மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகளும்-ஹைதராபாத் – அருண்குமார் நரசிம்மன்

மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகளும்-ஹைதராபாத் – அருண்குமார் நரசிம்மன்



மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகளும்-ஹைதராபாத்

மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகள் என்று நான் எழுத நினைத்தபோது என் மனதில் வந்த நாடுகளில் ஒன்றுதான் ஹைதராபாத். தற்போது உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக இருக்கும் ஹைதராபாத் 1948க்கு முன்பு தனி நாடக இருந்து வந்தது, இந்த  நாட்டின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.

இந்திய துணைக் கண்டத்தின் தென்-மத்திய பகுதியில் ஹைதராபாத் அமைந்துள்ளது, இது 1724 முதல் 1948 வரை நிஜாம் பரம்பரையில் வந்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. 1680 களில் இப்பகுதி முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது, இருப்பினும், 1724 இல், இந்த பேரரசு பலவீனமடையத் தொடங்கியபோது, முகலாய அதிகாரி ஆசிப் ஜா, பேரரசின் தெற்கு மாகாணங்களின் முகலாய ஆளுநரை தோற்கடித்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றி தன்னை “ஹைதராபாதின் நிஜாம்-அல்-முல்க்” என்று அறிவித்தார்.

அதற்குப்பின் ஹைதராபாத் 1798 இல் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கொண்டுவரப்பட்டது, ஆனால் உள்நாட்டின் விவகாரங்களை இந்த நாட்டின் நிசாமின் வசமே விட்டது. நிஜாம்கள் இஸ்லாமிய கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை போற்றி பின்பற்றி வந்தனர். இதனால் ஹைதராபாத் முஸ்லீம்களின் அடையாளத்தின் மையமாக மாறியது மற்றும் ஹைதராபாத்தில் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

1947ஆம் ஆண்டில், இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்து, ஆங்கிலேயர்கள் இரண்டு நாடுகள் உருவாகியநேரத்தில் நேரத்தில், இரண்டு நாடுகளிலும் இருந்த இருந்துவந்த தனிநாடுகளுக்கும் சமஸ்தானங்களுக்கும் அவர்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்கள் பகுதியை சேர்த்துக் கொள்ளவோ அல்லது தனி நாடாக இருந்து கொள்ள வாய்ப்பளித்தது. இந்தியாவில் இருந்த பல்வேறு சமஸ்தானங்கள் இந்திய நாட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஹைதராபாத் நிஜாம்-ஒஸ்மான் அலி கான், இந்த இரண்டு நாடுகளுடனும் ஹைதராபாதை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்து தனி நாடாக செயல்பட முடிவு செய்தார்.

சுதந்திர இந்திய அரசு ஹைதராபாதை தங்கள் நாட்டுடன் இணைக்க நிஜாம்-ஒஸ்மான் அலி கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் அவரோ இந்தியாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு ஹைதராபாதின் முயற்சிகளை இராஜதந்திர வழிகளில் தோற்கடிக்க முயன்றாலும், துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் ஹைதராபாத் பிரச்சினையைத் தீர்க்க ராணுவ வழிகளை நாடினார்.

இந்திய அரசு ஹைதராபாத் மீது போர் தொடுத்து அந்த நாட்டை இந்தியாவுடன் இணைக்க தங்கள் இராணுவத்தினை அனுப்பியது, இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் போலோ என்று பெயரிடப்பட்டது. செப்டம்பர் 13,1948 அன்று, இந்திய இராணுவப் படைகள் ஹைதராபாதிற்குள் அதிகாலை 4 மணிக்கு நுழைந்தன. சோலாப்பூர்—செகந்திராபாத் நெடுஞ்சாலையில் உள்ள நல்துர்க் கோட்டையில் ஹைதராபாத் காலாட்படையின் 1வது தற்காப்புப் படைக்கும் இந்திய அரசின் 7 வது படைப் பிரிவின் தாக்குதல் படைக்கும் இடையே முதல் போர் நடந்தது.

