வரிவிதிப்பில் சமூக, பொருளாதார நீதி – என்.குணசேகரன்
ஆகஸ்ட் 20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்: எதையும் ஆதாரத்துடன் நம்புங்கள்… அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது – பி.ராஜமாணிக்கம்
ஆகஸ்ட்:20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்:
எதையும் ஆதாரத்துடன் நம்புங்கள்… அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது
பொ.இராஜமாணிக்கம், மேனாள் பொதுச் செயலர், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு
நமது நாட்டிலுள்ள சுமார் 40 மக்கள் அறிவியல் இயக்கங்கள் ஒன்றிணைந்துள்ள அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஐந்தாவது ஆண்டாக இத் தினத்தை அனுசரிக்கிறது. இத் தினமானது அறிவியல் மனப்பான்மை வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மஹாராஷ்ட்ரா மாநிலம், புனேயில், ஆகஸ்ட் 20ல் சனாதானவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் நரேந்தர் தபோல்கரின் நினைவு நாளன்று அனுசரிக்கப்படுகிறது.
நரேந்திர தபோல்கரின் அர்ப்பணிப்பு:
1945ல் பிறந்த நரேந்திர தபோல்கர் 12 வருடம் மருத்துவராகப் பணியாற்றியவர். அதன் பின்னர் மருத்துவப் பணியைக் கைவிட்டு சமூக நீதிக்கான சமூக செயல்பாட்டாளராக மாறினார். தலித்துகளுக்காகவும் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்காகவும் துவக்கத்தில் போராடினார்.
அதன் பின்னர் மக்களின் உயிர்ப் பறிக்கும் மூட நம்பிக்கைகளில் இருந்து காப்பாற்ற அதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டவர். இதற்கென 1989ல் மஹாராஷ்ட்ரா மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தைத் துவக்கினார். மேலும் போலிச் சாமியார்களின் சாகசங்களை எதிர்த்து மக்களிடம் அவர்களின் மோசடிகளை அம்பலமாக்கினார்.
2010 முதல் மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என குரல் கொடுத்தார். இது இந்து மததிற்கு எதிரானது என அம் மாநிலக் கட்சிகளான பாரதீய ஜனதா, சிவ சேனா அமைப்புகள் கடுமையாக அவரை எதிர்த்தனர். இந்தப் பின்னணியில் தான் ஆகஸ்ட் 20, 2013ல் இந்துத்வா சனாதான குழுக்களை சார்ந்தோர் அவரை காலை நடைப் பயிற்சி சென்ற போது சுட்டுக் கொண்டனர். இவர்கள் சனாதன சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவரைத் தொடர்ந்து கோவிந் பன்சாரே, டாக்டர் கல்புர்கி, கெளரி லங்கேஷ் என வரிசையாக பகுத்தறிவு வாதிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் கொலை செய்தனர். அதன் பின்னர் அறிவு ஜீவிகள், விஞ்ஞானிகள், பகுத்தறிவுவாதிகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்தும் மாபெரும் பிரச்சார இயக்கமாக தேசிய அறிவியல் தினத்தை அனுசரிப்பது என மக்கள் அறிவியல் இயக்கங்கள் அறிவித்தன.
அறிவியல் மனப்பான்மைக்கான இயக்கம்:
எதையும் ஆதாரத்துடன் நம்புகள் என்றும் அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது என எளிய முறையில் மக்களிடம் விளக்கிய நரேந்தர் தபோல்கரின் கொள்கையின் அடிப்படையில் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. அறிவியல் தொழில் நுட்பம் வளர்க்கும் நோக்கம் மட்டுமிலாமல் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் நோக்கில் நமது அரசியல் அமைப்புச் சட்டதில் கடமைகளின் பிரிவு 51 எ எச்ன் கீழ் அறிவியல் மனப்பான்மையையும் மனித நேயத்தையும் வளர்த்துக் கொள்வதும், விசாரித்தறிவதற்கும், புதிய மாற்றத்திற்கான மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும் என இப்பிரிவு கூறுகிறது (Refer: Article 51 A (h) in The Constitution Of India 1949: to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform)
இந்த வருடம் 75வது விடுதலை ஆண்டின் இறுதியில் இந்தியா என்ற கருத்துருவாக்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அறிவியல் அணுகுமுறையில் மக்களிடம் விளக்கும் இயக்கமாக நடத்தப்பட உள்ளது. இந்தியா என்ற கருத்துவாக்கம் எல்லோரையும் உள்ளடக்கியது என்பதும்,சகிப்புத்தன்மை கொண்டதும், அது பன்முகத்தன்மை கொண்ட மக்களின் பண்பாடுகளைப் போற்றுவதும், மதிப்பதும் ஆகும். இது அறிவியல் மனப்பான்மை கொண்ட சமூகத்தின் மூலமே சாத்தியம் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் அறிவியல் வளர்சிக்கு மதச்சார்பின்மையும், மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகமும் அவசியம் என்பதும் இவ்விரண்டையும் உறுதி செய்ய அறிவியல் மனப்பான்மை அவசியம் என அறைகூவல் விடுக்கப்படுகிறது.
தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார,அறிவியல், தொழில்நுட்ப , வளர்ச்சிப் போக்கில் காணப்படும் அறிவியலற்ற அணுகுமுறைகளை மக்களிடம் விளக்கும் இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பது மட்டுமல்லாமல் போலி அறிவியலை வளர்க்கும் போக்கும், தற்சார்பு வளர்ச்சி என்பது கைவிடப்பட்டு அயல் நாட்டினை நம்பிய ஆத்மநிர்பாரத் என்ற போலி தற்சார்பையும் அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கும் இயக்கமாக நடத்தப்படுகிறது.
குறிப்பாக புதிய தேசியக் கொள்கை, அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை ஆகியனவற்றில் காணப்படும் பிற்போக்கான பரிந்துரைகளை விளக்கும் இயக்கமாக நடத்தப்பட உள்ளது. பண்டைய புராணங்களில் கூறப்பட்டுள்ள புனைவுகளை அறிவியலாக முன்நிறுத்தும் போக்கினைக் கைவிடவும், நவீன அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்பான மரபணு ஆராய்ச்சியை மனித இன வேறுபாடாக்கி மனித இனத்திற்குள்ளேயே உயர்வு தாழ்வு இனமாக பிளவுபடுத்தும் அறிவியலற்ற போக்கினை எதிர்க்கிறது.
”அறிவியல் மனப்பான்மை என்பது இயற்கை அறிவியலில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை சமூக வளர்ச்சிப்போக்கிலும் கையாளுவது ஆகும். சமூகத்தை உற்றுநோக்குவது, அதன் பிரச்சினைகளைக் கேள்விக்குள்ளாக்குவது, அதற்கான காரணங்களைக் கண்டறிய ஆராய்வது, அதன் அடிப்படையில் பிரச்சினைக்களுக்குத் தர்க்க ரீதியாகத் தீர்வு காண்பது. இந்த தர்க்க ரீதியான முறையை கைக் கொள்ளாமால் சென்றால் நமது சிந்தனை துருப்பிடித்துப் போவது மட்டுமில்லாமல் வன்முறை சிந்தனைக்கு வழிவகுக்கும். தற்போது காணப்படும் வன்முறைகள் அறிவியல் மனப்பான்மையின் வளர்ச்சியின்மையையே காட்டுகிறது. எனவே அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதற்கான நிகழ்வுகள் பள்ளிகள் கல்லூரிகளில் இளம் வயதிலேயே தொடங்கப்பட வேண்டும். இது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை மையப்படுதியதாக இருத்தல் அவசியம் ” என்கிறார் உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானி பார்த்தா மசூம்தார்.
ஃபிப்.28 தேசிய அறிவியல் தினம் பிரபலமாகக் கொண்டாடப்படுவது போல் ஆகஸ்ட் 20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக பிரபலமாக நாம் அனைவரும் கைகோர்ப்போம்.
நூல் அறிமுகம் : சுகுணா திவாகரின் திராவிட அரசியலின் எதிர்காலம் – அன்புச்செல்வன்
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சுகுணா திவாகர் வார்த்தைகளில் சொல்வதானால், “ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்து இறுதி யுத்தத்தின் ரத்தச்சுவடுகள் தமிழகத்திலும் தாக்கம் ஏற்படுத்திய” 2009-ல் தொடங்கி 2019 வரையிலான தமிழக அரசியல் குறிப்பாக திராவிட இயக்க நகர்வுகள் குறித்த பதிவுகளே ஆகும்.
அடிப்படைகளின் மரணம் என்ற முதல் கட்டுரை எழுதப்பட்டு இப்போது 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 13 ஆண்டுகளில் முழுதாகப் பத்தாண்டுகள் திமுக அதிகாரத்தில்/ஆட்சியில் இல்லாத காலம். இந்தக் காலகட்டத்தில் திமுக தனது தவறுகளை சுயபரிசோதனை செய்து திருத்திக் கொண்டு தனது முக்கிய கருத்தியல் ரீதியிலான கொள்கை கோட்பாடுகளை சூழலுக்கேற்ப மீளுருவாக்கம் செய்து புதிய செயல்திட்டம் வகுத்துள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வியும் திராவிட அரசியலின் எதிர்காலத்திற்கான பாட்டையுமாகும். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ல் பதவியேற்ற போது, பிற சனநாயகவாதிகளைப் போலவே நானும், சுயமரியாதை, சமதர்மம், சமூகநீதி குறித்த ஒரு குறைந்தபட்ச புரிதலாலான செயல்திட்டத்துடன் தனது ஆட்சியை தொடங்கியுள்ளதாகவே கருதுகிறேன். வரப்போகும் 5 ஆண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியே திராவிட அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய காலகட்டமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இன்று வரை ஊழல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறை சென்று வந்த ஜெயலலிதாவை, “இரும்புப் பெண்மணி, பன்மொழி வித்தகர், அறிவாளி, பெண்களுக்கான முன்மாதிரி(?)” என்றெல்லாம் பார்ப்பனீய ஊடகங்களும் பார்ப்பனீயத்தை உயரிய கலாச்சார பண்பாட்டு நிலையாகக் கருதிக் கொண்டிருக்கும் தமிழக இடைநிலை ஆதிக்க சாதிகளும் ஊதிப் பெருக்கியபடியே இருக்கின்றன. எம்.ஜி.ஆரில் தொடங்கிய மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஜெயலலிதா காலத்தில் அதலபாதாளத்தில் விழுந்து இபிஎஸ்_ஓபிஎஸ் காலத்தில் மீளமுடியாத நிலைக்குச் சென்றதை மறுக்க முடியாது. மாநில நலனுக்கானதாகவும், ஒன்றிய அரசுக்கு எதிரானதாகவும் ‘ஜெ’ முன்னெடுத்த சில ‘நற்காரியங்கள்’ தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் தன்முனைப்பே என்பதை புரியச் செய்கிறது ‘தந்தை’ பெரியாரும் ‘அம்மா’ ஜெயலலிதாவும் என்ற கட்டுரை.
