நூல் அறிமுகம்: மாதவராஜின் “க்ளிக்” நாவல் – சூர்யா

நூல் அறிமுகம்: மாதவராஜின் “க்ளிக்” நாவல் – சூர்யா




நூல் : க்ளிக் [நாவல்]
ஆசிரியர் : மாதவராஜ்
விலை : ரூ.₹ 250/
பக்கங்கள் : 248
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

தகழியின் செம்மீனுக்குப் பிறகு ஒரே மூச்சில் நான் படித்த நாவல் “க்ளிக்” . பரபரப்பான, விறுவிறுப்பான எழுத்து நடையில் 248 பக்கங்களை எழுதிய எழுத்தாளர் ஜா.மாதவராஜ்-க்கு நமது பேரன்பைச் சொல்லி விட வேண்டும்.

பூங்குழலி என்னும் கதைநாயகியைப் படைத்து, அவளை ஐ.டி. ஊழியராகச் சித்தரித்து, நவீன இளைஞர்களின் எண்ணப் போக்குகளையும், அவர்கள் சார்ந்த முந்தைய சமூகம் நவீனத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிப்பதையும் நவீன வாழ்வின் சிக்கல்கள் சிதைவுகளையும் இத்தனை வீரியயமாக முன் வைத்த வேறொரு படைப்பை நான் இதுவரை வாசிக்கவில்லை.

சென்னை, பெருங்குடியில் ஐ.டி. ஹப்பில் நான் அமர்ந்து கொண்டு தினசரி விழி விரியும் ஆச்சரியங்களை சில இடங்களில் விளக்கியும், வேறு பல இடங்களில் அடித்து நொறுக்கியும் இருக்கிறார், நாவல் ஆசிரியர்.
ஐ.டி. பணியின் நெருக்கடி, அத்துக் கூலி வாழ்நிலை, குறைவான சம்பளம், வேலைக்கு டீம் ஒர்க், பிரச்சினைக்கு தனித் தனி டீலிங், அவை ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகள், பாலியல் சுதந்திரம், சுய தேர்வு, சுயமரியாதையின் எத்தனிப்புகள், கிராமங்களோடு பிணைக்கப்பட்டுள்ள சென்னையின் வேர்கள் என, அத்தனை முரண்களையும் அழகாகக் கையாண்டுள்ளார்.

ஓரிடத்தில், கலியாணக் களேபரத்தை விவரிக்கையில் வீட்டின் எண்ணப் போக்கை, எதிர்பார்ப்பை நிறைவேற்றா விட்டால், உறவுகள் மொத்தத்தையும் இழக்கும் நிலை வரும் என்பதை, நான் வீடாகப் பார்க்க வில்லை. குடும்பத்தின் சிதைவு தவிர்க்க இயலாமல் சிதையும் போக்காக கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்.

அந்தக் கல்யாணி கதாபாத்திரம்; அதன் சித்தரிப்பு, பின்னர் அப்படியே அந்த கதாபாத்திரத்தை கைவிட்டது; மனப்பிறழ்வில் திரியும் கல்யாணியிடம் ஒருநாள் அமர்ந்து பேசவேண்டும் என்பதோடு நிறுத்தியது உறுத்திக் கொண்டே இருக்கிறது. உங்க மகளுக்கு கலியாணம் என எழுதி வைத்து காத்திருப்பவளை, கை விட்டு விடுவதா?!

அடுத்து, பீச், கோயில், சினிமா, ஹோட்டல், டேட்டிங், கலியாணம், நட்பு, பிரிவு என்ற இந்த மொத்த சித்திரத்துக்குள், அரசியல், சங்கம் போன்ற உரையாடல் வெளியே ஊடாடவில்லையே?. நாவல் என்பது ஒரு முழு வாழ்வை விரித்துச் சொல்வதல்லவா?. ஒரு சங்கத் தலைவர் நாவலாசிரியரா புனைவு எழுதும்போது கூட, அரசியல் வெளி வராவிட்டால், வேறு யார் எழுத்தில் வரும்.

பிப்ரவரி, 25ல் ஆரம்பித்து ஏப்ரல் 11ல் சம்பவங்கள் முடிந்தாலும் நாவலின் உரையாடல் களம் மொத்த வாழ்வுக்கும் முன்னும் பின்னும் ஊடறுத்துப் பாயத்தானே செய்கிறது?.

பீல் குட் மூவி என்பதைப் போல் நிச்சயம் இது பீல் குட் நாவல் தான். ஆசிரியரின் எழுத்து வலிமைக்கு ஆழங்கால்பட்ட பேரிலக்கியங்களை எதிர்பார்க்கிறேன்.

– சூர்யா, சென்னை.

Paadal Enbathu Punaipeyar Webseries 30 Writter by Lyricist Yegathasi தொடர் 30 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 30: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி



நான் தொடக்ககாலத்தில் கலைஞரின் இரசிகனாக இருந்தேன். இப்பவும் நான் அவருக்கு இரசிகன்தான். காரணம் அவரிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் வாசிப்பையும் எழுதுவதையும் சரிவிகிதத்தில் கடைப்பிடித்தார். அதிலும் இந்தக் காரியங்களையெல்லாம் நெருக்கடி மிகுந்த அரசியல் பணிகளுக்கு நடுவில் கலைஞர் செய்தது தான் உழைப்பின் சான்றாகக் கருதப்படுகிறது. ஒருமுறை என் நண்பர் ஒருவர் ஒரு இசைப்பாடல் கேசட்டைக் கொடுத்துவிட்டு அவரின் அபிப்பிராயத்திற்காகக் காத்திருந்திருக்கிறார். கையில் வாசித்தபடி ஒரு நூல், எதிரே தொலைக்காட்சியில் நெடுந்தொடர், அவ்வப்போது குறுக்காலே வரும் நண்பர்களுக்கு பதில், இவைக்கிடையில் ஒரு பக்கம் என் நண்பரின் இசை ஒலி வேறாம்.

என் நண்பருக்கு மனம் கசந்துவிட்டது, நம் பாடல்களை அவர் கணக்கிலே வைத்துக் கொள்ளவில்லை என்று. அப்படிப் பார்த்தோமேயானால் கவிதை நூலை வாசித்துக் கொண்டு நெடுந்தொடரை கவனித்திருக்க முடியுமா என்ன. ஆனால் கலைஞரால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த முடிந்தது, ஏனெனில் என் நண்பர் நொந்துபோய் கலைஞரிடம் விடைபெற்றபோது, அந்த கேசட்டில் வரும் 9 வது பாடல் கொஞ்சம் லென்த் தா இருக்கு அதைக் கொஞ்சம் சரி பண்ணுங்க மற்றபடி பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது என்றிருக்கிறார். குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்த என் நண்பர் தன் வீட்டில் பாடல்களை மொத்தமாகக் கேட்க , அந்த ஒன்பதாவது பாடல் கொஞ்சம் லென்த்துகத்தான் இருந்ததாம்.

ஒரு படத்திற்குப் பாடல் எழுதி படத்தின் கோ டைரக்டரிடம் கொடுத்து அனுப்பிருக்கிறார் வாலிபக் கவிஞர் வாலி அவர்கள். அந்தப் பாடலை கவனிக்கும் பணியை அந்தப் படத்தின் இயக்குநர் பார்ப்பதற்கு மாறாக படத்தின் தயாரிப்பாளர் பார்த்துவிட்டு, இன்னும் பாடல் பெட்டரா வேணும் எனத் திருப்பி அனுப்ப அந்த கோ டைரக்டர் இப்போது வாலியின் முன் விசயத்தைச் சொல்லிவிட்டு தர்மசங்கடத்தில் நின்றிருக்கிறார்.

கடுமையான கோபத்தில் வாலி அவர்கள் ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூறி, அங்கே ஆஃபீஸ் பாயாக வேலைபார்த்தவர்தானே இந்த தயாரிப்பாளர் என்றிருக்கிறார். கோ டைரக்டர் ஆமாம் எனக்கூற. வாலி அவர்கள், படம் தயாரிக்கிற அளவுக்கு பணம் வேண்டுமானால் அவருக்கு வந்திருக்கலாம், என் பாடலைக் குறை சொல்லும் அளவிற்கு அறிவு எப்போது வந்ததென்று அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றிருக்கிறார்.

என் அருமைத் தோழர் பாடலாசிரியர் தனிக்கொடி அவர்களின் மொழிநடை பதர்களற்றது. அது அவரது உரைநடையிலும் கவிதையிலும் ஏன் பாடல்களிலும் கூட தென்படும். தேவையற்ற சொற்களைத் தவிர்த்து எழுதப்படும் ஓர் இலக்கியம் அடர் செழிப்பானதாகும். தன் படைப்புகளில் மட்டும் அல்ல ஒரு வெள்ளை தாளில் எழுதுகையில் கூட இடத்தை விரயம் செய்யாதவர், ஏன் எழுத்துக்களைக் கூட நுணுக்கி நுணுக்கி எழுதுபவர். ஒரு முறை திரைப்படப் பாடல்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இயக்குநர் சேரன் அவர்களின் “ஆட்டோகிராப்” படத்தில் வரும் “ஞாபகம் வருதே” பாடலில் அதிக முறை “ஞாபகம் வருதே” என்கிற சொல் வருவதாக விமர்சித்தார், அதுவும் ஓர் அழகுதானே தோழர் என்றேன். இல்லை தோழர், திரும்பத் திரும்ப ஒரே சொல் வருவதற்குப் பதிலாக வேறு பல சொற்களைப் பயன்படுத்தினால் அவை அந்தப் பாடலுக்கு இன்னும் கூடுதல் செழுமை சேர்க்கும் தானே என்றார்.

கவியரசு கண்ணதாசன், பழநிபாரதி, நா. முத்துக்குமார் போன்றோர் பாடல்களில் ஒரு பொருளை மையமாக கொண்டே ஒரு முழு சரணத்தையும் எழுதியிருக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஒரு சரணத்தில் 12 வரிகளுக்கான மெட்டு இருக்கிறதென்றால் ஒவ்வொரு இரண்டு வரிகளுக்கும் ஒரு பொருள் கூற வேண்டும் என்பது எனது பாணி. 12 வரிகளையும் ஒரு பொருளே விழுங்கிவிடல் என்பது காட்சிப் படுத்துவதற்கும் ஒரு தத்துவத்தை முழுமையாகச் சொல்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை ஆனால், ஒரு பாடலுக்கான கனம் இதில் கிடைத்துவிடுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.

அதே போல் ஒரு பாடலில் முதல் வார்த்தைக்காக அத்தனை மெனக்கிடுவோம். காரணம் முதல் வார்த்தையில் இருக்கும் எளிமையும் புதுமையும் தான் மக்களின் மனங்களில் ஒட்டிக் கொண்டு முணுமுணுக்க வைக்கும். பாடல் முழுக்க முடிந்து போனாலும் இயக்குநர்கள், அந்த பல்லவிக்கு மட்டும் ஒரு ரெண்டு ஆஃப்சன் ட்ரைப் பண்ணுங்க கவிஞரே என்பார்கள் காரணம் பாடலை எப்படியாவது முணுமுணுக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். பல்லவியின் முதல் வார்த்தையை இரு முறை வருவது போல் செய்தால் அந்தப் பாடல் ஹிட் ஆகும் என்பார்கள். அதில் எனக்கும் நம்பிக்கை உண்டு, காரணம் ஒரு வார்த்தை இருமுறை பயன்படுத்தப்படும்பொழுது பாடல் குழப்பமின்றி நினைவிற்கொள்ள வசதியாக இருக்கும். “என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” எனும் சிவகார்த்திகேயன் பாடலும், “நாங்க வேறமாரி” எனும் அஜித் பாடலும் கூட இதற்காகத்தான். கடைசியாய்க் கூறிய பாடல்களில் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. இதில் நம் சொந்த உழைப்பில் சொந்த வார்த்தைகளில் உருவாகிற பாடல்கள் வெற்றியடையும் போது தான் அது நமக்கானதாக இருக்க முடியும். ஒரு பாடலை வெற்றியடையச் செய்ய என்ன வேணும்னாலும் செய்யலாம் என்பது எப்படி சரியாகும்.

எண்ணற்ற கவிஞர்கள் என்னிடம் வந்து, எப்படி திரைப்படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெறுவதெனக் கேட்கிறார்கள். முதலில் அவர்களிடம், உங்களுக்கு பாடல் எழுதத் தெரியுமா, என்கிற கேள்வியை முன் வைப்பேன். எழுதியதைக் காட்டுவார்கள். மிகவும் சுமாராக இருக்கும். வாய்ப்புக் கேட்பவர்கள் பாடல் எழுத தெரிந்து வருவதை விட ஆர்வக் கோளாறில் வருபவர்களே அதிகம். நான் யாரையும் நிராகரிப்பதில்லை. பாடல் எழுதத் தெரியாதவர்களுக்கு தேவையான பயிற்சியையும், பாடல் எழுதத் தெரிந்தவர்களுக்கு திரைப்படத் துறைக்குள் நுழைவதற்கான வழிகாட்டுதலையும் சொல்லித் தருகிறேன்.

சில கவிஞர்கள் அவர்களே மெட்டுப் போட்டு பாடலை உருவாக்கி பேப்பரில் வைத்துக்கொண்டு டெமோவாகப் பயன்படுத்துகிறார்கள். அது பாடும் போது கேட்கலாம் போல் இருக்கும். ஆனால் கவிதையாக ஓர் ஒழுங்கு இருக்காது. பாட்டுக்கு ஒரு சந்த நயம் இருக்கும் போதுதான் சப்த சுகம் இருக்கும். கவிஞர்கள் ஒரு நீளமான இசையற்ற சொற்களைக் கூட்டி ஒரு மெட்டில் பாடிக்காட்டுவது சுலபம். அது நாளை திரைப்படத்தில் கொடுக்கும் மெட்டுக்கு உங்களால் எழுதுவது கடினம். அல்லது எதற்கு தெரியாத ஒன்றை தவறாக செய்ய வேண்டும். குறைந்த பட்ச இலக்கண நடையாவது கற்றலே மெட்டுக்கான பயிற்சியாகவும் அமையும்.

சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணி புரியுங்கள். இதில் வரும் சம்பளம் உங்கள் இலக்கைத் தின்றுவிடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். அதற்காக வேலையின்றி கையில் காசின்றி லட்சியத்தை அடைய முற்பட்டால் பசி உங்களையே தின்றுவிடும். முதலில் வாழ்தலிலேயே பெரும் கவனம் வேண்டும் பிறகே லட்சிம். எவராலும் நிராகரிக்க முடியாத அல்லது ஓர் ஐம்பது கவிதைகளில் எந்தக் கவிதையைப் படித்தாலும், இவன் விசயமுள்ளவன் இவனால் சிறந்த பாடலைத் தர முடியும் என்கிற நம்பிக்கையைத் தருவதுமாதிரியான ஒரு கவிதைப் புத்தகத்தை வெளியிட்டு அதைத் தனக்கான விசிட்டிங் கார்டாக வைத்துக் கொள்ளவேண்டும். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரின் முதல் கவிதை நூலான “வைகரை மேகங்கள்” தான். நண்பர் நா. முத்துக்குமாருக்கும் “பட்டாம்பூச்சி விற்பவன்” எனும் அவரின் முதல் நூல் தான் விசிட்டிங் கார்ட். இதற்காக நீங்கள் சில ஆண்டுகள் கூட உழைக்கலாம், காரணம் உங்கள் வாழ்க்கைப் பயணம் இதுதான் என முடிவு செய்துவிட்டால் உங்கள் பாதையை செப்பனிடுவது என்பது சிறந்த செயல்பாடுதானே.

Paadal Enbathu Punaipeyar Webseries 30 Writter by Lyricist Yegathasi தொடர் 30 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

இது “பாடல் என்பது புனைபெயர்” எனும் தொடரின் இறுதி வாரம் இன்று பாடல் வரிகள் இல்லையென்றால் எப்படி. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், சூர்யா நடிக்க நண்பர் வெற்றிமாறன் இயக்கும் “வாடிவாசல்” படத்திற்காக எழுதப்பட்ட ஒரு டம்மி பல்லவி உங்களுக்காக.

Paadal Enbathu Punaipeyar Webseries 30 Writter by Lyricist Yegathasi தொடர் 30 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

“வெய்யில ஊதக் காத்தா
மாத்திப் புட்டாளே
கையில பூவச் சுத்தி
ஏத்தி விட்டாளே
கண்ணுல சந்தோசத்த
ஊட்டி விட்டாளே
நெஞ்சுல குப்பை யெல்லாம்
கூட்டி விட்டாளே

கருகரு மேகந்தான்
கறுத்த தேகந்தான்
உருக்கி ஊத்துறா
கிறுக்கு ஏறுதே

அடியே நெஞ்சுமேல நெல்லுக்
காயப் போடேண்டி
உசுர மல்லிப்பூவு
கட்டிகிற தாரேண்டி

ஒன்னநா கட்டிக்கிற
என்னாடி செய்ய
இல்லன்னா சொல்லிப் போடி
என்னான்னு வைய

கொம்புகுத்திக் கூட நானும்
சாகவில்லயே
கொமரிப்புள்ள குத்தி
செத்துப் போனேனே”

தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட அழகாகவோ என் உடலுறுப்புக்கள் இருக்கின்றன. உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட இனிமையாகவோ பேசுகிறேன் இசைகிறேன். இந்த அல்லதுக்கு அவசியமற்று நான் மட்டுமே உழைக்கிறேன். என்னை நீ கீழ் சாதிக்கார நாயே என்கிறாய். என்னை மட்டுமா நாயையும் சேர்த்து நீ கீழ்த்தரமாகப் பார்க்கிறாய். முதலில் நான் நாயிலிருந்தே தொடங்குகிறேன். உன்னால் நாய் துணையின்றி வாழமுடிகிறதா, நாய் பயமின்றி நடமாட முடிகிறதா. பிறகு என் துணையின்றி உன்னால் நகர முடிகிறதா. நடக்க முடிகிறதா. இந்த லட்சணத்தில் எதற்கு இந்த ஏற்றத்தாழ்வு. முதலில் சீவராசிகளில் நீ கீழ் நான் மேல் என்கிற மகா மட்டமான போக்கை நிறுத்து.

உன்னைப் பொருத்தவரை தலையில் இருக்கும் கிரீடம் உயர்ந்தது, பாதம் அணியும் செருப்புத் தாழ்ந்தது. நன்றாகச் சிந்தித்துப் பார் கிரீடத்தை நீ சுமக்கிறாய் செருப்பு உன்னைச் சுமக்கிறது. ஆனால் உன்னைச் சுமக்கும் செருப்பைத்தான் நீ கீழானதாகப் பார்க்கிறாய். அந்த செருப்பைத் தைக்கும் தொழிலாளிகளைக் கீழானவர்களாகப் பார்க்கிறாய். ஒன்று தெரியுமா உன் கிரீடத்தையும் உன் செருப்பையும் நானே உருவாக்குறேன். உன் மயிரை நானே சிரைத்து சுத்தம் செய்கிறேன். நீ ஆண்ட வம்சமென முறுக்கித் திரியும் மீசையை நான் தான் உன் முகத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கிறேன். நீ என்னை மலக் கழிவு அள்ளுகிறவனென இமையிறக்கிப் பார்க்கிறாய். இப்போதும் கூட நீ மேலே உண்ணுகிறதை கீழே கழிவாக அள்ளுவதை கீழ்மை என்று தான் பார்க்கிறாய், ஆனால் நான் உன் கீழ் கழிவை அள்ளுகிறவன் மட்டுமல்ல  நீ மேல் உண்ணும் உணவை விளைய வைப்பவனும்தான். நான் இத்தனை உனக்குச் செய்தும் நீ என்னை ஏறி மிதிப்பதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறாய். சக மனிதனை தாழ்ந்தவனாகப் பார்ப்பதாலும், சக மனிதனின் வாயிக்குள் மலத்தைத் திணித்துக் கொடுமை செய்வதாலும், சக மனிதன் காதலித்தால் அவனை வெட்டிச் சாய்ப்பதாலும் தீயிட்டுக் கொளுத்துவதாலும் நீ தான் கீழ்சாதி. சக உயிரை சமமாகப் பாவிக்காதவன். சக உயிரின் மேல் அன்பு செலுத்த வக்கில்லாதவன் நிச்சயமாக கீழ்சாதி தான். நான் கோபப்படவில்லை என்பதற்காக என்னைக் கோழை என்று நினைப்பது உன் அறியாமையே.

இயக்குநர் சுதா கோங்கரா அவர்களின் “இறுதிச்சுற்று”  படத்திற்கு நான் தீவிர விசிறி. பெண் பிள்ளைகளின் மேன்மையைப் பற்றி மிகவும் அழகாகச் சொல்லியபடம் அது. அவரின் இயக்கத்தில் சூர்யா அவர்கள் தனது 2D நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்த “சூறரைப் போற்று” படத்தில் ஒரு பாடல் எழுத அழைத்தார்கள். ஜி.வி. பிரகாஷ்குமார் இசை. இயக்குநரும் நானும் பாடலை எப்படி எழுதப்போகிறோம் என்பது பற்றிய விவாதத்தில் இருக்கும் போது அவருக்கு எனது “ஒத்த சொல்லாலே” பாடலுக்கு நான் விசிறி என்று அவர் சொன்னபோது மகிழ்ந்தேன். பாடலின் சூழலை அவர் சொன்ன போதே துள்ளிக் குதிக்க ஆரம்பித்தேன். காரணம் பேச வேண்டிய பொருள். ஒரு தலித்தின் பிணம் எடுக்கபட்டு தேரில் ஊர்வலமாக வருகிறதெனவும் அதில் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த சூர்யா ஆடி வருகிறார் எனவும் சொன்னார்கள். சும்மாவே ஆடுவோம். கொட்டுக் கெடச்சா குமுற மாட்டோமா. அதுவும் இந்த சூழல் திரைப்படத்தில் நடக்கிறது என்பதில் எனக்கு இரெட்டிப்பு மகிழ்ச்சி. இதற்கான மெட்டை அமைப்பதில் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இயக்குநரும் பேருழைப்பைச் செலுத்தினர். ஓர் உதவி இயக்குநர், தம்பி கருமாத்தூர் அருளானந்தத்தின் உதவியுடன் ஏராளமான கூத்துக் கலைஞர்களின் பாடல்களை உசிலம்பட்டி பகுதி முழுக்கச் சேகரித்தார். இவையின் வாசத்தை எடுத்துக்கொண்டு மெட்டமைத்த போது தம்பி செந்தில்கணேஷின் குரல் அதை புயலாய் மாற்றி கேட்பவர் மனதைச் சுழற்றி அடித்தது.

Paadal Enbathu Punaipeyar Webseries 29 Written by Lyricist Yegathasi தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

பேதமற்று வீசும் காத்து பேதமற்றுப் பெய்யும் மழை ஆனால் மனித சமூகம் அப்படியா இருக்கிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் ஒரு சமூகமே   மிகக் கீழ்த்தரமாக நடத்தப் படுதலுக்காக எதை அழிப்பது.

பல்லவி
மண்ணுருண்ட மேல இங்க
மனுசப் பய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்டும் மூடிப் புட்டா
வீதியிலே போகும் தேரு
அண்டாவுல கொண்டுவந்து
சாராயத்தை ஊத்து
ஐயாவோட ஊர்வலத்தில்

ஆடுங்கடா கூத்து ஏழை பணக்காரன் இங்கு
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுசனுக்கு
ஊதுவாங்க சங்கு

Paadal Enbathu Punaipeyar Webseries 29 Written by Lyricist Yegathasi தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

சரணம்-1
நெத்தி காசு ஒத்த ரூபா
கூட வரும் சொத்துதானே – ஐயா
கூட வரும் சொத்துதானே
செத்தவரும் சேர்ந்து ஆட
வாங்கிப்போட்டு குத்துவோமே

சாராயம் குடிச்சவங்க
வேட்டி அவுந்து விழுமே
குடம் உடைக்கும் இடம் வரைக்கும்
பொம்பளைங்க அழுமே

ஆயிரம் பேர் இருந்தாலும்
கூட யாரும் வல்லடா
அடுக்குமாடி வீடிருந்தும்
ஆறடிதான் மெய்யடா

சரணம்-2
கீழ்சாதி உடம்புக்குள்ள
ஓடுறது சாக்கடையா – ஐயா
ஓடுறது சாக்கடையா
அந்த மேல் சாதிக்காரனுக்கு – அந்த
மேல் சாதிக்காரனுக்கு
கொம்புருந்தா காட்டுங்கய்யா – ரெண்டு
கொம்புருந்தா காட்டுங்கய்யா

உழைக்கிற கூட்டமெல்லாம்
கீழ்சாதி மனுசங்களாம்
உட்கார்ந்து திங்கறவனெல்லாம்
மேல்சாதி வம்சங்களாம்

என்னங்கடா நாடு – அட
சாதியத் தூக்கிப் போடு
என்னங்கடா நாடு – அட
சாதியப் பொதைச்சு மூடு

இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான போது உலகத் தமிழர் கொண்டாடினர். படத்தின் ரிலீஸ் டேட் அறிவிக்கப்பட்டது. தர்மபுரியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இந்த படத்தை  வெளியிட தடை கோரி புகார் அளித்ததன்பேரில் கோர்ட் படத்தை சில மாதங்கள் தடை செய்தது. புகாரில் மனுதாரர் படத்தில் எனது பாடல் ஜாதிய வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளதெனக் கூறியிருக்கிறார். என்னைப் பலபேர் தொலைபேசியில் மிரட்டினர். எனக்கு உருட்டல் மிரட்டலுக்கு எப்போதும் பயமில்லை. போராட்டக் களம் ஒன்றும் எனக்குப் புதிதில்லை. பேட்டிகளிலெல்லாம் கூறினேன் இது சாதிய வன்முறைக்கு எதிரான பாடல் என்று. ஆனாலும் விவாதத்துக்குறிய அந்தப் பாடலின் இரண்டாவது சரணம் நீக்கப்பட்டே படம் ரிலீஸானது. வருத்தம் தான் எனினும் அந்தக் குறிப்பிட்ட வரிகளுக்கு என் தம்பிகளும் அண்ணன்களும் டிக் டாக் பண்ணிருயிருப்பதில் தெரிந்த வெறித்தனமே என் பாடலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டேன். மேல் சாதிக் காரனுக்குக் கொம்பிருந்தா காட்டச் சொன்னேன் பாடலில், ஆனால் பிரச்சனையைக் கிளைப்பியவர் அனைவருமே இடைசாதி வகுப்பினரே.

சாதியும் மதமும் சீர்கெட்டுக் கிடக்கும் சூழலில் நாம் பிறர் வலி உணர்ந்தோ உணராமலோ உண்டு உடுத்தி உறங்கி வாழ்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடுதான் கீழ் வரும் ஒரு தனி இசைப்பாடலும்.

