தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 18 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 18 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
மகனுக்குத் தாய் எழுதிய வாழ்த்துக் கடிதம்

அன்பு மகனே!

நம் வீட்டு மருமகள் பிள்ளை பெற்று இப்போது வீடு வந்து சேர்ந்திருக்கிறாள். அவளின் துயரோ ஒருகாலமும் நீ அறியாதது. வாழ்வின் கிடைத்தற்கரிய இக்கணத்தில் பிள்ளை பெற்று, பாலூட்டி வளர்ப்பதற்கான துயரத்தில் நீயும் அவளோடு துணை நிற்க வேண்டும் மகனே! காலங்காலமாய் இது பெண்களின் விசயம், இதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது, பெரியவர்களே பார்த்துக் கொள்வார்கள், பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கே அச்சமாக இருக்கிறதென்ற உப்புக்குப் பெறாத காரணங்களையெல்லாம் இனி நீயும் பழைய ஆண்களைப் போல சொல்லிக் கொண்டிருக்க முடியாது. உனக்குக் கர்ப்பப்பை இல்லை, பாலூட்ட மார்புகள் இல்லை என்பதற்காக எதிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது.

இப்பெருமைக்குரிய பொழுதில் நீ உன் தந்தையைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் மகனே! எப்போதும் எவரையும் கடிந்து கொள்ளாத, வெள்ளந்தியான சிரிப்பை மட்டுமே எல்லாவற்றிற்கும் பதிலாகத் தருகிற, உன் மீதான பேரன்பையெல்லாம் ஒரு சொல்லில் வார்க்கத் தெரியாத உனது அப்பாவைப் பற்றி புரிந்து கொள்வதற்கு இக்கணமே பொருத்தமானது. மகப்பேற்றில், பிரசவத்தில், பாலூட்டும் காலத்தில் ஆண்களின் பங்கு என்னவென்று விளங்காமலே இத்தனையாண்டு காலம் ஆண்கள் கடந்து வந்துவிட்ட போதிலும் உன் தந்தை உனை எப்படியெல்லாம் போற்றி வளர்த்தார் என்பதையெல்லாம் இப்போது தந்தையாகிவிட்ட நீயும் அறிந்து கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது மகனே!

எனக்கு மெல்ல பிரசவ வலியெடுக்கத் துவங்கிய அந்த உயிர்த்துடிப்பான நாட்களின் துவக்கத்திலிருந்தே உன் அப்பாவும் திட்டமிட்டு ஒருமாத கால நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டார். குமரிக் கடலின் சூரியோதயத்தின் போது அக்கணத்தில் இருக்க வேண்டியதன் பரவசத்தைப் போலவே நீ பிறக்கப் போகிற தருணத்தின் நித்திய கணத்தில் இருக்க வேண்டுமென்ற பேரன்பின் பொருட்டு அவர் வேலையைத் துறந்திருந்தார். எனது மகப்பேறு காலத்தில், பிரசவத்தின் போதான பயத்தில், தனிமையில் என அம்மா, அத்தையென்று பெண்கள் உடனிருக்க வேண்டிய அத்தனை இடத்திலும் அவரே உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்டார். இதையெல்லாம் வேறெவரும் சொல்லியோ, கட்டாயப்படுத்தியோ, அறிவுறுத்தலின் பேரிலோகூட அவர் செய்யவில்லை. அடிவயிற்றிலிருந்து எழுகிற பெண்மையின் பெருவலியை எப்படியேனும் ஆணாய்ப் பகிர்ந்து கொண்டுவிட வேண்டும் என்கிற உள்ளன்பினால் எழுந்த பேருணர்ச்சி தான் அது.

பெருவலியில் பற்களைக் கடித்து கைகளை முறுக்கி அலருகிற போதெல்லாம் என் கைகளைப் பற்றி வயிற்றைத் தழுவி என்னை ஆறுதல்படுத்தபடி இருப்பார். அவரது கைகளில் பத்திரமாய் இருக்கிற ஓருணர்வே எனக்கு அவ்வலியைக் கடக்க பேருதவியாய் இருந்தது மகனே! அப்போதெல்லாம் நான் அழாதிருப்பதற்கு அவர் அருகாமையில் இருந்த ஒற்றை கணமே போதுமானதாயிருந்தது. பிரசவத்திற்கு முந்தைய பத்து நாட்களும், நீ பிறந்த பின்னால் இருபது நாட்களுமாக அவர் என்னோடிருந்த முப்பது நாட்களும் உளப்பூர்வமான குடும்பத்தின் இன்பத்தில் திளைத்திருந்தேன். பிரசவித்த கட்டில் விளிம்பில் ஒருபுறம் கட்டியணைத்தபடி நீ துயில் கொண்டிருக்க மறுபக்கமாக நாற்காலியில் அமர்ந்து என்னை அரவணைத்தபடியே மருத்துவமனையின் ஊழிக் காலங்களில் நம் இருவருக்காக அவர் தூங்காமலே சாய்ந்திருப்பார்.

வீடு வந்துவிட்ட காலங்களில் உன் பாட்டி அருகாமையில் இருந்தாலும்கூட நீ பசியென்று அழும் போது உனைத் தூக்கி மடியிலே கிடத்திப் பாலூட்ட வைப்பதற்காக உன் தந்தையே உடனிருந்து பார்த்துக் கொண்டார். உனக்குப் பாலூட்டிய பின்னால் உள்ளங்கையில் வாங்கி அவரின் நெஞ்சில் போட்டு முதுகையத் தட்டிக் கொடுத்தபடி எந்நேரமும் வீட்டிற்குள் பூனையைப் போல் நடந்தபடியே இருப்பார். உடல் அயர்ச்சியில் நான் கண்ணசருகிற போதெல்லாம் உனக்கென நான் சேமித்து வைத்திருந்த தாய்ப்பாலினை குடுவையில் எடுத்து உன் பசிதீரப் புகட்டி உனை அவரேதான் துயில் கொள்ள வைத்திருக்கிறார். அவரால் ஒரு தந்தையாக மட்டுமின்றி தாயாகவும் கூட எல்லா தருணங்களிலும் இருக்க முடிந்தது உனக்கும் எனக்கும்கூட வாய்த்த பேரதிர்ஷ்டம் தான்.

