தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ்

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ் நம்பிக்கை நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த நெய்யூரிலுள்ள இலட்சுமிபுரம் கலை - அறிவியல் கல்லூரியில் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின்…
நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் – விஷ்ணுபுரம் சரவணன்

நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் – விஷ்ணுபுரம் சரவணன்




நூல் : ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹240/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

Book Introduction: Ch. Tamilchelvan Short Stories - Vishnupuram Saravanan நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - விஷ்ணுபுரம் சரவணன்’அவரவர் தரப்பு’
தோழர் ச.தமிழ்ச்செல்வனின் கதைகளை மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் இலக்கிய வெளியில் சர்யலிசம், மேஜிக் ரியலியசக் கதைகள் அதிகம் புழக்கத்தில் இருந்த சூழலில் அவர் தொடர்ந்து யதார்த்தக் கதைகளையே எழுதினார். எளிய மனிதர்களின் வாழ்வின் வலிய பாடுகளை சிடுக்கற்ற எளிய மொழிநடையில் பகிர்ந்தது அவரது பலம்.

அவரின் வெயிலோடு போய், வாளின் தனிமை போன்ற சில கதைகள் பலராலும் சிலாகிக்கப்பட்டவை. அவை எனக்கும் பிடிக்கும். இப்போது வாசிக்கும்போது ’அவரவர் தரப்பு’ யை கதை என்று எளிதில் கடக்க முடியாத உணர்வைத் தருகிறது.

சிகரெட் எனும் ஒரு விஷயத்தை இழக்க முடியாத ஒருவனுக்கும் அவனது மனைவிக்குமான இணக்க விலகலை விவரிக்கிறது இக்கதை. பேருந்து உணவுக்காக நிறுத்தப்படும் இடத்தில் தொடங்கும் கதை. அதேபோன்ற இன்னொரு சூழலில் முடிகிறது. இரண்டுக்கும் இடையிலான காலம் என்பது இருவருக்கும் இடையே எத்தனை விலக்கத்தைத் தந்துள்ளது. அதேநேரம் அந்த விலக்கம் கோர்த்திருக்கும் கைகளுக்குள் இருக்கும் விலக்கம்தான் என்பதையும் சொல்லத் தவறவில்லை.

தனக்களித்த வாக்கை மீறி புகைக்கும் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டான் எனத் தெரிந்தபிறகு கதையில் வரும் வரிகள் அவ்வளவு நுட்பம்; அவ்வளவு கச்சிதம்; அவ்வளவு நேர்த்தி.

“அன்று ஒரு இடைவெளி அவள் மனதில் உருவாகிவிட்டது. வெளியே யாருக்கும் தெரியாத இடைவெளி. உற்றுப்பார்த்தால் அவள் முகத்திலிருந்து ஏதோ ஒன்று விடைபெற்றுப் போயிருப்பது தெரியும். ஒரு பெருமித உணர்வு. அவன் முழுக்க முழுக்க தன் ஆளுமைக்குல் இருக்கிறான் என்கிற கர்வம். இவையெல்லாம் கொண்டு வந்து சேர்த்திருக்கிற ஒரு ஒளிமிக்க சிரிப்பு. இதெல்லாம் காணமல் போனது. அந்த இடத்தில் ஒரு சிறு இருள் வந்து முகத்தில் ஒட்டிக்கொண்டது’

இந்தப் பழக்கம் மாபெரும் தவறா என்று அவன் நினைக்க, இதைக்கூட விட முடியாதா என அவள் தவிக்க… இந்த இரண்டும் சந்தித்து அப்பழக்கத்தை விட்டொழிக்க முடியா நிலையை காலமும் வாழ்க்கையும் தந்துகொண்டிருக்க… இந்த வாழ்க்கையில்தான் எத்தனை எளிய விஷயங்கள் அழுத்தமான அழுத்தங்களைக் கொண்டிருக்கிறது.
பதில் இதுவாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் சொடுக்கும் ஆணுடைய கேள்விகள் பொய்க்கையில் புழுவெனச் சுருளும் ஆண் மனச் சிக்கல்களை, எதிர்பார்ப்புகள் மீது ஊற்றப்படும் கொதிநீரை எதிர்கொள்ள முடியாது தவிக்கும் பெண் மனச் சித்திரங்களையும் நுணுக்கமாக பதிவு செய்ய எளிமையான மொழியாடலைத் தேர்ந்தெடுத்தது இன்னும் கதையின் வாழ்வை இன்னும் நெருக்கமாக்குகிறது.

பன்முகத்தன்மை என்றவுடனே தேசத்திற்கான, சமூகத்திற்கான சொல்லாடலாகப் பார்க்கும் எழுத்துலகில், குடும்பம் எனும் ஒரு குடையில் இணையில் பல்வேறு உறவுகளின் பன்முகத்தன்மையைப் பற்றி நுட்பமாகப் பேசுபவை இவரின் கதைகள். அவற்றில் இக்கதை மிகவும் முக்கியமான ஒன்று. அதற்கு, கதையில் கடைசி சில வரிகளே சாட்சி.

