சுதாவின் கவிதைகள்

சுதாவின் கவிதைகள்


இது போன்ற ஓர் இரவில் நானும் இப்படி
என் தோற்றத்தை இழந்தவளாய்
என் விருப்பு வெறுப்புகளை அற்றவளாய்
என் வாழ்வின்
இறுதியைத் தொட்டதாய் என்னக் கூடும்…

செயலிழந்து தோற்றம் நசிந்து
ஒரு புது ஆடையின் கிழிசலைப் போல்
வெட்டு விழுந்த மரத்தில்
கசியும் சிறு பிசின் போல்…
என் நினைவுகள் கொஞ்சம்
கொஞ்சமாய் கசியக்கூடும்…

அந்நாளில் கட்டாயம் நீ
வேலை நிமித்தமாய்
வெகு தூரம் சென்று இருக்கலாம்…
உன் வாழ்வின் ஆகச் சிறந்த
வெற்றிக்காய் நீ ஓடிக் கொண்டிருக்கலாம்…

முயற்சி ஏணும் செய்..
கொஞ்சம் என் சுருண்ட
உடல் அருகில் அமர்ந்து
என் விரல் பிடித்துக் கொள்…
மெலிதாய் ஒரு முத்தத்தை
என் நெற்றியில் இட்டுச் செல்…

இறப்பு ஒன்றும் அத்தனை
கொடூரம் இல்லை என்று எனக்குத் தெரியும்…
விடுதலை எப்படி கொடூரமாகும்…

ஒருமுறை மட்டும் முயற்சித்துப் பார்…

#சுதா

Orange Chocolate short story by Sutha சுதாவின் ஆரஞ்சு மிட்டாய் சிறுகதை

ஆரஞ்சு மிட்டாய் சிறுகதை – சுதா



கரூர் நெடுஞ்சாலையில் கார் தனக்கே உரித்தான வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காருக்குள் இருந்த கோதையின் மனது மட்டும் தன் அம்மாயின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறது.

என்ன கோத காரை விட்டு இறங்கலியா..உங்க அம்மாயிக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கலாம்ல..கணவன் சதீஷின் குரல் கேட்டு நினைவு வந்தவள் போல் காரை விட்டு இறங்கி எதிரிலிருந்த பெட்டிக் கடைக்கு போனாள்…அந்தப் பெட்டி கடையில இனிப்பும் காரமும் அங்கேயே செய்யரதால ருசி கொஞ்சம் அதிகமா இருக்கும். எப்பவும் கோத ஊருக்கு வந்தா அந்தப் பெட்டிக் கடையில தான் தின்பண்டம் வாங்குவா..என்ன என்ன வேணும்னு சொல்லிட்டு சுத்தியும் முத்தியும் பார்க்கும்போது ஆரஞ்சு மிட்டாய் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அழகா கலர் கலரா வச்சிருந்தாங்க…ஆரஞ்சுமிட்டாய் பார்த்ததற்கும் கோதைக்கு நினைவுகள் மீண்டும் பின்னோக்கி போச்சு..

எப்பவுமே கோதைக்கு பள்ளிக்கூடம் போறதுன்னா பிடிக்கவே பிடிக்காது…அம்மாயி முந்தானைய பிடிச்சிட்டு தோட்டத்துல வேல செய்யுற கிழவிகள்கூட கதை பேசிக்கிட்டு இருக்க தான் பிடிக்கும்..மத்தியானம் ஆச்சுன்னா அம்மாயி கட்டிக் கொண்டு வந்த சோத்துல உருண்டை பிடித்து உள்ளங்கையில் தருவா அதைவிட அமிர்தம் வேற என்ன இருக்கும்…

அப்புச்சி அப்புச்சி நான் நாளைக்கு பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று சொல்லிட்டு தான் தூங்க போவா கோதை..கோதை காளிமுத்துவின் மகள் வழி பேத்தி..மகள் வீட்டில் வசதி இல்லாததால் கோதை காளிமுத்துவிடம் இருக்கிறாள்…உன்னோட அம்மா யாருன்னு கோத கிட்ட யாராவது கேட்டா..அவ அப்புச்சிய தான் கை காட்டுவா..அவ்வளவு பாசம் காளிமுத்து மேல கோதைக்கு..காளிமுத்துவும் கருப்பாயும் எது கேட்டாலும் வாங்கி கொடுத்துடுவாங்க…

அன்னைக்கு கருப்பாயி வெளியூருக்கு போனா ஆனா கோதையை கூட்டிட்டு போகல..அவள மட்டும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு கருப்பாயி மட்டும் வெளியூர் போனதுல கோதைக்கு ரொம்ப கோவம்…
ஆனா சாப்பாட்டு நேரத்துல ஜன்னல் வழியா அம்மாயி வரலான்னு தேடிக்கொண்டிருந்தாள் கோதை…கோத நெனச்ச மாதிரியே புளிய மரத்துக்கு அடியில கண்டாங்கி சேலையில வழித்து சீவிய தலை அதுல சின்ன கொண்ட கொண்டைய சுத்தி கொஞ்சம் ஜாதிமல்லி…தேவதையின் அம்சம் அவதா..