இரண்டு கழகங்கள் என்ற கட்டுரை திமுக, அதிமுக செயல்பாடுகளை நுட்பமாக ஒப்பிடுகிறது. ‘குடும்ப/வாரிசு அரசியல்’ – தமிழகத்தில் கருணாநிதி தொடங்கி வைத்த பெருங்கேடு- இப்போது கட்சி பாகுபாடின்றி பல கட்சிகளில் தொடர்வது கழகங்கள் ஏற்படுத்திய அவல விளைவுகளில் ஒன்று. எவ்வித அரசியல் பார்வையுமற்ற குடும்ப வாரிசுகள் (உதயநிதி, துரை வைகோ போன்றோர் – ஏன் குடும்ப அரசியலை விமர்சனம் செய்து வரும் நாதக சீமான் கூட வேட்பாளர்களில் தனது குடும்ப உறவினர்களை நிறுத்தியது உள்ளிட்ட பல காட்டுகள் உண்டு) தேர்தல் அரசியல் களத்தில் முன்னிருத்தப்படுகின்றனர்.
அரசியல் பிடிவாதங்கள் அபாயமானவை என்ற கட்டுரை, ரவிக்குமாரின் பார்ப்பனல்லாதோரின் அரசியலை எதிர்க்க வேண்டும் என்ற எதார்த்தத்தை கணக்கில் கொள்ளாத வறட்டு பிடிவாதத்தையும், கி.வீரமணியின் ஆரிய திராவிடப் போராட்டம் என்ற பெயரில் சசிகலாவை ஆதரித்த ‘வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக்கொள்ளாத’ வறட்டு வாதத்தையும் உடைத்துப் போடுகிறது. பெரியாரை மதத்தலைவராக்கும் வேலையை திகவினரே மேற்கொள்ளத் தொடங்கி நாட்கள் பலவாகிவிட்டன. வரலாற்றுப் பார்வையின் அவசியத்தை சுட்டிச் செல்கிறது இக்கட்டுரை.
அணிகளாய் சிதறிய அதிமுக என்ற கட்டுரை, கொள்கையாலன்றி தனிமனித முரண்பாட்டால் உருவான அதிமுக, தனிநபர் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு இப்போது சுயநலத்தால் அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அவலத்தை எடுத்துரைக்கிறது. ஆனாலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இப்போதும் நீடிப்பதும் நிலைத்திருப்பதும் எம்ஜிஆர் என்ற தனிநபர் முன்னெடுத்த பாமர அரசியலின் எச்சமாகக் கூட இருக்கலாம்.
எம்ஜிஆர் நூற்றாண்டு தொடர்பான கட்டுரை அவரின் ஆளுமையை விமர்சன நோக்கில் அணுகுகிறது. தமிழக அரசியலிலும் வெகுசன சினிமாவிலும் எம்ஜிஆர் என்ற விந்தை நிகழ்வை அவ்வளவு எளிதாகத் தவிர்த்துவிட முடியாது.
“திராவிட” கலைஞர் ஏன் இந்தியாவுக்குத் தேவை என்ற கட்டுரை அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளில் முக்கியமான ஒன்று.
திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்று இன்னும் உருவாகவில்லை அல்லது அதற்கான வரலாற்றுத் தேவை இன்னும் எழவில்லை என்ற நிதர்சனத்தை நடப்பு அரசியல் நிகழ்வுகள் மூலம் கூறிச் செல்கிறது ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று தேவையில்லையா’ என்ற கட்டுரை.
இத்தொகுப்பின் கடைசி இரு கட்டுரைகள் – “திராவிட அரசியலின் எதிர்காலம்” மற்றும் “மீண்டெழும் திராவிட அரசியல்” ஆகியன திராவிட அரசியல் போக்கு குறித்த நுட்பமான பார்வைகளையும் முக்கியமான கேள்விகளையும் முன்வைக்கின்றன. பெரியார் சொன்ன இன அடிப்படையிலான “திராவிடர்” இயக்கத்துக்கும் அண்ணா, கலைஞர் முன்னெடுத்த நில எல்லை அடிப்படையிலான “திராவிட” முன்னேற்ற கழகத்துக்கும் இடையிலான நுட்பமான வேறுபாடு, திராவிட இயக்கங்கள்/ஆட்சிகள் மூலம் தமிழகத்திற்கும் இந்திய ஒன்றியத்துக்கும் ஏற்பட்ட அனுகூலங்கள், பாரிய மாற்றங்கள் பற்றிப் பேசும்போதே “தனி நபர் வழிபாடு”, “குடும்ப/வாரிசு அரசியல்”, “ஊழல்”, “ஆணாதிக்க மய்ய அரசியல்” போன்ற அவலங்களையும் சேர்த்தே நூலாசிரியர் பேசுகிறார். இந்துத்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்டு அடையாளங்களை அழித்து ஒற்றைத்துவ ‘ஒரே தேசம் ஒரே வரி ஒரே மதம் ஒரே கல்விமுறை, ஒரே கலாச்சாரம்/பண்பாடு” என்ற வகைமாதிரியை பாஜக – சங் பரிவார அடிப்படைவாத சக்திகள் கட்டி எழுப்பி வரும் தற்கால சூழலில் , இந்திய ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ‘பன்மைத்துவத்தை’ முன்வைக்கும் ‘திராவிட அரசியலின்’ பங்கு முக்கியமாகிறது என்பதை பிரதி தெளிவுற எடுத்துரைக்கிறது. பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஆதிக்க சாதிகளின் அதிகார மய்ய அரசியலாக “திராவிட அரசியலின்” போக்கு மாறிவிட்டதையும் சுயபரிசோதனை செய்ய வேண்டியது வரலாற்றின் தேவை என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இந்நூல் வெளிவந்த பின்பு, 2021-ல் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஓராண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையில், தற்போதைய சூழலில் திராவிட அரசியலின் போக்கும் நோக்கும் குறித்த கட்டுரையை சுகுணா திவாகர் எழுதவேண்டும் என்ற விருப்பம் இந்நூலை வாசித்து முடித்ததும் தோன்றுகிறது.
“செய்வீர்களா…சுகுணா…நீங்கள் செய்வீர்களா…?”
– அன்புச்செல்வன்
நூல் : திராவிட அரசியலின் எதிர்காலம்
ஆசிரியர் : சுகுணா திவாகர்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ₹90
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
642 002.
தொடர்பு எண் : 99425 11302
சூரியதாஸ் கவிதைகள்
நிறங்களின் உரையாடல்
*****************************
நீலம், கருப்பு, சிவப்பு மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து
சமூக நீதி காத்தல் பற்றி
மும்முரமாய்ச் சிந்தித்துக் கொண்டிருந்தன.
அப்போது முந்திரிக்கொட்டையெனக் காவியும்
இடையில் வந்து மூக்கை நுழைத்தது.
வண்ணங்களிடையே உரையாடல்
முறையாய்த் தொடர்ந்தது.
மாட்டுச் சாணி பூசி
மூத்திரம் குடிக்கப்
பரிந்துரைக்கிறார்களே என்றது நீலம்
கிருமிகள் சாகும் என்றது காவி
சாதி,மத வெறுப்பை உமிழ்கிறார்களே என்றது
கலையுடன் கருப்பு
நல்லது.
மகா மந்திரியாகலாம் என்றது காவி.
பெட்ரோல் டீசல் விலை
எகிறிவிட்டதே.
கால்நடையாய் மாறச் சொல்வது தான்
திட்டமோ
என்றது சிவப்பு.
நடப்பது நல்லது.
சக்கரை வியாதி அண்டாது
என்றது காவி
மக்கள் நாய்க்கறி சாப்பிடுகிறார்களே
நல்லதா என்றது நீலம்.
பிற கறிகளின்
விலை குறையும்
விறைப்பாய்ச்
சொன்து காவி
மெத்தப் படித்தவர்ககளும்
அகோரிச் சாமியார்களின்
அந்தரங்கங்க உறுப்பை
முத்தமிடுகிறார்களே கேவலம் என்றது கருப்பு
இதிலென்ன கேவலம்
அதிகார பீடத்தில் அமரலாம் என்று
இறுமாப்பாய்ச் சொன்னது காவி
சிலர் உண்டு கொழுக்கப்
பலர் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்களே
என்றது சிவப்பு.
நல்லது
வியர்வைச் சுரப்பிகள் நன்கு சுரந்து
உடல் கட்டுக் கோப்பாயிருக்கும்
என்றது காவி.
உண்ண உணவில்லையா
நல்லது
தொப்பை வளராது என்றது காவி.
சொந்த மக்களே சொந்த நாட்டின்
அகதியாகிறார்களே என்றது நீலம்.
நல்லது
யாதும் ஊரே
யாவரும் கேளீர் என உலகம் எங்கும் சென்று வாழலாம்
என்று நையாண்டி செய்தது காவி
மக்கள் நோயில் இறக்கிறார்களே என்றது கவலையில்
கருப்பு
இறப்பது நல்லது
செத்தவரை எந்த நோயும் தாக்காது என்றது காவி
தலை தவிர்த்து உடலாயிருந்து
ஊதியமின்றி உழைத்து உழைத்து நோகிறார்களே
என்றது சிவப்பு
நல்லது
தலையாயிருந்து
பிறரை அடிமை செய்யச் சிந்திக்க வேண்டியிராது
என்று சிரித்துக்கொண்டே சொன்னது காவி
இப்போது
கருப்பு சிவப்பு, நீலம் மூன்றும் சற்றே
கடுப்புடன்
மூத்திரம் குடிக்கலாம் மூளை வளரும் என்றன
அப்படி வாருங்கள் வழிக்கு என்று அட்டகாசமாய்ச் சிரித்தது காவி
என்ன மூத்திரம் என்றது?
