இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 95 – “இசை முறிச்சதேனடியோ”? – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 92: இசையே பாய் கொடு – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 91: பாடல் முடிந்த பிறகும் இசை உலகில் பயணம் முடிவதில்லேயே… – எஸ் வி வேணுகோபாலன்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம் – மோகனா
பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா?
பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில், எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீனக் கவிதை பிறந்தது. . தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில்,தளங்களில் பயணித்தது. இவர்களை தமிழ் உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமைப் படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனும், , பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். துரோணரை நேரில் கண்டு பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து ,தலை சிறந்தவனாய் விளங்கிய ஏகலைவன் போல,பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
‘பாட்டுக்கோட்டை’யான பட்டுக்கோட்டை..!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஏப்ரல் 13, 1930 -உதிர்வு: அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர்.. எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை ஆணித்தரமாக வலியுறுத்திப் பாடுவது இவருடைய சிறப்பு. இப்போது இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.இந்த பூமிப்பந்தில் 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும், தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ‘பாட்டுக்கோட்டை’யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டையார். திரையுலகப் பாடல்களில் பட்டிருந்த கறைநீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும், வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களளும், முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதி பெருமை தேடிக்கொண்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
கவி பாடும் விவசாய குடும்பம்..!
தமிழ் நாட்டின் அன்றைய தஞ்சை மாவட்ட வளமான மண்ணில், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் குக்கிராமத்தில், 13.04.1930-ல் பிறந்தார்.– யின் இளைய மகனாகஇவரது தந்தையின் பெயர் அருணாச்சலனார்; ஈந்த அன்னையின் ப்பெயர் விசாலாட்சி, இந்த தம்பதியின் இளைய மகனாக பட்டுக்கோட்டை அவதரித்தார். அவர்களின் குடும்பம் ஓர் எளிய விவசாய குடும்பம். இவரது தந்தையும்கூட கவி பாடும் திறன் பெற்றவர். ‘முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி’ எனும் நூலையும் அவர் தந்தை இயற்றியிருக்கிறார். தந்தை கவிஞராக இருந்ததால், மகன்களான கணபதி சுந்தரமும், கல்யாண சுந்தரமும் கவிபாடும் திறனை இயல்பிலேயே இல்லத்திலேயே வளர்த்துக் கொண்டனர்..
அண்ணன் தந்த கல்வி..!
பட்டுக்கோட்டையார் துவக்கக்கல்வியை அண்ணன் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை என்பவரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அத்துடன் அவரது பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. அவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூடம் செல்ல பிடிக்கவில்லை. இரண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்யாணசுந்தரம் பள்ளிக்கு போகவில்லை.தன் அண்ணனிடமே அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டார். அவருக்கு வேதாம்பாள் என்ற சகோதரியும் இருந்தார்.
பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம், திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள்.
மக்கள் கவிஞனின் மகத்துவம்..!
கல்யாணசுந்தரம் தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் அனைத்தும் கிராமியப் மணம் கமழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர் கல்யாணசுந்தரம். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புத பாடல்களாக வடித்து, இசைத்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது. 1955ஆம் ஆண்டு “படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியரை இவரிடம் இருந்ததைக் கண்டனர்.
பட்டுக்கோட்டையின் இளமை..!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நல்ல குரல் வளம் மிக்கவர். அதனால் பாடுவதிலும் வல்லவர். .நாடகம் மற்றும் திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர் கல்யாணசுந்தரம். இந்த குணமே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது.. 1946 ஆம் ஆண்டு தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.
‘சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரி இருக்கிறது. அந்த ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவியது. நான் அப்போது எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் “எம்மைப் பார், எம் அழகைப் பார்” என்று குலுங்கியது. அங்கே , ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இந்தப் பாடல்
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே – கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே –
கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு –
ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார்.
இடதுசாரி இயக்கத்தின் இடையறா ஈர்ப்பாளி..!
கல்யாணசுந்தரம் இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
பட்டுக்கோட்டையின் பன்மமுக பரிமாணங்கள்..!