பல்லவி
மேல் சாதி கீழ் சாதி ஒண்ணுமில்லடா
ஓந்தேதி முடிஞ்சாக்கா மண்ணுக்குள்ளடா
திங்குற சோத்துல சாதி மணக்குதா
போடுற செருப்புல சாதி கனக்குதா… (2)

ரெண்டையும் தந்ததெல்லாம் நாங்கதான்
சண்டை மட்டும் போடுறீங்க நீங்கதான்

சரணம் 1
தோளுமேல துண்டுபோட்டுப் போகக் கூடாதா – நாங்க
காலுலதான் செருப்புமாட்டி நடக்கக் கூடாதா
டீக்கடை பெஞ்சுலதான் உக்காரவும் கூடாதா – அட
எங்கபுள்ள பள்ளியில இங்கிலீசுப் பேசாதா.. (2)

சரணம் 2
மாட்டுக்கறி திங்கிறவன் மட்டம் இல்லடா
நீயும் மனுசனத்தான் திங்கிறியே நியாயம் சொல்லடா
மலத்த கக்கூசுல ஒங்க கையி அள்ளாதா – அட
நாங்க போடும் ஓட்டு என்ன எலக்சனில செல்லாதா.. (2)

சரணம் 3
வேர்வ சிந்தி வெளைய வச்ச அரிசி வெள்ளடா – நாங்க
வெளுத்து வந்து தேச்சுத் தரும் வேட்டி வெள்ளடா
எல்லாத்துக்கும் நாங்க வேணும் பக்கத்தில ஒனக்கு – எங்கள
தொட்டா மட்டும் உங்கமேல ஒட்டிக்குமா அழுக்கு..(2)

Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 22: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி



Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

என் அன்பிற்கினிய தம்பி உசிலை பகவான், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் மதுரை வந்திருந்த ஒரு தருணத்தில் தான் இயக்கவிருந்த ஒரு திரைப்படத்தின் நீளமான ட்ரெய்லருக்கு என் குரலில் கதைக்கருவைப் பதிவு செய்யக் கேட்டார். டெரிக் ஸ்டுடியோவில் பதிவு செய்தோம். நன்றாக வந்தது. மிக நேர்த்தியாக மண் வாசனையோடு படம் பிடித்திருந்தார், காரணம் அடிப்படையில் பகவான் ஒரு ஒளிப்பதிவாளர். ஏற்கனவே அவரின் “பச்ச மண்” குறும்படத்தால் நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். இவர் “காக்கா முட்டை”, “கடைசி விவசாயி” போன்ற முக்கிய படங்களை இயக்கிய இயக்குநர் மணிகண்டனின் உற்ற தோழன். ஒரு நாள் நான் பேசிக்கொடுத்த அந்த ட்ரெய்லர் படமாகப் போகிறதெனவும் அதில் ஒரு பாடல் நான் எழுதவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள நான் எழுதிக் கோடுத்தேன். அந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜெய கே தாஸ். “ஆரம்பமே அட்டகாசம்” “நாய்க்குட்டி படம்” போன்ற படங்களுக்கு அப்போது இசையமைத்திருந்தார். அந்தப் பாடல் தமிழ் சினிமா இதுவரை தொடாத சூழல்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் செய்முறை கலாச்சாரம் ஒரு விவசாயம் போல் நடக்கிறது. ஏன் இப்போது செய்முறை மட்டுமே நடக்கிறது விவசாயம் எங்கே நடக்கிறது என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. திருமண விழா, காதணி விழா, மார்க்கக் கல்யாணம், பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, முடியிறக்கு விழா என எண்ணற்ற பெயர்களில் விசேசம் நடத்துகிறார்கள். வழியே இல்லையென்றால் “வீட்டு விசேசம்” என்று வைத்து மொய் வாங்கிவிடுகிறார்கள். அந்த வீட்டு விசேசத்தை வீட்டில் வைக்காமல் மண்டபத்தில் வைப்பதை என்ன சொல்வது. “திருமண மண்டபம்” என்று பெயர் சூட்டிய மண்டபங்களில் திருமணம் மட்டுமா நடக்கிறது என்பதும் ஏன் இதுவரை “காதணி மண்டபம்” என்று ஒன்றில்லை என்பதும் ஒரு நகைச்சுவையான கேள்வி தான்.

Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

அந்தக் காலத்தில் திருமண பத்திரிக்கைகளில் “இரவு 10 மணி அளவில் “நாடோடி மன்னன்” “பாசமலர்” போன்ற திரைப்படங்கள் திரையிடப்படும்” என்கிற பின் குறிப்பு இருக்கும். காரணம் அன்றைக்கு பெரும்பாலும் திருமணம் இரவுகளில் தான் நடக்கும் அதிலும் வீட்டில் தான் என்பதால் வெளியூர்களிலிருந்து வந்திருந்த குடும்பங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும். எல்லாரும் வீட்டிற்குள் படுத்துவிட்டால் “முதல் இரவு” எப்படி நடக்கும் என்பதாலேயே இந்தத் திரைப்பட ஏற்பாடு. இன்றைக்கு பத்திரிகை பின் குறிப்பில் மாலைகள் பண்ட பாத்திரங்களைத் தவிர்க்கவும் என்றிருக்கிறது. அப்படியெனில் உங்களுக்கு ஏன் வீண் செலவென்று பொருளல்ல, விரயமாகும் பணத்தை எங்களுக்கு மொய்யா வையுங்கள் என்று அர்த்தம். சரி இதிலாவது ஒரு நாகரீகம் இருக்கிறது, ஆனால் பல பத்திரிகைகளில் பழைய மொய் நோட்டைத் திருப்பிப் பார்க்கவும் என்றெல்லாம் சொல்கிறார்கள், இதன் உட்பொருள் உங்களுக்குப் புரியுமென்றே நம்புகிறேன். அதுவும் முன்பு இல்லாத ஒரு பழக்கம் நாளை திருமணம் என்றால் இன்றைக்கு இரவு மண்டபத்தில் பார்ட்டி கொடுக்கிறார்கள். அந்த பார்ட்டியே நண்பர்கள் நாளைய விழாவிற்கு அவசியம் வரவேண்டும் என்பதற்காகத்தான் ஆனால் இரவு வந்த நண்பர்களால் யாரும் காலை விசேசத்தில் கலந்து கொள்ள முடியாது காரணம் இரவு பார்ட்டி அப்படி இருந்திருக்கும்.

முன்பெல்லாம் விசேச வீடுகளிலோ மண்டபங்களிலோ மொய் எழுத ஆள் தேட வேண்டும். அப்படித் தேடும் போது அக்கம் பக்கத்தில் ஒரு படித்த ஆள் கிடைத்துவிட்டால் அவர் கருப்பனுக்கு நேர்ந்துவிட்ட ஆடுதான். அதிலும் வீட்டைச்சுற்றி யாரும் கிடைக்காவிட்டால் விசேச வீட்டுப் பையனே பலி கிடாய் ஆவான். அவன் புதிய ட்ரெஸெல்லாம் போட்டு பணம் வாங்கிப் போடும் ஒரு பெருசுக்கும் வெற்றிலை பாக்கு கொடுக்கும் இன்னொரு பெருசுக்கும் நடுவில் உட்கார்ந்து மொய் எழுதுதல் என்பது நெருப்பில் நிற்பதாய்த் தெரியும். காரணம் வந்திருக்கும் சொந்தபந்தங்களோடு பேச முடியாது நண்பர்களோடு ஜாலியா அரட்டைகள் செய்ய இயலாது. குறிப்பாய் புதிய தேவதைகளை லுக் விடவும் முடியாது பழைய தேவதைகளுக்கு ஒரு ஹாய் சொல்லவும் முடியாது. இப்படியாக ஒன்றுமில்லாமல் ஒரு விழா முடிந்த போவதை எந்த இளைஞனின் மனம் தான் தாங்கும் சொல்லுங்கள். இதற்காக ஒரு மாற்றம் செய்து சில பெரியவர்களை மொய் எழுத உட்கார வைத்தால் அந்த எழுத்தை விசேச வீட்டுக்காரன் நாளைக்கு வாசிப்பது கடினமாகி விடும் காரணம் அவர்கள் சித்திர எழுத்துக்களை உடையவர்கள். அந்த எழுத்து சீட்டாட்டத்தில் பணிபுரிந்த சித்தர்களுக்கு மட்டுமே புரியும். அதனால் இவர்கள் எப்பாடு பட்டாவது ஓர் இளைஞனை அந்த இடத்தில் நியமிப்பது. மொய் எழுத ஆள் கிடைக்காத பட்சத்தில் அது திருமண விழாவெனில் மணமகன் மொய் எழுத அமர்ந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி தான், ஏனெனில் அவர்கள் கல்யாணத்தையே இந்த மொய்க்காகத் தான் வைக்கிறார்கள். இதில் என் மாமாவும் நண்பருமான சிவமணி அவர்கள் மண்டபங்களில் மொய் எழுதுவதற்காக தன் வாழ்நாட்களின் பெரும்பகுதியை தியாகம் செய்தவர். என்ன ஆச்சரியம் என்றால் ஒரு ஊரில் பத்து மண்டபத்தில் விசேசம் என்றால் அந்த பத்து மண்டபத்திலும் சிவமணி இருப்பார். இப்போது “மொய் – டெக்” மிஷின் வந்துவிட்டது. மொய் எழுதிய கையோடு அதற்கான ரசீதை கையில் கொடுத்துவிடுவார்கள். சில இடங்களில் செல்லிலும் அனுப்பி விடுகிறார்கள்.

Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

விசேசத்திற்கு பத்திரிக்கை அச்சடிப்பதும் அதை உறவினர்களுக்குக் கொடுப்பதென்பதும் பெரிய போராட்டம் தான். பத்திரிக்கையில் ஒரு பெயர் விடுபட்டாலும் பெரும் சண்டையாகிவிடும் என்பதால் அந்தந்தப் பகுதி ஓட்டு லிஸ்ட்டை வாங்கி அப்படியே எழுதிக்கொள்கிறார்கள். அதிலும் சில பெயர்கள் தவறிவிட்டால் பேனாவால் எழுதி இணைத்துக் கொள்கிறார்கள். தாய்மாமன்கள், வரவேற்பார்கள், பெரியப்பன் சித்தப்பன்மார்கள், தாய்வழிப் பாட்டனார்கள், தந்தை வழிப் பாட்டனார்கள், அங்காளி பங்காளிகள், சிறப்பு அழைப்பாளர்கள், நண்பர்கள், குட்டீஸ், “வலிமை” குரூப், “பீஸ்ட்” குருப் இனிமேல் “புஷ்பா” குரூப்பும் வந்துவிடும். இத்தனை பெயர்களை எப்படி ஒரு பத்திரிக்கைக்குள் அடைக்க முடியும்? முடியாததது என்று ஒன்றுமில்லை என்று இப்போது பத்திரிக்கை புத்தகம் போல் வந்துவிட்டது. அதிலும் அந்த பத்திரிக்கையில் விசேச வீட்டு ஆண்களின் புகைப்படங்கள் நம்மை அச்சுறுத்தின்றன. தன்னருகே புலி சிங்கம் நிற்பதுபோல் போட்டுக் கொள்கிறார்கள். சிலர் தான் வைத்திற்கும் பைக், கார், லாரி போன்றவற்றை போட்டுக் கொள்கிறார்கள். நான் வியந்த ஒரு பத்திரிக்கையின் முகப்பில் அவர்கள் வைத்திருக்கும் மண் அள்ளும் கொக்கி லாரியை போட்டிருந்தார்கள். ஒரு விசேத்தில் அடிபட்ட சிலர் மறு விசேசத்தில் பெற்றோர் பெயரைக்கூட விட்டுவிட்டு மணமக்கள் பேரை மட்டும் போட்டுவிட்டு ஜகா வாங்கியும் கொள்கிறார்கள்.

பல்லவி:
பொறந்தாலும் வைக்கிறான் விசேம்
இறந்தாலும் வைக்கிறான் விசேஷம்
இரண்டுக்குமே வாங்குறான்டா மொய்யி
தாலிய வித்துக்கூட தாய்மாமன் செய்யி

விசேசம் வைக்கிறது
விவசாயம் போல் ஆச்சுடா – விசேசப்
பத்திரிக்க பாத்துப் பாத்து
பாதி உயிர் போச்சுடா

சரணம் – 1
புத்தகம் போல் அச்சடிச்சுப்
பத்திரிக்கை கொடுக்கிறான் – அவன்
தொணை எழுத்த விட்டா கூட
துண்டப் போட்டு இழுக்கிறான்

விஜய் அஜித் ரசிகர்கள – விசேச
வீட்டுக்காரன் மிஞ்சாரம்
சாகப்போற கிழவியையும் – கட்டவுட்டில்
சாத்திதானே வைக்கிறான்

பத்துப் பேரு தின்னுபோறான்
நூத்தி ஒண்ண செஞ்சு
குறும்பாடு போட்டவனுக்கு
கொதிக்குதடா நெஞ்சு

லேப்டாப்பில் எழுதுறாங்க
இப்பல்லாம் மொய்யி
கேமராவில் பாக்குறாங்க – மொய்
கட்டாயமா செய்யி

சரணம் – 2
பத்திரிக்க குடுக்காமப்
பாதிப்பேரு வந்திடுவான்
கவருக்குள்ள கவிதவச்சு
கல்யாணத்தில் தந்திடுவான்

அரசியல்வாதி தலைமையில் – விசேசம்
வைக்குதிங்க ஊருடா
மான் கதைய ரொம்ப நாளா – தலைவர்
சொல்லுறது போருடா

இல்ல விழா நடக்குதுங்க
மண்டபத்தில் இங்கு
இல்லாதவன் மொய்யி செய்ய
பணம் காய்க்கு தெங்கு

வேட்டு போட்டுக் காசுகள
சாம்பலாக்கிப் போறான்
குவாட்டர்களப் பந்தியில
குடிதண்ணியாத் தாரான்

குழு:
அன்பு காட்டும் சொந்த பந்தம்
அப்பளம் போல் நொறுங்கிப் போச்சுடா
நின்னு பேசக் கூலி கேக்கும்
காலமாகச் சுருங்கி போச்சுடா

இந்த மொய் கலாச்சாரத்தை பெரிதாக எழுத இருந்து கொண்டே இருக்கிறது. இதை ஆய்வு செய்தால் நமக்கு தலையணை சைஸ் நூல் கிடைக்கவே வாய்ப்பிருக்கிறது. செய்த மொய் ரூபாயை ஒரு கஷ்ட சூழலில் ஒருவர் திருப்பி செய்யாவிட்டால் அது 10 ரூபாயாக இருந்தாலும் விழா முடிந்த சில நாட்களில் அதை வீட்டிற்கே சென்று வசூலித்தும் விடுவார்கள் என்கிற அவலம் மனிதாபிமான வாழ்விற்கு நேர் எதிரானது.

