அடையாளங்கள் நிர்மூலமாகும் கவிதை – வசந்ததீபன்

அடையாளங்கள் நிர்மூலமாகும் கவிதை – வசந்ததீபன்




காற்றுக்கு இல்லை
நீருக்கு இல்லை
வானுக்கும் பூமிக்கும் இல்லை
இயற்கை யாவும்
பேதம் பார்ப்பதில்லை
நீ மட்டுமேன்?
எம் வியர்வையில் விளைந்தவைகள்
உன் உடலை.. உயிரை..
காக்க.. பராமரிக்கத் தேவை
ஆனால்
எம் அருகாமை அருவருப்போ…!
எம் தொடுதல் தீட்டோ…!
எம் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தி
நீ வெறியாடுவாய்
வல்லுறவில் எம் பெண்களை சிதைத்து
நீ சின்னபின்னாமாக்குவாய்
இழிந்த..ஈனம்.. என்று அடையாளமிடுவாய்..
சேரி என பெயரிட்டு தனி உலகிற்குள்
எம்மைத் தள்ளி பூட்டுவாய்
உன் யாகத்திற்கு எம் இரத்தம்
உன் தாகத்திற்கு எம் கண்ணீர்
உன் தினவுக்கு எம் சந்ததி
உன் மனப் பிறழ்வுக்கு எம் வாழ்வு
உன் அதிகாரம்.. திமிர்..
கொலை மிரட்டல்.. பயமுறுத்தல்.. அராஜகம்… என்பவை
இனியும் கோலோச்சாது
எமக்கு கரங்கள் உண்டு
அவைகளும் ஆயுதங்கள் ஏந்தும்
உன் இதயம் மாமிசத்தாலானது
எம் இதயம் விசப்புகை வீசும் ரணம்
காலம் காலமாய் அடக்கப்பட்டு கொதித்துக் கொண்டிருக்கிறது
எரிமலையாய் வெடிக்கும்
உன் சவமேடுகளில் பூக்களைத் சொரியும்.

– வசந்ததீபன்

விரலின் தடயம்….!!!! கவிதை – சக்தி

விரலின் தடயம்….!!!! கவிதை – சக்தி




ரேகைகள்
கிழிந்த விரல்களால்
சோற்றைக் குழைத்து
குழைத்த சோற்றை
உருண்டை பிடித்துக்
குழந்தைக்கு
சோற்றை
ஊட்டிக்கொண்டிருக்கிறார் அப்பா

வாய் நீட்ட
வாங்கிய குழந்தையின்
தொண்டைக் குழியில்
அடைப்பட்டு நிற்கிறது ஒரு உருண்டை சோறு
நேற்று
இரவெல்லாம்
சேற்றையும் தன் வியர்வையும்
ஒன்றாக பிசைந்து சூளையில்
செங்கல் அறுத்த
அப்பாவின்
தேய்ந்த விரல்களில்
ஒரு விரலின்
முள்ளாகிய தடயம் ,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

தீர்வு தினம் கவிதை – மு.ராம்குமார்

தீர்வு தினம் கவிதை – மு.ராம்குமார்




நுரை பொங்கும்
மலக்குழியில் மிதக்கிறது ஒரு முகம்
நேரம் கடந்தும் ஓடுகின்றன பலரின் கால்கள்
ஒட்டியிருக்கும் தேகங்களின் வியர்வை கொண்டு
வானுயர்கின்றன கோபுரங்கள்
புத்தகம் ஏந்த வேண்டியவை
செங்கல்லை சுமக்கின்றன
பிஞ்சுக் கையெல்லாம் பீடிக் கட்டை
சுருட்டுகிறது
வறண்ட நாட்களில் கூட
வற்றிய பயிர்களால் வயல்கள்
செழிக்கின்றன இப்படி
நேரமின்றி
இயந்திரத்தைப் போல உழைக்கும்
அவர்களைக்கண்டு பெயரிடப்படாத
மற்ற நாட்கள் சிரிக்கின்றன

