அக்டோபர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்:ச.வீரமணி)

அக்டோபர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்:ச.வீரமணி)




சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்:ச.வீரமணி)

இந்த ஆண்டும் இஎம்எஸ் நினைவு கருத்தரங்கைத் துவக்கி வைத்திட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 19 ஆண்டுகளாக, எவ்விதத் தொய்வுமின்றி தொடர்ந்து ஒவ்வோராண்டும் இக்கருத்தரங்கை நடத்தி வருவதற்காக இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2017ஆம் ஆண்டு, மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்ற நூற்றாண்டாக அனுசரித்து வருகிறோம்.  இப்புரட்சியானது 20ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் ஆழமான செல்வாக்கினை ஏற்படுத்திய ஒன்றாகும், மனிதகுல விடுதலை மற்றும் முன்னேற்றத்தில் பாய்ச்சல் வேக மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். மனிதனை மனிதன்சுரண்டுவதை ஒழித்துக்கட்டி ஒரு சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கி மனிதகுல நாகரிகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளிய ஒன்றாகும். மார்க்சியம் என்பது ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்த ஒரு சகாப்த நிகழ்வாகும். நவம்பர் புரட்சி என்றென்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது.

காரல் மார்க்ஸ் மறைவிற்குப்பின் 1883இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிட்டதாவது: ‘‘அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன. ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப்போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாய் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.’’ (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.)

மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நவம்பர் புரட்சியின் சாதனை என்பது இதுதான்: ‘…சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டும், …’ மார்க்சியத்தின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளை எதார்த்தமற்றது என்று கண்டித்து, சர்வதேச பிற்போக்குவாதிகள் தாக்குதல் தொடுப்பது இயற்கையேயாகும். மார்க்சிசம் என்பது அறிவியல் உண்மையின் அடிப்படையிலான ஓர் ஆக்கபூர்வ அறிவியல் என்பதை ருஷ்யப்புரட்சியும், அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் அமைந்ததும் மிகவும் அழுத்தமாக உறுதிசெய்தது.

நவம்பர் புரட்சியின் முக்கியத்துவம் எண்ணற்றவைகளாகும். சுரண்டலற்ற ஒரு சமூகஅமைப்பை எதார்த்தமாக்கிய அதே சமயத்தில், உழைக்கும் மக்களின் படைப்பாற்றலையும் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. சோசலிசத்தின் மூலமாக எண்ணற்ற சாதனைகளை மிக வேகமாக அடைய முடிந்தது. அதற்கு முன் மிகவும் பிற்போக்குப் பொருளாதார நாடாக இருந்ததை , ஒரு பலமிக்க பொருளாதார மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடாக, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட நாடாக மாற்றி, சோசலிச அமைப்புமுறையின் மேன்மையை உறுதி செய்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் கட்டி எழுப்பப்பட்டதானது மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வீரகாவியமாகும். 20ஆம் நூற்றாண்டின் வரலாறு, நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து சோசலிசம் நிறுவப்பட்டதால் பிரதானமான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிப்பதில் சோசலிச சோவியத் யூனியன் குடியரசு மேற்கொண்ட தீர்மானகரமான பங்கும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோசலிச நாடுகளாக உருவானதும் உலக வளர்ச்சிப்போக்கில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மீதான வெற்றிக்கு சோவியத் செஞ்சேனை ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பே பிரதான காரணமாகும். இது, காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளில் அதற்கு எதிராகப் போராடி வந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்து, பின்னர் அந்நாடுகள் காலனியாதிக்க சுரண்டலிலிருந்து விடுதலை அடைந்ததைப் பார்த்தோம்.

சீனப் புரட்சியின் வரலாறு படைத்திட்ட வெற்றி, வீரம் செறிந்த வியட்நாம் மக்கள் போராட்டம், கொரிய மக்கள் போராட்டம், கியூபா புரட்சி வெற்றிவாகை சூடியது ஆகியவை உலக வளர்ச்சிப்போக்கின் மீது மகத்தான செல்வாக்கைச் செலுத்தின.சோசலிச நாடுகளின் சாதனைகள் அளவிடற்கரியனவாக இருந்தன. வறுமை மற்றும் எழுத்தறிவின்மை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியது ஆகியவை உலகம் முழுதும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு வலுவான முறையில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

முதலாளித்துவத்துக்கு பெரும் சவால்

சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்கு, சோவியத் யூனியனில் சோசலிசத்தின் சாதனைகளால் உத்வேகம் அடைந்த தொழிலாளி வர்க்கம் இந்நாடுகளில் நடத்திய போராட்டங்களின் விளைவுகளேயாகும். இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் மனிதகுல நாகரிகத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறி இருக்கின்றன எனில் அதற்கு சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்கள்தான் காரணமே தவிர, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணை அல்ல.

இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் தரமான விதத்தில் மனிதகுலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றன. நவீன நாகரிக வாழ்க்கையில் அழிக்கமுடியாத வகையில் பங்களிப்பினைச் செய்தன. இவை, பண்பாடு, அறிவியல், அழகியல் என பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்தன. திரைப்படத்துறையின் இலக்கணத்தில் ஐசன்ஸ்டீன் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலின் எல்லையை விண்ணில் உள்ள கோள்களை ஆராயும் அளவிற்கு விரிவுபடுத்தியது.

அக்டோபர் புரட்சியின் பாரம்பர்ய மாண்புகள்

அக்டோபர் புரட்சியின் விளைவாகத் தோன்றிய சோவியத் யூனியன் இன்றில்லை. அது சிதைந்து சிதறுண்டு போனதற்கான காரணங்களைத் தனியே விவாதித்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1992இல் 14ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறோம். சோவியத் யூனியன் இன்றில்லை என்ற போதிலும், அக்டோபர் புரட்சியின் புரட்சிகர பாரம்பர்யத்தின் முக்கியமான நான்கு அம்சங்கள், மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி செல்வதற்கு  இடையிலான இடைப்பட்ட மாறுதல் காலத்தில் அச்சாணியாக விளங்கக்கூடிய  நான்கு அம்சங்களை  அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.

(1)  தோழர் லெனின் அவர் காலத்திய உலக நிலைமைகளுடன் முதலாளித்துவ வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்கையில், மூலதனக் குவியல் ஏகபோக மூலதனத்தினை உருவாக்கும் என்று மார்க்ஸ் கூறியதானது, அடுத்து ஏகாதிபத்தியக் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றார்.  மேலும் தோழர் லெனின் ஏகாதிபத்தியத்தின் சங்கிலியின் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கும் விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் முதல் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் அந்தப் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து, தகர்த்திட்டார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தை தங்கள் விடுதலைக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிட  ருஷ்யத் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாய்ப்பினை அளித்தது. எனவே, இன்றைய சூழ்நிலையில், எந்தவொரு நாடும் ஏகாதிபத்தியத்தினை உறுதியுடன் எதிர்த்திடாமல்  தங்கள் நாட்டில் புரட்சிகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது என்பது தெளிவாகும்.

இன்றைய  ஏகாதிபத்திய உலகமயக் காலத்திலும்கூட அக்டோபர் புரட்சியின் இந்த அம்சம் இப்போதும் செல்லத்தக்கதாகவே தொடர்கிறது.  ஏகாதிபத்திய உலகமயம் என்னும் சங்கிலியின் பலவீனமான கண்ணிகளால் உருவாக்கப்பட்டுள்ள மூலதனத்தின் வர்க்க ஆட்சியின்மீதான அரசியல் தாக்குதல் அழுத்தமாகத் தொடரப்பட வேண்டும்.

இங்கே அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனிதகுலம் இதற்குமுன் கண்டிராத ஒரு பாதையில்தான் சோசலிசத்தைக் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. சோசலிசக் கட்டுமானத்திற்கென்று குறிப்பிட்ட அனுபவ வரையறையோ அல்லது இதுதான் இதற்கான சூத்திரம் என்று குறிப்பிட்ட எதுவுமோ கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு, சோவியத் யூனியனில் நடைபெற்ற குறைபாடுகள் என்று கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டது. அதாவது, சோசலிச அரசின் வர்க்க குணம், சோசலிச ஜனநாயகம் நிறுவப்படுதல், சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் சோசலிசத்தின் கீழ் மக்களின் தத்துவார்த்த சமூக உணர்வினை உயர்த்தத் தவறியமை ஆகிய நான்கினை அது சுட்டிக்காட்டி இருந்தது. ஆகவே, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல என்கிற முடிவிற்கு ஒருவர் நிச்சயமாக வர முடியும். மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். எனவே, இந்தப் பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தை மறுதலித்ததாலோ அல்லது சோசலிசச் சிந்தனையாலோ அல்ல.

