்றன. சில சமயங்களில் மற்றவர்கள் விரும்புகின்ற விஷயத்தையே தாங்களும் வெறித்தனமாக விரும்புகின்றன. பிறிதொரு நேரத்தில் முற்றிலும் எதிரான நிலை கொண்டு மற்றவர்களின் கூற்றுகளை எப்போதும் மறுதலிக்கின்றன. இந்த நிலையில் குழுக்களுக்கிடையேயான பகைமை மிகவும் தாராளமாகப் பரவி, அடுக்கின் மேல் அடுக்காக குறைகள் அடுக்கப்படுகின்றன. முடிவுகள் எதனையும் எதிர்பாராமல், மற்றவர்களின் தோல்வி, அவமானத்தைத் தவிர வேறெதையும் மனதில் கொள்ளாமல் எதிர்விளையாட்டுக்களும் விளையாடப்படுகின்றன.

இதுகுறித்த பல எடுத்துக்காட்டுகளை நேருவின் சமகாலத்தவரும், மிகச்சிறந்த தலித் தலைவருமான பி.ஆர்.அம்பேத்கர் எடுத்துக்காட்டியுள்ளார். ‘இரண்டு விரோத நாடுகளுக்கிடையே இருக்கின்ற சற்றும் தணியாத ஆயுதங்களுக்கான போட்டியை நினைவுபடுத்துகின்ற வகையில், ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் எதிராகத் தயாராகி வருகிறார்கள். ஹிந்துக்களுக்கு பனாரஸ் பல்கலைக்கழகம் இருந்தால் முஸ்லீம்களுக்கு அலிகார் பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். ஹிந்துக்கள் சுத்தி இயக்கத்தைத் தொடங்கினால், முஸ்லீம்கள் தப்லிக் இயக்கத்தைத் தொடங்க வேண்டும். ஹிந்துக்கள் சங்காதனைத் தொடங்கினால், முஸ்லீம்களுக்கு தஞ்சிம் இருக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு ஆர்எஸ்எஸ் இருக்குமானால், அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் காக்ஸர்களை முஸ்லீம்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்’ என்றே நிலைமை இருப்பதாக அம்பேத்கர் கூறியுள்ளார் (அம்பேத்கர், 1945).

முஸ்லீம்களில் ஒரு குழு மதங்களுக்கு இடையிலான ஆதிக்கம் குறித்த அச்சத்தை அடித்தளமாகக் கொண்டுள்ள மனச்சிதைவு நிலைக்குள் தங்களைத் தள்ளி விட்டுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் உருவான பின்னர் அது மிகவும் மோசமடைந்து உண்மையான எதிர்பார்ப்பாகவே அவர்களிடம் மாறி விட்டது. பொதுஅரங்கில் இருக்க வேண்டிய மதச் சகவாழ்வு குறித்து தீவிரமான சந்தேகங்கள் இருந்து வருகின்ற நிலையில், மதச்சார்பற்ற அரசின் முக்கியமான பணி என்பது அனைத்து மதச்சமூகங்களும் ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ்வதை உறுதி செய்து கொள்வது, காந்தி பயன்படுத்திய ‘சமூக நல்லிணக்கத்தை’ நிறுவுவது என்பதாகவே இருக்கும்.

இன்னும் பொதுவாகச் சொல்வதனால் அனைத்து மதங்களிலிருந்தும் தன்னைத் தூர விலக்கி வைத்துக் கொண்டு அதன் மூலம் அரசின் நடத்தைக்கான குறிப்பிட்ட முக்கியமான செயல்பாட்டைச் செய்வதற்கும், மதச்சமூகங்களுக்கிடையில் பற்றுறுதியையும், நம்பிக்கையையும் உறுதிப்படுத்துவதற்கும் மட்டுமே மதச்சார்பின்மை பயன்படுத்தப்பட வேண்டும். மதச்சார்பற்ற அரசானது சமூகத்தன்மையை ஊக்குவிக்கவும், மதச் சமூகங்களுக்கிடையில் உறவைப் பேணி வளர்த்திடவும் வேண்டும். அதற்காக நேரு பயன்படுத்திய சொல் ‘ஒத்துழைப்பு’ என்பதாகும்7. வெவ்வேறு மதச் சமூகங்களுக்கிடையில் ஒத்துழைப்பை வளர்த்தெடுப்பதே மதச்சார்பற்ற அரசின் உள்ளார்ந்த நோக்கமாக இருக்க வேண்டும்.

அரசு அதிகாரத்தின் உதவியுடனோ அல்லது உதவியில்லாமலோ மதச் சமூகம் ஒன்றின் உறுப்பினர்கள் மற்ற மதச் சமூகத்தினரிடம் பாகுபாடு காட்டுவது, அவர்களை ஓரம்கட்டுவது, விலக்குவது, ஒடுக்குவது, இழிவுபடுத்துவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களால் உருவாகின்ற மதங்களுக்கிடையிலான ஆதிக்கமானது மதச்சார்பின்மை குறித்து நேருவிடமிருந்த கருத்தாக்கத்தில் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தது. வெவ்வேறு மதச் சமூகங்களுக்கிடையில் ஒத்துழைப்பை வளர்த்தெடுப்பது, மதங்களுக்கு இடையிலான ஆதிக்கத்தைத் தகர்ப்பது போன்றவை மதச்சார்பற்ற அரசின் கடமையாகும்.