- விவசாயி
- மாடுமேய்ப்பவர்
- மாட்டு வியாபாரி
- மாம்பழ வியாபாரி
- இட்லி வியாபாரி
- முறுக்கு வியாபாரி
- தேங்காய் வியாபாரி
- கீற்று வியாபாரி
- மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
- உப்பளத் தொழிலாளி
- மிஷின் டிரைவர்
- தண்ணீர் வண்டிக்காரர்
- அரசியல்வாதி
- பாடகர்
- நடிகர்
- நடனக்காரர்
- கவிஞர்
தன்மானம் மிக்க பட்டுக்கோட்டையார்..!
திரை உலகில் நுழைந்து பாட்டு எழுத என்று பட்டுக்கோட்டையார் சென்னைக்கு வந்தார். அங்கு ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் 10-ம் நெம்பர் வீட்டில் ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார். அது மிகவும் சிறிய அறை. அதில் அவரது நண்பர்கள் ஓவியர் கே.என். ராமச்சந்திரன், நடிகர் ஓ.ஏ.கே.தேவர் இருவரும் அங்கே தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை துவக்க காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராகவும் தைரியசாலியாகவும் இருந்தார். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதி கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தை கேட்க பட அதிபரிடம் சென்றால்,. ‘பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ’ என்று எப்போதும் ஒரே பதிலைத் தந்தார். ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’ என்ற பட அதிபர் வீட்டிற்குள் போய்விட்டார்.உடனே கல்யாணசுந்தரம் சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தை கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை? இதோ ‘தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?’இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.
மனித நேயம் மிக்க பட்டுக்கோட்டையார்..!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதை பறிகொடுத்தவர் கவியரசு கண்ணதாசன். அதுபோலவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு புகழின் உச்சியில் இருந்து.ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டையை, கண்ணதாசன் நேரில் சந்தித்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டார்.அதற்கு அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் ஒரு சமயம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். மனித நேயமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் உள்ள மாமனிதர் பட்டுக்கோட்டையார்.அந்த காலத்தில் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும்,கேலியாகவும் விமர்சித்தார். கவிஞர் கண்ணதாசனும் அதற்குப் பலியானார். ஒரு விழாவில் பத்திரிகை ஆசிரியரை பட்டுக்கோட்டையார் சந்தித்தபோது, க்ண்ணதாசனைக் குறிப்பிட்டு, ”என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?” என்று கேட்டு உதைக்கப் போனார்.
எளிமையான பட்டுக்கோட்டை..!
“உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” -என்று ஒரு நிருபர், பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிருபரை ராயப்பேட்டையிலிருந்த தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்திருக்கிறார். பிறகு இருவரும் ரிக்ஷாவில் ஏறி மௌண்ட் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்புறம் பஸ்ஸைப் பிடித்து கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கி இருக்கின்றனர். கேட்டைக் கடந்து ஒரு டாக்ஸி பிடித்து வடபழநியில் தம் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்கினார்கள். கூடவே வந்த நிருபர், “கவிஞரே, வாழ்க்கை வரலாறு” என்று நினைவூட்டி இருக்கிறார்.உடனே பட்டுக்கோட்டையார், “முதலில் நடையாய் நடந்தேன், ரிக்ஷாவில் போனேன், பிறகு பஸ்ஸில் போக நேர்ந்தது. இப்போது டாக்ஸியில் போகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுல எங்கே இருக்குது வரலாறு?” என்று சிரித்துக்கொண்டே போய்விட்டாராம். இந்த எளிமைதான் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்.
வேடிக்கையும், விவேகமும் மிக்க கவிஞர்..!
ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் கல்யாணசுந்தரம் தான்பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஓர் இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இதனை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், ‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்’ என்றார்.
ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லை.. எனவே எல்லோரும் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.
‘சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!’
இந்த பாட்டு ஆரவல்லி படத்தில் வருகிறது..!
பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமின்றி, நகைச்சுவை பாடல்களுலும் வல்லவர்.
‘ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு – இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!’
பட்டுக்கோட்டை . ‘நான் வளர்த்த தங்கை’ என்ற படத்திலே போலி பக்தர்களை நையாண்டி செய்கிறார் .
