வெடித்துச் சிதறிய கனவு கல்லறை நூலகம் – கி.ரமேஷ்

வெடித்துச் சிதறிய கனவு கல்லறை நூலகம் – கி.ரமேஷ்



கி.ரமேஷ்

தலிபான் மதவெறியர்களின் பயங்கர வாதச் செயலால் உடல் சிதறி இறந்த இரண்டு இளம் மாணவிகள் இன்று ஒரு குறியீடாக மலர்ந்திருக்கிறார்கள். அன்றும் சரி, இன்றும் சரி, மதவெறியர்களும், ஆணாதிக்க வெறியர்களும் பெண்கள் கல்வியையோ, அறிவாளிகளாகத் திகழ் வதையோ பொறுத்துக் கொண்டதேயில்லை என்பதை வரலாறு காட்டுகிறது. மேலே காணப்படும் இளம் மாணவிகள் ஒன்று விட்ட சகோதரிகள். இருவரும் படிப்பதில் மிகவும் விருப்பமுடையவர்கள். கட்டிட வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் ஆக வேண்டு மென்ற கனவுகளுடன் இருந்தவர்கள். செப்டம் பர் 2022இல் அவர்களுடைய கல்வி மையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவரும் உயிரிழந்து விட்டனர். அவர்களது கனவுகள் சிதறிவிட்டன. கடந்த வருடம் அக்டோபரில் மர்சியா, ஹஜார் முகமதி என்ற அந்த இரண்டு சிறுமிகளின் உடல்களும் காபூலுக்கு வெளியே இருந்த ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. அவர்களது புதைகுழியில் ரோஜா மலர்களுடன் பெரும் சோகத்துடன் அவர்களது குடும்பத்தினர் சில புத்தகங்களையும் வைத்து அஞ்சலி செலுத்தினர். மர்சியாவும் ஹஜாரும் கடந்த செப்டம்பரில் கஜ் கல்வி மையத்தில் குண்டு வெடிப்பில் கொல்லப் பட்ட 53 மாணவர்களுடன் கொல்லப்பட்டனர். தஷ்ட்-இ-பர்ச்சி என்ற அந்தப் பகுதி ஷியா முஸ்லிம்களும் ஹஜாரா சிறுபான்மையினரும் நிரம்பிய பகுதி. மாணவிகள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காகக் கூடியிருந்த போது ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி தன் உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் இளம் பெண்கள். இதற்கு முன்பும் இதே இடத்தில் 2018இல் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 மாணவர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அமைப்பான ஐஎஸ்கேபி இதற்குப் பொறுப்பேற்றது.

2021 ஆகஸ்டில் தலிபான் மீண்டும் ஆட்சியை பிடித்ததிலிருந்து இந்த அமைப்பு ஹசார சில் 13 தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இவற்றில் சுமார் 700 பேர் காயமடைந்தும், மரணமடைந்தும் இருக்கிறார்கள் என்று மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சோவியத் உதவியுடன் ஆட்சி செய்த நஜீ புல்லாவின் ஆட்சியை இப்போது நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. நஜீபுல்லாவின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் சிறப்பாக இருந்தன. படித்தனர், வேலை பார்த்தனர், சுதந்திரமாக இருந்தனர். சோவியத்தின் உதவி யைக் கண்டு பொருமிய அமெரிக்கா அதற்கு எதிராக தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை உருவாக்கி, பயிற்சி கொடுத்து ஏவியது. அவர்கள் நஜீபுல்லாவை அகற்றி, அவர் ஐ.நா. குடியிருப்பில் இருக்கும்போதே இழுத்து வந்து கொடூரமாகக் கொலை செய்தனர். அதே வளர்த்த கடா மார்பில் பாயவும், துள்ளியெழுந்த அமெரிக்கா இருபது ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானில் நுழைந்து ஏராளமான வீரர்களைப் பலி கொடுத்தும், எதுவும் செய்ய முடியாமல் வெளியேறியது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த தலிபான் தனது வேலையைக் காட்டி வருகிறது. மர்சியா, ஹஜார் ஆகியோரின் சவ அடக்கத்துக்கு ஒரு நாளைக்குப் பிறகு மனதுடைந்த அவர்களது மாமா, அவர்களது பொருள்களில் ஏராளமான டயரிகளையும், பத்திரிகைகளையும் கண்டெடுத்தார். அவர்களது எழுத்துக்களால் ஆழமான தாக்கத்துக்குள்ளான அவர் மர்சியாவின் டயரியிலிருந்து சில பக்கங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அவள் வாழ்க்கையில் விரும்பியவற்றின் பட்டியலையும் அவர் பகிர்ந்தார். “என்னுடைய மர்சியாவும், ஹஜாரும் அதிசயமான சிறுமிகள், அவர்கள் வயதுப் பெண்களிடமிருந்து வித்தியாசமானவர்கள். அவர்களது பற்றுறுதி குறித்து மேலும் பல அறிந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படு கிறேன்” என்று அவர் எழுதினார். “அவர்கள் பலருக்கும் ஊக்கமூட்டியிருக்கலாம், இன்னும் அவர்களால் அதைச் செய்ய முடியுமென்று நான் நம்புகிறேன்.” ஹஜாரின் பெற்றோர் அவளது எழுத்துக்களைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பாவிட்டாலும், ஜாஹர் மர்சியாவின் எழுத்தே அவர்கள் இருவரின் ஆவல்களைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த விருப்பப் பட்டியலில் முதலில் இருப்பது அவர்களுக்கு மிகவும் விருப்பமான துருக்கிய-பிரிட்டிஷ் நாவலாசிரியர் எலிஃப் ஷஃபக். நிறைவேறாத அவர்களது பட்டியலில் அடுத்து இருப்பது பாரீசில் ஈஃபில் டவரைப் பார்க்க வேண்டும், இத்தாலியில் பிசா சாப்பிட வேண்டும் என்பவை. தலிபான் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு புத்தகங்கள் வாங்குவது பற்றிய மர்சியாவின் பதிவை சமூக ஊடகத்தில் ஜாஹர் பகிர்ந்தார். மேலும் மர்சியா, ஹஜாரின் புதைகுழிகளில் அவர்களது சகோதர, சகோதரிகள் புத்தகங்களை வைத்ததையும் பகிர்ந்தார்.

இந்தப் பதிவுகள் சமூக ஊடகத்தில் பரவி, தொடரும் வன்முறையால் தனது இளைஞர்களை இழந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டின் உயிர்நரம்பைத் தொட்டன. மர்சியா, ஹஜாரின் அடக்கத்துக்குப் பிறகு அவர்களின் 22 சகோதர, சகோதரிகள் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட அமைதியான, புழுதி படிந்த, மலைமேலிருந்த இடுகாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனர். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் அங்கு பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். பல பெர்சிய மொழிப் புத்தகங்களும், சில ஆங்கிலப் புத்தகங்களும் பல ஆண்டுகள் படித்துக் கிழிந்த புத்தகங்களும், அறிமுகமற்றவர்களால் அங்கு விட்டுச் செல்லப்பட்டிருந்தன. அடுத்த வாரம், மேலும் இரண்டு டஜன் புத்தகங்கள் – ஷஃபாக் எழுதியவை, அமெரிக்க எழுத்தாளர் ரச்சேல் ஹாலிஸ் எழுதியவை, இராக்கிய யாசிதி மனித உரிமைச் செயல்பாட்டாளர் நதியா முராத் எழுதியவை அவற்றில் இருந்தன. “மர்சியா உண்மையிலேயே புத்தகங்களை விரும்பினாள் என்பது எங்களுக்கு எப்போதுமே தெரியும்” என்று ஹஜாரின் மூத்த சகோதரியும், மர்சியாவின் ஒன்று விட்ட சகோதரியுமான 21 வயது இன்சியா குறிப்பிட்டார். ஆனால் மர்சியாவின் டயரியிலிருந்து பல பக்கங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதும், அதைப் படித்த பலரும், “அவர்கள் தம்மைச் சுற்றி புத்தகங்கள் இருப்பதை எப்படி விரும்பினார்கள் என்பதை அறிந்து இந்தப் புத்தகங்களால் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.”

புதியவர்களின் புத்தகங்கள்

மர்சியா தனது தினக்குறிப்பேட்டில் ஃபார்சியி லும், சில சமயம் ஆங்கிலத்திலும் அழகிய கையெழுத்தில் எழுதியிருந்ததை ஜாஹர் அல்ஜசீராவிடம் பகிர்ந்து கொண்டார். சுமார் அரை டஜன் டயரிகள், சில கிழிந்த நோட்டு புத்தகங்கள், மேலும் சில தோல் அட்டை போட்ட டயரிகளிலெல்லாம் நூற்றுக்கணக்கான குறிப்புக்களை மர்சியா எழுதியிருந்தாள். வரலாற்றில் தண்டிக்கப்பட்ட ஹசாரச் மற்றும் பிற ஷியா முஸ்லிம் சமூகங்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையிலும், ஆட்சியில் இருக்கும் தலிபான், பெண்கள் மீது தொடுக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் தனது வலுவை புத்தகங்களுக்கு இடையில் தேடிய உறுதி மிக்க இளம் பெண்ணை அந்தக் குறிப்புகள் வெளிப்படுத்தின. தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, அது உயர்நிலைப் பள்ளிகளை மூடிவிட் டது. அதனால் சுமார் 3 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் வேலை செய்யும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களது சுதந்திரத்தின் மீதும் பல கட்டுப்பாடுகளை விதித்தது தலிபான். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டுமென்றால் ஒரு ஆண் உறவினர் கட்டாயம் கூட வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த இளம்பருவப்பெண் ஒரு புத்தகக் கடைக்குச் சென்று மர்சியாவும், ஹஜாரும் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்த ஷஃபாக் எழுதிய ஒரு கட்டிட வடிவமைப்பாளப் பயிலுனர் என்ற புத்தகத்தை வாங்கினார். “நான் எந்த அளவுக்குப் புத்தகங்களை நேசிக்கிறேன் என்பதை இன்று புரிந்து கொண்டேன். மக்கள் புத்தகங்களைப் பார்க்கும் போதும், படிக்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சியைக் காண்பதை விரும்புகிறேன்” என்று அவள் எழுதினாள். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் பயன்படுத்தாத ஒரு புத்தக அலமாரியைக் கொண்டு வந்து அதை சுத்தம் செய்து அந்தச் சிறுமிகள் விரும்பிய இளஞ்சிவப்பு வண்ணத்தை அதில் தீட்டினார்.