மதங்களுக்கிடையில் இருந்து வருகின்ற ஆதிக்கத்திற்கான உந்துதலின் பெரும்பகுதி நாம் மேலே பார்த்தது போல் மதம்(கள்) Aஇலிருந்து வருவதாக இல்லாமல், மதம் Bஇலிருந்து வருவதாகவே இருக்கிறது. அரசால் மதம்(கள்) Bயிலிருந்து வெறுமனே தன்னை ஒதுக்கி வைத்துக் கொள்ளவோ அல்லது பிரித்து வைத்துக் கொள்ளவோ முடியாது. மதம் B மீது சட்டங்கள், கொள்கைகள் மூலம் அரசு தலையிட வேண்டியது அவசியம் என்றால், அதனை அரசு அவசியம் செய்தே ஆக வேண்டும். நேருவைப் பொறுத்தவரை வகுப்புவாதம் என்பது ஒரு மதச் சமூகம் மற்ற மதச் சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதையே குறிக்கின்றது (2003: 173). அது அவ்வாறாக இருக்குமென்றால் வகுப்புவாதம் என்பது சிறுபான்மை அல்லது பெரும்பான்மை என்று எந்த சமூகத்திடமிருந்து தோன்றினாலும் (2003: 192-3) மதச்சார்பற்ற அரசு அதைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை அந்தச் சமூகம் சிறுபான்மைச் சமூகமாக இருக்குமென்றால், ஜனநாயகத்தின் அனைத்து கருத்துகளுக்கும் எதிரானதாக அது இருக்கும். மாறாக அது பெரும்பான்மைச் சமூகமாக இருந்தால், மற்ற சமூகங்கள் மீதான அதன் ஆதிக்கம் ஜனநாயகத்திற்கு விரோதமானதாக அமைந்து விடும்.

பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதிக்கத்திலிருந்து சிறுபான்மைச் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு அந்த சமூகம் சார்ந்த சிறுபான்மை உரிமைகள் வழங்கப்படுவது மிகவும் முக்கியமானது. அதன் மூலம் பெரும்பான்மைச் சமூகத்திற்கு வழக்கமாகக் கிடைத்து வருகின்ற அனைத்துப் பலன்களை அவர்களாலும் பெற முடியும். மதரீதியாகப் பன்முகத் தன்மை கொண்ட சமுதாயத்தில், மதங்களுக்கு இடையிலான ஆதிக்கம் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளுக்கான உறுதிப்பாடாகவே அனைத்து மதங்களின் மீதும் மதச்சார்பற்ற அரசு கொண்டுள்ள மரியாதை வெளிப்படும். ஒரு மதச் சமூகத்தின் பெரும்பான்மைவாதச் செயல்பாடுகளில் அந்த அரசு தலையிட வேண்டியிருக்கலாம். ஆனால் அந்த இரண்டு சமூகங்களுக்கு இடையில் இருக்கின்ற பிளவு தங்களுக்குள் விட்டுக் கொடுப்பதாக இல்லாமல் அல்லது முழுமையாக இருந்தால் அரசால் தலையிட முடியாது.

மதச்சார்பின்மை பற்றிய நேருவின் கருத்து உண்மையில் இன்றைக்கும் பரந்து விரிந்ததாகவே இருக்கின்றது. ஒரு மதச் சமூகத்தைச் சார்ந்த சிலர் அதே சமூகத்தைச் சார்ந்தவர்களை ஒடுக்குவது, விலக்குவது, பாகுபாடு காட்டுவது, அவமானப்படுத்துவது, இழிவுபடுத்துவது என்ற வகையில் மதம் Bயும்கூட தன்னுடைய மதத்திற்குள்ளாகவே ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. மதம் Bஇல் ஏற்கனவே உள்ளார்ந்து இருக்கின்ற நிலை, அதிகாரப் படிநிலைகளின் காரணமாகவே அதுபோன்று நிகழ்கிறது. அத்தகைய ஆதிக்கம் குறித்து மூன்று வலுவான நிகழ்வுகளை நேரு முன்வைக்கிறார்.

முதலாவதாக மதரீதியாக நியாயப்படுத்தப்படுகின்ற சாதிகளுக்கு இடையிலான ஆதிக்கமானது ஒரு குழுவினரை விலக்கி வைத்து, களங்கப்படுத்தி அவர்களுடைய கண்ணியத்தையும் சமத்துவத்தையும் அவமதிக்கின்ற வகையில் மனிதனுக்கு கீழான நிலையிலே அவர்களை நடத்தி, வேறெந்த நபரும் செய்யத் தயாராக இல்லாத வேலைகளை அவர்களைச் செய்ய வைக்கின்ற தீண்டாமை நடைமுறை எனும் மோசமான வெளிப்பாடாக இருக்கின்றது. ‘மதச்சார்பற்ற என்ற சொல் சமூக, அரசியல் சமத்துவம் என்று அகராதியில் உள்ள அர்த்தமாக இல்லாத வேறு எதையோ தன்னிடம் சொல்கிறது’ என்று நேரு கூறுகிறார். இதுபோன்ற சமத்துவமற்ற, ஆழ்ந்த சாதியவாத நடைமுறைகளை ஊக்குவிக்கின்ற அல்லது பொறுத்துக் கொள்கின்ற அரசால் மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியாது (2003: 192). ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான தடைகளாக இருக்கின்ற வகுப்புவாதம், சாதியவாதம் என்ற இரண்டுமே ஆபத்தானவை என்பதை நேரு கண்டறிந்தார். ஆக மதச்சார்பின்மை என்பது மதரீதியாக இருந்து வருகின்ற சாதியவாதத்திற்கு எதிரானதாகவும் அமைகின்றது.

இரண்டாவதாக நேரு மத அடிப்படையில் இருக்கின்ற ‘ஆணாதிக்கம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றாலும், மதச்சார்பின்மை என்பது மதங்களுக்குள்ளாக இருந்து வருகின்ற அந்த வகையிலான ஆதிக்கத்திற்கு எதிராகவும் இருக்கிறது என்று 1934ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரயாக் வித்யாபீடத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டார். ‘நமது நாகரிகம், பழக்கவழக்கங்கள், சட்டங்கள் என்று அனைத்தும் ஆண்களால் உருவாக்கப்பட்டவையாகவே உள்ளன. தன்னை உயர்ந்த நிலையில் வைத்துக் கொள்ளவும், வெறுமனே ஒரு பொருளாக, தன்னுடைய சொந்த நலனுக்காகவும், கேளிக்கைகளுக்காகவும் சுரண்டப்படக் கூடிய விளையாட்டுப் பொருளாக பெண்களைக் கருதுவதற்கான அக்கறையை ஆண் கொண்டிருக்கிறான். அதுபோன்று ஆண்களால் தரப்படுகின்ற தொடர் அழுத்தத்தால் பெண்களால் தங்களுடைய திறன்களை முழுமையாக வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. அதையே காரணமாகக் காட்டி அவள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகப் பெண்கள் மீது ஆண் குற்றம் சாட்டுகிறான்’ (நேரு 2007: 18)