சரியற்ற மதிப்பீடுகள்: 20ஆம் நூற்றாண்டில் சோசலிம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஈடிணையற்ற விதத்தில் முன்னேற்றங்களைக் கண்டபோதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஒருசிலவற்றைத்தவிர பல நாடுகளில் ஏற்பட்ட அனைத்து சோசலிசப் புரட்சிகளும் ருஷ்யாவில் இருந்ததைப்போன்ற ஒரு பிற்போக்கு முதலாளித்துவ நாடுகள் அல்ல. இந் நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் கண்ணி, லெனினிசத்தின் புரிதல்படி பலவீனமான ஒன்று  அல்ல. இந்நாடுகளில் உலக முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் மீது தன்னுடைய பிடிப்பை வலுவாகப் பற்றிக்கொண்டிருந்தது. அதன் காரணமாக எதிர்காலத்தில் அதனால் வளரவும் முடிந்தது. சோசலிச நாடுகள் உலகச் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை முதலாளித்துவத்திடமிருந்து நீக்கியது. எனினும்,  இதன்மூலம் அதனால், உலக முதலாளித்துவம் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் தன்னுடைய உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கான கொள்திறனை நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்க முடியவில்லை. இதன்காரணமாக ஏகாதிபத்தியம் நவீன காலனியாதிக்கத்தின் மூலமாக உலகச் சந்தையை விரிவாக்கிக்கொள்வதை சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது.

முன்னூறு ஆண்டுகளில் முதலாளித்துவத்தால் சாதிக்கமுடியாததை, சோசலிசத்தின் மூலம் முப்பது ஆண்டுகளில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டியது. இது, எதிர்காலத்தில் சோசலிச முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்கிற எண்ணத்திற்கு இட்டுச்சென்றது.   சோசலிசத்தால் தோல்விக்கு ஆளாகியுள்ள முதலாளிகள் முன்னிலும் பன்மடங்கு மூர்க்கத்தனத்துடன் திருப்பித்தாக்குவார்கள் என்கிற லெனினிஸ்ட் எச்சரிக்கை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்பது தானாய் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. முதலாளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எதுவும் அதனை சுரண்டலற்ற ஒன்றாகவோ அல்லது நெருக்கடியற்ற ஒன்றாகவோ மாற்றிட முடியாது.  முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டியிருக்கிறது.  ஆனால் அதன் பலம் என்ன என்பது குறித்து சரியான மதிப்பீடு அவசியமாகும். அப்போதுதான் அதனைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில், மார்க்சிய – லெனினியத்தை ஏற்றுக்கொண்டுள்ள கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் இருப்பது  அவசியம் என்பதை உணர்ந்திட முடியும். இவ்வாறு ஒரு புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சிகரமான மாற்றம் சாத்தியமில்லை.

சோசலிசத்தின் வல்லமை குறித்து அதீத மதிப்பீடும் கூடாது. முதலாளித்துவத்தின் வல்லமை குறித்து குறைந்த மதிப்பீடும் கூடாது. இவை இரண்டும் ஒரு சரியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், அதன் காரணமாக இன்றைய உலக நிலைமை குறித்த ஒரு முறையான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் அனுமதித்திடாது.

சோசலிசம் – ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம்: மேலும், சோசலிசம் என்பது முன்னேற்றத்தின் முதல்படி என்பதுபோல கருதப்பட்டது. ஒருதடவை சோசலிசத்தை அடைந்துவிட்டோமானால், அதன்பின்னர்  எதிர்காலத்தில் எவ்விதத்தடையுமின்றி ஒரு  வர்க்கமற்ற, கம்யூனிச சமூகத்தை எய்தும்வரை எவ்விதமானத் தடையும் இல்லாமல் மிகவும் நேரான பாதையாக இருந்திடும் என்று கருதப்பட்டது. இது ஒரு பிழையான சிந்தனையாகும்.

அனுபவமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. சோசலிசம் என்பது ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம், அல்லது, மார்க்ஸ் கூறியதேபோன்று, கம்யூனிசத்தின் முதல் கட்டம் —  அதாவது ஒரு வர்க்கப் பிரிவினையுடனனான சுரண்டும் முதலாளித்துவ ஒழுங்கிற்கும், வர்க்கமற்ற கம்யூனிச ஒழுங்கிற்கும் இடையேயான இடைநிலை மாறுபாட்டுக் காலமாகும். எனவே, இந்த இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில், வர்க்க மோதல்களை ஒழித்துக்கட்டிவிட முடியாது. மாறாக உலக முதலாளித்துவம் தான் இழந்த  ஆட்சிப்பரப்பை மீளவும் பெறுவதற்கு முயற்சித்திடும் விதத்தில் அவை உக்கிரமடையும். எனவே இக்காலகட்டம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்திடும்.  அதிலும் குறிப்பாக முதலாளித்துவரீதியாக பின்னடைந்திருந்த புரட்சி நடைபெற்ற  நாடுகளில் இந்த நிலைமை இருந்திடும்.

உலக சோசலிசத்தின் சக்திகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ, சோசலிசக் கட்டுமானத்தில்  எய்தப்பட்ட வெற்றிகளைக் கொண்டும் அதனை ஈட்டிய வர்க்க சக்திகளைச் சரியாக மதிப்பீடு செய்வதைக் கொண்டும் தீர்மானிக்கப்படும். இதனைச் சரியாகச் செய்திடாவிடில், எதிரி குறித்து, குறைத்து மதிப்பீடு செய்வதற்கே இட்டுச் செல்லும். அந்த எதிரி சோசலிச நாடுகளில் இருப்பினும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி. சோசலிசம் குறித்த அதீத மதிப்பீடு என்பதும் சோசலிச நாடுகளில் உருவான பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளாது விடுவதற்கும், உலக முதலாளித்துவம் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும்.

துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல் என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்று மாமேதை லெனின் நமக்கு எப்போதும் நினைவுபடுத்தி வந்துள்ளார்.  இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வு தடுமாற்றம் அடைந்தால், அல்லது எதார்த்த நிலைமை குறித்து சரியான புரிதல் இல்லாமல் தவறிழைத்தோமானால், பின், பிழையான புரிதல்களும் நெறிபிறழ்வுகளும் உண்டாகும்.

இத்தகைய நெறிபிறழ்வுகள்தான், முக்கியமாக, சோவியத் யூனியனின் பிந்தைய ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்திலிருந்து விலகல்களும், குறிப்பாக, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின்னர் சோசலிசக் கட்டுமானத்தின்போது தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைகள் இத்தகைய பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றன.

சோசலிசக் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள்

சோசலிசக் கட்டுமானத்தின்போது நான்கு முக்கியமான அம்சங்களில் குறைபாடுகள் நடந்துள்ளன. இதனை விவாதிப்பதற்கு முன்பாக, சோசலிசம் என்பதைக் கட்டும் பணி, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை, மீண்டும் ஒருமுறை நாம் அடிக்கோடிட்டுக்கொள்வது அவசியமாகும். இதற்கென்ற எந்தவிதமான குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது வரைபடமோ கிடையாது. இத்தகு எதார்த்த உண்மைகளையும் நாம் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்திடும்போது கணக்கில் கொண்டிட வேண்டும்.

அரசின் வர்க்க குணம்

மேற்கண்ட நான்கு குறைபாடுகளில், முதலாவது, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணம் சம்பந்தமானதாகும்.  முந்தைய முதலாளித்துவ அரசமைப்பில் சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தின்  சர்வாதிகாரமே, அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணமாகும்.