‘தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிற பெண்ணைவிட தன்னைத்தன் தவறுகள் குறைகளோடு (தன் அம்மாவைப் போல) அப்படியே ஏற்றுக்கொள்கிற பெண்ணைத்தான் ஆண்மனம் காலகாலமாக விரும்புகிறது என்பதை அவள் இன்னும் புரிந்துகொள்ள வில்லை. பெண்ணின் பயங்கள் சந்தேகங்கள் மனநிலைகள் இவற்றுக்கெல்லாம் அவள் பொறுப்பல்ல என்பதை அவனும் புரிந்துகொள்ள வில்லை. முந்தைய பல்லாயிரம் தலைமுறை ஆண்களைப் போல.’

வீட்டுக்கு வெளியே மட்டுமே பேசிவரும் பன்மைத்தன்மை உரையாடலை குடும்ப உறவுகளில் எப்போது கையாளப்போகிறோம் எனும் கேள்வியை எழுப்பியுள்ளது கதை. கதையின் கருவை அல்ல, கதை எழுதப்பட்டிருக்கும் மனப்போக்கின் மையத்தைச் சுட்டும் விதமாகவே ’அவரவர் தரப்பு’ தலைப்பிடப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
‘தோழர் தமிழ்ச்செல்வனின் இந்தப் பன்முகத்தன்மை அவரின் கதைகளில் மட்டுமல்லாது, அபுனைவு, பேச்சு, உரையாடல் உள்ளிட்டவற்றிலும் முந்தி நிற்கிறது. அதற்கு சரியான உதாரணம், வெண்மணி குறித்து வெளியான இலக்கியப் பதிவுகள் குறித்து அவர் எழுதிய கட்டுரை.

இக்கதையை ஏற்கெனவே வாசித்திருந்தபோது, வாசிப்பும் வாழ்வனுபவங்களும் புத்தொளியை இக்கதையில் வீசுகிறது. அற்புதமான படைப்புகளை மீள் வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டும் எனும் எண்ணத்தை விதைத்துள்ளது அவரவர் தரப்பு. தோழருக்கு எனதன்பும் நன்றியும்.

– விஷ்ணுபுரம் சரவணன்

Sangasurangam book written by R Balakrishnan book review by Su Po Agathiyalingam ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச் சுரங்கம் முதலாம் பத்து கடவுள் ஆயினும் ஆக - சு.பொ.அகத்தியலிங்கம்.

நூல் அறிமுகம்: ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச் சுரங்கம் முதலாம் பத்து கடவுள் ஆயினும் ஆக – சு.பொ.அகத்தியலிங்கம்.




சங்க இலக்கியத்தின் வழி
தமிழர் பண்பாட்டு வேரைக்கொண்டாடி…..

“ சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக “ எனும் நூலை வாசிக்கத் துவங்கிய நொடியிலிருந்து ஏற்பட்ட வியப்பும் மகிழ்ச்சியும் அளவில்லை. ஆர் .பாலகிருஷ்ணனின் ஆழ்ந்த தேடலும் புலமையும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புன்னகைக்கிறது.

எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் அலுவலகத்தில் ஓர் மாலையில் சமுத்திரம், சிகரம் செந்தில்நாதன், தயானந்தன் பிரான்ஸிஸ், நான், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்த முதல் நாள் நினைவுக்கு வருகிறது; அப்போது சிந்துவெளி நாகரிகத்தில் திராவிட வேர் குறித்து ஊர் பெயர்களூடே அவர் விவரித்த காட்சி மனத்திரையில் ஆழப்பதிந்துள்ளது.

இந்நூல் வழக்கமான சங்க இலக்கிய விவரிப்போ, நயந்துரையோ அல்ல அதற்கும் மேல் மானுட பண்பாட்டில் தமிழரின் உயரிய பங்களிப்பை இன்றைய காலத் தேவையூடே நுணுகி அலசி காட்சிப் படுத்தியுள்ள களஞ்சியம். பத்து தொடர் உரையின் தொகுப்பு இந்நூல் .

“…… …… …… ….. …. ….. …. …. …. ….. …..
….. ……. …… …… ……. ….. ….. ….. ….. ….. ….
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்
இயற்கை அல்லன் செயற்கையில் தோன்றினும்
காவலர் பழிக்கும்இக் கண்கள் ஞாலம்
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபறம் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின்நின்
அடிபுறம் தாங்குவர் அடங்காதோரே”

இந்தப் பாடலை முதல் உரையில் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு கொண்டு வரும் போது நூலாசிரியர் சொல்கிறார், “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சாதாரணப் புலவர் மன்னனைப் பார்த்து ஓர் அறிவுரை சொல்லியிருக்கிறார். அதனை ஆவணப்படுத்தியுள்ளனர். இப்போதைய சூழலுக்கு கற்பனை செய்து பாருங்கள். ஓர் இலக்கியவாதியோ அல்லது ஊடகவியலாளரோ இடித்துச் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளதா ?”

