Tirunelveli Neer Nilam Manithargal book by Era Narumpoonathan book review by S. Subbarao இரா.நாறும்பூநாதனின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் - ச.சுப்பாராவ்

நூல் அறிமுகம்: இரா.நாறும்பூநாதனின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் – ச.சுப்பாராவ்




சந்தியா பதிப்பகம் வெளியிட்டு வரும் ஊர் வரலாறுகளில் திருநெல்வேலி குறித்து என் அருமைத் தோழர் இரா.நாறும்பூநாதன் எழுதியது. திருநெல்வேலி நகரம் என்பதாக இல்லாமல் பழைய அந்த ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாறாக விரியும் நூல்.

41 கட்டுரைகளில் திருநெல்வேலியின் கல்வி நிலையங்கள், மதம் பரப்ப வந்து தமிழ்தொண்டாற்றிய கிறிஸ்துவப் பெரியோர்கள், நெல்லையின் அன்றைய இன்றைய படைப்பாளிகள், உணவுகள், கோவில் சிற்பங்கள் என்று தொட்டுத் தொட்டுச் செல்கிறார் நாறும்பூநாதன்.

நான் ஒரு தகவல் கொண்டாடி என்ற போதிலும், இணையத்தில், மற்ற புத்தகங்களில் தேடினால் கிடைக்காத தகவல்கள் தரும் கட்டுரைகள், புத்தகங்களே என் மனதுக்கு நெருக்கமாகின்றன. அந்த வகையில் நெல்லையின் கல்வி நிறுவனங்கள், அவற்றின் நிறுவனர்கள், மத போதகர்கள், பற்றிய பல கட்டுரைகள் நெல்லை பற்றியும், அந்த மண்ணில் வாழ்ந்து அந்த மண்ணை செழிக்கச் செய்த பெரியோர் பற்றியும் நிறைய நிறைய தகவல்களைச் சொல்லிக் கொண்டே போகின்றன என்றாலும் என்னை ஈர்த்தவை நான் முற்றிலும் அறியாத புதிய செய்திகளைச் சொல்லும் கட்டுரைகளைத்தான். அவையும் இந்தப் புத்தகத்தில் நிறையவே உள்ளன.

 உமறுப்புலவர் பற்றி இப்போதுதான் விரிவாக அறிகிறேன்.  பாரதியின் தந்தை ஆரம்பித்த நூற்பாலை எங்கிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். பத்தமடைப் பாய் பற்றி அறிந்தேன். மெல்லத் தமிழினி சாகும் என்று சொல்லி பாரதியிடம் திட்டு வாங்கியவர் யார்? என்று அறிந்தேன் ( செவி வழிச் செய்திதான் போலும். ஆனால், அப்படியான செய்திகள் தரும் சந்தோஷம் தனிதானே !) பாடகர் டி.எல்.மகாராஜனின் பெயர்க் காரணம் பற்றிய செய்தியை அறிந்தேன். சாத்தூர் டீ ஸ்டால் பற்றி அறிந்ததைவிட, கி.ராவின் கதவு கதை யாருடைய கதை? என்ற அந்த கதவின் சொந்தக்காரர் பற்றிய தகவலை அறிந்து மகிழ்ச்சியில் பொங்கினேன். காலத்தால் அழியாத அந்தக் கதையை கி.ராவிற்கு அளித்தவரல்லவா அந்தப் பெரியவர் ! 

சிறிய இடைவெளியில் திரும்பவும் சந்திக்கிறேன் என்கிறார் நாறும்பூ. அப்போது நமக்கு இன்னும் நிறையவே கிடைக்கலாம்.

புத்தகத்தில் கிளாரிந்தா, ரேனியஸ் ஐயர், சாராள் தக்கர், வ.உ.சி, தொ.ப போன்ற பெரியோர்களை விட  தவசுப்பிள்ளை அருணாச்சலம் பிள்ளை,  ஆரெம்கேவி விஸ்வநாதன்,  மனக்காவம்பிள்ளை, மகாராஜ பிள்ளை, அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையை  ரா.பி.சேதுப் பெருமகனார் என்று ஜாதிப்பெயரை தவிர்த்து அழைக்கும் வளனரசு ஐயா ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டார்கள்.  

இவர்களை விட த.மு.கட்டிடத்தின் பெயர் காரணம் கேட்கும் அந்த கணேசன்.  நாறும்பூ அதை விசாரித்துச் சொன்னதும், இந்தத் தகவலைத் தந்தது யார்? என்கிறார் கணேசன்.  விவேகானந்தன் என்கிறார் நாறும்பூ. 

“அவருக்கு என் சார்பில ஒரு வாழ்த்து சொல்லு… அவருதாம்ல திருநெவேலி ஆணி வேரு… “ என்று சொல்லிவிட்டு வேகமாக பஸ் ஏறுகிறார் கணேசன். எனக்கு அந்த கணேசனைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

நெல்லையின் ஆணிவேர்களை கோட்டுச் சித்திரமாகக் காட்டிய என் அன்புத் தோழர்.நாறும்பூநாதனை இங்கிருந்தே ஆரத் தழுவி வாழ்த்துகிறேன். 

