நூல் அறிமுகம் : நக்கீரனின் கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் – சூரியா சுந்தரராஜன்

நூல் அறிமுகம் : நக்கீரனின் கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் – சூரியா சுந்தரராஜன்




சூடா ஒரு டீ சாப்பிடலாமா?

வாங்க…வாங்க….!

ஒரு 238 லிட்டர் தண்ணி சாப்டு போங்க…

என்ன புரியலையா? ஒரு குவளை தேநீரை தான் (அதான்பா டீ) அப்படி சொல்றேன்.

என்ன சொல்றீங்க! ஒரு கப் டீயே அதிகபட்சமா 30 மி.லி. தானே இருக்கும்னு கேக்குறீங்களா? நானும் அப்படித்தான் நெனச்சிட்டு இருந்தேன் இந்த புத்தகத்தை படிக்கிற வரைக்கும்.

அப்படி என்ன சொல்லியிருக்கு இந்த புத்தகத்துல?
வேற என்ன?
எல்லாம் மூன்றாம் உலகப்போருக்கு காரணகர்த்தாவான “தண்ணீர்” மகாபிரபுவ பத்திதான். இவரென்ன பண்றாருனா வளரும் நாடுகள்/ மூன்றாம்தர நாடுகள் என மேற்குலகினால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளிலுள்ள மக்களின் தாகத்தைக் கூட சரியாக போக்காமல், வளர்ந்த நாடுகள் எனக் கூறிக்கொள்ளும் மக்களின் காலணிகளினுள்ளும், ஆடைகளினுள்ளும் ஒளிந்து கொள்கிறார். இதைத் தான் ‘மறைநீர்’ (virtual water) என்கிறார் நூலின் ஆசிரியர்.

விவரமாகவே சொல்கிறேன். நெல் மணிகளை உற்பத்தி செய்வதற்கு நீர் தேவைப்படும் என்பதை நாம் அறிவோம். ஆனால், நெல் விளைந்தவுடன் அதற்கு தேவைப்பட்ட நீர் அதில் காணப்படுவதில்லை. அதேசமயம் அந்த நீர் அந்த நெல்லிற்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மைதானே? அந்த நீர் தான் ‘மறைநீர்’. இந்த மறைநீர்தான் உலகவர்த்தகத்தின் ஆஸ்தான நாயகன். இதனடிப்படையிலான பொருளாதாரம் ‘மறைநீர் பொருளாதாரம்’ என நாமகரணம் செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் புரிந்துக்கொள்ள சில கேள்விகளை நம்முன் வைக்கிறார் நூலின் ஆசிரியர். (பதில்களையும் அவரே கொடுத்துவிடுவார், கவலை வேண்டாம்.)

“பருத்தியை விளைவிக்க தெரிந்த மேல்நாட்டினருக்கு, பின்னலாடை தொழிநுட்பம் தெரிந்த மேல்நாட்டினருக்கு, அதற்கான எந்திரங்களை உற்பத்தி செய்து தரும் மேல்நாட்டினருக்கு, இந்த பின்னலாடைகளை மட்டும் அங்கேயே தயாரிக்க தெரியாதா? பின் ஏன் அதை மட்டும் இங்கே உற்பத்தி செய்து வாங்கிக் கொள்கிறார்கள்?”

“காலணி (shoe) தயாரிப்பிற்கு புகழ் பெற்ற இத்தாலி, ஏன் வாணியம்பாடியிலிருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை இறக்குமதி செய்கிறது? அதுவே பதப்படுத்திக் கொண்டால் இலாபம் இன்னும் இரட்டிப்பாகுமே?”

