நூல் மதிப்புரை: ஜோசப் ராஜாவின் ‘முற்றுகை’ – பெரணமல்லூர் சேகரன்

நூல் மதிப்புரை: ஜோசப் ராஜாவின் ‘முற்றுகை’ – பெரணமல்லூர் சேகரன்




காற்றைப் போலக் கடத்திச் செல்லவேண்டிய கவிதைகள்
இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்துக்கொண்டிருப்பதில் இயல்பாகவே திருப்தி தழுவிக்கொள்கிறது. ஏனெனில் கவிதையாகட்டும்,
சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், கட்டுரையாகட்டும் அப்படைப்பில் மனிதநேயம் இழைந்தோடுவதைக் காணமுடியும். வாசிக்கையில் நம்பிக்கை
ஊற்றெடுத்து உள்ளத்தைக் குளிர்விக்கும். அவ்வகையில் தான் இடதுசாரி எழுத்தாளரான  ஜோசப் ராஜாவின் நூல்களையும் படைப்புகளையும் வாசிப்பதில்  அலாதியான திருப்தி இயல்பாய் ஏற்படுகிறது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்தியாவின் தலைநகரான தில்லியில்  துவங்கி விவசாயிகள் போர் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றது. உலகம்
முழுவதும் பேசப்பட்ட இப்போராட்டம் குறித்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தில்லியில் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு உலகம் சுற்றாமல்
உள்நாட்டில் முடங்கிக் கிடந்தபோதிலும் போராடும் விவசாயிகளைக் கண்டு உரையாடவோ போர்க்களத்தில் பலியான விவசாயிகளுக்காகத் தமது கட்டுரையில்
ஒருவார்த்தைகூட இரங்கல் தெரிவிக்கவோ விரும்பாத பிரதமர்தான், ரோம் பற்றி எரிந்தபோதே பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் போன்ற நரேந்திர
மோடி. இவரோ மயிலுக்கு இரைகொடுத்து இறகைவருடிக் கொண்டிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைந்த அவையில்
விவசாயத்தைப் பெரு நிறுவனங்களுக்குப் பலி கொடுக்காமலிருக்க விவசாயிகள் போராடி வருவது குறித்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. மாறாக
‘மனதின் குரல்’ என்ற பெயரில் வளர்ந்த தாடியுடன் ‘உலகமகா நடிப்பை’ நடித்துக்கொண்டிருந்தார் நரேந்திர மோடி. விவசாயிகள் மழையில், குளிரில், பனியில்,
வெயிலில் எனப் பருவ நிலை மாறிக்கொண்டிருந்த போதிலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளும், உலக
நாடுகளின் குரலும், அரசியல் கட்சிகளின் குரலும், பஞ்சாபைச் சேர்ந்த ஒன்றிய பெண் அமைச்சரின் ராஜினாமாவும் பிரதமராலும் அமித்ஷாவாலும் அலட்சியம்
செய்யப்பட்டன.

‘அந்தோலன்ஜீவி’ என்விவசாயிகள் கேவலப்படுத்தப்பட்டதோடுஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டோம், ரத்து
செய்யும் பேச்சுக்கே இடமில்லை எனகர்ஜித்தனர் மோடி அமித்ஷா இரட்டையர். வர்க்கப் போராட்டமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த விவசாயிகளின்
போராட்டத்துக்குத் தொழிலாளி வர்க்கம் நாடு முழுவதும் கிளர்ச்சிப்பிரச்சாரம் செய்து தில்லியிலும் போர்க்களத்தில் உடனிருந்தது நம்பிக்கையை விதைத்தது.

இந்நிலையில் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என எழுத்தாலும் பேச்சாலும் வரலாற்றுக் கடமையாற்றினார். அதன் ஒரு பகுதியாக எழுத்தாளர் ஜோசப் ராஜாவின்  கவிதைகள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 முதல் 2021 டிசம்பர் 14 வரை ஓராண்டாக வலம்வந்தன. இவரது எழுத்துக்கள் களத்தில் நின்று விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி போர்த்தீயைவளர்த்தன.

