Book Review- T.V.Venkateshwar's Nilavukkul Payanam book review by Saguvarathan. த.வி.வெங்கடேஸ்வரனின் நிலவுக்குள் பயணம் - சகுவரதன்

நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் நிலவுக்குள் பயணம் – சகுவரதன்



ஆதியில் நிலவைக்குறித்த கற்பனைகள் ஆயிரம் இருந்தன. அறிவியல் வளர்ந்த பின் புதிர்கள் மெல்ல அவிழத் தொடங்கின. நிலவில் கால் பதித்தான் மனிதன். விண்கலங்கள் ஏவப்பட்டன. நிலவைப் பிரதி எடுத்தான். குடில் அமைக்க சிந்திக்கிறான். பெரியவர் முதல் குழந்தைகள் வரை எல்லோருக்குமே ஒரு விந்தை கலந்த மகிழ்ச்சியை வழங்கியபடி தொலைவில் புன்னகைக்கிறது நிலவு.

நிலவுக்குள் பயணம் புத்தக பின் அட்டையின் வைர வரிகள். முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கேடஸ்வரன் இப்புத்தகத்தின் ஆசிரியர். ஏராளமான அறிவியல் நூல்களுக்கு சொந்தக்காரர். ஆயிரக்கணக்கான கட்டுரைகளை தந்தவர். அறிவியல் மக்களுக்கே எனும் உயரிய கோட்பாட்டோடு மக்கள் களத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். அறிவொளி இயக்கத்தை தமிழகம் முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். பாரத்ஞான் பிரச்சார் வித்யான் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி.

மொத்தம் 23 கட்டுரைகள். பக்கமோ 175. ரசனைமிக்க தலைப்புகள். சினிமா பாடல் வரிகளையே தலைப்பாக வைத்திருக்கிறார்.
1. நிலவு : பையோடேட்டா
2. வதனமே சந்திர பிரம்மமோ
3. மறைந்திருந்து பார்க்கும்
4.ஆகாயத்தில் நிறம் என்ன ?
5. நீ இல்லாமல் நான் இல்லை
6. நிலவே என்னைத் தொடாதே
7. வெண் நிலவே வெண் நிலவே
8. எங்கே கலிலியோ
9. கன்னத்தில் என்னடி காயம்
10. நிலா காயுதே
11. நிலவின் வயது
12. நிலவில் உள் அமைப்பு
13. சிறுகக்கட்டி பெருக வாழ்
14. என் இனிய பொன் நிலாவே
15. அன்று வந்ததும் அதே நிலா
16. நிலவுக்குப் போவோம்
17.இரண்டாம் தேன் நிலவு
18. சந்திராயன்
19. தொலை உணர்வு
20. சந்திராயன் 100
21. சந்திராயன் 1 ஐ நோக்கி
22. சந்திராயன் தோல்வியா ?
23. நிலவை அடைந்த விண்கலங்கள்.

பார்த்தீர்களா தலைப்புகளை!!!
ஜனரஞ்சகமான கட்டுரைகள் என்று நினைத்தால் அது தவறு.எல்லாமே ஆழமானவை.அதுவும் ஆழ்ந்து உயிர்த்த அறிவியல் கட்டுரைகள். நம் இலக்கியங்களில் நிலாவுக்கு எத்தனை பெயர்களை சூட்டியுள்ளார்கள் தெரியுமா ? சந்திரன், மதி , திங்கள் , தாலைன், அம்புலி, தண்கதிர், பைங்கதிர், புதன் தந்தை, கடகக்கோள், களங்கன், முயற்கூடு, உருக்காந்தன் என சொல்லிக்கொண்டே போகலாம்.

நிலவின் பையோடேட்டாவை முதல் கட்டுரையிலேயே அளித்துவிடுகிறார். அமைவிடம், தண்மை, அடர்த்தி சுழற்சி, வானிலை ,காலநிலை ,ஈர்ப்புச் சக்தி , நிறை என தரவுகளோடு முடித்துக்கொண்டு பிறைத்தோற்றத்தையும் சுழற்சி நாட்களையும் அடுத்த கட்டுரையில் விளக்கமளிக்கிறார்.

அமாவாசைக்கு அமாவாசை 29 1/2 நாட்கள். ஆனால் பூமியைச்சுற்றிவர நிலவுக்கு 27.3 நாட்கள். இது எப்படி என வினாவையெழுப்பி பதில் கூறத்தொடங்குகிறார். சுவாரசியம் கூட அடுத்த கட்டுரைக்கு உடனே நகர்ந்துவிடலாம். அடுத்த கட்டுரை என்னவாக இருக்கும் ! நீங்கள் நினைப்பது சரிதான்.சந்திர கிரகணம்தான். கிரகணத்தைப்பற்றிய அறிவியல் செய்திகளோடு ஆதிகுடிகளை மிரட்டிய கொலம்பஸின் கதையொன்றையும் நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.

