இன்று அதிகம் தேவைப்படும் விஞ்ஞான பிரசார்! கட்டுரை – ஆயிஷா இரா.நடராசன்
அக்டோபர் 24, தீபாவளி. இன்று இதை எழுதுகிறேன். இதே அக்டோபர் 24, 1995 அன்று என் தந்தை திடீர் நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சை பெற ஆம்புலன்ஸை அழைத்தபோது பிரபல சென்னை மருத்துவமனை (அப்போதெல்லாம் 108 கிடையாது) அதை அனுப்ப மறுத்தது. அதை இப்போது நினைக்கிறேன். பிறகு யார் யாரிடமோ கெஞ்சி ஒரு கார் பெற்று அவரை கிட்டத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. காரணம் அன்று முழு சூரிய கிரஹணம். யாருமே சாலைக்கு வரவில்லை. மருத்துவர்களேகூட. ஆம்புலன்ஸ் எப்படி வரும்? நம் நாட்டின் ‘அறிவியல் மனப்பான்மைக்கு இதைவிட பெரிய சான்று தேவை இல்லை.
நாம் எப்போதும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி பேசுகிறோம். கல்வியில் பின்தங்கிவிட்டதைப் பற்றி விவாதிக்கிறோம். வேலைவாய்ப்பின்மை பற்றி வேதனைப்படுகிறோம். படித்தவர் பாமரர் என வேற்றுமை இன்றி மூடநம்பிக்கை – பிற்போக்கு அறிவியலற்ற அச்ச நிலையின் உச்சம் பற்றி ஏன் பேசுவதே இல்லை? கல்வி என்கிற ஒன்றை வேலைவாய்ப்போடு மட்டுமே தொடர்புபடுத்தும் நாம் அறிவியல் மனப்பான்மை, விழிப்புணர்வு பெறுவதே கல்வி என்று ஏன் நினைப்பது இல்லை. ஆனால், இந்த விஷயத்தில் விஞ்ஞான பிரசார் செய்துவரும் சேவை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.
அறிவியல் தொழில்நுட்பம் மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிக்கிடப்பது போல அறிவியல் மனப்பான்மை அணுகுமுறை இல்லை. பிற்போக்குவாதம், மூடநம்பிக்கை, மதவெறி என பல்வேறு சமூகக் கேடுகளுக்கு எதிராக அறிவியலைக் கொண்டாடும் சவாலான அமைப்பாக விஞ்ஞான் பிரசார் திகழ்கிறது.
1989-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு இந்த அக்டோபர் 11 அன்று 33-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது அது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஒரு தன்னாட்சி அதிகார அமைப்பாக அது வளர்த்தெடுக்கப்பட்டது.
அதன் ஸ்தாபகர் முதல் இயக்குனர் விஞ்ஞானி டாக்டர் நரேந்தர கே. ஷெகல் விஞ்ஞான் பிரச்சாரை தனித்துவ மக்கள் அமைப்பாக வென்றெடுத்தது வரலாறு. அறிவியலை கொண்டாடுதல் முதல் நோக்கம். பொதுவாகவே அரசியல் தலைவரை, நடிகரை, கிரிக்கெட் வீரரை பெரிய கதாநாயக நிலைக்கு உயர்த்தி ஆரவாரிக்கும் இந்திய சமூகத்தில் விஞ்ஞானிகளைக் கொண்டாடி மக்கள் முன் அங்கீகரிப்பதில் விஞ்ஞான பிரசார் என்றுமே முன்னிலை வகித்து வருகிறது. உலக அறிவியல் சாதனைகளுக்கு சற்றும் சளைக்காத நம் இந்திய அறிவியலின் எழுச்சி நாயகர்களின் பங்களிப்புகளை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் விஞ்ஞான் பிரச்சாருக்கு பெரும் பங்குண்டு.