எங்கள் மூத்திரம் என்ற கருப்பும் சிவப்பும் நீலமும்
அடக்கமாய் மூளையும் வளரும் சமூகநீதியும் மலரும் என்றன.
ஓரிடத்தில்
அம்பேத்கர், பெரியார், மார்க்ஸின்
மூத்திரம் ஒரு குவளையில் சேகரமாகிக் கொண்டிருந்தது.
இப்போது
கால்கள் நடுநடுங்க அஞ்சிக் காவி அமர்ந்திருந்ததின்
காரணம் புரியவில்லை.
மூடிக்கிடக்கும் மூன்றாம் கண்
************************************
மாணவர்களுக்கு
நுழைவுத் தேர்வு என்னும் கொலைச் சாலை
பசுக்களைப் பாதுகாக்கக்
கோசாலைகள்
எந்நாவில் வாழும்
தமிழைச் சாகடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்
ஐ.நாவில் அரைகுறைத் தமிழ் பேசுகிறார்கள்.
நிதிநிலை அறிக்கையின் முதல் பக்கத்திலிருக்கும்
திருக்குறளுக்குக் கடைசிப் பக்கத்தில் கூட
நிதி ஒதுக்கப்படுவதில்லை..
விதி முறைகளுக்குட் பட்டே
நம் விழிகளைக் குத்துவதாய் விளக்கம் சொல்கிறார்கள்.
தமிழை அழிக்க விஸ்வாமித்திரத்தவம் செய்கின்றார்கள்
இடையில் மோகினியாட்டம் கண்டு
சிறிது மூத்திரம் குடிக்கின்றார்கள்.
இரு புருவ நடுவிலே
நெற்றியின் மத்தியிலே
நேராக நிமிர்ந்து நிற்கும்
தீமைகளைச் சுட்டெரிக்கும்
நெற்றிக்கண்
என்ன ஆனது
நடப்பவற்றைக் கண்டு புருவம் சுருக்கியதில்
நெற்றிக்கண் நெருக்கப்பட்டு
சுருங்கிப் போனதா?
ஒன்றிய அரசின் அநீதிச் சாம்பல் விழுந்து
எரிச்சல் தாழாமல் இமைகள் மூடிக் கொண்டனவா?
சுற்றி நடப்பவற்றால்
நெற்றி வியர்த்து நீர்பட்டு நெற்றிக்கண்
நீர்த்துப் போனதா?
மக்கள் தம் நெற்றிக்கண் திறந்து நீதி வழங்கும் காலம் நெருங்கிவிட்டது.
விதிமுறைக்குட்பட்டே இங்கு எல்லாமும் விரட்டியடிக்கப்படும்.
என்றாலும் ஓர் எச்சரிக்கை.……
மக்கள்
பொங்கியெழுந்தால் அவர்களுக்கு ஏது விதிமுறை
மக்களே சட்டம்
மக்கள் செயலே நீதியாகும்.
அவர்களுக்கே ஒட்டுப் போடுகிறார்கள்
********************************************
ஊட்டச் சத்துக் முறைவால்
உதிர்ந்தாலும்
உயிர் காக்கும் பிராண வாயுவின்றிக் குழந்கைள் இறந்தாலும்
அவர்தம் பெற்றோர் அவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள்
மின்னணு வாக்கு எந்திரம் (EVM) இருக்கும் வரை…
நாய்க்கறி தின்று நடையாய் நடந்து
ஊர் சென்றாலும்
நலிந்தவர்கள் அவர்களுககே
ஓட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…
குவியல் குவியலாய்
கோவிட்டில் புதைத்தாலும் கங்கையில் பிணங்கள் மிதந்தாலும்
அவர்களுக்கே ஒட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…
கோவிலுக்குள் வைத்துக் கூட்டுப் பலாத்காரம் செய்தாலும்
எவர் கண்ணிலும் காட்டாமல்
சிதை வைத்து எரித்தாலும் அவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…
மாட்டுக்கறி தின்னக் கூடாதன்று
மகனோ, கணவனோ, தந்தையோ யார் அடித்துக் கொல்லப்பட்டாலும்
இலலாமியப் பெண்களுக்குக் கவலையில்லை
அவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…
கார் ஏற்றிக் கொன்றாலும்
போராட்டக் களத்தில் எத்தனை பேர்
செத்து விழுந்தாலும்
விவசாயிகள்
அவர்களுக்கே ஒட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…
காங்கிரஸ் முக்த் பாரத்தும்
கம்யூனிஸ்ட் முக்த் பாரத்தும் சாத்தியமே
EVM இருக்கும் வரை…
உயிர்க்க உயிர்க்க இந்திய இயேசுவை
சிலுவையில் அவர்கள் அறைவார்கள்
EVM இருக்கும் வரை…
வாக்குச் சீட்டுமுறை வராதவரை அவர்களே வெல்வார்கள்
தினம் தினம் மக்களை அவர்களே கொல்வார்கள்
அவர்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டுச் செத்துப் போகலாம் அல்லது
உங்கள் ஓட்டுப் போடப்பட்டுச் சாகடிக்கப்படுவீர்கள் EVM இருக்கும் வரை…
இதை அறிந்தால் வெல்லலாம்
அடுத்த தேர்தலில் நின்னு
இதை அறியாதவர் வாயில்
அடுத்த தேர்தலிலும் மண்ணு..
– சூரியதாஸ்
பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன – சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி
2021 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 114ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.
இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.
பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.
தில்லி வெடிகுண்டு வழக்கு
இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
“இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.”
இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:
“சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.”
புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மன அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.”
பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர், இவர்களைப் பார்த்து, “இந்த முழக்கத்தின் பொருள் என்ன?” என்று கேட்டார். “புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:
“ ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்போதைய சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான்.
உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமான முறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச் செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது. ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.”
“இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.”
“‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.”
“இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.
எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.”
சமூக அமைப்புக்கு எதிராகவே, எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல
தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …” “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.”
“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.
வகுப்புவாதத்திற்கு (எதிராக) மதச்சார்பின்மை
1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.
விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.
“இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.”
இதற்கு மாற்றுமருந்து என்ன?
‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.
1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.
“தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.”
“மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”
எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:
“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர். கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”
ஊடகங்கள்
மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:
“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”
“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில் வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.
“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”
இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.
சமூக நீதி
பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:
““… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டாமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது. அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”
பகத்சிங், ‘நான் ஏன் நாத்திகன்’ கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!
இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.
பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை – ஜோசப் பிரபாகர்
தனி மரம் தோப்பாகாது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தக் கதை தனி மரம் தோப்பானது மட்டுமல்ல ஒரு பெரும் காடான கதை. அந்த தனிமரத்தின் பெயர் என்ன? அவர் பெயர் எஸ்.வி.எம் சத்யநாராயணா. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர்.
இந்த மனிதர் சத்தமில்லாமல் ஒரு கல்விப் புரட்சியை செய்து இருக்கிறார். ஆம். மிகக்கடினம் என்று சொல்லப்படுகிற முதுகலை, இளங்கலை இயற்பியல் சார்ந்த பாடங்களை முதுகலை, இளங்கலை இயற்பியல் முடித்த ஏழை மாணவர்களுக்கு, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இருபத்து ஐந்து வருடங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறார். இந்த வகுப்பு சண்டே கிளாஸ் (Sunday class) என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது. அதாவது ஞாயிறு இயற்பியல் வகுப்பு. 1996-ஆம் வருடம் சத்ய நாராயணா அவர்கள் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் முனைவர் (பி.எச்.டி) மாணவராக இருந்த போது சென்னை பல்கலைக்கழகத்தின் நியுக்ளியர் பிசிக்ஸ் துறையில் உள்ள ஒரு கருத்தரங்க அறையில் (seminar hall) இந்த வகுப்பை ஆரம்பித்தார். இன்றும் அதே செமினார் ஹாலில் இவ்வகுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. 1996 ஆம் வருடம் சத்ய நாராயணாவுக்கு வயது 25. இன்று அவருக்கு வயது ஐம்பது. இதை வகுப்பு என்று சொல்வதை விட ஒரு அறிவியல் இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும். சண்டே கிளாசைப்பற்றி கடந்த காலங்களில் ஆங்கில இந்து பத்திரிக்கை, புதிய தலைமுறை கல்வி, அவுட்லுக் போன்ற பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வந்திருக்கிறது.
பேராசிரியர். சத்ய நாராயாணா ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தின் உப்பளப்பாடு என்ற கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை அந்த ஊரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டராக வேலை பார்த்தவர். சத்ய நாராயாணா தனது இளங்கலை இயற்பியலை அருகில் உள்ள கல்லூரியில் படித்து விட்டு முதுகலை இயற்பியல் மைசூரில் உள்ள ஒருங்கிணைந்த அறிவியல் – கல்வியியல்(Regional institute of Education) கல்லூரியில் படித்து முடித்தார். முனைவர் பட்ட படிப்பிற்கு அவர் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ஏன் இப்படியொரு வகுப்பு ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றியது?
இந்தியாவை பொறுத்த வரை IIT(Indian Institute of Technology), IMSc(Institute of Mathematical Sciences ), IISc(Indian Institute of Science), TIFR(Tata Institute of Fundamental research), IISER (Indian Institute of Science education and Research) போன்ற அறிவியல் உயர்கல்வி நிறுவனங்களில் மாதம் ரூ.32,000/ உதவித்தொகையோடு முனைவர் பட்ட ஆராய்ச்சி படிக்க வேண்டும் என்றால் முதுகலை இயற்பியல் படித்த முடித்த பிறகு நெட்(NET) தேர்வோ அல்லது கேட்(GATE) தேர்வோ தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் தமிழக மாணவர்கள் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது. ஒவ்வொரு வருடமும் ஒட்டு மொத்த தமிழகத்திலிருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். இதற்கு காரணம் பெரும்பாலான கல்லூரிகளில் பி.எஸ்.சி அல்லது எம்.எஸ்.சி இயற்பியல் பட்டப்படிப்பில் வெறுமனே கோட்பாடுகளை மட்டுமே சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் நெட்,கேட் தேர்வுகள் முழுக்க முழுக்க கோட்பாடுகளை பயன்படுத்தி கணக்குகளை தீர்க்கும் முறையில் வினாக்கள் கேட்கப்படும். மனப்பாட முறையில் படித்த மாணவர்களுக்கு இம்மாதிரியான கணக்குகளை தீர்ப்பது, இம்மாதிரியான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது.