உனக்குத் தாய்ப்பாலினை எடுத்து பாட்டிலின் வழியே புகட்டுகிற போது வயிற்று வலியில் அடிக்கடி உடம்பை முறுக்கிக் கொண்டிருப்பாய். உனக்கு வலியென்று வந்தால் உரக்கவும் அழ மாட்டாய். அச்சமயம் உடம்பைப் பிழிகிறது போல முறுக்குவாய். பிறந்த குழந்தைகளுக்கு குடல் வளர்ச்சி முழுமையடையாத காரணத்தினால் சரியாகச் செரிமானமாகாத பாலானது குடலிற்குள் காற்றாய் நிறையத் துவங்கிவிடுமாம். அப்படி உருவாகிற காற்றை வெளியேற்றுவதற்கு வயிற்றிலிருக்கிற தசைகளே உதவுகிறதாம். ஆனால் வயிற்றின் தசைகள் முழுவளர்ச்சி கொள்ளாத பிள்ளைப் பருவத்தின் காரணமாக காற்றைச் சரியாக உன்னால் வெளியேற்ற முடியவில்லை. அச்சமயத்தில் நெஞ்சுக்கும், வயிற்றுக்குமிடையே மூச்சுவிடுவதற்கு உதவுகின்ற உதரவிதான தசையைப் பயன்படுத்தி உந்திதான் முக்கியபடி காற்றையும் நீ வெளியேற்றிக் கொண்டிருப்பாய்.

இதையெல்லாம் நீயும் முக்குவது போலே ஏனோ அடிக்கடி செய்து கொண்டிருந்தாய். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து முறுக்கிக் கொள்ளத் துவங்கி பொழுது விடிகிற ஆறுமணி வரையிலும் இதையே தான் தூங்காமல் விழித்திருந்து செய்தபடி இருப்பாய். அப்போதைய நிலையில் குடற்காற்றை வெளியேற்றி உனை ஆசுவாசப்படுத்துவதற்கு உன்னைக் குப்புற படுக்க வைக்க வேண்டும். அப்படிப் படுக்க வைப்பதன் வழியே உன் வயிற்றுக்கான ஒத்துழைப்பினை வெளியிலிருந்து கொடுக்கும் போது உனது முக்குவதெல்லாம் குறைந்து நீயுமே அப்போது இயல்பாகிவிடுவாய்.

ஆனால் நீயோ அப்போது தான் பிறந்த சிறுபிள்ளையாய் இருந்தாய்! உன்னைத் தரையில் கீழே படுக்க வைப்பதற்கு தந்தையின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அதிகாலையில் அலாரம் போல் அழுகிற குரலுக்கு எழுகிற உன் அப்பா உன்னோடிருக்கிற அத்தனை நாட்களும் நெஞ்சின் மேல் போட்டு அள்ளியணைத்துக் கொள்வார். உனக்கு என் கதகதப்பையும் தாண்டி அப்பாவின் கதகதப்புதான் அப்போது தேவையாய் இருந்தது. இதனால் நீயோ உடலின் முறுக்கம் குறைந்து நல்லபடியாக துயில் கொண்டிருப்பாய். ஆனால் அப்படி உனைக் கிடத்திக் கொண்டே அப்பாவால் படுக்க முடியாது. அந்நிலையில் முன்தாழ்வாரத்தில் போடப்பட்ட நாற்காலியில் சாய்ந்து உனை சேர்ந்தணைத்தபடி அமர்ந்து கொள்வார். இரவின் பூரண நிலவோடும் நட்சத்திரங்களோடும் துவங்குகிற இத்தூக்கம் நான் விடிய கண்விழித்துப் பார்த்து உனை நான் அள்ளிக் கொள்கிற வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் மகனே!

சிசேரியன் வலியும் தழும்பும் காரணமாக துவக்க காலத்தில் என்னால் அமர்ந்து உனைக் குளிக்க வைப்பதற்கு முடியவில்லை. உனைத் தொட்டுக் கால்களில் கிடத்தி நீரள்ளி உனைப் பூஜிப்பதற்கான பேறு எனக்கு அப்போது கிடைக்கவில்லை மகனே! கனிந்த பழத்தின் மிருதுவாகிய உனைத் தூக்கி காலில் கிடத்திக் குளிக்க வைப்பதற்கு எங்களுக்கே அப்போது அச்சமாயிருக்கும். ஆனாலும் உனை பேரன்போடு தூக்கி இருகால்களையும் தரையில் பரப்பியபடி உனை அதன் கால்வாயில் இருத்தி பொற்சிலைக்கு பாலபிஷேகம் செய்விப்பதைப் போல பொறுமையோடு குளிப்பாட்டிக் கொண்டிருப்பார். உனை வாங்கி நாங்கள் எண்ணெய் தேய்த்து, கண்ணத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து கூச்சத்தில் நெளிந்து நீ பொங்கிச் சிரிக்கிறவரையிலும் உடன் உதவியபடிதான் இருப்பார். அச்சமயத்தில் உன் பாட்டி அருகிலிருந்தும்கூட எவ்வித கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் உன்னை வளர்ப்பதென்பது தனக்குரிய ஒரு அங்கமாகவே அவர் நினைத்துச் செய்தபடி இருப்பார்.

இரவு நேரங்களில் சிறுநீர், மலம் கழிப்பதற்கென்று உனக்குப் பருத்தித் துணியிலான ஆடைகளையே உபயோகப்படுத்தினேன். உனது அசைவுகளின் அசௌகரியத்தைக் கவனத்தபடியே உன் அப்பா எழுந்து வந்து அவராகவே உனைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். உனக்குப் புத்தாடை அணிவிப்பதிலிருந்து அத்துணிகளை துவைத்து உலர வைப்பது வரையிலுமாக அவராகவே விரும்பி அதைச் செய்து கொண்டிருப்பார். இது என் வேலை, உன் வேலை என்கிற பாகுபாடெல்லாம் இதுவரை அவர் எவ்விசயத்திலுமே துளியும் நடந்து கொண்டதுமில்லை. ஆக, உனது மனைவி, மகள் விசயத்திலும்கூட நீ அப்பாவைப் போல அல்லது அதற்கும் மேலாகவே இருப்பாய் என்று நம்புகிறேன் மகனே!

நீ பிறந்த தருணத்திலிருந்து ஒரு தாயாக நான் எந்த அளவிற்கு உன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவளாக இருந்தேனோ அதற்குத் துளியும் குறைவில்லாத உன் தந்தையின் இருப்பின் அன்பின் மகத்துவமும் வாய்ந்த்து தான் மகனே! உனையள்ளி தோளில் துயில் கொள்ள வைப்பது, தாலாட்டுப் பாடுவது என அவரது அன்பின் வாசம் எப்போதும் உன் மீதே கமழ்ந்தபடியே இருக்கும். மகனே, இதையும்விட மகத்தான ஓரிடத்தை உன் பிள்ளைக்கும் மனைவிக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென நான் உன்னிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இப்படியாகத்தான் என்னால் உனக்கு தந்தைக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள முடிகிறது மகனே! அன்பு வாழ்த்துக்கள்.