“எழுந்து நிற்பது எவ்வளவு அழகு
அதிலும் எதிர்த்து நிற்பது எவ்வளவு அழகு
சேர்ந்திருப்பது எவ்வளவு அழகு
அதிலும் ஒன்றாய்ப் பத்தாய் நூறாய் ஆயிரமாய்
லட்சமாய்க் கோடியாய் சேர்ந்திருப்பதெல்லாம்
உண்மையிலேயே பேரழகல்லவா”
என வர்ணிக்கும் நூலாசிரியர்..

“ஏ புரட்சிக்காரர்களே
ஒவ்வொரு புரட்சியின்
ஒவ்வொரு வெற்றியிலும்
உங்களுடைய ஆன்மா
எப்படியெல்லாம் மகிழ்ந்திருக்கும்
அந்த மகிழ்ச்சியைக்
கொஞ்சமாக உணரத்தாருங்களேன்”

என புரட்சி ருசிக்காண விழைகிறார் ஜோசப் ராஜா.

இந்தியாவின் சுதந்திரப் போரில் பங்குபெறாத ஆளும் வர்க்கம் தங்களைமட்டுமே ‘தேசபக்தர்கள்’ எனவும் தங்களை விமர்சிப் போரை ‘தேச  விரோதிகள்’ எனவும்
கதைத்துவரும் காலத்தில் போராடும் விவசாயிகளை ..

“இந்த தேசத்தின்
உறுதியான தேசபக்தர்கள்
இந்த தேசத்தின் உண்மையான தேசபக்தர்கள்”
என்கிறார்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டும் விரோதமானவையல்ல. மாறாக ஒட்டுமொத்த இந்தியர்களுக்கே விரோதமானவை. இதைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் நூலாசிரியர்.

சரியான கேள்விதானே.”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்னும் மகத்தான குறளை மனதின் குரலில் கொச்சைப்படுத்தும் பிரதமர் போலவே தமிழ் மக்கள். பிரதமர் மோடியின் கட்சியைப் பாராளுமன்றத் தேர்தலில் மாற்றாக நிராகரித்தவர்கள் அல்லவா தமிழக வாக்காளர்கள்! எனின் விவசாயிகள் போராட்டத்தை வேடிக்கைபார்ப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் கேள்விக்கலகளை காளால்துளைக்கிறார் கவிஞர்.
போராட்டக் காரர்கள் அழகானவர்களாகத் தெரிகிறார்கள் நூலாசிரியருக்கு‌. போராட்டக்காரர்கள் மட்டுமல்ல. போராட்டத்திற்குத் துணைநிற்பவர்கள் கூடத்தான்.

“மனிதகுல வரலாறு நெடுகிலும்
போராடும் மானுடமே பேரழகாய்
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது”
எனக் கவிதைக்கு அழகுசேர்க்கிறார் கவிஞர்.

“அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும்
போராடிக்கொண்டிருக்கும்
விவசாயப் பிரதிநிதிகளுக்கும்
நடக்கும் பேச்சுவார்த்தையில்
நம்பிக்கைக்குப் பதிலாக
நல்ல பதிலுக்குப் பதிலாகக்
கொடுக்கப்பட்ட உணவை
வேண்டாமென்று ஒதுக்கி
தாங்கள் கொண்டுவந்த
எளிய உணவிலும்
தங்கள் எதிர்ப்பை
பதிவு செய்கிறார்கள்”

ஊடகங்கள் மறைத்ததை வெளிச்சம்போட்டுக் காட்டி விவசாயிகள் சங்கத்தின் மேன்மைக்கு மெருகு சேர்க்கிறார் நூலாசிரியர்.
ஒரு பானைச் சோற்றுக் குஒருசோறு பதம் போலப் பெண் விவசாய போராளியைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஜோசப் ராஜா.

