வெடித்துச் சிதறிய கனவு கல்லறை நூலகம் – கி.ரமேஷ்
கி.ரமேஷ்
தலிபான் மதவெறியர்களின் பயங்கர வாதச் செயலால் உடல் சிதறி இறந்த இரண்டு இளம் மாணவிகள் இன்று ஒரு குறியீடாக மலர்ந்திருக்கிறார்கள். அன்றும் சரி, இன்றும் சரி, மதவெறியர்களும், ஆணாதிக்க வெறியர்களும் பெண்கள் கல்வியையோ, அறிவாளிகளாகத் திகழ் வதையோ பொறுத்துக் கொண்டதேயில்லை என்பதை வரலாறு காட்டுகிறது. மேலே காணப்படும் இளம் மாணவிகள் ஒன்று விட்ட சகோதரிகள். இருவரும் படிப்பதில் மிகவும் விருப்பமுடையவர்கள். கட்டிட வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் ஆக வேண்டு மென்ற கனவுகளுடன் இருந்தவர்கள். செப்டம் பர் 2022இல் அவர்களுடைய கல்வி மையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவரும் உயிரிழந்து விட்டனர். அவர்களது கனவுகள் சிதறிவிட்டன. கடந்த வருடம் அக்டோபரில் மர்சியா, ஹஜார் முகமதி என்ற அந்த இரண்டு சிறுமிகளின் உடல்களும் காபூலுக்கு வெளியே இருந்த ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. அவர்களது புதைகுழியில் ரோஜா மலர்களுடன் பெரும் சோகத்துடன் அவர்களது குடும்பத்தினர் சில புத்தகங்களையும் வைத்து அஞ்சலி செலுத்தினர். மர்சியாவும் ஹஜாரும் கடந்த செப்டம்பரில் கஜ் கல்வி மையத்தில் குண்டு வெடிப்பில் கொல்லப் பட்ட 53 மாணவர்களுடன் கொல்லப்பட்டனர். தஷ்ட்-இ-பர்ச்சி என்ற அந்தப் பகுதி ஷியா முஸ்லிம்களும் ஹஜாரா சிறுபான்மையினரும் நிரம்பிய பகுதி. மாணவிகள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காகக் கூடியிருந்த போது ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி தன் உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் இளம் பெண்கள். இதற்கு முன்பும் இதே இடத்தில் 2018இல் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 மாணவர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அமைப்பான ஐஎஸ்கேபி இதற்குப் பொறுப்பேற்றது.
2021 ஆகஸ்டில் தலிபான் மீண்டும் ஆட்சியை பிடித்ததிலிருந்து இந்த அமைப்பு ஹசார சில் 13 தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இவற்றில் சுமார் 700 பேர் காயமடைந்தும், மரணமடைந்தும் இருக்கிறார்கள் என்று மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சோவியத் உதவியுடன் ஆட்சி செய்த நஜீ புல்லாவின் ஆட்சியை இப்போது நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. நஜீபுல்லாவின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் சிறப்பாக இருந்தன. படித்தனர், வேலை பார்த்தனர், சுதந்திரமாக இருந்தனர். சோவியத்தின் உதவி யைக் கண்டு பொருமிய அமெரிக்கா அதற்கு எதிராக தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை உருவாக்கி, பயிற்சி கொடுத்து ஏவியது. அவர்கள் நஜீபுல்லாவை அகற்றி, அவர் ஐ.