இதோ அந்தப் பாடல்
‘பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே… ஹா… ஹா…
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை’
சமுதாயப் பாடல்களை ஏராளமாக எழுதி இருக்கிறார்.
‘வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்…
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்…’
‘சங்கிலித் தேவன்’ என்ற திரைப்படத்தில்
‘வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
”பொறக்கும் போது – மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது – எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது”
படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957
‘திருடாதே’ திரைப்படத்தில் குழந்தைகளுக்கு சொல்வது போல பெரியவர்களுகு பொதுவுடமை போதித்தல்.
‘கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற லையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும் ஆற்றலுக்கும் அவரின் ஆயுள் மிகக் குறுகியது.29 ஆண்டுகள் மட்டுமே..!ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது. 1959-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கௌரவாம்பாளுக்கும், குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) பட்டுக்கோட்டை அகால மரணம் அடைந்தார். 1959ஆம் ஆண்டு கல்யாணசுந்தரம் மறைந்த தினத்தில் கண்ணதாசன்
“வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்
வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்து வரும் நின்பெயரே!”
என்ற பாடலை எழுதி தங்களது நட்பை வெளிப்படுத்தினார். மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன
பட்டுக்கோட்டை பற்றிய ஆவணப்படம்…!
பட்டுக்கோட்டையாரைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார், அம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன். இதில் பட்டுக்கோட்டையாரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது கவிதை உலகம், இடதுசாரி ஈடுபாடு, வறுமை, திரை அனுபவங்கள் அனைத்தும் அவருடன் நெருக்கமானவர்ளுடனான பேட்டிகளின் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையாரின் மனைவி கௌரவாம்பாள், அவரது பால்ய நண்பர் சுப்ரமணியம், தியாகி மாயாண்டி பாரதி, எம்.எஸ்.விஸ்வநாதன், உள்பட கவிஞருக்கு நெருக்கமானவர்கள் அனைவரின் பேட்டிகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கவிஞரின் முக்கியமான 12 திரைப்பாடல்களின் காட்சியும், அவரது அரி்ய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது ஆவணப் படத்தின் தரத்தை உயர்த்துகிறது.
பட்டுக்கோட்டையாரின் துணைவியின் பதிவு..!
“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும்‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ‘அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக.‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுன பாட்டுத்தான்
“ஆடை கட்டி வந்த நிலவோ,
கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ” பாட்டு.
இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.“அன்னைக்கு அவுக அண்ணன் பொஞ்சாதிக்கு வளைகாப்பு. அப்போ நான் கிண்டலா, ‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு’ன்னு சொன்னேன். இதை, ‘கல்யாணப் பரிசு’படத்துல, அவுக பல்லவியா போட்டு பாட்டா எழுதிட்டாக. ‘இது நீ எழுதுன பாட்டு. இந்தா பிடி சன்மானம்’னு அந்தப் பாட்டு எழுதுனதுக்குக் கிடைச்ச பணத்தை என் கையில கொடுத்தாக.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போர வார்த்தையை நல்லா
எண்ணிப்பாரடா. (படம்: அரசிளங்குமரி – 1957)
குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்.
குள்ள நரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம்.
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ,
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ,
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா ,
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா ,
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா “.
இறப்புக்குப் பின்னர் பெருமைகள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், சந்திரபாபு, டைரக்டர்கள் பீம்சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார். 1993ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு மணிமண்டபம் அரசால் கட்டப்பட்டு 2000ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மக்கள் கவிஞரின் புகைப்படங்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது இன்று பட்டுக்கோட்டை போல மக்களுக்கான கருத்துக்களை விதைக்கும் பாடலாசிரியரைத் தேடவேண்டியுள்ளது.