இந்தப் பாடல்தொட்டே எனக்கும் இசையமைப்பாளர் ஜெய கே தாஸுக்கும் நல்ல நட்பு மலர்ந்தது. நாங்கள் இணைந்து எண்ணிக்கையற்ற தனிப் பாடல்களை உருவாக்கினோம். அவை சில, பல மில்லியன் பார்வையாளர்களைத் தந்தன. அவரின் இசையில் ஒரு சுகம் உட்கார்ந்திருக்கும். நான் காலத்தால் ஒரு நூறு இசையமைப்பாளர்களையாவது கடந்திருப்பேன் அவர்களில் எனக்குப் பிடித்தவர்களின் பத்துப் பேர் பட்டியலில் இவருக்கும் ஒரு நாற்காலி உண்டு.

தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




நான் 2000 ம் வருடம் நடிகை ராதிகாவின் ராடான் டிவியின் தயாரிப்பில் வெளிவந்த தொடர்களான “அவன் அவள் அவர்கள்” (மும்மொழி) மற்றும் சரத்குமார் தொகுத்து வழங்கிய “கோடீஸ்வரன்” போன்றவற்றில் என் குருநாதர் இயக்குநர் சி. ஜேரால்டு அவர்களிடம் உதவி இயக்குநராக பணி செய்து கொண்டிருந்தேன். அப்போது நான் சூர்யா எனும் புனைப்பெயரில் இயங்கிக் கொண்டிருந்தேன். நான் சென்னை வராததற்கு முன்பும் இதே பெயரில் தோழர் வெண்புறா தீட்டிய அட்டை படத்தோடு “மீறல்” என்கிற நூலை தமுஎகச நாகமலை புதுக்கோட்டை கலை இரவில் வெளியிடப்பட்டது. சூர்யா எனும் பெயரில் மூன்று டிவி தொடர்கள் பணியாற்றி முடிப்பதற்குள் நடிகர் சூர்யாவும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவும் பிரபலமாகிவிட நான் என் புனைப்பெயரை ராஜினாமா செய்துவிட்டு ஏகாதசியாகவே ஆனேன் என்பது வேறுகதை. அந்த காலகட்டத்தில் தான் ராடன் டிவியில் “சித்தி” சீரியல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்தத் தொடரில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்த மாதேஷ் என்பவர் எனக்கு நண்பரானார். அவர் ஒருநாள் அவரின் வகுப்புத் தோழர் செல்வநம்பியை அறிமுகம் செய்து வைத்தார். செல்வநம்பி இசையமைப்பாளராகும் கனவோடு சென்னையில் இருப்பவர். அப்போது நான் திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கவில்லை. பிறகு நானும் செல்வ நம்பியும் நல்ல நண்பர்களானோம். எனது ஆரம்பகட்டத் திரைப்பாட்டுப் பயணத்தின் போது மெட்டுக்கு பாடல் எழுதுவதில் எனக்கிருந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்.

நண்பர் மாதேஷ் தனது முதல் படத்திற்கு செல்வநம்பியைத்தான் இசையமைப்பாளராக போடுவேன் என அழுத்தமாக இருந்தார். எனக்கும் அதே எண்ணம் தான் இருந்தது. நினைத்ததெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன, நான் இயக்கிய முதல் படத்திற்கு பரணியை போடவேண்டிய சூழலாகிவிட்டது. மாதேஷ் இயக்குநர் ஆவதற்கு பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். போராட்டத்தில் வெல்லும் நாளில் அவரின் முதல்பட இசையமைப்பாளர் செல்வநம்பிதான் இருப்பார் என்றெல்லாம் யாரும் முடிவுசெய்துவிட முடியாது.

என் முதல் படத்திலும் அவர் இல்லை. என் இரண்டாம் படத்திலும் அவர் இல்லை. இடையில் நான் இயக்குவதாகயிருந்த ஒரு படத்திற்கு அவரை முடிவு செய்தேன். அந்தப்படம் இடையில் நின்றுவிட்ட போதிலும். படத்திற்காக அவர் எனக்குத் தந்த மூன்று மெட்டுக்களும் அதற்கு நான் எழுதிய வரிகளும் மறக்க முடியாதவை. இதன் கம்போஸிங் சிதம்பரத்தில் ஒரு ஹோட்டலில் நடந்தது. அது அவரின் ஊரும் கூட. பெரும்பாலும் சாப்பாடு அவரின் வீட்டில் தான். கம்போஸிங் நடந்துகொண்டிருந்த போது ஒரு நாள் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் நண்பர் கவிஞர் த. கண்ணன் வீட்டிலிருந்து மீன் குழம்பு சாப்பாடு சமைத்து எடுத்துவந்து என்னை உபசரித்தார் அந்த அன்பிற்கு  நிகர் ஏதுமில்லை.

பல்லவி
அவ நேரா பாத்தா த்ரிஷா 
தல சாச்சுப் பாத்தா சமந்தா  
அவ நடக்கும் போது அனுஷ்கா 
அட சிரிக்கும் போது சிநேகா 

அவ உசிலம்பட்டி நயன்தாரா – ஏ 
உசுர எடுத்துக்கிட்டுப் போறா (2) 

எந்தக் கடையில அரிசி வாங்குறா 
இம்புட்டு அழகா இருக்கிறா 
எவர் சில்வர் தட்டப்போல பாவிமக – ஏ 
எதிர போகயில மினுக்குறா 

சரணம் – 1 
தலமுடி ஒண்ணு குடுத்தாக்கா 
அரணா கயிறு கட்டிக்கலாம் 
அருவா கண்ண குடுத்தாக்கா 
வேலிக்கு முள்ளு வெட்டிக்கலாம் 

பைசா நகரத்துக் கோபுரத்த 
பாதகத்தி மறச்சு வச்சா 
பாத்துப் போகும் கண்ணுக்கெல்லாம் 
பச்ச மொளகா அரச்சு வச்சா 

துண்டு மஞ்சளும் அவதொட்டா 
குண்டா ஆகிடுமே – அந்தப் 
பொண்ண ஒருநாள் பாக்காட்டா – ஏ 
கன்னம் வீங்கிடுமே 

அவ உசிலம்பட்டி நயன்தாரா – ஏ 
உசுர எடுத்துக்கிட்டுப் போறா (2) 

சரணம் – 2 
தொறந்த வீட்டுக்குள்ள நொழஞ்சுக்கிடும் 
நாயப் போல காதலடா 
விரட்டிப் பார்த்தும் போகவில்ல 
அதுபோல் ஒருசுகம் காணலடா 

காதல ஜெயிக்க சாமிகிட்ட 
மொட்ட போடத்தான் வேண்டிக்கிட்டேன் 
கல்யாணம் முடிக்கச் சம்மதிச்சா 
காசு துட்ட நான் சேத்துக்குவேன் 

ரோசாப் பூவென ஏம்பொழப்பு 
அழகா மலரணுமே – அவ 
செவப்பா ஒருத்தனத் தேடிக்கிட்டா – நா
லூசா பொலம்பணுமே 

அவ உசிலம்பட்டி நயன்தாரா – ஏ 
உசுர எடுத்துக்கிட்டுப் போறா (2) 

இது செல்வநம்பி மெட்டுக்கு சிதம்பரத்தில் நான் எழுதிய பாடல்கள் மூன்றில் ஒன்று. Paadal Enbathu Punaipeyar Webseries 20 Written by Lyricist Yegathasi தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி செல்வநம்பியின் கனவும் நிறைவேறியது அவர் “திட்டக்குடி” எனும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். நான் என் முதல் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த தவறினேன், ஆனால் அவர் என்னை அவரின் முதல் படத்தில் விட்டுவிடவில்லை. இறுகப் பிடித்துக் கொண்டார். திட்டக்குடி படத்தில் நான்கு பாடல்கள் எழுதினேன். அதன் இயக்குனர் சுந்தரம் அற்புதமான நண்பர். என் எழுத்துக்கள் அவருக்கு மிகவும் பிடித்துப் போக அவரின் அடுத்த படமான “ரங்க ராட்டினம்”  படத்திலும் எனக்கு பாடல் எழுத வாய்ப்புத் தந்தார். இதிலும் செல்வ நம்பியே இசை.

செல்வநம்பியும் நானும் குடும்ப நண்பர்களானோம். என் தோழி காளத்தி காளீஸ்வரன் தயாரிப்பில் “பெண் அழகானவள்” என்கிற  பத்து பாடல்கள் அடங்கிய ஒரு ஆல்பத்தை உருவாக்கினோம். Paadal Enbathu Punaipeyar Webseries 20 Written by Lyricist Yegathasi தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி அதில் அவர் இரண்டு பாடல்களும் பாடித்தந்தார். அவரின் குரலுக்கு நான் ரசிகன். சென்னை வீதியில் பெரிய பயணம் எங்களுடையது.

பல்லவி 
இதயத்தில தீயெரிய 
உயிர் மட்டும் தாங்கிக் கொள்ளுதே 
ஒரு பறவ உறவிழந்து 
ஊர் விட்டு ஊரு செல்லுதே 

புயல் காத்து வீசும்போது 
தீபம் பேசிடுமா 
உப்பு மேல பட்ட தூறல் 
நீங்கிடுமா

விழி சாஞ்சா வெளிச்சமில்ல 
உயிர் சாஞ்சா ஒண்ணுமில்ல 
நிலவொடஞ்சு விழுமா விழுமா 

சரணம் – 1
துன்பமெல்லாம் இவ நெஞ்சுக்குள்ள 
கூடி வந்து அடையும் 
கண்ணாடியா உயிர் இருந்திருந்தா 
எத்தன முற உடையும்  

கூட்டுக்குள்ளே தீயை யார் வைத்தது 
காதலெனும் விதியா 
இனி கொள்ளை போக உயிர் மீதமில்லையே 
கனவாகிப் போனதையா 

கண்ணீரால் பெண்ணொருத்தி 
தலைவாசல் தெளித்தாளே 
விதி எழுதி பார்க்கும் கூத்து
வருசமெல்லாம் தவமிருந்து 
பெற்ற வரம் வீணாச்சு 
இவ தனியா அலையும் காத்தோ 

சரணம் – 2 
தாயக்கட்ட நீயும் ஆடயில 
தப்புகள செஞ்ச 
காதலெனும் ஒரு பேரு வச்சு 
கத்தரிச்ச நெஞ்ச 

சிறு பிள்ளை போலே 
விளை யாடிடத்தான் 
பெண் இங்கே பொம்மை இல்ல  
ஒரு தீர்ப்பு சொல்ல – இங்க 
யாரும் இல்ல 
உள் நெஞ்சே உண்மை சொல்லும

பாவம் செஞ்ச குத்தத்துக்கு 
பரிகாரம் ஏதூமில்லையே  
வேரறுத்த பின்னாலே 
பூப்பூக்கும் யோகமில்லையே 

இது திட்டக்குடி பாடல்.
காதலெனும் பேர் வைத்து பெண்களை வேட்டையாடித் தின்று எலும்புகளை வீசுகின்ற ஆண் சமூகத்தின் நெற்றியில் ஆணி அடிப்பதான கருப்பொருள் இது. நாங்கள் தொடர்பு அறாத நட்பாய் இன்னமும் இருக்கிறோம்.

Jaibhim Poems By Na Ve Arul நா.வே.அருளின் ஜெய்பீம் கவிதைகள்

ஜெய்பீம் கவிதைகள் – நா.வே.அருள்




மன்னராட்சி முடிந்துவிட்டது என்பவன் அறிவாளி
தொடர்கிறது என்பவன் முட்டாள்
ஆனால் கவிஞன் எப்போதும்
முட்டாளாகவே இருக்கிறான்.

சாதிக்கு ஓர் அரசாங்கம் இருக்கிறது
அது அரூபமாய் இருக்கிறது.
சாதிக்கு ஓர் அரசர் இருக்கிறார்
அவர் மாறுவேடம் போட்டிருக்கிறார்.

சாதிக்கு ஒரு கோட்டை இருக்கிறது.
ஆனால் எலும்புக் கூடுகள் வெளியே தெரிவதில்லை.

சுற்றிலும்
அவ்வளவு ஆபத்தான அகழிகள் இருக்கின்றன
இருப்பினும் முதலைகளின் கருணை பற்றி
அறிவிப்புப் பலகை நடப்பட்டிருக்கிறது.

சாதிச் சிற்றரசர்
மதப் பேரரசருக்குக்
கலவரக் கப்பம் கட்டிவிடுகிறார்.

வரிகளாக
சடலங்கள் செலுத்தப்படுகின்றன.
மற்றபடி இங்கே
மனிதாபிமானம்தான்
சிம்மாசனத்தில் இருக்கிறது!

2
சம்புகன் தலைகளும்
ஏகலைவன் விரல்களும்
சேரிகளின் சேமிப்புக் கிடங்குகள்.

அவர்களின் முதுகெலும்புகள்
கிடைக் கோட்டில் இருந்தால்தான்
சமூக நல்லிணக்கத்திற்கு நல்லது.

அப்படியும் நிமிர்ந்துவிடக் கூடாது என்பதற்குத்தான்
முதுகில்
பாவத்தின் கரிமூடடைகள்.

3
பழைய சதுரங்கத்தில்
புதிய பகடைகள்
சொந்த உடலிலிருந்து
இதயத்தை அகற்றுதல்.

எதிரில் நிற்பவன் உடலில்
எலும்புக் கூடுகள் தேடுதல்.
சட்ட உடைகள் இல்லா நிர்வாணிகளின்
தோலுரித்தல்.

அக்கினிச் சட்டியில் பிறந்ததாகச் சொல்லி
தாயின் கருப்பை
உருவப் பொம்மை எரித்தல்.

கார்ப்பரேட் வாசலில்
காற்றடித்த பொம்மைகளின்
போலி கௌரவப் புடைத்தெழும் மார்புகளில்
புல்லரித்தல்!

முன்னேறும்
காலச் சக்கரங்களில்
சொந்த சகோதரர்களைத்
தலை வைத்துப் படுக்கச் சொல்லி
தர்மம் காத்தல்!