1989 முதல் இன்று வரை 350க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான அறிவியல் நூல்கள், 2650 மணி நேரத்துக்கும் அதிகமான அறிவியல் விழிப்புணர்வு ஆவண படங்கள், 370 மணி நேர ஆடியோ அறிவியல் விழிப்புணர்வு தொகுப்புகளை உருவாக்கி எழுச்சி நடைபோடுகிறது. விஞ்ஞான் பிரசார். பல பத்தாண்டுகளாக நாம் தொடர்ந்து வாசித்து வரும் கனவு 2047 (DREAM 2047) அறிவியல் மாத இதழ் தனித்து குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வந்து கொண்டிருந்ததை இன்று ஏனைய பிராந்திய மொழிகளிலும் பலவிதமாக வெளியிடுகிறது விஞ்ஞான் பிரசார். தமிழில் அவ்விதம் வெளிவரும் விஞ்ஞான் பிரச்சாரின் இதழ்தான் நம் ‘அறிவியல் பலகை’.
இப்படிப்பட்ட ஓர் அமைப்பின் தேவை குறித்து ஜவஹர்லால் நேரு விடுதலைக்கு முன்பே தனது இந்தியாவை கண்டுணர்தல் (THE DISCOVERY OF INDIA) நூலில் எழுதினார். சகிப்பின்மை, பிற்போக்குவாதம் மற்றும் அதீத மூடநம்பிக்கை போன்றவை மனிதனை செயல்படவிடாமல் செய்யும் உடலை சுற்றிய சங்கிலிகள் என்பார் அவர். 1953-லேயே விஞ்ஞான் மந்திர் (அறிவியல் கோயில்) என்று அறிஞர் பட்னாகர் தலைமையில் ஓர் அறிவியல் அமைப்பை நேரு உருவாக்கினார். விக்யான் பிரகதி என்று ஒரு சஞ்சிகையும் தொடங்கப்பட்டாலும் அது இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வகத்தின் (CSIR) அங்கமாக இருந்ததால் நினைத்த அளவுக்குச் செயல்பட முடியவில்லை .
ஆனால், விஞ்ஞான பிரசார் அமைப்பின் ஸ்தாபகர் முதல் தலைவர் நரேந்தர. கே. ஷெகல் பற்றி தனித்து குறிப்பிட வேண்டும். இந்தியா பெற்றெடுத்த அற்புத துகளியல் இயற்பியல் விஞ்ஞானி. யுனெஸ்கோ உலக அளவில் வழங்கும் சாதாரண மக்களிடம் அறிவியலைக் கொண்டு செல்பவருக்கான உயரிய கலிங்கா விருதை 1991-ம் ஆண்டில் பெற்றவர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தவர். 1987-ம் ஆண்டில் அறிவியல் விழிப்புணர்வுக்காக பாரத் ஜன் விக்யான் ஜாதா மேற்கொண்டவர். அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பை 1988 – ம் ஆண்டில் உருவாக்கியவர்களில் ஒருவர். அவரது விஞ்ஞான் பிரசார் ஆண்டுளான 1988 முதல் 2000-ம் ஆண்டு வரை பல அற்புதங்களை அந்த அமைப்பு சாதித்தது.
‘விக்யான்விதி’, மானவ்கா விகாஸ் (மனித பரிணாமவியல்) போன்ற பிரபலமான வானொலித் தொடர்கள். பேராசிரியர் யஷ்பால் வழங்கிய திருப்புமுனை (TURNING POINT) உட்பட பல அறிவியல் தொலைக்காட்சி விழிப்புணர்வு தொடர்கள். 1995-ம் ஆண்டில் பிள்ளையார் பால் குடித்த விந்தையின் போது, அதிலுள்ள விஞ்ஞானத்தை விளக்கி மோசடியை தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
நோய்த் தொற்று காலத்தில் கோவிட் விழிப்புணர்வு எனும் பிரமாண்ட சேவையோடு இந்திய மருத்துவ கவுன்சிலோடு இணைந்து கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் விஞ்ஞான் பிரசார் பெரும் பங்காற்றியது. அறிவியல் கருத்தரங்கங்கள், வானியல், வான் நோக்கும் நிகழ்ச்சிகள், கடற்கரைத் தூய்மை, வன உயிர் பாதுகாப்பு, உள்நாட்டுச் சாதனை விஞ்ஞானிகளை கொண்டாடுதல் என்று அதன் செயல்பாடுகள் அறிவியல் பலகை வழியாக தமிழ் மண்ணிலும் தொடர்வது காலத்தின் தேவை.