பொழுதெல்லாம் போராட்டம்
தீராத புலம்பல்கள்
வந்து சேரா ஊதியங்கள் என
நாளெல்லாம் வதைபடுவோருக்கு
தனி தினம் ஏது
வாழ்வில்
தீர்வு வரும் தினம் எது

மு.ராம்குமார்
கல்லூர்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘மண் வெட்டி’

கவிதை – 1
அழைத்தபோது ஓடி வந்தான்
அடிவாங்கி அடி கொடுத்தான்
மண்ணைக் கொத்தி விதை விதைப்பான்
மண்டியிட மறுத்துரைப்பான்

அஞ்சிடாமல் உழைத்து வந்தான்
ஆங்கிலேயன் காலத் திலும்!
மண்ணை மட்டும் நம்பியவன்
மாடுபோல உழைப்பைத் தந்தான்!

வந்தோருக்கும் போவோ ருக்கும்
வருத்தமின்றி உணவளித்தான்
இந்த மண்ணில் கிடைத்ததையே
இல்லமெனக் குடிலமைத்தான்!

ஓலை செத்தை கழிகளினால்
வசிக்க நல்ல குடிலமைத்தான்!
இந்த மண்ணில் விளைந்ததைத்தான்
வேகவைத்து உணவு உண்டான்!

இந்தமண்ணில் கிடைத்த நீரும்
இந்தமண்ணில் வீசுங் காற்றும்
இந்தமண்ணின் மனிதருடன்
இந்தமண்ணின் விலங்குடனே;
இந்த மண்ணின் பறவைகளும்
இவன் வாழ்வின் இன்பங்களே!
இவன்தானே இந்த மண்ணின்
இணையற்ற முதல் மகனே!

கோவணமே கீழாடை
கூழ் களியே உணவாகும்;
நண்டு நத்தை மீனின்வகை
நா ருசிக்க உணவாகும்!
மண்ணை வெட்டும் ஆயுதங்கள்
மரஞ் செடியே சீதனங்கள்
படுத்தாலும் நடந்தாலும்
பஞ்சுமெத்தை மண் தரையே!

கருத்த நிறங் கொண்டிருப்பான்
கழனிக் காட்டில் உழைத்திருப்பான்
மண் வெட்டி ஆயுதமே
மதிப்புமிகு நாட்டுக் காரன்!

******************************

கவிதை – 2

வியாபாரிகள்
வித்தியாசமானவர்கள்!

சிந்தும் வியர்வைத்துளி
ஒவ்வொன்றிற்கும்
விலை வைப்பார்கள்!
முதலீட்டுக்கு
வட்டி வைப்பார்கள்!

தூக்குக்கூலி
ஏற்றுக்கூலி
இறக்குக்கூலி
துடைத்தக்கூலி
இடம்… ஆள்… அம்பு…
எல்லாவற்றுக்கும்
கணக்கு வைப்பார்கள்!

சிலர் ஆசையை
சிலர் பேராசையை
சிலர் வறுமையை
வியாபாரத்திற்குள்
வைப்பார்கள்!

வியாபாரிகள்
அவ்வளவு பெரிய
பள்ளத்தில் வீழ்வது….
அரிது…. அரிது….!

நல்லதுதான்…
வீழ்ந்தால்
வியாபாரத்தில்
எழுவது… சிரமம்தான்!
வியாபாரிகள் விபரமானவர்கள்;

வியாபாரத்திற்கு முதலீட்டைவிட
உழைப்பை விட விபரமே ….
பெரிய முதலீடு!
அதனாலே….. வியாபாரிகளே
முடிவு செய்கிறார்கள்;

மக்களின் மனநிலையை!
விவசாயி வேறு….
வியாபாரி வேறு…. !
எளியோர் எவரும்
வியாபாரியாகிவிட
முடியாது…. அதற்கு
பல பலங்கள் வேண்டும்;

பலத்தை பரம்பரை பரம்பரையாக
வைத்துக்கொண்டவரே வியாபாரத்தில்
வீறு நடை போடுகின்றனர்! விவசாயத்திலும்
பரம்பரை  உண்டு!
எளிமையும்
இல்லாமையும்
வறுமையும்…!