4
புராணங்களின் புவியியலில்
சுடுகாடுகளை நிர்மாணித்தல்
ஐதீகங்களால் சிதை வளர்த்தல்
வரலாறுகளை எரியூட்டுதல்.

5
ஜெய் பீம்
அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையவனுமான
ஒருவனின்
மானுட குலத்திற்கான மந்திரச் சொற்கள்!

அவன் முகத்தில் சாணியடிக்க
யாரேனும்
அக்கினிச் சட்டியில் கைவிடுவார்களா?

ஏன்?
குரலற்றவனின் குரல்
முதல் முதலாய் ஒலிக்கிறபோது
காதைச் செவிடாக்கும்
காயத்ரி மந்திரங்கள்?….

விஷப் பாம்பைக்கூட
கைகளால் பிடித்துவிட்ட ராசாக்கண்ணுவை
விழுங்க
எத்தனை மலைப் பாம்புகள்?

5
சாதியற்ற சமூகம் காண
ஆகாய விமானத்திற்கு
ஆசைப்பட்டேன்.

சாதி நிழல் படியாத
மகோன்னத பூமி
மண்ணில் இருக்குமா?

தற்காலிகமாகவேனும்
தரிசிக்க முடியுமா?
இருட்டப்பனையும் மொசக்குட்டியையும்
கனடாவுக்கு அழைத்துவந்தேன்

செக்யூரிட்டி செக் – இல் மாட்டிக் கொண்டார்கள்.
இருவரின் கால்களிலும்
சங்கிலியால் பிணைத்த
ஜாதி உலோக இரும்புக் குண்டுகளாம்!

ஒருவனின் இரும்புக் குண்டுகளை
விதைகளாக்கினேன்.
மற்றவனுக்கு
கண்கள் பிடுங்கப்பட்டக்
குழிகளில் செருகினேன்.

இனி அவர்களின்
விடுதலை நோக்கிய வெளிநாட்டுப் பயணம்!

6
கனடாவில்
முதல் முதலாய்ச்
சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார்கள்.
சாமீ என்று
யாரையும் அழைக்கும் அவசியமில்லை.
இருளா என்று யாரும் அவர்களை
இம்சிக்கவில்லை

இருட்டப்பனும் மொசக் குட்டியும்
என்னைக் கேட்டார்கள்….
“லாக் அப்பில்
எங்கள் கண்களில் தூவிய மிளகாய்ப் பொடி
உலகத்தின் கண்களை உறுத்தவேயில்லையா?”

Movie Review: JaiBhim movie by A.Iruthayaraj திரைவிமர்சனம் ஜெய் பீம் - அ.இருதயராஜ் சே.ச

திரைவிமர்சனம்: குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் ஜெய்பீம் – அ.இருதயராஜ்




இந்திய அளவிலும் தமிழக அளவிலும் வெளிவந்த திரைப்படங்களில் காவல்துறை லாக்கப் மரணங்கள் பற்றி பல கதைகள் பின்னப்பட்டுள்ளன. ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் என்ற திரைப்படம் பலரின் ஆதரவையும் ஆரோக்கியமான விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. அது நம்முடைய எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றது. நம்முடைய மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. இந்தப் படம் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இருளர் குடும்பங்களின் மீது காவல்துறை நடத்திய வன்றையையும், அத்துமீலையும் பொது மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஒரு பழங்குடியினர் சமூகம் நீதிமன்றம் வரை வந்து தனக்கான உரிமையையும், மறுக்கப்பட்ட நீதியையும் போராடிப் பெற்ற நிகழ்வை ஆழமாக சித்தரித்த ஒரு திரைப்படம் என்றால் அது ஜெய் பீம் தான் என்று சொல்லவேண்டும்.

இது பலவீனமானவர்களுக்கும் பலம்வாய்ந்தவர்களுக்கும் இடையே நடக்கின்ற ஒரு போராட்டம். அதிகாரம் தாங்கியோருக்கும் அதிகாரமற்றவர்களுக்குமிடையே நடக்கின்ற ஒரு மோதல். முகவரியமற்றவர்களுக்கும் முகவரியை தர மறுக்கும் அரசு இயந்திரத்திற்கும் நடக்கின்ற யுத்தம் என்று கூட சொல்லலாம். ஜெய் பீம் திரைப்படம் இருட்டிக்கப்பட்ட இருளர் பழங்குடி சமூகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழும் இருளர் குடியிருப்பில் திடீரென்று ஒருநாள் ஒரு பூகம்பம் வெடிக்கிறது. ராஜாக்கண்ணு செங்கேணி அவருடைய குழந்தை மற்றும் உறவினர்கள் என்று சந்தோசமாக வாழும் குடும்பங்களில் காவல்துறை அத்துமீறி நுழைந்து வன்முறை நிகழ்கின்றது. என்ன நடக்கிறது என்று கூட அவர்காளல் கணிக்க முடியவில்லை.

திருட்டுப் பட்டம் சூட்டியதோடு காவல் நிலையத்தில் வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களைத் துன்புறுத்துகின்றனர். காவல்துறையின் கட்டுப்பாடற்ற வன்முறையிலிருந்தும் தாக்குதலிளிருந்தும் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். கர்ப்பிணி பெண் செங்கேணி தன்னந்தனியாக போராடுகின்ற ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தில் இருந்து கணவன் தப்பித்து விட்டார் என்று சொல்லப்பட்வுடன் அவனை தேடுகிறாள். அறிவொளி இயக்கத்தின் ஆசிரியை மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் உதவியோடு கணவனைத் தேடுகின்றாள். தன்னுடைய கணவரும் உறவினர்களும் என்ன ஆனார்கள் என்ற தவிப்போடு தொடர்ந்து போராடுகிறாள். இறுதியில் சமூக அக்கறையுடன் செயல்படும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. கே. சந்துரு அவர்களின் உதவியோடு ஆள்கொணர்வு மனு போடுகின்றாள். காணாமல்போன கணவருக்கு நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டியும் எவ்வித சமரசமுமின்றி யுத்தம் நடத்துகிறாள் என்பதே திரைப்படத்தின் ஒட்டுமொத்த கதை.

இந்த திரைப்படம் முழுவதையும் மூன்று தளங்களில் வைத்து இயக்குனர் ஞானவேல் காட்சிப்படுத்தி இருக்கிறார். இருளர் மக்களின் இயல்பான வாழ்க்கை. காவல்துறையின் அத்துமீறலும் அராஜகமும் நடக்கும் காவல் நிலையம். நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட போராடும் உயர் நீதிமன்றம் ஆகிய மூன்று சூழல்கள்தான் பார்வையாளர்கள் மனதில் எளிதாக பதிந்து விடுகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 1990-களில் நேர்மையுடனும் சமூக அக்கறையுடனும் தன்னுடையப் பணியை ஆற்றிய வழக்கறிஞர் திரு. கே. சந்துரு அவர்களின் வாழ்வில் நடந்த பல வழக்குகளில் ஒரு வழக்கை எடுத்துக் கொண்டு அதை ஒரு கதையாகப் புனைந்துள்ளனர். இதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. அதே போல எதையும் குறைவாகவும் சொல்லவில்லை. எதையும் மிகைப்படுத்தியும் சொல்லவில்லை. அவருடைய அனுமதியுடன் ஆலோசனையுடன் தான் இயக்குனர் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் சேர்ந்து ஒவ்வொரு தகவலையும் காட்சியாக விவரித்துள்ளனர்.

அடித்தட்டு மக்களின் பிரச்சினையை ஒரு வெகுஜன திரைப்படமாக எடுக்கின்ற போது கொஞ்சம் தவறினால் கூட அது ஆவணப்படமாக வாரியம் மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. அதேபோல புகழ்பெற்ற ஒரு கதாநாயகனை வைத்து படம் எடுக்கும் போது கதாநாயகனை மையப்படுத்தியதாக மாறிவிடும் விபத்தும் நிகழக்கூடும். ஆனால் இதை நன்கு அறிந்த திரு. ஞான வேல் கதையையும், கதைக்களத்தையும், போராடுகின்ற இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணையும்(செங்கேனி) இந்த படத்தின் மையமாக மாற்றியிருக்கின்றார். இந்தப் படம் இணைய வெளியில் வெளிவந்திருப்பதால் உலகமெங்கும் உள்ள மக்களை சென்றடைந்திருக்கின்றது பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கின்றது. பழங்குடியினர் சமூகத்தைப் பற்றி மக்களின் பொதுப் புத்தியிளுள்ள தவறான எண்ணங்களை நிச்சயமாக உடைத்திருக்கின்றது. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை நிச்சயமாக எழுப்பும். இந்தத் திரைப்படம் குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் விவாதிக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை
இருளர்கள் ஒரு வேட்டையாடுகின்ற சமூகமாக இருந்தாலும் இயற்கையோடு ஒட்டி உறவாடுகின்ற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். எலி, முயல், பன்றி உடும்பு, காட்டுத்தேன் ஆகியவற்றை உணவுக்காக மட்டும் தேடி வேட்டையாடுகின்றனர். ”கொன்றால் பாவம் தின்றால் போகும்” என்பது பழமொழி. அதேபோல பறவைகளையும் பாம்புகளையும் நேசிப்பவர்களாக இருக்கின்றார்கள். முதல் காட்சியில் ராஜாகண்ணுவின் மகள் நிலத்தில் உட்கார்ந்திருக்கும் மைனா பறவைகளுக்கு நெல்லை தீனியாக இரைத்து விடுவாள். அந்த காட்சியை நாம் அழகாக பார்க்கலாம். அதேபோல ராஜாக்கண்ணு ஆளுங்கட்சி பஞ்சாயத்து தலைவர் வீட்டில் பாம்பு பிடிக்கச் செல்லும்போது அதன் மீது இறக்கப்பட்டு அதை காட்டில் கொண்டுபோய் விட்டு விடுவதாக சொல்கிறார். அதே போல இன்னொரு காட்சியில் பாம்பை பிடித்து வந்து காட்டு ஓரத்தில் விட்டபிறகு, ”நீ மனுஷங்கள விட்டு ஒத்தி இருந்தால் தான் நல்லது”, என்று கூறுவதையும் பார்க்கின்றோம். அந்த அளவுக்கு உயிரினங்கள் மீது அன்பு கொண்டவர்கள் இவர்கள்.

உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் வாழ்வில் அவர்களிமுள்ள நகைச்சுவை உணர்வு, எள்ளல் மொழி, கேலி, கிண்டல் எல்லாம் அவர்களின் களைப்பைப் போக்க உதவுகின்றன. யாரையும் சிறுமைப் படுத்துகின்ற மற்றவரின் மாண்பை சிதைக்கின்ற வார்த்தைகள் அவருடைய பேச்சிலும், செயலிலும் இருக்காது. உதாரணமாக, தன்னை வற்புறுத்திய காவலர்களுக்கு கூட பாம்பு கடித்து விட்டால் அவர்ளுக்கு மருந்து கொடுத்து காப்பாற்ற முயற்சி எடுப்பவர்கள். அந்தளவுக்கு மிகவும் எளிமையான, கள்ளங்கபடமற்ற வெகுளித்தனமான மக்கள் இவர்கள். எப்போதுமே யாருக்கும் தீங்கு நினைக்காதவர்கள். தீங்கு செய்யாதவர்கள். ராஜாக்கண்ணு வேலை செய்கிற இடத்தில் நிறைய விடுகதை சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த விடுகதை சொல்லும் போது சரியா தவறா என்று கேட்பதும் உண்டு. எலி பிடிக்கும் போதும், செங்கல் சூளையில் வேலை செய்யும் போதும் பல வெடிகளை அவன் போட்டுக் கொண்டே இருப்பான். அது சிரிப்பையும் கலகலப்பை உண்டாக்குகின்றது.

நகைச்சுவை உணர்வுக்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். வயலில் மண்ணைத் தோண்டி மொசக்குட்டி எலி பிடிக்கும் போது, ”ஏன்டா எலி பிடிக்கச் சொன்னா, கிணறு தோண்டி கிட்டு இருக்க.” உடனே அவன், ”எலி இருந்தால் தானே புடிக்க முடியும்”, என்று சொன்னவுடன் எல்லோரும் அங்கு சிரிப்பார்கள். அதேபோல அறிவொளி இயக்கத்திலிருந்து வந்து மாலையில் வகுப்பு எடுக்கும் டீச்சர் வகுப்பு எடுக்கும் போது, ”ப..ட்..டா, ப..டி..” என்று எழுத்துக்கூட்டி சொல்லித் தருவார். அப்பொழுது ராஜாகண்ணு இடைமறித்து, ”டீச்சர் நாங்க எவ்வளவு தூரம் நடந்தாலும் எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. நீங்க என்னமோ பட்டா படின்னு சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொன்னவுடன்” எல்லோரும் வாய்விட்டு சிரிக்கிறார்கள். இன்னொரு காட்சியில் தாசில்தார் ஆபீஸில் சான்றிதழ் கேட்டு விட்டு திரும்பும்போது மொசக்குட்டி மட்டும், ”நாம் ஒரு சாதிச் சான்றிதழ் கேட்டால் நமக்கிட்ட பத்து டாக்குமெண்ட் கேட்கிறார். பேசாம ஒரு நல்லபாம்ப புடிச்சு தாசில்தார் ஆபீஸ்ல விடலாமா? அப்புறம் பாம்பு புடிக்க நம்மல தானே கூப்பிடனும்”, என்று சொல்லும்போது சிரிப்பை வரவழைக்கிறது.
அதேபோல இயற்கையில் உள்ள தாவரங்களில் எவை மருத்துவ குணம் உள்ள செடிகள், எந்தெந்த நோய்க்கு அது பயன் தர முடியும் என்பதை செங்கேணி நேர்த்தியாக மாணவர்களுக்கு விளக்கிச் சொல்வார். ஆங்கில மருத்துவ மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இருளர்கள் பாம்பு கடிக்கு மருந்து கொடுக்கும் மருத்துவர்களாக விளங்கினார்கள் என்பது வரலாறு. வாழக்கை வட்டச் சடங்குகளுக்கும் குல தெய்வங்களுக்கும் விழா எடுக்கும் போது, இசை இசைத்து ஆடிப் பாடி நடனமாடிக் கொண்டாடுகின்றனர் என்பதையும் இயக்குனர் சரியாக படம் பிடித்துள்ளார்.