எனக்கு எதாவது திங்க வாங்கி வந்து இருப்பானு நினைச்சுகிட்டே ஓடிப் போனேன்…நான் உனக்கு ஒன்னும் வாங்கியாரல சிலேட்டு குச்சி தான் வாங்கி வந்தேன் இந்தா அப்படினு கொடுத்தா..அப்போ என்கூட சுமதி இருந்தா..ச்சச என்ன இந்த அம்மாயி ஒன்னுமே வாங்கி வரல அப்படின்னு நினைச்சிகிட்டேன்…சுமதியை எப்பவுமே என்னோட அம்மாயிக்குப் பிடிக்காது..அதனால அம்மாயி மொரச்சதும் சுமதி பள்ளிக்கூடத்துக்கு ஓடிட்டா…

நானும் பள்ளிக்கூடத்துக்கு போலாம்னு ஒரு எட்டு எடுத்து வச்சேன் இந்தா ஆரஞ்சு மிட்டாய் அப்படினு முந்தானையில் முடிந்து வைத்திருந்தத எடுத்துக் கொடுத்தா…அப்ப முகத்துல இருந்த அன்பு இப்பவும் என்னால உணர முடியுது…அவ முந்தானையில முடிஞ்சு கொடுத்த ஆரஞ்சு மிட்டாயின் தித்திப்பு இப்பவும் நாக்குல…

ஆனா இன்னைக்கு அவளால எந்திரிச்சு நடக்க முடியல பக்கவாதம் வந்து படுத்துருக்கிறதா போன் வந்ததும் நானும் கிளம்பி வந்துட்டேன்..ஆனா நான் பாத்துட்டு உடனே கிளம்பிடுவேன் ஏன்னா என்னோட வேலை அப்படி..இருந்து ஒரு நாள் கூட பாக்க முடியல அப்படிங்கிற மனவருத்தம் இருக்கு ஆனா வாய்ப்பு இல்லாம இருக்கு…

கோதை நினைக்க நினைக்க கண்ணுல தண்ணி அருவியா ஓடுச்சு கடைக்காரர் என்னமா அப்படின்னு கேட்கவும் சதீஷ் இன்னும் வாங்கலையான்னு கேட்கவும் சரியா இருந்துச்சு..காசு கொடுத்துட்டு கண்ணீரை தொடச்சிகிட்டு திரும்பவும் காரில் ஏறி உட்கார்ந்ததும் கார் மீண்டும் சீறிப் பாய்ந்தது…இங்கொன்றும் அங்கொன்றுமாய் முளைத்திருக்கும் சிறு சிறு வீடுள்ள கிராமத்துக்கு…

Droplets short story by Sutha சுதாவின் சிறுகதை சிறு துளி

சிறு துளி சிறுகதை – சுதா



நான் பிறந்து ஓரிரு நாளில் அவன் என்னை தூக்கி வந்து விட்டான். நான் கண் திறந்து பார்த்த முதல் உருவம் அவள் தான். நான் இரவில் சிணுங்கினாலும் முகம் சுளிக்காமல் பசியாற்றுவாள். தூக்கி வந்ததோடு அவன் கடன் முடியவில்லை. அவன் உணவில் மிச்சம் அல்ல சரிபாதியை எனக்குத் தருவான். சகோதரன் எனும் வார்த்தையின் முழு அர்த்தம் அவன். பார்த்துப்பார்த்து ஒவ்வொன்றையும் செய்வான் அவன் அம்மா என் மீது கோபப்பட்டாலும் என்னை விட்டுக் கொடுக்காதவன். எனக்கென விரிப்பு கொசு அண்டாமல் இருக்க கொசுவத்தி எனக்கென்று தனி இடம் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வான்.