ஒரு ஆஃப்கானிய வரைகலை நிபுணரான ஃபாத்திமா கைருல்லாஹி அந்தச் சிறுமிகளின் மரணத்துக்குப் பிறகு வலிமை மற்றும் விரிதிறனின் அடையாளமான பைன் மரத்துடன் அவர்கள் இருக்கும்படி ஒரு சித்திரத்தை வடிவமைத்தார். அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். குடும்பம் அவர்கள் பெயரில் ஒரு நூலகத்தை அமைக்கும் முடிவை எடுத்தவுடன் அவரைத் தொடர்பு கொண்டது. அவரும் அந்த நூலக அறையின் நடுவில் அந்தச் சித்திரத்தை அமைக்க ஒப்புக் கொண்டார். அக்டோபர் இறுதியில் அந்த உறுதியான நூலகப் பெட்டி இடுகாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களது புதைகுழிக்கு அருகில் வைக்கப்பட்டது. அந்த அலமாரியில் சுமார் இரண்டு டஜன் புத்தகங்கள் கண்ணாடிப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. யாரும் அவற்றை எடுத்துக் கொள்ளும்படி அந்தக் கதவுகள் பூட்டப் படாமல் வைக்கப்பட்டன. மர்சியாவும், ஹஜாரும் ஒரே வீட்டில் பல குடும்பங்களுடன் வசித்தவர்கள். அவர்களது தமது சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்ட அறையில் புத்தகங்கள் நிரம்பிக்கிடந்தன. “அவர்கள் புத்தகங்களை எந்த அளவுக்கு விரும்பினர் என்பது எங்களுக்குத் தெரிந்ததால், நாங்கள் இந்த நூலகத்தை அமைத் தோம்” என்று இன்சியா ஜாஹர், பிற உறவினர் களுடன் அமர்ந்து விளக்குகிறார். பல குடும்பங்கள் பகிர்ந்து கொண்ட அந்த வீட்டின் ஒரு குடும்ப அறையில் அவர் பாரம்பரிய ஆஃப்கானிய தரை மெத்தையில் அமர்ந்து பேசுகிறார். “அவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் இது வைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று விம்மலுடன் அவர் கூறுகிறார். அவர்களது வாழ் வில் அதைத்தான் அவர்கள் விரும்பினார்கள். “ஹஜார் தனது டயரியில் எழுதி இருக்கிறாள், “நான் படிக்கும் போது மிகவும் நன்றாக உணர்கிறேன். அந்தக் கதையின் ஒரு பாத்திரமாகவே உணர்கிறேன்.”

எப்போதும் கல்வி

மர்சியாவும், ஹஜாரும் ஒன்று விட்ட சகோதரிகள் மட்டுமல்ல – இணை பிரியாத தோழிகள். அவர்கள் இருவரும் மதித்த ஆசிரியர்களைப் போல் வடிவமைப்பாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கனவு கண்டனர். “நாங்கள் பெரும்பாலோரும் எங்கள் பள்ளி புத்தகங்களை மட்டுமே படிப்போம். ஆனால் மர்சியும் ஹஜாரும் வித்தியாசமானவர்கள். அவர்கள் ஏராளமான பல்வகை புத்தகங்களை அறிவைத் தேடித் தொடர்ந்து படிப்பார்கள்.” இன்சியா சோகச் சிரிப்புடன் நினைவு கூர்கிறார். “நாங்கள் பள்ளியில் படித்ததைக் காட்டிலும் அவர்கள் அதிகம் கற்க விரும்பினார்கள்.” இருவரும் புனைவுகளை விரும்பினர் என்று 28 வயது அத்தை நூரியா, ஜாஹரின் சகோதரி கூறுகிறார். அவர் மங்கலான இளஞ் சிவப்பு உடையும், அரக்கு நிற தலைமறைப்பும் அணிந்து, இன்சியாவுடன் அமர்ந்து பேசுகிறார். “ஆனால் இருவருக்கும் ஊக்குவிக்கும் புத்தகங்களும் மிகவும் பிடிக்கும். தலிபான், பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை மூடியபோதும் அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை இருந்ததற்கு காரணம் அந்தப் புத்தகங்கள்தான் என்று நினைக்கிறேன். அவை அவர்களை வலுவான பெண்களாக, உயர்ந்த இலக்குகளை நிர்ணயிக்கவும், தமது இலக்குகளை அடைய வேலை செய்யவும் ஊக்குவித்தன” என்று விளக்குகிறார். “இந்தப் புத்தகங்கள் பாதகமான, கட்டுப்பாடுள்ள நிலையிலும் அவர்களை வலுப்படுத்தின என்பது என் நம்பிக்கை. அவை தமது இலக்குகளை விட்டுவிடாமல் தொடர்ந்து போராடக் கற்றுக் கொடுத்தன” என்று மருத்துவ மாணவியான நூரியா கூறுகிறார். அவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அக்குடும்பத்தின் முதல் பெண். “அந்தப் பெண்களில் சிலர் இனிப் பள்ளி செல்ல மாட்டார்கள் என்று எங்கள் குடும்பத்துச் சிறுமிகள் அறிந்ததும், அவர்கள் மனமொடிந்தனர்” என்று ஜாஹர் கூறுகிறார். அவரும் நூரியாவும் அவர்களை தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருநாள் மாலை கூட்டினர். “நான் அவர்களுக்கு ஒரு கேக் வாங்கிக் கொடுத்து, அவர்கள் விட்டுக் கொடுக்காமல் எப்படி இருக்க வேண்டுமென்று நீண்ட நேரம் பேசினேன். அவர்கள் வலுவாக இருக்க வேண்டும், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன்” என்றார் அவர். “நான் அந்த நாட்களில் அவர்கள் எழுதிய டயரிக் குறிப்புகளைப் படித்த போது, புதிய கட்டுப்பாடுகளையும், சவால்களையும் தாண்டி எழுச்சி கொள்ள எப்படி ஊக்கம் பெற்றிருந்தனர் என்பதை அறிந்தேன். அவர்கள் தமது கல்வியைத் தொடர விரும்பினர், தமது எதிர் காலத்தைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள நம்பிக்கையுடன் இருந்தனர்” என்று நூரியா கூறினார்.

‘எந்த சாக்குப்போக்கும் இல்லை’

அவர்கள் உயிருடன் இருந்த போது இருவரும் பல்கலைக்கழகம் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஊரடங்கு காரணமாக அவர்களது உயர்நிலைப் பள்ளி முடிவுகள் தாமதமான போது, ‘மர்சியாவும், ஹஜாரும்’ பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது என்று முடிவெடுத்தனர். அதற்கு அவர்களால் அப்போது நேரம் ஒதுக்க முடிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மர்சியா எழுதினாள், ‘நான் நேற்றும், கடந்த வாரமும் கடுமையாக முயல வேண்டியிருந்தது.. நான் எனது எதிர்காலத்தையும், என் வாழ்க்கையையும் மாற்ற ஒரு முடிவை நான் எடுத்தாக வேண்டும். இது போன்ற ஒரு நெருக்கடி நிலைமையில் அதை வெல்ல எடுக்கக் கூடிய ஒரே வழி படிப்பது மட்டும்தான்.” அவள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேற வெளிநாட்டில் உதவித்தொகை பெறுவதற்கு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதை முதல் படியாக நினைத்தாள். “நான் என்னை நம்ப வேண்டும், கடவுள் எனக்கு உதவுவார்” நேரம்: 12.30 நள்ளிரவு. கடவுளே!! நானும் ஹஜாரும் அடுத்த ஆண்டு இதே நேரம், பிப்ரவரி 4 அன்று ஆஃப்கானிஸ்தானில் இருக்கக் கூடாது.” தேதி குறிப்பிடாத ஒரு குறிப்பில், “மின்சாரம் இருக்கிறதோ, இல்லையோ, தனது படிப்பைத் தொடர வேண்டிய தேவை குறித்து எழுதுகிறாள்.

அவர்களது முதல் சோதனைத் தேர்வில் மர்ஜியாவும் ஹஜாரும் 50ம், 51ம் பெற்றனர். மர்சியா வருத்தமடைந்தாள். அடுத்த தேர்வில் 60 மதிப்பெண்ணை இலக்காக நிர்ணயித்தாள். “அருமை, மர்சியா!”. அவள் எழுதிப் பெற்ற மதிப்பெண் 61. ஜாஹர் அவள் 82 மதிப்பெண் பெறும்வரை எப்படி முன்னேறினாள் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த மதிப்பெண்ணைத் தொடர்ந்து பெற விரும்பினாள். ஆனால்…” அவரது குரல் கம்முகிறது. “மர்சியாவும் ஹஜாரும் நிலைமை மோசமடைந்த போது தீர்வுக்காகத் தமது கல்வியின் பாலும், புத்தகங்களின் பாலும் திரும்பினர். பல்கலைக் கழகம் செல்லும் நம்பிக்கையே இல்லை என்று தோன்றிய போதும், சிலர் அவர்கள் நுழைவுத் தேர்விலேயே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறிய போதும், தொடர்ந்து அவர்கள் தாமே படிக்கவும், கற்கவும் செய்தனர் என்று மர்சியாவின் மூத்த சகோதரியான 22 வயது பர்வானா கூறுகிறார். “அவர்கள் எங்களை ஊக்குவித்தனர்”. ஆனால் அவர்கள் படித்த அனைத்தும் உதவிடவில்லை. ஆஃப்கானிஸ்தானில் இருந்த ஸ்திரமற்ற நிலைமையில், யாசிதி செயல்பாட்டாளர் நதியா முராத், ஐஎஸ்ஐஎல்–ஆல் கைப்பற்றப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுப் பிறகு தப்பியது குறித்து எழுதியதில் 50 பக்கங்களைப் படித்த பிறகு, தனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது என்று மர்சியா குறிப்பிட்டாள். பின்னால் அதை முடித்தாலும், இப்போது அதைத் தள்ளி வைத்து விட்டாள். 2022 பிற்பகுதியில், அவர்கள் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு தலிபான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்கத் தடை விதித்தது. வரும் நுழைவுத் தேர்வுகளில் தனியார் கல்லூரிகள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று அவற்றுக்கு உத்தரவிட்டது.