Matram Kavithai By Dharma Singh மாற்றம் கவிதை - ஐ. தர்மசிங்

மாற்றம் கவிதை – ஐ. தர்மசிங்

விடியலை
கூவி எழுப்பியது சேவல்
கடிகாரமாய்
நேரம் காட்டியது சூரியன்

விரல் கொண்டு
மணலைக் கிளறி
எழுதிப் படித்தார்கள்

ஓலைச்சுவடிகளில்
வரலாற்றை
கண்டு கொண்டார்கள்
வியர்வைகளை
காசாக்கும்
வித்தைகளைக் கற்றார்கள்

ஏர்முனைகளால்
தேசத்தை
நிமிரச் செய்தார்கள்

கொண்டாடும் விழாக்களால்
ஒற்றுமையை
வளர்த்தார்கள்
பொங்கி வழியும்
பானைகளால்
மனம் நிறைந்தார்கள்

வரம்பின்றி
பெற்ற பிள்ளைகளை
இறைவனின் கொடைகளாகக்
கொண்டாடினார்கள்

குடிசை வீட்டிலும்
குறட்டையொலியொடு
தூங்கினார்கள்

கதைச் சொல்ல
நரைத்த தலையோடு பாட்டி
குழப்பத்திலிருந்து விடுபட
உதாரணங்களோடு தாத்தா

தோளில் சுமந்து செல்ல
தடந்தோள்களோடு
தாய்மாமன்

சுகமாக தலைகோத
அத்தையிடம்
அன்பான விரல்கள்

கட்டிப் பிடித்து முத்தம் தர
கருணை நிரம்பிய சித்தி
கைப்பிடித்து அழைத்துச் செல்ல
புன்னகையுடன் சித்தப்பா

காலங்காலமாக முற்றத்தில்
நினைவுகளைச் சுமக்கும்
கயிற்றுக் கட்டில்

கொல்லைப்புற தோட்டத்தில்
பட்டாம்பூச்சிகள் கொஞ்சி விளையாடும்
பசுமையான தோட்டம்

தொழுவத்தில்
கேட்டுக் கொண்டிருக்கும்
” ம்மா ” எனும் சப்தங்கள்
” ம்மே” எனும் சப்தங்கள்

வாசலில் விட்டு விட்டு ஒலிக்கும்
” லொள்…லொள்…” சப்தங்கள்
” மியாவ்… மியாவ்…” சப்தங்கள்

வெள்ளை மனங்களோடு
கலகலப்பாக இருந்தது
கூட்டுக் குடும்பமாய்
அந்தக் காலம்…

ஆரவாரங்கள் குறைந்து
அமைதியாக இருக்கிறது
இன்றைய டிஜிட்டல் உலகம்
ஆளுக்கொரு அலைபேசியோடு…

Karkavi Poems கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




வெண்புறா
**************
மாதம்
நான்கு முறை
ஓயாது நீருற்று
புரட்டுகிறார்
இல்லத்தை
மூத்த பெண்மணி

வாசலில்
கோலமிட
கோவத்தில் நீரை
சலிப்புகளுடன்
அள்ளி விசுறுகிறாள்
புதுப்பெண்மணி…

வெளியே கிளம்பும்
வேளையில்
நந்தி போல்
முன் நின்று வழியனுப்பும்
அம்மை….

எல்லாம் கண்பட
பிள்ளைகளை சகமாக
விளையாட வைத்து
மூடிய கதவை
திறக்க நேரம் பார்த்து
இழுத்துப் போர்த்திய

வெண்பட்டினை
வண்ணம் படாது
வலம் வருகிறாள்
எதிர்வீட்டு வெண்புறா…
மிச்சம்
கொட்டிக்கொண்டே
பூசாரியின்
பட்டு சாத்தலையும்
தீபாரதனையையும்
ஏற்கிறது
முக்கூட்டில் அமர்ந்த
முதன்மை கடவுள்….

