கவிதா பிருத்வியின் கவிதைகள்
உயிர்த் துடிப்பு
******************
புன்னகை மறைத்தாய்..
சுவாசம் மறைத்தாய்..
கரியமிலவாயு உள்நிறுத்தி
நுரையீரலுக்குச் சவால் விடுக்கிறாய்..
முகத்தில் கவசத்துடன்
காற்றிற்கு உயிர் தவிக்க
மூச்சு முட்டும் நேரத்தில்
ஆக்ஸிஜன் தேவையாம்..
செயற்கை குழாய் சுவாசத்தில்
உயிர் துடித்தது..
எங்காவது ஓர் வனத்திற்குள்
எனை நாடு கடத்துங்கள்
இயல்பாய் சுவாசித்துக் கொள்கிறேன் என்றது _ உயிர் துடிப்பு..
ஏனென்று கேட்க அரவமில்லை..
காத்திருந்து காத்திருந்து
உயிர் காற்று கடந்து போனது..
அப்பாடா..
இனி அடைத்து வைக்க ஆளில்லை..
சுதந்திரமாய் பெருமூச்சு விட்டது உயிர்!!
காத்திருப்பு
***************
நித்தம் நித்தம்
கொலுசின் ஓசை
காதுகளில் ஒலிக்கிறது…
சுவர்களின் கிறுக்கல்கள்
கதைபேச அழைக்கின்றன..
ஆட்டம் இல்லா ஊஞ்சல்
மகிழ்ந்த நிஜங்களைச் சொல்கிறது..
அடுப்படி பொருள்கள்
வைத்தது வைத்தபடி..
கூட்டாஞ்சோறு
விளையாட ஆளில்லாமல்
ஓய்ந்து கிடக்கிறது..
கரடியும் பூனையும்
கொஞ்சிக் கொஞ்சி
சோறூட்டக் காத்திருந்து
சாய்ந்து பார்க்கிறது..
மெத்தையும் தலையணையும்
ரயில் வண்டி விளையாட்டிற்கு
யாரைச் சுமக்க நானென்று
கேட்காமல் கேட்கிறது..
இவைகளோடு
ஓர் ஓரமாய் நானும்..
காத்திருக்கிறேன்
அடுத்த விடுமுறைக்காக..
**************
குழந்தை கைக்கு
அகப்படாமல்
விளையாடுகின்றன ஈக்கள்!
*********
பௌர்ணமி நாளில்
கடற்கரை மணலில்
தவமிருக்கும் படகு
*********
நிழலாக படகுகள்
கடலலை மேலே
நிலவின் ஒளியில்!
*********
கதை சொல்கிறது
பழைய வீட்டு திண்ணை
அம்மா இல்லை!
********
கிணற்றடியில்
கதை பேசும்
சிட்டுக்குருவிகள்!
********
தூளியில் ஆடும்
பிள்ளைச் சத்தம்
அம்மாவின் சீலை!
********
சக்கரமில்லா நடைவண்டி
பரணில் இருக்கிறது
பழைய வீட்டில்!
********
சிட்டுக்குருவி கிரீச்சிட்டது
கூடில்லா கருகிய கிளையில்
வெந்து தணிந்தது காடு!
– கவிதா பிருத்வி
தஞ்சை.