டாக்டர் இடங்கர் பாவலன்

வெ.நரேஷ் கவிதைகள்

வெ.நரேஷ் கவிதைகள்




* இயற்கை உள்ளம் செய்ததென்ன பிழையா
கருணை இன்றி கழுத்தறுக்கப் பெரும் படையா
கெட்டவர் வாழும் பூமி
இங்கு வாழ தகுதியில்லை சாமி

ஏனோ
நல்லோரை மட்டும் தேடிச் செல்வதென்ன பூமி

**********************

* கடற்கரையோரம்
செல்லும் போதெல்லாம்
ஒரு வேலை உணவுக்காக
தொடர்ந்து கையேந்தி நிற்கும்
முதியவரின் பசி அறியாமல் விரட்டிவிடும் மகனையும்
மன்னித்துத் தான் விடுகிறார் அப்பா

– வெ.நரேஷ்

பொக்கை (கள்) கவிதை – சாந்தி சரவணன்

பொக்கை (கள்) கவிதை – சாந்தி சரவணன்




அலாரம் அடித்தது போல்
ஆதவன் உதயமாகிவிடுகிறான்
யுகங்களாய் நகர்கின்றன
நொடிகள்!

எப்படிக் கழிப்பது இந்த
பகற்பொழுதை
என்பதே அவர்களின்
அச்சம்!

இரவுப் பொழுதில்
வராத தூக்கத்தை
ஏமாற்றி
போர்வைக்குள்
கண் முடி ஒளிந்து கொள்கிறார்கள்!

ஆனால்
பகலில்
பேச்சுத் துணையின்றி
பெற்ற மனம் பரிதவிக்கிறது!

கொஞ்சி யானை விளையாட்டு விளையாட
பேரன் பேத்தி அருகில் இல்லை!

சாப்பிடிங்களா என கேட்க
மகனும் மகளும் பக்கத்தில் இல்லை!

உறவுகளின் விழாவில்
கலந்துக்கொண்டு
உறவாட வழியில்லை!

பொக்கைகள் இரண்டும்
அண்ணாந்து விட்டத்தை பார்த்தபடி
பல மணி நேரம்
ஊடகங்கள்
பார்த்தபடி
சில நேரம்
நினைவலைகளில்
வாழந்தபடி
நடைப்பிணமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
சிலர்
முதியோர் இல்லங்களிலும்
சிலர்
தனித்துவிடப்பட்டத் தாழ்வாரங்களிலும்!

– திருமதி. சாந்தி சரவணன்

Magan Short Story by Baskar Sakthi Synopsis 94 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 94: பாஸ்கர் சக்தியின் ’மகன்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 94: பாஸ்கர் சக்தியின் ’மகன்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




இவருடைய கதைகள் மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு ஒருவித ஹாஸ்ய உணர்வைத் தருகிறது.  வாசிப்பதோடு நின்று விடாதவர்களுக்கு மறைமுகமாய் ஒரு அனுபவத்தை வழிவிட்டுக் காட்டுகிறது.

மகன்
                                – பாஸ்கர் சக்தி

எல்லா வாக்கியங்களையும் என்னால் சுலபமாக நம்பிவிட முடியும்.  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதனை ஈஸியாக நம்பிவிடுகிறவன் நான்.  என்னால் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் எப்போதும் நம்ப முடிவதில்லை.  நானும் என் அப்பாவும் நண்பர்கள் மாதிரி என்று யாராவது சொன்னால் எனக்கு சிரிப்பும் அவநம்பிக்கையும் சேர்ந்தே வரும்.

உதாரணமாக இந்தியாவில் பெரும் பிரச்னையாக வேலையில்லாத் திண்டாட்டம் என்று நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன்.  அதிசயம் பாருங்கள், எனக்கு வேலை கிடைத்தவுடன் அந்தப் பிரச்னை தீர்ந்து விட்டது,  தற்போதைய பிரச்சனை எந்த வேலையாக இருந்தாலும் உழைத்து முன்னேற வேண்டும் என்கிற நெருப்பு இளைஞர்களிடத்தில் இல்லை.  இது மாதிரியே அனைத்தையும் பார்த்துப் பழகிய என்னால் தந்தை மகன் நல்லுறவை நிச்சயம் கற்பனை செய்யவோ ஏற்கவோ முடியாது.  காரணம் எனது தந்தை.   அவருக்கும் எனக்குமான உறவு.

என் அப்பா என்னைப் போல இல்லை.  ஆனால் பார்க்கிற எல்லோரிடமும் என் பையன் என்னை மாதிரி என்று சொல்லிச் சொல்லி என்னை எரிச்சல் படுத்துவார்.    ஆனால் நான் பிறக்கும்போதே புத்திசாலி.  என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கியபிறகும் பிழைக்கத் தெரியாத ஒரு தவளை என் அப்பா.  அவருக்குத் தெரிந்தது கிணறளவு.  நானோ பறவை மாதிரி.  நசிந்ததொரு குடும்பத்தில் கடைசிப் பிள்ளைக்கு முந்தைய ஏழாவது பிள்ளையாகப் பிறந்த தவப்புதல்வன் என் அப்பா.  ஊரிலிருந்து ஒன்பது மைல் தூரம் நடந்து நடந்து படித்து ஊரின் ஒரே எஸ்.எஸ்.எல்.சி படிப்பாளி அவர்.   தான் படித்த பள்ளிக்கூட வாத்தியார் ஒருத்தரைக் கெஞ்சி அந்த சின்ன டவுனிலேயே ஒரு வேலையைத் தேடிக் கொண்டாராம்.  பருத்தி வியாபாரி ஒருவரின் கமிஷன் கடையில் கணக்கு எழுதுகிற வேலை.  