நான் குழந்தைதானே ஆனாலும் நிறைய சாப்பிட வேண்டும் என அவன் என் வாயில் திணித்துக்கொண்டே இருப்பான். அவன் பள்ளிவிட்டு வீடு வந்ததும் நான் தான் அவன் விளையாட்டு பொருள். அந்த நேரத்திற்காக நானும் ஏங்கி கொண்டிருப்பேன். முத்தமிட்டு முத்தமிட்டு என்னை மூச்சிறைக்க வைப்பான்.
அந்த வீட்டில் ஒரு அக்காவும் இருந்தாள் அவளுக்கு நான் வந்தது பிடிக்கலையோ என்னவோ என்ன அவ பெருசா கண்டுக்க மாட்டா. எனக்கு ஊசி போட கூட்டிட்டு போறது குளிப்பாட்டுவது இப்படி எல்லாமே அந்த அம்மா தான். என்னோட கழிவுகளையும் அவதான் கழுவுவா.

செல்பேசினால நிறைய உறவு உருக்குலைந்து போச்சுனு சொல்றாங்க எனக்கும் அப்படித்தான் எப்பவும் என்ன கொஞ்சிக் கொண்டே இருக்கிற அந்த அண்ணன் இப்ப என்னை விட்டு கொஞ்சம் விலகிட்டான். எப்போதாவதுதான் அவன் என்னை கொஞ்சுவான் ஆனா எனக்கு அவன் கூடவே இருக்கணும்னு ஆசை. அவன் வண்டியில் போன நான் பின்னாடி போவேன் ஆனா அவன் என்ன விட்டுட்டு போயிடுவான் நானும் திரும்பி வந்து விடுவேன்.

இந்த நேரத்துலதான் அந்த வீட்டு அக்கா என்னோட பாசமா இருக்க ஆரம்பிச்சா. அவளும் நானும் நிறைய விளையாடுவோம். போட்டோ எடுப்போம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அந்த வீட்டு அம்மாவும் நல்லாதான் கவனிப்பார்கள்.

நான் இருக்கிறது அந்த வீட்டுக்காரர்களுக்கு பிடிச்சாலும் பக்கத்துல இருக்குறவங்ளுக்கு பிடிக்கல. என்னோட சத்தம் அவங்களுக்கு தொல்லையா இருந்துச்சு. எப்பவும் அவங்ககிட்ட புகார் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.  நான் ஊளையிடுறேனு பல பேரு பல விதமா பேசினாங்க. என்னுடைய இயல்பு அதுதானே. அதனால அந்த வீட்டம்மா என்ன கட்டி போடாம விட்டுட்டாங்க. நானும் விட்டா போதும் ஓடிட்டேன். இரண்டு நாள் சந்தோஷமா இருந்துச்சு அதுக்கு அப்புறம் நல்ல சோறு கிடைக்கல. மறுபடியும் வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்பவும் அவங்க என்ன நல்லா கவனிச்சாங்க. நல்ல சோறு போட்டாங்க அந்தப் பையன் என்ன கொஞ்சுனான் எனக்கு ஆனந்தமா இருந்துச்சு. ஆனா அந்த வீட்டம்மா அவன ரொம்ப திட்டிட்டாங்க. அது எங்கெல்லாம் சுத்திட்டு வந்ததோ அதைப் போய் கொஞ்சிக்கிட்டு இருக்க அப்படின்னு திட்டினாங்க. அந்த வீட்டு அக்காவு என்கிட்ட பாசமா இருந்தாங்க நல்லா சாப்பிடுவேன் வெளியே நண்பர்கள் கூட சுத்துவேன். என் வீட்டு பக்கம் யாரையும் வர விடமாட்டேன். அவ்வளவு பாதுகாப்பா வச்சிருப்பேன்.

சில பேரை பார்த்து நான் குலைக்கிறது பலருக்கு பிரச்சினையா இருந்துச்சு போல. ஆனா அதெல்லாம் எனக்கு தெரியாது. பலபேர் என் மேல கோவமா தான் இருந்திருக்காங்க.
எனக்கு கறிசோறுனா ரொம்ப பிடிக்கும். அந்த அக்காவும் அண்ணாவும் தனியா எடுத்து வச்சிடுவாங்க எப்பவும். அன்னைக்கு தீபாவளி வேற ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருந்துச்சி. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இன்னைக்கு நிறைய கறி சோறு கிடைக்கும்னு. நானு ஓட்டமா ஓடி வீட்ல என்னோட தட்ட பார்த்தேன். தட்டு நிறைய சுடசுட பிரியாணியும் கறியும் வெச்சிருந்தாங்க. எனக்கு நாக்குல எச்சி ஊருது சாப்பிடலாம்னு பக்கத்துல போனேன் சாப்பிட முடியல. என்னவாயிருக்கும் சரி கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு பிடி பிடிக்கலாம் அப்படின்னு இருந்தேன். ஏனோ அன்னைக்கு என்னால சாப்பிட முடியல. வண்டியை சர்வீஸ் பார்க்க புதுசா ஒருத்தர் வீட்டுக்குள்ள வந்தாரு என்னால கொலைக்க முடியல. எனக்கு இது கொஞ்சம் புதுசா தான் இருந்துச்சு. அந்த வீட்டம்மாவும் டாக்டர் கூப்பிட்டாங்க ஆனால் தீபாவளின்னு சொல்லிட்டாங்க.