‘மிகுந்த வலி’
தலிபான் கட்டுப்பாட்டுக்கு முன்பே மர்சியா, ஹஜார் குடும்பத்தில் பெண்கள் கல்வி பெறுவது எளிதாக இருக்கவில்லை. “நாங்கள் அதற்குப் போராட வேண்டியிருந்தது” என்று நூரியா கூறுகிறார். “எங்கள் பெற்றோர் கல்வியறிவற்றவர்கள். அவர்கள் சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. சிறுவர்கள் சிறுமிகளுக்கு மேலாக மதிக்கப்பட்டனர். ஒரு வளரிளம் பருவப் பெண்ணான ஹஜாரின் மூத்த சகோதரி தனது திருமணத்துக்குப் பிறகு பள்ளிக்குச் செல்வதிலிருந்து நிறுத்தப்பட்டதைப் பகிர்ந்து கொண்டார். இதை எதிர்த்து அவர்களது குடும்பப் பெண்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். ஜாஹரும், மற்றவர்களும் குடும்பத்திலிருந்து பெண்களைப் படிக்க வைக்கப் பெரிய அளவில் போராடி இருக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் கடினம் என்றாலும், மர்சியாவின் பெற்றோரும், ஹஜாரின் பெற்றோரும் அவர்களுக்கு ஆதரவளித்துப் படிக்க வைத்தனர். இன்று தமது இழப்பைத் தாங்க முடியாமல் துன்புறுகின்றனர். இந்தக் கல்லறை நூலகத்தைக் கட்டுவதன் மூலம் அந்தச் சிறுமிகளின் கனவை எப்படியாவது ஓரளவுக்கு நிறைவேற்ற முடியுமா என்று கண்ணீருடன் அந்தக் குடும்பம் முயல்கிறது. ஆஃப்கானிஸ்தானத்தை விட்டுச் செல்லாமல் அதன் நல்ல, அமைதியான எதிர்காலத்துக்காகப் போராடுவது என்று குடும்பம் முடிவெடுத்துள்ளது. மர்சியா, ஹஜாரின் தியாகம் எதிர்கால மாற்றத்துக்கு வினையூக்கியாக இருக்கும் என்று நம்புகின்றனர். இந்தக் கல்லறை நகரத்தை விட்டுத் தூரத்தில் இருந்தாலும், காரின் மூலமே செல்லக் கூடியதாக இருந்தாலும், அங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மர்சியாவும், ஹஜாரும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த கற்றல், படித்தலின் முக்கியத்துவத்தை ஏராளமானோர் இன்று பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களது அண்டை வீட்டார் ஒருவர் அந்த நூலகத்துக்குச் சென்று விட்டு ஒரு தன்னம்பிக்கை புத்தகத்துடன் திரும்பினார். பின்னர் வீட்டுக்கு வந்து அது எந்த அளவுக்கு மேலும் படிக்கத் தனக்கு ஊக்கமளித்தது என்று கூறினார். பிப்ரவரியில் இதே போன்ற இன்னொரு நூலகத்தைக் குடும்பம் அமைத்தது. அதில் நன்கொடையாகப் பெற்ற30 நூல்கள் வைக்கப் பட்டன. மர்சியாவும், ஹஜாரும் மிகவும் விரும்பிய நாவல்களும் அதில் அடக்கம். கண்மணிகளே உறங்குங்கள். உங்களது தியாகம் ஒரு பெரிய மாற்றத்தைச் சாதிக்கத் தொடங்கியிருக்கிறது. மடிக மதவெறி. மடிக ஆணாதிக்கம்.

கட்டுரை ஆதாரம்: அல்ஜசீரா

நன்றி: தீக்கதிர்

Afghanistan: Yesterday - Today - Tomorrow Speech By Prof. Vijay Prasad. Article Tamil Translation By Vee. Paa. Ganesan. ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று - நாளை

ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை | பேரா. விஜய் பிரசாத் | தமிழில்: வீ. பா. கணேசன்



(இந்திய சமூக விஞ்ஞான கழகம், சென்னை சார்பில் 24.09.2021 அன்று மாலை நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கமான தமிழ் வடிவம்)

நண்பர்களே! தோழர்களே!

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் சில ஆண்டுகள் நான் வாழ்ந்தேன். கடைசியாக சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயிலரங்கம் சம்பந்தமாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளரும் ஆய்வாளரும் ஆன பி. சாய்நாத் அவர்களோடு பங்கு பெற்றேன். அன்று மாலை நடைபெற்ற இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் கூட்டம் ஒன்றிலும் பங்கு பெற்று பேசினோம். அந்த நிகழ்ச்சிகள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் சாய்நாத் உடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் மதிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்றுதான்.

நண்பர்களே,

பொதுவாக சர்வதேச அளவிலான பன்னாட்டுக் கூட்டமைப்புகள்தான் நாம் அனைவரும் அறிந்தவையாக இருந்து வருகின்றன. நேட்டோ, ஜி-7 போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சீனாவின் முன்முயற்சியில் 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட SCO என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. இந்தியாவும் கூட அதில் அங்கம் வகிக்கிறது. இந்த அமைப்பு ஆசிய-ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டதாகும். உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் மக்களை உள்ளடக்கிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்தப் பகுதியில் உருவாகும் அச்சுறுத்தல்களை, சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பது, வர்த்தகம், கலாச்சாரம், மனித நேய உதவிகள் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை இந்த உறுப்பு நாடுகளிடையே வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

Afghanistan: Yesterday - Today - Tomorrow Speech By Prof. Vijay Prasad. Article Tamil Translation By Vee. Paa. Ganesan. ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று - நாளை
Shanghai Cooperation Organization (SCO)

அந்த வகையில் இன்று சிக்கலானதொரு நிலையை எதிர்கொண்டு வரும் ஆஃப்கானிஸ்தானின் எல்லைப்புற நாடுகளான தாஜிகிஸ்தான், கசாக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிறுவன நாடுகளாக இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இந்த அசாதாரணமான சூழலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

முதலில் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆஃப்கானிஸ்தானில் இன்று தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு அந்த நாட்டை பயங்கரவாத கண்ணாடியின் மூலம் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அல்லது அதை ஒரு காட்டுமிராண்டிகள் நாடு எனப் பார்க்க வேண்டாம். அது மிக நீண்ட வரலாறும் சீர்திருத்த முயற்சிகளும் கொண்டநாடுதான்.

இப்போது ஆஃப்கானிஸ்தானின் வரலாற்றுக்குள் செல்வோம். மிகப் பழைய வரலாற்றுக்குள் நான் செல்லப் போவதில்லை. சுமார் ஒரு நூறாண்டு வரலாற்றை மட்டுமே நாம் பார்க்கப் போகிறோம். பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லைக்கு அப்பால், அன்றைய ருஷ்யப் பேரரசின் எல்லையை ஒட்டியிருந்த, ஆஃப்கானிஸ்தானை கைப்பற்ற பிரிட்டிஷ் பேரரசு 18ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் இருந்தே தொடர்ந்து முயற்சித்து வந்தது. 1820 முதல் 1919 வரையிலான நூறு ஆண்டுகளில் நடந்த மூன்று ஆங்கிலேய-ஆஃப்கானிய போர்களில் ஆங்கிலேயர்கள் தொடர்ந்து தோல்வியையே சந்தித்தனர். 1919ஆம் ஆண்டு அமீர் பதவிக்கு வந்த அமானுல்லா கான் (King Amanullah Khan) ஆப்கானிஸ்தான் ஆங்கிலேயர்களிடமிருந்து முழுமையாக விடுதலை பெற்ற நாடு என்று அறிவித்தார்.

Afghanistan: Yesterday - Today - Tomorrow Speech By Prof. Vijay Prasad. Article Tamil Translation By Vee. Paa. Ganesan. ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று - நாளை
அமானுல்லா கான் (King Amanullah Khan) And King Victor-Emanuel III of Italy in January 1928

முதல் உலகப் போரின் விளைவாக நலிவுற்றிருந்த ஆங்கிலேயப் படைகளை நாட்டின் எல்லையிலிருந்தும் அவர் வெளியேற்றினார். இதையடுத்து ஆஃப்கானின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்று ராவல்பிண்டியில் 1919 ஆகஸ்ட் 8 அன்று கையெழுத்தானது. பிரிட்டிஷாருடன் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாகவே சோவியத் அரசுடன் நட்புறவு ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியனை முதலில் அங்கீகரித்த நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருந்தது. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு 1979 டிசம்பர் வரை தொடர்ந்தது.

அந்நாட்களில் முஸ்லீம் சமூகத்தை நவீனப்படுத்த முயற்சிகள் எடுத்து வந்த ஆட்டமான் பேரரசுடன் உறவு கொண்டிருந்த அமீர் அமானுல்லா அந்தப் பகுதியைச் சேர்ந்த சுரையா என்ற பெண்ணை மணந்து கொண்டார். சுரையா ஆஃப்கானில் பெண்களுக்கான பள்ளிகளை முதலில் தொடங்கினார். அமானுல்லாவின் இத்தகைய சமூக சீர்திருத்தங்களுக்கு எதிராகவே ஆஃப்கன் நாட்டு பெருநிலப் பிரபுக்களும் முல்லாக்களும் இருந்து வந்தனர். அமீருக்கு எதிரான இவர்களின் வகுப்புவாத வெறிக்கு பிரிட்டிஷ் இந்தியாவும் தூபம் போட்டு வந்தது.

Afghanistan: Yesterday - Today - Tomorrow Speech By Prof. Vijay Prasad. Article Tamil Translation By Vee. Paa. Ganesan. ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று - நாளை
King Amanullah Khan with Queen Suraya Tarzai. 1919 -1929

உதாரணமாக, அமானுல்லாவும் சுரையாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்தபோது, சுரையா (Queen Suraya Tarzai) மற்ற வெளிநாட்டு ஆண்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதையெல்லாம் படமெடுத்து, ஆஃப்கன் வகுப்புவாதிகளிடையே பிரிட்டிஷ் உளவுத் துறை அந்தப் புகைப்படங்களை விநியோகித்து அமானுல்லாவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.