அறிவியல் இந்தியன் (THE SCIENTIFIC INDIAN) என்ற தனது நூலின் பின்னுரையில் பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம், ‘சந்திரயான் திட்டம், அணு ஆய்வு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒதுக்குவதைவிட அதிக அளவு தொகையை நாம் அறிவியலை மக்களிடம் எடுத்துச் செல்ல செலவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். நரபலி உட்பட கொடிய பிற்போக்கு அபாயங்கள் சூழும் இன்றைய காலத்தில் விஞ்ஞான் பிரச்சாரின் தேவை அதிகம் உணரப்படுகிறது. தனது முப்பத்தி மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மக்கள் அறிவியல் அமைப்பான விஞ்ஞான் பிரச்சாரை வாழ்த்தி, அதன் தமிழ் வடிவமான அறிவியல் பலகைக்கு தோள் கொடுப்போம்!
”அறிவியல் இந்தியன் The Scientific Indian) என்ற தனது நூலின் பின்னுரையில் பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம், ‘சந்திராயன் திட்டம், அணு ஆய்வு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒதுக்குவதைவிட அதிக அளவு தொகையை நாம் அறிவியலை மக்களிடம் எடுத்துச் செல்ல செலவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.”
நன்றி: அறிவியல் பலகை
நூல் அறிமுகம்: பெ. கண்ணப்பதாஸ் ’நட்ட கல்லும் பேசுமோ’ – பிரேம்குமார்
நூல் : நட்ட கல்லும் பேசுமோ சித்தர் பாடல்கள் ஓர் அறிவியல் நோக்கு
ஆசிரியர்கள் : பெ. கண்ணப்பதாஸ்
விலை: ரூ. 180/-
பக்கம் : 240
வெளியீடு : தமிழினி
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்தை அடையாளம் காட்டும் என்பது போல நான் வாசித்த “ஆசைப்படாதே எதுவும் கிடைக்காது! தேடு எல்லாம் கிடைக்கும்” என்ற புத்தகத்தில் நான் வாசித்த சிவவாக்கியரின் பாடல் வரிகள் “நட்ட கல்லும் பேசுமோ ” புத்தகத்தின் அட்டைப்படத்தில் தலைப்பாக பார்த்தவுடன் இந்த புத்தகத்தை வாங்கிவிட்டேன்.
“நட்ட கல்லும் பேசுமோ ” என்ற இந்த புத்தகத்தின் வாசிப்பு சித்தர்களின் மீதான ஈர்ப்பு இன்னும் கூடிவிட்டது. வேதியியல், வானியல், மருத்துவம், ஜோதிடம் என்று பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்கும் இவர்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு இடையூறாக இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் சாதி பேதங்களுக்கும் எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர் என்ற தன்மைகள் நான் அறியாதது. அதற்காக சித்தர்கள் சொல்லுவதே வேதவாக்கு என்று முன்மொழியாமல் அதில் உள்ள இடைச்செருகல்களையும் சுட்டிக்காட்டி வாசகர்களுக்கு ஒரு முழுமையான பார்வையை இந்த கட்டுரை தொகுப்பில் உதாரணங்களுடன் திறம்பட சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் பெ.கண்ணப்பதாஸ். இதற்காக இவர் எடுத்துக்கொண்ட உழைப்பு அபாரமானது. நமது புராணங்களின் உண்மை தன்மையையும் கேள்விகூறியது என்று பல அவதானிப்புகள் இன்றியமையாதது.