இரண்டு நாடு படைகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது ஆனால் பெரிய இந்தியப்படையை சமாளிக்க முடியாமல் ஹைதராபாத் ராணுவம் திக்குமுக்காடியது. இறுதியில் செப்டம்பர் 17 அன்று மாலை 5 மணியளவில், ஹைதராபாத் நிஜாம் போர் நிறுத்தத்தை அறிவித்தார், இதனால் ஆயுத நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவ ஜெனரல் ஜோயந்தோ நாத் சௌத்ரி, மாலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் ஒரு படையை வழிநடத்தினார், செப்டம்பர் 18 அன்று மேஜர் ஜெனரல் எல். எட்ரூஸ் தலைமையிலான ஹைதராபாத் ராணுவம் சரணடைந்தது.

ஹைதராபாத் சரணடைந்தவுடன் நிஜாம் பதவி விலகினார் மற்றும் சமஸ்தான அரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர், நிஜாம் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தபால் தலை சேகரிப்பாளர்கள் இந்திய தபால் தலைகளை வெளியிட்ட நாடுகள், மாநிலங்களை இரண்டு பிரிவாக பிரிக்கிறார்கள். நிலப்பிரபுத்துவ சமஸ்தானங்கள் தங்கள் சொந்த தபால் சேவையை நடத்தி, அவர்கள் நாட்டிற்குள் பயன்படுத்தக்கூடிய தபால்தலைகளை வெளியிட்ட நாடுகள் என்றும் மற்ற சமஸ்தானங்கள் தங்கள் தபால் சேவையை கையாள பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் அமைப்புடன் ஒப்பந்தம் செய்தது.

ஹைதராபாத் நிலப்பிரபுத்துவ நாடக இருந்துவந்தது, ஹைதராபாத்தின் முதல் தபால் தலை 1869ஆம் ஆண்டு தொடங்கி வெளியிடப்பட்டன, மேலும் 1/2, 1 மற்றும் 2 அனாக்கள் ஆகிய மூன்று வெவ்வேறு மதிப்புகளை கொண்ட ஒரு அரபு எழுத்து வடிவமைப்பைக் கொண்டிருந்தது. 1880 ஆம் ஆண்டில் புதிய வடிவமைப்புடன் அந்த தபால்தலைகள் மாற்றப்பட்டன, அதில் “POST ஸ்டாம்ப்” என்று பொறிக்கப்பட்டது மற்றும் அதன் மதிப்பு இந்தி, தெலுங்கு, உருது மற்றும் தபால் தலையின் மைய பகுதியில் ஆங்கிலம் நான்கு மொழிகளில் அச்சிடப்பட்டது.

இந்த வடிவமைப்பு ஹைதராபாத் தபால்தலைகளுக்கு (அதிக கட்டணம் உட்பட) பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஹைதராபாத் நிசாம் தபால் தலைகளில் ஒரு புதிய வடிவமைப்பினை அறிமுகப்படுத்தினார், அதில் நடுவில் ஹைதராபாத் நிஜாமின் முத்திரை இடம்பெற்றது. முதல் சில ஆண்டுகளில் தபால்தலைகளின்  மேல் பகுதியில் ஒரு அரைவட்ட வடிவில் “POSTAGE” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. 1915-16 இல், “POST & RECEIPT” என்ற எழுத்துக்களுடன் கூடுதல் தபால்தலைகள் வெளியிடப்பட்டது.

– அருண்குமார் நரசிம்மன்

மறைந்த நாடுகளும் அதன் தபால்தலைகளும் கட்டுரை – அருண்குமார் நரசிம்மன்

மறைந்த நாடுகளும் அதன் தபால்தலைகளும் கட்டுரை – அருண்குமார் நரசிம்மன்



மறைந்த நாடுகளும் அதன் தபால்தலைகளும்

இந்திய சமஸ்தானமான ஆல்வார் தபால் சேவை மற்றும் அதன் தபால்தலைகள்

உலகில் பல நாடுகள் தங்கள்உள்நாட்டு பயன்பாட்டிற்கும் வெளிநாடுகளுக்கு தபால்களை அனுப்புவதற்கு தபால்தலைகளை வெளியிட்டு பயன்படுத்திவந்தன ஆனால் ஏதோ காரணங்களால் அந்த நாடுகள் வேறேதேனும் நாடுகளுடன் இணைத்திருக்கும் அல்லது தனி நாடெனும் அந்தஸ்தை இழந்திருக்கும்.