ஒரு வயதான பெண்மணி சொல்கிறார்:
“எல்லாவற்றையும் இழந்துவிட்ட நாங்கள்
கடைசியாக எங்கள் கைகளில் இருக்கும்
நிலத்தையும் இழந்துவிட விரும்பவில்லை
எங்கள் நிலத்திற்காக எங்கள் சந்ததிகளுக்காக
இந்த உயிரே போனாலும்  பரவாயில்லை” யென்று
கம்பீரமாகக்
காளியைப் போலக் கம்பீரமாக
எல்லையை நோக்கி நடந்து செல்கிறாள்.

“விவசாயிகளின் வளர்ச்சிக்காகத்தான்
இந்தச் சட்டங்கள்
என்ற ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளை
இதற்கு முன்னால் கேட்ட
எண்ணிலடங்கா வாக்குறுதிகளைப் போலவே
அர்த்தமற்ற ஒன்றாகத்தான்
புரிந்துகொள்கிறார்கள்”

என ஆட்சியாளர்களின் பொய் முகத்தைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் ஜோசப் ராஜா.
குடியரசு தினம் வழக்கமாக உழைக்கும் வர்க்கத்தின் பங்கேற்பில்லாமல் களையின்றி காட்சிப்படுத்தப்படும். ஆனால் 2021 குடியரசு தினத்தன்று

“முதல் முறையாகக்
குடியரசு தின அணிவகுப்பைச்
சீருடை அணியாத
எளிய மனிதர்கள் சிறப்பிக்கிறார்கள்”
எனப் போராளிகளுக்கு மகுடம் சூட்டுவது சிறப்பு.

ஆனால் அதிகார வர்க்கமோ..

“வாழ்விற்காகப் போராடும்
உழைப்பாளிகளை
இந்த உலகத்தின் கண்களுக்குக்
கெட்டவர்களாகவும் மோசமானவர்களாகவும்
காட்டுவதற்காக எடுத்த முயற்சிகள்
தோல்வியடைந்து போகின்றன”
எனும் நூலாசிரியர்…
“எல்லைகளுக்குத் திரும்பி
நங்கூரத்தை இன்னும் ஆழமாகப்
பாய்ச்சிக் கொள்கிறார்கள்
இப்போது
அவர்களின் மேலே
இன்னும் பிரகாசமாக
ஒளிரத் தொடங்குகிறது சூரியன்”

எனும் கவிதை சிறப்பு.

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் செங்குருதி சிந்தி இன்னுயிர் நீத்த விவசாயிகள் ஏராளம். அவர்களுள் ஒருவருடன் தமது கவிதையால் உரையாடுகிறார் நூலாசிரியர்.

“என்னால் மறக்கமுடியாத
ஒருசில முகங்களில்
இரத்தம் சொட்டச் சொட்டக் காட்சிதரும்
உன்னுடைய முகமும்
நிலைத்திருக்கும் என்றென்றும்
எனக்குத் தெரியும் தோழா
உனக்குள் ஒளித்துவைத்திருந்த புயலை
எனக்கு நன்றாகத் தெரியும் தோழனே
இன்னும் அடங்கியிருக்கும் நெருப்பை
நான் நன்றாக அறிவேன் தோழனே
உண்மையைச் சொன்னால்
நான் காத்திருப்பதுகூட
புயலைப் பற்றிய கவிதைகளையும்
நெருப்பைப்பற்றிய கவிதைகளையும்
எழுதிக் கொடுப்பதற்காகத்தான்”

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகள் போராட்டத்தை நசுக்க மேற்கொண்ட அரக்கத்தனமான முயற்சிகளை முறியடித்து முன்னேறிய விவசாயிகளின் வீரத்தை வர்ணிக்கும் நூலாசிரியர் அதேநேரத்தில்..

“அதிகாரத்தின் கரங்களால்
அழுத்தி அறையப்பட்ட
ஆணிகளுக்கு முன்னால்
அன்பின் மலர்ச் செடியை
நட்டுக்கொண்டிருக்கிறார்
வயதான ஒரு விவசாயி
எண்ணிலடங்கா விதைகளை
தன் வாழ்நாளெல்லாம் விதைத்திருந்த
அந்த வயதான கைகளின் பக்குவம்
ஒற்றைச் செடி நடுகையிலும் கூட
ஒளிர்ந்துகொண்டிருப்பதை
வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்”
எனப் புகழ்மாலை சூட்டுகிறார் கவிஞர்.