எனினும், இந்த வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது.  தோழர் ஸ்டாலின் இதற்கான ஓர் அரசியல் அறிக்கையை 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசில் சமர்ப்பித்தார்.  ஆயினும், சோசலிசம் பல்வேறு கட்டங்களைக் கடந்தசெல்ல வேண்டியிருந்ததால், இத்தகு வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருந்தது.  சோவியத் யூனியன், முதலாளித்துவ  நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலில், அல்லது உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், சோவியத் யூனியனில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வடிவத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்துவிட வேண்டிய அவசியம் தேவையாய் இருக்கவில்லை.  பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பல்வேறு கட்டங்களையும், சோசலிச அரசின் பல்வேறு வடிவங்களையும்,  மிகவும் விரிவானமுறையில்  1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசின் அரசியல் அறிக்கையில் தோழர் ஸ்டாலின்  சமர்ப்பித்தார். இதற்கு “சித்தாந்தம் குறித்த கேள்விகள்” (“Questions of theory”) என்று தலைப்பிட்டிருந்தார்.  எனினும், இவ்வாறு  வடிவங்களை மாற்றியமைத்ததை நடைமுறைப்படுத்தும்போது, இதற்கான இயக்கங்களை அரசு அறிவிக்கும்போது அதில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு தேவைப்பட்டது. இதனை  மக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாததன் காரணமாக, அவர்கள் அரசிடமிருந்து தனிமைப்படுவதற்கும், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கும் இட்டுச்  சென்றது. மேலும், இதே வடிவம் சோசலிச நாடுகள் அனைத்திற்கும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்தந்த நாட்டின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வுசெய்வதன் பின்னணியில்  தீர்மானிக்கப்பட வேண்டியதாகும்.

தோழர் லெனின் இதுகுறித்து தன்னுடைய அரசும் புரட்சியும் என்னும் நூலில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும்,  வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது என்றும் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார். “முதலாளித்துவ அரசுகளின் வடிவங்கள் மிகவும் தீவிரமானமுறையில் வேறுபட்டிருக் கின்றன, எனினும் அவற்றின் வடிவங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், இறுதி ஆய்வில் தவிர்க்கமுடியாதவகையில் அவை முதலாளிவர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருந்திடும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது.”

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான கிழக்கு  ஐரோப்பிய சோசலிச நாடுகள்,  சோவியத் யூனியனில் இருந்தைப்போன்ற சோவியத் வடிவத்தை கையகப்படுத்திக் கொண்டன. அவை தங்கள் நாடுகளின் துல்லியமான சமூகப் பொருளாதார நிலைமைகளையோ மற்றும் வரலாற்றுப் பின்னணியையோ கணக்கில் கொள்ளவில்லை.  இவற்றின் விளைவாக இந்நாட்டின் அரசுகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டன. இவற்றுக்கு எதிராக மக்களின் இடையேயான அதிருப்தியும் வளர்ந்துகொண்டிருந்தன.

சோசலிஸ்ட் ஜனநாயகம்: இரண்டாவதாக மிகப் பெரிய குறைபாடு, சோசலிஸ்ட் ஜனநாயகம் சம்பந்தப்பட்டதாகும். ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததை விட சோசலிசத்தின்கீழ் ஆழமானதாகவும், வளமானதாகவும் இருந்திட வேண்டியது அவசியம். முதலாளித்துவம் பெயரளவில் ஜனநாயக உரிமைகளை வழங்கும் அதே சமயத்தில், அது மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அதனை உண்மையில் அளித்திடாது. (முதலாளித்துவத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் எதனையும் வாங்குவதற்கு உரிமை படைத்தவன்தான். எனினும் அவ்வாறு வாங்குவதற்கான சக்தியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.) ஆனால் சோசலிசம் எதனையும் வாங்கும் உரிமையையும், அதற்கான சக்தியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கும்.

எனினும், பல நாடுகளில் சோசலிஸ்ட் கட்டுமானம் நடைபெற்ற சமயத்தில், இரு விதமான குறைபாடுகள் நடைபெற்றுள்ளன. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு,  பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையின் சர்வாதிகாரமாக, அதாவது கம்யூனிஸ்ட்  கட்சியின் சர்வாதிகாரமாக, மாற்றப்பட்டிருந்தது. இதுவும் சிறிது காலத்திற்கப்பின் கட்சித் தலைமையின்  சர்வாதிகாரமாக மாற்றப்பட்டது. இவ்வாறு சோசலிச அரசு என்பது, ஒட்டுமொத்த  பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சோசலிச அரசு என்பது, நடைமுறையில்  கட்சியின் ஒரு சிறு பிரிவால், அதாவது  கட்சியின் அரசியல் தலைமைக்குழுவால்,  மேற்கொள்ளப்படும் ஒரு விசித்திரமான நிலைமை ஏற்பட்டது.

அரசு அறிவிக்கும் ஆணைகள் பெரும்பான்மையான மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் அமைந்திடவில்லை.  அவை சோவியத்துகள் போன்ற அடிப்படையான ஜனநாயக அமைப்புகளின் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்லப்படவில்லை. மாறாக அரசின் கட்டளைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன.  இவை இயற்கையாக மக்களை அரசிடமிருந்து தனிமைப்படுத்திட இட்டுச்சென்றது.

இரண்டாவதாக, ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்தும் சமயங்களில், உள்கட்சி ஜனநாயகம் என்பது அடிக்கடி பலிகிடாவாக மாறியது.  சோவியத் யூனியனின் வரலாற்றில் சில சமயங்களில் இருந்ததைப்போல மத்தியத்துவம் முன்னுக்கு வந்தது. இது, அதிகாரத்துவம் வளர்வதற்கு இட்டுச் சென்றது. இவ்வாறு அதிகாரத்துவம் வளர்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இவற்றின் காரணமாக சோசலிசத்திற்கு விரோதமான போக்குகள், ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்குச் சலுகை போன்றவை தலை தூக்கின.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல நாடுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த  பெரும்பாலானவர்கள் சலுகைகள் அனுபவித்தது இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்சியின் புரட்சிகரத் தன்மை கொள்ளை போய்விட்டது, கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது, கட்சித் தலைமையிடமிருந்து கட்சி அணிகளும் தனிமைப்பட்டன.

இதுபோன்ற திரிபுகளைச் சரிசெய்வதற்குப்  பதிலாக, கோர்பசேவ் தலைமையானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் கைவிடும் நிலைக்குச் சென்றது. நடைமுறையில் அது புரட்சிகரமான கட்சியையே நிராயுதபாணியாக்கியது,  அவசியமான  திருத்தங்கள் மேற்கொள்வதைத் தடுத்தது. இவை அனைத்தும் சோசலிசத்தையே கைவிடும் நிலைக்கு இறுதியில் இட்டுச் சென்றது.

சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானம்:  சில குறைபாடுகள் காணப்பட்ட மூன்றாவதான பகுதி என்பது சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானமாகும். அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றபின் முதலில் அது தேர்ந்தெடுத்த பாதை தொழிலாளர்-விவசாயிக் கூட்டணியின் அடிப்படையில் வெற்றிகரமாக ஜனநாயகப் புரட்சியை நிறுவியதாகும். இதுவே புதிய சவால்களை எதிர்கொண்டது.  ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிஸ்ட் புரட்சிக்குத் மாறுவதற்கான இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் தேவைப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதார அடிப்படையில் சொத்து உறவுகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிறுவ வேண்டியிருந்தது.  தொழிலாளி – விவசாயிக் கூட்டணிதான் ஜனநாயகப் புரட்சிக்கான முதுகெலும்பு என்கிற உண்மை, விவசாயத்தில் சொத்து உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது என்பது விவசாயிகளில் சில பிரிவினரது அந்தஸ்தைக் கடுமையாகப் பாதித்தது என்று பொருளாகும். இவர்கள்தான் ஜனநாயகப் புரட்சியை எய்துவதற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளியாக இருந்தவர்கள். உள்நாட்டு யுத்தம் மற்றும் சோவியத் யூனியன் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இந்த சிக்கலான பிரச்சனை மேலும் சிக்கலானது.  ஆனாலும், சோசலிஸ்ட் அரசை நிலைநிறுத்துவதற்கும்,  சோசலிஸ்ட் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கும் அபரிமிதமான தொழில்மயம் அவசியமாக இருந்தது. ‘யுத்த கம்யூனிசம்’ (‘war communism’), ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ (new economic policy) காலங்களின்போது, தோழர் லெனின் இந்தப் பிரச்சனையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தார்.