ஆஃப்கானில் இருந்த பல்வேறு இனக்குழுக்களுடன் முரண்பட்டு இருந்தபோதிலும், பிரிட்டனின் பிடியிலிருந்து தப்பி இன்றுள்ள ஆஃப்கன் எல்லையை மீட்டெடுத்தது அமீர் அமானுல்லாதான். அவரது இனத்தைச் சேர்ந்த உறவினர்களே இந்த சீர்திருத்த முயற்சிகளுக்கு எதிராக இருந்தனர். கிராமப்புற பெரு நிலப் பிரபுக்கள், முல்லாக்கள், நகர்ப்புற பழமைவாதிகள் ஆகியோரின் எதிர்ப்பையும் அவர் எதிர்நோக்க வேண்டியிருந்தது. எனினும் மக்களிடையே அவரது சீர்திருத்த முயற்சிகளுக்கு பெருத்த ஆதரவு இருந்தது. அவர் பள்ளிகளை திறந்த உடனேயே மக்கள் ஆர்வத்தோடு அதில் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர்.

1919ஆம் ஆண்டிலிருந்தே ஆஃப்கானின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான அவசியம் குறித்து அமீர் அமானுல்லாவிற்கு லெனின் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தார். எனினும் நாட்டின் எல்லையை பாதுகாப்பது, இனக்குழு மோதல்களை அடக்குவது போன்ற முயற்சிகள் 1965வரை நீடித்தது. அந்த ஆண்டில் ஆஃப்கன் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதற்கு முந்தைய ஆண்டுதான் தொடங்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஏழு பேரில் நான்கு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அமானுல்லாவின் சீர்திருத்த நடவடிக்கைகளின் தாக்கத்தின் விளைவே ஆகும்.

ஆஃப்கன் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தொடர்ந்து நிலவி வந்த குழுப்போக்குகள், திரிபுகள் ஆகியவற்றின் விளைவாக அதன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கவில்லை. இருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களின் கட்டமைப்பு கிராமங்களில் மட்டுமின்றி, ராணுவத்திலும் பரவியிருந்தது. 1919இல் மேற்கொள்ளப்பட்ட நட்புறவு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தானுக்கு அனைத்து வகையிலும் பொருளாதார, ராணுவ உதவிகளை, ராணுவ தளவாடங்களை அளித்து வந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.

கம்யூனிஸ்ட் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்று கல்வியறிவைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டின் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த முஜாஹிதீன்கள் இவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வந்தனர். இவ்வாறு ஆயிரக் கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஜாஹீதீன்களைக் காரணம் காட்டி அன்றிருந்த பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியாவுல் ஹக் ஆஃப்கனில் தலையிட்டார். எனினும் ஆஃப்கானிஸ்தானை அவரால் பணிய வைக்க முடியவில்லை.

1973ஆம் ஆண்டு மேற்காசிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை முன்னெடுக்கும் காலமாகவும் இருந்தது. ஜனநாயக, முற்போக்குக் கருத்துகள் ஆஃப்கனில் வளர்ந்துவந்த அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் உருவாகி அங்கு முஜிபுர் ரஹ்மான் ஒரு ஜனநாயகப் பாதையை உருவாக்கி வந்தார். வங்கதேசப் போருக்குப் பிறகு பாகிஸ்தானிலும் மீண்டும் ஜனநாயகம் தலையெடுத்து பூட்டோ ஆட்சிக்கு வந்தார். இந்தியாவில் இந்திரா காந்தியின் வங்கிகளின் தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு போன்ற நடவடிக்கைகள் இப்பகுதியில் சோஷலிச கருத்துக்கள் வளர உதவின.

இத்தகையதொரு சூழலில்தான் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த முஜாஹீதீன் குழுவின் தலைவர் 1973இல் அமெரிக்காவிற்குச் சென்று கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கான நிதியுதவிகளை பெற்று வந்தார். இன்றைய தாலிபான்களின் பாட்டன்களான முஜாஹீதீன்களுக்கு மதவெறி பிடித்த சவூதி அரேபியாவும் கணிசமான நிதியுதவிகளை அளித்து வந்தது. இவர்களின் தொடர்ச்சியான திடீர் தாக்குதல்களின் விளைவாக அப்போது ஆட்சி செய்து வந்த ஜாஹிர்ஷா அரசுக்கு பெரும் நெருக்கடி உருவானது. இத்தகைய நெருக்கடியான சூழலில் ஆஃப்கன் அரசில் பிரதமரைப் போன்ற அதிகாரமிக்க பதவியை நீண்ட நாட்களாக வகித்து வந்த மொஹமத் தாவூத் கான் நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்ற பெயரில் அமீர் ஜாஹிர்ஷாவை ஆட்சியில் இருந்து தூக்கியெறிந்தார். கம்யூனிஸ்டுகளின் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கியது. அதே நேரத்தில் ஈராக்கில் சதாம் உசேன் 1978இல் அங்கிருந்த கம்யூனிஸ்டுகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினார். இந்நிலையில் 1979ஆம் ஆண்டில் முகாஜிதீன்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த காபூலில் இருந்த அமெரிக்க தூதர் படுகொலை செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட்டுகளின் கட்சியான ஆப்கனிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (Peoples Democratic Party of Afghanistan – PDPA) இரண்டு பிரிவுகளும் (Kalk – கல்க் – மக்கள் திரள், Parcham – paarssam – பதாகை) சேர்ந்து தாவூத்கானை எதிர்த்து ராணுவப் புரட்சியில் 1978 ஏப்ரலில் அவரைத் தோற்கடித்தனர். தராகி, அமீன், பாபராக் கார்மல் ஆகியோர் தலைவர்கள். தராகி அதிபரானார். ஒற்றுமை நீண்டநாள் நீடிக்கவில்லை. 1978 செப்டம்பரில் அமீன் அரண்மனைப் புரட்சியில் தராகியை பதவி நீக்கம் செய்தார். தராக்கி கொலையுண்டார். 1978 டிசம்பரில் பிடிபிஏ அரசு சோவியத் யூனியனோடு ராணுவ ஒப்பந்தம் செய்திருந்தது.

Afghanistan: Yesterday - Today - Tomorrow Speech By Prof. Vijay Prasad. Article Tamil Translation By Vee. Paa. Ganesan. ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று - நாளை
Afghanistan Last Communist President, Mohammed Najibullah

ஏற்கனவே இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்திய அடிவருடிகளின் வெறித்தாக்குதலால் சின்னாபின்னமாக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகள் அங்கு படுகொலை செய்யப்பட்ட துயரகரமான நிகழ்வின் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலுடன் உலகின் பல நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் மீதான கொலைவெறி தாக்குதல்கள் அப்போது அதிகரித்து வந்த நிலையில், தனது எல்லை நாடான ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் இந்தப் படுகொலைகள் பின்னர் தங்களுக்கு அச்சுறுத்தலாக மாறக் கூடும் என்ற எண்ணத்துடன் சோவியத் யூனியன் 1979ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஃப்கானிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பியது. 1979 டிசம்பரில் அமீன் கொலையுண்டு பாபராக் கார்மல் ஆட்சிக்கு வந்தார். அவர் 1986 வரை பதவியில் இருந்தார்.
சோவியத் ஆதரவு பெற்ற நஜிபுல்லா (Afghanistan Last Communist President, Mohammed Najibullah) 1986 ஆம் ஆண்டு அதிபர் ஆனார். இவரது ஆட்சியில்தான் நிலச்சீர்திருத்தம், கல்வியறிவு, பெண்கள் கல்வி, நவீன தொழில்நுட்பங்கள், வேலைவாய்ப்பு, சமூக சமத்துவம் போன்றவை ஆஃப்கனில் பரவத் தொடங்கியது. எனினும் சோவியத் ஆதரவு பெற்ற ஆஃப்கனை நிலைகுலையச் செய்ய உள்நாட்டிலிருந்து பெரு நிலப்பிரபுக்கள், முல்லாக்கள் மட்டுமின்றி அண்டைநாடான பாகிஸ்தானும், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இதர மேற்கு நாடுகளும், சவூதி அரேபியா, ஈரான் போன்ற மத அடிப்படைவாத நாடுகளும் பிற்போக்குவாதிகளின் படையான முஜாஹிதீன்களின், அதன் படைப்பிரிவான தாலிபான்களின் பயங்கரவாதச் செயல்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தன.

போதைப்பொருளான அபினை பெருமளவில் பயிரிடும் பெருநிலப்பிரபுக்களின் பணமும், சோவியத் ஆதரவு பெற்ற ஆட்சிக்கு எதிராக இருந்தது. முகாஜிதீன்களின் படுகொலை வெறியாட்டம் எல்லைகளைத் தாண்டி தலைநகரான காபூலிலும் தொடர்ந்தன. இன்றைய தாலிபான்களின் பாட்டன்களான முஜாஹிதீன்களின் செல்வாக்கு அதிகரித்தது. 15 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு சோவியத் படைகள் 1988 ஆம் ஆண்டு தொடங்கி ஆஃப்கன் நாட்டிலிருந்து வெளியேறின. 1989 க்குப் பிறகு ஆப்கானியப் படைகள்தான் போரிட்டன. 1994இல் தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்திற்கு முடிவு கட்டினர். பெண்கள் மீண்டும் வீட்டிற்குள் அடைபட்டனர். நஜிபுல்லா ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நிலச்சீர்திருத்தம், கல்வியறிவு பரவல், பெண்கள் முன்னேற்றம், ஜனநாயக உணர்வுகள் ஆகியவை முற்றிலுமாக தகர்க்கப்பட்டு, பெருநிலப்பிரபுக்களின், முல்லாக்களின் மத அடிப்படைவாத ஆட்சி நிலைபெற்றது. 1996இல் நஜிபுல்லா சிறைபிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது உடல் பொதுவெளியில் தூக்கில் பல நாட்கள் தொங்கவிடப்பட்டது.