முதலாளிகள் ஆட்சியாளர்களையும், ஆட்சியாளர்கள் காவல்துறையையும் நம்பினாலும் மக்கள் தங்களைத் தாங்களே நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதைக் கிராமங்களின் மகாபஞ்சாயத்துகள் நிரூபிக்கின்றன. இத்தகைய மகாபஞ்சாயத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் தீயாய்ப்பரவி விவசாயிகளின் ஒற்றுமையைப் பறைசாற்றினால் ஆயிரம் மோடி அமித்ஷா அதிகாரத்துக்கு வந்தாலும் துடைத்தெறியப்படுவார்கள்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு அடிபணிந்த பா.ஜ.க. அரசு விவசாயச் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசாமல் தாமாகவே வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. வெறும் அறிவிப்பை மட்டுமே நம்பத்தயாராக இல்லை விவசாயிகள். எனவேதான் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற சட்ட மசோதா நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது.

“கோரிக்கைகள் நிறைவேறியபின்னும்
இந்தப் போராட்டம் தொடரவேண்டும்
மிகப்பெரிய மாற்றத்திற்காகவும்
புத்தம் புதிய வாழ்விற்காகவும்
புத்தம் புதிய விடியலுக்காகவும்
போராடும் தேவையிருக்கிறது என்பதை
எப்போதும் மறந்து விடாதீர்கள்”

என்னும் ஜோசப் ராஜாவின் விழைவுதானே நம் விழைவும். இந்திய விவசாயிகளின் புரட்சியாக இப்போர் இந்திய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அடுத்தகட்ட நகர்வுக்கு இட்டுச்செல்லும் வண்ணம் இலக்கியங்கள் பல பூக்கவேண்டியது போர்க்கள தட்ப வெப்பநிலையின் கட்டாயம். அத்தகைய இலக்கியங்களுள் ‘முற்றுகை’ எனும் ஜோசப் ராஜாவின் கவிதைத் தொகுப்பு நன்முத்தாய் மிளிர்கிறது எனின் மிகையன்று.

கவிதைகளுக்கு இணையாக ‘போராட்டமும் கவிதையும்’ என்னும் முன்னுரை அமைந்துள்ளது. அதன் உள்ளடக்கத்தை, கவித்துவத்தை, உணர்வுப் பொழிவைத் தவறவிடாமல் இந்நூலை வாங்கிப்படிக்கப் பரிந்துரை செய்கிறேன். ஏனெனில் முன்னுரையும் முத்தான கவிதைகளும் வாசிக்க  வாசிக்கத்தான் மானுடத்தை இன்னும் இன்னும் நேசிக்கவைக்கும்.

நூல்: முற்றுகை
பக்கங்கள் 72
விலை ₹ 75
வெளியீடு: தமிழ்அலை
3 சொக்கலிங்கம் காலனி
தேனாம்பேட்டை
சென்னை 600 086
தொடர்புக்கு:044-24340200
                              7708597419

– பெரணமல்லூர்சேகரன்

Vara mudindhal Vandhuvidungal Thozhar Book By Sirajudeen Bookreview By Sekaran நூல் மதிப்புரை: சிராஜூதீனின் வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் - பெரணமல்லூர் சேகரன்

நூல் மதிப்புரை: சிராஜூதீனின் வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் நினைவுக் கட்டுரைகள் – பெரணமல்லூர் சேகரன்




நூல்: வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் நினைவுக் கட்டுரைகள்
தொகுப்பு: சிராஜூதீன்
பக்கங்கள்: 232
விலை: ₹225
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