ஏழை எளிய மக்களிடம் வானொலிப்பெட்டி எப்படி இயல்பாக உறவாடுகிறது என்பதை இயக்குனர் சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் ”போக்கிரிக்கு போக்கிரி ராஜா” என்ற பாடலை கேட்டு மகிழ்கின்றார் செங்கேணி. அதேபோல கணவனை தேடி அலைகின்ற கவலையோடு வீட்டில் அமர்ந்திருக்கும் தருணத்தில் ”ஆழக்கடலில் தேடிய முத்து” என்ற பாடலைக் கேட்டு தன் கணவன் மீது உள்ள அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்துகின்றாள் என்பதை நாம் பார்க்கின்றோம். பறவைகளில் ஆந்தை என்ற பறவை விபத்து, ஆபத்து அல்லது சாவு வரப் போவதை சுட்டிக் காட்டுவது போல இரண்டு காட்சிகளையும் பயன்படுத்தப்பட்டிருகிறது. சொந்த வீடு கட்டும் கனவோடு கணவன்-மனைவி இருவரும் கொஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு மரத்தில் ஆந்தை அமர்ந்திருக்கும். அப்போது பெய்த மழையில் வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்து விடும். வீடுகட்டும் கனவு தொலைவில் இருபதாக நாம் புரிந்து கொள்ளலாம். இன்னொரு காட்சியில் பொய் கேஸ் போட்டு போலீஸ் ராஜாக்கண்ணு வீட்டை தேடி வரும் வேளையில், ஆந்தை மரத்தில் அமர்ந்து குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும். லாக்கப் மரணம் அவனைத் தேடி வந்து விட்டது என்பதை முன்னறிவிப்பாக இக்குறியீடு பயன்படுத்தப்படுகின்றது. படத்தின் துவக்கத்தில் வெறும் இருபத்தி ஐந்து நிமிடங்களே வந்து போகின்ற இருளர்களின் இயல்பான வாழ்க்கையை சித்தரிக்கும் விதம் மிகவும் நுணுக்கமாகவும் ஆழமான ஆய்வுக்குட்பட்டும் கையாளப்பட்டிருக்கின்றது என்பது பாராட்டத்தக்கது.

இருளர்களின் அடையாளமற்ற தன்மை
ஆதிக்குடிகள் என்று அறியப்படுகின்ற இருளை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறு சிறு குழுக்களாக மலைகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் தமிழகமெங்கும் வாழ்கின்றனர். எண்ணிக்கையில் சிறு சிறு குழுக்களாக இருப்பதால் அவளுக்கு சமூக பாதுகாப்பு இல்லை. சொந்த வீடு இல்லை. முகவரி அற்றவர்களாகவும் இருக்கிறார். அவர்களுக்கு சொந்தமான வசிப்பிடங்கள் இல்லை. அரசு உதவி பெறுவதற்கு குடும்ப அட்டை இல்லை. ஓட்டுப் போடுவதற்கு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை எதுவுமே கிடையாது. உயர்கல்வி படிக்கச் செல்வதற்கு பழங்குடியினர் என்ற சாதிச் சான்றிதழ் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இப்படி எதுவுமே இல்லாததால் இவர்கள் அடையாளம் அற்றவர்களாகவும், அனாதைகளாக நடத்தப்படுகின்ற எதார்த்தத்தை இயக்குனர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

வயலில் நெல் மணிகளை காப்பாற்றுவதற்காக எலிகளை பிடிக்கும் போது, ”ஊர்த்தலைவர் உங்களையெல்லாம் ஊருக்குள்ள விட்டதே தப்பு. இருக்க இடம் கொடுத்தா இங்கேயே கிடப்பீஙகளா? என்று சாடுகின்றார். தாசில்தார் அலுவலகத்தில் சாதிச் சான்றிதழ் கேட்கின்ற பொழுது, ”நீங்களெல்லாம் படிக்கலேன்னு எவன் அழுதான்? இருளர் இன மக்கள் மலையில் இருக்கணும். இவனுக்கு பாம்பு படிக்க தெரியுமா? ரேஷன் கார்டும் இல்ல. ஆதார் அட்டையுமில்ல. எந்த ஆதாரத்தை வைத்து தான் சாதிச் சான்றிதழ் தர முடியும்?” என்று அதட்டுகிறார். ”உங்களுக்கு எந்த அடையாளமும் இல்லை” என்று சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்தி அனுப்புகின்றார். அதே நேரத்தில் அதே தாசில்தாருக்கு வருகின்ற ஒரு வெள்ளை சட்டை போட்ட அப்பாவையும் மகனையும் இன்முகத்தோடு வரவேற்று, நாற்காலியில் அமர வைத்து ஜாதி சான்றிதழ் குறித்து மென்மையாக பேசுகின்றார்.

இவர்களுக்கு வாக்குரிமை கேட்பதற்காக அறிவொளி அசிரியர் தேர்தல் அதிகாரியை பார்க்கும்போது, எந்தவித முகவரி இல்லாதவர்களுக்கு எப்படி வாக்காளர் அட்டை தரமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றார். மேலும், அந்த ஊர் தலைவர், கண்ட கண்ட சாதிக்காரனுங்க காலில் விழுந்து ”ஐயா ஓட்டு போடுங்க. அம்மா ஓட்டு போடுங்கம்மா என்று கேட்பது போதாதா என்ன? இவங்க குடிசையிலும் குனிஞ்சு குனிஞ்சு ஓட்டு கேட்கணுமா? என்று அலட்சியமாக பேசுகின்றார். இவர்கள் இங்கு வசிக்கலாம். ஆனால் எவ்வித அடையாளமும் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுகின்றார்.
ராஜாகண்ணுவை நடுத்தெருவில் வைத்து அடித்து மிதித்து போலீஸ் வேனில் ஏற்றும்போது ஊர் தலைவர் சும்மா பார்த்துக் கொண்டே இருப்பார். ஊர்த் தலைவரைப் பார்த்து ராஜாக்கண்ணு கத்துவான். ஐயா நாங்கள் கொல்லையில் பல நாட்கள் வேலை செய்து இருக்கிறேன். ”நான் திருட மாட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க ஐயா”. ஆனால் அவர் எதுவுமே பேசாமல் இருப்பார். அவன் ஒரு அனாதை என்பதை அமைதியாகச் சொல்கிறா. அவரின் அமைதி வன்முறையானது.
மேலும் காவல் நிலையத்தில் காவலர்களின் அடி தாங்க முடியாமல் தவிக்கும் காட்சியைப் பார்த்து செங்கேணி கதறுகிறாள். அப்பொழுது ஊர்த் தலைவரைக் கூட்டி வந்தால் புருஷனை போலீஸ் அடிப்பதை நிறுத்தும் என்று நம்பி, ஊர்த் தலைவர் வீட்டுக்கே வந்து, ”ஐயா, நீங்க வந்து ஒரு வார்த்தை சொல்லுங்க ஐயா. போலீஸை அடிக்க வேணாம்னு மட்டும் சொல்லுங்க ஐயா” என்று சொல்வாள். அதற்கு ஊர் தலைவர், ”இந்த எட்டுக்குடி ஓட்டு போட்டு தான் நான் தலைவர் ஆனேனா? இந்த நாடோடி கழுதைக்கு பேச்சை பாரு. சீ… போ” என்று விரட்டுவார். இந்த இரண்டு தருணங்களிலும் நம்மை அடித்துக் கொன்றால் கூட கேட்பதற்கு யாருமே இல்லை என்ற உணர்வை செங்கேணி-ராஜாகண்ணு பெறுகின்றனர். இப்படி வாழ்கின்ற சூழலிலும், அரசு அலுவலங்களிலும் காவல்துறை காவல் நிலையத்திலும் மீண்டும் மீண்டும் நாம் முகவரியற்றவர்கள், அடையாளமற்றவர்கள், அனாதைகள் என்ற உணர்வை பற்றிக்கொண்டவர்களாகவே இருளர் மக்கள் வாழ்கின்றனர். இது சமூக பாதுகாப்பை அவளுக்கு வழங்குவதில்லை. எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்திலும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்பதற்கு இந்தப் படம் சாட்சி.

காவல்துறையின் அத்துமீறலும் அராஜகமும்
ஒரு காவல் நிலையத்தின் எல்லைக்குள் எந்த வீட்டில் திருடு போனாலும், காலனியில் வசிக்கும் ஒரு தலித் மீதோ அல்லது பழங்குடியினர் மீதோ பொய் வழக்கு போடுவது ஒரு எழுதப்படாத சட்டமாகவே தமிழகத்தில் இருக்கிறது. பொய்வழக்கு போடுவதோடு நிறுத்திவிடாமல் யார் மீதோ உள்ள கோபத்தை ஒன்று மறியாத அப்பாவி பழங்குடியினர் மீது காட்டுவது தான் மிகவும் கொடூரமானது. படத்தின் முதல் காட்சியிலேயே ஜெயிலில் இருந்து விடுதலையாகி பல கைதிகள் வெளியே வருவர். அப்போது ஒவ்வொருவரின் ஜாதியை கேட்டு அங்கே அவர்களை பிரிக்கின்றார்கள். தேவர், வன்னியர், முதலியார், நாயுடு, என்று சொன்னால் மதிப்புடன் ”நீ வீட்டுக்கு போ” என்று காவலர் சொல்லுகின்றார். ஆனால் நீ யார் என்று கேட்டவுடன், தாழ்ந்த குரலில் நான் ஒட்டர், குறவர், இருளர் என்று கூறும் வேளையில் நீ இப்படி வா என்று ஒதுக்குகிறார்.

ஐயா, நான் இருளர், என் மீது பொய்க் கேஸ் போட்டாங்க என்று ஒரு கைதி சொல்லும்போது, ”ஆமா நீ பெரிய பிச்சாவரம் ஜமீன் பரம்பரை. பொய் வழக்குப் போட்டாங்கன்னு கண்டுபிடிச்சிட்டான்”, என்று திட்டுகிறார். இது அவரை மீண்டும் காயப்படத்துகிறது. ஏற்கனவே நிலுவையில் உள்ள பழைய கேஸ்களை முடிப்பதற்கு இந்த பழங்குடியினரின் பெயரை பயன்படுத்துகின்றனர். ஒருவர் மீது ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வழக்குகளை போட்டு மீண்டும் உள்ளே தள்ளுவதற்கு காவல் துறையைச் சேர்ந்த காவல் உதவியாளர்கள் அங்கே ஜெயிலின் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார். அவர்களை பார்க்கின்றபோது பிணந்தின்னிக் கழுகு போல காட்சியளிக்கின்றார்கள். இது எல்லாம் பொய் வழக்கு என்று தெரிந்துதான் காவல்துறை செய்கின்றது. அதற்கு காவல்துறையிடம் மேலிட அதிகாரி வரை அதிகாரி முதல் கீழ்மட்டத்தில் உள்ள ஏட்டையா வரை உடந்தையாக இருக்கின்றனர்.

படத்தில் வரும் அத்தியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி காவல் ஆணையர் பதவி உயர்வு வேண்டும். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார். எனவே உள்ளூர் ஆளுங்கட்சி பஞ்சாயத்து தலைவர்கள் வீட்டில் திருடு போனதால் உண்மையான குற்றவாளி யார் என்று தெரிந்துகொண்டு அவரைக் கைது செய்யாமல், அவரோடு கைகோர்த்துக்கொண்டு பணத்தை பங்கிட்டுக் கொள்கின்றனர். அப்பாவி பழங்குடியினர் சமூகத்தின் மீது பொய் வழக்குப் போடுகிறார்கள். அதை விட கொடுமை என்னவென்றால் ராஜாக்கண்ணு எங்கே என்று தேடி அலைகின்ற பயணத்திலேயே அவனுடைய உறவினர்களையும், மனைவியையும் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப் படுத்துவது காவல்துறை வன்முறையின் உச்சகட்டம் என்றே சொல்லலாம். ஒரே அறையில் ஆண் பெண் எல்லோரையும் அடைத்து வைத்து ஈவு இரக்கமில்லாமல் பிரம்பால் அடிக்கின்றனர்.

காவல் நிலையத்தில் பெண்கள் என்று கூட பார்க்காமல, செங்கேணி மற்றும் ராஜாக்கண்ணுவின் அக்காவுக்கு நடக்கும் கொடூரம் பார்வையாளர்களை மிகவும் பதைபதைக்க வைக்கின்றது. ஒரு கர்ப்பிணிப் பெண் என்று கூட நினைக்காமல் அடிப்பது, கீழே தள்ளி விடுவது போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கொளுத்தி விடுவேன் என்று மிரட்டுவது எல்லாம் சாதாரணமாக நடக்கின்றது. வலி தாங்க முடியாமல் கதறும் ஆண்களின் மீது இரக்கப்படுகதிறாள். ஒரு கட்டத்தில், மொசக்குட்டி ”ஆம்பள வச்சிகிட்டு பொம்பளைய வீட்டுக்கு அனுப்புங்க சார்” என்று கெஞ்சிக் கேட்கின்றான். அப்போது போலீஸ் கோவப்பட்டு ”யாருடா ஆம்பள” என்று உள்ளே இருக்கின்ற பெண்ணின் பாவாடையை கழற்றிவிட்டு இங்க ”யாருடைய ஆம்பள?” என்று அதட்டி அவளோடு கூடி ஆண்மையை நிரூபிக்க வற்புறுத்தினர். ”அவள் என்னோட அக்கா..சார்” என்று ராஜாகன்னு கதறுவான். அந்த காடசி நம்முடைய நெஞ்சைப் பதபதைக்க வைத்து விடுகிறது. அரை நிர்வாணமாய் கூனிக்குறுகி கிடக்கும் அந்தப் பெண்ணுக்கு அவமானம் ஒரு புறம். அடியால் உடல்வலி இன்னொருபுறம் என்று துடிக்கிறாள்.