இந்தச்சூழலில் 1993 ஆம் வருடம் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் சத்ய நாராயாணா அவர்கள் பி.எச்.டி மாணவராக சேர்ந்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வருடா வருடம் கோடை காலத்தில் கிராமத்து சூழலில் எம்.எஸ்.சி இயற்பியல் முதல் வருடம் படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல் முகாம் ஒன்று நடத்துவார்கள். இதன் பெயர் STIP (summer training program in Physics). இதன் நோக்கம் வசதி வாய்ப்பற்ற சூழலில் படித்த மாணவர்களுக்கு இயற்பியலில் இருக்கும் பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகளையும், விஞ்ஞானிகளையும் அறிமுகப்படுத்துவார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் நடக்கும். இதில் அப்போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்த சத்ய நாராயாணா அவர்களும் பாடம் நடத்துவார். இவரின் பாடம் நடத்தும் திறன், இயற்பியல் கணக்குகளைத் தீர்க்கும் திறனைக் கண்டு 1996 ஆம் வருடம் STIP பயிற்சிக்கு வந்த மாணவர்கள், சத்ய நாராயணாவை சென்னையில் தொடர்ந்து இயற்பியல் வகுப்பு எடுக்க கேட்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இவ்வகுப்பு அண்ணா பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வந்திருக்கிறது. ஒரு சில மாதங்களுக்குப்பிறகு சில காரணங்களால் இவ்வகுப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொடர முடியா சூழ்நிலை வந்த போது அந்நேரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் நியூக்ளியர் பிசிக்ஸ் துறையின் தலைவர் பி.ஆர்.எஸ். சுப்பிரமணியம் அத்துறையின் இருக்கும் செமினார் ஹாலில் சண்டே கிளாசை எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார். இப்படித்தான் இந்த சண்டே கிளாஸ் பயணம் ஆரம்பமானது. அந்த STIP இல் கலந்து கொண்டு சத்ய நாராயணாவை சென்னைக்கு அழைத்த அன்றைய STIP மாணவர்களில் ஒருவரான சுதாகர் இன்று IIT மெட்ராசில் இயற்பியல் துறை பேராசிரியர்.
1996 க்கு பிறகு நியுக்ளியர் பிசிக்ஸ் துறைக்கு பல்வேறு துறைத்தலைவர்கள் மாறிவிட்டார்கள். ஆனால் யார் துறைத் தலைவராக வந்தாலும் சண்டே கிளாசுக்கு செமினார் ஹாலை மனமுவந்து அளித்தார்கள். இந்த வகையில் 25 வருடம் இந்த வகுப்பு தொடர்ச்சியாக நடைபெற இந்தத்துறையின் பெருந்தன்மையும் மிக முக்கிய காரணம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை இந்த வகுப்பு நடக்கும். காலையில் ஒரு சிறிய தேநீர் இடைவேளை. மதியம் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை. மூன்று மணி போல் இன்னொரு தேநீர் இடைவேளை. இந்த சண்டே கிளாசில் எல்லாதரப்பட்ட மாணவர்களும் வந்து படித்தார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகள் குறிப்பாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள். பெரும்பாலும் அவர்கள் ஏழை மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள். தன்னந்தனி ஆளாக பாடம் நடத்தி வந்தார். மாரத்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது இயற்பியல் மாரத்தான். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்துவது எவ்வளவு கடினமானது. அதுவும் கடினமான அடிப்படை இயற்பியல் கோட்பாடுகளை, அதைச் சார்ந்த கணக்கீடுகளை நடத்துவார். கிட்டத்தட்ட பல வருடங்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்
1996 முதல் இன்று வரை எண்ணற்ற மாணவர்கள் இந்த வகுப்பில் இயற்பியல் கற்று இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்களில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களிலும், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் பேராசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சண்டே கிளாசின் முதல் பேட்ச் 1996 இலிருந்து 2001 வரை சொல்லலாம். 1996 லிருந்து 1997 வரை படித்த சுதாகர் சந்திரன் இன்று ஐ.ஐ.டி சென்னையில் இயற்பியல் பேராசிரியர். 1998 லிருந்து 2000 வரை பயின்ற தங்க துரை இன்று பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ராமச்சந்திரன் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் மூத்த விஞ்ஞானி. மேலே குறிப்பிட்ட அனைவருமே நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். 1999 லிருந்து 2000 வரை படித்த பொன்முருகன் இன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர். அவர் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை இயற்பியல் படித்தவர். அக்கல்லூரியிலிருந்து நெட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவர். ரஞ்சித் ராமதுரை இன்று ஐ.ஐ.டி ஹைதாராபாத்தில் பேராசிரியர். சித்ரா மற்றும் பிரபு இருவரும் இன்று சென்னையில் அறிவியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கே நாம் இன்னொரு எதார்த்தத்தை உணர வேண்டும். இன்று தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் எம்.எஸ்சி இயற்பியல் படித்து முடித்து வெளிவரும் மாணவர் இந்த தேர்வை எழுதி வெற்றி கொள்வது என்பது மிகக்கடினம். இந்த தேர்வை வெற்றி கொள்ள வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 60 அல்லது 70 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்து டெல்லியோ அல்லது ஹைதராபாத்தோ சென்று கோச்சிங் எடுக்க வேண்டும். ஏழை மாணவர்களால் இவ்வளவு செலவு செய்து கோச்சிங் சென்டருக்கு செல்ல முடியாது. இந்த தேர்வை வெற்றி கொள்ள இயற்பியல் கோட்பாடுகளை பயன்படுத்தி கணக்குகளை தீர்க்கும் திறன் (problem solving skills) நன்றாக இருக்க வேண்டும். சண்டே கிளாஸ் மிக அற்புதமாக இந்தத் திறனை வளர்க்கிறது.
2002 லிருந்து 2007 வரை அடுத்த தலைமுறை மாணவர்கள் சண்டே கிளாஸில் பங்கு பெற்றார்கள். விஜயகுமார் இன்று டி.ஆர்.டி.ஓ வில் விஞ்ஞானி. இந்த விஜய குமார் தனது திருமணத்தில் பேராசிரியர் சத்ய நாராயாணா அவர்களின் கையால் தாலி எடுத்துக்கொடுக்கச் சொல்லி திருமணம் செய்தார். ஞாயிறு மட்டுமே இயற்பியல் சொல்லிக்கொடுக்கும் ஒரு ஆசிரியர் எந்த அளவிற்கு ஒவ்வொரு மாணவனின் மனதிலும் இடம்பிடித்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாராணம். . விஜயகுமார் மட்டுமல்ல இன்னும் சில பேரும் இதே போல் பேராசிரியர்.சத்ய நாராயாணா அவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க தங்களது திருமணத்தை செய்தார்கள். இன்னும் சிலபேர் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை பேராசிரியர். சத்ய நாராயாணா அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். பேராசிரியர்.சத்ய நாராயாணா அவர்கள் வகுப்பறையைத்தாண்டி ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் அவர்கள் சுக துக்கங்களிலும் பங்கெடுக்கும் குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார்
அன்ன லஷ்மி இன்று கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானி. தேவ சங்கர் இன்று பொன்னேரி கல்லூரியில் இயற்பியல் உதவி பேராசிரியர். கமல பாரதி என்பவர் RRCAT (Raja Ramanna Centre for advanced technology) இந்தூரில் மூத்த ஆராய்ச்சியாளர். ப்ரீத்தி மெகர் IISc இல் முனைவர் பட்டம் முடித்துவிட்டு திருவாரூர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருக்கிறார். எஸ்.அய்யப்பன் கல்பாக்கம் இந்திரா காந்தி அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் முனைவர் பட்டம் முடித்து விட்டு இன்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர். சங்கர் சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் உதவிப்பேராசிரியர். நெய்னா முகமது உடுமலைப் பேட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர். பஷீருதீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர். நாராயணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானி. முரளி தொடர்ச்சியாக இரண்டு முறை நெட் தேர்வை பாஸ் செய்தவர். இன்று ஆந்திரா மாநிலம் கர்நூலில் உள்ள மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர். ஒரு வேளை சண்டே கிளாஸ் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இது எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது. இம்மாதிரியான உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களுக்குள் மாணவர்கள் செல்ல சண்டே கிளாஸ் பாதை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
மற்ற வகுப்புக்கும் இந்த சண்டே கிளாசுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இந்த வகுப்பில் சிலபஸ் முடிக்க வேண்டும், தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற நடைமுறை இல்லை. இயற்பியலை ஒருவன் நேசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வகுப்புகள் நடக்கின்றன. பேராசிரியர். சத்யாவின் இயற்பியல் வகுப்பை ஒரு தடவை கவனித்தால் போதும். இயற்பியலை வெறுப்பவர்கள் கூட இயற்பியலை காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவுக்கு கவர்ந்திழுக்கும். உங்களை வசியம் செய்து விடும். அவர் கரும்பலகையில் எழுதும் அழகை பார்த்துகொண்டே இருக்கலாம். எழுத்தோவியம் அது.
சண்டே கிளாஸின் மிக அடிப்படையான சிறப்பு என்ன? சண்டே கிளாஸ் உள்ளே நுழையும் ஒவ்வொரு மாணவரையும் அவரவர் நிலையிலேயே அப்படியே ஏற்றுக்கொள்கிறது. சண்டே கிளாஸ் எந்த மாணவரையும் தகுதியின் அடிப்படையிலோ, திறமையின் அடிப்படையிலோ நடத்துவதில்லை. சமூக நீதி என்பது இதுதான். இயற்பியல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம். ஒரு சில மாணவர்கள் ஓரளவு இயற்பியல் தெரிந்து கொண்டு இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வருவார்கள். பெரும்பாலோனார் மிக அடிப்படை நிலையிலேயே இருப்பார்கள். அவர்கள் கிட்டத்தட்ட அரிச்சுவடியிலிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இப்படி ஆரம்ப நிலையில் இருக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்டால் பயந்து மறுபடியும் வகுப்புக்கு வரமாட்டார்கள். அதனால் அவர்கள் போக்கிலேயே கற்றுக்கொள்ள அனுமதிப்பதில் பேரா.