அவள(தி)ல்காரம்
**********************
அவள்
தூரமாய் நின்று
முனு முனுத்துக் கொண்டுதான்
இருக்கிறாள்…
தேன் தடவிய இதழாயினும்
சொற்கள் கொஞ்சம்
காதலின் நீலநிறம் தான்
இருப்பினும்
பார்த்து இரசித்துக்கொண்டுதான்
இருக்கிறேன்…
சொற்கள் வேறென்ன வண்ணம் பெறும் என்று..
இதற்கு பெயர்
என்ன வென்று சொல்லிவிட முடியும்..
” எனது குதிரைத்திறன் கொண்ட சொற்களின் மொத்த வாட் அவளான பொழுது
அவள் முறைத்து செல்லும் போது காதோரம் தொங்கல் தனை உரசி செல்லும் பட்டாம்பூச்சி மட்டும் தான் நான்…”

வெயிட்டிங் லிஸ்ட்
**********************
நன்றாக படித்தவனும்
நாலு டிகிரி முடித்தவளும்
கொட்டிய முடி கொண்டவனும்
கூந்தலுக்கு தினம் ஒருமணி நேரம் ஒதுக்குபவளும்
கூட்டாஞ்சோறு உண்டவளும்
உச்சிவெயில் குடும்பத்தை
வியர்வையாய் சிந்தியவனும்
விலை போகாத காய்கறிகள் போல
நெடுங்காலமாக
உறங்கிக் கொண்டிருக்கின்றனர்
வண்ண உடையில்
அடித்த பவுடர்,
சீவிய தலைமுடியின் வகுடு மாறாமல்
அழிந்து கொண்டே வரும்
புகைப்படங்களின் வரிசையில்
வெற்றிலை குதப்பிய
வாயில் அந்த நூறு பொய்களை முனுமுனுக்கும்
தரகர்களின்
அக்குல் அணைப்பு
பைக்குள்ளே
மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும்
அந்த வெயிட்டிங் லிஸ்ட் வெள்ளந்திகள்…..!

Viyarvaikku Nandri Poem By Pangai Thamizhan வியர்வையின் நன்றி! கவிதை - பாங்கைத் தமிழன்

வியர்வையின் நன்றி! கவிதை – பாங்கைத் தமிழன்




நான்
பார்த்தும் இருக்கிறேன்
கேள்விப் பட்டும்
இருக்கிறேன்!

கருப்புசாமியால்
கொண்டு வரப்பட்ட
‘காபி’சொம்பு
தண்ணீர் தெளித்து
எடுத்து….
குவளையில் ஊற்றி
குடித்தக் கம்பத்துக் காரரை!

காலி சொம்பு
கம்பத்து வீட்டில்
சேரும்போது…..
ஆள் அரவம் இருந்தால்
தண்ணீர் தெளித்து எடுப்பார்;
இல்லையென்றால்
கம்பத்து வீட்டம்மா
கருப்பனை…. தொடக்கூடாதவனாகப்
பார்ப்பதில்லை!

கம்பத்தம்
வயோதிகத்தில்
வாழ்வு மறித்தபோது
கதறிய….
ஒரே மகனை
கரை சேர்க்க வேண்டிய
பொறுப்பு….
அம்மாவிற்கும்,
அவர் வீட்டு
உப்பைத் தின்று வளர்ந்த
கருப்பனுக்கும்!

கருப்பன்
பொறுப்பு மிக்கவனாக
இருந்தான்!

கம்பத்து மகன்
கருப்பனை
பெயர் கூறி
அழைத்த போதெல்லாம்
கௌரவமாகத்தான்
எடுத்துக் கொள்வான் கருப்பன்!

கம்பத்து வீட்டம்மா
கருப்பனுக்கு
ஆண்டையென்றாலும்…
அவன்
உழைப்புக்காக
கண்ணீர் சிந்தியது உண்டு!