தோழர் லெனின் முன்னதாகவே இறந்ததை அடுத்து, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சோசலிஸ்ட் தொழில் மற்றும் விவசாயிகளின் விவசாயம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு குறித்து ஒரு விவாதம் எழுந்தது.   விவசாய உற்பத்தி அபரிமிதமாக இருந்ததன்  காரணமாக, அதன்மூலம் ஏற்பட்ட உபரியை தொழிற்துறை செயல்பாடுகளுக்கு எந்த அளவிற்குப் போடுவது என்பது தொடர்பாகவும், இதனை எப்படி தீர்மானிப்பது என்பது தொடர்பாகவும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. தொழில்துறை நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு விவசாய உற்பத்தியின் உபரியை வெகுவாகப் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. இதனை எப்படிச் செய்வது? இதில் பிரச்சனைகள் எழுந்தன. விவசாயத்துறையில் புதிதாக உருவான பணக்கார விவசாயிகள் (குலாக்குகள்) வர்க்கம் அக்டோபர் புரட்சிக்கு ஒரு வித்தியாசமான விதத்தில் அச்சுறுத்தலாக அமைந்தனர்.

எனினும், உலகம் முழுதும் சோவியத் யூனியனுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் தொடர்ந்து இருந்த சூழ்நிலையில், இப்பிரச்சனையை தோழர் ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக சமாளித்தார். அவ்வாறு சமாளிக்காமல் மட்டும் இருந்திருந்தால் சோவியத் யூனியன் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட தாக்குதலை வெற்றிகரமானமுறையில் முறியடித்திருக்க முடியாது.  அப்போது தோழர் ஸ்டாலின் மக்களுக்கு விடுத்த அறைகூவல்களை நினைவுகூருங்கள்.  நாஜிக்களுக்கு எதிராகப் போர்முனையில் போராடுவதால் மட்டும் வென்றுவிடமுடியாது, மாறாக அதனை தொழிற்சாலைகளிலும்,  வயல்களிலும் நாம் வெற்றிபெறுவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும்.  சோசலிசத்தைக் காப்பதற்காகவும், உலகை பாசிசத்திலிருந்து காப்பதற்காகவும், போர்முனையில் சோவியத் செஞ்சேனை வீரஞ்செறிந்த முறையில் போராடுவதற்கு, எவ்விதத் தொய்வுமின்றி அவர்களின் தேவைகள் எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்யப்பட்டதே அடிப்படைக் காரணமாகும்.

ஆனால் “சந்தைப் பொருளாதாரம் என்கிற முதலாளிகளின் கடவுள்”, செல்வாக்கு செலுத்தியதன் காரணமாகவும், இத்தகைய சோசலிஸ்ட் பொருளாதார அடித்தளங்களை,  கோர்பசேவ் படிப்படியாகக் கைவிட்டதன் காரணமாக, சோசலிசமே கைவிடப்படக்கூடிய நிலைக்கு கொண்டுசென்றது.

தத்துவார்த்த உணர்வினை உதாசீனம் செய்தல் (Neglect of Ideological Consciousness):  அடுத்து மாபெரும் குறைபாடு காணப்பட்ட பகுதி, மக்களின் கூட்டு தத்துவார்த்த உணர்வினை (collective ideological consciousness of the people) வலுப்படுத்தத் தவறியமையாகும்.  மக்களிடம் இத்தகைய கூட்டு தத்துவார்த்த உணர்வு உயர்ந்தோங்கி இருப்பதன்மூலமாகத்தான் சோசலிசம் நிலைத்து நிற்கமுடியும் மற்றும் அதனை மேலும் வளர்த்தெடுக்க முடியும். இதனை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த உறுதிப்பாடு இல்லாமல் மேற்கொண்டிட முடியாது.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் திருத்தல்வாதி திரிபுக்கு (revisionist deviation)ப் பின்னர் இது மிகப்பெரிய ஆபத்தாக (casualty-ஆக) மாறியது.

இக்குறைபாடுகளின் காரணமாக, சோவியத்  யூனியனிலும் இதர சோசலிச நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்புரட்சி சக்திகள் முன்னுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டு, சோசலிசம் கைவிடப்பட்டது.

இவ்வாறு இந்நாடுகளில் சோசலிசம் கைவிடப்பட்டதற்கு, மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகள் காரணமல்ல. மாறாக, மார்க்சியம்-லெனினியத்தின் அறிவியல் மேற்றும் புரட்சிகர சாராம்சத்திலிருந்து நழுவிச் சென்றதே காரணமாகும்.  உலக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து சரியற்ற மதிப்பீடுகளும் காரணமாகும். மார்க்சியத்தின் ஆக்கபூர்வ அறிவியலை வறட்டுத் தனமான முறையில் வியாக்கியானம் செய்ததும் காரணமாகும். மேலும் சோசலிசக் கட்டுமானத்தின்போது மேலே கூறியவாறு மேற்கொண்ட குறைபாடுகளும் காரணமாகும்.

நடப்பு முதலாளித்துவ நெருக்கடி – சோசலிச மாற்று

மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட இன்றைக்கும் ஒரே வழி, சோசலிசம்தான்.  இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் இன்றைய நிலைமைகளிலிருந்து மீள்வதற்கும் ஒரே மாற்று சோசலிசம்தான்.  2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருந்தே, உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதனை மேலும் ஆழமான முறையில் புதிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றுவதன் மூலம் இதனை நன்கு உணர முடியும். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  மேலும் அதிகரித்திருக்கின்றன.  முதலாளித்துவ அமைப்பின்கீழ் இருந்துகொண்டு கொண்டுவரப்படுகிற எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசம் என்கிற அரசியல் மாற்று ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும். சுரண்டலிலிருந்து மனிதகுலத்தை விடுவித்திட வேண்டுமானால், மனிதகுலத்தின்மீது முதலாளித்துவத்தால் ஏவப்பட்டுள்ள கொடுங்கோன்மையாட்சிக்க எதிராக சோசலிசத்திற்கான அரசியல் மாற்று தன் தாக்குதலை உக்கிரப்படுத்திட வேண்டும்.

முதலாளித்துவத்தின் மீதான நெருக்கடி எவ்வளவுதான்  உக்கிரமானதாக இருந்தபோதிலும், நாம் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல, எந்தக் காலத்திலும் அது தானாக வீழ்ந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் எப்படியாவது தன்னைத் தக்கவைத்துக் கொண்டுதான்  இருக்கும். எனவே, சோசலிஸ்ட் அரசியல் மாற்று அதனை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் வெகுவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிற போதிலும்,   இன்றையநிலையில் இவை அனைத்தும் தற்காப்புநிலையில்தான் இருந்து வருகின்றன.  தற்காப்புநிலையில்தான் என்று ஏன் கூறுகிறேன் என்றால், மக்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாகத் தாங்கள் இதுநாள்வரை பெற்றிருந்த ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் பறிக்கப்படும்போது அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன.  இத்தகு போராட்டங்கள் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் மீதான தீர்மானத்தில் அலசி ஆராய்ந்திருப்பதைப்போல, லெனினிஸ்ட் அகநிலைக் காரணியை வலுப்படுத்திட வேண்டும். அதாவது, மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு புரட்சிக் கட்சியின் வல்லமையை வலுப்படுத்திட வேண்டும்.

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப்பணியைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறது. நமது கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடும், ஸ்தாபனத்தின் மீதான பிளீனமும் இந்தியாவின் நிலைமைகளில் அகக்காரணியை (கட்சியை) வலுப்படுத்தும் குறிக்கோளை எய்தக்கூடிய விதத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்கள்

அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்றைய தினம் தன் நிலையை சர்வதேச அளவில் வலுவாக்கிக்கொண்டுள்ள நிலையில், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மூன்று முக்கிய குறிக்கோள்களை எய்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

முதலாவதாக அது இப்போது மீதம் இருந்துவரும் சோசலிஸ்ட் நாடுகளைக் கலைத்திட விரும்புகிறது. இரண்டாவதாக,  அணிசேரா இயக்கத்தின்கீழ் முக்கியமாக இருந்த  மூன்றாம் உலக நாடுகளை வலுவிழக்கச்செய்வதன்மூலம் எதற்கும் இலாயக் கற்றவைகளாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இறுதியாக, உலகத்தின்மீது பொதுவாகவும், குறிப்பாகத் தனக்குப் போட்டியாக வருபவர்கள் யார் என்று கருதுகிறதோ அவர்களை அழித்து ஒழித்து, தன்னுடைய ராணுவ மற்றும் பொருளாதார மேன்மையை நிலைநிறுத்திட முயற்சிக்கிறது.