நூல்: திருநெல்வேலி நீர்-நிலம்-மனிதர்கள்
ஆசிரியர்: இரா.நாறும்பூநாதன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ரூ270.00
பக்கங்கள்: 270

Fear is death Article By Surulivel. இல. சுருளிவேலின் அச்சமே மரணம் கட்டுரை

அச்சமே மரணம் – இல. சுருளிவேல்




இன்றைய உலகமயமாதல் சூழ்நிலையில் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மக்களிடையே அச்சமும் பெருகி வருவதை மறுக்க இயலாது. எங்கோ ஒரு நாட்டில் நிகழும் பிரச்சனைகளால் நாமும் பாதிக்கப்படுவோமோ என்றெண்ணி அச்சம் கொள்கிறோம். இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள் இனி எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

துணிவே துணை என்பதற்கு உதாரணமாக பல்வேறு அறிஞர்கள், தலைவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் நிறுபித்துள்ளனர். முக்கியமாக சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கவிஞர் கண்ணதாசன், அச்சமே மரணம் நூல் ஆசிரியர் வாஸ்வானி போன்ற பலர் தங்களின் படைப்புக்கள் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளனர். மாணவர்கள் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளைப் பற்றிப் பயப்படுகின்றனர். படிப்பு முடிந்த பின்பும் நேர்முகத் தேர்வின்போதும் நெஞ்சம் நடுங்கி நிலைகுலைகின்றனர். அதே போன்று வேலையில் சேருவதற்கும், சேர்ந்த பின்பு, ஓய்வு பெரும் வரையிலும், தொடந்து பயமும் வருகிறது. காதலர்களுக்கு திருமணம் நடக்குமோ நடக்காதோ என்ற பயம்.

ஆதே போன்று திருமணம், ஆன பின்பும், முதுமை வரையிலும்; தொழில் துவங்கும் வரை, தொழில் துவங்கிய பின்பும் என பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயமும் கூடவே வந்து கொண்டிருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய கொள்ளை நோய்களும், பல்வேறு போராட்டங்களும், அண்டை நாடுகளிடைய அச்சுறுத்தல்களும், விலைவாசி உயர்வும் கூட அச்சத்தின் பிடியில் அரசை ஆட்டம் காணச்செய்து கொண்டிருக்கிறது. நிகழ்கால வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய பல விசயங்கள் இருக்கும் போது எதிர்கால வாழ்க்கையை எண்ணிப் பாமரர் முதல் படித்தவர் வரை, ஏழைகள் முதல் பணக்காரர் வரை ஒவ்வொருவரும் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். பயம் மனிதனின் முன்னேற்றத்திற்கு பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

பயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்களில் நானும் ஒருவன். இந்த பயம்தான் எனது முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீண்ட காலம் ஆனது. பல நேர்காணலில் தோல்வியுற்றதற்கு முதல் காரணம் எனது பயமே. பயத்தினால் மறதி, கவலை, மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, பசியின்மை வருவதை உணர்ந்தேன். உணவு உடல் ஆரோக்கியத்தைத் தரலாம். ஆனால் மனதில் பயத்தை வளரவிட்டால், அது மனிதனை விரைவில் அழிந்து விடும். பயம் இருப்பவர்கள் விரும்பிய கல்வியை பெற முடியாது, விரும்பிய செல்வத்தை சேர்க்க முடியாது, விரும்பியதை அனுபவிக்க முடியாது. அறிவும், துணிச்சலும், முயற்சியும், பயிற்சியும் இருக்கும் ஒருவருக்கே தொடர்ந்து வெற்றி கிடைக்கிறது. சமூகத்தில் பின்தங்கிய நிலை தொடருவதற்கு முக்கியமான காரணமே பயம்தான்.

நமது கலாச்சாரம் குழந்தை பருவம் முதலே தைரியத்தை விட பயத்தையும் அதிகம் ஊட்டி வளர்க்கிறது. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியிலும் நம்மிடையே பல மூட பழக்கவழக்கங்களும் புரையோடிக் கிடக்கின்றன என்பதை பல்வேறு உயிர்பலி சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன. மனிதன் அறிவியலை விட ஜாதகங்கள், சம்பிரதாயங்களை அதிகம் நம்புகின்றான். பயம் கொள்கிறான், துன்பத்திற்கு ஆளாகிவிடுகிறான். மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளையும் கடந்தே வருகிறான். இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள், போர், பஞ்சம், பொருளாதாரப் பிரச்சனை போன்ற பல சூழ்நிலைகளை எதிர் கொண்டு மீண்டவர்களும் உண்டு அவற்றை எதிர்கொள்ளமுடியாமல் மாண்டவர்களும் உண்டு.

படித்ததில் பிடித்த அரேபியக் கதை ஒன்று: அறிவு நிரம்பிய ஒரு முதியவர் பாலைவனத்தில் வழியே பாக்தாத் நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கையில், அவரையும் முந்திக்கொண்டு செல்லும் கொள்ளை நோயைச் சந்தித்தார்.

ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறாய்? என்று அதைப்பார்த்து அப்பெரியவர் கேட்டார்.

“பாக்தாத் நகரில் ஐம்பது உயிர்களைப் பலிவாங்கப்போகிறேன்” என்று கொள்ளை நோய் கூறியது. பின்பொரு நாள் திரும்பி வரும் போது மீண்டும் இருவரும் சந்திக்க நேர்ந்தது.

“என்னிடம் நீ பொய் சொல்லிவிட்டாய்” என்று பெரியவர் கொள்ளை நோயைக் கடிந்துரைத்தார்.

ஐம்பது உயிர்களைப் பலி வாங்கப்போகிறேன் என்று சொன்னாயே? இப்போது ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கிவிட்டாயே? என்று கேட்டார் பெரியவர்.

“அதை நான் செய்யவில்லை. நான் ஐம்பது உயிர்களை மட்டுமே எடுத்தேன். அதற்கு மேல் ஒருவர்கூட என்னால் சாகவில்லை. எஞ்சியவர்களையெல்லாம் கொன்றது அவர்களின் அச்சம்தான்!” என்றது கொள்ளைநோய்.

ஆம்! உண்மையில் அச்சம்தான் நமது ஊக்கத்தையே உறிஞ்சி எடுத்துவிட்டு மனதில் மரணபயத்தை வேரூன்றச் செய்கிறது. வாழவும் பயப்படுகிறோம், சாகவும் பயப்படுகிறோம். ஏனென்றால் வாழ்க்கை அவ்வளவு குழப்பமானதாகவும் அஞ்சத் தக்கதாகவும்,  பாதுகாப்பற்றதாகவும் ஆகிவிட்டது இல்லையென்றால் நாளுக்கு நாள் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

எதற்கு பயப்பட வேண்டும் எதற்கு பயப்படக்கூடாது என்ற அறிவியல் சிந்தனை மக்களிடையே வளர வேண்டியுள்ளது. வள்ளுவர் சொன்னது போல

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”

அதாவது அறிவில்லாதவர்கள் அஞ்சக்கூடியதற்கு அஞ்சமாட்டர்கள். அறிவுடையவர்கள் அஞ்சவேண்டியதற்கு அஞ்சி நடப்பார்கள். சிலர் நல்ல செயல்களை செய்வதற்கும் அச்சம் கொள்கின்றனர். இதனால் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம். நாளை ஏதாவது நடந்துவிடுமோ என்ற தேவையில்லாத கற்பனை. இது ஒருவகையான அறியாமையே விழிப்புணர்வு இன்மையே. வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும். சில ஞானிகள், எழுத்தாளர்கள் தங்களின் கருத்துகளுக்காக சிறை சென்றுள்ளனர். சிலருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அறிவு பூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அன்றைய சமூக, பொருளாதார கட்டமைப்பு. ஆவற்றையும் கடந்த பல அறிவியல் சிந்தனை பதிவுகள் இன்றைய வரலாற்று சுவடுகள்.

சிலர் திரைப்படங்கள் எடுக்கவும், அதனை வெளியிடவும் அச்சம் கொள்கின்றனர். காரணம், அத்திரைப்படம் சமூகத்தில் ஏதாவது பிரச்சனையை உண்டு பண்ணுமோ, இதனால் நஷ்டம் ஏற்படுமோ என்ற பயம். ஆனால் அதையும் தாண்டி எடுக்கப்பட்டு, பல விமர்சனங்களுக்கு ஆளாகி, இன்றும் வரலாற்று பதிவுகளாக இருக்க கூடிய சில நல்ல திரைப்படங்களும், அதில் நடித்த நடிகர்களும் அச்சத்தை வென்றவர்கள். இன்று சமூக ஊடகங்கள் சமூக மாற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் அச்சம் இன்மையே.

தேச விடுதலை, அனைவருக்கும் சமூக நீதி, பெண் விடுதலை, தொழிளாலர் உரிமை போன்ற பல விசயங்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் கொண்டிருந்தால் இன்று இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? மாபெரும் வீரர், மானம் காத்தோர், மனித நலனுக்காக தன்னையே தியாகம் செய்தவர்கள் காலத்தை வென்றவர்கள். இந்த உலகம் நல்லவர்களால் மட்டும் இயங்கவில்லை நல்லவை நடப்பதற்காக துணிந்து முடிவெடுத்து செயலாற்றியவர்களால் மட்டுமே இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காதல் பிரச்சனை, கடன் பிரச்சனை, குடும்பப்பிரச்சனை, தொழில் பிரச்சனை போன்ற பல காரணங்களாலும் பயம் கொள்கின்றனர். பிரச்சனைகள் வரும் போது அதைக்கண்டு ஓடிவிடுவதாலும், உறுகி விடுவதாலும், சண்டையிடுவதாலும் அதற்கான நிரந்தர தீர்வு ஏற்பட்டு விடாது. சிலர் தற்கொலைதான் தீர்வு என எண்ணி தவறான முடிவுக்கும் வருகின்றனர். சிலர் தேர்வு பயத்தால் தன்னையே மாய்த்து கொள்கின்றனர். இதனைப் போன்ற செயல்கள் மனித இனத்திற்கே அவமானமே தவிர வேறொன்றும் இல்லை. சாகத்துணிபவர்கள் ஏன் வாழத்துணிவதில்லை! பிரச்சனை வரும் போது பயந்து முடங்கி கிடந்தால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது.