நூல் அறிமுகம்: அனங்கலா ஜொ யெலாங்குமர் ’கதவுகள் திறக்கப்படும் போதினில்’ தமிழில்: ச.வின்சென்ட் – கருப்பு அன்பரசன்
விஞ்ஞானமும்.. நவீனமும்.. வளர்ச்சியும் கான்கிரீட் கட்டிடங்களாக முளைத்தெழும், வாய் திறந்த இருட்டு, வெளிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி முடிப்பதைப் போன்று அந்த பச்சை மூங்கில் சரசரக்கும் மலை கிராமத்திற்குள். இயற்கை வளங்களுக்கு எதிராக மனிதர்களின் பேராசை எளிய மனிதர்களின் சுதந்திரத்தை இயற்கையின் மேல் கொண்ட காதலை வளர்ச்சியின் பெயரால் வஞ்சகமாக தந்திரமாக களவாடி,பல வண்ண துணிகளைப் போர்த்தி எளிய மக்களின் எலும்புக்கூடுகளை செங்கற்களாய் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்றே எனக்கு கிடைத்தது.. இத்தனை நாள் இவ்வளவு மொன்னையாகவா இருந்திருக்கிறோம் என்று..
இந்திய ஒன்றியத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நாகாலாந்து தனி மாநிலம்..
முற்றிலும் மலை சூழ்ந்த பிரதேசம். 17 வகையான பெரிய இனக் குழுக்களும் 20க்கும் மேற்பட்ட சிறிய இனக் குழுக்களும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு மொழி பேசக் கூடியவர்கள்.
இனக்குழுக்களின் குரல்ஒலி எவற்றிற்கும் எழுத்து வடிவம் கிடையாது.
மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் மக்களின் அலுவலகத் தொடர்பு மொழியாகவும் இருப்பது ஆங்கிலம் மட்டுமே.
இந்தியாவின் விடுதலை குறித்து பிரிட்டிஷாரால் பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்ட காலத்திலேயே சைமன் கமிஷனிடம் எங்களை தனி நாடாக அறிவித்திட வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அங்கு இருக்கும் அரசியல் பேசும் குழுத் தலைவர்களால். தாங்கள் வாழும் பகுதியை 1947 ஆகஸ்ட் 14 அன்று தனி நாடாக அன்றைக்கு நாகாவில் இருந்த முன்னணி அரசியல் அமைப்புகள் அறிவித்தது. அந்த அறிவிப்பின் தொடர்ச்சியை இன்றளவும் நாகாலாந்து மாநிலத்தின் அமைதி இன்மையில் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
இந்திய விடுதலையைத் தொடர்ந்து, அங்கு இருக்கக்கூடிய முன்னணி அரசியல் அமைப்புகளோடு பல்வேறு வடிவங்களில் இந்திய அரசு நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதின் விளைவாக 1963ல் தனி மாநிலமாக கோஹிமாவை தலை நகராகக் கொண்டு அறிவிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மேற்பார்வையின் வழிகாட்டுதலோடு அங்கு இருக்கும் இனக்குழுக்களின் தனித்துவத்தை பாதுகாப்போம் என்கிற ஒன்றிய அரசின் உத்திரவாதத்தோடு.
பெரும் துயரம் என்னவென்றால் இப்படியான ஒரு இணைப்பினை ஏற்படுத்துவதற்காக அங்கே இருக்கக் கூடிய பல பழங்குடி மலை மக்கள் பெரும் துயரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாகி தங்களின் உயிரையும் ராணுவத்தின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலி கொடுத்து இருக்கிறார்கள் என்பதுதான் ரத்தம் தோய்ந்து வரலாறு. ஆனாலும் கூட இன்றளவும் அந்த மக்களின் தனித்துவ பண்பாடு கலாச்சாரம் பழக்க வழக்கம் என்பதெல்லாம் கேள்விக்குறியாக மாறி அவர்களது பேச்சுமொழி இத்தனை ஆண்டு காலமான பின்பும் எழுத்து வடிவம் இல்லாதது இருப்பது தான் பெரும் கவலையாகும்.