Afghanistan: Yesterday - Today - Tomorrow Speech By Prof. Vijay Prasad. Article Tamil Translation By Vee. Paa. Ganesan. ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று - நாளை
Communists took power in Afghanistan- Saur Revolution, 1978.

இதைத் தொடர்ந்த காலத்தில்தான் அல்கொய்தா, ஐஎஸ் ஐஎஸ் போன்ற மதத் தீவிரவாத குழுக்கள் தாலிபான் ஆட்சிப் பகுதிகளிலும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளிலும் வேர் விட்டு வளரத் தொடங்கின. இத்தகைய மத அடிப்படைவாதிகளின் வளர்ச்சிக்குப் பின்னால் அபின் வர்த்தகத்தில் கொழித்த பெருநிலப்பிரபுக்கள், முல்லாக்கள், சவூதி அரேபியாவின் மதவெறி அரசாட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஆதரவு சக்திகளும் இருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் கொழுத்து வளர்ந்த அல்கொய்தா பின்னர் வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல் 2001 செப்டெம்பர் 11 அன்று அமெரிக்காவின் மீது நேரடியான தாக்குதல் தொடுத்தபோது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று முரசறிவித்து அமெரிக்கா உலகமெங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

இந்தப் போரின் ஒரு பகுதியாக தனது ஆதரவு சக்திகளான பிரிட்டன், நேட்டோ நாடுகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி அமெரிக்கா 2001இல் தாலிபான்களை ஆஃப்கானில் இருந்து விரட்டியடித்து தங்களது ஆதரவு ஆட்சியை நிலைநிறுத்தியது மட்டுமின்றி ஈராக், ஆஃப்கான் மண்ணில் தனது வலுமிக்க படைகளை நிறுத்தி வைத்தது. கடந்த இருபது ஆண்டுகளில் ஆப்கன் மண்ணில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக 2.76 ட்ரில்லியன் டாலர்களை அது செலவழித்துள்ளதாகவும் கூறுகிறது. உண்மையில் இந்தப் பணம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த படைகளுக்கான, தனது ஆதரவாளர்களாக இருந்த ஆப்கன் வலதுசாரி அரசியல்வாதிகளுக்கும், தங்களது விசுவாசிகளுக்கும், ஏஜெண்டுகளுக்கும் செலவு செய்த பணம்தானே தவிர, ஆப்கன் நாட்டு மண்ணில் வளர்ச்சித் திட்டங்களை, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை, தொழில்நுட்ப மேம்பாடுகளை செய்வதற்காகச் செலவழிக்கப்பட்ட பணம் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அமெரிக்கா படைகளை நிலைநிறுத்தியிருந்த தலைநகரான காபூலிலேயே பல இடங்களில் மின்சார வசதி இல்லை என்பதுதான் உண்மை. இதுதான் அமெரிக்கா அங்கு ஜனநாயகத்தை நிலைநிறுத்திய லட்சணம். அமெரிக்கப் படைகள் நிலைபெற்றிருந்த இந்த இருபதாண்டு காலத்திலும் கூட முல்லாக்கள், நிலப்பிரபுக்களின், போதைப் பொருள் கடத்தல்காரர்களின் ஆட்சிதான் நடைபெற்று வந்தது.

Afghanistan: Yesterday - Today - Tomorrow Speech By Prof. Vijay Prasad. Article Tamil Translation By Vee. Paa. Ganesan. ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று - நாளை

ஏற்கனவே ஈராக்கில் சர்வநாசங்களையும் செய்துவிட்டு அந்த மண்ணை நிர்மூலமாக்கிவிட்டு, பின்பு அங்கிருந்து மூக்குடைபட்டு வெளியேறியதைப் போலவே இப்போது தாலிபன்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆஃப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது என்பதே உண்மை. பல லட்சக்கணக்கான ஆப்கன் மக்களை கொன்று குவித்த அமெரிக்கப் படை வீரர்களில் பலரும் ஆப்கானில் தாராளமாகக் கிடைக்கும் போதைப் பொருளான அபினுக்கு அடிமையானவர்களாக மாறிப் போனதும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களாக மாறிப் போனதும் அனைவரும் அறிந்த உண்மையாகும். இத்தகையதொரு நிலையில் தப்பித்தால் போதும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு அமைப்புகளும் அங்கிருந்து வெளியேறியிருக்கின்றன.

இவ்வாறு அமெரிக்கா வெளிப்படையாக அவமானப்பட்ட போதிலும், அது தொடர்ந்து முன்னெடுத்து வரும் கம்யூனிஸ்டு எதிர்ப்பு, ஜனநாயக எதிர்ப்பு சக்திகளான தாலிபான்களின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்து விட்டுத்தான் அது வெளியேறி இருக்கிறது என்பதையும், கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு சேவகம் புரிந்து வந்த மக்களைக் கூட காப்பாற்றாமல் அது வெளியேறியிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க உளவுத் துறையின் ஏவலாளியான பாகிஸ்தானிய ஐஎஸ்ஐயுடன் கலந்து ஆலோசித்த பின்பே தாலிபான்களின் அமைச்சரவையே உருவாகி இருக்கிறது என்பதையும் நாம் பார்க்கிறோம்.

Afghanistan: Yesterday - Today - Tomorrow Speech By Prof. Vijay Prasad. Article Tamil Translation By Vee. Paa. Ganesan. ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று - நாளை
தாலிபான் தலைவர்கள் (Taliban Leaders)

இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் வருங்காலம் எப்படியிருக்கக் கூடும் என்ற கேள்வி எழுகிறது. அதன் எல்லை நாடுகளான ரஷ்யா, சீனா ஆகியவை அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தாலிபான்களின் ஆட்சியை எவ்வாறு அணுகவிருக்கிறது என்பதைப் பொறுத்தே ஆப்கானிஸ்தானின் வருங்காலம் தீர்மானிக்கப்படக் கூடும். சீனாவின் வெளியுறவு அமைச்சர் தாலிபான் தலைவருடன் தோஹாவில் பேச்சுவார்த்தை நடத்திய செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தப் பின்னணியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடவடிக்கைகளை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ள தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை தந்தமைக்காக மீண்டும் ஒரு முறை இந்திய சமூக விஞ்ஞான கழகத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழில்: வீ. பா. கணேசன்

Afghanistan: America occupation and after Article By Era Sindhan (ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆக்கிரமிப்பும் அதன் பிறகும்). Book Day

ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆக்கிரமிப்பும் அதன் பிறகும் – இரா. சிந்தன்



20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டதும், சில மணி நேரங்களில் அது தூளாகிப் போனதும் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரலையானது. 110 மாடி கட்டடங்கள்நொறுங்கின, பல அடுக்கு மாடிகளில் இருந்து உயிர் அச்சத்தில் குதித்தவர்களை பார்க்கும்போது குலை நடுங்கியது. 2977 பேர் இந்த தாக்குதலில் பலியானார்கள்.

20 ஆண்டுகள் கடந்த பிறகு, ஆப்கானிஸ்தான் விமான நிலையத்திலிருந்து சில காட்சிகள் உலக ஊடகங்களை ஆக்கிரமித்தன. விமான ஓடு தளத்தில் உயிருக்கு அஞ்சி நடுங்கும் மக்களில் ஒரு பகுதியினர் கூடியிருந்தார்கள். ரயில்களிலும், பேருந்துகளிலும் மேலே அமர்ந்து பயணிப்பதைப் போல, விமானத்தின் மீது அமர்ந்துகொண்டோ, தொங்கிக்கொண்டோ பயணிக்க முடியும் என்று அவர்கள் நினைத்திருந்ததுதான் விபரீதம். சில நிமிடங்களில் பலர் உயிருடன் தரையை நோக்கி வீசப்பட்டார்கள்.

ஆனால்,ஏகாதிபத்திய சார்பு ஊடகங்களில், இப்படியான துயரம் ததும்பும் எல்லா நிகழ்வுகளும் நமக்கு வந்து சேர்வதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில், ஆப்கனில் நிலவிய போர் இறைச்சலில் சிறு சத்தம் கூட நம்மை நோக்கி வரவில்லை.‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற அமெரிக்காவின் கூச்சல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. இப்போது அந்தக் கூச்சலும் அடங்கி நிசப்தம் நிலவுகிறது. எதுவும் மாறவில்லை. ஏகாதிபத்திய போர்களால் மனித நாகரீகத்திற்கு அழிவுதான் மிச்சம் என்பது மீண்டும் அம்பலப்பட்டுள்து.

20 ஆண்டுகளில் என்ன நடந்தது?

2001 ஆம் ஆண்டில், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். அன்று முதல் சுமார் 7 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க துருப்புக்களும், நேட்டோ படையினரும் அந்த நாட்டில் குவிக்கப்பட்டார்கள்.இந்தப் போரினால் அமெரிக்காவின் தரப்பில் 2 ஆயிரத்து 448 வீரர்களும், சுமார் 4 ஆயிரம் அமெரிக்க ஒப்பந்ததாரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 20 ஆயிரத்து 589 பேர் காயமுற்றதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை விபரங்கள் குறிப்பிடுகின்றன.

இதே போல, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிடுவது எளிதாக இல்லை. அமெரிக்க தரப்பில் முன்வைக்கப்படும் ‘எதிரிகளின் மரணங்கள்’ என்ற கணக்கில் சாதாரண குடிமக்களுடைய மரணங்கள் சேர்க்கப்படுவதில்லை. ஆப்கானிஸ்தானை சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள், உயிர்ப்பலிகள் 1 லட்சத்திற்கும் அதிகம் என்கிறார்கள். 3 லட்சம் பேர் காயமடைந்ததாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்டோரில் மிகப் பெரும்பான்மையானவர்கள் ஆயுதம் ஏதும் இல்லாதவர்கள்.

அசோசியேட்டட்பிரஸ் என்ற ஊடகம், ஆப்கானிஸ்தானியர்கள்47 ஆயிரத்து 245 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது. மேலும் இந்த மரணங்களில் 40% வானில் இருந்து வீசப்பட்ட குண்டுகளால் நிகழ்ந்துள்ளன. இவை அல்லாமல், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் நடந்துள்ளன.