சத்யா தெளிவாக இருப்பார். எக்காரணம் கொண்டும் அப்படி வரும் மாணவர்களை தனக்கு ஒன்றும் தெரிய வில்லையே என்ற உணர்வுக்கு தள்ள மாட்டார். இப்படிப்பட்ட மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு ஆறு மாதத்தில் அனைவரின் முன்னிலையில் கூச்சமில்லாமல் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். கல்வி முறையின் முக்கிய நோக்கமே கேள்வி கேட்கும் உணர்வை தூண்டுவதுதான். இன்று எத்தனை கல்வி நிலையங்களில் கேள்வி கேட்பதை தூண்டுகிறார்கள்?. ஆனால் சண்டே கிளாஸ் இதை நூறு சதவிகிதம் முழுமையாக செய்கிறது.
உண்மையில் இன்று இந்தியா முழுவதும் பெரிய பெரிய உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் தகுதி திறமை என்ற பெயரில் அடித்தட்டு மாணவர்களை ஒதுக்குகிறார்கள். ஒரு கல்விக் கூடத்தின் நோக்கமே மாணவர்களை தகுதியும் திறமையும் வளர்த்து விடுவதுதான். ஆனால் இந்நிறுவனங்களுக்குள் நுழையவே தகுதியும், திறமையும் வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அநீதி. ஆனால் சண்டே கிளாஸ் இப்படி தகுதி திறமை இல்லாதவர்கள் என்று சொல்லப்பட்ட மாணவர்கள் அனைவரையும் தன் நேசக்கரத்தால் வாரியணைத்து அவர்களை இயற்பியலில் சிறந்த ஆராய்ச்சியாளராகவோ அல்லது பேராசிரியர்களாகவோ மாற்றுகிறது. தகுதி திறமை இல்லை என்று சொல்லப்படும் மாணவர்களை உள்ளே விட்டால் கல்வி நிறுவனத்தின் தரம் போய்விடும் என்ற கருத்து தவறு என்று சண்டே கிளாஸ் நிரூபித்திருக்கிறது.
சண்டே கிளாஸ் என்பது வெறுமனே ஒரு கோச்சிங் வகுப்பல்ல. இயற்பியல் கோட்பாடு, அதை நடைமுறையில் பயன்படுத்தும் வழிகள் மற்றும் இயற்பியல் கணக்குகளை தீர்க்கும் முறைகள் (problem solving techniques) என அனைத்தையும் விரிவாக சொல்லிக்கொடுக்கும் வகுப்பு. கோச்சிங் வகுப்பில் படித்து நெட் தேர்வு வெற்றி பெற்ற மாணவருக்கும், சண்டே கிளாசில் படித்து நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவருக்கும் நிறைய வித்தியாசத்தை நீங்கள் காணலாம். உலகப்புகழ்பெற்ற கல்வியாளர் பாவ்லோ ஃபிரேயரே இன்றைக்கு இருக்கும் கல்வி முறை வங்கிக்கல்வி முறை என்று கூறுகிறார். காரணம் இக்கல்வி முறை மாணவனை ஒரு காலி பாத்திரமாகவும் அதில் ஆசிரியர் கல்வி சார்ந்த அறிவை கொட்டுகிற முறையாக இருக்கிறது. பெரும்பாலும் மனப்பாட கல்வி முறையாக இருக்கிறது. மாணவர்களின் உள்ளார்ந்த தன்மைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதற்கு மாற்றாக “பகுப்பாய்வு உணர்வை வளர்க்கக்கூடிய கல்வி முறையை” முன்மொழிந்தார். சண்டே கிளாஸ் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
சமீபத்தில் சண்டே வகுப்பில் படித்து இன்று ஆராய்ச்சி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் பணியாற்றும் முன்னாள் மாணவர்களிடம் கூகுள் பார்ம் மூலமாக தகவல் திரட்டப்பட்டது. 122 சண்டே வகுப்பு முன்னாள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். அந்த தகவல் திரட்டலில் மூலம் நாம் அறிந்து கொண்டது இந்த 122 மாணவர்களில் 61% மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். அது மட்டுமில்லாமல் இம்மாணவர்களில் 47.5 % பேர் கிராமத்தை சேர்ந்தவர்கள். 21.3% புற நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் 31.1% பேர் நகர்புற பகுதியை சேர்ந்தவர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக நடக்கும் ஒரு இயற்பியல் வகுப்பினால் எவ்வளவு பெரிய சமூக மாற்றம்.
உண்மையில் ஒரு வகுப்பறை எப்படி இருக்க வேண்டும், ஒரு கல்வி அமைப்பு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு சண்டே கிளாஸ் ஒரு முன்னுதாரணம். சண்டே வகுப்பில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். இன்று இவர்கள் இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையோடும், சுய மரியாதையோடும் பணியாற்றுகிறார்கள் என்பதை பார்க்கும் போது இதை விட சமூக நீதி செயல்பாடு வேறென்ன இருக்க முடியும்!!!
இந்திய சமூகத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம் என எந்த களத்தை எடுத்துக்கொண்டாலும் எந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவ படுத்துகிறோம் என்பது மிக முக்கியமானது. அதே போல் அறிவியல் துறையிலும் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவ படுத்துவது (inclusiveness and representation) மிக மிக முக்கியமானது. உண்மையில் மற்ற துறைகளில் நடந்த மாற்றம் அறிவியல் துறையில் மிகப் பெரிய அளவில் நடக்க வில்லை. ஆனால் சண்டே கிளாஸ் அதை மிக திறம்பட செய்தது. இதைத்தான் மேலே பார்த்த புள்ளி விவரம் கூறுகிறது.
2003 ஆம் வருடம் பேரா. சத்யநாராயணா அவர்கள் பி.டி.எப் ஆராய்ச்சிக்காக (பி.டி.எப் -இயற்பியலில் முனைவர் பட்டம் முடித்து அதற்கு அடுத்த கட்ட ஆராய்ச்சி படிப்பு.) ஜெர்மனி சென்ற போது கூட அவரது மாணவர்கள் அன்னலஷ்மி, பொன்முருகன் மற்றும் கல்பாக்கம் விஞ்ஞானி பாலாஜி மூவரும் சண்டே கிளாசை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால் அவர் ஜெர்மனியில் இருந்த நேரத்தில் ஒவ்வொரு ஞாயிறும் 5 மணிக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து போன் செய்து அன்னலஷ்மி மற்றும் பொன்முருகன் இருவரிடமும் அன்றைய சண்டே கிளாஸ் எப்படி நடந்தது என்று விசாரிப்பாராம். அந்த அளவுக்கு இந்த வகுப்பு தடைபடாமல் நடந்து வந்துள்ளது.
சில ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கைந்து மாணவர்கள்தான் வகுப்புக்கு வருவார்கள். அப்படியிருந்தாலும் கூட இந்த நாலைந்து பேருக்காக கல்பாக்கத்திலிருந்து சென்னைக்கு வந்து சண்டே கிளாஸ் எடுத்து விட்டு செல்வார் பேராசிரியர். சத்யா. சில வருடங்களில் ஜனவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரும். அன்றைக்கும் சண்டே கிளாஸ் நடக்கும். பேராசிரியர்.சத்யா நாராயாணா வருவார். மாணவர்களும் வருவார்கள். அப்படி என்றால் இந்த வகுப்பை பேரா.சத்யா எவ்வளவு நேசிக்கிறார் அதே போல் மாணவர்கள் சண்டே கிளாசை எவ்வளவு விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
2008 ஆம் ஆண்டு வாக்கில் சண்டே கிளாஸ் பற்றி கேள்விப்பட்ட இந்தியக் கணிதவியல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பேராசிரியர்கள் ஜி.ராஜசேகரன் மற்றும் ஐ.ஐ.டி கான்பூரில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பேராசிரியர் எச்.எஸ்.மணி இருவரும் சண்டே கிளாசிற்கு வந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்கள்.
சண்டே கிளாசுக்கு இவர்களின் பங்களிப்பு மகத்தானது. இருவருமே 80 வயதை தாண்டியவர்கள். இவர்கள் இருவரும் நோபல் பரிசு அறிஞர்களான சர்.சி.வி ராமன், சந்திர சேகரிடம் கல்வி கற்றவர்கள். இந்திய அளவில் புகழ்பெற்றவர்கள். சண்டே கிளாசுக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை மற்றும் பின்தங்கிய சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதை பார்த்ததும் தங்களது தள்ளாத வயதிலும் பல வருடங்கள் வந்து வகுப்பு எடுத்தார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் பேரா. ராஜ சேகரன் குவாண்டம் இயற்பியல் வகுப்பு எடுப்பார். அதற்கு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எச்.எஸ். மணி கணித இயற்பியல் அல்லது மின்காந்தவியல், சார்பியல் கோட்பாடு என ஏதாவது ஒரு பாடம் எடுப்பார். உலக அளவில் பிரசித்தி பெற்ற இயற்பியல் புத்தகங்களிலிருந்து கணக்குகளை நடத்துவார்கள். சண்டே கிளாஸ் பற்றி பேராசிரியர்.ராஜசேகரன் தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஐ.ஐ.டி யில் இளங்கலை அல்லது முதுகலை இயற்பியல் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இவ்விரு பேராசிரியர்களின் வகுப்பு ஒரு வரப்பிரசாதம்.
2009 க்கு பிறகு அடுத்து தலைமுறை மாணவர்கள் ஜோசப் பிரபாகர், ஐயப்பன், ராஜ்மோகன், திருசெந்தில், ஏழு மலை, சண்முகப்பிரியன், என பெரிய பட்டாளம் சண்டே கிளாசுக்கு வர ஆரம்பித்தது. ராஜ் மோகன் திண்டுக்கல்லிலிருந்து வாரா வாரம் சனிக்கிழமை இரவு ரயிலேறி அடுத்த நாள் காலை சென்னை வந்து அன்று முழுவதும் சண்டே கிளாஸ் கவனித்து விட்டு அன்று மாலை மறுபடியும் ரயிலேறி அடுத்த நாள் காலை திண்டுக்கல் செல்வார். இன்று ராஜ் மோகன் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைகழகத்தில் இயற்பியல் உதவி பேராசிரியர். ஜோசப் பிரபாகர், சண்முகப்பிரியன் இருவரும் இன்று லயோலா கல்லூரியில் இயற்பியல் உதவி பேராசிரியர்கள். திருசெந்தில் நியுட்ரினோ ஆய்வகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார்.