இப்படி பல ‘ஏன்’களுக்கு முதலாளித்துவ பொருளாதார பார்வை, அளிக்கும் பதில் “மலிவான மனிதவளம்” (அதாவது, நிறையபேர் வேலையில்லாத வெட்டிபசங்களா இருக்காங்கோமா, போனாபோகுதுனு நமக்கு அவங்க வேலைபோட்டுத் தாங்களாம்). இதுதான் உற்பத்தியை பெருக்க சரியான பொருளாதார உத்தி என, எனது பொருளாதார ஆசிரியர் கூறியதை நினைத்துக் கொண்டேன். அப்படி எனில் மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறார் ஆசிரியர்,

“சிக்கன நீர்ப்பாசன வேளாண்மைக்கு புகழ்பெற்ற இஸ்ரேல், பல வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஏன் ஆரஞ்சு பழங்களை ஏற்றுமதி செய்வதில்லை?”

“கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த சவூதி அரேபியா ஏன் உற்பத்தியை குறைத்துவிட்டு இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது?”

“பன்றி இறைச்சியை சீனர்கள் விரும்பி உண்ணும் போது, சீன அரசாங்கம் அதன் உற்பத்தியை கட்டுபடுத்தி வருகிறது?”

இங்கெல்லாம் “மலிவான மனிதவளம்” எனும் பதம் எந்த வினையையும் ஆற்றவில்லையே. ஆக, இந்த எல்லா கேள்விகளுக்குமான ஒருவரி பதில் ‘நீர் அரசியல்’ பலவரி பதில் ‘மறைநீர் பொருளாதாரம்’.(விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதே அளவுநீர் தான் இன்றும் உள்ளது. ஒரு சொட்டுகூட கூடவும் இல்லை, குறையவும் இல்லை. இது அறிவியல் உண்மை. பின் ஏன் இந்த அளவுக்கு நீர் தட்டுப்பாட்டு? இந்நூலின் ஆசிரியர் உலகநாடுகளைச் சுற்றிவந்து பல காரணங்களை அடுக்குகிறார். இங்கு, நாம் தமிழ்நாட்டிலிருந்து சில உதாரணங்களை மட்டும் காண்போம்.

சென்னை, ‘இந்தியாவின் டெட்ராய்ட்’என்ற பெருமையின் பின் 1.1 டன் எடையுள்ள ஒரு கார் உற்பத்திக்கு நான்கு லட்சம் லிட்டர் தண்ணீரைத் தாரைவார்க்கும் ஏமாளித்தனம் ஒளிந்துள்ளது. விளைவு, மாநிலத்தின் தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரே ஒரு பின்னலாடையின் மூலம் 2700 லிட்டர் தண்ணீர் கப்பலேரி செல்கிறது. நாம், உலகிலேயே மிக வேகமாக வளரும் நகருங்களுள் திருப்பூர்தான் முதலிடம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறோம்.வாணியம்பாடியிலிருந்து இத்தாலிக்குச் செல்லும் 1 கிலோ பதப்படுத்தப்பட்ட தோலின் மறைநீர் அளவு 16,600 லிட்டர். விளைவு, வேறென்ன பாலாறுக்கு பால் ஊற்றியது தான். இவ்வாறு மறைநீர் வர்த்தகத்தில் ஏமாளியாக இருந்த ஆப்பரிக்க நாடுகளின் தற்போதைய நிலமையை நம் நகரங்களோடு ஒப்பிட்டு பீதியை கிளப்புகிறார் ஆசிரியர். மேலும், மறைநீர் பொருளாதாரம், தண்ணீர் தட்டுப்பாடு இவற்றிற்கிடையேயுள்ள உறவையும் இதன் பின்னணியில் இருக்கும் சூழலியல் தீமைகளையும் அவர் பட்டியலிடும் போது ஆச்சரியகுறி எனும் அணிகலனை முகம் அணிச்சையாக அணிந்துகொள்கிறது.