முழுப்பாடலையும் சுட்டிவிட்டு பொருளைச் சொல்லுகிறார்,” …. …இவ்வாறு நீ வெற்றி பெறுவதற்கு நீ கொண்டு செல்லும் படை மட்டும் காரணமல்ல, உன் நாட்டில் உழுகின்ற விவசாயிகளின் நெல்லினால் விளைந்த பயனும்தான் காரணம். விவசாயிகளின் கலப்பை பயிரை மட்டுமல்ல, உனது வெற்றியையும் கொடுக்கிறது. இவ்வாண்டில் மழை வரவில்லை என்றாலும் வளம் குன்றினாலும் இயற்கை பிரச்சனைகள் அல்லாது செயற்கைப் பிரச்சனைகள் வந்தாலும் மக்கள் காவலரைத்தான் குறை சொல்லுவார்கள். அதாவது மன்னன் மீதுதான் பழிபோடுவார்கள். அதனால் நீ விவசாயிகள்தான் உனது அரசு, நாடு என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டு அவர்களைக் காத்து, அவர்களுக்கு ஆதரவாய் இருந்தாலே போதும் மற்றவை எல்லாம் இதில் அடங்கிவிடும்.”

முதல் உரையில் இடம் பெறும் இந்த சித்தரிப்பே நூலின் செல்திசையை நமக்கு சுட்டிவிடுகிறது. ஒவ்வொரு உரைக்கும் எடுத்தாண்டுள்ள தலைப்பை கூர்ந்து நோக்கினாலே நூலின் ஆழமும் அகலமும் விளங்கும்.

1.சங்கச் சுரங்கம் அறிமுகவுரை, 2.பசிப்பிணி மருத்துவன், 3. பிறர்கென முயலுநர், 4.பருத்திப் பெண்டிர், 5.கடவுள் ஆயினும் ஆக, 6.கல்லா இளைஞர், 7.முதுவோர்க்கு முகிழ்த்த கை, 8.இமிழ் பனிக்கடல், 9.சேண் நடும் புரிசை, 10 .இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! என்கிற பத்து உரையும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த விவசாயம், பொதுநலம், நெசவு, உழைக்கும் பெண்கள், தோளில் கை போடும் நம் சாமி, கல்வி, கல்வி அறிவின்மை, முதியோர் குறித்த பார்வை, சுற்றுச் சூழல், செங்கல், வீட, மரணம் என நிறையப் பேசுகின்றன.

ஒவ்வொன்றையும் படித்து முடித்த பின் தமிழ் சமூகம் குறித்த பெருமிதத்தோடு ஒவ்வொருவரும் தாம் தமிழனாகப் பிறந்த பேறை எண்ணி இறும்பூதெய்தாமல் இருக்க முடியுமா ?

ஒவ்வோர் உரை குறித்தும் தனித்தனியே நிறைய எழுதலாம். நூலறிமுகத்தின் எல்லை கருதி பத்து உரை குறித்து பத்து செய்திகளும் கேள்விகளுமாய் மட்டுமே எழுதப் போகிறேன்

1] “மண்ணில் விளைந்து வாய்வழி வளர்ந்த மரபுகளின் ஆவணம்,” சங்க இலக்கியம் எனக்கூறும் நூலாசிரியர் ; சங்க இலக்கியத்தில் “மீள் நினைவுகள் இருக்கின்றன,” என்கிறார். மிகச் சரிதான். நீண்ட இலக்கிய பரப்பினூடே நம் பண்பாட்டு அரசியலை நிறுவும் நுட்பமான முயற்சி பாராட்டுக் குரியது, தோராயமான கால எல்லையும், மருதத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த படிநிலையும் சேர்க்கப்பட்டிருக்கலாமோ ?

2] பசிப்பிணி குறித்த தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான பார்வையும் கனவும் எண்ணும் தோறும் ஆச்சரியம் கூடுகிறது. அதனை வலுவாகவே உரையில் நூலாசிரியர் பதிவும் செய்திருக்கிறார். ‘இரந்தும் உயிர் வாழும்’ சூழலும் இருந்திருக்கிறது, ‘கைமாறு கருதா ஈதல்’ குணமும் இருந்திருக்கிறது என இருபுறத்தையும் காட்சிப் படுத்திய நூலாசிரியர் மத்திய அரசின் தானியக் கிடங்கின் பூட்டை உடைத்து அழிபசி போக்க தான் தன் அதிகாரத்தை பயன்படுத்தியது சங்க இலக்கியம் தந்த ஊக்கம் என்கிறார். இப்பகுதியில் மணிமேகலையின் அட்சயபாத்திரம் குறித்து வலுவாகச் சொல்லியிருக்கலாமோ ? பாரதிவரை பயணிக்கும்போது மணிமேகலையும் பேசலாம்தானே ? தமிழ் மண்ணிலும் கற்பனா சோஷலிச வேர் இருந்ததை போகிற போக்கில் சொல்லி இருக்கலாமோ ? [ 49 ம் பக்கம் பாரதியார் பாடல் வரியை வள்ளலார் வரியாகச் சுட்டிய பிழையை அடுத்த பதிப்பில் நேர் செய்க ]

3] அமிழ்தமே கிடைப்பினும் பகுத்துண்ணும் பண்பாட்டு பெருமை உரக்கப் பேசப்பட வேண்டிய செய்தியே. “தமக்கென முயலா நோன்தாள் பிறர்கென முயலுநர் உண்மையானே,” என்கிற மானுடம் போற்றும் வாழ்நெறிக்கு ஈடில்லை. இது நமக்கு வழித்துணை என நூலாசிரியர் முடிவுக்கு வருவது முற்றிலும் நியாயந்தான்.