கவிஞர் கவிதாசன் சொன்னது போல “முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைப் பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்”. எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் பிரச்சனைகள் வரும் போது அதைக் கண்டு அஞ்சாமல், பதற்றம் கொள்ளாமல் அதனை வெல்வதற்கு வழிகளை, தேவையான முயற்சிகளை மேற்கொள்வதே சிறந்த முடிவாகும்.  சுவாமி விவேகானந்தர் சொன்னது போல “உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது மிகப்பெரிய பாவம்” ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நம்மிடையேதான் இருக்கிறது. சில பிரச்சனைகளுக்கு அமைதி தான் தீர்வு. சில பிரச்சனைகளுக்கு நம்மால் தான் தீர்வுகான முடியும், சில பிரச்சனைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தீர்வுகான முடியும், சில பிரச்சனைக்கு நீதி மன்றம் தான் முடிவாக இருக்கும். எனவே பிரச்சனையின் தன்மையை பொருத்து நிதானமாகவும், அறிவுப்பூர்வராகவும், துணிவுடனும் தீர்வு காணப்பட வேண்டும். உணர்ச்சிவசத்தால் ஒரு போதும் முடிவு எடுக்கக் கூடாது.

அச்சத்திற்கு அறிவியல் காரணங்களும் உண்டு. அச்சம் ஒரு வகையான அறியாமையே, சுய விழிப்புணர்வு இன்மையே, மன அமைதியின்மையே, மனித உடலில் ஏற்படும் ஒரு வகையான வேதியியல் மாற்றங்களே. இதனைச்சரியாக புரிந்துகொண்டால் அச்சம், கோபம், கவலை போன்ற பல எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் போய்விடும். மகான்களை மக்கள் அதிகம் தேடிச்செல்வதற்கு முக்கியமான காரணம் அவர்கள் பயம் இல்லாமல் மன அமைதியுடன் இருப்பதால்தான். அங்கு பிரச்சனைக்களுக்கு தீர்வு கிடைக்கும்மென நம்புகின்றனர்.

“தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல்” என்பார்கள். ஆம் நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானல் அச்சத்தை முதலில் வெல்ல வேண்டும். நாம் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விசம் கூட தன்மையற்றதாக விடும். கொரானா, ஓமைக்கிரான் போன்ற பல நோய்களை வெல்வதற்கு முதலில் விழிப்புணர்வு மட்டுமே தேவை. அதாவது பயத்தை தவிர்த்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது. நோய் வந்தால் அதற்கான காரணங்களையும், குணப்படுத்த தேவையான முயற்ச்சிகளையும் துணிச்சலுடன் மேற்கொள்ள வேண்டும். நோயினால் இறப்போரை விட பயத்தினால் இறப்போரே அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நோய் வந்தால் குடும்பத்திலும், சமூகத்தில் ஒதுக்கப்படுவோமோ என்ற பயத்தை தவிர்க்க வேண்டும். பயம் அதிகரிக்கம் போது நோயின் தீவிரம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.

சில சமூகங்கள், சில நாடுகள் ஆளுமையுடன் இருப்பதற்கு பொருளாதாரம் மட்டும் காரணம் அல்ல, அவர்கள் அறிவுடனும், சரியான திட்டமிடுதலுடன், துணிவுடன் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைகின்றனர். அதனால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். பயந்தால் எந்த ஒரு விசயத்தையும் நன்றாகக் செய்ய முடியாது. உதாரணமாக பயந்தால் வாகனங்கள் ஓட்ட முடியாது, மருத்துவம் பார்க்க முடியாது, நாட்டைப் பாதுக்காக்க முடியாது, தேர்தலில் வேட்பாளராக நிற்கமுடியாது, நாட்டை நிர்வகிக்க முடியாது. எனவே பயம் தேவையற்ற ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடியும்.

“கோழைகள் பலமுறை சாகின்றனர். வீரனோ ஒருமுறைதான் சாகிறான்.” நமக்குக் கிடைத்திருப்பது ஒரே வாய்ப்பு இந்த வாழ்க்கை. பிறப்பு மற்றும் இறப்பு ஒரு முறையே மனிதனுக்கு. ஆனால் அச்சத்தாலும் நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம். நூறு ஆண்டுகளுக்கு மேல் அச்சத்தோடும், மன அமைதியில்லாமலும் வாழ்ந்து மறைவதை விட, குறைவான ஆண்டுகள் வாழ்ந்தாலும் துணிச்சலுடன் ஆக்கபூர்வமான வாழ்க்கை வாழ்ந்து மடிய வேண்டும். இதுவரை நாம்அச்சத்திற்கு அடிமையாக இருந்திருந்தாலும், இனிவரக்கூடிய காலங்களில் அறிவுடனும் துணிச்சலுடனும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை வாழ பழகிக் கொள்ள வேண்டும். எனவே அச்சம் நம்மைக் கொல்லும் முன் நாம் அச்சத்தைக் கொன்று அச்சத்திற்கே அச்சத்தை கொடுத்து வாழ்ந்து காட்டவேண்டும்.

முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204

Era Narumpoonathan's book Tirunelveli Neer Nilam Manithargal book review by Pavannan. இரா.நாறும்பூநாதனின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: இரா.நாறும்பூநாதனின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் – பாவண்ணன்



மனிதர்களின் சித்திரத்தொகுப்பு

ஒரு தொன்மக்கதை. முன்னொரு காலத்தில் ஒரு சிற்பி வாழ்ந்துவந்தார். வளர்ந்து இளைஞனான அவருடைய மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றித் திரிவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் கடுமையான சொற்களால் அவனைக் கண்டித்தபோது, இளைஞன் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். ஏதோ ஆத்திரத்தில் அவனை வெளியேற்றிவிட்டாலும் அவருடைய மனம் அவனை எண்ணி உருகியபடியே இருக்கிறது. அவன் பிரிந்துசென்ற துயரத்தை நெஞ்சில்
சுமந்தபடி அலைந்த அவருக்கு சிற்பவேலைகளில் ஓய்வின்றி ஈடுபடுவது மட்டுமே ஆறுதலளிப்பதாக உள்ளது.

காலம் உருண்டோடினாலும் அவருடைய துயரம் கரையவில்லை. ஒருநாள் அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு குன்றில் சிற்பங்களைச் செதுக்கத் தொடங்குகிறார். அதே சமயத்தில் அந்தக் குன்றின் பள்ளத்தாக்கில் தாழ்வான பகுதியில் வேறொரு சிற்பியும் ஒரு சிற்பத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கிறான். ஒருவர் செதுக்குவதை இன்னொருவர் உணராமலேயே சிற்பங்கள் வளர்ந்துவருகின்றன. ஒருநாள் மூத்த சிற்பி இளைப்பாறுவதற்காக செதுக்கும் வேலையை நிறுத்திவிட்டு வெற்றிலை போட மரத்தடியில் அமர்கிறார். அப்போதுதான் கீழேயிருந்து உளிச்சத்தம் எழுவதை அவர் மனம் அறிகிறது. உடனே வேகவேகமாக பள்ளத்தாக்கில் இறங்கி சத்தம் வந்த திசையை நோக்கி நடக்கிறார். தனக்குத் தெரியாமல் தான் சிற்பம் செதுக்கும் பகுதியில் தன்னைச் சீண்டுவதற்காகவே யாரோ ஒருவர் வந்து சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்ற எண்ணத்தால் அவர் நடை விசைகொண்டதாக மாறுகிறது.

அருகில் நெருங்கி ஆள் நின்றிருப்பதை உறுதிசெய்துகொண்ட கணத்திலேயே, அவன் யார் என்று தெரிந்துகொள்ளக்கூட முயற்சி செய்யாமல் கையில் இருந்த உளியை அவனை நோக்கி வீசுகிறார். அது அந்த இளைய சிற்பியின் கழுத்தில் ஆழமாக இறங்கிவிட, அக்கணமே அவன் அப்பா என்ற அலறலோடு கீழே சாய்கிறான். அப்போதுதான் அவன் முகத்தை அவர் பார்க்கிறார். அவன் சில ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற தன் மகனே அந்த இளைய சிற்பி என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து புலம்பத் தொடங்குகிறார். அவன் அங்கே செதுக்கிவைத்த ஒற்றைக்கல் கோபுரத்தையும் சிற்பங்களையும் பார்த்து திகைத்து நின்றுவிடுகிறார். எவ்வளவு பெரிய தவறை இழைத்துவிட்டோம் என நினைத்து உருகி உருகி அழுகிறார். திருநெல்வேலிச் சீமையில் கழுகுமலையை ஒட்டியிருக்கும் வெட்டுவான்கோவில் குன்றோரத்தில் காணப்படும் முற்றுப்பெறாத சிற்பத்துக்குப் பின்னணியில் இந்தத் துயரமான அப்பா-மகன் கதை மறைந்துள்ளது.

ஒரு வரலாற்றுச் செய்தி. அருட்பணியாற்றுவதற்காக லண்டனிலிருந்து 1843இல் நெல்லைச்சீமைக்கு வந்த மருத்துவர் ஒருவர் ஊரிலிருக்கும் தன் இளைய சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் நெல்லைவாழ் பெண்களின் நிலையைப்பற்றி ஆதங்கத்துடன் சில தகவல்களைத் தெரிவிக்கிறார். படிப்பறிவில்லாதவர்களாக அவர்கள் வாழ்வதைப் பார்த்த தன் துயரத்தை சகோதரியுடன் பகிர்ந்துகொள்கிறார். அந்தச் சகோதரியின் பெயர் சாராள் டக்கர். அந்த மருத்துவரின் பெயர் ஜான் டக்கர்.