ஏகாதிபத்தியத்தின் ஒருதுருவ உலகக் கோட்பாட்டைத் திணிக்கும் முயற்சிக்கு எதிராக வலுவானத் தத்துவார்த்த தாக்குதலால் வெற்றிபெற முடியவில்லை.  ஏகாதிபத்தியம், ஜனநாயகத்தை சுதந்திர சந்தையுடன் சமமாக்கப் பார்க்கிறது. இத்தகைய நிலைப்பாட்டுடன்,  தன்னுடைய மேலாதிக்கத்தையும் மற்றும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ‘சுதந்திர சந்தைகளை’த் திணிப்பதை எதிர்த்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தலையிடுகிறது.

ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகள்’ மற்றும் ‘மண்ணின் மாண்புகள்’ ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கிறோம் என்ற பெயரில் சுயேச்சையான இறையாண்மை நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகத் தலையிடுகிறது. இவ்வாறு ராணுவத் தலையீடுகளின் மூலமடாக அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருகிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்துவந்த முதலாளிவர்க்கம் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, தேசிய இறையாண்மையை மிகவும் புனிதமானதாக உயர்த்திப்பிடித்தது. இன்றையதினம், ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகளை’ப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அந்த நாடுகளின் தேசிய இறையாண்மையை மறுதலித்து, ராணுவ ரீதியாகத் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியம், வெறித்தனமாக கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கம்யூனிசத்தை, சர்வாதிகாரத்துடனும் பாசிசத்துடனும் சமப்படுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் கம்யூனிசத்தை பாசிசத்துடன் இணைத்து சமப்படுத்தி, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சட்டங்களை இயற்றி இருக்கிறது.  செக் குடியரசு, போலந்து போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கம்யூனிச அடையாளங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமாகத் தடை விதித்திருக்கின்றன.

கடந்த இருபதாண்டுகளில் இந்தப் போக்குகள் மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப்பின்னர் மார்க்சியத்தை மக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. எனவேதான் மார்க்சியத்தைப் பல்வேறுவிதமாக திரித்திடும் சித்தாந்தங்கள் அறிவுஜீவிகள் மத்தியில் வலம் வருவது வாடிக்கையாகிவிட்டன. இவற்றின்மூலம் மக்களைக் குழப்பிடும் பணி வெகுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

பின்-நவீனத்துவம் (Post-Modernism): ஏகாதிபத்தியமும், உலக நிதி மூலதனமும் எண்ணற்ற மார்க்சிஸ்ட் எதிர்ப்பு சித்தாந்தங்களை உருவாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் அனைத்து முற்போக்கு சித்தாந்தங்களையும் மறுதலித்திட முனைகின்றன.  வர்க்கப் போராட்டம் மறைந்துவிட்டது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பங்களிப்பு மறுதலிக்கப்பட்டுவிட்டது போன்ற சிந்தனைகள் முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியிலிருந்து வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ள சித்தாந்தம்தான், பின்-நவீனத்துவம் என்பதாகும்.

பின்-நவீனத்துவம் என்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவம் வெற்றிபெற்று, சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உருவான முதலாளித்துவ தத்துவார்த்தக் கண்ணோட்டமாகும்.  இத்தத்துவமானது மார்க்சியம் உட்பட எந்தவொரு தத்துவமோ, அரசியலோ உலகளாவிய அளவில் இருந்திடமுடியாது என்று நிராகரிக்கிறது.  பின்-நவீனத்துவம் என்பது முதலாளித்துவத்தையோ அல்லது சோசலிசத்தையோ ஒரு கட்டமைப்பு (a structure) அல்லது ஒரு முறை (a system) என்கிற விதத்தில் அங்கீகரித்திடவில்லை. இவ்வாறு, இது, உலக நிதி மூலதனத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு தத்துவமாகும். ஏனெனில் இது வர்க்கங்கள் இருப்பதை மறுதலிக்கிறது. எனவே, வர்க்கம் மற்றும் வர்க்கப் போராட்டம் என்பனவற்றையும் மறுதலிக்கிறது. மேலும் இது, அடையாள அரசியலை உந்தித்தள்ளுவதற்கும், மக்களை அரசியலற்றவர்களாக ஆக்குவதற்கும் மிகவும் பொருத்தமான ஒரு தத்துவமுமாகும்.

கலாச்சாரா மேலாதிக்கம் (Cultural Hegemony): இந்தக் கால கட்டத்தில் ஏகாதிபத்தியமும், நவீன தாராளமயமும்  தங்களுடைய கலாச்சார மேலாதிக்கத்தை வலுவாக நிறுவியுள்ளன.  இவை மக்களைத் தங்களுடைய தகவல் (Information), தொடர்பு (Communication) மற்றும் பொழுதுபோக்கு (Entertainment) என்கிற மூன்று ஐசிஇ (ICE) ஆகியவற்றைத் தங்களுடைய மெகா கார்ப்பரேஷன்கள் மூலமாக மக்களிடையே கொண்டுசெல்வதில் மூர்க்கத்தனமாக இறங்கியிருக்கின்றன.  தங்களுடைய கார்ப்பரேட் ஊடகங்கள் மூலமாக செய்திகளைத் திரித்துக்கூறுதல் என்பதும், மக்களிடம் கூறப்படும் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதும் இவற்றின்  ஏகபோகமாக மாறியிருக்கின்றன.  கலாச்சாரத்தை வணிகமயமாக்குவது உலகமயத்தின் ஒரு பகுதியாகும்.

வர்க்க மேலாதிக்கத்தின் காரணமாக, உலகமயக் கலாச்சாரம் மக்களை தங்களுடைய எதார்த்தமான  வாழ்க்கை நிலைமைகளிலிருந்து கத்தரித்துவிட முயல்கிறது. இவர்களின் கலாச்சாரம் என்பது அழகியலை மேம்படச் செய்வதற்கானது அல்ல, மாறாக மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை மற்றும் ஏழ்மை  ஆகியவற்றால் உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து அவர்களை திசைதிருப்புவதற்கானதாகும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை ஏகாதிபத்தியம் தன் ஆளுகையை அதிகரித்துக் கொள்வதற்கும், மக்கள் இயக்கங்களை நசுக்குவதற்கும் நன்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.

பின்-உண்மை (Post-Truth): மார்க்சியத்திற்கும், சோசலிசத்திற்கும் எதிராக, முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்றொடர்தான், பின்-உண்மை (Post-Truth) என்பதாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய 2016ஆம் ஆண்டின்  அகராதியில் ‘இந்த ஆண்டின் புதிய வார்த்தை’ என இதனைக் குறிப்பிட்டு, இதன் பொருளை வரையறுக்கும்போது, உணர்ச்சிக்கும் தனிப்பட்ட நம்பிக்கை அடிப்படையில் எழுப்பப்படும் வேண்டுகோள் அளவிற்கு  மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு செலுத்தாத சொற்றொடர் என்று கூறுகிறது.

டொனால்டு டரம்ப் மற்றம் நரேந்திர மோடி அரசோச்சும் இக்காலத்தில் இதனைப் புரிந்துகொள்வது எளிதாகும். ஈராக்கில் யுத்தத்தைத் தொடங்குவதற்காக அமெரிக்க புஷ் நிர்வாகம் அவிழ்த்துவிட்ட பொய்கள் மற்றும் ஏகாதிபத்திய அரசியல் மற்றம் ராணுவ ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்திட அவிழ்த்துவிடப்படும் பொய்களும் இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்தியாவிலும் இதேபோன்றே முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்படுவதிலிருந்து இதனை நோம்  அறிந்துகொள்ள முடியும்.  மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்காக தலித்துகள் மற்றம் முஸ்லீம்கள் மீது பசுப்பாதுகாப்புப் படை போன்ற தனியார் ராணுவத்தினர் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடுப்பதிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ள முடியும்.

பின்-உண்மை என்கிற சொற்றொடரும் மனிதகுல வரலாற்றில் புதிதான ஒன்றல்ல. ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்ஸ், “ஒரு பெரிய பொய்யைக் கூறுங்கள், திருப்பித் திருப்பி  அதனைக் கூறுங்கள், அது உண்மையாகிவிடும்,” என்று கூறிவந்தான் அல்லவா?  அதுதான் இது. இதுதான் அன்றைக்கு நாஜி பாசிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்கு ஆணிவேராக இருந்தது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் இந்துத்துவா வெறியர்களுக்கும்  முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு ஹிட்லரின் பேச்சுகள் வானொலியில் ஒலிபரப்பப்படும் போது எப்படி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினார்கள் என்று ஒலிபரப்பப்பட்டதோ அதேபோன்றுதான் இன்றைக்கு மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிதுருக்கிறது. எனவே, பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி என்பது புதிய உருவாக்கம் ஒன்றுமல்ல.