Afghanistan: America occupation and after Article By Era Sindhan (ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆக்கிரமிப்பும் அதன் பிறகும்). Book Day

ஊழல் மலிந்த ஆட்சி நிர்வாகம்:

ஆப்கன் யுத்தத்திற்காக அமெரிக்கா சுமார் 2 லட்சம் கோடி டாலர்களை செலவு செய்திருக்கிறது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.87 லட்சம் கோடி டாலர்கள் (2019ஆகும்). அவ்வளவு தொகையில் மூன்றில் இரண்டு பங்கினை அமெரிக்கா இந்த போரில் செலவு செய்துள்ளது. இத்தனை கோடிகளைக் கொட்டி அழித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். அந்த நாட்டின்வெப்பமான தட்பவெப்பசூழலில், அமெரிக்கபடைகளும், அதிகாரிகளும் தங்குவதற்காக குளிரூட்டும் வசதி கொண்ட வீடுகளை கட்டினார்கள். உணவை கத்தார், சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வரவழைத்தார்கள். அவர்கள் வீணாக குப்பைத்தொட்டிகளில் வீசும் மீச்ச உணவை சேகரிப்பதற்காகஆப்கன் ஏழைகள் அல்லாடினார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள், உதவிக்காக அனுப்பப்பட்ட பணத்தை எப்படியெல்லாம் சுருட்டிக் கொண்டார்கள் என்பதை, ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பதற்கான அமெரிக்க சிறப்பு அதிகாரியுடைய அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. “பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அமெரிக்காவை சேர்ந்த பணக்காரர்கள் இந்த முறைகேடுகளால் லாபமடைந்தார்கள்.” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அமெரிக்கா, பணத்தைக் கொடுத்து, ஆப்கனின் அரசியல்வாதிகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று நினைத்தது. அமித்கர்சாய் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சி உருவாக்கப்பட்டது. பின் ஆட்சியாளர்கள் மாறினார்கள். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் கையூட்டு அதிகரித்தது, 2018 ஆம் ஆண்டை விடவும் 2020 ஆம் ஆண்டில் கையூட்டு 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே போல ஆப்கானிஸ்தான் தேச ராணுவத்தை ஏற்படுத்தி, சுமார் 3 லட்சம் வீரர்களை அமெரிக்கா பயிற்றுவித்தது. சுமார் 8800 கோடி டாலர்களை இதற்காக அவர்கள் செலவு செய்தனர். ஆனால், பொய்க் கணக்குகளின் மூலம் இந்த நிதியும்கையாடப்பட்டது. சுமார் 42 ஆயிரம் வீரர்கள் பட்டியலில் இல்லாமலே பயிற்சி அளித்ததாக கணக்கு காட்டப்பட்டது. இப்படியாக, விதவிதமான ஊழல்கள் நமக்கு காணக்கிடைக்கின்றன.

மக்கள் வாழ்க்கை பாதாளத்தில்:

2003 ஆம் ஆண்டு முதல் 2012 வரை ஆப்கானிஸ்தான் 9.4 சதவீத வளர்ச்சியை சந்தித்து வந்ததாக உலக வங்கி குறிப்பிடுகிறது. பொதுவாக ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம், பல்வேறு நாடுகளின் உதவி நிதியை சார்ந்தே இயங்கிக்கொண்டிருந்தது. அந்த நிதி குறைந்ததால், 2015க்கு பின் வளர்ச்சியும் குறைந்துவிட்டது. அதே சமயம், இது ‘பொம்மை ஆட்சியின்’ நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் கணக்கு மட்டுமே ஆகும்.

இந்தக் கணக்கில் சட்டவிரோத போதைப்பொருள் வணிகம் உள்ளடங்கவில்லை. அமெரிக்க ஆதிக்கம் நிலவிய காலத்தில் போதைப்பொருள் வணிகம் அதிகரித்தது. உலகில் கிடைக்கும் ஹெராயினில், 90 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஓபியம் வர்த்தகம் 1.2 லட்சம் கோடி டாலர் முதல் 2.1 லட்சம் கோடி டாலராக இருக்கலாம் என்பது ஐக்கிய நாடுகளின் கணிப்பாகும். ஆப்கானிஸ்தான் நாட்டு இளைஞர்களில் 10 இல் ஒருவர் போதைக்கு அடிமையாக உள்ளார்.

அதே சமயம், ஆப்கானிஸ்தான் மக்கள் தொகை சுமார் 4 கோடிபேரில் சரிபாதி வறுமையில் உள்ளார்கள். 1.4 கோடிப்பேருக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை. 20 லட்சம் குழந்தைகள் அதீத பட்டினியில் வாடுகிறார்கள்.

2016 ஆம் ஆண்டில், கல்வி அமைச்சராக இருந்த அசதுல்லா ஹனிப்பல்கி ஒரு திருத்தப்பட்ட பேட்டியைக் கொடுத்தார். அதன்படி “மொத்தம் உள்ள 17 ஆயிரம் பள்ளிகளில் 60 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். முன்பு சொன்னது போல 1.1 கோடி அல்ல”. இப்போதும் ஆப்கனில் செயல்படும் பள்ளிகளில் 41% கட்டடம்இல்லாதவை. ஆப்கனின் கல்வி அறிவு விகிதம் 43 மட்டுமே ஆகும். 65% பகுதிகளுக்கு மின்சாரமே இல்லை. அமெரிக்காவினால், அடிப்படையான கட்டமைப்புகளை கூட அந்த நாட்டில் உருவாக்க முடியவில்லை.

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பிஸ்மில்லா மொஹமதி, அமெரிக்க படைகள் வெளியேறிய பின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். “பணக்காரனின் அரசாங்கத்திற்கும், அவன் ஆட்களுக்கும் என்ன தைரியம். எங்கள் கைகளை பின்னால் கட்டிவிட்டு, சொந்த நாட்டையே விற்றுவிட்டார்கள்”. இதுதான் ஆப்கானிஸ்தானில் நிலவக்கூடிய உண்மையான உணர்வு ஆகும். அமெரிக்காவையும், அதன் கைப்பாவையான அரசாங்கத்தையும் மக்கள் வெறுக்கிறார்கள்.

Afghanistan: America occupation and after Article By Era Sindhan (ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆக்கிரமிப்பும் அதன் பிறகும்). Book Day

ஆட்சி மாற்றமும், விளைவுகளும்:

இப்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபன்கள் வசம் சென்றுள்ளது.பிற ஆயுதக் குழுக்களின் வசம் இருந்த பகுதிகளை பெரும்பாலும் கைப்பற்றிவிட்டார்கள். புதிய அரசாங்கத்தையும், அமைச்சர்களையும் அறிவித்துள்ளார்கள். புதிய ஆட்சி, தாலிபன் மட்டுமே வழிநடத்துவதாக இருக்கும் என்று தெரிகிறது.
அமெரிக்கஆக்கிரமிப்பின் போதும், தாலிபன்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகள் இருந்தன. அந்தப் பகுதிகளில் நிர்வாகத்தில் ஒப்பீட்டளவில் ஊழல் குறைவாக இருந்தது. பள்ளிகள் செயல்பாட்டில் முன்னேற்றம் இருந்தது. எனவே தாலிபன்கள் கை ஓங்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக உள்ளது. மேலும் மக்களிடையே ஆக்கிரமிப்பு எதிர்ப்பு உணர்வு கூடியுள்ளது, தாலிபன்களுக்கு சாதகமாக உள்ளது.

தாலிபன்கள் பிற்போக்கான வலதுசாரி சக்திகள்தான். கடந்த காலத்தில் இருந்து அவர்களின் தன்மை பெரிதாக மாறியிருக்க வாய்ப்பில்லை.மேலும் அது உறுதியான ஒரே இயக்கமும் அல்ல. அமெரிக்காவிடம் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் போர் விருப்பம் கொண்ட இனத்தலைவர்களுடைய கதம்பமாக பல்வேறு சக்திகளின் கூட்டமைப்பாகவே அது உள்ளது. எனவே அவர்கள் அமைத்துள்ள இஸ்லாமிய அமீரகம் பெரிய மாற்றம் எதையும் மக்கள் வாழ்வில் கொண்டுவர வாய்ப்பில்லை. பெண்கள், குழந்தைகள் நிலைமையில் பிற்போக்கான தாக்குதல் ஏற்படவும் வாய்ப்புண்டு.

வலதுசாரி சக்திகளான தாலிபன் உருவாக்கத்திற்கும் விதை போட்டது அமெரிக்க ஏகாதிபத்தியம்தான். சோவியத் ஒன்றியத்தோடு ஒத்துழைத்த முற்போக்கான அரசாங்கத்தை நிலை குலையைச் செய்வதற்காகவே இந்த சக்திகளுக்கு அமெரிக்கா நிதியும், பயிற்சியும் கொடுத்தது.

ஆப்கனை சேர்ந்த முற்போக்காளர்களும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும், ஆப்கன் மக்கள் நல்வாழ்வை அச்சுறுத்தும் மூன்று சக்திகளை பட்டியலிடுகிறார்கள். அதில் முதலாவது, அமெரிக்காவும், பிற நேட்டோ நாடுகளும் செய்த ஆக்கிரமிப்பு. இரண்டாவது தாலிபன்கள், மூன்றாவது ஆப்கனில் இயங்கும் மற்ற பிற்போக்கு சக்திகள். இப்போதைக்கு அமெரிக்காவும் நேட்டோ படைகளும் அகன்றுள்ளன. ஒரு எதிரி அகன்றது அந்த நாட்டு மக்களுக்கு ஆறுதலான செய்தியாகும். அதே சமயம் முற்போக்கு சக்திகளின் போராட்டம் தொடர வேண்டிய தேவை உள்ளது. அதுதான் உண்மையான முன்னேற்றத்தை சாத்தியமாக்கும்.

Afghanistan: America occupation and after Article By Era Sindhan (ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆக்கிரமிப்பும் அதன் பிறகும்). Book Day

அண்டை நாடுகளின் அணுகுமுறை:

ஆப்கானிஸ்தான் குறித்தான இந்தியாவுடைய அணுகுமுறை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டை சார்ந்ததாகவே இருந்து வந்தது. எனவே, அமெரிக்காவின் தவறான கணிப்புகளை, இந்தியாவும் பின்பற்றியதாக தெரிகிறது.