நா. குடியிருப்பில் இருக்கும்போதே இழுத்து வந்து கொடூரமாகக் கொலை செய்தனர். அதே வளர்த்த கடா மார்பில் பாயவும், துள்ளியெழுந்த அமெரிக்கா இருபது ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானில் நுழைந்து ஏராளமான வீரர்களைப் பலி கொடுத்தும், எதுவும் செய்ய முடியாமல் வெளியேறியது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த தலிபான் தனது வேலையைக் காட்டி வருகிறது. மர்சியா, ஹஜார் ஆகியோரின் சவ அடக்கத்துக்கு ஒரு நாளைக்குப் பிறகு மனதுடைந்த அவர்களது மாமா, அவர்களது பொருள்களில் ஏராளமான டயரிகளையும், பத்திரிகைகளையும் கண்டெடுத்தார். அவர்களது எழுத்துக்களால் ஆழமான தாக்கத்துக்குள்ளான அவர் மர்சியாவின் டயரியிலிருந்து சில பக்கங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அவள் வாழ்க்கையில் விரும்பியவற்றின் பட்டியலையும் அவர் பகிர்ந்தார். “என்னுடைய மர்சியாவும், ஹஜாரும் அதிசயமான சிறுமிகள், அவர்கள் வயதுப் பெண்களிடமிருந்து வித்தியாசமானவர்கள். அவர்களது பற்றுறுதி குறித்து மேலும் பல அறிந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படு கிறேன்” என்று அவர் எழுதினார். “அவர்கள் பலருக்கும் ஊக்கமூட்டியிருக்கலாம், இன்னும் அவர்களால் அதைச் செய்ய முடியுமென்று நான் நம்புகிறேன்.” ஹஜாரின் பெற்றோர் அவளது எழுத்துக்களைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பாவிட்டாலும், ஜாஹர் மர்சியாவின் எழுத்தே அவர்கள் இருவரின் ஆவல்களைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த விருப்பப் பட்டியலில் முதலில் இருப்பது அவர்களுக்கு மிகவும் விருப்பமான துருக்கிய-பிரிட்டிஷ் நாவலாசிரியர் எலிஃப் ஷஃபக். நிறைவேறாத அவர்களது பட்டியலில் அடுத்து இருப்பது பாரீசில் ஈஃபில் டவரைப் பார்க்க வேண்டும், இத்தாலியில் பிசா சாப்பிட வேண்டும் என்பவை. தலிபான் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு புத்தகங்கள் வாங்குவது பற்றிய மர்சியாவின் பதிவை சமூக ஊடகத்தில் ஜாஹர் பகிர்ந்தார். மேலும் மர்சியா, ஹஜாரின் புதைகுழிகளில் அவர்களது சகோதர, சகோதரிகள் புத்தகங்களை வைத்ததையும் பகிர்ந்தார்.
இந்தப் பதிவுகள் சமூக ஊடகத்தில் பரவி, தொடரும் வன்முறையால் தனது இளைஞர்களை இழந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டின் உயிர்நரம்பைத் தொட்டன. மர்சியா, ஹஜாரின் அடக்கத்துக்குப் பிறகு அவர்களின் 22 சகோதர, சகோதரிகள் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட அமைதியான, புழுதி படிந்த, மலைமேலிருந்த இடுகாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனர். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் அங்கு பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். பல பெர்சிய மொழிப் புத்தகங்களும், சில ஆங்கிலப் புத்தகங்களும் பல ஆண்டுகள் படித்துக் கிழிந்த புத்தகங்களும், அறிமுகமற்றவர்களால் அங்கு விட்டுச் செல்லப்பட்டிருந்தன. அடுத்த வாரம், மேலும் இரண்டு டஜன் புத்தகங்கள் – ஷஃபாக் எழுதியவை, அமெரிக்க எழுத்தாளர் ரச்சேல் ஹாலிஸ் எழுதியவை, இராக்கிய யாசிதி மனித உரிமைச் செயல்பாட்டாளர் நதியா முராத் எழுதியவை அவற்றில் இருந்தன. “மர்சியா உண்மையிலேயே புத்தகங்களை விரும்பினாள் என்பது எங்களுக்கு எப்போதுமே தெரியும்” என்று ஹஜாரின் மூத்த சகோதரியும், மர்சியாவின் ஒன்று விட்ட சகோதரியுமான 21 வயது இன்சியா குறிப்பிட்டார். ஆனால் மர்சியாவின் டயரியிலிருந்து பல பக்கங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதும், அதைப் படித்த பலரும், “அவர்கள் தம்மைச் சுற்றி புத்தகங்கள் இருப்பதை எப்படி விரும்பினார்கள் என்பதை அறிந்து இந்தப் புத்தகங்களால் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.”