கொலம்பஸ் நான்காவது முறையாக அமெரிக்காவிற்கு கடல் வழி பயணம் மேற்கொண்டபோது ஜமைக்கா தீவில் தங்க, அங்கிருந்த ஆதி குடிகள் கப்பல் சிப்பந்திகளின் இம்சைகளை பொறுக்காமல் உணவளிக்க மறுக்க , கொலம்பஸோ கடவுளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். நாளை முதல் நிலா கண்ணுக்குத் தெரியாது என்று மிரட்டியுள்ளார். ஆதிகுடிகளும் பணிந்துபோனதாக ஒரு வரலாற்றை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பூமிலிருந்து பார்க்க வானம் நீலநிறமாய் இருக்கிறது.சரி. நிலாவிலிருந்து பார்க்க வானம் எந்த நிறத்தில் இருக்கும் என்கிற ஆச்சரிய வினாவை முன்னிறுத்தி கட்டுரையாக்கியிருக்கிறார். நிலவு இல்லாவிட்டால் பூமி என்னவாகும் ? பூமியை நிலா கட்டுப்படுத்துகிறதா ? என்கிற கேள்விக்கு அபூர்வமான பல தகவல்களை கூறுகிறார்.

கடலின் ஏற்ற இறக்கம் நிலவின் ஈர்ப்பு விசையால் நிகழ்கிறது என்றும் புவியின் பல நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளதையும் நிலம் வாழ் உயிரின தோற்றம் பூமியின் 24 மணிநேர சுழற்சி போன்றவற்றில் நிலவின் பங்கு குறித்தும் தெளிவாக அறியமுடிகிறது. நிலவின் ஈர்ப்பு விசை இல்லாவிட்டால் பூமியின் சுழற்சி கட்டுப்படுத்த இயலாமல் இரவு பகல் சிலமணிநேரங்களுக்குள்ளாகவே நிகழ்ந்துவிடும் எனவும் அதனால்உயிரின தோற்றம் மட்டுப்படுத்தப்படலாம் எனவும் வாசிக்கும் போது பயம் தொற்றிக் கொள்கிறது.

கலிலியோ ஆய்வுகள், கோபர்நிக்கல் ஆய்வுகள் , நிலவில் காணப்படும் பள்ளம் மேடுகள், விண் கற்கள் மோதிய இடங்கள், நிலவின் வயது போன்ற அரிய தகவல்கள் மளமளவென விழுந்துகொண்டேயிருக்கின்றன.

நிலவின் அமைப்பு என்ன ? நிலவுக்கு கரு உண்டா ? கரு திடநிலையா திரவ நிலையா ? முதலிய பற்பல கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்றும் தொலைநோக்கியில் மட்டுமே ஆய்ந்து விடைகள்தாம் இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பவை என்றும் ரஷ்யா அமெரிக்கா இந்தியா சீனா போன்ற நாடுகள் ஏவிய செயற்கோள்கள் சில புதிர்களுக்கு விடை கொண்டுள்ளன என்றும் தரவுகளுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர். இந்தியா ஏவிய சந்திராயன் சாதித்த சாதனைகள் ஏராளம். சுமார் 300 நாட்களில் சுமார் 3000 முறை நிலவை சுற்றி 70,000 புகைப்படங்களை அனுப்பியுள்ளது. லாலா குழம்பு படிவங்களை சந்திராயன்தான் கண்டுபிடித்தது. நிலவில் கிண்ணக்குழிகள் மட்டுமே நிரம்பியுள்ள தரைப் பகுதி என்ற கூற்றினை மறுதலித்து மேடு பள்ளங்கள் நிரம்பியுள்ள கோள் என்பதை கண்டுபிடித்துள்ளது. டைட்டானியம், மாங்கனிசு , சிலிகான் , அலுமினியம் போன்ற உலோகங்கள் உள்ளதை சந்திராயன்தான் கண்டுபிடித்துள்ளது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அரிய கண்டுபிடிப்பான ” நீர் ” இன்னும் பல தரவுகள் ஆய்வில் உள்ளன. அரிய செய்திகள் , எளிய விளக்கங்கள் , பக்கத்திற்கு பக்கம் புகைப்படங்கள் , விளக்கப்படங்கள் தரவுகள் என சிறப்பான முறையில் வடிவமைப்பு செய்து அச்சிட்டு பதிப்பித்துள்ளது பாரதி புத்தகாலயம். ஆசிரியர்கள் கைக்கொள்ளவேண்டிய புத்தகம் இது. கைக்கொள்வார்களா?

நூலின் பெயர் : நிலவுக்குள் பயணம்
ஆசிரியர் ; த.வி.வெங்கடேஸ்வரன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை ரூ : 90/