இந்திய உளவுத்துறையின் அதிகாரியாக செயல்பட்டு ஓய்வுபெற்ற ஏ.எஸ்.துலத் “நாம் (இந்தியா) ஆப்கானிஸ்தானில் நிறைய பணத்தை முதலீடு செய்துள்ளோம். எனவே நாம் அங்கே சென்றாக வேண்டும். அந்த நாட்டில் ஆட்டம் மாறிவிட்டது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் கைகோர்ப்பதை பார்க்க முடிகிறது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர், இந்த மேசையில் இந்தியாவிற்கு இடமில்லை என்று தெரிவிக்கிறார். இது நமக்கு இனிமையான செய்தி அல்ல” அணிசேரா நாடு என்பதிலிருந்து விலகி அமெரிக்காவின் இளைய பங்காளியாக முயல்வது நம் நாட்டுக்கு நன்மை செய்யாது என்பதை அவருடைய கருத்தில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

இதுவரை இந்தியா 300 கோடி டாலர்களை ஆப்கானிஸ்தானுடைய உள்கட்டமைப்பில் செலவு செய்திருக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தான் நமக்கு எல்லை நாடாகவும் இருப்பதால், இந்திய நலனை மையப்படுத்தியும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நல்வாழ்வை உறுதி செய்யும் விதத்திலும் நமது அணுகுமுறை அமைவது அவசியம்.

சோசலிச நாடான சீனாவின் அணுகுமுறை உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் மாற்றங்களை விரைவாக புரிந்துகொண்டு செயல்பட்டார்கள்.

சீனாவிற்கும் பிற நாடுகளுக்கும் அச்சுருத்தலாக இருக்கும் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாட்டுக்கு ஆப்கானிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை பெற்றார்கள்.இது மிகவும் முக்கியமான நகர்வு ஆகும். மேலும், அமெரிக்காவை போல, இன்னொரு நாட்டில் வலுக்கட்டாயமாக சுதந்திரம் அல்லது ஜனநாயக ஆட்சி முறையை வெளியில் இருந்து திணிக்க முடியாது என்பதையும். அப்படியான முழக்கங்கள் போலியானவை என்பதையும் சீனா தொடர்ந்து சொல்கிறது.

சீனா, ரஷ்யா, இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஒரு உள்நாட்டு யுத்த சூழல் உருவாவதை விரும்பவில்லை. எல்லா பயங்கரவாத அமைப்புகளையும் தாலிபன் அமைப்பால் கட்டுப்படுத்த முடியுமா என்பது அத்தனை எளிதல்ல. அது சர்வதேச சக்திகளின் நகர்வை பொருத்தே உள்ளது. அதே சமயத்தில் தாலிபன்கள், ஆட்சி நிர்வாகத்தின் சவாலை எதிர்கொண்டு நீடிக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

அண்டை நாடுகளும், பிற நாடுகளும் தங்களுக்கு எது நன்மை என்ற நிலையில் இருந்தே ஆப்கானிஸ்தானோடு உறவாடி வருகிறார்கள். சாங்காய் கூட்டுறவு அமைப்பு நடத்திய கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கீழ்க்காணும் 3 திட்டங்களை முன்வைத்தார்.

  1. சுதந்திரமான, நடுநிலையான, ஒன்றுபட்ட, அமைதியான, மக்களாட்சி நிலவும், மறுமலர்ச்சி காணும் தேசம்
  2. குடிமக்களுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் எதிரான வன்முறையும், பயங்கரவாத தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும். முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பது, இனவழி குழுக்கள் அனைவரின் நலன்களையும் மதிக்க வேண்டும்.
  3.  பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாத அச்சமூட்டல் இல்லாத நிலையை அண்டை நாடுகளுக்கு உறுதி செய்ய வேண்டும்.

இப்போதைக்கு ஆப்கானிஸ்தானில் எதிர்பார்க்க முடிந்தது இவைதான்.

Afghanistan: America occupation and after Article By Era Sindhan (ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆக்கிரமிப்பும் அதன் பிறகும்). Book Day

தொடரும் யுத்தம்:

மாற்றங்கள் விரைவாக நடந்து கொண்டிருக்கும் பின்னணியில், தனது துருப்புக்களை திரும்பப் பெற்றுக் கொண்டே, நவீன வடிவிலான தாக்குதல்களை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா.

ஆட்சியை தாலிபன்கள் கைப்பற்றப் போகிறார்கள் என்பது தெளிவானதுமே, சர்வதேச நிதி நிறுவனம் ஆப்கனுக்கு அனுப்ப வேண்டிய 3700 கோடி டாலர்கள் நிதியை நிறுத்தி வைத்தது. அன்னியச் செலாவணியை மாற்றித்தரும் நிறுவனமான வெஸ்டர்ன் யூனியன் தன்னுடைய சேவைகளை நிறுத்திக்கொண்டது. இதனால் ஆப்கானிஸ்தானின் செலாவணி வீழ்ச்சிமுகத்தை எதிர்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ரிசர்வ் நிதி 900 கோடி டாலர்கள் நியூயார்க்கின் வசம் இருக்கின்றன. அதையும் அமெரிக்கா தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு இழுத்தடிக்கிறது. சிறப்பு உரிமையாக உலக நாடுகளுக்கு தரப்படும் ஐ.எம்.எப் நிதியையும் பெற முடியாத வகையில் தடை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சொந்தமான பணத்தை, மிக அத்தியாவிசயமான காலத்தில் கொடுக்காமல் தடுப்பதும் நவீன போர் வடிவமே ஆகும். அதனை அமெரிக்கா தொடர்கிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்கானிஸ்தானில் தான் விரும்பக் கூடிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா கணக்குப்போடும். சமீப ஆண்டுகளில், தனக்கு சாதகமான அரசாங்கங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து தோற்று வருவதை கவனிக்க வேண்டும். ஈராக், லிபியாவை தொடர்ந்து இப்போது ஆப்கானிஸ்தானின் மாற்றங்களும் அதையே காட்டுகின்றன. அமெரிக்க தலையீட்டின் காரணமாக, சாமானிய குடிமக்களுக்குத்தான் வேதனைகள் உருவாகின்றன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை வாழ்வு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் அமெரிக்கா, ஒரு நிரந்தரமான ராணுவ பிரிவை அறிவித்து குவைத் தளத்தில் வீரர்களை இருப்பு வைக்கக் கூடும். எப்போது வேண்டுமானாலும் ஆப்கானிஸ்தானிற்கு பறந்து சென்று, கொலை செய்து வருவதைப் போல ஏற்பாடு செய்யலாம். ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகளுக்கு போர் வெறி அடங்கப்போவதில்லை.

Lessons learned from the failure of the United States in Afghanistan Peoples Democracy Editorial Article Tamil Transalation By Sa. Veeramani

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி அளித்திடும் படிப்பினைகள்



ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா அவமானம் உண்டாக்குகிற விதத்தில் வெளியேறிச் செல்வது, ஆப்கன் தேசிய ராணுவம் நிலைகுலைந்திருப்பது, ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டைவிட்டு ஓடிவிட்டது, தலிபான் மிகவும் வேகமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருப்பது அனைத்தும் அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சிப்போக்குகளாகும்.

அமெரிக்காவும், அதன் நேட்டோ படையினரும் ஆப்கானிஸ்தானத்திற்குள் நுழைந்து, அங்கே இருந்த தலிபான் ஆட்சியைக் கவிழ்த்து இருபதாண்டுகளுக்குப் பின்னர், தலிபான் மீண்டும் காபூலில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்கா 2 டிரில்லியன் டாலர்களுக்கும் மேலாக செலவு செய்திருக்கிறது. அது ஆக்கிரமித்திருந்த சமயத்தில் மிகவும் உச்சபட்சமாக 1 லட்சத்து 30 ஆயிரம் நேட்டோ படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். தேசிய ராணுவத்தை உருவாக்கிட 88 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டது. இந்தக் கணக்கில் இங்கிலாந்தும், இதர நாட்டோ நாடுகளும் செலவு செய்த பல பில்லியன் டாலர்கள் கணக்கில் கொண்டுவரப்படவில்லை.

மேலும் கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவும் அதற்கு ஆதரவான மேற்கத்திய நாடுகளும் ஆப்கனில் உருவாக்கிய “ஜனநாயக” அரசானது அங்கே வான்வழியாக அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிந்ததில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்தது இந்தக் கணக்கில் கொண்டு வரப்படவில்லை. வான்வழித் தாக்குதலில் ஆப்கன் மக்களில் 40 சதவீதத்தினர் இவ்வாறு கொல்லப்பட்டனர். அதன்காரணமாகத்தான் அஷ்ரப் கனி அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடையாது. மேலும் லஞ்ச ஊழலில் திளைத்த ராணுவத்தினர் செய்த அட்டகாசங்களையும், அடாவடித்தனங்களையும் அனைத்து ஊடகங்களும் இதுநாள்வரையில் வேண்டுமென்றே மூடிமறைத்து வந்தன.

Lessons learned from the failure of the United States in Afghanistan Peoples Democracy Editorial Article Tamil Transalation By Sa. Veeramani
Afghan President Ashraf Ghani

 

2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் ஜனாதிபதி புஷ், “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்” எனப் பிரகடனம் செய்வதற்கு முன், ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆப்கானிஸ்தானத்தில் தலிபான் ஆட்சி மீதும், ஒசாமா பின் லேடன் மீதும் அது ஏவிய தாக்குதல்கள் மற்றும் 1980களில் ஆப்கானிஸ்தானத்தில் நிலைகொண்டிருந்த சோவியத் துருப்புகளுக்கு எதிராக முஜாஹிதீனால் ஏவப்பட்ட “ஜிகாத்” தாக்குதல்கள் முதலானவை இவற்றின் விளைவுகள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒசாமா பின் லேடன் மற்றும் “ஜிகாத்” என்பதன் கீழ் திரட்டப்பட்ட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுக்கும் அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சிஐஏ மூலமாக நிதி உதவிகள் அளிக்கப்பட்டன. அவை பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐஎஸ்ஐ மூலமாகக் கைமாறின. இவை பின்னர் அல்-கொய்தா இயக்கமாக பரிணமித்தது. தலிபானைப் பொறுத்தவரை, அவர்கள் ஆப்கன் முஜாஹிதீன் படையினரின் சந்ததியினராவார்கள். இவர்கள் பெரும்பகுதியினர் பாஷ்டுன் தேசிய இனத்தைச் (Pashtun nationality) சேர்ந்தவர்கள்.