புதியவர்களின் புத்தகங்கள்
மர்சியா தனது தினக்குறிப்பேட்டில் ஃபார்சியி லும், சில சமயம் ஆங்கிலத்திலும் அழகிய கையெழுத்தில் எழுதியிருந்ததை ஜாஹர் அல்ஜசீராவிடம் பகிர்ந்து கொண்டார். சுமார் அரை டஜன் டயரிகள், சில கிழிந்த நோட்டு புத்தகங்கள், மேலும் சில தோல் அட்டை போட்ட டயரிகளிலெல்லாம் நூற்றுக்கணக்கான குறிப்புக்களை மர்சியா எழுதியிருந்தாள். வரலாற்றில் தண்டிக்கப்பட்ட ஹசாரச் மற்றும் பிற ஷியா முஸ்லிம் சமூகங்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையிலும், ஆட்சியில் இருக்கும் தலிபான், பெண்கள் மீது தொடுக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் தனது வலுவை புத்தகங்களுக்கு இடையில் தேடிய உறுதி மிக்க இளம் பெண்ணை அந்தக் குறிப்புகள் வெளிப்படுத்தின. தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, அது உயர்நிலைப் பள்ளிகளை மூடிவிட் டது. அதனால் சுமார் 3 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் வேலை செய்யும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களது சுதந்திரத்தின் மீதும் பல கட்டுப்பாடுகளை விதித்தது தலிபான். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டுமென்றால் ஒரு ஆண் உறவினர் கட்டாயம் கூட வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த இளம்பருவப்பெண் ஒரு புத்தகக் கடைக்குச் சென்று மர்சியாவும், ஹஜாரும் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்த ஷஃபாக் எழுதிய ஒரு கட்டிட வடிவமைப்பாளப் பயிலுனர் என்ற புத்தகத்தை வாங்கினார். “நான் எந்த அளவுக்குப் புத்தகங்களை நேசிக்கிறேன் என்பதை இன்று புரிந்து கொண்டேன். மக்கள் புத்தகங்களைப் பார்க்கும் போதும், படிக்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சியைக் காண்பதை விரும்புகிறேன்” என்று அவள் எழுதினாள். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் பயன்படுத்தாத ஒரு புத்தக அலமாரியைக் கொண்டு வந்து அதை சுத்தம் செய்து அந்தச் சிறுமிகள் விரும்பிய இளஞ்சிவப்பு வண்ணத்தை அதில் தீட்டினார்.
ஒரு ஆஃப்கானிய வரைகலை நிபுணரான ஃபாத்திமா கைருல்லாஹி அந்தச் சிறுமிகளின் மரணத்துக்குப் பிறகு வலிமை மற்றும் விரிதிறனின் அடையாளமான பைன் மரத்துடன் அவர்கள் இருக்கும்படி ஒரு சித்திரத்தை வடிவமைத்தார். அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். குடும்பம் அவர்கள் பெயரில் ஒரு நூலகத்தை அமைக்கும் முடிவை எடுத்தவுடன் அவரைத் தொடர்பு கொண்டது. அவரும் அந்த நூலக அறையின் நடுவில் அந்தச் சித்திரத்தை அமைக்க ஒப்புக் கொண்டார். அக்டோபர் இறுதியில் அந்த உறுதியான நூலகப் பெட்டி இடுகாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களது புதைகுழிக்கு அருகில் வைக்கப்பட்டது. அந்த அலமாரியில் சுமார் இரண்டு டஜன் புத்தகங்கள் கண்ணாடிப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. யாரும் அவற்றை எடுத்துக் கொள்ளும்படி அந்தக் கதவுகள் பூட்டப் படாமல் வைக்கப்பட்டன. மர்சியாவும், ஹஜாரும் ஒரே வீட்டில் பல குடும்பங்களுடன் வசித்தவர்கள். அவர்களது தமது சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்ட அறையில் புத்தகங்கள் நிரம்பிக்கிடந்தன. “அவர்கள் புத்தகங்களை எந்த அளவுக்கு விரும்பினர் என்பது எங்களுக்குத் தெரிந்ததால், நாங்கள் இந்த நூலகத்தை அமைத் தோம்” என்று இன்சியா ஜாஹர், பிற உறவினர் களுடன் அமர்ந்து விளக்குகிறார். பல குடும்பங்கள் பகிர்ந்து கொண்ட அந்த வீட்டின் ஒரு குடும்ப அறையில் அவர் பாரம்பரிய ஆஃப்கானிய தரை மெத்தையில் அமர்ந்து பேசுகிறார். “அவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் இது வைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று விம்மலுடன் அவர் கூறுகிறார். அவர்களது வாழ் வில் அதைத்தான் அவர்கள் விரும்பினார்கள். “ஹஜார் தனது டயரியில் எழுதி இருக்கிறாள், “நான் படிக்கும் போது மிகவும் நன்றாக உணர்கிறேன். அந்தக் கதையின் ஒரு பாத்திரமாகவே உணர்கிறேன்.”