4] நெசவு, துணி வணிகம், உழைக்கும் பெண்கள் என விரிந்த பரப்பில் ஆற்றிய குறுகிய உரையாயினும் ஆழந்த ஆய்வுக்கு களம் காட்டும் முன்னெடுப்பாகும். யாரேனும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது; தொடர்ந்து செய்வதும் தேவையே.

5] “பெருங்கோயில்களில் இத்தகைய சாமி ஆடுதல் நிகழ்வு ஏன் நடைபெறுவதில்லை என்ற கேள்வியினைக் கேட்டால், அதற்கு பதில், ஏனெனில் பெருங்கோயில்களில் உள்ள சாமியை உங்களுக்குத் தெரியாது; உங்களைச் சாமிக்கும் தெரியாது. அதன் ஸ்தல புராணங்களில் யார்யாரோ இருக்கிறார்கள். அதில் சாதாரண மக்கள் இல்லை.” எனக் கூறும் நூலாசிரியர், “நாட்டார் தெய்வங்களை மக்கள் தங்களில் ஒருவரைப்போல் விளித்து கேள்வி கேட்கும் நடை முறைக் காணப்படுகிறது” என்கிறார். முருகன் வழிபாடு வெறியாட்டு குறித்து வலுவாகச் சொல்கிறார். பரிபாடல் காலத்தில்தான் சுப்பிரமணியனும் தெய்வயானையும் முருகனோடு வலிந்து திணிக்கப்பட்டு நம் மூத்தகுடி வள்ளிக் குறத்தி சக்காளத்தி ஆக்கப்படும் கொடுமை நடக்கிறது. இந்த சமஸ்கிருதமயமாக்கல் அல்லது பார்ப்பணிய மயமாக்கல் குறித்து உரையில் சொல்லப்படிருப்பினும் நா.வானமாமலை சுட்டிக் காட்டியதுபோல் இன்னும் கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ ? குறிஞ்சி நிலம் போல் ஐவகை நிலத்திலும் நம் மண்ணோடும் மனதோடும் நிறைந்த சாமிகள் வேறு; அதுபோல் நம் தாய் தெய்வங்கள் வேறு. இது குறித்து தனிநூலே ஆசிரியர் எழுதலாமே ? செய்வீர்களா ?

6] “தொல்தமிழர் கல்விக் கொள்கை: அரசன் வெளியிட்ட அறிக்கை” என புறநானூற்றின் 183 வது பாடலை, “ உற்றுழி உதவியும்…. அவன் கண் படுமே,” எனும் பாடல் வரியைச் சுட்டுகிறார். கல்வி, கல்லாமை பற்றி நிறைய செய்திகளை இவ்வுரையில் அடுக்குகிறார். படித்தவனே போற்றப்படுவான் என வரைந்து காட்டுகிறார். கீழடியில் கிடைத்த எழுத்து பொறித்த பானையை சுட்டி கல்வியில் ஓங்கிய பழந்தமிழர் என பெருமிதம் கொள்கிறார். அதே நேரம் கல்லாமை இருந்ததையும் சொல்கிறார். இக்கட்டுரை தமிழரை சுயபெருமிதம் கொள்ளத் தூண்டும். அது தப்பில்லை. ஆயின், கல்வியிலிருந்து சமூகத்தின் பெரும் பகுதியினரை விலக்கி வைக்கும் அநீதி எப்படி அரங்கேறியது என்பதையும் இவ்வுரைப் பரப்புக்குள் கொண்டுவந்திருக்க வேண்டாமா ?

7] முதியோருக்கான கொள்கை அறிக்கை பற்றி இன்றைக்குப் பேசுகிறோம். அன்றைக்கே முதியோரை வணங்கி துணைநின்ற முதுவோர்க்கு முகிழ்த்த கை இருந்ததையும் முதியோர் குறித்த தமிழ் சமூகத்தின் நுண்ணிய பார்வையையும் விரிவாகச் சுட்டுகிறது. பயனில் மூப்பையும் சொல்லத் தவறவில்லை. இன்றைக்கு முதியோர் குறித்த பார்வையும் முதியோர் இல்லம் குறித்த ஒருங்கிணைந்த பார்வையும் தேவை அல்லவா ? விவாதிக்க களம் அமைக்கும் உரை.

8] “கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமம்” என்கிற சொற்றொடரை வைத்து மீன் தூங்குமா என கேள்வி எழுப்பி, தூங்கும் என விடையும் தந்துள்ளார் நூலாசிரியர். கடல் என்பது பெரிதும் நெய்தல் நிலத்தோடு தொடர்புடையதுதான் எனினும் பிற நில மக்களுக்கும் கடல் தொடர்புடையதாய் இருப்பதை, பரதவர் வாழ்வை, கடலும் சுற்றுச் சூழலும், கடலும் இயற்கைப் பேரிடரும் என கடலுக்குள் மூழ்கி பல செய்திகளை சங்க இலக்கியத் துணையோடு நூலாசிரியர் தருகிறார். நெய்தல் நிலம் சார்ந்த ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்,’ குறித்து பரக்கப் பேசுகிறது. புவிவெப்பமாதல் குறித்து பேசும் காலகட்டத்தில் இம்மீள் பார்வை மிகத் தேவையான ஒன்று.