சித்தர்களுடைய எல்லாப் பாடல்களையும் வாசித்து அதன் உட்கருத்தையும் மறைமுக தகவலையும் உள்வாங்கி ஆய்வதற்கு இந்த ஆயுள் போதாது. அப்படி இருக்க இது போன்று ஒரு கண்ணோட்டத்தை வாசகர்களுக்காக விட்டு சென்றதற்கு எழுத்தாளர் பெ.கண்ணப்பதாசை பாராட்ட வேண்டும்.
சித்தர் இலக்கியம் வாசிப்பதற்கு முன் வாசிக்க வேண்டிய புத்தகமாக நான் இதை கருதுகிறேன்.
இந்த புத்தகம் மேலும் பல புத்தகங்களை வாசிக்க வழி காட்டி இருக்கிறது.
– பிரேம்குமார்
நூல் அறிமுகம் : பேரா. எஸ். சிவதாஸ் : தமிழில் டாக்டர். ப.ஜெயகிருஷ்ணனின் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் – ந.சௌமியன்
இந்த புத்தகத்தில் மொத்தம் 12 அத்தியாயங்கள் கொண்ட அற்புதமான புத்தகம் இரண்டே நாளில் படித்து முடித்து விட்டேன். ஒரு கழுதையின் கதை என்ற முதல் அத்தியாயத்தில் கதையின் முக்கியமான கருத்து நம் பார்வை. நம் பார்வையில் தான் இந்த உலகம் அடங்கிக் கிடக்கின்றது. நாம் காலை எழுந்தவுடன் நம் வீட்டை விட்டு வெளியே வந்து காணும் காட்சிகள் நம் வீட்டிற்கு அருகே உள்ள மின்சார கம்பங்கள் மீது அமர்ந்து உள்ள பறவைகளைக் காண்போம். அத்துடன் நம் வீட்டிற்கு அருகே உள்ள மரங்கள் மீது உள்ள பறவைகள் கூட்டில் உள்ள பறவை குஞ்சுகள் கத்தும் சத்தத்தைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த இரண்டு விஷயத்திற்கும் சம்மந்தபடுத்தி யோசித்திருந்தால். நமக்கென்ன எங்கே பறவைகள் இருந்தால் என்ன. எங்கோ பறவைகளின் குஞ்சுகள் கத்தினால் என்ன. நமக்கு நம் வேலை தான் முக்கியம். ஆனால் ஒரு முறையாவது இதைப் பற்றி யோசித்துப் பார்த்திருப்போமா. நாம் காணும் விஷயங்களைச் சாதாரண பார்வையில் அடங்கி இருக்கும் பல உண்மைகளை நாம் உற்றுநோக்கும் போதுதான் கண்டறிய இயலும். ஒரு இரு விஷயத்தில் உள்ள சம்மந்தத்தை நோக்குதல் மூலம் பல அற்புதங்களைக் கண்டறிந்து உணரமுடியும். எந்த விஷயத்தையும் முக்கியமாக உற்று நோக்குதல் தேவை. இந்த புத்தகத்தில் வரும் அடுத்த அடுத்த தலைப்புகளும் அதில் வரும் சிறு சிறு கதைகளும் முதல் கதையின் தொடர்ச்சியாகப் பாலர் அரங்க ஆசிரியரும் மாணவர்களும் இயற்கை மனிதர்கள் மூடநம்பிக்கை விஞ்ஞானம் என்று இறுதி வரை உரையாடலாகச் சுவாரசியமாக எடுத்துச் செல்கின்றார் புத்தகத்தின் ஆசிரியர் சிவதாஸ்.
எனக்குப் பிடித்த ஒரு முக்கிய கருத்து இயற்கையைப் பற்றி யோசித்திருப்போம் அதில் அதன் இயல்பைக் கண்டு பயந்திருப்போம் ஆனால் அதில் உள்ள பண்புகளை உற்றுநோக்கி உணர்ந்தால் பயம் விலகி நேசிக்கத் தூண்டும். இயற்கையைத்தான் ஆசிரியர் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்கின்றார்.
இந்த இயற்கையின் ஒரு பாகம் தான் நாம் அதுபோலவே விலங்கும் பூச்சிகளும் ஒரு பாகமே.
