நூல் அறிமுகம்: தமிழ்நாட்டு வரலாறு : பாதைகளும் பார்வைகளும் – சு.பொ.அகத்தியலிங்கம்
நூலக ஆணைக்குழுவின் செயல்பாட்டில் மாற்றம் தேவை! -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
நூல் அறிமுகம்: குற்றவாளி கூண்டில் அதானி மோடி – இரா.இயேசுதாஸ்
தொடர் 13: சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்
தொடர் 12: சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்
சமூக வளர்ச்சியை முன்னெடுப்பது எது ?
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு,வேலூர் புரட்சி.வேலூர் புரட்சி 1806 ஆம் ஆண்டு மே மாதத்தில் துவங்கி,பின்னர் ஜூலை மாதத்தில் வெடித்தது.
அன்றைய பிரிட்டிஷ் ராணுவ தலைமை புதிய இராணுவ விதிமுறைகளை கொண்டு வந்தனர்.இராணுவ வீரர்கள் சீருடைகளில் இருக்கும் போதும், அணிவகுப்பின் போதும் திருநீறு,நாமம் போன்ற மத,சாதி குறிகளை வெளிப்படுத்தக் கூடாது என்றும்,முகத்தை சுத்தமாக மழித்திருக்க வேண்டுமென்றும் விதிகளை கொண்டு வந்தனர்.முன்பாக, வீரர்களின் தலைப்பாகையை மாற்றி, வட்டமான,விலங்குத் தோலாலான பட்டை கொண்ட தொப்பி அணிய வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தனர்.
இதனை இந்து,இஸ்லாமிய மத நம்பிக்கையின் மீதான தலையீடுகளாக இராணுவ வீரர்கள் கருதினர்.1806 மே 6ஆம் தேதி வீரர்கள் ஆயுதங்களை ஏந்த மறுத்தனர். மே 7ஆம் தேதி புதிய தலைப்பாகை அணிய மறுத்தனர். இதனால் 10 இஸ்லாமிய வீரர்கள் 11 இந்து மதம் சார்ந்த வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.அவர்களுக்கு சவுக்கடி,பணி நீக்கம் என தண்டனை கொடுக்கப்பட்டது.
கோட்டையை கைப்பற்றிய வீரர்கள்
1806 ஜூலை 10 அன்று இந்திய வீரர்கள் ஆயுத, வெடி மருந்து கிடங்குகளுக்கு சென்று, துப்பாக்கிக் குண்டுகள் ஆயுதங்களை கையகப்படுத்தி, ஐரோப்பிய அதிகாரிகளையும்,ஐரோப்பிய வீரர்களையும் சுடத் தொடங்கினர். ஐரோப்பிய குடியிருப்புகளை தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவங்களின் போது 15 ஐரோப்பிய அதிகாரிகளும் 119 ஐரோப்பிய வீரர்களும் கொல்லப்பட்டனர். வேலூர் கோட்டை,இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இது நீடிக்கவில்லை.
ஆங்கிலேயர்கள் மிகக் கொடூரமான கொலைவெறியுடன் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள், பீரங்கி வாயில் வைத்து உடல் சிதறி கொல்லப்பட்டவர்கள், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டவர்கள் என சுமார் 800-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.பெரும் உயிர்ப்பலிகளுக்கு இடையே மீண்டும் வேலூர் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வேலூர் புரட்சி பிந்தைய காலங்களில் நடைபெற்ற பல எழுச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.இது 1857ஆம் ஆண்டில் நடந்த இந்திய ராணுவ வீரர்களின் மகத்தான எழுச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்தது.
இதற்கான வரலாற்றுக் காரணங்களை மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தால்தான் துல்லியமான மதிப்பீட்டிற்கு வர இயலும்.எதிர்கால படிப்பினைகளுக்கும் இது அவசியம்.
மார்க்சிய மதிப்பீடு
பேரா. கா.அ. மணிக்குமார்”முதல் விடுதலைப் போரின் முன்னோடி: வேலூர் புரட்சி”என்ற கட்டுரையில் இந்த எழுச்சியை ஆராய்கிறார்.(“தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும்” நூல் : பாரதி புத்தகாலயம் வெளியீடு).
புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/thamizhnaattu-varalaru-paathaigalum-paarvaigalum/
புரட்சிக்குப் பின்னணியாக இருந்த பொருளாதார நிலையையும்,சூழலையும் அவர் விளக்குகிறார்.
“ஆங்கிலேயரின் நிலவரிச் சுரண்டல் கொள்கையினால் கடும் வறட்சி, உணவுப் பற்றாக்குறை என உருவாகியிருந்த கடுஞ்சூழலில், ஆட்சியை இழந்ததால் பாதிக்கப்பட்டிருந்த சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், அவர்களது சந்ததியினர், குறிப்பாக ஆந்திரா, ஒரிஸா மாநிலங்களுக்கிடையேயான பகுதிகளில் கம்பெனி அரசுக்குக் கப்பம் செலுத்தி வந்த கிட்டத்தட்ட பத்துப் பாளையக்காரர்கள்,ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த தருணத்திற்காகக் காத்திருந்தார்கள்.”
இந்த எதார்த்த நிலைமைகளில், இந்திய ராணுவ வீரர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தின் மீது வெறுப்படைந்து இருந்ததை அவர் சுட்டிக்காட்டி, மதம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் விளக்குகிறார்.
“….புதிய இராணுவ விதிகள், தலைப்பாகை, உடை, கிறித்தவ மதமாற்றத்திற்கான முயற்சி என்ற பீதி பரப்பப்பட்டு, அதன் மூலம் தென்னிந்தியாவில் உருவாகியிருந்த மக்களுடைய அதிருப்தியைப் பயன்படுத்தி, ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, மைசூர் சுல்தானின் ஆட்சியை மீண்டும் நிறுவத் திட்டமிடப்பட்டது. தென்னிந்தியப் படை வீரர்களும் அந்நியர் ஆதிக்கக் கொள்கையை வெறுத்து, வட்டார, அதிகாரிகளும், மொழி, சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கியெறியத் திட்டமிட்டனர்.போர் வீரர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்தி இறுதி முயற்சியை மேற்கொள்ள, ஆயுதங்களில் ஒன்றாக மதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.”
அன்றைக்கு ஆங்கிலேய சுரண்டல் கூட்டத்திற்கும்,மக்களுக்குமான முரண்பாடுகள் தீவிரமடைந்ததன் வெளிப்பாடுகளாகவே எழுச்சிகள் வெடித்தன.இவை இறுதியாக இந்திய விடுதலைக்கு இட்டுச் சென்றன.
வர்க்க முரண்பாடுகள் சமூக இயக்கத்தை முன்னெடுக்கின்றன என்ற மார்க்சிய கோட்பாட்டை வேலூர் புரட்சி வரலாற்றிலும் காண முடிகிறது.
வரலாற்றுப் பொருள் முதல்வாதம்
சமூக இயக்கத்தில் அடிப்படையானது பொருளுற்பத்தி.ஒரு சமூகத்தின் உற்பத்திக் கருவிகள்,உற்பத்தி உறவுகள் உள்ளடங்கிய பொருளாதார இயக்கம்தான் சமூகத்தின் அடித்தளம்.உற்பத்தியில் கட்டுப்பாடும் மேலாதிக்கமும் செலுத்தும் உடைமை வர்க்கங்களுக்கும், உழைப்பைச் செலுத்தி வாழும் உடைமையற்ற வர்க்கங்களுக்கும் நடக்கும் வர்க்கப் போராட்டம்,வரலாற்று மாற்றத்தை உந்தித் தள்ளும் சக்தியாக விளங்குகிறது.
பொருளுற்பத்தியும் அவற்றால் எழும் உற்பத்தி உறவுகளும் சமூக இயக்கத்தை தீர்மானிக்கின்றன.எனவே அவை அடித்தளமாக உள்ளன.இலக்கியம், தத்துவம்,பண்பாடு,கருத்துக்கள்,ஒழுக்க வரையறைகள்,மதம்,கலை,நீதி, சட்டம் உள்ளிட்ட அனைத்து சிந்தனை வெளிப்பாடுகளும் பொருளாயத உறவுகளை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் மேல்கட்டுமானமாக உள்ளன.