9] “சிந்துவெளிச் செங்கல், சங்க இலக்கியச் சுடுமண், கீழடியின் செங்கல் சுவர் என்ற தொடர் நிகழவினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இவ்வுரையினுடைய முக்கிய விசயமாகும்.” என நூலாசிரியர் சொல்வது மட்டுமல்ல அத்திக்கில் நம்மையும் நகர்த்தியுள்ளார். நாம் உரக்கப் பேச வேண்டிய விசயமல்லவா இது ? அதற்கு விசைதருகிறது இவ்வுரை.

10] “ …. பொருள் நிலையாமை ,யாக்கை நிலையாமை, வாழ்க்கையினுடைய நிலையாமை இதெல்லாவற்றையும் பேசி அதனுடைய உள்ளீடாக இருக்கும் வாழ்க்கையினை வாழச் சொல்லி வற்புறுத்துவதுதான் சங்க இலக்கியத்தின் குறிக்கோள் “இவ்வாறு மரணம் குறித்த சங்க இலக்கிய பார்வையை விவரிக்கிறார் நூலாசிரியர். ‘செய்ப எல்லாம் செய்தனன்’ அதாவது ஒருவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதையே வாழ்க்கை எனக் கொண்டாடும் பண்பாட்டு சித்தாந்தம் தமிழருடையது. ஆம்.சாக்குருவி வேதாந்தம் அல்ல, அனுபவித்து வாழும் நெறியே தமிழர் பெருமை.

“அடிப்படையில் பாலா சார் எந்தத் தத்துவத்தையும் சார்ந்து பார்க்கிறவர் இல்லை. திறந்த மனதோடு எல்லாவற்றையும் பார்ப்பதுதான் அவருடைய தத்துவம். பன்மியம் என்பதுதான் அவருடைய தத்துவமாக உள்ளது. அதுதான் சங்க தத்துவம்கூட .” என தமிழ்ச்செல்வனின் வரையறை சரியானதுதான்.

இந்நூல் கொரானா கடுங்காலத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும், களம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய இணையவழி பத்து தொடர் உரைகளின் தொகுப்பு. “முதல் பத்து” என்பது “ டாப் டென் “ என்கிற பொருளிலோ, இது முதல் பத்து உரை இன்னும் தொடரும் எனும் பொருளிலோ இருக்கலாம். எதுவாயினும் வேறல்ல. சரியே !

சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்ப்பதும், தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது. இந்நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது மிக அவசியம். இந்தியாவின் பன்மைத்துவத்தை மறுக்கும் பாசிசம் கவ்வும் வேளையில் இந்நூல் புதிய சாளரத்தைத் திறக்கிறது.

இந்த நூல் சுட்டும் நியாயமான பெருமிதத்தோடு; தமிழ்ச் சமூகம் வர்ணமாக கூறு போடப்பட்டதையும் வர்க்கமாக பிளவுண்டு நிற்பதையும் இணைத்து புரிந்து பண்பாட்டை மேலும் முன்னெடுக்க இந்நூலும் ஆயுதமாகட்டும் !

சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக ,
நூலாசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன் ,
பக்கங்கள் : 264 , விலை : ரூ.270/
வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,
நூல் பெற : 044 24332424 / 24332924 

Thirukural Sirappurai Book Written by Ire Kumaran Book Review by Pa Jambulingam நூல் மதிப்புரை: முனைவர் இரெ.குமரனின் திருக்குறள்-சிறப்புரை - முனைவர் பா.ஜம்புலிங்கம்

நூல் மதிப்புரை: முனைவர் இரெ.குமரனின் திருக்குறள்-சிறப்புரை – முனைவர் பா.ஜம்புலிங்கம்




முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள திருக்குறள்-சிறப்புரை என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும். குறளின் வரிகளுக்கேற்ற வகையில் பொருண்மைக்கேற்றவாறு பிற தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோளுடன் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரையுடன் 1330 குறளையும் ஆராய்ந்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள், குறள் முதற் குறிப்பு அகர நிரல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

“திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின் மெய்ப்பொருளைக் கண்டதாகாது மெய்ப்பொருள் காண்பதென்பது என்போன்றோர்க்கு எட்டாக் கனியே…! எனினும் ‘ஆசைபற்றி அறையலுற்றேன்’, என்பதன்றி வேறில்லை….குறள் பொருள் கூறுந்தோறும் மேலொரு இலக்கியப்பொருள் நுகரும் சிறப்பினால் இது சிறப்புரையாயிற்று எனக் கொள்க..” என்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு குறளுக்கும் தரப்பட்டுள்ள உரை வாசகர்களுக்கு தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, இரட்டைக்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், கம்ப ராமாயணம், வில்லி பாரதம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து ஒத்த கருத்துடைய பாடல்களை உரிய விளக்கத்துடன் எடுத்தாண்டுள்ளார்.

