கிராமத்தின் ஒரு மூலையில் கவிதை – ஆதிரன் ஜீவா

கிராமத்தின் ஒரு மூலையில் கவிதை – ஆதிரன் ஜீவா




சூரியன் மறைந்தாலும் அதன்
ஒளி மறையாத அந்திமாலை

வான்வெளியில் வட்டமிடும் வௌவால்கள்,

கூடுதிரும்பும் இணை மைனாக்கள்,

இளம்தென்னை உரசலோசை,

முந்தாநாள் முடிந்துபோன
சண்டையை மீளக்கொணர
வாசலில் அமர்ந்து
வசைபாடும் பக்கத்துவீட்டு அம்மா,

காற்றிலாடும் வேம்பின் கிளைகளில்
கொஞ்சிப் பேசிடும் பூனைக் குருவிகள்,

நாள்பூரா உழைத்துத் திரும்பும்
தாயின் அன்பிற்காய்க் காத்திருக்கும் சீருடைச் சிறுமி,

தூரத்துக் குளமொன்றில்
பெருந்துணியொன்றை அடித்துத் துவைக்கும்
‘தொப்’ ‘தொப்’பெனும் ஓசை,

எல்லாம் ‘அழகு’ தான் கிராமத்தில்.

இருந்தும் தவணை முறையில்தான் பிடிக்கிறது கிராமத்தை.
ஜாதியை தங்கள் பெருமையென
நினைக்கும் பல ‘மனித’ மனங்களால்.

ஜாதிவாரி தெரு இருக்கும் கிராமங்களை அழகென்று சொன்னால்
அழகுக்கே அது அவமானம்.

-ஆதிரன் ஜீவா

Thanges Poems 33 தங்கேஸ் கவிதைகள் 33

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
படபடக்கும் வெள்ளைத் தாள்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்குக்
கொள்ளை அழகு

விரல் தீண்டும் இந்தச் சிறு கணத்திற்காகவா
இத்தனை காலங்கள் காத்திருந்தாய்?

ஆனாலும் உன்னை ஆதி அந்தமாய்
தழுவும் போது நான் சொல்வேன்
நின்னினும் என் தவம் பெரிதே கந்தர்வா!

கல்லாய்ச் சமைந்திருந்தவனை
உயிர்ப்பித்தது
ஒரு மாசற்ற சுவாசம் எனில்
அந்த ஒரே ஒரு மாசற்ற சுவாசத்திற்காக
உன் பெயரைச் சொல்லிச்ள சொல்லியே
கல்லைத் திரவாகமாய்க் கரைத்தவள் நான்

கவிதை 2
அந்த நதி இன்னும் ஓடிக்கொண்டே தானிருக்கிறது மனதில்
மனம் பிறழ்ந்த பொழுதொன்று
அதன் மீது குப்புற கவிழ்ந்து கிடக்கிறது

சாரமற்ற நிலவும்
கோலமாவைப் போல
பொடிப்பொடிப்யாக
அதன் மீது
தன்னைத் தூவிக் கொண்டிருக்கிறது

நீ ஒரு சொல்லை உதிர்க்கிறாய்
ஓசையின் இனிமையில்
அர்த்தத்தைத் தவற விடுகிறேன்
தவறவிடுவதே நம் இயல்பானதை எண்ணி
நீ ஆழமான புன்னகையைச் சிந்துகிறாய்

வழியைத் தவறவிட்டு
தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்த
கொத்துவெண் நாரைக் கூட்டமொன்று
கூடடையாத அந்தச் சொல்லை
அலகுகளில் கல்விப் போகிறது!

Kadavulin kuzhanthaigalam Poem By Adhith Sakthivel கடவுளின் குழந்தைகளாம் கவிதை - ஆதித் சக்திவேல்

கடவுளின் குழந்தைகளாம் கவிதை – ஆதித் சக்திவேல்




ஒவ்வொரு நாளும்
குழந்தைகளை அணைத்து முத்தமிடுகையில்
குற்ற உணர்வில் கரைந்து போகிறேன்

கை ரேகைகளுக்கு இடையில்
தேங்கி நிற்கும் அந்த நாற்றம்
விரல்களின் இடையில் தங்கிடும் சிறுநீர் உப்பு
குழந்தைகளின் கன்னங்களில்
புழுக்களாய் ஊர்ந்து கொண்டிருக்கும் அருவறுப்பில்
உடல் சிலிர்த்து சிறுத்துப் போகிறேன்

அவ்வேளைகளில்
அன்பை மட்டும் நான் பகிரவில்லை
எனும் உண்மையின் சூடு
என்னைச் சூனியமாக்கி
என் உடலெங்கும் படர்ந்து எரிக்கின்றது

சுருக்குப் பையில்
காசு தேடும் குழந்தைகளின் கைகளில்
நீலகிரி தைலக் குப்பி அகப்பட்டு
“வாரத்தில் ஏழு நாளும் உனக்கு சளி காய்ச்சல் தானா?”
என அவர்கள் கேட்கையில்
வெளியில் சொல்ல முடியா உண்மை
உள்ளிருந்து என்னை அரிக்கின்றது

சூரிய உதயங்களில்
அஸ்தமனமாகும் எங்கள் வாழ்வு
கருவறையின் இருட்டு என்று விடியுமோ
எங்கள் தீண்டாச் சேரியின் குழந்தைகளுக்கு?