நேரு மேலும் தொடர்கிறார்: ‘எனவே இந்தியாவை எவ்வாறு விடுவிப்பது, இந்திய மக்கள் மீதுள்ள சுமைகளை எவ்வாறு அகற்றுவது என்பதே நம் அனைவருக்கும் முன்பாக இருக்கின்ற முதல் பிரச்சனையாகும். ஆண்களால் உருவாக்கப்பட்ட பழக்கவழக்கங்கள், சட்டங்களின் கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு இந்திய பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆண்கள் அவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால், இந்த இரண்டாவது போராட்டத்தையும் பெண்கள் தாங்களே முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது (நேரு 2007: 18). மதங்களுக்குள் இதுபோன்று இருந்து வருகின்ற ஆதிக்கத்திற்கான பல எடுத்துக்காட்டுகளை நேரு எடுத்துக் காட்டுகிறார்.

வித்யாபீடத்தில் இருந்த இளம்பெண்களிடம் உரையாற்றிய நேரு ‘நமது சகோதரிகளின் உடலையும் மனதையும் சிறை வைத்துள்ள, காட்டுமிராண்டி யுகத்தின் தீய நினைவுச் சின்னமான பர்தாவை நீங்கள் கிழித்து துண்டுகளாக்கி, எரித்திட வேண்டாமா?… நமது திருமணச் சட்டங்களும், காலாவதியான பழக்கவழக்கங்களும் நம்மை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றன- அவை குறிப்பாக நமது பெண்களை நசுக்கி வருகின்றன. இன்றுள்ள நவீன நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாறும் வகையில் நீங்கள் அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராட மாட்டீர்களா?’ (நேரு 2007: 17) என்று கேள்விகளை எழுப்பினார்.

மதகுருக்களிடம் இருக்கின்ற குருட்டுப் பிடிவாதம், வெறித்தனம், சாதாரண மக்கள் மீது செலுத்துகின்ற ஆதிக்கம் மற்றும் ஹிந்து, முஸ்லீம் பழமைவாதிகள் ஒன்று கூடி பெண்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்வதை உறுதி செய்வது போன்ற செயல்பாடுகள் மதங்களுக்குள்ளாக இருக்கின்ற ஆதிக்கம் குறித்து நேருவின் கவனத்தை ஈர்த்த மூன்றாவது வகையாக இருந்தன. ‘மௌல்விகளுடன் தோளோடு தோள் சேர்த்து அணிவகுக்க பிராமணர்கள் தயாராக உள்ளனர். எந்தவொரு சுதந்திரத்திற்கும், சமத்துவத்தை நோக்கிய உள்சீர்திருத்தத்திற்கும் எதிரானவர்களாக மசூதிகளிலுள்ள முல்லாக்களுக்கு இணையாக அவர்களுடைய சகோதரர்களாகவே கோவில்களில் இருக்கின்ற சாமியார்கள் இருந்து வருகின்றனர்’ (நேரு 2006). சமூக ஒடுக்குமுறை, அரசியல் ரீதியாகத் தலையிடுவது என்று மத உயரடுக்கினரிடம் உள்ள நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ‘மதத்தின் உயர்பூசாரிகள் சமூகம் மற்றும் அரசியல் பிரச்சனைகளில் முடிவுகளை எடுக்கக் கூடாது’ என்று நேரு வாதிட்டார். தனிமனிதச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்படுகின்ற மத அமைப்புகள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு எதிராக தங்களுடைய அதிகாரத்தைச் சீராக்கும் வகையில் சமூக எதிர்வினைக்கு எதிரான, சமூகவெளியில் சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு பலப்படுத்தப்பட வேண்டும். எதேச்சாதிகாரம், பணிவுடன் கீழ்ப்படிதல் போன்றவற்றின் ஆதாரமாக மதம் B இருப்பதாகக் கூறிய அவர், மதச்சார்பற்ற அரசு என்பது மதத்தின் சாதாரண ஆண்கள், பெண்கள் மீது தங்களுடைய கருத்துகளையும், விதிமுறைகளையும் உயர்பூசாரிகள் தொடர்ந்து திணிப்பதைத் தடுப்பதாக, கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும்’(நேரு 2006: 141) என்றார்.

நேருவின் மதச்சார்பற்ற கட்டமைப்பு
மதச்சார்பின்மை குறித்த நேருவின் கருத்துக்கள் நுட்பமானவை, சிக்கலானவை, தனித்துவமானவை. நேருவுக்குப் பிந்தைய சில நேருவியர்களால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதைப் போன்று அல்லது நவீன பிரான்ஸ் அல்லது துருக்கியில் பெரும்பாலும் இயங்கி வந்த மாதிரிகளைப் போன்று மதத்திற்கு விரோதமாக நேருவின் கருத்துகள் இருக்கவில்லை. ‘மாதிரி 1’ என்பதாகக் கொள்ளக்கூடிய அந்த நாடுகளில் (அ) மதம் என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதில்லை; (ஆ) மத விவகாரங்களிலிருந்து விலகி நிற்கின்ற அரசால் உதாசீனப்படுத்தப்படுவதாக மதம் இருந்த போதிலும், மதத்தில் தலையிடுகின்ற அதிகாரத்தை அரசு தன்னிடம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது; (இ)பொதுத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள மதம் தனிநபர் சார்ந்ததாக மட்டுமே உள்ளது; (ஈ)குடியுரிமைக்கான தகுதி, அரசில் அங்கம் வகிப்பது உள்ளிட்டு அனைத்து உரிமைகளும் மதரீதியாக இல்லாமல் முற்றிலும் தனித்து சுதந்திரமாகக் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளன.