திருக்குறள் குறள் எண், பாடல் வரிகள், உரை, இலக்கியத்திலிருந்து காட்டப்படும் மேற்கோள் பாடல் வரிகள், உரிய எண், உரை என்ற வகையில் தந்துள்ளார். நூலைப் படித்து நிறைவு செய்யும்போது திருக்குறள் மட்டுமன்றி பிற நூல்களையும் படித்த உணர்வு ஏற்பட்டது. சுமார் 850 பக்கங்கள் கொண்ட இந்நூலிலிருந்து சில பாடல்களைக் காண்போம்.

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. (திருக்குறள், 20)
எவ்வகைப்பட்ட மக்களுக்கும் நீரின்றி உலக வாழ்க்கை நடைபெறாது; அந்நீரும் வானின்று வீழும் மழையேயன்றி வேறில்லை.
“கழிந்தது பொழிந்து எனவான் கண்மாறினும்
தொல்லது விளைந்து எனநிலம் வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை.” (புறநானூறு, 203)
முன்பு மழை பொழிந்தோம் என்று கருதி இப்போது மழை பெய்யாது போகுமானால், முற்காலத்து விளைந்தோம் என்று கருதி இப்போது நிலம் விளையாது போகுமானால், இவ்வுலகில் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை இல்லாது ஒழியுமே.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (திருக்குறள், 212)
நேரிய முறையில் முயன்று ஈட்டிய பொருள் எல்லாம் இல்லார்க்கும் இயலாதவர்க்கும் வேண்டுங் காலத்து உதவி செய்தற் பொருட்டேயாம்.
“வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள.” (நான்மணிக்கடிகை, 51)
வேதக் கருத்துகளை உடைய பழைய தனிப்பாடல்களும் உள்ளன, வேள்விக்கு நிகரான உதவிகளும் உள்ளன.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (திருக்குறள், 577)
கண் உடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதவர்களாக இருப்பதில்லை; கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண் உடையவர்கள் அல்லர்.
“எழுத்து எண்ணே நோக்கி இருவரையும் கண்டு ஆங்கு
அருட்கண்ணே நிற்பது அறிவு.” (அறநெறிச்சாரம், 172)
இலக்கியம், கணிதம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நூல்களை ஆராய்வதால் பயன் ஒன்றும் இல்லை; இம்மை மறுமைப் பயன்களை அளிக்கும் நூல்களையே ஆராய்ந்து கற்று, அவ்வழி கருணையோடு ஒழுகுதலே அறிவுமிக்க செயலாம்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. (திருக்குறள், 856)
பிறரை இகழ்வதே இன்பம் என்று கருதி, அதனை மிகவும் விருப்பமுடன் செய்வானது வாழ்க்கை, அமைதியின்றித் துன்புறுதலும் அழிவதும் விரைந்து நிகழும்.
“கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தினும் நல்ல சுனைத்து.” (நாலடியார், 335)
பிறரைக் குறை கூறாவிட்டால் பேதையின் நாக்கில் தினவு ஏற்பட்டு, அரிப்பு எடுக்கும்.

மாறுபட்ட கோணத்தில் உரையினைத் தந்து திருக்குறளுக்கு மிகவும் நெருக்கமாக நம்மை அழைத்துச்சென்றுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : திருக்குறள்-சிறப்புரை
ஆசிரியர் : முனைவர் இரெ.குமரன் (9443340426)
பதிப்பகம்: மின்கவி, கோபி, ஈரோடு மாவட்டம் 638 452 (9626227537)
பதிப்பாண்டு: செப்டம்பர் 2021
விலை ரூ.800

Book Review: Kantharvan Padaippukalil Vazhviyal Sinthanaigal Written by Ka Ramajeyam book review by Saguvarathan கந்தர்வன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள்

நூல் விமர்சனம்: முனைவர் க. இராமஜெயனின் கந்தர்வன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள் – சகுவரதன்




கவிஞர். கந்தர்வன்
=================
இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் உயர்பதவியில் இருந்ததோடு, தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றெல்லாம் இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை, தன் படைப்புத்திறனை சிதைத்துவிடாமல் பார்த்துக்கொண்டவர் கந்தர்வன்.

அழகான கலைப்படைப்புகள் மூலம் தன்னைத் தமிழின் சிறந்த இலக்கியகர்த்தாக்களில் ஒருவர் என நிலைநாட்டிக்கொண்டவர். கண்ணதாசனால் நடத்தப்பட்ட இலக்கிய இதழான ‘கண்ணதாச’னில் இலக்கிய விமரிசனம் எழுதியதன்மூலம் தமிழ் இலக்கிய உலகில் மெல்லப் பிரவேசித்தவர். பின்னர், சிறுகதைகள், கவிதைகள் எனத் தன் படைப்பாற்றலைப் பரவலாக்கி வெளிப்படுத்திய ஆளுமை. சுபமங்களா, தாமரை போன்ற சிற்றிதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் கலைநுட்பமானவை. மனித உணர்வுகளை ஆழத்தில் சென்று உலுக்கிவிடக்கூடியவை. கந்தர்வன் ஒரு கவிஞரும் கூட.