அவர்களது வாழ்நிலை வாழ்வியல் வழக்கங்கள் கலைக்கூறுகள் இப்படி அனைத்துமே எழுத்து வடிவம் இல்லாத வாய்மொழி ஒலி வடிவிலேயே இன்றளவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படிப் பேசப்படும் பாடப்படும் அனைத்தும் அந்த மக்களிலிருந்து படித்து முன்னேறியவர்கள், அறிவுத் தளத்தில் இன்றைக்கு இயங்கக் கூடியவர்கள் அவைகளை உள்வாங்கி ஆங்கிலத்தில் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தாய் மொழியில் இருக்கக்கூடிய உயிர் இன்னொரு மொழிக்கு கடத்தப்படும் பொழுது அதன் மொத்த வலியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாட்டங்களோடும் கடத்த முடியுமா என்பது கேள்வியாக இருந்தாலும் வேறு வழி அம் மக்களுக்கு கிடையாது என்பதே இன்றைக்கு இருக்கக்கூடிய நிஜம். இப்படியான கல்வி அறிவும் கூட 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அங்கு வந்து இறங்கிய கிறிஸ்துவ மதத்தின் கொடையாகும்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலங்களில் அங்கு இருக்கக்கூடிய நாகா மக்கள் தொகையில் மூவருக்கு ஒரு ராணுவ வீரர் என்கிற அடிப்படையில் மக்கள் வாழும் பகுதி முழுவதும் ராணுவத்தால் நிரப்பப்பட்டது. தன்னுரிமையை சுய நிர்ணயத்தை காப்பதற்காக மக்களால் திட்டமிடப்பட்டும்; தன் எழுச்சியாகவும் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் அப்போது ஆட்சியில் இருந்தவர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் கூட இன்றளவும் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது சின்ன சின்ன அளவில் பல்வேறு இனக்குழுக்களினால்.
அம் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள் அனைத்தும் மற்ற மாநிலங்களில் இருப்பதைவிட எல்லா விதத்திலும் பின்தங்கியே இன்றளவும் தொடர்வது இந்திய ஒன்றியத்தின் தலைமை பொறுப்பிற்கு அதன் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாகும். இது சிறுபான்மை மக்கள் குறித்தான அலட்சியத்தின் இன்னொரு முகமாகும். இந்தியாவின்
பன்முகத்தன்மையினை அங்கீகரித்து அரவணைத்து செல்வதில் தொடர்ந்திடும் இந்திய ஒன்றியத்திற்கு தலைமையேற்று நடத்தும் அரசின் அரசியல் நிலைப்பாட்டின் பிரதிபலிப்புகளே இவைகள் எல்லாமும்.
தொகுப்பிற்குள் நுழைவோம்.
இயற்கை எழில் கொஞ்சும் மலைகள்.. மலை முழுவதும் வானுயர வளர்ந்திருக்கும் மூங்கில் காடுகள்.
பச்சை மூங்கில் உரசி வரும் குளிர் காற்று.. அங்கொன்றும் இங்கொன்றுமாக எளிய மக்களின் குடிசைகள் வளர்ந்து வரும் நவீனத்தின் அடையாளங்களாக ஆங்காங்கே சிமெண்ட் வீடுகள்.. தென்கிழக்கு இந்தியாவின் ஓரத்தில் இருக்கக்கூடிய நாகாலாந்து மாநிலம். நவீனத்தின் நாகரிகத்தின் பெயரால் அந்த மலைவாழ் பழங்குடி இன மக்கள் மத்தியில் அதிகாரத்தின் விரல் பிடித்து நுழைந்து இருக்கக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளை சிதைத்து அவர்களின் வாழ்விடங்களையும் தன் வசப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது.
எழுத்து வடிவத்தில் இருக்கக்கூடிய பல இன குழுக்களின் நிஜ வரலாறு மாற்றி எழுதுவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பண்பாட்டுத் தளத்தில். குரல்ஓலி வடிவில் மட்டும் தங்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் கடத்திக் கொண்டிருக்கும் இப்படியான இனக்குழுக்கள் இந்தியாவிற்குள் எதும் இல்லை என்பதை நிறுவுவதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்கள் என யோசிப்பதை நம்மால் ஒதுக்கி வைத்து விட முடியாது. பாசிசம்.. லாபம் எதையும் செய்யும்.
இப்படியான சூழலில் பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவின் ஒவ்வொரு பகுதி வாழ் மக்களின் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் அதில் இருக்க கூடிய மனித குல மேம்பாட்டிற்கு அவசியமானவைகளையும் நாம் தெரிந்துதெரிந்து அறிந்து கொள்ள வேண்டியதென்பது பன்முகத்தன்மையின் உறுதிப்பாட்டுக்கு நமது பலத்திற்கு இன்னும் கூடுதல் சக்தியை அளித்திடும்.