கருப்பனின் வியர்வை
கரைசேர உதவியதை
கம்பத்து வீட்டம்மாள்
கனவிலும் மறவாத
கண்ணியமிக்கவள்!

படிப்பால் உயர்ந்த
கம்பத்துக்காரர் மகன்
கருப்பனை
கம்பத்தின் ஆளாக மட்டுமே
பார்க்க வைத்தது
அவனின் பரம்பரை
இரத்தம்!

இரத்தம் இருக்கட்டும்!
வியர்வை சிந்தினால்தான்
இரத்தம் விலைமதிப்பற்றது
என்ற விபரம்
கற்றவனுக்கும்… கம்பத்துக்காரனுக்கும்
வந்தால்தான்
கருப்பு… வெண்மையாகும்!

Viyarvai Theettu Poem By V Kamaraj வ. காமராஜின் வியர்வைத் தீட்டு கவிதை

வியர்வைத் தீட்டு கவிதை – வ. காமராஜ்




பழைமை வாய்ந்த
புகழ் பெற்றக் கோயில்!
அரசன் கட்டினான்
அப்போதே….
ஆரம்பித்தது தீட்டு!

குப்பன் கோவாலு முருவன்
குள்ளம்மா காளிமா எல்லம்மா….
கூழுக்கோ…..
கணக்கனின் கோபத்துக்கோ
எலும்பு ஒடிய
எச்சில் வறள….
மிச்சமிருந்த உயிரில்
உருவான கோயில்!
கும்பாபிஷேகம்;
குப்பன் என்னக் கேட்டான் சாமி?

கோபுரக்கலசத்தை
மேலே கொண்டுவந்து
தருகிறேன் என்று
உரிமை கேட்டானா?

திர்னூரு…
துளியூண்டு…. திர்னூரு…
கையேந்தி நின்றவனைக்
காரித்துப்பி….
எச்சிலால் அடித்து விரட்டிய கோயில்!

கல்வெட்டில்….
நன்றாக முகந்து பார்த்தால்
இரத்த வாடை வரும்….
ஆராய்ச்சியாளர்கள்
அறிதல் வேண்டும்;
அறிவார்களா?

தலைமுறைகள் மாறியும்
கம்பீரமாக நின்ற
தீட்டுப்படாதக் கோயில்;
அவ்வளவு சக்தி!

சிதிலமடைந்து
திருப்பணிக்கு
திட்டம் தீட்டிய தீட்டே படாத கூட்டம்!

கண்டிப்பாக
காலம் ஓரிரண்டு ஆண்டுகள்…..
ஜமாதான்!

கடைக்கால் எடுக்க வேண்டும்
கட்டுமானத்துக்கு
கல் வேண்டும்
மணல் வேண்டும்
சிமெண்ட் கம்பி
தண்ணீர்….
முட்டுக்கட்டைகள்….
மேஸ்திரி… .
சித்தாள்….. பேராள்….
இப்படியான….
ஆளும் அம்பும் இல்லாமல்
ஆண்டவனாலேயே
ஆலயத்தைக் கட்டிக்கொள்ள முடியாதே!

சரி….
மணலில்…. கல்லில்…. கம்பியில்…. சிமெண்ட்டில் தண்ணீரில்….
சித்தாளில்…. பேராளில்…..
வியர்வைத் தீட்டு இருக்குமே?!
ஏர்வையாகுமா சாமிக்கு?
திருப்பணிக் குழுதான் தீர்மானிக்க வேண்டும்….
இப்போதே!

நாளை
கோயில் கட்டி முடிந்து
கும்பாபிஷேகம் நடக்கும்போது…..
திருனூரு கேட்டு
கையேந்தி வரும்
ஒரு கூட்டம்…..
வியர்வை சிந்திய கூட்டம்,
தீட்டு என்று
கோயிலைச் சாத்திவிடவேண்டாம்!

இப்போது….
திறப்பதற்கும்…..
தீட்டுக்களுக்கு
சக்தியைக் கொடுத்து விட்டான் கடவுள்!