திறமையான மேடைப்பேச்சாளருமாகவும் செயல்பட்டிருக்கிறார். மக்களோடு தன் நேரடி உரையாடலுக்குக் கவிதையைப் பயன்படுத்தியவர். புழங்குமொழியில், நேரடி சொல்லாடலில் கவிதை சொன்ன கந்தர்வன், கேட்கும் சராசரி மனிதர்களைச் சிந்திக்கவைத்தார்; சீண்டியிருக்கிறார்; சிரிக்கவும் வைத்திருக்கிறார். கிழிசல்கள், மீசைகள், சிறைகள் ,போன்ற கவிதைத் தொகுதிகளும் பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லாய், சாசனம், கொம்பன், அப்பாவும் அம்மாவும் போன்ற சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.

முனைவர் க. இராமஜெயம்
=======================
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர். அறிவொளி இயக்க காலங்களில் நாடக நடிகர் பாடகர் ஒருங்கிணைப்பாளர் என பல அவதாரமெடுத்தவர். சிறந்த கவிஞர். ஹைக்கூ, சென்ரியூ, குறுங்கவிதைகள் என பல வடிவங்களில் மின்னுபவர். இவரது ஹைக்கூ கவிதைகள் ஆங்கிலம் தெலுங்கு கன்னடம் இந்தி உருது போன்ற இந்திய மொழிகளிலிலும் ஜப்பானிய, ஆப்ரிக்க, சீன அரேபிய போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு எல்லா மொழி இதழ்களிலும் வெளிவந்துள்ளன. ஆப்பிரிக்க மற்றும் ஜப்பானிய ஹைக்கூ அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன. வேலூர் இளையவன் என்ற புனைப்பெயரில் முக நூலில் தொடர்ந்து இயங்கி வருபவர். பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இவரின், கவிஞர் கந்தர்வன் படைப்புகள் மீதான ஆய்நூல்தான் “கந்தர்வன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள் “முற்போக்கு இலக்கியப் படைப்பாளியான கந்தர்வன் தனது படைப்புகள் மூலமாக மனித வாழ்க்கையை, வாழ்வியல் சிந்தனைகளை, மனித உறவுகளை, வாழ்க்கை போராட்டங்களை, எவ்வாறு சமூக கண்ணோட்டத்தோடு உற்று நோக்கி வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் குறித்தான ஆய்வு நூல் இது.

பொதுவாக ஆய்வு நூல்களை வாசிக்கும்போது பள்ளி கட்டுரைகளை வாசிப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்திவிடும். அயர்ச்சியை உண்டாக்கிவிடும். சில படைப்புகளை மாத்திரமே முன்னிறுத்தி நூல் முழுவதும் அலசியிருப்பார்கள். ஆனால் முனைவர் க. இராமஜெயம் சுமார் 75 க்கும் மேற்பட்ட துணை நூல்களை
துணைகொண்டு 250 பக்கங்களில் முன்னுரை முடிவுரை நீங்கலாக ஐந்து தலைப்புகளில் தனது ஆய்வை முன்வைத்துள்ளார்.

இப்புத்தகத்தை வாசிக்க சுமார் 100 புத்தகங்களை வாசித்த திருப்தி ஏற்படுகிறது. தெவிட்டாத நடை. திரும்ப திரும்ப கூறல் இல்லை. சரியான இடங்களில் சரியான ஒப்புமை. இவர் கீழ்கண்ட தலைப்புகளில் கந்தர்வன் படைப்புகளை ஆராய்ந்துள்ளார்.

1.கந்தர்வன் காலத்திய இலக்கிய போக்குகள்.
2.கந்தர்வன் கவிதையில் வாழ்வியல் சிந்தனைகள்.
3. கந்தர்வன் கதைகளில் வாழ்வியல் சிந்தனைகள்
4. கந்தர்வன் படைப்புகளில் பாத்திரப் படைப்பு
5. கந்தர்வன் படைப்புகளில் பொதுமை நோக்கு.

முதல் தலைப்பு கந்தர்வன் காலத்து இலக்கியப் போக்குகள் பற்றியது. குறிப்பாக 70 களுக்குப் பிறகு தமிழிலக்கியம் பரப்பில் ஆதிக்கம் செலுத்திய இஸங்களைப் பற்றி எழுதுகிறார். இஸம் என்றால் என்ன ? இஸம் தோன்றிய வரலாறு, சர்ரியலிசம், அமைப்பதில் வாதம், நவீனத்துவம், இருத்தலிய வாதம் பின் நவீனத்துவம் போன்றவற்றை விளக்கி விட்டு, தலித்தியம், தலித் இலக்கியம், அது ஏற்படுத்திய தாக்கங்கள், பெண்ணியம் பெண்ணிய இலக்கியங்கள் அது ஏற்படுத்திய தாக்கங்கள், முற்போக்கு இலக்கியங்கள் அது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பதிவு செய்துள்ளதை வாசிக்க இவ்வளவு தகவல்களை எப்படி சேகரித்தார் என்று பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது கந்தர்வனின் கவிதைகள் குறித்தானது.
பாண்டவர் ஆண்டபோதும்
பசிதான்
பாபர் ஆண்டபோதும்
பசிதான்
…………………
………………….
×××××
நாங்கள் நாற்றுநட்டு
பூமிக்கு சட்டைபோடுகிறோம்
ஆனால்
பூமி என்னவோ
வரப்பில் குடையோடு நின்று
விரட்டும் ஆளுக்கே
விசுவாசமாயிருக்கிறது.
×××××
கோபம் என்பது
யாருக்கு வந்தது
மீசை என்பது
பேருக்கு இருந்தது
×××××
ஒரு புதிய வீடு
கட்டிமுடிக்கையில்
ஒரு பெண்ணுக்கு
புதிய சிறை தயாராகிறது
×××××
நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை.
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை.