ஐயப்பன் திருவண்ணாமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தவர். இன்று கோட்பாடு இயற்பியலில் பி.எச்.டி முடித்து மொகாலியில் உள்ள IISER உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.டி.எப் முடித்து இப்போது தரமணியில் உள்ள இந்திய கணித அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்(IMSc) பி.டி.எப் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். கோட்பாட்டு இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒரு முதல் தலைமுறை மாணவர்கள் நுழைவதென்பது மிகபெரிய சவால். ஆனால் சண்டே கிளாசின் வந்து படித்த மாணவர்கள் கோட்பாட்டு இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் பி.எச்.டி மாணவராகவோ அல்லது பேராசிரியர்களாகவோ இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சண்டே கிளாஸ் செய்த மாற்றம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை கொண்டுவந்தது. அதில் 11 மற்றும் 12 இயற்பியல் பாடப்புத்தகத்தின் உருவாக்கத்தில் சண்டே கிளாஸின் மாணவர்களான ஜோசப் பிரபாகர் மற்றும் நெய்னா முகமது இருவரும் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்கள். இது சண்டே கிளாசின் வெற்றி. ஒரு வகையில் சொல்லப்போனால் பள்ளிகளில் இயற்பியல் கல்வியின் தரத்தை உயர்த்த சண்டே கிளாஸ் மறைமுகமாக உதவியிருக்கிறது.
2012 க்கு பிறகு அய்யப்பன், அபுதாகிர், கிருத்திகா, மிருணாளினி, சுபஸ்ரீ, ரித்தீஷ் போன்ற அடுத்த தலைமுறை மாணவர்கள் சண்டே கிளாசில் பங்கெடுக்க ஆரம்பித்தார்கள். ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் அனைவருமே நெட், கேட் தேர்வில் தேர்ச்சி செய்து விட்டார்கள். கள்ளக்குறிச்சியை சொந்த ஊராகக்கொண்ட கொண்ட அய்யப்பன் மிக ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர். இன்று திருச்சி அருகே இருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர். அபுதாகிர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பி.எச்.டி முடித்து தேனி அருகில் இருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர். மிருணாளினி கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எச்.டி மாணவி. சுபஸ்ரீ இந்திய கணித அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் பி.எச்.டி மாணவி. கிருத்திகா இந்திய விமானத்துறையில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
ரித்தீஷ் முதுகலை மெட்டிரியல் சயின்ஸ் படித்தவர் ஆனால் சண்டே கிளாஸ் பங்கு பெற ஆரம்பித்தவர் இன்று இயற்பியலில் பி.எச்.டி படித்துக்கொண்டிருக்கிறார். இப்படி எண்ணற்ற மாணவர்களில் வாழ்க்கையை சண்டே கிளாசும், பேராசிரியர். சத்யாவும் மாற்றியிருக்கிறார்கள். இது ஒரு சத்தமில்லா கல்வி புரட்சி. ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனம் செய்ய வேண்டிய மாற்றத்தை ஒற்றை ஆளாக செய்து இருக்கிறார்.
2014 க்கு பிறகு மேற்கு வங்காளத்தில் உள்ள சாகா இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் பணி புரிந்து ஒய்வு பெற்ற பேராசிரியர். கமலேஷ்கர் சண்டே கிளாசில் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். அதே போல் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற கே.பி.என் மூர்த்தியும் இங்கே சில காலம் வகுப்பு எடுத்திருக்கிறார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற புகழ் வாய்ந்த பேராசிரியர். எ.கே.கபூர் அவர்களும் சில காலம் இங்கே பாடம் நடத்தியிருக்கிறார் இப்படி இந்தியாவின் மிகச்சிறந்த இயற்பியல் அறிஞர்கள் தங்களது ஓய்வு காலத்தில் இந்த சண்டே வகுப்பில் இயற்பியல் கற்றுக்கொடுத்தனர்.
சண்டே கிளாஸ் சிறந்த இயற்பியல் மாணவர்களை மட்டும் உருவாக்க வில்லை. சிறந்த இயற்பியல் ஆசிரியர்களையும் உருவாக்கியிருக்கிறது. சண்டே கிளாசின் பயின்று இன்று கல்லூரி பேராசிரியராக இருப்பவர்கள் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் நிறைய உரை நிகழ்த்துகிறார்கள். நெய்னா முகமது, பஷீர், தேவ சங்கர், ஜோசப் பிரபாகர், ராஜ் மோகன் என பல பேரை இதற்கு உதாராணமாக கூறலாம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பயின்று பிறகு சண்டே கிளாஸ் வந்த ஷிர்த்திகாந்த பிரசாத் தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் அதிகாரி. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் நாகர் கோவில் சென்று அங்கு ஒரு கல்லூரியில் இலவசமாக இயற்பியல் கற்றுக்கொடுக்கிறார். சண்டே கிளாஸ் ஒரு மாணவன் மனதில் ஏற்படுத்தும் மாற்றம் இதுதான்.
பேராசிரியர். சத்யாவின் கற்பிக்கும் செயல்பாடு சண்டே கிளாசோடு மற்றும் நிற்கவில்லை. இந்த கால் நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில், கேரளாவில் உள்ள எத்தனையோ கல்லூரிகள், பல்கலைக்கழகங்ளில் உரை ஆற்றியிருக்கிறார். அவரின் உரையைக்கண்டு வியந்த மாணவர்கள் பிற்காலத்தில் சண்டே கிளாசுக்கு வந்த கதைகளும் உண்டு.
.கடந்த டிசம்பர் 12 அன்று இந்த சண்டே கிளாஸின் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி சண்டே கிளாஸ் ஆரம்பித்த இருபத்தைந்தாம் வருட வெள்ளி விழாவை கொண்டாடினார்கள். கோவிட் விதிமுறைகளால் இந்நிகழ்வு ஆன்லைன்-ஆப்லைன் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளி மாநிலத்தில், வெளி ஊர்களில் இருக்கும் மாணவர்கள் ஆன்லைனில் கலந்து கொண்டார்கள். ஆப்-லைன் நிகழ்வு நியூக்ளியர் பிசிக்ஸ் துறையின் அதே செமினார் ஹாலில் நடந்தது.
இந்நிகழ்வை ஆன்லைனில் நேரலையாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் ராஜசேகரன் மற்றும் எச்.எஸ்.மணி இருவரும் ஆன்லைனில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். பேராசிரியர். கமலேஷ்கர் நேரடியாக கலந்து கொண்டார். இந்த கொண்டாட்டத்தில் 1996 ஆம் வருட சண்டே கிளாஸ் மாணவர்களிலிருந்து இன்றைய தேதி வரை இந்த வகுப்பால் பயனடைந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றார்கள். தங்கள் வாழ்க்கையை மாற்றிய பேராசிரியர். சத்யாவுக்கு தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். நியூக்ளியர் பிசிக்ஸ் துறைத்தலைவர் பேராசிரியர். சத்யாவுக்கு இத்துறையின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கினார்.
பேராசிரியர்.சத்யா அன்றைய தினம் “25 வருட பயணம்” என்ற தலைப்பில் மிக அருமையான உரையை வழங்கினார். இந்த வகுப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது, என்னென்ன சோதனைகளை எல்லாம் கடந்து வந்தது, அதில் நான் என்ன கற்றுக்கொண்டேன் என பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இரண்டு கருத்துக்கள் மிக முக்கியமானது. ஒன்று “ஒரு ஆசிரியரின் மிக முக்கியமான நோக்கம் ஒரு மாணவன் மனதில் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் (ready to learn) மனநிலையை உருவாக்குவதுதான். ஏனென்றால் ஒரு ஆசிரியரால் மாணவனுக்கு தேவையான அனைத்தையும் நடத்தி விட முடியாது. அதற்கு கால வரம்பு, நெருக்கடி காரணமாக இருக்கலாம். அல்லது மாணவனுக்கு தேவையான அனைத்து பாடங்களும் ஆசிரியருக்கு தெரியாமல் இருக்கலாம். இப்படி பல்வேறு நடைமுறை வரம்புகள் இருக்கின்றன. ஆனால் மாணவன் மனதில் கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் மனநிலையை ஒரு ஆசிரியர் உருவாக்கி விட்டால் அவனுக்கு தேவையானதை அவனே தேடிக் கற்றுக்கொள்வான்”
இரண்டாவது “சண்டே வகுப்புக்கு வரும் மாணவனின் சுதந்திரத்தை மதிப்பது. அதாவது வகுப்பில் சண்டே கிளாஸில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது ஒரு மாணவனை எழுப்பி கேள்வி கேட்டால் பதில் சொன்னாலும் அவன் விருப்பம். பதில் சொல்ல வில்லை என்றாலும் அது அவன் விருப்பம் அல்லது அவன் சுதந்திரம். பதில் சொல்லவில்லை என்பதற்காக அவனை கடிந்து கொள்வதோ அல்லது மொத்த வகுப்பையும் திட்டுவதோ கூடாது. பதில் சொல்லாமல் இருப்பதும் அவனது சுதந்திரம். இதை நான் சண்டே கிளாஸில் கடைபிடித்தேன்” என்று கூறினார். இது மிக முக்கியமானது. ஏனென்றால் சண்டே கிளாசுக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் ஏற்கெனவே கூறியது போல பின்தங்கிய சமூகங்களிலிருந்து வருபவர்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள். நிறைய மாணவர்களுக்கு ஆங்கில மொழிச் சிக்கலும் இருக்கும். இயற்பியலும் ஆழமாக புரிதலும் இருக்காது. இதற்கு காரணம் நமது நாட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி அமைப்பு முறை. வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி வாய்ப்புகள், உயர்தர பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி ஏழை மாணவர்களுக்கு அல்லது சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைத்ததோ அரசுப்பள்ளிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள்தான்.