மாற்றுத்திறனாளியான அச்சகோதரி ஒரு பள்ளி மாணவி. இந்தியாவில் பெண்கள் கல்வியறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்னும் செய்தியே அவளைத் திகைக்கவைக்கிறது. அவள் மனம் அக்கணமே நெல்லைச்சீமையில் பெண்களுக்காகவே ஒரு பள்ளியைத் தொடங்கவேண்டும் என்று உறுதிகொள்கிறது. அவளும் அவள் தோழிகளும் சேர்ந்து இருபது சவரன் தங்கத்தைத் திரட்டி நன்கொடையாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள். அந்தத் தொகையை மூலதனமாகக் கொண்டு மருத்துவர் அந்த ஊரில் சிறுமிகள் படிக்கும் வகையில் ஒரு பள்ளியைத் தொடங்குகிறார்.

பதின்மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்தப் பள்ளி இயங்கியது. பிறகு போதிய பணவசதியின்றி அதை மூடவேண்டிய நிலை உருவானது. தன் சகோதரரின் கடிதம் சுமந்துவந்த அச்செய்தியைப் படித்துவிட்டு சாராள் டக்கர் வேதனையில் மூழ்குகிறாள். எதிர்பாராத உடல்நலக்குறைவால் அவளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சமயம் அது. இந்தியா என்னும் பெயரை வரைபடத்தில் பார்த்ததைத்தவிர, இந்தியாவைப்பற்றி வேறு எந்தச் செய்தியும் அறியாத அந்த இளம்பெண்ணின் மனம் மூடப்பட்ட அந்தப் பள்ளியை எப்படியாவது தொடர்ந்து நடத்தவேண்டும் என்று தவியாய்த்தவிக்கிறது. அந்தத் தவிப்பிலேயே அவள் உயிர் பிரிந்துவிடுகிறது.

அவள் அடக்கம் செய்யப்படும் நாளில் அவளுடைய தோழிகளும் இரு மூத்த சகோதரிகளும் சாராளின் பள்ளிக்கனவை நிறைவேற்றுவதாக உறுதிமொழி எடுக்கிறார்கள். நகர் முழுதும் அலைந்து பலரைச் சந்தித்து நிதி திரட்டுகிறார்கள். ஏறத்தாழ எண்ணூறு பவுனுக்கு மேல் திரண்டுவிட்ட நிதியை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள். 1861இல் பள்ளிக்காக நிலம் வாங்கப்பட்டு கட்டுமான வேலை தொடங்கியது. சாராள் டக்கர் பெயரிலேயே முதலில் தொடக்கப்பள்ளி உருவானது. முப்பதாண்டு வளர்ச்சிக்குப் பிறகு அது உயர்நிலைப்பள்ளியாக வளர்ந்தது. அடுத்த ஐந்தே ஆண்டுகளில் அது கல்லூரியாகவும் வளர்ந்தது. தென்னிந்தியாவிலேயே பெண்களுக்காக முதன்முதலாக ஒரு கல்வி நிலையம் நெல்லைச்சீமையில் உருவான வரலாற்றின் பின்னணியில் சாராள் டக்கரின் கருணையும் தியாகமும் கரைந்துள்ளன.

அந்தப் பள்ளியின் முதல்வராக பணிபுரிந்தவர் ஆஸ்க்வித் என்னும் அருட்பணியாளர். ஒருநாள் பள்ளிக்கூட வளாகத்தின் பக்கம் தட்டுத்தடுமாறி வந்து நின்று வேலை கேட்டுக் கெஞ்சிய பார்வையற்ற சிறுவனுக்கு அவர் அடைக்கலம் அளிக்கிறார். அச்சிறுவனுக்கு கல்வியின் மீது இருக்கும் ஆர்வம் அவருக்கு புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பார்வையில்லாதவனுக்கு எப்படி கல்வியை அளிப்பது என்ற யோசனையில் மூழ்கிவிடுகிறார். இதற்காகவே அவர் லண்டனுக்குச் செல்கிறார். மூன் என்னும் மருத்துவருடன் இணைந்து புதிய எழுத்து முறைகளை உருவாக்குகிறார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உழைத்த பிறகு அவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கிறது. சாராள் டக்கர் கல்வி நிலைய வளாகத்திலேயே பார்வையற்றோர் பள்ளியை அவர் உருவாக்குகிறார். அப்பள்ளியின் உருவாக்கத்துக்குக் காரணமான சிறுவன் அப்பள்ளியில் படித்து, வளர்ந்து பட்டம் பெற்று அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து சேவையாற்றினார்.