மார்க்சிஸ்ட்கள் பேசுவது வறட்டுத்தனமான பொருளாதாரவாதம் என்று சிலர் விமர்சிப்பதுண்டு.பொருளாதார சுரண்டலை மறைப்பதற்காகவும் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு.
அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்குமான உறவை எந்திரகதியாக பார்க்க கூடாது என்று ஏங்கல்ஸ் வலியுறுத்தினார்.பொருளாதார காரணி மட்டுமே சமூக இயக்கத்தினை தீர்மானிக்கும் ஒரே காரணி என்று பார்ப்பது, “திசைதிருப்பும் வேலை” “பொருளற்றது”என மார்க்ஸும் எங்கெல்சும் குறிப்பிட்டனர்.
பொருளாதார நிலைமைகள் “இறுதியாக தீர்மானிக்கும் காரணியாக” இருக்கும் என்றும் அரசியல்,கலை இலக்கிய சமய,தத்துவ காரணிகளும் பொருளாதார இயக்கத்தில் வினையாற்றும் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.இந்த தளங்கள் அனைத்திலும் வர்க்கப் போராட்டம் இடையறாது நடக்கிறது.
இந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை பாட்டாளி வர்க்கம் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான சித்தாந்த ஆயுதமாக திகழ்கிறது.
(தொடரும்)
நூல் அறிமுகம்: அ.பாக்கியத்தின் “ஞாபகங்கள் தீ மூட்டும்!” – தாரைப்பிதா
“ஞாபகங்கள் நிச்சயம் தீ மூட்டும்!”
நூல்: ஞாபகங்கள் தீ மூட்டும்
ஆசிரியர்: அ.பாக்கியம்
வெளியீடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
விலை: ரூ.100/-
பக்கம்: 136
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
தோழர் ஏ.பாக்கியம் எழுதிய “ஞாபகங்கள் தீ மூட்டும்” (DYFI போராட்டங்கள் சில துளிகள்) நூல் நேற்றுதான் 28.09.2022 கள்ளக்குறிச்சி மாநாட்டில் பிரதிநியாக கலந்து கொண்ட ஒரு தோழரிடம் வாங்கினேன்.
இன்று முழுமையாக ஒரே மூச்சில் வாசித்தேன். 136 பக்கங்களும் போனதே தெரியவில்லை. அதைவிட முக்கியம் 1978 முதல் 1996 வரை SYF மற்றும் DYFI களில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் ஓடிய ஓட்டங்களை அப்படியே புரட்டி போட்டுவிட்டது என்றால் மிகையல்ல.
அன்றைய போராட்டங்களில் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்ததை, போராட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டத்தை, போராட்டங்களின் உக்கிரங்களை போகிற போக்கில் பதிந்திடாமல், படம்போட்டு பதிந்துள்ளார் தோழர் ஏ.பாக்கியம்.
ஆம், வேலை அல்லது நிவாரணம் வேலை உரிமை தடைச் சட்டம், பஸ் கட்டணம் உயர்வு, குடிநீர் தேவை, ரேசன் அட்டை, லஞ்சம் ஊழல் எதிர்ப்பு, மருத்துவ மனைகளில் மருத்துவ வசதி, குடிமனைகள் அமைத்தல் என எடுத்த கோரிக்கைகள் யாவும் அரசுடன் மோதி, அதிலே வெல்லாமல் விட்டதில்லை.
அல்லது வேறு வார்த்தையில் சொன்னால், அரசும் அதில் கவனமிட்டு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டின. இதுதான் அந்த போராட்ட உந்துதலுக்கு பிரதான காரணியாக இருந்தது. அதை மிக நுட்பமாக புள்ளி விபரங்களோடு இந்நூல் பதிந்திருக்கிறது.
பேருந்து கட்டண உயர்வுக்கான எதிர்ப்பு போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்கைது தமிழகத்தில்தான் நடந்திருக்கும். அந்தளவிற்கு அக்காலங்களில் DYFI ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றால் மிகையல்ல.