ஜனாதிபதி புஷ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் தங்களுடைய மேலாதிக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கைகளை எடுத்தனர். ஆப்கனுக்கு அடுத்த இலக்கு, ஈராக்காக இருந்தது. இதனை அவர்கள் 2003 மார்ச்சில் மேற்கொண்டனர்.

இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் மிகவும் வஞ்சகமான நடவடிக்கை, அல்-கொய்தா இயக்கத்துடன் சதாம் உசேன் தொடர்பு வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டதாகும். உண்மையில் சதாம் உசேன், மதச்சார்பற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ஒரு “நாத்திகர்” என்று ஒசாமா பின் லேடனால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் இவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் லிபியா, சிரியா என விரிவடைந்து ஏராளமான அளவில் அழிவினை ஏற்படுத்தியது.

Lessons learned from the failure of the United States in Afghanistan Peoples Democracy Editorial Article Tamil Transalation By Sa. Veeramani
சதாம் உசேன் (Saddam Hussein) – தமிழ் விக்கிப்பீடியா

எங்கெல்லாம் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றனவோ அங்கெல்லாம் பயங்கரவாதமும், பயங்கரவாத நடவடிக்கைகளும் முளைத்திடும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதன்பின்னணியில்தான் ஈராக்கிலும், சிரியாவிலும் அல்-கொய்தா மற்றும் அதனைவிட மோசமான ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ என்னும் அமைப்புகளும் முளைத்தன. லிபியா நாசமாக்கப்பட்டபின்னர், பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் உருவாயின. பின்னர் அவற்றின் செல்வாக்கு வட மேற்கு ஆப்ரிக்காவிற்கும் பரவியது. இவ்வாறாக இப்பகுதிகளில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் பயங்கரவாத இயக்கங்களும் ஒன்றையொன்று காரணமாகக் கூறிக்கொண்டு வளர்ந்தன.

தலிபான் இயக்கத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான அடிப்படைவாத குணத்தின் காரணமாக அது ஆப்கானைக் கையகப்படுத்தி இருப்பது மிகவும் ஆழமானமுறையில் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிப்போக்காகும். ஆப்கானிஸ்தானத்தின் ஆட்சியில் தலிபான் இயக்கமும் இணைக்கப்பட்டிருப்பதானது, ஆப்கனின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற நிலையினை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு இனத்தினருக்கிடையேயுள்ள வேற்றுமைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை அது எப்படி நடத்தப் போகிறது என்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் புதிய தலிபான் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்திடும் ஆப்கன் அரசு எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. முன்பிருந்த தலிபான் ஆட்சி இம்மூன்று பிரச்சனைகளிலும் மிகவும் மிருகத்தனமாகவும், பிற்போக்குத்தனமாகவும் நடந்துகொண்டது.

ஆப்கன் நிலைமைகள் குறித்து ஆராய்ந்திட, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்றது. அதில் ஆப்கன் மண்ணில் அல்-கொய்தா மற்றும் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது என்ற ஒரு பொதுவான புரிதலுடன் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, இந்தியாவும் மிகவும் கவலைப்படக் கூடிய ஓர் அம்சமாகும். தலிபான், ஆப்கானிஸ்தானத்தில் உள்ள இந்தியத் திட்டங்களை குறிவைத்துள்ள சிராஜுதின் ஹக்கானி (Sirajuddin Haqqani faction) அமைப்புடனும் இணைந்துள்ளது.

ஆப்கனில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, இந்தியாவுக்கும் பல படிப்பினைகளை அளித்திருக்கிறது. 2001இலிருந்தே அப்போது இந்தியாவில் ஆட்சியிலிருந்த வாஜ்பாயி அரசாங்கம் ஆப்கானிஸ்தானத்தில் நுழைந்த அமெரிக்காவின் ராணுவத்திற்கு தன்னுடைய முழுமையான ஆதரவை அளித்துப் பிரகடனம் செய்தது. உண்மையில், இந்தியா அளித்திட்ட கடல்வழி மற்றும் விமானவழி வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளவில்லை. இது, இந்தியாவுக்கு ஏமாற்றமேயாகும். மாறாக இவற்றுக்கு அமெரிக்கா, பாகிஸ்தானைத்தான் சார்ந்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, அமெரிக்காவுடன் உறவினை வலுப்படுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது இந்தியா அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக மாறி இருக்கிறது. மோடி அரசாங்கம், அமெரிக்காவுடன் கையெழுத்திட்டுள்ள பல ஒப்பந்தங்கள் இந்தியா-அமெரிக்காக் கூட்டணிக்கு ஒரு ராணுவ குணத்தை அளித்திருக்கிறது. இதில் நான்கு நாடுகள் (Quad என்கிற Quadrilateral Alliance)கூட்டணி குறித்த ஒப்பந்தம் இறுதி நடவடிக்கையாகும். இவ்வாறு இந்தியா, அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் இந்தியாவின் ராணுவத்தை இந்தியா சுதந்திரமாகச் செயல்படுத்துவதற்கான உரிமைகளை விட்டுக்கொடுத்திருக்கிறது. மேலும் இந்தியாவின் சுயேச்சையான அயல்உறவுக் கொள்கையும் அரித்துவீழ்த்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, தன்னுடைய மேலாதிக்கக் கொள்கையை மேற்கு ஆசியாவில் வலுப்படுத்திடுவதற்காக, “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை” ஏவுகிறது என்றால், இதன் பொருள், நான்கு நாடுகள் ராணுவக் கூட்டணி மூலம், அது சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையிலானதேயாகும்.

சென்ற வாரம், இந்தியாவின் அயல்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்காவுடன் கிழக்கில் ஒருங்கிணைப்பு உள்ள அதே சமயத்தில், மேற்கில் குறிப்பாக ஆப்கானிஸ்தானத்தில் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறினார். இதன் பொருள், இந்திய அரசாங்கம், அமெரிக்க ராணுவம் முன்கூட்டியே ஆப்கனிலிருந்து வெளியேறியிருப்பதற்குத் தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள அதே சமயத்தில், அமெரிக்கா இந்தியாவுடன் சமீபத்தில் கையெழுத்திட்ட நான்கு நாடுகள் ராணுவக் கூட்டணியைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பியது என்பதேயாகும்.

மோடி அரசாங்கம் என்னதான் அமெரிக்காவுடன் ஒட்டி உறவாட முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், ஆப்கன் கொள்கையில் அமெரிக்கா இந்தியாவைத் தனிமைப்படுத்தி விட்டது என்பதைப் பார்க்க முடிகிறது.

Lessons learned from the failure of the United States in Afghanistan Peoples Democracy Editorial Article Tamil Transalation By Sa. Veeramani

1996க்கும் 2001க்கும் இடையே தலிபான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த சமயத்தில் அதற்கு எதிராக வடக்கத்திய கூட்டணி (Northern Alliance)யில், ரஷ்யாவும், ஈரானும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் இப்போது இவ்விரு நாடுகளும் தலிபானுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவர்கள் சீனாவுடன் சேர்ந்து, தலிபான் ஆப்கனைக் கைப்பற்றுவதற்கு முன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றன. மோடி அரசாங்கத்தின் குறுகிய பார்வையுடன்கூடிய பாகிஸ்தான் எதிர்ப்பு, சீன எதிர்ப்புக் கொள்கையானது இந்தியாவை அதன் அண்டை நாடுகள் அனைத்திடமிருந்தும் தனிமைப்படுத்தி இருக்கிறது. அது தன்னுடைய அயல்துறைக் கொள்கையையும், அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டணியையும் மறுபரிசீலனை செய்யாவிட்டால் மோடி அரசாங்கமானது வரவிருக்கும் காலங்களில் அண்டை நாடுகளுடன் ஒரு விரோதமான சூழலையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆப்கன் நிகழ்ச்சிப் போக்குகளின் விளைவாக தெற்கு ஆசியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்வதற்கான ஆபத்தும் இருக்கிறது. பாஜக அரசாங்கம் பின்பற்றிவரும் இந்துத்துவாக் கொள்கைகளும், இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லீம் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுதலும், இத்தகைய இஸ்லாமிய தீவிரவாத செல்வாக்குகள் வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்தியா, உறுதியான முறையில் மதச்சார்பற்றக் கொள்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே இத்தகைய போக்குகளைத் தடுத்து நிறுத்த முடியும்.

ஆப்கன் மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே காலங்காலமாக மிகவும் நெருக்கமான முறையில் வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் உறவுகள் இருந்து வந்திருக்கின்றன. எனவே ஆப்கன் மக்களின் உடனடிக் கவலைகளைப் போக்கும் விதத்தில் இந்திய அரசாங்கம் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும். இந்தியாவிற்கு அகதிகளாக வரவிரும்பும் ஆப்கன் மக்களுக்கு அடைக்கலம் அளித்திட வசதிகள் செய்து தர வேண்டும். நம் நாட்டில் பல இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆப்கன் மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் விசாக்கள் புதுப்பிக்கப்பட வேண்டியிருக்கும் அல்லது கால அளவு நீட்டிக்கப்பட வேண்டியிருக்கும். அவர்களின் தேவைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான கல்வி உதவிப்பணம் மற்றும் மான்யங்கள் மூலமாக அவர்களுக்கான நிதி உதவியும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

ஆப்கன் தொடர்பான புதிய கொள்கையின் இதயம், ஆப்கன் மக்களின் நலன்களைச் சார்ந்திருக்க வேண்டுமேயொழிய, அங்கே நிலவும் புவியியல்-அரசியல் அதிகார விளையாட்டின் அடிப்படையில் இருந்திடக்கூடாது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (ஆகஸ்ட் 18, 2021)
(தமிழில்: ச.வீரமணி)