மற்றொரு வரலாற்றுச் செய்தி. தஞ்சையில் வாழ்ந்த மராட்டிய பிராமண வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் கோகிலா. அந்த ஊர் திவானின் மனைவி. குடும்ப வழக்கப்படி கணவன் மறைந்ததும் அவளை உடன்கட்டை ஏறுவதற்குச் சம்மதிக்கவைத்துவிடுகிறார்கள் அவள் உறவினர்கள். குழந்தைப்பருவத்திலிருந்து அவளை வளர்த்த பெண்மணி, அந்த வட்டாரத்தைச் சேர்ந்த லிட்டில்டன் என்னும் ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்து புகாரளித்து கோகிலாவைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறாள். உடன்கட்டைக்கு ஏற்பாடுகள் நடைபெறும் இடத்துக்கு விரைந்து சென்ற லிட்டில்டன் சின்னச்சின்ன தீக்காயங்களோடு அவளைக் காப்பாற்றிவிடுகிறார். பிறகு தன் மாளிக்கைக்கே அவளை அழைத்துச் சென்று தக்க மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்து பிழைக்கவைக்கிறார். தனிவீட்டில் கோகிலாவைத் தங்கவைத்து பாதுகாப்பளித்த லிட்டில்டன் அவளுக்கு ஆங்கிலத்தைக் கற்பிக்கிறார். அவளிடமிருந்து அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சையிலிருந்து நெல்லைக்கு மாற்றலாகி புறப்படும்போது கோகிலாவையும் தன்னோடு அழைத்துக்கொண்டு வருகிறார் லிட்டில்டன். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள். அங்கே அவருக்குப் புதிய வாழ்க்கை தொடங்குகிறது. கோகிலா என்ற பெயரை கிளாரிந்தா என்று மாற்றிக்கொள்கிறார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் கல்வியறிவைப் புகட்டுவதற்காக முதலில் அவர் தன் பெயரிலேயே ஒரு பள்ளியை உருவாக்குகிறார். பிராட்டஸ்டண்டு சித்தாந்தங்களை நன்கு கற்றறிந்த அவர் 1783இல் ஒரு அழகான தேவாலயத்தைக் கட்டத் தொடங்கி இரண்டாண்டுகளில் கட்டிமுடித்தார். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பாளையங்கோட்டை தெற்குப் பகுதியில் இரு கிணறுகளை வெட்டினார்.

‘பாப்பாத்தியம்மாள் கிணறு’ என்ற அடைமொழியோடு அவை இன்றளவும் மக்கள் நாவில் திகழ்கின்றன. கால்டுவெல் தன் நூலில் அளித்துள்ள இந்தியக் கிறித்துவர்களின் பெயர்ப்பட்டியலில் முதல் பெயராக கிளாரிந்தாவின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இன்னுமொரு வரலாற்றுச் செய்தி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாளையங்கோட்டை. ஒருபக்கமாகவும் திருநெல்வேலி மறுபக்கமாகவும் பிரிந்திருக்க இடையில் தாமிரபரணி நதி கரைபுரண்டு ஓடியது. ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல மக்கள் பரிசில்களையே சார்ந்திருந்தனர். ஆனால் பரிசில் பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. உயர்சாதி மக்கள் அமர்ந்திருக்கும் பரிசிலில் தாழ்ந்த சாதி மக்களால் அமர்ந்து செல்லமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் தீராத சாதிச்சண்டைகள். அப்போது ஆட்சியராக இருந்தவர் தாம்சன் என்னும் ஆங்கிலேயர். அவருடைய அலுவலகத்தில் தலைமை எழுத்தராக இருந்தவர் சுலோச்சனா முதலியார். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு வந்து குவியும் புகார்களில் இந்தச் சாதிச்சண்டை புகார்களே அதிகம்.

இந்த மோதல்களுக்கு ஒரு முடிவை உருவாக்க நினைத்த ஆட்சியர் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் நீண்டதொரு பாலத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தை வகுத்தார். பொருத்தமான பொறியாளரைக் கொண்டு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செலவுத்தொகை கணக்கிடப்பட்டது. பொருத்தமான தீர்வைக் கண்டறிந்த ஆட்சியர் அச்செலவுத்தொகையை ஈட்டுவதற்கான வழியை மட்டும் பொருத்தமில்லாத வகையில் வகுத்தார். மக்கள் மீது புதிய வரிகளை விதித்து வசூலாகும் தொகையை வைத்து அச்செலவை ஈடுகட்ட நினைத்தார்.

முதலியாருக்கு அந்தத் திட்டம் ஏற்புடையதாகப் படவில்லை. அன்று இரவே தன் மனைவியிடம் இதைப்பற்றி உரையாடி மொத்த செலவையும் தானே ஏற்பதாகவும் அதற்காக தன் சொத்துகளை விற்றுத் தருவதாகவும் தெரிவித்தார். முதலியாரின் கருணையைக் கண்டு ஆட்சியர் மகிழ்ந்தார். பாலத்தின் கட்டுமானத்திட்டக் கோப்பைத் திறந்து, முதலியாரின் திட்டத்தை ஏற்பதாகவும் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அப்பாலத்துக்கு முதலியார் பெயரையே சூட்டவேண்டும் என்றும் குறிப்பெழுதி கையெழுத்திட்டார். பாலத்தை கட்டி முடித்த சமயத்தில் தாம்சன் இடமாற்றலில் வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். புதிய்வர் ஒருவர் பதவி ஏற்றிருந்தார். ஆயினும் தாம்சன் எழுதிய குறிப்பின்படியே பாலத்துக்கு சுலோச்சனா முதலியார் பாலம் என்றே பெயர்சூட்டப்பட்டது. இன்றளவும் பயன்பாட்டில் உள்ள அப்பாலம் ஒரு கோணத்தில் மாபெரும் கருணையின் அடையாளம். இன்னொரு கோணத்தில் அகற்றமுடியாத அளவுக்கு மனிதமனத்தில் மண்டிக்கிடக்கும் சாதியுணர்வை நினைவூட்டும் புள்ளி.