ஒரு அணையின் மேல்பகுதியில் இருக்கும் மக்கள் அதை திறக்கக்கூடாது எனப் போராடுவதும், கீழ்ப்பகுதியில் இருக்கும் மக்கள் திறக்க வேண்டுமென போராடுவதும் உலக வழமை வேளாண் அரசியல். காவிரி நதிநீர் பிரச்சனையில் கூட தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையில் நடப்பது இதுதான். ஆனால் இதற்கு நேர்மாறாக உள்ளது தமிழகத்தில் ஓர் அணை. திருப்பூர் நகரிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள ஒரத்துப்பாளையம் அணைதான் அது. காவிரியின் துணைநதியான நொய்யலின் மீது கட்டப்பட்டுள்ள இந்த அணையில் தான் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள் மொத்தமும் தேங்குகிறது. இதனால் நீர் நஞ்ஞாகி அணைக்கு மேல்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக தான் அணையின் கீழ்ப்பகுதி மக்கள் அணையை திறக்க வேண்டாம் என போராட்டம் செய்கிறார்கள். இதன் கொடூரம், ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் இளநீர் செந்நிரமாக மாறி போனதால் குடிக்க எவருமின்றி தொங்கிக்கொண்டிருப்பதில் வெளிப்படுகிறது. வாணியம்பாடி தோல் தொழிற்சாலை கழிவுகள் பாலாற்றை இராசயண கழிவுநீர் தொட்டிபோல் மாற்றிவிட்டன.

இந்த பின்னணியில் தண்ணீர் தட்டுப்பாட்டை பாருங்கள், ஒருபக்கம் தண்ணீர் மறைநீராக ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம், இருக்கும் சொற்பநீரும் மாசடைந்து கிடக்கிறது. இங்குள்ள குடிநீரில் 72 விழுக்காடு குடிக்க லாயக்கற்றது என்று தமிழக பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது.

(குறிப்பு: இந்த இரசாயண கழிவுகள் ஒரு வழியாகக் கடலை அடையும்போது, கடலோர காடுகளான கண்டல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கண்டலைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள நக்கீரனின் இன்னொரு புத்தகமான அலையாத்தி காடு என்பதை படிக்கவும்).
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் சாயத்தொழிற்சாலைகளோ, தோல் பதனிடும் தொழிற்சாலைகளோ இல்லை. இப்பொருட்களை அந்நாடு இறக்குமதி செய்து கொள்கிறது. இக்காரணத்தில் இந்நாட்டின் தலைநகரம் ‘நீரின் நகரம்’ என அழைக்கப்படுகிறது.

தண்ணீரும் அதைச்சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்த்து இது போன்ற வளர்ச்சி எனும் ஆயுதம் தாங்கிய தொழிற்சாலைகளினால் ஏற்படுத்தப்படும் சுகாதார, உடல்நல கேடுகள் எனும் காயங்கள் நிகழ்கால கண்ணீர் சாட்சியங்கள். அதற்கு தனியே மேலும் சில புத்தகங்களை எழுத வேண்டும். இறுதியாக, வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் உள்ள செல்வ சீமாட்டிகள் ஆடம்பர கட்டிலில் புரண்டு விளையாட, ஏழைகளும், ஏழைநாட்டு மக்களின் வளங்களும் வதைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ‘சிவப்பு பொருளாதாரத்தை’ கைவிட்டு, ‘பச்சை பொருளாதாரத்தைக் கையிலெடுக்க அரசுகள் முன்வர வேண்டுமென இப்புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

– சூரியா சுந்தரராஜன்

நூல் அறிமுகம் : நக்கீரனின் காடோடி நாவல் – சூரியா சுந்தரராஜன்

நூல் அறிமுகம் : நக்கீரனின் காடோடி நாவல் – சூரியா சுந்தரராஜன்




நூல் :  காடோடி நாவல்
ஆசிரியர் : நக்கீரன்
வெளியீடு : அடையாளம்
விலை : 270
பக்க :  340
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

வெறும் முன்னூறு ரூபாயில் இன்பச்சுற்றுலா செல்ல வேண்டுமா?