எப்போதும் கல்வி
மர்சியாவும், ஹஜாரும் ஒன்று விட்ட சகோதரிகள் மட்டுமல்ல – இணை பிரியாத தோழிகள். அவர்கள் இருவரும் மதித்த ஆசிரியர்களைப் போல் வடிவமைப்பாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கனவு கண்டனர். “நாங்கள் பெரும்பாலோரும் எங்கள் பள்ளி புத்தகங்களை மட்டுமே படிப்போம். ஆனால் மர்சியும் ஹஜாரும் வித்தியாசமானவர்கள். அவர்கள் ஏராளமான பல்வகை புத்தகங்களை அறிவைத் தேடித் தொடர்ந்து படிப்பார்கள்.” இன்சியா சோகச் சிரிப்புடன் நினைவு கூர்கிறார். “நாங்கள் பள்ளியில் படித்ததைக் காட்டிலும் அவர்கள் அதிகம் கற்க விரும்பினார்கள்.” இருவரும் புனைவுகளை விரும்பினர் என்று 28 வயது அத்தை நூரியா, ஜாஹரின் சகோதரி கூறுகிறார். அவர் மங்கலான இளஞ் சிவப்பு உடையும், அரக்கு நிற தலைமறைப்பும் அணிந்து, இன்சியாவுடன் அமர்ந்து பேசுகிறார். “ஆனால் இருவருக்கும் ஊக்குவிக்கும் புத்தகங்களும் மிகவும் பிடிக்கும். தலிபான், பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை மூடியபோதும் அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை இருந்ததற்கு காரணம் அந்தப் புத்தகங்கள்தான் என்று நினைக்கிறேன். அவை அவர்களை வலுவான பெண்களாக, உயர்ந்த இலக்குகளை நிர்ணயிக்கவும், தமது இலக்குகளை அடைய வேலை செய்யவும் ஊக்குவித்தன” என்று விளக்குகிறார். “இந்தப் புத்தகங்கள் பாதகமான, கட்டுப்பாடுள்ள நிலையிலும் அவர்களை வலுப்படுத்தின என்பது என் நம்பிக்கை. அவை தமது இலக்குகளை விட்டுவிடாமல் தொடர்ந்து போராடக் கற்றுக் கொடுத்தன” என்று மருத்துவ மாணவியான நூரியா கூறுகிறார். அவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அக்குடும்பத்தின் முதல் பெண். “அந்தப் பெண்களில் சிலர் இனிப் பள்ளி செல்ல மாட்டார்கள் என்று எங்கள் குடும்பத்துச் சிறுமிகள் அறிந்ததும், அவர்கள் மனமொடிந்தனர்” என்று ஜாஹர் கூறுகிறார். அவரும் நூரியாவும் அவர்களை தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருநாள் மாலை கூட்டினர். “நான் அவர்களுக்கு ஒரு கேக் வாங்கிக் கொடுத்து, அவர்கள் விட்டுக் கொடுக்காமல் எப்படி இருக்க வேண்டுமென்று நீண்ட நேரம் பேசினேன். அவர்கள் வலுவாக இருக்க வேண்டும், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன்” என்றார் அவர். “நான் அந்த நாட்களில் அவர்கள் எழுதிய டயரிக் குறிப்புகளைப் படித்த போது, புதிய கட்டுப்பாடுகளையும், சவால்களையும் தாண்டி எழுச்சி கொள்ள எப்படி ஊக்கம் பெற்றிருந்தனர் என்பதை அறிந்தேன். அவர்கள் தமது கல்வியைத் தொடர விரும்பினர், தமது எதிர் காலத்தைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள நம்பிக்கையுடன் இருந்தனர்” என்று நூரியா கூறினார்.