வாய்வழித் தகவல்களாகவும் நூல்வழித் தகவல்களாகவும் திரட்டப்பட்ட ஏராளமான வரலாற்றுச் செய்திகளை ஒருங்கே தொகுத்து நூலாக்கியிருக்கிறார் நாறும்பூநாதன். ’திருநெல்வேலி நீர் – நிலம் – மனிதர்கள்’ என பொருத்தமாகவே தலைப்பைச் சூட்டியிருக்கிறார். அந்தக் கால நெல்லைச்சீமையைப்பற்றிய சித்திரத்தை இந்த நூலை வாசித்த பிறகு நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்தப் புத்தகத்தில் நாற்பத்தொன்று அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புனைகதையைப் படிக்கும் சுவாரசியத்துடன் அமைந்துள்ளது. எகிப்திலிருந்து மரக்கலங்கள் வழியாக கொச்சி துறைமுகத்துக்கு வந்து, அங்கிருந்து காயல்பட்டினத்தை நோக்கி நடைப்பயணமாகத் தொடங்கி தென்தமிழகத்துக்குள் இறங்கி, களைப்பின் காரணமாக தாமிரபரணிக் கரையோரமாக மங்காநல்லூரில் தங்கி, பிறகு அங்கேயே நிலைத்து வாழத் தொடங்கிய இஸ்லாமியர்களின் வாழ்க்கைவரலாற்றைப் படிக்கும்போது ஒரு நாவலின் சுருக்கத்தைப் படித்ததுபோல இருக்கிறது.

ஒரு அத்தியாயத்தில் வீடுகளை விற்றுவிட்டு பிழைப்பைத் தேடி வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் இந்து குடும்பத்தினர் பற்றிய செய்தி இடம்பெற்றிருக்கிறது. அந்த வீடுகளை வாங்கிய இஸ்லாமிய மக்களிடம் தம்முடைய பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலைப் பாதுகாக்கவேண்டும் என்னும் வாக்குறுதியை வாங்கிக்கொண்ட பிறகே அவர்கள் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இன்றைய தலைமுறை வரைக்கும் இஸ்லாமியர் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றிவருகிறார்கள் என்னும் செய்தி நல்லிணக்கம் நாடும் மனத்துக்கு மிகவும் ஆறுதலாகவும் நம்பிக்கையின் அடையாளமாகவும் இருக்கிறது.

தனிமனிதர்கள் தன் நினைவுகள் வழியாக எழுதும் ஊர்வரலாறுகள் நெஞ்சுக்கு நெருக்கமாக உள்ளன. அது அவர்கள் அறிந்துவைத்திருக்கும் எண்ணற்ற மனிதர்களின் சித்திரத்தொகுப்பாக அமைந்திருப்பதுதான் முக்கியமான காரணம். நாறும்பூநாதன் எழுதியிருக்கும் திருநெல்வேலி வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் அபூர்வச் சித்திரங்களின் தொகுப்பு. ஒரு படைப்பாளியின் மனம் இயங்கும் விதத்தை ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அது ஒரு புயல்காற்று போல. தானாகவே உருவாகி, தானாகவே வீசி, தானாகவே அடங்கி ஓய்ந்துவிடும். சாத்தான்குளம் ராகவனுடைய புத்தகத்துக்கு இசக்கி அண்ணாச்சி அட்டைப்படம் வரைந்துகொடுத்ததைப்பற்றி இந்நூலில் இடம்பெற்றிருக்கும் சிறுகுறிப்பே இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு. நாள்கணக்காக தாமதப்படுத்திய ஓர் ஓவியத்தை நள்ளிரவில் நாலுமணி நேரத்தில் வரைந்துமுடித்துக் கொடுத்து அனுப்பிவிடுகிறார் அண்ணாச்சி. அக்கணத்தில் எங்கிருந்தோ ஒரு ஆற்றல் அவருக்குள் செயற்பட்டு அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டது. அந்த ஆற்றலின் வருகைக்காகவே அவர் அத்தனை நாட்கள் காத்திருந்தார் போலும்.. இசக்கி அண்ணாச்சியை அன்று ஓவியம் தீட்டவைத்த அதே ஆற்றலே, ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு மேலாக நெல்லைச்சீமையைச் சுற்றிச்சுற்றி வந்த நாறும்பூநாதனை இந்த வரலாற்றை எழுத வைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

 திருநெல்வேலி நீர் – நிலம் – மனிதர்கள்
இரா.நாறும்பூநாதன்
சந்தியா பதிப்பகம்
53வது தெரு, 9வது அவென்யு
அசோக் நகர், சென்னை -83.
விலை ரூ.270