அன்றைய கோரிக்கைகளை பார்த்தால், இதற்கெல்லாமா போராட்டம் நடத்தப்பட்டது என தோன்றும். உதாரணமாக சென்னை உள்ளிட்ட மாநிலமெங்கும் குடிநீர் போராட்டம்; மாநிலம் முழுவதும் ரேசன் அட்டைக்கு போராட்டம் இப்படி நிறைய குறிப்பிடலாம்.
ஆம், அந்த மாதிரியான கோரிக்கைகளுக்கு தற்போது அவசியம் இல்லையென்றாலும், இன்றைய இளைஞர் சமுதாயத்தின், ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளைக் கண்டறிந்து கையில் எடுத்து போராடினால், அன்றைய அரசுகளைப்போல், அரசு அதிகாரிகளைப் போல் செவி சாய்க்கும் நிலை இல்லாமல் இருப்பது ஒரு கசப்பான பேருண்மை.
ஆம், போராட்டங்களை நீர்த்து போகச் செய்யும் கலையை இன்றைய ஆட்சியாளர்கள் கற்று இருக்கிறார்கள். அவர்களின் பாணியில் நாமும் திருப்பியடிக்கும் கலையை கண்டறிந்தாக வேண்டியிருக்கிறது. இது அனைத்து அமைப்புகளின் போராட்டங்களுக்கும் பொருந்தும்.
இந்த நூலை என்னிடம் தந்த அந்த இளம் தோழர் சொன்னார்… _”அரைஞான் கயிறு, பூணூல் கயிறுகளில் சிறையில் கொடியேற்றப்பட்டதா? அடே சாமி”_ என்கிறார். ஆம், இதுதான் இந்த நூலின் வெற்றி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
தோழர் அகத்தியலிங்கம் கூறியதைப்போல்… அக்காலத்தின் கோரிக்கை போராட்டங்களை அந்த 4 (உறுதிமிக்க போராட்டங்கள்; பன்முக செயல்பாடுகள்; சித்தாந்த பயிற்சி; வலுவான அமைப்பு) கட்டத்திற்குள் அடக்கிவிடலாம்.
அது, அன்று மட்டுமல்ல என்றும் எடுத்து செல்ல வேண்டிய ஒன்று. அதற்கு இந்த நூல் அடித்தளம் அமைத்து தந்திருக்கிறது. அதற்கான உழைப்பை தோழர் ஏ.பாக்கியம் செலுத்தி இருப்பது சிறப்பு. மிகுந்த பாராட்டுக்குரியது.
தோழர் பாலா வரலாற்று ஆசிரியர்களை மேற்கோள் காட்டியிருப்பதைப் போல், “எந்த ஒரு வரலாற்றையும், முழுமையாக எழுத முடியாது” என்பது சத்திய வார்த்தைகள். அதைத்தான் தோழர் பாக்கியமும் இது ஒரு புள்ளி மட்டுமே என்கிறார் மிகுந்த தன்னடக்கத்துடன்.
ஆனால், என்னை பொருத்தவரை எடுத்த 15 பணிகளில் புள்ளி வைத்து கோலமிட்டு நிறைவாக செய்திருக்கிறார் இந்த நூலில். இதுபோல் பலநூறு போராட்டங்கள் கிளை, வட்ட, மாவட்ட அளவில் இன்னும்கூட இருக்கக்கூடும். அவற்றை எல்லாம் தொகுத்தளிப்பது அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு அதொரு கையேடாக நிச்சயம் இருக்கும். அதற்கான துவக்கப்புள்ளி இந்த நூல் என்று வேண்டுமானால் கூறிடலாம்.
ஆம், இதெல்லாம் இரண்டாயிரத்திற்கும் முந்தியவைகள். அதற்கு பிந்திய களம் பல பதித்த போர் பரணிகள் ஏராளம். அவற்றையும் பதிவிடல் வேண்டும்.
தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்க காலத்தில் முத்திரை பதித்த முத்தான 15 களப்பணிகளை அதே உத்வேகத்தில் பதிந்துள்ள தோழர் எ.பாக்கியம் பதிவும், அதை 15 அத்தியாயங்களாக வடிவமைப்பும் அருமை. மேலும் அவற்றை நூலாக்கி மாநில மாநாட்டில் வெளியிட்ட DYFI மாநிலக்குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இன்றைய சூழலை புரிந்து, அதற்கேற்ற முறையில் மிக நுணுக்கமாக போராட்டங்களை வடிப்பதில் இந்நூல் நிச்சயம் வழிகோலும். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் கையில் தவழ்ந்தால், “ஞாபகங்கள் நிச்சயம் தீ மூட்டும்” என்றால், அது மிகையல்ல.
– தாரைப்பிதா…
முகநூல் பதிவிலிருந்து
29.09.2022
கேரள ஆளுநரின் இரண்டகம் – தமிழில்: ச.வீரமணி
கேரள ஆளுநர், ஆரிப் முகமது கான், மாநிலப் பல்கலைக் கழகங்களின் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற நிலையைத் துஷ்பிரயோகம் செய்து, தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், ஆளுநர் கேரளப் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தரை நியமனம் செய்வதற்காக, இது தொடர்பான சட்டத்தின் ஷரத்துக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஒரு பொறுக்குக்குழுவை (search committee) நியமனம் செய்திருக்கிறார். அமலில் இருந்துவரும் சட்டத்தின்படி மூன்று பேர் கொண்ட ஒரு பொறுக்குக் குழு நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் நபர்களில் ஒருவர் பல்கலைக் கழகத்தாலும், ஒருவர் வேந்தராலும், ஒருவர் பல்கலைக் கழக மான்யக்குழுவாலும் பரிந்துரைக்கப்பட வேண்டும். ஆனால் ஆளுநர் இதனைப் புறந்தள்ளிவிட்டு, பல்கலைக் கழகத்தால் பரிந்துரைக்கப்படும் நபர் இல்லாமல், இரு நபர் குழுவை அமைத்திருக்கிறார்.
முன்னதாக, ஆளுநர் கண்ணூர் பல்கலைக் கழகத்தற்கு அங்கிருந்த துணை வேந்தரை மறு நியமனம் செய்வதற்கான நியமன உத்தரவில் கையொப்பமிட்டுவிட்டு, அவ்வாறு அவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதைக் கேள்விக்கு உள்ளாக்கினார். இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், மிகவும் புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான அந்தத் துணை வேந்தரை, அவர் பொதுவெளியில் ஒரு ‘கிரிமினல்’ என்று விளித்ததாகும். தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரம் போன்ற பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் அப்பட்டமாகத் தலையிடுவது போன்றும், அங்கேயுள்ள பல்கலைக் கழகங்களின் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது போன்றும் கேரளாவின் அனுபவமும் அமைந்திருக்கிறது. மாநில ஆளுநர்களை, மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில் அம்மாநிலப் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதிலும் மாநிலப் பல்கலைக் கழகங்களின் நடவடிக்கைகளைக் கட்டளையிடுவதும் ஆர்எஸ்எஸ்/பாஜக ஒன்றிய அரசாங்கத்தின் சூழ்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியேயாகும். இவ்வாறு ஆளுநர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக, கேரள சட்டமன்றம் பல்கலைக் கழகச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவை (University Laws (Amendment) Bill)க் கொண்டுவந்து சென்ற வாரம் நிறைவேற்றியது. இந்தத் திருத்தத்தின்மூலம் பொறுக்குக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டது. இவ்வாறு புதிய நபர்கள் இருவரும் மாநில அரசாங்கத்தாலும், கேரள மாநில உயர் கல்வி கவுன்சிலின் துணைத் தலைவராலும் (vice chairperson of the Kerala State Higher Education Council) முறையே நியமனம் செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில், திமுக அரசாங்கம், இந்த ஆண்டு ஏப்ரல் மாதரத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தி