துருப்பிடித்த வாளியும்
தேய்ந்துபோன துடைப்பமும்
பல நூறு ஆண்டுகளாய்
அவற்றில் மறைந்துள்ள சோகத்துடன்
இரக்கமற்ற தந்திரமும் வஞ்சகமும்
இன்று வரை
பீறிடும் எங்கள் பெருமூச்சில் எரியவில்லை
பொங்கிவரும் கண்ணீரில் கரையவில்லை

இத்தலைமுறையில் முடிந்துவிடும் இவ்வலவும்
என எண்ணுகையில்
அடுத்த தலைமுறை
துடைப்பமும் வாளியுமாய்
எங்கள் முன்னே வந்து நிற்கும்
தூரத்தில் இணைவது போல் தோன்றி
ஏமாற்றும் தண்டவாளங்கள் போல்

அடை மழைக் காலம்
வறண்ட கோடைக் காலம்
சுழன்றடித்து வீசும் காற்றுக் காலம்
இயற்கை கூட
என்றுமே எங்கள் பக்கம் நின்றதில்லை

அன்றொரு நாள்
நடைமேடை உணவுக் கடை ஒன்றில்
தலை முடியை மறைத்து
கைகளில் உறை அணிந்த ஒருவர்
எனக்கு உணவு பரிமாறிய அவ்வேளையில்
என் சிரிப்பை அடக்க முடியாது திணறினேன்

இன்னொரு நாள்
புல்லட் ரயில் பற்றிய
பாரதப் பிரதமரின் அறிவிப்பை
தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டே
இந்த தண்டவாளங்களுக்கு இடையில்
வழுக்கி விழுந்தபோது
என் அழுகையை அடக்க முடியாது திணறினேன்

இத்தொழிலை
ஆன்மிக அனுபவம் எனச் சொல்வோரில்
ஒரு சிலரை இங்கு அனுப்பி வையுங்கள்
அவர்களும் உய்த்துணரட்டும்
அதை எங்களோடு சேர்ந்து

இன்னொரு ஜென்மம் இல்லை என நன்கு தெரிந்து
எங்கள் சேரியில் பிறக்க விரும்புவோரில்
ஒரு சிலரை இங்கு அழைத்து வாருங்கள்
இந்த ஜென்மத்திலேயே
எங்கள் துன்பத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ளட்டும்

முகர்தல் புலனை அடக்கிட
தரையில் காலூன்றாது நடந்திட
பயிற்சி தருவோர் யாரேனும் உள்ளனரா என
அறிந்து சொல்லுங்கள்

எங்களை மறைத்திட
முகத்திற்கு மூடி
கைகளுக்கு உறை
முழங்கால் வரை காலணி
இவற்றில் எதுவும் வேண்டாம்
நாங்கள் எங்களை மறந்திட
எங்கள் உடலுடன் மனமும் சேர்ந்து மரத்திட
எதையாவது தாருங்கள்

அதுவரை
காலையில் தேநீருக்குப் பதிலாய்
நாங்கள் பருகுவது
அற்புத தேவமருந்து எங்களுக்கு
இந்த கடவுளின் குழந்தைகளிடம்
இனி அரிக்கவும் எரிக்கவும்
ஏதுமில்லை

Kalai's Short Poems கலையின் சின்னஞ்சிறு கவிதைகள்

கலையின் சின்னஞ்சிறு கவிதைகள்




1.
காத்து வாக்குல
சுற்றினாலும்
குளிரீரத்தை மெதுமெதுவாய்
பருகி கொண்டே புரள்கிறது
குளுமையை உறிஞ்சி
சுகம் காணுகிறது
ஆனால்
எரியும் நெருப்புப் பூக்களை
மட்டுமே
ஆணியாய் அடிக்கிறது
அக்னி வெயில்…

2.
நிர்வாணமாய்த்
திரியும் வெயிலை
கருணை கலந்த
ஒருதலைக் காதலோடு
மரங்களின் ஒத்தாசையுடன்
கருப்புடை உடுத்தி விடுகிறது
நிழல்…
வெயில் ஏனோ
அப்படியே திரிகிறது இன்றும்!

3.
திரும்பவும்
ஏமாற்றப்பட்ட நினைவே இவ்விடங்களில் திரும்பி வந்து போகிறது
ரேசனில் பொருள் வாங்க காத்திருந்த பல மணிநேரம்..
பள்ளியில் பாலகன் சீட்டுக்கு குடியிருந்த சில நாள்..
தாலுகா அலுவலகத்தில் அன்றாடம் அலைந்து போன பொழுது..
அரசு மருத்துவமனையில் மருத்துவத்திற்காய் மயங்கி
விழுந்த விநாடி..
ஓட்டுப் போட்டு
காலம் மட்டும் கடந்து போனதால்!

