மூலதனம் என்ன செய்யும்? கூலி உழைப்பு என்ன செய்யும்?
அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும்
போராட வா என் தோழா கவிதை – தேனி சுந்தர்
இழந்தால்
இரண்டு நாள் சம்பளம் தான்..
அதுவும் இப்போதைக்கு..!
வாய்ப்புகள் நெறய இருக்கு..
அதையும் திரும்ப பெறுவதற்கு..!!
கடந்த கால
வேலை நிறுத்தங்களில்
அதிகம் இழந்தவர்கள் தான்
இன்று
மற்றவர்களை விட
அதிகம் அடைந்தும் இருக்கின்றனர்..!
இன்றைய இழப்பு முக்கியமா..?
நிரந்தர பென்சன் முக்கியமா..?
முடிவெடு நண்பா..
முடிவெடு தோழி..!
இவர் வேண்டாம் என்கிறார்..
அவரெல்லாம் பங்கெடுக்கவில்லை..
நீஙகள் காரணமாய் சொல்லும்
இவரும் அவரும்
உங்க பென்சனில்
துண்டு விழுகும் போது
எங்கிருப்பர்..??
நிரந்தர பென்சன்
நிச்சயம் என்றால் தான்
நம் குடும்பமே
நம்மோடு இருக்கும்..!!
தெம்போடு இருக்கும் போதே
போராடு..
வர மறுப்பவர்களுடன்
வாதாடு..
போராட்டக் களத்தில்
நீயும் நானும் முன் ஏரு..
இப்போதைக்கு
குழுவில் உந்தன் பேர் போடு
நம் ஊதியம்..
நம் பென்சன்..
நம் வாழ்வாதாரம்..
நம் போராட்டம்..
நமக்கான போராட்டம்..!
நிலம், விதை, உணவை
நம் கையில் இருந்து பறித்து
பகாசுர கம்பெனிகளிடம் ஒப்படைக்கும்
நாசகார அரசுக்கு எதிரான போராட்டம்..
உழைப்பைச் சுரண்டி விட்டு
தொழிலாளர்களை
தெருவில் எரியும் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்..
இது
விவசாயிகள் தொழிலாளிகள்
இணைந்து நடத்தும் போராட்டம்..!
நாடு முன்னேறவில்லை..
பிரதமரின்
நண்பர் தான் முன்னேறி இருக்கிறார்..
300வது இடத்தில் இருந்தவர்
இப்போது 12வது இடத்தில்..!
நாடு முழுவதும் உள்ள
அரசு ஊழியர் CPS தொகை
5 இலட்சம் கோடி..
அதானி ஒருவரின்
சொத்து மதிப்பும்
5 இலட்சம் கோடி..!
யாருக்கான அரசாங்கம் தெரிகிறதா..?
எனவே ஆசிரியர், அரசு ஊழியர்
இணைந்து நடத்தும் போராட்டம்..!
தடுப்பூசி உற்பத்தி செய்தவர்
இப்போது
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர்..!
எல்.ஐ சி. முதற்கொண்டு
எதையும் விற்கத் துணிந்த
ஊதாரி அரசாங்கத்திற்கு
எதிரான போராட்டம்…
மத்திய, மாநில அரசு ஊழியர்
இணைந்து நடத்தும் போராட்டம்..!
ஒட்டு மொத்த
உழைக்கும் வர்க்கமும்
ஒன்றாய் அழைக்கிறது..
தமிழகத்தில் ஆளும் கட்சியும்
ஆதரவாய் இருக்கிறது..
மறக்காதே என் தோழா..
மார்ச் 28,29..!
அறைகூவி அழைக்கிறது
அகில இந்திய வேலை நிறுத்தம்..!
வா.. என் தோழா..
துணிந்து களமிறங்கு..!