‘எந்த சாக்குப்போக்கும் இல்லை’
அவர்கள் உயிருடன் இருந்த போது இருவரும் பல்கலைக்கழகம் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஊரடங்கு காரணமாக அவர்களது உயர்நிலைப் பள்ளி முடிவுகள் தாமதமான போது, ‘மர்சியாவும், ஹஜாரும்’ பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது என்று முடிவெடுத்தனர். அதற்கு அவர்களால் அப்போது நேரம் ஒதுக்க முடிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மர்சியா எழுதினாள், ‘நான் நேற்றும், கடந்த வாரமும் கடுமையாக முயல வேண்டியிருந்தது.. நான் எனது எதிர்காலத்தையும், என் வாழ்க்கையையும் மாற்ற ஒரு முடிவை நான் எடுத்தாக வேண்டும். இது போன்ற ஒரு நெருக்கடி நிலைமையில் அதை வெல்ல எடுக்கக் கூடிய ஒரே வழி படிப்பது மட்டும்தான்.” அவள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேற வெளிநாட்டில் உதவித்தொகை பெறுவதற்கு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதை முதல் படியாக நினைத்தாள். “நான் என்னை நம்ப வேண்டும், கடவுள் எனக்கு உதவுவார்” நேரம்: 12.30 நள்ளிரவு. கடவுளே!! நானும் ஹஜாரும் அடுத்த ஆண்டு இதே நேரம், பிப்ரவரி 4 அன்று ஆஃப்கானிஸ்தானில் இருக்கக் கூடாது.” தேதி குறிப்பிடாத ஒரு குறிப்பில், “மின்சாரம் இருக்கிறதோ, இல்லையோ, தனது படிப்பைத் தொடர வேண்டிய தேவை குறித்து எழுதுகிறாள்.
அவர்களது முதல் சோதனைத் தேர்வில் மர்ஜியாவும் ஹஜாரும் 50ம், 51ம் பெற்றனர். மர்சியா வருத்தமடைந்தாள். அடுத்த தேர்வில் 60 மதிப்பெண்ணை இலக்காக நிர்ணயித்தாள். “அருமை, மர்சியா!”. அவள் எழுதிப் பெற்ற மதிப்பெண் 61. ஜாஹர் அவள் 82 மதிப்பெண் பெறும்வரை எப்படி முன்னேறினாள் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
அந்த மதிப்பெண்ணைத் தொடர்ந்து பெற விரும்பினாள். ஆனால்…” அவரது குரல் கம்முகிறது. “மர்சியாவும் ஹஜாரும் நிலைமை மோசமடைந்த போது தீர்வுக்காகத் தமது கல்வியின் பாலும், புத்தகங்களின் பாலும் திரும்பினர். பல்கலைக் கழகம் செல்லும் நம்பிக்கையே இல்லை என்று தோன்றிய போதும், சிலர் அவர்கள் நுழைவுத் தேர்விலேயே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறிய போதும், தொடர்ந்து அவர்கள் தாமே படிக்கவும், கற்கவும் செய்தனர் என்று மர்சியாவின் மூத்த சகோதரியான 22 வயது பர்வானா கூறுகிறார். “அவர்கள் எங்களை ஊக்குவித்தனர்”. ஆனால் அவர்கள் படித்த அனைத்தும் உதவிடவில்லை. ஆஃப்கானிஸ்தானில் இருந்த ஸ்திரமற்ற நிலைமையில், யாசிதி செயல்பாட்டாளர் நதியா முராத், ஐஎஸ்ஐஎல்–ஆல் கைப்பற்றப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுப் பிறகு தப்பியது குறித்து எழுதியதில் 50 பக்கங்களைப் படித்த பிறகு, தனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது என்று மர்சியா குறிப்பிட்டாள். பின்னால் அதை முடித்தாலும், இப்போது அதைத் தள்ளி வைத்து விட்டாள். 2022 பிற்பகுதியில், அவர்கள் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு தலிபான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்கத் தடை விதித்தது. வரும் நுழைவுத் தேர்வுகளில் தனியார் கல்லூரிகள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று அவற்றுக்கு உத்தரவிட்டது.