சமூக அவலங்களை, துயரங்களை, அவர்களுக்கான விடியல்களை கந்தர்வன் தனது கவிதைகளில் பயன்படுத்திய விதம் குறித்து முனைவர் க. இராமஜெயம் மிகுந்த பொறுப்புடன் பல்வேறு இலக்கிய சான்றுகளுடன் வெளிப்படுத்தியிருப்பதை வாசிக்கும் போது மெய்சிலிர்க்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எடுத்தாண்டுள்ளார். முன்றாவது கதைகளைப் பற்றியது. சனிப்பினம், காடு, தராசு, கொம்பன், வேண்டுதல், கிரகச்சாரம் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை அக்காலத்திய போக்குகளுடன் ஒப்புமைப் படுத்தி கந்தர்வனின் ஆளுமையை பறைசாற்றுகிறார். குடும்பம், உறவு முறை,  திருமணம், சடங்குகள், சாதியப் போராட்டங்கள், மதவாத சிக்கல்கள், வன்முறைகள் போன்ற வாழ்வின் சகல பகுதிகளை தொட்டுப்பேசுவதை மேற்கோளாக காட்டியிருப்பது கந்தர்வன் மீதான பிம்பத்தை மேலும் கெட்டியாக்குகிறது.

நான்காவது பாத்திரப் படைப்பு. கந்தர்வன் கவிதையிலும் கதையிலும் கையாண்ட மொழி நடை, உத்தி, உருவம், உவமை, தொன்மம், போன்றவற்றை அலசுவதோடு குடும்ப பாத்திரங்கள், மனித நேயப் பாத்திரங்கள், நட்புப் பாத்திரங்கள், இலக்கியப் பாத்திரங்கள், பண்பாட்டுப் பாத்திரங்கள், அதிகாரப் பாத்திரங்கள் என பல்வேறு பாத்திரப் படைப்பு முறைகளை கந்தர்வன் தனது கதைகளில் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார் என்பதை முனைவர் க. இராமஜெயம் துல்லியமாக ஆய்வுசெய்து வெளிப்படுத்தியுள்ளார்.

ஐந்தாவது கந்தர்வனின் பொதுமை நோக்கு பற்றியது. இலக்கிய வடிவம் எதுவாயினும் உயரிய மாண்பான மனித நேயத்தைத்தான் கந்தர்வன் வலியுறுத்துவதாக முனைவர் கூறுகிறார். “கந்தர்வன் தனது படைப்புகளில் மனித வாழ்வின் கூறுகளை வெளிப்படுத்தும் மொழி நடையாக எளிய பாசாங்கற்ற நடையையே கையாண்டுள்ளார்.

கந்தர்வனின் படைப்புகளில் அடிநாதமாய் பொதுமை சிந்தனையோட்டத்தையே கொண்டுள்ளது. தான் நம்பிக்கை கொண்டிருந்த பொதுவுடமை சித்தாந்தமே மனித வாழ்வை மேம்படுத்தும் என்கிற கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே அவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன. ” முனைவர் க. இராமஜெயம் அவர்கள் ஆய்வின் முடிவாக மேற்கண்டவற்றை கூறுகிறார்.

விமர்சகர்ளுக்கும், ஆய்வாளர்களுக்கும், திறனாய்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படக்கூடிய நூல். பட்ட ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் இந்நூல் திகழும். கண்ணை உறுத்தாத எழுத்துக்களில் சிறந்த தாள்களில் நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் அன்பு நிலையம் பதிப்பகத்தாருக்கு வாழ்த்துக்கள்.

நூலின் பெயர் : கந்தர்வன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள்.
ஆசிரியர் : முனைவர் க. இராமஜெயம்
பதிப்பகம் ; அன்பு நிலையம்.வேலூர்
விலை : ரூ   250/

Writers Gallery Bowtha Thamizh Ilakkiya Varalaru (History of Buddhist Tamil Literature) Book Oriented Interview With Ela. Vendhan

எழுத்தாளர் இருக்கை: பௌத்த தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் குறித்து ஓர் உரையாடல் | Buddhist



#Buddhist #TamilLiterature #BookReview #Interview

பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு : [ 20ஆம் நூற்றாண்டு] – பேராசிரியர் முனைவர் க. ஜெயபாலன்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924