இப்படிப்பட்ட பின்புலத்திலிருந்து வரும் மாணவர்களை கேள்வி கேட்டு அவர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக்காட்டினால் தொடர்ந்து வகுப்புக்கு வரமாட்டார்கள். அவர்களை தக்க வைக்க வேண்டும் என்றால் அவர்களை மிக சவுகரியமாக உணர வைக்க வேண்டும். உளவியல் ரீதியாக இது மிக மிக முக்கியமானது. அதைத்தான் பேராசிரியர். சத்யா இந்த சண்டே கிளாசில் செய்தார். பேராசிரியர். சத்யாவுக்கு அந்த சமூகப்புரிதல் இருந்தது. வெறும் கல்லாய் வந்த மாணவர்களை பட்டை தீட்டி வைரங்களாக ஜொலிக்க வைத்தார். சண்டே கிளாஸின் சாதனையை வெறும் தனிமனிதர்களை முன்னேற்றிய கதையாக மட்டுமே சுருக்கி பார்க்க முடியாது. காலம்காலமாக கல்வியில் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்களை இந்தியாவின் உயரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் உட்காரவைத்த சமூக நீதி செயல்பாடாக பார்க்க வேண்டும்.
இச்சூழ்நிலையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? சண்டே கிளாஸ் போன்ற ஒரு செயல்பாடு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவை. கற்பித்தலில் ஆர்வம் கொண்ட பேராசிரியர்களை அடையாளம் கண்டு அருகே இருக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ சண்டே வகுப்பை போன்று அங்கங்கே அரசாங்கமே ஆரம்பிக்க வேண்டும். IAS, IPS போன்ற தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பயிற்சி மையம் நடத்துவது போல அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கும் பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்க வேண்டும். அறிவியல் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் வருடத்துக்கு மூன்று நான்கு மாணவர்கள் நெட் தேர்வோ அல்லது கேட் தேர்வோ வெற்றி பெறுகிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் இன்னமும் கூட மொத்த மாநிலத்துக்கும் வருடத்துக்கு பத்து பேர் கூட இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது இல்லை. நாடு முழுவதும் இருக்கும் 27க்கும் மேற்பட்ட அறிவியல் உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்களுக்குள் ஆராய்ச்சி மாணவராக செல்ல இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மிக முக்கியம். தனிமனிதராக பேராசிரியர். சத்யா செய்ததை அரசு விரிவு படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு சென்றால் இன்னும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயன் தரும். அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் என்பது அரசியல், பொருளாதார துறையில் மட்டுமல்ல அறிவியல் துறையில் முழுமையாக வரவேண்டும். அதுவே உண்மையான சமத்துவம்.
கொரானாவுக்கு முன்பு வரை சண்டே கிளாஸ் தவறாமல் நடந்து வந்தது. முழு ஊரடங்கு இருந்த நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் மதியம் வரை பேராசிரியர்.சத்யா சண்டே கிளாசை எடுத்து வந்தார். தற்போது மறுபடியும் பழையபடி சூழ்நிலை சரியானதும் (2022 ஜனவரி மாதம் அல்லது பிப்ரவரி மாதம்) சண்டே கிளாஸ் தனது பயணத்தை அதே செமினார் ஹாலில் ஆரம்பிக்கப்போகிறது. பேராசிரியர்.சத்யா அடுத்த தலைமுறை மாணவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
கட்டுரையாளர் ஜோசப் பிரபாகர், பேராசிரியர் சத்யா நாராயணாவின் மாணவர், சண்டே வகுப்பில் மாணவராக இருந்து பிறகு சண்டே வகுப்பில் ஆசிரியராகவும் தனது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இக்கட்டுரை குறித்த கருத்துகளை தெரிவிக்க: [email protected]
அச்சமே மரணம் – இல. சுருளிவேல்
இன்றைய உலகமயமாதல் சூழ்நிலையில் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மக்களிடையே அச்சமும் பெருகி வருவதை மறுக்க இயலாது. எங்கோ ஒரு நாட்டில் நிகழும் பிரச்சனைகளால் நாமும் பாதிக்கப்படுவோமோ என்றெண்ணி அச்சம் கொள்கிறோம். இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள் இனி எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
துணிவே துணை என்பதற்கு உதாரணமாக பல்வேறு அறிஞர்கள், தலைவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் நிறுபித்துள்ளனர். முக்கியமாக சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கவிஞர் கண்ணதாசன், அச்சமே மரணம் நூல் ஆசிரியர் வாஸ்வானி போன்ற பலர் தங்களின் படைப்புக்கள் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளனர். மாணவர்கள் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளைப் பற்றிப் பயப்படுகின்றனர். படிப்பு முடிந்த பின்பும் நேர்முகத் தேர்வின்போதும் நெஞ்சம் நடுங்கி நிலைகுலைகின்றனர். அதே போன்று வேலையில் சேருவதற்கும், சேர்ந்த பின்பு, ஓய்வு பெரும் வரையிலும், தொடந்து பயமும் வருகிறது. காதலர்களுக்கு திருமணம் நடக்குமோ நடக்காதோ என்ற பயம்.
ஆதே போன்று திருமணம், ஆன பின்பும், முதுமை வரையிலும்; தொழில் துவங்கும் வரை, தொழில் துவங்கிய பின்பும் என பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயமும் கூடவே வந்து கொண்டிருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய கொள்ளை நோய்களும், பல்வேறு போராட்டங்களும், அண்டை நாடுகளிடைய அச்சுறுத்தல்களும், விலைவாசி உயர்வும் கூட அச்சத்தின் பிடியில் அரசை ஆட்டம் காணச்செய்து கொண்டிருக்கிறது. நிகழ்கால வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய பல விசயங்கள் இருக்கும் போது எதிர்கால வாழ்க்கையை எண்ணிப் பாமரர் முதல் படித்தவர் வரை, ஏழைகள் முதல் பணக்காரர் வரை ஒவ்வொருவரும் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். பயம் மனிதனின் முன்னேற்றத்திற்கு பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.
பயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்களில் நானும் ஒருவன். இந்த பயம்தான் எனது முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீண்ட காலம் ஆனது. பல நேர்காணலில் தோல்வியுற்றதற்கு முதல் காரணம் எனது பயமே. பயத்தினால் மறதி, கவலை, மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, பசியின்மை வருவதை உணர்ந்தேன். உணவு உடல் ஆரோக்கியத்தைத் தரலாம். ஆனால் மனதில் பயத்தை வளரவிட்டால், அது மனிதனை விரைவில் அழிந்து விடும். பயம் இருப்பவர்கள் விரும்பிய கல்வியை பெற முடியாது, விரும்பிய செல்வத்தை சேர்க்க முடியாது, விரும்பியதை அனுபவிக்க முடியாது. அறிவும், துணிச்சலும், முயற்சியும், பயிற்சியும் இருக்கும் ஒருவருக்கே தொடர்ந்து வெற்றி கிடைக்கிறது. சமூகத்தில் பின்தங்கிய நிலை தொடருவதற்கு முக்கியமான காரணமே பயம்தான்.
நமது கலாச்சாரம் குழந்தை பருவம் முதலே தைரியத்தை விட பயத்தையும் அதிகம் ஊட்டி வளர்க்கிறது. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியிலும் நம்மிடையே பல மூட பழக்கவழக்கங்களும் புரையோடிக் கிடக்கின்றன என்பதை பல்வேறு உயிர்பலி சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன. மனிதன் அறிவியலை விட ஜாதகங்கள், சம்பிரதாயங்களை அதிகம் நம்புகின்றான். பயம் கொள்கிறான், துன்பத்திற்கு ஆளாகிவிடுகிறான். மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளையும் கடந்தே வருகிறான். இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள், போர், பஞ்சம், பொருளாதாரப் பிரச்சனை போன்ற பல சூழ்நிலைகளை எதிர் கொண்டு மீண்டவர்களும் உண்டு அவற்றை எதிர்கொள்ளமுடியாமல் மாண்டவர்களும் உண்டு.
படித்ததில் பிடித்த அரேபியக் கதை ஒன்று: அறிவு நிரம்பிய ஒரு முதியவர் பாலைவனத்தில் வழியே பாக்தாத் நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கையில், அவரையும் முந்திக்கொண்டு செல்லும் கொள்ளை நோயைச் சந்தித்தார்.
ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறாய்? என்று அதைப்பார்த்து அப்பெரியவர் கேட்டார்.
“பாக்தாத் நகரில் ஐம்பது உயிர்களைப் பலிவாங்கப்போகிறேன்” என்று கொள்ளை நோய் கூறியது. பின்பொரு நாள் திரும்பி வரும் போது மீண்டும் இருவரும் சந்திக்க நேர்ந்தது.
“என்னிடம் நீ பொய் சொல்லிவிட்டாய்” என்று பெரியவர் கொள்ளை நோயைக் கடிந்துரைத்தார்.
ஐம்பது உயிர்களைப் பலி வாங்கப்போகிறேன் என்று சொன்னாயே? இப்போது ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கிவிட்டாயே? என்று கேட்டார் பெரியவர்.
“அதை நான் செய்யவில்லை. நான் ஐம்பது உயிர்களை மட்டுமே எடுத்தேன். அதற்கு மேல் ஒருவர்கூட என்னால் சாகவில்லை. எஞ்சியவர்களையெல்லாம் கொன்றது அவர்களின் அச்சம்தான்!” என்றது கொள்ளைநோய்.
ஆம்! உண்மையில் அச்சம்தான் நமது ஊக்கத்தையே உறிஞ்சி எடுத்துவிட்டு மனதில் மரணபயத்தை வேரூன்றச் செய்கிறது. வாழவும் பயப்படுகிறோம், சாகவும் பயப்படுகிறோம். ஏனென்றால் வாழ்க்கை அவ்வளவு குழப்பமானதாகவும் அஞ்சத் தக்கதாகவும், பாதுகாப்பற்றதாகவும் ஆகிவிட்டது இல்லையென்றால் நாளுக்கு நாள் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்குமா?