என்னவா இருக்கும்னு நான் யோசிச்சேன். அப்பதான் தெரிஞ்சது பக்கத்துல ஒரு அம்மா பரோட்டா வெச்சாங்க என் வீட்டு அம்மா போல நினைச்சு நல்லா சாப்பிட்டேன். “பாவம் அவங்களும் மனுஷங்கதானே” கொஞ்ச நேரத்துல நான் இறந்திடுவேனு தோணுச்சு மெதுவா எழுந்து தண்ணீர் தேடினேன் தண்ணி இல்ல. அந்த வீட்டு அம்மா ஓடிவந்து தண்ணிய வச்சாங்க கடைசியாக குடிக்க முயற்சி பண்ணேன் முடியல.

சரி நாமக்கான நேரம் வந்துடுச்சுனு போயிட்டேன். ரொம்ப தூரம் போயிடலானுதா நினைச்சேன். முடியல கொஞ்சம் தூரம் போனதும் என் உடம்பு ஒத்துழைக்கல நல்ல வெயில் நேத்து பேஞ்ச மழைத்தண்ணீல படுத்துட்டேன். கண் திறந்திருக்க நான் இருந்துட்டேன். என்னைத்தேடி வந்த அந்த வீட்டய்யா நான் இறந்தத போன்ல சொன்னார். அங்கேயே குழிக்குள்ள போட்டாங்க என்னோட உடம்ப. சில துளிகள் என் மேல விழுந்துச்சு எனக்கு இத்தனை நாள் சோறு போட்ட அந்த அம்மாவோட கண்ணீர்த்துளி போல. மேல பட்டதும் இறந்த என் உடம்புக்கு கொஞ்சம் எதமா இருந்துச்சு.

Lakshmi short story by Sudha லட்சுமி குறுங்கதை

*லட்சுமி* குறுங்கதை – சுதா



கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருந்த லட்சுமியை, ‘விஷ் யூ 22 ஆனிவர்சரி மாம்’ அப்டீனு கன்னத்தில் முத்தப் பரிசோட காயத்ரி சொல்லவும்,.காயத்ரியின் அப்பா கதிர் வரவும் சரியா இருந்துச்சு.

“அப்பா திருமணநாள் வாழ்த்துக்கள்” என காயத்ரி சொன்னதும். “ஹா ஹா ஹா” என சிரித்து, “உங்க அம்மா என்னை கல்யாணம் பண்ணி 22 வருஷம் ஆச்சா… அவளுக்கு என்ன ராணி…” என தோள் தொட்டு இழுத்து நெற்றியில் முத்தமிட்டான் கதிர்.

“அம்மா, இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? சிக்கன், பிரியாணி, கேசரி, மட்டன் கிரேவி எல்லாமே வேணும்மா.”

“உனக்கில்லாததா காயூ! எல்லாமே செஞ்சுடுவோம்” என கதிரும் மகளுக்குப் பிடித்தமானதை வாங்கக் கடைவீதிக்குச் சென்று விட்டான்.
லட்சுமியின் உடல் நிலையை யாரும் கவனிக்கவில்லை. அவளும் காட்டிக்கொள்ளவில்லை. தலைவலியும் உடல்வலியும் லட்சுமியைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது..வயதும் ஏறுகிறது வலிமையும் குறைகிறது தானே…

சிக்கனும் மட்டனும் வந்துவிட மும்முரமாய் கிச்சன் வேலையை ஆரம்பித்தாள். வேலை ஏதும் இருக்கான்னு கேட்க யாருக்கும் தோன்றவில்லை. லட்சுமி அடுக்களையில் வேர்வையில் குளிச்சிட்டு இருக்க.ஏசி அறையில புதிதாய் வெளியான திரைப்படத்தின் சத்தம் காதை நெருங்கிக்கொண்டிருந்தது.

அத்தனையும் சமைச்சு எல்லாருக்கும் பரிமாறி பாத்திரத்தை ஒதுக்கிப் போட்டு அடுக்களையை அலசி பாத்திரம் கழுவ உட்காரும்போது பாத்திரம் சொன்னது ஹேப்பி அனிவர்சரி என்று…