”ஆம்பளை” என்று சொன்னவுடனே காவலருக்கு கோவம் வருகின்றது. காவல்துறையினருக்கு பழங்குடியினர் ஆண்கள் ஆண்களாக தெரியவில்லை. யார் யாருக்கு ஆர்டர் போடுவது? யாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்ற கோபத்தில் மீண்டும் அடிக்கிறார். பழங்குடிகளின் ஆண்மை பற்றி பேச காவல்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? உண்மையில் பாக்கப் போனால், பழங்குடியின ஆண்கள் போற்றத்தக்கவர்கள். ஏனென்றால் செங்கேணி-ராஜாக்கண்ணு உறவில் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கின்றனர். ராஜாக்கண்ணு பெண்ணை மதிக்கின்றவன். பாசாங்கு இல்லாத அன்பையும், பாசத்தையும் மனைவியின் மீது காட்டுகிறவன். உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கின்ற அவன், குடும்பத்தை தன்னுடைய கடின உழைப்பால் காப்பாற்றுகிறான். ”நான் திருடவில்லை” என்று அவளிடம் உண்மை பேசுகின்றான். எவ்வளவு அடித்தாலும் உண்மையை மட்டுமே பேசுகிறான். அதுதான் ஒரு ஆண்மைக்கு அடையாளம். இவர்களை அடித்தாலும் கொன்றாலும் யாரும் ஏன் என்று கூட கேட்க மாட்டார்கள் என்றுதான் போலீஸ் அவர்களைத் தாக்குகிறது. எந்தவிதமான விசாரணையும் இல்லாமல், முதல் தகவல் அறிக்கை கூட தயாரிக்காமல் திருட்டை ஒத்துக்கொள் என்று வற்புருத்துகிறார்க்ள். ராஜாக்கண்ணுவை பல இடங்களில் தேட வைத்தற்காக, கோபத்தில் அவனை பிரம்பால் அடித்தும், காலால் நெஞ்சிலே மிதித்தும் கொல்லுகின்றனர்.

வலி தாங்க முடியாமல் ராஜாக்கண்ணு காவல் நிலையத்திலேயே இறந்து விடுகின்றான். ஆனால் காவலர்கள் ஒன்றுகூடி இவர் தப்பித்து விட்டனர் என்று பொய் சொல்கின்றனர். பிறகு நீதிமன்றத்தில் வழக்கு சூடு பிடிக்கவே இவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்று பொய் பொல்லிக்கொண்டு அவர்களைத் தேடுவது போல நடிக்கின்றனர். கேரள எல்லைக்குள் சென்று இருட்டப்பன் பேசுவது போல பகல் வேஷம் போடுகின்றனர். ஒரு பொய்யை மறைப்பதற்கு எத்தனை விதமான பொய்களையும் தயாரிக்கின்றனர். எவ்வளவு கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதற்கு பல காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன.

ராஜாக்கண்ணுவின் கொலை ஒரு லாக்கப் மரணம் என்று தான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படப்போகிறது என்பதை அறிந்தவுடன் காவல்துறை உயரதிகாரிகள் கவலைப்படுகின்றனர். தீர்ப்பு அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராகப் போனால் பெரிய அவமானம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றெல்லாம் பயப்படுகின்றனர் அதற்கும் மேலாக காவல் துறைக்கு வரும் பதவிஉயர்வு பாதிக்கப்பட்டுவிடும் என்று கவலைப்படுகிறார். சிலரின் பதவி உயர்வுக்காக பல அப்பாவி பழங்குடியினர் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றாலும் பரவாயில்லை என்று ஈவிரக்கமற்று செயல்படுகின்றனர். இது தமிழகமெங்கும் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கின்றது என்பதையும் நாம் உணர முடியும். காவல்துறையின் அளவுகடந்த அத்துமீறலுக்கு மத்தியில் இரண்டு காவல்துறை நல்லவர்கள் போல் செயல்படுகின்றனர். ஒன்று காவல் நிலையத்தில் உள்ள ஏட்டையா. இன்னொருவர் வழக்கு பற்றி விசாரிக்கும் உயர் அதிகாரி டிஜிபி பெருமாள் சாமி. இவர்களின் இரக்கம், நேர்மை தன்மை, மனத நேயம், மனசாட்சி எல்லாம் காவல்துறையின் ஒட்டுமொத்த அத்துமீறலுக்கு முன்னால் ஒரு சிறிய துளி போல தான் தோன்றுகின்றது.

எளிய மக்களின் நேர்மையும் அறச்சினமும்
இருளர் என்று அறியப்படுகின்ற பழங்குடியினர் இயல்பிலேயே கள்ளங்கபடமற்றவர்கள். பொய் சொல்லத் தெரியாதவர்கள். எவ்வளவு இன்னல், துன்பம் ஏற்பட்டாலும் நேர்மையை இழக்காதவர்கள். இதை அழுத்தமாக படம் காட்சிப்படுத்துகிறது. தலைவர் வீட்டில் பாம்பு பிடிக்க வரும் ராஜாக்கண்ணு பீரோவுக்கு அடியில் விழுந்து கிடக்கும் ஒரு தங்கத்தை எடுத்து வெகுளித்தனமாக முதலாளி அம்மாவிடம் கொடுக்கின்றார். அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அந்த எண்ணம் துளி கூட அவனிடம் இல்லை.

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. செங்கல் சூளையில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஒவ்வொரு செங்கல்லாக சேர்த்து வீடு கட்ட வேண்டும் என்ற நேர்மையான கனவில் ராஜாக்கண்ணு வாழ்கிறான். அப்படிப்பட்டவனை திருடன் என்று முத்திரை குத்தி, அடித்தே கொள்ளுகின்றனர். நடுத்தெருவில் நாயை அடித்து இழுத்துச் செல்லும்போது காவல் நிலையத்தில் அடி தாங்க முடியவில்லை என்றாலும் ”நான் திருடன் இல்லை. திருடன் என்று சொல்லாதீங்க” என்பதை நேர்மையாக சொல்லி கதறுகிறான். அதேபோல இருட்டப்பன் வேலை செய்கிற இடத்திலிருந்து காவல் துறையினரால் அடித்து இழுத்துச் செல்கின்ற பொழுது வேனில் ஏற்றி சென்ற பொழுது அங்கு உள்ள முதலாளி, ”இவன் என்னிடம் வேலை செய்கிறான். ஆனால் திருடமாட்டான்” என்று சொல்லுகிறார். இந்த காட்சிகள் அவருடைய நேர்மை தன்மையை வெளிப்படுத்துகின்றன. அடி மேல் அடி வாங்கும் பட்சத்தில் வலி தாங்க முடியாமல் மூன்று ஆண்களும் துடிக்கிறார்கள். செங்கேணி வீட்டில் சமைத்த சாப்பாட்டை காவல்நிலையத்துக்கு அருகில் வைத்து கொடுப்பாள். அப்போது இட்டப்பன் ”எங்களால போலீஸ் அடியை தாங்க முடியல. பேசாம அவங்க சொல்றது மாதிரியே திருட்ட ஒத்துகிட்டுப் போகலாம்” என்று சொல்லுவான். அதற்கு ராஜாக்கண்ணு எந்த தயக்கமும் இல்லாமல், ”இந்த காயம் எல்லாம் கொஞ்ச நாள்ல காஞ்சு போய் விடும். ஆனால் திருட்டுப் பட்டம் காலமெல்லாம் தங்கிவிடும், கொஞ்சம் பொறுத்துக்கடா” என்று சொல்லுவான். இது உண்மைக்காக நிலைத்து நிற்கும் அவனுடைய உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.

தீமைக்கும், அநீதிக்கும், பொய்மைக்கும் தலைவணங்காத சமரசமற்ற உறுதியான நிலைப்பாடு எளிய மக்களிடம் இன்னும் இயல்பாய் இருக்கிறது என்பதற்கு இந்தக் காட்சி ஒரு சாட்சி. நேர்மையாக இருப்பவர்கள்தான் அறச்சினத்தைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இந்த படத்தில் உள்ளன. செங்கேணி காவல் நிலையத்திற்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, ”இப்படி சித்திரவதை செய்தீர்களே நீங்க நல்லா இருப்பீங்களா” என்று கதறுவாள். ஒரு கர்ப்பிணி பெண்ணின் அடிவயிற்றில் இருந்து எழும் கோபம் ஒரு அறச்சினம். ஆள்கொணர்வு மனு நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு வழக்கு நடக்கின்றது. வழக்கின் போக்கில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்ற ஒளிக்கீற்று வெளிப்படுகின்றது. குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க போகும் அந்த தருணம் நெருங்கி வருகின்றது என்பதை அறிந்தவுடன், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பல நெருக்கடிகள் வருகின்றன.

செங்கேணி எந்த வற்புறுத்தலுக்கும் தலை வணங்காமல் துணிந்து நிற்கின்றாள். அதில் தன்னுடைய அறச்சினத்தை வெளிப்படுத்துகின்றாள். உள்ளூர் தலைவர் பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள மக்களை தன்னுடைய வீட்டிற்கே அழைத்து போலீசார் முன்னிலையில் மிரட்டுகிறார். ”உங்களால கோர்ட்டு, பத்திரிகையினு ஊர் மாணமே போவுது. உங்க நாலு குடிசையை கொளுத்துவதுக்கு எவ்வளவு நேரமாகும்? இருக்க இடம் கொடுத்து, பொழைக்க வேலை கொடுத்தான். திமிர் எடுத்தா அலையுறீங்க? போய் ஒழுங்கா கேஸை வாபஸ் வாங்கப் பாருங்க”, என்று அதட்டுகிறார். ஆனால் செங்கேணி அமைதியாக அங்கே நின்று கொண்டிருப்பாள். அந்த அமைதி ஒரு ஆழமான அமைதி. அறச்சினம் உள்ளத்தில் பொங்கி வரும் அமைதி என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அத்தியூர் காவல் நிலையத்திற்கு செங்கேணியை வரவைத்து மூன்று காவலர்கள் கேசை வாபஸ் பெறவேண்டும் என்று மிரட்டுவார்கள். எங்க வேலையே போய்விடும். நாங்க எவ்வளவு பணம் வேணாலும் தருகிறோம்” என்று கெஞ்சுவார்கள். இந்த பேப்பரில் கையெழுத்து போட்டுட்டு இங்கிருந்து போ. இல்லேன்னா இங்கிருந்து நீ போக முடியாது என்றும் மிரட்டுவார்கள். ஆனால் செங்கேணி அமைதியாக இருந்துவிட்டு, ”வக்கீல் சாரைக் கேட்காம நான் எதுவும் செய்ய மாட்டேன்” என்று உறுதியாக இருக்கின்றாள். உடனே டிஜிபி-யிடமிருந்து தொலைபேசி வரும். அந்த தொலைபேசியிலே ”செங்கேணியை போலீஸ் ஜீப்பில் கொண்டு போய் வீட்டில் விட வேண்டும்” என்ற ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் மீண்டும் செங்கேணி அமைதியாக இருந்துவிட்டு கோபத்தோடு நடந்தே சென்று பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்கிறாள். போலீஸ் ஜீப் அவளை ஏற்ற முடியாமல் பின்னால் செல்கின்றது. இது அவளுடைய அறச்சினத்தை வெளிப்படுத்துகின்றது. அதேபோல டிஜிபி அலுவலகதிற்கு செங்கேணியை அழைத்து, ”எவ்வளவு பணமும் வாங்கி தரேன். பேசாம கேஸை வாபஸ் வாங்கிட்டு போ. உங்க குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு இந்த பணம் உதவும்” என்று டிஜிபி சமரசம் பேசுகின்றார். செங்கேணி அங்கேயும் தன்னுடைய ஆழமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றார். எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு அப்பா யாருன்னு காட்டுவதற்கு என் புருஷன் என்னோட இல்லை. இப்ப நீங்க தருகின்ற பணம் என் கணவனைக் கொலை செய்தவர்கள் கொடுத்த பணமாக இருக்கும். அந்தப் பணம் எனக்கு வேண்டாம். நான் கோர்ட்டில் போராடி தோற்றேன் என்றுகூட நான் சொல்லிக்கிறேன். முடிஞ்சா, உங்களால குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுங்க” என்று நெஞ்சுறுதிவுடன் பேசுகின்றார்.

இருளர்களுக்காக குரலை உயர்த்தும் வழக்கறிஞர் கே. சந்துரு
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் மறக்கமுடியாத வழக்கறிஞர் கே.சந்துரு அவர்கள். 1900-களில் அவர் வழக்கறிஞராக பல வழக்குகளை எடுத்து நடத்தி இருக்கின்றார். அதன் பிறகு ஒரு நீதி அரசராகவும் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்து ஏழை எளிய மக்களின் சார்பாக நின்று தீர்ப்பு சொல்லியிருக்கின்றார். அவரின் எல்லாத் தீர்ப்புகளுக்கும் அம்பத்காரின் சிந்தனைகள் பெரிதும் உதவியாதாக் அவரே கூறியிருக்கிறார். இதைத்தான் தா. செ. ஞானவேல் சினிமாவுக்கு கதைக்களமாக எடுத்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் வழக்கமான பார்முலாவுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எவ்வித சமரசமும் இன்றி கதைக்களத்தை அமைத்திருக்கிறார். கனவுப் பாட்டு, டான்ஸ, சண்டைக் காட்சி, பன்ஞ் டயலாக் என்று எதுவுயேமயில்லாமல் சினிமா எடுத்திருப்பது பாராட்டப்படவேண்யது.