‘மிகுந்த வலி’
தலிபான் கட்டுப்பாட்டுக்கு முன்பே மர்சியா, ஹஜார் குடும்பத்தில் பெண்கள் கல்வி பெறுவது எளிதாக இருக்கவில்லை. “நாங்கள் அதற்குப் போராட வேண்டியிருந்தது” என்று நூரியா கூறுகிறார். “எங்கள் பெற்றோர் கல்வியறிவற்றவர்கள். அவர்கள் சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. சிறுவர்கள் சிறுமிகளுக்கு மேலாக மதிக்கப்பட்டனர். ஒரு வளரிளம் பருவப் பெண்ணான ஹஜாரின் மூத்த சகோதரி தனது திருமணத்துக்குப் பிறகு பள்ளிக்குச் செல்வதிலிருந்து நிறுத்தப்பட்டதைப் பகிர்ந்து கொண்டார். இதை எதிர்த்து அவர்களது குடும்பப் பெண்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். ஜாஹரும், மற்றவர்களும் குடும்பத்திலிருந்து பெண்களைப் படிக்க வைக்கப் பெரிய அளவில் போராடி இருக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் கடினம் என்றாலும், மர்சியாவின் பெற்றோரும், ஹஜாரின் பெற்றோரும் அவர்களுக்கு ஆதரவளித்துப் படிக்க வைத்தனர். இன்று தமது இழப்பைத் தாங்க முடியாமல் துன்புறுகின்றனர். இந்தக் கல்லறை நூலகத்தைக் கட்டுவதன் மூலம் அந்தச் சிறுமிகளின் கனவை எப்படியாவது ஓரளவுக்கு நிறைவேற்ற முடியுமா என்று கண்ணீருடன் அந்தக் குடும்பம் முயல்கிறது. ஆஃப்கானிஸ்தானத்தை விட்டுச் செல்லாமல் அதன் நல்ல, அமைதியான எதிர்காலத்துக்காகப் போராடுவது என்று குடும்பம் முடிவெடுத்துள்ளது. மர்சியா, ஹஜாரின் தியாகம் எதிர்கால மாற்றத்துக்கு வினையூக்கியாக இருக்கும் என்று நம்புகின்றனர். இந்தக் கல்லறை நகரத்தை விட்டுத் தூரத்தில் இருந்தாலும், காரின் மூலமே செல்லக் கூடியதாக இருந்தாலும், அங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மர்சியாவும், ஹஜாரும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த கற்றல், படித்தலின் முக்கியத்துவத்தை ஏராளமானோர் இன்று பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களது அண்டை வீட்டார் ஒருவர் அந்த நூலகத்துக்குச் சென்று விட்டு ஒரு தன்னம்பிக்கை புத்தகத்துடன் திரும்பினார். பின்னர் வீட்டுக்கு வந்து அது எந்த அளவுக்கு மேலும் படிக்கத் தனக்கு ஊக்கமளித்தது என்று கூறினார். பிப்ரவரியில் இதே போன்ற இன்னொரு நூலகத்தைக் குடும்பம் அமைத்தது. அதில் நன்கொடையாகப் பெற்ற30 நூல்கள் வைக்கப் பட்டன. மர்சியாவும், ஹஜாரும் மிகவும் விரும்பிய நாவல்களும் அதில் அடக்கம். கண்மணிகளே உறங்குங்கள். உங்களது தியாகம் ஒரு பெரிய மாற்றத்தைச் சாதிக்கத் தொடங்கியிருக்கிறது. மடிக மதவெறி. மடிக ஆணாதிக்கம்.
கட்டுரை ஆதாரம்: அல்ஜசீரா
நன்றி: தீக்கதிர்