நிறைவேற்றியுள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள பதின்மூன்று பல்கலைக் கழகங்களுக்கும் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்து, சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்தின் சட்டமன்றத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி அம்மாநிலத்தின் பல்கலைக் கழகங்கள் அனைத்திற்கும் மாநில முதல்வரே வேந்தராக இருப்பார். இந்தச் சட்டமுன்வடிவுகளை தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தபோதிலும், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகச் சட்டமானது அங்கே துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு அங்கேயுள்ள பொறுப்புக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று நபர்களிலிருந்து ஒருவரை நியமனம் செய்வதற்கு மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
மாநில அரசாங்கங்களின் கீழ் நடைபெறும் மாநிலப் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்படுவதே ஜனநாயகபூர்வமான கொள்கையாகும். துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கான அதிகாரம் ஆளுநர்களிடம் இருக்கக்கூடாது என்றும் இதற்கு அரசமைப்புச்சட்டம் இடம் அளிக்கவில்லை என்றும் மத்திய-மாநில உறவுகள் குறித்து விசாரணை நடத்திய நீதியரசர் மதன் மோகன் பஞ்ச்சி ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
வழக்கம்போலவே, இதற்கான திருத்தச் சட்டமுன்வடிவு கேரள சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி, மாநில அரசாங்கம் பல்கலைக் கழகத்தின் சுயாட்சியை அரித்துக்கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டி, திருத்தச் சட்டமுன்வடிவை எதிர்த்தது. ஆனால் இதே காங்கிரஸ் கட்சி, துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கி, தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் திருத்தச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டபோது அதனை ஆதரித்தது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக அது மேற்கொண்டுவரும் விரோதத்தின் காரணமாக அங்கே ஆளுநர் மூலமாக பாஜக மேற்கொண்டுவரும் நிகழ்ச்சிநிரலுக்கெல்லாம், கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சி வசதி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.
மாநில ஆளுநர்கள், ஒன்றிய அரசாங்கத்தின் முகவர்களாகச் செயல்படுவதென்பது மாநிலப் பல்கலைக் கழகங்களை நடத்துவதில் மட்டுமல்ல. ஒன்றிய பாஜக ஆட்சியின்கீழ், ஆளுநர்கள் மாநில சட்டமன்றங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களின் நடவடிக்கைகளை முறியடித்திடும் கருவிகளாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் இந்த ஆண்டு பட்ஜெட் அமர்வு தொடங்கும்போது சட்டமன்றத்தில் உரையாற்றவேண்டிய கொள்கை மீதான உரை (policy address)யில் கையெழுத்திடக்கூட ஆளுநர் மறுத்தார். இறுதியாக, சட்டமன்ற அமர்வு தொடங்க ஒருசில மணிகளுக்கு முன்னர்தான் அதனை அவர் செய்திட்டார்.
ஆளுநர்கள் என்போர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் கொடுத்தாக வேண்டும். பல்கலைக் கழகத் திருத்தச் சட்டமுன்வடிவு சம்பந்தமாக, ஆளுநர் கான், தான் அதனைப் படித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என். ரவி, மாநில சட்டமன்றத்தில் நிறைவற்றப்பட்டுள்ள பல்கலைக் கழகத் திருத்தச் சட்டமுன்வடிவிற்கும் மற்றும் பல சட்டமுன்வடிவுகளுக்கும் இதுவரையிலும் இசைவு (assent) அளித்து கையெழுத்திடவில்லை.
இவ்வாறு சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு இசைவு அளித்துக் கையெழுத்திடாமல் இருப்பது அரசமைப்புச்சட்ட முட்டுக்கட்டையை உருவாக்கிடும். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் மீதும், மாநிலங்களின் உரிமைகளின் மீதுமான தாக்குதல்களின் மற்றுமொரு வடிவமாகும்.