அம்பேத்கார் வழியில் நின்று பல வழக்குகளில் ஏழை மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்த சந்துருவின் திரு. கே. சந்துரு என்ற தனி மனிதனின் புகழ் பாடாமலும், சூர்யா என்ற கதாநாயகனையும் அதிகமாக முன்னிறுத்தாமல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கின்றது. வழக்கறிஞராக நடிக்கின்ற நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு புகழ் பெற்ற கதாநாயகன்தான். வழக்கமான தமிழ் சினிமாவில் அவர் அதீத பலம் கொண்டவராகத்தான் சித்தரிக்கப்படுவார். ஆனால் இந்தப் படத்தில் அவர் ஒரு வழக்கறிஞராக பல நேரங்களில் தன்னுடைய பலவீனத்தையும் இயலாமையையும் உணர்வதாக சித்தரிக்கப்படுகின்றது. எனவே அவர் தனியாக நின்று மாபெரும் பலசாலியாக போராடவில்லை. இந்திய அரசியல் சட்டத்தின் துணை, மனித உரிமைப் போராளிகளின் ஆதரவு, கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் தோழமை, அறிவொளி இயக்கத்தின் ஆசிரியர் இன்னும் எண்ணற்ற நபர்களின் உதவியோடுதான் செயல்படுகிறார்.

குறிப்பாக, அரசு வழக்கறிஞர் கொண்டு வருகின்ற பொய் சாட்சிகளின் மூலம் நீதிமன்றம் வழக்கை டிஸ்மிஸ் செய்ய போகிறது என்று தெரிந்தவுடன், கம்யூனிச கட்சி தோழர்களின் ஆதரவோடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றார் கே.சந்துரு. எனவே கம்யூனிச இயக்கத்தின் தோழர்களோடு இணைந்து பொது மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக துண்டுப்பிரசுரம் கொடுத்தல், கோசம் எழுப்பியவாறு ஊர்வலம் போதல் என்று பல முயற்சிகளை எடுக்கின்றனர். கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் எப்போதுமே தலித் மக்கள் பழங்குடியினர் ஆகியோரின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள். களத்தில் நின்று பணியாற்றுபவர்கள். இந்த படத்திலும் அப்படித்தான் பொய் வழக்கில் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணு செங்கேணி குடும்பத்திற்காக நீதியை நிலை நாட்ட களத்தில் நிற்கின்றனர். அதை இந்தப் படம் சரியாகப் பதிவு செய்திருக்கிறது.

ஒரு கூட்டு முயற்சியாகத் தான் வழக்கின் நியாயத்தை படிப்படியாக நிரூபிக்க முயற்சிக்கின்றார். ஒரு கட்டத்தில் காவல் நிலையத்திலிருந்து தப்பித்து சென்றதாகச் சொல்லப்பட்ட மூன்று பேரையும் தேடும் பயணத்தில் இவரும் சேர்ந்து பயணிக்கிறார். காவல் துறையும் அரசு தலைமை வழக்கறிஞரும் சேர்ந்து புதிய சாட்சிகளை உருவாக்குகிறார்கள். இருட்டப்பன் ஒரு முறை மில் முதலாளியிடம் தொலைபேசியில் பேசியதாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்கின்றனர். ஏறக்குறைய வழக்கு டிஸ்மிஸ் ஆகி விடும் நிலைக்கு நீதியரசர்கள் வருகின்றார்கள். அப்போது தன்னுடைய இயலாமையை உணர்கிறார். நான் தோல்வியடையப் போகின்றேன் என்பதை உணர்ந்து சந்துரு கோபப்படுகிறார். ஏன் உண்மையை மறைச்சீங்க? இந்த கேசை நான் நடத்த மாட்டேன் என்று செங்கணி மீது கோபப்படுகிறார். இப்படி ஒரு கதாநாயகன் மீண்டும் மீண்டும் தன்னுடைய பலவீனத்தை உணர்ந்து நடிப்பது இந்த படத்தில் ஒரு வித்தியாசமான அணுகு முறையாக இருக்கின்றது. அதேபோல அறிவொளி இயக்கத்தின் டீச்சர் தோன்றும் காட்சிகளில் குறைவான நேரம் தான் காட்டப்படுவார். வழக்றிஞரோடு உரையாடுகின்ற காட்சிகளில் மிகுந்த பக்குவத்துடனும், முதிர்ச்சியுடனும் நடந்துகொள்வார்.

காரணம் செங்கேணியின் வழக்கு கொண்டிருக்கும் வலி, வழக்கின் உண்மைத்தன்மை, வழக்கு தொடுத்து போராடுகின்ற பழங்குடியினப் பெண்ணின் நீதி உணர்வு, அவளின் உரிமை குரல் அகியவை தான் முக்கியம் என்பதை படம் நமக்கு உணர்த்துகிறது. வசனமேயில்லாத அமைதி பல இடங்களில் ஆழமான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அது ஆழமான அர்த்தத்தையும் வெளிப்படுத்துகின்றது. செங்கேணி காவல்நிலையத்தில் என்ன நடந்து என்பதை டேப்பில் பதிவு செய்கின்ற வழக்கறிஞர் சந்துரு, ஒர் இடத்தில் அவர் சொல்வதைக் கேட்க முடியாமல் நிறுத்திவிட்டு எழுந்து எதிர்ப்புறம் நின்று கொண்டிருப்பார். அவர் கன்னம் சிவக்கும். கண், காது, மூக்கு எல்லாம் துடிக்கும். அந்த அமைதியான சில நிமிடங்களில் பார்வையாளர்களை அறச்சினத்தின உச்சத்திற்கே கொண்டு செல்கின்றது.

இந்த வழக்கை விசாரிக்கும் குற்றவியல் புலனாய்வு ஐஜி பெருமாள் சாமி அவனுடைய கோபத்தை அமைதியாக வெளிப்படுத்துகின்றார். பழங்குடி மக்களை ஓரிடத்தில் ஒன்றுகூட்டி காவல்துறை அவர்களுக்கு செய்த அநீதியான செயல்பாடுகளை கேட்டறிகிறார். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் காவல்துறை தங்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரத்தையும் விவரிக்கின்றனர். கடைசியில் ஒரு சின்னப் பையன் பேசுகின்ற பொழுது பெருமாள் சாமி எழுந்து அமைதியாக தன்னுடைய கோபத்தை முகத்தில் வெளிப்படுத்துவதை நாம் பார்க்க முடிகின்றது.

இந்த படத்தில் வெளிப்படுகின்ற கூர்மையான பல வசனங்கள் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து இழுக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சந்துரு பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் கூர்மையானவை. காவல்துறை உண்மையை ஒத்துக் கொள்கின்ற பொழுது, அரசு வழக்கறிஞர் ”காவல்துறை உண்மை ஒத்துக்கொண்ட பிறது மீண்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?” என்று சொல்லுவார். அதற்கு சூர்யா, ”பல உண்மைகளை மறைப்பதற்குதான் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்” என்று குரலை உயர்த்திப் பேசுவார்.

செங்கேணிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்காக, ”நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட, அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது” என்று சொல்வார். அதேபோல பழங்குடி பெண்ணின் நியாயத்தை விளக்குகின்ற பொழுது, இருளர்களின் ஆதி வரலாறு பற்றி எடுத்துரைக்கின்றார். ”ஒரு காலத்தில் இவர்கள் வேல் ஏந்திய வீரர்களாக இருந்தனர். இப்போது கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அட்ரஸ் இல்லாதவர்களாக இருக்கின்றனர்” என்று கோபப்படுகின்றார். இது என்ன வரலாற்று கிளாஸ் போல இருக்கிறது என்று அரசு தலைமை வழக்கறிஞர் கிண்டலடிப்பார். ”வரலாறு தெரியாததால் தான் தமிழக அரசும், காவல்துறையும் இவர்களிடம் மிருகத்தனமாக நடந்து கொள்கின்றது.” என்று மீண்டும் குரலை உயர்த்தி பேசுவார். ”எனக்கு இலட்சக்கணக்கான பணம் வேண்டாம். கணவனை இழந்து நிற்கும் எனக்கு நீதிமன்றத்தில் நீதி வேண்டும் என்று போராடுகின்ற அவளுக்கு இந்த நீதிமன்றம் அநீதி இழைத்து விடக்கூடாது”, என்று வாதிடுகின்றார். வழக்கின் இறுதியல் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கின்ற விதத்திலேயே தீர்வு சொல்லப்படுகின்றது. தீர்ப்பை கேட்ட உடனே செங்கேணி எதுவும் பேசாமல் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு கோர்ட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறார். சந்துரு அவரைத் தேடி வருகின்ற பொழுது இருவரும் கண்ணீர் மல்க சந்தித்துக் கொள்கின்றனர். பின்னணியில் பாடல் ஒலிக்கின்றது.

”மண்ணிலே ஈரம் உண்டு
முள் காட்டில் புவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு”
அர்த்தமுள்ள வார்த்தைகளாக இருக்கின்றன.

இறுதியாக…
ஜெய்பீம் என்ற தமிழ் திரைப்படம் ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. ஏதோ வழக்கமான ஒரு படத்தை பார்த்தோம், மறந்தோம் என்று கடந்து போகும் படைப்பு அல்ல. மாறாக, பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்திலிருந்து எழும் குரல் நீதிமன்றம் வரை வந்து ஓங்கி ஒலிக்கின்ற ஒரு குரலின் பதிவாக இருக்கின்றது. நிச்சயமாக இதை திரைப்படம் பழங்குடிகளின் வாழ்வில் ஒளி ஏற்றக்கூடியதா இருக்கும். இருளர் சமூகம் பற்றி இந்த பொது சமூகத்தின் பொது புத்தியில் உறைந்து கிடக்கின்றது தவறான எண்ணங்கள் களையப்படும் என்று நம்புகின்றேன்.

காக்கி உடை அணிந்தால் ஏழை எளிய மக்கள் மீது பொய் வழக்கு போடலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற காவல்துறையின் அராஜகத்தை அப்படியே தோலுரித்துக் காட்டுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் அப்படியே முடங்கிப் போய்விடாமல் இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்து, கடைசி வரை போராட்டம் நடத்த முன்வரவேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. உண்மைக்காக போராடுபவர்கள், சமூக அக்கறையுடன் செயல்படும் வழக்கறிஞர்களோடு கைகோர்த்துக்கொண்டு சட்டப் போராட்டம் நடத்த வேண்டும். அதிலும் கூட்டு முயற்சியுடன் நீதிக்கான வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்பதை இந்த படம் சத்தமாகச் சொல்கின்றது.

ஏழைகளுக்கு கடைசி நம்பிக்கையாய் இருக்கின்ற நீதிமன்றம் அவர்களைக் கைவிட்டு விடாது என்பதற்கு ஜெய்பீம் இறுதியில் வருகின்ற தீர்ப்பு ஒரு நல்ல சாடசியாக இருக்கின்றது. இந்த படத்தின் மூலம் பழங்குடி சமூகத்தின் மீது அரசுக்கு உண்மையிலேயே அக்கறை ஏற்படும் வேண்டும். குறிப்பாக இருளர் சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு மனை பட்டா வழங்குவது, சாதிச் சான்றிதழ் மற்றும் இதர அரசு சான்றிதழ்கள் வழங்குவது என அனைத்தையும் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நீக்க வேண்டும். அதுதான் ஒரு படைப்பு கொண்ட கொண்டு வருகின்ற பங்களிப்பாகும், வெற்றியாகவும் இருக்க முடியும். ஜெய் பீம் என்றால் இருளை அகற்றும் ஒளி என்று பொருள் படும். இந்த் திரைப்படத்தின் வழியாக இருளர் சமூகத்தின் மீது நம்பிக்கை ஒளி வீசட்டும். இதனடிப்படையில், இது தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு மைக்கல்லாக இருக்கும்.

அ.இருதயராஜ் சே.ச

Jai Bhim Poem by Pichumani பிச்சுமணியின் ஜெய்பீம் கவிதை

ஜெய்பீம் கவிதை – பிச்சுமணி




இந்த தேசத்தின்
எதேனும் ஒரு ஊரில்
எந்த ஒரு தெருவிலும்
ஒடுக்கப்பட்ட வரின் குரலை
பாதிக்கப்பட்டவரின் சொல்லை
வலிகள் நிறைந்த வார்த்தைகளை
மனிதம் நேசித்து கேட்டு கொண்டிருப்பான்
ஒருவன்.

அவன் வேறு யாருமில்லை
அவன் பெயர் தோழர்.
உரிமை
சம உரிமை
சமூக நீதி
எதிலும் அந்த
தோழனின் கைகளில்
செங்கொடி உயர்ந்து பறக்கும்.

தேசம் காக்கும் போராட்டமோ..
தெருக்களின் பிரச்சினையோ..
இரண்டிலும் அவனிருப்பான்.
அவன் பொதுவுடமைக் காரன்.
காற்றைப்போல்
இந்திய தேசத்தில் அவன்
கலந்து பல நூற்றாண்டு
ஆகிவிட்டது.

கடுகளவோ
கடலளவோ..
கவலை பிரச்சினை
தீர்வு தேடி..
காயங்களை
நெஞ்சில் சுமந்து
புன்னகை யோடு
வணக்கம் தோழர்
சொல்லும் எளியவர்கள்
நெஞ்சில் நிறைந்து
நிற்கிறான்..
பொதுவுடமைக் காரன்.

இழக்க ஏதுமற்ற
எளியவனே
இரக்கமற்ற
அரசதிகாரத்தை
எதிர்த்து நிற்பான்

எளியவனும்
பொதுவுடைகாரனும்
வேறு வேறல்ல
உரக்க சொல்வேன்
ஜெய்பீம்
லால் சலாம்…

(2)
ஆகாயத்தில்
அசந்துறங்கும் ஆதவனை
நீர் தாளம் தட்டியெழுப்புகிறாள்
கடல் அன்னை.

(3)
ஓடிப்பிடித்து விளையாடினோம்
நானும் அலையும்
ஓய்ந்து போன கால்கள்
இளைப்பாற இடந்தேடுகிறது
ஓய்வறியா அலையோ
வா..வா.. என்கிறது…