பேரலை கவிதை – எஸ். வி. வேணுகோபாலன்
பேரலை வந்து
ஓரடி அடித்து மீள்கிறது
கடலுக்கு
குதிரைப் படை ஆட்கள்
மிரட்டிக் கொண்டே செல்கின்றனர்
கரையோரம்
போக்கு காட்டி விட்டு
நீருக்குள் ஓடிச் சென்று
உப்புக் குளியல் போட்டுக்
கரையேறும் சிறுவர்களின்
காலில் பளீர் என்று விழுகிறது
துரத்தி வந்து அடித்துப் போகும்
காவல் துறை ஆசாமி ஒருவரின் கைப் பிரம்பு
அலை மோதுகிறது கூட்டம்
எட்டிப் பார்த்தும்
அருகே வந்து கால் நனைத்தும்
புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும்
ஒருவர் மீது ஒருவர்
நீரிறைத்துக் கொண்டும்
ஓவென்ற
கூச்சல் எழுப்பிக் கொண்டும்
முன்னும் பின்னும் ஓடியும்
பாம்பைக் கண்டது மாதிரி
பெரிய அலைக்கு பயந்து
வீலென்று அலறி கரையில் ஏறியும்
போதும் போதும் என்று சொல்லியபடி
போதாத உணர்வில்
கடலைப் பிரிய
மனமின்றியும்
இப்போது இருட்டிவிடுகிறது
குதிரையில் வரும் காவல் துறையினர்
இந்த முறை
ஏதோ பெரிய கதவை வைத்துச்
சாத்துவது போல்
கடலைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்து மூடப் பார்க்கின்றனர்
கிட்டத் தொலைவில் இருந்து
உருண்டு திரண்டு புரண்டு
பேருரு எடுத்து
ஹோவென்று சீறியடித்து வரும்
பேரலைக்குத் தாங்கமாட்டாது
முன்னிழுக்கப் பார்க்கும் குதிரையின்
லகான் இழுத்து விட்டு
நின்ற இடத்தில் பெருவட்டம் அடித்தும்
இயலாது போகவே
அலுப்பும் சலிப்புமாய்
நகர்ந்து போகிறது
மாநகரத்தின் அதிகாரம்
ஒரு மாபெரும் வேலை நிறுத்தம்
இரண்டாம் நாளும்
வீறு கொண்டு அடித்ததைப்
பார்க்கவும் வாசிக்கவும் பேசிக் கொள்ளவும்
செய்கிறது நாட்டு ஜனம்.
மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் தொழிற்சங்கத்தினர் ஆவேசம் ஆயிரக்கணக்கானோர் கைது

மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் கோவையில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அரசு பேருந்துகள் 98 சதவிகிதம் இயங்கவில்லை. கோவை கோட்டத்தில் மொத்தமுள்ள 2208 பேருந்துகளில் 100க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டது.
கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடுவது, எரிபொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தியது, மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் சிறு குறு தொழில்களை சீரழித்தது உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 28,29 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தது. திங்களன்று துவங்கிய இந்த போராட்டம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.
கோவை கோட்டத்தில் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை, 80 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதேபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களான அக்வாசப், டெக்ஸ்மோ போன்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முழுமையான வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்களும் முழுமையான ஆதரவை தெரிவித்தனர். அன்றாடம் ஏறிவரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசிற்கு தங்களின் எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தினர். பொது வேலை நிறுத்தம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, சிஐடியு, எச்எம்எஸ், எஐடியுசி, ஏஐசிசிடியூ எல்பிஎப், எம்எல்எப் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத போக்கினை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி. பத்மநாபன், எல்பி எஃப் ரத்தினவேல், ஏஐடியூசி ஆறுமுகம், ஐஎன்டியூசி செல்லகுட்டி, எஸ்எம்எஸ் வீராச்சாமி, எம்எல்எப் தியாகராஜன், ஏஐசிசிடியு தாமோதரன், எஸ்டிடி யு ரகுபு நிஷர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போன்ற தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, கைக்குழந்தைகளுடன் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். தனித்தனியாக அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், கோவை வடக்கு, குனியமுத்தூர், உள்ளிட்ட 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக காலை முதல் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்தும், கேரளாவிற்கும் பேருந்துகள் இயக்கப்படாததால், உக்கடம் பேருந்து நிலையத்தின் கேரளா பேருந்து நிற்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கோவையில் உள்ள காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பேருந்துகளில் பயணித்தனர். போராட்டத்திற்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்ததால், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் கோவையில் பொதுப்போக்குவரத்து அடியோடு முடங்கியது. எல்ஐசி, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மத்திய தொழிற்சங்கங்களில் அறைகூவலை ஏற்று எல்ஐசி வங்கி மற்றும் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக எல்ஐசி ஊழியர்கள். 12 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர். எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படுவது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பாதிப்பு என தெரிவித்தனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
நன்றி: தீக்கதிர்
யாருக்கான போராட்டம், நான் இல்லையா இதில் ? – எஸ் வி வேணுகோபாலன்
அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் – தபன் சென்
வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான, செயலூக்கமுள்ள ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளுடன் சேர்ந்து, வரலாறு படைத்து, ஓராண்டு நிறைவடைந்த பின்னர், பிடிவாதமாக இருந்து வந்த ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியை படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்துள்ள பின்னணியில், இப்போது மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும், சுயேச்சையான துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்புகளும் இணைந்து, மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, நாசகரமான தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக, “மக்களைக் காப்பாற்றுவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் அனைத்து மக்களுக்கும் மார்ச் 28-29 – இரு நாள் அகில இந்தய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருக்கின்றன.
விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தொழிலாளர் வர்க்கம், விவசாய வர்க்கம் ஆகிய நாட்டின் பிரதான இரு உற்பத்தி வர்க்கங்களும் இணைந்து, இவ்வாறு அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இவ்வேலை நிறுத்தத்தின் நோக்கம், நாட்டை ஆட்சி செய்துவரும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான எதேச்சாதிகார சக்திகள் நாட்டின் பொருளாதாரத்தையே விரல்விட்டு எண்ணக்கூடிய அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஏலம் விடும் நாசகர, தேச விரோதக் கொள்கைக்கு எதிராகவும், ஆட்சியாளர்களே, நாட்டின் கஜானாவையும் மக்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்துக்கொண்டிருப்பதற்கு எதிராகவும் இவ்வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இவர்களின் ஆட்சியில் உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு, அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு எதிராகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் இந்த வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.
விரிவடைந்து கொண்டிருக்கும் ஒன்றுபட்ட மேடை
இப்போது நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தமானது, நாட்டில், படுபிற்போக்கான நவீன தாராளமயக் கொள்கை 1991இல் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டபின், இக்கொள்கைக்கு எதிராக நடைபெறும் 21ஆவது வேலை நிறுத்தமாகும்.
கடந்த முப்பதாண்டுகளாக நடைபெற்றுவந்த போராட்டங்களின்போது, ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின்போதும் ஸ்தாபனரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களும், அவ்வாறு அணிதிரட்டப்படாத முறைசாராத் தொழிலாளர்களும் முந்தைய வேலைநிறுத்தத்தைவிட அடுத்த வேலைநிறுத்தத்தில் கூடுதலாகப் பங்கேற்று வருகின்றனர். மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை விரிவடைந்து, வலுப்பட்டு, இறுதியாக அனைத்து பெரிய மத்தியத் தொழிற்சங்கங்களையும் 2009இல் ஒரே மேடையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு, அதன் அங்கமாக இருந்துவந்த தொழிற்சங்கமான பிஎம்எஸ், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையிலிருந்து விலகிக் கொண்ட போதிலும், அது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்திடவில்லை. மாறாக, பாதுகாப்புத்துறை (Defence Sector) போன்று துறைவாரி சங்கங்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளின்போது,. அவற்றில் அங்கம் வகித்திடும் பிஎம்எஸ் சங்கங்களும் பங்கேற்பது தொடர்கிறது.
மத்தியத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட மேடை விரிவடைந்துகொண்டிருப்பது மற்றுமொரு முக்கிய அம்சத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை என்பது மத்தியத் தொழிற்சங்கங்களை மட்டும் உள்ளடக்கியில்லை. மாறாக அது மேலும் மேலும் அநேகமாக அகில இந்திய அளவில் சுயேச்சையாக செயல்பட்டு வரும் நிறுவனங்களான அகில இந்திய அரசு ஊழியர்களின் சம்மேளனங்கள், கூட்டமைப்புகள், சங்கங்களையும் தழுவிக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்கள், அனைத்து மாநில அரசு ஊழியர்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், டெலிகாம், பாதுகாப்பு முதலான அனைத்துத்தரப்பு ஊழியர்களும் இச்சங்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை விரிவடைந்துகொண்டிருப்பது தொடர்கிற அதே சமயத்தில், ஒவ்வொரு துறையிலும் மற்றும் பணிபுரியும் மட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கிடையேயும் ஒன்றுபட்ட மேடைகள் உருவாகி, நடவடிக்கைகளில் இறங்குவது என்பதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றில் இதுநாள்வரை எந்த சங்கத்திலும் இணையாத தொழிலாளர்களும் பெரிய அளவில் பங்கேற்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தொழிலாளர் வர்க்க இயக்கம் அடித்தட்டு உழைக்கும் மக்களையும் விரிவாகவும் ஆழமாகவும் ஒன்றுபடுத்தி, தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது.