Puvi Nadanam Poem By Navakavi நவகவியின் புவிநடனம் கவிதை

புவிநடனம் கவிதை – நவகவி




சூரிய சந்திரர் ஜோடித் தபேலா!
பிரபஞ்சம் இசைக்குது பார்வெகு நாளா!
கடல்அலைக் கரங்கள் பிடித்திட பதமே
காணுக புவித்தாய் நவரச நடமே!
ததோம் ததோம் என
தபே லாவின்இசை
ஒளியாய் வழியுது!
அதோ அதோ புவி
அன்னையின் நாட்டியம்!
அண்டம் மயங்குது!
(சூரிய)
மஞ்சு மேக உடை
பஞ்சு போல மலைக்
கொங்கை மீது படர,
ஓடும் கங்கைநதி
ஒட்டியா ணம்என
ஆகி வந்து தழுவ,
கோடி நட்சத்திரக் கண்ணால்
கண்டு இதை வானம்,
வியந்து வியப்பில்விரி வாகி
நீள்கிறது போலும்!
பருவ காலங்கள் ஆறும்
பக்கத் திரைச்சீலை ஆகும்!
துருவப் பனி இவளின்
முகத்தில் பூசும்அரி தாரம்.
(சூரிய)
மூங்கில் காடுகளை
புல்லாங் குழல்வனம்
ஆக்கித் துளை புகும் காற்றே!
ஆடு கின்ற புவி
அன்னை மேனியெங்கும்
பொழிக பொழிக இசை ஊற்றே!
சுழன்று சுழன்று இவள்
நடனம் பயில்கின்ற நேரம்,
நீரும் தீயுமிரு
நேத்திரங் களிலும் ஊறும்!
ஆயிரம் யுகம்யுக மாக
ஆதி நடம்இவள் ஆட, -இவள்
பாவம் யாவும் பல உயிரின்
பெருக்கமாய் மாற
(சூரிய)

Nedunalvadai Poem By Vasanthadheepan. வசந்ததீபனின் நெடுநல்வாடை கவிதை

நெடுநல்வாடை கவிதை – வசந்ததீபன்




எலிகள் திரியும்
இடத்தில்
பூனைகளின்
வருகை அவசியம்
வயலைத் தின்று
செரிக்க முயலும்
கொக்குகளின் நிறம்
வெண்மையாக
எளிதில் கடந்து
போகிறது
எறும்பு
நீரற்ற ஆற்றை…
வீடுகளிலும் இருள்
கண்களிலும் கண்ணீர்
யாருக்கு வளம்?
யாருக்குச் சந்தோஷம் ?
சோப்பு நுரையாய்
நகரும்
காலத்தின் மேல்
கனவுகள் பயணிக்க
விழுந்த மழை
ஓடியது தப்பிக்க…
சூரியனை நீட்டி மீண்டும்
வாரியடித்தது வானம்
கனவுகள் தருகிறாய்
கவிதைகள் தருகிறாய்
மனக் கதவுகளைத்
திறக்க மாட்டேன் என்கிறாய்
செடிகளோடு பேசினேன்
குழந்தைகளாய்க் குதூகலித்தது

நெஞ்சுக்குள் ஈரம் ஊறத் தொடங்கியது
மனசோ நடுக் காட்டில்
சிக்கிக் கொண்டது
மானோ கண்ணுக்குள் வந்து
மாட்டிக் கொண்டது
உயிரோ மீன்முள் தைத்தது போல் திக்கித் திணறுது
கனவுகள் இல்லாத இதயம்
கல்லில் செதுக்கிய சிற்பம்
கனிகள் விளையாத மரம்
கிளிமொழி கேட்டால் பரவசமடைகிறீர்கள்
குயில் பாட்டில் குதூகலமடைகிறீர்கள்
குரலின் தன்மையை அறிய அக்கறையில்லை

தொடர் 5: சூரியன்– அம்பை | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 5: சூரியன்– அம்பை | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழகத்தின் எல்லைகடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட அம்பையின் கதைகளில் பெண்களில் உறவுச் சிக்கல்கள் பிரச்சனைகள் குழப்பங்கள் கோபதாபங்கள் சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. சூரியன் அம்பை வெகு சாதாரண இயந்திர உபகரணங்களால் நெய்யப்பட்ட கம்பளிக் கோட்டும், கால் சராயும்…
வானில் ஒரு நெருப்பு வளையம்..! – பா. ஸ்ரீ குமார்

வானில் ஒரு நெருப்பு வளையம்..! – பா. ஸ்ரீ குமார்

  இம்மாதம், ஜூன் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 12 மணிக்கு, வட இந்தியாவில் சில இடங்களில் “வானில் ஒரு நெருப்பு வளையம்” தெரியும்.முழு வளையச் சூரிய கிரகணத்தை, கர்சனா,  சூரத்கர்க், சிர்சா, ஷிவான், குருஷேத்ரா, யமுனா  நகர், டேராடூன், நியூ தெஹரி மற்றும் ஜோஷிமத் ஆகிய நகரங்களில் உள்ளவர்கள் தெளிவாகக் காண முடியும். இந்தியாவின்…