காலையில் சீக்கிரமே எழுந்துபோய் எட்டு மணிக்கெல்லாம் கடையைத் திறந்து, ஊதுவத்தி கொளுத்திவைத்து, கடையைப் பெருக்கி, வருகிறவர்கள் அமர பாயை தட்டி விரித்துப் போட்டு, மண் பானையில் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு உட்கார்ந்தார் என்றால் ராத்திரி ஒன்பது மணி வரைக்கம் சிறிய கணக்குப் பிள்ளை மேஜையின் முன் கேள்விக் குறியாய் வளைந்து அமர்ந்து நாள் பூரா கணக்கு எழுதிக் கொண்டே இருப்பார்.  ‘கணக்குல நீ புலிய்யா’ என்று அப்பாவை முதலாளி பாராட்டுவாராம்.  அது ஓரளவு உண்மைதான்.  நானே பார்த்திருக்கிறேன்.  கடையில் அவர் பாட்டுக்கு குனிந்து கணக்கெழுதிக் கொண்டு இருப்பார்.  முதலாளி வந்திருக்கும் வியாபாரியிடம் அவர் அனுப்பிய பருத்தி மூட்டை எண்ணிக்கை விலை நிலவரம் எல்லாம் பேசிக் கொண்டே இருப்பார்.  திடுதிடுப்பென அப்பா பக்கம் திரும்பி ‘அப்படின்னா இவருக்கு நாம் எவ்வளய்யா தரணும் அழகரு’ என்று கேட்பார்.  அப்பா மறுவினாடியே ‘பன்னன்டாயிரத்து நானூத்தி இருவத்தேழு வருதுங்க.  போன மார்கழில ஒரு நாலாயிரத்துச் சொச்சம் வாங்கினாப்ல அதைக் கழிச்சிட்டுப் பாத்தா எட்டாயிரத்து நூத்தியம்பது’ தரணும் என்பார்.  முதலாளி பிரமிப்பார்.

ஆனால் நான் பிரமிக்க ஏதும் இல்லை.  ஏதோ கணக்கு நன்றாக வருகிறது என்பதற்காக மட்டும் அப்பாவைப் பிடித்துப் போகுமா என்ன?  நான் கேட்ட எதையும் அப்பா உடனே வாங்கித் தந்தது கிடையாது.  குடும்பக் கஷ்டம் என்று பஞ்சப்பாட்டு பாடுகிறவராகவே இருந்தார்.   என் படிப்பு பற்றி ஓயாமல் பேசி அறுப்பார்.  என் வாத்தியார்களிடம் வந்து நான் இருக்கும்போதே அவர்களிடம் என் படிப்பு குறித்து கேட்பார்.    எப்படியோ இழுத்துப் பிடித்து பஞ்சப்பாட்டுப் பாடி என் படிப்புக்கான செலவுகளை செய்தார்.  நானும் ஓரளவு படித்து ஆளாகி எனது திறமையில் ஒரு வேலை தேடி மெடிக்கல் ரெப்பாகச் சேர்ந்து ஏழெட்டு வருஷத்தில் நாலைந்து கம்பெனிகள் மாறி இப்போது ஏரியா சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்.  என் திறமை முழுவதும் வாயிலும் நான் பேசுகிற இங்கிலீஷிலும் .. சற்றும் தயங்காமல் நான் சொல்கிற பொய்களிலும்தான் இருக்கிறது.  இது எனது இன்றைய வாழ்வின் நியாயம்.  நீங்கள்தான் இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரியாகக் கணக்குகளைச் சொல்வது எப்படி என் அப்பாவின் திறமையோ அது போலத்தான் இது. இல்லையா?

இப்படியெல்லாம் நினைப்பவன் பேசுகிறவன் நான்.  ஆனால் போனவாரம் என்ன நடந்தது தெரியுமா?

சென்னையிலிருந்து வேலை விஷயமாகத் திருச்சி வந்தேன்.  பஸ் பயணம்.  காலையில் இறங்கி கொட்டாவி மணக்க டீ குடித்து, சிகரெட் பற்றவைக்கும்போதுதான் கவனித்தேன் என் செல்போனைக் காணோம்.  சுருக்கென்றது,  பாதி டீயைக் கொட்டிவிட்டு பையெல்லாம் தேடினேன்.  ம்ஹும் பஸ்ஸோடு போய்விட்டிருக்க வேண்டும்.

பூத்துக்குப் போய் எனது செல்போன் நம்பரை டயல் செய்தேன்.  ‘நாட் ரீச்சபிள்’ என்று வந்தது.  மறுபடி பண்ணினேன்.  ‘நாட் இன் யூஸ்’ என்று வந்தது.  என்ன பண்ணுவதென்று தெரியவில்லை.  அடுத்த மூன்று நாட்களுக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது.  எல்லாவற்றையும் பக்காவாக முடிக்க வேண்டும். 

யோசனையுடன் பக்கத்து பூத்தில்  நுழைந்து போனை எடுத்தேன்.  மனசு பகீரென்றது.  அனைத்து போன் நம்பர்களும் எனது செல்போனில்தான் ஸ்டோர் பண்ணி வைத்திருக்கிறேன்.  ஒரு நம்பர்கூட எனக்கு ஞாபகத்தில் இல்லை.  விஸிட்டிங் கார்டுகளைத் தேடிப் பையில் துழாவினேன்.  அதில் இருந்த இருபத்தேழு கார்டுகளும் என்னுடையவை.  என் வீட்டு எண்’ மொபைல் எண் மற்றும் ஆபீஸ் எண் மட்டுமே அதில் இருந்தன.

ஆபீசுக்குப் போன் அடித்தேன்.  ரிங்க் போய்க்கொண்டே இருந்தது.  பத்து மணிக்கு மேல்தான் ஆபீஸ் என்பது நினைவு வந்தது.

வீட்டுக்கு போன் செய்தேன்.

“ஏங்க எவ்வளவு நேரமா? உங்க மொபைலுக்கு ட்ரை பண்றது?  எங்க இருக்கீங்க?”

“ப்ச் மொபைல் தொலைஞ்சிருச்சுடி, என்ன விஷயம்?”

“அச்சச்சோ எங்க தொலைச்சீங்க?”

“இரு முதல்ல நீ எதுக்குத் தேடினே?”

“உங்கப்பா இறந்துட்டாராம்.  ஊர்ல இருந்து போன் வந்துச்சுங்க.  உடனே கிளம்பி ஊருக்குப் போங்க.  நான் நேரா அங்க வந்துர்றேன்”.

“என்ன பேச்சையே காணோம், வந்து சேருங்க. கடமையைக் கழிக்கணுமில்ல”  மனைவி போனை வைத்தாள்.

மனதில் ஒரு முள் தைத்தது.  அப்பாவைப் பற்றி என்றுமே அவளிடம் நான் நல்லவிதமாகப் பேசியதில்லை.  பின் அவளை எப்படிக் குறையாக நினைப்பது?

சட்டையைத் தொட்டுப் பார்த்தேன்.  நூற்றைம்பது ரூபாய்தான் பர்ஸில் இருந்தது.  ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு ஆபீஸ் திறந்ததும் தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பலாம் எனத்தோன்றியது.  ஏடிஎம்ஐத் தேடி நுழைந்து என் கார்டை உள்ளே திணிக்கப் போகையில்தான் தோன்றியது இது புதிய அக்கவுண்ட். பின் நம்பர் இப்போதுதான் வந்தது.  அதனையும் மொபைலில்தான் வைத்திருந்தேன்,

நான்கு இலக்க நம்பர்.  இரண்டில் ஆரம்பிக்கும்.  மனதில் இருந்த எண்களைப் போட்டேன். தப்பாக வந்தது.  மறுபடியும் எண்களை மாற்றிப் போட்டேன்.  திரையில் ஸாரி என்று எழுத்துக்கள் கேலி செய்தன.