தொழிலாளர்களின் உணர்வுமட்டம் உயர்ந்துகொண்டிருக்கிறது, இயக்கம் விரிவடைந்து கொண்டிருக்கிறது
இன்றைய வரலாற்றுப் பின்னணியில், மற்றுமொரு பிரச்சனையையும் ஆழமானமுறையில் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டில் நவீன தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் பின்பற்றத் தொடங்கியதிலிருந்தே அதற்கு எதிரான போராட்டங்களை, குறிப்பாக, செங்கொடியின்கீழ் இயங்கிடும் இயக்கங்கள் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு கிளர்ச்சி நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஆவேசத்துடன் தொழிலாளர்கள் பங்கேற்பது என்பதும் அதிக அளவில் இருந்தது. செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், படுபிற்போக்கான நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகளையும் அதன் அரசியலையும் தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி வந்தபோதிலும், ஆரம்ப காலங்களில் தொழிலாளர்களின் எதிர்ப்பு என்பது இதனை அமல்படுத்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திருப்புவதில் தொழிற்சங்க இயக்கம் அவ்வளவாக முன்னேறியதாகக் கூறுவதற்கில்லை. தொழிலாளர்கள் தற்போது அவதிக்குள்ளாகி இருப்பதற்கான மூலகாரணமே இந்நவீன தாராளமயக் கொள்கைதான் என்பதைத் தொழிலாளர்கள் மத்தியில் புரிய வைப்பதில் பெரிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஆனால், கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தி வந்தபின்பு, துறைவாரியாகவும், தேசிய அளவிலும் எண்ணற்றக் கூட்டுப் போராட்டங்களை நடத்தி வந்தபின்பு, இவற்றின் விளைவுகள் வீண் போகவில்லை என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராகவும், இத்தகைய அரசியலைப் பின்பற்றும் கயவர்களுக்கு எதிராகவும் தொழிலாளர்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவது என்பது ஒரு தொடர் நடவடிக்கையாகும்.
முதலாளித்துவம் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில், அதன் கடும் பாதிப்புகள் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதித்துள்ள பின்னணியில், தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான தலையீடுகள் படிப்படியாக சமூகத்தின் இதர பிரிவினரையும் போராட்டப் பாதைக்கு இழுத்து வர உதவியிருக்கிறது, அவர்களும் தங்கள் குரலை உயர்த்தி, ஒன்றுபட்ட போராட்ட நடவடிக்கைகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
விவசாய நெருக்கடி கடுமையான நிலைக்குச் சென்ற பின்னணியில் விவசாயிகள் போராட்டங்களும் தொடங்கி, அவை படிப்படியாக அனைத்து விவசாய சங்கங்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து, அதன்மூலம் அவை நவீன தாராளமயத்திற்கு எதிரான போராட்டமாகவும் படிப்படியாக உயர்ந்தது. இந்த செயல்முறை, மக்களின் அனைத்துத் துன்ப துயரங்களுக்கும் ஆட்சியாளர்கள் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளும், அதனை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும்தான் என்பதை அடையாளம் காட்டுவதற்கான தலத்தைத் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தயாரித்துத் தந்துள்ளது.
ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டு தொடங்குகையில், குறிப்பாக, இரண்டு தனித்துவமான அம்சங்கள், வெளியே தெரியத் தொடங்கி இருக்கின்றன. ஒரு பக்கத்தில், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் நெருக்கடி அதன் திவால்தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தொடங்கியது. மறுபக்கத்தில், முதலாளித்துவ வர்க்கம் மக்களைப் பெரிய அளவில் துன்ப துயரங்களுக்குள் தள்ளுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதன் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான குணத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சி வந்தபின்னர், குறிப்பாக அதன் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், மக்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள் உச்சத்திற்கே சென்றுள்ளது.
நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் இப்போது அதன் கொள்கைக்கும் அதனை உந்தித்தள்ளும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயுள்ள நச்சுப் பிணைப்பின் கோர முகத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிற அளவுக்கு முன்பு தெரிந்து கொள்ளவில்லை.
நாடு தற்போது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களின் மீது எதேச்சாதிகாரத்தின் மிகவும் மோசமான தாக்குதல்கள் ஏவப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காலம் ஆள்வோரின் மனிதாபிமானமற்ற குரூர முகத்தை அதன் அனைத்துக் கோரப் பற்களுடனும் நகங்களுடனும் பார்த்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களையும், கையறு நிலையையும் பயன்படுத்திக்கொண்டும், தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் மோசமான அம்சங்களை மறைக்க வேண்டுமென்று முயற்சிக்கக்கூட எண்ணாமல், மிகவும் வெட்கமற்ற முறையில், எதேச்சாதிகார முறையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வை ஒழித்துக்கட்டிவிட்டு, அந்த இடத்தில் கார்ப்பரேட் வர்க்கத்தின் லாப வெறியின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் விவசாயத்தைக் கொண்டுவருவதற்காகக் கொண்டுவரப்பட்டது. வேளாண் சட்டங்கள் நிறைவேறியிருந்தால் அவை உணவுப் பாதுகாப்புக்கு மேலும் ஆபத்தைக் கொண்டுவந்து, ஏற்கனவே பசி-பட்டினிக்கு ஆளாகியிருக்கும் மக்களையும் நாட்டின தற்சார்பையும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கும்.
தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில், நாட்டிலிருந்த தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, நான்கே நான்கு சட்டங்கள் மூலமாக தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகள் நலச் சட்டங்களாகக் கொண்டு வந்திருக்கின்றனர். இவை தொழிலாளர் வர்க்கத்தை அடிமை நிலைக்குத் தள்ளக்கூடிய நிபந்தனைகளைத் திணித்திருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தின் எப்போதுமே திருப்தியடையாத லாபப் பசிக்குத் தீனி போடுவதற்காக தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைத்திட இப்புதிய சட்டங்களில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இருந்து வரும் நிலையில் வேலையின்மை மிகவும் மோசமாக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் வருமான இழப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், வேலை வாய்ப்பு உறவுகளும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளன. நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்ந்து இருள் சூழ்ந்ததாக இருக்கிறது. பணவீக்கம், மக்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவுப் பண்டங்கள், எரிபொருள், மின்சாரம், மருந்துகள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. சாமானிய மக்களின் சராசரி வருமானம் பாதாளத்திற்குச் சென்றுள்ளது.
அத்தியாவசிப் பொருள்களின் விலைகள் தாமாக ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. கார்ப்பரேட்டுகளும் பெரும் வர்த்தகப் புள்ளிகளும் சூறையாடி, மக்களைக் கசக்கிப்பிழிவதற்கு உதவும் விதத்திலேயே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் மிக மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. வேலையிழப்புகளும், கல்வித்தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதிருப்பதும், கிடைத்தாலும் அற்ப ஊதியம் அளிக்கப்படுவதும் தொடர்கின்றன. இவை பெரிய அளவில் வறுமை, ஆதரவின்மை மற்றும் பசி-பட்டினிக் கொடுமைக்கு இட்டுச்சென்றுள்ளன. இத்தகைய திமிர்பிடித்த கொள்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பதைத்தான் 2022-23 பட்ஜெட் வெளிப்படுத்தி இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் என்பது ஒட்டுமொத்த நவீன தாராளமயக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாகவே இதற்கான மார்க்கங்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடைசியில், தேசிய பணமாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) மூலம் அநேகமாக புதிய கூட்டுக்களவாணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை ஒப்படைக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களைக் கபளீகரம் செய்வதற்கு, முதலீடு எதுவும் போடத் தேவையில்லை, அநேகமாக இனாமாகவே தரக்கூடிய விதத்தில் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளும், துன்ப துயரங்களும் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன
ஆட்சியாளர்கள், இந்தியாவில் “வர்த்தகத்தை எளிமைப்படுத்துகிறோம்” (“ease of doing business”) என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் நாட்டு மக்களையும் நாட்டின் சொத்துக்களையும் சூறையாடுவதற்கு வசதி செய்து கொடுத்தனர். இதன் காரணமாக உலக பசி-பட்டினி அட்டவணையில் இந்தியா படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரமும் சீர்குலைந்துவிட்டது. நாகரிக சமுதாயம் எதிலும் அனுமதிக்கமுடியாத அளவிற்கு மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் மிக அசிங்கமான அளவிற்கு அதிகரித்திருக்கிறது. “இந்தியாவில் உயர் 1 சதவீதத்தினர், நாட்டின் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை சொந்தமாக்கிக்கொண்டுள்ள அதே சமயத்தில், மக்கள் தொகையில் பாதியளவிற்கு உள்ள ஏழைகள் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே பெற்றிருக்கின்றனர். 2020 வாக்கில் நாட்டின் உயர் 10 சதவீதத்தினரின் வருமானப் பங்கு என்பது, 57 சதவீதத்தை எட்டியிருக்கிற அதே சமயத்தில், கீழ்நிலையில் உள்ள பாதி மக்களின் நிலை 13 சதவீத அளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. உயர் 1 சதவீதத்தினர் மட்டும் நாட்டின் வருமானத்தில் 22 சதவீதத்தைப் பறித்துக்கொண்டுள்ளனர்,” என்று அதிகாரபூர்வமான ஆய்வுகள் பல தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. இதன் பொருள், பொருளாதாரத்தின் செல்வத்தை உற்பத்தி செய்வதற்கான மதிப்பு முற்றிலுமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதாகும். கார்ப்பரேட் வர்க்கத்திலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய உயர் பில்லியனர்கள் (ஒரு பில்லியனர் என்றால் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்), சராசரியாக 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வத்தை அதிகரிக்க முடிந்திருக்கிறது. இதர கார்ப்பரேட்டுகளும் எட்டு முதல் பத்து மடங்கு அதிகரித்துக் கொண்டுள்ளனர். செல்வ வளத்தில் இவ்வாறு இவர்கள் விண்ணை எட்டும் அளவிற்கு அதிகரித்துக் கொண்டிருப்பதென்பது, உண்மையில் நாட்டின் செல்வத்தைப் பெருக்கியோ அதன் மதிப்பை அதிகப்படுத்தியோ, அதனால் தங்களை வளப்படுத்திக்கொள்ளவில்லை. மாறாக, அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் மூலமாக நாட்டு மக்களைச் சூறையாடியும், நாட்டின் கஜானாவைச் சூறையாடியும் நாட்டின் சொத்துக்களைச் சூறையாடியுமே தங்களை இவ்வாறு வளப்படுத்திக் கொண்டுள்ளனர். கூட்டுக்களவாணி முதலாளித்துவம் என்பது, மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டையும், நாட்டு மக்களையும் எல்லையில்லா அளவிற்குச் சூறையாடிக் கொண்டிருக்கிறது.
போராட்டங்களும் எழுச்சியடைந்து கொண்டிருக்கின்றன, விரிவடைந்துகொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் ஆட்சியாளர்கள் இவ்வாறு கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டையும் நாட்டு மக்களையும் சூறையாட வழியேற்படுத்திக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், இதற்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களின் போராட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எழுச்சியுடன் விரிவடைந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் காலகட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தால் மிகப் பெரிய அளவிற்கு 20ஆவது அகில இந்திய வேலை நிறுத்தம் நாடு தழுவிய அளவில் நடந்துள்ளது. 1991க்குப்பின்னர் நடைபெற்ற வேலைநிறுத்தங்களிலேயே 2020 நவம்பர் 20 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம் மிகவும் பிரம்மாண்டமானதாகும். 2020 மார்ச்சின் இறுதியிலிருந்து கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், அதனையொட்டி சமூக முடக்கம் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் நாட்டின் அனைத்து இயக்கங்களும் முழுமையாக ஸ்தம்பித்து நின்றதைப் பார்த்தோம். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் மேல் ஏவப்பட்ட அனைத்துவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்தாபனரீதியாகத் திரட்டப்பட்ட ஊழியர்கள் மட்டுமல்லாது முறைசாராத் தொழிலாளர்களும் பெருமளவில் இவ்வேலைநிறுத்தத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். காலம் தங்களுக்கு அளித்துள்ள சவாலை உணர்வுபூர்வமாக எதிர்கொண்டு, வேலைநிறுத்தத்தை வெற்றியாக்கினர்.