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிக் கொண்டிருந்த காலம் அது. “மருத்துவமனைகளில் இடம் இல்லை. அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவை. இடுகாட்டில் இடம் இல்லாததால் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன”. போன்ற அறிவிப்புகளே எங்கும் நிறைந்திருந்தது. போதாக்கு றைக்கு நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் ஒரு இறப்பு செய்தியை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பயமும் மனஉளைச்சலும் தொற்றிக் கொள்ள, அதிலிருந்து விடுபட நிறைய மறதியும் கொஞ்சம் அமைதியும் தேவைப்பட்டது. அவ்வளவு தான் போர்னியா தீவு என்னை வாரி அணைத்துக் கொண்டது. கடவுச் சீட்டு இல்லையென்றேன்; வேண்டாம் என்றது. இபாஸ் இல்லையென்றேன்; தேவையில்லை என்றது. பிறகு எதற்கு தாமதம்? கிளம்பலாமா?

ரசோங் குரங்கு
அதுதான் என் முதல் படகு பயணம். கினபத்தாங்கன் நதியின் நீண்ட படகு பயணத்தை தொடங்கும் முன், மிக நீண்ட சாலை பயணத்தையும் முடிக்க வேண்டியிருந்தது. கினபத்தாங்கனிலிருந்து வடக்கு நோக்கி திரும்பி லோக்கன் ஆற்றின் மீது மிதக்க தொடங்கியிருந்தது படகு. இருபுறமும் மரங்களடர்ந்த பொள்ளாச்சி – ஆனைமலை சாலையில் பயணம் செய்யும் போதெல்லாம் அதன் எழிலில் மயங்கி வண்டியில் ஊர்ந்து செல்லும் எனக்கு லோக்கன் இன்ப அதிர்ச்சி தந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த அடர்ந்த மரங்கள் லோக்கனை வெயிலுக்கு காட்டாமல் வளர்த்துக் கொண்டிருந்தன. லோக்கனின் வழிப்பாதையை தவிர எங்கு திரும்பினும் பசுமை. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த பறவை ஆர்வாலர்கள் வந்தால் கூட எந்த புள்ளினத்தின் ஒலி இது என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு கலவையான ஒலிகளால் கானகம் நிரம்பியிருந்தது. ஆனால் லோக்கனோ அதன் ஆழத்தில் கொஞ்சி விளையாடும் மீன்களை கண்ணாடிபோல் தெளிவாக காட்டி அமைதியாக சென்று கொண்டிருந்தது. லோக்கனின் தாகம் தீர்க்கும் பல ஓடைகளில் ஒன்று இடப்பக்கமாக மேற்கிலிருந்து ஓடிவந்து கலந்தது. இதற்கு மேல் படகு செல்லாது. இனி காணப்போவதெல்லாம் காடு காடு காடு மட்டும் தான். கொரோனாவினால் ஏற்பட்ட வலி கரைந்து கொண்டிருந்த தருணம் அது.

தனியாக தான் போனேன். ஆனால் அங்கு சென்றதும் முதலில் துவான் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். பின் ஒமர் வந்தார். யுவன்னா, இல்லை அன்னா வந்தாள். ஜோஸ்சும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். காடுகள் ஒளித்து வைத்திருந்த ஆர்மோனியப் பெட்டியை கண்டெடுக்க அவனே கற்றுக் கொடுத்தான். ஜோஸ்ஸின் சொந்தக்காரி ரலாவின் பாடல்களுக்கு இசை கருவிகளே தேவையில்லை. இவர்களுடன் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் சிலர். அப்புறம் பிலியவ். ‘எனக்கு வண்டியில் பயணம் செய்ய தெரியாது’ எனக் கூறி என் பேரன்புகளை பிடுங்கி சென்றவர். படேல் சிலையருகே பாதங்களுக்கு பக்கத்தில் மோடி நிற்பது போன்ற காட்சியில் மூதாய் மரத்தையும் என்னையும் பொருத்திக் கொண்டிருந்த வேளையில் ஒமர் சொன்னார், உலகில் இவ்வளவு உயரமான மரவகைகள் அமேசான், ஆப்பிரிக்க காடுகளில் கூட கிடையாது. என்னையும் அறியாமல் என் தலை அதை ஆமோதித்து அசைந்து கொண்டிருந்தது. எங்களுடன் வா! நீ காண வேண்டியது நிறைய உள்ளது என்று ஜோஸ் சொல்லி முடிப்பதற்குள் நான் தயாரான வேகத்தைப் பார்த்து அனைவரும் வெடித்து சிரித்தனர்.