தபால்தலை சேகரிப்போர் இப்படிப்பட்ட நாடுகளை மறைந்த நாடுகள் அல்லது காணாமல் போன நாடுகள் என்று அழைப்பார்கள். இந்தியாவில் இது போன்று மறைந்த நாடுகள் சில உள்ளன, அதில் ஒன்றுதான் ஆல்வார்.

இந்த நாடு இந்தியாவின் வடமேற்கில் உள்ள ராஜ்புதானாவில் (தற்போதுள்ள ராஜஸ்தான் மாநிலம்) ஒரு சமஸ்தானமாக இருந்தது. இந்த நாட்டை ஆண்ட மன்னர்களுக்கும் அவர்களின் குடிமக்களுக்கும் நல்உறவு இருந்ததாக தெரியவில்லை, ஆனால் ஆங்கிலேயர்களுடன் இணக்கமாக இருந்துள்ளார்கள் என்பது இந்திய நாட்டின் சரித்திரத்தை படிக்கும்போது நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஆல்வார் நாட்டை பற்றி நாம்மேலும் தெரிந்துகொள்ள சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்க்கும்போது இந்த நாடு ஒரு மிகப்பெரிய சுற்றுசுவர் மற்றும் அகழியால் சூழப்பட்டிருந்ததும் ஒரு கூம்பு வடிவ மலையின் நடுவில் ஒரு கோட்டை இருந்ததும் தெரியவருகிறது.

ஆல்வார் 1775 ஆம் ஆண்டில் ஆல்வார் சமஸ்தானத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. இதில் 14ஆம் நூற்றாண்டின் தரங் சுல்தானின் கல்லறை மற்றும் பல பழங்கால மசூதிகள் உள்ளன. அழகிய சிலிசேர் ஏரியை ஒட்டியுள்ள இந்த நாட்டின் அரண்மனை, இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பாரசீக கையெழுத்துப் பிரதிகளின் நூலகத்தையும், ராஜஸ்தானி மற்றும் முகலாய சிறு ஓவியங்களின் தொகுப்பையும் கொண்ட அருங்காட்சியகத்தைக்கொண்டுள்ளது.

இந்த நாட்டை 1874-1892 வரை ஆட்சி செய்து வந்த மன்னர் மங்கள் சிங் பிரபாகர் 1877ஆம் ஆண்டு முதல் தபால் தலையை வெளியிட்டார். ஆல்வார் நாட்டிற்கு ஒரே வடிவமைப்பிலான நான்கு வெவ்வேறு தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இந்த வடிவமைப்பில் கந்த்ஜார் என்று அழைக்கப்படும் ஆல்வார் குத்துவாளின் படம் தபால்தலையின் நடுவில் இடம்பெற்றிருந்தது. இந்த குத்துவாள் ஒரு தனித்துவமான வடிவமைப்பில் செய்யப்பட்டது, இதை அழுத்தும் போது, கத்திகள் கத்தரிக்கோல் போல் திறந்து எதிரியின் உடலுக்குள் மிகப்பெரிய சேதத்தை செய்யவல்லது.

முதன்முதலில் பிப்ரவரி 1877இல் ஆல்வாரின் தபால்தலை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டாலும் செப்டம்பர் 1876இல் அவை வெளியிடப்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். 1902 ஜூலை மாதம் 1ஆம் நாள் பிரிட்டிஷ் இம்பீரியல் அரசால் ஆல்வாரின் அஞ்சல் சேவையை தங்களின் அரசின் ஆளுமைக்கு கீழ் கொண்டு வரும் வரை அது ஆல்வார் மன்னரின் கட்டுப்பாட்டிலிருந்து அந்த நாட்டின் தபால் உபயோப்படுத்தப்பட்டாக சொல்லப்படுகிறது.

இந்த தபால்தலைகள் ஆல்வார் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 18 மார்ச் 1948 அன்று, இந்த சமஸ்தானம் அதன் அருகில் உள்ள மற்ற மூன்று சமஸ்தானங்களான பாரத்பூர், தோல்பூர் மற்றும் கரௌலி ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கப்பட்டது. இந்த சமஸ்தானங்கள் இந்திய நாட்டுடன் 1949ஆம்ஆண்டு மே 15ஆம் தேதி மற்ற சில சமஸ்தானங்கள் மற்றும் அஜ்மீர் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டு இன்றைய இந்திய மாநிலமான ராஜஸ்தானை உருவாக்கியது.

– அருண்குமார் நரசிம்மன்