இவ்வாறு ‘பின்-உண்மை’ என்பதும் மக்களை தாங்கள் சுரண்டப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் எதிரான போராட்டங்களிலிருந்து திசைதிருப்புவதற்கான ஒன்றே தவிர, வேறல்ல.

மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரம்  அல்ல. மாறாக, அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, “துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதன்” அடிப்படையில் அமைந்த ஒன்று. மார்க்சியம், வரலாற்றைப் பொதுவாகவும், முதலாளித்துவத்தைக் குறிப்பாகவும் ஆய்வுசெய்திடும் ஓர் அணுகுமுறையாகும்.  மாமேதை மார்க்ஸ் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள இந்த அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், நாம் இன்றைய சூழ்நிலையைச் சரியான முறையில் புரிந்துகொண்டு, நம் தத்துவார்த்த சிந்தனையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்.

இந்த அடிப்படையில் நான் சரியானமுறையில் நின்றுகொண்டு, வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளர் ஒற்றுமையையும்  சீர்குலைக்கும் விதத்தில்,  நமக்கு எதிராகத் தற்போதும், எதிர்காலத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களை முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.

இந்திய நிலைமைகளில் சோசலிசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் தொடர்பான தீர்மானத்தில், இந்தியாவில் சோசலிசம் என்பதன் கருத்தாக்கம் என்ன என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் சோசலிசம் எப்படி இருக்கும் என்பதை,  இந்தியப்புரட்சியின் ஜனநாயகக் கட்டம் நிறைவடைந்தபின்புதான், அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெற்ற பின்னர்தான் கெட்டிப்படுத்திட முடியும்.

எனினும், சோசலிசத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எவை எவை தேவை என்பதை நம்மால் எதிர்பார்த்திட முடியும். எனவே, இந்தியாவில் சோசலிசம் என்றால் அதன் பொருள் என்ன?

அதன்பொருள், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழு வேலைவாய்ப்பு,  அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி.

அதன் பொருள்,தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினர் என அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரநிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மேம்பாடு.

அதன்பொருள், மக்கள் அதிகாரமே உயர்வானது. ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் சமூகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிலும் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்தவைகளாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுபோன்ற உரிமைகள் தரப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அவை மாயை. இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்களுக்கு அதற்கான வல்லமை கிடையாது. சோசலிசத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தி இருப்பதன் காரணமாக மனிதகுல வாழ்வின் தரம் உயர்ந்து, அங்கே சோசலிஸ்ட் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் செழுமையுடன் காணப்படும்.

அதன் பொருள், சாதி அமைப்புமுறை ஒழிக்கப்படுவதால் சாதி ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து மொழிப்பிரிவினரும் சமமாக நடத்தப்படுவார்கள். அனைத்து மொழிகளும் சமமான முறையில் வளர்த்தெடுக்கப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் உண்மையான சமத்துவம் அளிக்கப்படும், பாலின ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதன் பொருள், சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டமைப்பு, சோசலிச உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மத்திய திட்டமிடல்  அடிப்படையில் அமைந்திடும்.  சந்தை சக்திகள், மத்திய திட்டமிடலின் வழிகாட்டுதலின்கீழ் இயங்கிடும். சொத்தின் அனைத்துவிதமான வடிவங்களும் இருக்கும் அதே சமயத்தில், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையை தீர்மானகரமான வடிவமாக இருந்திடும். இவ்வாறு கூறுவதால் அது அரசின்கீழான பொதுத்துறை என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும் அதே சமயத்தில், கூட்டு(collective) மேற்றும் கூட்டுறவு அமைப்புகள், அரசுக் கட்டப்பாட்டில் உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பொருளாதார வாழ்வாதாரங்களை இயக்கி முறைப்படுத்திடும்.

அக்டோபர் புரட்சி : உலகத்தை மாற்ற முடியும்

மாமேதை காரல் மார்க்ஸ் ஒரு சமயம் கூறிய பொருள்பொதிந்த வார்த்தைகள்: “தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில், அதனை மாற்றுவதே ஆகும்.”  அக்டோபர் புரட்சி உலகை மாற்றுவது சாத்தியமே என்று உலகுக்கு காட்டியிருக்கிறது. அது இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றேயாகும்.  பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், அக்டோபர் புரட்சி மற்றம் அதன் பங்களிப்புகள் மனிதகுல நாகரிகத்தை முன்னேற்றுவதற்கு இன்றளவும் உதவிக்கொண்டு இருக்கிறது. நம் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றிட வீர சகாப்தம் படைத்திட்ட அக்டோபர்புரட்சி தொடர்ந்து நமக்கு உத்வேகத்தை அளித்துவரும்.  அக்டோபர் புரட்சி உலகை மாற்றியதைப்போல, இந்தியப் புரட்சியும் இந்தியாவை மாற்றி அமைத்திடும். இதனை எதார்த்தமாக்கிடக்கூடிய விதத்தில் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாகும்.

(கேரள மாநிலம், திருச்சூரில், 2017 ஜூன் 13 அன்று இஎம்எஸ் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது  அவர் கூறியதிலிருந்து சில அம்சங்கள்.)

பகத்சிங்கின் முக்கியமான பங்களிப்புகள் கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்:ச.வீரமணி

பகத்சிங்கின் முக்கியமான பங்களிப்புகள் கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்:ச.வீரமணி


சீத்தாராம் யெச்சூரி

தமிழில்: ச.வீரமணி

அனைவருக்குமான நவீன இந்தியாவை உருவாக்குவதில் பகத்சிங்கின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவைகளாகும். 1920-21 ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திடீரென்று கைவிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேசிய இயக்கத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இந்த இயக்கத்தின்போது நடைபெற்ற சௌரி சௌரா நிகழ்வு காந்திஜியையும், எதிர்கால ஆளும் வர்க்கங்களையும் அலற வைத்தது. மக்கள் மத்தியில் புரட்சிகர உணர்வு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் ஆபத்தாக முடியும் என்று அவர்கள் கருதினார்கள். மக்களிடையே எழுந்துவரும் புரட்சி அலை, நாட்டை பிரிட்டிஷ் காலனிய கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்குள்ளேயே இருந்துவரும் சுரண்டல்பேர்வழிகளையும் விழுங்கிவிடும் என்று கருதினார்கள். இதனால்தான் காந்திஜி, தான் ஒரு பெரிய “இமாலயத் தவறு” (“Himalayan blunder”) செய்துவிட்டேன் என்று கூறி இந்த இயக்கதை விலக்கிக் கொண்டார். காந்திஜி, இவ்வாறு இயக்கத்தை விலக்கிக்கொண்டது தொடர்பாக, அந்த சமயத்தில் செயல்பட்டு வந்த புரட்சியாளர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த முக்கியமான தலைவர்களே ஆச்சரியப்பட்டு, காந்திஜியிடம் இது குறித்துக் கேட்கவும் செய்தனர். ஜவஹர்லால் நேரு, சிறையிலிருந்து, இந்த இயக்கம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது என்றும், அதனை விலக்கிக் கொண்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் எழுதினார்.

மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், இருந்த பொதுவான விரக்தி நிலை, பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான மார்க்கத்தையும், திசைவழியையும் தேடியது. இந்தப் பின்னணியில்தான் பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்கள் ஒரு தெளிவான திசைவழியை அளித்திடும் விதத்தில் எழுந்தார்கள். அது மக்கள் மத்தியில் ஓர் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியது. நாடு சுதந்திரம் பெற்றபின்னரும் கூட இன்று வரையிலும் அது தொடர்கிறது.

பகத்சிங்கும், அவருடைய தோழர்களும் அவருக்கு 24 வயது ஆவதற்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்கள். இவ்வாறு  அவர் வாழ்ந்தகாலம் மிகவும் குறுகியதே என்றாலும், அதற்குள்ளாகவே அவர் எண்ணற்ற வீரதீரச் செயல்களைப் புரிந்துள்ளார்.  லாலா லஜபதி ராய் மீது கொடூரமானமுறையில் குண்டாந்தடி நடத்திய சாண்டர்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டது, தில்லி பாராளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசியது (தில்லி வெடிகுண்டு வழக்கு) முதலியவை, எப்படி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல  வேண்டும் என்பதில் பகத்சிங்கிற்கு இருந்த சிந்தனைத் தெளிவையும், அதன் அடிப்படையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் காட்டின. மார்க்சியம் குறித்தும், இந்திய மக்களை விடுவிப்பதற்கான புரட்சியின் குறிக்கோள் குறித்தும் அவர் கொண்டிருந்த தெளிவான பார்வையுடன் இவற்றை அவர் மேற்கொண்டார்.