நாகலாந்து மாநிலத்தின் பெண் ஆளுமைகள் பலரின் சிறுகதைகளையும் கவிதைகளையும் ஓவியங்களையும் தொகுப்பாக ஆங்கிலத்தில் கொண்டு வந்து இருக்கிறார் நாகா இனத்தின் பூர்வ குடிகளின் தொடர்ச்சியாக அறிவுத்தளத்தில் தீவிரமாக செயல்பட்டு, தன் மூலவேரின் அழகும் உறுதியும் திறமையயையும் ஆய்வு செய்து வரும் கவிஞர் சிறுகதை எழுத்தாளர் அனங்கலா ஜொ யெலாங்குமர்.
அதை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் ச. வின்சென்ட் அவர்கள். நல்லதொரு முறையில் சிறப்பாக வடிவமைத்து கடமை உணர்வோடு இந்திய நாட்டின் எல்லையோரத்தில் இருக்கக்கூடிய நாகாலாந்து மணிப்பூர் அஸ்ஸாம் பூர்வ குடிகளின்.. மலைவாழ் மக்களின் பன்முகத்தன்மையினை அறிந்து கொள்ள தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கிறார்கள் பன்முக மேடை வெளியிட்டகம்.
கள ஆய்வாளர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஓவியர்கள் எழுத்தாளர்கள் பத்திரிக்கையாளர்கள் திரைத்துறை சார்ந்தவர்கள் இப்படி பல பெண் ஆளுமைகளின் படைப்புகள் சிறுகதைகளாக கவிதைகளாக ஓவியங்களாக தொகுப்பிற்குள் அடங்கி இருக்கிறது. இவர்கள் அனைவருமே நாகலாந்து மண்ணின் பூர்வ குடிகளின் வாரிசுகள். நவீன உலகில் மாறி, மாற்றப்பட்டு வரும் பல நல்ல ஏற்கத்தக்க தம் மூதாதையர்கள் கடைபிடித்து வந்த பல பழக்க வழக்கங்களை, வாய்மொழி இலக்கியங்களை சொல்லாடல்களை மரபுகளின் வேர் அறிந்து அவைகளின் ஊடுறுத்து கலை இலக்கியங்கள் வழியாக பொது சமூகத்திற்கு வெளிக்கொண்டுவரும் மிகச் சிறந்த பணியினை ஆங்கில வழியில் கல்வி பயின்ற இப் பெண்கள் சொந்த மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இதற்கான பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோகிமா நகருக்கு அருகாமை மலை கிராமம் ஒன்றில் குடியிருக்க கூடிய அரசு ஊழியர் ஒருவர்.
ஓய்வு பெறக்கூடிய சூழலில் அவரின் மனதையும் ஓய்வு பெற்ற பிறகு அவரது எண்ண ஓட்டத்தையும் பதிவு செய்து அதன் ஊடறுத்து நவீனமும் விஞ்ஞானமும் கான்கிரீட் கட்டிடங்களாக முளைத்தெழும்.. வாய் திறந்த இருட்டு வெளிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி முடிப்பதைப் போன்று அந்த மலை கிராமத்திற்குள் நவீனமும் வளர்ச்சியும். இயற்கை வளங்களுக்கு எதிராக மனிதர்களின் பேராசை எளிய மனிதர்களின் சுதந்திரத்தை இயற்கையின் மேல் கொண்ட காதலை வளர்ச்சியின் பெயரால் களவாடிச் செல்கிறார்கள் என்பதை தனி மனித எண்ணத்திலிருந்து படைத்து இருக்கிறார். எமி_சென்லா_ஜாமீர் எழுதிய குன்றுகள்_வீடுகளாய்_வளரும்_இடம் என்கிற தன்னுடைய சிறுகதையில். குறிப்பிட்ட ஒரு நகரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் பொழுது அல்லது நிறுவப்படும் பொழுது அந்த நகரைச் சுற்றி இருக்கக்கூடிய அத்தனை நிலங்களையும் எளிய மக்களிடமிருந்து தங்களின் கள்ளத்தனம் மிகுந்த குறுக்கு புத்தியால் விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட்டுகள், வியாபாரிகள், பணம் தின்னிகள் என்பதை அந்தப் பெரியவரின் வலியோடு அம் மலை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை கதைக்குள் அணுகியிருக்கிறார்.
