ச.தமிழ்ச்செல்வனின் “ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்” – ராஜேஷ் நெ.பி
ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்
ச.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர்)
பாரதி புத்தகாலயம்
₹90
புத்தகம் வாங்க கிளிக் செய்க : https://thamizhbooks.com/
மூத்த எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் “ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்” புத்தகம் வாசித்தேன். சமையல் செய்வது பெண்களுக்கானதல்ல, ஆண்களுக்கானது என்று உரக்கக் கூறும் நூல். அடுக்களையில் அவர் அடி எடுத்து வைத்த நாள் முதல் இன்றுவரை அவருடைய அனுபவங்களையும் நினைவுகளையும் ருசியாக வாசகருக்கு பரிமாறி உள்ளார். பாரபட்சம் இல்லாமல் அனைவரும் சமைக்க வேண்டும்.குறிப்பாக ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்றும் அதற்கான காரணங்களையும் அவருக்கே உண்டான முற்போக்கு பார்வையில் எடுத்துரைக்கிறார்.அவருடைய அனுபவங்களிலிருந்து பல்வேறு விதமான உணவுகளை ருசித்த விதமும் ரசித்த விதமும் சுவைபட குறிப்பிடுகிறார்.புத்தகத்தில் அவர் கையாண்ட விதம் நகைச்சுவையாகவும் சிந்திக்கத் தூண்டும்படியாக உள்ளது.
‘உதாரணமாக ராணுவத்தில் துப்பாக்கி சுடுவதைவிட கஷ்டமான வேலை இந்த ரொட்டி சுடுவது’,
‘கண்ணீரே வந்துவிட்டது. கருவாட்டுக் கண்ணீர்’
‘சேவும்,முறுக்கும் தின்ற வாய் அல்வாவை இயல்பாக நிராகரித்தது’,
‘ஒருத்தர் குணத்தை பந்தியில் பார்த்துவிடலாம்’ போன்றவை.
வரலாற்றில் சமையலின் பங்கு புத்தகத்தில் பல்வேறு இடங்களில் பரிமாறப்பட்டுள்ளது. இடையில் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல சில அரசியல் நையாண்டியும் உள்ளது கூடுதல் சிறப்பு.சமையல் என்பது ஒரு கலை, அதை அனுபவித்து செய்யும்போது யாராலும் எளிமையாக சுவையாக சமைக்க முடியும் என்றும் கூறுகிறார். வரும் நாட்களில் நானும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களை நேரில் சந்தித்தபோது “வீடு கட்டும்போது சமையலறையை பெரிதாக கட்ட வேண்டும்” என்று கூறியதற்கான காரணத்தை இப்போது உணர்கிறேன். தோழர் அவர்களின் அருமையான சமையல் குறிப்புகளும் அதை அவர் எழுத்துக்களை கோர்த்து கூறும்போது வாசகனுக்கு பல இடங்களில் நாக்கில் கப்பலோடும் என்பது உறுதி. சிறப்பான நூலினைப் படித்த திருப்தி கிடைத்தது. இதற்கு காரணமான எழுத்தாளருக்கும், பதிப்பகத்தாருக்கும் மனமார்ந்த நன்றி.
இப்படிக்கு
ராஜேஷ் நெ.பி
சித்தாலப்பாக்கம்,
சென்னை