“மனிதனுக்கு மிகவும் பிரியமானது அவனுடைய வாழ்க்கை! மனித வாழ்க்கை வாழ்வதற்கே! ஆனால் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டால், பயந்தாங் கொள்ளி யாகவும், பயனற்றவனாகவும் வாழ்ந்தேன் என்று வெட்கத்துடன் தலைசாயும் நிலைமை வரக்கூடாது. அர்த்தமற்ற மனவேதனையுடன், சித்ரவதையுடன் வருடங்கள் உருண்டோடி விட்டனவே என கழிவிரக்கம் கொள்ளும் பிழைப்பு வேண்டாம்! என் வாழ்க்கை பூராவும் என் திறமைகள் அனைத்தையும் மனித சமுதாய விடுதலையென்னும் உலகிலேயே மகோன்னதமான இலட்சியத்திற்கே அர்ப்பணித்தேன் என்று கண்ணை மூடும் போது நினைக்கும்படி வாழ்வதுதான் மனித வாழ்க்கைக்குப் பெருமை அளித்திடும்”..ஆஸ்த்ரோவ்ஸ்கி

ஆஸ்த்ரோவ்ஸ்கியின்அர்த்த அடர்த்தி மிக்க வார்த்தைகள் கறுப்பு கருணாவுக்குப் பொருந்தியதால்தான் தான் இறப்பதற்கு முன் ” ஐ ஆம் எஸ்.கருணா, மெம்பர் ஆப் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா மார்க்சிஸ்ட்” என்னும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மறைந்தார் கறுப்பு கருணா. இவர் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்ததால்தான் ‘வர முடிந்தால் வந்துவிடுங்களேன் தோழர் கருப்பு கருணா’ என்று உளப்பூர்வமான அஞ்சலி உரையை வழங்கியுள்ளார் இ.பா. சிந்தன். இதையே நூலின் தலைப்பாக்கி கறுப்பு கருணா குறித்த அஞ்சலி உரைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளார் சிராஜூதீன்.

இந்நூலில் 34 தோழர்கள் கறுப்பு கருணாவுடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இரங்கல் செய்திகளும் தொகுப்பாளர் சிராஜூதீனின் தொகுப்புரையும், சில கவிதைகளும் முத்தாய்ப்பாய் கறுப்பு கருணாவின் ‘ஒரு பெரும் கனவின் வெளிப்பாடு’ எனும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

இந்நூல் கறுப்பு கருணாவின் இறுதி வார்த்தைகளில் இழைந்த பெருமைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மாநாட்டில் அனைத்து பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“நான் சுயமாக நிற்கவும் செயல்படவும் கற்றுக் கொண்டேன். கருணா தன்னை முழுமையாக பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டதால் மொத்த குடும்ப பொறுப்புகள், முடிவுகள் என நானே எடுக்க அவர் கற்றுத் தந்தார்.” என்னும் கருணாவின் துணைவியார் செல்வியின் வார்த்தைகள் கருணாவுக்குப் புகழ் சேர்ப்பதோடு ஆண் கம்யூனிஸ்டுகள் தங்கள் வீட்டுப் பெண்களைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே உள்ளன.

திருவண்ணாமலை மலைமேடுகளில் போலித் திருட்டு சாமியார் நித்யானந்தா தனது அடிப் பொடிகளைத் தூண்டிவிட்டு குடில்கள் அமைத்து மலையை ஆக்கிரமிக்க இருந்த திட்டத்தைத் தனது தோழர்களுடன் தவிடுபொடியாக்கியிருக்கிறார் என்பதையும் சமூக ஊடகங்களில் கருணா குறித்தும் அவரின் மகள் குறித்தும் மிரட்டல் பதிவுகள் இடுவதும், கொலை மிரட்டல்கள் விடுப்பது எனவும் வழக்கம் போல ஆட்டங்கள் ஆடிய நித்யானந்தா கும்பலிடமிருந்து மலையை மீட்டு அண்ணாமலையாருக்குத் திருப்பித் தந்த கருணா ஒரு நாத்திகர் என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது.

பாப்பம்பாடி ஜமாவின் அதிரும் பறையொலியில் எப்போதும் கருணா எழுப்பும் ஒலியும் கலந்திருக்கும் என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இரங்கல் உரையில் காணமுடிகிறது.