அப்பா நினைவுக்கு வந்தார்.

எனது எஸ்எஸ்எல்சி ப்ளஸ் டூ தேர்வு எண்கள், தான் வேலை பார்த்த கடையின் அத்தனை அக்கவுண்ட்டுகளின் எண்கள், நூற்றுக் கணக்கான போன் நம்பர்கள் என்று எல்லாவற்றையும் தன் மூளையில் பதிந்து வைத்திருந்த அப்பா என்னைப் பார்த்து புன்னகை செய்வது போலிருந்தது.

குபுக்கென எனக்கு அழுகை வந்தது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

Adhithi Novel by Varatha Rajamanikkam Novelreview By Jananesan நூல் மதிப்புரை: வரத. ராஜமாணிக்கத்தின் அதிதி நாவல் - ஜனநேசன்

நூல் மதிப்புரை: வரத. ராஜமாணிக்கத்தின் அதிதி நாவல் – ஜனநேசன்



அன்பு வழியும்  அதிதி

ஜிங்கிலி முதலான  மனதில்  நிற்கும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வழங்கியவர்  எழுத்தாளர் வரத. ராஜமாணிக்கம். அவர்  எழுதிய முதல் நாவல் “அதிதி.” ஓடிப்போன அம்மாவைத்  தேடிப்போன மகன் கோவிந்தின் அனுபவம் நாவலாக  விரிகிறது. பழநி நகரில் யாத்ரீகர்களை ஈர்க்கும் ஜட்கா எனும் குதிரை வண்டியையும், அபலைகளின் உணர்வுக்கும்  உடலுக்கும்  தீனிபோடும் மறைமுகமாக நடக்கும் பாலியல் தொழிலையும் சுற்றி இயங்குகிறது இந்நாவல் .

இளம் மனைவி  சசிவர்ணத்திடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தில் கோவிந்த் இராத்திரியோடு  இராத்திரியாக மனைவியிடம்  சொல்லாமல் இரயிலேறி பழநியில் இறங்குகிறான். அங்கு ஜட்காவண்டியோட்டி  சுப்பையாவிடம்  பரிச்சியம் ஏற்படுகிறது. ஊரைவிட்டு  ஓடிவரும்  அபலைப்பெண்களுக்கு அடைக்கலம் தந்து காக்கும் பசுபதியிடம்  கோவிந்தை சுப்பையா அறிமுகப்படுத்துகிறான். பசுபதி, பசுபதிவீட்டில்  தங்கியிருக்கும் பாலியல் தொழில் செய்யும் நேத்ரா, பானுமதி, விடிவெள்ளி, ராசாத்தி முதலான பெண்கள்  ஒரு நீள் கோடாகவும் ,   கணவனைத் தேடிக் காணாமல்  தந்தை வீட்டில் அடைக்கலமாகும், சசி,மருமகனைத் தேடும் தந்தை சுந்தரம். அவருக்கு துணைவரும் ரகீம் பாய், மகளுக்காக கவலையில் உழலும்  அம்மா கோமதி போன்றோர் ஒரு நீள் கோடாகவும்  இணையாக நெடுகப் பயணித்து சந்திக்கும் புள்ளியில் இந்நாவல் முடிகிறது. நாவல் இரயிலில் பழனிக்குள் நுழைந்து, இரயிலில் பழநியை விட்டு வெளியேறுகிறது.

கோவிந்து தன் அம்மாவைக் கண்டடைகிறானா .விட்டுப்பிரிந்த மனைவியோடு சேருகிறானா  என்பதை சிக்கல் சிடுக்கல் இல்லாத  நடையில் சொல்லப்படும் இந்நாவலில்  வாசித்தறியலாம்.  உள்ளங்கையில் கொஞ்சம்   பஞ்சாமிர்தத்தை ஊற்றினால் பழச்சக்கரைச்  சாறு  கையிலிருந்து  வழிந்தொழுகுவது போல  நாவல் முழுதும்  அன்பு கசிந்து வழிந்து  வாசகரையும்  அன்புமயமாக்குகிறது. பெண் ஓடினால் ஓடுகாலி என்று பழித்து ஒதுக்கும் சமுகம், ஆண் ஓடினால்  அவனை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்வு ரீதியாக பதிவு செய்கிறார் வரத. ராஜமாணிக்கம்.

இந்நாவலின் ஊடே ஜட்காவண்டிக்காரர்களின்  அன்றாட வாழ்கைப் பாடுகளை  சொல்கிறார். சசியைத் தேடிவரும் இளைஞன் நாகு, பாத்திமாவின் வார்த்தைகளுக்கு  கட்டுப்பட்டு திரும்பச் செல்லும்போதும், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின்  உணர்வுகளையும், ஓடிப்போன முத்தன் மனைவி பற்றியும் அளவாகச் சொல்லி சொல்லாமல் விட்டதை  வாசகர்களை ஆசிரியர் உணர வைக்கிறார்.

இந்நாவல் முழுவதும் வெயிலும்  ஒரு பாத்திரமாகத் தோன்றி நாவலின் உணர்வோட்டத்தை கவித்துவமாக நகர்த்துகிறது. ரகீம் பாய், பாத்திமா பாத்திரங்கள் எதார்த்தம் பிசகாமல் படைக்கப்பட்டிருக்கிறது. இந்நாவலில் விவாதிக்கப்படும் மனித வாழ்க்கைப்பாடுகள் வாசகனுக்குள் ஒரு நிறைவை பதிக்கிறது. இன்னும் இதுபோல பல நல்ல  நாவல்களை ஆசிரியரிடமிருந்து எதிர்நோக்க வாசகர்களை எதிர்பார்க்கத்   தூண்டுகிறது.   நல்ல  நாவலைத்  தந்த வரத.ராஜமாணிக்கத்தையும், அச்சும், அமைப்பும், கச்சிதமான இணைந்த  இதமான வாசிப்புக்குரிய புத்தகத்தை வெளியிட்ட பாரதி புத்தகாலய நிர்வாகிகளையும்  வாழ்த்தத் தோன்றுகிறது.