சிந்தனைகளுக்கு இடையேயான போராட்டம்

சுதந்திரப் போராட்டக் காலத்தில், சுதந்திர இந்தியாவின் குணாம்சம் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து, பல்வேறு சிந்தனைகளுக்கு இடையேயும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட சிந்தனையோட்டம் என்பது, தேசிய இயக்கத்தின் குறிக்கோள் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்பதாக இருந்தது. இடதுசாரிகள் இதனை மறுக்காத அதே சமயத்தில் இத்துடன், மேலும் ஓரடி முன்னே சென்று, இவ்வாறு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நிலைத்திருக்க வேண்டுமானால், அவ்வாறு நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்தை ஒவ்வோர் இந்தியனின் பொருளாதார சுதந்திரமாகவும் மாற்றுவதில் நாம் எய்துகிற வெற்றியைச் சார்ந்திருக்கிறது, அதாவது, சுரண்டலற்ற ஒரு சமூகத்தை, சோசலிச சமூகத்தை, அமைப்பதில் அடங்கி இருக்கிறது என்றார்கள்.

இவ்விருவிதமான சிந்தனையோட்டங்களுடனும் நேரடியாகவே முரண்படக்கூடிய விதத்தில் ஒரு சிந்தனையோட்டமும் இருந்தது. அதாவது, சுதந்திர இந்தியாவின் குணாம்சம் மக்களின் மத அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே அந்தச் சிந்தனையாகும். இது மேலும் இருவிதமான சிந்தனைகளுக்கு வழிவகுத்தது. ஆர்எஸ்எஸ்-ஆல் முன்னெடுக்கப்பட்ட “இந்து ராஷ்ட்ரா” என்கிற சிந்தனைக்கும், முஸ்லீம் லீக்கால் முன்னெடுக்கப்பட்ட “இஸ்லாமிய அரசு” என்கிற சிந்தனைக்கும் வழிவகுத்தது. வி-டி. சாவர்க்கரால் முன்னெடுக்கப்பட்ட இந்த இரு தேசக் கோட்பாட்டை, பின்னர் முகமது அலி ஜின்னாவும் பின்பற்றினார்.

தேசிய இயக்கத்தின் பிந்தைய நடவடிக்கைகள், துரதிர்ஷ்டவசமான முறையில் நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கும், பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதற்கும் இட்டுச் சென்றது. எனினும், இந்தியாவின் இதர பகுதி, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு கருத்தாக்கத்தையே தேர்வு செய்தது. அப்போது இந்து ராஷ்ட்ரம் என்னும் சிந்தனையை நிராகரித்ததுதான், அவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி, காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது. ஆயினும், ஆர்எஸ்எஸ்-இன் சிந்தனையோட்டமான “இந்து(த்துவா) ராஷ்ட்ரத்தை” அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தன. இந்த முயற்சிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, தங்களுடைய “இந்துத்துவா ராஷ்ட்ரமாக” மாற்றுவதற்கான முயற்சிகளில் பிரதிபலிக்கிறது.

இதன் தொடர்ச்சிதான் இன்று நாம் ஈடுபட்டுள்ள போர்க்களமாகும். சுதந்திரத்திற்குப் பின் கடந்த எழுபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள அனுபவம், இடதுசாரிகள் அன்றைய தினம் கூறிய கருத்துக்களை, அதாவது, மக்கள் போராட்டம் சோசலிசத்தை நோக்கி முன்னேறவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நிலைத்திருக்க முடியாது என்று கூறியதை, மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதைத்தான் பகத்சிங் உயர்த்திப்பிடித்து, நடைமுறைப்படுத்தி வந்தார்.

பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு தொடர்கிறது

பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு, இன்றும் நம் போராட்டங்களில் செல்வாக்கு செலுத்துவது தொடர்கிறது. பகத்சிங்கின் நவஜவான் பாரத் சபையின் ஆறு விதிகளில், இரண்டு பின்வருமாறு: “1. வகுப்புவாத அமைப்புகளுடன் அல்லது வகுப்புவாத சிந்தனைகளைப் பரப்புகின்ற அமைப்புகளுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை. 2. மதம் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை என்று கருதும் விதத்தில் மக்கள் மத்தியில் பொது சகிப்புத்தன்மையை உருவாக்குவது, அதன் அடிப்படையில் முழுமையாகச் செயல்படுவது.”

Remembering martyr Bhagat Singh: Lesser known facts about the iconic  revolutionary- Dinamani

பகத்சிங், தங்களுடைய இந்துஸ்தான் குடியரசு சேனை என்னும் பெயரை, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனை
(HSRA-Hindustan Socialist Republican Army) என்று மாற்றியமைத்தபின்னர் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரிலேயே, அனைத்துவிதமான மத வகுப்புவாதங்களுக்கும், சமயச் சடங்குகளுக்கும் தடையைப் பிறப்பித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, (பிறப்பால் சர்தார் ஆக விளங்கிய) பகத்சிங், தன் தலைமுடிக்கும், தாடிக்கும் விடை கொடுத்தார். இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் அறிக்கை (manifesto), “இளைஞர்களைப் பீடித்திருக்கக்கூடிய, கொத்தடிமை சிந்தனைகளிலிருந்தும், மத மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபடுவதற்கான விருப்பத்தில், இளைஞர்களின் அமைதியின்மையில் புரட்சியின் வருகையைப் பார்த்தது.”

பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் அந்நிய மற்றும் உள்நாட்டு சுரண்டல்காரர்களுக்கு இடையேயான தொடர்பினை அறிந்திருந்தார்கள். இவ்வாறு அவர்கள், சுதந்திரத்தை மனிதனுக்கு மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இணைத்தார்கள். பகத்சிங், சிறையிலிருந்து எழுதிய செய்தியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்: “விவசாயிகள் தங்களை,  அந்நிய நுகத்தடியிலிருந்து மட்டுமல்ல, நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் நுகத்தடிகளிலிருந்தும் விடுவித்தக் கொள்ள வேண்டியிருக்கிறது.”

தில்லி வெடிகுண்டு வழக்கு

தில்லி வெடிகுண்டு வழக்கு விசாரணையின்போது, பகத்சிங்கும், படுகேஸ்வர் தத்தும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் போதும், நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போதும், “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டார்கள். இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று நீதித்துறை நடுவர் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் எழுத்துபூர்வமான பதிலை அவருக்குச் சமர்ப்பித்தார்கள்.  7 மற்றும் 8 என்று எண்ணிடப்பட்ட, அதன் கடைசி இரண்டு பத்திகளை, இங்கே கீழே இணைத்திருக்கிறோம். இதில் அவர்கள், சுதந்திரத்திற்கான போராட்டத்தையும், சோசலிசத்திற்கான போராட்டத்தையும் அற்புதமான தெளிவுடன்  இணைத்திருக்கிறார்கள். இவை, அனைவருக்குமான நவீன இந்தியா குறித்து பகத்சிங்கிற்கும் அவருடைய புரட்சித் தோழர்களுக்கும் இருந்த தொலைநோக்குப் பார்வையை உயர்த்திப்பிடிக்கிறது. (இந்தப் பதில், 1929 ஜுன் 9 அன்று மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவின்படி பதிவுருக்களிலிருந்து நீக்கப்பட்டது. அவர்கள் தியாகிகளான பின் ஐம்பதாண்டுகள் கழித்து, 1981 மார்ச்சில் தேசிய ஆவணக் காப்பகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.)