Religion and secularism: Nehruvians opposed to Nehru Article in tamil translated by T.Chandraguru மதமும், மதச்சார்பின்மையும் : நேருவை முரண்படும் நேருவியர்கள் தமிழில் தா. சந்திரகுருஅதேபோன்று நேருவின் கருத்துகள் அமெரிக்காவில் காணப்படுகின்ற மற்றொரு மாதிரியான ‘மாதிரி 2’ போன்றும் இல்லாதிருந்தன. அமெரிக்காவில் (அ)மதத்தை அங்கீகரிக்காமை என்பது பெரும்பாலும் தனிமைப்படுத்தல் குறித்த வேறுபட்ட புரிதலுடனே இருக்கிறது. மதமும், அரசும் அங்கே ஒருவரையொருவர் பரஸ்பரம் விலக்கிக் கொள்கிறார்கள் – மற்றவரின் விவகாரங்களில் தலையிடுவதற்கான உரிமை அல்லது அதிகாரம் ஒருவருக்கு இருப்பதில்லை; (ஆ)மத விவகாரங்களில் தலையிடுவதற்கான அதிகாரம் அரசுக்கு இருப்பதில்லை;(இ)தீவிரமான அவமரியாதை செய்யப்படுவதில்லை என்றாலும் தொடர்ச்சியான அனுகூலமும், கட்டுப்பாடுகளற்ற தன்முனைப்பற்ற மரியாதையும் மதத்திற்கு கிடைக்கிறது;(ஈ)குடியுரிமைக்கான தகுதி, அரசில் அங்கம் வகிப்பது உள்ளிட்டு அனைத்து உரிமைகளும் மதரீதியாக இல்லாமல் முற்றிலும் சுதந்திரமாகவே இருக்கின்றன.

ஆதிக்கம் செலுத்துகின்ற ஏதாவதொரு மதத்துடன் பலவீனமாக தங்களை இணைத்துக் கொண்டுள்ள மேற்கு ஐரோப்பிய அரசுகளில் உள்ள பல அரசுகளில் செயல்பட்டு வருகின்ற ‘மாதிரி 3’இலிருந்தும் மதச்சார்பின்மை குறித்த நேருவின் கருத்துகள் வேறுபட்டே அமைந்திருக்கின்றன. மதரீதியான உறவுகளிலிருந்து தனித்து தனிமனித உரிமைகள் சுதந்திரமாக இருக்கும்போது, அனைத்து வழிகளிலும் ஒரு மேலாதிக்க மதத்தையே அரசு ஆதரிக்கிறது. போலி மத ஒருமைப்பாட்டின் பின்னணியில் அரசியல் ரீதியான குறுக்கீடும், சமூக ஒடுக்குமுறையும் கொண்ட தேவாலயங்கள் தலையிடுவதன் மூலமாக தனிநபர்களுக்கும், மதச்சார்பற்ற குழுக்களுக்கும் ஏற்படுகின்ற சவாலுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியத்திலிருந்தே அனைத்து மேற்கத்திய அரசுகளும் வளர்ந்துள்ளன.

நேருவைப் பொறுத்தவரை முற்றிலும் வேறொரு ‘மாதிரி’ இந்தியாவிற்குத் தேவைப்பட்டது. (அ)சுதந்திரமாக உருவாக்கப்பட்ட அரசின் அடையாளத்தையும், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட (எடுத்துக்காட்டாக இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 25 முதல் 30 வரை) மதம் என்பதற்கான முக்கியமான, ஆனால் வரையறுக்கப்பட்ட இடத்தையும் மதத்திலிருந்து முற்றிலும் பிரித்து வேறுபடுத்த வேண்டும்; (ஆ) மதங்கள் A மற்றும் B ஆகியவற்றிற்கிடையில் உள்ள யதார்த்தம், வெவ்வேறு மதங்களுக்கிடையிலான முரண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, மோதலைத் தவிர்த்து அதற்குப் பதிலாக ஒத்துழைப்பை வளர்க்க முயற்சிப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்; (இ) மத விரோதம், நிறுவனமயமாக்கப்பட்ட மத ஆதிக்கத்திற்கு எதிரான விரோதம் ஆகியவற்றிற்கு இடையில் வேறுபாடு இருக்க வேண்டும். மதம் A மற்றும் அதனுள் இருக்கின்ற பன்முகத்தன்மையை – நாத்திகத்தின் பன்முகத்தன்மை உள்ளிட்டு – மதச்சார்பற்ற அரசு மதிக்க வேண்டும். ஆனால் சில சூழல்களில் அது மதம் Bக்குள் இருக்கின்ற தீய சக்திகளையும், அந்தஸ்து அடுக்குமுறைகளையும், ஏராளமான சுதந்திரங்களைக் கட்டவிழ்த்து விடுகின்ற அவற்றின் திறனையும் தாக்குவதாக இருக்கிறது.(ஈ)மதம் என்பது சிக்கலான, தார்மீகத் தெளிவற்ற நிகழ்வாகப் புரிந்து கொள்ளப்படுவதால் தீண்டாமையைத் தடை செய்வது, அனைத்துக் கோவில்களையும் ஹிந்துக்களில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் திறந்து விடுவது, பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான மதக் கட்டுப்பாடுகளை விதிக்கின்ற சட்டத்தை விலக்கி வைப்பது (மதங்களுக்குள் இருக்கின்ற ஆதிக்கத்திற்கு எதிரான அரசு) போன்ற சில அம்சங்களைப் பொறுத்தவரை அரசின் எதிர்மறையான தலையீடு தேவைப்படுகிறது. ராணுவத்திலோ அல்லது காவல்துறையிலோ தலைக்கவசம் அணிவதிலிருந்து சீக்கியர்களுக்கு விலக்கு அளிப்பது போன்ற சில அம்சங்களுக்கு அரசின் நேர்மறையான தலையீடு தேவைப்படுகிறது. மதரீதியான தனிநபர்கள், சமூகங்கள் தங்கள் மதத்திற்குத் தேவைப்படுகிறது என்று நம்புபவற்றைச் செய்து கொள்வதற்கான முற்றிலும் சுதந்திரமான வெளி இருப்பது போன்ற அம்சங்கள் அரசு முற்றிலும் மதத்திலிருந்து விலகி இருக்க வேண்டிய பிற அம்சங்களாக இருக்கின்றன.(உ)‘மாதிரிகள்’ 1 மற்றும் 2 போல் அல்லாமல் மதத்திலிருந்து கண்டிப்பான முறையில் அரசு பிரிக்கப்படாமல் இருக்கும். அதற்குப் பதிலாக அனைத்து மதங்களிலிருந்தும் ’கொள்கை ரீதியான தூரம்’ என்ற கொள்கை அரசிடம் இருக்க வேண்டும். (ஊ)மதங்கள் மீது வெறுக்கத்தக்க அவமதிப்போ அல்லது நிபந்தனைகளுடனான மரியாதையோ இருப்பதில்லை – மாறாக மரியாதைக்குரிய விமர்சன அணுகுமுறையே இருக்கும்;(எ)குடியுரிமை, அதன் பேரில் அரசில் அங்கம் வகிக்கும் தகுதி போன்றவை மதரீதியான உறவுகளிலிருந்து முற்றிலும் சுதந்திரமாகச் செய்யப்படும். குடிமக்களின் பெரும்பாலான உரிமைகள் மதத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், சில உரிமைகள் குறிப்பிட்ட மதச் சமூகம் சார்ந்தவர்களைப் பொறுத்தவையாகவே இருக்கின்றன.