வெட்டுப்பட்டது என்கிற கதை
விஷ்ய_ரீற்றா_க்ரெச்சா என்பவரால்
எதிரிகளின் தலை அறுத்து கொண்டுவரும் மரபில் வந்த இன குழுக்களின் தொடர்ச்சிகள், நிகழ்காலத்தில் எதிர் எதிர் அரசியல் அமைப்புகள் நடத்தக்கூடிய நீயா நானா போராட்டத்தில் கைகளில் கொலை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அரசு பேருந்துகளை எரித்துக் கொண்டும்.. கடைகளை சூறையாடிக் கொண்டும் மைதானம் ஒன்றில் ஒருவருக்கு ஒருவர் தாக்குதல் நடத்திட எதிர் எதிரில் நிற்கும் பொழுது; அறிந்த அந்தக் கிராமத்தில் இருக்கக்கூடிய பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
ஆயுதங்களோடு இருக்கக்கூடிய ஆண்களிடத்தில் அவர்களின் வன்முறைக்கு எதிராக பேச்சு நடத்தி அவர்களின் சண்டையை தடுத்து நிறுத்துகிறார்கள். கிராமம் அமைதியாகிறது. தமக்கு எதிரான குழுவைச் சார்ந்தவர்களின் தலைகளை அறுத்த மரபில் வந்த வாரிசுகளின்
மன மாற்றத்தை கண்டு அவர்களின் உயிர் மேல் கொண்ட காதலை கண்டு
வன்முறை மரபின் கடைசி எச்சமாக இருக்கக்கூடிய அந்த முதியவர் ஒருவரின் வழியாக கதையை இனக்குழுக்களின் தொடக்க கால பழக்கவழக்கங்கள் பண்பாடுகள் வழியாக இன்றைய அரசியல் நிகழ்வையும் அழகாக தெளிவாகச் சொல்லி இருப்பார்.
பாலியல் கொடூரத்திற்கும்,தவறுக்கும், குற்ற உணர்ச்சிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை அந்த மக்களின் வாழ் நிலையில் இருந்து
மன்னிக்கும்_சக்தி என்கிற கதையில்
அவினுஓ_கையர் எழுதியிருப்பார் நிகழ்காலப் பெண்களின் வலியோடு.
ஆணாதிக்கம் வலியுறுத்தியும் பெண் உடல் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அம்மக்களுக்கு கல்வி அறிவு வழங்கிய கிருத்துவமும் எப்படி போற்றி வளர்க்கிறது என்பதை
தொகுப்பில் இருக்கக்கூடிய பல கதைகள் இனக்குழுக்களில் ஆரம்பித்து இன்றைய காலம் வரையில் மக்களின் பழக்க வழக்கங்களில் வழியாக
ஆழமாக சொல்லி இருக்கிறார் கதை ஆசிரியர்கள் ஆணாதிக்கத்தின் திமிர்த்தனத்தை.
ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்களின் வலுவான கருத்துக்களும் கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.
பின்வரும் கவிதைக்குள்
கடைசி வரியில் ஆண் கடவுள் என்று முடிக்கும் பொழுது.
“கடவுளுக்கு மேலே பெண்” என்று முடிப்பார் கவிஞரும்
இத்தொகுப்பின் ஆசிரியருமான
அனுங்லா jo லாங்குமார்
ஆண்:
தரைக்கு மேல் படுக்கைக் கால்கள்
பெண்:
படுக்கைக் கால்களுக்கு மேல் படுக்கைச் சட்டம்
ஆண்:
படுக்கைச் சட்டத்திற்கு மேல் கட்டில் பலகை
பெண்:
பலகைக்கு மேல் அந்தப் பெண்
ஆண்:
அந்தப் பெண்ணுக்கு மேல் அந்த ஆண்
பெண்:
அந்த ஆணுக்கு மேல் நெய்யப்பட்டத் துணி
ஆண்:
நெய்யப்பட்டுத் துணிக்கு மேல் கூரை விட்டங்கள்
பெண்:
கூரை விட்டங்களுக்கு மேல் உத்தரங்கள்
ஆண்:
உத்தரங்களுக்கு மேல் பனை ஓலை கூரை
பெண்:
பனை ஓலை கூரைக்கு மேல் முகட்டில் ஓலை
ஆண்:
முகட்டு ஓலைக்கு மேல் மூங்கில் முகட்டுத் தொப்பி, அதன் மேல் கடவுள்.