(செப்டம்பர் 7, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
சங்கரலிங்கனார் உயிர்த் தியாகமும் ‘தமிழ்நாடு’ பெயர் உதயமும் – நாகை மாலி
‘சென்னை ராஜ்யம்’ என்ற பெயரைத் ‘தமிழ் நாடு’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார், 1957-ஆம் ஆண்டு, தொடர் உண்ணாவிரதம் இருந்தார். சங்கரங்கலிங்கனார் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணியாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது அவரது பிரதான கோரிக்கை என்றாலும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதத்தைச் சகித்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று, அல்வா சாப்பிட்டு விட்டு, அந்த இலையை சங்கரனார் மீது போட்டும், உண்ணா விரதப் பந்தலைப் பிரித்தும் சங்கரலிங்கனாரை அவமரியாதை செய்தனர். அன்றைக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த எம்.வி.சுந்தரம் மற்றும் உலகநாதன் போன்ற தோழர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு விரைந்து சென்று, கலகம் செய்த காங்கிரஸ் கட்சியினரை விரட்டியடித்து விட்டு, சங்கலிங்கனாரின் உண்ணாவிரதத்திற்குப் பாதுகாப்பு அளித்தனர்.
விருதுநகரில் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக் குடிசையில் அவர் உண்ணா விரதம் இருந்தார். அந்தக் குடிசையில் காங்கிரஸ் கொடி பறக்க, உண்ணாவிரதம் 76 நாட்கள் நீடித்தது. இந்த உண்ணாவிரதம் பற்றி அன்றைக்குத் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த காமராஜர், “சங்கர லிங்கனாரின் 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டவை” என்றதோடு முடித்துக் கொண்டார். 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் மிகவும் களைப்படைந்து மெலிந்து போனார். ஒரு கயிற்றுக் கட்டிலில் தான் படுத்திருந்தார். திமுக பொதுச்செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சங்கரலிங்கனாரைச் சென்று பார்த்தனர். “இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே, உங்கள் கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் ஏற்க மாட்டார்களே” எனத் தலைவர்கள் கூறினார்கள். “நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்க்கலாம்” என்று தழுதழுத்த குரலில் சங்கரங்கலிங்கனார் கூறினார்.
‘எனது உடலைக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படையுங்கள்’
நாளுக்கு நாள் சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின. அவரைக் காப்பாற்றும் பொருட்டு, மதுரை அரசு பொது மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பலனின்றி, உண்ணாவிரதம் தொடங்கி, 76-வது நாளில், சங்கரங்கலிங்கனார் மரணமுற்றார். தான் உண்ணாவிரதம் இருந்த காலத்திலேயே, “ஒரு வேளை நான் இறந்து விட்டால், எனது உடலைக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று சங்கர லிங்கனார் சொல்லியபடி, கம்யூனிஸ்டுத் தலைவர் கே.டி.கே.தங்கமணியும் கே.பி.ஜானகியம்மாவும் மருத்துவமனைக்குச் சென்று, பதிவேட்டில் கையெழுத்திட்டு, உடலைப் பெற்றனர். மதுரைத் தத்தனேரி சுடுகாட்டில் சங்கரலிங்கனார் உடல் தகனம் செய்யப்பட்டது.
‘தமிழ்நாடு’ உதயம்
‘மெட்ராஸ் ஸ்டேட்’- ‘சென்னை ராஜ்யம்’ என்ற பெயரை முற்றிலும் ஒழித்து விட்டு, ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின் போது, தமிழில் மட்டும், ‘தமிழ்நாடு’ என அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றே குறிப்பிட்டனர். இந்த மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை அடியோடு ஒழித்து, ‘தமிழ்நாடு’ என்னும் பெயரைச் சூட்ட வேண்டும் என்று திமுகவினர் முடிவு செய்ய, கம்யூனிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளித்தனர். இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தைத் தமிழக சட்டசபையில் 18.07.1967 அன்று, முதலமைச்சர் அண்ணாதுரை கொண்டு வந்தார். அப்போது சபாநாயகராக சி.பா.ஆதித்தனார் இருந்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அனைத்துக் கட்சியினரும் மகத்தான ஆதரவு அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அருமைத் தோழர் ஏ.பாலசுப்பிரமனியன், இந்தத் தீர்மானத்தை மகிழ்வோடு ஆதரித்துப் பேசிய போது, “இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மைத் ‘தமிழன்’ என்று அழைக்க வேண்டும் ‘மதராசி’ என அழைக்கக் கூடாது” என்று பேசினார். சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ஆதிமூலம் பேசும் போது, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றக் கோரிக்கையை வைத்து, உண்ணாவிரதம் இருந்த சங்கரங்கலிங்கனார், காங்கிரசின் அலட்சியத்தால் உயிர் துறந்தார்” என்றார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில், ”இந்தத் தீர்மானத்தை உணர்வுப்பூர்வமாக, உயிர்த்துவமாக ஆதரிக்கிறேன். திமுக ஆட்சியில் தான் இப்படித் தீர்மானம் வர வேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருந்தால், காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.