வேலை நிறுத்தம் தொடங்கிய நாளிலிருந்தே, வரலாறு படைத்திட்ட ஓராண்டு காலம் நடந்த விவசாயிகள் போராட்டமும் படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் தலைநகர் எல்லையில் தொடங்கியது. இந்தப் போராட்டமும் தொடங்கிய நாளன்று இருந்த அதே உணர்வுடன் தொடர்ந்தது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுதும் விரிவடைந்தது. விவசாயிகளின் போராட்டத்திற்கு தொழிலாளர் வர்க்கமும், அனைத்துத் தொழிற்சங்கங்களும் நேரடியாகக் களத்திற்கே வந்து ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். தலைநகரின் எல்லையில் மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் போராட்டங்கள் நடைபெற்றதைப் பார்த்தோம்.
விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுதும் மத்தியத் தொழிற்சங்கங்கள் அளித்திட்ட ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள், அதனை சம்யுக்த கிசான் மோர்ச்சாவுடன் ஒரு கெட்டியான பாலத்தை ஏற்படுத்தவும் வளர்த்தெடுத்தது. அனைத்து ஒன்றுபட்ட மேடைகளும் பரஸ்பரம் ஒருவர் கோரிக்கையை மற்றவர்கள் மனமுவந்து ஆதரிக்கும் நிலைக்கு உயர்த்தியது. இறுதியாக இவை, கார்ப்பரேட்டுகள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாளர்களின் கள்ளப்பிணைப்பு மக்களைச் சூறையாடுவதற்கு எதிராகத் தீர்மானகரமான முறையில் எதிர்த்திட வேண்டும் என்ற கவனத்திற்கு இட்டுச் சென்றது. தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு இவ்வாறு செயல்பாடுகளினூடே வளர்ந்திருப்பது ஒரு புதிய பரிமாணத்திற்குச் சென்றிருக்கிறது. அதாவது, படுபிற்போக்குத்தனமான கொள்கைகளைக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் ஆட்சியால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு எதிரான போராட்டங்களும், ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிரான போராட்டமாகவும் வியத்தகு விதத்தில் படிப்படியாக வளர்ந்திருக்கிறது.
ஒருங்கிணைந்த போராட்டங்கன் உச்சம்
இவ்வாறு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் அவரவர் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்காக ஒர பொதுவான புள்ளியில் ஒருங்கிணைந்த போராட்டமாக நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலை நிறுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. பெரும் கார்ப்பரேட்டுகள் தலைமையிலான ஆட்சி தங்கள் மீது ஏவிய தாக்குதல்களை, தங்கள் பொது எதிரியை, தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் அடையாளம் கண்டுகொண்டுவிட்டனர். அவர்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைதான், தொழிலாளர்களுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, தேச விரோத நாசகரக் கொள்கைகளுடன் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு எதிரான போராட்டமாக, 2022 மார்ச் 28-29 தேதிகளில் நடைபெறவுள்ள நாடு தழுவிய அகில இந்திய வேலை நிறுத்தம் அமைந்துள்ளது.
இதன் போர்க்குரல், நாட்டின் சொத்துக்களையும், மக்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் கொள்ளையடித்திடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானதாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் வேலை நிறுத்த நடவடிக்கை, “மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்” என்கிற அரசியல் கவனத்துடன் அமைந்துள்ளது. இவ்வேலை நிறுத்தப் போராட்டமானது மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கானது மட்டுமல்ல, நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக, நாட்டைக் காத்திடுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நடைபெறவிருக்கும் 2022 மார்ச் 28-29 அகில இந்திய வேலை நிறுத்தத்தை, “மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்” என்னும் முழக்கத்துடன், எதேச்சாதிகார மற்றும் நாசகர ஆட்சிக்கு எதிராக, குணாம்சரீதியாக புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம்.
(தமிழில்: ச.வீரமணி)