ஐம்பூதங்களில் மூன்றிற்கு காடு சம்பளத்துடன் கூடிய கால வரையறையற்ற விடுப்பு கொடுத்து விட்டது போலும். கண்ணுலையே படல. நிஜமாகத்தான் சொல்றேன். பல நூற்றாண்டுகளாய் சேமித்த இலை மேல்மண் மக்குகளால் சில அடி உயரம் வரை மூடப்பட்டிருந்த நிலம். ஓங்கியுயர்ந்து அடர்ந்து படர்ந்து வளர்ந்த மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம். சூரிய ஒளி புகமுடியாததனால் வெப்பத்திற்கு (நெருப்பு) தடை. ஆனால் வளிக்கும் (காற்று), அதனை குளிரூட்டும் சிற்றோடைகளுக்கும், குளங்களுக்கு (நீர்) மட்டும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்டும் வேலை. இப்படி அடர் வனத்தின் குளிர்ந்த கவிகையில் மூன்று நாட்கள் நீந்திக் கொண்டிருந்தேன்.

நான் பார்த்ததையெல்லாம் சொன்னால் நீங்கள் எல்லாரும் உடனே கிளம்பி அங்க போயிருவீங்க…கொஞ்சம் பயண களைப்பில் இருந்தாலும் உங்களுக்காக சில விஷயங்களை மட்டும் சொல்றேன்….. நம்ம ஊருல இருக்குற குரங்குகளெல்லாம் ஒரு மாறி மரப்பட்டை கலர்ல தான இருக்கும். இங்க அடர் செம்மஞ்சள் கலர்ல ஒரு குரங்கை பாத்தேன். அதுக்கு மூக்கு வேற தும்பிக்கை மாதிரி இருக்கு. ஒமரிடம் கேட்டேன், ரசோங் குரங்குகளாம். இங்கு தவிர உலகில் வேறு எங்கும் இல்லையாம்.

காட்டின் தாவரவியலையும், விலங்கியலையும் கரைத்து குடித்திருந்த ஒமர்தான் அந்த மூன்று நாட்களுக்கும் என் ஆசான். அதைப் போலவே உலகிலேயே மிகச் சிறிய குளம்புள்ள பாலூட்டியான கூரன் பன்றி, குள்ள யானை, வேதிவால் குருவி, இருவாசி பறவைகள், லயாங் லயாங் குருவி, பறக்கும் பாம்பு, பறக்கும் தவளை, பறக்கும் அணில், உராங் ஊத்தான், ஐந்தடி உயரமுள்ள தேன்கூடு, ஓரடி நீளமுள்ள குச்சிப் பூச்சி, பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு, டைனோசர் காலத்து தொன்மையான துபையா, தேன் குடிக்கும் ஒளவால், பெர்பாஞ்சாட் எனும் தொடை பருமனுள்ள காட்டு கொடி, பகட்டு கோழி, தாடி பன்றி, தெம்படாவ், பன்றிவால் குரங்கு, சாம்பல் குரங்கு, கலோய் மீன், சும்பித்தான்……. ஆமாங்க …இந்த பட்டியல் சற்று நீளமானது தான்..