நேருவிடம் இருந்த இந்த சிக்கலான, அதிநவீன (இந்திய அரசியலமைப்பிலும் காணப்படுகின்ற) கருத்தாக்கத்திற்கு பெரும்பாலான நேருவிய மதச்சார்பின்மைவாதிகள் ஆதரவாக இருக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. மாறாக மிகவும் வரையறுக்கப்பட்ட அல்லது பகுதியளவு மட்டும் அல்லது மிக மோசமான மேற்கத்திய வகை கருத்திற்கு ஆதரவளிப்பவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். மதத்திற்கு எதிரானதொரு மதச்சார்பின்மைக்கே அவர்கள் ஆதரவளித்து வருகின்றனர். மதம் சார்ந்தவர்களை அந்நியப்படுத்தி, சமமான மரியாதைக்குத் தகுதியான குடிமக்களாக அவர்களைக் கருதத் தவறியதன் மூலம், தங்களுடைய ஆற்றலை மதமற்ற மதச்சார்பின்மைக்கு பின்னால் சில சமயங்களில் வைத்துக் கொள்ளும் அவர்கள் சமூகம் மற்றும் கலாச்சாரத்திலிருந்து மதத்தை எளிதில் பிரிக்க முடியாத இந்தியா போன்றதொரு நாட்டிலே எந்தவொரு நவீன அரசும் தன்னை மதத்திலிருந்து ஒதுக்கி வைத்துக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்வதற்குத் தவறி விட்டனர். சில சமயங்களில் ஆதரிக்க முடியாத சமூக-மத நடைமுறைகளைச் சகித்துக்கொள்ளும் மனநிலையுடன் பலமதம் சார்ந்த மதச்சார்பின்மைக்கான ஆதரவைத் தெரிவு செய்து கொள்ளும் அவர்கள் மதத்தில் அரசு தலையிட முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுகின்ற வகையில் ஓலமிடுகின்றனர்.

அவர்களுடைய இது போன்ற நடவடிக்கைகள் மதச்சார்பின்மையின் பாதுகாவலர்களைக் குழப்பத்திலே ஆழ்த்துகின்றன. தாங்கள் தலையிடக் கூடாத போது அல்லது கட்டுப்பாடுகள் எதுவும் தேவைப்படாத போது மதத்தில் அவர்கள் தலையிடுகின்றனர். மதிக்கத் தகுதியற்ற மதத்தின் அம்சங்களை மதிக்கின்ற அதேவேளையில் மதிப்பதற்கான தகுதியுடன் இருக்கின்ற அம்சங்களை அவர்கள் அவமதிப்பு செய்கிறார்கள். இந்தியச் சமூக வெளிகளில் மதங்களுக்குள்ளாக மற்றும் மதங்களுக்கிடையில் சிக்கலான, மாறுபட்ட வழிகளில் தொடர்ந்து இருந்து வருகின்ற ஆதிக்கம் குறித்த தீவிரமான புரிதல் மிகவும் மழுப்பலாக உள்ளதால், அதற்கு எதிரான சவாலும் அரை மனதுடனே விடுக்கப்படுவதாக இருக்கிறது.

நேருவின் மதச்சார்பின்மையிலிருந்து கிடைக்கின்ற படிப்பினைகள்
அனைத்து மதங்களையும் சமமாக மதித்து அவையனைத்திற்கும் ஆதரவை வழங்குவதே மதச்சார்பின்மையின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்ற என்னுடைய மூன்றாவது முன்மொழிவை, சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாப்பதே மதச்சார்பின்மையின் முழுமையான ஒரே அடையாளம் என்று காண்பதே இதுபோன்ற தவறான புரிதலுக்குக் காரணமாக உள்ளது. அந்தக் கருத்தின் அடிப்படையில் மதங்களுக்கு இடையிலான ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிடுவதே மதச்சார்பின்மைக்குத் தேவையான ஒரேயொரு மூலகாரணியாகத் தோன்றுகிறது. ஆனால் மதத்திற்குள்ளாக இருக்கின்ற ஆதிக்கத்தை எதிர்ப்பதே இந்திய மதச்சார்பின்மையின் மற்றொரு முக்கிய நோக்கமாக இருப்பதை, உண்மையாகச் சொல்வதென்றால் அனைத்து மேற்கத்திய மதச்சார்பின்மைகளின் முதன்மையான நோக்கமாக இருப்பதை அந்தப் பார்வை மறந்து விடுகிறது. சுதந்திரம், சமத்துவம், நியாயம் ஆகியவற்றை ஒவ்வொரு மதத்திலும் மேம்படுத்துவது, சக மதவாதிகளின் அடக்குமுறைகளிலிருந்து தனிநபர்களைப் பாதுகாப்பது, சாதாரண ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களை அவர்களுடைய மதம் சார்ந்த தீவிரவாதிகளிடமிருந்து மீட்பது, மதத்தை மதவெறி மற்றும் வெறித்தனத்திலிருந்து விடுவிப்பது போன்ற மதச்சார்பற்ற அரசின் செயல்பாடுகள் நேருவியன் மதச்சார்பின்மையால் ஆதரிக்கப்படுகின்ற மதச்சார்பின்மையின் கண்காணிப்பிலிருந்து நழுவி விடுகின்றன.