கருணாவின் இன்னொரு முகமாக நகைச்சுவை ததும்பும் நடவடிக்கைகள் இருந்துள்ளன. சான்றாக தமுஎகச மாநிலப் பொருளாளர் ராமச்சந்திரன் நாடகச் சூழல் ஒன்றை விவரிக்கிறார்.

பிரளயன் டாக்டர்..
கிராம ஆஸ்பத்திரி சூழல்..
டாக்டர் ரூமுக்குள் நுழைவார்..

எஸ்…பேஷண்ட்..
ஒரு கையில் கட்டுடன் பேஷண்டாக கருணா…
டாக்டர்..என்னய்யா..
டாக்டர், என் கையில் அடி பட்டிடுச்சி சார்,
எங்கய்யா காமி,
கட்டுப்போடாத கைய காண்பிப்பார் பேஷண்ட்.
ஏன் அந்தக் கையில கட்டுப் போட்டு இருக்க?
அந்தக் கையிலும் அடிபடாமல் இருக்கத்தான் சார்,
பார்வையாளர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம்.

இப்படி கருணாவின் பிரசன்ஸ் ஆஃப் மைன்டும் நகைச்சுவையுணர்வும் நூலின் பல இடங்களில் காண முடிகிறது. “காவியற்ற தமிழகம், சாதியற்ற தமிழர், கீழடி நம் தாய்மடி” போன்றவை கருணாவின் மூலமாகவே உருவானவை என்பதை இந்நூலைப் படிப்பதன் மூலம் மட்டுமே உணர முடிந்தது.

கோட்டைப்பட்டி கிராமத்தின் கலை இரவுக்காக திருவண்ணாமலையிலிருந்து கிளம்பும்போது பணமில்லாத கையறு நிலையில் சமயோசிதமாய் கருணா பஸ்சில் மேளத்தை அடித்தபடியே மக்களிடமிருந்து பணம் வசூலித்த பாங்கினை இலட்சுமிகாந்தன் தனது அனுபவப் பகிர்வால் உணர்த்தும்போது கருணா கள செயல்பாட்டாளராய் ஜொலிக்கிறார் எனின் மிகையன்று.

இறப்பிற்குப் பின் தன் உடலை மருத்துவமனை ஆய்விற்குக் கொடுத்தது; உறவினர்கள் யாரும் எந்தச் சடங்குகளையும் தன் உடல்மீது செலுத்திவிடாதபடி தன் குடும்பத்தை அவ்வளவு துயரத்திலும் உறுதியுடன் இருக்க வைத்தது; அவரின் சவ ஊர்வலம் புறப்படும் முன்பு “யாரும் பூக்களைத் தூவி சாலையை மாசுபடுத்த வேண்டாம். அது கருணாவிற்குப் பிடிக்காது” என்று அந்தக் குடும்பம் அறிவித்தது, போன்றவைகள் எல்லாம் ஒரு நாளில் நடந்துவிட்ட ஒன்று அல்ல. அது தனது குடும்பத்தை ஒரு தோழர் எவ்வாறு உறுதியுடன் தயார் செய்துள்ளார் என்பதன் வெளிப்பாடுகள்தான் அவை என்று பிரளயன் கூறியிருப்பது பொருத்தமானதே.

இந்நூலில் சில ஆளுமைகள் கருணாவின் இயல்பான முரண்களைச் சுட்டிக் காட்டினாலும் “முரண்களோடு வாழ முடியும், தோழமை சேர முடியும், முன்னேறிக் காட்ட முடியும்-நோக்கம் உயர்வானதாக, சமுதாயத்துக்காக இருக்காமானால். அதற்கு நம்மோடு ‘வாழும்’ சாட்சிதான் கருணா” என்னும் அ.குமரேசனின் வார்த்தைகள் கருணாவின் யதார்த்த வாழ்வின் வெற்றியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

“முகநூல் வெளியில் தனக்கென பல்லாயிரக்கணக்கில் பின்தொடர்பவர்களை, கிட்டத்தட்ட 26000 பேர் வரை கொண்டிருந்தவர் கருணா. அவரது கூர்மையான எழுத்தும், பேச்சு பாணியிலான நகைச்சுவையும், எதையும்
இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வைகளோடு வழங்குகிற பாங்கும் அவருக்கென தனித்த வகையிலான பின் தொடர்பவைகளை அதிகரித்தன” என்னும் சிரீரசாவின் வார்த்தைகளிலிருந்து கருணாவின் முகநூல் மேன்மையை உணர முடிகிறது.

“பொது நிகழ்வுக்கு வசூல் பண்றப்போ கூச்சமே படக்கூடாது தோழா.. மக்கள் கிட்ட காசு வாங்கிதான் தோழா நிகழ்ச்சி நடத்தனும்” எனும் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு மூலம் உண்டி குலுக்கிககள் கம்யூனிஸ்டுகள் என்பதை கருணா நினைவுபடுத்தியுள்ளார்.

பவாவின் ‘ஏழுமலை ஜமா’ வை கருணா படமாக உருவாக்கினார் என்பதை விட மு. பாலாஜி கூறியுள்ளதைப் போல மக்களிடம் வசூலித்து உருவாக்கப்பட்ட படம் நாமறிந்த வகையில் இது ஒன்றுதான் என்னும்போது மெய் சிலிர்க்கிறது.

“அமைப்பைக் குடும்பமாகவும்
குடும்பத்தை அமைப்பாகவும்
கலைத்துப் போட்டு கொண்டாடிய
சமகாலச் சித்தன் அவன்”
என கவிஞர் வெண்புறா குறிப்பிட்டுள்ளதன் அர்த்தம் கருணாவைக் கொண்டாடும் அவரது துணைவி செல்வி கருணாவை பொக்கிஷம் என்பதிலிருந்தும் அவரது மகள் “எங்கப்பா எங்களுக்கு எதையும் போதிக்கவில்லை. சுயசிந்தனையோடு வாழக் கற்றுக் கொடுத்தார்” என்பதிலிருந்தும் புலனாகும்.

“இப்போது வரை ஒன்றை எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எப்படி ஒரு மனிதனால், தன் வாழ்வின் இறுதி நொடிகளில் தன் நிலை குறித்தோ, தன் குடும்பத்தார் குறித்தோ ஒரு வார்த்தையையும் உச்சரிக்காமல், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று பெருமையோடு அறிவித்துக் கொள்கிறபடி ஒரு வாழ்வை வாழ்ந்து காட்டினார். நம்மால் வாழ்ந்துவிட முடியுமா?” என் வினவும் வசந்துக்கு..

“போய் வா கருணா! உன் தொடர்ச்சியில் தமிழகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அதுபோதும். ஒரு களப்பணியாளனின் மரணத்தை மதிப்பிட..சமூகம் பெருமிதத்தால் நிறைய” என்ற பவாவின் கூற்றே பதிலாக உள்ளது.

இந்நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் புகழுரைகள் சிறப்பு மிக்கவை.

அற்புதமான தோழரின் இழப்புக்குக் காரணமான புகைக்கும் பழக்கத்தை முன்னிறுத்தி “ஓர் இலட்சியத்துக்காக நம் உடல், பொருள், ஆவியை இயக்கத்துக்கு அளித்துவிட்டவர்கள் தம் உடலைப் பேணுவது ஓர் ஸ்தாபனக் கடமை என்று நம் முன்னோடிகள் சொல்லுவார்கள். இந்த உடல் உனக்கானதில்லை. இயக்கத்துக்கானது என்பார்கள். அச்சொற்களை தோழர்கள் மதிக்க வேண்டும். உடலைப் பேண வேண்டும். கருணாவின் பாதியில் முடிந்த வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம் அது” எனும் ச. தமிழ்ச்செல்வனின் வார்த்தைகள் முக்கியமானவை.

இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டியதும் தத்தம் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து முன்னேற வேண்டியதும் முற்போக்காளர்களின் மகத்தான கடமை.