பாரதிக்குத் தாய் நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி, 3000 ஆண்டுகளாகப் புகழ் பெற்ற பெயரைத் தான் நாம் வைக்கிறோம். இதனை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால், மனம் கொதிக்காதா? முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தைப் படித்து முடித்த போது, ஓடிச் சென்று அவரைக் கட்டித் தழுவிட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக் கொண்டேன். தமிழ்நாடு என்று பெயர் வைத்த பின், தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால், பயனில்லை. இந்தக் கோட்டையின் பெயர் ‘செயிண்ட் ஜார்ஜ்’ என்று இருப்பதைத் ‘திருவள்ளுவர் கோட்டை’ என்று மாற்ற வேண்டும்” என, அவருக்கே உரித்தான பாணியில் பேசினார்.
விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் அண்ணா துரை பேசுகையில், “இந்த நாள், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் வாழ்விலும் எழுச்சியும் மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே, வந்திருக்க வேண்டிய தீர்மானம் காலம் தாழ்த்தி வந்தாலும், இங்குள்ள அனைவரின் பேராதரவுடன் வந்திருக்கிறது. இதை இந்தச் சபையில் நிறைவேற்றி, இந்தியப் பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றி நான் மத்திய அமைச்சர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்த போது, ‘தமிழ்நாடு’ என்னும் பெயரைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள். அதற்கேற்ப, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதில் தடை ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்” என்றார். மேலும் முதலமைச்சர் பேசும் போது, “பத்து நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய சவான், இதுவரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும் சிரமத்துடனும் ‘டமில்நாட்’(தமிழ்நாடு) என்று பேசினார். ஆகவே, அரசியல் சட்டத்தைத் திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தத் தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி, ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழின் வெற்றி ! தமிழர் வரலாற்றின் வெற்றி ! தமிழ்நாட்டின் வெற்றி ! இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே, தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால், சர்வதேசச் சிக்கல் ஏதும் வந்து விடாது. சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரின் எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டிருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தரக் கூடியதாகும்.
நாம் இப்படிப் பெயர் மாற்றத்திற்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்காலச் சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால், எதிர்க்கட்சித் தலைவர் வேறேதும் ஆலோசனை சொல்லாமல், இதற்குப் பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்” என்று பேசினார் முதலமைச்சர். அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வராக இருந்தவர் பி.ஜி.கருத்திருமன். பின்னர் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் அறிவித்ததும், சட்டமன்றமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
‘தமிழ்நாடு வாழ்க’
முதலமைச்சர் அண்ணா எழுந்தார். “தமிழ்நாடு என்று பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நன்னாளில், ‘தமிழ்நாடு வாழ்க ! என்று வாழ்த்துவோம் எனக் கூறி, ‘தமிழ்நாடு! தமிழ்நாடு! தமிழ்நாடு! என்று மூன்று முறை உணர்ச்சிப் பொங்க உரக்கக் குரலெழுப்பினார். எல்லா உறுப்பினர்களும், “வாழ்க!” எனச் சேர்ந்து குரலெழுப்பினர். சபை முழுவதும் உணர்ச்சி மயமாய்க் காட்சியளித்தது. ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானம் வரலாற்றுப் பொன்னேட்டில் பொறித்திடத் தமிழகச் சட்டமன்றத்தில் இனிதே நிறைவேறியது.
நன்றி: தீக்கதிர்
கட்டுரையாளர் : சி.பி.ஐ.(எம்) நாகை மாலி
01/11/019