நூல்: அதிதி நாவல்
ஆசிரியர்: வரத.ராஜமாணிக்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 192
விலை: 180
புத்தகம் வாங்க கமெண்டில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

Shakthi's Poems சக்தியின் கவிதைகள்

சக்தியின் கவிதைகள்




மகனின் கடைசி வாகனம்
*******************************
“தத்தெடுத்த
மகனை
அவனுடைய
வீட்டிற்கு அனுப்புவதற்காக
தயாராக்கி
கொண்டிருக்கிறார்கள்
ஊர் மக்கள் ,

நீண்ட
நேரமாக
காலையிலிருந்தே
வாகனமும்
வாசலில் வந்து
நின்று கொண்டிருக்கிறது ,

வழியனுப்புவதற்கு
ஊரே வீட்டின்
வாசலில் சூழ்ந்துக்
கொண்டிருக்க
மேள தாளங்களோடு
சிலப்பேர்
ஆடி பாடி கொண்டிருக்க ,

பூமியிலிருந்து
அனுப்பிய பட்டாசுகள்
மேலிருந்து
வெடித்து இடிகளாக
பொழிந்து கொண்டிருக்க

இரண்டு
நாட்களாக
குளிக்காதவனை
அத்தை வீட்டிலிருந்து
தண்ணீரை
எடுத்து வந்து
தலை முழுக குளிப்பாட்டி

புது உடை
உடுத்தியவனை
அழுதுகொண்டே
வழியனுப்பி வைக்கிறார்
அப்பாவும் அம்மாவும்
ஊரார்
உறவினர்கள்
முன்னிலையில் ,

நான்காயிரம்
நண்பர்கள்
புடை சூழ
ஆரவாரத்துடன்
ஆற்றங்கரை
நோக்கி நகர்ந்து
செல்கிறது மகன் ஏறி
படுத்துக்கொண்ட
திரும்பி
வராத கடைசி வாகனம் “……….!!!!!!

அம்மாக்களின் அன்பும் அக்கறையும்…..!!!!!
****************************************************
காற்றை விட
மிக வேகமாக
சுழன்றுக்கொண்டிருப்பவள் அம்மா,

இரவு
விடியாத
பொழுதும்
நான்கு மணிக்கே
விழித்துக்கொள்கிறது
அம்மாவின் கண்கள்,

விழித்துக்கொள்கிற
கண்களில்பசை தடவி
பேப்பரை ஒட்டிவைத்ததை
போல கண்களைமூடி மூடி
திறக்கிறது
அம்மாவின் இமைகதவுகள்,

சாணம் தெளித்தல்,
வாசலை பெருக்குதல்,
கோலம் போடுதல்,
பாத்திரம் விளக்குதல்,
தண்ணீர் பிடித்தல்,
சாப்பாடு செய்தல்,
துணி துவைத்தல்,
வீட்டை சுத்தம் செய்தல்,
மகன், மகளுக்கு தலை வாருதல்,
ஆடு, மாடுகளுக்கு புல்லை பரிமாறுதல் ,
விறகு பொருக்குதல்,
அப்பாவுக்கு பணிவிடை செய்தல்,

காற்றை விட
மிக வேகமாக
பம்பரமாக  சுழல்கிறது
அம்மாவின் உடலும்
அன்பும் அக்கறையும்,

நிலவை காட்டி
பசியாற்றிய
அம்மாவின் கைகளுக்கு
வெற்றிலையும் பாக்கும்
சுண்ணாம்பும் மட்டுமே உணவாகிறது
அப்பாவின் குடிசையின் வாசலில்,

கதை கதையாக
கூறி உறங்க வைத்த
அம்மாவின் கண்கள்
சாமம் வரை உறங்காமல்
விழித்திருக்கிறது
அடுப்பு மோடையில் ,

மகன், மகள், கணவர்
என எல்லோருக்கும்
பகிர்ந்தளித்த அம்மாவுக்கு
உணவாகிறது அப்பா மிச்சம்
வைத்த ரசமும்
கறி இல்லாத
எலும்பு துண்டுகளும்,
கொஞ்சோன்டு
சோறு மட்டும்தான்.

கடைசி கவிதை…..!!!!
***************************
இன்னும்
சற்று நேரத்தில்
எழுதப்பட இருக்கிறது
அவனுடைய
கடைசி கவிதை

ஜன்னலை
திறந்து வைத்து
மரத்தை பார்க்கிறேன் ,
அணிலொன்று
ஒரு மாம்பழத்தை முழுவதுமாக
தின்று முடித்துக் கொண்டிருந்தது ,

படுத்துக்கொண்டு
அந்தரத்தில் தொங்கும்
மின்விசிறியையே
உற்று பார்க்கிறேன்
மரம் இல்லாமல்
காற்றை எங்கிருந்து
கடன் வாங்கி
கொடுத்துக்
கொண்டிருக்கிறதென்று புரியாமல் ,

கண்ணாடியில்
என் முகத்தை பார்க்கிறேன்
மீசையும் தாடியும்
நீண்டு வளர்ந்திருந்தது
கண்ணாடியில்
தெரியும் மீசையை
முருக்கிவிட்டு
கொண்டிருந்தது
கண்ணாடியின் கைகள் ,

சமையல்
அறையிலிருந்து
யாரோ
அழுகிற சத்தம்
கேட்டு ஓடிப்போய்
பார்க்கிறேன்
அம்மாவும்
சண்டைக்கோழியொன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன,

சமாதானம் செய்து
வைத்து விட்டு
ஒரு பிடி கறிச்சோற்றை
தின்றவாறே வீட்டிலிருந்து
வெளியேறுகிறேன்

எனக்கு
முன்பாகவே என் உயிர்
வாசலில் வந்து காத்து
கொண்டிருக்கிறதாம்
விடிய காலையிலிருந்தே ” …….!!!!!!!

உழைக்கும் மக்களின் உணர்வும்
உணவும்  மாட்டுக்கறி……!!!!!!