இயற்கை சமநிலையாக இருக்க வேண்டும் என்றால் இந்த இயற்கை உள்ள உணவு சுழற்சியில் உள்ள அனைத்து உயர் இனங்களும் சமமாக இருக்க வேண்டும்.
அதற்குச் சிங்கம் மானை வேட்டையாடுவதும், பாம்பு எளியையோ , தவளையையோ வேட்டையாடுவது சமநிலையாக இருக்க உதவும். மனிதர்களாகிய நாம் பாம்பு,எலி,பூச்சிகள்,தவளைகள் நமக்கு எதிரி என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும். இயற்கையில் உள்ள பல மர்மமான விஷயங்களும், பயங்கரமான விஷயங்களும் நம்மை ஆச்சிரியபடுத்துபவைகளை அறிவியல் பார்வை கொண்டு உற்று நோக்கினால் தான் மர்மம் விலகி பல வித்தியாசமான கருத்துகளைக் கற்றுக்கொள்ள முடியும்.அது நம் வாழ்வில் சில கடினமான நேரத்தில் உதவிடும்.இந்த புத்தகத்தில் உற்று நோக்குவதுடன் சேர்த்து டைரி எழுதுவது மேலும் இயற்கையின் இயல்புகள் தேட தூண்டும் ஒரு புத்தகமாக அமைத்தது.
– ந.சௌமியன்
தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 2 – டாக்டர் இடங்கர் பாவலன்
தாய்ப்பால் வகுப்பறை பாடத்திட்டம்
மருத்துவமனைப் பள்ளியறையில் | வீடுகளில் | |||
வகுப்பறை | I. பிரசவ மேசையில் | II. பிரசவத்திற்குப் பின்பான வார்டில் | III. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்ற பிறகு | |
சுகப்பிரசவம் | சிசேரியன் | |||
படிப்புக் காலம் | பிரசவித்த முதல் இரண்டு மணி நேரத்தில் | 0 முதல் 3 நாட்கள் | 0 முதல் 7 நாட்கள் | 3-7 முதல் 42
நாட்கள் வரை |
பாடமுறை | மருத்துவ பள்ளிப்பாடம் | வீட்டுப்பாடம் | ||
கற்றல் பாடங்கள் | பிரசவித்த உடனேயே மார்பில் பிள்ளையைப் போட்டுத் தவழவிட்டு தாய்ப்பால் புகட்டுவதைப் பற்றி கற்றுத் தேர்தல் | 1.தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல்.
2.தாய்ப்பால் புகட்டுவது பற்றி நேரடி பயிற்சி எடுத்துக் கொள்ளுதல். 3.தாய்ப்பால் புகட்டும் பலதரப்பட்ட முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். 4.வீடு செல்லும் முன்பாக முழுவதுமாக கற்றுத் தேர்தல். |
1.சிசேரியன் செய்தும் அதன் சிரமமின்றி தாய்ப்பால் குடுக்கும் முறையைக் கற்றுத் தேர்தல்
2.சிசேரியன் கால மருந்துகள், மயக்கநிலை, தாமதமாகும் முதல் தாய்ப்பால் பாலூட்டல் நிகழ்வுகளைப் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ளுதல். |
1.மருத்துவமனையில் கற்றுக் கொண்டதை, எவர் உதவியுமின்றி சுயமாக பிள்ளைக்குப் புகட்டி வீட்டிலேயே பயிற்சி எடுத்தல்
2.குழந்தைகள் தொடர்பாக, தாய்ப்பால் புகட்டுதல் தொடர்பாக எழும் சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு உடனடியாக அதைக் களைந்து கொள்ளுதல். 3.வீட்டில் உள்ளோரின் மூடநம்பிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் குழந்தைகளை வளர்த்தெடுத்தல். 4. நாற்பது நாட்கள் முடிந்த பின்பு அல்லது முதல் தவணைத் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வருகையில் தாய்ப்பால் புகட்டிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொள்தல். |