இந்திய மதச்சார்பின்மையின் நோக்கங்களில் இருந்து சமூக-மத சீர்திருத்தங்கள் ஓரங்கட்டப்படுதல், அதன் விளைவாக சிறுபான்மையினரின் உரிமைகள் மீது தனித்து குவிக்கப்படுகின்ற பிரத்தியேக கவனம் ஆகியவை பெரும்பாலும் சிறுபான்மைத்துவம் என்ற அநியாய குற்றச்சாட்டுக்கு நம்பகத்தன்மையை அளிப்பதாகவே அமைந்து விடுகின்றன. மதச்சார்பின்மை என்பது சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை கொண்டதாகக் கருதப்பட்டால், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கானதொரு கருவியாக, ஹிந்துக்களின் நலன்களுடன் சிறிதும் தொடர்பு இல்லாத ஒன்றாக மட்டுமே எவரொருவராலும் அதனைப் பார்க்க முடியும். எனவே முஸ்லீம்கள் சார்பு கொண்டதாக, ஹிந்துக்களுக்கு விரோதமானதாக தோன்றும் வகையிலே அது திசை திருப்பி விடப்படலாம். ஆனாலும் ஹிந்து தீவிரவாதிகளிடமிருந்தும், ஹிந்துக்கள் அனைவரையும் ஒரே மாதிரியானவர்களாக ஆக்குபவர்களிடமிருந்தும், தலித்துகள், பெண்கள் மீது கடந்த காலங்களில் சிறிதும் அக்கறை காட்டியிராத ஹிந்துமதப் பாரம்பரிய அதிகாரம் கொண்டவர்களின் விலக்கி வைக்கும் உள்ளுணர்வுகளிடமிருந்தும் ஹிந்துக்களைப் பாதுகாத்திட மதச்சார்பின்மை அவசியம் தேவைப்படுகிறது.

வேறுவிதமாகக் கூறினால், சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் சாதனமாக மதச்சார்பின்மையைக் குறைத்து மதிப்பிடுவது, பெண்ணிய, தலித் உரையாடல்களிடமிருந்து சிறுபான்மை உரிமைகளுக்கான உரையாடலைத் துண்டிப்பது போன்ற செயல்பாடுகள் சமூகத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான அரசியல் பலவீனமடைவதற்கே வழிவகுத்துக் கொடுக்கின்றன. ஒன்றாக இணைந்து நின்று ஒருவருக்கொருவர் தங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பதிலாக, பல சூழல்களில் எதிரிகளாக இல்லாத இன்றைய மதச்சார்பற்ற, பெண்ணிய, தலித் உரையாடல்கள் தங்களைப் போட்டியாளர்களாகவே கருதி எதிர்கொண்டு வருகின்றன. இந்திய மதச்சார்பின்மையின் வலிமையாக இருக்கின்ற சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு என்பது மிக எளிதாக அதனுடைய பலவீனமாகத் தோன்றுமாறு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கின்ற சுமை அனைத்து குடிமக்களும் பகிர்ந்து கொள்வதாக இல்லாமல், சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் சார்பாக உள்ள மதச்சார்பின்மைவாதிகள் மீது மட்டுமே சுமத்தப்பட்டுள்ளது.

இதிலிருந்து பெறப்பட வேண்டிய இரண்டாவது படிப்பினையாக, மதத்திற்கு எதிரான கோட்பாடு என்பதாக இந்திய மதச்சார்பின்மை குறித்து இருக்கின்ற தவறான புரிதல் சமூகத்துவவாதத்திற்கும், வகுப்புவாதத்திற்கும் இடையே சரியான வேறுபாட்டை நேருவிய மதச்சார்பின்மைவாதிகள் கடைப்பிடிக்கவில்லை என்பதையே குறிக்கிறது. சமூகத்துவ நிலைப்பாடு என்பது குறைந்தபட்சம் ஓரளவிற்கு மத/தத்துவ கடமைகள், மரபுகள் (சமூகம்) ஆகியவற்றால் ஒருவரை வரையறுப்பதாக உள்ளதால், தன்னை ஒருவர் ஹிந்து / முஸ்லீம் / சீக்கியர் / கிறிஸ்தவர் / மார்க்சிஸ்ட் / யூதர் / அத்வைதி மற்றும் பலவாறு அறிவித்துக் கொள்வதைப் பொருத்தமற்றது என்று கூறிடத் தேவையில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் சில சந்தர்ப்பங்களில் தேவையான காரணங்களுக்காக, வெளிப்படையாக வெட்கப்படத் தயாராக இருக்கும் வரையிலும் தன்னுடைய சமூகம் மற்றும் சமூக அடையாளம் குறித்து நியாயமான பெருமையை ஒருவரால் கொண்டிருக்க முடியும்.

சமூகத்துவவாத நிலைப்பாடு வகுப்புவாதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வகுப்புவாத முன்னோக்கு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளம் மற்றொரு சமூகத்துடனான உரையாடலே இல்லாமல் அதனை எதிர்ப்பதாக (நான் முன்பு குறிப்பிட்ட வாக்குமூல மதம் குறித்த நவீன கருத்தை நினைவுகூருங்கள்) இருக்கிறது. பிற சமூகங்கள் மற்றும் சமூக அடையாளங்களின் இழப்பிலேயே தங்களுடைய இருப்பு, நலன்கள் இருப்பது அவசியம் என்று அங்கே கருதப்படுகின்றது.