***************************************
காலையில்
ஐந்து மணிக்கே
சைக்கிளை
எடுத்துக்கொண்டு
வேகமாக மிதித்து ஓட்டிய கால்களுக்கு
ஆறுதல் கிடைத்தது
இரண்டு முட்டி
எலும்பு துண்டுகள் தான்,
பனியில்
நனைந்தவாறு
ஓட்டிக்கொண்டு
போன அப்பாவுக்கு
முட்டி எலும்பு
துண்டுகளை பொடியாக
வெட்டி சூப்பு வைத்து கொடுக்கிறாள் அம்மா,
ஞாயிற்றுக்கிழமை
காலை வேளையில்
காக்கைகளும்
நாய்க்குட்டிகளும்
தெருவெங்கும்
அலைமோதுகிறது
மாட்டுக்கறி குழம்பின்
ருசியை அறிய,
பச்சை
புற்களை தின்ற
மாடுகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் மல்லாக்க
படுத்துக்கொண்டு
கறி வாங்குகிறவர்களின்
முகங்களையே
பார்த்து கண்ணீரை
வடிக்கிறது ,
மாட்டுக்கறி குழம்பை
திருட்டு
தனமான ருசி
பார்க்கிறது பக்கத்து
வீட்டு பூனைக்குட்டிகள் ,
கிருஷ்ணர்
போல வேடமிட்ட
குழந்தைகள்
மாட்டு கால் எலும்பு
துண்டுகளை
புல்லாங்குழலாக நினைத்து
உறிஞ்சி இழுத்தவாறு
மூச்சு வாங்க ஓடுகின்றன கிணற்று மேட்டு தெருவெங்கும்,
கறிக்கடையெங்கும்
மக்கள் கூட்டம்
நிரம்பி வழிகிறது,
நிரம்பி வழியும்
கூட்டத்தை
கிழித்துக்கொண்டு
கறிகளை தூக்கி
கொண்டு
பறக்கிறது காக்கைகள்,
பச்சை நிற
இலை மேல்
வெள்ளை நிற சாதம்
காவி நிறம்
மாட்டுக்கறிக்குழம்பு
தேசிய கொடி பறக்கிறது
உழைக்கும் மக்கள்
வாழும் உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை
காலை வேளையில்,
இரவு ழுவதும்
பறை இசையை
வாசித்து
அலுத்துப் போன
அப்பாவுக்கும்
அண்ணனுக்கும் வெந்துக்கொண்டிருக்கிறது
சட்டியில் மாட்டுக்கறி
எலும்பு துண்டுகள்,
தலைகீழாக
தொங்குகிறது
மாட்டின் தொடைகள்
தொடைகளை தொட்டுப்பார்க்கிறார்கள்
மேல் தெருவு
மாணிக்கம் மகனும்
ஐய்யப்பன் மகனும்
அரை கிலோ கறி வாங்கி யாருக்கும் தெரியாமல்
சமைத்து கடித்து இழுத்திட …..!!!!
Alla vendum Pillai Poem By Navakavi அள்ள வேண்டும் பிள்ளை பூமியை! கவிதை - நவகவி

அள்ள வேண்டும் பிள்ளை பூமியை! கவிதை – நவகவி




பூமத்திய ரேகையின் நீளம்- இரு
கைகள் வேண்டும் எனக்கு!
ஏந்த வேண்டும் பூமிப் பிள்ளையை- என்
தாய்மை தவழும் இடுப்பு!
என்- கண்ணீர் மொண்டு -புவியை
கழுவிட வேண்டும்!
என்- புன்னகை கொண்டு- புவிக்கு
மெருகிட வேண்டும்!
(பூமத்திய)
திருவிழாவில் வேண்டும் என்றே….
தவறவிட்ட பிள்ளை.
புவிமகளே உன்னைத் தேடி….
கண்டெடுப்பார் இல்லை.
விண்வெளியில் பூமியின் விசும்பல்
விழுகிறதே விண்மீன் செவியில்.
வரலாற்றின் ரத்தச் சிதறல்
வழிந்தோடி வரும்வை கறைகள்.
கண்ட பின்பும்… எடுக்கலையே….பூமி என்னும் புதையல்.
(பூமத்திய)
காலமெனும் நதியின் ஓரம்….
கரையில் பூத்த தாழை
புவிமகளே நீதான் ஆனால்…..
வாசம் போன ஏழை.
பூநாகம் உள்ளே வாசம்;
புவிப் பூவில் விஷ நெடி வீசும்.
புவிப்பகைவர் முள்ளாய் குந்த
பூமடலே ரம்பம் ஆகும்.
தெரிந்திருந்தும்…. தேடுகிறேன்
…. எங்கே சந்தோஷம்?
(பூமத்திய)
தாலாட்டை போர்ப்பாட் டாக்கி…..
துயில் கலைத்தேன் புவியை.
பாட்டுக்குள் பதியன் போட்டேன்….
அரிமாவின் ஒலியை!
அக்குளுக்குள் புவியை வைத்தேன்!
அக்கினியை உடுத்தச் செய்தேன்!
சிக்கலுக்குள் சிக்கிவிடாமல்
செல் வழியில் ஒளியை பெய்தேன்!
கதிர் ஒளியை…. கத்தரித்தேன்…. நடை விரிப்பாய் நெய்தேன்!
(பூமத்திய)

Anbu Magan Short Story by Shanthi Saravanan. சாந்தி சரவணனின் அன்பு மகன் சிறுகதை.

அன்பு மகன் சிறுகதை – சாந்தி சரவணன்




“அப்பா, டாக்டர் கொடுத்த மருந்து சீட்டு எங்கே?” என கேட்டுக் கொண்டே தசரதன் அறைக்குள் வந்தான் ராம்.

“இங்கு இருக்கு பா”, என்றார் தசரதன்.

தசரதன் தபால் துறையில் கணக்காளராக ஓய்வு பெற்று ஆறு மாதங்கள் ஆகின்றன. அவரின் மனைவி ரோஸி. தசரதன் இரண்டாம் ஆண்டு கல்லூரி படிக்கும் போது முதல் வருடம் ரெக்கிங்ல் அறிமுகமானாள் ரோஸி. முதல் சந்திப்பிலேயே அவரின் மனம் அவளிடம் பறி போனது.

ரோஸி எல்லா ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சர்ச்சுக்கு சென்று ஏசுவை தரிசனம் செய்வாள். தசரதன் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ரோஸியின் தரிசனத்திற்காக சர்ச்சுக்கு செல்வார்.

மூன்றாம் வருடம் இறுதியில் தான் தசரதன் தன் காதலை ரோஸியிடம் சொல்ல தைரியம் வந்தது. ரோஸிக்கும் தசரதனை மிகவும் பிடிக்கும். தசரதன் தன் காதலை தெரிவிக்கும் போது அதை மனமார்ந்து அன்புடன் ஏற்றுக் கொண்டாள் ரோஸி. இதற்கிடையில் ரோஸி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது அவளின் வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் செய்ய முற்பட்டார்கள். ரோஸி தசரதனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம் பிடித்தாள். அவர்களின் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. அவர்களின் மதத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தன் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்தனர்.

இனி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடப்பது என்பது சாத்தியமில்லை என உணர்ந்த ரோஸி, “என்னங்க நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளலாம்” என்றாள். திருமணம் எளிமையாக நண்பர்கள் சூழ நடந்தது.