(7) பகத்சிங் ஆகிய என்னிடம், ‘புரட்சி’ (இன்குலாப்) என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கீழமை நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், புரட்சி என்பது ரத்தம் சிந்தும் போராட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அங்கே தனிநபர் பழிதீர்க்கும் பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சி என்பதற்கு  ‘வெளிப்படையான அநீதியின் அடிப்படையில் இப்போது இருக்கிற அமைப்பு மாற்றப்பட வேண்டும்’ என்றே நாங்கள் பொருள் கொள்கிறோம். உற்பத்தி செய்பவர்கள் அல்லது தொழிலாளர்கள் சமூகத்தின் அடிப்படை மூலக்கூறாக இருந்த போதிலும்கூட, அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன. அவர்களின் அடிப்படை உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. ஒரு பக்கத்தில் அனைவருக்கும் உணவை உற்பத்தி செய்து அளித்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறார், உலகத்தில் உள்ள அனைவருக்கம் நவீன ஆடைகளை அணிவதற்கு உலகச் சந்தைக்கு துணிகளை விநியோகித்திடும் நெசவாளர் தன்னையோ, தன் குழந்தைகளையோ முழுமையாகப் போர்த்திக்கொள்ளும் அளவிற்கு ஆடைகளின்றி இருக்கிறார். அற்புதமான அரண்மனைகளைக் கட்டி எழுப்புகின்ற கொத்தனார்கள், கருமான்கள்(smiths), ஆசாரிகள் (carpenters), சேரிகளில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில், சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக விளங்கும் முதலாளித்துவ சுரண்டல்காரர்கள்,  தங்கள் விருப்பத்திற்கிணங்க லட்சக்கணக்கில் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பயங்கரமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில் வலிந்துதிணிக்கப்படும் பாரபட்சம், பெருங்குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமை என்றென்றும் நீடித்திருக்க முடியாது. எரிமலையின் விளிம்பின்மீது சுரண்டல்காரர்களின் அப்பாவிக் குழந்தைகளும், சுரண்டப்படுபவர்களின் பல லட்சக்கணக்கான குழந்தைகளும் ஓர் ஆபத்தான செங்குத்துச் சரிவில் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் இன்றைய சமூக அமைப்பு சந்தோஷமாக ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகும். இந்த நாகரிகத்தின் (civilization) ஒட்டுமொத்த கம்பீரமான கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், நொறுங்கி வீழ்ந்துவிடும். எனவே, ஒரு புரட்சிகர மாற்றம் அவசியம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டியது, இதனை உணர்ந்த ஒவ்வொருவரின் கடமையுமாகும். இதனைச் செய்யாவிட்டால், மற்றும் மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும், ஏகாதிபத்தியமாக முகமூடி அணிந்துகொண்டு தேசங்களை தேசங்கள் சுரண்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், மனிதகுலம் இன்றையதினம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பதுயரங்கள் மற்றும் படுகொலைகள் தடுக்கப்பட முடியாவிட்டால், யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் உலகளாவிய அமைதிக்குக் கட்டியங்கூற வேண்டும் என்றும் கூறுவதெல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் பாசாங்குத்தனமாகும். புரட்சி என்பதன் மூலம் நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதும், இது எவராலும் அச்சுறுத்தப்பட முடியாத அளவிற்கு அமைந்திடும் என்பதுமாகும். இதன் விளைவாக அமைந்திடும் உலக சம்மேளனம் மனித குலத்தை முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்களின் துன்ப துயரங்களிலிருந்தும் மீட்டிடும்.

(8) இதுவே எங்கள் சித்தாந்தம். எங்கள் உத்வேகத்திற்கான இந்த சித்தாந்தத்துடன், நாங்கள் ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கை விடுக்கிறோம். எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால் மற்றும் இப்போதைய அரசமைப்பு முட்டுக்கட்டையாக இருப்பது தொடருமானால், அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியும் விதத்தில், நன்றாக இருக்கின்ற இயற்கையான சக்திகள், ஒரு கடுமையான போராட்டத்தை நடத்தி, புரட்சியின் லட்சியங்களை நிறைவேற்றும் விதத்தில்,  தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவிடும்.

புரட்சி, மனிதகுலத்தின் தவிர்க்கமுடியாத உரிமை. சுதந்திரம் அனைவரின் விவரிக்கமுடியாத பிறப்புரிமை. தொழிலாளர்கள்தான் சமூகத்தின் உண்மையான பராமரிப்பாளர்கள். மக்களின் இறையாண்மை தொழிலாளர்களின் இறுதி விதியாக இருந்திடும்.

இந்த லட்சியங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக எவ்வளவு துன்பங்கள் எங்கள் மீது ஏவப்பட்டாலும் அவற்றை நாங்கள் வரவேற்போம். புரட்சியின் பலிபீடத்திற்கு நாங்கள் எங்கள் இளைஞர்களைத் தூபமாகக் கொண்டு வந்திருக்கிறோம். அற்புதமான லட்சியத்திற்காக அர்ப்பணித்துக்கொள்வதைவிட உயர்ந்த தியாகம் எதுவுமில்லை. நாங்கள் திருப்தி மனப்பான்மையுடனேயே இருக்கிறோம். புரட்சியின் வருகையை எதிர்பார்க்கிறோம்.

“புரட்சி நீடூழி வாழ்க.”

இன்றைய சூழல்

இவ்வாறு, இன்றைய சூழலில், குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு/தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம், ஆழமாகவும், அகலமாகவும் வளர்ந்திருக்கிற நிலையில், மோடி அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கும் விதத்தில் சுரண்டல் கொள்கைகளை அதீதமான முறையில் பின்பற்றி வருகிறது. பொருளாதார மந்தம் நாட்டின் சொத்துக்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும், வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பணத்தை அந்நிய மற்றும் உள்ளூர் கார்ப்பரேட்டுகளின் ஆதாயத்திற்குத் திருப்பிவிடும் விதத்திலும் சூறையாடுவதுடன் இணைத்திருக்கிறது.

இவை அனைத்தும், தொழிலாளர் நலச் சட்டங்களை  முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றும்விதத்தில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் மூலமாக உழைக்கும் மக்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதுடனும், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கூறும் அனைவரையும் “தேசத் துரோகிகள்” என்று முத்திரை குத்தி அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள்மீது தாக்குதல் தொடுப்பதுடனும், பகுத்தறிவாளர்கள் மீது தாக்குதல் தொடுப்பதுடனும் இணைந்திருக்கிறது. இன்றைய தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களை வலுப்படுத்த அனுமதிப்பதற்கான உரிமைகளைப் பாதுகாத்திட, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களுடன், இந்தப் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திட, மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதகாத்திட, நாட்டிலுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் மத்தியில் நிலவும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்திட, இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதகாப்பது மிகவும் அவசியமாகும்.

இவ்வாறு, பகத்சிங், தூக்கிலிடப்பட்ட தியாக தினம் 90 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவருடைய வாழ்வும் பணியும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தச் செல்லவும், வலுப்படுத்தவும் நமக்கு உத்வேகம் அளித்து,  வழிகாட்டும் ஒளிவிளக்காக இருப்பது தொடர்கிறது.

(தமிழில்: ச. வீரமணி)

பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்: ச.வீரமணி

பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்: ச.வீரமணி



1. பகத்சிங் பிறந்தநாள் ஆண்டுவிழா:

(பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன)

சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்: ச.வீரமணி)

2020 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 113ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.

விடுதலை நாயகன் பகத்சிங் 2

பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.

தில்லி வெடிகுண்டு வழக்கு

இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.

இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.

புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):

பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மள அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்”

ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத் சிங்! – Malaysiakini

பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர் அவர்களைப் பார்த்து, இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று கேட்டார். புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள் என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

 ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக்கொண்டுள்ள இப்போதை சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான். உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமானமுறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது.  ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்

இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.

‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.

இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.

எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.

சுதந்திரப் போராட்ட விடிவெள்ளி பகத் சிங் - Puthiya Vidial, Puthiya Vidiyal

சமூக அமைப்புக்கு எதிராகவே,
எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல

தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …”  “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய  இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.

வகுப்புவாதம் (எதிர்) மதச்சார்பின்மை

1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.

விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.

இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.

இதற்கு மாற்றுமருந்து என்ன? . ‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.

தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.

மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”

எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:

“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர்.  கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”

Remembering Udham Singh: The avenger of the Jallianwala Bagh Massacreஊடகங்கள்

மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:

“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”

“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில்  வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன.  ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.

“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”        

இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.

Introduction of electoral bond is violation of Constitution: Sitaram Yechury

சமூக நீதி

பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:

“… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது.  அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”

பகத்சிங், “நான் ஏன் நாத்திகன்” கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!

இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.