முஸ்லீம்களுக்கு எதிரானவர்களாக இல்லாமல் ஒருவரால் ஹிந்துவாக இருக்க முடியாது அல்லது அதையே முற்றிலும் நேர்மாறாக முன்வைத்து நம்புவது அல்லது செயல்படுவது வகுப்புவாதம் கொண்ட செயலன்றி வேறில்லை. வகுப்புவாதம் என்பது புளித்துப் போன சமூகத்துவவாதமாகி விட்டது. வகுப்புவாதமானது இந்தக் கட்டுரையின் தொனி, பொருள் ஆகியவற்றின்படி ஒருவரின் தனிப்பட்ட நலன்களையும், சுதந்திரத்தையும் முறியடிக்கின்ற சமூகத்துவவாத மீறல்களுக்கு சட்டபூர்வமாகப் பயன்படுத்தக்கூடிய சொல்லாகவும் இருக்கிறது.

வகுப்புவாதம் என்று தோன்றுகின்ற வகையிலே ஹிந்துக்களுடைய நியாயமான மதம் அல்லது சமூக-மத நலன்களை வெளிப்படுத்துவதற்கான வழியை எவ்விதக் குற்ற உணர்ச்சியுமின்றி ஹிந்து பின்னணி அல்லது அடையாளத்தைக் கொண்டிருக்கும் மதச்சார்பற்றவர்கள் கண்டறியவில்லை என்பதைக் குறிப்பதாக (எடுத்துக்காட்டாக பகவத்கீதையை சிறந்த இலக்கிய, தத்துவ மதிப்பு கொண்ட நூலாகப் பாதுகாப்பது) பெரும்பாலும் சட்டவிரோதமானவற்றைக்கூட பாதுகாத்துக் கொள்வதாகவே இந்தியாவில் சமுகத்துவவாதம், வகுப்புவாதம் குறித்த குழப்பம் இருக்கின்றது.

முஸ்லீம்களின் தவறான நம்பிக்கைகள் (எடுத்துக்காட்டாக முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் அம்சங்கள்) வகுப்புவாதம் கொண்டவையாக கருதப்பட்டாலும், ஹிந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் பிற சிந்தனைகள், விழுமியங்களை மீறி சிறுபான்மையினருக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் நியாயப்படுத்துவதால், உண்மையில் அவை வகுப்புவாதம் கொண்டவையாக இருக்கவில்லை. ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளாதவையாக இருக்கின்ற போது அவற்றை வெளிப்படுத்துவதிலோ அல்லது பாதுகாப்பதிலோ தவறு எதுவுமில்லை என்பதே உண்மை. எந்தவிதக் குற்ற உணர்ச்சியும், வெட்கமும் இல்லாமல் அதைச் செய்ய முடியும். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக இந்தியா இந்த பிரச்சனைக்கான தீர்வைக் கண்டு, இருக்கின்ற குழப்பத்தை நீக்காமல் இருப்பதற்கு நேருவியன் மதச்சார்பின்மைவாதிகளுக்கே நாம் நன்றி சொல்ல வேண்டும். தெளிவு, நேர்மை இல்லாத நிலைமையே ஒரு வகுப்புவாத நிலைப்பாட்டிலிருந்து மற்றொரு நிலைக்குத் தாவுகின்ற விவரிக்க முடியாத ஊசலாட்டத்தையும், தவிர்க்கக் கூடிய பாசாங்குத்தனத்தையும் உருவாக்கியுள்ளது. ​​இடையிடையே முரண்பாடுடன், ஓரளவு மேலோட்டமாக, அரை மனதுடன் மதச்சார்பின்மையை ஆதரிப்பவர்களால் அவ்வப்போது இந்தச் சிக்கலைத் தவிர்க்க முடிந்திருக்கிறது என்றாலும் அனைத்து நேரங்களிலும் அவர்கள் மற்றவர்களுடைய மதரீதியான மரபுகளைப் பற்றி அதிகப் புரிதலுடன் தொடர்ந்து இருக்க வேண்டியுள்ளது.

நேருவின் மதச்சார்பின்மை குறித்த இந்த விவாதத்திலிருந்து பெறப்பட வேண்டிய ஆனாலும் என்னால் முன்வைக்க நிர்பந்திக்கப்படுகின்ற மூன்றாவது பாடத்திற்கே அது என்னை குறைவான உறுதியுடன் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஒருவருக்குச் சொந்தமான மற்றும் மற்றவருக்குச் சொந்தமான மதம் மற்றும் தத்துவ பாரம்பரியம், மரபுகள் பற்றிய பொதுவான அறியாமை தொடர்ந்து நமது கல்வி முறை மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மத ஒப்பீட்டுத் துறைகள் இல்லாத பல்கலைக்கழகங்கள், மத ஆய்வுகளுக்கான துறைகள் இல்லாத பல்கலைக்கழகங்களே நம்மிடம் இருக்கின்றன. உலகின் சிறந்த மதமரபுகளைப் பற்றிய ஆழமான, விமர்சனரீதியான புரிதல் இல்லாமலேயே பல்கலைக்கழக அமைப்புகளிலிருந்து மாணவர்கள் வெளியேறுகிறார்கள். அதன் விளைவாக, நமது மற்றும் மற்றவர் மதத்தின் மீதான விமர்சனம், பாதுகாப்பு ஆகிய இரண்டுமே ஆழமற்றவையாக, பெரும்பாலும் அதிகப்பிரசங்கித்தனம் கொண்டவையாகவே இருக்கின்றன. பண்டைய ஹிந்து மரபுகள், இடைக்கால மற்றும் நவீன ஹிந்து மதம் குறித்த மிகச் சிறந்த ஆய்வுகள் மேற்கில் உள்ள பல்கலைக்கழகத் துறைகளிலிருந்தே வெளிவந்திருப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது8.

சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்கின்ற உணர்வு எப்போதும் சிறுபான்மை தீவிரவாதம், அனைத்து வகையான வகுப்புவாதங்கள் மீதான வலுவான விமர்சனத்துடன் இருந்திட வேண்டும். மேற்கூறிய இரண்டும் எப்பொழுதும் ஒவ்வொரு மதமரபிலும் உள்ள சிறந்த விஷயங்களைப் பற்றிய ஆழமான புரிதலையும், பாதுகாப்பையும் பிரதிபலிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் நான் இந்த மூன்று விஷயங்களை மதச்சார்பின்மையைப் பாதுகாப்பவர்கள் ஒரே நேரத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வர வேண்டும் என்ற பாடத்தை நேருவிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். நம்முடைய சிறுபான்மை தீவிரவாதம், பெரும்பான்மைவாதம் குறித்த விமர்சனங்கள் சிறுபான்மை, பெரும்பான்மை மதமரபுகள் என்று இரண்டையும் நாம் அறிந்திருப்பதைப் பிரதிபலிப்பதாக அவசியம் இருந்திட வேண்டும்.

குறிப்புகள்
1 நேருவும் இந்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ‘மனிதனின் தேடல் என்ன என்ற கேள்விக்கு மதம் முழுமையான, பிடிவாதமான பதிலைக் கொடுக்க முயற்சிக்கிறது…’ பக்கம் 10 என்று அவர் கூறுகிறார். குறிப்பாக பழைய கோட்பாடுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களைத் தூண்டுவதற்கு பல்வேறு மதங்கள் உதவியுள்ளன. அவை தாங்கள் பிறந்த காலம் மற்றும் நாடுகளில் சிலவாறு பயன்படுத்தும் வகையில் இருந்தாலும், தற்போதைய காலத்தில் தனித்தனியாக பொருந்தாதவையாகவே இருக்கின்றன.

2 இது பற்றிய ஒரு தத்துவார்த்த விவாதத்திற்கு, அஸ்மான் (2009) எழுதி ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள ‘தி பிரைஸ் ஆஃப் மோனோதீசம்’ (ஏகத்துவத்தின் விலை) என்ற புத்தகத்தைப் பாருங்கள்.

3 கலப்பு கலாச்சாரம் என்று நேருவால் அழைக்கப்பட்டு அதனை வளர்ப்பதற்கான முனைப்பைக் கொண்டு அவர் மிகவும் விரும்பிய மற்றொரு அம்சத்தின் மையமாக இது அமைந்துள்ளது (கோபால் மற்றும் ஐயங்கார் 2003: 173).

4 ‘வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்கள் பாதிக்கப்படுவது என்பது வாழ்வு குறித்த ஒழுக்கமான அணுகுமுறையின் – அதை மதம் என்று, ஆன்மீகம் என்று, அறிவியல் என்று அழைக்கலாம் – அடிப்படையாக உள்ளது. வெறுப்பு, வன்முறை வெள்ளத்தில் அவை மூழ்கியுள்ளன. பயம், வெறுப்பு, வன்முறை என்பது தனிநபரின் அல்லது தேசத்தின் மிகவும் மோசமான தோழர்களாக அவை இருக்கின்றன. அநேகமாக இன்று பல நாடுகளிலும், மக்களிடமும் அவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அல்லது அதை எதிர்கொள்ள ஒரு தனிநபரோ அல்லது தேசமோ என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இறுதி பகுப்பாய்வில் மனிதனின் எதிர்காலம் குறித்த ஒருவித அடிப்படை நம்பிக்கை மீதே ஒருவர் பதிலளிக்க வேண்டியிருக்கும். மனிதனிடம் உள்ள அந்த அடிப்படை நம்பிக்கை இல்லாமல், ஏறக்குறைய மீளமுடியாத பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் உலகத்தைக் காண்பது அல்லது காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்’ (கோபால் மற்றும் ஐயங்கார் 2003: 436-37)

5 மதத்தின் மறுசீரமைப்பு குறித்து பார்க்கவும்: ஸ்மித் (1963): மதத்தின் பொருள் மற்றும் முடிவு, ஃபோர்ட்ரஸ் பதிப்பகம்.

6 ‘பொது (வருந்தத்தக்க) சூழலை உருவாக்குவதற்கான மிகப்பெரிய தடைகளில் ஒன்று, ஒரு இஸ்லாமிய நாடு என்று பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் அறிவிப்பதாகும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

7 ‘அனைத்து மதங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் முழுமையான சுதந்திரம் அளிப்பதாக மற்றும் அவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பு கொண்டுள்ள மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்கிறது என்று நான் நம்புகிறேன்’ (கோபால் மற்றும் ஐயங்கார் 2003: 173).

8 இந்தியாவின் கடந்த காலத்தை அணுகுவதில், பொதுவாக இந்தியாவின் வளமான பாரம்பரியம் குறித்தும், குறிப்பாக சமஸ்கிருதத்தின் மதிப்பு குறித்தும் நேருவின் எண்ணங்களைக் காண்க.

References
Ambedkar, B R (1945): Pakistan or Partition of India.
Chandra B, M Mukherjee and A Mukherjee (2001): India after Independence (1947–2000), New Delhi: Viking Penguin Books, p 48.
Gopal, S and U Iyengar (eds) (2003): The Essential Writings of Jawaharlal Nehru, Vol 1, New Delhi: Oxford University Press.
Nehru, J (2007): The Oxford India Nehru, Uma Iyengar (ed), Oxford University Press.
— (2006): Jawaharlal Nehru on Communalism, Nand Lal Gupta (ed), Gurgaon: Hope India Publications.
— (1942): Toward Freedom: The Autobiography of Jawaharlal Nehru, The John Day Company.
https://www.epw.in/journal/2017/8/perspectives/nehru-against-nehruvians.html

நன்றி: எக்கானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி