’பாடம்’ சிறுகதை – தங்கேஸ்
நேரம் காலை பதினொரு மணிக்கு மேல் இருக்கும். . நல்ல ஏறு வெய்யில் அடிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்கூடத்தின் காம்பவுண்ட் கேட்டை கிறீச்சென்று சத்தத்தோடு திறந்தபடி கைலி கட்டிய ஒல்லியான உருவம் ஒன்று உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
நல்ல மிதமான வெயிலுக்கு ஆசைப்பட்டு விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். ஒன்பதாம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. .மூர்த்தி சார் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை சுற்றிலும் மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அமைதியான சூழலில் இரும்புக் கதவு திறக்ப்பட்டதும் அது எழுப்பிய திடீர் கிறீச் சத்தம் அனைவரையும் ஒரு தற்காலிக பதற்றத்திற்கு கொண்டு சென்றது.. புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் ஒரு கணம் கரிச்சான் குருவிகளைப் போல ஒட்டு மொத்தமாக தலையை மட்டும் உயர்த்தி மேலே பார்த்தனர். உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் அந்த ஒல்லியான உருவத்தைப் பார்த்ததும் சில மாணவர்கள் தங்கள் நண்பர்களிடம் ‘’ டேய் பாட்டுத் தாத்தா வந்துட்டார்ரா ‘’ என்று இரகசியமாக கிசு கிசுத்தனர்.
கசங்கி சாயம் போன ஒரு சிவப்பு நிற அரைக்கை சட்டை. மற்றும் மடித்துக்கட்டப்பட்ட பழுப்பேறிப்போன ஊதா நிற கைலி வேட்டி தோளில் அழுக்கடைந்த ஒரு ஜோல்னாப்பை சகிதம் கையில் பிடித்திருந்த ஊன்று கோலை ஊன்றிய படி அவர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். எப்படியும் எழுபது வயதுக்கு குறையாது –
நிதானமாக கைத்தடியை ஊன்றி ஊன்றி புல் வெளியில் பாதை கண்டு பிடித்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். வலது கண்ணிற்கு மேலே வலது கையை வைத்து ஒரு முறை பள்ளிக்கூடத்தை சுற்றிப் பார்த்தார்.
ஏற்கனவே பல முறை வந்து போன பள்ளி தான். அர்ச்சலான பார்வை என்றாலும் அதை வைத்து உடனே அலுவலங்கள் வகுப்பறைகள் எல்லாவற்றையும் ஊகித்துக் கொண்டார். பின்பு மெல்ல அலுவலகத்தைப் பார்த்து நடக்க ஆரம்பித்தார்.
மைதானத்தில் ஒன்பதாம் வகுப்பில் அமர்ந்திருந்த சர்வின் சாரிடம் கூட அனுமதி பெறாமல் வேகமாக ஓடிச்சென்று அவர் கையைப் பிடித்து ‘’ வாங்க தாத்தா நான் உங்களை ஹெச்எம் ரூமூக்கு கூட்டிட்டுப் போறேன் ‘’ என்றபடி தலைமையாசிரியரின் அறைக்கு முன் அவரை அழைத்துச் சென்று நிறுத்தினான்.
தலைமையாசிரியர் கவனமெல்லாம் கை பேசியிலேயே இருந்தது. காலையிலிருந்து செக்குமாடு போல சுற்றிக்கொண்டிருக்கும் எம்மிஸ் செயலியில் ஆசிரியர் மாணவர் வருகையைப் பதிவு செய்ய காலையிலிருந்தே அவர் போராடிக் கொண்டிருந்தார்.
வாசலுக்கு வெளியே நின்று கொண்டு உள்ளே அழைக்கப்படும் ஒரு வார்த்தைக்காக பெரியவர் வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை தலைமை ஆசிரியர் நீண்ட நேரம் கவனிக்கவேயில்லை.
‘’ தாத்தா சத்தம் குடுங்க அப்பத்தான் உள்ள கூப்பிடுவாங்க ‘’ என்றான். சர்வின்
‘’ ஐயா ‘’ என்றார் பெரியவர்
தலைமை ஆசிரியர் போனிலிருந்து பார்வையை எடுக்காமலேயே ‘’ குமாரு யாருன்னு போய் பாரு ‘’ என்று ஓ ஏ வை விரட்டினார்..
தடித்த சம்பளப் பதிவேட்டை அவசர அவசரமாக மூடி வைத்து விட்டு வெளியே வந்தான் குமார் .. பெரியவரைப் பார்த்ததும் சட்டென்று அடையாளம் கண்டு கொண்டு
‘’ தாத்தாவைப் பார்த்து வருசக்கணக்காச்சு எப்படி இருக்கீங்க ‘’ என்று அவரது கைகளைப் பிடித்து நலம் விசாரிக்க ஆரம்பித்தான்.
பெரியவரும் நெகிழ்ச்சியாக ‘ யாரு குமாரு தானா ? கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேன் .குமாரு. .என்ன கொரோனா காலத்துல அப்படியே வீட்டோட முடங்கிப் போயிட்டேன். வீடுன்னா என்ன சுத்திலும் நாலு மண்சுவரு சாக்குப் பையிலே அடைச்ச வாசக்கதவு அவ்வளவு தான்.’’
‘’ ஓஹோ ‘’ என்றான் குமார் . தாத்தா எப்பவுமே அப்படித்தான் பேசுவார்.
‘’ நாமெல்லாம் தப்பி பொழச்சிட்டோம் தாத்தா ‘’
‘’ ஆமா குமாரு …. கண்ணு நல்லா இருந்தவனே வெளியில போய் நடமாடி பொத்து பொத்துன்னு போய் சேர்ந்துட்டான். என்னை மாதிரி ஆளு வாசலை தாண்டினா எப்படி போய் நீஞ்சி வாரது ? – அதான் அப்படியே உள்ளாற முடங்கிப் போயிட்டேன். தவிர எனக்கு உள்ள இருந்தா என்ன வெளியில சுத்துனா என்ன உலகம் ஒரே மாதிரி தான இருக்குது ‘’
‘’ தாத்தா பேச்சு அப்டியேதான் இருக்ககு மாறவேயில்லை. ஆமா தாத்தாவுக்கு பார்வை கொஞ்சம் மங்கிபோச்சோ ?’’
ஏன் குமாரு எனக்கு எப்ப தெளிவாயிருந்துச்சு இப்ப மங்கிப்போறதுக்கு – என்ன ஒன்னுக்கு ரெண்டு தரம் எதையும் பார்த்தா அடையாளம் கண்டுக்கிற மாட்டேனா ?
அது சரி சாப்பாட்டுக்கெல்லாம் என்ன பண்ணீங்க ?’
‘’ ஏன் குமாரு ஊருக்குள்ள உன்னைப் போல நாலு நல்லவங்க இல்லாமலா போயிட்டாங்க.. இல்லன்னாத்தான் என்ன ? நம்ம வீட்டுப் பக்கம் தான சர்க்கார் போட்ட நல்ல தண்ணி குழாய் இருக்கு. பைப்பை திறந்தா எப்பவும் தண்ணீ கொட்டிகிட்டேதான இருக்கு ‘’ என்ற படி மெலிந்த எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் தனது கையை காற்றில் துழாவி குமாரின் தோள்களைப் பற்றினார்.
பிறகு ‘’ ஆமா ஐயாவை இப்ப பார்க்கலாமா ஏதோ வயித்துப்பாடு கொஞ்சம் சொல்லுறீயாப்பா ‘’ என்றார் .அவரது நரைத்த முடிகளின் மயிர்கால்களிலிருந்து இன்னும் வியர்வை வழிந்தபடியே இருந்தது-
‘’ கொஞ்சம் உட்காருங்க சாருகிட்ட பேசிட்டு வந்து உள்ள கூட்டிட்டுப்போறேன் ‘’ என்றபடி குமார் அவரை வெளியே பார்வையாளர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு உள்ளே சென்று சாரிடம் பேசி விட்டு மறுபடியும் வந்து பெரியவரை உள்ளே அழைத்துச் சென்றான். பெரியவர் எதேச்சையாக தலைமையாசியருக்குப் பின்னால் சுவரில் மாட்டப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்தைப் பார்த்தபடி ‘’ ஐயா வணக்கம் நல்லா இருக்கீங்களா ‘’ என்று நின்றபடியே கும்பிடு போட்டார்.
‘’ ம் ம்ம உட்காருங்க ‘’ என்றார் தலைமையாசிரியர். பெரியவர் உட்காரவிலை. குமார் தான் சாரிடம் சொன்னான் ‘’ சார் தாத்தா வருசா வருசம் நம்ம பள்ளிக் கூடத்துக்கு வர்றவர்தான் இப்ப கொரானாவால இரண்டு வருஷமா வரலை ‘’
தலைமையாசிரியர் தலையசைத்து விட்டு பெரியவரைப் பார்த்து ‘’. ஆனாப் பாருங்க பெரியவரே இப்ப செகண்ட் மிட் டெர்ம் எக்சாம் டைம் மாணவர்கள் மதியம் தேர்வெழுதனும். இப்ப நிகழ்ச்சி நடத்துனா அவுங்க படிப்பு கெட்டுப்போயிரும் அதனால நீங்க இன்னொரு நாள் வந்தீங்கன்னா மாணவர்கள்கிட்ட ப்ரீயா நிகழ்ச்சி நடத்தலாம் ‘’ என்றார்
பெரியவருக்கு தொண்டை கம்ம ஆரம்பித்தது. இரண்டு கைகளையும் கூப்பியபடி ‘’ ஐயா நம்பி வந்துட்டேன். காலையிலேயே பக்கத்துல எலிமெண்ட்ரி ஸ்கூலுக்கு போனேன். ஏதோ அவங்களால முடிஞ்சத கொடுத்து இந்த ஏழைக்கு உதவி செஞ்சாங்க. பிறகு வழக்கம் போல அவங்கதான் என்னை இங்க அனுப்பி வச்சாங்க. இப்ப நீங்க போயிட்டு இன்னொரு நாள் வான்னு சொன்னீங்கன்னா என்னால எடுத்தேறி இன்னோரு நாள் வரமுடியாது. கூட துணைக்கு கூட்டிட்டு வாறதுக்கும் எனக்கு வேற ஆளும் கிடையாது. ‘’ என்று கண்ணை இடுக்கி இடுக்கி அவரைப்பார்த்து பேசினார்.
‘’ ஏன் உங்களுக்குன்னு குடும்பம் ஏதுமில்லையா ‘ ?
‘’ அய்யா பாருங்க நான் ஒரு தனிக்கட்டை .தாய் தகப்பன் இருந்தவரைக்கும் கூட வச்சுப்பார்த்தாங்க. அவுங்க காலத்துக்குப் பிறகு இந்த முப்பது வருசமா நான் ஒண்டிக்கட்டையாத்தான் காலத்தை ஓட்டுறேன் ‘’ என்றபடி ஜோல்னா பைக்குள் ஆர்வமாக கையை விட்டு ‘’’ ஐயாவுக்கு மரியாதை பண்றதுக்காக இந்தப் புத்தகத்தை தேடிப் பிடிச்சு கொண்டாந்திருக்கேன் ‘’ என்றபடி பழைய திருக்குறள் புத்தகத்தை எடுத்து நீட்டினார்.
தலைமையாசிரியர் அந்தப் புத்தகத்தை பெற்றுக்கொள்ளாமல் தனது மேசை டிராயரை திறந்து வரவு செலவு புத்தகத்தை எடுத்து ‘’ முடியாத பெரியவருக்கு ஐம்பது ‘’ என்று பற்றில் எழுதிவிட்டு ‘’ பெரியவரே இந்தப் புத்தகம் உங்க கிட்டேயே இருக்கட்டும் இந்தாங்க என்னால முடிஞ்சது இவ்வளவு தான் இப்ப போயிட்டு இன்னொரு நாள் வாங்க ‘’ என்று ஒரு ஐம்பது ரூபாயை அவர் கைகளில் வைத்து திணித்தார்.
அதுவே அவர் ஒரு தீர்மான முடிவை எடுத்து விட்டார் என்று பெரியவருக்கும் குமாருக்கும் தெளிவாக உணர்த்தியது.
பெரியவர் மார்பின் குறுக்காக இரண்டு கைகளைபும் கட்டிக் கொண்டு ‘’ ஐயா என்னை மன்னிக்கனும் எதுவும் குடுக்காம நான் காசை இனாமா எப்பவுமே வாங்குறதில்லை. நீங்க பெரிய மனசு பண்ணி எனக்கு மாணவர்களைச் சந்திக்கிற வாய்ப்பு கொடுக்கனும். அவங்களை இரண்டு வருசமா பார்க்காம மனசுக்க என்னவோ போலிருக்கு. வாய்ப்பு கிடைக்கும்னு நம்பி இவ்வளவு தூரம் வந்திட்டேன் . ‘ என்றார்
அவரது உயிர்ப்பசையற்ற கருவிழிகள் நிலையில்லாமல் அங்கேயும் இங்கேயும் சுழன்றபடி இருந்தன.
குமாருக்கு பெரியவரைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.. ஏறத்தாழ அவர் மிகவும் தளர்ந்து போயிருந்தார்.
தலைமையாசிரியரிடம் ‘’ சார் தாத்தா நல்லா பேசுவாரு பாடுவாரு மிமிக்கிரி பண்ணுவாரு மேஜிக் பண்ணுவாரு. இப்படி நிறைய வித்தைகள் அவர் கைவசம் இருக்குது. . இதுக்கு முதல்லயும் அவர் இங்க வந்து நிறைய நிகழச்சிகள் மாணவர்களுக்கு குடுத்திருக்காரு. ‘’என்றான் .
தலைமையாசிரியர் பெரியவரை ஏற இறங்கப் ஒரு முறை பார்த்து விட்டு ‘’சரி சரி கரெக்ட்டா அரை மணி நேரம் தான் கொடுப்பேன். அதுக்கு மேல எடுத்துக்க கூடாது- ஸ்கூல் கிரவுண்ட்லயே நிகழ்ச்சியை வச்சிக்கிறட்டும் பசங்களையெல்லாம் அங்கயே வந்து அசெம்பிள் ஆகச் சொல்லு’’ என்று சொல்லிவிட்டு பெரியவரை அங்கிருந்து அழைத்துச் செல்லும் படி குமாருக்கு தலையசைத்து உத்தரவிட்டார்
‘ நல்லதுங்கய்யா ரொம்ப நன்றி ‘ என்றபடி தலைமையாசிரியருக்கு கும்பிடு போட்டபடி குமாரின் பின்னால் சென்றார்.
‘’ தாத்தா பார்த்துக்கோங்க . பழைய ஹெச் எம் மாதிரி இல்ல இவரு இந்த மனுசன் ஒரு முசுடு ஆமா அரை மணிநேரத்துல என்ன வித்தை பண்ண முடியும்.?
‘’ சரி தான் ‘’
‘’ பார்த்துக்கோங்க அரை மணிநேரம்னு சொன்னா பத்து நிமிஷம் முன்னாடியே வந்து வார்னிங் குடுப்பாரு ‘
‘’ வா குமாரு எல்லாம் பார்த்துக்கிருவோம் ‘’ என்று சொல்லி அவனது கையை இறுக்கமாகப் பிடித்தபடி நடந்து சென்றார்.
விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து பெரியவருக்கு முன்னால் அமர ஆரம்பித்தனர். பெரியவர் ஊன்று கோலை ஊன்றியபடி நின்று கொண்டிருந்தார். பார்வை மையமாக வாசல் கேட்டைப் பார்த்து நிலைத்திருந்தது- அவரை குமாரும் மாணவர்களும் சேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தனர். வியர்வையை கைகளால் துடைத்துக் கொணடார்.
‘’ தாத்தா எங்கயிருந்து வர்றீங்க ‘’ ? என்று சிறுமிகிகள் கேட்டார்கள்.
‘’ ஐயம் பட்டிம்மா ‘’
‘’ அப்ப ‘ஜ்ல்லிக்கட்டுல மாடு பிடிப்பீங்களா ‘’ ? என்று நக்கலாக கேட்டான் பெரிய சூர்யா . அவனுக்கு எப்பவுமே சேட்டை அதிகம்.
‘’ உன்னை மாதிரி அடங்காத காளைகளை கூட அடக்குவேன் தம்பி ‘’
‘’ எப்பிடி ? ‘’
‘’ பாட்டுப்பாடி , கதை சொல்வி , கருத்து சொல்லி ‘’
‘’ இவரு பெரிய எங்க ஊரு பாட்டுக்காரன் ‘’
‘’ இல்லடா கருத்து கந்தசாமி ‘’ என்று கோரஸாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் கலாய்த்தார்கள்.
‘’ எங்க தாத்தா பாடுங்க பார்ப்போம் ‘’ என்றாள் ஜுலி
பெரியவர் உடனே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று ஆரம்பித்தார் தொண்டை பிசிறடிக்க ஆரம்பித்தது.
சூர்யா உடனே ‘’ ஐயோ காதைப் பொத்திங்கோங்க தாங்கலை தாத்தா கத்துறது காக்கா கத்துற மாதிரி இருக்குது ‘’ என்று காதைப் பொத்திக்கொள்வது போல் பாவ்லா பண்ணினான். உடனே அவனுடைய குரூப் மாணவர்கள் அனைவரும் காதைப்பொத்திக் கொண்டு ‘’ காக்கா கத்துது தாத்தா பாட்டுல ‘’ என்று கிண்டலடித்தனர்.
வராண்டாவில் ஒரு சேரில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தலைமையாசிரியர் டக்கென்னு எழுந்திருத்து நின்றார். கைகளை பின்னால் கட்டிக் கொண்டு மணிக்ட்டை இறுக்கிப் பிடித்தார். குமார் கூட காரியம் கெட்டுப்போய் விடும் போல என்று நினைத்தான்.
ஆனால் தாத்தா சுதாரித்துக் கொண்டார். உடனே ஜோல்னாப் பைக்குள் கையை விட்டு கருப்படைந்திருந்த புல்லாங்குழலை அழுக்குப் புல்லாங்குழலை எடுத்து உடனடியாக அதே பாடலை ராகத்தோடு வாசிக்க ஆரம்பித்தார் ‘’
‘’ பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு ‘’ ——ஓஓஹோஹோ அய்யய்யோ ஒன்ஸ் மோர் என்று குணசேகரன் குரூப் கிண்டலாக கத்த பதிலுக்கு மாணவர்கள் யாரும் கத்தவில்லை
பெரியவர் புல்லாங்குழலில் அதே வரிகளை மீண்டும் இசைக்க ஆரம்பித்தார். அவர் குரலுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.
அடுத்து பைக்குள் கையை விட்டு மவுத் ஆர்கானை எடுத்த்தார். ‘’தாத்தா பழைய பாட்டு வேண்டாம் புதுப்பாட்டு பாடுங்க என்று மாணவிகள் கோரஸாக கத்த ஆரம்பித்து விட்டனர்.
யாருமே எதிர்பாராமல் பெரியவர் ‘’ பொன்னி நதி பார்க்கனுமே ‘’ என்று ஆரம்பித்ததும் கைதட்டல் பிய்த்துக் கொண்டு போனது.
தலைமையாசிரியர் உட்காரவேயில்லை. நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தார். முழுப்பாட்டையும் பெரியவர் மவுத் ஆர்கனில் வாசித்து முடிக்க்கும் வரையிலும் அசையாமல் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
சூர்யா மெய்மறந்து போய் ‘’ தாத்தா சூப்பர் தலைவர் பாட்டை ஒன்னை எடுத்து விடுங்க’’ என்று காதை அவரருகே கொண்டு சென்றான்.
‘’’ தாத்தா இவந்தான் அப்போல நீங்க பாடும்போது காக்கா கத்துதுன்னு சொல்லி காதைப் பொத்தினவன் ‘’ என்று தங்கமுத்து தாத்தாவிடம் போட்டுக்கொடுத்தான்.
தாத்தா ஒரு நிதானத்தில் சூர்யாவின் காதைப் பிடித்து பொய்யாக திருகினார்.
‘’ நான் பாட ஆரம்பிச்சதும் காதைப் பொத்துனான்ல இப்ப இவங்காத ஏங் கையில’’
‘’ ஆனா தாத்தா நீ பாடுறதை விட சூப்பரா புல்லாங்குழல் வாசிக்கிற ‘’ என்றான் சூர்யா
‘அப்படி வா வழிக்கு ‘’
உன் பேர் என்ன ?
சூர்யா
‘’ சூர்யா முதல்ல ஒரு வசனம் பேசுவோம் அப்புறம் பாட்டு என்றபடி தாத்தா
வீரபாண்டிய கட்ட பொம்மன் படி வசனத்தை அதே கம்பீரத்தோடு பேசிக்காட்டினார். திடீரென்று அவரின் மார்பு விரிந்தது. புஜங்கள் உயர்ந்தன. கைகள் விறைப்பாக இருந்தன. குரலில் ஒரு கர்ஜனை வந்து புகுந்து. கொண்டது. ’’ யாரை கேட்கிறாய் கிஸ்தி எங்களோடு வயலுக்கு வந்தாயா ? நீர் இறைத்தாயா ? இல்லை எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா ?
ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு மாணவணும் எழுந்து வசனத்தை பெரியவர் பேசுவது போல அவரின் பாணியிலேயே பேசிக்காட்ட கூட்டம் கைதட்டி ஆராவாரித்தது.
அதற்குள் மாணவர்களும் ஆசிரியைகளும் ஆசிரியர்களும் என கணிசமான கூட்டம் பெரியவருக்கு முன்னால் சேரஆரம்பித்து விட்டது.. இது தவிர சத்துணவு ஊழியர்கள் மற்றும் பொது சனங்கள் என்று சில பேர்கள் வாசல் கேட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
உண்மையிலேயே பெரியவரிடம் நிறைய அயிட்டடங்கள் இருந்தன. அதை விட முக்கியமான ஒன்று கூட்டத்தை வசியப்படுத்தும் கலை அவருக்கு நன்றாக கை வந்திருந்து.
சிறுவர்களுக்கான பீர்பால் கதைகள் விலங்குள் போல மிமிக்கிரிகள் என ஏக களேபரமாய் நிகழ்ச்சி போய் கொண்டிருந்தது.. தாத்தா பிரபல நடிகர்களின் குரல்களில் மாணவர்களுக்கு அட்வைஸ் வழங்கினார்.
‘’ கண்ணா படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்காமப் போனா
பின்னாடி வா வான்னாலும் படிப்பு வராது. .
கை நிறைய காசு சம்பாதிச்சாலும் மகிழ்ச்சி
இருக்காது ‘’
நான்கு நடிகர்களின் குரலில் இதைப் பேசினார்.
‘’தாத்தா தளபதி விஐய் வாய்ஸ்ல இந்த டயலாக்கைப் பேசுங்க ‘
ஏன் ?
‘ அதை விட உங்களுக்கு பிடிச்ச குரல்ல இப்ப நான் பேசப்போறேன் ‘’
‘’ அது யாரு ‘’
‘ நீங்களே கண்டு பிடிங்க பார்க்கலாம் ‘’ என்று சொல்லி இருபது வினாடிகள் இடைவெளி விட்டார்
கூட்டத்தில் கச கச என்று குரல்கள் எழுந்தன.
‘’ பாருங்க ஸ்டுடன்ட்ஸ படிக்கிற காலத்துல நாம ….. அதற்குள் அந்தக் குரலை அடையாளம் கண்டு கொண்டார்கள். வராந்தாவில் அமர்ந்திருந்த தலைமையாசிரியர் ஒரு விநாடி திகைத்துப் போய் பின் அது தன் குரல் தான் என்று அடையாளம் கண்டு கொண்டதும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். ஒரு விநாடி அவர் தன்னை மறந்து கை தட்டினார்.
பெண் ஆசிரியைகள் அதை சுட்டிக்காட்டி இரகசியமாக ஏதோ கிசு கிசுத்து சிரித்தார்கள்.
அடுத்து ஆறாவது ஏழாவது எட்டாவது வகுப்பு மாணவிகளை அருகே அழைத்து ‘’ இப்போ மதியம் என்ன எக்ஸாம் பாப்பா ?’ என்று கேட்டார்.
குழந்தைகள் மதியம் இங்லிஸ் ரிவிஷன் எக்ஸாம் என்று கோரஸாக சொன்னார்கள்.
‘’ அப்டின்னா கொஞ்சம் பாடத்தையும் ஆரம்பிக்கலாமா ‘’ என்று கேட்டார்
‘’ ஸ்டெனியா . ஜாய் , ரித்திகா எல்லோரும் சற்று தயங்கி சரியென்று தலையசைத்தார்கள்.
தாத்தாவின் ஸ்பெசாலிட்டியே அது தான்.. மாணவர்கள் தயங்கி நிற்கும் நொடிக்குள் நுழைந்து அதை தனக்கானதாக மாற்றிக் கொள்வதில் சமர்த்தர் அவர்.
‘’ இப்ப ஏங் கூட சேர்ந்து பாடுங்க பார்க்கலாம் என்று சொல்லி விட்டு மேக்கிங் லைவ்ப்’’ வொர்த் வொய்ல் ‘’ அப்டிங்கற பொயம் தான் இப்ப நாம பாடப்போறது பொயட்டோட பேரு ஜார்ஜ் எலியட் என்று ஆரம்பித்தார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த தலைமையாசிரியருக்கு உடம்பு ஒரு நிமிடம் சிலிர்த்து அடங்கியது. . ஆங்கில ஆசிரியர் பொன்னையா திடீரென்று எங்கிருந்தோ வந்து அங்கே முளைத்து விட்டார்.
ம் பாடுங்கோ’’ எவ்ரி சோல் தட் டச்சஸ் யுவர்ஸ்
பி இட் த சிலைட்டஸ்ட் காண்டக்ட்
கெட் தேர் ப்ரம் சம் குட்
சம் லிட்டில் கிரேஸ் ஒன் கைன்ட்லி தாட் ‘’
தாத்தா பெரிய ராகத்தோடு அட்சர சுத்தமான ஆங்கிலத்தில் அந்த வரிகளைப் பாடும் போது அவரது தடித்த வெள்ளையான புருவங்கள் ஏறி ஏறி இறங்கி நாட்டியமாடின.
ஆசிரியைகள் நடனமிடும் அவரது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் முறை எல்லா மாணவ மாணவிகளும் தாத்தாவுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தார்கள்.
சில ஆசிரியைகளும் சேர்ந்து பாடினார்கள். பொன்னையா சார் கையை காலை ஆட்டி நடனமிடும் பாவனையில் ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஆறாம் வகுப்புக்கு மாணவர்களுக்கு ஸ்மிதா சக்கரவர்த்தியின் ட்ரீ பாடலும்
ஏழாம் வகுப்புக்கு வால்ட்டர் டீ லாமேரின் லிசனர்ஸ் பாடலும்
பாடி முடித்த போது கூட்டத்தில் கைதட்டலும் விசிலும் பிய்த்துக் கொண்டு போனது.
தலைமையாசிரியர் நிறுத்தாமல் கை தட்டிக் கொண்டேயிருந்தார்.
பொன்னையா சார் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விசிலே அடித்து விட்டார்.
அடுத்ததாக பெரியவர் என்ன செய்யப் போகிறார் என்று முன்னால் உட்கார்ந்திருந்த அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க பெரியவர் தன் இடுங்கி கண்களால் ஒரு முறை சுற்றிலும் நோட்டம் விட்டு விட்டு ஆறாம் வகுப்பு மாணவன் பிரபாகரனையும் கவியரசையும் தன் அருகே வரும் படி சைகையால் அழைத்தார்.
பிரபாகரனைப் பார்த்து ‘’ பேராண்டி உனக்கு என்ன பறவை புடிக்கும் சொல்லு தாத்தா அதை இப்ப இங்கயே கூட்டிட்டு வர்றேன் ‘’என்றார்
பிரபாகரன் மயில் என்றான். கவியரசு ‘’ பறவை வேண்டாம் ஆனை தாத்தா ‘’ என்றான்
சரி தான் ஐயப்பனையே இங்க கொண்டாந்துருவம் என்றபடி சோல்னா பைக்குள் கை விட்டார்.
மிமிக்ரி தான் செய்வார் என்று காத்திருந்த மாணவர்கள் அவர் சோல்னா பைக்குள் எதையோ தேடுவதைப் பார்த்து கொஞ்சம் திகைத்திருந்தனர்.
அவர் அந்தப் பைக்குள் இருந்து சிறிது நேரத்தில் வழ வழப்பான வண்ண வண்ண அட்டைக் காகிதங்களையும் சரிகைத் தாள்களையும் வெளியே எடுத்தார். பிறகு மறுபடியும் பைக்குள் கையை விட்டு நிதானமாக தேடி கூர்மை சிறிது மழுங்கிப் போன நான்கு அங்குல கத்தரியை கைகளில் எடுத்தார்.
யாவரும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று திகைத்துக் கொண்டிருக்கும் போதே அவரின் கைவிரல்கள் நீலமும் பச்சையும் கலந்த வண்ண அட்டைக் காகிதத்தில் விளையாட ஆரம்பித்தனர். இவ்வளவுக்கும் அவர் காகிதத்ததை மடிக்க கூட இல்லை. நேரடியாக ஒரு வளைவில் கத்தரி இயங்க தீடீரென்று அங்கே ஒரு கழுத்து முளைத்தது- அடுத்ததாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அனுமானிப்பதற்குள் மயில் இறக்கைகளும் வாலும் உச்சிக் கொண்டையும் காகிதத்தில் திரட்சியாக வடிவெடுத்து வந்திருந்தன.
அதன் வேலையை கத்தரி முடித்துக் கொண்ட பிறகு தன்னாலே நின்று போய் சற்று ஓய்வெடுத்தது.
இப்போது தாத்தாவின் கரங்களில் அழகான நீலவண்ண மயில் பச்சை நிற தோகைகள் நீளமான வால் நளினமான கொண்டை வளைவுகள் என அற்புதமான படைப்பாக முளைத்திருந்தது. மயில்.
அந்த மயிலை ஆசையாக ஒரு முறை தடவி விட்டு அதை பிரபாகரன் கையில் கொடுத்தார். முகமெல்லாம் மலர்ச்சியாக விழிகள் விரிய அதை வாங்கிய பிரபாகரன் தாத்தா கேட்காமலே அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தான்.
மாணவிகள் வெட்கப்பட்டு சிரித்தார்கள். மாணவர்கள் அனைவரும் ஹோவென்ற சப்தம் எழுப்பி கைதட்டினார்கள்.
மற்றுமொரு வண்ணக் காகிதத்தை எடுத்தார்..அது சந்தன வண்ணத்தில் நல்ல கெட்டியான காகிதம். மறுபடியும் காகிதத்திற்குள் யானையைத் தேடி தாத்தாவின் கத்தரி பயணித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த காகிதத்தில் ஒருயானை தும்பிக்கையை தூக்கி பிளிறியபடி இருந்தது.
இப்போது கவியரசு அவரது கழுத்தை கட்டிக்கொண்டான்
அடுத்தடுத்து ஒட்டகச் சிவிங்கியும் வேங்கைப் புலியும் புதிதாக முளைத்தன. கூட்டம் முன்பை விட அதிகமாகச் சேர்ந்திருந்தது. கரவொலி விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தது. மாணவிகளின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்து கொண்டே சென்றன.
கடைசியாக இருகரம் கூப்பி வணங்கும் அழகு பெண் பதுமை இரண்டையும் அவர் உருவாக்கி முடித்த போது மாணவிகள் யாரும் ஏதும் சொல்லாமலே ஓடி வந்து அவரது கைகளைப் பிடித்து குலுக்கினார்கள். தாத்தா கண்களில் பாசம் பொங்க சில கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க கைகளை நீட்டியபடியே இருந்தார்.
மாணவர்கள் பவுனு பாண்டியும் சூர்யாவும் ‘’தாத்தா நாங்கள்ளாம் உங்க ரசிகராவே மாறிட்டோம். பொம்பளைப்புள்ளைங்களுக்கும் சின்னப் பசங்களுக்கும் கலர் கலரா மயில் ரயானையெல்லாம் செஞ்சு குடுத்து அசத்துனீங்கள்ள அது போல எங்களுக்கு ஒரே ஒரு புதுப்பாட்டு மவுத் ஆர்கான்ல வாசிச்சு காட்டுங்க போதும் நாங்க உங்களுக்கு ரசிகர் மன்றமே ஸ்கூல்ல வச்சிர்றோம் ‘’ என்று கோர’’ஸாக சொன்னார்கள்.
அதற்குள் சில மாணவர்கள் உணர்ச்சி வசப்பட்டு ‘’ ஹைவேவிஸ் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக பாட்டுத் தாத்தா பெருமையுடன் வழங்கும் ‘’
இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே பாடல் இப்போது நமக்காக
மாணவர்களும் மாணவிகளும் ஆரவாரத்தின் உச்சத்திற்கு சென்றனர். யாருக்கும் அவர்களின் மகிழ்ச்சிக்கு தடை விதிக்க தோன்றவேயில்லை. பிடி சார் விசிலை சாக்கிரதையாக எடுத்து பேண்ட் பைக்குள் வைத்துக் கொண்டார்.
தாத்தா அவர்களையெல்லாம் கையமர்த்தி அமைதியாக்கி விட்டு தன்னுடைய புல்லாங்குழலை மறுபடியும் எடுத்து உதட்டில் பொருத்தினார்
தாத்தாவுக்கு புதுப்பாட்டு தெரிந்திருக்குமா என்று மாணவர்கள் யோசிக்கவேயில்லை. ஆனால் சில ஆசிரியர்கள் யோசித்தார்கள்.
ஆனால் அது எல்லாம் ‘’ ரஞ்சிதமே ரஞ்சிதமே மனசை கரைக்கும் ரஞ்சிதமே ‘’ என்று புல்லாங்குழலில் வாசிக்க ஆரம்பிக்கும் வரை தான். மொத்த கூட்டமும் ஹோ வென்று கத்த ஆரம்பித்தது-
குமார் எங்கிருந்தோ போர்ட்டபிள் ஸபீக்கரையும் மைக்கையும் தாத்தாவுக்கு முன்னால் வைத்திருந்தான்.
தாத்தா பல்லவி முடித்து சரணம் எடுப்பதற்குள் கிரவுண்டில் தலைகள் தென்பட ஆரம்பித்தன – சொல்லப்போனால் தாத்தாவின் வாசிப்பு உண்மையிலேயே ரஞ்சிதம் தான் .யாரையும் மிச்சம் வைக்காமல் கிறங்கடித்து விட்டது. ஒன்ஸ் மோர் குரல்களும் விசில் சத்தமும் ஹோ என்ற கூச்சலும் நிற்பதற்கு வெகு நேரம் ஆனது. ஹெச் எம் கூட கை தட்டுறாரு பாருங்கடா என்றான் தங்க முத்தையா..
இது தான் சமயம் என்று தாத்தா ஜோல்னாப் பைக்குள் இருந்து அழுக்கடைந்த டர்க்கி டவலை எடுத்து தன் முன்னால் விரித்து விட்டு அதே வேகத்தில்
‘’ புண்ணியம் தேடி காசிக்கு போவார் இந்த உலகத்திலே ‘’ என்று புல்லாங்குழலில் வாசிக்க ஆரம்பித்ததும் தூரியில் விழும் அயிரை மீன்களைப் போல காசுகள் பொத்து பொத்தென்று அதில் விழ ஆரம்பித்தன. மாணவ மாணவிகள் யாரும் கணக்குப் பார்க்கவில்லை. கையில் இருந்ததை அப்படியே போட்டு விட்டார்கள். காசு விழும் சப்தம் பெரியவருக்கு போதுமான ஆனந்தத்தை அளித்திருக்க வேண்டும்
அவர் காற்றில் இலக்கற்று பறந்து போகும் கரிச்சான் குருவியைப்போல புல்லாங்குழலின் இசைக்குள் நீந்திப் போய்க் கொண்டே இருந்தார். எதிரில் தென்படுகிறவர்களையெல்லாம் தன்னோடு வானில் பறப்பதற்கு அழைத்துச் சென்று கொண்டேயிருந்தார்.
மாணவர்கள் அவர் முகத்தில் வெய்யில் விழுந்து மறையும் விநோத காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். வியர்வை ஆறாக காதோரங்களில் வழிய ஆரம்பித்தது- யாருக்கும் எதுவும் பேசத்தோன்றவில்லை. அவ்விடம் விட்டு நகரவும் தோன்றவில்லை.
நெடுநேரம் வானத்தில் சிறகடித்த பறவை தரைக்கு வந்து தத்தி நடப்பது போல அவர் குழலின் வேகம் இப்போது மெல்ல மெல்ல குறைந்து வந்து பின்பு சட்டென்று நின்றது. எல்லா மாணவர்களும் எழுந்து நினறு கை தட்டி ஆராவராம் செய்தனர்.
தலைமையாசிரியர் ‘ பென்டாஸ்டிக் ‘ என்று தனக்குள்ளேயே சொல்லி விட்டு தனது அறைக்கு சென்றார்
பெரியவர் துண்டில் விழாமல் அவர்க காலடியில் விழுந்து கிடந்த சில்லறைகளையும் கவனமாக எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டிருந்தார்..
‘’ ஏ தாத்தாவுக்கு நல்லா கண்ணு தெரியுது சும்மா நம்மளை ஏமாத்திகிட்டு இருக்குறாரு ‘ என்றாள் ரேஷ்மா.
தாத்தா தன் பொக்கை பற்கள் தெரிய சிரித்தார்.’’ அரை குறையாத்தான் தான் தெரியும் பாப்பா உங்கள மாதிரி நல்லா தெரியாது ‘’
‘ அப்புறம் எப்படி எல்லாத்தையும் கரெக்ட்டா கண்டு பிடிக்கிறீங்க ?
‘’ ஆனா தாத்தாவுக்கு கொஞ்சம் மந்திரம் தெரியும்ல ‘ என்ற படி சிரித்தார்.
எப்பிடி ?
‘தாத்தா உன் குரலை வச்சே உன் உருவத்தை மனசுல வரைஞ்சிருவேன்ல ‘’ என்று சிரித்தார்.
இறுதியில் நிகழ்ச்சி முடிவுக்கு வந்த போது ஆயிரத்து ஐநூற்றி எண்பது ரூபாய் சேர்ந்திருந்தது. இவ்வளவு பெரிய தொகையை சத்தியமாக பெரியவர் எதிர்பார்க்கவேயில்லை.
இப்போது .தலைமையாசிரியர் அறையில் அவருக்கு முன்பாக பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போதும் கூட அவரால் அதை நம்பத்தான் முடியவில்லை. அவரது கண்கள் ஏறத்தாழ தழும்பியிருந்தன.
தலைமையாசிரியர் ‘’ ரொம்ப பிரமாதம் பெரியவரே உங்ககிட்ட இவ்வளவு திறமைகள் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. .சீக்கிரம் மாணவர்களுக்கு உங்க மூலமா பயிற்சி கொடுக்குறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். இப்போதைக்கு இதை வச்சிக்கோங்க’’ என்று கையில் வைத்திருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை பெரியவரின் கரங்களில் வைத்தார்
‘’ தாத்தா ஐநூறு ரூபா வாங்கிக்கோங்க ‘’ என்று குமார் பெரியவரின் காதுகளில் சத்தமாக கிசு கிசுத்தான்.
ரூபாய் நோட்டை தொட்டதும் பெரியவரின் கரங்கள் இலேசாக நடுங்கின.
பெரியவர் பழைய திருக்குறள் புத்தகத்தை தேடி எடுத்து ‘’ இது ஐயாவுக்கு என்று ‘’ அவர் கைகளில் கொடுத்தார். பிறகு ‘’ ஐயா மறுக்காம இதையும் நீங்க வாங்கிக்கனும் ‘’ என்று பைக்குள் கையை விட்டு சற்று முன்னர் வண்ணக்காகிதங்களில் வார்கக்ப்பட்ட மயில் , யானை ஒட்கச்சிவிங்கி , புலி பதுமை என்று அனைத்தையும் மொத்தமாக எடுத்து வழங்கினார்.
தலைமையாசிரியர் அதை ஆசையாகப் பெற்றுக்கொண்டார்.
அந்த நிமிடத்தில் தாத்தாவை பார்ப்பதற்கு பெரிய கொடைவள்ளல் போல் தோன்றியது குமாருக்கு.
‘’குமாரு இதை நோட்டீஸ் போர்டுல டிஸ்பிளே பண்ணிடு ‘’ என்றார் தலைமையாசிரியர்
விடைபெறும் போது பெரியவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். இனி இந்த முகத்தை என்றுமே மறக்க முடியாது என்றும் நினைத்துக் கொண்டார்.
அறைக்கு வெளியே நடந்து வரும்போது பெரியவர் குமாரின் கையைப் பிடித்து அதில் ஒரு ஐம்பது ரூபாயை வைத்தார்
‘’ வேண்டாம் தாத்தா ‘’ என்றான் குமார்
‘’ தாத்தாவோட அன்வு பரிசை வேண்டாம்னு சொல்லாத . வா ரெண்டு பேரும் போயி செந்தில் கடையில சூடா டீ குடிக்கலாம் , உங்க ஊரு டீயைச் சாப்பிட்டு ரெண்டு வருசம் ஓடிப்போச்சுல்ல ‘’ என்றார்.
குமார் ‘’ஒரு நிமிசம் இருங்க தாத்தா சார்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன் ‘’ என்று உள்ளே சென்றான்.
பெரியவர் மெதுவாக வாசலைப் பார்த்து நடக்கத் தொடங்கினார். அதற்குள் அங்காங்கு இருந்து ஒடி வந்த மாணவ மாணவிகள் இருபுறமும் அவர் கைகளைப் கோர்த்து பிடித்துக் கொண்டு அவரிடம் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
தங்கேஸ்
ஷேன் வார்னே கவிதை – பிச்சுமணி
அப்போது கிரிக்ககெட்டில்
அவ்வளவு ஆர்வம்.
இந்தியா பெரும் போர் புரிந்து
வெற்றி தோல்வி கொள்வதாய்
எண்ணம்.
அது ஆஸ்திரேலியா-இந்தியா போட்டி
முதன் முதலில்
உன் பெயரைக் கேட்ட போது
உன்னை எவ்வளவு
பெரிய வில்லனாக அடையாளமானாயென
இன்னும் என் நினைவில் இருக்கிறது.
ஆனால் உன் விளையாட்டு
என்னை ஈர்த்தது
உன் சுழற் பந்துவீச்சில்
சிக்கிக்கொண்ட பலரில்
நானும் ஒருவனானேன்.
இந்தியா விளையாண்டால் மட்டும்
கிரிக்கெட் பார்த்த நான்
நீ விளையாடும் கிரிக்கெட்டின்
ரசிகனானேன்.
காலச் சுழற்சியில்
கிரிக்கெட் எனக்கு
பள்ளிக் காலத்தில் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருக்கும்
மயிலிறகானது..
இன்று..
உன் பெயரும் புகைப்படங்களும்
இணையத்தில் உலாவுகின்றன
மரணம் ஒரு சுழற்பந்தாகி
நீ மரித்த செய்தியை
என் மனசு ஏற்க மறுக்கிறது.
ஒளித்து வைத்த மயிலிறகை
லேசாகத் தடவிப் பார்க்கிறேன்.
ஸ்டெல்லா மிஸ் சிறுகதை – சாந்தி சரவணன்
“பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தியை கேட்டு துள்ளி குதித்தாள்”, யாழினி.
கிறுத்து பிறப்பதற்கு முன், கிறுத்து பிறப்பதற்கு பின் என்பது போல கொரோனா காலம் என்று வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. உலகத்தை முடக்கி வைத்த காலத்தை திறந்து வைத்தது இந்த செய்தி. அது தான் இன்று யாழினியின் மகிழ்ச்சிக்கும் துள்ளளுக்கு காரணம்.
“அம்மா அம்மா இங்க வாம்மா ஸ்கூல் திறக்க போறாங்க ஜாலி ஜாலி” ……
“என் பிரண்ட்ஸ் எல்லாம் பார்பேனே……ஏய்…. என ஒரே கொண்டாட்டம் தான்”, யாழினிக்கு.
உடனே கைப்பேசி எடுத்து, “வைஷாலி நமக்கு நெக்ஸ்ட் வீக் ஸ்கூல் டீ. நியூஸ் பார்த்தியா….”
“ஆமாம் டீ பார்த்தேன். ரொம்ப ஜாலியா இருக்கு டீ. ”
“ஜூம் தொல்லை இனிமேல் இல்லை”
ஆஹா..ஆஹா என தோழிகளின் சிரிப்பு..
கிரவுன்டல விளையாடலாம்..
“ஆமாம் டீ முக்கியமா நம்ம பீட்டி ஸ்டெல்லா மீஸ்ஸை பார்க்கலாம் டீ.”
“ஆமாம் டீ, மிஸ்ஸை பார்த்து எவ்வளவு நாளாச்சு”.
“ஜூம் கிளாஸ்ல எல்லா மிஸ்ஸும், சாரும் வந்து நமக்கு ரம்பம் போட்டாங்க”. ஆனா, நமக்கு பிடித்த பீட்டி மிஸ்ஸைதான் பார்க்க முடியல.’
“நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்’.
“நானும் தான் டீ, என்றாள் வைஷாலி”
யாழினிக்கு ஸ்டெல்லா மிஸ் என்றால் எவ்வளவு பிரியம் என்று வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஸ்டெல்லா மிஸ்ஸுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்கள் அழகு அப்பப்பா.
அவர்கள் கட்டி வரும் காட்டன் புடவை. அதற்கு மெட்சாக தலைக்கு கிளிப்பு. ஒரு சடை போட்டு ஒரு ஒற்றை ரோஜா வைத்து கொண்டு வரும் அவர்களை பார்க்கும் போதே கொள்ளை அழகு.
அதுவும் பீட்டி கிளாஸ் வாரத்தில் இருமுறைதான் வரும். என்ன ஸிஸ்டம் இது? தினமும் விளையாடனும் இல்லை.
பாரதியார் கூட என்ன சொல்லி இருக்கிறார்.
“ஓடி விளையாடு பாப்பா….” என்று தானே சொல்லி இருக்கிறார்.
சில சமயங்களில் மிஸ்ஸிடமே கேட்டதுண்டு.
“ஏன் மிஸ் டெய்லி நமக்கு ஸ்போர்ட்ஸ் பிரியட் இல்லை.”.
அதற்கும் ஒரு ஸ்மையலை உதிர்த்து விட்டு சென்று விடுவார்கள் ஸ்டெல்லா மிஸ்.
“யாழினிக்கு தான் பெரியவள் ஆன, பீட்டி மிஸ்ஸை போல் தானும் ஸ்போர்ட்ஸ் துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்பது லட்சியம்”.
யாழினி இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தான் புதிதாக ஸ்டெல்லா மிஸ் அவளின் பள்ளிக்கு பீட்டி டீச்சராக சேர்ந்தார்கள். எப்போதும் அவர்கள் முகத்தில் சிரிப்பை கண்டிப்பாக அணிகலன்களாக கொண்டு இருப்பார்கள்.
எல்லா ஆசிரியர்களும் பள்ளி பாடங்களை படிக்க வலியுறுத்துவார்கள். ஆனால் ஸ்டெல்லா மிஸ் படிப்போடு சேர்த்து மகிழ்ச்சியாக இருக்கவும் சொல்லி கொடுப்பார்.
பிடித்தவை செய்தால் வெற்றி நிச்சயம் என்பார். அதனால் படிப்பை விருப்பத்தோடு படியுங்கள். அப்போது சுலபமாக இருக்கும் என்பார்.
அனைத்து பள்ளி விளையாட்டு போட்டியில் கண்டிப்பாக இவர்கள் பள்ளி கலந்து கொள்ள ஏற்பாடு செய்வார்.
யாழினிக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் வர காரணமே ஸ்டெல்லா மிஸ்தான். யாழினிக்கு மட்டுமே அல்ல பள்ளியில் ஸ்டெல்லா மிஸ் சேர்ந்த பிறகு பல தங்க பதக்கம் இவர்கள் பள்ளிக்கு உரித்தானது.
சென்ற வருடம் ஸ்போர்ட்ஸ் பிரியட் போது, யாழினி வயிட் ஸ்கர்டில் ரத்தக் கறை. விளையாடி கொண்டு இருந்த மற்ற பிள்ளைகள் பார்த்து ஏய் யாழினி இரத்தம் டீ என கத்த யாழினி பயந்துவிட்டாள்.
உடனே அங்கு வந்த ஸ்டெல்லா மிஸ். “Girls. Don’t shout…”
எல்லாம் போங்க போங்க என அனைவரையும் விலகி..
“Yazini, Come to my room. Don’t worry. Nothing happened… Come come… என ஒரு சக தோழியாக, தமக்கையாக, தாயாக அரவணைத்து அணைத்து அவர்களின் அறைக்கு அழைத்து சென்றார்.”