காட்டுன்னா பல்வேறு மரங்களும் உயிரினங்களும் இருப்பது இயல்பு தானேனு நீங்க நினைக்கிறது கேக்குது. ஆனா மற்ற காடுகளில் இருப்பது போன்று அல்ல. நான் வாசித்த பட்டியலில் பெரும்பாலானவை ஓரிடவாழ்வி. இந்த காட்டை தவிர உலகில் வேறு எங்கேயும் இவற்றை காண முடியாது. இந்த காட்டை பற்றிய மேலும் ஒரு சுவையான உண்மையை ஒமர் என்னிடம் கூறினார். நான் உங்களிடம் கூறுகிறேன். குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை நாம் அறிவோம். அந்த குரங்கு இனத்திற்கே முன்னோடியாக உள்ள விலங்குகளை பிரைமேட் என்று கூறுவார்களாம். அது உலகெங்கிலும் பரவி இருந்தாலும் சுமார் பத்து பிரைமேட்கள் ஒன்றாக இந்த காட்டில் உள்ளதாம். ஆம். நம் பத்து முப்பாட்டனையும் நான் பார்த்து விட்டேன். அதில் ஒன்று தான் நாற்பத்தினான்கு விலங்கு. அந்த விலங்கில் ஆந்தையின் கண்கள், வௌவாளின் காதுகள், குரங்கின் வால், தவளையின் கால் என 44 வகையான விலங்குகளின் உறுப்புகள் இருந்தது. நான் மெரண்டுட்டேன். இறுதியாக,கதிரவன் கரையும் நேரத்தில், உலகிலேயே வௌவால்கள் அதிகம் வசிக்கும் கோமதோங் குகையிலிருந்து பல ஆயிரம் வௌவால்கள் வெளியேறிய காட்சியும், கோடான கோடி மலர்கள் ஒரே சமயத்தில் மலர்ந்திருந்த காட்சியும் இந்த பயணத்தில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது…….

உங்களுக்கும் அங்க போகணும்னு தோணுதா? இந்த பெருந்தொற்று காலத்திலும் இது சாத்தியமாகுமானு சந்தேகமா இருக்கா? அதுவும் வெறும் முன்னூறு ரூபாயில்.சாத்தியம்தான் நக்கீரனின் காடோடி நாவலை வாசித்தால். ஆமாங்க. இவ்வளவு நேரமும் நான் படித்த காடோடியில் உள்ள போர்னியா தீவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர நான் சென்று வந்ததை பற்றி அல்ல. கதையை சொல்லும் துவான், என் கையை பிடித்துக் கொண்டு கூட்டிப்போகும் உணர்வை அவர் எழுத்தில் தோய்த்திருந்தார் நக்கீரன்.

இக்கதை போர்னியாவைப் பற்றியது அல்ல. அங்கு வாழும் வாலில்லாக் குரங்குகள் பற்றியும் அல்ல. அங்குள்ள குளங்களிலும் அருவிகளையும் வளர்க்கும் ஓடைகளை பற்றியும் அல்ல. காடுகளை போற்றி பாதுகாத்து வாழும் திடோங், முருட் இனங்களை பற்றியதும் அல்ல. காட்டிலுள்ள மரங்களிடம் உரையாடும் பிலியவ் பற்றியும் அல்ல. மரங்களினுள் வாழும் கொற்றவை பற்றியும் அல்ல. அந்த கொற்றவையை கொல்ல வரும் வெட்டுமர கம்பனியை பற்றியதும் அல்ல. தன்னை வாழ வைக்கும் காட்டின் அழிவிற்காக கவலைப்படும் பகட்டு கோழியை பற்றியதும் அல்ல. மொத்த காடும் அழிந்து போர்க்களத்தின் இறுதி காட்சியை நினைவுறுத்திக் கொண்டிருக்கையில், மூதாய் மரத்தின் வெட்டப்பட்ட அடிமரத்தின் அருகில் சென்று, உரிந்த பட்டையை தடவி வலிக்கிறதா? என கேட்ட துவானைப் பற்றியும் அல்ல. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் பற்றியது. குரங்கின் மூளையை உயிருடன் சுவைக்கும் இரக்கமில்லாதவர்கள் பற்றியது. எதற்கு வாங்குகிறோமென தெரியாமலே பொருட்களை வாங்கி குவிக்கும் பேராசைக்காரர்கள் பற்றியது. ஆம் நம்மை பற்றியது. என்னைப் பற்றியது.

சூரியா சுந்தரராஜன்
9943763750