தபால் துறையில் தற்காலிகப் பணி, நண்பரின் சிபாரிசு முலம் கிடைத்தது. பின் தேர்வுகள் எழுதி நிரந்தர பணியாளர் ஆனார். திருமணம் முடிந்து இரண்டு வருடம் கழித்து தான் மகன் ராம் பிறந்தான். அந்த இரண்டு வருட திருமண வாழ்க்கை தசரதன் ரோஸி அன்னியோன்யமாக வாழ்ந்தார்கள். மகன் பிறந்த ஓரே மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மகனை வளர்க்கும் ‌பொறுப்பை கணவனிடம் கொடுத்து விட்டுக் கண்ணை மூடி விட்டாள் ரோஸி. பிரிந்த சொந்தமெல்லாம் ஒன்று சேர்ந்தது‌ . தசரதனை மறுமணம் ‌செய்து கொள்ள சொல்லிப் பல தொந்தரவுகள் அவன் ‌குடும்பத்தில். தசரதன் திடமாக மறுத்துவிட்டார்.

“வாரணம் ஆயிரம்” படத்தில் வரும் ‌அப்பா, தசரதன். ராமைத் தவிர வேறு உலகம் இல்லை தசரதனுக்கு.

அப்பா, “‌டவல் எடுத்து வைச்சிக்கோங்க” என்ற ராமின் குரல் தசரதனை நினைவுகளில் இருந்து விடுவித்தது.

“சரிப்பா”.

“அப்பா, இது‌ நான் ஸ்கூல் படிக்கும் போது உங்கள் பிறந்த நாளுக்கு வரைந்து கொடுத்த ஒவியம். நீங்கள் பத்திரமா எடுத்து வைச்சிருந்தீங்க. அதையும் எடுத்து வைச்சிக்கோங்க பா”

“சரி, பா.

“அப்பா அப்பா”

“என்னப்பா”

“இதுல உங்கள் கல்யாண ஆல்பம், நம்ம இரண்டு பேரும் எடுத்து கொண்ட புகைப்படம் எல்லாம் இருக்கு. உங்களுக்கு போர் அடிக்கும் போது எடுத்து பாருங்கள். இதை நானும் இன்னொரு பிரின்ட் போட்டு எனக்கு வைத்து இருக்கிறேன்” என்றான்.

மகனை நினைத்து சரியான புள்ளைடா …..என் புன்னகைத்துக் கொண்டார்.

“ஒகேவா பா”, என மகனின் கேள்விக்கு, ‘சரிப்பா’ என சொல்லிவிட்டு, பேக்கிங்கில் பிஸியாக இருந்தார்.

அப்பா, “அந்த ஸப்பாரி டிரஸ்‌ நம்ப இரண்டு பேரும் ஒண்ணா ஓரே கலரில் எடுத்தோமே!”

“ஆமாம் பா!”

“அதையும் மறக்காம எடுத்து வைச்சிக்கோங்க. வெளியே போகும் போது போட்டுக்க நல்லா இருக்கும். மருந்து, மாத்திரை, பழைய ரிப்போர்ட் எல்லா பயிலையும் ஒண்ணா வையுங்கள்”.

“சரி டா.”

“முக்கியமா சுடுதண்ணீர் பை, கம்பிளி, ஷோட்டர் எல்லாம் ஒண்ணா வையுங்கள்”.

“டேய் நான் பார்த்துக்கிறேன். நீ முதல இங்கிருந்து கிளம்பு” என்றார் தசரதன்.

சிறிது நேரத்தில் இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர்.

காரில் ஏறியவுடன் மறுபடியும், ‌”அப்பா எல்லாவற்றையும் ‌எடுத்துகிட்டீங்களா. அங்கு போனவுடன் ‌எதாவது தேவை என்றால் உடனே எனக்கு போன் செய்யுங்க”.

“டேய் ராம் எனக்கு 60 வயசு ஆகுது. நான் பாத்துக்கிறேன் பா.. நீ கவலைப் படாமல் இரு”.

பதில் ‌இல்லை ராமிடம்

இடையிடையே கைப்பேசி அடித்துக் கொண்டே இருந்தது. மனைவி மஞ்சு தான்.

ஏனோ அவன் கைப்பேசியை எடுக்கவேயில்லை…

இன்னும் 20 நிமிடத்தில் அந்த இடம் வந்து விடும். என் ஆருயிர் அப்பாவை இறக்கிவிட்டு நான் தனியே போக வேண்டும்.

இதுவரை நான் இந்த வெறுமையை உணர்ந்ததில்லை. ஆனால் இன்று என யோசித்தபடி கருப்பு கேட் வாசலில் கார் நின்றது. “அன்னை தெரேசா முதியோர் இல்லம்” என கரும் பலகை இவரிகளை வரவேற்றது.

அப்பாவை கண்கள் கலங்கப் பார்த்து “சாரி பா” என்றான்.

“டேய் முட்டாள், இது நான் எடுத்த முடிவு. மஞ்சுக்கு உன்னோட மகிழ்ச்சியா இருக்க ஆசை. நான் இங்கு மகிழ்ச்சியா இருப்பேன். அவ நான் பார்த்து உனக்கு கட்டி வச்சவ. நல்ல பொண்ணு தான்…போகும் போது அவளை அவுங்க அம்மா வீட்டிலிருந்து கூப்பிட்டு போய், சந்தோஷமாக வாழு. அது தான் எனக்கு வேண்டும்” என்றார்.

ராம் கண்ணீரோடு, “சரி பா” என சொல்லி பிரிய மணமில்லாமல் பிரிந்தான்.

மறுநாள் காலை முதியோர் இல்லத்திற்கு அலைபேசி வந்தது.

“தசரதன் சார் உங்களுக்கு போன்” என்றார் சுந்தர் விடுதி உதவியாளர்.

தசரதன், “இந்த பையன் இராத்திரி எப்போ விடியும் என ‌காத்திருப்பான். அவன் தானே என்று சொல்லியவாறு,
“ஹலோ” என்றார்.

மருமகள் மஞ்சு இணைப்பில், “மாமா, மாமா” என‌ அழுகையோடு.

படபடப்புடன் தசரதன் , “என்னம்மா என்னாச்சு….. ராம் எங்கே…”

மாமா, “அவர் நம்மை எல்லாம் விட்டுட்டுப் போய் விட்டார் மாமா…”

“என்னம்மா, என்ன சொல்ற?” நடுக்கத்துடன் தசரதன்.

“ ஹார்ட் அட்டாக் மாமா…. நான் தப்பு செய்துவிட்டேன் மாமா” என அவள் அந்த முனையில் அழுதபடி சொல்லிக்கொண்டிருக்க ….

கையில் இருந்து போன் நழுவ, அப்படியே மயங்கி விழுந்தார் தசரதன்.