யாழினிக்கு வேண்டிய முதல் உதவிகள் புரிந்து… அவளை சமாதானப்படுத்தினாள்
மிஸ் பயமாயிருக்கு., என் அழுத யாழினியிடம் “யாழினி மா.. nothing to worry dear” என ஆசுவாசப் படுத்தினார்
This is natural. ஓவ்வொரு பெண்ணுக்குரிய வளர்ச்சி இது. இது ஒரு உடலியியல் மாற்றம். மாதம் ஒரு முறை உனக்கு இப்படி ஆகும். இதில் பயப்பட ஒன்றும் இல்லை டா.
“Actually speaking it is a gift to ladies yazhini. All our morbids Will be discharged monthly once.”
மிஸ்…
“என்னம்மா பயப்படாதே”
“யாழினி, இந்த நேரத்தில் ஓய்வுதான் அவசியம். பசியெடுத்தால் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும், சரியா” என்றார்.
“மிஸ்ஸின் ஆறுதலான வார்த்தைகள் யாழினிக்கு தைரியத்தை நல்கியது.” இது ஒரு இயல்பான நிகழ்வு என்ற புரிதல் யாழினிக்கு உண்டாயிற்று.
அதற்குள் யாழினி அம்மாவிற்கு தகவல் அனுப்ப, யாழினி அம்மா ரம்யா, யாழினி பயந்து போய் இருப்பாளே என பதட்டத்தோடு ஸ்டெல்லா மிஸ் அறைக்குள் நுழைந்தவளுக்கு ஆச்சரியம், யாழினி தெளிவாக அமர்ந்து இருந்தாள்.
“ஸ்டெல்லா மிஸ் ரொம்ப நன்றி”, என கூறி அவளை வீட்டுக்கு அழைத்து வந்த நிகழ்வு யாழினி கண்முன்னே வந்தது.
அன்றிலிருந்து யாழினி ஸ்டெல்லா மிஸ் நண்பர்கள் ஆனார்கள்.
பள்ளிக்கு வந்தவுடன் பிரேயர்போது யாழினி, ஸ்டெல்லா மிஸ்க்கு குட்மார்னிங் மிஸ் என்று சொன்னால்தான் திருப்தி.
யாழினிக்கு ஸ்டெல்லா மிஸ் ஒரு தோழி.
இருவரின் உரையாடல் போது யாழினி நடந்தவற்றை நினைவு கூர்ந்தார்.
பள்ளிகள் திறந்தன. யாழினி எதிர்பார்த்த தருணம். ஸ்டெல்லா மிஸ் பிரையர் வரிசைப்படுத்த குட்மார்னிங் என சொல்லி கொண்டே வரும் தருணத்திற்காக காத்து இருந்தாள்.
ஆனால் ஸ்டெல்லா மிஸ் வரவேயில்லை.
அன்று முழு நேர பள்ளி. லஞ் பிரேக் அப்போதான் ஸ்போர்ட்ஸ் ரூம் சென்று பார்க்க வேண்டும்.
அன்று நடந்த பாடங்கள் எதிலும் நாட்டமில்லை யாழினிக்கு.
லஞ் பிரியட் பெல் அடித்தது தான் தாமதம் வகுப்பில் இருந்து ஸ்போர்ட்ஸ் ரூம்க்கு ஓடினாள். அவள் பின்னே தோழி வைஷாலி ஓடி வந்தாள், “யாழினி இருடீ நானும் வரேன் ”
ஆனால் யாழினி காத்திருக்காமல் புள்ளிமான் போல் ஓடினாள்.
ரூம் பூட்டி இருந்தது.
அங்கு இருந்து ஆசிரியர் குழு அமர்ந்து இருக்கும் ரூமுக்கு சென்று கதவின் வெளியே எதிர்பார்ப்போடு கண்களை சூழற்றி சூழற்றி தேடினாள்..
அவளுடைய தேவதை ஸ்டெல்லா மிஸ்ஸை காணவில்லை.
பள்ளியில் வேலை செய்யும் ஆயாம்மா வெளியே வந்தார்கள்
“என்னம்மா இங்க ….. யாரை பார்க்கணும் என்றார்..”
“ஸ்டெல்லா மிஸ்..”
உம்.” யாரை….”
“ஸ்டெல்லா மிஸ்….”
“அந்த மிஸ்ஸை நிறுத்திட்டாங்க தெரியாதா…”வகுப்புக்கு போமா.. போமா என்றார்.
ஆம், “ஆன்லைன் வகுப்புகள் பல ஆசிரியர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது”
கல்லூரியிலும் பேராசிரியர் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். அதிலும் புதிதாக சேர்ந்த பேராசிரியர்களை சட்டென்று எந்த முன்னறிவிப்பு இன்று பணி நிறுத்தம் செய்தனர்.
அது பள்ளிகளிலும் தொடர்ந்து. பெரும்பாலும் விளையாட்டு துறை, யோகா, NCC, NSS programme, பரதம், பாட்டு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் & co.ordinators போன்ற பல ஆசிரியர்களை தற்காலிகமாக பணியில் இருந்து விடுவித்தனர்.
முக்கிய செய்தி மாணவர்கள் கட்டணத்தில் எந்தவித சலுகையும் இல்லை. அந்த திட்டத்தால்தான் நமது யாழினியின் ஆஸ்தான குரு ஸ்டெல்லா மிஸ்ஸையும் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப் பட்டுள்ளார்.
அதை நம்பாமல் வகுப்பறையில் வந்து அமர்ந்தாள். அவள் பின்னே மூச்சிறைக்க தோழி வைஷாலியும் வந்து அமர்ந்தாள்.
“ஏம்பா டல்லா இருக்கே… நம்ப விக்என்டு ஸ்டெல்லா மிஸ் வீட்டுக்கு போகலாம் பா….. டோன்ட் வரி பா… என அறுதல் சொல்லி கொண்டே இருக்கிறாள்”
ஆனால் ஸ்டெல்லா மிஸ் மட்டுமே பிம்பமாக யாழினியின் மண கண் முன்னே காட்சி அளிக்க,… வெறித்து பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.
அதே நேரத்தில் அரசு ஆணை 9.10,11 மாணவர்கள் எல்லோரும் தேர்வுயின்றி தேர்ச்சி என அறிக்கை ஒளிபரப்பு…
ஒருபுறம் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.
பள்ளிகளில் பரபரப்பு…..
ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு நெருடல் இருந்தாலும், நெருடலுக்கு கோச்சிங் கிளாஸ் வருமானம் பறிபோயிற்றே… இருப்பினும் ஒரு மகிழ்ச்சி….
இந்த கால சூழலுக்கு நன்றி சொல்லி மாணவ மணிகள் கரகோஷம் …..
மாணவர்களின் கரகோஷம் கடல் அலையை விட அதிகமாக பள்ளியை பிளந்து கொண்டு இருக்க….
“யாழினி மட்டும் தன்னுடைய ஸ்டெல்லா மிஸ்ஸை வேலையில் இருந்து எடுத்து தன்னிடமிருந்து பிரித்து விட்ட இந்த பள்ளியையும், கால சூழலையும் பிடிக்காமல் அழுதுக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்…..”