பெண்:
கடவுளுக்கு மேல் பெண்.
நாகா நாட்டுப்புறப் பாடல்.
ஆணும் பெண்ணும் பாடுவதாக.
பெண்ணுடைய சொல்தான் முத்தாய்ப்பு.
மண்ணில் ஆணாதிக்கம் தொடங்கிய அதே காலகட்டத்தில் அதற்கு எதிரான பெண்களின் குரலும் வலுவாக பதிவாகி இருக்கிறது என்பதை நாகாலாந்து தொகுப்பில் காணப்படும் இந்த நாட்டுப்புறப் பாடலும் தெளிவாக்கி இருக்கிறது.
இப்படி ஆழமான அழகியல் சார்ந்த அரசியல் இணைத்து பல கவிதைகளும் சிறுகதைகளும் ஓவியங்களும் தொகுப்பு முழுவதும்.
அரசு அதிகாரம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய தீவிரவாத இன குழுக்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் அப்பாவி எளிய மக்களின் அச்சத்தையும் மன உளவியலையும் தங்களின் சிறுகதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.
கதவுகள்_திறக்கப்படும்_போதினில் என்கிற இந்தத் தொகுப்பில்
12 சிறு கதைகளும்
19 கவிதைகளும், பாடல்களும்
12 ஓவியங்களும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிக்கும் நாம்.. கொண்டாடக்கூடிய நாம்.. ஒற்றை கலாச்சாரம் ஒற்றை மொழி இப்படியான பாசிசக் கருத்துக்களை எதிர்க்கக் கூடிய நாம்.. நாகாலாந்து மக்களின் பல இன குழுக்களின் பண்பாடு கலாச்சாரம் அவர்களின் வாழ்வு முறை அரச பயங்கரவாதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வு எல்லாவற்றையும் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.
நமக்கான திறவுகோலாக இந்தத் தொகுப்பு இடம்பெறும் என்பது நிச்சயம்.
இந்த தொகுப்பை கொண்டு வருவதற்கு
பெருமுயற்சி எடுத்த அனைவருக்கும் நம்முடைய அன்பினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வோம்.
கருப்பு அன்பரசன்.
நூல் : கதவுகள் திறக்கப்படும் போதினி
நாகாலாந்து பெண் படைப்பாளிகளின் தொகுப்பு
ஆசிரியர் : அனங்கலா ஜொ யெலாங்குமர்
தமிழில்: ச வின்சென்ட்
விலை : ரூ.₹300/-
வெளியீடு : பன்முக மேடை
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
ஒரு பாடல் அனுபவம் கவிதை – ச.லிங்கராசு
உயிரையே விலை கேட்கும் பாடல்கள்
இசைப் பாடல்கள்
சிலர் உயிர் கலந்து பாடும் போது
மதி மயங்கிப் போகிறேன்
மண்ணில் சாய்கிறேன்
மனதோ
பாடச் சொல்லிப் பார்க்கிறது
என்னைக் கேட்கிறது
முயலுகிறேன்
முயன்று தோற்றுத் துவளுகிறேன்
வெறுத்துப்
போகிறேன்
பேசும் சித்திரங்கள் என்னை
பேதையாக்கி விடுகிறது
தூரிகை எடுக்க கையும்
துடிக்கிறது
துடித்தென்ன ஒரு கோடு போட
முடியாது துவண்டு விழுகிறது
பேசும் கவிதைகள் என்னை
பித்தனாய்ப்பிறக்க வைக்கிறது
சொற் சுவையில் சுருண்டு
கிடக்கிறேன் சோகம் மறக்கிறேன்
இங்கும் கூட சும்மா கிடக்கிறதா
இந்த மனது?
கவிதை வடித்துப் பார் என்கிறது
கல்லில் நாரா உரிக்க முடியும்?
ச.லிங்கராசு
98437 52635