எதற்கு பயப்பட வேண்டும் எதற்கு பயப்படக்கூடாது என்ற அறிவியல் சிந்தனை மக்களிடையே வளர வேண்டியுள்ளது. வள்ளுவர் சொன்னது போல
“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
அதாவது அறிவில்லாதவர்கள் அஞ்சக்கூடியதற்கு அஞ்சமாட்டர்கள். அறிவுடையவர்கள் அஞ்சவேண்டியதற்கு அஞ்சி நடப்பார்கள். சிலர் நல்ல செயல்களை செய்வதற்கும் அச்சம் கொள்கின்றனர். இதனால் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம். நாளை ஏதாவது நடந்துவிடுமோ என்ற தேவையில்லாத கற்பனை. இது ஒருவகையான அறியாமையே விழிப்புணர்வு இன்மையே. வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும். சில ஞானிகள், எழுத்தாளர்கள் தங்களின் கருத்துகளுக்காக சிறை சென்றுள்ளனர். சிலருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அறிவு பூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அன்றைய சமூக, பொருளாதார கட்டமைப்பு. ஆவற்றையும் கடந்த பல அறிவியல் சிந்தனை பதிவுகள் இன்றைய வரலாற்று சுவடுகள்.
சிலர் திரைப்படங்கள் எடுக்கவும், அதனை வெளியிடவும் அச்சம் கொள்கின்றனர். காரணம், அத்திரைப்படம் சமூகத்தில் ஏதாவது பிரச்சனையை உண்டு பண்ணுமோ, இதனால் நஷ்டம் ஏற்படுமோ என்ற பயம். ஆனால் அதையும் தாண்டி எடுக்கப்பட்டு, பல விமர்சனங்களுக்கு ஆளாகி, இன்றும் வரலாற்று பதிவுகளாக இருக்க கூடிய சில நல்ல திரைப்படங்களும், அதில் நடித்த நடிகர்களும் அச்சத்தை வென்றவர்கள். இன்று சமூக ஊடகங்கள் சமூக மாற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் அச்சம் இன்மையே.
தேச விடுதலை, அனைவருக்கும் சமூக நீதி, பெண் விடுதலை, தொழிளாலர் உரிமை போன்ற பல விசயங்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் கொண்டிருந்தால் இன்று இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? மாபெரும் வீரர், மானம் காத்தோர், மனித நலனுக்காக தன்னையே தியாகம் செய்தவர்கள் காலத்தை வென்றவர்கள். இந்த உலகம் நல்லவர்களால் மட்டும் இயங்கவில்லை நல்லவை நடப்பதற்காக துணிந்து முடிவெடுத்து செயலாற்றியவர்களால் மட்டுமே இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
காதல் பிரச்சனை, கடன் பிரச்சனை, குடும்பப்பிரச்சனை, தொழில் பிரச்சனை போன்ற பல காரணங்களாலும் பயம் கொள்கின்றனர். பிரச்சனைகள் வரும் போது அதைக்கண்டு ஓடிவிடுவதாலும், உறுகி விடுவதாலும், சண்டையிடுவதாலும் அதற்கான நிரந்தர தீர்வு ஏற்பட்டு விடாது. சிலர் தற்கொலைதான் தீர்வு என எண்ணி தவறான முடிவுக்கும் வருகின்றனர். சிலர் தேர்வு பயத்தால் தன்னையே மாய்த்து கொள்கின்றனர். இதனைப் போன்ற செயல்கள் மனித இனத்திற்கே அவமானமே தவிர வேறொன்றும் இல்லை. சாகத்துணிபவர்கள் ஏன் வாழத்துணிவதில்லை! பிரச்சனை வரும் போது பயந்து முடங்கி கிடந்தால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது.
கவிஞர் கவிதாசன் சொன்னது போல “முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைப் பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்”. எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் பிரச்சனைகள் வரும் போது அதைக் கண்டு அஞ்சாமல், பதற்றம் கொள்ளாமல் அதனை வெல்வதற்கு வழிகளை, தேவையான முயற்சிகளை மேற்கொள்வதே சிறந்த முடிவாகும். சுவாமி விவேகானந்தர் சொன்னது போல “உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது மிகப்பெரிய பாவம்” ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நம்மிடையேதான் இருக்கிறது. சில பிரச்சனைகளுக்கு அமைதி தான் தீர்வு. சில பிரச்சனைகளுக்கு நம்மால் தான் தீர்வுகான முடியும், சில பிரச்சனைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தீர்வுகான முடியும், சில பிரச்சனைக்கு நீதி மன்றம் தான் முடிவாக இருக்கும். எனவே பிரச்சனையின் தன்மையை பொருத்து நிதானமாகவும், அறிவுப்பூர்வராகவும், துணிவுடனும் தீர்வு காணப்பட வேண்டும். உணர்ச்சிவசத்தால் ஒரு போதும் முடிவு எடுக்கக் கூடாது.
அச்சத்திற்கு அறிவியல் காரணங்களும் உண்டு. அச்சம் ஒரு வகையான அறியாமையே, சுய விழிப்புணர்வு இன்மையே, மன அமைதியின்மையே, மனித உடலில் ஏற்படும் ஒரு வகையான வேதியியல் மாற்றங்களே. இதனைச்சரியாக புரிந்துகொண்டால் அச்சம், கோபம், கவலை போன்ற பல எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் போய்விடும். மகான்களை மக்கள் அதிகம் தேடிச்செல்வதற்கு முக்கியமான காரணம் அவர்கள் பயம் இல்லாமல் மன அமைதியுடன் இருப்பதால்தான். அங்கு பிரச்சனைக்களுக்கு தீர்வு கிடைக்கும்மென நம்புகின்றனர்.
“தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல்” என்பார்கள். ஆம் நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானல் அச்சத்தை முதலில் வெல்ல வேண்டும். நாம் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விசம் கூட தன்மையற்றதாக விடும். கொரானா, ஓமைக்கிரான் போன்ற பல நோய்களை வெல்வதற்கு முதலில் விழிப்புணர்வு மட்டுமே தேவை. அதாவது பயத்தை தவிர்த்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது. நோய் வந்தால் அதற்கான காரணங்களையும், குணப்படுத்த தேவையான முயற்ச்சிகளையும் துணிச்சலுடன் மேற்கொள்ள வேண்டும். நோயினால் இறப்போரை விட பயத்தினால் இறப்போரே அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நோய் வந்தால் குடும்பத்திலும், சமூகத்தில் ஒதுக்கப்படுவோமோ என்ற பயத்தை தவிர்க்க வேண்டும். பயம் அதிகரிக்கம் போது நோயின் தீவிரம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.
சில சமூகங்கள், சில நாடுகள் ஆளுமையுடன் இருப்பதற்கு பொருளாதாரம் மட்டும் காரணம் அல்ல, அவர்கள் அறிவுடனும், சரியான திட்டமிடுதலுடன், துணிவுடன் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைகின்றனர். அதனால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். பயந்தால் எந்த ஒரு விசயத்தையும் நன்றாகக் செய்ய முடியாது. உதாரணமாக பயந்தால் வாகனங்கள் ஓட்ட முடியாது, மருத்துவம் பார்க்க முடியாது, நாட்டைப் பாதுக்காக்க முடியாது, தேர்தலில் வேட்பாளராக நிற்கமுடியாது, நாட்டை நிர்வகிக்க முடியாது. எனவே பயம் தேவையற்ற ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடியும்.
“கோழைகள் பலமுறை சாகின்றனர். வீரனோ ஒருமுறைதான் சாகிறான்.” நமக்குக் கிடைத்திருப்பது ஒரே வாய்ப்பு இந்த வாழ்க்கை. பிறப்பு மற்றும் இறப்பு ஒரு முறையே மனிதனுக்கு. ஆனால் அச்சத்தாலும் நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம். நூறு ஆண்டுகளுக்கு மேல் அச்சத்தோடும், மன அமைதியில்லாமலும் வாழ்ந்து மறைவதை விட, குறைவான ஆண்டுகள் வாழ்ந்தாலும் துணிச்சலுடன் ஆக்கபூர்வமான வாழ்க்கை வாழ்ந்து மடிய வேண்டும். இதுவரை நாம்அச்சத்திற்கு அடிமையாக இருந்திருந்தாலும், இனிவரக்கூடிய காலங்களில் அறிவுடனும் துணிச்சலுடனும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை வாழ பழகிக் கொள்ள வேண்டும். எனவே அச்சம் நம்மைக் கொல்லும் முன் நாம் அச்சத்தைக் கொன்று அச்சத்திற்கே அச்சத்தை கொடுத்து வாழ்ந்து காட்டவேண்டும்.
முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204
ஜெய்பீம் கவிதை – பிச்சுமணி
இந்த தேசத்தின்
எதேனும் ஒரு ஊரில்
எந்த ஒரு தெருவிலும்
ஒடுக்கப்பட்ட வரின் குரலை
பாதிக்கப்பட்டவரின் சொல்லை
வலிகள் நிறைந்த வார்த்தைகளை
மனிதம் நேசித்து கேட்டு கொண்டிருப்பான்
ஒருவன்.
அவன் வேறு யாருமில்லை
அவன் பெயர் தோழர்.
உரிமை
சம உரிமை
சமூக நீதி
எதிலும் அந்த
தோழனின் கைகளில்
செங்கொடி உயர்ந்து பறக்கும்.
தேசம் காக்கும் போராட்டமோ..
தெருக்களின் பிரச்சினையோ..
இரண்டிலும் அவனிருப்பான்.
அவன் பொதுவுடமைக் காரன்.
காற்றைப்போல்
இந்திய தேசத்தில் அவன்
கலந்து பல நூற்றாண்டு
ஆகிவிட்டது.
கடுகளவோ
கடலளவோ..
கவலை பிரச்சினை
தீர்வு தேடி..
காயங்களை
நெஞ்சில் சுமந்து
புன்னகை யோடு
வணக்கம் தோழர்
சொல்லும் எளியவர்கள்
நெஞ்சில் நிறைந்து
நிற்கிறான்..
பொதுவுடமைக் காரன்.
இழக்க ஏதுமற்ற
எளியவனே
இரக்கமற்ற
அரசதிகாரத்தை
எதிர்த்து நிற்பான்
எளியவனும்
பொதுவுடைகாரனும்
வேறு வேறல்ல
உரக்க சொல்வேன்
ஜெய்பீம்
லால் சலாம்…
(2)
ஆகாயத்தில்
அசந்துறங்கும் ஆதவனை
நீர் தாளம் தட்டியெழுப்புகிறாள்
கடல் அன்னை.
(3)
ஓடிப்பிடித்து விளையாடினோம்
நானும் அலையும்
ஓய்ந்து போன கால்கள்
இளைப்பாற இடந்தேடுகிறது
ஓய்வறியா அலையோ
வா..வா.. என்கிறது…